Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உடற்றும் பிணி – அருணா சிற்றரசு  சிறுகதை

| வாசகசாலை வாசகசாலைJanuary 5, 20240 1,060 7 நிமிடம் படிக்க Facebook X Share via Email Print “

 

உங்களுக்கு இவன் மட்டும்தானா? இல்ல..! வேற குழந்தைகள் இருக்கா?” 

இந்தக் கேள்விக்குள் காத்திருக்கும் மாபெரும் இன்னலைக் கூடுமானவரைக் கணித்து விட்டாள் ரோகினி. மகனைப் பரிசோதித்துவிட்டு வந்த மருத்துவர் இந்தக் கேள்வியைச் சாதாரணமாகக் கூட கேட்டிருக்கலாம். ஆனால், அவள் அதை அப்படிக் கடக்கவில்லை. “வேறொரு பிள்ளை இருக்கிறதா?! மனதைத் தேற்றிக்கொள். உன் மகனுக்கு நாள்பட்ட நோய் ஒன்று உறுதியாகிவிட்டது” என்பதைச் சொல்வதற்கான முன்னோட்டமாகத்தான் அவர் அப்படிக் கேட்டிருப்பார் என்ற உறுதிக்கு மிக அருகில் இருந்தாள்.

 

“இந்த மருந்துகளைக் கொடுங்கள். ஆறு வாரம் கழித்துதான் நோயை உறுதி செய்ய முடியும்” எனச் சொல்லி அனுப்பி விட்டார் மருத்துவர். பத்து வயது மகனை இடுப்பில் தூக்கிக் கொண்டு இதயம் கனக்க படிக்கட்டுகள் வழி இறங்கினாள். மின் தூக்கி பற்றி சிந்திக்க அவளிடம் போதிய நிதானம் இல்லை.

மகனின் நோய் அறிகுறிகள் அத்தனையும் பொல்லாத நோய் ஒன்றிற்கான அம்சங்களை ஐந்தாறு பொருத்தங்களுடன் வைத்திருந்தது. துள்ளித் திரிந்த மகன் திடும் என நோயில் விழுந்ததில் தடுமாறித்தான் போயிருந்தாள் ரோகினி. துவண்டிருந்த மகன் அவளின் இடது பக்க கழுத்தில் முகம் வைத்து சிரமத்துடன் மூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அவனின் நீண்ட கால்கள் அவள் இடுப்பிலிருந்து முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டிருந்தன.

இடுப்பில் வைக்கும் வயதைக் கடந்த குழந்தை அவன். நோய்க்குள் விழவில்லையென்றால் இந்நேரம் படிகளைத் தாவிக் கடந்திருப்பான். இரண்டு நாள்கள் முன்பு வரை இல்லாத அந்த நோய் இப்போது ஆட்சி அதிகாரம் கைப்பற்றிய கொடுங்கோலன் போல் விருப்பம் போல் அவர்களை ஆட்டுவிக்கத் துவங்கியது. காத்திருப்போர் அறையில் ஓர் இருக்கையில் மகனை உட்கார வைத்துவிட்டு, தான் பதிவு செய்திருந்த வண்டிக்காக காத்திருந்தாள் ரோகினி. அந்த அறை முழுவதும் நோய். படிக்கட்டுகள், வாயிலோரம், ஜன்னலோரம் என மூலை முடுக்கிலும் நோய்கள்.

ஒருவர் முகத்திலும் இளக்கமே இல்லை. கையில் வண்ண வண்ண கோப்புகளுடன் நோய்களைத் தாங்கியிருந்தனர். பெரியவர்களின் நோய்க்கு இல்லாத சிறப்பு வகை கூர்மையும் வலுவும் குழந்தைகள் நோய்க்கு உண்டு. அங்கே நிற்பவர்கள் அத்தனை பேரும் பிஞ்சுகளின் நோய்களைச் சுமந்து கொண்டு நின்றனர். பிறந்து ஐந்து நாள்களே ஆன குழந்தை ஒன்றின் மணிக்கட்டு நரம்புகளில் மருந்தேற்றத்திற்கான ஊசி, தைக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது. சீரழிந்த வாழ்வொன்றின் மிச்சமாக இருந்த நடுவயதுப் பெண் ஒருத்தி தன் மகளின் மூத்திரப்பையை அதற்கென வடிவமைத்த தோல்பை ஒன்றில் வைத்திருந்தாள். அவள் மகளின் கழுத்து ஒரு பக்கம் தொங்கியபடி நடுங்கிக் கொண்டே இருந்தது.

அந்த நடுக்கத்துடன் ஏதேதோ தன் அம்மாவிடம் அவள் பேசிக்கொண்டே இருந்தாள். ‘ஆம்.. இல்லை’ என்ற தொனியில் மகளுக்கு பதில் சொல்லிக் கொண்டே தங்கள் முறை வருகிறதா என டோக்கன் அழைக்கும் பெண்ணைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த அம்மா. தன் பிள்ளையின் பரிசோதனை முடிவை வாங்கிய ஒரு தந்தை அப்படியே சரிந்து அமர்ந்தார். தலையில் கைகளை வைத்து முடிகளைப் பிய்த்துக் கொண்டு பின் மெல்ல முகத்திற்கு கைகளைச் சரித்தார். மொத்த முகத்தையும் தன் இரண்டு கைகளுக்குள் புதைத்தவர் பின் இரண்டு கண்களையும் தேய்த்துக் கொண்டார். அவருக்கு நேர் எதிரே ஐந்து வயது என சொல்லத்தக்க பெண் குழந்தை ஒன்று வெள்ளை நிறக் கவுனில் நீலப் பூக்கள் விரவ நின்று கொண்டிருந்தாள்.

அவளின் அம்மா யாருடனோ மிகத் தீவிரமாக கைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள். அந்த நீலப்பூ குழந்தை ரோகினியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது. ரோகினியும் அவள் பார்வையை அகற்றவில்லை. நீலப்பூவை ஊடுருவும் போதே ரோகினிக்கு அக்குழந்தையின் உருவம் வேறு ஒருவரின் சாயலைக் குழைத்துத் தந்தது.  ரோகினியுடன் ஏழாம் வகுப்பு படித்த இலக்கியாவின் தங்கையின் சாயல் அது. இலக்கியாவின் பெயர் நினைவில் இருக்கிறதே தவிர அவள் தங்கையின் பெயர் நினைவில் இல்லை. அந்த ஆண்டில் புது மாணவியாகச் சேர்ந்தவள் இலக்கியா. அவள் பள்ளிக்கு வந்த முதல் நாளில் இருந்தே தன் தங்கையையும் அழைத்து வருவாள்.

தூக்கித்தான் வருவாள் என்று சொன்னால் இன்னும் பொருந்தும். பிறந்து சில நாள்களே ஆன குரங்குக் குட்டி போலவே அவள் தங்கை இருப்பாள். பார்த்தாலே சொல்லிவிடலாம் தக்கை கூட அவளை விட கூடுதல் எடையாக இருக்கும் என. வட்டமான முகத்தில் கன்னங்கள் மட்டும் உப்பலாக இருக்கும். கண்களில் உயிரே இல்லாமல் இதோ இப்போது சாகப்போகிறேன் என்ற அறிவிப்பை ஒவ்வொரு நாளும் தெரிவித்துக் கொண்டிருக்கும். இலக்கியா சரியாகப் படிப்பதில்லை என ஆசிரியர்கள் திட்டிக் கொண்டிருந்தாலும் சிறுநீர் கழித்து விட்ட தன் தங்கையின் உடைகளைச் சரிசெய்து கொண்டிருப்பாள்.

விளையாட வந்தாலும் இடுப்பில் தங்கை, அங்காடிக்கு வந்தாலும் இடுப்பில் தங்கை, ஆற்றுக்கு வந்தாலும் இடுப்பில் தங்கை என தங்கையை அவள் உடலின் ஒரு பாகமாகவே வைத்திருந்தாள். இலக்கியாவின் தங்கையைத் தானும் தூக்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை ரோகினிக்கு. கோவிலுக்குத் தூக்கி வந்திருந்த ஒரு வெள்ளிக் கிழமையில் இலக்கியாவிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள் ரோகினி. ஒரு கட்டத்தில் “ஒரு முறைதான் தருவேன், இனி கேட்கக்கூடாது” என்ற நிபந்தனையுடன் தங்கையைக் கைமாற்றினாள் இலக்கியா. தன் இடுப்பில் வாங்கியபோதுதான் ரோகினி உணர்ந்தாள்.

அவள் நினைத்திருந்த வகையான எடை அல்ல அது. நன்கு கனத்தாள் தங்கை. அவள் மீது அழுகிக்கொண்டிருக்கும் தோலின் வீச்சம் இருந்தது. அவளின் உதடுகள் ஈரமற்று வெடிப்புகளுக்குள் புதைந்திருந்தன. எங்கேயாவது அமர வைத்தால் அப்படியே அமர்ந்து கொண்டிருப்பாள் தங்கை. கால்கள் மட்டும்தான் வேலை செய்யாது. மார்பு கூடாக முன்னோக்கி நீண்டு ஒரு கைப்பிடி அளவில் இருக்கும். கழுத்திற்கு கீழ் எலும்புகளின் இருப்பு அப்பட்டமாய்த் தெரியும். வயிறு உருண்டையாக உருட்டிக்கொண்டு சுரக்குடுக்கை போல் வடிவாய் இருக்கும். கைகள் அளவு குறைந்து உடலில் பெயருக்குக் குத்திவைத்தது போல் இருக்கும்.

குரல் ஏதோ ஒரு சிறு பிராணியின் குரல் போல் இருக்கும். அன்றுதான் ரோகினிக்கு அந்தத் தங்கை பேசுவாள் என்றே தெரியும். அதை விட அதிசயம் அவள் பாடியதைக் கேட்டது. பாஞ்சாலங்குறிச்சி படத்தின், “ஒன் ஒதட்டோர செவப்பே” பாடலை முழுவதுமாக பாடி முடித்தாள் அந்தக் குட்டிக்குரங்கு. வீட்டிற்கு செல்வதற்குள் இலக்கியாவைக் கரைத்து அவள் தங்கைக்கு இருக்கும் நோய் பற்றித் தெரிந்து கொண்டாள் ரோகினி. அவளுக்கு இதயத்தில் ஓட்டை, வெகு சீக்கிரமே மரணித்து விடுவாள் இது மட்டுமே ரோகினிக்கு விளங்கியது.  அடுத்த நாள் முதல் இலக்கியாவின் வருகையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தாள் ரோகினி. இடுப்பில் தங்கையுடன் வந்தால் அவள் இன்னும் சாகவில்லை.

தங்கை இல்லாமல் வந்தால் அவள் செத்துவிடாள். இந்தக் கணக்கில் ஒவ்வொரு நாளையும் அனுப்பிக் கொண்டிருந்தாள் ரோகினி. ஒரு நாள் பள்ளியில் உணவு இடைவேளையில் குட்டிக்குரங்கு சாப்பிடாமல் மேசையில் முகம் சாய்த்துப் படுத்துக் கிடந்தது. தூரத்தில் இருந்து அதைக் கவனித்துக் கொண்டிருந்த ரோகினியை அதுவும் தலைசாய்த்த வண்ணமே பார்த்துக்கொண்டிருந்தது. ரோகினிக்கு மெல்ல அதன் கண்களில் இருந்த கருவிழி ஒளி மங்குவதைப் போல் தோன்றியது. ஒரு கட்டத்தில் கருவிழி மொத்தமும் மறைந்து வெள்ளைத் திரையாகப் பரவியிருந்தது.

கருவிழி எப்படியும் மேல்நோக்கித்தான் புதைந்திருக்கும் மீண்டும் கீழிறங்கும் எனக் காத்துக் கொண்டிருந்தாள் ரோகினி. ஆனால், கருவிழி புருவங்களைப் பிதுக்கி தலைக்கேறி குட்டிக்குரங்கின் ரிப்பன் வழியாகக் காற்றில் கலந்தது. இலக்கியாவிற்கு அதன் பிறகு சுமை தூக்கும் சுமை இல்லவே இல்லை. இலக்கியாவிற்கு இடது பக்க இடுப்பு மட்டும் கூடுதல் குழிவாகவே வளர்ந்தது. அந்தச் சிறிய மரணம் கொடுத்த விடுதலை மிகப்பெரியது. தங்கை இல்லாமல் எப்பொழுதும் சோகம் அப்பிக் கிடந்தாலும் இலக்கியாவின் முகத்தில் சுடர் ஒன்று பிரகாசித்தது. ஏழாம் வகுப்பின் இறுதித் தேர்வில் இருந்த சோகம் எட்டாம் வகுப்பின் முதல் நாளில் இலக்கியாவிடம் அவ்வளவாக இல்லை. எட்டாம் வகுப்பின் காலாண்டுத் தேர்வில் வடிந்த அவ்வப்போதைய சோகமும் அரையாண்டு முடிந்ததும் முற்றிலுமாக இல்லை.

தங்கையின் ஞாபகங்களை ஏற்படுத்திய பொருள்களும் வீட்டில் குறையத்துவங்கி மாலை போட்டிருந்த புகைப்படம் மட்டுமே தங்கை என்று மாறியது. வருடங்கள் ஓட ஓட வீடுகள் மாறியதில் தொலைந்த அந்தப்படத்துடன் தங்கையும் தொலைந்து விட்டாள். அந்தக் குட்டிக்குரங்கிடம்தான் முதன் முதலில் சாவின் சாயலைப் பார்த்திருந்தாள் ரோகினி. அதே சாயல் அந்த நீலப்பூவிடமும் இருந்தது. நீலப்பூவின் அம்மாவை நினைத்து வருந்தினாள் ரோகினி. சாவைக் கடக்கலாம்; நோயைக் கடக்க முடியாது என்று முடிவெடுத்தவாறே தன் மகனைப் பதற்றத்துடன் தழுவிக் கொண்டாள். ரோகினியின் காதல் கணவன் விபத்தில் மரணித்த போது அவள் மகனுக்கு வயது ஐந்து. “சீக்கிரம் வந்துவிடுகிறேன்” என போனில் சொல்லியவன் அடுத்த பத்து நிமிடங்களில் உயிருடன் இல்லை.

அழுது துடித்து, இரவுகளுக்கு அஞ்சி, துக்க விசாரிப்புகளில் காயப்பட்டு என முதல் இரண்டாண்டுகள் தன் உடலில் ஏதோ ஓர் திசுவில் மட்டும் உயிரை வைத்துக் கொண்டு அப்பனைக் கேட்டு அழும் மகனை மடைமாற்றிக் கொண்டிருந்தாள். சந்தன முல்லையும் கணவனின் சோப்பு மணமும் அவளைக் கண்டம் துண்டமாக வெட்டிப் போடும். நினைவுகளை அதி பாதாளத்திலிருந்தும் மீட்டுக் கொணர்பவை வாசனைகள். முல்லைப்பூவின் மணத்தில் அவனின் நுனி நாக்கின் ருசி அவளின் அடித்தொண்டைக்குள் இறங்கியிருக்கும். அவனின் சோப்பு வாடையில் அவன் பின்னங்கழுத்தை முகர்ந்திருப்பாள். அத்தனையையும் கண்கள் விரிந்த நிலையில் ஏதோ ஓர் இறந்த காலத்தில் தீவிரப்புணர்வுக்கான நிகழ்வொன்றின் மீதிமிச்ச நினைவுகளுடன் தனக்குள் நிகழ்த்திக் கொள்வாள்.

நிகழ்காலத்திற்குத் திரும்பும்போது விழியோரம் உப்பு பூத்திருக்கும். இப்போது அந்த இறந்த கணவனே மீண்டு வந்தாலும் ரோகினி ஏற்கப்போவதில்லை. அவனின் இல்லாமையால் அவள் ஏற்படுத்தி வைத்திருந்த அந்த துர்வாழ்வு அவளுக்கு இணக்கமாக மாறிவிட்டிருந்தது. அப்பன் பற்றிய நினைவே மகனிடம் இல்லாத வண்ணம் முழுவதுமாகத் துடைத்து எடுத்தாள். அப்பனின் உருவப்படம் கூட வீட்டில் இல்லை. காலம் அதற்கான சகல உடன்பாட்டையும் வார்த்திருந்தது. வாழ்வின் நிரந்தரமின்மையை ஓரளவிற்கு அனுபவங்கள் வழிக் கற்றிருந்தாலும் மகனின் நோய் அவளைக் கத்தி கொண்டு செதுக்கிக் கொண்டிருந்தது. வண்டி வந்துவிட்டதாக கைபேசி காட்டியது. மகனைத் தூக்கிக் கொண்டு வெளியேறினாள்.

இரவு ஒன்பது மணி. நல்ல கோடைக்காலம் என்பதால் அந்த இரவு கூடுதல் இதமாக இருந்தது. காரின் ஏசியை அணைத்து விட்டு சன்னலை விரியத் திறந்தாள். மகன் அவள் மடியில் உறங்கி விட்டான். மகனின் நோய் எங்கெல்லாம் சென்று முடிய வாய்ப்புள்ளது என கூகுள் வழித் தேடினாள். வழக்கம் போலவே கூகுள் கட்டற்று கால் பரப்பி எல்லாத் திசைகளிலும் கைகாட்டியது. அவளை மேலும் கலவரப்படுத்தியதே தவிர சிறிதும் ஆற்றுப்படுத்தவில்லை. போனை பைக்குள் போட்டுவிட்டு காருக்கு வெளியே முகம் நீட்டினாள். புறநகர்ப் பகுதியை அடைந்திருந்ததால் பெட்ரோல் டீசலற்ற காற்று அவள் வியர்வையை ஒற்றி எடுத்துக்கொண்டிருந்தது. வியர்வையைத் தின்னும் காற்று, தாகத்தைத் தணிக்கும் தண்ணீர், பசியைக் கொல்லும் உணவு இவையெல்லாமே துன்பம் வளர்த்து நிம்மதி கொடுப்பவை. வியர்வையின்றி உணரும் காற்று அவ்வளவாக சிலாகிக்கப்படுவதில்லை. தாகமற்ற தண்ணீர் பழக்கத்தில் சேருமே தவிர நரம்புகளை ஊடுருவாது. பசியற்ற உணவிற்கு உணவுப்பாதையே கிடையாது. நாள்பட்ட நோய்க்கு ஆட்பட்ட நபர்களைப் பற்றி சிந்திக்கத் துவங்கியது ரோகினியின் ஆன்மா.

அவளின் பெரியப்பா ஒருவரைப் புற்று நோயின் கைகளுக்குள் கொடுத்து விட்டு அதன் பிடி தளர்த்த பெரியம்மா பட்ட வேதனையை நினைத்துக் கொண்டாள். பெரியப்பா ஒரு சிறந்த பேச்சாளர். அவருக்கு வந்ததோ தொண்டையில் புற்று. கடைசி ஓராண்டு காலம் அவர் காகிதங்கள் வழிதான் பேசினார். அவரை முழுவதுமாக குணமாக்க முடியாது என்றும், சாவை ஓராண்டிற்கு வேண்டுமானால் தள்ளிப்போடலாம் என்றும் மருத்துவர்கள் சொல்லி விட்டனர். இலட்சங்களைக் கொட்டி அவரை நோய்ப்படுக்கையில் உயிர் மட்டும் கண்களில் இருக்க தன்னுடன் வைத்திருந்தாள் பெரியம்மா. அவரால் நோயின் கொடுமையைத் தாளவே முடியவில்லை. தன்னால், “இதற்கு மேல் சிகிச்சைகளைத் தாங்க முடியாது. நான் இறக்கத்தயாராக இருக்கிறேன்” என பெரியப்பா எழுதியே கொடுத்து விட்டார்.

ஆனாலும், பெரியம்மாவிற்கு அவரைப் பிரிய மனமில்லை. ஒரு நாள் பெரியம்மா குளித்துக் கொண்டிருந்தபோது தனது கை நரம்புகளை வெட்டிக்கொண்டு பெரியப்பா ரத்தமாகக் கிடந்தார். மருத்துவர்களை ஓடி அழைத்து பெரியம்மா கதறும்போது, “என்னை மன்னித்துவிடு” என்று சொல்லும் விதமாக கையெடுத்துக் கும்பிட்டு விட்டு பெரியப்பா இறந்து போனார். அப்படியாகப் பயணித்த நினைவுகள் ரோகினியின் தோழியின் தந்தையிடம் வந்தன. ஓராண்டு சிகிச்சை அளித்தால் இரண்டாண்டு உயிரோடு இருப்பார் என்ற சிகிச்சை நிலை. அப்பாவை எப்படியாவது காப்பாற்றி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை தோழிக்கு. போதிய பணவசதி இல்லை. அதுவரை ஆகிய செலவிற்கே லட்சங்களில் சொந்த பந்தங்களிடம் கடனாகி இருந்தது அந்தக் குடும்பம். மேல் சிகிச்சைக்கு வீட்டை விற்றால் பணம் புரட்டலாம் .

வீட்டை விற்கச் சொல்லி தோழி அவள் அம்மாவிடம் போராடிக் கொண்டிருந்தாள். அம்மா அந்த எண்ணத்திற்கு உடன்படவில்லை. எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாத தன் கணவனுக்கு அப்படியொரு கொள்ளை நோய் வந்ததில் முற்றிலும் இடிந்திருந்தார் அம்மா. ஆனாலும் ஒரு கட்டத்தில் ஒரு முடிவிற்கு வந்திருந்தார். நோய்ப்படுக்கையில் கிடந்த கணவனே மன்றாடிக் கேட்டும் அம்மா வீட்டை விற்க சம்மதிக்கவில்லை. அந்த வீடு ஒன்றுதான் அவர்களின் சொத்து அதை விற்று கணவனின் உயிரை மீட்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிந்து விட்டது. மரணத்தின் தள்ளி வைக்கப்பட்ட உறுதி பிள்ளைகளின் எதிர்காலம் நோக்கி அம்மாவைச் சிந்திக்க வைத்தது.

கணவனின் மரணத்திற்கு முற்றிலும் தன்னைத் தயார் படுத்தி வைத்திருந்தார் அந்த அம்மா. கடைசிக் காலத்தில் அந்த அம்மாவின் கைகளால் உணவு ஏதும் வாங்காமலேயே வீம்புடன் இறந்தார் அப்பா. கடன்களையெல்லாம் அடைத்து பிள்ளைகளை யார் தயவுமின்றி வளர்த்து ஆளாக்கினார் அம்மா.  இவர்களையெல்லாம் மனக்கண்ணில் ஓட்டி முடிக்கையில் தன் கட்டிலில் மகனுடன் படுத்திருந்தாள் ரோகினி. ஆறு வாரங்கள் இன்னும் பெயர் சூட்டப்படாத அந்த நோயுடன் வாழ வேண்டும். அது பழக்கப்பட்ட அறைதான் என்றாலும் அன்று முற்றிலும் புதிய சூழலை ஏற்றிருந்தது. ரோகினியின் உடல் மீது அளவான தகிப்பில் நெருப்பு ஒன்று கனன்று கொண்டே இருந்தது. மகனின் மார்பில் அடிக்கடி கை வைத்து அவனின் இருப்பை உறுதி செய்து கொண்டாள். நன்கு தூங்கிக் கொண்டிருந்த மகன் திடீரென எழுந்து அமர்ந்தான்.

பதறியெழுந்து அவன் முகம் வடித்தாள் ரோகினி. குபுக்கென்று வாந்தி எடுத்தான். அப்படியே கைகளில் ஏந்தி வாங்கினாள். அவனை மெல்ல இறக்கியவாறே வாந்திக் கைகளுடன் கழுவும் அறைக்குச் சென்றாள். கைகளில் சூடாக இருந்த அந்த வாந்தியில் மகனின் உயிரின் பாகங்கள் ஏதேனும் இருக்கக்கூடுமோ எனத் தயங்கிக்கொண்டே கைகளையும் அவனையும் கழுவினாள்.  எவ்வளவு கடினம் என்றாலும் ஆறு வாரங்கள் என்பது கரையப் போவதுதான் என்பதை மூன்றாம் நாளில் உறுதிப்படுத்திக் கொண்டாள். மகனின் துள்ளலற்ற வீடு சிறையாகத் தோன்ற ஆரம்பித்ததும் ஒரு வார முடிவில் சிறைக்குள் வாழ முடிவெடுத்து விட்டாள். நோய்ப்படுக்கை ஒன்றை இரண்டாம் வாரத்தில் நேர்த்தியாக ஏற்படுத்தி இருந்தாள். மகனைக் கட்டி அணைக்கும் போதெல்லாம் விம்மும் மார்பை கல்லாகிப்போக பழக்கிக் கொண்டிருந்தாள்.

மகனை நினைவாக்கிக் கொள்ளும் திட்டம் ஒன்றும் அவளிடம் ஏற்பட்டு இருந்தது. மகனும் தானும் சேர்ந்தே மரணித்து விடலாமா என்ற எண்ணமும் அவளிடம் இல்லாமல் இல்லை. மரணத்தின் தரிசனம் திட்டமிடலுக்கு ஆட்படுவதே இல்லை என்ற ஆன்ம அறிவால் அசட்டுத் தனங்களில் ஈடுபடவில்லை. திகிலுற்ற மனங்களின் வடிகாலான பேய்க்கனவுகளுக்கு பஞ்சமில்லாமல் போனது. நிற்கும் இடங்களிலெல்லாம் மரமாய் நிலைப்பது, அடுப்பங்கறை காரியங்களை கருக்கி வைப்பது, அலுவலகப் பணிகளில் தவறுகள் செயவது என பேதலித்த கணங்களிலும் எதையோ ஒன்றைப் பற்றிக் கொண்டாள். ஆறாம் வாரத்தின் முடிவில் மகனின் நோயை ஏற்பதற்கான சகல ஏற்பாடுகளுடன் மருத்துவரைச் சந்திக்க மகனுடன் சென்றாள். அவளை மட்டும் அறைக்குள் அழைத்தார் மருத்துவர்.

அவளின் இதயத்துடிப்பு நோயின் பெயரைக் கேட்பதற்காகவே விரைந்துக் கொண்டிருந்தது. அந்தப் பெயர்தான் இனி அவளின் துயரத்திற்கான பீடம். மருத்துவர் தீவிரமாக பரிசோதனை முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவளின் முகத்தை அவர் பார்த்த போது தீர்க்கமான தெளிவொன்றை வைத்திருந்தாள். “நாம பயந்த அந்த நோய்தான்னு உறுதியாகிருக்கு. அதுக்கேத்த மருந்துகளை ஆரம்பிக்கிறேன்” என்று கூறிக்கொண்டே நீட்டியும் சுழித்தும் ஏதேதோ எழுதினார். தன்னை வருத்தி வருத்தி அவள் சேர்த்திருந்த வலு கண்கள் வழி குமிழ்களாக வடிந்தன. நல்ல பெரிய பெரிய கண்ணீர்த்துளிகள். தேக்கப்பட்டிருந்த அத்தனை ஆற்றாமையும் பெருகிப் பொழிந்தது. வெளியே அமர்ந்திருந்த மகனை கண்ணாடிக் கதவுகளின் வழி பார்த்தாள். அப்படியே அவன் அப்பாவின் சாயலில் தெரிந்தான்.  கண்ணீர் செய்த சித்து வேலையாக இருக்கலாம். கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் பார்த்தாள். அதுநாள் வரை மகனிடம் இல்லாத சாயல்.

அப்பன் அப்படியே அப்பிக் கிடந்தான். வெளியே வந்து மகனைத் தன்வசம் இழுத்து அணைத்துக் கொண்டாள். மின் தூக்கியைப் பயன்படுத்த அதனுள் நுழைந்து பூஜ்யத்தை அழுத்தினாள். கதவு மூடியது. மூடிய கதவில் அவளும் மகனும் பிரதிபலித்தனர். மகன் முகத்தில் சவக்களையில் கணவன்.

அச்சம் அவள் நரம்புகளை விறைப்பாக்கியது. காலணிக்குள் கால்கள் குளிர்ந்து வழுக்கியது. மின் தூக்கி 3 என இறங்கிக் கொண்டிருந்தது. அவகாசம் இல்லாதவளாய் மகன் முகத்தில் இருந்த கணவனின் சாயலை அவன் தலைமுடியைக் கலைத்து அழித்துப் பார்த்தாள். அவனிடத்திலிருந்து அப்பன் போகவே இல்லை. மின் தூக்கி 2 என இறங்கியது. மகனின் கன்னங்களைப் பிசைந்து அவன் முகத்தை வேறொன்றாக வடித்துப் பார்த்தாள். அப்பன் போகவே இல்லை.

மின் தூக்கி 1 என இறங்கியது. ரோகினியின் சுடிதாரின் கழுத்து வரம்புகள் நனைந்து அடர் நிறமாக மாறியிருந்தது. மகனின் முகத்தை இரண்டு கைகளாலும் உள்வாங்கி அவன் கண்களை ஆழக் கடந்து அவனுள் சென்றவள், சட்டென தன் நெற்றிப்பொட்டை அவன் நெற்றியில் ஒட்டினாள்.

அப்படியே ரோகினியின் சாயல்.  மின் தூக்கி பூஜ்யத்தில் வந்து நின்றது. கதவு இரண்டாகப் பிளந்தது. பெரிய பாதை கிடந்தது. அம்மாவும் மகனும் வெளியேறினர். *******

Read more at: https://vasagasalai.com/udatrum-pini-sirukathai-aruna-chitrarasu-vasagasalai-86/?fbclid=IwAR0aw0uLIb3dInIz3C9Gv6JZ5nzigsOwz_OeNunKC03W3HoEPCNzm0fi56k

  • கருத்துக்கள உறவுகள்

சோகங்கள் சுமந்த ஒரு கதை

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுகோலுக்குள் கண்ணீரைக் கரைத்து ஊற்றி எழுதிய கதை.......!  

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அக்கா பகிர்விற்கு.
பல இடங்களில் எங்கள் குடும்ப நிலையும் கதை தொட்டுச் சென்றது.
2011 இல் தம்பி 35 நாட்களுக்கு மேல் வென்ரிலேற்றர் மூலம் சுவாசித்துக் கொண்டிருக்கையில் அம்மாவும் நானும் பட்டபாடுகள் கனவு போல இருக்கிறது. அப்பா கவலையை வெளிக்காட்டவில்லை.
இன்று தம்பி மீண்டு வந்து தன்னுடைய உடல் இயலாமையைத் தாண்டி பல சமூக சேவைகளை முன்னெடுக்கிறான். எனக்கும் சேவை செய்வதற்கு உந்துதலாக இருக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

வலிகளை வார்தைகளாக்கி எழுதிய  கதை .அழகான உரை நடை. சோகமும் அதை தாங்கும்  மனோதிடமும் நிறைந்த கதை  நாயகி. எழுத்தாளருக்கு   பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றி யாயினி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.