Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அரசியலைக் கலக்கும் ஜெ. - விஜயகாந்த் மோதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியலைக் கலக்கும் ஜெ. - விஜயகாந்த் மோதல்

வாயைக்கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்வது தமிழ் சினிமாவில் வடிவேலு காமெடியில் அடிக்கடி நடப்பதுதான். அதுபோல தமிழக அரசியலில் தலைவர்களுக்குள்ளும் எப்போதாவது அப்படியோர் வம்படிக் காமெடி நடப்பதுண்டு. இப்போது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கும் அப்படியோர் சீரியஸான உரசலே ஆரம்பமாகிவிட்டது.

`குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு! என்று ஒருமுறை விஜயகாந்துக்கு எதிராக அஸ்திரம் தொடுத்தார் ஜெ. `இவங்கதான் கூட இருந்து எனக்கு ஊற்றிக்கொடுத்தது போல...!' என்று பதிலடி கொடுத்து அரசியல்வானில் ஒரு புதிய பரபரப்பை ஆரம்பித்து வைத்தார் விஜயகாந்த். இந்தப் பிரச்சினை தமிழக அரசியலில் மாதக்கணக்கில் விமர்சனங்களாக நீண்டு ஒருவழியாக அடங்கியது. அதன்பிறகு விஜயகாந்த் பற்றி சூசகமாக விமர்சித்துப் பேசுவதைக்கூடத் தவிர்த்து வந்த ஜெ.வுக்கு சமீபத்தில் என்ன தோன்றியதோ? எம்.ஜி.ஆர். பிறந்த நாளன்று ராமாவரம் தோட்டத்திற்குச் சென்று`்எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு நான்தான். நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் ஒருபோதும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது' என்று முழங்கினார். இதற்கு விஜயகாந்த் தரப்பில் ரியாக்ஷன் என்ன என்று தமிழகமே எதிர்பார்த்த நிலையில் கடந்த 20 ஆம் திகதியன்று பெருந்துறையில் நடந்த தன் கட்சிப் பொதுக்கூட்டத்தில் ஜெ.வுக்கு எதிராகக் கனல் கக்கியிருக்கிறார் விஜயகாந்த்.

"நானா என்னை கறுப்பு எம்.ஜி.ஆர். என்று சொல்லிக்கொண்டேன்? மக்கள் ஒவ்வொருவருக்கும் போன் போட்டு `என்னை கறுப்பு எம்.ஜி.ஆர். என்று சொல்லுங்கள்' என்று கேட்டுக்கொண்டேனா? அவர்களே என் செயற்பாடுகளைப் பார்த்து கறுப்பு எம்.ஜி.ஆர். என்று அழைக்கிறார்கள். அதில் இவர்களுக்கு என்ன போனது? இவர் எம்.ஜி.ஆரைப்போல் நடந்திருக்க வேண்டியதுதானே? செய்திருந்தால் அவரை `லேடி எம்.ஜி.ஆர்.' என்று மக்கள் அழைத்திருப்பார்களே? எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் அவரிடமிருந்து ஒரு காலகட்டத்தில் விலகியிருந்தவர் அவர். அவரிடமிருந்து ஒரு செங்கோலை வாங்கிவிட்டதாலேயே அவர் ஒருபோதும் எம்.ஜி.ஆரின் வாரிசாக முடியாது. எம்.ஜி. ஆரின் வாரிசு என்றால், தான் சம்பாதித்த பணத்தை அள்ளி அள்ளிக் கொடுக்கின்ற மனம் வேண்டும். அல்லும் பகலும் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். அது இருந்தால் மக்களே அவர்களை எம்.ஜி.ஆரின் வாரிசு என்று சொல்வார்கள். அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். மக்கள் தாங்களாகவே என்னை கறுப்பு எம்.ஜி.ஆர். என்று அழைக்கிறார்கள். ஆனால், ஜெ. அப்படிச் செய்யக்கூடியவரா? அள்ளி மட்டுமல்ல கிள்ளிக்கூட கொடுக்க மனமில்லாதவர். ஒருபோதும் எம்.ஜி.ஆரின் வாரிசாக முடியாது...' இப்படி ஒன்றல்ல இரண்டல்ல, ஏகப்பட்ட விடயங்களைச் சொல்லி அர்ச்சித்து எடுத்துவிட்டார் விஜயகாந்த்.

பெருந்துறையில் கூட்டப்பட்டதென்னவோ, தே.மு.தி.க.வினர் அடிக்கடி நடத்தும் சாதாரண இணைப்பு விழா பொதுக்கூட்டம்தான். பெருந்துறையில் மறைந்த முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியசாமியின் மனைவி மேகலா பெரியசாமி விஜயகாந்தை சந்தித்து, கட்சியில் சேர்ந்ததையடுத்து அவர் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 25,000 பேரை கட்சியில் இணைக்கும் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது ஈரோடு மாவட்ட தே.மு.தி.க. அதில்தான் இப்படிப் பொங்கியெழுந்துவிட்டார் விஜயகாந்த்.

அன்று காலையில் பெரியகுளத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பேசினார். அங்கே வழக்கம்போல் தி.மு.க. அரசைக் கடுமையாகத் திட்டிப்பேசியவர், ஒருகட்டத்தில் `தேசியக் கட்சிகளுக்கு மாறிமாறி ஓட்டுப்போட்டு மட்டும் நாம் என்ன கண்டோம்? பாலாறு, முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினைகளைத் தீர்த்தார்களா? இவர்கள் எப்போதும் எதுவுமே செய்யமாட்டார்கள். அதனால்தான் வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் யாருடனும் எந்தக் கட்சியுடனும் கூட்டணியில்லை என்கிறேன். இதையெல்லாம் மீறி நாம் தேசியக் கட்சி ஏதாவது ஒன்றுடனாவது கூட்டணி வைக்க வேண்டும் என்கிறீர்களா? அப்போதுதான் தே.மு.தி.க.விற்கு வெற்றி வாய்ப்பைத் தருவீர்களா? தாய்மார்களே சொல்லுங்கள். உங்கள் முடிவே என் முடிவு" என்று ஒன்றுக்கு நான்கு முறை கேட்க, கூட்டம் `கூட்டணி வேண்டாம்' என்றே பதிலளித்தது.

உடனே, "உங்கள் முடிவுதான் என் முடிவு. உங்களை நம்பித்தான் தனித்தே நிற்கிறோம். மக்களின் ஆதரவும் தெய்வத்தின் துணையும் இருந்தால் `நாளை நமதே: நாற்பதும் நமதே,' ஆக்கமுடியும். அதுவே நம் தாரக மந்திரமாகவும் இருக்கட்டும். அப்படி மட்டும் நாற்பது இடத்தையும் நீங்கள் வழங்குங்கள். நான் இந்த அரசாங்கத்தையே ஆட்டு ஆட்டென்று ஆட்டிக்காட்டுகிறேன்" என்று உணர்ச்சி பொங்கப்பேசியவர், மாலையில் நடந்த பெருந்துறை பொதுக்கூட்டத்தில்தான் ஜெ.வை வறுத்து எடுத்துவிட்டார்.

மாலை ஆறு மணிக்கு பெருந்துறை பழைய பஸ் நிலைய மெயின் ரோட்டில் நடந்தது பொதுக்கூட்டம். சுமார் இரண்டு கி.மீ. தூரம் சாலையை நிறைத்து கூட்டம் திமிலோகப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி மனைவி மேகலா தலைமையில் மாற்றுக்கட்சியிலிருந்து 25,000 பேர் வந்து இணையும் விழா என்று நிகழ்ச்சி நிரலில் சொல்லப்பட்டிருந்ததேயொழிய, வந்திருந்த கூட்டத்தில் யார் புதிதாக இணைய வந்தவர்கள்? ஏற்கனவே கட்சியில் உள்ள தொண்டர்கள் யார்? என்று யாருக்குமே புரியவில்லை. எட்டு மணிக்கு விஜயகாந்த் மேடையேறியதும் மேகலா பெரியசாமி மட்டும் கூட்டத்தில் அவருக்கு சால்வை போர்த்தி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.

எட்டேகால் மணிக்குப் பேசத்தொடங்கிய விஜயகாந்த், ஒன்பதே முக்கால் வரை இடைவிடாமல் பேசினார். ஏற்கனவே, பெரியகுளத்தில் பேசிய `நாளை நமதே நாற்பதும் நமதே!' போன்ற பேச்சுகளை இங்கும் பேசிய பிறகு, கடைசியாகவே ஜெ.வுக்கு எதிரான `வாரிசு' அஸ்திரத்தை முழுமையாக எய்ய ஆரம்பித்தார். அதில் காரமென்றால் அப்படியொரு காரம்.

தான்தான் வாரிசு என்கிறார் ஒருவர். நான் எப்போதும் வாரிசுச் சண்டை போட்டது கிடையாது. நான் பாட்டுக்கு மக்களுக்காகப் பேசிக் கொண்டிருக்கிறேன். என்னை எதற்கு இவர் சீண்ட வேண்டும்? பெரியார் பிறந்த மண் இந்த ஈரோடு. இங்கேதான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்று பெரியகுளத்தில் இதைப்பற்றிப் பேசாமல் இங்கே வந்து பேசுகிறேன். நான் கேட்கிறேன். 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். இறந்த பிறகு அவருடைய எந்தப் பிறந்த நாளில் ராமாவரம் தோட்டம் சென்று கால் பதித்தீர்கள்? `நான்தான் வாரிசு' என்று முழக்கம் செய்தீர்கள்? இப்போது மட்டும் செய்வதற்கு என்ன காரணம்? உங்களால் சொல்ல முடியுமா? சரி, எம்.ஜி. ஆருக்கு வாரிசு என்றால் அவரைப்போல நீங்கள் என்ன செய்தீர்கள்? அவர் படத்தில் நடித்துச் சம்பாதித்த தன் சொந்தப் பணத்தை ஏழைகளுக்காகக் கொடுத்தார். நீங்கள் அப்படிக் கொடுத்தீர்களா? அவர் 1977 ஆம் ஆண்டு தொடங்கி மக்கள் செல்வாக்குப் பெற்று சாகும் வரை முதலமைச்சராக இருந்தார். நீங்கள் இருந்தீர்களா?

முதலில் ஐந்து வருஷம் இருந்தீங்க அப்புறம் அஞ்சு வருஷம் காணோம். அடுத்து அஞ்சு வருஷம் வந்தீங்க. அடுத்த இந்த அஞ்சு வருஷம் இல்லை. அப்ப நீங்க எப்படி எம்.ஜி.ஆரின் வாரிசு ஆக முடியும்? நான் எம்.ஜி.ஆரை அரசியலில் மானசீகக் குருவாக வைத்து வழிபட்டு வருபவன். அதைத்தான் வெளியிலும் சொல்கிறேன்.

எம்.ஜி.ஆர். தனது அரசியல் வாரிசு பற்றிப் பேசும்போது எனக்கு அப்படி ஒரு வாரிசு கிடையாது என்று பகிரங்கமாக அறிவித்த சம்பவத்தை பண்ருட்டியார் என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்போது பண்ருட்டியார் `உங்களுக்கு வாரிசுகள் இல்லை என்று ஏன் சொல்கிறீர்கள்? இந்தக் கோடானு கோடித் தொண்டர்கள்தான் உங்கள் வாரிசு' என்று எடுத்துக்கொடுக்க அதை ஒப்புக்கெண்ட எம்.ஜி.ஆர். அதையே மேடைகளிலும் சொல்லி வந்திருக்கிறார். அப்படிப் பார்த்தால் எம்.ஜி.ஆரை நேசிப்பவர் எல்லோருமே அவரின் வாரிசுகள்தான். அந்த நேசத்தில் எனக்கும் பங்கு இருக்கிறது. அவர் படத்தில் நடித்துச் சம்பாதித்த பணத்தை மக்களுக்குச் செலவிட்டதைப்போல நானும் செய்கிறேன். ஏழைஎளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்கிறேன். இலவசத் திருமணங்கள் நடத்தி வைக்கிறேன். அவரைப்போலவே அரசியலில் நின்று மக்களுக்காகப் பாடுபட நினைக்கிறேன். அதைப்பார்த்து மக்களே என்னை கறுப்பு எம்.ஜி.ஆர். என்று அழைக்கிறார்கள். அவர்களுக்கு நானா போன்போட்டு அப்படிச் சொல்லச் சொன்னேன்?"

இப்படி உணர்ச்சிகரமாக முழங்கியவர். மறைந்த தலைவர்களில் காந்தியடிகள் தன் அரசியல் வாரிசாக ஜவஹர்லால் நேருவையும், ஆன்மீக வாரிசாக ஆச்சார்ய வினோபாஜியையும் சுட்டிக்காட்டியிருந்தார். அவருக்குப் பிறகு பெரியார், காமராஜ், அண்ணா. எம்.ஜி.ஆர். என்று யாருமே தங்கள் வாரிசை சுட்டிக்காட்டவில்லை. எம்.ஜி.ஆர். ஜெ.விடம் ஒரு செங்கோல் கொடுத்ததைத்தவிர எதுவும் செய்யவில்லை. அதைப் போட்டோக்கள் போட்டு ஜெ. தனது அரசியலுக்குப் பயன்படுத்திக்கொண்டார். என்றும் சொல்லி தனக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஆன உறவை துரோணாச்சாரியார்- ஏகலைவன் போன்றது என்று அந்தக் கதையைச் சொல்லி விளக்கினார். அதுதான் அவர் பயன்படுத்திய பிரசார வாளை தன்னிடம் கொண்டுவந்து சேர்த்ததாகவும் குறிப்பிட்டார். அதேவேளையில் தன்னை `இன்ஸ்டண்ட் தலைவர்' என்று ஜெ. கிண்டலடித்ததையும் காட்டமாக ஒரு பிடிபிடித்தார்.

"இன்ஸ்டண்ட் காஃபி பற்றி உங்களுக்குத் தெரியும். அவசரத்திற்கு உதவுவது. அப்படியொரு இன்ஸ்டண்ட் காஃபி தருவதில் தப்பில்லை. அதுபோல் இன்ஸ்டண்ட் தலைவரானவர்தான் என்.டி.ராமாராவ். அவர் பிறரை எதிர்த்து அரசியல் செய்யவில்லையா? முதல்வராகி மக்களுக்கு நல்ல காரியங்கள் செய்யவில்லையா? ஒரு தலைவர் இன்ஸ்டண்ட் தலைவராக வருவதில் தப்பில்லை. ஆக்ஸிடெண்ட் தலைவராகத்தான் வரக்கூடாது. அப்படி வந்து வேஸ்ட்டாகவும் இருக்கக்கூடாது" என்று ஒரு போடு போட்டபோது, கூட்டம் உற்சாக ஆரவாரத்தில் அலை மோதியது.

ஆக மொத்தத்தில் ஜெ.- விஜயகாந்த் மோதல்தான் இனிவரும் காலங்களில் அரசியலில் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை!

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.