Jump to content

இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை டெஸ்ட்: இந்திய அணி எப்படித் தயாராகிறது? வங்கதேசத்தின் 24 ஆண்டு தாகம் நிறைவேறுமா?

சென்னை டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்தி ராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. அதில் முதல் போட்டி வரும் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது.

2வது டெஸ்ட் போட்டி வரும் 27-ஆம் தேதி உத்தரப்பிரசேதம் மாநிலம் கான்பூரில் நடக்கிறது.

2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க இரு அணிகளுக்கும் இந்தத் தொடரின் வெற்றி அவசியம் என்பதால் தீவிரமாக இரு அணிகளும் தயாராகி வருகின்றன.

பாகிஸ்தான் பயணம் சென்ற வங்கதேச கிரிக்கெட் அணி அந்நாட்டு மண்ணில் வைத்தே பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், தற்போது இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

 

இதுவரை டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை ஒருமுறை கூட வங்கதேசம் வென்றதில்லை என்ற வரலாறு இந்திய அணிக்கு சாதகமாக இருக்கிறது.

இருப்பினும் சென்னை மைதானத்தில் சுழற்பந்துவீச்சில் மாயஜாலம் நிகழ்த்த இந்திய அணியில் இருப்பது போன்று வலுவான சுழற்பந்துவீச்சாளர்கள் வங்கதேச அணியிலும் உள்ளனர்.

ஆதலால் சென்னையில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சுழற்பந்துவீச்சில் எந்த அளவு நெருக்கடி அளிக்குமோ அதே அளவு அழுத்தத்தை வங்கதேசமும் அளிக்கும்.

கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இந்திய அணியுடன் 13 டெஸ்ட் போட்டிகளில் வங்கதேசம் அணி விளையாடியுள்ளது. ஆனால், இதுவரை ஒரு போட்டியிலும் கூட அது வெற்றி பெறவில்லை, இந்திய அணி 11 வெற்றிகளைப் பதிவு செய்து ஆதிக்கம் செய்கிறது.

கவனிக்கப்படும் வீரர்கள்

இந்திய அணியில் இரு வீரர்கள் நீண்ட இடைவெளிக்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்கிறார்கள். விராட் கோலி, ஏறக்குறைய 9 மாதங்களுக்குப்பின் டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார். அடுத்ததாக ரிஷப் பந்த், கார் விபத்துக்குப்பின் டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடாமல் இருந்தார். தற்போது அவர் 2 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இருவரின் பேட்டிங் திறமையும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

ஏனென்றால், கோலி இடத்துக்கு ஷூப்மன் கில், சர்ஃபிராஸ் கான், கே எல் ராகுலும்; ரிஷப் பந்த் இடத்துக்கு துருவ் ஜூரெல், கே எல் ராகுலும் போட்டியிடுகிறார்கள். ஆதலால் இருவரும் சிறப்பாக செயல்பட வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் ஜஸ்ப்ரீத் பும்ரா டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். இடதுகை பந்துவீச்சாளர் யாஷ் தயால் முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது தவிர இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக மோர்ன் மோர்கல் புதிதாக நியமிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.

"இந்திய பந்துவீச்சாளர்கள் ஏற்கெனவே திறமையாகப் பந்துவீசுகிறார்கள். அவர்களின் திறமையை மெருகேற்றவே முடிந்தவரை உழைப்பேன் பெரிதாக மாற்றம் செய்யமாட்டேன்", என மோர்கல் தெரிவித்துள்ளார்.

 
இந்தியா- வங்கதேசம்  கிரிக்கெட்

பட மூலாதாரம்,BCCI

படக்குறிப்பு, சேப்பாக்கம் மைதானத்தில் இருவிதமான பிட்ச் இருக்கிறது. ஒன்று கருப்பு மண் கொண்ட பிட்ச், மற்றொன்று செம்மண் பிட்ச்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

வங்கதேசத்துடன் இந்த 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்தவுடன், நியூசிலாந்து அணியுடன் அக்டோபர் மாதத்தில் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கிறது.

இந்தத் தொடர் முடிந்தவுடன், ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாட இருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இந்திய அணிக்கு இந்த 10 போட்டிகளும் மிகுந்த முக்கியமானதாகும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 74 புள்ளிகளுடன், 68.5% புள்ளிகள் சதவீதமும் (PCT) பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்க குறைந்தபட்சம் 7 டெஸ்ட் போட்டிகளில் வெல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது, அப்போதுதான் புள்ளிகள் சதவீதத்தை 69.3 ஆக உயர்த்தி இறுதிப்போட்டிக்குள் செல்ல முடியும்.

சென்னையில் பயிற்சி

ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி வீரர்கள் விராத் கோலி, யஷஷ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, கே.எஸ்.ராகுல் உள்ளிட்ட பல வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த சில நாட்களாக தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் நடக்கும் டெஸ்ட் போட்டி என்பதால் உள்ளூர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட அதிக வாய்ப்புள்ளது. இதுதவிர கடந்த சில நாட்களாக ஜெய்ஸ்வால் பந்து வீசிப் பயிற்சி எடுத்து வருகிறார். இதனால் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கப்படலாம்.

சேப்பாக்கம் மைதானத்தில் சுழற்பந்துவீச்சு நன்கு எடுபடும் என்பதால், கடந்த சில நாட்களாக சுழற்பந்துவீச்சுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால், ரோஹித், கோலி, கில் ஆகியோர் பயிற்சி எடுத்தனர். இவர்களுக்கு தமிழக கிரிக்கெட் வீரர்கள் அஜித் ராம், எம். சித்தார்த் ஆகியோர் வலைபயிற்சி பந்துவீச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர வருண் சக்ரவர்த்தி, அஸ்வினைப் போல பந்துவீசக்கூடிய மும்பை பந்துவீச்சாளர் ஹிமான்சு சிங்கும் பந்து வீசினர்.

 
சேப்பாக்கம் மைதானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானம் (2016 புகைப்படம்)

சேப்பாக்கமும் – இந்திய அணியும்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 1934-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டுவரை 36 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி மட்டும் 16 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது. அதிலும் கடந்த 2001-ஆம் ஆண்டிலிருந்து சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் 6 போட்டிகளை இந்திய அணி வென்றுள்ளது.

முந்தைய செயல்பாடுகளை பொறுத்தவரை, உள்நாட்டில் நடைபெறும் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு அதிக வெற்றிகளை குவித்துள்ளது. அதனால் வங்கதேச அணிக்கு இந்திய அணியை சமாளிப்பது பெரிய சவாலாக இருக்கலாம்.

சேப்பாக்கத்தின் பிட்ச் எப்படி உள்ளது?

சேப்பாக்கம் மைதானத்தில் இருவிதமான பிட்ச் இருக்கிறது. ஒன்று கருப்பு மண் கொண்ட பிட்ச், மற்றொன்று செம்மண் பிட்ச். இந்த இரு ஆடுகளமும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானவை. மைதானத்தின் மையத்தில் புற்கள் கொண்ட ஒரு பிட்ச் இருக்கிறது. இந்த பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானதாக அமைந்தாலும், அதில் பெரும்பாலும் போட்டிகள் நடத்தப்படுவதில்லை

இரு அணிகளிலுமே சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் டாஸ் வெல்வது முக்கியமானதாக இருக்கும்.

கடந்த சில நாட்களாக ஜெய்ஸ்வால் பந்து வீசிப் பயிற்சி எடுத்து வருகிறார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த சில நாட்களாக ஜெய்ஸ்வால் பந்து வீசிப் பயிற்சி எடுத்து வருகிறார்.

ரோஹித் சாதிப்பாரா?

வங்கதேச அணிக்கு எதிராக கேப்டன் ரோஹித் சர்மா நீண்டகாலமாக அவப்பெயரை சுமந்து வருகிறார்.

பல அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அரைசதம், சதம் அடித்தாலும் வங்கதேசத்துக்கு எதிராக மட்டும் அவர் இன்னும் ஒரு அரைசதம் கூட அடித்ததில்லை.

அதிலும் குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ரோஹித் சர்மா, 33 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார் அதிகபட்சம் 21 ரன்கள்தான். ஆதலால், வங்கதேச அணிக்கு எதிராக ரோஹித் சர்மாவின் ஆட்டம் உன்னிப்பாக கவனிக்கப்படும்.

 
கோப்புக்காட்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புக்காட்சி

மைல்கல் எட்டுமா இந்திய அணி

வங்கதேசத்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஒரு வெற்றி பெற்றால் டெஸ்ட் போட்டிகளில் 178 வெற்றிகளை இந்திய அணி எட்டும். இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் தோல்விகளைவிட அதிகமான வெற்றிகளை பெற்ற அணி, என்ற வரிசையில் இடம்பெறும்.

24 ஆண்டுகள் தாகம் நிறைவேறுமா

வங்கதேச அணி 24 ஆண்டுகளாக இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை ஒரு டெஸ்ட் வெற்றிகூட பெறாதநிலையில் வெற்றி தாகத்துடன் அந்த அணி களமிறங்குகிறது.

பாகிஸ்தானுக்கு எதிராக2-0 என டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனையுடன் இந்திய அணியை வங்கதேசம் எதிர்கொள்கிறது. இதனால், வங்கதேச அணியை எளிதாக எடைபோட முடியாது. இந்திய அணிக்கு இணையாக வலுவான சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளது வங்கதேசம். நஜ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச அணியும் சென்னை வந்துவிட்டனர். பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் ஆடாத தொடக்க பேட்டர் மெகமதுல் ஹசன் இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடுகிறார்.

இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம் காயத்தால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் இவருக்குப் பதிலாக கலீல் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். ஜக்கர் அலி அனிக் எனும் இளம் வயது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இந்திய அணிக்கு எதிராக முதல்முறையாக வங்கதேச அணிக்காக களமிறங்க உள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வங்கதேசத்திற்கு எதிரான தனது 101-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சாதிப்பாரா?- அவருக்கு நிறைவேறாத ஒரே ஆசை என்ன?

ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 516 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்தி ராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

“எனக்காக நான் எந்த இலக்கும் நிர்ணயிப்பதில்லை. கும்ப்ளே அவருடைய சாதனையை நான் முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். என்னைப் பொருத்தவரை இலக்குகளை நிர்ணயித்து, அதை அடைந்தபின் கிரிக்கெட் மீதான காதலை நான் இழக்க விரும்பவில்லை.

கடினமான காலங்களுக்குப் பின் என் வாழ்க்கை மாறிவிட்டது என்பதை நான் அறிவேன். கிரிக்கெட் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை இறுகப்பிடித்துள்ளேன். எப்போது அந்த பிடி தளர்கிறதோ அப்போது விலகுவேன்”, என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். தன்னுடைய ஓய்வு குறித்தும், கிரிக்கெட் மீதான காதல் குறித்தும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார்.

சென்னையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான அஸ்வின் இன்று (செப்டம்பர் 17) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு 38 வயதாகிறது.

செப்டம்பர் 19-ஆம் தேதி அன்று இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற இருக்கிறது. அதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி வீரர்களோடு சேர்ந்து கடந்த சில நாட்களாக அஸ்வின் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

 

ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கை

அஸ்வின் 1986-ஆம் ஆண்டு, செப்டம்பர் 17 ஆம் தேதி அன்று சென்னையில் பிறந்தார். அவரது தந்தை ரவிச்சந்திரன் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர். சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த அஸ்வின், பிடெக் தகவல்தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

அஸ்வின் தனது 9 வயதிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். அஸ்வினுக்கு சந்திரசேகர் ராவ், சி.கே.விஜயகுமார் ஆகியோர் கிரிக்கெட் பயிற்சி அளித்துள்ளனர். சுழற்பந்துவீச்சைத் தேர்ந்தெடுக்கும் முன், மித வேகப்பந்து வீச்சாளராகவே அஸ்வின் பயிற்சி எடுத்து வந்தார்.

சிஎஸ்கே முதல் சர்வதேச போட்டிகள் வரை

2010-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சைப் பார்த்த பிசிசிஐ (BCCI) தேர்வுக்குழுவினர் இந்திய அணிக்காக விளையாட அஸ்வினை தேர்ந்தெடுத்தனர்.

2010-ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயில் நடந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதன்முறையாக களமிறங்கினார். அதன்பின் 2010 ஆசியக் கோப்பையிலும் இந்திய அணிக்காக விளையாடிய அஸ்வின், உள்நாட்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும் தேர்வானார். நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரிலும் அஸ்வின் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் இரு போட்டிகளில் மட்டுமே விளையாட அஸ்வினுக்கு வாய்ப்புக் கிடைத்தாலும் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.

 
அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2010-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அஸ்வின் விளையாடினார்.

டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம்

2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில்தான் அஸ்வின் முதன்முதலாக இந்த வகை கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகினார்.

முதல் போட்டியிலேயே 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டநாயகன் விருதை அஸ்வின் வென்றார். மும்பையில் நடந்த இந்த தொடரின் 3வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சதம் அடித்து, 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி புதிய சாதனையை படைத்தார். 1962-ஆம் ஆண்டிற்கு பின், ஒரே போட்டியில் சதம் அடித்து 5 விக்கெட்டுகளையும் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார்.

அனில் கும்ப்ளே இடத்தை நிரப்பிய அஸ்வின்

இந்திய அணிக்குள் அஸ்வின் அறிமுகமாகும்போது சற்று நெருக்கடியான சூழல் இருந்தது. அனில் கும்ப்ளேயின் கிரிக்கெட் பயணம் முடிந்து அடுத்ததாக ஒரு வலுவான பந்துவீச்சாளரை இந்திய அணி தேடியபோது அஸ்வினை கண்டுபிடித்தது.

ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் தவிர சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லாத காலகட்டமாக இருந்தது. அந்த நேரத்தில் இந்திய அணிக்குள் வந்த அஸ்வின், கும்ப்ளே இடத்தை ஏறக்குறைய நிறைவு செய்துள்ளார்.

அஸ்வின் தனது முதல் 16 டெஸ்ட் போட்டிகளில் 9 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். டெஸ்ட் போட்டிகளில் அதிகவேகமாக 400 - 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார்.

 
அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணிக்குள் அஸ்வின் அறிமுகமாகும்போது சற்று நெருக்கடியான சூழல் இருந்தது.

500 விக்கெட்டுகள் சாதனை

அஸ்வின் தனது 98வது டெஸ்ட் போட்டியில் 500வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய அளவில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

சர்வதேச அளவில் இலங்கை முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், ஆஸ்திரேலிய ஜாம்பவான் மறைந்த ஷேன் வார்ன், இந்தியாவின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயான் ஆகியோர் இவருக்கு முன் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த அஸ்வின்

அனில் கும்ப்ளே உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த சாதனையை அஸ்வின் முறியடித்து, தற்போது 363 விக்கெட்டுகளுடன் அடுத்த போட்டியில் களம் காண உள்ளார்.

இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 516 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார்.

 
சென்னை டெஸ்ட் கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இடக்கை பேட்டர்களின் எதிரி

அஸ்வின் எடுத்த விக்கெட்டுகளில் அதிகபட்ச விக்கெட்டுகள் இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் தனது 516 விக்கெட்டுகளில் 256 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் விக்கெட் எடுக்கும் சதவீதம் 46.6% ஆக இருக்கிறது.

இந்திய கிரிக்கெட்டில் தன்னை காலத்துக்கு ஏற்றார்போல் வளர்த்துக் கொண்டு, தகவமைத்துக் கொண்டு நுட்பமான பந்துவீச்சையும், கூக்ளி, கேரம் பால், பந்தை டாஸ் செய்வது, நக்குல் பால் என வெவ்வேறு முறைகளில் அஸ்வின் பந்து வீசக்கூடியவர்.

இந்திய அணியில் அஸ்வின் கடந்த 2012-ஆம் ஆண்டு அறிமுகமாகி ஏறக்குறைய 12 ஆண்டுகளாக தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார்.

காத்திருக்கும் சாதனைகள்

உள்நாட்டு மண்ணில் கும்ப்ளே 476 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்து வருகிறார். அதை முறியடிக்க அஸ்வினுக்கு தற்போது 22 விக்கெட்டுகள்தான் தேவைப்படுகிறது.

இதுவரை வங்கதேசத்குக்கு எதிராக 6 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அஸ்வின் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவரை வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியா அணி பந்துவீச்சாளராக ஜாகீர்கான் உள்ளார். அவர் எடுத்த 31 விக்கெட்டுகளை முறியடிக்க அஸ்வினுக்கு இன்னும் 9 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது.

அஸ்வின் ஒரே ஆசை என்ன

சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அஸ்வின் தனக்கு ஒரே ஒரு சாதனையை மட்டும் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். அது குறித்து அவர் கூறுகையில் “ டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் எடுக்க வேண்டும் என்பதே எனது ஆசை. ஆனால் இதுவரை அது நடக்கவில்லை. இனிமேல் அது நடக்கப்போவதும் இல்லை” என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம் : 6 மாதங்களின் பின் டெஸ்ட் அரங்கில் இந்தியா

Published By: DIGITAL DESK 7  19 SEP, 2024 | 10:11 AM

image

(நெவில் அன்தனி)

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் 68.52 சதவீத புள்ளிகளுடன் முதலாம் இடத்தில் இருக்கும் இந்தியா, அதனைத் தக்கவைக்கும் முனைப்புடன் பங்களாதேஷுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இன்று ஆரம்பிக்கவுள்ளது.

இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ஆறு மாதங்களுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் இருந்துவரும் இந்தியா, இந்த டெஸ்ட் தொடருடன் அடுத்த மூன்றரை மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில்  விளையாடவுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 13 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில்தானும் வெற்றிபெறாமல் இருந்த பங்களாதேஷ், அண்மையில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் தடவையாக வெற்றிபெற்ற சூட்டோடு இந்தியாவை வீழ்த்தும் குறிக்கோளுடன் இந்தத் தொடரை எதிர்கொள்கிறது.

அதேவேளை, சில கால இடைவெளிக்குப் பின்னர் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடவுள்ள இந்தியா, தனது வெற்றிக் கணக்கை மீண்டும் ஆரம்பிக்க முயற்சிக்கவுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான 14ஆவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது வெற்றியை ஈட்டிய  பங்களாதேஷ், இந்தியாவுக்கு எதிராகவும் 14ஆவது போட்டியில் முதலாவது வெற்றியை ஈட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதுவரை இந்தியாவுக்கு எதிராக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பங்களாதேஷ் அவற்றில் 11 டெஸ்ட்களில் தோல்விகளைத் தழுவியுள்ளது. மற்றைய 2 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளது.

இந்தியாவில் விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் பங்களாதேஷ் தோல்விகளையே தழுவியுள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் இந்தியாவுக்கு சாதகமான முடிவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மேலும் இந்தியா கடந்த 10 வருடங்களில் சொந்த மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே தோல்வி அடைந்துள்ளது. ஆனால் இந்த காலப்பகுதியில் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரிலும்  இந்தியா  தோல்வி அடையவில்லை.

இந்தத் தொடரிலும் தனது வெற்றி அலையைத் தொடர்வதற்கு இந்தியா முயற்சிக்கும் அதேவேளை, பங்களாதேஷ் பலத்த சவாலாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி முழு பலத்துடன் இந்தத் தொடரை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரை முன்னிட்டு விராத் கோஹ்லி, கே.எல். ராகுல், ரிஷாப் பான்ட் ஆகியோர் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

விராத் கோஹ்லி கடைசியாக டெஸ்ட் போட்டி ஒன்றில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக விளையாடியிருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியில் மாத்திரம் ராகுல் விளையாடியிருந்தார்.

2022இல் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ரிஷாப் பான்ட், கிட்டத்தட்ட 2 வருடங்களின் பின்னர் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாட தயாராகிறார். இதனிடையே இந்த வருடம் ஐபிஎல், சர்வதேச ரி20, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

இவர்கள் மூவரும் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் இடம்பெறுவதன் மூலம் அணி மேலும் பலமடையும் என நம்பப்படுகிறது.

1909_india.png

அணிகள்

இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), யஷஸ்வி ஜய்ஸ்வால், ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, கே.எல். ராகுல், ரவிந்த்ர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், மொஹமத் சிராஜ், ஜஸ்ப்ரிட் பும்ரா.

பங்களாதேஷ்: ஷத்மான் இஸ்லாம், ஸக்கிர் ஹசன், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (தலைவர்), மொமினுள் இஸ்லாம், முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ், ஷக்கிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அஹ்மத், ஹசன் மஹ்முத், நாஹித் ரானா அல்லது தய்ஜுல் இஸ்லாம்.

1909_bangladesh.png

https://www.virakesari.lk/article/194065

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணியை அபார சதத்தால் அஸ்வின் காப்பாற்றியது எப்படி? - சதம் அடித்த பிறகு அவர் கூறியது என்ன?

இந்திய அணியை அபார சதத்தால் காப்பாற்றிய அஸ்வின்: கோலி, கில், ரோஹித் ஏமாற்றம்: வங்கதேசம் திணறல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்தி ராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ரவிச்சந்திரன் அஸ்வினின் சதம், ரவீந்திர ஜடேஜாவின் பொறுப்பான பேட்டிங், வலுவான பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி பெரிய சரிவிலிருந்து தப்பித்தது.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாளான இன்று ஆட்டநேர முடிவில் இந்திய 80 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் சேர்த்து வலுவான நிலையை எட்டியுள்ளது.

இந்திய அணியின் டாப்-ஆர்டர் பேட்டர்கள் விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்து அணியை நெருக்கடியில் தள்ளினர். நண்பகல் உணவு இடைவேளைக்குள் 3 விக்கெட்டுகளையும், பிற்பகல் தேநீர் இடைவேளைக்குள் அடுத்த 3 விக்கெட்டுகள் என 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது இந்திய அணி.

ஆட்டத்தின் போக்கைப் பார்த்தபோது, இந்திய அணி 200 ரன்களுக்குள் முதல் இன்னிங்ஸில் சுருண்டுவிடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், 7-வது விக்கெட்டுக்கு ஆபத்பாந்தனாக வந்த அஸ்வின், ரவீந்திர ஜடேஜா கூட்டணி இந்திய அணியை பாதாளத்திலிருந்து மீட்டது.

தவறவிட்ட வங்கதேசம்

இந்திய அணியைக் காப்பாற்றிய அஸ்வின்: கோலி, கில், ரோஹித் ஏமாற்றம்: வங்கதேசம் திணறல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஹசன் முகமது

வங்கதேசத்தின் பந்துவீச்சாளர் ஹசன் முகமது சிறப்பாகப் பந்துவீசி துவக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருக்கு மற்ற பந்துவீச்சாளர்களும் ஒத்துழைத்திருந்தால் ஆட்டம் வேறுவிதமாக திரும்பியிருக்கும். ஆனால், கிடைத்த வாய்ப்பை வங்கதேச அணியின் மற்ற பந்துவீச்சாளர்கள் தவறவிட்டனர்.

உணவு இடைவேளைக்கு பிறகு வங்கதேச பந்துவீச்சாளர்கள் கூட்டுமுயற்சியுடன் பந்துவீசி இந்திய பேட்டிங் வரிசைக்கு கடும் சவால் அளித்தனர். வங்கதேச பந்துவீச்சாளர்கள் முயற்சிக்கு பலன் கிடைத்து 3 விக்கெட்டுகளை அள்ளினர்.

முழுநேர பேட்டர்களான ரோஹித், கோலி, கில் போன்றோர் களத்தில் சில நிமிடங்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நிலையில், ஆல்ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜாவும், அஸ்வினும் அணியை மாபெரும் சரிவிலிருந்து மீட்டனர்.

'சென்னை எப்போதுமே ஸ்பெஷல்தான்'

இந்திய அணியை அபார சதத்தால் காப்பாற்றிய அஸ்வின்: கோலி, கில், ரோஹித் ஏமாற்றம்: வங்கதேசம் திணறல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீட்டு, சதம் அடித்த அஸ்வின் பெவிலியன் வந்தபின் அளித்த பேட்டியில் “சென்னையில் விளையாடுவது எப்போதுமே ஸ்பெஷலான தருணம். இதே மைதானத்தில்தான் கடந்தமுறை சதம் அடித்தேன். டி20 போட்டி விளையாடிவிட்டு அதிலிருந்து வந்து டெஸ்ட் தொடருக்கு தயாராகினேன். பழைய சென்னை விக்கெட்டில் பந்து பவுன்ஸ் ஆகும், எளிதாக விளையாடலாம், ஆனால், இந்த விக்கெட்டில் பேட் செய்வது கடினமாக இருந்தது.

ஜடேஜா எனக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்து பேட் செய்து உதவினார். ஒரு கட்டத்தில் என்னால் ஓட முடியாத அசதி ஏற்பட்டபோது, ஜடேஜா ஸ்ட்ரைக்கை எடுத்து எனக்கு உதவினார். இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த பேட்டர்களில் ஒருவர் ஜடேஜா. நாங்கள் எந்த 2 ரன்களையும் 3 ரன்களாக மாற்றவில்லை, இருவருக்கும் ஓய்வு தேவைப்பட்டது. பிட்ச், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் ஒத்துழைக்கும். புதியபந்து நாளை சற்று அதன் வேலையை காண்பிக்கும், சமாளித்து ஆட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

 

ரோஹித் ஏமாற்றம்

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷாண்டோ பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். .

இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆட்டத்தைத் தொடங்கினர். ரோஹித் சர்மா நிதானமாக பேட் செய்ய, ஜெய்ஸ்வால் கிடைத்த வாய்ப்புகளில் பவுண்டரிகளுக்கு பந்தை விரட்டி ரன் சேர்த்தார்.

ரோஹித் சர்மாவை தவறு செய்ய வைக்க வங்கதேச பந்துவீச்சாளர்கள் கடுமையாக முயன்றனர். பின்னர் ரோஹித் சர்மா 19 பந்துகளைச் சந்தித்தநிலையில் 6 ரன்னில் பெவிலியன் திரும்பினார். வங்கதேசத்துக்கு எதிராக ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்ற பெயருடன் ரோஹித் வெளியேறினார்.

2வது விக்கெட்டுக்கு வந்த கில், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். பெரும்பாலும் 3வது பேட்டராக விராட் கோலிதான் கடந்த காலங்களில் களமிறங்கி செயல்பட்டிருந்தார். ஆனால் இந்த முறை சுப்மான் கில் களமிறங்கினார். 8 பந்துகளைச் சந்தித்த சுப்மான் கில், ஒரு பந்தில் கூட தனது வலிமையான ஷாட்களை வெளிப்படுத்த முடியாமல் திணறினார்.

இந்திய அணியைக் காப்பாற்றிய அஸ்வின்: கோலி, கில், ரோஹித் ஏமாற்றம்: வங்கதேசம் திணறல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுப்மான் கில் டக்அவுட்

ஹசன் மெஹ்மது லெக்திசையில் லேசாக விலக்கி வீசிய பந்தை கில் பவுண்டரிக்கு அடிக்க முயன்று தட்டிவிட்டார். ஆனால், அது விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸிடம் கேட்சாகவே, கில் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 8-வது ஓவரில் 2 விக்கெட்டை இழந்தது.

 

9 நிமிடங்களில் வெளியேறிய கோலி

அடுத்ததாக விராட் கோலி களமிறங்கினார். 8 மாதங்களுக்குப் பின் டெஸ்ட் போட்டியில் கோலி பங்கேற்பதால், பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. சென்னையில் சில நாட்களாக தீவிரமான பயிற்சியில் கோலி ஈடுபட்டதால், அவரின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் இன்று அதிகளவில் வந்திருந்தனர்.

ஆனால், களத்தில் 9 நிமிடங்கள் மட்டுமே இருந்த கோலி 6 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

ரிஷப்பந்த், ஜெய்ஸ்வால் நம்பிக்கை

4வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால்-ரிஷப் பந்த் கூட்டணி சேர்ந்தனர். 600 நாட்களுக்குப்பின் ரிஷப் பந்த் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியதால் அவர் மீதான எதிர்பார்ப்பு இருந்தது. இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் இருவரும் சேர்ந்து ஓரளவு ரன்களைச் சேர்த்ததால் ரன்ரேட் சற்று உயர்ந்தது.

இருவரும் அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து ரன்ரேட்டை சற்று மேலே கொண்டு வந்தனர். இருவரையும் பிரிக்க வங்கதேச பந்துவீச்சாளர்கள் சிறிது சிரமப்பட்டு, பந்துவீச்சை மாற்றி, மாற்றி வீசினர்.

விக்கெட் சரிவு

உணவு இடைவேளைக்குப்பின் ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால் இருவரையும் பிரிக்கும் விதத்தில் வங்கதேச பந்துவீச்சாளர்கள் நெருக்கடியாக வீசினர். குறிப்பாக உணவு இடைவேளைக்குப் பின் தஸ்கின், ராணா இருவரும் இந்திய பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் விதத்தில் பந்துவீசினர்.

ரிஷப் பந்த் 52 பந்துகளில் 39 ரன்கள்(8பவுண்டரி) சேர்த்து வெளியேறினார். மறுபுறம் நிதானமாக பேட் செய்துவந்த ஜெய்ஸ்வால் 95 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார்.

5வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல் களமிறங்கி, ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். இருவரும் சிறிது நேரம் மட்டுமே தாக்குப்பிடித்தனர். ராணா வீசிய பந்துவீச்சில் முதல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஜெய்ஸ்வால் 56 ரன்களில் பெவிலியின் திரும்பினார். அடுத்து ஜடேஜா களமிறங்கினார்.

தொடக்கத்திலிருந்தே கே.எல்.ராகுல் சற்று தடுமாற்றத்துடனே பேட் செய்தார். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டவிதமும் தடுமாற்றமாக இருந்தது, ரன்களைச் சேர்க்கும் விதமும் விறுவிறுப்பாக இல்லை.

மெஹதி ஹசனின் சுழற்பந்துவீச்சில் ஷார்ட்லெக் திசையில் ஜாகிர் ஹூசேனிடம் கேட்ச் கொடுத்து ராகுல் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

 

அஸ்வினுக்கு உற்சாக வரவேற்பு

இந்திய அணியை அபார சதத்தால் காப்பாற்றிய அஸ்வின்: கோலி, கில், ரோஹித் ஏமாற்றம்: வங்கதேசம் திணறல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

7-வது விக்கெட்டுக்கு அஸ்வின் களமிறங்கி, ஜடேஜாவுடன் சேர்ந்தார். அஸ்வின் களமிறங்கியபோது, ரசிகர்கள் விசிலடித்தும், கரகோஷம் எழுப்பியும் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

அஸ்வினும் ரசிகர்களின் நம்பிக்கையை ஏமாற்றாத வகையில் தொடக்கத்திலிருந்தே பேட் செய்து ரசிகர்களின் சபாஷ் பெற்றார்.

மாலை தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 176 என்று வலுவான நிலையில் இருந்தது. அஸ்வின் 21, ஜடேஜா 15 ரன்கள் என இருவரும் நிதானமாக பேட் செய்தனர். 53வது ஓவரில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது.

அஸ்வின், ஜடேஜா அமர்க்களம்

இந்திய அணியை அபார சதத்தால் காப்பாற்றிய அஸ்வின்: கோலி, கில், ரோஹித் ஏமாற்றம்: வங்கதேசம் திணறல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முழுநேர பேட்டர்கள் சென்னை விக்கெட்டில் சொதப்பிய நிலையில் அஸ்வின் வங்கதேச பந்துவீச்சை எதிர்கொண்டு ஷாட்களை ஆடினார். அஸ்வினுக்கு துணையாக ஆடிய ஜடேஜாவும் தன்னை ஆல்ரவுண்டர் என்பதை நிரூபிக்கும் வகையில் ஷாட்களை ஆடி ஸ்கோரை உயர்த்தினார்.

விரைவாக ரன்களைச் சேர்த்த அஸ்வின் 58 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 6பவுண்டரி, ஒரு சிக்ஸரும் அடங்கியது. ஜடேஜா, அஸ்வின் இருவரும் வேகமாக ரன்களைச் சேர்க்கவே ஸ்கோர் உயரத் தொடங்கியது. 53ஓவர்களில் 200 ரன்களை தொட்ட இந்திய அணி, அடுத்த 8 ஓவர்களில் 50 ரன்களை விரைவாக எட்டியது.

7-வது விக்கெட்டுக்கு இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, வங்கதேச பந்துவீச்சாளர்களை திணறிவிட்டனர்.

அஸ்வினைத் தொடர்ந்து ஜடேஜா 73 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் வங்கதேச பந்துவீச்சாளர்கள் திணறினர். ஷகிப் அல் ஹசன், மெஹதி ஹசன், மிராஸ் என மாறி மாறி பந்துவீசியும் இருவரையும் பிரிக்க முடியவில்லை.

 

அஸ்வின் சாதனை சதம்

இந்திய அணியை அபார சதத்தால் காப்பாற்றிய அஸ்வின்: கோலி, கில், ரோஹித் ஏமாற்றம்: வங்கதேசம் திணறல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அஸ்வின் 108 பந்துகளில் தனது 6-வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். இதில் 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கும்.

அஸ்வின் சதம் அடித்தவுடன் ஒரு கையில் ஹெல்மெட்டையும், மற்றொரு கையில் பேட்டையும் பிடித்து துள்ளிக் குதித்தார். அஸ்வினின் சதத்தை கண்டு ரசித்த சென்னை ரசிகர்கள் விசில் அடித்தும், கரகோஷம் எழுப்பியும், தங்களின் பாராட்டுகளையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர்.

8-வது விக்கெட்டுக்கு களமிறங்கி 5 சதங்களை டேனியல் வெட்டோரி மட்டுமே அடித்திருந்தார். அவரின் சாதனையை அஸ்வின் முறியடித்து 6-வது சர்வதேச டெஸ்ட் சதத்தை நிறைவு செய்து புதிய வரலாறு படைத்தார்.

அஸ்வின் களமிறங்கியபோது இந்திய 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், ஜடேஜாவுடன் பார்டனர்ஷிப் அமைத்து, அணியை 400 ரன்களை நோக்கி அஸ்வின் நகர்த்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 7-வது மற்றும் அதன்கீழான பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்களாக அஸ்வின், ஜடேஜா சாதனை படைத்தனர். இதற்கு முன் 2009ல் ஹேமில்டனில் ஜெஸி ரைடர், வெட்டோரி கூட்டணி 7-வது விக்கெட்டுக்கு 186 ரன்கள் சேர்த்ததுதான் சாதனையாக இருந்தது,அதை அஸ்வின், ஜடேஜா முறியடித்தனர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் 80 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் சேர்த்தது. அஸ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். உணவு இடைவேளை வரை சீராக விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, கடைசி செஷனில் மட்டும் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 163 ரன்களைச் சேர்த்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் பிறந்த அஷ்வினும் சென்னையுடன் ஒட்டிக்கொண்ட ஜடேஜாவும் இந்தியாவை பலமான நிலையில் இட்டனர்; அஷ்வின் சதம் குவித்து அசத்தல்

Published By: VISHNU  19 SEP, 2024 | 07:47 PM

image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக சென்னை, சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (19) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இந்தியா முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 339 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

1909_ryashasvi_jaiswal.png

சென்னையில் பிறந்த ரவிச்சந்திரன் அஷ்வினும் சென்னையுடன் (சுப்பர் கிங்ஸ்) ஒட்டிக்கொண்ட ரவிந்த்ர ஜடேஜாவும் அற்புதமான துடுப்பாட்ட ஆற்றல்களை வெளிப்படுத்தி இந்தியாவை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுத்து பலமான நிலையில் இட்டனர்.

1909_ravindra_jadeja.png

இவர்கள் இருவரும் துடுப்பாட்டத்தில் அசத்தியிராவிட்டால் இந்தியா பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்.

1909_hasan_mahmood.png

இந்தியாவின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களான அணித் தலைவர் ரோஹித் ஷர்மா (6), ஷுப்மான் கில் (0), விராத் கோஹ்லி (6) ஆகிய மூவரும் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்து சென்றனர். (34 - 3 விக்.)

1909_ashwin_and_jadeja.png

இந் நிலையில் யஷஸ்வி ஜய்ஸ்வாலும் ரிஷாப் பான்ட்டும் 4ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் சரிவை சீர்செய்தனர்.

1909_ashwin_got_to_his_6th_hundred.png

ரிஷாப் பான்ட் 39 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் யஷஸ்வி ஜய்ஸ்வாலும் கே.எல். ராகுலும் 5ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் இருவரும் 144 ஓட்டங்கள் என்ற ஓரே மொத்த எண்ணிக்கையில் ஆட்டம் இழந்தனர்.

ஜய்ஸ்வால் 56 ஓட்டங்களையும் ராகுல் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந் நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் போன்று இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் பங்களாதேஷ் ஜமாய்க்கப் போகிறது என கருதப்பட்டது.

ஆனால், வீழ்ச்ச்சியிலிருந்து மீண்டு எழுவதற்கு அதிரடியும் ஆக்ரோஷமுமே சிறந்தது என்பதை நன்கு புரிந்திருந்த ரவிச்சந்திரன் அஷ்வினும் ரவிந்த்ர ஜடேஜாவும் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களை பந்தாடி பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 195 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை பலமான நிலையில் இட்டனர்.

தனது சொந்த மைதானத்தில் மிகவும் அபாராமாகவும் ஆக்ரோஷமாகவும் துடுப்பெடுத்தாடிய ரவிச்சந்திரன் அஷ்வின் 112 பந்துகளை எதிர்கொண்டு 10 சதங்கள், 2 சிக்ஸ்கள் உட்பட 102 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். இது அவர் பெற்ற 6ஆவது டெஸ்ட் சதமாகும்.

மறுபக்கத்தில் நிதானமும் திறமையும் கலந்து துடுப்பெடுத்தாடிய ரவிந்த்ர ஜடேஜா 117 பந்துகளில் 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 86 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஹசன் மஹ்முத் 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/194127

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன்பெல்லாம் அஸ்வின் போலிங்கில் தான் திறமையானவராக இருந்தார் . .......ஆனால் இப்போதெல்லாம் பேட்டிங்கில் செமையாய் கலக்கி ஆல்ரவுண்டராகி இருக்கின்றார் . ........கபிலதேவ் போல் ...........பாராட்டுக்கள் அஸ்வின் . ........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோனி சாதனையை சமன் செய்த அஸ்வின்

சென்னையில் நடந்து வரும் பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் சகலதுறை வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சதமடித்தார். இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனியின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி, 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் தொடரிலும் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய வீரர்களில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, கில், விராட் கோலி, உள்ளிட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையைக் கட்டினர்.

ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ஆகியோர் சற்று நிலைத்து நின்று விளையாடினாலும் அவர்களும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்க, ஒரு கட்டத்தில் இந்திய அணி 144 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜாவும், ரவிச்சந்திரன் அஸ்வினும் நங்கூரமிட்டு இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஜடேஜா ஒரு முனையில் நிலைத்து விளையாட, மறுபக்கம் ரவிச்சந்திரன் அஸ்வின் 109 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இது டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் 6-ஆவது சதமாகும். இந்த சதத்தின் மூலம் அஸ்வின் இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

https://thinakkural.lk/article/309621

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பும்ரா புயலில் சுருண்ட வங்கதேசம் - சேப்பாக்கத்தில் நடந்த திடீர் மாற்றம் என்ன?

பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

பும்ராவின் ‘மாஸ்டர் கிளாஸ்’ பந்துவீச்சு, அறிமுக வீரர் ஆகாஷ் தீப், சிராஜ் ஆகியோரின் வேகப்பந்துவீச்சில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களில் சுருண்டது.

ஃபாலோ ஆன் வழங்காமல் 2வது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி 308 ரன்கள் முன்னிலையுடன் பேட் செய்து வருகிறது. 2வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்துள்ளது. சுப்மான் கில் 33 ரன்களுடனும், ரிஷப் பந்த் 12 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

கோலி, ரோஹித் சொதப்பல்

2வது இன்னிங்ஸில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 17 ரன்னில் மெஹதி ஹசன் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். கேப்டன் ரோஹித் 5 ரன்னில் தஸ்கின் அகமது பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஜெய்ஸ்வால் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சேப்பாக்கமா இது!

சென்னை சேப்பாக்கம் மைதானம் எப்போதுமே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்திருந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர்கள் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பும்ரா 4 விக்கெட், ஆகாஷ், சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்துவரும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 91.2 ஓவர்களில் 376 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

வங்கதேசம் அணி 47.1 ஓவர்களில் 149 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 227 ரன்கள் முன்னிலை பெற்றது.

227 ரன்கள் முன்னிலை பெற்றாலும் வங்கதேசத்துக்கு ஃபாலோ ஆன் வழங்காமல் தொடர்ந்து இந்திய அணி 2வது இன்னிங்ஸிலும் பேட் செய்தது.

3வது நாளில் இருந்து மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், அஸ்வின், ஜடேஜா பந்து வீச்சு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

முதல்நாளான நேற்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் சேர்த்திருந்தது. அஸ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து இன்றைய 2வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

ஆனால் நீண்டநேரம் இந்திய பேட்டர்கள் நிலைக்கவில்லை. 10.2 ஓவர்கள் மட்டுமே இந்திய பேட்ஸ்மேன்கள் இன்று விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.

அனைத்துமே கேட்ச்தான்

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் 10 பேருமே கேட்ச் பிடிக்கப்பட்டுதான் விக்கெட்டுகளை இழந்தனர். உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்டர்கள் அனைவரும் ஒரு இன்னிங்ஸில் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழப்பது இது 4வது முறையாகும்.

சமீபத்தில் 2021-ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தனர்.

 
வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சேப்பாக்கில் 3வது 5 விக்கெட்

வங்கதேசத் தரப்பில் ஹசன் மெஹமது 5 விக்கெட்டுகளையும், தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். வங்கதேச அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

2012-ஆம் ஆண்டுக்குப்பின் இந்தியப் பயணத்துக்கு வந்த ஒரு அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒரு இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியது இதுதான் முதல்முறையாகும். 2012 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரின் விக்கெட்டுகளையும் வேகப்பந்துவீச்சாளர்களே வீழ்த்தியிருந்தனர்.

அது மட்டுமல்லாமல் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த டெஸ்டில் இதுவரை 2 வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டும்தான் 5 விக்கெட்டுகளை ஒரு இன்னிங்ஸில் வீழ்த்தியிருந்தனர். 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், 2013 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக ஜேம்ஸ் பட்டின்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இப்போது வங்கதேச வீரர் ஹசன் மெஹ்மது வீழ்த்தியுள்ளார்.

மிரட்டிய இந்திய பந்துவீச்சு

வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதையடுத்து, வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப் மூவரும் சேர்ந்து தொடக்கத்திலிருந்தே வங்கதேச பேட்ஸ்மேன்கள் திணறவிட்டனர்.

ஷத்மான் இஸ்லாம், ஜாகீர் ஹசன் இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட் கிடைத்தது.

அடுத்து கேப்டன் ஷான்டோ களமிறங்கி, ஹசனுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். அறிமுக வீரரான ஆகாஷ் தீப் பந்துவீச அழைக்கப்பட்டார். அவரின் இன்ஸ்விங், லெக் கட்டர் முறை பந்துவீச்சு வங்கதேச பேட்டர்களுக்கு புதிதாக இருந்ததால், ஆகாஷ் வீசிய பந்தை எதிர்கொள்ள சிரமப்பட்டனர்.

 

தவறிய ஹாட்ரிக் வாய்ப்பு

ஆகாஷ் வீசிய 9-வதுஓவரில் ஜாகீர் ஹசன் 3 ரன்களில் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மோமினுள் ஹக், ஆகாஷ் பந்துவீச்சில் ஸ்டெம்ப் தெறிக்க விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து இரு விக்கெட்டுகளை வீழ்த்தியதால், ஆகாஷிற்கு ஹாட்ரிக் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முஷ்பிகுர் ரஹிம் தடுத்துவிட்டார்.

வங்கதேச அணி நண்பகல் உணவு இடைவேளைக்குச் செல்லும்போது 9 ஓவர்களில் 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

சிராஜ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடைசி விக்கெட்டைான ராணாவை க்ளீன் போல்டாக்கி சிராஜ் விக்கெட் வீழ்த்தினார்

விக்கெட் சரிவு

உணவு இடைவேளைக்குப்பின் வங்கதேச அணி அடுத்தடுத்து ஷான்டோ(20) சிராஜ் பந்துவீச்சில், முஷ்பிகுர் ரஹ்மான்(8) பும்ரா பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஆஃப்சைடில் பவுன்ஸ் ஆன பந்தை தடுத்து ஆட முஷ்பிகுர் ரஹ்மான் முயன்றபோது, 2வது ஸ்லிப்பில் இருந்த ராகுல் எளிதாக பந்தை கேட்ச் பிடித்தார்.

6வது விக்கெட்டுக்கு லிட்டன் தாஸ், ஷகிப் அல்ஹசன் ஓரளவு தாக்குப்பிடித்து 50 ரன்கள் சேர்த்தனர். லிட்டன் தாஸ்(22) விக்கெட்டையும், ஷகிப் அல்ஹசன்(32) விக்கெட்டையும் ஜடேஜா எடுத்து ஆட்டத்தில் ஸ்வாரஸ்யம் சேர்த்தார்.

ஹசன் மெஹ்மது(9), தஸ்கின் அகமது(11) விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தவே, 5 விக்கெட்டுகளை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடைசி விக்கெட்டைான ராணாவை க்ளீன் போல்டாக்கி சிராஜ் வீழ்த்தியதால் பும்ராவுக்கு 5 விக்கெட் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷுக்கு பளோ ஒன் கொடுக்காமல் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இந்தியா 308 ஓட்டங்களால் முன்னிலை

Published By: VISHNU   20 SEP, 2024 | 09:59 PM

image

(நெவில் அன்தனி)

சென்னை, சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பங்ளாதேஷஷை 149 ஓட்டங்களுக்கு சுருட்டிய போதிலும் பளோ ஒன் (follow-on) கொடுக்காமல் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா 7 விக்கெட்கள் மீதம் இருக்க 308 ஓட்டங்களால் முன்னிலை பெற்று பலமான நிலையில் இருக்கிறது.

போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய  தினம் மொத்தம் 17 விக்கெட்கள் வீழ்த்தப்பட்ட போதிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் இந்தியா, பெரும்பாலும் நாளைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

001.png

இந்தப் போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்த்ர ஜடேஜா ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களின் உதவியுடன் இந்தியா முதல் இன்னிங்ஸில் 376 ஓட்டங்களைக் குவித்தது. 

போட்டியின் இரண்டாம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (20) காலை 6 விக்கெட் இழப்புக்கு 336 ஓட்டங்கள் என்ற வலுவான நிலையிலிருந்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்தியா எஞ்சிய 4 விக்கெட்களை 40 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்தது.

இதற்கு அமைய அதன் மொத்த எண்ணிக்கை 376 ஓட்டங்ளகாக இருந்தது.

ரவிச்சந்திரன் அஷ்வின் 102 ஓட்டங்களுடனும் ரவிந்த்ர ஜடேஜா 86 ஓட்டங்களுடனும் தமது துடுப்பாட்டங்களைத் தொடர்ந்தபோது அவர்கள் இருவரும் மேலும் ஓட்டங்களைக் குவிப்பர் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இன்று காலை இரண்டாவது புதிய பந்துடன் 81ஆவது ஓவரை ஆரம்பித்த பங்களாதேஷ், 83ஆவது ஓவரில் ரவிந்த்ர ஜடேஜாவை களம் விட்டகலச் செய்தது.

ஜடேஜா முதல் நாள் பெற்றிருந்த 86 ஓட்டங்களுக்கு அப்பால் செல்லவில்லை.

அஷ்வின் 113 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினார்.

அவர்கள் இருவரும் 7ஆவது விக்கெட்டில் பெறுமதியான 199 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பின்வரிசையில் ஆகாஷ் தீப் 17 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்த மூவரையும் புதிய பந்தைக் கொண்டு தஸ்கின் அஹ்மத் ஆட்டம் இழக்கச் செய்தார்.

2009_hasan_mahmood.png

பந்துவீச்சில் ஹசன் மஹ்முத் 83 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் தஸ்கின் அஹ்மத் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் கடும் சிரமத்திற்கு மத்தியில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்களையும் இழந்து 149 ஓட்டங்களுக்கு சுருண்டது.

2009_shakib_al_hasan.png

ஷக்கிப் அல் ஹசன் (32), மெஹிதி ஹசன் மிராஸ் (27), லிட்டன் தாஸ் (22), அணித் தலைவர் நஜ்முல் ஹொசென் ஷன்டோ (20) ஆகிய நால்வரே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

லிட்டன் தாஸும் ஷக்கிப் அல் ஹசனும் 6ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 51 ஓட்டங்களே பங்களாதேஷ் இன்னிங்ஸில் அதிசிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ், ரவிந்த்ர ஜடேஜா, ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

2009_jasprit_bumrah_celebrating.png

2009_ravindra_jadeja_and_virat_kohli.png

தனது 73ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரவிந்த்ர ஜடேஜா இன்று கைப்பற்றிய 2 விக்கெட்களுடன் தனது டெஸ்ட் விக்கெட் எண்ணிக்கையை 298 ஆக உயர்த்திக்கொண்டுள்ளார்.

இந்த மைதானத்தில் மேலும் 2 விக்கெட்களைக் கைப்பற்றி 300 விக்கெட்களைப் பூர்த்தி செய்ய ஆவலாக இருப்பதாக ஜடேஜா தெரிவித்துள்ளார்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 227 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தபோதிலும் பங்களாதேஷுக்கு பளோ ஒன் கொடுக்க ரோஹித் ஷர்மா விரும்பவில்லை.

இந்நிலையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்தியா 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 81 ஒட்டங்களைப் பெற்றிருந்தது.

ஷுப்மான் கில் 33 ஓட்டங்களுடனும் ரிஷாப் பான்ட் 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

யஷஸ்வி ஜய்ஸ்வால் (10), ரோஹித் ஷர்மா (5), விராத் கோஹ்லி (17) ஆகிய மூவரே ஆட்டம் இழந்தவர்களாவர்.

https://www.virakesari.lk/article/194215

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - வங்கதேசம்: தோனியின் சாதனை சமன் - கடைசி 2 நாட்களில் சேப்பாக்கம் விக்கெட் எப்படி இருக்கும்?

இந்தியா - வங்கதேசம்: தோனியின் சாதனை சமன் - கடைசி 2 நாட்களில் விக்கெட் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

டெஸ்ட் போட்டியில் 814 நாட்களுக்குப் பின் சதம் அடித்து தோனியின் சாதனையை சமன் செய்த ரிஷப் பந்த்-இன் அற்புதமான ஆட்டம், சுப்மன் கில்லின் நேர்த்தியான சதம் ஆகியவற்றால் இந்திய அணி வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஏற்கெனவே 227 ரன்கள் முன்னிலை பெற்றதையுடம் சேர்த்து வங்கதேச அணி வெற்றி பெற 515 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி.

சவாலான இலக்கு

இரண்டரை நாட்கள் மீதம் இருக்கும் நிலையில் ஆட்டத்தைத் தங்கள் பக்கம் திருப்பும் நோக்கில் இந்திய அணி 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. பெரிய இலக்கான 515 ரன்களை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசி 2 நாட்களில் எட்டுவது வங்கதேசத்துக்கு கடும் சவாலாக இருக்கும்.

வங்கதேச அணி 515 இலக்குடன் களமிறங்கியது. 3வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்திருந்தது. கேப்டன் ஷான்டோ 51 ரன்கள், சஹிப் அல்ஹசன் 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

இன்னும் வங்கதேசம் கைகளில் 6 விக்கெட்டுகள் உள்ளன, வெற்றிக்கு 357 ரன்கள் சேர்க்க வேண்டியுள்ளது. மெஹதி ஹசன், லிட்டன் தாஸ் விக்கெட்டை இந்திய அணி விரைவாக எடுத்துவிட்டால், இந்திய அணியின் வெற்றி உறுதியாகிவிடும்.

 

814 நாட்களுக்குப் பின் ரிஷப் பந்த்

இந்திய அணி 2வது இன்னிங்ஸில் விரைவாக ரன்கள் சேர்க்க ரிஷப் பந்த்(109), சுப்மான் கில்(119 நாட்-அவுட்) ஆகியோரின் சதம் மற்றும் 167 ரன்கள் பார்ட்னர்ஷிப் முக்கியக் காரணமாக அமைந்தது.

கார் விபத்தில் சிக்கி 634 நாட்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ரிஷப் பந்த் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். டெஸ்ட் போட்டியில் ஏறக்குறைய 814 நாட்களுக்குப் பின் தனது 6வது சதத்தை 124 பந்துகளில் பந்த் நிறைவு செய்தார். இதில் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும்.

கடைசியாக 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜூலை 1ஆம் தேதி நடந்த டெஸ்டில் ரிஷப் பந்த் சதம் அடித்திருந்தார். அதன்பின் இந்த ஆட்டத்தில் சதம் அடித்துள்ளார்.

இன்னிங்ஸ் ஸ்கோர்

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்கும், வங்கதேசம் 149 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. 2வது நாளான நேற்று மட்டும் சேப்பாக்கம் மைதானத்தில் ஒரே நாளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது.

இரண்டாவது நாளான நேற்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்திருந்தது. கில் 33 ரன்களுடனும், பந்த் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து இன்றைய 3வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

கில், பந்த் அரைசதம்

தொடக்கத்தில் இருந்தே கில், ரிஷப் பந்த் இருவரும் வங்கதேச பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை அடித்து ஆடி ரன்களை சேர்த்தனர், இருவரின் பேட்டிங்கிலும் ஆக்ரோஷம் காணப்பட்டது. 79 பந்துகளில் சுப்மன் கில் அரைசதத்தை நிறைவு செய்தார். காலை தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் சேர்த்திருந்தது.

அதன் பிறகு ரிஷப் பந்த் பேட்டிங் வேகெடுத்தது. சஹிப் அல்ஹசன், மிராஸ் பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸர் என வெளுத்த ரிஷப் பந்த் 88 பந்துகளில் அரைசதம் எட்டினார். உணவு இடைவேளைக்குச் செல்லும்போது இந்திய அணி 205 ரன்கள் சேர்த்திருந்தது.

தோனியின் சாதனை சமன்

இந்தியா - வங்கதேசம்: தோனியின் சாதனை சமன் - கடைசி 2 நாட்களில் விக்கெட் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதன்பின் களத்துக்கு வந்த ரிஷப் பந்த் ஆட்டத்தில், மோசமான பந்துகளை பவுண்டரி, சிக்ஸர் என விளாசி, 124 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் தனது 6வது சதத்தை நிறைவு செய்தார்.

இதன் மூலம் 2 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் அரங்கில் ரிஷப் பந்த் சதம் அடித்துள்ளார். மேலும், டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பராக இருந்து தோனி அடித்த 6 சதங்களையும் ரிஷப் பந்த் சமன் செய்தார். ரிஷப் பந்த் சதம் அடித்தபோது, அவரின் கணக்கில் 4 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடக்கம்.

நிதானமாக ஆடிய சுப்மன் கில்லும் 161 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் தனது 5வது சதத்தை எட்டினார். இருவரின் பார்ட்னர்ஷிப் 150 ரன்களை கடந்து சென்றது.

கடந்த முதல் இன்னிங்ஸில் சாஃப்ட் டிஸ்மிசலில் ஆட்டமிழந்தது போல் இந்த முறை எந்தத் தவறையும் ரிஷப் பந்த் செய்யவில்லை. இதனால் இருவரையும் பிரிக்க வங்கதேச பந்துவீச்சாளர்கள் கடும் பிரயத்தனம் செய்தும் முடியவில்லை.

சிக்ஸரில் சாதிக்கும் இந்திய அணி

சுப்மான் கில் தனது 26வது டெஸ்ட் போட்டியில் 28வது சிக்ஸரை அடித்துள்ளார். அதேபோல ரிஷப் பந்த் 34 டெஸ்ட் போட்டிகளில் 59 சிக்ஸர்களை விளாசியுள்ளார். 2024ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டர்கள் மட்டும் 85 சிக்ஸர்களை விளாசியுள்ளனர்.

ஒரு காலண்டர் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற சாதனையை எட்ட இந்திய அணிக்கு இன்னும் 5 சிக்ஸர்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

ரிஷப் பந்த் 109 ரன்கள் சேர்த்த நிலையில் மிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு கில், பந்த் கூட்டணி, 167 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து வந்த கே.எல்.ராகுல் 22 ரன்கள் சேர்த்த நிலையில், இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இன்னும் இரண்டரை நாட்கள் மீதமிருந்த நிலையில் வங்கதேசம் வெற்றிக்கு 515 ரன்கள் இலக்கு நிர்ணியித்தது இந்திய அணி.

 

வலுவான தொடக்கம்

இந்தியா - வங்கதேசம்: தோனியின் சாதனை சமன் - கடைசி 2 நாட்களில் விக்கெட் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

வங்கதேச அணி 515 ரன்கள் இலக்குடன் 2வது இன்னிங்ஸில் களமிறங்கியது. ஜாகிர் ஹசன், இஸ்லாம் இருவரும் முதல் இன்னிங்ஸைவிட சற்று ஆழமாகவே தங்கள் ஆட்டத்தை தொடங்கி ரன்களை சேர்த்தனர். பும்ரா, சிராஜ், ஆகாஷ் பந்துவீச்சை இருவரும் நன்கு சமாளித்து ஆடி ரன்களை சேர்த்தனர்.

மாலை தேநீர் இடைவேளைக்குப் பின் வங்கதேச அணி முதல் விக்கெட்டை இழந்தது. பும்ராவின் வேகப்பந்துவீச்சில் ஹசன் 33 ரன்கள் சேர்த்த நிலையில் கல்லி பாயின்டில் நின்றிருந்த ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த கேப்டன் ஷான்டோ, இஸ்லாமுடன் சேர்ந்தார்.

அஸ்வினின் மாயாஜாலம்

சென்னை விக்கெட் கடைசி இரு நாட்களில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு பலன் அளிக்கும் என்பதைப் புரிந்துகொண்டு அஸ்வின் பந்து வீசினார். அதற்குப் பலன் கிடைத்து, இஸ்லாம் 35 ரன்கள் சேர்த்த நிலையில் ஷார்ட் மிட்விக்கெட்டில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இந்த டெஸ்டில் அஸ்வின் முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.

அடுத்து வந்த மோமினுல் ஹக் 13 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆனார். அதைத் தொடர்ந்து முஸ்பிகுர் ரஹ்மான் 13 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் கே.எல்.ராகுலிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் கேப்டன் ஷாண்டோ இந்திய பந்துவீச்சை நன்கு சமாளித்து ஆடி அரைசதம் அடித்தார். ஒரு கட்டத்தில் வங்கதேசம் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் என வலுவாக இருந்தது, ஆனால் கடைசி 10 ஓவர்களில் சீரான இடைவெளையில் 3 விக்கெட்டுகளை இழந்தது.

சஹிப் அல் ஹசன் 5, கேப்டன் ஷாண்டோ 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். கடைசி 10 ஓவர்களில் அஸ்வின் வீழ்த்திய 3 விக்கெட்டுகள் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் 2 நாட்கள் முழுமையாக இருக்கும் நிலையில் வங்கதேசம் வெற்றிக்கு 357 ரன்கள் தேவை.

மீதமுள்ள விக்கெட்டுகளில் லிட்டன் தாஸ், மிராஸ் மட்டுமே ஓரளவு பேட் செய்யக் கூடியவர்கள். இவர்களை வீழ்த்தினால் நாளை இந்திய அணியின் வெற்றி எளிதாகும். சேப்பாக்கத்தில் திடீரென வெளிச்சக் குறைவு ஏற்பட்டதையடுத்து, 9 ஓவர்கள் முன்னதாகவே ஆட்டம் முடிக்கப்பட்டது.

 

கடைசி 2 நாட்களில் சேப்பாக்கம் ஆடுகளம் எப்படி இருக்கும்?

இந்தியா - வங்கதேசம்: தோனியின் சாதனை சமன் - கடைசி 2 நாட்களில் விக்கெட் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

சேப்பாக்கம் விக்கெட் என்றாலே சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரியாக இருக்கும். ஆனால், இந்த முறை கறுப்பு மண் ஆடுகளத்துக்குப் பதிலாக சிவப்பு மண் ஆடுகளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பந்து நன்கு ஒத்துழைத்து ஸ்விங் ஆகும், பவுன்ஸ் ஆகும். வரும் நவம்பர் டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்குத் தயாராகும் பொருட்டு இதுபோன்ற ஆடுகளத்தை பிசிசிஐ நிர்வாகம் தயாரித்துள்ளது.

இந்த ஆடுகளத்தில் கடைசி 2 நாட்களில் பிளவு ஏற்பட்டு பந்து சுழற்பந்துவீச்சுக்கும் ஒத்துழைக்கும். முதல் நாளில் வேகப்பந்துவீச்சில் 1.3 டிகிரி வரை ஸ்விங் ஆன நிலையில், 3வது நாளில் 0.4 டிகிரியாக குறைந்தது.

ஆடுகளம் நன்கு காய்ந்திருக்கிறது ஆனால், எதிர்பார்த்த பிளவுகள் இன்னும் வரவில்லை. பிளவுகள் வந்தால் அடுத்த இரு நாட்கள் வேகப்பந்துவீச்சைவிட சுழற்பந்துவீச்சுக்குத்தான் விக்கெட் ஒத்துழைக்கும். இதனால், அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சு நன்கு எடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தோனியை போல் உதவிய பந்த்

இந்தியா - வங்கதேசம்: தோனியின் சாதனை சமன் - கடைசி 2 நாட்களில் விக்கெட் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மூன்றாம் நாள் ஆட்டமான இன்று ரிஷப் பந்த், கில் இருவரும் சிறப்பாக பேட் செய்த நிலையில், திடீரென வங்கதேசத்துக்கு உதவும் வகையில் பந்த் ஃபீல்டிங் செட் செய்து கொடுத்து கேப்டன் ஷாண்டோவுக்கு உதவினார்.

தோனியை போலவே ரிஷப் பந்த் வங்கதேச கேப்டனுக்கு ஃபீல்டிங் செட் செய்வதில் உதவினார். 22 யார்ட் வட்டத்தின் லெக் திசையில் எந்த பீல்டரும் நிறுத்தவில்லை, அங்கு பீல்டரை நிறுத்துங்கள் என்று வங்கதேச கேப்டனுக்கு பந்த் ஆலோசனை கூறினார். இதைக் கேட்ட கேப்டன் ஷாண்டோ மிட்விக்கெட் திசையில் ஒரு பீல்டரை நிறுத்தினார்.

ரிஷப் பந்தின் கிரிக்கெட் குருவான தோனியும் இதேபோல வங்கதேச அணிக்கு ஃபீல்டிங் செட் செய்து உதவியுள்ளார். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது, பேட் செய்த தோனி, வங்கதேச வீரர் சபிரீ ரஹ்மானை ஸ்குயர் லெக் திசையில் நிற்குமாறு கூறினார்.

வங்கதேச கேப்டன் மோர்தசாவிடம் கேட்காமல் தோனி ஃபீல்டிங் செட் செய்தார். தோனி கூறியவுடன், தனது கேப்டன் மோர்தசாவிடம்கூட ஆலோசனை கேட்காமல் தோனி கூறிய திசையில் சபீர் ரஹ்மான் ஃபீல்டிங் செய்ய நின்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://www.facebook.com/photo/?fbid=516014174538567&set=pcb.516014937871824
    • நிச்சயம் சுமந்திரன் போகக் கூடிய ஆள்தான். அவருக்குப் பின்னாலை… சாணக்கியனும் போவார். 
    • அனுரா சுமத்திரனுக்கு தொலைபேசி எடுத்து 2 சுற்றுக்கு போகாமலேயே தான் வெற்றி பெறுவேன் என்று சொல்லியதாக வித்தியாதரன் அறிவித்துள்ளார். சுமி அனுராவின் பக்கம் தாவமாட்டார் என்பது என்ன நிச்சயம்.
    • "தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?" / பகுதி : 03     வால்மீகி, நாரதரிடம் எல்லா நல்ல குண நலன்களு டனான பிறவி யார் என்று மூன்று கேள்விகளைக் கேட்கிறார். அதற்குப் பதிலாக நாரதர் ராம கதையைச் சுருக்கமாகச் சொல்ல அதனை விரிவாக ராமனை கதாபாத்திரமாக அமைத்து ராமாயணம் வால்மீகி எழுதியதாகச் சொல்லப் படுகிறது.   வால்மீகி ராமனின் கதாபாத்திரத்தில் வியத்தக்க ஏதாவது ஒன்றை அல்லது சிலவற்றை கண்டு, அதனால் ஈர்க்கப்பட்டு சமசுக்கிருத மொழியில் கிமு 400க்கும் கிபி 200 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இராமாயண கதை மிகவும் சாதாரணமானது. அதில் ராமனைக் கடவுளாக்கக் கூடிய எந்த அம்சங்களோ இல்லை. ஆனால், ராமன் கடமை தவறா ஒரு மகன், அவ்வளவுதான்!   நல்லவன் கெட்டவன் என்று பாகுபடுத்தல் கடினமான வேலை. அது ராமனாக இருந்தாலும் சரி ராவணனாக இருந்தாலும் சரி. எல்லோரும் பிறந்தனர் வாழ்ந்தனர் இறந்தனர் …  அவ்வளவே! காதல் ஒருத்தியைக் கைப்பிடித்து, அவளைக் காக்க படையெடுத்து, எதிரிகளை எதோ ஒரு வழியில், எப்படியாவது வீழ்த்தி, சீதையை சந்தேகப்பட்டு, தீக்குளிக்க வைத்து, அவளை தன்னம் தனியா காட்டுக்கு அனுப்பி, விலகச்செய்து. இத்தனை ஆண்டு போராட்டத்தை வீணடித்து, தனிமரமாக, ராமன் நெஞ்சம் நிமிர ஆட்சி புரிகிறானாம்?   வாலியை கொன்ற முறை, அதில் காணும் நியாயக் குறை, சீதையைக் காட்டுக்கு அனுப்பிய அநீதி, இவை போன்ற இன்னும் பல சிக்கல்கள் அங்கு காணப்படுகின்றன. வால்மீகி ரிஷியின் காவியத்தில் ராமனுடைய நடவடிக்கைகளை ஈசுவர அவதாரமாக வைத்து எழுதவில்லை.   சில அதிகாரங்களிலும் இங்குமங்கும் சுலோகங்களிலும் தெய்வ அவதாரத்தைச் சொல்லி வந்தாலும், மொத்தத்தில் ராமன் ஒரு சிறந்த ராஜகுமாரன் வீர புருஷன்; அபூர்வமான தெய்வீக நற்குணங்கள் பெற்றவன் அம் மட்டே! மகாவிஷ்ணு இராமனாக அவதாரம் எடுத்தார் என நம்புபவர்களும் உண்டு. அவர்களின் கூற்றின் படி, மகாவிஷ்ணு வழக்கம் போல் பாற் கடலில் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்க, லட்சுமி அவர் கால்களை அமுக்கிக் கொண்டிருக்க, தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் அவர் வணங்கி, அடியேங்களை அசுரப் பயல் இராவணனும், அசுரப் பயல்களும் துன்புறுத்துகிறார்கள். தொல்லை கொடுக்கிறார்கள். யாகம் செய்யவிடாமல் தடுக்கிறார்கள். சுராபானம் குடிக்கக்கூடாதாம், மது அருந்தக்கூடாதாம். இம்மாபாதகச் செயலைச் செய்யும் இராவணனிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் மஹாபிரபோ! என்று முறையிட்டார்கள்.   அதற்கு, விஷ்ணு, நான் இராமாவதாரம் எடுத்து அந்த இணையற்ற வீரனான இராவணனை எப்படியாவது வதம் செய்து உங்களைக் காப்பாற்றுகிறேன் என்கிறார். அப்படியே மகாவிஷ்ணு ராமனாக அவதரித்தார் என்கின்றனர். ஆனால், ராமன் வழிபட ஏற்புடையவனா? ராமனை கடவுளாக வழிபடுபவர்கள் கொஞ்சம் இந்த உண்மையை அலசி பார்க்கட்டும்.   ராமன் ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்தவன் அல்ல, வால்மீகி ராமனுக்கு பல மனைவிமார்கள் இருந்தனர். உதாரணமாக, அயோத்திய காண்டம், அத்தியாயம் 8, சுலோகம் 12 இப்படி கூறுகிறது.   "हृष्टाः खलु भविष्यन्ति रामस्य परमाः स्त्रियः अप्रहृष्टा भविष्यन्ति स्नुषास्ते भरतक्षये". இதோ அந்த வால்மீகி ராமாயணத்தின் ஆங்கில உரையைப் பார்ப்போம்."Rama's wives will get delighted. Your daughters-in-law will be unhappy because of Bharata's waning position." ஆகும். இராமன் சீதையை மனைவியாக, இளவரசியாக மணந்து கொண்டாலும் அவர் அரசப்பழக்க வழக்கங்களுக்கிணங்க இன்னும் அநேகப் பெண்களை மணந்து கொண்டார். இந்த சுலோகத்தில் காணப்படும் "இராமனின் மனைவிமார்கள்" என்ற சொல் இதை உறுதி படுத்துகிறது.   அப்படியே அவனின் தந்தையும் "अर्ध सप्त शताः ताः तु प्रमदाः ताम्र लोचनाः | कौसल्याम् परिवार्य अथ शनैः जग्मुर् धृत व्रताः ||(2-34-13)"ஆகும். இதில் ராமன் தந்தையின் உண்மையான பிள்ளையாகவே உள்ளான். ஆனால், இராமன் தன் தந்தையை முட்டாள் மடையன் என்று பல நேரங்களில் கேவலமாகப் பேசியுள்ளான். (அயோத்தியா காண்டம் 53 வது அத்தியாயம்) ஏன் ராமன் கடவுள் பதவிக்கு தகுதி இல்லாதவன் என்பதை சுட்டிக் காட்டிட நாம் குறைந்தது மூன்று சம்பவங்களை எடுத்துக் கூறலாம் - முதலாவது, வாலி வதை, இரண்டாவது சீதைக்கு நடந்த கதி, இறுதியானது சம்புக (Shambuka) வதம் ஆகும்.   தனது மனைவி சீதையை ராவணனிடம் இருந்து மீட்டுக்கொள்ள, ராமன் சுக்கிரீவன், அனுமான் உதவியை நாடினான். ஆனால்,வாலியை வதை செய்தால் மட்டுமே தாம் உதவிசெய்வதாக அவர்கள் கூறினார்கள். ஆகவே இராமன், இலக்குவன், சுக்கிரீவன், அனுமன் ஆகிய நால்வரும் பிற வானர வீரர்களோடு கிட்கிந்தையை அடைந்து, வாலியைக் கொல்லுதற்குரிய வழியை ஆராய்ந்தனர். போர் நடக்கையில் தான் வேறுபுறம் நின்று வாலி மீது அம்பு தொடுப்பதாக இராமன் கூற, சுக்கிரீவன் அதை ஏற்றுக்கொண்டு, வாலியை வலியப் போருக்கழைத்தான். அப்படியே யுத்த தருமத்திற்கு எதிராக, மரத்திற்கு பின் ஒழித்து நின்று, இராமன் வாலியின் மார்பில் அம்பினைச் செலுத்த வாலி மண்ணில் சாய்ந்தான். அப்பொழுது, ‘ஒளித்து உயிர் உண்ட நீ’ என்று வாலி, ராமனை சாடினான். "இல் அறம் துறந்த நம்பி, எம்மனோர்க்கு ஆகத் தங்கள்,வில் அறம் துறந்த வீரன், தோன்றலால், வேத நூலில்,சொல் அறம் துறந்திலாத, சூரியன் மரபும், தொல்லை நல் அறம் துறந்தது ‘என்னா, நகை வர, நாண் உள் கொண்டான்." என்கிறான் கம்பன்.   இல்லறத்தை துறந்த இராமன், எங்களுக்காக தன் வில்லறத்தையும் துறந்தான். வேதத்தில் சொல்லப்பட்டவைகளையும் , தொன்று தொட்டு வரும் நல்ல அறங்களையும் ஏன் அவன் துறந்தான் என்று கேள்வி கேட்டு, வெட்கம் வர வாலி நகைத்தானாம்.எப்படி ஒரு கடவுள் என கருதப்படும் ராமன் இப்படியான குற்ற செயல்களை தனது தனிப்பட்ட ஆதாயத்திற்காக செய்வான்? வாலி வதம் சுக்கிரீவனுக்காக இராமர் செய்தது போல் இருந்தாலும், இராமர் தன் சுயநலனுக்காகவே வாலியை கொன்றார். இராமர் நினைத்திருந்தால் சுக்கிரீவனையும் வாலி யையும் ஒற்றுமைப்படுத்தியிருக்க முடியும். எல்லா அறமும் தெரிந்த இராமர் சகோதரர்களை ஒற்றுமை ப்படுத்தியிருக்க வேண்டும் அல்லவா? ராமனைப் பொதுவாக "மரியாதா புருஷோத்தம்"[Maryada Purushatam] என்று வருணிப்பது வழக்கம். அதாவது, அவர் நெறிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிப்பவரும் மனிதர்களுள் மிகச் சிறந்த மனிதராகவும் இருப்பவரும் என்பது இதன் பொருள். அப்படியானவர் இப்படி செய்யலாமா? மரியாதா என்பது நல்லொழுக்கம் ஆகும்.   மேலும் வேறு ஒருவருடன் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கையில், மறைந்து இருந்து கொல்கிறான். இது ஒரு கோழைத்தனம்! திருமால் எடுத்த அவதாரங்களில் இராம அவதாரமும் கிருஷ்ண அவதாரமும் மிக முக்கயமானவை. இந்த இரு காப்பியங்களிலும் வீரம் செறிந்த வாலியும் கர்ணனும் வஞ்சகமாகக் கொல்லப்படுகிறார்கள். இது ஒரு திட்டமிட்ட சதி. ஆகவே வாலி வதையை பார்க்கும் பொழுது, ராமன் "மரியாதா புருஷோத்தம்"(मर्यादा पुरुषोत्तम) என்று அழைப்பதற்கு எந்த தகுதியும் அற்றவனாகவே தெரிகிறது.   இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் சாதாரண மனிதனாகவே தோன்றுகிறான். தனது பேரழகியான மனைவி சீதை, மற்றவர்களால் பேராசைப்படுவதை கண்டு சந்தேகம் நிறைந்த கண்ணோடு பார்க்கிறான். என்றாலும் கண்களில் நீர் வழிகிறது. அகலிகை கௌதம முனிவரின் மனைவி. தேவர்களின் தலைவனான இந்திரன் அவள் மேல் ஆசை கொண்டு, கௌதம முனிவரின் வேடத்தில் வந்து அவளை வன்புணர்ச்சி செய்திட, அதனை அறிந்த கௌதமர் அகலிகையைக் கல்லாக மாற சாபமிட்டார். அப்படி கல்லாகிய அகலிகைக்கு ராமன் விடுதலை அளிக்கிறான். ஆனால், தனது மனைவியை அதற்கு எதிர் மாறாக நடத்துகிறான்?   மிகவும் பலமாக தட்டி கூறும் ஆதாரம், யுத்த காண்டத்தின் இறுதியில் வருகிறது. அங்கு ராவணனை கொன்று சண்டையை முடிவிற்கு கொண்டு வந்த பின், ராமன் முதலாவதாக செய்தது, அண்ணனை காட்டிக் கொடுத்து ராமனுக்கு ஒத்தாசை கொடுத்த, விபீடணனுக்கு (விபீஷணனுக்கு) இலங்கை அரசனாக முடி சூட்டியது. அதன் பின்பு தான், இராமன் அனுமனை அழைத்து சீதையைக் கண்டு செய்தி சொல்லி வருமாறு அனுப்புகிறான் தவிர கூட்டிவருமாறு கூறவில்லை. அது மட்டும் அல்ல, 10 மாதத்திற்கு மேல் தனிமையில், தன்னை பிரிந்து சிறையில் வாடிய தன் மனைவியை, ஓடோடி அல்லவே இந்த ராமன் கூட்டி வந்திருக்க வேண்டும்? ராமன் சொல்லி அனுப்பிய செய்தி என்ன தெரியுமா? தான் சுகமாக நலமாக இருக்கிறேன்?ஆனால், சீதையை பற்றி ஒன்றுமே விசாரிக்க வில்லை? என்றாலும் பின் சீதை ராமனிடம் போன பொழுது அவன் என்ன கூறினான் தெரியுமா? கண்கள் கண்ணீர் சோர, தன் காலடியில் விழுந்து வணங்கிய சீதையை அடுத்த கணம் அவளைப் பார்த்த பார்வையில், கருணை மறைந்து ராமனிடம் சீற்றமே தென்பட்டது. அந்தச் சீற்றம் கண்களில் மின்ன, இராமன் பேசுகிறான், "சீதா! நீ இராவணனது சிறையில் நெடுநாள் இருந்தாய். அங்கு உணவினை விரும்பி உண்டாய். ஒழுக்கம் பாழ்படவும், நீ மாண்டிலை. அச்சம் தீர்ந்து இவண் மீண்டது ஏன்? இராமன் விரும்புவான் என்று கருதியா?" என கோபத்துடன் கேட்டான்.   "உன்னை மீட்கவென்று நான் கடலில் அணை கட்டினேன். அரக்கர்களுடன் போராடி னேன். இராவனனைக் கொன்றேன். மனைவி யைக் கவர்ந்தவனோடு போரிட்டு அழிக்கவில்லை எனும் கெட்ட பெயர் எனக்குக் கிட்டிவிடாதவாறு இலங்கை வந்தேன். அங்கு, நீ இருந்த இடத்தில் மாமிசங்களை உண்டாயோ? மதுவினை அருந்தினாயோ? கணவனைப் பிரிந்த கவலை சிறிதுமின்றி இனிதாகக் காலம் கழித்தாயோ?" என்று தொடர்ந்து கூறினான். "நான் உனக்கு என்ன சொல்ல இருக்கிறது? உன் நடத்தை என் உணர்வைச் சிதைக்கிறதே. நீ இறந்து போவாயாக! அங்ஙனமன்றாயின் என் எதிரே நில்லாமல் உனக்குத் தகுதியான இடத்துக்குச் செல்வாயாக!" [கம்ப ராமாயணம் யுத்த காண்டம்.] என்று வெகுண்டு கூறினான்,இரு கண்களிலிருதும் குருதியும் கண்ணீரும் கொட்ட, அவமானத்தால் தலை குனிந்து , நிலத்தினை நோக்கி நிற்கும் சீதை, புண்ணை அம்பினால் குத்திக் கிளறியது போல கடும் துன்பத்தால் பெருமூச்செறி ந்தாள்.   இப்படி எந்த சாதாரண மனிதன் கூட தன் மனைவியிடம் கூறமாட்டான்? ஆனால் ராமன் கூறுகிறான். வால்மீகி அதை அப்படியே அத்தாட்சி படுத்துகிறான். ஆனால்,கம்பன் கொஞ்சம் சாந்தமாக கூறுகிறான். கம்பன் பல இடங்களில் உண்மையை அப்படியே கூறாமல் கொஞ்சம் மாற்றி மாற்றி கூறிவிட்டான். எனவே ராமனின் ஐயத்தை நீக்க, சீதை தீக்குளித்தாள் [அக்னி பிரவேசம் செய்தாள்]. அதன் பிறகு தான் ராமன் அவளை அயோத்திக்கு கூட்டிப் போனான். அங்கு "அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த, பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச, விரைசெறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மௌலி." என்று கம்பன் கூறியது போல ராமன் திருமுடி சூடினான் [பட்டா பிஷேகம் ].   இராமர் மன்னனானார், சீதை அரசியானாள். என்றாலும் அரசன் அரசி வாழ்க்கை மிக விரைவாக குழப்பத்தில் முடிந்தது, நாட்டு மக்கள் சிலர் மாற்றான் வீட்டில் இருந்த சீதையை இராமர் தன்னுடன் வைத்துக் கொள்வது சரியில்லை என்று பேசிக்கொள்வதை அறிந்த இராமர் சீதையை காட்டுக்கு அனுப்பினான். அப்போது சீதை கர்ப்பவதியாகவும் இருந்தாள். எந்த வித முன் ஜோசனையும் இன்றி, இந்த கெடுக்கும் நோக்கம் கொண்ட பொய்த்தகவலில் இருந்து தன்னை விலக்க ,சீதையை கைவிட்டு கானகம் அனுப்பினான். எப்படி, தனது மனைவியை, அதுவும் கர்ப்பவதியை, யாரோ ஒரு துணி வெளுப்பவர் ஒருவர் அவளின் தூய்மையை கேள்வி கேட்டார் என்ப தற்காக, தன்னம் தனியாக காட்டுக்கு அனுப்ப மனம் வந்தது?கணவனுக்கு தெரியாதா அவளின் தூய்மை, கள்ளம் கபடம் அற்ற அவளின் பெண்மை? அவனுக்கு அவளின் வாழ்க்கை பெரிதாக தெரியவில்லை. அவனுக்கு தெரிந்தது எல்லாம் தனது பெயரும் தனது புகழும் மட்டுமே. வதந்தியை தடுக்க அல்லது நிறுத்த ஒரு அரசன், ஒரு கணவன் எதை செய்வானோ, அதில் ஒன்றையாவது ராமன் செய்யவில்லை.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     பகுதி : 04 தொடரும்     
    • நடைமுறை சாத்தியமான ஒரு அரசியல் தீர்வு திட்டத்ததை உருவாக்கினால் எப்படி காலத்தை இழுத்தடித்து அரசியல் செய்வது    சிறிதரன் சொல்லி இருக்கின்றார் எதிர்காலத்திலும் ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிடுவோம்
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.