Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அண்ணாச்சி ரிஷபன்

Featured Replies

அண்ணாச்சி

ரிஷபன்

அண்ணாச்சி கடை போட்டது எங்கள் ஏரியாவின் பணப்புழக்கத்தை நம்பித்தான். பெரும்பாலான நபர்கள் மாதக் கணக்கில்தான் வாங்கினார்கள். ஒரு சிலர் காசு கொடுத்து வாங்கியது அண்ணாச்சியின் பட்ஜெட்டில் எந்த மாற்றமும் உண்டாக்கவில்லை . ஒரு நாளைக்கு நூறு ரூபாயைத் தாண்டாது.

அண்ணாச்சியின் முகத்தில் எப்போது மலர்ச்சி  தான். 'வாங்க' என்று வாய் நிறைய கூப்பிடுவதில் ஆகட்டும். சின்னப் பசங்களுக்கு கை நிறைய
பொட்டுக்கடலை அள்ளித் தருவதிலாகட்டும். பெரிய
மனசுதான். முண்டா பனியனும் தொப்பைக்கு கீழ் விழாமல் நிற்கும் வேட்டியும் எப்போதும் பளிச் தான்.

'அண்ணாச்சி.. நீங்க மளிகைக் கடை வச்சிருக் கீங்கன்னு சொன்னா நம்ப முடியாது. வெள்ளையும் சொள்ளையுமா இருக்கீங்க' என்றால் பளீரென்று சிரிப்பார்.

ஒரு பில் ஐநூறைத் தாண்டினாலே ஒரு பிஸ்கட் பாக்கட் உபரியாகக் கிடைக்கும்

'யாவாரத்தை விட மனுஷங்க முக்கியம்'

கொஞ்ச நாட்களாய் கண்ணில் ஏதோ கோளாறு பார்வை மங்கலாய்த் தெரிகிறது அண்ணாச்சிக்கு.

'ஆபரேஷன் பண்ணனும்'

அண்ணாச்சிக்கு அறுபது நிறையப் போகிறது என்கிற தகவலே தற்செயலாகக் கிடைத்ததுதான்.

கடையை மூடிய பிறகு கடை வாசலிலேயே அரை மணி நின்று பேசுவோம்.

அண்ணாச்சி சற்று பெரிய உருவம். குடையை கக்கத்தில் இடுக்கிக்கொண்டு தோளில் மடித்துப் போட்ட துண்டுடன் அப்படியே நிற்பார். நாங்கள் அரை மணிக்குள் முப்பது தடவை இடம் மாறி விடுவோம். இடது கால் மாற்றி வலது கால் என்று அசைந்தபடி.  அண்ணாச்சி நின்றால் நின்ற கோணம்தான். ' பழக்கந் தான்' என்பார்

"சத்தியமூர்த்தி பத்திரிகை வச்சாரா ' 

'எந்த சத்தியமூர்த்தி'

'அதான் ரயில்வே ரிட்டயர்ட்? எப்பவும் கஷ்டம் கஷ்டம்னு புலம்புவாரே. அறுபது நிறையுது. இந்த மாசம் ஏழாந்தேதி."

அண்ணாச்சி சிரித்தார்

'அப்ப எனக்கும் அறுபது வயசாச்சா"

இருவரும் ஒரே வருஷம் பிறந்தவர்களாம். 

'அண்ணாச்சி... அப்ப கொண்டாடிர வேண்டியதுதான்'

அண்ணாச்சியிடமிருந்து பெருமூச்சுத்தான் வந்தது

'அண்ணாச்சி என்ன சொல்றீங்க?'' என்றோம் வற்புறுத்தலாக.

'பார்க்கலாம்'

அண்ணாச்சிக்கு கொண்டாட்டங்களில் நம்பிக்கை இல்லை.

தீபாவளி, பொங்கல் தினங்களிலும்
கடை திறந்து உட்கார்ந்திருப்பார். கை நிறைய விபூதி அள்ளி நெற்றி முழுவதும் பூசிக்கொண்டு 'திருச்சிற்றம்பலம்' என்று காலையிலும் இரவிலும் சொல்வதோடு சரி. அண்ணாச்சி யும் வீட்டுக்கார அம்மாவும் சேர்ந்து வெளியே வருவது அபூர்வம் 

'எனக்கு எப்பவும் கடை வேலை' என்று அண்ணாச்சி சொன்னாலும் எங்கள் மத்தியில் அதைப் பற்றி கிசுகிசுப்புதான்.

அண்ணாச்சி எங்களுடன் இல்லாத ஒரு சமயம் நண்பரில் ஒருவர் விபரீதமாய் ஒரு தகவல் சொன்னார் 

'அவங்க ண்ணாச்சியோட சம்சாரமே
இல்லே ...

'என்ன உளர்றீங்க'

'நெசமாத்தான். அண்ணாச்சியோட அண்ணன் சம்சாரம் அது'

'அவரே அண்ணாச்சி. அவருக்கு மேல அண்ணனா" 

"பெரியப்பா புள்ளை. வியாதில கெடந்து
செத்துப்போயிட்டாராம். சாகறப்ப நம்ம அண்ணாச்சி அழைச்சு அவர்தான் பார்த்துக்கணும்னு சொன்னாராம். அவர்கிட்ட அண்ணாச்சிக்கு ரொம்ப மரியாதையாம். தன்னோடவே கூட்டிக்கிட்டு வந்திட்டாராம்'

சொன்னவர் முகத்தில் அசைக்க
நம்பிக்கை, யார் இந்த தகவலைத் தந்தது என்று சொல்ல மறுத்துவிட்டார்

'அதை மட்டும் கேட்காதீங்க. சத்தியம் பண்ணியிருக்கேன். சொல்ல மாட்டேன்னு'

நிறைய சத்தியங்களை மீறியவர்தான். இந்த முறை நாங்களும் வற்புறுத்தவில்லை. அண்ணாச்சி பற்றிய பிம்பம் சிதைவுறுவதில் ஈடுபாடு இல்லை. அந்த நிமிடமே அந்தத் தகவலை ஆதாரம் இல்லையென சபைக் குறிப்பிலிருந்து நீக்கிவிட்டோம். இது பற்றி இனி பேசவும் கூடாது என்றும் முடிவெடுத்தோம்

அண்ணாச்சி என்கிற பரிச்சயமான மனிதரின் அற்புதமான குணங்கள் ஏதோ ஒரு அற்பத் தகவலால் சங்கடப்படக் கூடாது. மேலும் அண்ணாச்சி நிஜமாகவே இப்படிச் செய்திருந்தால் அது அவர் மீதான மதிப்பை மேலும் கூட்டுவதாகவே நாங்கள் கருதினோம். அவராகச் சொல்லாத விஷயம் எங்கள் ஞாபகத்திற்கும் வேண்டாம்.

அண்ணாச்சி வீட்டிற்குப் போய் அவரது அறுபது கொண்டாட்டம் பற்றி கேட்கலாம் என்று தீர்மானித்தோம். அண்ணாச்சியின் வீட்டுக்கார அம்மாவைப் பார்க்கிற உத்தேசமும் அதில் இருந்தது. என்னதான் மூடி போட்டு மூடினாலும் மனம் அதற்கான ஓட்டைகளைக் கண்டபிடித்து விடுகிறது. புறத்தில் மறுதலித்த விஷயம் அகத்தில் அதன் போக்கில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு நிற்கிறது

அண்ணாச்சி கடையில் இருக்கிற நேரம். அவரிடம் சொல்லவில்லை. எங்கள் நால்வரையும் ஒரு சேர வீட்டுவாசலில் பார்த்ததும் என்ன நினைத்தாரோ, 'அவருக்கு ஒண்ணும் இல்லியே ' நால்வரும் "அதெல்லாம் ஒண்ணுமில்லே' என்று ஒருசேர முழங்கியதும் அவர் கலக்கம் இன்னும் அதிகமாயிருக்க வேண்டும்

அப்புறம் நான்தான் சிரித்தபடி சொன்னேன்.

அண்ணாச்சிக்கு அறுபது வருதில்லே . கொண்டாடலாம்னு ஒரு தவிப்பு. சொன்னா மடங்க மாட்டேங்கிறாரு. உங்க மூலமா ஏற்பாடு செய்யலாம்னு வந்தோம்

மற்றவர்களும் வாய் நிறைய சிரித்ததும் சூழ்நிலையில் இருந்த பதற்றம் விலகியது

உள்ளே வாங்க

சூடான காபி நாலு பேருக்கும் தரப்பட்டது.

அவர் குணம் உங்களுக்குத் தெரியுமே. அவர் எடுக்கிற முடிவுதான் எப்பவும்

எங்க ஆசையைச் சொல்றோம். எப்படியாச்சும் சம்மதிக்க வைங்க 

"எனக்கு நம்பிக்கை இல்லே. இருந்தாலும் இவ்வளவு அன்பா வீடு தேடி வந்து சொல்றீங்க. முயற்சி பண்றேன்"

திரும்பும்போது அவரவர் மனசுக்குள் பேசிக் கொண்டு வந்தோம்

அண்ணாச்சி மனைவியும் அண்ணாச்சியைப் போல அன்பாகத்தான் இருக்கிறார்கள்

அன்றிரவு கடை மூடுகிற நேரம் வழக்கம் போல எங்கள் கூட்டம் நடந்தது. வீட்டுக்குப் போய் வந்த தகவலைச் சொல்லலாம். சொல்லக் கூடாது என்று இரு பிரிவாகச் சர்ச்சை செய்தோம். எனக்கு சொல்லாமல் விடுவதில் உடன்பாடு இல்லை . அரை மனதாகச் சம்மதித்திருந்தார்கள் . எப்போ

அரசியல் போக்கு, வானிலை, பொருளாதாரக் கோளாறுகள் என்றெல்லாம் பேச்சு ஓடியது. மற்ற மூவரும் (அண்ணாச்சியைத் தவிர) நடுநடுவே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் ஒரு தடவை பேச்சுக்கிடையே இடைவெளி விழுந்ததை நான் பற்றிக் கொண்டேன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொல்லிவிட்டேன். அண்ணாச்சி பேசாமல் இருந்தார்

அண்ணாச்சி.. . ஆர்வக் கோளாறு. எங்க மனசு கேட்கலே. ஏதாச்சும் செய்யணும்னு ஒரு தவிப்பு

சரி. கௌம்புவோம்

அண்ணாச்சி எங்களை மன்னித்து விட்டதாக மற்றவர்கள் பெருமூச்சு விட எனக்கு மட்டும் உள்ளுர ஒரு சங்கடம். எல்லை மீறிவிட்டதாக உணர்வு

அண்ணாச்சி வீட்டைத் தாண்டித்தான் நான் போக வேண்டும். மற்றவர்கள் அதற்கு முன்பே விடைபெற்றுப் போய்விடுவார்கள். வீட்டருகே தயங்கி நின்றேன்.

பார்ப்போம் என்றார் அண்ணாச்சி 

தப்பு பண்ணிவிட்டோமா என்றேன் அண்ணாச்சி

குரல் லேசாய் உடைந்துவிட்டது. அண்ணாச்சி திரும்பி மூடியிருந்த வீட்டுக் கதவைப் பார்த்தார் அண்ணி உள்ளே எங்கேயோ இருக்க வேண்டும். எங்கள் பேச்சு கேட்காத தொலைவு

என்னால அறுபது கொண்டாட முடியாது சற்குணம்

குரலில் அப்படியொரு நிதானம். 'ஏன்? என்று கேட்க நினைத்து காற்றுத்தான் வந்தது

உங்களுக்குத் தெரியாது... அவங்க என் சம்சாரம் இல்லே. பெரியவர் சம்சாரம். அவர் உகரோட இருந்திருந்தா ரெண்டு வருஷம் முன்னாடியே அறுபது கொண்டியிருப்பாரு.'

அப்ப கதை உண்மைதான்

என் மனசு குதியாட்டம் போட்டது. அண்ணாச்சி பௌணர்மிக்கு முந்தைய தின நிலவொளி தம்மேல் பட நின்றார்

ஒரு தரம் அவங்க முழு மனசா மணமேடைல உட்கார்ந்துட்டாங்க. ரெண்டு வருஷம் பெரியவர் கூட சந்தோஷமா வாழ்ந்துட்டாங்க. என்ன... பெரியவர் விருப்பப்பட்டார்ங்கிறதுக்காக எங்கூட வந்தாங்க தவம் பண்றாப்ல. எனக்கும் தனியா குடும்பம் வச்சுக்கணும்னு ஏனோ தோணலே. சமைச்சுப் போட ஒரு ஆள் இருந்திச்சு. எனக்குன்னு ஒருத்தி வந்திருந்தா அவ கதி  என்னாவும்னு ஒரு கிலேசம்: அப்படியே வாழ்ந்துட்டேன்

அண்ணாச்சி கால் மாற்றாமல் அப்படியே நின்றார். ஒரு தூண் போல கம்பீரமாக 

"வருஷம் ஓடிப்போனாலும் இன்னொரு தரம் அவங்க மாலையும் கழுத்துமா என் பக்கத்துல உட்கார வச்சு.. ப்ச். வேணாம்.. சற்குணம்."

என்ன நினைத்தாரோ என் கையைப் பற்றிக் கொண்டார்.

"மன்னிச்சுருங்க. உங்க ஆசையை நிறைவேத்த முடியலே. "

எனக்குள் ஒரு பெரிய அலை அடித்து விட்டுப்போன மாதிரி இருந்தது 

மறுநாள் நாங்கள் கூடியபோது அண்ணாச்சியின் அறுபது பற்றி பேச்சு வந்தது

"அவரே இஷ்டப்படலே.... விட்டுருவோம்"
என்றேன்.

"என்ன.. கதையைக் கெடுத்தீங்க. வற்புறுத்தி சம்மதிக்க வைப்பீங்கன்னு பார்த்தா"

"அது அப்படித்தான்" என்றேன் நிதானமாய் கால்களை அழுத்தமாய் பூமியில் பதித்து நின்று.

- பயணம் சிற்றிதழ் பிரசுரம்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்புக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

சமூகங்களில் இப்படியும் சிலர் இருக்கத்தான் இருக்கின்றனர்.....பகிர்வுக்கு நன்றி அபராஜிதன்....!  👍

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அண்னாச்சி மாதிரி எங்கள் ஊரிலும் ஒருத்தர் இருந்தார்.அவரும் தன் தமையனின் வேண்டுகோளின் பேரில் தான் தன் அண்னியை மணந்தார்.ஆனால் அவர்களுக்கு பிள்ளைகள் பிறந்தனர்'கடைசி வரைக்கும் மகிழ்ச்சியாக வாழந்து முடித்தனர்.நன்றி அபாரஜிதன் இணைப்பிற்க்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.