Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரண தண்டனை அர்த்தமுள்ளதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரண தண்டனை அர்த்தமுள்ளதா?

மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்குக் கயிற்றை எதிர்நோக்கியிருக்கும் குற்றவாளிகளுக்கு கருணையின் அடிப்படையில் மன்னிப்பு அளிப்பது குறித்து ஒரு பொதுக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் உட்பட நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் உள்ள 20க்கும் அதிகமான மரண தண்டனை கைதிகள் அனுப்பியுள்ள கருணை மனுக்களை பெற்றுள்ள குடியரசுத் தலைவர் கலாம், அதன் மீது தனது முடிவை வெளியிடுவதற்கு முன்னர், கருணை மன்னிப்பு அளிப்பது பற்றி நாடாளுமன்றம் விவாதித்து ஒருமித்த கருத்தை காண வேண்டும் என்று கூறியிருப்பது சிந்திக்கத்தக்கது.

நாகரீக சமூகத்தில் குற்றத்திற்கு தண்டனை என்பது பொதுவான சட்ட ரீதியிலான ஓர் ஒழுங்குமுறையாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிக்கு அளிக்கப்படும் தண்டனை என்பது அவன் செய்யும் குற்றத்தின் தன்மையைப் பொறுத்து சாதாரணமானதாகவோ அல்லது கடுமையானதாகவோ விதிக்கப்பட்டாலும், தண்டனையின் நோக்கம் சட்டப்படி தண்டிப்பது என்பது மட்டுமின்றி, தண்டனைக் காலத்தில் தான் செய்த குற்றத்தை உணர்ந்து அச்செயலிற்குக் காரணமான உணர்ச்சித் தூண்டுதலில் இருந்து அவன் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.

தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் சிறையில் தனிமையில் அடைக்கப்படுகின்றனர். சமூகத்தில் இருந்தும், சுதந்திரமான உலக அனுபவத்தில் இருந்தும் தாங்கள் செய்த குற்றத்தின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு, சுதந்திரம் பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கும் போது மனித சிந்தனை ஓர் தீவிர சுய சிந்தனைக்கு ஆட்படுகிறது.

கொடும் குற்றங்களுக்காக சிறைப்படுத்தப்பட்ட பல குற்றவாளிகள் தண்டனைக் காலத்திற்குப் பிறகு விடுதலையாகி மீண்டும் சமூக வாழ்வை தொடரும் போது - சமூகம் அவர்களை எப்படிப் பார்த்தாலும் - அவர்கள் மாறிய, முதிர்ச்சியுற்ற மனிதர்களாகவே வாழ்ந்துள்ளனர், வாழ்கின்றனர்.

சில, பல சாதாரண குற்றங்களின் மூலம் பயன் கண்டு, அப்படிப்பட்ட வாழ்க்கையே சிறந்தது என்று தங்கள் அளவில் முடிவுசெய்து கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், அரசியல் அதிகாரம், சுக வாழ்க்கை ஆகியவற்றை பெற்றுத் தரும் அமைப்பு ரீதியிலான குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் ஆகிய இந்த இரு சாரார் தவிர, மற்ற எந்த குற்றங்களுக்காகவும் சிறைத் தண்டனைக்குப் பின் விடுதலையாவோர் திருந்திய மனிதர்களாகவே வாழ்கின்றனர்.

தண்டனையின் நோக்கம் இதுவே. குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்கும் போது, அந்தத் தனிமை அம்மனிதனை ஆழமான சுய சிந்தனைக்கு இட்டுச் செல்லும் போது தான் செய்த குற்றம் தனது வாழ்க்கையின் போக்கை பாதித்ததும், அதன் அர்த்தமற்ற தன்மையும் உணர்ச்சியற்ற நிலையில் சிந்திக்கும் போது அவன் நன்றாகவே புரிந்துகொள்கிறான்.

கொலைக் குற்றம் உள்ளிட்ட எப்படிப்பட்ட குற்றத்திற்கும் தண்டனை அனுபவித்த பிறகு விடுதலைப் பெற்று மீண்டும் வாழ்க்கைத் தொடரும் வாய்ப்பு உள்ளது.

ஆனால், சில கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு :- கற்பழித்து கொலை செய்தவன், பல பேரைக் கொன்றவன், தனது குடும்பத்தாரை, தான் பெற்ற மக்களை மனிதத் தன்மைக்கு மாறாக கொன்றவன் போன்றவர்கள் மீண்டும் வாழ அனுமதித்தால் அது சமூக அமைதிக்கு ஒரு நிரந்தர அச்சுறுத்தலாக இருக்கும் என்று சமூகமும், சட்டமும், நீதிமன்றமும் கருதுவதால் மரண தண்டனை விதிக்கப்படுவது பொதுவான நடைமுறையாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட கொடூரச் செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதித்து அவர்களின் வாழ்க்கையை முடித்தால்தான் அப்படிப்பட்ட கொடூரச் செயல்களில் வேறெவரும் ஈடுபடமாட்டார்கள் என்கின்ற முன்னோக்கும் அடிப்படையாக உள்ளது.

ஆனால், சாதாரணக் குற்றங்களில் இருந்து கொடும் குற்றங்கள் வரை செய்ததாக உறுதி செய்யப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட குற்றவாளிகள் அனைவருமே நாம் மேலே குறிப்பிட்டுள்ளது போல சுய சிந்தனைக்கு தங்களை உள்ளாக்கிக் கொண்டு முதிர்ச்சி பெறுகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துவிட்டால், அவன் ஆழமாக சிந்தித்து மன மாற்றம் பெறும் வாய்ப்பை இழக்கின்றான் என்பதே உண்மை. "எப்படியிருந்தாலும் தூக்கிலிடப்பட்டு உயிர் துறக்கப் போவது நிச்சயம். இதில் சிந்திப்பதனால் என்ன பலன்" என்கின்ற உணர்வுதான் மேலோங்குகிறது. பெரும்பாலான மரண தண்டனை கைதிகள் அந்த அச்சத்திலேயே இறுதி வரை இருந்துவிடுகின்றனர்.

ஆக, தண்டனையின் நோக்கம் மரண தண்டனை விதிப்பதால் முறியடிக்கப்படுகிறது. ஒரு கொடும் குற்றச் செயலில் ஈடுபட்ட அந்த மனிதனை அச்செயலிற்குத் தூண்டிய புறக் காரணங்கள் அனைத்தும் சமூகச் சூழலைச் சார்ந்தவையே என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஏற்றத் தாழ்வுகள் குறைந்த, அன்றாடத் தேவைகள் பொதுவாக கிடைக்கக் கூடிய, வாழ்க்கையின் சுக போகங்கள் பரவலாக அனுபவிக்கப்படுகின்ற முன்னேறிய சமூகங்களில் கொடூரக் குற்றங்கள் குறைவாகவே இருப்பதை மானுடவியல் ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.

ஆனால், ஏற்றத்தாழ்வு அதிகமுடைய, உரிமையுள்ள வாய்ப்புகள் கூட கிடைக்காத, அடிப்படைத் தேவைகளுக்கு வழியற்ற, முறைதவறிய தூண்டுதல்கள் நிரம்பிய சூழல்கள் கொண்ட சமூக வாழ்வில் கொடூரக் குற்றங்களுக்கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளன.

உதாரணத்திற்கு :- நமது திரைப்படங்களில் வரும் காம, வன்முறைக் காட்சிகள் அதனைப் பார்க்கும் நெஞ்சங்களில் ஏற்படுத்தும் பாதிப்பு பிற்காலத்தில் முரண்பட்ட ஒரு சூழலைச் சந்திக்கும் போது செயல் வடிவம் பெறுகிறது. ஒரு ரசிகனாய்ச் சென்ற மனிதன், தான் எதிர்பாராத பதிவுகளால் உணர்ச்சி தூண்டுதல்களுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரச் செயல்களில் ஈடுபடும் உந்துதலுக்கு ஆளாகின்றான். இது மிகவும் ஆழமாக பார்க்க வேண்டிய சமூகப் பிரச்சனை ஆகும்.

எனவே, ஒரு கொடுஞ் செயலில் ஈடுபட்டான் என்பதற்காக சட்டத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு மனிதனை பிறவிக் குற்றவாளியாகப் பார்ப்பதோ அல்லது அப்படிப்பட்ட குற்றச் செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க வேண்டுமெனில் மரண தண்டனைப் போன்ற கடுமையான தண்டனைதான் சரியான வழி என்பதோ அர்த்தமுள்ள வாதங்கள் ஆகாது.

இவைகளையெல்லாம் நன்கு சீர்தூக்கிப் பார்த்துதான் மரண தண்டனை ஒழிப்பை பல மேலை நாடுகளும் வலியுறுத்துகின்றன. மும்பை தொடர் குண்டு வெடிப்பின் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவனான அபு சலீமை கைது செய்த போர்ச்சுகல் நாடு, அவனை இந்தியாவிற்கு நாடு கடத்த ஒரு நிபந்தனையின் அடிப்படையில்தான் ஒப்புக் கொண்டது. அவனுக்கு எக்காரணம் கொண்டும் மரண தண்டனை விதிக்கக்கூடாது என்பதே அந்த நிபந்தனையாகும்.

எனவே, மரண தண்டனையை ஒழிப்பதுதான் சரியானதாகும். எந்தக் குற்றத்தைச் செய்தவனாயினும் சிறை வாழ்க்கையின் போது அம்மனிதன் நிச்சயம் சிந்திப்பான். அவனுக்குள் மாற்றம் ஏற்பட உகந்த சூழல் உருவாக்கப்பட வேண்டுமெனில் மரண தண்டனை அதற்கு வழியாகாது. அவன் உணர்வு நிலையில் பெற வேண்டிய மாற்றத்திற்கு மரண அச்சம் பெரும் தடையாகும்.

அதுமட்டுமின்றி, மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை (அராபிய நாடுகளில் விதிப்பதைப் போன்று) விதிப்பதால் குற்றங்கள் குறைவதில்லை என்பதை பல புள்ளி விவரங்கள் தெளிவாக்கியுள்ளன.

ஆகவே, தண்டனை அல்ல, கருணையே மனிதனை திருத்தவல்லது.

சிந்தனை அடிப்படையிலான நாகரீக உலகில் மரண தண்டனை அர்த்தமற்றது!

இது உங்கள் சொந்த கட்டுரையா? இல்லை என்றால் செய்தி மூலம் இருந்தால் போடுங்கள்..

மரண தண்டனை என்னைப் பொறுத்தவரை அர்த்தம் அற்றது.

மேலும், சிறைக்கு அனுப்பப்படுபவர்கள் திருத்தப்படுகின்றார்கள், திருந்துகின்றார்கள் என்பதை விட தண்டிக்கப்படுகின்றார்கள் என்று கூறுவதே சரியானது.

நல்ல கட்டுரை, இணைத்தமைக்கு நன்றி!

குறிப்பாக ஒரு குற்றவாளி புரிந்த குற்றத்திக்கு அவனை மட்டும் காரணமாக கொண்டு தண்டனை வழங்குவது என்ற நிலையிலிருந்து அதற்கு தூண்டுதலாக இருந்த காரணிகளை இனம் கண்டு அதனை நிவர்த்தி செய்வதில் எப்போது முக்கிய கவனம் எடுக்கப்படுகின்றதோ அன்று இந்தப் பூவுலகம் சொர்க்கமாக மாறும்.

இன்று பொதுவாக தீர்ப்புகளில் குற்றவாளிக்கு எப்போதோ எழுதப்பட்டதன் படி தண்டனைகளை வாசிக்கும் ஒரு வாய்ப்பாட்டு நிறுவனமாகவே நீதிமன்றம் செயற்படுகின்றது. மிஞ்சினால் ஒரு நீதிபதி ஒரு பேச்சுக்கு தன் கருத்தாக "இச்செயலுக்கு தூண்டுதலாக இருந்த சமுத்தையும் வன்மையாக கண்டிக்கின்றேன்" (தமிழ் படங்களில்) என கூறி தன் தீர்பினை முடித்து வைப்பார். அதன் பின் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்படுவதை தவிர அதற்கு காரணமான சமுகத்தின் குறையை திருத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை. அது மீண்டும் பலரை குற்றவாளிக் கூண்டில் கொண்டு வந்து நிறுத்துகின்றது. எனவே குற்றவாளிக்கு தண்டனை வழங்க முன்னர் அதற்கு காரணமான சமுகத்தின் குறைபாடுகள் களையப்பட வேண்டும் என்று ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும். இதனால் பெரும்பாலும் ஒரு குற்றத்திற்கு ஒரு குற்றவாளியைதான் தண்டிக்க வேண்டி வரும்.

நீதிமன்றங்கள் சிந்தனையாளர்களை கொண்டதாகவும் அவை ஆய்வுகளை மேற்கொண்டு திட்டங்களை முன்மொழிந்து, அதை அரசுகள் செயற்படுத்தினால் இது சாத்தியமாகும்!

அப்படி ஒரு புதிய கலாச்சாரம் கொண்டதாக தமிழீழத் தாய்நாடு மலரட்டும்!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

மனித சமூகத்தில் இருந்துதான் மிருக உணர்வுள்ள சிலர் உருவாகிறார்கள். இப்படியான உருவாக்கத்தை எந்தச் சட்டங்களோ சீர் திருத்தங்களோ முழுமையாகத் தடைப்படுத்தமாட்டா. எனவே பாரிய குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்கவும், கொலைகள், பாலியல் வல்லுறவுகள் போன்ற கொடூர குற்றங்களைச் செய்யமுனைவோரை எச்சரிக்கவும் கடுந்தண்டனையாகிய மரண தண்டனை சிலவேளைகளில் உதவலாம்.

கிருபன் அண்ணை, நீங்கள் ஒரு குற்றம் செய்து உங்களுக்கு மரணதண்டை என தீர்ப்பு அளிக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்வீர்களா? மரண தண்டனை சட்டம் அமுலில் இல்லாத பல நாடுகளை விட அது அமுலில் உள்ள பல நாடுகளிலேயே பாரிய குற்றச் செயல்களான கொலை, பாலியல் வல்லுறவு அதிகமாக இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணை, நீங்கள் ஒரு குற்றம் செய்து உங்களுக்கு மரணதண்டை என தீர்ப்பு அளிக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்வீர்களா? மரண தண்டனை சட்டம் அமுலில் இல்லாத பல நாடுகளை விட அது அமுலில் உள்ள பல நாடுகளிலேயே பாரிய குற்றச் செயல்களான கொலை, பாலியல் வல்லுறவு அதிகமாக இருக்கின்றன.

மரண தண்டனை கிடைக்கக்கூடிய குற்றங்களை செய்யும் அளவிற்குத் தைரியம் நம்மிடம் கிடையாது. ஒவ்வொரு குற்றங்களுக்கும் எத்தகைய தண்டனைகள் கிடைக்கும் என்று புரிந்தவன் குற்றம் செய்யமுன்னர் கொஞ்சமாவது சிந்திப்பான். ஆத்திரத்தில் அறிவிழந்ததனால் குற்றம் செய்யவேண்டி வந்தது என்று குற்றவாளி வாதிடுவது வழமை. அப்படியல்ல, குற்றவாளி தெரிந்தே செய்தார் என்று வாதிட்டு மரணதண்டனை பெற்றுக் கொடுப்பதுதான் அரசு தரப்புவாதமாக இருக்கும். எனவே தெரிந்தே செய்த குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுப்பதில் தவறில்லை. தெரியாமல் செய்த குற்றங்களுக்கு மரணதண்டனை கொடுப்பதுதான் சரியல்ல!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.