Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசு போர் குற்றவாளியே! அயர்லாந்து மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழர்களுக்கு எதிரானப் போரில் இலங்கை ராணுவப் படைகள் போர் குற்றத்தையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் செய்துள்ளது என்றும், எனவே இலங்கை அரசு போர்க் குற்றவாளியே என்று ஐரிஸ் தலைநகர் டப்ளினில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஆரம்ப கட்டத் தீர்ப்பளித்துள்ளது.

இத்தாலியின் மிலன் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal) கடந்த 14, 15ஆம் தேதிகளில் ஐரிஸ் தலைநகர் டப்ளினில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்தப் போரில் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் போர்க் குற்றம், மானுடத்திற்கு எதிரான குற்றம், இனப் படுகொலை ஆகியன குறித்து விசாரணை செய்தது.

இந்த விசாரணையில், இறுதிக்கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட முல்லைத் தீவில் இருந்து தப்பி வந்த சாட்சிகளும், ஏராளமான ஆவணங்களும், படப்பதிவுகளும் முன்வைக்கப்பட்டன.

இரண்டு நாள் விசாரணையில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் நேற்று (டப்ளின் நேரப்படி) பிற்பகல் 2 மணிக்கு, மக்கள் தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதி பிரான்சுவா ஹூதா, தீர்ப்பாயத்தின் ஆரம்ப கண்டுபிடிப்புகளை (preliminary Findings) வெளியிட்டார்.

அதன்படி, கீழ்க்கண்ட 4 கண்டுபிடிப்புக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹூதா அறிவித்தார்:

1. இலங்கை அரசு போர்க் குற்றவாளியே.

2. இலங்கை அரசு மானுடத்திற்கு எதிரான குற்றம் இழைத்துள்ளது.

3. இலங்கைக்கு எதிரான இனப் படுகொலை குற்றச்சாற்றின் மீது மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

4. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்ததற்கு சர்வதேச சமூகம், குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியன பொறுப்பாகும் என்று கூறியுள்ளார்.

இந்த விசாரணையின் போது பாதுகாப்பு வளையத்திற்குள் தஞ்சமடைந்திருந்த மக்களின் மீது கனரக பீரங்கிகளைக் கொண்டு தாக்கியதும், அவர்களின் மீது வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதும் உறுதி செய்யப்பட்டது.

பிரான்சுவா ஹூதா தலைமையிலான இத்தீர்ப்பாயத்தில் ஐரிஸ் நாட்டின் டெனிஸ் ஹாலிடே, மேரி லாலர், இந்திய நீதிபதி (ஓய்வு) இராஜேந்திர சச்சார் உள்ளிட்ட 10 பேர் நீதிபதிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரிஸ் மக்கள் தீர்ப்பாயத்திற்கு ஏற்பாடு செய்து சிறிலங்க அமைதிக்கான ஐரிஸ் மன்றம் என்ற அமைப்பு, கீழ்க்கண்ட கோரிக்கைகளை விடுத்துள்ளது:

1. இலங்கையில் நடைபெற்ற போரில் இலங்கை அரசப் படைகளும் விடுதலைப் புலிகளும் இழைத்த போர்க் குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியன மீது ஐ.நா. பான்னாட்டு அளவிலான விசாரணை நடத்த வேண்டும்.

2. வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும், இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 11,000 பேர் உட்பட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

3. சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், சித்ரவதைகள், பாலியல் குற்றங்கள், அப்பாவி மக்களுக்கு உணவு, குடிநீர் அளிக்காமல் துன்புறுத்துதல் ஆகிய அனைத்து குற்றங்களையும் முழுமையாக நிறுத்துமாறு சிறிலங்க அரசைக் கோருகிறோம்.

4. அரசியல் எதிர்ப்பை வன்முறையின் மூலமாகவும், மற்ற வழிகளிலும் ஒடுக்குவதை சிறிலங்க அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

5. இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக வரலாற்றுக் காலந்தொட்டு இழைத்து வரும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை நிறுத்துமாறும், அவர்களுடைய பங்கேற்புடன் கூடிய அரசியல் தீர்வு காணும்படியும், அனைத்து மக்களுக்கும் பொதுவான மனித உரிமைகளை நடைமுறைபடுத்துமாறும் இலங்கை அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=24825

முத்தமிழ் வேந்தன்

சென்னை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் இந்தியாவின் பங்கு பற்றி எதுவும் இல்லையா????

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இந்தியாவின் பங்கு பற்றி எதுவும் இல்லையா????

எதுவும் இருக்க இந்தியா விடாது செயற்படும்.!!

சிறிலங்க அரசு போர்க் குற்றவாளி: கடமையாற்றுமா ஐ.நா.?

Courtesy: இணையத் தமிழ் - தை 18, 2010

‘பயங்கரவாதத்திற்கு எதிரான‌ப் போர்’ என்று கூறி ஈழத் தமிழினத்தின் மீது சிறிலங்க அரசு தொடுத்த இனப் படுகொலைப் போரில் அந்த நாட்டு அரச‌ப் படைகள் போர்க் குற்றம் இழைத்துள்ளன என்றும், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் செய்துள்ளன என்றும் அயர்லாந்தில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தனது முதல் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது.

இத்தாலி நாட்டின் மிலன் நகரை மையமாகக் கொண்டு செயல்படும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal), அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கடந்த 14, 15ஆம் திகதிகளில் நடத்திய விசாரணையில், சிறிலங்க அரசப் படைகள் நடத்திய அப்போரில் பாதிக்கப்பட்டு, குறிப்பாக இறுதிக் கட்டப் போர் நிகழ்ந்த முள்ளிவாய்க்காயல், வட்டுவாகல் ஆகிய இடங்களில் இருந்து தப்பிவந்தவர்கள் நேரடியாக அளித்த சாட்சியங்களும், செயற்கைக்கோள்கள் எடுத்தப் படங்களும், மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான ஆதாரங்களும், எல்லாவற்றிற்கும் மேலாக ஐ.நா.வின் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை பதிவு செய்து அறிக்கை தயாரிக்கும் ‌பி‌லி‌ப் ஆல்ஸ்டன், சிறிலங்க இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களை நிர்வாணப்படுத்திச் சுட்டுக் கொன்ற வீடியோ பதிவு உண்மைதான் என்ற அறிக்கையும் சிறிலங்க அரசின் போர்க் குற்றத்தையும், மானுடத்திற்கு எதிரான அதன் குற்றங்களையும் உறுதி செய்துள்ளது.

இரண்டு நாள் விசாரணைக்குப் பிறகு அயர்லாந்து மக்கள் தீர்ப்பாயத்தின் தலைவர் பிரான்சுவா ஹூதா, தீர்ப்பாயத்தின் பூர்வாங்க கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி,

1) சிறிலங்க அரசு போர் குற்றம் இழைத்துள்ளது

2) மானுடத்திற்கு எதிரான குற்றம் இழைத்துள்ளது

3) சிறிலங்க அரசிற்கு எதிரான இனப் படுகொலை குற்றச்சாற்றின் மீது மேலும் புலனாய்வு செய்யப்பட வேண்டும்

4) சிறிலங்க அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்ததற்கு பன்னாட்டு சமூகமே, குறிப்பாக அமெரிக்காவும், இங்கிலாந்துமே காரணம் என்று கூறியுள்ளது.

ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்க அரசப் படைகள் இழைத்த குற்றங்கள் அனைத்தும், அவைகள் சந்தேகத்திற்கு இடமற்ற உண்மையாக இருந்தும், இதுவரை முறையான விசாரணை ஏதுமற்ற, நிரூபிக்கப்படாத குற்றச்சாற்றுகளாகவே இருந்தன.

ஆயினும், 2009 ஜனவரி முதல் ஏப்ரல் இறுதிவரை, மக்கள் பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்திருந்தத் தமிழர்கள் மீது சிறிலங்கப் படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை தொடர்பான உறுதியான தகவல்கள் அடிப்படையில் ஐ.நா. அறிக்கை தயாரித்திருந்தது. ஆனால் வெளியிடாமல் இரகசியமாக வைத்திருந்தது.

போரில் சம்மந்தப்படாத மக்கள் மீது நடத்தப்பட்ட அந்தக் கொடூரமான தாக்குதல்களைக் கண்டித்து ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் கண்டித்தன. மனித உரிமைகளை காப்பாற்ற வேண்டிய கடப்பாடுடைய ஐ.நா. கண்டிக்கவில்லை.

இறுதிக் கட்டப்போரில், கடைசி சில நாட்களில், பல பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டு, போர் முடிந்தது என்று அறிவித்தப் பின்னரே, அது குறித்து விசாரணை நடத்தி, அதற்குக் காரணமானவர்களை பொறுப்பாக்குமாறு சிறிலங்க அரசிடமே பான் கீ மூன் ‘வேண்டுகோளை’ முன்வைத்தார்!

அதாவது, போர்க் குற்றங்களுக்கு காரணமானவர்கள் சிறிலங்கப் படையினரே என்பதாகவும், அவர்கள் நடத்திய கண்மூடித்தனமான படுகொலைக்கு சிறிலங்க அரசிற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது போலவும் சித்தரிக்கும் விதமாகவே பான் கீ மூனின் ‘வேண்டுகோள்’ இருந்தது. ஆனால் அதைக்கூட சிறிலங்க அதிபர் ஏற்கவில்லை.

இந்த நிலையில்தான், இறுதிக் கட்டப்போரில் பல பத்தாயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற விவரம் தி டைம்ஸ், ல மாண்ட், நியூயார்க் டைம்ஸ் ஆகியவற்றில் வெளிவர, அதன் விளைவாக ஐ.நா.வின் மனித உரிமை மன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஜெனிவாவில் கூட்டப்பட்டது.

தனது நாட்டு மக்களுக்கு எதிராக சிறிலங்க அரசு இழைத்த குற்றங்களை வெளிக்கொணர மேற்கத்திய நாடுகள் மேற்கொண்ட முயற்சியை இந்தியாவும், சீனாவும் இணைந்து காய் நகர்த்தி முறியடித்தன. தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்க அனுமதிக்காத சீனா, இந்தியாவுடன் கைகோர்த்து, தமிழர்களை இனப் படுகொலை செய்த சிறிலங்க அரசைக் காப்பாற்றியது.

இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அத்துடன் புதைந்துபோகும் என்றுதான் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்களின் இடையறா போராட்டம், மனித உரிமை அமைப்புகளின் சீரிய செயல்பாடு, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து அவர்களோடு இணைந்துப் போராடிவரும் சிங்கள ஊடகவியலாளர்கள், மனித உரிமைப் போராளிகள் ஆகியோரின் இடைவிடாத முயற்சியின் விளைவாக நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இந்த முக்கிய விசாரணையை மேற்கொண்டது.

மனித உரிமைகள், மானுடத்தின் பாதுகாப்பு, இனப் படுகொலை தடுப்பு ஆகியவற்றிற்கான சர்வதேச பிரகடனங்களை காப்பாற்ற 1967ஆம் ஆண்டு முதல் இப்படிப்பட்ட விசாரணை மன்றத்தை நடத்திவரும் மக்கள் தீர்ப்பாயம், டப்ளினில் தனது தீர்ப்பாயத்தை நடத்தி தனது கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது.

இதற்கு சட்ட அங்கீகாரம் ஏதுமில்லை. இந்த தீர்ப்பாயத்தின் நோக்கமே சர்வதேச அளவில் அநீதிக்கு எதிரான பொதுக் கருத்தை உருவாக்குவதுதான். 1967இல் ரஸ்ஸல் தீர்ப்பாயம் என்று அன்று அழைக்கப்பட்ட இம்மன்றமே, வியட்நாம் மக்களுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் இழைத்த மனித உரிமை மீறல்களை விசாரணை நடத்தி உறுதி செய்தது என்பதை மறக்கவியலாது.

வியட்நாம் மக்கள் மீது உச்சக்கட்ட போர் வெறியுடன் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட இரசாயண ஆயுதங்களினால் வியட்நாம் மக்களுக்கு ஏற்பட்டப் பாதிப்புகள் ஏற்பட்டது என்பதை உலக மக்களின் பார்வைக்கு கொண்டுவந்தது ரஸ்ஸல் தீர்ப்பாயத்தின் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

இன்று ஈழத் தமிழ் மக்களின் மீது, தெற்காசிய வல்லாதிக்கங்களான இந்தியா,சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றின் துணையுடன் சிறிலங்க அரசு கட்டவிழ்த்துவிட்ட காட்டுமிராண்டித்தனம் ஆதாரப்பூ்ர்வமாக உலகத்தின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அன்று வியட்நாமில் அப்பாவி மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு உலகத்தின் மனசாட்சிக்கு கொண்டுவரப்பட்டதால், அப்படிப்பட்ட ஒரு போர்க் குற்றம் அதன் பிறகு வேறு எந்த நாட்டு மக்கள் மீதும் இழைக்கப்படவில்லை.

இன்று ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றமும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களும் உலகத்தின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, சிறிலங்க அரசின் மீதான இனப் படுகொலை குற்றச்சாற்றின் மீது மேலும் புலனாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் மக்கள் தீர்ப்பாயம் கூறியுள்ளது.

இதற்குப் பிறகாவது ஐ.நா. தனது கடமையை செய்ய வேண்டும். சிறிலங்க அரசிற்கு ஆதரவான ஆலோசனைகளை கூறுவதைத் தவிர்த்துவிட்டு, அந்நாட்டரசு தனது நாட்டு மக்கள் மீது இழைத்த போர்க் குற்றம் தொடர்பாக விசாரிக்க சர்வதேச விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதனை ஐ.நா. தனிததுச் செய்ய வேண்டியதில்லை. ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும், பாதுகாப்புப் பேரவையின் பல தற்காலிக உறுப்பு நாடுகளும் அதற்கு ஆதரவாகவே உள்ளன. பாதுகாப்புப் பேரவையில் சிறிலங்க அரசிற்கு எதிரான தீர்மானம் கொண்டுவருவதை தனது வீட்டோ அதிகாரத்தைக் கொண்டு சீனா மீண்டும் தடுக்குமானால், ஐ.நா. பொது அவையைக் கூட்டி அங்கு விவாதம் நடத்தி, விசாரக்கான தீர்மானத்தை நிறைவேற்ற ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் முன்வர வேண்டும்.

இதை அவர் செய்யத் தவறினாரென்றால், இந்தியா, சீனா போல, சிறிலங்க அரசு நடத்திய இனப் படுகொலைக்கு ஐ.நா.வும் உதவியதாகவே கருதப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.