Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"சைவ மதம், இந்து மதம் [வைதீக மதம்] இரண்டும் ஒன்றா? அல்லது வேறா?" / பகுதி:01
 
 
முதலில் இந்து [ஹிந்து / Hindu] ௭ன்ற சொல்லின் மூலத்தையும் பொருளையும் பார்ப்போம். ஹிந்து / Hindu என்ற சொல் பிழையாக விளங்கப் பட்டு, பிழையாக பாவிக்கப் படுகிறது. பலருக்கு இதன் மூலம் அல்லது தோற்றுவாய் தெரியாது. இன்று இந்தியாவில் இந்து, இந்துத்துவா [இந்துத்துவம் / Hindutva] என்ற பதம் வகுப்புவாத சாயலில் பாவிக்கப் படுகிறது. மற்றவர்களுக்கு இது ஒரு மத அமைப்பை குறிக்கிறது. இந்து என்ற இந்த சொல்லின் மூலம் சமஸ்கிருதத்திலோ அல்லது எந்த இந்தியா மொழியிலியோ காணப்பட வில்லை. ஆனால், உண்மையில் இந்து, இந்தியா இரண்டு சொற்களும் அந்நிய மூலத்தை கொண்டுள்ளது தெரிய வருகிறது. அது மட்டும் அல்ல "இந்து" ஒரு மதத்தை குறிக்கும் சொல்லே இல்லை. இது எந்த ஒரு பண்டைய வேதத்திலும் [Ancient Vedic Scriptures] கூட குறிக்கப் படவும் இல்லை .
 
இந்து [Hindu] எனும் சொற்பதம் முதலில் பாரசீகரால் ['பெர்ஷியன்'/ Persians] சிந்து [Sindu] நதியை குறிப்பதற்கு பாவிக்கப் பட்டது. அவர்களால்,"S" என்ற சொல் சரியாக உச்சரிக்க முடியாமல், "S" க்கு பதிலாக "H" ஆக உச்சரிக்கப் பட்டு அது "இந்து" ["Hindu "] வாக மாறியது என்கிறார்கள் மொழி அறிவியல் வல்லுநர்கள். பாரசீகர்களின் ஆப்பு வடிவ கல்வெட்டும் மற்றும் புனித அவெத்தா [ஜெந்த் அவெஸ்தா / Zend Avesta] வும், "இந்து" என்ற சொல் புவியியல் பெயர் என்றே குறிப்பிடுகிறது, இது ஒரு மதம் சார்ந்த சொல் என்று அது குறிப்பிட வில்லை.
 
கி.மு. 546 ல், ஆசியாவில் ஆழமாக காலுன்றி இருந்த பாரசீக சாம்ராஜ்யம் [பேரரசு] இந்தியா உப கண்ட த்தின் எல்லை வரை நீடிக்கப் பட்டது. மற்றும் பாரசீக மன்னன் டரியஸ் [Darious 1] இன் படையிலும் இந்தியர்கள் பணி யாற்றினார்கள். இந்த மக்களை பாரசீகர்கள் இந்து ["Hindus"] என குறிப் பிட்டதாக வரலாறு கூறுகிறது. அதே போல வேறு சில ஆதாரங்கள் மூலம் கிரேக்கர்கள் இலகுவாக உச்சரிக்கும் பொருட்டு, பேரரசர் அலெக்சாந்தர் [Alexander the Great] சிந்து நதியை இந்து நதி என "S" ஐ தவிர்த்து இந்து [Indus] நதி என குறிப்பிட்ட தாகவும் அறிகிறோம். கி மு 325 இல் பேரரசர் அலெக்சாந்தர் இந்தியாவிற்குள் படை எடுத்த போது, அவருடைய மாசிடோனிய [Macedonian forces] படையினர் இந்து நதிக்கு கிழக்கே உள்ள பிரதேசத்தை, இதனால், இந்தியா என அழைத்தனர். அதற்கு முன்பு, வேத கால பெயர் பாரத் [பாரத/Bharat] ஆகும்.
 
ஆகவே, இந்து என்ற மூல [வேர்] சொல், சிந்து என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து பெறப் பட்ட ஒன்றே. சிந்து ஒரு பண்டைய நதியின் பெயர். அவ்வளவு தான். மற்றும் படி ஒன்றும் இல்லை. என்றாலும் வேறு ஒரு பார்வையில், இந்து [Hindu] என்ற சொல்லிற்கு வேறு சில பொருளும் உண்டு.
உதாரணமாக, இஸ்லாமிய படையெடுப்பாளர்கள், ஆரிய சமூகத்தை அவமானப்படுத்தும் பொருட்டு, தரக்குறை வாக அவர்களை குறிக்க இந்த சொல்லை பாவித்தார்கள். 'பெர்ஷியன்' மொழியில் இதற்கு அர்த்தம் என்ன வென்றால், அடிமை [slaves], திருடன் [thief], வழிப்பறிக்காரன் [dacoit], வழிப் போக்கர்களைக் கொள்ளையடிக்க மறைவில் ஒளிந்து தாக்குபவர் [waylayer] ஆகும். மற்றும் வேறு சில கீழ்ப்படிந்த வேலைக்காரன் (obedient servant), கருத்த நிறம் (black colour), கருப்பு (black). என இகழ்கிறது. [a Persian dictionary titled Lughet-e-Kishwari, published in Lucknow in 1964,and another dictionary, Urdu-Feroze-ul-Laghat (Part One, p. 615)]
 
உலகில் வாழ்பவர்களுக்கு உருவ வழிபாடு தவிர்க்க இயலாத ஒன்றாக இருந்து வருகின்றது. தாம் உருவ வழிபாடு செய்வதில்லை என்று சொல்லிக் கொள்ளு பவர்களும் புறா வடிவிலும், புனிதநூல் வடிவிலும், பிறை வடிவிலும், ஒரு குறித்த கட்டிடத்தின் வடிவிலும் இறைவனை எண்ணுவது தவிர்க்க இயலாததாகவே இருக்கிறது. ஆக, உருவ வழிபாடு மிக அத்தியாவசிய மான, நமது புலன்களை ஒரு முகப்படுத்தி, இறை வனிடம் கொண்டு செல்லும் அம்சமாகவே இருக்கின்றது.
 
உதாரணமாக, அல்வார் நகரத்திற்கு ஒரு முறை சுவாமி விவேகானந்தர் மங்கள் சிங்கை சந்திக்க அவரின் அரண் மனைக்கு சென்றார். அப்பொழுது மங்கள் சிங் ஏளனமாக சிரித்துக் கொண்டு விவேகானந்தரிடம் கூறினார்: "நீங்கள் வழி பாடும் விக்கிரகம் [உருவச்சிலை] ஒன்றும் பெரிதாக இல்லை, அவை வெறும் களி மண், கல், அல்லது உலோகம் மாத்திரமே? நான் நினைக்கிறன், ஆகவே, உங்கள் உருவ வழிபாடு அர்த்தமற்றது என்று?".
 
விவேகானந்தர் அங்கு ஒரு உருவப்படம் [ஓவியம்] சுவரில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டார். விவேகானந்தர் அந்த ஓவியத்திற்கு கிட்ட போய், அதை சுவரில் இருந்து கீழே எடுக்கும் படி அரமனை தீவானிடம் கேட்டார் . அந்த ஓவியம் மங்கள் சிங்கின் இறந்து போன தந்தை யாருடையது. தீவான் அதை கீழே எடுத்ததும் , அந்த ஓவியத்தின் மேல் துப்பும் படி விவேகானந்தர் கூறினார். இதை கேட்ட அரசன் சீற்றம் கொண்டு: "எந்த தைரியத்துடன், என் தந்தையின் மேல் துப்பும் படி நீ கேட்பாய்" என்று ஆவேசமாக கேட்டார். ஆனால் அமைதியாக, சிரித்த படி, விவேகானந்தர் பதில் அளித்தார்: "உங்கள் தந்தை எங்கே? இது ஒரு வெறும் ஓவியமே? - ஒரு துண்டு காகிதமே, உங்கள் தந்தை இல்லையே?". அரசனின் முன்னைய உருவ சிலை பற்றிய கருத்துக்கு ஒரு விளக்கமாக விவேகானந்தரின் பதில் அமைந்து இருந்தது. எனவே, அரசன், குழப்பத் துடனும் பேச முடியாமலும் அப்படியே இருந்து விட்டார்.
 
விவேகானந்தர் அப்பொழுது அரசனிடம் :" மகாராஜா அவர்களே, இது உங்கள் தந்தையின் ஒரு ஓவியம், ஆனால், நீங்கள் அதை பார்க்கும் பொழுது , இது உங்கள் தந்தையை நினைவூட்டு கிறது. இங்கு இந்த ஓவியம் ஒரு சின்னமாகும். அப்படியே, ஒரு இந்து அல்லது சைவ பக்தர் உருவச் சிலையை வழிபடும் பொழுது, அந்த சின்னம் அவர்களுக்கு அவர்களின் அன்பு தெய்வத்தை நினை வூட்டுவதுடன், அவர்கள் அந்த தெய்வம் உருவச் சிலையில் இருப்பதாக உணர்கிறார்கள்." என்று விளக்கினார்.
 
இதனாலேயே ஆலயங்கள் நிறுவப்பட்டு ள்ளன . அவை பண்பாடு, கலைகள், வேதாகமம், வேதாந்தம், இலக்கியம், மொழி என்பவற்றை எல்லாம் வளர்க்கும் உன்னத நிலையங் களாகவும் விளங்கி வருகின்றன. எப்படி, கட்டிட கலைக்கு இளங்கலை அறிவியல் (பொறியியல்) (BSc.Eng), மருத்துவத்திற்கு மருத்துவத்துறையின் இளநிலைப் பட்டமான எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பு (M.B.B.S),கலைகளுக்கு இளநிலைப் பட்டமான நுண்கலை பட்டப்படிப்பு (B.A,fine arts) என்று ஒவ்வொரு அறிவியல் பாடங்கள் இருக்கின்றதோ அது போலவே, திருக்கோவில் வழிபாட்டுக்கு என்று ஒரு அறிவியல் உள்ளது. அதுவே ‘ஆகமம்’ ஆகும்.
 
சைவ மதம் ஆகம நெறியிலான செயற்பாடுகளை உடைய சமயம். இங்கு ஆகமத்தின்’ வேர்ச் சொற்கள் ‘‘தொன்று தொட்டு வந்தது’’ என்பதாகும். ஆகமம் என்பதற்கு மெய்யுணர்ந்தோர் கூற்று - என்றும் பொருள் உள்ளது; வேதச் சடங் குகளும், ஆகமச் சடங்குகளும் ஒன்றுக் கொன்று போட் டியாக இருந்த பழங்காலத்தில் இரண்டும் வேறுபட்டவை என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்திருந்தது. ஆனால், பல நூற்றாண்டுகளாக அவை இரண்டும் ஒன்றோ டொன்று இணைந்து விட்ட நிலையில், அவை வேறு பட்டவை என்பது இன்று மறந்துவிட்டது.
 
சடங்குகளைப் பொருத்த வரை வேதச் (வைதீக) சடங்குகள் அக்கினிச் [தீ] சடங்குகள் . ஒவ்வொரு காரியத்துக்கும் தீயுண்டாக்கி அக்கினி வளர்த்து அதில் பொருள்களை அர்ப்பணிக்க வேண்டும். தீயில் போடும் பொருள்கள் தெய்வங் களுக்குச் செல்வதாக இங்கு கருதப் படுகிறது.
 
ஆகம வழி பாட்டில், அக்கினிக்கு வேலை இல்லை. வழிபடும் தெய்வத்தின் முன்னர் வழிபாட்டுப் பொருள்களைப் படைத் துக் காட்டி விட்டு எடுத்து விடலாம். மேலும் வழிபடுபவன் தான் படைத்த பொருள்களைத் தானே உண்ணலாம், பயன் படுத்தலாம், ஆகம வழிபாட்டில் பெரும் பங்கு வகிப்பது, வழிபடும் கடவுளின் பெயர் களைச் சொல்லி நான் வணங்கு கிறேன் என்று சொல்வது தான்.
 
வேதச் சடங்கு என்பது பொருள்களை நெருப் பில் போட்டு கடவுள்களுக்கு அனுப்பு வது; ஆகவே, ஆகம வழிபாடு உப சாரமே - அதாவது நீராட்டி, அலங் கரித்து, புனித உணவு படைத்தலே யாகும் - விருந்தின ராக வந்த ஒரு மனிதனுக்குச் செய்வது போல. அது மட்டும் அல்ல, ஆகம வழிபாட்டில் மந்திர சடங்கு களுக்கு இடம் இல்லை. பிற்காலத் தில் வைதீக - ஆகம நெறிகளுக்கு இடைப் பட்ட ஒரு வழிமுறை உருவாக்கி யாகங்களில் உயிருள்ள ஆடு, மாடு களுக்குப் பதிலாக மாவால் செய்த ‘பிஷ்டபசுக்கள்’ [பிஷ்டம் -- மா] பயன்படுத்தப்பட லாயின.
 
சைவ சித்தாந்தம் பண்டைய தமிழர்களுடைய மதமும் தத்துவமும் ஆகும். டாக்டர் போப் [Dr.Pope] "சைவம் தென் இந்தியாவில், சரித்திரத்தி ற்கு முற்பட்ட மதமாக, முக்கியமாக ஆரியர் வருகைக்கு முன் இருந்து, தமிழ் மக்களின் மனதை கவர்ந்த ஒன்றாக காணப்பட்டது என்று கூறியுள்ளார். தமிழர்களின் படிப் படியான சிந்தனையின் வளர்ச்சியால் மட்டுமே சைவ சித்தாந்தம் உருவானதாக எமக்கு தோன்றுகிறது. ஆகம கொள்கைகளை அடிப் படையாகக் கொண்ட இந்த சமய நெறி, அதன் கட்டமைப்பாலும் அதன் சிந்தனை யாலும், நான்கு வேதங்களின் சிந்தனை களாலும் அதன் நடைமுறைகளாலும் கட்டமைக்கப் பட்ட சமய நெறியில் இருந்து இயல்பாகவே முற்றிலும் வேறு பட்டது.
 
ஆகவே இந்த இரண்டும் கட்டாயம் ஒரே தேசிய இனத்திற்கு உரியது என கருத முடியாது. பிந்தியது ஆரியருக்கு உரித்தேனின், முந்தியது திராவிட குழுவினருக்கு உரியது ஆகும். திராவிட குழுக்களிலும் தமிழரே, வேத காலத்திற்கு முன்னமே நாகரிகம் அடைந்தவர்கள் ஆவார்கள். ஆகவே தமிழரே சைவ ஆகமத்தை ஏற்படுத்தியவர்கள் என்பது சரியான காரணத்துடன் எடுத்த அநுமானம் ஆகும்.
 
எனவே, சைவ சித்தாந்தம் தமிழருடையதே என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் இது காட்டுகிறது . எடுத்ததற்க் கெல்லாம் "சைவமும் தமிழும். சைவமும் தமிழும்" என்று நம்மவர்கள் கூறுவதும் இதனால் போலும். ஆகவே பண்டைய தமிழ் இலக்கியம், பெருந்திரளானவை சைவ சித்தாந்தத்தை அடிப்படை யாக கொண்டவையாக இருக்கலாம் என யாரும் எதிர்பார்க்கலாம். ஆனால் இது ஏமாற்றத்தையே கொடுக்கிறது.
 
தமிழரின் இந்த வரலாற்று காலத்தில் அல்லது சங்க இலக்கிய காலத்தில், பண்டைய தமிழர்கள் மத்தியில் வாழ்ந்த கற்றறிவாளர்கள், தத்துவ மற்றும் மத ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுத தமிழை தேர்ந்தெடுக்க வில்லை. கி பி பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே , தமிழ் நாட்டில் அன்று நிலவிய சமூக எழுச்சி மற்றும் மத கொந்தளிப்பு காரணமாக, மெய்கண்ட தேவர் என்பவர், முன்னைய அனைத்து மரபுகளை யும் தாண்டி, சிவஞான போதம் என்ற சைவ சித்தாந்த சாத்திரத்தை தமிழில் தந்தார். அதற்கு முன், திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார் ஆகிய இரு சிறு படைப்புகளை தவிர மற்ற எல்லா தத்துவ மற்றும் சமய நூல்கள் சமஸ்கிரத மொழியிலேயே எழுதப்பட்டன.
 
அன்று இப்படி சமஸ்கிரதத்தில் எழுதுவது ஒரு நாகரிகமாக தமிழர் மத்தியில் இருந்தது. இவை களுடன்,இன்னும் ஒரு இலக்கியம் பக்தி பாடல்களை கொண்டவையாக, ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து வரத்தொடங்கின. இதில் பத்தாவது திருமுறையான திருமூலரின் திருமந்திரம் சிறப்பு கவனத்திற்கு உரியது ஆகும். இது மிக உயர்ந்த கருத்துக்களும், மறை பொருட்களும் கொண்ட, ஒரு சைவ ஆகமம் நூல் என்றும் போற்றப்படுகிறது. இங்கு தான், சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது என்று கருதப் படுகின்றது.
 
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்று முழங்கிய திரு மூலர், முதல் முதலில் தனது செய்யுள் வரி-1421 யில், சைவ சித்தாந்தம் என்ற சொல்லை பயன் படுத்துகிறார். "கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம், முற்பத ஞான முறை முறை நண்ணியே, சொற்பத மேவித் துரிசற்று மேலான,தற்பரங் கண்டுளோர் சைவசித்தாந்தரே." என்று அந்த திரு மந்திரம் கூறுகிறது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]  
 
 
பகுதி:02 தொடரும்.
 
466671409_10227094624054271_6841779720251394937_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=33274f&_nc_ohc=pg5K0Vw9K2sQ7kNvgHAqSyt&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AYewpRkEe3XXybb-Cz4k7bY&oh=00_AYCjP4q6UKeVZN4TUkxc5l-B3srEnKdHqfIgMp-kctdkmQ&oe=6740D126 466419507_10227094625454306_734086970153862240_n.jpg?stp=dst-jpg_p280x280&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=33274f&_nc_ohc=rhEad-pPSC4Q7kNvgHPdcI4&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AYewpRkEe3XXybb-Cz4k7bY&oh=00_AYA0F2flsdBZgJ4mIR7qPYZ8G1k9QOswp-I5y8v0z8tBig&oe=6740D202
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"சைவ மதம், இந்து மதம் [வைதீக மதம்] இரண்டும் ஒன்றா? அல்லது வேறா?" / பகுதி:02

 

 

சைவ மதம் உலகின் ஒழுங்கு படுத்தப்பட்ட, பதியப்பட்ட சமய நெறியில் மிகவும் பழமை வாய்ந்ததாக அதன் வேர், 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சம வெளியில் சிவன் [பசுபதி] வழிபாட்டிலும் மற்றும் தாய் தெய்வ வழிபாட்டி லும், மேலும் அதன் சம காலத்தில் அல்லது அதற்கும் முந்திய காலத்தில், உலகின் முதல் நாகரிகமாக கருதப் படும் சுமேரிய நாகரிகத்தில் ஈனன்ன வடிவில் தாய் தெய்வ [அல்லது காளி] வழிபாட்டி லும் காணப் படு கிறது. அதே போல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தென் இந்தியா சங்க இலக்கியத்திலும் சிவா / சிவன் குறிக்கப் பட்டுள்ளது. இந்த மத நெறி திராவிடரினதும் மற்றும் ஆரியருக்கும் பிராமண வேதத்திற்கும் முற்பட்டதாகும். ”சிவன்” என்பது ”சிவ் + அன்” ஆகும். அதாவது, ”சிவ்” தன்மை யானவன் ”சிவன்.” ”சிவ்” என்பது ”ச் + இ + உ” ஆகும். இது ”மேன்மை (ச்) நிறைவு (இ) உயிர்ப்பு (உ) தன்மை” யாகும். மேன்மை நிறைவு உயிர்ப்புத் தன்மை” யை நாம்: அன்பு, அருள், அறிவு, அறம், செம்மை, ஒளி, இன்பம், தூய்மை, அழகு, இன்பம், இனிமை, .... எனப் பலவற்றில் அடையாளப்படுத்த முடியும். ஆகவே, ”சிவன்” என்பது, அன்புமயமானவன், அருள் மயமானவன், அறிவன், அறமயமானவன், செம்மையானவன், ஒளிமயமானவன், இன்பமய மானவன், புனிதன், தூயவன், அழகன், இனியவன், .... என வெல்லாம் வரும். எனவே இவைகள் யாவும் ”சிவன்” என்பதன் ”பொருள்கள்” ஆகும். இறைவன் ஒருவனே, அவன் எல்லா வாழ்வுயிரிலும் மேம் பட்டவன், எங்கும் வியாபித்து உள்ளவன். அவர் இரக்கமானவர், அன்பானவர்.அவரது கருணை, எல்லா பாதிக்கப்பட்ட ஆன்மா மீதும் அவரது கிருபையால் பொழிகிறது. அவர் தூய அன்பு மற்றும் இரக்கம் உடையவர். எங்கும் நிலவியுள்ளார். மனிதனின் தூய்மையிலும் ஆன்மிக செயல்களிலும் மகிழ்ப்பவன் அவன். எனவே அப்படியான சைவ சமயத்தையும் தத்துவத்தையும் நிருவியவர்களும் அதை பிரச்சாரம் செய்பவர்களும், இயல்பாகவே, பரந்த நோக்குடையவர்களாகவும் மேன்மை பொருந்திய இதயம் படைத்தவர்களாகவும் இருந்தார்கள். "அன்பே சிவம்", "தென்னாடுடைய சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி" என்று சைவ மதம் எங்களுக்கு போதிக்கிறது. அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு இல்லை. இரண்டும் ஒன்றே! இந்த முது மொழி, தமிழ் இலக்கியத்திலும் சமுதாய எண்ணங்களிலும் பொசிந்து புகுந்து எல்லா இடங்களிலும் பரவி இருப்பதுடன் இது அன்பே கடவுளை அடையும் மார்க்கம் என்ற தற்கால சிந்தனையில் இருந்து வேறுபடுகிறது. அதாவது அன்பு தான் கடவுள் என்று இது போதிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வாழ்வைப் பற்றிய எமது சைவ நோக்கம் உலகளாவியன. கணியன் பூங்குன்றனார் எனும் கவிஞன் புறநானூறு -192  இல் "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என்று அறைகூவல் ஒன்றை விடு கிறான். நிறைகுடமாய்த் திகழும் தன் நெஞ்சத்தைத் திறந்துகாட்டி விரிகடல்சூழ் உலக முழுதும் நம் ஊரே என்றும், விழியும் ஒளியும் போல் மக்கள் எல்லாம் நம் உறவே என்றும் - புதிய வெளிச்சத்தால் பொல்லாத இருள் கிழித்து வேற்றுமையின் வேரறுத்துப் புரட்சி செய்தான் அந்த கவிஞன்!
 
"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னாது என்றலும் இலமே; "மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆறாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம்" என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே."
 
மேலும் சைவ சித்தாந்தம் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்"என்று எம்மை வழி காட்டுகின்றது. எமது திருக்குறள், மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்ப முடனும் இசை வுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) எம்மை அறிவுறுத்துகிறது. என்றாலும் அவர், வாழ்வில் நிறைவு அடைதல் பற்றி ஒன்றும் கூறவில்லை. முப்பாலையும் கடந்தவன் தானாகவே தனது வாழ்வில் நிறைவு காண்பான் என்பதால் அதை சொல்லாமலே விட்டு இருக்கலாம்? இப்படி நாலு வாழ்க்கை நிலையைத்தான் சைவம் எமக்கு போதிக்கி றது. இங்கு கருத்து அற்ற சடங்குக ளுக்கும் கண்மூடித்தன மான நம்பிக்கைகளுக்கும் இடம் இல்லை. "வையத்து வாழ்வாங்கு" வாழவேண்டியதன் தேவையை வலியுறுத்து கிறது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் என்று திரும்ப திரும்ப சைவ சமயம் எதிர் ஒலிக்கிறது.. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று திரு மூலர் தனது திருமந்திரம் 2104 இல் கூறுகிறார். படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் ஒரே தன்மையை உடையன என்றும் இவை அனைத்து க்கும் ஒருவனே இறைவன் என்றும் சமரசம் காணுகிறார். இது சைவ சித்தாந்தத்தின் மையக் கருத்தாக அமைகின்றது. அது மட்டும் அல்ல, சைவ சித்தாந்த நெறியின் தாரக மந்திரமாகச் திருமந்திரம் 2962  "ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும் ஒன்றுகண் டீர்உல குக்குயி ராவது" என்று கூறுகிறது. அதாவது உலக இயக்கத்துக்கு பேரொளிப் பிழம்பான ஒரு தெய்வம் உண்டு என்பதை அறிந்தீர். அந்த ஆண்டவன் உலகத்தை உயிர் போன்று இருந்து இயக்கு வதையும் அறிந்தீர் என்கிறது.வேறு எந்த சமயத்திலும் இப்படி பொதுவாக சமரசமாக கூறியது உண்டா?. இதனால் சைவம் எந்த வேறுபாடும் காட்டாமல் மக்களை இணைத்தது. இதை, இந்த தத்துவத்தை எந்த முற்போக்கு சிந்தனையாளனும் / பகுத்தறிவாளனும் எந்தவித தயக்கமும் இன்றி ஏற்றுக் கொள்வான். மேலும் அன்பே கடவுள் என திருமந்திரம் போதிக்கிறது. “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” என்பது லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) என அழைக்கப்படும் லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாயின் (Lev Nikolayevich Tolstoy) பிரபலமான வாசகம். நம்மாலான உதவியை அன்புடன் செய்திடும் பொழுது அவர்கள் உள்ளம் நிறையும், அப்போது நன்றிப் பெருக்கினால் அவர்களின் முகத்தில் சிரிப்பு தெரியும். அந்த வகையில் அன்பின் பெருமையை உலகுக்குச் சொன்ன வாசகம் இது. அந்த அன்பின் மகத்துவத்தினை திருமூலர் ’’அன்பு சிவம் இரெண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தொரு மறிகிலார்’’ என்று எவரும் இலகுவாக விளங்கக் கூடியதாக கூறு கிறார். அன்பும், சிவமும் வெவ்வேறு என பிரித்துப் பார்ப்பவர்களை அறிவே இல்லாதவர்கள் என்றும் அன்பும்,சிவமாகிய இறை நிலையம் பிரிக்கவே முடியாதது என்றும், அன்புதான் சிவம் என ஆணித்தர மாக கூறுகிறார் திருமூலர். ஆகவே "அன்பே சிவம்", அதாவது அன்பு தான் கடவுள் என்பது, திருமூலர் விவரித்தவாறு, சைவ சமயத்தின் மையக்கருவாக உள்ளது.
 
மறுபுறம், இந்து சமயம், ஆரியர்களின் இந்தியா வருகை யுடன் ஆரம்பிக்கப் பட்டது. அங்கு முக்கிய கடவுள்கள், உதாரணமாக இந்திரன் என்ற முதன்மைக் கடவுளும் , மற்றும் வருணன், அக்கினி, வாயு,  மித்திரன், பிரும்மா, விஷ்ணு, ருத்திரன் போன்ற மற்ற கடவுள்களும் ஆணாக இருப்பது குறிப்பிடத் தக்கது. மேலும் இவர்களுடன் வேள்வியை அடிப்படையாகக் கொண்ட வழிபாடும், பிறப்பு அடிப்படையில் நால்வருண அடிப்படையில் ஏற்றத் தாழ்வுள்ள சமுதாயம் கொண்ட அமைப்பு முறை முன்னுக்கு வந்தது. வேள்விகளில் பசு, குதிரைகளைப் பலியிட்டு அவற்றையே உணவாக உண்டனர். சோம பானம் குடித்தனர். கி மு 1500 ஆண்டு அளவில் நான்கு வருண முறைகளில் வெற்றியாளர்களான ஆரியர் அல்லது பிராமணர் பிறப்பால் உயர்வானவராகவும், தோற்கடிக்கப் பட்ட திராவிடர், சூத்திர ராக அடிமைகளாகவும் ஆக்கப்பட்டனர். ஆகவே, இந்த ஆரிய கடவுள்களுக்கு ஆரியர்களே அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும் அதுவும் ஆரிய மொழியான சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் எனவும் கட்டுப் படுத்தப் பட்டது. இதனால், பின்னர் பிராமணீயம் இந்தியாவில் மேலோங்கி வளர்ந்தது. ஆரியர்கள் அல்லாதார் மிலேச்சர்கள், தஸ்யூக்கள், தாசர்கள் என்று இவர்களால் அழைக்கப்பட்டார்கள். உதாரணமாக ‘தாசர்’ என்ற சொல்லுக்கு ‘ஊழியன் அல்லது அடிமை’ என்று அர்த்தமாகும். மனு ஸ்மிருதியில் (viii, 413) பிராமணர்களுக்கு சேவை (தாசியா) புரிவதற்காக சூத்திரர்கள் கடவுளால் உருவாக்கப்பட்ட வர்கள் என்று சொல்லப்படுகிறது. எனினும் தொடக்கத்தில் அவர்களின் சமூக படிநிலை வேலையின் அடிப்படையில் அமைந்தது போல் தெரிகிறது. ஆகவே வேலை மாறும் போது அவர்களின் சமூக படிநிலையும் மாறக் கூடியன வாக இருந்தன. என்றாலும் காலப் போக்கில், அவை பிறப்புடன் இணைக்கப் பட்டதால், அவை நிரந்தரம் ஆகிவிட்டன. இந்த ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து கால் நடைகளுடன் கைபர் போலன் கணவாய் வழியாக குதிரைகளில் கைகளில் இரும்பு ஆயுதங்க ளுடன் இந்தியாவிற்குள் வந்தவர்கள். அப்போது இங்கு பெரிய நாகரிகம் ஒன்று இருந்தது. அது தான் திராவிடர்களின் நாகரிகமான சிந்து சமவெளி நாகரிகம் ஆகும். அவர்களை தமது பலத்தால் வென்ற ஆரியர்கள், கி மு 1500–1000 அளவில், எங்களுக்கு செல்வத்தைத் தா, எங்கள் விரோதிகளிடமிருந்து எம்மை காப்பாற்று போன்ற கெஞ்சும் பாடல்களும், மேலும் சடங்குகளைப் பற்றியும், அப்போது பின்பற்றப்படுவதற்காக பல்வேறு விவரங்களும் மற்றும் பல்வேறு கடவுள்களைப் புகழ்ந்தும் அவர்களின் புரோகிதர்கள் பாடினார்கள். இவைதாம் ரிக் வேதம், யசுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் போன்றவை ஆகும். அதன் பின் அவர்கள் கி மு 700–500 ஆண்ட ளவில் உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) தொகுக்கப் பட்டன. இந்த ஆரியர்கள் தம்முடன் ஒரு புதிய மொழியையும் , தந்தை வழி சமுதாய அமைப்பையும் கொண்டு வந்தனர். இதனால் ஆண் குழந்தை பிறப்பு ஒரு தனி வரவேற்பையும் பெற்றது. இவர்களின் சமயம் மற்றும் வர்ணாசிரமத்தில் இருந்து ஒரு புதிய சமூக ஒழுங்கு உருவாக்கப் பட்டது. இவை அனைத்தும் அடிப்படையாக அமைத்தே இந்து சமயம் முதலில் ஆரியர்களால் கட் டமைக்கப் பட்டன. எப்படியாயினும் பின்னர் சில திராவிடர் நம்பிக்கையையும் உள் வாங்கி,திராவிட நாட் டார் தெய்வங்களையும் ஆரிய மயமாக்கி இந்து சமயம் இன்றைய நிலையை அடைந்தது எனலாம்?
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி:03 தொடரும்.
466409977_10227096237894616_2344365257039668148_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=33274f&_nc_ohc=bmmjW32MFrkQ7kNvgFaggOV&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=ATQKHF39jffFta4TwE5bAGf&oh=00_AYCPpUOQT3M39JDsd1_V2W3BMQnhYFhHhPPUmry0wTXeFA&oe=6744BD8D 466727685_10227096237854615_3903513375683988239_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=33274f&_nc_ohc=rW-9NfqvCh4Q7kNvgHz9WAx&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=ATQKHF39jffFta4TwE5bAGf&oh=00_AYAFM6omRqj0oSMJUDsVr9we8EOITSprAhPKyOMN6wDKUw&oe=6744E4BE  466517148_10227096237694611_1706992365814189804_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=33274f&_nc_ohc=3Fqz7glb_0cQ7kNvgGiDVFU&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=ATQKHF39jffFta4TwE5bAGf&oh=00_AYAJZKzt4iigRTwic3HzRmsFylC7nP4UrDvZTAINDQ9erg&oe=6744D2BB 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"சைவ மதம், இந்து மதம் [வைதீக மதம்] இரண்டும் ஒன்றா? அல்லது வேறா?" / பகுதி: 03 

 

 

இந்தியாவின் பழங் குடியினரின்[மக்களின்] நாகரிகம் முதலாவதாக, சிந்து சம வெளியில் கி மு 3300 க்கும் - கி மு 2600 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கி, கி மு 2600 - 1900 ஆண்டுகளில் ஹரப்பாவில் உச்ச நிலையில் இருந்து, பின் சடுதியாக அழிந்து போய்விட்டது. புறநானுறு 202 இல், "கோடிபல அடுக்கிய பொருள்நு மக்கு உதவிய நீடுநிலை அரையத்துக் கேடும் கேளினி" என்ற வரியில் கோடிக்கணக்கில் பொருள் கொடுத்து உன் முன்னோர்களுக்கு உதவி, உயர்ந்த நிலையில் இருந்த அந்த அரையம் ஏன் அழிந்தது என்று கூறுகிறேன் என்கிறார். அரையம் என்றால், பெரும் நகரம் என்று பொருள். அரையம் என்பதன் திரிந்த வடிவமே அரப்பா என்ற கருத்து ஆய்வுலகில் நீண்ட காலமாக உள்ளது. முனைவர் ஐராவதம் மகாதேவன் இக்கருத்தையும் கணக்கில் கொள்ளலாம் என்கிறார்.
 
இந்த பழங் குடியினர் மிக பழைய காலத்தில், ஆப்ரிகாவில் இருந்து குடி பெயர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. ஆகவே, ஆப்ரிகாவில் நிலவிய பண்பாடு போல, பண்டைய இந்தியாவும் பெரும்பாலும் தாய்வழி சமூகமாகவே இருந்தது. எனவே, அப்போதைய இந்த மக்கள் பெண்ணை மையப்படுத்தி வாழ்ந்தார்கள். இவர்கள் பிறப்பின் அதிசயத்தை, கால மாற்றத்தை, நிலவின் தேய்தல் வளர்தலை, மறுபிறப்பை, தெய்விகத்தை அல்லது ஈடற்ற நிலையை [mysteries of birth,the seasons and lunar cycles, rebirth and transcendence] கொண்டாடினார்கள். கருவளம், ஆண்மை மற்றும் மறுமை [fertility,virility and the after-life] போன்றவற்றுடன் தொடர்புடைய ஆன்மீக சக்திகளையும் வழிபட்டார்கள். பொதுவாக, இம் மக்கள் தந்திர முறை பண்பாட்டையே கொண்டிருந்தார்கள். இது ஆரியர்களின் வேத வழக்கத்தில் இருந்து வேறுபட்டது. இது ஒருவர் தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் ஒன்றின் மேல் ஆதிக்கம் செலுத்த வைக்கும் முறை ஆகும். ஆகவே ஆரியர்களின் அகநிலை உணர்வுக்குப் புறம்பான, வெளிப்புற சடங்கில் இருந்து மாறு பட்டது.
 
சிந்து - சரஸ்வதி நாகரிகத்தின் சுவடுகளாக நமக்குக் கிடைக்கும் அகழ்வுத் தடயங்களில் ஒன்று பசுபதி வடிவம். இந்த பசுபதி முத்திரையை சிவனின் முன்னைய வடிவமாக அல்லது சிவனின் தொடக்கக் கருத்துருவாக [முற்காலத்திய சிவனாக] சர் ஜான் மார்ஷல் அடையாளப் படுத்துகிறார். அது மட்டும் அல்ல, சிந்து வெளி இடிபாடுகளுக் கிடையில், படைப்பாற்றல் சின்னங்களான, சிவ பக்தர்களால் இன்றும் பாவிக்கப்படும் வடிவம் ஒத்த , லிங்கம் மற்றும் யோனி வடிவ பெருங்கல்கள் கிடைத்த துள்ளன. விவசாய மற்றும் பழங்குடி மக்களுக்கிடையில் காணப்பட்ட, படைப்பா ற்றல் சின்னங்களின் வழிபாடை ஒத்த வழிபாடு இங்கும் தொடர்வதை இது எமக்கு எடுத்துரைக்கிறது. இந்த தொடக்க நிலை சைவ சமயத்தின் அத்திவாரத்தில் இருந்தே இன்றைய சைவ சமயம் வளர்ந்தது எனலாம். இது மேலும் ஆரியர்க ளின் வருகைக்கு முன்பே, சிவனை வழிபடும் வழக்கம் இந்தியாவில் இருந்துள்ளது என்பது இதனால் அறியப் படுகிறது. எனினும், இந்த நாகரிகம் இந்தியாவிற்குள் புகுந்த ஆரியரின் தாக்குதலாலும் மேலும் வறட்சியாலும் கி மு 1700 ஆண்டு அளவில் முற்றாக அழிவுற்றது.
 
எப்படியாயினும், சிவாவை மையப்படுத்திய சிந்து வெளி வழிபாடு, திராவிட இந்தியாவில், குறிப்பாக தமிழர் மத்தியில் இன்றும், இன்னும் போற்றிப் பேணப்படுகிறது. சிவ வழிபாடு திராவிட மக்களுடையது என்பதை ஆரியர்களின் மனப் போக்கில் இருந்து நாம் தெளிவாக அறியலாம். வட வேதங்களில் லிங்கம் என்பது இழிவாக ஆண்குறி என்ற பொருளில் தான் குறிப்பிடப்படுகிறது. இந்த அடிப்படை யில் சிவ லிங்கத்தை “சிசின தேவன்” என்று மிக இழி வாக வட மொழியான கி மு 1500-1100 ஆண்டு அளவில் தொகுக்கப்பட்ட ரிக் வேதம் [இருக்கு வேதம்] கூறுகிறது. இதில், 7.21.5 பாடலில் "Let our true God subdue the hostile rabble:let not the lewd [Shishan Deva] approach our holy worship." என்று கூறுகிறது. அதாவது "எங்கள் உண்மையான கடவுள், இந்திரன், எமது எதிரியான ஒழுங்கீனமான கும்பலை அடக்கட்டும்: ஓழுக்கங்கெட்ட ஆண் குறியை வணங்கும் கும்பல், எமது புனித இடத்தை ஊடுருவதை தடுக்கட்டும்" என்கிறது. எது எப்படி யாயினும் பிந்திய வடவேதங்களில் சிவா அதிகரித்த முக்கியத்துவம் பெறுகிறார். இது அவர்கள் காலப்போக்கில் சைவத்தையும் உள்வாங்கியதை எடுத்துக் காட்டுகிறது.
 
மேலும் பிற்பட்ட தொல்லியல் மற்றும் வரலாற்று ஆராய்ச்சிகள், சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள், ஆரியரல்லாத திராவிட இன மக்கள் என பெரும்பாலும் அடையாளப் படுத்து கிறது. சர் ஜான் மார்ஷலின் அகழ்வு ஆய்வு, சைவ சமயத்தின் வரலாற்றை கிறிஸ்துக்கு முன் 3000 ஆண்டுகளுக்கு கொண்டு செல்கிறது. சர் ஜான் மார்ஷல் ஏழு மண் அடுக்கு வரை தோண்டி ஆய்வு செய்தார். ஒரு மண் அடுக்கு ஏறத்தாள 500 வருடங்களை குறிக்கும். பிரபல தத்துவவாதியும் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவருமான, டாக்டர் சர்வபள்ளி இராதா கிருஷ்ணன் தான் எழுதிய இந்து சமய வரலாறு [History of Hinduism] என்ற நூலில் சைவ சமயத்தின் ஆரம்பம், நாம் இது வரை ஏற்றுக் கொண்டதை விட மேலும் சில நூற்றாண்டுகள் கூடுதலாக இருக்கலாம். ஏனென்றால் இன்னும் முதலாவது மண் அடுக்கு அடையாள படுத்தப் பட வில்லை. ஆகவே சரியாக தீர்மானிக்க முடியாது என்கிறார். இவை எல்லாம் எமக்கு காட்டுவது,இந்தியாவிற்கு ஆரியர் வருகைக்கு முன்னமே அங்கு சைவ சமயம் தழைத்தோங்கி இருந்தது என்பதாகும்.இந்த வரலாற்று உண்மைகள் எல்லாம் இந்தியர் அல்லாதவர்களால் சரிபார்க்கப்பட்டது. இது சைவ சமயத்தை உலகின் மிகப் பழமையான மதமாக்கிறது!
 
சாதாரண பொது மக்களும் இலகுவாக அன்பு செலுத்த, மனத்தால் உணர, புரிந்து கொள்ள திராவிடர்களின் வழி பாட்டு முறை உருவ வழிபாடாக இருந்தது. அங்கே அவர்கள் பருப் பொருளாலான மத சின்னத் திற்கு பூசை செய்தார்கள். திராவிடர்கள் ஆண்டவனை நீர், இலைகள், மலர்கள் கொண்டு வழிபட்டார்கள். ஆரியர்களின் வழிபாடு வேள்வி [ஹோமம், ஓமம்] ஆகும். இது ஒரு உருவம் அற்ற வழிபாடாகும். நெருப்பினை ஏற்றி அதில் பலவேறு பொருட்களை, விலங்குகளை இட்டு எரிப்பதன் மூலமாக இறைவனை வழிபடும் முறை இது வாகும்.
 
ஆண்டவனுக்கு தமது செய்திகளை காவிச் செல்லும் ஒரு தூதராக நெருப்பு தொழிற் படுவதாக அவர்கள் கருதுகிறார்கள். வேதகாலத்தில் இருந்தே இத்தகைய சடங்கு முறைகள், ஆரியர்கள் மத்தியில் வழக்கில் இருந்து வருகிறது. ஆண்டவனின் ஆதரவை பெற, அவரை மகிழ்விக்கும் அல்லது திருப்தி படுத்தும் முறையாக இதை ஆரியர்கள் பின்பற்று கிறார்கள். மத்திய ஆசியாவில் இருந்து நாடோடியாக வந்த ஆரியர்கள், திராவிடர்களை வென்ற பின்பு, பண்டைய திராவிடர்களின் சமயத்திலும் மாற்றம் மெல்ல மெல்ல எற்பட்டது .
 
பண்டைய கால தமிழர்கள் போர் மற்றும் காதலில் சிறந்து விளங்கிய, “இளமை’ கடவுளை வணங்கினர். அக் கடவுளுக்கு இளமை, இளைஞன் எனும் பொருள்பட முருகு அல்லது முருகன் என்ற திராவிட பெயர்கள் வழங்கப்பட்டன [முருகு விம்மிய மொய் குழலேழை (சீவ.)] . அக்கடவுள், வடஇந்தியர்கள் வணங்கிய போர்கடவுளான “ஸ்கந்தா’வோடு ஒத்து காணப்படுகிறது. அது போலவே வேதங்களில் 'உருத்திரன்; என்று ஒருவரைப் பற்றிப் பேசப் படுகின்றது! இவரைச் சிவனுடன் சேர்த்துவிட்டார்கள். உதாரணமாக, தமிழரின் சிறப்புக் கடவுள்கள், ஆரியக் கலப்புக்குப் பின்னர்,
 
முருகன் → ஸ்கந்தன் / சுப்பிரமணியன் ஆனான்!
திருமால்→ விஷ்ணு ஆனான்!
சிவன்→ ருத்திரன் ஆனான்!
கொற்றவை→பார்வதி / துர்க்கை ஆனாள்!
 
உதாரணமாக சுத்த தமிழ்க்கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண்ய னாக்கி விட்டார்கள். ஏன்... பரமசிவன் - பார்வதியின் மகனாக்கி விட்டார்கள். தமிழர்களின் சைவ மதம் வைதீக பிராமண மதத்துக்குள் உள் வாங்கப் பட்டது. அடிமைப் படுத்தப் பட்ட மக்களை, வென்றவர்களின் கலாச்சாரத்தி ற்குள் உள்வாங்கிய வரலாறு தான், பிற்கால இந்து மதத்தின் வரலாறு ஆகும். தென்னிந்தியர்களின் நாட்டார் தெய்வங்களை எல்லாம், இந்து மதத்திற்குள் உள்வாங்கி னார்கள். அவற்றிற்கு, சமஸ்கிருதப் பெயர்கள் சூட்டப் பட்டன. தமிழரின் நாட்டார் தெய்வமான முருகன், சுப்பிரமணியன் என்று பெயர் மாற்றி இந்து மதக் கடவுளர்களில் ஒருவரானார். அதனால் தான், தமிழரை விட அதிகமாக ஆரிய மயப் பட்ட, மலையாளிகளும், கன்னடர்களும், "சுப்பிரமணியக் கடவுள்" என்றே அழைக்கின்றனர். முருகனும், சுப்ரமணியனும் வேறு வேறு என்பதை, தமிழ் இந்துக்களும் [சைவர்களும்] உணர்வ தில்லை.
 
தொடக்கத்தில் வைதீக பிராமண மதம் யாகத்தில் உயிர்க்கொலை செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்த படியாலும், நால்வகைச் சாதிப்பாகுபாடுடையதாய்ப் பிராமணர் மட்டும் உயர்ந்தவர் என்னும் கொள்கையுடைய தாயிருந்த படியாலும், இவற்றிற்கு மேலாக, பிராமணர் தவிர மற்றவர்கள் வேதத்தைப் படிக்கக் கூடாது என்று தடுத்து வந்த படியாலும், இவ்விதக் குறுகிய கோட்பாட்டினை யுடைய வைதீக மதத்தில் மக்களுக்கு மனம் செல்லவில்லை. என்றாலும் கி. பி. நாலாவது, அல்லது ஐந்தாவது நூற்றாண்டுக்குப் பின்னர், வைதீக மதம் தனது அடிப்படையான கொள்கைகள் சிலவற்றில் மாறுதல் செய்துகொண்டு புத்துயிர் பெற்றது.
 
அதாவது, யாகங்களில் உயிர்க் கொலை செய்வதை நிறுத்திக் கொண்டதோடு, திராவிட தெய்வங்களைத் தன் மதக் கடவுளராக ஏற்றுக் கொண்டு புதிய உருவம் பெற்று விட்டது. உலக வரலாறு நெடுகிலும் , ஆக்கிரமிப்பாளர்கள் கடைப்பிடிக்கும் தந்திரம் இது. உறவுமுறைகளை வலிமைப் படுத்த ஏராளமான புராணங்கள் உருவாக்கப்பட்டன. தமிழில் உள்ள, முருகன், வள்ளிக் கதையானது, குறவர்கள் போன்ற பழங்குடி இனத்தவருக்கு உரியதாகத் தெரிகின்றது. இன்றைக்கும், பிராமணர்களின் வர்ண சாஸ்திரத்தால் தாழ்த்தப்பட்ட சாதியினர் அல்லது கிராமபுர மக்கள் மத்தியில் "முருகன்", "வள்ளி" போன்ற பெயர்கள் பிரபலமாக உள்ளன. உயர் சாதியினர் அல்லது சம்ஸ்கிருத மோகம் கொண்ட மக்கள் மத்தியில், அதற்கு மாறாக, "ஸ்கந்தன்", "சுப்பிரமணியன்" என்று சமஸ்கிருதப் பெயர்களை வைத்துக் கொள்கின்றனர்.
 
தமிழர் சமயக் கிரியைகளோடு வைதீக வேள்விக் கிரியைகள் கலந்தன. ஆரிய பிராமணர்களின் தொழில் வளம் கருதி உருவாக்கப்பட்ட கிரியைகள் அறிவுக்கு ஒவ்வா நம்பிக்கைகளை உருவாக்கின. திராவிட தெய்வங்கள் வைதீகத்தில் கலந்து உரு மாறின. முருகனுக்கு தமிழில் வள்ளி என்ற மனைவி இருந்தார். ஆரியத்தோடு சேர்ந்து இந்திரனின் மகளான தெய்வானையும் மனைவியாகச் சேர்ந்து கொண்டார். இதன் மூலமே, தேவேந்திரனுடன் சொந்த மாகின்றார்! இதில் முதலாவது களவொழுக்கத்தையும் இரண்டாவது கற்பொழுக்கத்தையும் காட்டுகிறது. மணச் சடங்கினைப் பற்றி தொல் காப்பியம் கூறும் செய்திகளில் பண்டைத் தமிழர்கள் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர் என்பதை அறிகிறோம். எனினும் காலப்போக்கில், பெற்றோர் நடத்தி வைக்கும் 'கற்பு நெறி' மணவாழ்க்கை அறிமுகப் படுத்தப் பட்டது. இதன் பின்னராக சாதாரண மக்களுக்குப் புரியும்படியாக அண்ணன், தம்பி, தங்கை, அக்கா , மச்சினன் என தெய்வங்களுக்கிடையே உறவுமுறை உருவாக்கப்பட்டன .
 
முருகனும், பிள்யைாரும் சிவனுக்குக் குழந்தைகள். திருமால் மைத்துனர் ....... தமிழர் அமைத்த கோயில்களில் பிராமணர் பூசகராயும் சமற்கிருதம் பூசனை மொழியாகவும் ஆனது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த அரசர்களே இதற்கெல்லாம் வழி கொடுத்து வணங்கி நின்றனர். கொற்றவை சங்க கால பழந்தமிழ் மக்களின் வெற்றித் தெய்வம். சிந்துவெளிப் பெண் தெய்வத்திற்கும் கொற்றவைக்குமுள்ள உண்மை யான தொடர்பினை இன்றைய ஆராய்ச்சி நிலையில் தெளிவாகக் கூறுவதற்கில்லை. எனினும் தொடர்பு நெருங்கியதாக இருக்கலாம் என ஊகிக்க இட முண்டு.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி:04 தொடரும்.
466093555_10227099069245398_6117080749484457235_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=33274f&_nc_ohc=otS5ruDLdRcQ7kNvgFl2Hhz&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=ALBmJo8b3KbYNkGc81pq76c&oh=00_AYD7itT5EQwSKPqCaClV1E7HQ7LeFCwEb4AD_CcKmJUqqQ&oe=674764AE  466119870_10227099069365401_5646161657023990542_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=33274f&_nc_ohc=JzDXJK8NR9sQ7kNvgFmswX4&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=ALBmJo8b3KbYNkGc81pq76c&oh=00_AYAUUY6w8nU0P_so6TZmNZoIgOpWddCQUWzQ6UUfRUmDAQ&oe=67478377  466047598_10227099069325400_2356988077904938067_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=33274f&_nc_ohc=Z-ojyofiR6sQ7kNvgGUiBBF&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=ALBmJo8b3KbYNkGc81pq76c&oh=00_AYCjaOgExcoIVKxlxdGbk3tSgQeVjMqoJ_Nbg7QDqci7BA&oe=674772CF 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஒரு சைவன். குலதெய்வம் வைரவர். சிறு வயதில் சைவ சமய பாடப்புத்தகத்தையே படித்துள்ளேன். வகுப்புகள் ஏற ஏற இந்துநாகரீகம் படிக்க வேண்டி வந்தது.

இப்போது  அனுமானை கும்பிடச்சொல்லி நிர்ப்பந்திக்கின்றார்கள். காவல் தெய்வமாம்.
அப்ப வைரவர் என்ன ஆனார்?

  • நியானி changed the title to "சைவ மதம், இந்து மதம் [வைதீக மதம்] இரண்டும் ஒன்றா? அல்லது வேறா?"
  • கருத்துக்கள உறவுகள்
On 23/11/2024 at 11:52, குமாரசாமி said:

நான் ஒரு சைவன். குலதெய்வம் வைரவர். சிறு வயதில் சைவ சமய பாடப்புத்தகத்தையே படித்துள்ளேன். வகுப்புகள் ஏற ஏற இந்துநாகரீகம் படிக்க வேண்டி வந்தது.

இப்போது  அனுமானை கும்பிடச்சொல்லி நிர்ப்பந்திக்கின்றார்கள். காவல் தெய்வமாம்.
அப்ப வைரவர் என்ன ஆனார்?

கு . சா . ...... வைரவர் ,  வீரபத்ரர் , காளி எல்லோரும் காவல் தெய்வங்கள்தான் . ..... வைரவர் உங்கள் வரையில் தாய் போன்றவர் ,  ஏனையோர் பெரியம்மா ,  சின்னம்மா போன்று மரியாதைக்குரியவர் . ......!

ஜானகி வனத்தில் பொன்மானைக் கண்டு அம்மான் ராமனை திரத்தியிரா திருந்தால் ராமனுக்கே அனுமானைத் தெரிந்திருக்காது . ........பிறகேன் உங்களுக்கு கவலை . .......ஐரோப்பாவிலேயே ஐநூறுக்கும் அதிகமாய் சைவக் கோயில்கள் இருக்கு .......கர்த்தரை என்ன செய்வதென்று ஐரோப்பியர் யோசிக்கவில்லைத்தானே ...........!

வைரவரைத் தலையில் வைத்துக் கொண்டு ஒருநாளும் மெய்ஞானம் அடைய முடியாது . ....... ஆனால் உங்களுடைய பக்திக்கு வைரவர் உங்களைத் தோளில் தூக்கிவைத்து மெய்ஞானத்தை நோக்கி உந்தித் தள்ளிவிடுவார் ஒரு ராக்கட் பாய்வதைப் போல் . ........!

"பற்றுக பற்றற்றான் பற்றை பற்றுக 

அப் பற்றை விடற்கு " 

உண்மையை கூறுங்கள் நீங்களா நிர்ப்பந்தத்துக்கு அடிபணிபவர் சும்மாவெல்லாம் புலுடா விடக்கூடாது . ......!  😂

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
"சைவ மதம், இந்து மதம் [வைதீக மதம்] இரண்டும் ஒன்றா? அல்லது வேறா?" / பகுதி: 04
 
 
பொது வாக, சுமேரியனுக்கும் திராவிடனுக்கும் இடையில் உள்ள ஒற்றுமையின் அடிப்படையில் திராவிடர்கள் மேற்கு ஆசியாவில் இருந்து பலுசிஸ்தானின் ஊடாக இந்தியா விற்கு வந்தவர்கள் என நம்பப் படுகிறது. ஸ்பென்சர் வெல்ஸ் [Spencer Wells] எழுதிய மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”) என்ற நூலில் இருந்து "இந்தியன் மார்க்கர்" [Indian marker] என அழைக்கப்படும் M 20, திராவிடர்களின் மூதாதையர் வழி L(HAPLOGROUP –L) மரபுக் காட்டி, 30,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து இந்தியாவில் உள்ளது என்பதை அறிய முடிகிறது. இவர்கள் மத்திய கிழக்கு, தென் மேற்கு ஆசியாவில் இருந்து பலுசிஸ்தானின் [Baluchistan] ஊடாக சிந்து சம வெளி வந்து, அங்கு இருந்து இறுதியாக விந்திய மலை த்தொடரின் [Vindhya Range] தெற்கு பகுதிக்கு, தென் இந்தியாவிற்கு வந்தார்கள் என்பது அறிய முடிகிறது. இந்த மரபுக் காட்டி M 20 யைக் கொண்ட ஆதி மனிதக் கூட்டத்தின் இந்த முக்கிய இடம் பெயர்வு, தனக்கு முன்னால், இன்றைக்கு சுமார் 50,000 ஆண்டு களுக்கு முன்னர் தென்னிந்தியா கரையோரம் இடம் பெயர்ந்த மரபுக் காட்டி M 130 கொண்ட ஆதி மனிதக் கூட்டத்தினை எதிர்கொண்டது . இந்த முன்னைய கரையோர ஆதி மனிதனை முந்திய திராவிடன் [pre-dravidian] என அழைக்கலாம். இந்த முதனிலைத் திராவிடர் கூட்டம், முந்திய திராவிட கூட்டத்துடன் கலந்து, இந்த கலப்பில் இருந்தே திராவிட வரலாறு [அல்லது தமிழர் வரலாறு] பிறந்தது என்பர் அறிஞர்கள். ஆகவே சைவ மதத்தின் சாயல் சுமேரியாவிலும் இருக்க சந்தர்ப்பம் உண்டு. இதை நிரூபிக்கும் ஒரு சான்றாக, ஏறக்குறைய கி.மு. 2200 வாக்கில் சார்கோன் (Sargon) எனும் பேரசனின் புதல்வியாக விளங்கிய "ஏண் உடு அன்னா"[[Enheduanna] ] எனப்படும் ஓர் அம்மையார் எழுதிய, ஈனன்னாவை போற்றி துதி பாடும், ஈனன்னை சீர்பியம் [ஈனன்னா B][exaltation of Inana (Inana B)] பாடல்கள் அமைகின்றன. பாடல் ஒன்றில் பல வரிகளில் "ME " மெய் பற்றி கூறப்பட்டுள்ளது.
 
 
"அனைத்து சக்தி அன்னை [nin-me-sar-ra / நின் மெய் சர்வ],
தெள்ளிய ஒளி வடிவினள் [u-dalla-e-a /உள் தெள்ளிய]
மிகப் பிரகாச ஒளியையே ஆடையாக தரித்துள்ள அழகிய மாது; [mi-zi me-lam gur-ru /மை-சீ மேளம் கூறு ]
விண்ணிலும் புவியிலும் இருக்கும் அனைத்தாலும் விரும்பப் படுகின்றவள் [ki-aga-an-uras-a /காங்க வான் ஊரஸ்ய].
ஆண் எனப்படும் மகாதேவனின் நங்கை; சிகையில் பெரும் பெரும் அணிகளை சூட்டியவள்.
மெய்யான அழகோடு விளங்குபவள்; உயர்ந்த பதவிக்கு தகுந்தவள்.
ஏழுவகை மெய்களை கைகளில் (வளையல்களாக) அணிபவள்; [மெய்: சக்தி)]
என் அன்னையே,பெரும் பெரும் மெய்களை சிரசில் கட்டுபவள் நீயேதான்
அனைத்து மெய்களையும் எடுத்து உடம்பில் அணிகளாய் அணிகின்றாய்:
மெய்களை திரட்டி மெய்யான உன் கவசாக நெஞ்சில் தைத்துக் கொள்கின்றாய்"
 
 
இது தான் அந்த குறிப்பிட்ட முழுப் பாடலாகும். இவள், அன்னையாகிய நின்னா, சர்வ மெய்களின் தலைவி என்பதொடு தெள்ளிய ஒளியினாள் என்றும். சீர் மிகு பெண் என்பதொடு தூய வெள்ளொளியையே அணிந்திருப்பவள் என்றும் பூவுலகாலும் வானுலகாலும் விரும்பப்படுகின்றவள் என்றும் வாசிக்கும் போதே சைவத்திற்கும் சுமேரியன் சமயத்திற்கும் உள்ள தொடர்பு உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று எண்ணுகிறேன். சர்வ மெய்களின் நின்னா’ என்பதை இன்று ‘தத்துவ நாயகி” என்றும் ‘தெள்ளிய ஒளி’ என்பதை ‘பரஞ்சுடர்’ என்றும் ‘பராபரை” [The Divine Energy of Siva] அல்லது சிவசக்தி என்றெல்லாம் கூறலாம். சீர் மிகு மங்கையாகிய இவள் தூய வெள்ளொளியையே ஆடையாக அணிகின்றாள் என்று கூறும் போது, அவள் ஒளிப்பிரகாசமாய் அன்றே கண்களுக்கு காட்சி தந்துள்ளது என்பது மெய்யாகிறது. இதுவே நின்னாவை அழகு மிக்கவளாக, ஆகவே உலகிலும் விண்ணிலும் உள்ள அனைவராலும் விரும்பப்படுகின்ற வளாகவும் ஆக்குகின்றது. எல்லா தத்வங்களின் நாயகியாக விளங்கும் அம்மை பரஞ்சுடராக தூய வெள்ளொளியில் தெள்ளிய ஒளியில் சுடரும் அவளை எல்லோரும் விரும்பு கின்றார்கள் என்றால் என்ன பொருள்? இந்த ஞான தரிசனத்தைப் பெற்று உய்ய வேண்டும் என்ற வேட்கை எல்லா உயிர்களிடமும் இருக்கின்றது என்பதே இங்கு அம்மையார் விளம்பும் மெய்ஞானக் கருத்து ஆகும் என்கிறார் முனைவர் கி.லோகநாதன். இதனையே சிவன் மேல் ஏற்றிக் கூறுகின்றார் ஏறக்குறைய 2800 ஆண்டுகளுக்குப் பிறகு திருமூலர் நான்காம் தந்திரத்தில், பாடல் 889 இல். மேலும் இங்கு கொற்றவையே 'ஈனன்னா' [Inanna] எனப்படுகி ன்றார் என முனைவர் கி.லோகநாதன், அறிவியல் பல்கலைக்கழகம், பினாங்கு பல சான்றுகளுடன் கூறுகிறார். கொற்றவை ஒரு சுயாதீனமான தெய்வம் என்றும், பின்னர் சிவாவுடன் இணைந்தார் /விவாகம் செய்யப்பட்டார் என்றும் கற்றறிவாளர்கள் கூறுவார்கள். அத்துடன், அஸ்கோ பர்போலா [Asco Parpola.] என்ற அறிஞர் தமது புத்தாகத்தில் துர்காவிற்கும் [காளிக்கும்] ஈனன்னாவிற்கும் தொடர்பு இருப்பதை எடுத்து காட்டியுள்ளார். தமிழரின் சைவ சமயத்தில் சிவனை தத்துவன் எனவும் அழைக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் பொருள் எல்லா சக்திகளினதும் தலைவர் என்பது [Siva, as lord of all powers] ஆகும்.
 
 
"தானே பரஞ்சுடர் தத்துவமாய் நிற்கும்
தானே அகர் உகரமாய் நிற்கும்
தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்
தானே தனக்குத் தராதலம் தானே"
 
 
சிவன் என்றாலும் பரஞ்சுடர் என்றுதான் பொருள்படும் . ‘உள் (ஒள்) தெள்ளிய” என்பதும் அதுதானே. ‘சர்வ மெய்களின் அன்னை’ என்றாலும் ‘தானே தத்துவமாய் நிற்கும்’ என்பதும் ஒன்றுதானே? அவளே எல்லா தத்துவங்களின் தலைவி எனும் போது, தானே மண்ணிலும் விண்ணிலும் நடக்கும் எல்லா தத்துவக் கூத்துகட்கும் தராதலமாக அமைகின்றாள் [தராதலம் - தாங்குகின்ற இடம். தத்து வக் கூத்து - தத்துவங்களை ஆக்குகின்ற கூத்து] என்பது பொருளாகும். ஆகவே சுமேரியாவின் ஈனன்னா, சிந்து வெளியின் தாய் தெய்வம், சங்கத் தமிழரின் கொற்றவை சைவசித்தாந்தத்திலும், சக்தியாக, சிவனுடைய சக்தியாக உருமாறியது என்று கொள்ளலாம்,மேலும்,சிந்து வெளி முத்திரைகள் இந்தியாவிற்கு வெளியே, உம்மா மற்றும் ஊர் [Umma and Ur] போன்ற மெசொப்பொதாமியா நகரங்களிலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அது மட்டும் அல்ல, சில இரண்டு நாகரிக முத்திரைகளிளும் நெருங்கிய ஒற்றுமையையும் காண முடிகிறது. இவை, இரு நாகரிக மதங்க ளுக்கும் பண்பாட்டிற்கும் இடையில் ஒரு தொடர்பை காட்டுகிறது. உதாரணமாக இரு பக்கமும் சீறி எழுகிற, மூர்க்கமான புலிகளை கெட்டியாகப் பிடித்து நிற்கும் வீரனை காட்டும் மொகஞ்சதாரோ முத்திரையும் கில்கமெஷ் தனது இருகைகளாலும் இரு சிங்கங்களை பிடித்து நிற்கும் முத்திரையும் ஒரே மையக் கருத்தாக உள்ளது குறிப்பிடத் தக்கது. பல தமிழ் இலக்கியங்கள் முருகனை தாய்வழி உரிமை பெறும் திராவிடத் தெய்வமாகக் காட்டுகின்றன. "வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ" என்றும் "மலைமகள் மகனே" என்றும் "இழையணி சிறப்பிற் பழையோள் குழவி"என்றும் பாடுகின்றது. சிவனுடைய மகன் என்று சொல்லாமல் கொற்றவை சிறுவன் என்று முருகன் குறிப்பிடப் படும் பொழுது அங்கு தாய்வழி உரிமைச் சமுதாய உறவுமுறை நிலவியது என்று நாம் திடமாக நம்பலாம்.  எனினும் ஆரியரின் கலப்பிற்கு பின்,இன்று நாம் பெரும்பாலும் தந்தை வழி சமுதாயமாக மாறி நிற்கிறோம்.
 
 
தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்கத் தமிழ் இலக்கிய நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களிலும் சிவன் அல்லது சைவம் என்ற சொற்கள் நேரடியாகப் பயன்படுத்தப்படா விட்டாலும், சிவன் தொடர்பான செய்திகள் ஆங்காங்கே உள்ளன. இவ்வாறு சுமேரியா, சிந்து சம வெளி, சங்க காலம் போன்றவற்றில் சக்தி, சிவ வணக்கத்துக்குரிய சான்றுகள் ஆரியருக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே கிடைத்து வந்தாலும்,  சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப்படுகின்றது. இன்று இந்து மதத்தின் உட்பிரிவாக ஆரிய மயப்பட்ட சைவ சமயமே பெரும்பான்மை தமிழர்களின் சமயமாக இருக்கிறது. அது மட்டும் அல்ல, நான்கு வேதங்கள், சமஸ்கிருத புராணங்கள், மற்றும் காவியங்கள் [the Vedas,Sanskrit puranas and epics] போன்றவை தமிழர்களுக்கு அவர்களின் மதமாக இவர்களால் வழங்கப் படடன. இது ஒரு அழிவுண்டாக்குகிற செயலாகும். இதனால், பக்தி நெறி காலத்தில் காணப்ப ட்ட வழிபாட்டு முறை, சமத்துவம், தமிழ்மொழியில் அர்ச்சனையும் இன்று எம்மிடம் காணப்படவில்லை.
 
 
வேதத்தை அடிப்படையாக கொண்ட, இன்றைய ஈரானில் இருந்து இந்திய வந்த ஆரியரின் மதம், படிப்படியாக கி மு ஆறாம் நூற்ராண்டிற்கும் இரண்டாம் நூற்ராண்டிற்கும் இடையில் இன்றைய இந்து மதமாக மாற்றம் அடைந்தது. அவர்களின் நூல்கள் கூட் டாக இந்து மதத்தின் புனித நூல் ஆகின. மேலும் இதன் சில தாக்கங்களை தொல்காப்பியம்,புறநானுறு மற்றும் கி மு 700 ஆண்டு தொடக்கம் கி பி 300 ஆண்டுகளுக்கு உட்ப ட்ட, மற்றைய சங்க இலக்கியங்களிலும் காணலாம். "அறு வகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்" - என தொல்காப்பியம் 2.16 உம், "தந்தை தோழன் இவர் என் மகளிர் அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே" - என புறநானுறு 201 உம் கூறுகின்றன. இவை இந்த தாக்கங்களின் சில உதாரணம் ஆகும். வர்ணாசிரமம் இதுவாகும். வேதியர், சத்திரியர், வணிகர் மற்றும் சூத்திரர் எனும் நால்வகை வர்ணத்தினரை ஒரு படி முறையில் வழங்குகிறது. இதற்கும் சைவ மதத்திற்கும் எந்த தொடர்ப்புமே இல்லை. சாதிக்கொள்கை சைவக்கொள்கை அன்று. சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று.சாதிப் பாகு பாடு சைவம் செய்தது அன்று. சாதிவெறி சைவநெறி அன்று.`குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை ஆகும். எனவே தெட்டத் தெளிவாக தமிழரின் சைவ மதம், ஆரியர்களின் பிரா மணிய இந்து [ஹிந்து] மதத்தில் இருந்து முற்றிலும் வேறு பட்டது. இதை என்று நாம் உணருகிறோமோ அன்று தான் "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்பதை நீ உணர்வாய் !
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]   
 
 
முடிவுற்றது
No photo description available.  466427389_10227100950492428_7828491392212118284_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=33274f&_nc_ohc=OF1XhdSvdKwQ7kNvgEvcmFX&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AGCtDHPvTx-5DhEDKUhdFhi&oh=00_AYBysqOcBZklsDShk5NFsM8HGf3wDk2mc6iz4iSRoZyaJQ&oe=674BB9E7
 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.