Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைவேந்தலும் சட்டப்பொறியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நினைவேந்தலும் சட்டப்பொறியும்

-கபில்

 

*01 ‘அரசதரப்பும், படைத்தரப்பும் சுகாதார விதிமுறைகளை புறக்கணித்து செயற்படும் போது, சுகாதார விதிமுறைகளுக்கு அமைய, நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு மட்டும் ஏன் தடை விதிக்கப்படுகிறது?

*02 “அரசாங்கத்தில்உள்ள அமைச்சர்களை விடவும், ஒரு படி மேலே, உள்ளவர் இராணுவத் தளபதி.பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்பு போல, மிகவும் வசதியானஇடத்தில் அதிகாரங்களுடன் இருப்பவருடன் சட்டரீதியாக முரண்படத் தொடங்கி விட்டார்சுமந்திரன்”
 

கொரோனா தடுப்புக்கான தனிமைப்படுத்தல் சட்டங்களைப் பயன்படுத்தி,  நினைவேந்தலை தடுக்கும் கீழ்த்தரமான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்கக் கூடாது என்று பாராளுமன்றத்தில் கோரியிருந்தார் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

இந்த நிலையில், நினைவேந்தலைப் பொதுவெளியில் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா,  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதுவும், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.

அவரது எச்சரிக்கையில், பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தமது உறவுகளை நினைவு கூரலாம், ஆனால், வீடுகளிலேயே அதனை செய்ய வேண்டும் என்பது முதலாவது, பொதுவெளியில் நினைவு கூர முனைந்தால், தற்போதைய சுகாதார விதிமுறைகளுக்கு அமைய, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பொலிசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்பது இரண்டாவது.

பொதுமக்களை நினைவு கூரஅனுமதிக்க முடியும், ஆனால் பேரழிவுகளை ஏற்படுத்திய பயங்கரவாதிகளை பொது இடத்தில் நினைவு கூருவதற்கு அனுமதிக்க முடியாது என்பது மூன்றாவது விடயம்.
 

spacer.png

இங்கு இராணுவத் தளபதி இரண்டு விடயங்களைக் காட்டி எச்சரித்திருக்கிறார்.

ஒன்று, பயங்கரவாதிகளை நினைவுகூர முடியாது என்பது.  இரண்டு, தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி நினைவு கூற முடியாது என்பது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத விடயங்களாகும் கொரோனா தடுப்புக்கான சுகாதார விதிமுறைகளை அரசாங்கம் படைத்தரப்பு, பொலிஸ் தரப்பு என்பன, பக்கசார்பாக, தமக்கு வேண்டிய விதத்தில், பயன்படுத்துவதாக பல மாதங்களாகவே ஒரு குற்றச்சாட்டு இருந்துவருகிறது.

வடக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முயன்ற தமிழ்அரசியல் பிரமுகர்களை பொலிஸ் அதிகாரிகள், தனிமைப்படுத்துவோம் என்று பகிரங்கமாகவே எச்சரிக்கை செய்தனர்.

கொரோனா தடுப்புக்கான சுகாதார விதிமுறைகளில், முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் போன்றவை தான், முக்கியமானவை.

அவ்வாறான விதிமுறைகள் மீறப்படாத வரையில், பொலிஸார் அல்லது வேறெவரும் யாரையும் எச்சரிக்கவோ, அச்சுறுத்தவோ முடியாது என்பது பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வாதம். தியாகி திலீபன் நினைவேந்தலின் போது கூட, தனிமைப்படுத்தல் சட்டத்தை பயன்படுத்தி, அல்லது அதனையும் ஒரு காரணம் காட்டியே, தடை உத்தரவுகள் பெறப்பட்டன.

அதற்கு முன்னர், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களிலும், கொரோனா தொற்று ஒரு ஆயுதமாக பாவிக்கப்பட்டது.

அந்தவகையில் மாவீரர் நாள் நினைவேந்தல் விடயத்திலும் தனிமைப்படுத்தல் சட்டத்தை அரச தரப்பு ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதற்கு திட்டமிடுகிறது என்பதையே, இராணுவத் தளபதியின் எச்சரிக்கை வெளிப்படுத்தி நிற்கிறது.

ஆனால் தனிமைப்படுத்தல் சட்டம் அல்லது சுகாதார ஒழுங்கு விதிகள் என்பன, தனியே பொதுமக்களுக்கு- தமிழ், முஸ்லிம்களுக்கு மக்களுக்கு மட்டும் தானா என்ற பலமான சந்தேகமும் உள்ளது.

spacer.png

இந்த சுகாதார விதிமுறைகள் அமுலுக்கு வந்த பின்னர்தான், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுகின்ற வகையில்- கொழும்பில் இருந்து சென்ற அமைச்சர்களைக் கொண்ட பெரியதொரு குழு, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், ஒன்றுக்கு இரண்டு பெரிய கூட்டங்களை நடத்தியிருந்தார்கள்.

ஒரு திருமண மண்டபத்தில் 50 பேர் கூடியிருப்பதற்குக் கூட, இப்போது தடைவிதிக்கப்பட்டுள்ளது, ஆனால், ஒரு அரச செயலக மண்டபத்தில் 250 பேர் பங்கேற்ற கூட்டங்கள் நடத்திருக்கின்றன.

இந்தஇடத்தில், அரசாங்கத்துக்கு - அமைச்சர்களுக்கு கொரோனா விதிமுறைகள் பொருத்தமற்றதா என்ற கேள்வி எழுகிறது.

இதுபோலன்றி, அண்மையில் சீனக்குடா விமானபடைபயிற்சி நிலையத்தில் ஒரு நிகழ்வு இடம்பெற்றது.

இரண்டு பெண் விமானிகள் உள்ளிட்ட 61 விமானப்படை அதிகாரிகள் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறும் நிகழ்வு அது.

அந்த நிகழ்வில், பிரதமவிருந்தினராகப் பங்கேற்ற பாதுகாப்புச் செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவோ, விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் சுதர்சன பத்திரனவோ, முகக்கவசங்களை அணியவில்லை. சமூக இடைவெளியைப் பின்பற்றவுமில்லை.

அதுமாத்தரமன்றி, அந்த நிகழ்வில் பங்கேற்ற பெரும்பாலான விமானப்படையினர் அரசாங்கத்தின் சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றியிருக்கவுமில்லை.

ஆனால், சாதாரணமாக வீதிகளில் முகக்கவசம் இல்லாமல் திரிவோர் பொலிஸாரால் பிடித்துச் செல்லப்படுகிறார்கள்.

அரசதரப்பும், படைத்தரப்பும் இவ்வாறாக சுகாதார விதிமுறைகளை மீறி- அல்லது அவற்றை புறக்கணித்து செயற்படும் போது, சுகாதார விதிமுறைகளுக்கு அமைய, நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு மட்டும் ஏன் தடை விதிக்கப்படுகிறது?

கொரோனா தடுப்புக்கு சுகாதார விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட காரணங்களை முன்வைத்தே இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

ஆனால், தனிமைப்படுத்தல் சட்டத்தை பயன்படுத்துவோம் என்று மிரட்டப்படுகின்றனர்.

இந்த இடத்தில்,பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சுட்டிக்காட்டியுள்ள விடயம் முக்கிய கவனம் பெறுகிறது.

அதாவது, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறாத வகையில்- நினைவேந்தலைச்செய்ய முடியும் என்றும், அதற்கு தடைவிதிக்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அவர் இதனை வெறும் வாய்மொழி வாக்குறுதியாக கொடுக்கமுடியாது, செயலளவில் நிரூபிக்கவும் வேண்டும்.

அரசாங்கத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்றவர் இராணுவத் தளபதிலெப். ஜெனரல் சவேந்திர சில்வா.

இன்றைய நிலையில், அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களை விடவும், ஒரு படி மேலே, உள்ளவர். ஜனாதிபதிக்கு மிகவும் நம்பிக்கை வாய்ந்தவராக அவர் இருக்கிறார்.

எனவே, இராணுவத் தளபதிக்கு எந்த அழுத்தமோ, நெருக்கடியோ வந்தால் கூட, தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்த ஜனாதிபதிதயங்க மாட்டார்.

அவ்வாறு பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்பு போல,மிகவும் வசதியான இடத்தில் அதிகாரங்களுடன் இருக்கும் இராணுவத் தளபதியுடன் சுமந்திரன் சட்டரீதியாக ஏற்கனவே முரண்படத் தொடங்கி விட்டார்.

அண்மையில் கொழும்பில் இருந்து வாகனங்களை வெளியேறுவதற்கும் உள்நுழைவதற்கும் இராணுவத் தளபதி தடைவிதித்த போது, அவருக்கு தடைவிதிக்கும் அதிகாரம் எங்கிருந்து கிடைத்தது என்று கேள்வி எழுப்பியிருந்தார் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

எந்த சட்டத்தின் கீழ் இராணுவத் தளபதி அந்த உத்தரவைப் பிறப்பித்தார் என, பாராளுமன்றத்தில் சுமந்திரன் கேள்வி எழுப்பிய போது, அதற்கான பதில் அரச தரப்பில் இருந்து கொடுக்கப்படவில்லை.

இதற்கு முன்னர், ஊரடங்குச் சட்டத்தை ஜனாதிபதி செயலகம் நடைமுறைப்படுத்திய போது கூட, அது சட்டரீதியானதல்ல என்று சுமந்திரன்சட்டச் சிக்கலைக் கிளப்பியிருந்தார்.

ஆனாலும், இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் நீதிமன்றங்களை நாடவில்லை.

ஆனால், கொரோனா தடுப்பு விதிகளை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவோரை இனங்கண்டு நீதிமன்றங்களுக்கு அவர்களை கொண்டு செல்ல முடியும் என்றுசுமந்திரன் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

இது, கொரோனா தடுப்பு விதிமுறைகளை, அரசதரப்பு நினைவேந்தல்தடுப்பு ஆயுதமாக பயன்படுத்த நேரிட்டால், நீதிமன்றங்களை நாடுவோம் என்று அவர் கூறுவது போலவே உள்ளது.

அரச தரப்பை குறிப்பாக, இராணுவத் தரப்பை அடக்கும் அங்குசமாக நீதிமன்றங்களைப் பயன்படுத்தும் உத்தேசத்தில் சுமந்திரன் இருப்பதாக தெரிகிறது.

நினைவேந்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த நிலையில், நினைவேந்தல் உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வதை சுமந்திரனும், ஏனைய தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் எவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்ளப்போகின்றனர்? – பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

https://www.virakesari.lk/article/94977

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.