Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கிலிய மன்னன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலிய மன்னன்

98390262.jpg

சங்கிலிய மன்னன் தொடரின் முன்னுரை

வித்தியாசமாக ஒரு தொடர் பதிவு தொடர் கதையாக எழுதுவது எனத் தீர்மானித்து நாட்களும் நகர்ந்து கொண்டே இருக்கின்றது. இந்தத் தாமதம் தொடர் ஆரம்பித்த பின் வரக்கூடாது என்பதற்காகவே இந்தத் தாமதம். இனி நான் எழுத இருக்கும் சங்கிலிய மன்னனின் கதைக்கான முன்னுரைக்கு வருவோம். இதில் எனது கதைக்கான தயார்படுத்தல்களும் உண்டு.

முன்னுரை

‘வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும்’ என்பார்கள். என்னைப் பாதியாவது ஆக்கியுள்ளது எனலாம். நிறைய வாசிப்பேன், அதுவே என்னை எழுதவும் தூண்டியது. வலைப்பதிவில் எமது ஆத்ம திருப்திக்காக எதையும் எழுதலாம். பத்திரிகைகள், சஞ்சிகைகளில் அது சாத்தியப்படாது. அவற்றில் பிரசுரிக்கக் கூடிய தரத்தை குறித்த ஆக்கங்கள் ஓரளவாவது கொண்டிக்க வேண்டும். அந்தத் தரத்தை கொண்டதாக இது அமையும் என்று நான் கருதுகின்றேன். வாசிக்கும் போதும் அதிகமாக சரித்திர நாவல்களையே விரும்பிப் படிப்பேன். தென் இந்திய நாவலாசிரியர்களினது சரித்திர நாவல்களை வாசிக்கும் போது அது எத்தனை பக்கங்களைக் கொண்டிருந்தாலும் வாசிக்கும் போது சலிப்பே வராது. அந்தளவு அவர்கள் வரலாற்றை கற்பனையுடன் கலந்து தந்திருப்பார்கள். உதாரணமாக ஒரு கொடுங்கோல் அரசனது சில நல்ல குணங்களை கருவாக வைத்துக்கொண்டு அவனை கதை நாயகன் ஆக கொண்டு கற்பனையில் சிறந்த காவியத்தைப் படைத்துவிவார்கள். இந்த மாதிரியான நாவல்களை வாசிக்கும் போது இந்தியாவின் பல அரசர்களைப்பற்றிய சுவையான விடயங்களை அறிந்து கொள்ள முடிகின்றது. (பாதி கற்பனை) இலங்கைத் தமிழ் அரசர்கள் பற்றிய சில நாவல்களையும் வாசித்திருக்கின்றேன். அவை பெரும்பாலும் வரலாற்றுடனேயே ஒன்றிப்போகின்றன. அங்கு கற்பனைக்கு இடம் குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் காவியம் பாதி, கற்பனை பாதி என்ற குறிக்கோளுடன் ஒரு சரித்திர நாவல் எழுத ஆசைப்பட்டேன்.

இலங்கையில் தமிழ் அரசர்கள் பலர் ஆண்டாலும் எனக்கு மாத்திரம் அன்றி பலருக்கும் ஞாபகத்துக்கு வருவது சங்கிலியனே. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன் அவனது சிலை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எனவே அவன் பற்றிய தகவல்களைத்திரட்ட முற்பட்டேன். இதற்கு கலாநிதி க.குணராசா (செங்கை ஆழியான்) அவர்களின் மீள் வாசிப்பாக வெளியிடப்பட்ட (என்னைப் போன்றவர்களுக்கு) எஸ். ஜோனின் ‘யாழ்ப்பாணச் சரித்திரம்’ (1878), மாதகல் மயில்வாகனப் புலவரின் ‘யாழ்ப்பாண வைபவமாலை’ (1884), ஆ. முத்துத் தம்பிப்பிள்ளையின் ‘யாழ்ப்பாணச் சரித்திரம்’ (1912) அத்துடன் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் ‘நாடகத்திரட்டு’ ஆகியவற்றில் இருந்து தகவல்களைப் பெற்றேன். இந்த ஆயத்தங்களுடன் சங்கிலி வரலாற்றை வாசிக்கத் தொடங்கிய போது ஆரம்பமே எனக்கு அஷ்ட கோணலாகிப் போனது. காரணம் யாழ்ப்பாணத்தை இரு சங்கிலி அரசர்கள் ஆண்டிருக்கின்றார்கள். இவர்களில் முதலாவது சங்கிலி செகராசசேகரன் என்ற சிங்காசனப் பெயருடன் நாட்டை ஆண்டிருக்கின்றான் (கி.பி 1519 முதல் கி.பி 1565 வரை) இரண்டாம் சங்கிலி எனும் சங்கிலி குமாரன் கி.பி 1616 முதல் 1621 வரை ஆண்டிருக்கின்றான். நான் மேலே குறிப்பிட்ட மூன்று சரித்திர ஆசிரியர்களும் (நாடகம் தவிர்ந்த) இவ்விரு சங்கிலியையும் ஒருவரே என இணைத்து தங்கள் நூல்களில் எழுதியுள்ளனர். (பின்னைய எழுத்தாளர்களால் அறியப்பட்டது) இதனால் எனக்கு முதல் சங்கிலியினது முடிவும் இரண்டாம் சங்கிலியினது ஆரம்பமும் தெரியாமல் போய்விட்டது.

கதைக்கேற்ப கதாநாயகனின் முடிவை நாங்கள் எழுதிக் கொள்ளலாம். ஆனால் ஆரம்பத்தையும் கற்பனையில் எழுதினால் இக்கதை முற்று முழுதாக கற்பனைக்கதையாகப் போய்விடும். அதனால் முதற் சங்கிலியின் வரலாற்றையே நாவலாக எழுதத் தீர்மானித்தேன். அதிலும் ஓர் சிக்கல் வந்தது. இச்சங்கிலி நாட்டுமக்களுக்கு நன்மை செய்தாம் தன் சொந்த விஷயத்தில் சுயநலத்துடன் நடந்து கொண்டதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இச்சங்கிலியானவன் மன்னன் பரராஜசேகரனது வைப்பாட்டியின் மகனாவான். இவன் தன் தமையனைக் கபடமாகக் கொன்று ஆட்சிப் பொறுப்பைப் பெற்றான் என ஆசிரியர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். என் கதையின் நாயகனைக் கொடியவனாகக் காட்டுவது எனக்கு சரியாகப் படவில்லை. ஆதலால் சரித்திரத்தில் உள்ள நல்ல விடயங்களை எடுத்துக்கொண்டு மிகுதி கற்பனையையும் சேர்த்து இந்த சரித்திர நாவலை ஆக்கியுள்ளேன். வெறும் ஏழு பக்க வரலாற்றை வைத்து நான் முப்பது அத்தியாயங்கள் எழுதிவிட்டேன். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு முக்கியமானவிடயம், ஒரு ஏகலைவனுக்கு எப்படி துரோணர் குருவாக அமைந்தாரோ அவ்வாறு எனக்கு குருவாக மறைந்த புகழ் பூத்த தென்இந்திய சரித்திர ஆசிரியர் சாண்டில்யன் இருக்கின்றார். அவரின் புத்தகங்களை வாசித்தே அவரின் நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். என்னுடைய ரசனை அவருடன் நிறையவே ஒத்துப் போகின்றது. ஏறத்தாள அவருடைய எல்லா நூல்களையும் யாழ்ப்பாணத்தில் வாசித்து விட்டேன். எஞ்சிய நூல்கள் கிடைக்காததால். ஆனாலும் அண்மையில் தமிழ்ச்சங்கத்தில் சில நான் வாசிக்காத நூல்களைக் கண்டு சந்தோசப்பட்டேன். இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை.

எனவே தெரிந்தோ தெரியாமலோ இக்கதையில் சாண்டில்யன் பாணி பல இடங்களில் பரவிக்கிடக்கும். (உதாரணம் எலியானா என்ற கற்பனைப் பாத்திரம்) இந்த நாவலின் ஐம்பது வீதம் சரித்திரமே. சரித்திரத்தை சுவைபடக் கூறுவதற்கு கற்பனை வேண்டும் என்று புரிந்து கொண்டவர்களுக்கு இது ரசமாக அமையும். எழுத்துருவில் இருந்த இந்த நாவலை வலைப்பதிவில் ஏற்றக் காரணம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் வலைப்பதிவின் ஆதிக்கமும். எனக்கு இந்தக்கதையை எழுதுவதற்கு மூல நூல்களைத்தந்து என்னை யாழ்ப்பாணத்தரசன் சங்கிலியின் வரலாற்றை இந்திய சரித்திர ஆசிரியர்களைப் போல் எழுதுமாறு கூறி இரண்டு வருடங்களுக்கு முன் ஆக்கமும் ஊக்கமும் தந்த என் நண்பன் தக்சனுக்கு எனது நன்றிகள். (அவனும் சரித்திர நூல் வாசகன். அவன் கல்கி வாசகன்) எனது எழுத்துத்துறையில் அவனுக்கு பங்குண்டு.

நான் உங்களிடம் வேண்டுவது என்ன என்றால் குறைகளை சுட்டிக்காட்டுங்கள். நிறைகளை பாராட்டுங்கள். தொடர் சிறப்hக அமைவதற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். சங்கிலியன் வரலாற்றுத் தொடரின் முதல் அத்தியாயத்துடன் சந்திக்கின்றேன்.

----------------------------------------------------------------------------------------------------------------

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 1 தேவதையைக் கண்டான்)

Monday, March 29, 2010 | By VARO பகல் பொழுது முடிவுற்று நள்ளிரவுக்கு இடைப்பட்ட முன்னிரவுப் பகுதியில் இரவின் இருளாட்சியில் உலகம் சிறிதுநேரம் கட்டுண்டு கிடந்தபின், நிலவின் வருகையால் மீண்டும் அது மலர்ச்சி பெறத் தொடங்கியது. சுவைத்துப் பருகி ருஷி பார்க்க வேண்டும் என்ற வேட்கையை உண்டுபண்ணும் விதமாக அந்நிலவின் அடர்த்தியான பாலொளி எங்கெங்கும் பிரவாகித்து பொங்கிக் கொண்டிருந்தது. ஆரவாரம் மிகுந்த இடங்களில் இருந்து நிலாப்பொழுதைக் காண்பதில் எவ்வித இன்பமும் இருப்பதில்லை. ஆனால் இம்மாதிரி எளிமையில் அழகு சேர்ந்து அமைதியும் உடன் இணைந்து இழையும் இடங்களில் இந்த நிலாப்பொழுது கூடித்தரும் இன்பம் எழுத்தில் கூறிவிட முடியாது. இந்த நிலப்பொழுதின் எழில் ஜாலங்களை எல்லாம் ஓர் உயரிய காவியத்தை படித்துச் சுவைப்பது போலச் சுவைக்க வேண்டும்.

சில்லென்று வீசும் சீதளத் தென்றலிலே அசைந்தாடும் இலைமலிந்த மரக்கிளைகளும், மலர் சுமந்த செடி கொடிகளும்ஏதோ ஒரு புதிய நடனத்தை அரங்கேற்றிக் காட்டுவது போலத்தான் இருந்தது. பகல் பொழுதில் கேட்காத நானாவித ஒலிகள் அதற்கு முன் கேட்டறியாத ஏதோ ஒரு புதிய இசையாகவே இசைத் இன்பம் தந்தது. அந்த இன்பமயமான வேளையில் இரு வீரர்கள் குதிரை மீதமர்ந்து மிகச் சந்தோசமாக சோழியர்புர வீதியில் வலம் வந்தார்கள். அவர்களை அருகே போய்க் கவனித்தோமானால் ஒருவன் அரசனைப்போல் தோற்றமளித்தான். மற்றன் அவன் நண்பனாக இருக்க வேண்டும். அவ் அரசிளங்குமரன் சராயை மட்டுமே அணிந்திருந்தான். அந்த வாலிபனின் உடலின் மேற்பகுதி திறந்தே கிடந்தது. திறந்திருந்த மார்பு விசாலமாகவும் திண்ணிய தசைகளுடன் இரும்பெனக் காட்சியளித்தது. அதில் வளர்ந்திருந்த கறுத்த முடிகளிடையே ஆடிய பெரும் மரகதக்கல் ஒன்றைத் தாங்கியிருந்த பொற்சங்கிலி ஒன்று அவன் கழுத்தைச் சுற்றியிருந்தது. இரும்பென நீண்ட மெல்லிய கரங்களில் குதிரையின் கடிவாளத்தைப்பிடித்திருந்த தோரணை எல்லாமே அவன் அசுவ சாஸ்திரத்தை நன்கு அறிந்தவன் என்பதை மட்டுமின்றி அவன் உடலின் உறுதிக்கும் வலுவுக்கும் சான்று கூறின. அவன் விசால வதனத்தில் தலையிலிருந்து தொங்கிய ஓரிரு சுருட்டை முடிகள் அவ்வதனத்திற்கு தனி அழகைக் கொடுத்தன. அவன் கண்களிலும் ஏதோ தனிப்பட்ட வசியம் காணப்பட்டது. அவன் இதயத்தில் மகிழ்ச்சி வெள்ளம் புரண்டதன்றி அந்த வெள்ளத்தின் அலைக்கோடுகள் முகத்திலும் உருண்டதால் அவன் வீர உதடுகளும் ஆனந்த நகை பூத்தன. அந்த அர்த்த ஜாமத்தில் மிகவும் சர்வ சாதாரணமாக எதிலும் சிரத்தை காட்டாமல் உலகத்தையே அலட்சியமாக நினைத்து யாழ் மாநகரின் பிரதான ராஜ வீதிகளில் ஒன்றான சோழியர்புர வீதியிலே குதிரையில் தன் நண்பனுடன் சென்ற வாலிபன் தன்னைவிட அதிர்ஷ்டசாலி உலகில் இல்லை என்றே நினைத்தான்.

இரு வாலிபர்களது சம்பாசனையில் இருந்தும் அவர்கள் பால்ய சினேகிதர்கள் என்பதும் பொழுது போக்கிற்காக ஊரைச்சுற்றுகின்றார்கள் என்பதும் தெளிவாகின்றது. அதில் அரசிளங்குமரன் போலிருப்பவன் நண்பனைப் பார்த்துக் கேட்கின்றான்.

“வீரமாப்பாணா! இயற்கை அழகு நிறைந்த இலங்காபுரிக்கே தனி அழகு சேர்க்கும் ஒரு அழகு யாழ்ப்பாணத்தில் இல்லை. அது என்னவென்று கூறு பார்ப்போம்?”. வீரமாப்பாணன் பலமாக யோசித்துவிட்டு “நீ இங்கிருக்கின்றாய், அவ்வாறிருக்க எந்த அழகு யாழ்ப்பாணத்தில் குறைந்து விட்டது”. என தனது விகடப் பேச்சைக் காட்டினான். “இவ்விடத்தில் உனது நகைச்சுவை எனக்கு சிரிப்பை வரவழைக்கவில்லை. விளையாடாமல் நான் கேட்ட கேள்விக்குப் பதிலைச்சொல்லு. உனக்கு கண்டுபிடிப்பதற்கு வேண்டுமானால் சான்று தருகின்றேன். அது ஒரு இயற்கை….”

“இயற்கையா?.... அவ்வாறானால் அழகான பெண்கள் யாழ்ப்பாணத்தில் இல்லை என்கிறாயா சங்கிலி”

“நல்லதொரு அழகைக் கண்டு பிடித்தாயடா அடிமுட்டாள், உனக்கு சிறிதளவேனும் முளை இருக்கின்றதா?” “எனக்குத்தான் புரியவில்லையே, நீயே கூற வேண்டியது தானே! இரவு நேரத்தில் உனது கேள்வி புத்தியை மழுங்கடிக்கின்றதடா” “உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. உன்னுடன் சேர்ந்த என்னைச் சொல்ல வேண்டும். சரி.. நானே கூறுகின்றேன். இனியாவது பாடமாக்கி வைத்துக்கொள், இலங்கையின் மத்திய பகுதிகளிலும் தென் பகுதிகளிலும் அழகான மலைத் தொடர்களும் சிகரங்களும் உள்ளன. இங்கு ஒன்றுமே இல்லையடா, ஒரு மலையாவது இருந்திருந்தால் யாழ்ப்பாணம் எவ்வளவு அழகாக இருந்திருக்கும்”

“பூ… இவ்வளவு தானா…? நான் என்னமோ… ஏதோ… எனப் பெரிதாகக் கற்பனை பண்ணிவிட்டேன்”. “உனக்கெங்கேயடா இருக்கப் போகின்றது கலா ரசனை” சங்கிலி கடிந்து கொண்டான். “சரி நேரமாகின்றது… நித்திரை கண்களைச் சுழற்றுகின்றது. குதிரையில் இருந்தே விழுந்து விடுவேன் போலிருக்கின்றது. வா எங்காவது சத்திரத்தில் உறங்குவோம்”. மாப்பாணன் அவசரப்படுத்தினான். “எனக்கு அரண்மனையை விட வேறு இடங்களில் உறங்கிப் பழக்கமில்லை. தாகமாக இருக்கின்றது. வா… இவ்விடத்தில் தான் நம் மந்திரி அப்பாமுதலியின் வீடு இருக்கின்றது. அங்கு சென்று ஏதாவது அருந்துவோம். அவர் நீண்ட நாட்களாக என்னைத் தனது வீட்டுக்கு வரும்படி அழைக்கின்றார். எனக்கோ நேரமே கிடைப்பதில்லை. மீண்டும் நாம் எப்போது சோழியர்புரப்பகுதிக்கு வருவோமோ தெரியாது. ஆகவே சென்று வருவோம்”. “நான் வேண்டாம் என்றால் நீ விடவா போகின்றாய். வா… போவோம்”.

இருவரும் நள்ளிரவில் அப்பாமுதலியின் வீட்டை விசாரித்துக்கொண்டு போய் கதவைத்தட்டுகிறார்கள். “யார்… யாரது இந்த நேரத்தில்?...” உள்ளிருந்தவாறே அப்பாமுதலி குரல் கொடுத்தார். “நான்…. நான் தான்…” “நான் தானென்றால்… யார்?....” என்று கூறியவாறே அப்பாமுதலி வந்து கதவைத்திறக்கின்றார். “யாரது… ஓ..! இளவரசரா… வாருங்கள் வாருங்கள். இப்பொழுதுதான் இந்த ஏழையின் வீடு தெரிந்ததோ?”. திறந்த வீட்டினுள் சென்ற சங்கிலி தனது கண்களாலேயே வீட்டை அளவெடுத்தான். சிறிய வீடென்றாலும் அப்பாமுதலி சொல்வதைப் போல் அது ஏழை வீடாக தெரியவில்லை.

“அது… வந்து… இவ்விடம் ஓர் அரசாங்க அலுவலாக வந்தோம். மிகுந்த தாகமாக உள்ளது. அதுதான் உங்கள் வீடு தேடி வந்தோம். அருந்துவதற்கு ஏதேனும் கிடைக்குமா?” சங்கிலி வினவினான். “உங்களுக்கில்லாத பானமா? இரவு வேளையாதால் சூடாகவே ஏதாவது கொண்டுவரக் கூறுகின்றேன்” எனக்கூறிக்கொண்டு உட்பக்கமாகத்திரும்பி “வடிவழகி… வடிவு… சூடாக ஏதாவது அருந்துவதற்கு இரண்டு கோப்பைகள் கொண்டு வா” எனக்குரல் கொடுத்தார். ‘அப்பாமுதலிக்குக்கு மகள் இருக்கிறாளா? இது எனக்கு இவ்வளவு நாளும் தெரியாதே, ஒருவேளை சிறு பிள்ளையாக இருக்குமோ?” என சங்கிலி எண்ணமிட்டான்.

“இந்தாருங்கள் அப்பா!” என்ற தேனிலும் இனிய குரலைக்கேட்டு நிமிர்ந்து பார்த்த சங்கிலி மிதமிஞ்சிய ஆச்சரியத்தை அடைந்தான்.

இதன் தொடர்ச்சியை கீழுள்ள தளத்தில் வாசிக்கலாம்.நன்றி

http://sankili.blogspot.com/2010/03/1.html

  • கருத்துக்கள உறவுகள்

.

அரச கதையை, அதுகும் யாழ்ப்பாணா மன்னன் சங்கிலியன் கதையை இணைத்தமைக்கு நன்றி நுணாவிலான்.

.

  • கருத்துக்கள உறவுகள்

நன்று, நல்ல முயற்சி! வாழ்த்துக்கள் நுணா!!

இரண்டு பாகம் படித்தேன் நன்றாக இருக்கிறது, நீங்களே கூறியபடி சாண்டில்யன் தெரிகிறார்! எனக்கு நல்ல விருப்பம்!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நுணா. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் வாசிக்கத் தூண்டுகின்றது.

இணைப்பிற்கு நன்றி நுணாவிலான்

வாத்தியார்

*********

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.