Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் வாசகர்களுக்கு இது துயரத்தின் பருவமோ... கவிஞர் பிரான்சிஸ் கிருபா மறைந்துவிட்டார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெருங்கவிஞன் பிரான்சிஸ் கிருபா மறைந்துவிட்டார். பல்லாண்டுகளாக மிகவும் தீவிரமான தளத்தில் இயங்கிய கிருபாவின் மரணம் மிகவும் துயரம் தருவதாக அமைந்துவிட்டது. உடல் உபாதைகளும், தேடிக்கொண்ட விட்டொழிக்க முடியாத போதையும் அவரை வாழ்வதற்கு வேறு நோக்கங்களே இல்லாத துயரமான தனிமைக்குள் தள்ளிவிட்டது.


மிகக் காத்திரமான கவிதைகளையும் யாராலும் பிரதியெடுக்க முடியாத 'கன்னி'யையும் தந்தார். சிற்றிதழ்களில் தொடங்கியவர், திரைப்படங்களில் பாடல்கள் எழுத முனைப்புக் காட்டினார். எழுத்தின்மீது ஆர்வம் கொண்டவர். கவிஞனாக, இருந்ததை விற்று காசாக்கியவர் இல்லை. சில வெற்றி பெற்ற கவிஞர்களைப் போல தன்னையோ தன் படைப்புகளையோ முன்னிறுத்தாதவர். உலக சாதூர்யங்களைத் துறந்தவர். தடுமாற்றங்கள், தத்தளிப்புகள், நிகாகரிப்புகளால் ஆனது அவரது வாழ்க்கை. இருப்பினும் ஆழ்ந்த பிரியத்தின் சுடரை இடைவிடாமல் தன் கவிதைகளில், நாவலில் எரியச் செய்தவர் அவர். அதனால் அவர் படைப்புகளில் வன்முறையில்லை. முளைத்தெழும் குரூரம் இல்லை.

பிரான்சிஸ் கிருபா
 
பிரான்சிஸ் கிருபா


கிருபாவுக்கு சினிமாவின்மீது பெரும் விருப்பம் இருந்தது. படிப்பில் பெரிய ஆர்வமில்லாமல் பிளஸ்டூ முடித்துவிட்டு சென்னைக்கு வந்து சேர்ந்துவிட்டார். தொடக்கத்தில் சினிமாவுக்கான முயற்சிகளில் இருந்தவர், சோர்வுற்ற தருணங்களில் போதைக்கு மாறினார். மொழியில் விளையாடி நுட்பமான விவரணைகளில் மெருகூட்டியதால் சுசீந்திரன் போன்ற இயக்குநர்கள் அவரைப் பயன்படுத்த எத்தனிக்கும்போது கிருபா தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டார்.

கன்னி நாவலுக்குப் பிறகு அவர் சில திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுத வாய்ப்புப்பெற்றார். அதுவும் பாதியளவில் நின்றுவிட்டது. தொடர்ந்து அவரது பிரான்சிஸ் கிருபா மொத்தக் கவிதைகள் தொகுப்பாக வெளிவந்தது. கவிஞர் தேவதேவனின் கவிதைகள் குறித்து மருதம் என்ற பெயரில் ஒரு தீர்க்கமான ஆவணப்படம் எடுத்தார். அதனால் அவரால் நல்ல திரைப்படங்களை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை கிடைத்தது.
கடைசியாக அவர் எழுதிய 'ஏறக்குறைய இறைவன்' என்ற நாவல் இறுதி நிலையை எட்டியிருந்தது. அதேபோல் 'நட்சத்திர பிச்சைக்காரன்' என்ற கவிதைத்தொகுப்பையும் வெளியிடத் தயார் நிலையில் இருக்கிறது.

பிரான்சிஸ் கிருபா
 
பிரான்சிஸ் கிருபா

அவரது முதல் கவிதைத் தொகுதி 'மெசியாவின் காயங்கள்'. 'வலியோடு முறியும் மின்னல்', 'நிழலன்றி ஏதுமற்றவன்', 'சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்' போன்றவையும் அவர் எழுதி வெளிவந்த தொகுப்புகள். சுந்தர ராமசாமி விருது, மீரா விருது, சுஜாதா விருது, விகடன் விருது போன்ற அங்கீகாரங்களை படைப்புகளுக்காக பெற்றுள்ளார்.

இறுதியில் நோயின்பிடியில் சிக்கி பொறுக்க முடியாமல் நொறுங்கினார். அவரது படைப்புகள் மல்லிகைக் கிழமைகள் என்ற பெயரில் தொடராக வெளிவந்திருக்கின்றன. மலர் மாலைகளும் அழுகைக்குரல்களும் ஆறுதல் அஞ்சலியும் கூடி இன்று அவரது உடலடக்கம் சொந்த ஊரான பத்தினிப்பாறையில் நடைபெறுகிறது.

தமிழ் வாசகர்களுக்கு இது துயரத்தின் பருவமோ, பிரான்சிஸ் கிருபா மறைந்துவிட்டார்! | demise of francis kiruba - Vikatan

ஒரு நாள் முடிய
இன்னும் ஒரே ஒரு வினாடியே மீதமிருக்கிறது
ஒரு இரவு விடிய
சேவலின் ஒரே ஒரு கூவல் மட்டுமே மீதமிருக்கிறது
ஒரு கனவு கலைய
இன்னும் ஒரே ஒரு பார்வை மட்டுமே மீதமிருக்கிறது
ஒரு உறவு முறிய
இன்னும் ஒரே ஒரு சொல் மாத்திரமே மீதமிருக்கிறது
மண்டியிட்டால் மன்றாடினால்
உன் கடிகாரப் பைக்குள் கை நுழைத்து
அள்ளி எறியக்கூடும்
சில சில்லறை வினாடிகளை...
வேண்டாம்
ஒரு வாழ்வு முடிய
இன்னும் ஒரு உயிர் மீதமிருக்கிறது.
 
©️ ஜெ. ஃபிரான்சிஸ் கிருபா 🌺
 
----------
 
விருந்துக்கு வந்தவனை கூலிக்கு பேசி வேலைக்கு அமர்த்தும் இந்த வாழ்க்கையோடு இன்னும் விவாதித்து விசனப்பட்டுக் கொண்டிராமல் ஒரு பூஞ்செடியை நட்டு அதன் வேர்களில் என்னுயிரூற்றை பின்னிவிட்டு போகவே விரும்புகிறேன் என்னைவிட்டு.
- பிரான்சிஸ் கிருபா
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தினமும் ஒரு இரங்கல்களை எழுதிக் கொண்டு இருக்கிறோம்! ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

பிரான்சிஸ் கிருபாவின் “கன்னி” நாவலைப் படிக்க ஆரம்பித்து இன்னும் முடிக்கவில்லை. கவிஞர் என்பதால் கவிதையாகவே நாவல் தெரிகின்றது!

“வண்ணங்கள் மறைகின்றன. வானவில்லும் இல்லாமலாக காற்றோடு பாய்கின்றன மேகங்கள். ஒளியின் சிறகுகள் முன்பே முறிந்து தணிந்தன. நிழல் திரை விரிந்து பகலை மூடுகிறது. கடல் இருள்கிறது, கரைகள் பதைக்கின்றன. மின்னல் குரலில் கண்ணால் பாடுகிறது முகமற்ற வேட்கை. விண்ணைப் பார்த்திருந்த சின்ன மலரொன்று அச்சத்தில் மணம் தடுமாறுகிறது. ஆந்தையின் தலையில் ஆவலொன்று பச்சை மச்சமாகி இரவுக்காக விரிகிறது. கிழங்கை முகர்ந்து பார்த்து முத்தம் மட்டும் தந்துவிட்டுப் பசியோடு கிடைக்குத் திரும்புகிறது முயல்குட்டி. கன்னிமையின் தோளில் விழுந்து நாணத்தின் கன்னத்தில் தெறிக்கிறது மழை. மழை வலுக்கிறது. மணல் முலைகள் கரைந்தோடுகின்றன. ஏதோ ஒரு சிப்பி பெண்ணாகி இதழ் விரிக்கிறது.”

______________

மழை பெய்து கொண்டேயிருந்தது. கரையில் விரியும் கடலலைகள் மேல் மழைத்துளிகள் அதே தீவிரத்துடன் பாய்ந்தன. ஆண் கடலிலும் பெண்கடலிலும் அதே மழை. கனவும் நிஜமும் ஒரே திசையில் எதிரும் புதிருமாக வந்துகொண்டிருந்தன. நெடும் மௌனமும் குகையின் அமைதியும் மென் திகிலூட்டியது. அதிலிருந்து விடுபட வேண்டுமென்றே பேசத் தொடங்கினான். “வார்த்தைப் பாடு எடுத்ததுமே தலைமுடியை வெட்டிருவாங்களாக்கா?” அவன் கண்களை ஆழமாகப் பார்த்தாள். அவள் கூந்தலில் சூடிய தாழம்பூ லேசாக வாடியிருந்தது. அனிச்சையாக இடது கையால் அதைத் தொட்டுப் பார்த்தாள். சிறு புன்னகையோடு கண்கள் ஒளிர்ந்து தணிந்தது. ஆறுதலூட்டும் தொனியில் “அதெல்லாம் பதினைஞ்சு இருபது வருஷத்துக்கு முன்னாடி. இப்பலாம் முடிவெட்டுறது அங்கி போடுறதெல்லாம் கிடையாது. நெனச்சா சேலை கட்டிக்கலாம். வட்டக் கொண்டை போட்டுக்கலாம்.”

வெளியே மழை வலுத்தது. நீர்ச்சரங்கள் பாய்ந்திறங்கி வெண் திரையாயின. அப்பால் கடல் தென்படவில்லை. மழையிரைச்சலில் அவள் குரல் மெதுவாகக் கேட்டது. “பிரான்ஸிஸ் சேவியர் வாழ்ந்த குகையில நிக்கிறோம். அவர் என்ன நெனப்பாரு!” வலிந்து சிரிக்க முயன்று பாண்டியின் முகத் தீவிரத்தைக் கண்டு இயல்பானாள்.

காற்று உரத்து அடிக்கும்போது சாரல் குகைக்குள் வீசியது. ஈரம் படாமல் விலகி சுவர் அருகே நகர்ந்தான். மழைக்குளிரில் குகையில் இளம் இருட்டு வியாபித்திருந்தது. அந்த மௌனம் தாங்கமுடியாததாக இருந்தது.

_______________

சொற்களிலிருந்து அர்த்தங்கள் மௌனத்திற்குத் திரும்பும் வழி இது.

_______________

இரண்டே இரண்டு விழிகளால் அழுது எப்படி இந்தக் கடலை கண்ணீராக நான் வெளியேற்ற முடியும்!

என் கனவும் கற்பனைகளும் என் இதயமும் குருதியும் கிழிந்த மிதியடிகளாக மாற்றப்படும்போது எப்படி நான் அழாமலிருக்க முடியும்! கண்ணீரின் ஒரு துளியை அவித்த முட்டையைப்போல் இரண்டு துண்டாக அறுத்துவிட முடியவில்லை. அன்பும் இங்குதான் தொலைகிறதோ என்னவோ. நண்பர்களே தோழிகளே துரோகிகளே, ஆறுதலுக்கு பதில் ஓர் ஆயுதம் தாருங்கள்.

கடலைக் கப்பலின் சாலையென்று கற்பித்தவனைக் கொன்று விட்டுப் போகிறேன்.

________________

கூன் குருடு நொண்டி முடமென இற்றுச் சருகான பெரும் மனிதத் திரள், நெடியதொரு கேலி தொனித்த கூட்டுச்சிரிப்பில் புகைந்து கலகலத்து கலைந்து மறைய, பதுமபீடிகை ஆங்கொரு ஆழி சூழ்ந்த தீவாயிற்று.

அதன் நடுவே துலக்கமான செம்பவளப் பாறைப் பீடத்தில் துக்கமே உருவாக திடமிழந்த கதியில் உடல் நடுக்கத்தை அடக்க முனைந்தவளாக இளநங்கை ஒருத்தி அமர்ந்திருந்தாள். வளைகளற்ற அவள் கைகளில் ஒரு பாத்திரமிருந்தது. பிச்சைப் பாத்திரம் போலிருந்தது. வயிற்றோடு அதை அணைத்துப் பிடித்திருந்தாள். நாட்டையும் கோட்டையையும் முப்படைகளோடு மக்களையும் தானமிட்டுவிட்டு பிரதிப்பயனாக இச்சிறிய பிச்சைப் பாத்திரத்தை பெற்று வந்த இளவரசியாகக் காட்சியளித்தாள். புலன்கள் ஐந்தும் உணர்ந்தறிய எத்தனையுண்டோ, அத்தனையும் பொருந்தியவளாக இருந்தாள். துயரத்தில் பூத்த தூயமலரென்று மனம் நினைக்கத் தகைந்தது.

“பவளச் செவ்வாய் தவளவாள் நகையும் அஞ்சனஞ்சேராச் செங்கயல் நெடுங்கணும், முரிந்துகடை நெரிய வளைந்தசிலைப் புருவமும், குவிமுட் கருவியும், கோணமும், கூர்நுனைக் கவைமுட் கருவியும்…” பாடல் ஒலிநிழலாய் ஒளித்து மறைந்தது. எவ்வளவுதான் கூர்ந்து பார்த்து குறிப்புகள் தேடியும் அவளை அடையாளம் கண்டுகொள்ள வழியின்றித் தவித்தபோது காதருகே கிழட்டுப் பெண்குரல் சிரித்தது. பாண்டி எங்கே நின்றுகொண்டிருக்கிறான் என்பது அவனுக்கே தெரியவில்லை.

“இவளை யாரென்று தெரியவில்லையா? நன்றாகப் பார். முடியவில்லையா? இப்போது ஞாபகம் வருகிறதா? வரவில்லையா… இவள்தான் மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி, மாயக்கள்ளி…”

வானத்தில் ஏழுவகை மேகங்கள் ஒரே நேரத்தில் சுற்றிச் சூழ்ந்து நேருக்கு நேர் மோதி பெரும் முழக்கம் உண்டானது. மின்னல் கொடிகள் கொதிநிலையில் நெளிந்து மறைந்தன. ஒளியும் இருளும் விரிந்தும் சுருங்கியும் பிரிவதும் சேர்வதுமாக காட்சியை மாறிமாறிக் கிழிப்பதும் தைப்பதுமாக… எல்லாம் சீர்கெட்டுவிட்டிருந்தன. மழைத்துளிகளின் முதல் வரிசை விழத் தயாராகி உச்சியில் துடித்தது. ஆழியில் புயல் வளிமுற்றி பேயாட்டம் போடத் தொடங்கியது. கூட்டம் கூட்டமாக காகங்கள் பறந்து வந்து அவளைச் சூழ்ந்து நின்றன. அவள் முகத்தில் அச்சமயம் தன் சுய துக்கங்களிலிருந்து மீளும் தெளிவு தென்பட்டது.

தன்னிடமிருந்த பாத்திரத்திலிருந்து அன்ன உருண்டைகளை உருட்டியெடுத்து விசிறி காகக்கூட்டத்தை பசியாறச் செய்தாள். அவளைச் சுற்றி கருப்புக் கம்பளம் விரித்தாற்போல சூழ்ந்து பரவியிருந்த ஆயிரக்கணக்கான காகங்களில் ஒன்றுகூட கரைந்து குரல் எழுப்பவில்லை. காகங்கள் நீங்கிச் சென்றபின் சிதறிய சோற்றுப்பருக்கைகளைத் தின்னக் கொழுத்து பன்றிக் குட்டியளவிருந்த எறும்புகள் சாரை சாரையாக வந்து பற்றியெடுத்தபடி புற்றுக்குத் திரும்பின.

“மக்தலேன்… மக்தலேன்…” என ஈனஸ்வரத்தில் விளிப்புக் குரல் கேட்டது. ஆண் குரல். அதைக் கேட்டதும் இளம்பெண் துணுக்குற்றாள். விலகிப் போயிருந்த வாட்டம் இரட்டிப்பாக இப்போது அவள் முகத்தில் குடிகொண்டது. அவள் எழுந்து சிறு தொலைவு நடந்து குரல் வந்த மரத்தடியை அடைந்தாள். அங்கே, அவன் நீள் முகமும் தாடியும் பச்சைக்கண்களுமாக மரத்தில் சாய்ந்து பாதி செருகிய விழிகளுடன் காயங்களில் குருதி கொப்பளிக்க உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். அவன் வாய் நுரைத்து ரத்தம் பொங்கி வழிந்தது.

“என்னோடு வா என்னோடு வா” என்று அவளை நாக் குழற அழைத்தான். மூடித்திறந்த அவன் கண்களில் வாழ்வும் சாவும் ஒன்றன்பின் ஒன்று நின்று உற்று உற்று அவளைப் பார்த்தன. துயருற்ற இளம் பெண் தன் ஆடை நுனியால் அவன் வாயை முகத்தை மார்பைத் துடைத்து நேர்த்தி செய்து தன்னிடமிருந்த பாத்திரத்திலிருந்து அன்னத்தை எடுத்து அவன் வாயில் புகட்டினாள். அப்போது அவளிடம் பொங்கிய பிரியத்தில் அவள் கையிலிருந்த அன்னமணிகள் நெற்பாலாகி அவன் நாவில் இறங்கியது.

———-

குரல் முறுகி சிரிப்பாகி அதிர்ந்தது.

சீற்றத்துடன் பாய்ந்த உரத்த காற்று செடிகொடிகளைப் பிடுங்கி எறியப் புறப்பட்டது போல் திருகிச் சுழித்தோடி பழுப்பிலைகளைப் பிய்த்தெறிந்தது. பழஞ்சருகுகளை வாரியிறைத்தது. மேகங்கள் மோதுவதும் முழங்குவதும் தொடர்ந்தது. மழைத்துளிகள் பாறையில் தெறித்துச் சிதறின.

உவவனத்துள்ளிருந்து குதிரைகள் வெளிப்பட்டன. குதிரைகளின் மேல் வேடர்கள் அமர்ந்திருந்தனர்.

உடல் வலிமையும் இளமையும் கூடி வார்த்தாற் போலிருந்த இளைஞன் வெள்ளைக் குதிரையில் முன்னால் வர பின்தொடர்ந்த குதிரைகளின் மேலிருந்தவர்கள் மாயமாகி மறைந்து போயினர். குதிரைகள் நிதானமாக நடந்தபோதும் தலைகள் மேலும் கீழும் பலமாக ஆடின.

முகத்தில் வந்து மோதிய சருகுகளைத் தடுத்தாண்ட இடது கையை இறக்கியபோது வெள்ளைக் குதிரையிலிருந்த இளைஞனின் முழுகம்பீரமும் பளிச்சிட்டது. கூர்நாசியும் மீசையும் பரந்த நெற்றியும் செதுக்கிய முகமும், செருக்கும், பிடரி வரை வளர்ந்து படிந்து கிடக்கும் சிகையுமாக வந்தான்.

குதிரைகள் செம்பவளப் பாறையருகே வந்தபோது, இருள் மண்டிய முகத்துடன் இளம்பெண் எதிர்ப்பட்டாள். அவளைக் கண்ட இளைஞனின் கண்கள் சட்டென ஒளிர முகம் மலர்ந்தான். வெள்ளைக் குதிரை மீது அவனைக் கண்ட இளம்பெண் சில கணங்கள் திகைத்து… நிலை கலையாமல் சிலைத்து நின்றாள். குதிரையிலிருந்து ஒரு துள்ளலோடு குதித்து இறங்கிய இளைஞன் அவளெதிரே மிக அருகே வந்து இரண்டு கைகளையும் அகல விரித்தான்.

“உடம்போடு என்றன் உள்ளகம் புகுந்தென் நெஞ்சங் கவர்ந்த வஞ்சக் கள்வி… வா.”

அவள் கண்கள் அவன் கண்களை ஊடுருவிப் பார்த்து தேனுண்ணும் தும்பியாகப் படபடத்து அவன் முகமெங்கும் அலைந்தது.

‘உவவன மருங்கில் உன்பால் உள்ளம் தவிர்விலேன்.’

விரித்த கைகள் விரித்தபடியிருக்க, அவள் அவன் மீது பாய்ந்து மார்பில் புதைந்துகொண்டாள். வலுவான கரங்கள் அவளை இறுகத் தழுவின. மற்ற குதிரைகள் திசைக்கொன்றாக நாற்புறமும் நழுவி மறைந்தன.

மின்னல்கள் பதறி மின்னி மறைந்தன. ஒளி துடிதுடித்தது. அணைத்துக் கொள்ளத் தாவியபோது விடுபட்ட அமுதசுரபி கீழே விழுந்து உருண்டோடி பாறை பக்கத்தில் கிடந்தது. கைவிடப்பட்ட தகரக்குவளை போல.

இளைஞனும் யுவதியும் தழுவித் திளைத்து மேலும் நெகிழ்ந்த போது தலையை நிமிர்த்திப் பார்த்த அவள் அவனுக்குப் பின்னால் கண்ட காட்சி பதற வைத்தது. வெள்ளைக் குதிரையின் முதுகில் ஒரு கொழுத்த கழுகு அமர்ந்திருந்தது. அதன் வாயிலிருந்து மனிதக் கண்ணொன்று அவளை வெறித்துப் பார்த்தது. ‘ஐயோ’ என அவள் கதறவும் கண்ணை கழுகு விழுங்கிவிட்டது. இளைஞனிடமிருந்து திமிறித் தன்னை விடுவித்தவள் மரத்தடிக்கு ஓடினாள். மரத்தடியில் கழுகுகள் கூடி நின்றன. அவளைக் கண்டதும் சற்று தொலைவு ஓடி பின் எழுந்து மறைந்தன.

ஐந்து வயது பெறுமான சிறுவனுக்குரிய சின்ன மண்டை ஓடும் எலும்புக்கூடும் பச்சை ரத்தக் கறையுடன் மரத்தடியில் கிடந்தது. பதைப்புற்றவள் பாறையருகே ஓடி வந்தாள். இளைஞனைக் காணவில்லை. வெருண்ட கண்ணுடன் நின்றிருந்த வெள்ளைக் குதிரையின் உடலெங்கும் ரத்தத்துளிகள் தெறித்துக் கோடாக வடிந்து நின்றன. பாறையின் மறுபுறத்தில் இளைஞனின் உடல் கிடந்தது. பாத்திரத்தின் அருகே துணித்த தலை ஒருக்களித்துக் கிடந்தது. “போதி மாதவா…” என்று அலறியவாறு தலையை இரண்டு கைகளாலும் பற்றிக்கொண்டு அண்ணாந்தாள்.

அங்கே சிவந்த கண்களும் உருவிய பட்டயமுமாக ஆர்ச் ஏஞ்சல் கப்ரியேல் அந்தரத்தில்  நின்றிருந்தான். கூடவே நீளும் குந்தம் ஏந்திய மிக்கேல். இளம்பெண்ணைப் பார்த்து “ம்… புறப்படு என்னோடு” என்று அதட்டலாகக் கட்ளையிட்டான். அவள் கண்கள் மயங்கின. உடல் குழைந்தது. தரையில் விழுந்தாள். பாறையில் மோதவிருந்த அவள் தலையை தடுத்துக் காக்கப் பதைத்துப் பாய்ந்த பாண்டி கட்டிலிலிருந்து சிமிந்து தரையில் விழுந்தான்.

___________

 

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒரு கவிஞனின் சொல்லும் நிலமும்

ஜெயமோகன்

September 18, 2021

f1.jpg

பிரான்ஸிஸ் கிருபா மறைந்த செய்தி 16 மாலை வந்துசேர்ந்தது. உண்மையில் அது எதிர்பாராத ஒன்று அல்ல. அவருடைய உடல்நிலை சீர்கெட்ட நிலையிலேயே சில ஆண்டுகளாக நீடித்துக்கொண்டிருந்தது. வலிப்பு அவ்வப்போது வந்துசென்று கொண்டிருந்தது. அவருடைய உடல் விடியற்காலையில் அவருடைய சொந்த ஊரான பத்தினிப்பாறைக்கு கொண்டுவரப்படும் என்று கவிஞர் நரன் சொன்னார்.

நேரில் செல்லவேண்டும் என முடிவுசெய்தேன். எப்போதும் அந்த முடிவையே உடனே எடுப்பேன். ஏனென்றால் இலக்கியவாதி மறைந்தால் சொல்லஞ்சலிகள் நிறைய வரும். நேரில் மிகக்குறைவான கூட்டமே வரும். ’ஊரில் இருந்தீர்களே, ஏன் செல்லவில்லை?’ என்று கேட்டால் பெரும்பாலானவர்களுக்கு அந்த எண்ணமே வந்திருக்காது என்பதை காணமுடியும். சிலர் சில்லறை காரணங்களால் கடைசியில் தயங்கிவிடுவார்கள். “அங்க நான் போய் எதுக்கு?” என்று சொல்பவர்கள் உண்டு. இதனால்தான் எழுத்தாளர்களின் இறுதிநிகழ்வுகள் பெரும்பாலும் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டதுபோலத் தோன்றுகின்றன.

f.jpg

இலக்கியவாதிகளின் இறுதிநாளை கௌரவிக்க ஆள்திரட்டிவர அமைப்புகள் இருப்பதில்லை. குழுவாக எவரும் கிளம்பி வருவதுமில்லை. பிறதுறைகளின் ஆளுமைகள் மேல் அவர்களின் ரசிகர்களுக்கு இருப்பதுபோன்ற பற்று பெரும்பாலும் இலக்கிய வாசகர்களிடம் இருப்பதில்லை. இசை, கலைத்துறை ஆளுமைகள் மேல் பற்று கொண்டவர்கள் தங்கள் ஆணவத்தை முன்வைக்காதவர்கள். அர்ப்பணிப்பு கொண்டவர்கள். இலக்கியவாசகர்களுக்கு உண்மையில் தாங்கள்தான் முக்கியம், இலக்கியவாதி இரண்டாம்பட்சம்தான். இலக்கியமே கூட அவர்களுக்கு அவ்வளவு முக்கியமல்ல. அரிதான விதிவிலக்குகள் சிலரே.

பெரும்பற்று கொண்டவர்களே இலக்கியத்திலும் உண்மையில் சாதனையாளர்களாகிறார்கள். வாசகர்கள் என்னும் நிலையில் இலக்கியத்தை ஆழமாக பெற்றுக்கொள்பவர்கள் பற்று கொண்டவர்களே. பிரான்ஸிஸ் கூட அத்தகையவர்தான். அவரை நான் எங்கெல்லாம் பார்த்திருக்கிறேன் என எண்ணும்போது பல இறுதிநாட்களும் அஞ்சலிகளும் நினைவுக்கு வருகின்றன. பாலகுமாரன் மறைந்தபோது எங்கிருந்தோ நெடுந்தூரம் நடந்து வந்தவர் போல வியர்த்து களைத்து ஓரமாக நின்றிருந்தார். நான் அவர் தோளை மட்டும் தட்டிவிட்டு வெளியே நடந்தேன்.

ஜெயகாந்தன் பொதுவான சமூக ஆளுமை. ஓர் இலக்கிய ஆளுமைக்கு தானாகவே இறுதிநாள் அஞ்சலிக்கு இலக்கியவாசகர்கள் பெருமளவுக்குத் திரண்டது என்றால் கடைசியாக சுந்தர ராமசாமிக்குத்தான். எவ்வகையிலோ இலக்கிய வாசகனின் ஆணவத்தை கடந்து எழுந்து நிற்பதாக அவருடைய ஆளுமை இருந்தது. வேறெந்த எழுத்தாளருக்கும் பெருமளவில் வாசகர்கள் இறுதிநாள் செலவுக்கு திரண்டதில்லை. எனக்கு எப்போதும் உருவாகும் அச்சம் என்பது படைப்பாளியின் இறுதிநாள் நிகழ்வுக்கு இலக்கிய வாசகர்கள் என ஒருவர்கூட வரவில்லை என்னும் நிலை அமைந்துவிடக் கூடாது என்பதுதான். ஆகவே தொலைபேசியில் அழைத்து அருகிலிருப்பவர்களிடமெல்லாம் செல்லும்படி மன்றாடுவதுண்டு. கூடுமானவரை நான் சென்றுவிடுவேன்.

வாசகர்களிடம் சொல்ல விரும்புவது இதுதான், ஒரு படைப்பாளியின் இறுதிநாளுக்குச் செல்வதென்பது வாசகனின் கடமைகளில் ஒன்று. ஒருவேளை அவன் அவருக்குத் திருப்பிச் செய்யக்கூடுவதும் அது ஒன்றுதான். படைப்பாளியை ஊராரும் வீட்டாரும் கொண்டாடாமல் போகக்கூடும். வாசகனும் அவனை புறக்கணித்தான் என்றால் அது அப்பண்பாட்டுக்குப் பெரும்பழி. அது ஒருபோதும் நிகழலாகாது. சென்னையில் ஞானக்கூத்தன் மறைந்தபோது நான் ஒவ்வொருவராகக் கூப்பிட்டுச் சொல்லியும்கூட என் சென்னை நண்பர்களில் பலர் செல்லவில்லை. அவர்கள்மேல் அந்த மனத்தாங்கல் இன்றும்கூட எனக்கு தீரவே இல்லை.

f5.jpg

பிரான்ஸிஸ் கிருபாவின் இறுதிநாள் அஞ்சலிக்கு நல்லவேளையாக சென்னையில் இருந்து சாம்ராஜ் போன்று பிரான்ஸிஸின் நண்பர்கள் சிலர் வந்திருந்தனர். நெல்லையிலும் நாகர்கோயிலிலும் பிரான்ஸிஸை அறிந்த இலக்கிய நண்பர்கள்  பத்துப்பதினைந்துபேர் இருந்தனர். மற்றபடி அரசியல்சார்ந்த இலக்கிய அமைப்புகளோ, அவற்றின் உறுப்பினர்களோ கண்ணில் படவில்லை. வாசகர்கள் என்றும் எவருமில்லை. ஆனால் இந்தச் சிறுதிரளே நிறைவளித்தது.

நான் காலையில் தொலைபேசியில் அழைத்து நான் இறுதிநாள் நிகழ்வுக்குச் செல்வதாகவும், வரவிரும்புவோரைச் சேர்த்துகொள்வதாகவும் நண்பர்களிடம் சொன்னேன். நட்புக் குழுமங்களிலும் தெரிவித்திருந்தேன். ஆனந்த்குமார் திருவனந்தபுரத்தில் இருந்தார். சுஷீல்குமாருக்கு காய்ச்சல். லக்ஷ்மி மணிவண்ணனின் மாமியார் ஆஸ்பத்திரியில் இருந்தார். போகன் மட்டும் வருவதாகச் சொன்னார்

கிளம்பும்போது மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டு லக்ஷ்மி மணிவண்ணன் வந்துவிட்டார். லக்ஷ்மி மணிவண்ணன் பிரான்ஸிஸ் கிருபாவின் நெருக்கமான நண்பர்களில் ஒருவராக இருந்தவர். அவர்களுக்கிடையே இருந்த நட்பு இனிமையும் சித்திரவதைகளும் நிறைந்த ஒன்று. லக்ஷ்மி மணிவண்ணன் பிரான்ஸிஸ் கிருபாவை கூடுமானவரை தாங்கிக் கொண்டவர்களில் ஒருவர்.

மதியம் கிளம்பி வள்ளியூர் சென்றபோது சிறில் அலெக்ஸ் அழைத்தார். அவர் வடக்கன்குளத்தில் அவருடைய அன்னையைப் பார்க்க வந்திருந்தார். அவரும் வருவதாகவும், பேருந்தில் வரும் ஜெயராம், அருள் இருவரையும் சேர்த்துக்கொள்ள காத்திருப்பதாகவும் சொன்னார். வள்ளியூரில் அவர்களை இணைத்துக்கொண்டு பத்தினிப்பாறைக்குச் சென்றோம்.

f7.jpg

பிரான்ஸிஸ் கொண்டு வரப்பட்டிருந்தார். வாங்கிக்கொண்டு சென்ற மலர்வளையத்தையும் மலர்மாலையையும் அவருக்கு வைத்து அஞ்சலி செலுத்தினோம். அவருடைய நண்பர்களான கவிஞர்கள் ஒவ்வொருவராக வந்து அவர் அருகே நின்று அவர் கவிதைகளை வாசித்து அஞ்சலி செலுத்தினர். அதன்பின் உடல் மாதாகோயிலுக்கு கொண்டுசெல்லப்பட்டது.

பத்தினிப்பாறை சின்னஞ்சிறு ஊர். எழுபது வீடுகள்தான். ஏரிப்பாசனம் இருந்தாலும் ஒரு பாலைவனத்தன்மை தோன்றிய நிலம். 1930ல் கோஸ்தா குடும்பம் என்னும் நிலவுடைமையாளர்களால் கட்டப்பட்ட சிறிய மாதாகோயில் பழைய பாணியில் அமைந்தது. சுதையாலான வளைவுகளுக்குமேல் ஓட்டுக்கூரை. வட்டமான ஓளிச்சாளரங்கள்.

ஐம்பதுபேர் அமரக்கூடிய அளவுள்ளது அக்கோயில்.புனித ஜார்ஜியார் ஆலயம் என நினைக்கிறேன். பெஞ்சுகள் இல்லை, தரையில் அமரவேண்டும். அழகிய ஆல்டர். பிரான்ஸிஸின் உடல் அங்கே வைக்கப்பட்டது. அங்கே அரங்கு நிறைய அமர்ந்து கொண்டோம். அங்கும் கவிஞர்கள் பிரான்ஸிஸின் கவிதைகளை வாசித்து அஞ்சலி செலுத்தினர். ஒருவேளை பிரான்ஸிஸின் கவிதைகள் அவர் மண்ணில் ஒலிப்பது அதுவே முதல்முறையாக இருக்கக்கூடும்.

f2.jpg

நானும் லக்ஷ்மி மணிவண்ணனும் ஓரிரு சொற்கள் சொல்லவேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டோம். நான் “பிரான்ஸிஸ் துன்பப்பட்ட ஆத்மா. துன்பப்படுபவர்கள் கிறிஸ்துவுக்கு அணுக்கமானவர்கள் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. பிரான்ஸிஸ் இன்னும் கிறிஸ்துவுக்கு அணுக்கமாகிவிட்டிருக்கிறார். அவருக்கு அஞ்சலி” என்று நான்கு சொற்றொடர்கள் சொன்னேன். லக்ஷ்மி மணிவண்ணனும் சில சொற்கள் சொன்னார். சிறில் அலெக்ஸ் பைபிளில் இருந்து சில வசனங்களை வாசித்தார்.

பாதிரியார் பிரார்த்தனையையும் ஜெபத்தையும் நிகழ்த்தினார். தரையில் அமர்ந்து அந்த சொற்களைக் கேட்டுக் கொண்டிருந்தோம். வழக்கமாக அனல்கொளுத்தும் நிலம். அன்று மழைத்துளிகளுடன் குளிர்காற்று எல்லா ஜன்னல்கள் வழியாகவும் பீரிட்டுக்கொண்டிருந்தது. வானம் இருண்டு முகில்படர்ந்திருந்தது. அந்தவேளையில் அச்சொற்கள் ஒரு நிறைவை அளித்தன. நிறைவுதான், வழக்கமாக இறப்புகளில் மெல்ல மெல்ல துயர் விலகும்போது அந்நிறைவு வரும். பிரான்ஸிஸ் ஏற்கனவே எல்லா துயரையும் பிறருக்கு அளித்துவிட்டவர்.

எல்லா மதங்களிலும் சாவுச்சடங்குகளின் சொற்றொடர்கள் ஏறத்தாழ ஒன்றே. சாவு என்பது அழிவு அல்ல, அது அழிவற்ற ஒன்றுடன் இணைதல். அழிவின்மை கொள்ளுதல். சாவு என்பது முறிந்துபோதல் அல்ல, அது ஒரு முழுமை. திரும்பத் திரும்ப மானுடம் இதைச் சொல்லிக் கொண்டே இருக்கிறது. சாவு என்பது என்ன என அறியவே முடியாது. இந்த சொற்கள் அந்த அறியமுடியாமைமேல் நாம் அமைத்துக்கொள்பவை. அவற்றின் அர்த்தம் நாம் இங்கு வாழ்ந்து திரட்டிக்கொள்வது.

f3.jpg

கிறிஸ்தவ இடுகாடு சற்று தொலைவில் இருந்தது. அறுவடை முடிந்த வயல்கள் வழியாக நடக்கவேண்டும். மழை பெய்யுமென தோன்றியதென்றாலும் அந்நிலத்தில் மழை அவ்வாறு எளிதில் பெய்துவிடுவதில்லை. முள்மண்டிய இடுகாட்டில் இந்த ஓராண்டுக்குள் புதைக்கப்பட்டு, இன்னும் கல்லறை எழுப்பப்படாத பல புதைமேடுகள் தென்பட்டன.

பிரான்ஸிஸுக்காக தோண்டப்பட்ட குழி அவ்வளவு ஆழமில்லை. செம்மண் பாறைபோல இறுகிய தரை. குழியெடுப்பது எளிதல்ல என்று தோன்றுகிறது. பாதிரியார் ஜெபித்தபின் பிரான்ஸிஸின் பெட்டி கயிறுகளில் பெட்டி கட்டப்பட்டு மண்ணுக்குள் இறக்கப்பட்டது. மூன்றுமுறை மண் அள்ளிப்போட்டு விடைகொடுத்தேன்.

இந்த நிகழ்வின் நிறைவுக்குக் காரணம் பாதிரியார் ஜோ. இலக்கியம் அறிந்தவர். தன் உரையிலேயே புதுமைப்பித்தனைக் குறிப்பிட்டார். நெல்லையில் வழக்கறிஞர் வேலைபார்ப்பவர் இங்கே பாதிரியார் இல்லாததனால் பகுதிநேரப்பணியாக வந்திருந்தார். ஆழ்ந்த குரலில் பாடி பிரார்த்தனை செய்தார். அவருக்கு எங்கள் வணக்கங்களையும் மரியாதையையும் தெரிவித்துவிட்டு திரும்பி நடந்தோம்.

கிறிஸ்டியேன் என்னும் நண்பர் கூட நடந்தபடி பேசிக்கொண்டு வந்தார். பிரான்சிஸ் ஒரு கவிஞர் என அந்தச் சிற்றூரில் அறிந்தவர் அவரே. பிரான்ஸிஸ் விருதுபெற்ற போது அந்த விழாநிகழ்வுகளுக்குச் சென்றிருக்கிறார். அந்த ஊரே மணப்பாடு ஊரைச்சேர்ந்த மீனவர் குடியினரான நிலச்சுவான்தார்களான கோஸ்தா குடும்பத்துக்கு சொந்தமானது. ஏறத்தாழ ஆயிரம் ஏக்கர். ஊரில அனைவரும் அவர்களின் வேலைக்காரர்கள் என்றார்.

f6.jpg

சுதந்திரத்துக்குப்பின்  நிலச்சீர்திருத்தத்தின்போது அக்குடும்பத்தின் நிலம் கைப்பற்றப்பட்டு உழைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் கோஸ்தா குடும்பம் நீதிமன்றம் சென்றது. வழக்கு நடக்கும்போதே நிலத்தை விற்றுவிட்டு ஊரைவிட்டுச் சென்றுவிட்டது. இன்று நிலத்தின் பட்டா நிலத்தை வாங்கியவரிடமும் நிலஉரிமை ஊராரிடமும் உள்ளது. ஆகவே இடுகாட்டுக்கு வழியை அடைய முடியவில்லை. பிரான்ஸிஸ் கூட சில சாவுகளின்போது அதைப்பற்றி பேசியிருக்கிறார் என்றார்.

ஊர் நடுவே கோஸ்தா குடும்பத்தின் நூறாண்டுப் பழமையான மாளிகை உள்ளது. அது கைமாறி இன்று ஒரு பண்ணை விடுதியாக இருக்கிறது. பெரிய சுற்றுவேலியுடன், காவலுடன் வேறொரு உலகமாக ஊர் நடுவே நின்றிருக்கிறது. அதற்குள் சென்று பார்த்ததே இல்லை என்றார் கிறிஸ்தியோன். பிரான்ஸிஸும் அதைப் பார்த்ததில்லை. அவர்கள் அணுகமுடியாத ஒரு மிதக்கும் கலம் போல அது.

அந்தி சாயத் தொடங்கியபோது விடைபெற்று திரும்பி வந்தோம். ஒரு கவிஞனின் இறுதிநாள். அவனுடைய எளிய ஊர். அவன் உறவினர்கள் முன் ஒலித்த அவர்கள் அறிந்தே இராத அவனுடைய கவிதையின் சொற்கள். அந்த மாதாகோயிலில் அவனுக்காக ஒலித்த புனித வேதாகமத்தின் அழிவற்ற சொற்கள்.

[புகைப்படங்கள் இணையத்திலிருந்து]

 

https://www.jeyamohan.in/156718/

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்........!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.