Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரானின் புதிய அதி உயர் தலைவர் தெரிவு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் புதிய அதி உயர் தலைவர் தெரிவு?

Mar 8, 2026 - 04:06 PM

ஈரானின் புதிய அதி உயர் தலைவர் தெரிவு?

அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு, அந்தப் பதவிக்கு அடுத்ததாக நியமிக்கப்படவுள்ள நபர் குறித்து அந்நாட்டின் நிபுணர்கள் சபை தற்போது இறுதி முடிவை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானின் அரச செய்திச் சேவையான பார்ஸ் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள அச்சபையின் உறுப்பினரான அயதுல்லா மொஹமட் மெஹ்தி மிர்பாகேரி, பெரும்பான்மை உடன்பாட்டின் அடிப்படையில் ஒரு நிலையான முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நபரின் பெயர் இதுவரை உத்தியோகபூர்வமாக பகிரங்கப்படுத்தப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் பல்வேறு சவால்கள் இருப்பதால், இந்தச் செயல்முறை மிகவும் அவதானமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், இது சர்ச்சைக்குரியதாக அமையக்கூடாது என்றும் மிர்பாகேரி மேலும் தெரிவித்தார்.

சுமார் நான்கு தசாப்தங்களாக ஈரானை ஆட்சி செய்த அலி கமேனி, தமது வாரிசை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னரே படுகொலை செய்யப்பட்டார்.

இதன் காரணமாக, அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அந்நாட்டின் மதகுருமார்கள் தலைமையிலான அதி உயர் சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஈரானின் அடுத்த அதி உயர் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம், 88 சிரேஷ்ட மதகுருமார்களைக் கொண்ட நிபுணர்கள் சபைக்கே உரியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் புதிய அதி உயர் தலைவர் தெரிவு?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் அடுத்த தலைவர் எவராக இருந்தாலும் அவர் எமது இலக்கே: இஸ்ரேல் இராணுவம் கடும் எச்சரிக்கை!

08 Mar, 2026 | 04:18 PM

image

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனிக்கு பின் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் எவரையும், தாம் தொடர்ச்சியாக இலக்கு வைப்போம் என இஸ்ரேல் இராணுவம் ஞாயிற்றுக்கிழமை (08) பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் இராணுவத்தின் பார்சி மொழி சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவொன்றில், ஈரானின் புதிய உச்ச தலைவரைத் தெரிவு செய்யும் பொறுப்பைக் கொண்ட 'நிபுணர்கள் சபை' குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாகக் கூட்டப்படாத இந்தச் சபையானது, விரைவில் ஈரானின் புனித நகரான 'கோம்' நகரில் கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

"இஸ்ரேல் அரசின் கரங்கள் ஈரானின் அடுத்த வாரிசையும், அந்த வாரிசை நியமிக்க முற்படும் ஒவ்வொரு நபரையும் தொடர்ந்து பின்தொடரும் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். இந்த வாரிசு தெரிவு கூட்டத்தில் பங்கேற்க உத்தேசித்துள்ள அனைவரையும் எச்சரிக்கிறோம்; உங்களை இலக்கு வைக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம். இது ஒரு எச்சரிக்கை!" என இஸ்ரேல் இராணுவம் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான் தாக்குதல்களில் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, காமேனியின் மகனான மொஜ்தபா காமேனி அடுத்த தலைவராக நியமிக்கப்படலாம் எனப் பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், இஸ்ரேல் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளது.

https://www.virakesari.lk/article/240461

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரானின் புதிய அதிஉயர் தலைவர் தேர்வு செய்யப்பட்டதாக தகவல்

இரான், இஸ்ரேல்

பட மூலாதாரம்,Getty Images

இரானிய நிபுணர்கள் சபையின் உறுப்பினரான அஹமது அலமொல்ஹோடா, அந்நாட்டின் புதிய அதிஉயர் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இரானிய செய்தி ஊடகமான மெஹர் வழங்கும் தகவலின்படி, நிபுணர்களின் சபை தலைமை செயலகத்தின் தலைவரான ஹுசைனி புஷெஹ்ரி தான் இந்த முடிவை பொதுவெளியில் அறிவிப்பதற்கு பொறுப்பானவர்.

முன்னாள் அதிஉயர் தலைவர் காமனெயி மறைவுக்குப் பிறகு புதிய தலைவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் புதிதாக எந்த தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவரை இலக்கு வைப்போம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இரானின் புதிய அதிஉயர் தலைவர் தேர்வு செய்யப்பட்டதாக தகவல்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இரானிய நிபுணர்கள் சபையின் உறுப்பினரான அஹமது அலமொல்ஹோடா, அந்நாட்டின் புதிய அதிஉயர் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பாவம் எவனோ இந்த ஆள் மீது கடுப்பில் உள்ளவன் இப்படி ஒரு வதந்தியை பரப்பி விட்டிருக்கிறானோ😂.

கமேனியின் மகந்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்றார்களே?

அவர் இலண்டனில் பல நூறு மில்லியன் சொத்து வைத்துள்ளார், ஆண்மைகுறைவுக்கு சிகிச்சை எடுத்தார் என்ற செய்திகள் - உள்நாட்டில் பல பிடுங்குபாடுகளை ஏற்படுத்தி விட்டது போலும்.

இந்த முல்லாக்களை முற்றாக சீனில் இருந்து அகற்றி விட்டு, இராணுவத்தில் நடைமுறை சாத்தியமாக சிந்திக்க கூடிய ஒருவர், அமெரிக்கா, இஸ்ரேலோடு டீல் போட்டால் நாட்டை காப்பாற்றலாம்.

எகிப்தில் ஜெனரல் சிசி செய்தது போல.

இஸ்லாமிக் பிரதர்ஹூட், ஹமாஸ், ஹிஸ்புல்லா, தாலிபான், ஈரானிய முல்லாக்கள், ஹூதி, அல்ஷபாப், ஐசிஸ், அல்கொய்தா இது போன்ற கிருமிகள் உலகில் எங்கும் ஆட்சியில் இருக்க கூடாது, என்பது சர்வதேச மகளிர் தினமான இன்று என் வேண்டுதல்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இந்த முல்லாக்களை முற்றாக சீனில் இருந்து அகற்றி விட்டு, இராணுவத்தில் நடைமுறை சாத்தியமாக சிந்திக்க கூடிய ஒருவர், அமெரிக்கா, இஸ்ரேலோடு டீல் போட்டால் நாட்டை காப்பாற்றலாம்.

எகிப்தில் ஜெனரல் சிசி செய்தது போல.

எனக்கென்னமோ நிலமை வேற மாதிரி போகிற மாதிரி இருக்கு, இப்ப ட்ரம்பை பாராட்டுகிற நீங்கள் நாளைக்கே இதற்காக ட்ரம்பை திட்டக்கூடாது (பிபி நல்லா மாட்டி விட்டுள்ளார், ஓடிப்போன சிங்கத்தினை வாலோடு கட்டி கூட்டி வந்து ஈரானுக்குள் விட்டுள்ளார்)🤣.

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானிய புரட்சிகர படையின் மீது மிகுந்த செல்வாக்குச் செலுத்துபவரும், ஈரானிய மதக் கடும்போக்குவாதிகளில் முதன்மையானவர் என்றும் கருதப்படும் முன்னாள் ஆன்மீகத் தலைவர், கமெய்னியின் மகன் தற்போது ஆன்மீகத் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்.

ஈரான் மத அடிப்படைவாதத்தினை விட்டு, ஜனநாயக வழிக்குத் திரும்புவதற்கு இவர் தனது தகப்பனாரைக் காட்டிலும் பெரும் தடையாக இருப்பார் என்பதை ஊகிப்பது கடிணமில்லை.

ஆகவே, இவரும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். பார்க்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரானின் புதிய உச்ச தலைவர் 'மொஜ்தபா காமனெயி' - யார் இவர்? அரசியல் பின்னணி

மொஜ்தபா காமனெயி, இரானின் புதிய உச்ச தலைவராக தேர்வு

பட மூலாதாரம்,Tasnim News Agency

கட்டுரை தகவல்

  • பிபிசி பாரசீக மொழி சேவை

  • 9 மார்ச் 2026, 01:33 GMT

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட இரானின் ஆயதுல்லா அலி காமனெயியின் மகனான மொஜ்தபா காமனெயி, அடுத்த அதிஉயர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தந்தையைப் போலல்லாமல், 56 வயதான அவர் பெரிதாக அறியப்பட்டவர் அல்ல. அவர் ஒருபோதும் அரசாங்கப் பதவியை வகித்ததில்லை, பொது உரை அல்லது நேர்காணல்களை வழங்கியதில்லை, அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.

ஆனால் பல ஆண்டுகளாக இரானில் திரைக்குப் பின்னால் அவர் கணிசமான செல்வாக்கைக் கொண்டிருந்ததாக வதந்திகள் உள்ளன.

2000களின் பிற்பகுதியில் அமெரிக்க ராஜதந்திர நடவடிக்கைகள் பற்றி விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசியங்கள், அவரை "அங்கிகளுக்குப் பின்னால் உள்ள சக்தி" என்று விவரித்தன, அவர் ஆட்சிக்குள் "திறமையான மற்றும் வலிமையான" நபராக பரவலாகக் கருதப்பட்டதாக ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆயினும்கூட, அவரது தேர்வு இன்னும் சர்ச்சைக்குரியதாக இருக்கலாம். முடியாட்சி தூக்கியெறியப்பட்ட பிறகு 1979-ஆம் ஆண்டு இஸ்லாமிய குடியரசு நிறுவப்பட்டது. அதன் சித்தாந்தம், பரம்பரை வாரிசுரிமை மூலம் அல்ல, மாறாக அவரது மத நிலைப்பாடு மற்றும் நிரூபிக்கப்பட்ட தலைமைத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் அதிஉயர் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது.

காமனெயி தனது ஆட்சிக் காலத்தில், இஸ்லாமிய குடியரசின் எதிர்காலத் தலைமை குறித்து பொதுவான சொற்களில் மட்டுமே பேசினார்.

அதிஉயர் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் மதகுரு அமைப்பான இரான் நிபுணர்கள் சபையின் ஒரு உறுப்பினர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, காமனெயி தனது மகன் எதிர்காலத் தலைமைக்கான வேட்பாளராக இருப்பதற்கான யோசனையை எதிர்த்ததாகக் கூறினார். ஆனால் அவர் அத்தகைய ஊகங்களை ஒருபோதும் பகிரங்கமாகக் கூறியதில்லை.

மொஜ்தபா காமனெயி, இரானின் புதிய உச்ச தலைவராக தேர்வு

பட மூலாதாரம்,EPA

மொஜ்தபா காமனெயி யார்?

செப்டம்பர் 8, 1969 அன்று இரானின் வடகிழக்கு நகரமான மஷாத்தில் பிறந்த மொஜ்தபா, காமனெயியின் ஆறு குழந்தைகளில் இரண்டாவது குழந்தை. அவர் டெஹ்ரானில் உள்ள மத அலவி பள்ளியில் இடைநிலைக் கல்வியைப் பெற்றார்.

17 வயதில், மொஜ்தபா இரான்-இராக் போரின் போது பல குறுகிய காலத்திற்கு இராணுவத்தில் பணியாற்றினார் என்று இரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எட்டு வருட ரத்தக்களரி மோதல்கள், இராக்கை ஆதரித்த அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் மீது இரான் ஆட்சியாளர்களை மேலும் சந்தேகப்பட வைத்தன.

1999-ஆம் ஆண்டில், மொஜ்தபா தனது மதப் படிப்பைத் தொடர ஷியா இறையியலின் முக்கிய மையமாகக் கருதப்படும் புனித நகரமான கோமுக்குச் சென்றார். இது வரை அவர் மதகுருமார்களின் உடைகளை அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனது 30 வயதில் ஒரு செமினரியில் கலந்து கொள்ள அவர் ஏன் முடிவு செய்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சமீபத்திய நாட்களில், சில ஊடக நிறுவனங்களும் இரானில் உள்ள அதிகார மையங்களுக்கு நெருக்கமான அதிகாரிகளும் மொஜ்தபா காமனெயியை "ஆயதுல்லா" என்று குறிப்பிடத் தொடங்கியுள்ளனர், இது ஒரு மூத்த மதகுருமார் பட்டமாகும். இந்த மாற்றம் அவரது நிலையை உயர்த்தி அவரை நம்பகமான தலைவராகக் காட்டும் முயற்சியாக சில பார்வையாளர்களுக்குத் தோன்றுகிறது.

செமினரி அமைப்பில், "ஆயதுல்லா" பதவியை வகிப்பதும், உயர் வகுப்புகளுக்கு கற்பிப்பதும் ஒரு நபரின் கல்வி நிலை மற்றும் அறிவின் வெளிப்பாடாகக் கருதப்படுகின்றன. அவை எதிர்காலத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேவைகள் மற்றும் முன்நிபந்தனைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.

ஆனால் ஏற்கனவே ஒரு முன்னுதாரணமாக உள்ளது. 1989-இல் இரண்டாவது அதிஉயர் தலைவராக ஆன பிறகு காமனெயி விரைவில் "ஆயதுல்லா" ஆனார்.

மொஜ்தபா காமனெயி, இரானின் புதிய உச்ச தலைவராக தேர்வு

பட மூலாதாரம்,West Asia News Agency Via Reuters

அரசியல் தலையீடு குற்றச்சாட்டுகள்

2005 அதிபர் தேர்தலின் போது மொஜ்தபாவின் பெயர் முதன்முதலில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த தேர்தலில் தீவிரப் போக்காளராக அறியப்பட்ட மெஹ்மூத் அஹ்மதி நிஜாத் வெற்றி பெற்றார்.

காமனெயிக்கு எழுதிய பகிரங்க கடிதத்தில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் அஹ்மதிநிஜாத் வெற்றிபெற உதவும் வகையில் மதக் குழுக்களுக்கு பணத்தை விநியோகித்த பாசிஜ் குழு ஆகியவற்றின் மூலம் அதிபர் தேர்தலில் மொஜ்தபா தலையிட்டதாக சீர்திருத்தவாத வேட்பாளர் மெஹ்தி கரூபி குற்றம் சாட்டினார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மொஜ்தபா மீண்டும் அதே குற்றச்சாட்டை எதிர்கொண்டார். அஹ்மதிநிஜாத்தின் மறுதேர்தல் நாடு முழுவதும் 'பசுமை இயக்கம்' என்று அழைக்கப்பட்ட வெகுஜன போராட்டங்களைத் தூண்டியது. மொஜ்தபா தனது தந்தைக்குப் பிறகு இரானின் அதிஉயர் தலைவராக முடியும் என்ற கருத்தை எதிர்த்து சில போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.

அப்போதைய துணை உள்துறை அமைச்சர் முஸ்தபா தஜ்ஜாதே, இந்த முடிவை "தேர்தல் சதி" என்றார். அவர் ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார், இதற்கு "மொஜ்தபா காமனெயியின் விருப்பமே" காரணம் என்று அவர் விமர்சித்தார்.

மொஜ்தபா காமனெயி, இரானின் புதிய உச்ச தலைவராக தேர்வு

பட மூலாதாரம்,Getty Images

இரண்டு சீர்திருத்த வேட்பாளர்களான மிர்-ஹொசைன் மௌசவி மற்றும் மெஹ்தி கரூபி ஆகியோர் 2009 தேர்தலுக்குப் பிறகு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். பிப்ரவரி 2012-இல், மௌசவியை நேரில் சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறு மொஜ்தபா வலியுறுத்தினார் என்று இரானிய வட்டாரங்கள் பிபிசி நியூஸ் பாரசீகத்திடம் தெரிவித்தன.

இப்போது, இரானின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஉயர் தலைவராக, மொஜ்தபா தனது தந்தையின் கடும்போக்கான கொள்கைகளைத் தொடருவார் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள்.

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் தனது தந்தை, தாயார் மற்றும் மனைவியை இழந்த ஒருவர் மேற்கத்திய அழுத்தத்திற்கு அடிபணிய வாய்ப்பில்லை என்றும் சிலர் நம்புகிறார்கள்.

ஆனால், இஸ்லாமியக் குடியரசின் இருப்பை உறுதி செய்வதும், அரசியல் மற்றும் பொருளாதார பேரழிவிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்குத் தானே சரியான நபர் என்பதை பொதுமக்களை நம்ப வைப்பதும் அவருக்கு மிகவும் கடினமான பணியாகும்.

அவரது தலைமைத்துவம் பெரும்பாலும் சோதிக்கப்படாமல் உள்ளது. இஸ்லாமிய குடியரசு ஒரு பரம்பரை அமைப்பாக மாறி வருகிறது என்ற கருத்து பொதுமக்களின் அதிருப்தியை மேலும் ஆழப்படுத்தக்கூடும்.

மொஜ்தாபா இப்போது ஒரு குறிப்பிடத்தக்க மனிதர். ஆயதுல்லா அலி காமனெயியின் வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்படும் நபர் "அடுத்த இலக்காக" இருப்பார் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் கடந்த வாரம் கூறினார்.

இரானின் புதிய உச்ச தலைவர் 'மொஜ்தபா காமனெயி' - யார் இவர்? அரசியல் பின்னணி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து

Mar 9, 2026 - 09:03 PM

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து

ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முஜ்தபா காமேனிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் எதிர்கொண்டுள்ள ஆயுத மோதல்களுக்கு மத்தியில், ரஷ்யா எப்போதும் ஈரானின் நம்பகமான பங்காளியாக இருக்கும் என்பதை புடின் அதில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, தனது தந்தை ஆரம்பித்த பணிகளை அவர் கௌரவமான முறையில் முன்னெடுத்துச் செல்வார் என தாம் நம்புவதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmmjcciry000e356p95zj5prq

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வாழ்த்து

Published By: Vishnu

10 Mar, 2026 | 06:17 AM

image

ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மொஜ்தபா காமெனி அவர்களுக்கு சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் நியமிக்கப்பட்ட புதிய உச்ச தலைவர் தனது தந்தையைப் போலவே இஸ்ரேலை அவமானப்படுத்தி அதன் ஆணவத்தை உடைப்பார் என்பதில் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்"...

மேலும், அவரது தந்தை ஆரம்பித்த பணிகளை முஜ்தபா காமேனி கௌரவமாக முன்னெடுத்துச் செல்வார் என்ற நம்பிக்கையும் ஷி ஜின்பிங் வெளியிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/240586

  • கருத்துக்கள உறவுகள்

649305860_1090655217454196_2073188780030

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரானின் புதிய தலைவர் முன்னுள்ள மிகப்பெரிய சவால் - அமெரிக்கா, இஸ்ரேல் கூறியது என்ன?

இரானின் புதிய தலைவர், மொஜ்தபா காமனெயி, அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,AFP via Getty Images

படக்குறிப்பு,மொஜ்தபா காமனெயி

கட்டுரை தகவல்

  • லைஸ் டூசெட்

  • பிபிசி செய்தியாளர்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரான் இஸ்லாமிய குடியரசு ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ளும் போது, இதுவரை சோதனைகளை சந்திக்காத ஒருவர் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்.

இந்த போரின் முதல் வார தாக்குதல்களில் அவரது தந்தை ஆயதுல்லா அலி காமனெயி படுகொலை செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள் 56 வயதான மொஜ்தபா காமனெயியை உயர்மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன.

1979 புரட்சிக்குப் பிறகு இரானின் மூன்றாவது உச்ச தலைவராகப் பொறுப்பேற்கும் அவர், இஸ்லாமியக் குடியரசு தனது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான போரை எதிர்கொள்ளும் தருணத்தில் பொறுப்பேற்கிறார்.

88 ஷியா முஸ்லிம் மதகுருக்களைக் கொண்ட அமைப்பான நிபுணர்கள் சபையால் (Assembly of Experts) அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒட்டி, பெருந்திரளான மக்கள் உடனடியாக வீதிகளில் இறங்கி 'அல்லாஹு அக்பர்' - 'கடவுள் மிகப்பெரியவர்' - என்று முழக்கமிட்டுக் கொண்டாடினர்.

அனைத்துப் பாதுகாப்புப் படைகளும் தங்களின் புதிய தலைமைத் தளபதிக்கு தங்களின் 'உடலில் கடைசி சொட்டு ரத்தம் உள்ள வரை' சேவை செய்வதாக உறுதி அளித்தன.

அரசுத் தொலைக்காட்சி அவரது பெயரில் ஏவப்பட்ட முதல் ஏவுகணைகளின் படங்களைக் காட்டியது, அதன் பக்கவாட்டில் "உங்கள் சேவையில், செய்யது மொஜ்தபா" என்ற செய்தி எழுதப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும் - ஜனவரி மாதம் அவரது தந்தையை 'சர்வாதிகாரி' என்று கண்டித்து அவருக்கு மரணம் கோரி வீதிகளில் திரண்ட எதிர்ப்பாளர்களில் சிலர், நேற்றிரவு (மார்ச் 9) தங்கள் குடியிருப்புகளில் இருந்து 'மொஜ்தபாவுக்கு மரணம்' என்று முழக்கமிடுவதைக் கேட்க முடிந்தது.

போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரின் இழப்பை இன்னும் நினைத்து வருந்துவோருக்கு, ஒரு கடுமையான ஆட்சி சூழலை இன்னும் கடுமையானதாக மாற்றப்போவதாகத் தோன்றுகிறது.

காமனெயி மற்றும் அவரது அமைப்பின் இறுதி நாட்கள் எண்ணப்பட்டு வருவதாக அவர்கள் இன்னும் துணிச்சலுடன் நம்புகிறார்கள்.

மொஜ்தபா காமனெயி - யார் இவர்?

மறைந்த ஆயதுல்லாவின் இரண்டாவது மகனான மொஜ்தபா, அவரது தந்தையின் தீவிர பழமைவாத வார்ப்பில் உள்ளவர்.

மொஜ்தபா காமனெயி பல ஆண்டுகளாகத் தனது தந்தையின் நிழலில் பணியாற்றினார்; வெளிப்புற அச்சுறுத்தல்கள் மற்றும் உள்நாட்டுக் குழப்பங்களை எதிர்கொள்ளும் போது 'அரசு அமைப்பு' எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த அனைத்து விவரங்களையும் அவர் அறிவார்.

அவர் சக்தி வாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் (IRGC) இணைந்து பணியாற்றியுள்ளார். உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்த உடனேயே ஒரு இளைஞனாக அதில் சேர்ந்தார். பின்னர் ஷியா இஸ்லாமிய படிப்புக்கான முதன்மையான மையமாக அறியப்படும் கோம் (Qom) நகருக்குப் படிக்கச் சென்றார்.

1979-இல் புரட்சியைப் பாதுகாப்பதற்கும் பேணுவதற்கும் நிறுவப்பட்ட ஐஆர்ஜிசி, இப்போது பல அடுக்கு பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஒரு மிகப்பெரிய பொருளாதார சாம்ராஜ்யத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. அதன் தளபதிகள் இப்போது முடிவுகளை எடுக்கிறார்கள்.

மொஜ்தபா காமனெயி அவர்களின் வேட்பாளர் என்று கூறப்பட்டது.

இந்தப் போர் இப்போது வெறும் அரசியல் சண்டை மட்டுமல்ல; இது மிகவும் தனிப்பட்ட ரீதியிலானது.

இது பழிவாங்குவதைப் பற்றியதுமாகும்.

உச்ச தலைவரின் வளாகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மொஜ்தபா காமனெயி தனது தந்தையை மட்டுமல்லாமல், தனது தாய் மன்சூரே கோஜஸ்தே பாகெர்சாதே, மனைவி ஜஹ்ரா ஹதாத்-ஆடெல் மற்றும் ஒரு மகனையும் இழந்தார்.

அவரும் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது குறித்த விவரங்களோ அல்லது அதன் பிறகு அவரைப் பற்றிய எந்த அறிகுறியும் கூட இல்லை.

இரானின் புதிய தலைவர், மொஜ்தபா காமனெயி, அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,EPA/Shutterstock

படக்குறிப்பு,தெஹ்ரானில் நடந்த பேரணியின் போது இரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமனெயியின் படத்தை ஏந்திய ஒரு பெண். (9 மார்ச் 2026)

அமெரிக்கா, இஸ்ரேல் கூறியது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இது மிகவும் தனிப்பட்ட விஷயமாகும். அவர் தனது உத்தரவுகளை எதிர்ப்பவர்களை சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை என்பதைத் தொடர்ந்து தெளிவுபடுத்தி வருகிறார்.

காமனெயியின் 'அரசியல் வாரிசு' குறித்து ஊகங்கள் பரவியபோது, அலி காமனெயி மகனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று டிரம்ப் பல முறை அறிவித்தார்.

இப்போது மொஜ்தபா காமனெயி 'நீண்ட காலம் நீடிக்க மாட்டார்' என்று டிரம்ப் எச்சரிக்கிறார். மொஜ்தபா இஸ்ரேலின் இலக்காகவும் இருக்கிறார், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் 'மொஜ்தபா சந்தேகத்திற்கு இடமில்லாத இலக்கு' என்று விவரிக்கிறார்.

எனவே மொஜ்தபா காமனெயி இன்னும் சிறிது காலம் மறைந்திருக்கலாம். இது அவரைச் சுற்றியுள்ள மர்மத்தை இன்னும் அதிகப்படுத்தும்.

அவர் பகிரங்கமாகப் பேசியதற்கான எந்தப் பதிவும் இல்லை, அவர் அரிதாகவே பொது இடங்களில் தோன்றியுள்ளார். அவர் இதுவரை முறையாக எந்த அரசாங்கப் பதவிகளையும் வகித்ததில்லை. அவரது புகைப்படம் இரான் எங்கும் நிறைந்திருந்த அவரது தந்தையின் உருவப்படங்களுடன் ஒருபோதும் தோன்றியதில்லை.

1979 புரட்சியில் தூக்கியெறியப்பட்ட முடியாட்சியின் பரம்பரை முறையைத் தவிர்க்க விரும்பி, அவரை வாரிசுப் பொறுப்பிலிருந்து மறைந்த ஆயதுல்லா காமனெயி விலக்கி வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

பெரும்பாலான இரானியர்கள் அவரது குரலைக் கேட்டதே இல்லை.

ஆனால் அவரது அரசியல் பார்வை குறித்த சில அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

மொஜ்தபா காமனெயி எழுச்சி

2005-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் பழமைவாத வேட்பாளர் அஹ்மதிநிஜாத்தின் தேர்தல் வெற்றியை ஒரு முக்கிய தருணமாக இப்போது குறிப்பிடுகிறார்கள். அவரது வெற்றியை உறுதி செய்ய மொஜ்தபா காமனெயி திரைமறைவில் சதி செய்ததாக சீர்திருத்தவாதப் போட்டியாளர்கள் குற்றம் சாட்டினர்.

2009-இல் அஹ்மதிநிஜாத் சர்ச்சைக்குரிய வகையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது 'பச்சை புரட்சி' (Green Revolution) என்று இப்போது நினைவுகூரப்படும் போராட்டங்களைத் தூண்டியது. முக்கிய சீர்திருத்தவாத அரசியல்வாதிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர், அவர்கள் இன்றும் அதே நிலையில் உள்ளனர்.

இரானின் புதிய உச்ச தலைவருக்கான பிற போட்டியாளர்களில் ஒருவர் வேறுபட்ட புரட்சிகர சிந்தனைகளுக்காக அறியப்படும் ஒரு வேட்பாளர் ஆவார். முதல் உச்ச தலைவர் ஆயதுல்லா ருஹொல்லா கோமேனியின் பேரனான ஹசன் கோமேனி, சீர்திருத்தவாதிகளின் போக்கில் இருந்தவர்.

காமனெயியின் எழுச்சி, இரானின் பிளவுபட்ட அரசியல் சூழலில் ஒப்பீட்டளவில் மிதவாதிகளாக இருக்கும் சீர்திருத்தவாதிகள் (தற்போதைய அதிபர் மசூத் பெசெஷ்கியன் உட்பட) இப்போது இன்னும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர் என்பதைக் குறிப்பதாகத் தெரிகிறது.

அரசியல் ரீதியாக, காமனெயி புரட்சிகர பாதுகாப்புப் படைகளுடன் தொடர்புடைய இரண்டு முன்னணி நபர்களுக்கு நெருக்கமானவர். உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்குத் தலைமை தாங்கும் மூத்த அரசியல்வாதி அலி லாரிஜானி மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரியும் அரசியல்வாதியுமான முகமது பாகர் கலிபாஃப், இவர் இப்போது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக உள்ளார்.

மறைந்த ஆயதுல்லா அலி காமனெயியின் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளான இவர்கள், சமீபத்திய மாதங்களின் உயர்மட்டத் திட்டமிடலில் பெரும் பொறுப்புகளை ஏற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டனர், இதில் கத்தார் மூலம் டிரம்பின் தூதர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது மற்றும் இரானின் மிகப்பெரிய எதிரிகளின் ராணுவ மற்றும் உளவுத்துறை வலிமையுடன் ஒரு முழுமையான மோதலுக்குத் தயாராவது ஆகியவை அடங்கும்.

கடந்த மாதம் இரான் மற்றும் அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான (கைவிடப்பட்ட) பேச்சுவார்த்தைகளின் போது லாரிஜானியைச் சந்தித்த ஒரு மேற்கத்திய அதிகாரி, அவரை ஒரு யதார்த்தவாதி (pragmatist) என்று விவரித்தார்.

தங்கள் அமைப்பைப் பாதுகாப்பதற்காகத் தங்களை 'கொள்கையாளர்கள்' என்று அழைத்துக் கொள்ளும் கடும்போக்குவாதிகள் மைய இடத்தைப் பிடித்துள்ள இந்தத் தருணத்தில், இது இன்னும் வேறு திசையில் திரும்பக்கூடும் என்று கூறும் குரல்களும் உள்ளன.

மொஜ்தபா காமனெயிக்கு நெருக்கமான ஒரு அரசியல்வாதியான அப்துல்ரேசா தவாரி - பொது அறிக்கைகளிலும் நியூயார்க் டைம்ஸின் சமீபத்திய நேர்காணலிலும் 'அவரை மிகவும் முற்போக்கானவர்' என்றும் 'கடும்போக்குவாதிகளை ஓரம்கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பவர்' என்றும் விவரித்தார்.

ஆட்சியில் தனது பிடியை இறுக்கமாக வைத்திருந்த அதே வேளையில், நாட்டில் சமூக சுதந்திரங்களை கணிசமாக விரிவுபடுத்திய சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானைப் போன்றவர் அவர் என்றும் அப்துல்ரேசா தவாரி கூறினார்.

இப்போது, அத்தகைய பெரிய மாற்றத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. குறிப்பாக இந்த அபாயகரமான மற்றும் கணிக்க முடியாத காலங்களில்.

மத்திய கிழக்கை உலுக்கி, அதன் அண்டை நாடுகளுடனான உறவுகளை அழித்து, நீண்டகால பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு தீவிரமடைந்து வரும் மோதலின் பிடியில் இரான் தற்போது சிக்கியுள்ளது.

மொஜ்தபா காமனெயியின் எழுச்சி 'மிக மோசமான ஒரு சூழல்' என டிரம்பால் குறிப்பிடப்பட்டது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் போராடும் படைகள் இதனை முறியடிக்க தங்களின் சிறந்த வாய்ப்பாக அவரைக் கருதுகின்றன.

https://www.bbc.com/tamil/articles/clyx8zl0v2xo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வான்வழி தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காயம்?

Published By: Vishnu

10 Mar, 2026 | 08:56 PM

image

மத்திய கிழக்கில் தொடரும் போர் சூழ்நிலைக்கு மத்தியில், ஈரான் நாட்டின் புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச தலைவரான மொஜ்தபா காமெனி வான்வழி தாக்குதலில் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா மற்றும் Israel இணைந்து மேற்கொண்டதாகக் கூறப்படும் வான்வழி நடவடிக்கைகளுக்குப் பிறகு ஏற்பட்ட மோதலில் அவர் காயமடைந்ததாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அங்கு அவரை “ஜான்பாஸ்” (எதிரி தாக்குதலில் காயமடைந்தவர்) என குறிப்பிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முன்னாள் உச்ச தலைவரான Ali Khamenei உயிரிழந்த தாக்குதலுக்குப் பின்னர், கடந்த பிப்ரவரி 28 அன்று மொஜ்தபா கமேனி ஈரானின் மூன்றாவது உச்ச தலைவராக அறிவிக்கப்பட்டார். அந்த தாக்குதலில் அவரது குடும்ப உறுப்பினர்களும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவர் காயமடைந்ததாகக் கூறப்படும் சம்பவத்தின் நேரம், தன்மை மற்றும் அளவு தொடர்பான தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

https://www.virakesari.lk/article/240664

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘‘ஈரானிய மக்களால்தான் ஈரானில் ஆட்சி மாற்றம் சாத்தியம்!” - இஸ்ரேல் பிரதமர்

hindutamil-prod%2F2026-03-10%2Fhz3q51sn%

ஜெருசலேம்: ஈரானில் ஆட்சியை மாற்றுவது அந்நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும், அடக்குமுறை அமைப்பில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கி 10 நாட்கள் ஆகின்றன. தொடர்ந்து போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால், உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்தப் போர் தொடருமானால், அது சர்வதேச அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரேலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘‘ஈரானின் தற்போதைய அரசியல் தலைமையின் எதிர்காலம் அந்நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது. தற்போதைய ஆட்சியை, அடக்குமுறை ஆட்சி என அவர்கள் கூறுகிறார்கள். அத்தகைய அமைப்புக்கு எதிராக எழுந்து நிற்கும் அவர்களின் மனநிலையைப் பொறுத்தே ஈரானில் ஆட்சி மாற்றம் என்பது இருக்கும்.

ஈரானிய மக்கள் அடக்குமுறை ஆட்சியில் இருந்து விடுபடுவதற்கு உதவுவதே இஸ்ரேலின் நோக்கம். இறுதியில் இது அவர்களிடமே இருக்கிறது. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நாம் அவர்களின் சக்தியை பலவீனப்படுத்தி வருகிறோம் என்பதில் சந்தேகமில்லை. அதோடு, நாம் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

ஈரானிய மக்களுடன் சேர்ந்து நாம் வெற்றி பெற்றால், அவர்கள் தற்போது சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை அளிக்க முடியும். நாம் மாற்றத்தை உருவாக்குவோம். இஸ்ரேலின் சர்வதேச நிலைப்பாட்டிலும் நாம் பெரிய மாற்றங்களை நிகழ்த்தி வருகிறோம்’’ என தெரிவித்துள்ளார்.

‘‘ஈரானிய மக்களால்தான் ஈரானில் ஆட்சி மாற்றம் சாத்தியம்!” - இஸ்ரேல் பிரதமர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.