Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாய் நிலமும் தனையர்களும் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாய் நிலமும் தனையர்களும்

இந்துக் கடலில்,

முஷ்டி உயர்த்திய கையினைப் போன்ற

என் அழகிய தேசமே

என்னுடன் பேசு.

நாவில் நீர் ஊற

குட்டிகள் பின்னே அலையும் நாய்களைக்

காட்டுக்குதிரைகள் உதைத்து நொறுக்கும்

'நெடுந்தீவின்' புல்வெளிகளை நாங்கள்

இழந்து படுவோமா .....

'அறுகம் குடாவில்'

தோணிகள் மீது அலைகள் எறியும்

கடலை அதட்டி,

வலைகளை விரித்து

நூறு நூறாண்டாய் முஸ்லிம் மீனவர்

பாடும் பாடலை நாங்கள் இழப்பமோ?

வரலாறொன்றின் திருப்பு முனையில்

மார்புற எம்மை அணைத்த படிக்கு

போர்க்குணத்தோடு நிற்குமெம் தாயே

சொல்க எனக்கு!

எலிகள் நிமிரவும் வளைகள் உண்டே.

உண்டே உண்டே

விலங்குகள் பறவைகள்

மரங்கள் நிமிர்ந்திட

சரணாலயங்களும் தேசிய வனங்களும்.

மனுகுமாரருக்குத்

தலைசாய்த்திடவும் பிடிமண் இல்லை.

ஏன் எம் வாழ்வில் இத்தனை சுமைகள்

ஏன் எம் பாதையில் இத்தனை இருட்டு.

முகங்கள் சிதைந்து

யோனிகள் கிழிந்து

சவக்குழிகளிலும்,

திருகப்பட்ட முலைகளோடும்

நசுக்கப்பட்ட விதைகளோடும்

முழங்காலிட்டு

சொந்த மண்ணிலும்,

குட்டப்பட்டு

தலைகுனித அகதிகளாக

உலகத் தெருவிலும்

ஏன் எங்களுக்கு இவ்விதம் எழுத்து

ஏன் எம் நெஞ்சில் இவ்விதம் நெருப்பு.

பூவார் வசந்த

மரங்களின் மறைப்பில்

காதற் பெண்களின் தாவணி விலக்கி

அபினிமலர்களின் மொட்டைச் சுவைக்கும்

இளம் பருவத்தில்

'இடுகாட்டு மண்ணைச் சுவை' என எமது

இளையவருக்கு விதித்தவன் யாரோ?

நினைவிருக்கிறதா அன்னைநாடே

கோவிலில் சர்ச்சில்

பள்ளிவாசலில்

சிறைப்பட்டவரை விடுக என்று

உண்ணாவிரதம் இருந்த சிறுவர்கள்.

அதே அதே சிறுவர்

அதே அதே சிறுமியர்.

தாமே செய்த குறும் பீரங்கிகள்

தோள்களில் சுமந்து அணி நடக்கின்றார்.

போர்த்துக்கீசியரைப் போரில் எதிர்த்த *

சிங்கள நாட்டு இளவரசனுக்குத்

தன்னுயிர் நோக்காது புகலிடம் தந்த

சங்கிலி மன்னனைப் பாடுவோம் அம்மா.

பகை நெருப்பிடையே மலர் எனச் சிரிக்கும்

சிங்களப் புரட்சியாளர்களுக்கு

இன்றும் புகலிடம் தருகிறோம் அம்மா.

உன்மரபுப் பெருமைகள் சிறக்கவே நாங்கள்

இன்றும் வாழ்கிறோம் என்னருந் தாயே!

அன்னியர்க் கெதிராய்

போர்களில் வீழ்ந்த நம்

மூதாதையர்கள்

சிறுவராய் மீண்டும் உதித்து வந்தனரோ

பணிகள் முடிக்கும் சபதங்களோடு.

எத்தனைபேரைக் களபலியாக

மீண்டும் உன்னிடம் தந்தோம் அம்மா!

பல்கலைக்கழக முன்றிலில் நின்று

தொடுவானங்களை எட்டிப் பிடித்த

எத்தனைபேரைக் களபலி தந்தோம்.

விமலதாசனை, ரவிசேகரனை

திருமலை தந்த கேதீஸ்வரனை

முல்லைத்தீவின் சிறீ எனும் தோழனை

பொன்பூச் சொரியும் நிழல் வாடிகளின்

நிழலில் நின்று

விடுதலைப் போருக்கு எம்மை அழைத்த

எத்தனை பேரை நாங்கள் இழந்தோம்.

வெடிகுண்டின்மேல் வீழ்ந்து படுத்து

தோழரைக்காத்த

'வெத்திலைக்கேணி' அன்புவைப் போல

இன்னொரு தோழனை காண்பது எப்போ?

'காரைதீவுக் கடற்கரைப் போரில்

இரண்டாம் வன்னி நாச்சியாய் எழுந்து

வீரம் விளைத்த சோபா என்ற

தேவதை போல

மீண்டுமோர் தோழியைக் காண்பது எப்போ?

சாவகச் சேரியில் எதிரியை வேருடன்

கல்லி எறிந்த நீக்கிலஸ் போலவும்

நித்திரைப் பாயில் முற்றுகையிட்ட

நூற்றுவர் நடுங்கக் கூற்றென எழுந்த

வன்னிச் சிறுத்தை காத்தான் போலவும்

கொழும்பு வீதியில் போர் முரசறைந்த

மாணவன் பரிபூரணனைப் போலவும்

இன்னொரு தோழமை எய்துமோ வாழ்வு?

விடுதலைக்கு மூலைக் கல்லாய்

இவர்களைத் தானே நாங்கள் நாட்டினோம்

விடுதலைக்குத் திசை விண்மீனாய்

இவர்களைத்தானே நாங்க எரித்தோம்.

இஸ்பெயின் மண்ணில்

கியூபா மண்ணில்

நிக்காரக்குவ மண்ணில்

இளைஞர்கள் எழுந்தது போல நாம் எழுந்தோம்.

இஸ்பெயின் அன்னை குற்றுயிராக

நெருப்பில் வீழ்ந்ததும்,

பறக்கும் வெண்புறா மாலைகள் சூடி

கியூப, நிக்காரக்குவ அன்னையர் வெற்றித் தேரில் பவனி வந்ததும்

நாம் அறிந்ததுவே.

அப்ப மாவினுள் புளிப்பினைப் போல

எங்கே இளைய விடுதலை வீரர்

மக்களினூடு தமை இழந்தனரோ

அங்கெலம் செங்கொடி வானில் எழுந்தது.

அங்கெலாம் வெண்புறா வானில் பறந்தது.

அன்னை நாடே

வரலா றொன்றின் திருப்புமுனையில்

மார்புற எம்மை அணைத்தபடிக்கு

போர்க்குணத்தோடு நிற்குமெம் தாயே

பரந்து பட்டநம் மக்களால் மட்டுமே

நீண்டநம் பாதை கடந்திடக் கூடும்.

பரந்து பட்டநம் மக்களால் மட்டுமே

வலிய நம் சவால்களை முடிப்பது கூடும்.

1986

* வெள்ளையருக்கு எதிராக மருது சகோதரர்கள் ஊமைத் துரைக்குப் புகலிடம் தந்தது போல, போர்த்துக்கீசரின் நிபந்தனைகளையும் மீறி சிங்கள கிளர்ச்சிக்காரனான நிக்கபிட்டிய பண்டாரவுக்கு (Nikapitiya Bandara) புகலிடம் தந்தான் யாழ்ப்பாணத்து இறுதி மன்னன் சங்கிலியன். 1619 இல் யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சிக்குக் காரணமான போர்த்துக்கீசரின் படையெடுப்புக்கு இதுவும் ஒரு காரணமாயிற்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.