Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கோட்பாட்டின் சதி
-----------------------------
வார இறுதி நாட்களில் ஏதாவது ஒன்றின் பெயரால் ஒன்றாகக் கூடுவதும், அன்றைய அரசியலை, சினிமாவை, விளையாட்டுகளை அலசி ஆராய்வதும் புலம்பெயர் சமூகத்தின் ஒரு அடையாளம் ஆகிவிட்டது. சமூக ஊடகங்களை விட நேரில் ஒன்றாகக் கூடி விடயங்களைப் பகிர்வது மிக இலகுவான, சுமூகமான ஒரு செயல். இன்டெர்நெட்டில் அவர்களுக்குள் ஆவிகள் புகுந்தது போல சுற்றிச் சுழன்று அடிக்கும் பலர் நேரில் ஒரு வார்த்தை கூட கதைக்கமாட்டார்கள். ஒரு கருத்துமே அவர்களிடம் இருக்காது. அவர்களா இவர்கள் என்றும் தோன்றும்.
 
நிதானமான நிலையில், நேரிலும், இன்டெர்நெட்டிலும் தீ மிதிப்பின் போது வருவது போல கடும் உருக் கொண்டு உலாவுகின்றவர்கள் மிகச் சிலரே. எங்களின் வகுப்பு படித்த பாடசாலைக்கு எதற்கோ நிதி கொடுத்து, பின்னர் அது பெரும் பிரச்சனையாகியது. எல்லாமே வாட்ஸ்அப்பில் தான். அடுத்த வந்த ஒன்றுகூடல் ஒன்றில் கதைப்போம் என்று எல்லோரும் சுற்றி இருந்தால், இரண்டோ மூவரோ தவிர்த்து, வேறு எவரும் எதுவுமே சொல்லவில்லை. பந்தி பந்தியாக எழுதியவர்களால் கோர்வையாக எதையும் சொல்ல முடியவில்லை. இது மனதிற்கு பெரும் ஆறுதலைக் கொடுத்தது.   
 
விஸ்கியின் பின்னோ அல்லது காக்டெயிலின் பின்னோ கதைத்தால் அது வேற கணக்கு. ஒரு தடவை ஒரு இடத்தில் பெரும்பாலும் அமைதியாகவே இருக்கிற நண்பன் ஒருவன், அவன் நல்ல விவேகமானவனும் கூட, திடீரென்று சத்தம் போட ஆரம்பித்துவிட்டான். உள்ளுக்குள் இருந்த நண்பனின் மனைவி அவர்களின் சின்ன மகளிடம் 'அப்பாவின் சத்தம் கொஞ்சம் கூடக் கேட்குது, போய் என்னவென்று பார்த்து வா.....' என்று அனுப்பிவிட்டார். போய் பார்த்து விட்டு வந்த சின்ன மகள் 'அப்பா still standing.........' என்று சுருக்கமாக நிலவரத்தை சரியாகச் சொன்னார். அத்துடன் மனைவி சத்தத்தை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்.
 
ஒரு இடத்தில் புதியவர் ஒருவரை அறிமுகப்படுத்தினர். சமீபத்தில் நாட்டின் வேறொரு பகுதியிலிருந்து இங்கு இடம் பெயர்ந்து வந்திருக்கின்றார். 'ஆள் கனக்க கதைப்பார்......' என்பது ஒரு இரகசியத் தகவலாகவும் சொல்லப்பட்டிருந்தது. அது சிறிது நேரத்திலேயே தெரிந்தும் விட்டது.
 
எல்லா சதிக் கோட்பாடுகளையும் விரல் நுனியில் வைத்திருந்தார். 9/11 ஐ அமெரிக்கா எப்படி திட்டம் போட்டு முடித்தது என்று விளக்கினார். ஈராக்கை அடிக்க, மத்திய கிழக்கை வெருட்ட, அங்கிருக்கும் எண்ணை வளத்தை சுரண்ட என்று புள்ளிகளைப் போட்டு இணைத்தார். சந்திரனில் அமெரிக்கா இறங்கவே இல்லை என்றார். அமெரிக்கா அரிசோனா மாநிலப் பகுதியில் இருக்கும் பாலைவனத்தில் ஒரு போட்டோ ஷூட்டிங் செய்து தான் அந்தப் படங்களை எடுத்தார்கள் என்றார்.
 
இளவரசி டயானாவின் விபத்து. எகிப்தின் பிரமிட்டுகள். இப்படியே வரிசை போய்க் கொண்டிருந்தது. ஏலியன்ஸ் வந்து பிரமிட்டுகளை கட்டினது மட்டும் இல்லை, இன்றும் அவர்கள் எங்களுடன் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்றார். எங்கள் இருவரில் ஒருவர் ஏலியனாகக் கூட இருக்கலாம் என்றார். அவர் கதைகளைத் தொடர தொடர, இவர்களுக்கு இவ்வளவு கொள்கைகளுடன் இரவில் நித்திரை எப்படி வரும், கண்களை ஆவது மூடுவார்களா என்ற சந்தேகம் எனக்கு வந்து கொண்டிருந்தது.    
 
'பூமி தட்டை என்றும் சொல்கின்றார்களே............' என்று அவர் இடைவெளி விட்ட ஒரு கணத்தில் நான் ஒரு தலைப்பை எடுத்துக் கொடுத்தேன். பூமி தட்டையானது என்பதும் ஒரு பிரபலமான சதிக் கோட்பாடு. ஒருவர் பார்க்கும் போது எல்லாமே தட்டையாக, கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிவதே அதற்கு சாட்சி என்று சதிக் கோட்பாளர்கள் கூறுவார்கள். ஆனால் அவர் அந்த சதிக் கோட்பாட்டை  ஒப்புக் கொள்ளவில்லை. பூமி உருண்டை தான் என்றார். இவர்களுக்கும் உட்பிரிவுகள் இருக்கின்றன என்று அன்று தெரிந்துகொண்டேன்.
 
ஒரு பெண்ணும், இரண்டு சிறுவர்களும் எங்களிடம் வந்தனர். அவரின் மனைவி, பிள்ளைகள் என்று அறிமுகப்படுத்தினார். பெரிய சிறுவன் பாடசாலை ஆரம்பித்திருந்தார். சின்னவர் இன்னும் போக ஆரம்பிக்கவில்லை. ஒரு சின்ன உரையாடலின் பின், பஸ்ஸுக்கு நேரம் ஆகி விட்டது என்று ஆயத்தமானார்கள். ஏன் பஸ், காரை திருத்த வேலைகளுக்கு விட்டிருக்கின்றீர்களா என்றேன். தன்னிடம் கார் இல்லை என்றார். இங்கு கார் ஒன்று இல்லாமல் வாழ்வது, அதுவும் குடும்பமாக, நினைத்தே பார்க்க முடியாத, நம்பவே முடியாத ஒரு விஷயம். கால்கள் இல்லாதது போல. ஏன் என்று கேட்க வாயெடுத்து விட்டு அப்படியே அதை விழுங்கிவிட்டேன். இவர்களிடம் அதற்கும் ஒரு கோட்பாடு இருக்கும்.
 
அவர் மனைவியை ஒரு தடவை பார்த்தேன். அவர் எப்போதோ வீதியைப் பார்க்க ஆரம்பித்திருந்தார்.
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

ஒரு பெண்ணும், இரண்டு சிறுவர்களும் எங்களிடம் வந்தனர். அவரின் மனைவி, பிள்ளைகள் என்று அறிமுகப்படுத்தினார். பெரிய சிறுவன் பாடசாலை ஆரம்பித்திருந்தார். சின்னவர் இன்னும் போக ஆரம்பிக்கவில்லை

பிள்ளைகள் வளர எல்லாமே சரியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

கோட்பாட்டின் சதி தொடருகிறது..........

அவர் மனைவி அவரிடம் வருகின்ற பஸ் எமது பஸ்தான் கையினை காட்டுங்கள் என அவரிடம் கூறுகிறார், ஆனால் அவர் பதிலுக்கு ஒரு நக்கலான புன்னகை ஒன்றினை உதட்டருகே தவளவிட்ட வண்ணம், இது என்ன ஊரென்றா நினைத்தீர்கள்? ஒவ்வொரு தரிப்பிடத்திலும் பஸ்ஸினை அவர்கள் நிறுத்தத்தான் வேண்டும் என்றார்.

இங்கு அப்படி நிறுத்தாமல் போனால் வாடிக்கையாளர் நீதிமன்றில் போய்தான் பஸ்ஸினை நிறுத்தவேண்டும் என்றார்.

பஸ்ஸின் குறிகாட்டி விளக்கு எரியும்போதே பஸ் தனது வேகத்தினை குறைத்து இவர்கள் பக்கமாக பஸ்ஸினை நிறுத்தியது, அவர் தனது மனைவியினை பார்த்து ஒரு வெற்றி புன்னகையினை வீசி விட்டு பஸ்ஸில் தனது குடும்பத்தினரை ஏற அனுமதித்து இறுதியாக பஸ்ஸில் ஏறினார்.

பஸ்ஸில் அவரை பார்த்து சாரதி கூறினார், எனக்கு எப்படித்தெரியும் நீ பஸ்ஸில் ஏறப்போகிறாயா இல்லையா? என, கை காட்டியிருக்கலாமே என கேட்டார், எங்கே தனது மனைவிக்கு கேட்டுவிடுமோ என பயந்த வண்ணம் ஓ அப்படியா என பதிலளித்த அதே நேரம் அவரது மனைவி அவரை திரும்பிப்பார்த்து ஒரு புன்னகை செய்தார்.

பஸ் சாரதி என்ன ஓ அப்படியா என்றால் என்ன  அர்த்தம் என என்று கோபத்தோடு கேட்பது அவர் காதில் பின்னால் கரைந்து போனது ஏன் இந்த சின்ன விடயத்திற்கு இந்த பஸ் சாரதி  அந்த ஒன்று கூடலிற்கு வந்த ரசோதரன் மாதிரி என்ன உலகம் உருண்டையா? என அலட்டிக்கொள்கிறார் என சிந்தித்தவாறே தனது இருக்கையை நோக்கி நகர்ந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, vasee said:

பஸ் சாரதி என்ன ஓ அப்படியா என்றால் என்ன  அர்த்தம் என என்று கோபத்தோடு கேட்பது அவர் காதில் பின்னால் கரைந்து போனது ஏன் இந்த சின்ன விடயத்திற்கு இந்த பஸ் சாரதி  அந்த ஒன்று கூடலிற்கு வந்த ரசோதரன் மாதிரி என்ன உலகம் உருண்டையா? என அலட்டிக்கொள்கிறார் என சிந்தித்தவாறே தனது இருக்கையை நோக்கி நகர்ந்தார்.

உங்கள் இருவரின் எழுத்தைப் பார்க்க ஒருவேளை இவங்க தான் அவங்களோ?

என்று எண்ணத் தோன்றுகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

பிள்ளைகள் வளர எல்லாமே சரியாகும்.

👍......

அது தான் கடைசியாக வழங்கப்படும் இழப்பற்ற ஒரு சந்தர்ப்பம், அண்ணை. அதையும் விட்டால், ஒரு பெரும் தனிப்பட்ட இழப்பு வந்து வாழ்க்கையை புரட்டிப் போட்டால் தான் உண்டு............ 
 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

👍......

அது தான் கடைசியாக வழங்கப்படும் இழப்பற்ற ஒரு சந்தர்ப்பம், அண்ணை. அதையும் விட்டால், ஒரு பெரும் தனிப்பட்ட இழப்பு வந்து வாழ்க்கையை புரட்டிப் போட்டால் தான் உண்டு............ 
 

 

விளங்கவில்லைப் பிரபு...இது பைடன் ரம்பு  கதையோ...அமெரிக்காகாரர்தான் ரசிக்கினம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

உங்கள் இருவரின் எழுத்தைப் பார்க்க ஒருவேளை இவங்க தான் அவங்களோ?

என்று எண்ணத் தோன்றுகின்றது.

🤣....

வசீயின் படமும் கொஞ்சம் கலங்கி ஒரு ஏலியன் மாதிரியும் தெரியுது.....😀.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

🤣....

வசீயின் படமும் கொஞ்சம் கலங்கி ஒரு ஏலியன் மாதிரியும் தெரியுது.....😀.

மன்னிக்கவும், எனக்கு இந்த அமெரிக்கர்களின் ஏலியன் சதிக்கோட்பாட்டில் நம்பிக்கை இல்லை😁.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுகூடலா அங்கு ஒரு சத்தயுத்தமே நடக்கும்.......பிஸ்கட் தேநீருடன் ஒரு மாதிரி ஒன்றுகூடல் முடிந்ததும் கர்ஜித்த சிங்கங்கள் எல்லாம் எதுவுமே நடக்காததுபோல் கலந்துரையாடுவார்கள் பாருங்கள் அதுதான் நிஜமான ஒன்று கூடல்.......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, vasee said:

கோட்பாட்டின் சதி தொடருகிறது..........

பஸ் சாரதி என்ன ஓ அப்படியா என்றால் என்ன  அர்த்தம் என என்று கோபத்தோடு கேட்பது அவர் காதில் பின்னால் கரைந்து போனது ஏன் இந்த சின்ன விடயத்திற்கு இந்த பஸ் சாரதி  அந்த ஒன்று கூடலிற்கு வந்த ரசோதரன் மாதிரி என்ன உலகம் உருண்டையா? என அலட்டிக்கொள்கிறார் என சிந்தித்தவாறே தனது இருக்கையை நோக்கி நகர்ந்தார்.

🤣...............

வசீக்கு எழுத்து நன்றாகவே வரும் என்று முன்னரே தெரியும். கற்பனையும் அபாரம்.......👍

அடுத்த காட்சியாக அந்த பஸ்ஸிலேயே ஒரு ஆக்‌ஷன் சீன் வைக்கலாம் அல்லது ஒரு எமோஷனல் சீன் வைக்கலாம்........😃.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, alvayan said:

விளங்கவில்லைப் பிரபு...இது பைடன் ரம்பு  கதையோ...அமெரிக்காகாரர்தான் ரசிக்கினம்..

இல்லை அல்வாயன், இது பைடன் - ட்ரம்ப் அவர்களின் கதை இல்லை.

கொள்கைகள், கோட்பாடுகள் என்று இருப்பவர்கள் சிலரின் மனைவிகள் மனங்களில் என்ன இருக்கும் என்ற எண்ணமே இந்தக் கதை. இது புதிய ஒரு எண்ணம் இல்லை. இதைப் போல பல ஏற்கனவே வந்துள்ளன. யசோதரா, புத்தரின் மனைவி, தன் நிலையைச் சொல்வதாக சில கவிதைகளும், கதைகளும் வந்துள்ளன. ராகுலனின், புத்தரின் மகன், நிலையும் எழுத்தில் வந்துள்ளது. கற்பனைகள் தான்.

பாரதியார் செல்லம்மாள் அவர்களுக்கு எழுதிய கடிதங்களும், செல்லம்மாள் அவர்கள் பாரதியாரின் மறைவின் பல வருடங்களின் பின் சொன்ன விசயங்களும் நிஜத்தில் நடந்தவை.

சதி என்பது மனைவி என்னும் சொல்லின் ஒத்த சொல் தானே. இங்கு 'கோட்பாட்டின் சதி' என்பது 'கோட்பாட்டின் மனைவி' என்பதையே. 

ஈழப்பிரியன் அண்ணா சொல்லியிருப்பது போல, பிள்ளைகள் பிறந்தவுடன் வாழ்க்கையில் ஒரு நெகிழ்வு வரவேண்டும். முக்கியமாக பெண் பிள்ளை ஒன்று பிறந்தவுடன். வாழ்க்கையில் இந்தக் கட்டத்தையும் இறுக்கமாகவே தாண்டினால், அதன் பின் ஒரு பெரிய தனிப்பட்ட இழப்பே, உதாரணம்: மிக அன்புக்குரியவர் ஒருவரின் மறைவு, ஒருவரின் பாதையை மாற்றும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரசோதரன் said:

கொள்கைகள், கோட்பாடுகள் என்று இருப்பவர்கள் சிலரின் மனைவிகள் மனங்களில் என்ன இருக்கும் என்ற எண்ணமே இந்தக் கதை.

இந்த கோட்பாடுகளை பறைசாற்றுபவர்கள் வீட்டுக்கு வந்ததும்

ஊருக்கடி பெண்ணே

உனக்கல்லடி கண்ணே

என்று சொல்லி வாயடைத்துவிடுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த கோட்பாடுகளை பறைசாற்றுபவர்கள் வீட்டுக்கு வந்ததும்

ஊருக்கடி பெண்ணே

உனக்கல்லடி கண்ணே

என்று சொல்லி வாயடைத்துவிடுவார்கள்.

🤣..........

அப்படி இருந்தால் அந்தக் குடும்பம், பெரும்பாலும், தப்பிவிடும், அண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

சதி என்பது மனைவி என்னும் சொல்லின் ஒத்த சொல் தானே. இங்கு 'கோட்பாட்டின் சதி' என்பது 'கோட்பாட்டின் மனைவி' என்பதையே. 

'கோட்பாட்டின் சதி' என்று தான் எல்லா சந்தர்ப்பங்களிலும் இருக்க வேண்டும் என்றும் இல்லை......... 'கோட்பாட்டின் பதி' என்று சொல்லும் நிலையும் பல இடங்களில் இருக்கும்...............

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரசோதரன் said:

'அப்பாவின் சத்தம் கொஞ்சம் கூடக் கேட்குது, போய் என்னவென்று பார்த்து வா.....' என்று அனுப்பிவிட்டார். போய் பார்த்து விட்டு வந்த சின்ன மகள் 'அப்பா still standing.........' என்று சுருக்கமாக நிலவரத்தை சரியாகச் சொன்னார். அத்துடன் மனைவி சத்தத்தை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்.

ஒரு ஆணை, மாதாவைவிட சதிதான்  நன்கு அறிந்து வைத்திருப்பாள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kavi arunasalam said:

ஒரு ஆணை, மாதாவைவிட சதிதான்  நன்கு அறிந்து வைத்திருப்பாள்.

👍..........

அன்னை அநேகமாக எதையும் பொறுத்தே போவார்......... சதி சில வேளைகளில் சன்னதம் கொண்டு விடும்.......😃

  • கருத்துக்கள உறவுகள்
On 24/7/2024 at 00:11, ரசோதரன் said:

🤣...............

வசீக்கு எழுத்து நன்றாகவே வரும் என்று முன்னரே தெரியும். கற்பனையும் அபாரம்.......👍

அடுத்த காட்சியாக அந்த பஸ்ஸிலேயே ஒரு ஆக்‌ஷன் சீன் வைக்கலாம் அல்லது ஒரு எமோஷனல் சீன் வைக்கலாம்........😃.   

உங்கள் கருத்திற்கு நன்றி, உங்கள் கதையினை குறுக்கிட மனதளவில் சங்கடமாகவே உணர்ந்தேன், பின்னர் ஒரு  நகைசுவையாக அடுத்த தரப்பு எவ்வாறு சிந்திக்கலாம் என்பதாக எழுதியிருந்தேன்,பொதுவாக சில காலமாக கதைகள் வாசிப்பதில்லை ஆனால் உங்கள் கட்கை கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதாக உணர்கிறேன் அதனால் வாசிப்பதுண்டு.

பரவலாக உங்கள் கதை யாழில் நல்ல வரவேற்பை பெறுகிறது தொடர்ந்து எழுந்துங்கள் அத்துடன் வித்தியாசமான முயற்சிகளையும் செய்யுங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.