Jump to content

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கல்லூரி முதல்வர் ராஜினாமா; போலீஸுக்கு மம்தா ‘கெடு’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொல்கத்தா: கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கல்லூரி முதல்வர் ராஜினாமா செய்தார்.

4-வது நாளாக மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் இன்று (திங்கள் கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்தார். மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக சந்தீப் கோஷ் ராஜினாமா செய்தார். பதவி விலகியது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப் கோஷ், “இறந்து போன மருத்துவரும் என் மகள் போன்றவர்தான். ஒரு பெற்றோராக நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்று நடக்க நான் விரும்பவில்லை” என்று கூறினார்.

முன்னதாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் சஞ்சய் வசிஸ்ட் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், “ஆக.18-ம் தேதிக்குள் மாநில போலீஸார் வழக்கை முடிக்கத் தவறினால், வழக்கு விசாரணை சிபிஐ-வசம் ஒப்படைக்கப்படும்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

 

மம்தா உறுதி: கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தை இன்று (ஆக.12) நேரில் சந்தித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அப்போது, “மருத்துவரின் குடும்பம் விரும்பினால், இந்த கொலை வழக்கின் விசாரணையை மத்திய ஏஜென்சிகளிடம் வழங்கத் தயார் என்றும், மத்திய ஏஜென்சிகள் மூலம் விசாரணை செய்வதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மம்தா பானர்ஜி தனது அறிவிப்பில், “மாநில காவல்துறை இந்த வழக்கின் குற்றவாளிகளை வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் வழக்கை முடிக்கத் தவறினால், வழக்கின் விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

சம்பவமும், போராட்டமும்.. - மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர், கடந்த 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட பெண் மருத்துவர் அங்கு முதுநிலை மருத்துவப் படிப்பு பயின்று வந்தார். இந்த கொலை தொடர்பாக காவல் துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய் ராய் (33) கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொலை கொல்கத்தாவில் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கொலை சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளியை கைது செய்யக்கோரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கிய போராட்டம் பின்னர் மேற்குவங்கம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கும் பரவியது. இதனால் மேற்குவங்கத்தில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று (ஆக.12) நாடு முழுவதும் மருத்துவமனைகளில் போராட்டம் நடந்து வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள பத்து அரசு மருத்துவமனைகளில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொடங்கியுள்ளனர்.

டெல்லியில் இயங்கிவரும் மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி, ஆர்எம்எல் மருத்துவமனை, லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி, விஎம்எம்சி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனை, தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனை, ஜிடிபி, ஐஎச்பிஏஎஸ், டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவக் கல்லூரி, தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய்கள் மருத்துவமனை பணியாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3 லட்சம் மருத்துவ பணியாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

FORDA மருத்துவர்கள் சங்கம் போராட்டம்: பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கோரி FORDA மருத்துவர்கள் சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை இன்று நடத்தி வருகிறது. லோக் நாயக் மருத்துவமனை, டெல்லியில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை போன்று நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளுக்கு வெளியே திரண்ட மருத்துவர்கள், பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கோரி கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

போராட்டம் தொடர்பாக பேசியுள்ள FORDA பொதுச் செயலாளர் சர்வேஷ் பாண்டே, “நாடு முழுவதும் உள்ள சுமார் 3 லட்சம் மருத்துவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மற்ற மருத்துவர்களும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும். எங்கள் கோரிக்கைக்கு எழுத்துபூர்வ உத்தரவாதம் கிடைத்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும். அனைத்து மருத்துவமனைகளிலும் மத்திய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த குழு அமைக்க வேண்டும் என்பது எங்களின் முக்கியமான கோரிக்கை” என்று கூறியுள்ளார்.

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கல்லூரி முதல்வர் ராஜினாமா; போலீஸுக்கு மம்தா ‘கெடு’ | Mamata visits residence of murdered RG Kar hospital doctor, says will hand over to CBI if Kolkata Police fail to crack case by August 18 - hindutamil.in

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொல்கத்தா பாலியல் வன்கொடுமை: மருத்துவக் கல்லூரியின் பெண் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?- கள நிலவரம்

ஸ்ரீதாமா பானர்ஜி
படக்குறிப்பு,ஸ்ரீதாமா பானர்ஜி கொல்கத்தாவில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார் கட்டுரை தகவல்
  • எழுதியவர், சல்மான் ரவி
  • பதவி, பிபிசி நிருபர், கொல்கத்தாவில் இருந்து
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஸ்ரீதாமா பானர்ஜி, கொல்கத்தாவின் மிகவும் பிரபலமான ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார்.

இதற்கு முன்னர் அவர் கல்லூரிக்குச் சென்றால், அவர் பத்திரமாக கல்லூரியை அடைந்துவிட்டாரா என்று அவரது குடும்பத்தினர் போன் மூலம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.

"நான் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டாலே, பாதுகாப்பான சூழலில்தான் இருப்பேன் என்று குடும்பத்தினர் இதுவரை நம்பிவந்தார்கள். என் பேராசிரியர்கள், மூத்த மாணவர்கள், நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் என எல்லோரும் இங்கே இருக்கிறார்கள் எனவே மருத்துவமனையை விட பாதுகாப்பான இடம் வேறேது என்ற நிம்மதியில் அவர்கள் இருந்தார்கள்.” என்கிறார் ஸ்ரீதாமா பானர்ஜி.

“ஆனால் இப்போது இங்கு இருப்பது எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. என் குடும்பத்தினரும் பயப்படுகிறார்கள்.” என்று கூறுகிறார் அவர்.

ஆகஸ்ட் 9 அன்று ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் ஸ்ரீதாமா பானர்ஜிக்கு மட்டுமல்ல, அங்கு படிக்கும் அல்லது பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட பிற பெண் மருத்துவ ஊழியர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
படக்குறிப்பு,மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விகிதம் 71.8 சதவீதமாக உள்ளது

மாநிலத்தின் முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜியே ஒரு பெண்மணி என்பதும், மருத்துவம் மற்றும் உள்துறை அவர் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் இந்த தருணத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரியில் நடந்த சம்பவம் அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை எழுப்பியது மட்டுமின்றி, மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB- என்சிஆர்பி) அறிக்கையில், மேற்கு வங்கத்தில் 2022ஆம் ஆண்டில் 1111 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே ஆண்டில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 34,738 வழக்குகள் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

என்சிஆர்பி தரவுகளின்படி, மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விகிதம் 71.8 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியான 65.4 சதவீதத்தை விட அதிகமாகும்.

வீதியில் இறங்கிய மருத்துவர்கள்

வீதியில் இறங்கிய மருத்துவர்கள்
படக்குறிப்பு,இச்சம்பவத்துக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் மருத்துவப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட, ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மாணவி, கொல்கத்தா நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பகுதியில் இருந்து வந்துள்ளார்.

இச்சம்பவம் நடந்த அன்று இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த அவர், களைப்பின் காரணமாக மருத்துவமனையின் கான்பரன்ஸ் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய், கொல்கத்தா காவல்துறையோடு பணிபுரிந்த ஒரு தன்னார்வலர். இவரது பணி, ஏறக்குறைய ஊர்க் காவல்படையினரைப் போல பாதுகாப்பு பணிதான்.

மருத்துவமனைக்கு வெளியே உள்ள காவல்துறை சோதனைச் சாவடியில்தான் இவர் பணிபுரிந்தார். இந்த சம்பவத்தை அடுத்து, கொல்கத்தா காவல்துறை ஆணையர் வினீத் கோயல், அந்த பகுதியின் உதவி காவல்துறை ஆணையரையும் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளார்.

இச்சம்பவத்துக்குப் பிறகு, மேற்கு வங்கத்தில் மருத்துவப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன. மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களைக் கடந்து, மேற்கு வங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் கோபம் இப்போது மற்ற மாநிலங்களுக்கும் பரவியுள்ளது.

கொல்கத்தாவில் நடந்த சம்பவத்தை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். பல மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன.

மறுபுறம், திங்கள்கிழமை அன்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்து பேசியுள்ளார்.

 

மருத்துவ மாணவர்களின் கோரிக்கைகள் என்ன?

அனுபம் ராய்
படக்குறிப்பு,மருத்துவம் பயிலும் மாணவரான அனுபம் ராய்

இந்த விவகாரத்தில் மருத்துவ மாணவர்களின் கோபம் குறைவதாக தெரியவில்லை. இந்த வழக்கில் இதுவரையிலான காவல்துறையின் அணுகுமுறை மற்றும் விசாரணை குறித்து போராட்டம் நடத்தும் மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எல்லாம் 'அவசரமாக' நடக்கிறது என அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

ஆர்.ஜி கர் மருத்துவமனையின் ‘மருத்துவர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர்’ மருத்துவர் ஹசன் முஷ்டாக் கூறுகையில், “பயிற்சி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முதல் மூத்த மருத்துவர்கள் வரை மருத்துவமனையின் அனைத்து ஊழியர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்” என்றார்.

பிரேத பரிசோதனை அறிக்கையை தருவதில் காவல்துறை மிகுந்த தயக்கம் காட்டுவது, விசாரணையில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மருத்துவமனை மாணவர் அமைப்பு கூறுகிறது.

பிபிசியிடம் மருத்துவர் ஹசன் முஷ்டாக் பேசுகையில், "மாணவியின் உடலில் பலத்த தாக்குதல் நடத்தியதற்கான தடயங்கள் இருப்பதும், அவர் கொடூரமாக கொல்லப்பட்ட விதத்திலிருந்து இது ஒரு நபரின் செயல் அல்ல என்றும் தெரிகிறது. ஆனால் காவல்துறையினர் ஒருவரை மட்டுமே கைது செய்துவிட்டு, எங்கள் வேலையை முடித்துவிட்டோம் என்று சொல்வது எங்களின் கோபத்தை அதிகரிக்கிறது." என்கிறார்.

மருத்துவமனையில் குவிக்கப்பட்டுள்ள காவலர்கள்

மருத்துவமனையில் குவிக்கப்பட்டுள்ள காவலர்கள்
படக்குறிப்பு,மருத்துவமனை வளாகம் கிட்டத்தட்ட காவல்துறை முகாம் போல மாற்றப்பட்டுள்ளது

இங்குள்ள மருத்துவமனை வளாகம், கிட்டத்தட்ட காவல்துறை முகாம் போல மாற்றப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காவல்துறையால் கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கொல்கத்தா (வடக்கு) துணை காவல்துறை ஆணையர் அபிஷேக் குப்தா கூறுகிறார்.

இந்த குற்றத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கேள்விக்கு, அது குறித்து கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறுகிறார்.

இங்கு மருத்துவம் பயிலும் மாணவரான அனுபம் ராய், இந்தச் சம்பவத்தை கண்டித்து, மேடையிலிருந்து மைக் மூலமாக முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தார்.

மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என அனைவரும் மேடையின் கீழ் அமர்ந்துள்ளனர். காவல்துறை அதிகாரிகள், மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் ஆகியோர் தங்களிடம் இந்த விவகாரம் குறித்து பேசுவதில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

மறுபுறம், நிர்வாகத்தின் மீது மாணவர்கள் மத்தியில் உள்ள கோபத்தை கருத்தில் கொண்டு, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர், மருத்துவர் சந்தீப் கோஷ் ராஜினாமா செய்துள்ளார்.

மேலும், மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் சஞ்சய் வசிஷ்தாவையும், அந்தப் பதவியில் இருந்து மாநில அரசு நீக்கியுள்ளது. இருவருமே இந்த விவகாரத்தின் தீவிரத்தை குறைக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

 

பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என்ன சொல்கிறார்கள்?

சுஷ்மிதா மஜும்தார்
படக்குறிப்பு,மருத்துவமனையின் நர்சிங் அதிகாரியாக உள்ள சுஷ்மிதா மஜும்தார்

இந்த மருத்துவக் கல்லூரியில் நர்சிங், எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் பலர் விடுதியில் தங்கி படிக்கும் நிலையில், விடுதியில் வசிக்காதவர்கள் ஏராளமாக உள்ளனர். பல பெண்கள் செவிலியர்களாகவும் பணிபுரிகின்றனர்.

இந்த சம்பவம் அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் கவலையடைய செய்துள்ளது. ஏனெனில் இந்த சம்பவத்திற்குப் பிறகு, வடக்கு பர்தமான் பகுதியில் பணியில் இருந்த காவல்துறை தன்னார்வலர் ஒருவர், மாவட்ட மருத்துவமனையின் பெண் மருத்துவரிடம் தவறாக நடந்து கொண்டதாக செய்தி வெளியானது.

ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நர்சிங் அதிகாரியாக உள்ள சுஷ்மிதா மஜும்தார், “கொல்கத்தாவின் மருத்துவமனைகள் அல்லது வேறு மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் என எங்கும் பார்த்தாலும் இதே நிலைதான். காவல்துறையினர் இருக்கிறார்கள், ஆனால் மருத்துவமனைகளில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது.” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “எங்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், அதை நாங்களே சமாளிக்க வேண்டும். இப்போது தன்னார்வலர்களும் காவல்துறையின் ஒரு பகுதியாக உள்ளனர். ஒரு தன்னார்வலரே மருத்துவமனைக்குள் நுழைந்து ஒரு கொலைக் குற்றத்தை வெளிப்படையாகச் செய்கிறார் என்றால், இங்கே யாரும் பாதுகாப்பாக இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்" என்கிறார்.

பிப்லவ் சந்திரா
படக்குறிப்பு,மருத்துவர் பிப்லவ் சந்திரா 1998ஆம் ஆண்டு இந்தக் கல்லூரியில் சேர்ந்தார்

வேறு மாநிலத்திலிருந்து வந்த காரணத்தால், கல்லூரி விடுதியில் தங்கி, பணிபுரியும் பெண் சுகாதாரப் பணியாளர் ஒருவர் பிபிசியிடம் பேசினார்.

"கொல்கத்தா வருவதற்கு முன்பு, மேற்கு வங்கம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்பதால், அங்கு செல்லுங்கள் என்று எல்லோரும் என்னிடம் சொன்னார்கள். ஆனால் இங்கு வந்த பிறகு, அந்த எண்ணமே மாறிவிட்டது." என்று அவர் கூறுகிறார்.

மருத்துவர் பிப்லவ் சந்திரா 1998ஆம் ஆண்டு இந்தக் கல்லூரியில் சேர்ந்தார். நீண்ட காலமாக மேற்கு வங்க மாநிலத்தின் மருத்துவச் சேவைகளை கவனித்து வருகிறார்.

‘இதுவரை எங்கும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாததால், மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் பாதுகாப்பு மோசமாக உள்ளது’ என்பதை ஒரு மூத்த மருத்துவர் என்ற முறையில் தெரிவிக்கிறார் பிப்லவ் சந்திரா.

“இந்த மருத்துவமனையில் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவி எங்கே, குற்றம் தொடர்பான காட்சிகள் எங்கே? இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனையின் நிலையே இப்படி என்றால், சிறிய அரசு மருத்துவமனைகளின் நிலையை என்னவென்று சொல்வது.” என்று கேள்வியெழுப்புகிறார் பிப்லவ் சந்திரா.

மருத்துவமனை நிர்வாகம் இதிலிருந்து எளிதில் தப்பிக்க முடியாது என்றும், பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் இது அவர்களின் அப்பட்டமான தோல்வி என்றும் கூறினார் அவர்.

‘ஆளும் கட்சி நபர்களின் கட்டுப்பாட்டில் மருத்துவமனைகள்’

ஷமிக் பட்டாச்சார்யா
படக்குறிப்பு,அரசு மருத்துவமனைகளின் கட்டுப்பாடு அரசின் கையை விட்டுப் போய்விட்டதாக குற்றம் சாட்டினார் பாஜக செய்தித் தொடர்பாளர் ஷமிக் பட்டாச்சார்யா

ஆர்.ஜி கர் மருத்துவமனையில் நடந்த சம்பவத்தால் நாடு முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்களும், மருத்துவர்களும் கொதிப்படைந்துள்ள நிலையில், இந்த விவகாரம் அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவின் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

ராஜ்யசபா எம்பியும், மாநில பாஜக செய்தித் தொடர்பாளருமான ஷமிக் பட்டாச்சார்யா, ‘அரசு மருத்துவமனைகளின் கட்டுப்பாடு அரசின் கையை விட்டுப் போய்விட்டதாகவும், தற்போது அவை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படுவதாகவும்’ குற்றம் சாட்டியுள்ளார்.

பிபிசியிடம் பேசிய பட்டாச்சார்யா, "அனைத்து அரசு மருத்துவமனைகளும் வெளி நபர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு உண்மையில் எந்த அதிகாரமும் இல்லை. மாநில அரசு அமைத்துள்ள ‘ஜன் கல்யாண் சமிதி’ எனும் குழுதான் இந்த மருத்துவமனைகளை நடத்துகின்றன." என்று கூறினார்.

“இந்தக் குழுவில் உள்ள பெரும்பாலானவர்கள் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள், அவர்கள் தங்கள் விருப்பப்படி அரசு மருத்துவமனைகளை நடத்துகிறார்கள். இதனால், மருத்துவமனைகளின் நிலை மோசமாகி, இங்கு பணிபுரியும் மருத்துவர்களும் ஊழியர்களும் மிகவும் பாதுகாப்பற்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர்.” என்று பட்டாச்சார்யா கூறினார்.

 

திரிணாமுல் காங்கிரஸ் கூறுவது என்ன?

தௌசிப் அகமது கான்
படக்குறிப்பு,திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தௌசிப் அகமது கான் காவல்துறையை பாராட்டியுள்ளார்

கொல்கத்தா மருத்துவமனை சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் பரவி வரும் நிலையில், தற்போது ஆளும் திரிணாமுல் காங்கிரஸும் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் தௌசிப் அகமது கான் கூறுகையில், “சம்பவம் குறித்த செய்தி கிடைத்தவுடன், காவல்துறை தீவிர நடவடிக்கைகள் எடுத்தது, அதனால் 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “மம்தா பானர்ஜி மரண தண்டனைக்கு ஆதரவானவர் இல்லை. ஆனால் அவர் இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புக் குழுவின் அதிகாரிகளுக்கு முழு உண்மையைக் கண்டறிய ஏழு நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்." என்று கூறினார்.

இது தவிர, கொல்கத்தா காவல்துறை ஆணையர் மற்றும் நகரின் அனைத்து உயர் அதிகாரிகளும் இந்த சம்பவம் குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கொல்கத்தா காவல்துறை ஆணையர் மருத்துவமனையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார் என்றும் தெரிவித்தார் தௌசிப் அகமது கான்.

ஞாயிற்றுக்கிழமை இரவு மற்றும் திங்கட்கிழமை காலை வரை கூட, காவல்துறை உயர் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் ‘காவல்துறை விசாரணையில் எந்த அலட்சியமும் இருக்காது’ என்று உறுதியளித்ததைக் காண முடிந்தது.

ஆனால் கொல்லப்பட்ட மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையைக் கொடுப்பதில் கொல்கத்தா காவல்துறையினர் தயக்கம் காட்டுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

வினீத் குமார் கோயல்
படக்குறிப்பு,பிரேத பரிசோதனை அறிக்கை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று கூறினார் காவல்துறை ஆணையர் வினீத் குமார் கோயல்

ஆனால், காவல்துறை ஆணையர் வினீத் குமார் கோயல் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தக் குற்றச்சாட்டை மறுத்தார்.

"பிரேத பரிசோதனை அறிக்கை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் உடல்களில் காணப்படும் காயங்கள் குறித்து தடய அறிவியல் நிபுணர்களின் கருத்தையும் கேட்டுள்ளோம். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பதையும் நாங்கள் விசாரிப்போம்." என்று கூறினார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்கள் கொல்கத்தாவில் இருந்து சிறிது தொலைவில் வசிக்கிறார்கள். அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல், பேச முடியாத நிலையில் குடும்பத்தினர் உள்ளனர்.

கொல்லப்பட்ட பெண்ணுக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெற இருந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கொல்கத்தா காவல்துறை இணை ஆணையர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து பிரேத பரிசோதனை அறிக்கையை அளித்துள்ளார். இது தவிர, முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசி மூலமாகவும் குடும்ப உறுப்பினர்களிடம் பேசியுள்ளார். ஆனால், மருத்துவ மாணவர்களின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்முறையின் பின்னர் கொலை - எதிர்ப்பு தெரிவித்து இரவில் பெண்கள் பெரும் ஆர்ப்பாட்டம் - நாங்கள் கால்நடைகளை விட பெறுமதியற்றவர்கள் என வேதனை

Published By: RAJEEBAN   15 AUG, 2024 | 10:53 AM

image
 

கொல்கத்தா அரச மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று இரவு ஆர்ப்பாட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர்.

calcutta_pro.jpg

ரீக்லைட் என்ற பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.

பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து கடந்த ஒரு வாரகாலமாக கொல்கத்தாவில் ஆர்ப்பாட்ட பேரணிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களின் மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை தொடர்ந்து சமூகத்தின் அனைத்து தரப்பையும் சேர்ந்த பெண்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டனர்.

kolkata_rape33.jpg

இந்தியாவின் ஏனைய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக பிபிசி தெரிவித்துள்ளது.

இதேவேளை கொல்கத்தாவில் பொலிஸாருக்கும் சிறிய குழுவினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

பாலியல் வன்முறை சம்பவம் இடம்பெற்ற மருத்துவமனைக்குள் புகுந்த சிலர் மருத்துவமனையின் அவசரசேவை பிரிவை சேதப்படுத்தியுள்ளனர்.

kolata_rape_44.jpg

இவர்களை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்புகைபிரயோகத்தில் ஈடுபட்டனர், சில வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

கொல்கத்தாவின் ஏனைய பகுதிகளில் இரவில் மொபைபோனின் வெளிச்சத்தினையும்,மெழுகுதிரிiயையும் வேறு வெளிச்சங்களையும் ஏந்தியவாறு பெண்கள் பேரணியாக சென்றுள்ளனர்.

சிலரின் கரங்களில் தேசிய கொடி காணப்பட்டுள்ளது. அவர்களுடன் ஆண்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் நீதி வேண்டும் என கோசமிட்டதுடன் சங்கொலியை எழுப்பியுள்ளனர்.

இரவு 12 மணியானதும் இந்தியாவின் சுதந்திர பிறப்பை குறிக்கும் விதத்தில ஆர்ப்பாட்டத்தின் போக்கு மாறியுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்திய தேசிய கீதத்தை இசைத்தனர்.

அதன் பின்னர் கடும் மழையிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

kolata_rape55.jpg

கொல்கத்தாவில் நாங்கள் இவ்வாறு பெருமளவு பெணகள் அணிவகுத்தை பார்த்ததில்லை என செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவின் பின்னர் தனது 13 வயது மகளுடன் கலந்துகொண்ட பெண் ஒருவர் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மூலம் நிலைமையை சரிசெய்ய முடியுமா என மகள் பார்க்கட்டும்,அவள் தனது உரிமைகள் குறித்து விழிப்புணர்வை பெறட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பெண்களிற்கு மதிப்பில்லை நாங்கள் காலநடைகளை விட மதிப்பற்றவர்கள் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/191128

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை - நீதி கேட்டு இந்தியா முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்

18 AUG, 2024 | 01:57 PM
image

புதுடெல்லி: கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை கண்டித்தும் உடனடியாக நீதி வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும்  இந்தியாமுழுவதும்  மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். இதனால் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

GVNazF9WwAAqPx6.jpg

இந்நிலையில் பயிற்சி பெண் மருத்துவர் கொலையை கண்டித்தும் அதற்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்று கோரியும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) 24 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி நாடு முழுவதும் நேற்று மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கினர். நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நடைபெற்ற 24 மணி நேர போராட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்றனர்.

பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்ட கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறும்போது ‘‘இவ்வழக்கை கொல்கத்தா போலீஸார் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு தடயங்கள்இஆதாரங்களை அழிக்க முயற்சிக்கிறது. சம்பந்தப்பட்ட குற்றவாளியை காப்பாற்ற அரசு முயற்சிக்கிறது’’ என்று குற்றம்சாட்டினர்.

kolkata_doctor_rape_33333333333.jpg

இந்த போராட்டத்தால் வெளிநோயாளிகள் பிரிவு சேவை பாதிக்கப்பட்டது. மேலும் சாதாரண அறுவை சிகிச்சைகள் எதுவும் நடைபெறவில்லை. அதேவேளையில் அவசர அறுவை சிகிச்சைகள் வழக்கம் போல் நடைபெறும் என்று இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) ஏற்கெனவே அறிவித்திருந்தது. மருத்துவர்கள் போராட்டத்தால் நாடு முழுவதும் சேவைகள் பாதிக்கப்பட்டன.

இதற்கிடையில் டெல்லியில் பயிற்சி மருத்துவர்கள் சங்கங்களின் சம்மேளனம் இந்திய மருத்துவர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நேற்று மத்திய சுகாதாரத் துறைஅமைச்சக அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அவர்களிடம் சுகாதாரத் துறைஅமைச்சக அதிகாரிகள் கூறும்போது ‘‘பொதுமக்கள் நலன் கருதிமருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும்.நாடு முழுவதும் மருத்துவர்கள் மருத்துவத் துறை ஊழியர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதுகுறித்து ஆராய குழு அமைக்கப்படும். அரசு பிரதிநிதிகள் மருத்துவர்கள் மருத்துவத் துறை சார்ந்தவர்கள் யார் வேண்டுமானாலும் அந்தக் குழுவிடம் தங்கள் கருத்துகளை எடுத்துரைக்கலாம். மருத்துவத் துறையில் உள்ளவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு நிச்சயம் உறுதி செய்யும்’’ என்று தெரிவித்தனர்.

டெல்லியில் உள்ள குருதேக்பகதூர் ராம் மனோகர் லோகியாஇடிடியு போன்ற மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் பிரிவுசெயல்படவில்லை. அந்த மருத்துவமனைகளை சேர்ந்த மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். அதேபோல் ஜார்க்கண்ட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும் பல்வேறு மருத்துவ அமைப்புகள் ஜார்க்கண்ட்டில் நேற்று எதிர்ப்பு பேரணிநடத்தின.

வடகிழக்கு பகுதியில் மிகவும் பழமையான அசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சென்னையிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சண்டிகர் பெங்களூரு போன்ற இடங்களில் உள்ளஇந்திய மருத்துவ சங்க அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் பணிபுரியும் மருத்துவர்களின் வேலை சூழல் பயிற்சி மருத்துவர்களின் வாழ்க்கை நிலை போன்றவற்றில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். குறிப்பாக 36 மணி நேர ஷிப்ட் நேரத்தின் போது மருத்துவர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை உறுதி செய்யவேண்டும். பணி இடங்களில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க புதிய கடுமையான சட்டங்களை மத்திய அரசு கொண்டு வரவேண்டும்.

doctors_pro.jpg

கரோனா வைரஸ் பரவலின் போது கொண்டு வரப்பட்ட அவசர சட்டம் போன்று மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்தியஅரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் முடித்து நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கொல்கத்தா பயிற்சிபெண் மருத்துவர் கொலையை கண்டித்து நேற்று முன்தினம் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பெரும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மருத்துவர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தியது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் நேற்றுகூறும்போது ‘‘பயிற்சி பெண் மருத்துவர் கொலை தொடர்பாக சந்தேகப்படும் சுமார் 30 பேரை அடையாளம் கண்டுள்ளோம். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/191362

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மே.வங்க அரசுக்கு எம்.பி. ஹர்பஜன் சிங் கடிதம்

19 AUG, 2024 | 02:20 PM
image

புதுடெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆம் ஆத்மி எம்.பி.யுமான ஹர்பஜன் சிங் மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

கொல்கத்தா மருத்துவமனை யில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. நம் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கிய இந்த வன்முறைச் செயல், ஒரு தனிநபருக்கு எதிரான கொடூரமான குற்றம் மட்டுமல்ல, நமது சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பின் மீதான கடுமையான தாக்குதல் ஆகும். இது நம்முடைய சமூகத்தில் ஆழமாக வேரூன்றிய பிரச்சினைகளின் பிரதிபலிப்பு ஆகும்.

நோயாளிகளின் உயிரை பாதுகாக்கக்கூடிய மருத்துவமனை வளாகத்திலேயே இதுபோன்ற கொடூரமான செயல் நடைபெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும், குற்றவாளிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மருத்துவர்கள் சாலையில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. நீதி கேட்டு நடைபெறும் இந்தப் போராட்டத்துக்கு முழு மனதுடன் என் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை நீதியின் முன் நிறுத்த மேற்கு வங்க அரசும் சிபிஐ அமைப்பும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/191429

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் மருத்துவர் பாலியல் படுகொலை விவகாரம்: கொல்கத்தாவில் பேரணி, கூட்டங்களுக்கு தடை - மேற்கு வங்க காவல் துறை உத்தரவு

19 AUG, 2024 | 12:31 PM
image

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் பேரணிகள், ஆர்ப்பாட்டம், கூட்டங்கள் நடத்த தடைவிதித்து அம்மாநில காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை ஆணையர் வினீத் குமார் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது:

பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 சட்டப்பிரிவு 163-ன் கீழ் மருத்துவமனை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போராட்டம், ஆர்ப்பாட்டம்,பேரணிகள் நடத்த தடைவிதிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஆக.18) முதல் அமலுக்கு வந்துள்ள இந்த தடை உத்தரவு வரும் சனிக்கிழமை (ஆக. 24) வரைஅமலில் இருக்கும். மருத்துவமனையை சுற்றி 5 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் கூடுவது இந்த உத்தரவின் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது.

 

கொல்கத்தாவின் குறிப்பிட்ட பகுதிகளில் லத்திகள் மற்றும் பிற ஆபத்தான ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பேரணி, ஆர்ப்பாட்டம், கண்டன கூட்டங்கள் மூலம் பொது அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல்ஏற்படுவதை தடுக்கவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

QDy98_Vj.jpg

ஆகஸ்ட் 9 அன்று கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரியில் பணியில் இருந்தபோது முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்தும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கொல்கத்தா, தெற்கு 24 பர்கானாஸ் உள்ளிட்டபகுதிகளில் அசம்பாவிதங்களைதடுக்கும் நோக்கில் மக்கள் கூடுவதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைவருக்கு சம்மன்: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் வதந்திகளை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி பாஜகதலைவர் லாக்கெட் சாட்டர்ஜிக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சாட்டர்ஜியுடன் சேர்த்து, பிரபல இருதயநோய் நிபுணரான டாக்டர் குணால் சர்க்கார், பூர்பா பர்தமான் மாவட்டத்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சுபர்ணா கோஸ்வாமி உட்பட 59 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கொலையான மருத்துவரின் அடையாளத்தை வெளிப்படுத்தியது, தவறான தகவல்களை சமூகவெளியில் பரப்பியது தொடர்பாக லால் பஜாரில் உள்ள கொல்கத்தாகாவல் துறை தலைமையகத்தில் அதிகாரிகள் முன்பாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்களுக்கு அனுப்பிய சம்மனில் காவல் துறை தெரிவி்த்துள்ளது.

https://www.virakesari.lk/article/191423

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஏராளன் said:

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் பேரணிகள், ஆர்ப்பாட்டம், கூட்டங்கள் நடத்த தடைவிதித்து அம்மாநில காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை ஆணையர் வினீத் குமார் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது:

முதலில் இந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார் என அறிக்கை சமர்ப்பித்த பொலிசாரைப் பிடித்து உள்ளே போடணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் மம்தா நடவடிக்கையில் திருப்தி இல்லை: கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை கண்ணீர்

20 AUG, 2024 | 10:17 AM
image

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வரின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக இல்லை என்று கொல்கத்தாவில் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி பெண் மருத்துவர்ஒருவர் பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள் போக்குவரத்து காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். எனினும் இந்த விவகாரம் பெரிதானதால் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அப்பெண்ணின் பெற்றோர் நேற்று முன்தினம் கூறியதாவது:

எனது மகளுக்கு நீதி வழங்குவது பற்றி முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகிறார், இது தொடர்பாக அவர்தெருவில் இறங்கி பேரணியும் சென்றார். ஆனால் நீதி கேட்டுபோராடும் சாமானிய மக்களை அவர் ஏன் சிறைக்கு அனுப்ப வேண்டும்? முதல்வரின் நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை. மாநில அரசு எங்களுக்கு வழங்கிய இழப்பீட்டை ஏற்க மறுத்துவிட்டோம். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு எங்கள் மகளின் உடல் உடனடியாக தகனம் செய்யப்பட்டதில் ஆதாரங்களை அழிக்கும் நோக்கம் உள்ளதா என்ற சந்தேகம் உள்ளது.

தகனம் செய்வதில் அவசரம்: தகன நிலையத்தில் 3 உடல்கள் இறுதிச் சடங்குக்காக காத்திருந்தன. ஆனால் அந்த உடல்களுக்கு முன்னதாகவே எங்கள் மகளின் உடல் தகனம் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் எங்களால் சிந்திக்கவோ செயல்படவோ முடியாத நிலையில் இருந்தோம். ஒரே குழந்தையை இழந்ததால் மிகுந்த மனவேதனையிலும் அதிர்ச்சியிலும் இருந்தோம்.

சிபிஐ விசாரணையை தொடங்குவதற்கு மாநில போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் எதுவும் வெளிவரவில்லை. மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் சிகிச்சை துறையில் இருந்தோ அல்லது கல்லூரியில் இருந்தோ யாரும் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. எனது மகளின் கொலைக்கு ஒட்டுமொத்த துறையும் பொறுப்பு. குற்றத்தில் அந்த துறையைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.

இந்த கடினமான காலத்தில் எங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக நிற்கும் அனைவரையும் எங்கள் மகன்கள் மற்றும் மகள்களாக கருதுகிறோம். இந்த வழக்கில் சிபிஐ நடத்தும் விசாரணையில் ஒரு திருப்புமுனை ஏற்படும் என நம்புகிறோம். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு கடுமையான தண்டனை உறுதி செய்யப்படும் என்று சிபிஐ எங்களிடம் உறுதி அளித்துள்ளது. இவ்வாறு அந்த மருத்துவரின் பெற்றோர் கூறினர்.

https://www.virakesari.lk/article/191499

கொல்கத்தா பெண் மருத்துவர் கழுத்தை நெரித்ததில் மூச்சு திணறி உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. கையால் கழுத்தை நெரித்ததில் மூச்சு திணறி அவர் உயிரிழந்ததாகவும் உடலின் உள்ளே 9 இடங்கள், வெளியே 16 இடங்களில் காயம் இருந்ததாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் மறுநாள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மருத்துவமனை வளாகத்தில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், பெண் பயிற்சி மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. அதன் விவரம்:

கடந்த 9-ம் தேதி மாலை 6.10 முதல் 7.10 மணி வரை பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. கையால் கழுத்தை நெரித்ததால், மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு நேர்ந்துள்ளது. இது கொலைதான். பாலியல் வன்கொடுமையும் நடந்ததற்கு மருத்துவ ரீதியிலான ஆதாரம் உள்ளது. பிறப்பு உறுப்பில் இருந்த 151 கிராம் திரவம் மற்றும் ரத்த மாதிரி ஆகியவை பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. உடலில் ரத்தம் உறைந்துள்ளது. கன்னம், உதடு, மூக்கு, கழுத்து, கைகள் என உடலின் வெளி பகுதியில் 16 இடங்களிலும், கழுத்து தசை, உச்சந்தலை என உள் பகுதியில் 9 இடங்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அவர் கடுமையாக போராடி உள்ளார் என தெரிகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில், ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவ துறை பேராசிரியர் அபூர்வ பிஸ்வா, இணை பேராசிரியர் ரினா தாஸ், என்ஆர்எஸ் மருத்துவ கல்லூரியின் தடயவியல் மருத்துவ துறை துணை பேராசிரியர் மொல்லி பானர்ஜி ஆகியோர் கையெழுத்திட்டு உள்ளனர்.

கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் விரல் நகத்தில் இருந்த ரத்த மாதிரியும், கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் ரத்த மாதிரியும் ஒன்றுபோல இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால், கொலையில் சஞ்சய் ராய்க்கு தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

இதற்கிடையே, சம்பவம் நடந்த 2 நாட்களில், ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் பதவி விலகினார். கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றும் அவர் விசாரணைக்கு ஆஜரானார்.

‘‘பெண் மருத்துவர் உயிரிழந்த தகவல்அறிந்து மருத்துவமனைக்கு வந்த அவரதுபெற்றோரை, மகளின் சடலத்தை பார்க்க 3 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வைத்தது ஏன்?’’ என்று அவரிடம் சிபிஐ அதிகாரிகள் கேட்டனர். கொலை குறித்து முதலில் உங்களுக்கு தகவல்கொடுத்தது யார், சடலம் இருந்தபகுதிக்கு அருகே உள்ள அறைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உத்தரவிட்டது யார் என்பன உள்ளிட்ட கேள்விகளும் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

பத்ம விருது பெற்ற 70 மருத்துவர்கள் பிரதமருக்கு கடிதம்: புதுடெல்லி: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பத்ம விருது பெற்ற 70 மருத்துவர்கள் இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கதிரியக்க நிபுணர் ஹர்ஷ் மகாஜன், எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் ரந்தீப் குலேரியா, ஐசிஎம்ஆர் முன்னாள் இயக்குநர் பல்ராம் பார்கவா, நரம்பியல் வல்லுநர் எம்.வி.பத்மா வஸ்தவா உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் கையெழுத்திட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பெண் மருத்துவர் கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதியை நிலைநாட்ட, நம் நாட்டின் தலைவர் என்ற வகையில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும். இதுபோன்ற கொடூரமான செயல், மருத்துவ சேவையின் அடித்தளத்தையே ஆட்டம்காண செய்துள்ளது. பெண்கள், சிறுமிகள், சுகாதார துறையினருக்கு எதிரான வன்முறைக்கு தீர்வு காண வேண்டிய அவசியத்தை இச்சம்பவம் உணர்த்துகிறது. சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய, மாநில அரசுகள் உடனே தனி சட்டம் இயற்ற வேண்டும்.

https://thinakkural.lk/article/308106

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொல்கத்தா பெண் மருத்துவரின் கடைசி வார்த்தைகள் என்ன? ஒரே மகளையும் இழந்த பெற்றோர் கண்ணீர்

கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 90 வன்புணர்வுகள் பதிவாகியுள்ளன. கட்டுரை தகவல்
  • எழுதியவர், கீர்த்தி துபே
  • பதவி, பிபிசி ஹிந்தி
  • 20 ஆகஸ்ட் 2024, 08:12 GMT
    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

“62 வயதில் எனது கனவுகள் அனைத்தும் சிதைந்துவிட்டன. குற்றவாளிக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.”

கொல்கத்தாவில் 31 வயதான பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது இந்தியாவையே உலுக்கியுள்ளது. அவரது தந்தை அவர்களின் பூர்வீக வீட்டில் எங்களுடன் பேசினார்.

சாதாரணமான அந்த வெள்ளை நிற வீடு அவரது மகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பிறகு, ஊடகத்தினரின் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளது.

பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவரின் அடையாளம் மற்றும் அவரது குடும்பத்தினரின் அடையாளம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்துவது இந்திய சட்டத்திற்கு எதிரானது என்பதால் இந்தக் கட்டுரையில் பெண் மருத்துவரின் குடும்பத்தினரின் பெயர்களும் மற்ற விவரமும் தரப்படவில்லை.

 

"எங்கள் மாநிலம், நமது நாடு, இந்த ஒட்டுமொத்த உலகமும் என் மகளின் மரணத்திற்கு நீதி கேட்கிறது" என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் தாயார் அவருக்குப் பக்கத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த ஜூனியர் மருத்துவர், ஆகஸ்ட் 9 அன்று இரவுப் பணியின்போது, அங்குள்ள கருத்தரங்கு கூடத்தில் (Seminar Hall) ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது கொடூரமான முறையில் அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நடந்த சில மணிநேரத்திற்கு முன்பு, இரவு 11 மணியளவில் அவர் தன் அம்மாவிடம் பேசியிருக்கிறார்.

அவரது தாயார் தொலைபேசியில் மகள் பேசிய கடைசி வார்த்தைகளை நினைவு கூர்ந்தார்: "தயவுசெய்து அப்பாவை சரியான நேரத்துக்கு மருந்துகளை சாப்பிட சொல்லுங்கள். என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்." என்று அந்த பெண் மருத்துவர் தனது தாயாரிடம் கூறியுள்ளார்.

 

“அதுதான் கடைசியாகப் பேசியது. அடுத்த நாள், அவரது போன் ஒலித்துக்கொண்டே இருந்தது." என்றார் அவர்.

அவருடைய தந்தைக்கு உயர் ரத்த அழுத்த பிரச்னை இருப்பதால், சரியான நேரத்தில் மாத்திரைகள் சாப்பிடுவது முக்கியம்.

"நான் சரியான நேரத்துக்கு மருந்துகள் எடுத்து கொள்ள வேண்டும் என்று சொல்லி கொண்டே இருப்பாள். ஒரு டோஸ் கூட தவற விடாமல் பார்த்துக் கொள்வாள்" என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் மகளை பற்றி நினைவு கூர்ந்தார் அவரது தந்தை.

“ஒருமுறை, நான் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்து தீர்ந்து போய் விட்டது. அதனை மறுநாள் வாங்கி கொள்ளலாம் என்று நினைத்தேன். அப்போது இரவு சுமார் 10 அல்லது 11 மணி இருக்கும். இதனை தெரிந்து கொண்ட என் மகள், 'அப்பா மருந்து இங்கே வரும் வரை இந்த வீட்டில் யாரும் சாப்பிட மாட்டார்கள்' என்றார் " என்று அன்றைய நிகழ்வை தந்தை நெகிழ்ச்சியுடன் கூறினார்.

"என் மகளின் இயல்பு இது தான். அவர் என்னை எதற்கும் கவலைப்பட விட மாட்டார்." என்றார் அவர்.

இந்திய தலைநகர் டெல்லியில் 2012 ஆம் ஆண்டு, ஓடும் பேருந்தில் 22 வயது மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவத்தை கொல்கத்தா பெண் மருத்துவரின் கொலை நினைவூட்டுகிறது. அவரது உடலில் கொடூரமான காயங்கள் இருந்தன.

கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பெண் மருத்துவரை சித்தரிக்கும் சிலையின் மணிக்கட்டில் ராக்கி கட்டிய மருத்துவர்

டெல்லி மருத்துவ மாணவி சம்பவத்தைத் தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்கள் இந்தியாவில் கடுமையாக்கப்பட்டன.

ஆனால் பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்படுவது அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், இந்திய பெண்களுக்கு நீதி கிடைப்பது இன்னும் சவாலாகவே உள்ளது.

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பது மருத்துவப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மீது மீண்டும் கவனத்தை திருப்பியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒரு முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும், பணியிடத்தில் மருத்துவப் பணியாளர்களை - குறிப்பாக பெண்களை - பாதுகாக்க தேசிய அளவிலான சட்டம் கொண்டு வர வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பணியிடத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மருத்துவர்களிடம் இந்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா உறுதியளித்துள்ளார்.

இந்தியா முழுவதும் மருத்துவ கல்வியை மேலாண்மை செய்யும் தேசிய மருத்துவ ஆணையம், பாதுகாப்பான பணியிடத்தை உறுதி செய்வது குறித்து அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது.

 

ஓர் உயிர் பறிபோனது

கொல்கத்தாவில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு குறுகிய தெருவில் பெண் மருத்துவரின் குடும்பத்தை நாங்கள் சந்தித்தோம்.

அங்கு போலீஸ் தடுப்பு போடப்பட்டிருந்தது. அதன் அருகே பல செய்தி சேனல்களின் கேமராக்கள் வரிசை கட்டி நின்றன. அங்கு ஒவ்வொரு கணத்தையும் கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருந்தன.

மறுபுறம், 10 முதல் 15 போலீஸ் அதிகாரிகள் காவலுக்கு நின்று கொண்டிருந்தனர்.

போலீஸ் போட்டிருக்கும் தடுப்பை தாண்டி பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் பூர்வீக வீட்டை ஊடகங்கள் அடைந்துவிட கூடாது என்பதே காவல் அதிகாரிகளின் நோக்கம்.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவு, 36 மணி நேரமாக பணியில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்ட அந்த ஜூனியர் டாக்டர், கருத்தரங்கு கூடத்தில் ஓய்வெடுக்கச் சென்றிருந்தார்.

காலையில், ஒரு பகுதி ஆடைகளுடன் அவரது இறந்த உடல் அங்கு கண்டெடுக்கப்பட்டது.

இந்த குற்றச்செயலின் கோர முகம் இந்தியா முழுவதும் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. கொல்கத்தாவில் மட்டுமல்ல, பல இந்திய நகரங்களிலும் போராட்டக்காரர்கள் நீதி கோரி பேரணி நடத்தினர்.

நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி கொல்கத்தாவில் ‘ரிக்ளைம் தி நைட்’ அணிவகுப்பு நடத்தப்பட்டது.

"பணியின் போது என் மகள் காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்பட்டிருக்கிறார். அதுவும் மருத்துவமனை வளாகத்தில்" என்று அவரது தந்தை கூறினார். பாதுகாப்பாக இருந்திருக்க வேண்டிய இடத்தில் இப்படி நடந்ததை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

 

பெண் மருத்துவரின் கடைசி வார்த்தைகள்

பெண் மருத்துவரின் இழப்பால் ஒட்டுமொத்த குடும்பமும் இடிந்து போயுள்ளது.

அவர் எப்பொழுதும் மற்றவர் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்பதை அவருடைய தந்தை நினைவு கூர்ந்தார்: “ என் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும் கட்டத்தில் இருந்தது. ஆனால் அவள், என் பொருளாதார சூழலை எண்ணி, 'அப்பா, உங்களால் எப்படி இந்த செலவை சமாளிக்க முடியும்? கவலைப்படாதே, நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று சொன்னாள்" என்கிறார் அவர்.

பெண் மருத்துவரின் தந்தை இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போதே பின்னே இருந்த தாயின் விசும்பல் கேட்டது.

ஒரு தையல் இயந்திரம், நூல் கண்டு, ஒரு கனமான இரும்பு, தரையில் சிதறிக் கிடந்த துணிகள்.. வரவேற்பறையில் தென்பட்ட இந்த காட்சி அவர் ஒரு தையல்காரர் என்பதை பிரதிபலித்தன. அவரின் வாழ்நாள் முழுவதும் அந்த தையல் மெஷின் முன் இருந்துள்ளார்.

வரவேற்பறைக்கு அடுத்ததாக ஒரு படிக்கட்டு மற்ற அறைகள் மற்றும் கொலையுண்ட பெண் மருத்துவரின் படுக்கையறை வரை செல்கிறது.

கடந்த 11 நாட்களாக அந்த அறைபூட்டியே கிடக்கிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குப் பிறகு அவரது பெற்றோர் மகளின் அறையில் கால் வைக்கவே இல்லை.

"என் மகள் சிறுமியாக இருந்தபோது, நாங்கள் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டோம்," என்று அவருடைய தந்தை நினைவு கூர்ந்தார். "அவளுக்கு ஐந்து வயது இருக்கும். அவளுக்கு பழங்கள் பிடிக்கும் குறிப்பாக மாதுளை என்றால் என் மகளுக்கு கொள்ளைப் பிரியம். அவளை அழைத்துச் செல்லும் போது வழியில், மாதுளையை பார்த்து, ‘பாபி, பூஜைக்கு மாதுளை பழம் வாங்க மாட்டாயா?’ என்று கேட்டாள்.”

இப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே தந்தை உடைந்து அழுதுவிட்டார்.

“அழாதே, தைரியமாக இரு” என்று அருகில் நின்றிருந்த உறவினர் அவரிடம் மெதுவாக சொன்னார்.

கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்தியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான பெண்களின் பாதுகாப்புக்காகவும் ரீக்லைம் தி நைட் அணிவகுப்பு நடந்தது.

இந்த நெருக்கடியான சூழலில் குடும்பத்தில் தைரியமாக இருக்க வேண்டிய கட்டாயம் அவரது தோள்களில் சுமையாக இருந்தது.

கொலையுண்ட பெண் மருத்துவர், அவர்களுக்கு ஒரே குழந்தை ஆவார். சிறு வயதிலிருந்தே படிப்பில் ஆர்வம் கொண்ட மகள், பள்ளியில் ஆசிரியர்களால் பாராட்டப்பட்டார்.

"என் மகள் சிறியவளாக இருந்த போது, அவளுடைய ஆசிரியர்கள் அவளை தூக்கிக்கொண்டு பள்ளிக்குச் செல்வார்கள்" என்று அவருடைய தந்தை நினைவு கூர்ந்தார்.

"நாங்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியில் இருந்து வந்தவர்கள். எங்களிடம் உள்ள ஒவ்வொரு பொருளும் நாங்களே பாடுபட்டு உருவாக்கியது." என்று அவர் கூறினார்.

"உங்களால் உங்கள் மகளை மருத்துவராக்க முடியாது" என்று சுற்றியிருக்கும் சிலர் கூறினார்கள். ஆனால் என் மகள் அவர்களது கூற்று தவறு என்று நிரூபித்து, அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தாள்." என்று கூறினார்.

அவருடைய அம்மா தன் மகளின் நினைவுகளை அமைதியாக தனக்குள் நினைவுப்படுத்தி கொண்டார்.

அவருடைய கைகளில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற வளையல்களுக்கு இடையில் இருந்த ஒரு தங்க வளையலை மீண்டும் மீண்டும் தொட்டு பார்த்து கொண்டார். அது அவரது மகள் வாங்கி கொடுத்த வளையல்.

ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் தனது மகள் நாட்குறிப்பில் எழுதி வைக்கும் குறிப்புகளை அவர் நினைவு கூர்ந்தார்.

“மருத்துவப் படிப்பில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்று எழுதியிருந்தார். அவர் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதுடன் எங்களையும் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார்”என்று தாயார் கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை - சந்தேகநபர் ஆபாச படங்களை பார்ப்பதற்கு அடிமையானவர் என உளவியல் அறிக்கையில் தகவல்

23 AUG, 2024 | 11:58 AM
image
 

கொல்கத்தாவில் பெண் மருத்துவரை பாலியல்வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த நபர் ஆபாசபடங்களை பார்ப்பவர் அதற்கு அடிமையானவர் என்பது உளவியல் பரிசோதனைகளின் போது தெரியவந்துள்ளது.

: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையின் முதுநிலை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் கைதாகியுள்ள சஞ்சய் ராய்க்கு நடத்தப்பட்ட மனோதத்துவ பரிசோதனையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

: சஞ்சாய் ராய்  ஆபாசபடங்களை பார்ப்பவர்படங்களைப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதில் அவர் மூழ்கி அதற்கு அடிமையாகியுள்ளார். அவருக்கு மிருகத்தனமான இச்சைகள் இருந்துள்ளன. அவர் எப்போதும் எந்தக் குற்றம் குறித்தும் கவலையோ, குற்ற உணர்வோ கொள்வதில்லை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சிபிஐ கோரிக்கைக்கு இணங்க சஞ்சய் ராய்க்கு மனோதத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதன் முடிவுகள் வெளியாகி மேலும் அதிர்ச்சியளிக்கின்றன.

முன்னதாக சஞ்சய் ராயிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சிபிஐ அதிகாரி ஒருவர், “சஞ்சய் ராயிடம் நாங்கள் விசாரணை மேற்கொண்டபோது அவர் எவ்வித வருத்தமும் இல்லாமல் நடந்தவற்றை சிறு நுணுக்கமான தகவல்களையும் விடாமல் எங்களிடம் தெரிவித்தார். அவர் அந்தச் சம்வபம் குறித்து எந்த கவலையும் கொண்டதாக எங்களுக்குத் தோன்றவில்லை” எனக் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது. 

ஆனால் அந்தப் பேட்டியில் அந்த அதிகாரி பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிபிஐ விசாரணையில், ஆகஸ்ட் 8 ஆம் தேதி பின்னிரவில் சஞ்சய் ராய் வடக்கு கொல்கத்தாவில் உள்ள பாலியல் தொழில் மையங்களுக்குச் சென்றதும் விசரணையில் தெரியவந்துள்ளது. மிகுந்த போதையில் இருந்த சஞ்சய் ராய் ஒரு பெண்ணிடம் நிர்வாண புகைப்படம் கோரியதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், போவானிபோர் பகுதியில் உள்ள சஞ்சய் ராயின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர், சக பணியாளர்களிடமும் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. சிபிஐ விசாரணை அறிக்கை நேற்று (ஆக.22) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

https://www.virakesari.lk/article/191770

Link to comment
Share on other sites

என் வீட்டில் இருந்து தள்ளி மூன்றாவது வீட்டில் வசிப்பர் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். தன் முகனூல் எங்கும் இக் கொலை தொடபான விவரங்களை பகிர்ந்து வருகின்றார்.
அவருடன் இக் கொலை தொடர்பாக கதைத்ததில், இது ஒரு திட்டமிடப்பட்ட கூட்டு பாலியல் வல்லுறவு கொலை என்கின்றார். அப் பெண்ணின் முதுகில் பலரது சப்பாத்துக் கால்களின் அடையாளங்கள் இருந்தன என்றும், நெஞ்சில் பலர் ஏறி மிதித்து அணுவணுகாக சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர் என்கின்றார். எல்லாவற்றையும் விட, இப் பெண்ணை வேறு இடத்திற்கு கொண்டு சென்று இக் கொடூரத்தை நிகழ்த்திய பின் மீண்டும் கொண்டு வந்து மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள அறை ஒனறில் போட்டுள்ளனர் என்கின்றார்.

மம்தாவின் நெருங்கிய உறவினர் ஒருவரின் திட்டத்தின் படியே இது நிகழ்ந்துள்ளது என்றும், இந்த கொலையை மூடி மறைக்க அனைத்து விதமான சாட்சியங்களையும் சான்றுகளையும் அழித்து விட்டனர் என்றும் சொன்னார்.

  • Like 1
  • Thanks 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை தொடர்பாக வெளியான தொலைபேசி உரையாடல் பதிவு

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பல தரப்பினரும் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

இவ்வாறிருக்க சம்பவத்தன்று, உயிரிழந்த மருத்துவரின் பெற்றோருக்கு மருத்துவமனை நிர்வாகம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறிய மூன்று தொலைபேசி உரையாடல் பதிவுகள் வெளியாகியுள்ளன.

அவ்வுரையாடலில், நடைபெற்ற கொலையை தற்கொலை அல்லது உடல்நலக் குறைவினால் மரணம் என மாற்ற முயற்சி செய்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

முதலாவது அழைப்பு 9ஆம் திகதி காலை 10.53க்கு எடுக்கப்பட்டுள்ளது.

1 நிமிடமும் 11 வினாடிகளும் நீடித்த அந்த உரையாடலில், மருத்துவமனை உதவிக் கண்காணிப்பாளராக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் பெண்ணொருவர், மகளுக்கு சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு பெண் மருத்துவரின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அடுத்த இரண்டாவது அழைப்பு 46 வினாடிகள் நீடித்துள்ளது. அதில் பெண் மருத்துவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி அழைப்பு 28 வினாடிகள் நீடித்துள்ளன.

அதில் உங்கள் மகள் தற்கொலை செய்து உயிரிழந்திருக்கலாம். பொலிஸார், மருத்துவமனை நிர்வாகம் என அனைவரும் இங்கு இருக்கிறோம். எனக் கூறி அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளிவந்த தகவல்களும் தொலைபேசி உரையாடல்களில் கூறப்பட்ட தகவல்களும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பில் சந்தேகம் எழுப்பிய விசாரணை அதிகாரியொருவர்,

அழைப்பில் பேசும் பெண், பொலிஸார் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் முன்னிலையில் பேசுவது தெரிகிறது.

ஏனென்றால் உயிரிழந்த மருத்துவரின் பெற்றோருக்கு அழைப்பு செல்வதற்கு முன்பே ‘இயற்கைக்கு மாறான மரணம்’ என தல்லாஹ் பொலிஸ் நிலைய குறிப்பேட்டில் பதிவேற்றப்பட்டுவிட்டது.

இதனால் குற்றத்தை மறைப்பதற்கு பொலிஸ் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளால் தற்கொலை என சதித் திட்டம் தீட்டப்பட்டதா என கேள்வியெழும்புவதாக” கூறியுள்ளார்.

https://thinakkural.lk/article/308653

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொல்கத்தாவில் கொடூரமாக கொல்லப்பட்ட பெண் மருத்துவர் : அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்

கொல்கத்தாவில் (Kolkata) படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவர் சம்பவத்தில், மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷை (Sandeep Ghosh) சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்திருந்தார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கொல்கத்தாவில் போக்குவரத்து காவல் தன்னார்வலராக பணியாற்றி வரும் சஞ்சய் ராய் (Sanjay Roy) என்பவரை காவல்துறையினர் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்திருந்தனர்.

தொடர் விசாரணை

அத்தோடு, சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட போது மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் (Sandeep Ghosh) உட்பட ஏழு பேரிடமும் மற்றும் சஞ்சய் ராயிடமும் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள சிபிஐக்கு கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் எழுந்த பலதரப்பட்ட சந்தேகங்களின் அடிப்படையில் சந்தீப் கோஷிடம் 18 நாட்கள் தொடர் விசாரணை நடத்தப்பட்டதுடன் இரண்டு முறை உண்மை கண்டறியுடம் சோதணையும் நடத்தப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் கொடூரமாக கொல்லப்பட்ட பெண் மருத்துவர் : அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல் | Kolkata Doctor Case

அத்தோடு, குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் தான் ஒரு நிரபராதி எனவும், தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லையெனவும் அத்தோடு சிலரால் திட்டமிட்டு தான் குற்றவாளியாக சித்தரிக்கப்படுவதாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இருப்பினும், அவருக்கு சம்பவத்துடன் தொடர்பிருப்பதாக DNA மற்றும் தடயவியல் அறிக்ககைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட விசாரணை

இதனடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி குறித்த சம்பவத்துடன் வேறு யாருக்கும் தொடர்பிருப்பதாக தெரியவராத நிலையில் தற்போது சந்தீப் கோஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரங்களில் சந்தீப் கோஷின் வீடுகள் உட்பட 16 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் கொடூரமாக கொல்லப்பட்ட பெண் மருத்துவர் : அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல் | Kolkata Doctor Case

இந்தநிலையில், இரண்டு வார கால விசாரணைகளின் பின்பு நிதி முறைக்கேடு விவகாரத்திலும் மற்றும் அனுமதி இல்லாமல் இறந்த உடல்களை விற்பனை செய்தல் போன்ற குற்றசாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இதற்கு முன்னாள் சந்தீப் கோஷ் மருத்துவ சங்கத்தால் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

https://ibctamil.com/article/kolkata-doctor-case-1725388448#google_vignette

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொல்கத்தா மருத்துவர் கொலை: காவல்துறை லஞ்சம் கொடுக்க முயன்றதாக பெண்ணின் தந்தை குற்றச்சாட்டு

05 SEP, 2024 | 11:02 AM
image
 

கொல்கத்தா: கொல்கத்தாவில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக மாறிவருகிறது. கொல்கத்தா காவல்துறை தங்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஆக.9-ம் தேதி 31 வயதான முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கொல்கத்தா ஆா்.ஜி.கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கைதான முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷை 8 நாள்கள் காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது. இந்த நிலையில், நிதி முறைகேடு வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சந்தீப் கோஷ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். சிபிஐ விசாரணையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி. ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் செப். 6-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதனையொட்டி, புதன்கிழமை இரவு கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அப்பெண்ணின் தந்தை, “போலீஸார் ஆரம்பத்திலிருந்தே, இந்த வழக்கை மூடிமறைக்க முயல்கின்றனர். பிரேத பரிசோதனைக்காக உடலை எடுத்துச் செல்லும் போது எங்களை அவர்கள் உடலைப் பார்க்க அனுமதிக்கவில்லை.

நாங்கள் காவல் நிலையத்தில்தான் காத்திருந்தோம். பின்னர், உடல் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது, ஒரு மூத்த போலீஸ் அதிகாரி எங்களுக்கு பணம் கொடுத்தார், நாங்கள் அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டோம்” என்றார். இச்சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/192890

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.