Jump to content

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கலைப்பும், யுத்த நிறுத்தத்தின் தோல்வியும்

அரசியல்த் தீர்வு குறித்து பண்டாரியுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த போராளிகளின் தலைவர்கள் இலங்கையரசின் ஒருதலைப்பட்சமான அறிவிப்புக் குறித்த தமது அதிருப்தியை வெளியிட்டனர். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினை மேலும் சிங்களவர்களை உள்ளடக்கி விஸ்த்தரிப்பதான இலங்கையரசின் தாந்தோன்றித்தனமான முடிவு பண்டாரிக்கும் எரிச்சலை உணடுபண்ணியிருந்ததாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பேசிவந்தனர். ஆனால், பகாமாஸில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ரஜீவிற்கும் ஜெயாரிற்கும் இடையிலான பேச்சுக்களைப் பாதித்துவிடும் என்பதற்காக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினை விஸ்த்தரிக்கும் லலித்தின் அறிவிப்புக் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை பண்டாரியும் போராளிகளும் தவிர்த்தனர்.  மேலும், லலித்தின் இந்த அறிவிப்புக் குறித்து ரஜீவ் அறிந்திருந்தபோதிலும், அரசியல்த் தீர்வு குறித்தே அவர் அதிகம் அக்கறை கொண்டிருந்தமையினால், இந்த அறிவிப்புக் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ள அவர் விரும்பியிருக்கவில்லை.

யுத்த நிறுத்த‌க் குழுவின் விஸ்த்தரிப்பினையடுத்து அது சிங்களவரின் நலன் பேணும் கருவியாக மாறிப்போனது. இக்குழுவில் பங்கேற்றிருந்த இரு தமிழ் உறுப்பினர்களும் என்னிடம் பேசும்போது தமது கருத்துக்களை குழுவிலிருந்த ஏனைய சிங்களவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்று கூறியிருந்தனர். மேலும், இராணுவத்தினரின் யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து தமிழ் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியபோது அவர்கள் இராணுவத்தால் அச்சுருத்தப்பட்டிருந்தனர். யுத்த நிறுத்தக் கண்காணிப்பிலிருந்த சில சிங்களவர்கள் தமிழ் உறுப்பினர்களை நேரடியாகவே அச்சுருத்தவும் செய்தனர். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவென்பது தமிழர்களைப் பொறுத்தவரை செயற்றிறன் அற்றதாகவும், சிங்களவரின் நலன் காப்பதாகவும் மாறிப்போயிருந்தது. 

யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தோல்வியென்பது மார்கழி மாத நடுப்பகுதியில் உருவானது. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த யாழ்க் கோட்டையில் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கான  கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அப்பகுதியினை போராளிகள் சுற்றிவளைத்து முற்றுகை நிலைக்குள் வைத்திருந்தனர். 

"எனது நண்பர் ஒருவரின் வாகனத்தில் யாழ் கோட்டை இராணுவ முகாம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். நான் கோட்டைப்பகுதியினை அண்மித்தபோது, வானில் திடீரென்று தோன்றிய இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தியொன்று கோட்டைப்பகுதியைச் சுற்றி வட்டமிடத் தொடங்கியது. சில நிமிடங்களில் எமது வாகனம் நோக்கித் தாழப்பறந்த உலங்குவானூர்தி எம்மீது சரமாரியான துப்பாக்கித்தாக்குதலை ஆரம்பித்தது. அப்பகுதியில் யாழ் வைத்தியசாலைக்குச் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தப்படவே அவர் எம் கண்முன்னே இறந்து வீழ்ந்தார். இச்சம்பவம் எனக்குக் கடுமையான கோபத்தினை ஏற்படுத்தியது. இது ஒரு அப்பட்டமான யுத்த நிறுத்த மீறலாகும்".

"கூட்டாத்தில் நான் இச்சம்பவம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தேன். அங்கிருந்தோர் இது ஒரு சாதாரண விபத்து, அமைதியாகுங்கள் என்று என்னிடம் கூறினர். ஆனால் என்னால் அவர்கள் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அங்கு பரிமாறப்பட்ட மதிய உணவை நான் நிராகரித்தேன். என்னால் இனிமேலும் இங்கு இருக்கமுடியாது. என்னை வெளியேற விடுங்கள் என்று அவர்களைப் பார்த்துக் கோபமாகக் கூறினேன்" என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் உறுப்பினரான பேராசிரியர் சிவத்தம்பி என்னிடம் கூறினார்.

UAV orthophoto of Jaffna Fort with GPR data outlined in red. | Download  Scientific Diagram

சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணக் கோட்டை

 ஆனால், பேராசிரியர் கோட்டையிலிருந்து வெளியேறுவதென்பது அப்போது சாத்தியப்படவில்லை. அப்பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட உலங்குவானூர்தி மீது கோட்டையைச் சுற்றி நிலையெடுத்து நின்ற போராளிகள் பதில்த்தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். யாழ்நகரப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த போராளிகளின் நிலைகளில் இருந்து உலங்குவானூர்தி மீதான பதில்த்தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. யாழ்க் கோட்டையினுள் கடமையாற்றிய சிங்களத் தளபதிகளில் ஒருவரான கப்டன் கொத்தலாவல பேராசிரியர் சிவத்தம்பிக்கு ஆதரவாக வந்தார். புலிகளின் யாழ்ப்பாணத் தளபதியாகவிருந்த கிட்டுவுடன் அடிக்கடி தொடர்புகளை மேற்கொண்டு வந்தவர்தான் இந்த கொத்தலாவல.

This is an interesting event in the history of warfare study ...

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட கொத்தலாவல, உடனடியாக கிட்டுவுடன் தொடர்புகொண்டு பேராசிரியரை பாதுகாப்பாக கோட்டையிலிருந்து வெளியே கொண்டுவர விரும்புவதாகக் கூறினார். இதனையடுத்து உலங்குவானூர்தி மீதான தாக்குதல் புலிகளால் உடனடியாக நிறுத்தப்பட்டது. பேராசிரியர் சிவத்தம்பியும் பாதுகாப்பாக கோட்டையிலிருந்து வெளியேறினார்.

"நான் அக்கணமே யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிலிருந்து வெளியேறும் தீர்மானத்தை எடுத்தேன்" என்று பேராசிரியர் என்னிடம் பின்னாட்களில் தெரிவித்திருந்தார்.

கொழும்பு திரும்பிய சிவத்தம்பி, யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவரான அபயசிங்கவிடம் தனது முடிவு குறித்து அறிவித்தார். தனது ராஜினாமாக் கடிதத்தினை ஜனாதிபதி ஜெயாரிடம் கையளிக்க விரும்புவதாக சிவத்தம்பி அபெயசிங்கவிடம் கூறினார். ஆனால், தன்னிடமே ராஜினாமாக் கடிதத்தை சிவத்தம்பி கையளிக்கவேண்டும் என்று அபெயசிங்க வற்புறுத்தியபோதும் சிவத்தம்பி அதனை மறுத்து விட்டார்.

"என்னை யுத்த நிறுத்தக் கண்கானிப்புக் குழுவில் அமர்த்தியது ஜனாதிபதியே, ஆகவே அவரிடமே எனது இராஜினாமாவைக் கையளிப்பேன்" என்று சிவத்தம்பி கூறினார். 

"கண்காணிப்புக் குழுவின் செயலாளரும் நானே, ஆகவே கடிதத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி என்னைப் பணித்திருக்கிறார்" என்று அபெயசிங்க பதிலளித்தார்.

 ஆனால், ஜெயாருக்கே தனது கடிதத்தை நேரடியாகச் சமர்ப்பித்து தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிவத்தம்பி உறுதிபூண்டிருந்தார்.

 பின்னர் யுத்த நிறுத்தக் குழுவில் அங்கம் வகித்த இரண்டாவது தமிழ் உறுப்பினரான சிவபாலனையும் அழைத்துக்கொண்டு நீதிபதி சி. மாணிக்கவாசகரைச் சந்திக்கச் சென்றார் சிவத்தம்பி. நீதிபதி மாணிக்கவாசகர் அப்போது யாழ் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியாகக் கடமையாற்றி வந்தார். பல்கலைக்கழகத்திலிருந்து ஜனாதிபதி ஜெயாருக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய மாணிக்கவாசகர், "பேராசிரியர் சிவத்தம்பி உங்களுடன் பேசவிரும்புகிறார்" என்று கூறி தொலைபேசியை சிவத்தம்பியிடம் கையளித்தார்.

தொலைபேசியை வாங்கிக்கொண்ட சிவத்தம்பி இவ்வாறு கூறினார், "கெளரவ ஜனாதிபதி அவர்கள் எமது கடமையினை மிகுந்த அவதானத்துடன் கையாள்வது அவசியமானது. எமது கடமையினை சரியாகச் செய்ய எம்மை அனுமதிக்காவிட்டால் இலங்கை இப்பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு எமக்குக் கிடைத்திருக்கும் இந்த இறுதிச் சந்தர்ப்பம் இல்லாது போய்விடும்" என்று கூறிவிட்டு தொலைபேசியினைத் துண்டித்துக்கொண்டார். இதேவகையான கருத்துக்களையே அவர் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அனைத்துக் கூட்டங்களிலும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்திருந்தார்.

மறுநாள் டிக்ஷிட்டைச் சந்தித்த பேராசிரியர் சிவத்தம்பி தனது இராஜினாமா குறித்து அவரிடம் தெரிவித்தார். "நீங்கள் கவலைப்பட வேண்டாம், எல்லாம் சரியாகிவிடும்" என்று டிக்ஷிட் அவரிடம் கூறினார். யுத்த நிறுத்தம் குறித்தே டிக்ஷிட் அவ்வாறு கூறினார். ஆனால், டிக்ஷிட்டின் குரலில் இருந்த கசப்பான தொனியை சட்டென்று சிவத்தம்பி கண்டுகொண்டார். தாம் எவ்வகைப்பட்ட ஆளும்வர்க்கத்துடன் பேரம்பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை இந்தியா மெதுமெதுவாக உணரத் தொடங்கியிருந்தது.

இத்துடன் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதுடன் எல்லாமே முடிந்துபோனது. இக்குழு அமைக்கப்பட்டிருந்த காலத்திலிருந்து ஜனாதிபதிக்கு அது கையளித்த ஒற்றை அறிக்கையில், தமிழ்ப் பிரதிநிதிகளின் பிரதிநித்துவம் இன்மையினால் கண்காணிப்புக் குழு தொடர்ந்து இயங்குவதில் அர்த்தமில்லை என்று கூறியிருந்தது. கண்காணிப்புக் குழுவின் உடைதலோடு யுத்த நிறுத்தமும் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது.

போராளிகள், இராணுவம் ஆகிய இரு தரப்புமே யுத்த நிறுத்தம் தோல்வியடைய வேண்டும் என்று விரும்பியிருந்தனர். யுத்த நிறுத்த காலத்தில் இருதரப்புமே தம்மைப் பலப்படுத்தி ஆயுதமயமாக்குவதில் ஈடுபட்டிருந்தனர். தமிழர் மீதான யுத்தம் மூலம் அவர்களின் பிரச்சினையினைத் தீர்க்க ஜெயார் உறுதிபூண்ட அதேவேளை, அதனை எதிர்கொள்வதற்குத் தமிழ் மக்களைத் தயார்ப்படுத்துவதில் பிரபாகரன் ஈடுபட்டிருந்தார்.

அனீத்தா பிரதாப்புடன் புரட்டாதியில் பேசியிருந்த பிரபாகரன், யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி அரசாங்கம் தம்மைப் பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடும்வேளை, தாமும் அச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக் கொள்வது அவசியமானது என்று தெரிவித்திருந்தார். இக்காலத்தில் யாழ்க்குடாநாட்டின் அனைத்து இராணுவ முகாம்களையும் சுற்றிவளைத்துக்கொண்ட புலிகளும் ஏனைய போராளிகளும் இராணுவத்தின் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தி வந்தனர்.

பகமாசில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பிய ரஜீவிடம், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இருந்த சிங்களவர்களின் எண்ணிக்கையினை ஒரு தலைப்பட்சமாக அரசாங்கம் அதிகரித்துக்கொண்டது தொடர்பான தமது கண்டனத்தை போராளிகளின் தலைவர்கள் முன்வைத்தனர். ஜெயவர்த்தன நம்பப்பட முடியாதவர் என்று ரஜீவிடம் அவர்கள் வலியுறுத்தினர். "யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதறடிப்பவர் எவ்வாறு தமிழ் மக்களுக்கான தீர்வைத் தருவதாகக் கூறும் எந்த ஒப்பந்தத்தையும்  நடைமுறைப்படுத்துவார் என்று நம்புவீர்கள்?" என்று அவர்கள் ரஜீவிடம் வினவினர்.

யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் குறித்து தில்லிப் பத்திரிக்கையாளர் ஒருவர் பிரபாகரனிடம் வினவியபோது எரிச்சலடைந்த அவர் பின்வருமாறு கூறினார், 

Vip1.jpg

"எந்தக் கண்காணிப்புக் குழு குறித்து நீங்கள் பேசுகிறீர்கள்? இதுவரை ஒரு அறிக்கையினைத் தன்னும் இக்குழுவினரால் பிரசுரிக்க முடிந்திருக்கிறதா? ஜெயவர்த்தனவின் காட்டாட்சியில் அட்டூழியங்களில் ஈடுபட்டு வரும் அவரது இராணுவ மிருகங்களின் யுத்த நிறுத்த மீறல்களில் ஒன்றைத்தன்னும் இக்கண்காணிப்புக் குழுவினால் இதுவரை விசாரிக்க முடிந்திருக்கிறதா? உண்மையென்னவென்றால், எமது மீனவர்களைக் கொல்வதற்காக ஜெயவர்த்தன இக்காலப்பகுதியில் பல பீரங்கிப் படகுகளை சிங்கப்பூரிடமிருந்து கொள்வனவு செய்திருக்கிறார். உண்மையென்னவென்றால் பேச்சுக்கள் நடைபெற்றுவரும் அதே காலப்பகுதியில் மேலும் மேலும் தமிழ் மக்களை அவர் கொலைசெய்துவருகிறார். அவரது இராணுவமும், கடற்படையும், விமானப்படையும் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தே வருகின்றனர்" என்று கூறினார்.

போராளிகளின் தலைவர்கள் கார்த்திகையில் ரஜீவிற்கு அனுப்பிய தமது கடிதத்தில், தமிழ் மக்களை ஏமாற்றி அழிக்கும் ஜெயாரின் கைங்கரியத்தின் ஒரு அங்கமே யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் உருவாக்கம் என்றும் விமர்சித்திருந்தனர்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 604
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலை

ரஞ்சித்

அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்க

ரஞ்சித்

உள்நாட்டிலும், இந்தியாவிலும் தனது இனவாத நடவடிக்கைகளுக்காக எழுந்துவந்த எதிர்ப்பினைச் சமாளிப்பதற்காக இருவேறு கைங்கரியங்களை டி எஸ் சேனநாயக்கா கைக்கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த தமிழ் எதிர்ப்பினைச் சிதைப்பத

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இராணுவம் சிங்கள இராணுவமாகவே இருக்கும். வடக்கையும் கிழக்கையும் இணைக்க முடியாது, விரும்பினால் மட்டக்களப்பு மாவட்டம் வட மாகாணத்துடன் இணையலாம் ‍- ஜெயார் ஜெயவர்த்தன‌
 

Mani Shankar Aiyar's profile of Rajiv Gandhi as a 'misunderstood PM': Babri  to Shah Bano, Bofors to Punjab, Assam accords | Political Pulse News - The  Indian Express

யுத்த நிறுத்தம் தோல்வியடைந்து வரும் நிலையிலும் கூட, பிரச்சினைக்கான தீர்வு குறித்து செயற்படுவதில் தில்லி ஈடுபட்டு வந்தது. தில்லி ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவதில் ரஜீவும் பண்டாரியும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தனர். திம்புப் பேச்சுக்களில் ஈடுபட்ட ஆறு போராளிகள் அமைப்புக்களின் தலைவர்களை தில்லி ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக தன்னை வந்து சந்திக்குமாறு ரஜீவ் கோரியிருந்தார். தில்லி ஒப்பந்தம் குறித்த அவர்களின் கருத்தினை அறிந்துகொண்டு பின்னர் கொழும்புடன் பேசுவதே அவரது எண்ணம்.

பேச்சுவார்த்தைகளின் அணுசரணையாளர் என்கிற ரீதியில் இரு தரப்புக்களையும் பேரம்பேசலில் ஈடுபட வைப்பதென்பது இயலாத காரியம் என்பதை திம்புப் பேச்சுக்களின் அனுபவத்திலிருந்து இந்தியா கற்றுக்கொண்டிருந்தது. விட்டுக்கொடுப்புக்களுக்குப் பதிலாக முரண்பாட்டுப் போக்கினையே அனுசரணையாளர் எனும் இந்தியாவின் பங்கு திம்புப் பேச்சுக்களில் ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, அணுசரணையாளர் எனும் அதுவரை தான் கடைப்பிடித்த போக்கினைக் கைவிட்டு பேச்சுக்களின் நடுவர் எனும் நிலையினைக் கைக்கொண்டு இரு தரப்புடனும் நேரடியாகப் பேசி, அழுத்தங்களைப் பிரயோகித்து இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை கண்டறிந்து, இரு தரப்பையும் இணங்கவைக்கும் சக்தி எனும் நிலைக்கு இந்தியா தன்னை உயர்த்திக்கொண்டது.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும், புளொட் அமைப்பும் ரஜீவின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட நிலையில் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைமைகள் தலைமறைவாகியிருந்தனர். ஆளாளசுந்தரமும், தர்மலிங்கமும் டெலோ அமைப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்ட புரட்டாதி 2 ஆம் நாளன்று இரவு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இரு தலைவர்களான அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் தில்லிக்குப் பயணமாகினர். தில்லியில் ரஜீவுடனும், பண்டாரியுடனும் அவர்கள்  தில்லி ஒப்பந்தம் குறித்த ஆழமானபேச்சுக்களில் ஈடுபட்டனர். தில்லி ஒப்பந்தம் குறித்த அமிரினதும், சிவசிதம்பரத்தினதும் கருத்துக்களை ரஜீவ் அறிந்துகொள்ள விரும்பினார்.   அதற்குப் பதிலளித்த அவர்கள் இருவரும் தில்லி ஒப்பந்தம் மூன்று முக்கிய விடயங்களில் திருப்திகரமானதாக இருக்கவில்லை என்று கூறினர். தமிழரின் தாயகம், காணி தொடர்பான அதிகாரப் பகிர்வு, சட்டம் ஒழுங்கு தொடர்பான அதிகாரப் பகிர்வே அவை மூன்றும் என்று அமிரும், சிவசிதம்பரமும் ரஜீவ்டம் தெரிவித்தபோது, தமது ஆட்சேபணைகளை எழுத்தில் தன்னிடம் வழங்குமாறு ரஜீவ் அவர்களிடம் தெரிவித்தார்.

சென்னை திரும்பிய அமிரும், சிவசிதம்பரமும் ரஜீவிற்கு எழுதிய கடிதத்தில் தாம் குறிப்பிட்ட மூன்று விடயங்கள் குறித்து தமிழர்கள் விட்டுக்கொடுப்பிற்குத் தயார் இல்லை என்று கூறியிருந்ததோடு தில்லி ஒப்பந்தம் குறித்த ஆட்சேபணைகளையும் வெளிப்படுத்தியிருந்தனர். 

அவர்கள் குறிப்பிட்ட ஆட்சேபணைகள் வருமாறு,

ஆடி 26 ஆம் திகதி ரஜீவிற்கு தாம் அனுப்பியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டதற்கு அமைய தமிழர்களின் தாயகம் தொடர்பாக கூட்டணியின் தலைவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தனர்,

1. தமிழரின் பிரச்சினைக்குரிய எந்தத் தீர்வும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை ஏற்றுக்கொண்டதாக அமைந்திருத்தல் வேண்டும். சுதந்திரத்திற்குப் பின்னர் பதவியில் இருந்த அனைத்துச் சிங்கள அரசாங்கங்களும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களூடாக தமிழரின் தாயகத்தைச் சிதைத்து, அதன் எல்லைகளை மாற்றியமைப்பதில் முன்னெடுப்புடன் செயற்பட்டே வருகின்றன. பலஸ்த்தீன நிலப்பரப்பில் இஸ்ரேல் செய்துவரும் குடியேற்றங்களுக்குச் சற்றும் சளைக்காத வகையிலும், தமிழ் மக்களினது தொடர்ச்சியான எதிர்ப்பிற்கு மத்தியிலும், ஒவ்வொரு பிரதமரும் தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பின்னரும் தமிழரின் தாயகச் சிதைப்பென்பது நீண்டுகொண்டே செல்கிறது.

இதுகுறித்து மேலும் கருத்துரைத்த அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும், காணியதிகாரம் என்பது நிச்சயம் தமிழருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், தமிழர் தாயகத்தில் சிங்கள அரசுகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்த காணியதிகாரம் தமிழரிடம் இருப்பது இன்றியமையாதது என்றும் தெரிவித்தனர்.

2. சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் குறித்து பேசும்போது, தில்லி ஒப்பந்தத்தின்படி மாநிலங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் பொலீஸ் அதிகாரம் எந்தவிதத்திலும் போதுமானதல்ல என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். ஒரு மாநிலத்தின் பொலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து காவல்த்துறையினரும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று அவர்கள் கோரினர். 

3. தமிழ் மக்களின் பாதுகாப்பும், நலனும் முக்கிய விடயங்களாக மாறியிருப்பதாகச் சுட்டிக் காட்டிய அவர்கள், தமிழரின் நலன்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு மூன்று விடயங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் கோரினர். அவையாவன,

வடக்குக் கிழக்கிலிருந்து இராணுவத்தை முற்றாக விலக்கிக் கொள்வது. ஐந்து வருடங்களுக்கொருமுறை மாநிலங்களின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக ஜனாதிபதியும், மாநில முதலமைச்சரும் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுப்பது.

இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பின்பொழுது நாட்டின் இனவிகிதாசாரத்தின் அடிப்படையிலேயே ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுவதுடன், தமிழ் இராணுவத்தினருக்கான ரெஜிமெண்ட் ஒன்றும், முஸ்லீம் இராணுவத்திற்கான ரெஜிமெண்ட் ஒன்றும் தனித்தனியாக இராணுவத்தினுள் உருவாக்கப்பட வேண்டும். 

தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களிடமிருந்து தில்லி ஒப்பந்தம் குறித்த கருத்துக்களை எப்படியாவது பெற்றுக்கொள்வதன் மூலம் ஒட்டுமொத்த தமிழர்களினதும் பொதுவான கோரிக்கையினை சிங்களத் தலைவர்களின் பார்வைக்கு முன்வைக்க ரஜீவ் முயன்று வந்தார்.

S. Thondaman, Sr. with MGR

தொண்டைமான் தனது பூர்வீக வாசஸ்த்தலம் அமைந்திருக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தின் மூனா புதூரிற்கு அடிக்கடி வந்துபோவதை வழமையாகக் கொண்டிருந்தார். அவரது வருகையினை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி,  ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களுடன் தொண்டைமானைப் பேசவைத்து, தன்னை வந்து சந்திக்க அவர்களை இணங்கச் செய்வதே ரஜீவின் நோக்கம். இதனை செயற்படுத்தும் பணி ரொமேஷ் பண்டாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், போராளிகளின் தலைவர்களைச் சந்திக்க தொண்டைமான் எடுத்த முயற்சி தோல்வியடையவே அவர் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஐயும், மின்வளத்துறை அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரனையும் புரட்டாதி 6 ஆம் திகதி சந்தித்துவிட்டுச் சென்றார்.

 இதற்கு முன்னர், புரட்டாதி 5 ஆம் திகதி ஜெயாரைச் சந்தித்த தொண்டைமான் மறுநாளான புரட்டாதி 6 ஆம் திகதி முதலமைச்சர் ராமச்சந்திரனைத் தான் சந்திக்கவிருப்பதாக அறிவித்தார். 

"தில்லி ஒப்பந்தம் குறித்து எம்.ஜி.ஆரி இடம் நான் என்ன கூறட்டும்?" என்று ஜெயாரிடம் வினவினார் தொண்டைமான்.

அதற்குப் பதிலளித்த ஜெயார், தில்லி ஒப்பந்தம் இறுதியானது என்று தான் ஏற்றுக்கொள்ளவில்லையென்றும், ஆனால் அதனை அடிப்படையாகக் கொண்டு பேச்சுக்களில் ஈடுபட முடியும் என்று தான் கருதுவதாக எம்.ஜி.ஆர் இடம் சொல்லுங்கள் என்றும் கூறினார். ஜெயாரின் செய்தியை எம்.ஜி.ஆர் இடம் அப்படியே தெரிவித்துவிட்டு பண்ருட்டியைச் சந்தித்த தொண்டைமான், தமிழ்நாட்டில் தலைமறைவாகியிருந்த ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களிடம் ரஜீவைச் சென்று சந்திக்குமாறு கூறுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துவிட்டு இந்துப் பத்திரிக்கைக்குப் பேட்டிகொடுத்த தொண்டைமான், "தில்லி ஒப்பந்தமே இறுதியானது அல்ல. பேச்சுவார்த்தைக்கான அடிப்படை ஆவணமே அது. இருதரப்பும் இணங்கும்பட்சத்தில் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் குறித்து மாற்றங்களைச் செய்து இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையினை அடைய  முடியும்" என்று கூறினார்.

இதேவேளை, இலங்கை ராணுவத்தினரின் அடக்குமுறைகளைக் கட்டுப்படுத்தி வைக்குமாறு இலங்கையரசாங்கத்தினை இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்தனர். அதேவேளை போராளிகளிடம் தமது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறு கோரிய இந்திய அதிகாரிகள், குறிப்பாக புலிகளிடம் பேசும்போது இராணுவத்தினர் மீதான கண்ணிவெடித்தாக்குதல்கள், தொடரணி மீதான பதுங்கித் தாக்குதல்களையும் நிறுத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

தமிழர்களின் பிரச்சினையில் மிகவும் காத்திரமான முறையில் பங்களிக்கும் எண்ணத்துடன் தில்லி அந்நாட்களில் இயங்கிக்கொண்டிருந்தது. புரட்டாதி 7 ஆம் திகதியிலிருந்து 14 வரையான காலப்பகுதியில் டிக்ஷிட் தில்லிக்கு அழைக்கப்பட்டு ஆலோசனைகளில் ஈடுபடுத்தப்பட்டார். மேலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தில்லி ஒப்பந்தம் குறித்து வெளியிட்ட கருத்துக்களை ஆராய ஜெயாரின் சகோதரர் ஹெக்டர் ஜயவர்த்தனவும் தில்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார். புரட்டாதி 10 இலிருந்து 13 வரை அவர் தில்லியில் தங்கியிருந்தார். தில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தில்லி ஒப்பந்தம் குறித்து மேலதிகப் பேச்சுக்களை நடத்தவே ஹெக்டர் வரவழைக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிவித்தனர்.

தில்லியில் பண்டாரியுடனும், இந்திய அரசியலமைப்பு நிபுணர் பாலகிருஷ்ணனுடனும் பேச்சுக்களில் ஈடுபட்ட ஹெக்டர், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரால் முன்வைக்கப்பட்ட மூன்று முக்கிய விடயங்களானதமிழரின் தாயகம், அதனை நிர்வகிக்கும் அதிகாரம் மற்றும் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியன குறித்து கலந்துரையாடினார். 

தமிழரின் தாயகம் குறித்த கேள்வியொன்றின்போது, வடக்கையும் கிழக்கையும் இணைத்துக்கொள்ளும் வழிமுறை ஒன்று பற்றி ஆராய்வது குறித்து ஹெக்டரிடம் வினவினார் பண்டாரி. ஆரம்பத்தில் வடக்கையும் கிழக்கையும் இணைப்பது குறித்த எந்தப் பேச்சுக்களுக்கும் இடமில்லை என்று திட்டவட்டமாக மறுத்த ஹெக்டர் பின்னர் ஜெயாருடன் தொலைபேசியில் கலந்துரையாடிவிட்டு, மாவட்ட அபிவிருத்திச் சபைகளே அடிப்படை அதிகாரப் பகிர்வு அலகுகளாக இருக்கும் என்றும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டம் விரும்பினால் வட மாகாண சபையுடன் இணைந்து இயங்க முடியும் என்றும் கூறினார்.

காணியதிகாரம் குறித்த கலந்துரையாடல்களின்போது, இதுகுறித்த பேச்சுவார்த்தையில் தமது அரசாங்கம் நெகிழ்வுத்தன்மையினைக் கடைப்பிடிக்கும் என்று ஹெக்டர் கூறினார். ஆனால், சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் குறித்து கலந்துரையாடப்பட்டபோது, இலங்கையரசாங்கம் எந்த விட்டுக்கொடுப்பையும் மேற்கொள்ளாது என்று கடுமையான தொனியில் அவர் பேசினார். இலங்கை இராணுவத்தில் இனவிகிதாசார அடிப்படையில் ஆட்களை இணைத்துக்கொள்வதை திட்டவட்டமாக மறுத்த ஹெக்டர், தமிழ் மற்றும் முஸ்லீம் ரெஜிமெண்டுக்கள் என்கிற பேச்சிற்கே இடமில்லை என்று பிடிவாதமாக நின்றார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜீவைச் சந்தித்த தலைவர் பிரபாகரன்

Prabakaran-May-1987-300x225.jpg

ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் புரட்டாதி 18 ஆம் திகதி தில்லியை வந்தடைந்தனர். அங்கு ஐந்து சுற்றுப் பேச்சுக்களை அவர்கள் நடத்தினர். இரு சுற்றுப் பேச்சுக்கள் ரொமேஷ் பண்டாரியுடனும், ரஜீவ் காந்தியுடன் 90 நிமிட பேச்சுவார்த்தையும், இந்திய வெள்யுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் இரு சுற்றுப் பேச்சுக்களும் அவர்களால் நடத்தப்பட்டன. 

ரஜீவ் காந்தியுடனான ஈழத்தேசிய விடுதலை முன்னணித் தலைவர்களின் பேச்சுக்கள், ரஜீவின், தன்னை வந்து உடனடியாகச் சந்திப்பதற்கான கோரிக்கைக்கு தம்மால் ஏன் உடனடியாகப் பதிலளிக்க முடியாது போனது என்பதற்கான பிரபாகரனின் விளக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. ரஜீவின் கோரிக்கை விடுக்கப்பட்ட நாட்களில் தான் வட இலங்கையில் இருந்ததாகவும், பாலசிங்கத்தை இந்தியா நாடுகடத்தியிருந்ததாகவும் பிரபாகரன் ரஜீவிடம் தெரிவித்தார். அத்துடன் ரஜீவ் தன்னை வந்து சந்திக்குமாறு கோரிக்கை விடுத்த நாட்களின்போதும் பிரபாகரன் வட இலங்கையிலேயே தொடர்ச்சியாகத் தங்கியிருந்தார். பாலசிங்கத்தை இந்தியா நடுகடத்தியமையினை தான்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்றும், அதற்கு ஆட்சேபணை தெரிவிக்கவே தான் ரஜீவின் கோரிக்கைக்கு உடனடியாகப் பதிலளிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

"நான் உங்களை வந்து சந்திப்பதை தவிர்க்க விரும்பவில்லை. உண்மையைச் சொல்வதானால் உங்களைச் சந்திக்கவே நான் விரும்பியிருந்தேன். அதனாலேயே இன்று நான் வந்திருக்கிறேன்" என்று தன்னைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டு நின்ற ரஜீவிடம் பிரபாகரன் தெரிவித்தார்.

 பின்னர், பாலசிங்கத்தை நாடுகடத்தும் இந்தியாவின் முடிவினை அவர் தவறென்று சுட்டிக் காட்டினார். திம்புப் பேச்சுக்களிலிருந்து வெளிநடப்புச் செய்வதாக தானும், ஏனைய ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களுமே முடிவெடுத்த‌தாகவும், பாலசிங்கம் செய்தது அம்முடிவினை பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த தமிழர் தரப்பினருக்கு அறியத் தந்தது மட்டும்தான் என்றும் பிரபாகரன் கூறினார். "அது எம்மால் எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவு. பாலசிங்கம் அம்முடிவினை பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த எமது பிரதிநிதிகளுக்கு அறியத் தந்தார்" என்று பிரபாகரன் கூறினார். 

"தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிந்தனைகளையும் திட்டமிடல்களையும் செய்வது நானே. ஆங்கில மொழியில் எனக்கிருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஆற்றலால், பாலசிங்கமே எனது சிந்தனைகளை வெளியே கொண்டுவருவார். எனது முடிவுகளில் அவர் தலையிடுவதில்லை" என்று பிரபாகரன் ரஜீவைப் பார்த்துக் கூறினார்.

எம்.ஜி.ஆர் உடனனான பேச்சுக்களின்போது தாம் தெரிவித்த அதே கருத்துக்களையே ரஜீவுடனான சந்திப்பின்போதும் போராளிகளின் தலைவர்கள் வெளிப்படுத்தினர். குறிப்பாக இராணுவ அடக்குமுறைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டிருந்த‌ உப்புச் சப்பற்ற தீர்வு என்பன குறித்து அவர்கள் ரஜீவிடம் தமது ஆட்சேபணையினைத் தெரிவித்தனர். தமிழர்களின் தாயகக் கோரிக்கையினை நிராகரிக்கும் நோக்குடன் தமிழரின் தாயகத்தின் ஒரு பகுதியான கிழக்கு மாகாணத்தில் இருந்து அவர்களை நிரந்தரமாகவே அடித்து விரட்டிவிட்டு, தமிழர் தாயகத்தின் இனப்பரம்பலினை முற்றாக மாற்றியமைக்க இலங்கையரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையொன்றினையும் அவர்கள் ரஜீவிடம் சமர்ப்பித்தனர்.

போராளிகளின் தலைவர்களுடன் பேசிய ரஜீவும் பண்டாரியும், இலங்கையரசாங்கத்துடன் தாம் தொடர்ந்து பேசப்போவதாகவும், போராளிகளும் தமது பக்க தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். "ஆரம்ப ஆவணத்துடன் மீண்டும் வந்து சந்தியுங்கள்" என்று போராளிகளிடம் ரஜீவ் கூறினார்.

ரஜீவிடம் பேசிய பிரபாகரன், கடந்த கால அனுபவங்களூடாகவும், சரித்திரத்தினைப் பார்ப்பதூடாகவும் ஜெயவர்த்தன நேர்மையான தீர்வொன்றிற்கு ஒருபோதும் வரப்போவதில்லை என்பதை உங்களால் உணர்ந்துகொள்ள முடியும் என்று கூறினார். தான் அமைதியை விரும்பும் ஒரு மனிதர் என்று உலகிற்குக் காட்டவே நாடகமொன்றினை அவர் நடத்திக்கொண்டிருக்கிறார் என்று பிரபாகரன் மேலும் தெரிவித்தார். ஜெயாரை நம்பவேண்டாம் என்று ரஜீவை எச்சரித்த பிரபாகரன், அவர்குறித்து மிகுந்த அவதானத்துடன் நடந்துகொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழரின் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு ஒன்றினை அடைவது குறித்த செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் இந்திய அரசாங்கத்தைப் பாராட்டிய பிரபாகரன், தமிழர் விரும்பும் தீர்வினை அடைய இந்தியா இன்னும் அதிகமாக உழைக்கவேண்டியிருக்கும் என்றும் கூறினார்.

தமிழர்களின் பிரச்சினைக்கான உண்மையானதும், தர்க்கரீதியானதுமான தீர்வு தமிழ் ஈழம் என்று தான் உறுதியாக நம்புவதாக ரஜீவிடமும் அங்கிருந்த ஏனைய இந்திய அதிகாரிகளிடமும் பிரபாகரன் கூறினார். இந்தியா மீது தான் வைத்திருக்கும் மரியாதையின் நிமித்தமே ஈழத்திற்கு மாற்றீடான தீர்வு குறித்து ஆராய  ஏற்றுக்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார். ஈழத்திற்கு மாற்றீடான தீர்வாக் தான் எதிர்பார்ப்பது பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழர்கள் தம்மைத்தாமே ஆளும் முற்றான அதிகாரத்தைக் கொண்டதாக அமைதல் வேண்டும் என்று அவர் கூறினார். ஆனால், தமிழர்கள் தம்மைத்தாமே ஆளும் அதிகாரத்தினை சிங்கள தேசம் ஒருபோதும் வழங்கப்போவதில்லை என்பது தனக்கு நன்றாகவே தெரியும் என்றும் அவர் கூறினார்.

சென்னையிலும், தில்லியிலும் தான் தங்கியிருந்த நாட்களை தர்மலிங்கம் மற்றும் ஆளாளசுந்தரம் ஆகியோரின் படுகொலைகளில் புலிகள் இயக்கத்திற்கு பங்கேதும் இல்லை என்பதைத் தெளிவாகச் சொல்லும் செயற்பாடுகளுக்காகவும் பிரபாகரன் பயன்படுத்திக்கொண்டார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தர்மலிங்கத்தையும், ஆளாளசுந்தரத்தையும் நாம் கொல்லவில்லை. ஆனால், ஆனந்தராஜாவை நாமே கொன்றோம், அதற்கான அவசியம் எமக்கு இருந்தது ‍- தலைவர் பிரபாகரன்
63f10327500efb001dbe59b2.jpg

இந்தியாவில் பிரபாகரன் தங்கியிருந்த நாட்களில் "சண்டே" பத்திரிக்கை அவரைப் பேட்டி கண்டிருந்தது.

 கேள்வி : தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இரு முன்னாள் உறுப்பினர்களை புலிகள் இயக்கம் கொலை செய்ததா? இந்திய உளவுத்துறையினர் அவர்களை நீங்களே கொலை செய்ததாக நம்புகிறார்களே?

 பிரபாகரன் : நாம் அவர்களைக் கொல்லவில்லை. ஆனால் இந்திய உளவுத்துறையினர் அப்படியான முடிவிற்கு வந்தால் நாம் என்ன செய்ய முடியும்? அவர்கள் கொல்லப்பட்டவுடனேயே நாமே அவர்களைக் கொன்றதாக இலங்கையரசாங்கம் எம்மீது குற்றஞ்சாட்டியவேளை நாம் உடனடியாகவே அதனை மறுத்திருந்தோம். ஈழத்தேசிய விடுதலை முன்னணியும் இப்படுகொலைகளில் தமக்குப் பங்கில்லை என்று அறிவித்திருந்தது. இந்திய உளவுத்துறை இக்கொலைகளை நாமே புரிந்ததாகக் கூறினாலும்கூட யாழ்ப்பாணத்து மக்களுக்கு இதனைச் செய்தது யாரென்பது நன்றாகவே தெரியும். சாட்சிகள் எதனையும் தேடாது, கண்மூடித்தனமாக இந்திய உளவுத்துறை இக்கொலைகளை நாமே செய்ததாக நம்புகின்றது என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால், இக்காலப்பகுதியில் நான் தலைமறைவாகியிருந்தேன், அதனை மனதிற்கொண்டே இக்கொலைகளை எனது இயக்கம் செய்ததாக இந்திய உளவுத்துறை நினைக்கிறது போலும்.

இதனை நாங்கள் செய்திருந்தால், அதனை உடனடியாகவே உரிமை கோரியிருப்போம். எமது செயலுக்கான காரணங்களையும் நாம் தெளிவாகக் குறிப்பிட்டிருப்போம். எமது விசாரணைகளின் ஊடாக ஒருவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டவிடத்தே அவருக்கான தண்டனையினை நாம் நிறைவேற்றுவோம். ஆகவே, நாம் இக்கொலைகளைப் புரிந்திருந்தால் நிச்சயம் அதற்கான காரணமும் எம்மால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். ஒரு பேச்சிற்கு ஆளாளசுந்தரத்தை நாமே கொன்றிருந்தால், அதற்கான காரணத்தை நிச்சயமாக வெளிப்படுத்தியிருப்போம். ஆனால், அவரைக் கொல்லவேண்டும் என்கிற எந்தத் தேவையும் எமக்கு இருக்கவில்லை. யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக அவர் இருந்த நாட்களில் பெருமளவு முறைகேடுகளில் அவர் ஈடுபட்டு வந்ததனால் அவருக்குச் சில தண்டனைகளை நாம் முன்னர் வழங்கியிருந்தோம். அவரது முறைகேடுகளை நாம் ஆதாரத்துடன் நிரூபித்திருந்தோம். அவரது முறைகேடுகள் தொடர்பான பல ஆவணங்கள் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் எரியூட்டப்பட்டபோது சேர்ந்தே எரிக்கப்பட்டு விட்டன.

யாழ் பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவை நாம் தண்டித்தோம். ஆனந்தராஜாவைக் கொன்றவர்களைப் பற்றிய தகவல்களைத் தருவோருக்கு ரூபாய் ஐந்துலட்சங்களைத் தருவதாக இலங்கையரசாங்கம் அறிவித்தபோதே அவருக்கும் இலங்கையரசாங்கத்திற்கும் இடையே இருந்த நட்பினை யாழ்ப்பாண மக்கள் அறிந்துகொண்டனர். அவரை நாம் கொன்றதற்கான காரணத்தைத் தமிழ் மக்கள் முற்றாக உணர்ந்துகொண்டதனால் அக்கொலை குறித்து அவர்கள் பேசவில்லை. இலங்கை இராணுவம் எமது மக்களை தினமும் கொன்று குவித்துக்கொண்டும், இளைஞர்களைச் சகட்டுமேனிக்குக் கைதுசெய்து சித்திரவதை செய்துகொண்டும், எமது பெண்களைப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கிக்கொண்டும், எமது சொத்துக்களை எரித்து நாசம் செய்துகொண்டும் இருந்த நாட்களில் அதே இராணுவத்துடன் சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை நடத்த ஆனந்தராஜா திட்டமிட்டு வந்தார். அவரால் திட்டமிடப்பட்டு வந்த கிரிக்கெட் போட்டியினை ஒரு பிரச்சாரப் பொருளாக முன்வைத்து, "தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்துடன் மிகவும் தோழமையுடன் பழகுகிறார்கள், அவர்களுடன் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுகிறார்கள், ஆனால் தமிழர்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என்று பொய்யான பிரச்சாரத்தோடு தமிழ்ப் பயங்கரவாதிகள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்" என்று உலகிற்குக் காட்ட இலங்கையரசாங்கம் முயன்று வந்ததை நாம் அறிவோம். ஆகவேதான் அவரை அகற்றவேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது. 

கேள்வி : அவர்கள் இருவரையும் உங்கள் இயக்கத்தில் உங்களின் சொல்லிற்குக் கட்டுப்படாத ஒரு பிரிவினர் கொன்றிருக்கச் சந்தர்ப்பம் இருக்கின்றதா?

பிரபாகரன் : நிச்சயமாக‌ இல்லை. எனது அனுமதியின்றி புலிகள் இயக்கத்தில் எதுவுமே நடப்பதில்லை.

 சண்டே பத்திரிகைக்குப் பேட்டியளிக்கு முன்னர் பிரபாகரன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இரு உறுப்பினர்களான யோகேஸ்வரனையும், தங்கத்துரையையும் சந்தித்தார். ஆளாளசுந்தரத்தையும், தர்மலிங்கத்தையும் புலிகள் இயக்கம் கொல்லவில்லை என்பதை அவர்களிடம் உறுதிப்படுத்தினார். குறிப்பாக, தர்மலிங்கம் மீது தான் மிகுந்த அபிமானம் கொண்டிருந்தவன் என்றும், அவரது கொலை தன்னை கவலைப்படச் செய்துள்ளதாகவும் பிரபாகரன் அவர்களிடம் கூறினார். 

யோகேஸ்வரனையும், தங்கத்துரையையும் தான் சந்தித்தது குறித்தும் சண்டே பத்திரிக்கையுடனான பேட்டியின்போது பிரபாகரன் பகிர்ந்துகொண்டார்.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களை நான் சந்தித்துப் பேசினேன். இவ்விரு கொலைகளையும் நாம் செய்யவில்லை என்பதை அவர்களிடம் உறுதிப்படுத்தினேன். எம்மிடமிருந்து அவ்வாறான தண்டனைகள் அவர்களுக்கு வழங்கப்படாது என்றும் அவர்களிடம் நான் கூறினேன். ஆளாளசுந்தரத்திற்கு நான் அச்சுருத்தும் தண்டனையொன்றினை முன்னர் வழங்கியிருந்தோம் என்பதற்காக நாம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு  எதிரானவர்கள் என்று நீங்கள் எண்ணிவிடக் கூடாது என்று அவர்களிடம் தெரிவித்தேன். 

ஆனாலும், அவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் இடையிலான இடைவெளி அச்சமூட்டும் வகையில் வளர்ந்துவருவதை அவர்களிடம் தெரிவித்தேன். தமிழ் ஈழத்திற்கான போராட்டத்தை அவர்கள் கைவிட்டு வேறு வழியில் சென்றுகொண்டிருப்பதனை தமிழினத்திற்கெதிரான துரோகம் என்று இளைய தலைமுறையினர் கருதுகிறார்கள். மேலும், தமிழ் மக்களுடன் இருந்து, அவர்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்காது, வெளியிலிருந்து அவர்கள் தமது அரசியலைச் செய்துவருவதால் அவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் இடையிலான இடைவெளி இன்னும் இன்னும் அதிகரித்துச் செல்கிறது.  தமிழ் ஈழத்திற்கான நியாயத்தன்மையில் இருந்தும், அவசியத்திலிருந்தும், தவிர்க்கவியலாத் தன்மையிலிருந்தும் தம்மை அவர்கள் அந்நியப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மக்களிடமிருந்து தம்மை மேலும் மேலும் அவர்கள் அந்நியப்படுத்தும் இடத்து, இளைய தலைமுறையினரிடமிருந்து அதற்கான எதிர்வினையினை அவர்கள் சந்திக்கவேண்டி ஏற்படுகிறது. யதார்த்தம் என்னவென்றால், நான் ஈழத்தைக் கைவிட்டாலும் அவர்களைப்போன்றே தண்டனைக்கு உட்படுத்தப்படுவேன் என்பதுதான். 

சண்டே பத்திரிக்கையின் நிருபரான அனீத்தா பிரதாப் தொடர்ந்தும் பிரபாகரனிடம் சில கேள்விகளைக் கேட்டார். அவற்றில் ஒன்றுதான் பாலசிங்கத்தை நாடுகடத்தும் தனது தீர்மானத்தை இறுதி நேரத்தில் இரத்துச் செய்ய ரஜீவ் எண்ணியிருந்தார் என்றும், ஆனால் இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் புலிகளே கொன்றதாக இந்திய உளவுத்துறை ரஜீவிடம் தெரிவித்தபோது, நாடுகடத்தும் தீர்மானத்தை இரத்துச் செய்வதை ரஜீவ் கைவிட்டார் என்றும் கூறி இதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று பிரபாகரனைக் கேட்டார்.

 இக்கேள்விக்கான பதிலை, இந்திய உளவுத்துறையின் தவறான ஆய்வினைச் சுட்டிக்காட்ட பிரபாகரன் பாவித்தார்.

"எமக்கும் இப்படுகொலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், நாமே அவர்களைக் கொன்றதாகக் கற்பனை செய்துகொண்டு, பாலசிங்கத்தை நாடுகடத்தும் முயற்சியில் இந்திய அரசாங்கம் தீர்மானமாக  இருந்திருந்தால், அது அவர்களின் பாரிய தவறேன்றே நான் நம்புகிறேன். இக்கொலைகளுக்காக எம்மைத் தண்டிக்கவேண்டிய எந்தத் தேவையும் இல்லை. இவ்வாறான தவறான தகவல்களை ரஜீவிற்கு வழங்கிய இந்திய உளவுத்துறையினைத்தான் அவர் தண்டித்திருக்கவேண்டும். குறைந்தது இவ்வாறான தவறுகளை ரோ எதிர்காலத்தில் செய்வதில் இருந்தாவது அவர்களைத் தடுக்க முடியும்" என்று பிரபாகரன் பதிலளித்தார். 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜீவின் சமாதான முன்னெடுப்புக்களை தனது இராணுவ முன்னெடுப்பினால் தோற்கடித்த ஜெயார்

தலைவர் பிரபாகரன் தில்லியில் ரஜீவையும் பண்டாரியையும் சந்தித்தமை, முன்னாள் இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைகளுடன் தமக்குச் சம்பந்தமில்லை என்று வெளிப்படையாக தெளிவுபடுத்தியமை, தமிழர் தாயகத்தில் அரசின் ஆயுதப்படைகளும் ஊர்காவற்படையும் தமிழ் மக்கள் மீது நடத்திவரும் படுகொலைகள், தமிழ்நாட்டிற்கு வரத்தொடங்கியிருந்த ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை என்பன ரஜீவ் காந்தியின் இலங்கை அரசு சார்பான நிலைப்பாட்டை மாற்றி தமிழர் சார்பாக சாய்க்கத் தொடங்கியிருந்தன‌ . 

ரஜீவின் இந்த மனமாற்றம் புரட்டாதி 27 ஆம் திகதி அவர் நடத்திய பத்திரிக்கையாளர் மாநாட்டில் தெரியத் தொடங்கியிருந்தது. அங்கு பேசிய ரஜீவ், "பஞ்சாப் பிரச்சினையில் இந்தியா எடுத்த நடவடிக்கைகளை இலங்கைத் தமிழர் விடயத்தில் இலங்கையரசு கைக்கொள்ள வேண்டும்.தமிழரின் பிரச்சினைக்கு குறுகிய அரசியல்த் தீர்வினை வழங்கமுடியாது. நீண்டகால, நிலைத்து நிற்கும் தீர்வு குறித்து இலங்கையரசு சிந்திக்க வேண்டும். இது ஒரு அரசியல்ப் பிரச்சினை. இப்பிரச்சினையினை இராணுவ ரீதியில் தீர்க்க முனைவது பிரச்சினையினை இன்னும் இன்னும் ஆளமாக்கவே வழிவகுக்கும்" என்று கூறினார்.

தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணலாம் என்று நம்பிய ரஜீவ் தொடர்ந்து அது தொடர்பாக இயங்கிக்கொண்டிருந்தார். பிரச்சினைக்கான தீர்வு குறித்து தமிழ்த் தரப்பு தனது ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும் என்று அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். ஐப்பசி மாத நடுப்பகுதியில் தமிழ்நாட்டில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும்போது, "நான் உங்களிடம் கேட்ட அடிப்படை ஆலோசனைகள் எங்கே?" என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியினை நோக்கி அவர் கேள்விகளை முன்வைத்தார்.

மேலும், தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கையரசு தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று ஜெயார் மீதும் ரஜீவ் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். புரட்டாதி 30 ஆம் திகதி கொழும்பிற்குப் பயணமான பண்டாரி, ஜெயாரைச் சந்தித்து ரஜீவ் காந்தியும் தானும் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினருடன் தாம் நடத்திய பேச்சுக்கள் குறித்து விளக்கமளித்தார். ஜெயாருடன் பேசிய பண்டாரி, வடக்குக் கிழக்கில் தமிழர்களுக்கான தன்னாட்சிப் பிராந்தியம் ஒன்றினை வழங்க இலங்கையரசு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிட போராளிகள் தயாராக இருப்பதாகக் கூறினார். 

ஐப்பசி மாதத்தில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் அறிவிக்கப்படவிருந்த விடயம் ஒன்றிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாகவே பண்டாரியின் கொழும்பு விஜயம் அமைந்திருந்தது. இந்த அறிவிப்புக் குறித்து ரஜீவ் காந்தி சற்றுப் பதட்டத்துடன் காணப்பட்டார். இந்த அறிவிப்பினூடாக உலக அளவில் இந்தியாவின் நிலையினை உயர்த்தலாம் என்று அவர் நம்பியிருந்தார்.

ஆனால், ஜெயார் தனது சொந்தத் திட்டத்தை ஏற்கனவே தீர்மானித்துவிட்டார் என்பதனை இந்தியர்கள் சிறிதும் அறிந்திருக்கவில்லை. இந்தியாவைப் பலவீனப்படுத்தி, போராளிகளுக்கும் இந்தியாவிற்குமிடையே பகைமையினை உருவாக்குவதே ஜெயாரின் திட்டம். அத்துடன், பகாமாசில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் தனது இராணுவத் தீர்விற்கான ஆயுத தளபாட உதவிகளை அங்கு வரும் அரசுத் தலைவர்களிடம் பெற்றுக்கொள்வதும் அவரது இன்னுமொரு நோக்கமாக இருந்தது.

புரட்டாதி 30 ஆம் திகதி கொழும்பிற்கு பண்டாரி மேற்கொண்ட பயனம் எந்தப் பலனையும் இந்தியாவிற்கோ ஈழத்தமிழருக்கோ கொடுக்கவில்லை. பண்டாரியின் விஜயத்தைப் பாவித்து தனது புத்திரனான ரவியும் அவரது மனைவியும் இந்தியாவைச் சுற்றிப் பார்க்கும் சுற்றுலா வாய்ப்பொன்றை ஜெயார் ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த சுற்றுலாவின் போது ரஜீவ் காந்தியையும் சந்திக்க ரவி ஜெயவர்த்தன பணிக்கப்பட்டார். ரஜீவுடனான பிரத்தியேகச் சந்திப்பில் இந்தியாவில் தமிழ்ப் போராளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள், முகாம்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் ரஜீவிடம் காட்டுவதும் ரவி ஜெயவர்த்தனவின் நோக்கங்க‌ளில் ஒன்று.

இவற்றிற்கு மேலாக, தனது மகனும் பாரியாரும் இந்தியாவிற்கு வருவதற்கு அனுமதி வழங்கி, விருந்தினராக கெளரவித்தமைக்காக ரஜீவிற்கு நன்றிகூறி கடிதம் ஒன்றையும் ஜெயார் அனுப்பினார். பகாமாசில் ரஜீவுடன் நடக்கவிருந்த பேச்சுக்களுக்கு உகந்த சூழ்நிலையினை உருவாக்கும் பொருட்டே ஜெயார் தனது கடிதத்தை வரைந்திருந்தார்.

 ரஜீவிற்கு ஜெயார் அனுப்பிய கடிதத்தின் ஒரு பகுதி,

"..................யுத்த நிறுத்தம் அமுலாக்கப்பட்டத்திலிருந்து தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆட்களும், ஆயுதங்களும், வெடிபொருட்களும் தொடர்ச்சியாகக் கடத்தப்பட்டு வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து நாம் அறிந்துகொண்டிருக்கிறோம். ராமேஸ்வரம், கலீமியர் முனை, நாகபட்டினம், வேதாரணியம் ஆகிய தமிழ்நாட்டின் கரைகளில் இருந்தே இக்கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றன”.

 “உங்களின் கரையோர ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்தி, இக்கடத்தல்களை உங்களால் தடுக்க முடிந்தால் அது எமது நாட்டிற்கு நீங்கள் செய்யும் அரிய சேவையாக நாங்கள் கருதுவோம். இன்று நாங்கள் முகங்கொடுத்துவரும் பயங்கரவாதத்தை முற்றாக அழிப்பதற்கு அது பெரும் உதவியாக இருக்கும். எமது இரு நாடுகளும் எமது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதன் மூலமும், கண்காணிப்பை அதிகப்படுத்துவத‌ன் ஊடாகவும் இன்று நடந்துவரும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல்களை முற்றாகத் தடுத்துவிட முடியும். இப்பாதுகாப்புச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பாரிய நிதிவளமும், காலமும் எமக்குத் தேவைப்படுகிறது. இச்செயற்பாடுகளை நீங்கள் ஆதரித்தால், இதுகுறித்து மேலும் பேசுவதற்கு எனது கடற்படைத் தளபதியையும் இன்னும் சில அதிகாரிகளையும் உங்கள் தளபதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு என்னால் அனுப்பி வைக்க இயலும். பகாமாசில் சந்திக்கலாம் என்ற விருப்புடன் விடைபெறுகிறேன்...." என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

மிகவும் தந்திரமான முறையில் ஜெயாரினால் வரையப்பட்ட இக்கடிதத்தின் மூலம், இன்னும் இருவாரங்களில் நடக்கவிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர் மாநாட்டில் ரஜீவ் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். ரஜீவ் காந்தியின் அரசியல்த் தீர்விற்கான முன்னெடுப்புக்களை தனது இராணுவத் தீர்விற்கான பேச்சின்மூலம் ஜெயார் ஒரேயடியாக அடித்துப் போட்டிருந்தார். 

பண்டாரியுடனான மூன்றாம் கட்டப் பேச்சுக்களுக்கான கார்த்திகையில் தில்லி வந்திருந்த பிரபாகரன் ஜென்டில்மேன் எனும் பத்திரிகைக்கு பேட்டியொன்றினை வழங்கியிருந்தார். அதன் ஒரு பகுதி கீழே.

கேள்வி : இன்று இலங்கையில் நிலவிவரும் சூழ்நிலையினை நீங்கள் எவ்வாறு கணிப்பிடுகிறீர்கள்?

பிரபாகரன் : இலங்கையில் இன்று நிலவும் அரசியல் சூழ்நிலை மிகவும் கொதிநிலையில் இருக்கிறது. தமிழர் தேசம் ஒரு திட்டமிட்ட இனக்கொலையினை முகம்கொடுத்து நிற்கிறது. தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை இலங்கை அரச படைகள் தொடர்ச்சியாக அரங்கேற்றியவண்ணம் இருக்கின்றார்கள். படுகொலைகள், சித்திரவதைகள், கைதுகள், பாலியல் வன்புணர்வுகள், உடமையெரிப்புக்கள் என்று முற்றான இனவழிப்பை நாள்தோறும் எதிர்கொண்டு வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தமது பூர்வீகத் தாயகத்திலிருந்து வேறோடு பிடுங்கி எறியப்பட்டு அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். யுத்தநிறுத்தம் எனும் போர்வையினைப் பாவித்து கொடூரமான அடக்குமுறையினையும், இராணுவ அதிகாரத்தையும், அழிவுகளையும் எம் மக்கள் மீது இலங்கையரசு கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இன்று ஆட்சியில் இருக்கும் அடிப்படைவாதச் சிங்கள இனவெறியர்களின் ஒற்றை நோக்கம் தமிழர்களை இராணுவ ரீதியில் அடக்கி அடிமை கொள்வதுதான். தமிழர்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு அமைதிவழியில் தீர்வினை வழங்கும் எந்த நோக்கமும் அவர்களிடத்தில் இல்லை. இலங்கையரசின் இந்த மனோநிலையே தற்போதைய சூழ்நிலையினை மிகவும் ஆபத்தான வழிக்குக் கொண்டு சென்றிருக்கிறது.

கேள்வி : தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும், இலங்கையரசாங்கத்திற்கும் இடையே தற்போது நடந்துவரும் பேச்சுக்கள் குறித்து உங்களின் கருத்து என்ன?

 பிரபாகரன்: இந்தச் சமாதானப் பேச்சுக்கள் என்பதே ஒரு பயனுமற்ற காலத்தை விரயமாக்கும் செயற்பாடாகும். உலகத்தை ஏமாற்ற ஜெயவர்த்தன அரசினால் போடப்பட்டிருக்கும் நாடகமே இப்பேச்சுவார்த்தைகள். தான் சமாதானத்தில் விருப்புக்கொண்டவராக ஜெயார் தன்னைக் காட்டிக்கொண்டாலும், உண்மையில் அவர் சமாதானத்திற்கு எதிரானவர். எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யத்தக்க எந்தத் தீர்வினையும் அவர் இதுவரையில் முன்வைக்கவில்லை. சமாதானப் பேச்சுவர்த்தைகள் என்கிற போர்வையின் கீழ் எமது மக்கள் மீது திட்டமிட்ட இனக்கொலையொன்றினை தனது இராணுவத்தைக் கொண்டு அவர் நடத்தி வருகிறார் என்பதே உண்மை.

கேள்வி : ஆகவே, யதார்த்தத்தில் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன என்று கருதுகிறீர்களா?

 பிரபாகரன்: பேச்சுக்கள் இதுவரையில் எந்தப் பலனையும் கொடுப்பதில் தோல்வியில் முடிவடைநிதிருக்கின்றன என்பதை என்னால் கூறமுடியும்.

 கேள்வி : அப்படியானால் சமரசம் மூலம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் சாத்தியம் இப்போது இல்லை என்று கூறுகிறீர்களா?

 பிரபாகரன் : அது சில காரணிகளில் தங்கியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்......

 கேள்வி : அக்காரணி இந்தியாவின் நிலைப்பாடு என்று கூறுகிறீர்களா?

 பிரபாகரன் : ஆம், ஒருவகையில்

 

1986 ஆம் ஆண்டு தை மாதமளவில், ஜெயாருடனான தொடர்பாடல்களில் தோல்வியடைந்தவராக ரஜீவ் தன்னை உணர்ந்துகொண்டார். 1985 ஆம் ஆண்டு மார்கழி ஆரம்பப்பகுதியில் நடைபெற்ற முதலாவது சார்க் உச்சி மாநாட்டில் ஜெயவர்த்தன ரஜீவை முற்றாகத் தோற்கடித்திருந்தார்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.