Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கை நோக்கி குவியும் கவனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கை நோக்கி குவியும் கவனம்

By DIGITAL DESK 5

09 OCT, 2022 | 01:56 PM
image

கபில்

விரும்பியோ விரும்பாமலோ, சர்வதேச சக்திகளின் பூகோள அரசியல் ஆட்டக்களமாக இலங்கை மாற்றப்பட்டு விட்டது.

சர்வதேச சக்திகள் மோதுகின்ற களமாக இலங்கையைப் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று கூறிவந்த எல்லா ஆட்சியாளர்களும், ஏதோ ஒரு வகையில், அவ்வாறான வாய்ப்புகளுக்கு இடமளித்தே வந்திருக்கிறார்கள்.

அபிவிருத்தியின் பெயராலோ, கொடைகளின் பெயராலோ, முதலீடுகள் என்ற பெயரிலோ திறக்கப்பட்ட இந்த ஆடுகளம், இப்போது புதிய புதிய பெயர்களில் புதிய புதிய களங்களை நோக்கி விரிவடையத் தொடங்கியிருக்கிறது.

இப்போது, சர்வதேச சக்திகளின் ஆடுகளம் மெல்ல மெல்ல வடக்கு, கிழக்கை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது.

போர் முடிந்து, 13 ஆண்டுகளாக, வடக்கின் மீது முதலீட்டு வெளிச்சம் விழவேயில்லை. கிழக்கில் ஓரளவுக்கு முதலீடுகள் இடம்பெற்றன. 

ஆனாலும் ஒப்பீட்டளவில் இந்த இரண்டும் தமிழர் பகுதிகளாக இருந்தமையால், வெளிநாட்டு முதலீடுகள் இடம்பெறவில்லை.

இப்போது, மன்னாரில், பூநகரியில், யாழ்ப்பாணத்தின் கரையோரங்களில், திருகோணமலையில் என்று புதிய முதலீட்டுத் திட்டங்களுடன், வெளிநாட்டுத் தூதுவர்கள் வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

வெளிநாட்டு நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் வருகிறார்கள்.

வடக்கு, கிழக்கின் மீது இந்தியாவின் ஆதிக்கம் அதிகம். இந்தியா தனது செல்வாக்கிற்குட்பட்ட பிரதேசமாகவே அதனை கருதி வந்திருக்கிறது. 

தன்னை மீறி வடக்கு கிழக்கில் எதுவும் நடந்து விடாமல் இந்தியா பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம், பாக்கு நீரிணையில் உள்ள நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவில் கலப்பு மின்திட்டங்களை அமைக்க சீனாவுக்கு அனுமதி கொடுத்தபோது உருவாகியது சர்ச்சை.

இந்தியா அதனை எதிர்த்தது. அந்த திட்டங்களை தாமே நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்து சீனாவை துரத்தி விட்டது.

இந்த திட்டங்களில் இருந்து துரத்தப்பட்டதை சீனாவினால் சகித்துக் கொள்ள முடியவில்லை. 

சீனத் தூதுவர் அதனை ஒரு மோசமான சம்பவமாக சில மாதங்களுக்கு முன்னரும் விபரித்திருந்தார்.

இப்போது சீனா வடக்கு, கிழக்கிற்குள் தன் செல்வாக்கை நிலைநிறுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கியிருக்கிறது.

அதற்கு சீனாவுக்கு இரண்டு இலக்குகள் இருக்கின்றன. இந்தப் பிராந்தியத்துக்குள் உள்நுழைவது ஒன்று. ஏற்கனவே வடக்கு, கிழக்கில் இந்தியாவின் நிழல் இருப்பை சிதைப்பது இன்னொன்று.

இந்த இரண்டையும் நிறைவேற்றினால் தான், இந்தியாவின் தென்பகுதி கவசமாக கருதப்படும், வடக்கு கிழக்கில் ஆழமாக வேரூன்றி நிலைகொள்ள முடியும்.

வடக்கு, கிழக்கில் சீனாவினால் துறைமுகங்களில், விமான நிலையங்களில் முதலீடு செய்ய முடியாது.

கைத்தொழில் முதலீடுகளுக்கும் வாய்ப்புகள் இல்லை.

புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திட்டங்கள், விவசாயத் திட்டங்கள், கடலுணவு உற்பத்தி போன்றவற்றில் தான் சீனாவினால் முதலீடுகளைச் செய்ய முடியும்.

புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திட்டங்களில் ஏற்கனவே, இந்தியாவின் அதானி குழுமம், கால் வைத்து விட்டது.

இந்தியாவின் நட்புறவைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, அதானி குழுமத்திடம் வழங்க வேண்டிய நிலை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டது,

விவசாயத் திட்டங்களில் அதிக இலாபம் பார்க்க முடியாது. 

இந்த நிலையில் தான் கடலுணவு உற்பத்தியில் கால் வைக்க சீனா முடிவெடுத்தது.

யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டிருக்கிறது.

இதில் பெரும்பகுதி, யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்பகுதியிலேயே அமைந்துள்ளது.

ஆழமற்ற, அதிக கொந்தளிப்பில்லாத கடலும், கடல்வாழ் உயிரினங்கள், இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற சூழலும் அதிகம் காணப்படுவதால் இந்தப் பகுதியை இலக்கு வைத்து சீன நிறுவனங்கள் கடல் அட்டைப் பண்ணைகளை அமைக்கத் தொடங்கியிருக்கின்றன.

சீனா நேரடியாகவும் மறைமுகமாகவும் இதில் காலடி எடுத்து வைக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்த கடலட்டைப் பண்ணைத் திட்டங்கள் முழுமையாக செயற்படுத்தப்பட்டால், சீனர்களும், தென்கிழக்காசிய நாட்டவர்களும், இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடலட்டைகளை அதிகம் சுவைத்துச் சாப்பிட முடியும்.

ஆனால், வடக்கைச் சூழவுள்ள கடற்பரப்பில் மீன்களும், இறால்களும் இனப்பெருக்கம் செய்ய முடியாமல், முற்றாகவே அழிந்து போகும். 

அதனால் வடக்கிலுள்ள மக்கள் மீன்களை காணவே முடியாத நிலை ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள் மீனவர்கள்.

வடக்கிலுள்ள மீனவர்கள், ஏற்கனவே இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளால் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள். இந்தியா மீது வெறுப்படைந்திருக்கும் அவர்களை, தங்களின் பக்கம் இழுக்க சீனா திட்டமிட்டது.

சீனத் தூதுவர், வடக்கிற்கு உதவிப் பொதியுடன் சென்று முயற்சி செய்து பார்த்தார்.

சில மீனவர் சங்கங்கள், கடலட்டை பண்ணைகளுக்கு ஆதரவு கொடுத்தாலும் பெரும்பாலானவர்கள் அதனை எதிர்க்கிறார்கள்.

இந்தநிலையில் இப்போது, கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக பாரம்பரிய மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

கிராஞ்சியில் இவ்வாறான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இடம்பெறுகிறது.

சட்டவிரோத மீன்பிடி முறைகளுக்கும், பாரம்பரிய முறையில் மீன்பிடிக்கும் மீனவர்களின் தொழிலுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஆதரிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

அவ்வாறான முரண்பாடுகளால் தான் முல்லைத்தீவில் தொடர் முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், இரு பகுதியாக மீனவர்கள் மோதிக் கொள்ளும் நிலையையும் உருவாக்கியது.

வடக்கில் பிளவுகளை ஏற்படுத்தி, குளிர் காய்வதில் பல்வேறு தரப்புகளும் ஈடுபட்டுள்ளன.

பிளவுபடுத்துவதன் மூலம் ஊடுருவுவது ஒரு போர்க்கள உத்தி மாத்திரமல்ல, அது ஒரு இராஜதந்திரமும் கூட.

வடக்கு, கிழக்கில் அவ்வாறான ஊடுருவல்களில் சீனா அக்கறை கொண்டிருக்கிறது.

அண்மைக்காலமாக சீனத் தூதரகம், வடக்கு, கிழக்கில் உள்ளவர்களுடன் அதிகளவில் தொடர்புகளை ஏற்படுத்த தொடங்கியிருக்கிறது.

சாதாரண மக்கள் மத்தியில் இறங்கி வேலை செய்யத் தொடங்கியிருக்கிறது. உதவிப் பொதிகளையும், நிதி உதவிகளையும் அள்ளி வீசத் தொடங்கியுள்ளது.

வடக்கிற்கு உதவிப் பொதிகளுடன் சென்ற சீனத் தூதுவர் கிழக்கிற்கும் அவ்வாறான உதவிகளுடன் சென்றிருந்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 150 மாணவர்களுக்கு மாதம் தோறும் 4 ஆயிரம் ரூபாவை 7 மாதங்களுக்கு வழங்குவதற்காக, 4.3 மில்லியன் ரூபாவை வழங்கினார்.

அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தெரிவு செய்யப்பட்ட 83 மாணவர்களுக்கு ஒரு வருடத்துக்கு 5 ஆயிரம் ரூபா புலமைப்பரிசிலை வழங்குவதற்காகவும் நலன்புரித் திட்டங்களுக்காகவும் அவர் 83 மில்லியன் ரூபாவை வழங்கியிருக்கிறார்.

இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும் சீனத் தூதுவர் கீ சென் ஹொங் வெளியிட்ட ருவிட்டர் பதிவுக்கு  யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்து கடந்த ஓகஸ்ட் மாத இறுதியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதன் பின்னரே, யாழ். பல்கலைக்கழக மாணவர் நலன்புரி திட்டங்களுக்கு பெருந்தொகை நிதியை சீனா வழங்கியிருக்கிறது.

2016ஆம் ஆண்டு தொடக்கம் சீனத் தூதரகம் இலங்கையில் உள்ள எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் நிதியுதவி வழங்கி வருவதாகவும், இந்த ஆண்டு அந்த நிதி முழுவதும் வடக்கு, கிழக்கிற்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் சீன தூதரகம் கூறியிருந்தது.

இதன் மூலம் வடக்கு கிழக்கின் மீதான சீனாவின் கவனக் குவிப்பை புரிந்து கொள்ள முடிகிறது.

பல்கலைக்கழகங்களில் ஊடுருவுவதன் மூலம், தமக்கு சாதகமான நிலையை உருவாக்க முடியாது போனாலும், தமக்கு எதிரான தரப்புகளை பிளவுபடுத்தலாம் என்று சீனா கணக்குப் போட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன.

இந்தியா இந்த விடயத்தில் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இருந்தாலும், இனிமேல் முதலீடுகளை மட்டுமே செய்வது என்பதில் உறுதியாக உள்ளது.

இலங்கைக்கு 4 பில்லியன் டொலர்களை கடனாக கொடுத்துள்ள இந்தியா இனி அவ்வாறான உதவிகளை வழங்காது என்பது உறுதியாகி விட்டது.

இந்த நிலையில், இந்தியாவின் முதலீடுக்ள பெரும்பாலும் வடக்கு, கிழக்கை மையப்படுத்தியதாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

ஏனென்றால், சீனா அதன் மீது கண் வைத்துள்ள நிலையில், இந்தியா தவிர்க்க முடியாத வகையில் வடக்கு கிழக்கை மையப்படுத்திய முதலீடுகளை அதிகரிக்க வேண்டியிருக்கும்.

இந்தியாவின் கையில் உள்ள அட்சய பாத்திரம் தான் அதானி.

சீனாவுக்கு போட்டியாக அந்த அட்சய பாத்திரத்தை தான் இந்தியா பயன்படுத்த தொடங்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/137297

  • கருத்துக்கள உறவுகள்

1)ஆனாலும் ஒப்பீட்டளவில் இந்த இரண்டும் தமிழர் பகுதிகளாக இருந்தமையால், வெளிநாட்டு முதலீடுகள் இடம்பெறவில்லை.

வடக்கு கிழக்கு, இந்தியாவின் அறிவிக்கப்படாத ஒரு பகுதியாக இருக்கின்றமையினால் வேறு எந்த நாடும் இங்கே முதலீடு செய்ய முடியாது என்பதுதான் கள நிலவரம். 

2) வடக்கு, கிழக்கில் சீனாவினால் துறைமுகங்களில், விமான நிலையங்களில் முதலீடு செய்ய முடியாது. கைத்தொழில் முதலீடுகளுக்கும் வாய்ப்புகள் இல்லை.

அப்படி முடியாதென்று எதுவுமே இல்லை. சீனா மெது மெதுவாகத்தான் கால் பதிப்பது வழமை. 

3) வடக்கைச் சூழவுள்ள கடற்பரப்பில் மீன்களும், இறால்களும் இனப்பெருக்கம் செய்ய முடியாமல், முற்றாகவே அழிந்து போகும். 

அதனால் வடக்கிலுள்ள மக்கள் மீன்களை காணவே முடியாத நிலை ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள் மீனவர்கள்

உறுதிப்படுத்தப்படாத, மேலெழுந்தவாரியான கூற்று. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வடபகுதிக் கடலின் மீன்வளம் சீரளிவதற்கு இந்திய, இலங்கை மூனவர்களின் மீன்பிடி முறையே பிரதான காரணம். 

4) மீனவர் சங்கங்கள், கடலட்டை பண்ணைகளுக்கு ஆதரவு கொடுத்தாலும் பெரும்பாலானவர்கள் அதனை எதிர்க்கிறார்கள். 

தவறான, வாய்வளித் தகவல்களை நம்பிய கூற்று

5) இந்தநிலையில் இப்போது, கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக பாரம்பரிய மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இது டக்ளஸ் V. TNA பிரச்சனையே தவிர வேறு ஒன்றுமில்லை. மீனவர்களை இருபகுதியினரும் பந்தாடுகிறார்கள். 

6) வடக்கு, கிழக்கில் அவ்வாறான ஊடுருவல்களில் சீனா அக்கறை கொண்டிருக்கிறது.

சீனா மட்டுமல்ல, இந்தியாவும், மேற்குலகும் இதனைத்தான் செய்கிறது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.