Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மரச் சிற்பம் - ஷோபாசக்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மரச் சிற்பம்

பாரிஸ் நகரத்தில் இந்த வருடம் நிகழவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளைக் குறித்துத் தினப் பத்திரிகையிலிருந்த தலைப்புச் செய்தியை மீறியும் எடுத்த எடுப்பிலேயே இன்னொரு செய்தி எனது கண்களை இழுத்தது. கண்கள் அந்தச் செய்தியை வாசிக்கும்போது, எனக்குக் கிட்டத்தட்டச் சித்தம் கலங்கிவிட்டது என்றே சொல்லலாம். நான் அந்தச் செய்தியை நம்ப முடியாமல் மூன்று தடவைகள் திரும்பத் திரும்ப வாசித்தேன். பிரான்ஸில் இப்போது படு வேகமாக முன்னணிக்கு வந்துகொண்டிருக்கும் தேசியவாதக் கட்சியொன்றின் தலைவர்களில் ஒருவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார்:

“எமது தந்தையர் நாடு இப்போது வாழ்வதற்கு அபாயகரமான நிலமாகிவிட்டது. குற்றக் குழுக்களதும் கலகக்காரர்களதும் கரிய பாதங்களுக்குக் கீழே இந்தத் தூய நிலம் அழுந்திகொண்டிருக்கிறது. இந்த ஒழுங்கற்றதன்மையிலிருந்து மீள்வதற்கு நமக்கு ஒரேயொரு வழியே உள்ளது. பிரான்ஸின் தனித்த பெருமைக்குரிய, மகத்தான பிரெஞ்சுப் புரட்சியின் சின்னமான மரச் சிற்பத்தை மீண்டும் நாங்கள் பொது முற்றங்களில் நிறுவ வேண்டும்.”

பிரெஞ்சு மொழியில் உயிருள்ளவை, உயிரற்றவை எனப் பலவற்றுக்கும் செல்லப் பெயர்கள் அன்றாடப் பேச்சுகளில் சரளமாகப் புழக்கத்திலுண்டு. பொலிஸ்காரனுக்கு ‘கோழி’ என்பதும் பெண்ணுக்கு ‘தெள்ளுப்பூச்சி’ என்பதும் ஆண்குறிக்கு ‘சேவல்’ என்பதும் செல்லப் பெயர்கள். ‘மரச் சிற்பம்’ என்ற செல்லப் பெயரால் குறிப்பிடப்படுவது கில்லட்டின்.

‘லே மிஸரபிள்’ நாவலில் விக்டர் ஹியூகோ “ஒருவர் தனது சொந்தக் கண்களால் கில்லட்டினைப் பார்க்காத வரை, மரணதண்டனை குறித்து அவருக்கு அலட்சியம் இருக்கலாம். ஆனால், அதைப் பார்த்ததும் அதிர்ச்சியால் அவரது மூளை கலங்கிவிடும்” என்று சொல்கிறார். விக்டர் ஹியூகோவை நான் முழுமையாகவே விசுவாசிக்கிறேன். நான் என்னுடைய கண்களால் அந்த மரச் சிற்பத்தைப் பார்த்திருக்கிறேன். 

அது தற்செயலாக நிகழ்ந்ததுதான். பாரிஸ் நகரத்திலுள்ள ‘ஓர்ஸே’ அருங்காட்சியகத்தில் தஸ்தயேவ்ஸ்கியின் புகழ்பெற்ற தலைப்பைக் கடனாகப் பெற்று ‘குற்றமும் தண்டனையும்’ என்றொரு கண்காட்சி நடந்தது. அந்தத் தலைப்பால் கவரப்பட்டுத்தான் நான் கண்காட்சிக்குப் போயிருந்தேன். அங்கேதான் பிரான்ஸிலிருக்கும் கட்டக் கடைசி கில்லட்டினைக் காட்சிக்கு வைத்திருந்தார்கள்.

அந்த மரச் சிற்பம் பதினான்கு அடி உயரமானது. அந்தச் சிற்பத்தின் பீடம் ஏழடி நீளமும் இரண்டடி அகலமுமானது. மரணதண்டனை விதிக்கப்பட்ட மனிதரை அந்தப் பீடத்தில் குப்புறப் படுக்க வைப்பார்கள். கைகளும் கால்களும் உடலோடு சேர்த்துத் தடித்த கயிறுகளால் பிணைக்கப்பட்டிருக்கும். மரச் சிற்பத்தின் ஆசனவாய் போன்று தோற்றமளிக்கும் துளையில் அந்த மனிதரின் கழுத்துப் பகுதி செருகப்படும். துளைக்கு இந்தப் பக்கம் அவரின் உடலும் அந்தப் பக்கம் தலையும் இருக்கும். அவரது ஆன்மா அப்போது எங்கிருந்திருக்கும்? மரச் சிற்பத்தின் கிரீடம் போல உச்சியில் தொங்கிக்கொண்டிருக்கும் கனமான, கூர்மையான கத்தி விசையுடன் இறக்கப்பட்டதும் தலை முண்டத்திலிருந்து எகிறி விழும். அதை ஏந்துவதற்குக் கீழேயொரு அழுக்குப் பிரம்புக் கூடை வைக்கப்பட்டிருக்கும்.

பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்ட எல்லா கில்லட்டின்களும் இந்த வடிவத்திலேயே இருந்ததாகச் சொல்ல முடியாது. புரட்சி நடுவர் மன்றம் நாடு முழுவதுமுள்ள பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு மரணதண்டனை விதித்துக்கொண்டேயிருந்ததால், சுலபமாகக் கையிலேயே எடுத்துச் சென்று காரியத்தை முடித்துவிட குட்டியான நடமாடும் கில்லட்டின்கள் கூட அப்போது நூற்றுக்கணக்கில் உருவாக்கப்பட்டன. 

ஓர்ஸே அருங்காட்சியகத்திலிருந்து ஏதேதோ குழப்பமான எண்ணங்களுடன் சித்தம் கலங்கியவனாகத்தான் நான் வெளியே வந்தேன். அந்த அருவருக்கத்தக்க இரத்த மரச் சிற்பம் அன்று முழுவதும் என்னுடைய மூளையை விட்டு அகல மறுத்தது. பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் அந்த மரச் சிற்பத்தால் தலை கொய்யப்பட்டவர்கள் எனது தலைக்குள் அரூபப் படிமங்களாக, ஒலி எழுப்பாமல் பேசிக்கொண்டே அலைந்தார்கள். பாரிஸ் நகரத்தின் புரட்சிச் சதுக்கத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த மரச் சிற்பங்களை நோக்கி அழைத்துச் செல்லப்படுகையில் அவர்கள் எதைப் பேசியிருப்பார்கள்? என்ன நினைத்திருப்பார்கள்? 

பேரரசர் பதினாறாம் லூயி மரச் சிற்பத்தின் ஆசனவாய்க்குள் தனது தலையை நுழைக்கும்போது, “நான் எனது எதிரிகளை மன்னிக்கிறேன்” என்று கூறியது உண்மைதானா? மகாராணி மரி அந்துவானெட் மரச் சிற்பத்தில் படுக்க வைக்கப்பட்டு; கழுத்தில் கத்தி பிசிறில்லாமல் இறங்குவதற்காக அவரது நீளமான தலைமுடி பிடரிக்கு மேலாகச் சிரைக்கப்பட்டபோது, அவர் எதை நினைத்திருப்பார்? மகாராணி தனது எட்டு வயது மகன் லூயி -சார்ள்ஸைக் கட்டாயப்படுத்தி அவனோடு செக்ஸ் வைத்துக்கொண்டார் என்று புரட்சி நடுவர் மன்றம் குற்றம் சாட்டியபோது “உங்களுக்கல்ல! இங்கிருக்கும் தாய்மார்களுக்கு நான் சொல்கிறேன்…ஒரு தாய்மீது சுமத்தப்படும் இத்தகைய குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க இயற்கை என்னைத் தடுக்கிறது” என்று சொல்லியிருந்தாரே… அந்த இயற்கையைத்தான் அந்தக் கடைசி நிமிடத்தில் அவர் நினைத்திருப்பாரா? புரட்சியின் முக்கிய தலைவர்களான தாந்தோனும்,ரொபஸ்பியரும் ஒருவர் பின் ஒருவராக அடுத்த வருடமே புரட்சிச் சதுக்கத்திற்கு அழைத்து வரப்பட்டு இந்த மரச் சிற்பத்தில் படுக்க வைக்கப்பட்டபோது, அவர்கள் எதை நினைத்திருக்கக் கூடும்? அவர்களது தாரக மந்திரமான சுதந்திரம் -சமத்துவம் – சகோதரத்துவம் என்பதைக் கடைசி விநாடியில் அவர்கள் உச்சரித்திருப்பார்களா? புரட்சிச் சதுக்கத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டம் “துரோகிகளைக் கொல்லுங்கள்!” என்று ஆர்ப்பரித்த வார்த்தைகள்தான் அவர்களது காதுகளில் விழுந்த கடைசி வார்த்தைகளா? கில்லட்டின் படுகொலைகளைத் தூண்டிய புரட்சி நாயகர்களில் அதிமுக்கியமானவரான ‘மக்கள் தோழன்’ மாராவின் இருதயத்தில் சமையல் கத்தியைப் பாய்ச்சிக் கொன்ற இருபத்துநான்கு வயது யுவதி சர்லோத் கோர்தே இந்த மரச் சிற்பத்தை நோக்கி அழைத்துச் செல்லப்படுகையில் என்ன நினைத்திருப்பார்? “நான் எனது கடமையை நிறைவேற்றிவிட்டேன்! இந்த மனிதரின் உத்தரவால் இலட்சக்கணக்கானவர்கள் கில்லட்டினில் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்காகவே நான் இவரைக் கொன்றேன்” என்று மாராவின் பிணத்தின் முன்னே நின்று அவர் சொன்ன வார்த்தைகள் அவருடன் கடைசிவரை இருந்து அந்த அழுக்குப் பிரம்புக் கூடையில் தெறித்து விழுந்திருக்குமா?

நான் பத்திரிகையை மேசையில் வீசிவிட்டு, நொறுங்கிவிழும் நிலையிலிருந்த ஜன்னலை மெதுவாகத் திறந்து கடல் காற்றை உள்ளே வரவழைத்தேன். மார்ஸேய் நகரத்தில் கடற்கரையை ஒட்டியிருக்கும் இந்தப் பழைமையான தங்கு விடுதியில்தான் கடந்த ஒரு வாரமாக நான் தங்கியிருக்கிறேன். பாரிஸில் கடுங்குளிரும் பனிப்பொழிவும் ஏற்படும்போது, கொஞ்சம் வெப்பத்தையும் கடலையும் தேடிக்கொண்டு தெற்குப் பிரான்ஸிலுள்ள ஏதாவதொரு கடற்கரை நகரத்திற்கு நான் வந்துவிடுவேன். பழைமையைக் காப்பாற்றுவதில் இந்த விடுதி நிர்வாகம் கடும் கவனத்தைச் செலுத்துகிறது. விடுதியில் தங்குபவர்களுக்கு தினப் பத்திரிகையை இலவசமாக வழங்கும் கலாசாரத்தை நிறுத்தாத பிரான்ஸின் மிகச் சில தங்கு விடுதிகளில் இதுவுமொன்று. உளுத்துப்போயிருக்கும் அறைக் கதவின் கீழால் இன்று காலையில் அவர்கள் மடித்துத் தள்ளிவிட்ட சனியன் இப்போது என்னில் தொற்றிக்கொண்டு என்னை மூச்சுத் திணற வைக்கிறது.

அறைக்குள் நுழைந்த காற்று என்னை ஆற்றுப்படுத்துவதற்குப் பதிலாக மேலும் சோர்வுக்குள்ளேயே தள்ளிவிட்டது. எழுதும் மேசையின் முன்னால் அமர்ந்து ஏதாவது எழுதுவதற்கு முயற்சித்தேன். ஓர் எழுத்தைக் கூட என்னால் எழுத முடியவில்லை. நேரம் காலை பத்தரை மணியாகிவிட்டது. கோப்பி ஒன்று குடித்தால் புத்துணர்ச்சியாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றவே காலணிகளை மாட்டிக்கொண்டு வெளியே புறப்பட்டேன். மறக்காமல் அந்தப் பத்திரிகைச் சனியனைச் சுருட்டிக் கையில் எடுத்துக்கொண்டேன். அந்தப் பத்திரிகைக்காக அனபெல் அம்மையார் காத்திருப்பார். 

அனபெல் அம்மையாரை இந்த நகரத்திற்கு வந்த முதல் நாளே நான் சந்தித்திருந்தேன். நான் இந்த நகரத்திற்கு இரயிலில் வந்திறங்கும்போது, காலை ஒன்பது மணியிருக்கும். மதியம் பன்னிரண்டு மணிக்குத்தான் அறை கொடுப்போம் என்று விடுதி நிர்வாகி சொன்னார். அதுவரை நேரத்தைப் போக்குவதற்காக விடுதிக்கு எதிரேயிருந்த கஃபேக்குச் சென்றேன். தாழ்வாரத்தில் போடப்பட்டிருந்த வட்டமான சிறிய மேசையொன்றைத் தேர்ந்தெடுத்து உட்கார்ந்துகொண்டேன். அதுதான் புகை பிடிப்பதற்கு வசதி. எக்ஸ்பிரஸோ கோப்பி ஒன்றுக்குச் சொல்லிவிட்டு, தெருவை வேடிக்கை பார்ப்பதும் சிகரெட் புகைப்பதுமாக நான் நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தபோதுதான், அந்த கஃபேயை நோக்கி அனபெல் அம்மையார் மெது மெதுவாக நடந்து வந்தார்.

அவருக்குக் கிட்டத்தட்ட எழுபது வயதிருக்கும் என்றே நினைக்கிறேன். அவரது வெண்ணிறக் கால்களிலும் கைகளிலும் தாடையிலும் பொன்னிறத்தில் பூனை ரோமங்கள் மினுங்கின. முற்றாக நரைத்திருந்த தலையில் அங்கங்கே திட்டுத் திட்டாக முடிகள் உதிர்ந்திருந்தன. அவற்றை மறைப்பதற்காகவோ என்னவோ சிறுமிகள் கட்டும் வண்ண ரிப்பன்கள் சிலவற்றைத் தலையில் குறுக்குமறுக்காகக் கட்டியிருந்தார். அவரது சிறிய சாம்பல் நிறக் கண்களின் கீழே சதை திரண்டு அழுகிய தோடம்பழச் சுளைகளைப் போலத் தொங்கின. அனபெல் சராசரிக்கும் குறைவான உயரமுள்ளவர். ஆனால், கனத்த உடல்வாகு. கழுத்தும் கைகளும் கால்களும் பெருத்துக் கிடந்தன. உண்மையில் அவை வீக்கங்களாகத்தான் இருக்க வேண்டும். முழங்கால் வரைக்குமான கவுன் அணிந்திருந்தார். காலுறைகளைச் சுருட்டி விட்டிருந்தார். புடைத்திருந்த ஒரு துணிப் பையைக் கையில் சுமக்க முடியாமல் சுமந்துவந்தார். அவர் ஒரு குடி நோயாளி என்பதைத் தெளிவாக அடையாளம் காட்டுவதுபோல, அவரது முகம் காற்று நிரப்பப்பட்ட ரோஜா நிற பலூன் போல ஊதியிருந்தது. 

அனபெல் எனக்கு அருகிலிருந்த மேசையில் உட்கார்ந்துகொண்டார். அவர் மூச்சிரைக்கும் சத்தம் பெரிய புறாவொன்று குனுகுவதைப் போல எனக்குக் கேட்டது. பரிசாரகர் வந்து “நல்ல நாளாகட்டும் மேடம் அனபெல்! இன்று எப்படியிருக்கிறீர்கள்? நலம்தானே? நான் உங்களுக்கான கோப்பையை எடுத்து வந்திருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு மது நிரம்பிய சிறிய கண்ணாடிக் கோப்பையை அனபெலின் மேசையில் வைத்தார். அனபெல் கோப்பையை என் முகத்திற்கு நேரே தூக்கிக் காட்டிவிட்டு, ஒரே மடக்கில் கோப்பையைக் காலி செய்து, வெற்றுக் கோப்பையை மேசையின் ஓரத்தில் வைத்தார். பின்பு, தனது துணிப் பைக்குள்ளிருந்து கற்றையாகப் பத்திரிகைளை எடுத்து மேசையில் பரப்பி வைத்துக்கொண்டு வாசிக்கத் தொடங்கினார். 

எனக்குப் பொழுது போகாமல், அவர் என்ன வாசிக்கிறார் எனக் கண்களை எறிந்து பார்த்தேன். அவர் வாசித்தது எல்லாமே முந்தைய தின, முந்தைய வாரப் பத்திரிகைகளே. நான் அவரைக் கவனிப்பதை அனபெல் எப்படி உணர்ந்தார் என்று தெரியவில்லை… திடீரெனத் தலையை என் பக்கம் திருப்பி “நண்பரே! உங்களை முன்பு இங்கே பார்த்ததாக எனக்கு ஞாபகம் இல்லையே. எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவருடைய குரலில் இரண்டு விஷயங்களை நான் கவனித்தேன். அனபெலின் குரலில் ஆண்தன்மை மிகுந்திருந்தது. அந்தக் குரல் எந்தவித உணர்ச்சியோ பாவமோ இல்லாமல் ‘Votre attention, s’il vous plaît’ என இரயில் நிலையங்களில் தினமும் ஒலிக்கவிடப்படும் தட்டையான அறிவிப்புப் போலவே ஒலித்தது. அவர் எப்போதுமே இப்படித்தான் பேசினார். எல்லா உணர்ச்சிகளும் -அப்படி ஏதாவது அவரிடமிருந்தால் -ஒரே தொனியில்தான் அவரிடமிருந்து வெளிவந்தன.

அடுத்தடுத்த நாட்களில் நான் ஒன்றைத் தெரிந்துகொண்டேன். அனபெல் ஒவ்வொரு நாளும் காலை பத்து மணிக்கு அந்த கஃபேக்கு வந்துவிடுகிறார். மாலை ஆறு மணிவரை அங்கேயே ஒரு மேசையில் உட்கார்ந்திருக்கிறார். ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை ஒரு கோப்பை மது வரவழைத்துக் குடித்துவிட்டுப் பத்திரிகைகளைப் படித்தவாறிருக்கிறார். அந்தப் பத்திரிகைகளைக் குப்பைத் தொட்டிகளிலும் தெருக்களிலும் அவர் சேகரிக்கிறார். எனக்கு தங்கு விடுதியில் தள்ளிவிடப்படும் பத்திரிகையை மேலோட்டமாக மேய்ந்துவிட்டு, அனபெலிடம் கொடுப்பதை நான் வழக்கமாக்கிக்கொண்டேன்.

நான் விடுதியின் மாடிப்படிகளில் இறங்கி வரும்போது, மனம் ஆற்றாமல் மாடிப்படியிலேயே உட்கார்ந்து மீண்டும் ஒருமுறை அந்த மரச் சிற்பச் செய்தியைப் படித்தேன். எத்தனை தடவைகள் படித்தாலும் ஒரே செய்திதான் இருக்கும் என்பதைக் கூடப் புரிந்துகொள்ளாத அளவுக்கு அந்தச் செய்திச் சனியன் என்னுடைய மூளையை மழுங்கடித்துவிட்டது.

நான் கஃபேக்குச் சென்றபோது, தாழ்வாரத்தின் இடது பக்க மூலையிலிருந்த மேசையின் முன்னே அனபெல் பத்திரிகையொன்றை வாசித்தவாறே அமர்ந்திருந்தார். “பொன்ஜூர் மேடம் அனபெல்” எனக் கூறிக்கொண்டே, கையில் எடுத்துச் சென்ற பத்திரிகையை அந்த மேசையில் வைத்துவிட்டு, அவருக்கு எதிரே அமர்ந்துகொண்டேன். இந்த ஒரு வாரத்திற்குள்ளேயே ஒரே மேசையில் அமர்ந்து குடிக்குமளவுக்கு எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. 

என்னிடம் வந்த பரிசாரகர் “ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்? உடல்நலம் சரியாக இருக்கிறதல்லவா? இந்த உப்புக் காற்று சிலருக்கு ஒத்துவருவதில்லை. உங்களுக்கு கோப்பி எடுத்துவருகிறேன்” எனச் சொல்லிவிட்டுப் போனார். அப்போது அனபெல் வெடிப்புற்றிருந்த தனது மெல்லிய உதடுகளைக் குவித்துக்கொண்டு என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். பத்திரிகையிலிருந்த மரச் சிற்பச் செய்தியை நான் அனபெலிடம் தொட்டுக் காட்டினேன். அவர் அதைப் படித்து முடிக்கும்போது, அவருக்கான அடுத்த கோப்பை மது வந்துசேர்ந்தது. ஒரே மடக்கில் குடித்துவிட்டு, வாயைக் கைக்குட்டையால் ஒற்றிக்கொண்டிருந்தார்.

நான் பொறுக்க முடியாமல் “நூற்றாண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட இரத்த மரச் சிற்பங்களை மீண்டும் தோண்டி எடுத்து இந்தக் காட்டுமிராண்டிகள் பொது முற்றங்களில் நிறுவப் போகிறார்களாம். அதையும் இந்த வெட்கங்கெட்ட பத்திரிகை வெளியிட்டிருக்கிறது” என்றேன். அனபெல் ஏதாவது இரண்டு வார்த்தைகளை -எப்போதும் போல உணர்ச்சியற்ற குரலில் – சொன்னால் கூட என்னுடைய மனது சற்று ஆறுதலடையும் போலிருந்தது. 

அனபெல் கைக்குட்டையை மடித்துக்கொண்டே சொன்னர்:

“நூற்றாண்டுகளுக்கு முன்பல்ல. நாற்பத்தேழு வருடங்களுக்கு முன்புவரை மரச் சிற்பம் இயங்கிக்கொண்டேயிருந்தது. அது வெட்டிய கடைசித் தலை இந்த நகரத்தில்தான் புதைக்கப்பட்டிருக்கிறது.”

அனபெலுக்கு காலையிலேயே போதை ஏறிவிட்டது, அதனால்தான் உளறுகிறார் என்றே நான் முதலில் நினைத்தேன். ஆனால், நான் இதுவரை பழகிப் பார்த்ததில் அனபெல் ஒருபோதுமே போதையால் உளறியது கிடையாது. அவர் எப்போதுமே திருத்தமாகவும் திட்டவட்டமாகவும்தான் பேசுகிறார்… இரயில் நிலைய அறிவிப்புப் போல.

“என்ன சொல்கிறீர்கள்…நாற்பத்தேழு வருடங்களுக்கு முன்பாகவா?” என்று நான் கேட்டேன்.

“10-ம் தேதி, செப்டம்பர் 1977, அதிகாலை 4.40 மணி” என்று அதே உணர்ச்சியற்ற குரலில் அனபெல் சொன்னார்.

என்னால் அதை நம்பவே முடியவில்லை. இதை வாசிக்கும் உங்களால் நம்ப முடிகிறதா என்ன?

ஜோன் போல் சார்த், சீமோன் து புவா, மிஷல் ஃபூக்கோ, ரோலோன்ட் பாத், பிரான்சுவா த்ரூபோ, கொடார்ட் என மாபெரும் சிந்தனையாளர்களும் கலைஞர்களும் அப்போது இங்கே வாழ்ந்துகொண்டிருந்தார்கள். 1977-ல் பிரான்ஸின் அதிபராகயிருந்த கிஸ்கார்ட் தன்னுடைய இளம் வயதில், ஹிட்லரின் நாஸிப் படைகளை எதிர்த்துத் தீரமாகப் போராடியவர். இந்த மாமனிதர்கள் எல்லாம் வாழ்ந்த காலத்தில் இரத்த மரச் சிற்பம் எப்படி இயங்கியிருக்க முடியும்? 

எனவே, அனபெல் அம்மையார் ஏதோ நினைவுத் தடுமாற்றத்தில் பேசுகிறார் என்றே நான் முடிவெடுத்தேன். ஆனாலும், ஏதோ ஒன்று என்னை உந்தித் தள்ள, அனபெல் அம்மையாரிடம் “யாரின் தலை வெட்டப்பட்டது?” என்றொரு குறுக்குக் கேள்வியைக் கேட்டேன். இப்போது அவரது நினைவுத் தடுமாற்றம் தெளிந்துவிடும்.

“ஹமிடா என்ற இருபத்தேழு வயது மனிதனைத்தான் கொன்றார்கள். அவனது குடும்பப் பெயர் ஜோண்டூபி” என்று அதே உணர்ச்சியற்ற குரலில் அனபெல் சொன்னார்.

அனபெல் சொல்வதை இப்போது என்னால் எப்படி நம்பாமல் இருக்க முடியும்! கொல்லப்பட்டவரின் குடும்பப் பெயர் முதற்கொண்டு தேதி, நேரத்துடன் சொல்கிறாரே. ஆனாலும், எனது சந்தேகம் முழுவதுமாகத் தீர்ந்ததாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் பிரெஞ்சு வரலாறு, பிரெஞ்சுப் பண்பாடு போன்றவற்றின் மீதான எனது தீவிர வாசிப்பில் எனக்கு இன்னும் நம்பிக்கையிருந்தது. எனவே நான் அனபெல்லிடம் “இதெல்லாம் எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று கேட்டேன். 

சற்று நேரம் மவுனமாக இருந்த அனபெல் பரிசாரகரை அழைத்து இன்னொரு கோப்பை மது கேட்டார். மது வந்ததும் ஒரே மடக்கில் குடித்துவிட்டுப் பேசத் தொடங்கினார். அவர் பேசப் பேச நான் அவரை முழுமையாக நம்பத் தொடங்கினேன். நான் எந்தக் குறுக்கீடும் செய்யாமல் அவர் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தேன். அதே உணர்ச்சியற்ற குரலில் மிகத் தட்டையான பாவங்களோடு அனபெல் சொன்னார்:

“ஹமிடா எங்களது வீட்டு மாடியறையில் சில காலம் தங்கியிருந்தான். எனக்கு அப்போது பதினான்கு அல்லது பதினைந்து வயதிருக்கும். அவன் துனிஷியன். தன்னுடைய பத்தொன்பதாவது வயதில் வேலை தேடி இந்த நகரத்திற்குக் கப்பலில் வந்திறங்கியவன். அவனுக்கு மரங்கள் வெட்டும் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. செபஸ்டியனும் அதே தொழிற்சாலையில்தான் வேலை செய்துகொண்டிருந்தார் -செபஸ்டியன் என்பது எனது அப்பா. சிறுவயதிலிருந்தே பெயர் சொல்லித்தான் நான் அவரை அழைப்பேன்- செபஸ்டியனுக்கு ஹமிடாவைப் பிடித்திருந்தது. ‘ஹமிடா புத்திசாலிப் பையன், கடுமையான உழைப்பாளி’ என்றெல்லாம் அடிக்கடி சொல்வார். இந்தப் பழக்கத்தில்தான் அவன் எங்களது மாடியறையில் வாடகைக்குக் குடியேறினான்.

அந்தக் காலத்தில் இந்த நகரத்திலிருந்த இளைஞர்களிலெல்லாம் பேரழகன் ஹமிடாவே என்று யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். கன்னங்கரேலென்ற சுருட்டை முடி. அகலமான நெற்றி. புன்னகைக்கும் ப்ரவுண் நிறக் கண்கள். கற்சிற்பம் போலக் கடைந்தெடுத்த உடல்வாகு. மென்மையாகவும் இனிமையாகவும் பேசி யாரை வேண்டுமானாலும் வசியம் செய்யக்கூடியவன். அவன் எங்கள் வீட்டில் தங்கியிருந்த காலத்தில்தான், அந்த மோசமான விபத்து நடந்தது. தொழிற்சாலையில் வண்டியொன்றின் சக்கரத்திற்கு அடியில் ஹமிடாவின் வலது கால் சிக்கிக்கொண்டது. அவனது வலது கால் தொடைக்குக் கீழே முற்றாகத் துண்டிக்கப்பட்டுவிட்டது என்று செபஸ்டியன் என்னிடம் சொன்னபோது, நான் நாள் முழுவதும் அழுதவாறேயிருந்தேன். ஹமிடா நீண்ட காலம் மருத்துவமனையில் இருந்தான். அங்கே சந்தித்த ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டு அவளுடனேயே வசிக்கச் சென்றுவிட்டான். அந்தப் பெண்ணைக் கொலை செய்ததற்காகத்தான் அவனைக் கைது செய்தார்கள். அவன் கைதாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அவனை வீதியில் தற்செயலாகப் பார்த்தேன். செயற்கைக் கால் அணிந்திருந்ததால் கொஞ்சம் தடுமாறித்தான் நடந்தான். ‘அதே முகவரியில்தானே வசிக்கிறாய் அனபெல்?’ என்று கேட்டான். ‘ஆம்’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அதுதான் நான் அவனைக் கடைசியாகப் பார்த்தது. அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட நாளன்று செபஸ்டியன் நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தார். வீட்டுக்குத் திரும்பி வந்ததும், யாரிடமும் எதுவும் பேசாமல் குடிக்கத் தொடங்கினார். நாள் முழுவதும் குடித்துக்கொண்டேயிருந்தார்…”

நான் பொறுமையிழந்து குறுக்கிட்டேன். “ஆனால், அந்த மனிதனை கில்லட்டினில்தான் வெட்டினார்களா அனபெல்?”

‘ஆம்’ என்பது போல அனபெல் தலையசைத்தார். நான் கண்களை மூடி அந்த மனிதன் மரச் சிற்பத்தில் படுக்க வைக்கப்பட்டு வெட்டப்படும் காட்சியைக் கற்பனை செய்ய முயற்சித்தேன். அவனுடைய செயற்கைக் காலை என்ன செய்திருப்பார்கள்? அந்த மனிதனுடைய கடைசி நிமிடம் எதுவாக இருந்தது? 

‘என்ன யோசிக்கிறாய்?’ என்பது போல அனபெல் என்னைப் பார்த்தார். மனதில் இருந்ததைச் சொன்னேன். பின்பு இருவரும் மவுனமாக இருந்தோம். அடுத்த கோப்பை மது வந்ததும், அனபெல் ஒரே மடக்கில் கோப்பையைக் காலி செய்துவிட்டு “நான் அதை உனக்குச் சொல்கிறேன்” என்றார். உணர்ச்சியற்ற அதே வறட்டுக் குரல்!

2

1977 செம்டம்பர் 9-ம் தேதியன்று, மரணதண்டனைக் குற்றவாளியின் கருணை மனுவை பிரான்ஸின் அதிபர் கிஸ்கார்ட் நிராகரித்தார். அன்று பிற்பகல் மூன்று மணிக்கு விசாரணை நீதிபதியான திருமதி. மொனிக் மாபெலிக்குச் சிறைச்சாலைத் தலைவரிடமிருந்து ஒரு தகவல் கிடைத்தது. அடுத்த நாள் விடிகாலையில் திருமதி. மாபெலியின் முன்னிலையில் குற்றவாளியின் தலை மரச் சிற்பத்தின் ஆசனவாய்க்குள் திணிக்கப்படவுள்ளது. மாபெலியைச் சிறைக்கு அழைத்துச் செல்வதற்காக வண்டியொன்று அதிகாலை நான்கு மணிக்கு மாபெலியின் வீட்டுக்கு வரும். 

இந்தத் தகவலைக் கேட்டதும் திருமதி. மாபெலி இலேசாகச் சஞ்சலமடைந்தார். குற்றவாளியின் முகம் அவரது மனதில் தோன்றி அவருக்கு ஒருவிதப் பதற்றத்தைக் கொடுத்தது. தனது மகன் ரெமியை விடக் குற்றவாளி ஒரு வயது மட்டுமே இளையவன் என்ற ஞாபகம் அவரது மூளையில் சிரங்கு போல பரவிக்கொண்டிருந்தது. 

வழக்கு விசாரணைகள் முடிவுற்றுத் தீர்ப்பு வழங்கும் நேரம் வந்தபோது, குற்றவாளியின் வழக்கறிஞரான ஜோன் குடாரோ “மோசமான விபத்தில் தன்னுடைய காலை இழந்ததிலிருந்து ஹமிடா ஜோண்டூபி அதிர்ச்சியால் மனச் சமநிலை குழம்பிப் போய்விட்டார். எனவே மாண்புமிகு நீதிபதி கருணையுடன் இந்த அங்கவீனரை அணுகிக் குறைந்தபட்சத் தண்டனையே வழங்க வேண்டும்” எனக் கோரியது மீண்டும் இப்போது நீதிபதி மாபெலியின் காதுகளில் ஒலிக்கிறது. ஆனால், நடக்கவிருக்கும் இரத்தச் சடங்கிலிருந்து மாபெலியால் தப்பிக்கவே முடியாது. நாளை விடிந்ததும் நடைபெறப் போகும் நிகழ்வில் சட்டப்படி அவர் இருந்தே ஆகவேண்டும். 

மாலை ஏழுமணிக்கு திருமதி. மாபெலி தனது தோழி பஸ்ரியானாவுடன் திரையரங்குக்குச் சென்று திரைப்படமொன்றைப் பார்த்தார். திரைப்படம் முடிந்ததும் பஸ்ரியானாவின் வீட்டுக்குச் சென்றார். தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிச் செல்வதை நினைத்தாலே அவருக்குப் பதற்றமாகியது. அதிகாலை நான்கு மணிக்கு அவரைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல வாகனம் வரவிருக்கிறது. 

எனவே “நாங்கள் இன்னொரு திரைப்படம் பார்க்கலாமா?” என்று பஸ்ரியானாவிடம் மாபெலி கேட்டார். தோழிகள் இருவரும் நொறுக்குத் தீனிகளைத் தின்றவாறே தொலைக்காட்சியில் ஒரு படத்தைப் பார்த்தார்கள். அந்தப் படம் முடியும்போது, அதிகாலை ஒரு மணியாகிவிட்டது. மாபெலி சேர்வாகத் தனது வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணியாகிவிட்டது. அவரால் உறங்கவே முடியவில்லை. மூன்றரை மணிக்குக் கட்டிலை விட்டு எழுந்து தயாராகி, உத்தியோக உடைகளை அணிந்துகொண்டார். அன்றைக்குக் கடிகார முள் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருப்பதாக உணர்ந்தார். சரியாக அதிகாலை நான்கு மணிக்கு அவரது வீட்டுக்குக் கார் வந்தது. மாபெலி காரில் ஏறி அமர்ந்துகொண்டார். காருக்குள் சாரதியோடு ஓர் அதிகாரி முன்னிருக்கையில் அமர்ந்திருந்தார். யாரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. அந்த வாகனம் ‘பூமெற்ஸ்’ சிறைச்சாலையை நோக்கி விரைந்தது.

மாபெலி சிறைச்சாலையைச் சென்றடைந்தபோது, அவரை எதிர்பார்த்து எல்லோரும் தயாராக நின்றிருந்தார்கள். அங்கே ஓர் அணி உருவானது. அந்த அணியில் மாபெலி, அட்டர்னி ஜெனரல், குற்றவாளியின் வழக்கறிஞர், சிறையதிகாரிகள், காவலர்கள், மரச் சிற்பத்தை இயக்குபவர்கள், மதக் கடமையை நிறைவேற்றி வைக்கும் இமாம் என முப்பது பேர் இருந்தார்கள். அவர்கள் மரச் சிற்பம் வைக்கப்பட்டிருக்கும் பகுதியை நோக்கி ஊர்வலமாக நடந்துபோனார்கள். இந்தச் சடங்கில் கலந்துகொள்பவர்களின் காலடிகள் தரையில் பதியாமலிருக்க பழுப்பு நிறக் கம்பளங்கள் பாதையில் விரிக்கப்பட்டிருந்தன. வழியில் ஒரு மூலையில் நாற்காலியொன்று இருந்தது. அங்கே மாபெலியும் இன்னும் சிலரும் நின்றுவிட, மற்றவர்கள் குற்றவாளியை அழைத்துவரச் சென்றார்கள். அவர்களோடு இமாமும் போனார். “குற்றவாளி படுத்திருக்கிறார்… ஆனால், தூங்கவில்லை” என்று ஓர் அதிகாரி மாபெலியிடம் தெரிவித்தார். இரண்டு நிமிடங்கள் கழித்து “குற்றவாளி இப்போது மரத்தாலான தனது செயற்கைக் காலைப் பொருத்திக்கொண்டிருக்கிறார்” என்று இன்னொரு அதிகாரி சொன்னார்.

அந்தப் பழுப்பு நிறத் கம்பளங்களில் கால்களை மெதுவாக வைத்துக் குற்றவாளி நடந்துவந்தார். அவரது கைகளில் முன்புறமாக விலங்குகள் மாட்டப்பட்டிருந்தன. மாபெலியைக் கண்டதும் குற்றவாளி மெல்லிய புன்னகையுடன் மாபெலியின் கண்களைப் பார்த்தார். மாபெலி தனது கையிலிருந்த ஆவணங்களைச் சரி பார்ப்பது போல பாவனை செய்து கண்களைத் தாழ்த்திக்கொண்டார். மாபெலிக்கு அருகிலிருந்த நாற்காலியில் குற்றவாளி உட்காரவைக்கப்பட்டார்.

குற்றவாளி நிதானமான குரலில் “எனக்கு ஒரு சிகரெட் வேண்டும்” என்றார். ஒரு காவலர் குற்றவாளியின் உதடுகளில் சிகரெட்டைப் பொருத்திப் பற்ற வைத்தார். குற்றவாளி நிதானமாகப் புகையை ஓர் இழுப்பு இழுத்துவிட்டு, விலங்கிடப்பட்ட தனது கையை உயர்த்தி வாயிலிருந்த சிகரெட்டை எடுத்துக்கொண்டே “இந்தக் கைவிலங்கு மிகவும் இறுக்கமாக இருக்கிறது” என்றார். கைவிலங்கைத் தளர்த்திப் பூட்டுவதற்கு ஒரு காவலர் முயற்சித்தார். மரச் சிற்பத்தை இயக்கவிருக்கும் சார்ல் செவாலியரும் அவரது உதவியாளரான இளைஞரும் அப்போது குற்றவாளிக்கு வலதுபுறத்தில் நின்றிருந்தார்கள். கை விலங்கைத் தளர்த்தும் காவலரின் முயற்சி வெற்றியளிக்காததால், விலங்கை அகற்றிவிட்டுக் குற்றவாளியின் கைகளைக் கயிற்றால் பிணைப்பதற்குத் தீர்மானித்தார்கள். குற்றவாளியின் கைவிலங்கு அகற்றப்பட்டதும் சார்ல் செவாலியர் குற்றவாளியின் தோளைத் தட்டிக்கொடுத்து “பார் தம்பி… இப்போது நீ சுதந்திரமாக இருக்கிறாய்” என்று சொன்னபோது, மாவெலி திடுக்குற்றுப் போனார். அவர் ஓரக் கண்ணால் குற்றவாளியைப் பார்த்தார். குற்றவாளி எதையோ யோசித்தவாறு அமைதியாக உட்கார்ந்திருந்தார். ஒருவேளை அவர் பிறந்து வளர்ந்த துனிஷியா நாட்டை அவர் நினைத்திருக்கக் கூடும். தன்னுடைய பால்ய வயது ஞாபகங்களை மீட்டிப் பார்த்திருக்கக் கூடும். தான் கடந்துவந்த மெடிட்டரேனியன் கடலை அவர் நினைத்திருக்கக் கூடும். தன்னால் கொல்லப்பட்ட தனது முன்னாள் காதலியைக் கூட அவர் நினைத்திருக்கலாம். 

குற்றவாளியின் கைகள் சில நிமிடங்களுக்குப் பிணைக்கப்படாமல் இருந்தன. அவர் புகைத்துக்கொண்டிருந்த சிகரெட் முற்றாக எரிந்து முடிந்துவிட்டது. குற்றவாளி இன்னொரு சிகரெட் கேட்டபோது, அவருக்கு அது வழங்கப்பட்டது. அவர் இப்போது முடிந்தளவுக்கு மெதுவாகப் புகையை இழுத்தார். இனித் தப்பிக்க முடியாது. அந்த சிகரெட் முடியும்போது, அவரது வாழ்க்கையும் முடியவிருக்கிறது. நிலமையின் தீவிரத்தை இப்போதுதான் உணர்ந்தது போல குற்றவாளியின் முகம் இறுகிக்கொண்டே வந்தது. இந்த சிகரெட் எவ்வளவு நேரத்திற்குத்தான் எரியும் என்று மாபெலி நினைத்துக்கொண்டார்.

குற்றவாளி தனது வழக்கறிஞரைத் தனக்கருகே அழைத்துப் பேசினார். கிசுகிசுப்பான குரல்களிலேயே குற்றவாளியும் வழக்கறிஞரும் பேசிக்கொண்டார்கள். அவர்கள் பேசி முடித்தபோது, குற்றவாளியின் இரண்டாவது சிகரெட்டும் முழுவதுமாக முடிந்திருந்தது. குற்றவாளி அந்த நாற்காலியில் அமர்ந்து கால் மணி நேரம் ஆகிவிட்டது. 

அப்போது இளைஞரான ஒரு காவலர் தனது கைகளில் ஒரு குடுவையோடும் அழகிய கண்ணாடிக் கோப்பையுடனும் வந்து “நீ சிறிது ரம் அருந்த விரும்புகிறாயா?” என்று குற்றவாளியிடம் கேட்டார். ‘ஆம்’ என்பதுபோலக் குற்றவாளி மெதுவாகத் தலையசைத்தார். அந்தக் காவலர் கண்ணாடிக் கோப்பையில் பாதியளவுக்கு மதுவை ஊற்றிக் குற்றவாளியிடம் கொடுத்தார். குற்றவாளி மிக மிக மெதுவாக மதுவை உறிஞ்சி மிடறு மிடறாகக் குடித்தார். அவர் மதுவை அனுபவித்துக் குடிப்பது போன்று பாவனை செய்கிறார் என்பது மாபெலிக்குப் புரிந்தது. உண்மையில், குற்றவாளி தான் உயிருடன் இருக்கும் நேரத்தை நீடிக்கவே விரும்புகிறார். உயிரோடு இருப்பதற்கு மேலதிகமாக ஒரேயொரு விநாடி கிடைத்தால் கூட அந்த விநாடியையும் அவர் வாழ்ந்துவிட ஆசைப்படுகிறார் என்பது அங்கிருந்த எல்லோருக்கும் தெளிவாகவே புரிந்தது. 

நேரத்தை நீட்டிக்கும் முயற்சியில் குற்றவாளி என்னவெல்லாமோ செய்தார். தனது வழக்கறிஞரிடம் மீண்டும் பேசினார். வழக்கறிஞரிடமிருந்து ஒரு தாளை வாங்கிப் படித்துவிட்டு, அதைச் சுக்குநூறாகக் கிழித்து ஒரு சிறையதிகாரியிடம் கொடுத்து “தயவு செய்து குப்பையில் போடுங்கள்” என்றார். அந்த அதிகாரி குப்பையை வாங்கித் தனது காற்சட்டைப் பைக்குள் திணித்துக்கொண்டார். அந்த அதிகாரியிடம் “சிறையறையில் இருக்கும் என்னுடைய புத்தகங்களை என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று குற்றவாளி கேட்டார். “சட்டப்படி நடந்துகொள்வோம்” என்றார் அந்த அதிகாரி. அப்போது, குற்றவாளி இமாமைத் தனக்கருகில் அழைத்தார். இமாம் அரபு மொழியில் ஏதோ சொல்ல, குற்றவாளியும் ஏதோ சொன்னார். அப்போது மாபெலிக்கு அருகில் நின்றிருந்த அதிகாரி ஒருவர் “தன்னை ஹலால் முறையில் வெட்டுமாறு கேட்கிறானா அவன்” என்று எரிச்சலோடு முணுமுணுத்தது மாபெலிக்குத் தெளிவாகவே கேட்டது. மாபெலி சடாரெனத் திரும்பி அந்த அதிகாரியைப் பார்க்க, அந்த அதிகாரி அசட்டுத்தனமான இளிப்புடன் கண்களைத் தாழ்த்திக்கொண்டார்.

கண்ணாடிக் கோப்பையில் இப்போது ஒரு மிடறு மதுதான் எஞ்சியிருக்கிறது. அதைக் குடித்துவிட்டால் தனது வாழ்க்கை முடிந்துவிடும் என்பது குற்றவாளிக்கும் தெரியும். எனவே, குற்றவாளி தனது கடைசி முயற்சியைச் செய்தார். தனக்கு இன்னொரு சிகரெட் கொடுக்குமாறு மிகவும் பணிவாகவும் நிதானமாகவும் கேட்டார். ஒரு காவலர் இன்னொரு சிகரெட்டைக் குற்றவாளிக்கு வழங்க எத்தனித்தபோது, மரச் சிற்பத்தை இயக்கவிருக்கும் சார்ல் செவாலியர் குறுக்கிட்டார். அவர் தனது பொறுமையை இழக்கத் தொடங்கியிருந்தார். “இந்த மனிதனிடம் நாங்கள் ஏற்கனவே மிகவும் அன்பாகவும் கருணையாகவும் அளவுக்கு மிஞ்சிய மனிதாபிமானத்துடனும் நடந்துகொண்டிருக்கிறோம். இப்போது அவற்றுக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று அவர் சொன்னதும், அட்டர்னி ஜெனரல் தலையிட்டு சிகரெட் வழங்கப்படுவதைத் தடுத்து நிறுத்திவிட்டார். குற்றவாளி பணிவான குரலில் மறுபடியும் கேட்டார்:

“எனது கடைசிச் சிகரெட்டைத் தாருங்கள்”

அந்தக் குரல் மாபெலியின் இருதயத்தை நன்னியது. குற்றவாளி தெளிவான மனநிலையில் இருக்கிறார் என்பதில் மாபெலிக்கு எந்தச் சந்தேகமுமில்லை. இன்னொரு சிகரெட் புகைப்பதன் மூலம் மரச் சிற்பத்தில் படுப்பதை இரண்டு நிமிடங்கள் தாமதப்படுத்துவதைத் தவிர தன்னால் வேறெதுவும் செய்துவிட முடியாது என்பது குற்றவாளிக்குத் தெளிவாகப் புரிந்திருக்கிறது. உண்மையில், படுக்கைக்குச் செல்வதைத் தாமதப்படுத்த எல்லா வழிகளையும் பயன்படுத்தும் குழந்தையைப் போலத்தான் குற்றவாளியும் கில்லட்டின் படுக்கைக்குச் செல்வதைத் தாமதப்படுத்த எல்லா வழிகளிலும் முயன்றார்.

குற்றவாளி நாற்காலியில் அமர்ந்து இருபது நிமிடங்களாகிவிட்டன. இனியும் தாமதிக்க முடியாது என்பது போல குற்றவாளியைத் தவிர மற்ற எல்லோருமே ஆளை ஆள் பார்த்துக்கொண்டார்கள். கண்ணாடிக் கோப்பையிலிருந்த கடைசி மிடறு மதுவைக் குடிக்குமாறு ஓர் அதிகாரி குற்றவாளியை ஊக்கப்படுத்தினார். குற்றவாளி அதிகாரியின் கண்களை உற்றுப் பார்த்துவிட்டு, கண்ணாடிக் கோப்பையைக் கவிழ்த்து, கடைசி மிடறு மதுவை நிலத்தில் ஊற்றினார். ஒரு நிமிடம் அங்கே உண்மையான அமைதி நிலவியது. யாரும் எதுவுமே பேசவில்லை. குற்றவாளிக்கு இடது புறம் நின்றிருந்த மாபெலிதான் மவுனத்தைக் கலைத்தார். “நேரமாகிறது” என்று சிறையதிகாரியிடம் சொன்னார். 

நாற்காலியில் அமர்ந்திருந்த குற்றவாளியின் தோள்களை இரண்டு காவலர்கள் தங்களது வலுவான கைகளால் பற்றிப்பிடித்து, குற்றவாளியின் உடலைச் சற்றே இடது பக்கமாக மாபெலி நின்றிருந்த திசைக்குத் திருப்பினார்கள். உடனேயே வலது பக்கத்திலிருந்த சார்ல் செவாலியரும் அவரது உதவியாளரும் குற்றவாளியின் கைகளை ஆளுக்கொன்றாகப் பற்றிக் குற்றவாளியின் முதுகுக்குப் பின்புறமாக இழுத்துவைத்துக் கயிற்றால் கட்டத் தொடங்கினார்கள். அப்போது குற்றவாளியின் கண்கள் மாபெலியின் கண்களின் மீதிருந்தன. குற்றவாளியின் கண்களில் தெரிந்தது வேதனையா, இறைஞ்சுதலா, வெறுப்பா, ஆத்திரமா, குற்றவுணர்ச்சியா அல்லது இவை எல்லாமே அந்த ப்ரவுண் நிறக் கண்களில் இருந்தனவா என்பதை மாபெலியால் கண்டுபிடிக்க முடியவில்லை. கைகளைக் கட்டுவதற்குப் பதிலாகக் குற்றவாளியின் கண்களைக் கட்டிவிட்டால், தான் தப்பித்துக்கொள்ளலாம் எனக் குழந்தைத்தனமாக திருமதி. மாபெலி நினைத்துக்கொண்டார்.

குற்றவாளியின் கைகள் கட்டப்பட்டதும், சார்ல் செவாலியரின் உதவியாளர் ஒரு கத்தரிக்கோலை எடுத்து, குற்றவாளி அணிந்திருந்த சிறைச் சீருடையின் கழுத்துப் பகுதியை வெட்டத் தொடங்கினார். ஆனால், அவர் கோணல்மாணலாக அந்த நீலநிறச் சீருடையை வெட்டும்போது, கத்தரிக்கோலின் நுனி குற்றவாளியின் கழுத்துப் பகுதியில் குத்தி ஒரு சொட்டு இரத்தம் சிகப்பு மாணிக்கக் கல் போன்று குற்றவாளியின் பின்கழுத்தில் முகிழ்த்தது. அதைக் கண்டதும் குற்றவாளியைத் தவிர அங்கிருந்த எல்லோருமே பதறிப்போனார்கள். மாபெலி ‘அய்யோ’ என்று தன்னையறியாமலேயே சத்தம் போட்டுவிட்டார். சார்ல் செவாலியர் பாய்ந்து சென்று உதவியாளரிடமிருந்து கத்தரிக்கோலைப் பிடுங்கிக்கொண்டு “பன்றியே! உன்னால் ஒரு வேலையையும் சரிவரச் செய்ய முடியாதா? என்னுடைய வேலைக்கு உலை வைக்கவா பார்க்கிறாய் பைத்தியகாரப் பயலே” என அடங்கிய குரலில் உதவியாளரைத் திட்டினார். குற்றவாளி அப்போது அசையாமல் இருந்தார். சார்ல் செவாலியர் நீலநிறச் சீருடையின் கழுத்துப் பகுதியை இலாவகமாக வெட்டி எடுத்தார்.

இப்போது குற்றவாளியை எழுந்து நிற்குமாறு உத்தரவு பிறந்தது. குற்றவாளி மெதுவாக எழுந்து நின்று தலையைக் கவிழ்ந்து பூமியைப் பார்க்கிறார். அவர் இந்தப் பூமியில் எதை விட்டுச் செல்கிறார்? ஒரு மிடறு மதுவா?

நாற்காலிக்கு அருகிலிருந்த ஒற்றைக் கதவு திறக்கப்பட்டது. குற்றவாளியை அழைத்துக்கொண்டு இந்த ஊர்வலம் மரச் சிற்பத்தை நோக்கிச் சென்றது. சிறையின் உள் முற்றத்தில் மரச் சிற்பம் நிமிர்ந்து நிற்கிறது. குற்றவாளி அதைப் பார்ப்பதைத் தவிர்ப்பதற்காகக் கண்களை ஆகாயத்தை நோக்கி உயர்த்தினார். தனது கடைசிக் காட்சி ஆகாயமாக இருக்க வேண்டும் என்றுகூட அவர் விரும்பியிருக்கலாம். ஆனால், அந்தச் சிறை முற்றத்தில் கறுப்புத் திரை கட்டி ஆகாயம் மறைக்கப்பட்டிருந்தது. ஹெலிகொப்டரிலிருந்து யாராவது மரணதண்டனைக் காட்சியைப் படம் பிடிக்கலாம் என்பதால் ஆகாயத்தை மறைத்துவிட்டார்கள். சிறை முற்றத்தில் நிகழவிருப்பதை ஒரு சிறு பறவையால் கூடக் காண முடியாது. 

சார்ல் செவாலியர் ஒரு சிறிய செங்கம்பளத்தை எடுத்துவந்து திருமதி. மாபெலிக்கு முன்னால் தரையில் விரித்தார். குற்றவாளியின் செயற்கைக் காலை சார்ல் செவாலியரின் உதவியாளர் கழற்றி எடுத்தார். இப்போது குற்றவாளி நகரத் தொடங்கினார். கைகள் பின்புறமாக இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்த நிலையில், அவர் ஒற்றைக் காலால் துள்ளித் துள்ளிச் சென்று மரச் சிற்பப் பீடத்தில் தட்டுத் தடுமாறி ஏறிக் குப்புறப் படுத்துக்கொண்டார். அவர் இன்னொரு சிகரெட்டோ, குடி தண்ணீரோ கேட்டுவிடக் கூடாது என்று மாபெலி கடவுளை வேண்டிக்கொண்டார். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அங்கிருந்து அகன்றுவிடவே மாபெலி விரும்பினார். 

மரச் சிற்பம் உயிர்த்து அசைந்தபோது, அதன் ஆசனவாயிலிருந்து இரத்தம் பெருக்கெடுத்து வழிந்தது. வேறு வழியில்லை… இப்போது திருமதி. மாபெலி அந்த அழுக்குக் கூடையைப் பார்வையிட்டு அதனுள்ளே ஒரு தலை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சார்ல் செவாலியர் அந்தக் கூடையைத் தூக்கிக்கொண்டு வந்து மாபெலியிடமும், அட்டர்னி ஜெனரலிடமும் காண்பித்தார். பின்பு, கூடையிலிருந்து தலையை எடுத்துச் சென்று, செங்கம்பளத்தில் மெதுவாக வைத்தார். அவரின் உதவியாளார் குற்றவாளியின் செயற்கைக் காலை எடுத்துவந்து அந்தத் தலையின் அருகே வைத்தார். ஒரு மனித முகம் காலில் முளைத்திருப்பது போல அது இருந்தது.

3

இதைப் படிக்கும் உங்களாலேயே அனபெல் அம்மையாரின் கடைசி வார்த்தைகளிலிருந்து மீள முடியவில்லையென்றால், இதையெல்லாம் நேரிலே கேட்டுக்கொண்டிருந்த என்னுடைய மனம் என்ன நிலையில் இருந்திருக்கும் என்று சற்றுக் கற்பனை செய்து பாருங்கள். அதேவேளையில், இந்தக் கதையெல்லாம் அனபெல் அம்மையாருக்கு எப்படி இவ்வளவு துல்லியமாகத் தெரிந்திருக்கிறது என்ற குழப்பமும் என்னுள் எழுந்தது. இதுவொரு கற்பனைக் கதையாக இருந்தால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும் என்று என்னுடைய மனது தவிக்காமலில்லை. நான் அனபெல்லிடம் அதைக் கேட்டேவிட்டேன்.

“இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?”

அனபெல் அதே உணர்ச்சியற்ற குரலில் சொன்னார்:

“நீதிபதி மாபெலி அன்று அதிகாலை 5.10 மணிக்குத் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பினார். எழுதும் மேசையின் முன்னே உடனேயே உட்கார்ந்து, இரண்டு வெள்ளைத் தாள்களில் இதையெல்லாம் எழுதினார். எழுதிய தாள்களை எடுத்து மடித்து ஒரு கடித உறையினுள் வைத்து மூடி ஒட்டினார். அந்தக் கடித உறையைத் தனது மகன் ரெமியிடம் கொடுத்து, தன்னுடைய மரணத்தின் பின்பாக அதை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிடுமாறு சொன்னார். திருமதி. மாபெலி இறந்ததற்குப் பின்பாக அந்தக் கடித உறை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்பு, எப்படியோ அந்த இரண்டு தாள்களும் ஒரு பத்திரிகையில் பிரசுரமாகின. கலங்கரைவிளக்கத்திற்குப் பக்கத்திலுள்ள குப்பைத் தொட்டியிலிருந்து அந்தப் பத்திரிகையை நான் கண்டெடுத்தேன்.

அப்போது திடீரென ஒரு கேள்வி என்னுடைய மனதில் எழுந்தது. உடனடியாகவே அந்தக் கேள்வியை அனபெல்லிடம் கேட்டேன்: 

“தனது மரணத்திற்குப் பின்பு வெளியிடுவற்காக நீதிபதி. மாபெலி எழுதியது போலவே, தனது மரணத்திற்குப் பின்பு வெளியிடுவதற்காகக் குற்றவாளியும் எதையாவது எழுதி யாரிடமாவது கொடுத்து வைத்திருக்கலாமல்லவா?”

அப்போது பரிசாரகர் மதுக் கோப்பையைக் கொண்டுவந்து அனபெல் முன்னால் வைத்தார். அனபெல் எதுவும் பேசாமல் அந்தக் கோப்பையை எடுத்துப் பொறுமையாக அருந்திக்கொண்டிருந்தார். அவர் அருந்தும் விதத்தைப் பார்த்தால், இந்த ஒரு கோப்பை மதுவை தனது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அவர் மிடறு மிடறாகக் குடித்துக்கொண்டேயிருப்பார் என்றே எனக்குத் தோன்றியது. 

(இமிழ் – மார்ச் 2024)

 

https://www.shobasakthi.com/shobasakthi/2024/05/06/மரச்-சிற்பம்/

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹமிடா, ஏன் தனது மனைவியைக் கொன்றான்? அவன் நல்லவனா? கெட்டவனா? தெரியவில்லை. ஷோபா சக்தி அந்த விடயத்தை சாமர்த்தியமாகக் கடந்து சென்றிருக்கிறார்.

“மரணத்திற்குப் பின்பு வெளியிடுவதற்காகக் குற்றவாளியும் எதையாவது எழுதி யாரிடமாவது கொடுத்து வைத்திருக்கலாமல்லவா?” பதில் அனபெல் அருந்தும் கோப்பையில் இருந்த மதுவிடம் இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

ஹமிடா, ஏன் தனது மனைவியைக் கொன்றான்? அவன் நல்லவனா? கெட்டவனா? தெரியவில்லை. ஷோபா சக்தி அந்த விடயத்தை சாமர்த்தியமாகக் கடந்து சென்றிருக்கிறார்.

“மரணத்திற்குப் பின்பு வெளியிடுவதற்காகக் குற்றவாளியும் எதையாவது எழுதி யாரிடமாவது கொடுத்து வைத்திருக்கலாமல்லவா?” பதில் அனபெல் அருந்தும் கோப்பையில் இருந்த மதுவிடம் இருந்தது.

Wiki இல் கதை வேறாக உள்ளது! ஷோபாசக்தி சொற்களை வைத்து கதையை நன்றாகச் செதுக்கியிருக்கின்றார்.

https://en.wikipedia.org/wiki/Hamida_Djandoubi

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கிருபன் said:

Wiki இல் கதை வேறாக உள்ளது!

Wikiஇல் பார்த்தேன். ஷோபாசக்திக்கு ஹமிடாமேல் ஏன் ஒரு பிரியம் வந்தது என்பது புரியவில்லை. வாசிப்பவர்களுக்கு அவன் மேல் ஒரு பரிதாப உணர்ச்சி வருவதற்காக அப்படிச் சொல்லி இருக்கலாம்.  ஷோபா சக்தி அந்தவிடயத்தை அலசாமல் கடந்து சென்றிருந்தாலும் நன்றாகவே கதை சொல்லி இருந்தார்

1977இல் கில்லட்டின் கதை முடிவுக்கு வந்தது. ஏறக்குறைய அந்தக் காலத்தில்தான் ‘மண்டையில் போடுவது’ எங்களுக்குள் அறிமுகமானது

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஹமிடாவை குற்றவாளியாக காட்டாமல் ஹமிடா மேல் ஒரு அனுதாபத்தை ஏன் ஏற்படுத்தவேண்டும்? ம்ம்ம்… interesting!!!

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் நோக்கம் மரண தண்டனையின் கொடூரத்தை விபரித்து மரணதண்டனைக்கு எதிரான உணர்வை உருவாக்குவதுதான் என்று இமிழ் பற்றிய நீண்ட கட்டுரையில் ஷோபாசக்தி சொல்லியிருந்தார். ஹமிடாவின் பாரதூரமான குற்றங்களை கதையில் சொல்லாமல் விட்டது ஒரு உத்திதான். ஹமிடாவின் குற்றங்கள் என்ன என்று கேட்பவர்கள்  மரணதண்டனைக்கு உள்ளுறைந்த ஆதரவைக் கொண்டிருப்பவர்கள்! 

 

 

கண்ணன்.எம் அவர்களின் மேலான கவனத்திற்கு!

51-வது இலக்கியச் சந்திப்புக் கதைமலர் ‘இமிழ்’ தொகுப்புக்கு கடந்த வாரயிறுதியில் யாழ்ப்பாணத்திலும், சென்னையிலும் விமர்சனக் கூட்டங்கள் நிகழ்ந்து முடிந்திருக்கின்றன. இரண்டு கூட்டங்களிலும் உரையாற்றிய விமர்சகர்கள் அனைவருமே தொகுப்பை முழுமையாகப் படித்துவிட்டு விரிவாக உரையாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. 

இமிழ் தொகுக்கப்பட்ட முறை குறித்து நேர்மறையான, எதிர்மறையான இரண்டு வகை விமர்சனங்களுமே முன்வைக்கப்பட்டன. இதுவரை உலகத்தில் வெளிவந்துள்ள எல்லாத் தொகுப்புகளையும் போலவே இமிழிலும் விடுபடல்கள் உள்ளன. கதைத் தேர்வுகளைப் பொறுத்தவரை, நான் முன்பே விளக்கியிருப்பதைப் போன்று கதைகளைத் தேர்வு செய்யாமல் எழுத்தாளர்களையே தேர்வு செய்து கதைகளைக் கோரியிருந்தோம். கௌரிபாலன், கலாமோகன் போன்ற மூத்த எழுத்தாளர்கள் தொடக்கம், பிரமிளா பிரதீபன் போன்ற இளைய எழுத்தாளர்கள்வரைக்கும் தொகுப்புக்குள் அடக்கவே முயற்சித்துக் கதைகளைக் கோரியிருந்தபோதும், அது நிகழாமல் போனது வருத்தமே. தொகுப்பிலுள்ள கதைகளின் மீதான நேர்மறைக் கருத்துகளை மட்டுமல்லாமல், தொகுப்பிலுள்ள கதைகளின் வகைமை போதாமை, கச்சிதமின்மை, கலையமைதி இன்மை போன்ற எதிர்மறைக் கருத்துகளையும் விமர்சகர்கள் தங்கள் தங்களது பார்வையிலிருந்து முன்வைத்திருக்கிறார்கள். விமர்சனங்களைக் கூர்ந்து கவனித்துக்கொள்வோம். இலக்கிய விமர்சனம் இல்லாமல் இலக்கிய வளர்ச்சி கிடையாது.

கதைகள் மீதான விமர்சனங்களைப் பொறுத்தவரை, இலக்கிய விமர்சகர்களின் பாதையில் நான் குறுக்கிடுவதே இல்லை. ஏனெனில் ‘என்னுடைய கதையில் சொல்ல முடியாத எதையுமே கதைக்கு வெளியே என்னால் சொல்லிவிட முடியாது’ என்ற ஜெயகாந்தனின் வாக்கே எனக்கு எப்போதும் முன்மாதிரி. இதை நான் ஏற்கனவே பலதடவைகள் சொல்லியிருப்பது மட்டுமல்லாமல், பற்றுறுதியோடு கடைப்பிடித்தும் வருகிறேன். எனவே, விமர்சகர்களின் கருத்துகளைக் கூர்ந்து கவனித்து மனதில் பதிய வைத்துக்கொள்கிறேனே தவிர அவற்றுக்குப் பதிலளிப்பதில்லை. அந்த விமர்சனங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டவையின் பிரதிபலிப்பு என்னுடைய அடுத்த கதையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் நான் தவறுவதில்லை. 

எனினும், சென்னையில் நிகழ்ந்த விமர்சனக் கூட்டத்தில் உரையாற்றிய ஆய்வாளர் கண்ணன்.எம் (பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம்) தனது விமர்சன உரையிலும், தொடர்ந்து நடந்த கலந்துரையாடலிலும் சில கேள்விகளை முன்வைத்ததோடு மட்டுமல்லாமல், அதற்கான பதில்களையும் எதிர்பார்க்கிறார். அத்தோடு நிற்காமல், ‘எழுப்பப்படும் கேள்விகளுக்குப் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பதிலளிக்காமல் மவுனம் சாதிக்கிறார்கள்’ என்றொரு பதைபதைக்கும் குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார். மவுனம் என்பது சாவுக்குச் சமமல்லவா. இந்தக் குற்றச்சாட்டு புலம்பெயர்ந்த எழுத்தாளன் என்ற முறையில் என்னை நோக்கியும்தானே முன்வைக்கப்படுகிறது. ஆகவே, கண்ணன் அவர்களின் மேலான கவனத்திற்குச் சில குறிப்புகளை நான் சொல்ல வேண்டியிருக்கிறது.

பத்திரிகை நேர்காணல்களிலும், காட்சி ஊடகங்களிலும், கட்டுரைகளிலும், இலக்கியக் கூட்டங்களிலும், என்னுடைய புத்தக வெளியீடுகளிலும் எப்போதும் நான் ஓயாமல் பதில்களைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறேன். எனவே, கண்ணனின் ‘மவுனம்’ என்ற குற்றச்சாட்டு எனக்குப் பொருந்தாது. கண்ணன் எழுப்பிய ‘வாழ்பனுபவம்’, ‘இலக்கிய முன்மாதிரி’ போன்ற எல்லாக் கேள்விகளும் ஏற்கனவே கேட்கப்பட்டு என்னால் தமிழ், சிங்களம், மலையாளம், பிரெஞ்சு, ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளில் பதில் சொல்லித் தீர்க்கப்பட்டவையே. அந்தப் பதில்களையெல்லாம் நீங்கள் வேறெங்கும் தேடித் திரிய வேண்டியதில்லை. அவற்றில் ஒரு பகுதியை என்னுடைய இதே வலைத்தளத்தில் தொகுத்து வைத்திருக்கிறேன். இங்கிருக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட என்னுடைய நேர்காணல்களிலேயே அவற்றைக் கண்டு கொள்ளலாம். அத்தோடு, சமூக வலைத்தளங்களில் இதுவரை குறைந்தபட்சம் ஆயிரம் கேள்விகளுக்காவது பதிலளித்திருப்பேன். இதற்கு மவுனம் என்றா பெயர்? அவதூறுக் கைகளின் ஆயிரம் கேள்விகளுக்கு நான் பதிலளிக்காமல் தவிர்த்திருப்பேன். ஆனால், கண்ணன் போன்ற ஒருவரின் ஒரேயொரு கேள்விக்குக் கூட நான் பதிலளிக்காமல் விட்டதில்லை. இதைக் கண்ணன் கவனத்தில் குறித்துக்கொள்ள வேண்டும். நிறுவனங்களின் கோட்டை மதில்களுக்குள் அமர்ந்திருந்து எப்போதாவது ஒருமுறை பொதுவெளியில் வாய் திறக்கும் கண்ணன் போன்ற ஆய்வாளர்களுக்கு, காலம் முழுவதும் எத்தனையோ அச்சுறுத்தல்களுக்கும் தடைகளுக்கும் மத்தியிலும் பொதுச் சமூகத்திடம் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களின் குரல் ‘மவுனம்’ என்பதாகத் தெரிகிறதென்றால் இதெல்லாம் ‘எலிட்’ மனநிலைக் கோளாறு என்பதாக மட்டுமே என்னால் பொருள்கொள்ள முடியும்.

தன்னுடைய உரையில் என்னை நோக்கி அப்படி என்னதான் கண்ணன் புதுமையான கேள்விகளைக் கேட்டுவிட்டார்? தொகுப்பில் இடம்பெற்றுள்ள என்னுடைய ‘மரச் சிற்பம்‘ கதையில் என்னுடைய வாழ்பனுவம் எங்கேயிருக்கிறது என்ற அவருடைய கேள்வியைப் பரிசீலித்துவிடலாம். 

கண்ணன் தன்னுடைய உரையை ‘வாழ்பனுபவம் மட்டும்தான் இலக்கியமாக மாற முடியும்’ என்று அழுத்தமாகச் சொல்லியே ஆரம்பிக்கிறார். இலக்கியம் குறித்த இவரது இந்தப் புரிதலே அடிப்படையில் தவறானது என்று நான் கருதுகிறேன். கண்ணன் தன்னுடைய உரையில் சிறப்பான கதைக்கு உதாரணமாகச் சுட்டும் ‘சிற்பியின் நரகம்’ கதையில் புதுமைப்பித்தனின் வாழ்பனுபவமா பதிவாகியிருக்கிறது? ‘பரபாஸ்’ நாவலை எழுதிய பெர் லாகர்குவிஸ்ட் ஈராயிரம் வருடங்களுக்கு முன்பு ஜெருசலேமில் வாழ்ந்த வாழ்பனுவத்தால் அந்த நாவலை எழுதினாரா? சமகாலத்தில் எழுதப்பட்ட மைக்கல் ஒந்தாச்சி, அனுக் அருட்பிரகாசம் ஆகியோருடைய நாவல்கள் அவர்களது சொந்த வாழ்பனுபவமா? அவ்வளவு ஏன், கண்ணன்.எம் பிரெஞ்சு மொழியில் பதிப்பித்த ‘வாடிவாசல்’ நாவலை எழுதிய சி.சு. செல்லப்பா எந்த ஜல்லிக்கட்டில் இறங்கி மாடு பிடித்தார்? அவர் மாடு பிடிக்கும் வீரராக அல்லாமல், வத்தலகுண்டு பார்ப்பன சங்கத்தின் தலைவராக இருந்தவர். அந்த வாழ்பனுபவமா வாடி வாசல்?

வாழ்பனுபவங்களின் வழியே எழுதப்படும் புனைவுப் பிரதிகள் அதற்கான வலிமையையும் பெறுமதியையும் கொண்டுள்ளன என்பது உண்மைதான். அதேவேளையில் வாழ்பனுபவத்தை மட்டும் நம்பியே எழுதப்படும் கதைகள் இலக்கியரீதியாகத் தோல்வியுறுவதுமுண்டு. நாஸிப் பிரதிகளாக மாறுவதுண்டு. ஈழத்துச் சூழலிலேயே கூட இவ்வாறு மோசமான எழுத்துகளுண்டு. அது குறித்து நான் எழுதிய கட்டுரைகளும் என்னுடைய இதே வலைத்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. படித்துக்கொள்ளலாம்.

நேரடியான வாழ்பனுபவம் இல்லாவிட்டாலும் தேடுதல் – அறிதல் மூலம் எழுதப்படும் பிரதிகளும், முற்று முழுவதுமாகக் கற்பனையால் மட்டுமே உருவாக்கப்படும் பிரதிகளும் கூட மிகச் சிறப்பான இலக்கியப் பிரதிகளாக மிளிரக்கூடும் என்பதற்குத் தமிழிலிருந்தும் உலக இலக்கியங்களிலிருந்தும் எஸ்.பொன்னுத்துரை, மகாஸ்வேதா தேவி, ஜோர்ஜ் ஆர்வெல் என என்னால் ஆயிரம் உதாரணங்களைச் சொல்ல முடியும்.

இமிழ் தொகுப்பிலுள்ள கதைகள் எவற்றிலும் இரத்தமும் சதையுமான வாழ்பனுபமே இல்லை என்று கண்ணன் சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது என்றே தெரியவில்லை. போர் நிலத்தில் முப்பது வருடங்களாகச் சிக்குண்டு வாழ்ந்தவர்கள் போரைப் பற்றி எழுதியிருப்பதும், முஸ்லீம் எழுத்தாளர்கள் தங்களது சமூகத்தை, பண்பாட்டு வாழ்க்கையைக் குறித்து எழுதியிருக்கும் கதைகளும், தமிழகத்தில் ஈழ அகதி வாழ்க்கை குறித்து தொ.பத்திநாதனும் செந்தூரனும் எழுதியிருப்பதும் வாழ்பனுபவம் இல்லாவிட்டால் எதுதான் இரத்தமும் சதையுமான வாழ்பனுபவம்? சி.சு. செல்லப்பா மாடு பிடிப்பதா? ஜி. நாகராஜன் அவ்வப்போது சென்றுவந்த குறத்தி முடுக்கா?

இமிழ் தொகுப்பிலுள்ள ‘மரச் சிற்பம்’ கதையில் ஷோபாசக்தியின் வாழ்பனுபவம் எங்கேயிருக்கிறது என்று கேட்டால், அவர் தன்னுடைய இலங்கை வாழ்பனுவத்தை ‘கொரில்லா’ என்று எழுதத் தொடங்கி பிரான்ஸ் வாழ்பனுபவத்தை ‘ஸலாம் அலைக்’ வரை பக்கம் பக்கமாக எழுதிக் கொட்டிவிட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது முற்றுமுழுதாகக் கற்பனையின் வழியே அவர் அந்திக் கிறிஸ்து, அரம்பை, யாழ்ப்பாணச் சாமி போன்ற கதைகளையும் எழுதியிருக்கிறார். ‘இச்சா’ நாவலில் கற்பனையாக ஒரு நாட்டை மட்டுமல்லாமல் ‘உரோவன்’ என்ற மொழியையும் உருவாக்கியிருக்கிறார். ஓர் எழுத்தாளர் எவ்வளவு வீச்சாக மூச்சடக்கிக் கற்பனைக் கடலில் மூழ்கினாலும், மூச்சுவிட மேலே வரும்போது வெளிப்படும் மூச்சுக்காற்று வாழ்பனுபவத்தின் கீற்றாகவே இருக்கும். அதனால்தான் ஒவ்வொரு எழுத்தாளர்களின் கற்பனைகளும் தம்மளவில் வேறுபடுகின்றன. அவர்களது அக்கறைகளும் வேறுபடுகின்றன. வாழ்பனுபவம் என்பது சாக்கு மூட்டையல்ல சுமந்து செல்வதற்கு. ஒருவருக்கு வாழ்க்கையின் ஒவ்வொருநொடியும் வாழ்பனுபவங்களே. எழுத்தாளருக்கு உறக்கத்தில் வரும் கனவும் வாழ்பனுபவமே. அதை இலக்கியமாக மாற்ற அவருக்குத் தெரியும்.

என்னுடைய ‘மரச் சிற்பம்’ சிறுகதை மரணதண்டனையைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு கதை. ‘மரணதண்டனையோடு உனக்கு வாழ்பனுபவம் இருக்கிறதா?’ என்று கண்ணன் கறாராக என்னை நோக்கிக் கேள்வி கேட்காததற்கு அவரது கருணையுள்ளம் மட்டுமே காரணமாக இருக்கும் என நம்புகிறேன். எனினும், என்னுடைய பிரான்ஸ் வாழ்பனுபவம் ஏன் கதைகளாக மாறவில்லை என்று கண்ணன் கேட்கிறார். அதெல்லாம் நிறையவே எழுதியிருக்கிறேன் என்று சொல்லி என்னால் தப்பிக்க முடியாது போலிருக்கிறது. ஏனெனில், பிரெஞ்சு மொழிக்கும் மனிதர்களுக்கும் எனக்குமான தொடர்புகள் என்ன? பிரெஞ்சுப் பண்பாட்டின் செழுமையை நான் உள்வாங்கியிருக்கிறேனா? என்று கண்ணன் கேள்விமேல் கேள்வியாகக் கேட்கிறார். இவையும் எனக்குப் புதிய கேள்விகளல்ல. அய்ந்து வருடங்களுக்கு முன்பாக பிரெஞ்சுக் குடியுரிமை கேட்டு நான் விண்ணப்பிக்கும்போது, திரும்பத் திரும்ப இதே கேள்விகளைத்தான் (பிரெஞ்சு பண்பாடு, பிரெஞ்சு மொழி) என்னிடம் காவற்துறை அதிகாரி கேட்டார். ‘ஒரு பண்பாட்டுச் செழுமை மயிரும் என் கண்களுக்குத் தெரியவில்லை அய்யா, நான் பிரெஞ்சுச் சமூகத்தில் மனிதர்களுடன் கலந்துவிடத் தயாராகவேயுள்ளேன்… ஆனால், அவர்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளத் தயாரில்லை’ என்று நான் மனதிற்குள் நினைத்துக்கொண்டாலும், பிரஞ்சுப் பண்பாட்டுச் செழுமை குறித்துப் பத்து நிமிடங்கள் நான் உரையாற்றி வெற்றிகரமாகத் தேர்வை முடித்தேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். இங்கேயும் என் கற்பனைத் திறன் என்னைக் கைவிடவில்லை.

கண்ணன் பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் முக்கியமான பதவியிலிருப்பவர். இதன் வழியாக அவர் பிரெஞ்சுப் பண்பாட்டுச் செழுமை குறித்து அறிந்திருக்கலாம். பிரெஞ்சு மனிதர்கள் குறித்து அறிந்திருக்கலாம். நானோ பத்தாம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு, போலிப் பாஸ்போர்ட்டில் இலக்கில்லாமல் தற்செயலாகப் பிரான்ஸை சென்றடைந்த அரசியல் அகதி. என்னை விமான நிலையத்தில் பிரெஞ்சுப் பண்பாடு அடித்து உதைத்தே வரவேற்றது. அகதியாகத் தெருவில் விட்டது. இன்றுவரை அந்நியனாக வைத்திருக்கிறது. நிற வேற்றுமை பாராட்டுகிறது. எந்த நேரத்திலும் குடியுரிமையைப் பறித்துவிட்டு திரும்பவும் ஸ்ரீலங்காவுக்கு அனுப்பலாம் என்ற சட்டக் கத்தி தலைக்கு மேல் தொங்குகிறது. எனவே பிரெஞ்சுப் பண்பாடு பற்றிய எனது பார்வையும் வாழ்பனுபவமும் பிரெஞ்சு நிறுவன ஆய்வாளர் கண்ணனின் பார்வையும் ஒன்றாக இருக்க வாய்ப்பேயில்லை. இதையெல்லாம் ஏதோ ஒரு இதுக்காக நான் இட்டுக்கட்டிச் சொல்கிறேன் என நினைத்துவிடாதீர்கள். பிரெஞ்சு மொழியில் வெளியான எனது சுயசரிதை Shoba – Itinéraire d’un réfugiéநூலில் இவற்றையெல்லாம் தெள்ளத் தெளிவாக விபரித்துள்ளேன். பிரான்ஸின் முக்கிய பதிப்பகமான Le livre de poche வெளியிட்டுள்ளது. அடுத்ததாக ஆட்சிக்கு வெள்ளை இனவாதியான மரி லூபென் வந்தால் வழக்கு வரவும் எல்லா வாய்ப்புகளுமுள்ளன. அவர் ஆட்சிக்கு வருவது சாத்தியமற்ற ஒன்றல்ல. ஏற்கனவே மாகாண அளவில் ஆட்சியிலிருக்கிறார். கடந்த தேர்தலில் பிரெஞ்சுப் பண்பாட்டுச் செழுமையின் வழியே 35 விழுக்காடு மக்கள் அவருக்கு வாக்களித்திருந்தார்கள். மிகுதிப் பண்பாடு கடைந்தெடுத்த வலதுசாரி இம்மனுவல் மக்ரோனுக்கு வாக்களித்து இடதுசாரிகளை செயின் நதியில் தள்ளிச் சமாதி கட்டியது.

அகதிகள், வெளிநாட்டவர்கள் மீது போடப்பட்டுக்கொண்டேயிருக்கும் புதிய சட்டங்கள், குடியேறும் வெள்ளையர்களற்ற மனிதர்கள் நாய் போல தெருக்களில் அவ்வப்போது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்படுவது, புதிய அகதிகளுக்குக் கதவடைப்பு, கடல் கடந்த மாகாணங்கள் (France d’outre-mer) என்ற பெயரால் இன்றுவரை காலனிகளை வைத்திருப்பது என்று பிரஞ்சின் பண்பாட்டுக் கதவுகள் மூடப்பட்டுக்கொண்டே வருகின்றன. அந்தக் கதவில் இறுகிய பூட்டைப் போடுவதற்கு வெள்ளை இனவாதிகள் காத்திருக்கிறார்கள். ஓர் அகதி மனிதனாக எனக்கு இது ஆபத்தான பண்பாடு.

பிரெஞ்சுச் சமூகத்தில் கலக்காமல் அகதிகள் தனித்த தீவாக இருக்கிறோமா? 

அப்படியெல்லாம் இருந்து என்னதான் சாதிக்கப் போகிறோம்! எங்களுக்குப் பிரெஞ்சுச் சமூகத்தில் கலக்க ஆசையில்லையா என்ன? என்னைப் பொறுத்தவரை அதற்கான எல்லா முயற்சிகளும் எடுத்திருக்கிறேன். அவர்களுடன்தான் வேலை செய்கிறேன். அவர்களுடன்தான் சினிமாக்களில் நடிக்கிறேன். அவர்களுடன்தான் தேசிய நாடக அரங்கத்தில் பிரெஞ்சு மொழியில் நாடகம் நடிக்கிறேன். என்னுடைய புத்தகங்களை மொழிபெயர்ப்பில் அவர்களுக்குக் கொடுக்கிறேன். அந்தப் புத்தகங்களுக்காக நடத்தப்படும் கூட்டங்களில் முகம் சுழியாது கலந்துகொண்டு, பிரெஞ்சுப் பண்பாட்டின் வழியே புன்னகையுடன் குரல் உயர்த்தாமல் பொறுமையாகக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறேன். ஆனால், இங்கே நான் அந்நியன்தான். பிரெஞ்சுச் சமூகம் தன்னுள்ளே நுழைய என்னை அனுமதிக்கவில்லை. ஓர் அகதியாக, முன்னாள் போராளியாக என்னுடைய அனுபவங்களும் ஒரு கலைஞனாக என்னுடைய திறனும் மட்டுமே அவர்களுக்குப் போதுமானது. பிரான்ஸில் வாழும் வெள்ளையரல்லாத எந்த எழுத்தாளரிடமும் கலைஞரிடமும் வந்து கேட்டாலும் நான் சொல்வதையே சொல்வார்கள். இதுதான் எங்களின் வாழ்பனுபவம். வெள்ளை இனவாதிகள் திரும்பவும் நாஸி காலத்திற்குத் திரும்பிச் செல்லத் தீவிரமாக முயற்சிக்கிறார்கள். இதன் வழியாகத்தான் என்னுடைய ‘மரச் சிற்பம்’ கதை உருவாகியது. இந்த வாழ்பனுபவம் போதுமானதா இல்லையா? சொல்வதற்கு இன்னும் நிறையவே உள்ளன.

‘மரச் சிற்பம்’ கதை நிகழும் காலம் 1977. அப்போது நான் பிரான்ஸுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் கதையில் இடம்பெறும் சம்பவத்தில் எனக்கு நேரடியாக அனுபவம் கிடையாது. எனக்கு மட்டுமல்ல, அந்த மரணதண்டனை இரத்தச் சடங்கு நிகழ்த்தப்பட்ட முறை குறித்து அந்தக் கொடிய சடங்கில் கலந்துகொண்ட முப்பது பேர்களைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது. பிரெஞ்சுப் பண்பாட்டை விளங்கிக்கொண்ட, விளங்கிக்கொள்ளாத யாருக்குமே தெரியாது. இந்த மரணதண்டனை நிகழ்ந்து 36 வருடங்களுக்குப் பின்புதான், எவ்வாறு கொடிய முறையில் அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது சடங்கை முன்நின்று நடத்திய நீதிபதியின் இரண்டு பக்கக் கடிதம் வழியாக 2013-ல் பிரெஞ்சு பொதுச் சமூகத்திற்குத் தெரிய வந்தது. நல்லவேளையாக அப்போது நான் பிரான்ஸில் இருந்தேன். அந்த இரண்டு பக்கக் கடிதம் எனக்குள் ஏற்படுத்திய உணர்வும், தற்கால பிரெஞ்சு அரசியல் செல்நெறியும்தான் எனது இருபது பக்கக் கதை உருவாகக் காரணமாக இருந்தன. ஆனால் ‘விக்கிபீடியாவில் ஒரு சொடுக்குச் சொடுக்கினால் இந்தக் கதை தெரிந்துவிடும்’ என்கிறார் ஆய்வாளர் கண்ணன். விக்கிபீடியாவில் சொடுக்கினால் எதுதான் தெரியாது? எல்லாமேதான் உள்ளன. விக்கிபீடியாவில் புத்தரைப் பற்றி ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அந்தத் தகவல்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஹேர்மன் ஹெசேயின் ‘சித்தார்த்தா’ போன்றதொரு நாவலை எழுதிவிட முடியுமா என்ன! ஆய்வுக் குறிப்புகளும், தேடுதல்களும் கூட முழுமையாக உதவப் போவதில்லை. இந்தத் தரவுகளின் மேல் கட்டி எழுப்பப்படும் கற்பனையும் உணர்ச்சிகரமான சித்திரிப்புமே புனைவுப் பிரதிக்கு மிக அடிப்படையானது. 

‘மரச் சிற்பம்’ கதையில் கில்லட்டினால் தலை வெட்டப்படுபவன் ஒரு துனிஷியா நாட்டு இளைஞன். அவன் தன்னுடைய பிரெஞ்சுக் காதலியைக் கொன்றதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி. அவன் குற்றவாளி என்று அழுத்தமாகவே நான் கதையில் குறிப்பிடுகிறேன். ஆனால் ‘கொலையுண்ட பெண்ணுக்குக் கதையில் ஏன் இடமில்லை?’ என்ற கேள்வியைக் கண்ணன் எழுப்பியிருக்கிறார். இந்தக் கேள்விதான் ஓர் ஆய்வாளருக்கும் ஓர் எழுத்துக் கலைஞனுக்குமுள்ள இடைவெளியின் தூரமோ என்று எனக்கு அய்யம் ஏற்படுகிறது.

நான் நூற்றுக்கணக்கான மரணதண்டனைகளை என் தாய்நிலத்தில் பார்த்துவிட்டு, போரிலிருந்து தப்பித்து பிரான்சுக்கு வந்தவன். எனக்குள் மரணதண்டனை குறித்த கேள்வி எப்போதுமே இருந்துகொண்டிருக்கும். என்னுடைய பல கதைகளிலும் நாவல்களிலும் கட்டுரைகளிலும் இது குறித்து நான் விசாரணை செய்துகொண்டேயிருப்பவன். பிரான்ஸில் 1977-ம் வருடம் வரை கில்லட்டின் கொலைக் கலாசாரம் நீதியின் பெயரால் சட்டமாக இருந்ததை அறிய வந்தபோது எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. இந்தச் செய்தியை அறிந்ததிலிருந்து என்னுடைய பல பிரெஞ்சு நண்பர்களிடம் இது குறித்து விசாரித்தேன். எல்லோருமே அறிவுத்துறை சார்ந்த நண்பர்கள்தான். ஒரேயொருவருக்கு மட்டுமே 1970-கள் வரை கில்லட்டின் கலாசாரம் பிரான்ஸில் நடைமுறையில் இருந்தது தெரிந்திருந்தது. அவருக்கும் அதற்கு மேல் விபரங்கள் தெரியவில்லை. பிரான்ஸில் நிகழ்ந்த அந்தக் கடைசி கில்லட்டின் கொலை குறித்து பிரெஞ்சு இலக்கியங்களில் ஏதும் பதிவிருப்பதாகத் தெரியவில்லை. அநேகமாக அந்தச் சம்பவத்தைப் பற்றி எழுதப்பட்ட முதலாவது சிறுகதை என்னுடைய கதையாகத்தான் இருக்கும். இனி இந்தக் கதை பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானால்தான், பிரெஞ்சுப் பண்பாடு தன்னுடைய கடைசி மரணதண்டனையின் கொடூரச் சித்திரம் குறித்துத் தெரிந்துகொள்ளும் என்றே நினைக்கிறேன்.

‘குற்றத்தை விடத் தண்டனையே வெறுக்கத்தக்கது’ என்ற ஒற்றை வாக்கியத்தில்தான் என்னுடைய கதை கட்டியெழுப்பப்பட்டது. இந்த வாக்கியத்தைச் சொன்னவர் விக்டர் ஹியூகோவா, அல்பேர் கமுயுவா அல்லது வேறொருவரா என்பது என் ஞாபகத்திலில்லை. ஆனால், அந்த வாக்கியம் மட்டும் என் நெஞ்சில் ஆழப் பதிந்துள்ளது. ‘காந்தியாரின் கொலையைக் கண்டிக்கும் அதே வேளையில், கோட்சேக்கு அளிக்கப்பட்ட மரணதண்டனையையும் நாம் கண்டிக்க வேண்டும்’ என்று அ.மார்க்ஸ் ஒருமுறை எழுதினார். மேற்கண்ட இந்தக் கருத்துநிலைகளில் நின்று எழுதப்பட்டதுதான் ‘மரச் சிற்பம்’.

குற்றவாளியால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட பெண்ணுக்கு ஏன் கதையில் இடமில்லை? ஏனெனில், இது அவரைப் பற்றிய கதையில்லை. அவரைப் பற்றி இன்னொரு கதையில் எழுதலாம். இந்தக் கதையோ ‘குற்றத்தைவிடத் தண்டனையே வெறுக்கத்தக்கது’ என்பதைச் சொல்ல எழுதப்பட்ட கதை. கண்ணனைப் போல் இன்னொரு ஆய்வாளர் ‘கில்லட்டினை இயக்கிய தொழிலாளியின் மனநிலை ஏன் கதையில் பதிவாகவில்லை?’ என்றும் கேட்கலாம். அதற்கு மேலுமொரு கதை எழுதவேண்டும். ஒரே கதையில் எல்லாக் குரல்களும் பதிவாகவில்லை என்றால் அது மற்றைய குரல்களை நிராகரிப்பதாக அர்த்தமாகாது. அந்தக் குரல்களுக்கு இன்னொரு கதையில் இடமிருக்கும். அந்தப் பெண்ணைப் போல சித்திரவதை செய்து கொல்லப்பட்ட எத்தனையெத்தனையோ பெண்களை எனது கதைகளில் நீங்கள் படித்திருப்பீர்கள். குறிப்பாக, ‘ஆலா’வை மறந்திருக்கமாட்டீர்கள் என்றே நம்புகிறேன். ஆய்வாளர்கள் வேண்டுமானால் ஒரு சிறுகதைக்குள்ளேயே அனைத்துக் குரல்களையும் தரிசிக்க ஆசைப்படலாம். அது இலக்கிய வடிவரீதியாக எழுத்துக் கலைஞருக்குச் சாத்தியப்படாது. அவ்வாறு சாத்தியப்பட்டதொரு சிறுகதை இதுவரை உலகில் எங்கும் எழுதப்பட்டதில்லை.

மரண தண்டனையின் கொடூரத்தைப் பேசும் போது, ‘குற்றவாளியால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையைப் பார்க்க வேண்டாமா?’ என்ற கேள்விகளை நாம் கடந்த காலங்களில் அதிகமாக எதிர்கொண்டிருக்கிறோம் அல்லவா. குறிப்பாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இந்தக் குரல்கள் அதிகமாகக் கேட்டன. மரண தண்டனை விஷயத்தைப் பொறுத்தவரை இந்த வகைக் கேள்விகளில் உள்ளுறைந்திருப்பது மரண தண்டனை ஆதரவே. அதற்காக கண்ணன் மரண தண்டனை ஆதரவாளர் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. ஆனால், அவரது கேள்வியின் தொனி இந்த இடத்திற்குத்தான் அவரை இழுத்து வருகிறது.

‘இந்தக் கதையை கேள்வி அனுபவத்தால் எழுதினால் ஆயிற்றா? இதில் எங்கேயிருக்கிறது ஷோபாசக்தியின் வாழ்பனுபவம்?’ என்ற கண்ணனின் கேள்விக்கு இலக்கிய உலகத்திலே ஏதாவது பொருளிருக்கிறதா எனத் தெரியவில்லை. அவர் கதைகளை அல்லாமல் சுயசரிதைகளையே இலக்கியம் என்று நம்பிக்கொண்டிருக்கிறரா? ஓர் உதாரணத்தால் இதற்குப் பதிலளிக்கலாம் என நினைக்கிறேன். 

கவிஞர் பப்லோ நெருடா இலங்கையில், சிலி நாட்டின் ‘கொன்ஸலேட்’ அலுவலகத்தில் பிரதிநிதியாக இருந்த காலத்தில், அவரது வீட்டில் பணி செய்த ஒரு பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்தார். இது நாற்பத்து மூன்று வருடங்களுக்குப் பின்பு, 1974-ல் பப்லோ நெருடாவின் சுயசரிதை வெளியாகும்வரை வெளியுலகத்திற்குத் தெரியாது. சுயசரிதை நூலில் கூட அரைப் பக்க அளவுக்குத்தான் இது குறித்து நெருடா எழுதியிருப்பார். அந்தப் பெண்ணின் பெயர், ஊர் விபரங்கள் எல்லாம் அந்தக் குறிப்பில் கிடையாது. இந்த அரைப் பக்கக் குறிப்பை வைத்துக்கொண்டே சிங்களத்தில் ஒரு சிறுகதை எழுதப்பட்டது. இதை வேறொரு கோணத்தில் அணுகிய இயக்குனர் அசோக ஹந்தகம ‘அல்போராடா’ என்றொரு திரைப்படத்தை எடுத்தார். இவை இரண்டுமல்லாத இன்னொரு பார்வையில் நான் கருங்குயில்என்றொரு கதையை எழுதினேன். எங்கள் மூவரிடமுமிருந்தது பப்லோ நெருடா எழுதிய வெறும் அரைப் பக்கக் குறிப்புத்தான். என்னுடைய தேடுதல் வழியாக, அந்தப் பெண் பழைய டச்சுக் கால்வாய்க்கு அருகேயிருந்த ‘பம்பலவத்த’ என்ற குடியிருப்புப் பகுதியில் வாழ்ந்திருக்கிறார், அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர், பேராசிரியர் க. கைலாசபதி வெள்ளவத்தையில் குடியிருந்த வீட்டுக்கு அருகிலிருந்த வீட்டில்தான் பப்லோ நெருடா வசித்திருக்கிறார் போன்ற குறைந்தபட்சத் தகவல்களே எனக்குக் கிடைத்தன. அதற்கு மேல் கற்பனையால்தான் நான் கதையை வளர்த்துச் சென்றேன். இந்தக் கதையைப் பொறுத்தளவில் சிங்களத்தில் கதையெழுதிய திஸ்ஸ தேவேந்திராவுக்கோ திரைப்படமெடுத்த அசோக ஹந்தகமவுக்கோ எனக்கோ சுத்தமாக வாழ்பனுபவம் கிடையாதுதான். ஆனால், இவ்வாறு குறிப்புகள், வாய்வழிச் செய்திகள் வழியாக அறிந்து எழுதப்படும் கதைகளுக்கு இலக்கியத்தில் இடமில்லையா என்ன! உலக இலக்கியம் முழுவதிலுமே இவ்வகையாக எழுதப்படும் கதைகள் உள்ளன. இவ்வகையாக உருவாக்கப்படும் நாடகங்களும், திரைப்படங்களும் உள்ளன. பிரசன்ன விதானகேயின் Death on a Full Moon Day திரைப்படம் கூட இதற்குச் சிறந்த உதாரணம். ஒரு துண்டுப் பத்திரிகைச் செய்தியிலிருந்து அவர் ஆகச் சிறந்த திரைப்படத்தை உருவாக்கியிருந்தார். உங்களுக்குப் போரைப் பற்றி என்ன தெரியும்? நீங்கள் இராணுவத்தில் இருந்தீர்களா? வாழ்பனுபவம் இல்லாமல் எப்படி உங்களால் படம் எடுக்க முடியும்? என்றெல்லாம் பிரசன்ன விதானகேயிடம் கோணல்தனமாகக் கேட்டால் ‘கட்ட வாப்பாங்’ என்றுதான் அவர் சொல்வார்.

‘இமிழ் தொகுப்பில் எழுதியிருப்பவர்கள் எல்லோருமே பாப்புலர் நடையில் எழுதும் சுஜாதாவையும் சுந்தர ராமசாமியையும் ஜெயமோகனையும் எஸ்.ராமகிருஷ்ணனையுமே பின்பற்றியிருக்கிறார்கள்’ என்று கண்ணன் ஒற்றை வார்த்தையில் சொல்லிச் செல்வதெல்லாம் இலக்கியத் திறனாய்வு கிடையாது. சுஜாதாவின் எழுத்துநடை பாப்புலர் நடை என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்காது. ஆனால், மற்றைய மூவரையும் பாப்புலர் நடையில் எழுதுபவர்கள் எனச் சொல்வதெல்லாம் வெறும் சீண்டலே தவிர திறனாய்வு கிடையாது. அதேவேளையில் ‘பாப்புலர் நடையை நான் குறைத்து மதிப்பிடவில்லை’ என்று வேறு கண்ணன் தன்னுடைய உரையில் சொல்கிறார். அந்த நடை இலக்கியத்திற்கு ஆகாது என்றும் சொல்கிறார். ஒரு குழப்பமான உரைதான் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்.

கண்ணனுடைய உரையைத் தொடர்ந்த கேள்வி -பதில் நிகழ்வில் ‘இலங்கைத் தமிழர்கள் சாதி குறித்துப் பேசவே மறுக்கிறார்கள்’ என்று கூடுதலாக ஒரு குற்றச்சாட்டையும் கண்ணன் வைத்திருந்தார். அதாவது, அவரது ஆய்வு நிறுவனம் நடத்திய ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கைப் பேராளர்கள் சாதி குறித்துப் பேசவே மறுத்ததாக ஆதாரமும் சொன்னார். இது ஆய்வு நிறுவனத்துக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கும் கிணற்றுத் தவளைப் பார்வை. கொஞ்சம் வெளியே வந்தும் கண்ணன் கண்திறந்து பார்க்க வேண்டும். இலங்கையிலிருந்தும், புலம்பெயர் நாடுகளிலிருந்தும் வெளியான சிறுபத்திரிகைகளைக் கண்ணன் படித்ததில்லையா என்ன? சாதியக் கொடுமை குறித்து எழுதப்பட்ட நூல்களை, தன்வரலாறுகளைப் படித்ததில்லையா? கதைகளைப் படித்ததில்லையா? புலம்பெயர் நாடுகளில் ‘தலித் மாநாடுகள்’ நடத்தப்பட்டது அவருக்குத் தெரியுமா தெரியாதா? சாதியப் பிரச்சினைகளை முன்வைத்து ‘இருள்வெளி’, ‘சனதருமபோதினி’, ‘கறுப்பு’ போன்ற இலக்கியத் தொகுப்புகள் வந்ததை அவர் அறியமாட்டாரா? பிரான்ஸில் ‘தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’ என்றொரு அமைப்பு பல வருடங்களாக இயங்கிவருவதை அவர் அறியவில்லையா? ஒவ்வொரு இலக்கியச் சந்திப்பிலும் முக்கிய நிகழ்வாக ‘சாதிய விடுதலை’ குறித்த அமர்வு நிகழ்வதை அறியாரா? இமிழ் வௌியிடப்பட்ட 51-வது இலக்கியச் சந்திப்பில் கூட ‘இலங்கையில் சாதியம்’ என்றொரு அமர்வு நடத்தப்பட்டதே. இதையெல்லாம் கண்டுகொள்ளாமலிருக்குமாறு அவரது ஆய்வுக் கண்கள் எந்த வன்மத்தால் கட்டப்பட்டிருக்கின்றன?

இறுதியாக, என்னுடைய எழுத்துநடை சுஜாதாவைப் பின்பற்றிய பாப்புலர் நடை என்றொரு கண்டுபிடிப்பை கண்ணன் வெளியிட்டிருக்கிறார். கடந்த முப்பது வருடங்களாக யாருமே செய்யாத ஆய்வுக் கண்டுபிடிப்பு இது. அதாவது கண்ணனின் கூற்றுப்படி, பாப்புலர் நடையென்றால் கதையை வாசகனுக்கு விரிவாகப் புகட்டும் நடையாம். இந்த விமர்சனம் என்னைக் கொஞ்சம் சிந்திக்கத் தூண்டியது உண்மையே.

நான் எப்போதுமே கதைகளை மிக விரிவான சித்திரிப்புகளோடும் தரவுகளோடும் எழுதுபவன். கண்ணனுக்கு முன்பாக, இதே கூட்டத்தில் உரையாற்றிய அழகியபெரியவன் எனது இந்த அம்சத்தை எனது எழுத்தின் சிறப்பாகக் குறிப்பிட்டார். ஆனால், இதே அம்சம் கண்ணனுக்குக் குறையாகத் தெரிகிறது. இதைப் பாப்புலர் நடை என்கிறார். இந்த முறையில் எழுதுவது உள்ளே விசயங்களைப் பொதிந்து வைக்காது என்கிறார். உள்ளே பொதிந்து வைக்க நான் என்ன கள்ளக் கடத்தலா செய்கிறேன்? என்னுடைய ஒவ்வொரு சொல்லும் உணர்வும் வாசகர்களுக்குச் சிறு சேதமுமில்லாமல் கடத்தப்பட வேண்டும் என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். ஆரம்ப காலங்களில் சில இருண்மையான கதைகளை எழுதியிருந்தாலும், இப்போது மிக விரிவாகவும் தெளிவாகவும் எழுதவே நான் விரும்புகிறேன். ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் தான் நூல்களை மொழிபெயர்த்திருப்பதின் அனுபவத்தின் வாயிலாகத் தன்னுடைய கருத்தைச் சொல்வதாகக் கண்ணன் குறிப்பிட்டார். அதே மொழிகளில் என்னுடைய நூல்களும் கதைகளும் வெளியாகியிருக்கும் அனுபவம் என்னுடைய எழுத்துநடை பிசகற்றது என்று எனக்குச் சொல்கிறது. 

பொதிந்து வைத்து எழுதாமல் விரித்து எழுதுவதால் என்னுடைய எழுத்துகளில் வாசகருக்கு இடமில்லை என்று கண்ணன் சொல்கிறார். பொடி வைத்து எழுதுவதால், பொதிந்து வைத்து எழுதுவதால், திருகி எழுதுவதால்தான் கதையில் வாசகருக்கு இடமிருக்கிறது என்று நான் நம்பவில்லை. என்னுடைய உணர்ச்சியை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு முற்று முழுதாக வாசகரிடம் தெளிவாகக் கடத்திவிடுதாலேயே கதையில் வாசகருக்கு இடம் கிடைக்கிறது, கதை முடிந்த பின்பும் அவர் அதைத் தொடர்ந்து சென்றபடியிருக்கிறார் என்பதே எனது நம்பிக்கை. 

எழுத வந்த நாளிலிருந்தே ‘என்னுடைய கதைகள் அளவில் பெரிதான அரசியல் துண்டுப் பிரசுரங்களே’ எனப் பகிரங்கமாகப் பிரகடனம் செய்து எழுதிக்கொண்டிருப்பவன் நான். இதுவரை பேசப்படாத – சிக்கலான விடயங்களை எழுதுபவன். சமூகத்தின் கூட்டு நம்பிக்கைகளுக்கு எதிரான நிலையில் நின்று உண்மைகளைச் சொல்பவன். எனவே, என்னுடைய இந்தத் தெள்ளத் தெளிவான வெளிச்சமிடும் மொழிநடையே, எனது நோக்கத்தை எட்டுவதற்கான கூர்மையான கருவியாக எனக்குக் கைகொடுக்கிறது. 

இமிழ் விமர்சனக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியதற்காக தொகுப்பின் பதிப்பாசிரியர் என்ற முறையில் கண்ணன். எம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டு இங்கே நிறுத்திக்கொள்கிறேன். கண்ணன் விரும்பினால் தொடர்ந்து உரையாட நான் தயாராகவேயுள்ளேன்.

https://www.shobasakthi.com/shobasakthi/2024/05/07/கண்ணன்-எம்-அவர்களின்-மேல/

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//குற்றத்தைவிடத் தண்டனையே வெறுக்கத்தக்கது’// 

அப்படியானால் குற்றம் செய்தவர்களுக்கு என்ன தண்டனை?

ஊரில் தான் பார்த்த மரண தண்டனை அனுபவங்களை எந்தவகையில் இப்படியான(ஹமிடா போன்ற மற்றும் இந்த மாதிரிக் குற்றங்களை செய்பவர்களை) ஒப்பிட நினைக்கிறார்..?

// மரண தண்டனையின் கொடூரத்தைப் பேசும் போது, ‘குற்றவாளியால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையைப் பார்க்க வேண்டாமா?’ என்ற கேள்விகளை நாம் கடந்த காலங்களில் அதிகமாக எதிர்கொண்டிருக்கிறோம் அல்லவா. மரண தண்டனை விஷயத்தைப் பொறுத்தவரை இந்த வகைக் கேள்விகளில் உள்ளுறைந்திருப்பது மரண தண்டனை ஆதரவே//

மரண தண்டனை கொடியது ..ஆனால் இந்த ஹமிடா போல Daher போல Night Stalker போல Ted Bundy போல இன்னமும் இவர்களைப் போன்ற கொலையாளிகளை என்ன செய்யச் சொல்கிறார்??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, P.S.பிரபா said:

இவர்களைப் போன்ற கொலையாளிகளை என்ன செய்யச் சொல்கிறார்??

தெரியாது!

200 வருடங்களுக்கு முன்னர் 1 பில்லியன் மக்கள் இருந்த இந்தப் பூமியில் இப்போது 8 பில்லியன் மக்கள் வாழ்கின்றார்கள்! மனிதர்களாக வாழத் தகுதியற்ற மிருக குணம் உள்ளவர்களை மரணதண்டனை வழங்கிக் கொல்வதில் எனக்கு தடுமாற்றம் எதுவுமில்லை!

பூமியில் மற்றவர்கள் நிம்மதியாக வாழ உதவும். கொஞ்சம் பாரமும் குறையும்!

large.IMG_7413.png.6337163565f1dc5e25b54e86ff317bee.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, P.S.பிரபா said:

//குற்றத்தைவிடத் தண்டனையே வெறுக்கத்தக்கது’// 

அப்படியானால் குற்றம் செய்தவர்களுக்கு என்ன தண்டனை?

ஊரில் தான் பார்த்த மரண தண்டனை அனுபவங்களை எந்தவகையில் இப்படியான(ஹமிடா போன்ற மற்றும் இந்த மாதிரிக் குற்றங்களை செய்பவர்களை) ஒப்பிட நினைக்கிறார்..?

// மரண தண்டனையின் கொடூரத்தைப் பேசும் போது, ‘குற்றவாளியால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையைப் பார்க்க வேண்டாமா?’ என்ற கேள்விகளை நாம் கடந்த காலங்களில் அதிகமாக எதிர்கொண்டிருக்கிறோம் அல்லவா. மரண தண்டனை விஷயத்தைப் பொறுத்தவரை இந்த வகைக் கேள்விகளில் உள்ளுறைந்திருப்பது மரண தண்டனை ஆதரவே//

மரண தண்டனை கொடியது ..ஆனால் இந்த ஹமிடா போல Daher போல Night Stalker போல Ted Bundy போல இன்னமும் இவர்களைப் போன்ற கொலையாளிகளை என்ன செய்யச் சொல்கிறார்??

 

நான் இந்தக் கதையில் கண்டது கில்லரின் மூலம் தலை வெட்டும் கொடூரமான முறை 1977 வரை பாவனையில் இருந்திருக்கிறது என்ற அதிர்ச்சியின் வெளிப்பாட்டைத் தான்.

ரெட் பன்ரி போன்ற கேஸ்களை சிறையில் வைத்துச் சாப்பாடு போடாமல் கொல்லத் தான் வேண்டும். ஆனால், அப்படிச் செய்யும் போது இன்னொரு ரெட் பன்ரியாக அரசும், சட்டத்துறையும் மாறக் கூடாதென நினைக்கிறேன். எனவே, குறைந்த வன்மம் கொண்ட, சித்திரவதை இல்லாத முறைகளைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அப்படி செய்தால், அரசுக்கு ஒரு moral high ground கிடைக்கும்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, இரு சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் மூன்று சிறார் உள்பட ஒன்பது பேர் கைதாகியுள்ளனர். கர்ப்பமாக உள்ள சிறுமியின் எதிர்காலம் என்னவாகும்? சிறுமிகளின் குடும்பத்தினர் சொல்வது என்ன? தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வழக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, 17 வயது சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்தபோது அச்சிறுமி கர்ப்பமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சிறுமியை அழைத்து போலீசார் விசாரித்தபோது சிறுமியை மூன்று சிறார்கள் உள்பட, ஒன்பது பேர் பாலியல் வன்புணர்வு செய்தது தெரிய வந்தது. மேலும், சிறுமியின் தோழியான 14 வயதான மற்றொரு சிறுமியையும் இந்தக் கும்பல் வன்புணர்வு செய்தது போலீசாருக்கு தெரிய வந்தது. தமிழகத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ள இந்தச் சம்பவத்தில், போக்சோ வழக்கின் கீழ் மூன்று சிறார்கள் உள்பட ஒன்பது பேரையும் போலீசார் கைது செய்து, இரு சிறுமிகளையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமிகளின் குடும்பத்தினர் சொல்வது என்ன, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எதிர்காலம் என்னவாகும் என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டு, போலீசார் மற்றும் சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசியது.   வழக்கு குறித்து போலீசார் சொல்வது என்ன? படக்குறிப்பு,பாலியல் வன்புணர்வு வழக்கில் 3 மைனர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என உடுமலைப்பேட்டை காவல்துறை தெரிவித்துள்ளது. உடுமலை அனைத்து மகளிர் போலீசார், நம்மிடம் வழக்கு விவரத்தையும் முதல் தகவல் அறிக்கை விவரங்களையும் பகிர்ந்துகொண்டனர். நம்மிடம் பேசிய போலீசார், ‘’பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்டு 17 வயதான சிறுமி 14 வாரம் கர்ப்பமாக உள்ளார். இந்தச் சிறுமியை அவர்களது குடும்பத்தினர் தத்தெடுத்து வளர்த்து வந்த நிலையில், பெற்றோர் இறந்துவிட்டனர்." "உறவினர் வழி சித்தியும், பாட்டியும்தான் இவரை வளர்த்து வந்துள்ளனர். 10ஆம் வகுப்பை பாதியில் நிறுத்தியுள்ள இச்சிறுமி, தங்களுக்குச் சொந்தமான வீட்டில் தனியாக வசித்துக்கொண்டு அவ்வப்போது பாட்டியைச் சென்று பார்த்து வருவார்,’’ என்றனர். மேலும், ‘‘கைது செய்யப்பட்டதில் முக்கியக் குற்றவாளியான ஜெயகாளீஸ்வரன், அச்சிறுமியை காதலித்து வந்தார். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியில் ஏமாற்றியுள்ளார். தனது நண்பர்களை அழைத்து வந்து சிறுமியை மிரட்டி அனைவரும் வன்புணர்வு செய்துள்ளனர். 17 வயதான சிறுமியின் தோழியான 14 வயது சிறுமியையும் அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்,’’ என்றனர். சிறுமிகளின் வழக்கில் தொடர்புடைய, ஒன்பது பேரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர். காவல்துறை அளித்த விவரங்களின்படி, மூன்று சிறார்கள் உள்பட ஜெயகாளீஸ்வரன் (19), மதன்குமார் (19), பரணிகுமார் (21), யுவபிரகாஷ் (24), பவபாரதி (22), நந்தகோபால் (19) ஆகிய 6 பேர் இந்த வழக்கில் கைதாகியுள்ளனர்.   என்னென்ன பிரிவுகளில் வழக்குப் பதிவு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளையும் 9 பேர் இணைந்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். (சித்தரிப்புப் படம்) வழக்கு தொடர்பாக நம்மிடம் பேசிய உடுமலை துணை காவல் கண்காணிப்பாளர் டி.எஸ்.பி சுகுமாறன், ‘‘2 சிறுமிகள் பாதிக்கப்பட்ட வழக்கில், வன்புணர்வு, கூட்டுப் பாலியல் வன்புணர்வு, மிரட்டல் விடுத்தது உள்பட போக்சோ சட்டத்தின் நான்கு பிரிவுகளின் கீழ் ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் 6 இளைஞர்கள் மற்றும் ஒரு சட்டத்திற்கு முரண்பட்ட சிறார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளது. மூன்று சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர், மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறுமிகளை காப்பகத்தில் வைத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள், சமூக நலத்துறையினர் பராமரித்து வருகின்றனர்,’’ என்றார். ‘‘தனியார் தங்கும் விடுதிகளில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் தங்குவதற்குப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், ஒரு தனியார் விடுதியில் வைத்து சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். விடுதி மீதும் நடவடிக்கை எடுத்து, வேறு விடுதிகளில் இதுபோன்ற அத்துமீறல்கள் நடக்கிறதா எனக் கண்காணிக்கிறோம்,’’ எனவும் டிஎஸ்பி சுகுமாறன் தெரிவித்தார். "இவ்வழக்கில் வேறு நபர்களுக்கும் தொடர்பு உள்ளதா? கைது எண்ணிக்கை அதிகரிக்குமா?" என்று டிஎஸ்பி சுகுமாறனிடம் கேட்டபோது, ‘‘இரு சிறுமிகளிடமும் வாக்கு மூலம் பெற்று நாங்கள் ஒன்பது பேரை கைது செய்துள்ளோம். சிறுமிகள் நீதிபதி முன்னிலையிலும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதிலும், ஒன்பது பேரைத்தான் குற்றவாளிகளாகக் கூறியுள்ளனர். இதனால், கைது அதிகரிக்க வாய்ப்பில்லை,’’ என்றார்.   சிறுமியின் குடும்பத்தினர் சொல்வது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டால் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். பாதிக்கப்பட்ட இரண்டாவது சிறுமியின் பாட்டி இந்தச் சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது, ‘‘எனது பேத்தி எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்பு செல்ல உள்ளார். தினமும் காலையில் பள்ளிக்கு அழைத்துச் சென்று, மாலையில் நான்தான் அவளை அழைத்து வருவேன்." "பேத்தி சிறு வயதாக இருக்கும்போதே தந்தை இறந்துவிட்டார். என் மகள் வேலைக்குச் சென்று விடுவதால் நான்தான் பேத்தியைப் பார்த்துக் கொள்வேன்." "கடந்த வாரம் உள்ளூர் திருவிழாவிற்கு வீட்டில் அனுமதியின்றி சென்றுவிட்டார். கோபத்தில் நானும் என் மகளும் பேத்தியை அடித்து அறிவுரை கூறினோம். அப்போது, எங்களிடம் கோபித்துவிட்டு வீட்டை விட்டுச் சென்றுவிட்டார்,’’ என்றார்.   'எங்களுக்கு எதுவுமே தெரியவில்லை’ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இரண்டாவது சிறுமியின் வீட்டிற்கே காவல்துறை கூறித்தான் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இருநாட்கள் தேடியும் பேத்தியைக் காணவில்லை என்பதால் போலீசாரிடம் புகார் அளித்ததாகவும் அப்போதுதான் பேத்தி பாதிக்கப்பட்டது தெரிய வந்ததாகவும் தெரிவிக்கிறார் அவர். ‘‘இரு நாட்கள் எங்கு தேடியும் பேத்தியைக் காணவில்லை என்பதால் காவல்துறையில் புகாரளித்தோம். அப்போது, போலீசார் எங்களை அழைத்து, வீட்டில் கோபித்துக்கொண்ட என் பேத்தியை, அந்த 17 வயதான சிறுமி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்க வைத்ததாகத் தெரிவித்தனர்," என்று கூறும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி, தனது பேத்தி பாதிக்கப்பட்டதே போலீசார் சொல்லித்தான் தங்களுக்குத் தெரிய வந்தது என்றும் கூறினார். "எங்களுக்கு அதற்கு முன் எதுவுமே தெரியாது, என் பேத்தி குழந்தை அவளுக்கு எதுவுமே தெரியாது. குற்றவாளிகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்,’’ என, தழுதழுத்த குரலில் பேசினார் அவர். மற்றொரு சிறுமியை அவரது பாட்டிதான் பராமரித்து வருகிறார், சிறுமியுடன் அவரும் காப்பகத்தில் உள்ளதால் 17 வயதான சிறுமி தரப்பு தொடர்பாக யாரிடமும் பேச முடியவில்லை. குற்றவாளிகளாக உள்ள ஒன்பது பேரின் குடும்பத்திடமும், அவர்கள் தரப்பு குறித்து விசாரிக்க பிபிசி தமிழ் பலமுறை முயன்றது. ஆனால், அவர்கள் யாரும் பேச முன்வரவில்லை.   சிறுமிகளின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்! படக்குறிப்பு,‘‘பாலின சமவத்துவம் குறித்து பாடத்திட்டம் உருவாக்கி பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாய சூழலில் நாம் உள்ளோம்,’’ என்று கூறுகிறார் மாதர் சங்கத் தலைவர் சுகந்தி. இரு சிறுமிகளின் குடும்பத்தினரை நேரில் பார்வையிட்ட மாதர் சங்கத்தினர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைச் செயலாளர் சுகந்தி, ‘‘பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வாழ்க்கை, அவர்களின் பின்புலம், குடும்பம் என அனைத்தையும் பார்வையிட்டோம். சிறுமிகளின் குடும்ப சூழல், அறியாமையைப் பயன்படுத்தி, அவர்களை பாலியல் ரீதியில் குற்றவாளிகள் பயன்படுத்தியுள்ளனர்," என்று கூறினார். தமிழகத்தில் பல போக்சோ வழக்குகள் உரிய நேரத்தில் விசாரணை முடிக்கப்படாமல் விடப்பட்டதால், சாட்சியங்கள் அழிக்கப்பட்டு குற்றவாளிகள் தப்பிப்பதாகக் கூறும் சுகந்தி, "இதன் காரணமாக இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது, விரைவில் விசாரணை முடித்து தண்டனை வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எதிர்காலத்தைப் பாதுகாத்து உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார். அதுமட்டுமின்றி, ‘‘பாலின சமவத்துவம் குறித்து பாடத்திட்டம் உருவாக்கி பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாய சூழலில் நாம் உள்ளோம். பாலின சமத்துவக் கல்வியை போதிக்க வேண்டும்,’’ எனவும் சுகந்தி தெரிவித்தார்.   போக்சோ வழக்கில் சிறுமி கர்ப்பமானால் அரசு என்ன செய்யும்? சட்டம் சொல்வது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,போக்சோ வழக்கின்படி, பாதிக்கப்பட்ட குழந்தையின் வயது மற்றும் உடல்நலத்தைப் பொறுத்து அவரது கரு கலைக்கப்படுமா, படாதா என்று சட்டபூர்வமாக முடிவு செய்யப்படும். உடுமலை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமாக உள்ளதால், அரசு என்ன செய்யப் போகிறது? சட்டம் சொல்வது என்ன? சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சுப.தென்பாண்டியனிடம் இதுகுறித்து பிபிசி தமிழ் வினவியபோது, ‘போக்சோ வழக்குகளில் பாதிக்கப்படும் சிறுமி கர்ப்பமானால், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட குழந்தைகள் நல கமிட்டிக்கு உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் கூறினார். "முதலில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில், கருக்கலைப்பு செய்யும் அளவிற்கு சிறுமியின் உடல்நிலை ஆரோக்கியமாக கருவின் அளவும் ஏற்றபடி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தால் மட்டுமே கருக்கலைப்பு செய்யப்படும். சிறுமி வயிற்றில் கரு வலுவாகியிருந்தால் அது கலைக்கப்படாது, பிரசவம் பார்க்கப்பட்டு அந்தக் குழந்தை காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு சட்டப்படி தத்து கொடுக்கப்படும்,’’ என்கிறார் அவர். மேலும், ‘‘ஒருவேளை பாதிக்கப்பட்ட சிறுமி 17 வயதாக இருந்து குழந்தை பெறும்போது அவர் 18 வயதை அடைந்தால், குழந்தையைப் பெற்றெடுத்தவரே வளர்க்க விரும்பினாலும் அவரிடம் குழந்தை ஒப்படைக்கப்படாது. நீதிபதிகள் விசாரணை முடித்து சட்டப்படிதான் குழந்தை அந்தத் தாயிடம் ஒப்படைக்கப்படும்,’’ எனவும் நம்மிடம் தெரிவிக்கிறார் வழக்குரைஞர் சுப.தென்பாண்டியன்.   ‘சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்படும்’ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"போக்சோவில் பாதிக்கப்படுவோருக்கு 18 வயது வரை மட்டுமல்ல 21 வயது வரை பராமரிக்க அரசு நிதியுதவி அளிக்கிறது’ என்கிறார் சமூக நலத்துறை அதிகாரி ரஞ்ஜிதா. சிறுமிகளின் எதிர்காலத்தைப் பாதுகாத்து, அவர்களுக்கு கல்வி வாய்ப்பு ஏற்படுத்துவதாக உறுதியளிக்கின்றனர் மாவட்ட சமூக நலத்துறையினர். நம்மிடம் பேசிய திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி ரஞ்ஜிதா, ‘‘போக்சோ வழக்கில் பாதிக்கப்படும் சிறுமிகளைக் காப்பகத்தில் வைத்து பராமரித்து அவர்களின் மனநலம், உடல்நலத்தை மேம்படுத்தி, கல்வி வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறோம்." "அவர்கள் சந்தித்த துயர சம்பவத்தில் இருந்தும், வன்புணர்வு சம்பவத்தில் இருந்தும் மன ரீதியாக அவர்களை வெளியே கொண்டு வருவதற்கு மனநல மருத்துவர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படும். உடுமலை வழக்கில் உள்ள இருவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது,’’ என்றார்.   ’21 வயது வரையில் பராமரிப்போம்’ ‘‘காப்பகத்தில் உள்ள 17 வயதான சிறுமி 10ஆம் வகுப்பைப் பாதியில் நிறுத்தியுள்ளார். நாங்கள் அறிவுரை வழங்கிய பின், அவர் படிப்பைத் தொடர விருப்பம் தெரிவித்து, பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காகத் தயாராகி வருகிறார்." "புத்தகங்கள் பெற்று படித்து வருகிறார், வரவுள்ள இடைத்தேர்வு எழுத உள்ளார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் படிப்பைத் தொடர அறிவுரை வழங்கியுள்ளோம்,’’ என்கிறார் ரஞ்ஜிதா. மேலும் தொடர்ந்த அவர், ‘’17 வயதான சிறுமிக்கு குடும்பத்தில் போதிய கவனிப்பு இல்லாததால், 21 வயது வரையில் அவரது கல்விக்கு உதவவும், அவர் விருப்பப்பட்டால் காப்பகத்தில் வைத்து பராமரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். போக்சோவில் பாதிப்பேருக்கு 18 வயது வரையில் மட்டுமல்ல 21 வயது வரையில் பராமரிக்க அரசு நிதியுதவி அளிக்கிறது,’’ என்கிறார் அவர். https://www.virakesari.lk/article/183944
    • ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய "சுரக்ஷா" காப்புறுதித் திட்டம் மீண்டும் ஆரம்பம்! : ஜூன் முதல் வாரத்திலிருந்து சலுகைகளைப் பெறலாம்!  19 MAY, 2024 | 01:03 PM பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த "சுரக்ஷா" மாணவர் காப்புறுதித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.  அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் ஜூன் முதல் வாரத்தில் இருந்து இந்தக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற முடியும். இது தொடர்பில் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைள் அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட இணை அமைச்சரவைப் பத்திரத்துக்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி கிடைத்திருந்தது.   சுகாதார பிரச்சினைகள் காரணமாக கல்விச் செயற்பாடுகளை தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வியைத் தொடர வாய்ப்பளித்தல், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பாடசாலை வரவையும் மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை நோக்கமாக  கொண்டு 2017ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய "சுரக்ஷா" மாணவர் காப்புறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.  இத்திட்டம் 01.12.2022 வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக இதற்கான நிதியை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் இத்திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. எவ்வாறாயினும், நாட்டில் தற்போது பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும் நிலையில், "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 2000 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒதுக்கீடு செய்திருந்தார்.  2048ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கு தேவையான மனித வளங்களை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தை பலப்படுத்துவதே இதன் நோக்கமாகும். அதன்படி, அரசாங்க பாடசாலைகள், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கற்கும் 1- 13ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், 5 - 21 வயது வரையான 45 இலட்சம் மாணவர்களுக்கும், விசேட தேவையுள்ள மாணவர்களுக்கான பாடசாலைகளில் பயிலும் 4 - 21 வயது வரையான மாணவர்களுக்கும் மருத்துவ மற்றும் விபத்துக் காப்புறுதி உள்ளிட்ட சலுகைகளும் இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.  மேலும் குறைந்த வருமானம் பெறுவோர் அதாவது 180,000 ரூபாய்க்கும் குறைவான வருட வருமானத்தைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆயுள் காப்புறுதியின் கீழ் பெற்றோரின் மரணத்துக்கான நிவாரணங்களும் இந்த திட்டத்தின் கீழ் சகல மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.  1. சுகாதாரக் காப்புறுதி   அரச, தனியார் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறுவோருக்கு 300,000 ரூபாய் வரையில் வழங்கப்படும். அதன்படி அரச வைத்தியசாலைகளில் தங்கும் ஒரு இரவுக்காக  2500 ரூபாய் வழங்கப்படும். (அரச வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்றுக்கொண்டாலும் பெற்றோர் தொழிலுக்குச் செல்ல முடியாமல் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு இந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது.) தனியார் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறுவோருக்கு ஓர் இரவுக்கு 7500 ரூபாய் என்ற அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.   * நிவாரணத் தொகை 20,000 ரூபாய் வரையில் ஏற்கனவே காணப்பட்ட கண் குறைபாடுகளுக்கான கண்ணாடிகள், செவிப்புலன் குறைபாட்டுக்கான செவிப்புலன் கருவிகளுக்கான நிவாரணங்களும் வழங்கப்படவுள்ளன. அத்தோடு பிள்ளைகள் நோய்வாய்ப்படும் வேளையில் வெளி ஆய்வுக்கூடங்களில் பெறப்படும் அறிக்கைகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளன.  * பாரதூரமான நோய்களுக்கு 200,000 ரூபாய் முதல் 1,500,000 ரூபாய் வரையில் வழங்கப்படும். 2. விபத்துகளுக்கான காப்புறுதி * முழுமையான நிரந்தர ஊனத்துக்கு-200,000/= வழங்கப்படும்.  * முழுமையான இடைநிலை ஊனத்திற்கு - 150,000/= முதல் 200,000/= வரையில் வழங்கப்படும்.  * தற்காலிக ஊனத்துக்கு 25,000/= முதல் 100,000/= வரையில் வழங்கப்படும். 3. வாழ்வாதாரக் காப்புறுதி  * பெற்றோரின் மரணத்தில் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பப் பிள்ளைகளின் பெற்றோரில் ஒருவருக்கு 75,000/= வரையில் வழங்கப்படும். பெற்றோர் இருவருக்கும் இந்த நிவாரணம் வழங்கப்படும்.  ஒரு குடும்பத்தில் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு இந்த நிவாரணங்கள் உரித்தாகும். ஆனால், ஒரு பிரச்சினைக்கு அதிகபட்சமாக 225,000/= ஒதுக்கப்படுகிறது. (அதிகபட்சமாக 3 குழந்தைகளுக்கு தலா 75,000/= ஒதுக்கப்படும்.) இந்தக் காப்புறுதி திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் உடன்படிக்கை செய்துகொள்ளவுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இணையவழி முறையின் ஊடாக இந்த நன்மைகள் அனைத்தையும் விரைவாக (குறைந்த பட்சம் ஒரு வாரத்துக்குள்) பெற்றுக்கொள்ளும் வகையில் விசேட முறைமையொன்று இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் உருவாக்கப்படவுள்ளது.  இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் "சுரக்ஷா" காப்புறுதியின் கீழ் குழந்தைகளுக்கு உரித்தான நிவாரணம், பெற்றோரின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடும். இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக ஜனாதிபதி செயலகத்தின் அரச வருமானப் பிரிவின் முழுமையான மேற்பார்வையின் கீழ் பாடசாலை அதிபர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கான விசேட ஒருங்கிணைப்பு பொறிமுறையொன்றும் உருவாக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சும் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனமும் இணைந்து ஜனாதிபதி செயலகத்தின் அரச வருமான பிரிவுடன் ஒருங்கிணைந்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/183944
    • பெரிய‌ப்பு நான் தான் க‌ட‌சி இட‌ம் ப‌ஞ்சாப் ஆப்பு வைக்க‌ வில்லை மும்பை தொட‌ர் தோல்வியால் ப‌ஞ்சாப் 9வ‌து இட‌த்துக்கு வ‌ந்து விட்ட‌து இந்த‌ முறை பெரிய‌ புள்ளிய‌ ஒருத‌ரும் பெற‌ போவ‌து கிடையாது கூட்டி க‌ழிச்சு பார்த்தால் நான் தான் க‌ட‌சி இட‌ம்.....................ந‌ம்பின‌ அணிக‌ள் எல்லாம் கைவிட்டால் நில‌மை இப்ப‌டி தான் இருக்கும்😁...............................
    • முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவாக இங்கிலாந்தில் கடற்கரையில் வணக்க நிகழ்வு May 18, 2024     15 வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் உயிரிழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவு கூருவதற்காக இங்கிலாந்தின் Southend-on-Sea என்ற கடலோர நகரத்தைச் சுற்றி வாழும் சுமார் முந்நூறு தமிழர்கள் நேற்று (மே 17) அந்தி வேளையில் கடற்கரையில் வணக்க நிகழ்வொன்றை நடத்தினர். ஆண்டுதோறும் மே 18ஆம் தேதி தமிழர் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் நடந்த பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும். Shoebury East கடற்கரையின் வழக்கமான இரைச்சல் மற்றும் குதூகலச் சூழ்நிலையானது அமைதியான பிரதிபலிப்பு, மலர் அஞ்சலிகள், நினைவு உரைகள் மற்றும் கவிதைகளாக மாற்றப்பட்டு, நூற்றுக்கணக்கான மிதக்கும் நினைவு விளக்குகள் அலைகளில் மிதக்க விடப்பட்டது. அதைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பங்கேற்பாளர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள உள்ளூர் மக்களுக்கும் வழங்கப்பட்டது. தமிழர் தாயகத்தில் அதே தீங்கற்ற செயல்பாடு சிறிலங்கா அரசால் தடை உத்தரவுகள், கைதுகள் மற்றும் மிரட்டல்களுடன் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. Southend-on-Sea நிகழ்வில் பங்கேற்றவர்களில் பலர் இன அழிப்பில் இருந்து தப்பியவர்கள். அவர்களில் ஒருவரான திருமதி நிஷாந்தினி சந்திரதாசன் கூறுகையில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இனப்படுகொலை நடந்த இடமும் முள்ளிவாய்க்கால் கடற்கரையாக இருந்ததைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வுக்கு ஒரு கடற்கரையில் அமைந்தது பொருத்தமானது என்றார். நிகழ்வின் மிகவும் உணர்ச்சிகரமான தருணத்திற்கு முன் அவர் நினைவுச் சுடரை ஏற்றி வைத்தார். அதன் பின் அங்கு கூடியிருந்த அனைவராலும் நினைவு விளக்குகளும், மலர்களும் கடலில் காணிக்கையாக விடப்பட்டன. ஒளிரும் விளக்குகள் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் நினைவு சுமந்து ஆழ்கடல் நோக்கி மிதந்து சென்றன. மே 12 முதல் 18 வரை நடைபெறும் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் போது இந்த வகையான நினைவுச்சின்னங்கள் பரவலாகி, அனைத்து நாடுகளிலும் உள்ள பல கடற்கரைகளிலும் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம் என்று நிகழ்வின் ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை எமது மக்கள் அனுபவிக்கும் அவலங்களின் அடையாளமாக வருங்கால சந்ததியினர் மறந்துவிடக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/முள்ளிவாய்க்கால்-படுகொ-7/  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.