Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றமில்லாது குடிப்பெருமை காத்த குமார்

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்குமிடையே நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து, பல்வேறுபட்ட நிகழ்வுகளின் மாற்றங்கள் ஈழத் தமிழர் வாழ்வில் ஏற்பட்டு போய்விட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நன்மைகளிலொன்றாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மறைந்த தலைவர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவு தினக்கூட்டம் யாழ்ப்பாணம், வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ள சமயம் இந்நினைவுரையை வெளிப்படுத்துகின்றேன்.

மாமனிதர் குமார் பொன்னம்பலம் இந்த வேளையில் இருந்திருந்தால் இன்னும் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் இளைஞர்களைத் தொடர்ந்தும் அங்கே அடைபட்டுக் கொண்டிருக்க அனுமதித்திருக்க மாட்டார்.

சிறைப்பட்ட இளைஞர்களுக்குத் தான் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நேரடியான சேவையை அனுபவிக்கும் சந்தர்ப்பம் அதிகம் கிடைத்தது.

நானும் சிறையில் வாடி, வதங்கி வாழ்வே வெறுமையாகிப் போன ஒரு பொழுதுகளில் அந்த மாமனிதர் அவர்களுடாகவே விடுதலை பெற்று வெளியே வந்த சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முயன்றேன். முடியவில்லை. தப்பியோடி இந்த சுவிஸ் தேசம் வந்து தஞ்சம் பெற்றேன்.

"அள்ளி அணைத்துக் கொஞ்ச வேண்டாம். ஒரேயொரு கருணைப் பார்வை பார்த்தாலே போதும். நொறுங்கிக் கிடந்த இதயத் துண்டங்கள் தானாகச் சேர்ந்து போகும்" இந்த நிலையில்தான் சிறைக் கம்பிகளுக்குப் பின்னே ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களில் ஒருவனாக நானும் கிடந்தேன்.

உலகிலேயே மிக அரிதாக மட்டுமே ஒரு சில நாடுகளில் இருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் எனும் சட்டத்தின்கீழ் எனக்கெதிராகவும் அரசு குற்றம்சாட்டியிருந்தது. ஒருவர் விடுதலை இயக்கமொன்றில் இருக்கின்றாரென்னு தொ¢ந்திருந்தும் காட்டிக் கொடுக்கத் தவறினால், அவருக்கெதிராகக் குற்றம்சாட்டக்கூடியதாகவே இந்தச் சட்டம் அமைந்திருக்கிறது.

இப்படி நிர்க்கதியாகி, வாழ்விழந்து, படிப்பிழந்து, பாதையிழந்து, வாழ்வே இருளுக்குள் மூழ்கிப் போன எமக்காக, இலங்கையிலே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஒருவரும் மிகப்பெரிய பரிஸ்டருமான குமார் பொன்னம்பலம் இலவசமாக நீதிமன்றத்தில் ஆஜராக வருகின்றார் என்றால் அந்த நிலையில் எமக்கு அவா¢ன் சேவை எத்தனை மன அமைதியை, எதிர்கால நம்பிக்கையை ஏற்படுத்தித் தந்திருக்கும் என்பதனை நினைத்துப் பாருங்கள்.

நீதிமன்றம் மிகவும் அமைதியாக இருக்கும், அப்பொழுது எனது பெயர் அழைக்கப்படும். நான் எழுந்து நிற்பேன். உடனே சட்டத்தரணிகள் வரிசையிலிருந்து மிகவும் கம்பீரமாக குமார் பொன்னம்பலம் எழுந்து நிற்பார். அப்படி அவர் எழுந்து நிற்கும்போது அந்த நீதிமன்றத்திற்கே ஒரு அழகு தோன்றி விடுவதுபோல் இருக்கும். மீண்டுமொரு தவணை தரப்படும். இப்படிப் படி மாதங்களாகப் பல தவணைகளுக்கு மாமனிதர் அவர்கள் எனக்காக அந்தக் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்கள். மன்னிக்கவும் எனக்காக அல்ல, எமது தமிழ் இனத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜரானார்.

என்னைப்போல் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்காக, வழக்காடிக் கொண்டிருப்பவரை நேரிலே பார்த்துக் கதைப்பது அப்பொழுது எமக்குக் கடினமான விடயமாக இருந்தது. அதனால் சற்று வேதனையுடன், நானும் எனது சிறை நண்பனொருவரும் உருக்கமான கடிதமொன்றை குமாருக்கு எழுதினோம். என்ன ஆச்சரியம் கடிதம் கிடைக்கப் பெற்ற அதே தினமே வெலிக்கடை மகசீன் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எங்கள் இருவரையும் சந்திக்கச் சட்டத்தரணி குமார் பொன்னம்பலம் வந்திருந்தார்.

சிறைக் காவலர்கள் எங்கள் இருவரையும் அழைத்துச் சென்று மாமனிதர் குமார் பொன்னம்பலம் முன் அமர வைத்துவிட்டு அகன்றார்கள். எமது நலத்தைக் கேட்டுக் கொண்ட அவர், நாங்கள் எழுதிய கடிதம், தனது மனதை வேதனையடைய வைத்ததாகவும், அதனால்தான் கடிதம் கிடைத்ததும் ஓடோடி வந்ததாகவும் கூறினார்.

எமக்கு அந்த மாமனிதரைக் குறித்து, அந்தக் கணங்களில் எம்முடன் அவர் கதைத்தது குறித்து, என்றும் ஒரு கருத்து இருந்தது. அது ஒரு மனிதன் எந்த உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தாலும் எவரையும் மதிக்கும் பண்பும், மரியாதை செலுத்தும் பாங்கும் இந்த மனிதரிடமே கற்றுக்கொள்ள வேண்டுமென்றிருந்தது.

குமார் பொன்னம்பலம் வெலிக்கடை மகசீன் சிறைக்கு வருகை தந்து என்னையும் எனது சிறை நண்பன் சண்முகவடிவேல் என்பவரையும் சந்தித்த இந்தச் சம்பவம் 1987ஆம் ஆண்டு வைகாசி மாதப் பகுதியில் நடைபெற்றது.

அந்த வேளையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எமக்கெதிராக நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப் பத்திரிகைகளின் போட்டோப் பிரதிகளையும் எங்களிடம் கையறித்துவிட்டு விடைபெற்றுச் சென்றார்.

இதன் பின்னர் இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இலங்கை-இந்திய ஒப்பந்தம் உருவானது. அதைத் தொடர்ந்து தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட இருப்பதாகச் செய்திகள் வந்தன.

19.09.1989 ஆம் ஆண்டு அன்று சிறைக் காவலர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். இது ஏற்கனவே எனக்கு வழங்கப்பட்டிருந்த தவணைத் திகதி. என்னை விடுதலை செய்வார்களென்னும் நம்பிக்கையில் நான் அன்று நீதிமன்றம் சென்றேன். விடுதலையடைந்ததும் என்னை அழைத்துச் செல்லவென எனது தந்தை வந்திருந்தார்.

நீதிமன்றம் தொடங்கியது. பல வழக்குகள் நடைபெற்றன. சரியாக 33 மாதங்களின் பின்னர் சிறையை விட்டு வெளியே வந்து சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கப் போகின்றேன் எனும் கட்டுக்கடங்கா ஆவலுடன் எனது பெயரை எப்போது அழைப்பார்களென்று நெஞ்சம் திக்திக்கென அடிக்க எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது எனது பெயரை அழைத்தார்கள். உடனே மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் எழுந்து ஏதோ நீதிபதியுடன் கதைத்தார்கள். நீதிபதியும் ஏதோ கூறினார். எனக்கு எதுவுமே புரியவில்லை. என்னை அமரச் சொல்லிவிட்டார்கள். வேறு வழக்குகள் நடைபெற்றன. நீதிமன்றம் கலைந்தது. நீதிபதியும் சென்றுவிட்டார். என்னைத்தான் விடுதலை செய்யவில்லை. அந்தக் கணங்கள் இருக்கின்றதே! விடுதலையை எதிர்பார்த்துக் கிடைக்காமல் ஏங்கிப்போகும் அந்தப்பொழுது இருக்கிறதே! பழுக்கக் காய்ச்சிய இரும்பை உடலில் வைப்பதைவிடக் கொடுமையானது. இப்படி நான் வேதனைப்படுவேனென்று தெரிந்திருக்கலாம் அந்த மாமனிதருக்கு. உடனே என் அருகே ஓடிவந்து "பயப்பட வேண்டாம், உங்களை விடுதலை செய்வார்கள். உங்களுடைய விசாரணை நீதிபதியின் தனியறையில் நடைபெறவுள்ளது" என்று கூறினார்.

அதேபோல் என்னை "சேம்பர்" என அழைக்கப்படும் நீதிபதியின் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். நீதிபதியுடன் குமார் பொன்னம்பலம் அவர்கள் நீண்ட நேரம் கதைத்தார். அப்பொழுது அதிஷ்டவசமாக எனக்குக் கிடைத்த நீதிபதியும் தமிழரான சுந்தரலிங்கம் என்பதனால் ஏற்கனவே நான் சிறை நிருவாகத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் உரையாற்றியிருந்தேன் என்பதனாலும் எனது பாதுகாப்பை முன்னிட்டு என்னை தனியாக விடுதலை செய்ய நீதிபதி விரும்பவில்லையென்று தெரிவித்து என்னை அழைத்துச் செல்ல யாராவது வந்துள்ளார்களா? என்று மாமனிதர், என்னை வினாவிய போது நான் ஆம், எனது தந்தையார் வந்து காத்து நிற்கிறார் என்று சொன்னேன்.

அப்பொழுது அந்த அற்புத மனிதரின் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சி இருக்கிறதே சிறைப்பட்ட ஒரு தமிழ் இளைஞனை விடுதலையடைய வைக்க வேண்டும் என்று அந்த மாமனிதர் ஓடிய ஓட்டம் இருக்கிறதே! அது இன்னும் எனது கண்களுக்குள் நிற்கின்றது. ஓடிய மாமனிதர் எனது தந்தையையும் அழைத்துக் கொண்டு சேம்பருக்கும் வந்தார். அதன்பின்னர் இப்பொழுது இளைஞர்களெல்லாம் மட்டக்களப்புப் பகுதிகளிலும் கொலை செய்யப்படுகின்றார்கள். எனவே உங்களின் மகனை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் எனும் அன்பு வேண்டுகோளுடன் எனது தந்தையிடம் என்னை நீதிமன்றமும் மாமனிதரும் ஒப்படைத்தார்கள்.

-சுவிஸிலிருந்து கல்லாறு சதீஷ்

(நினைவுரையிலிருந்து)

  • கருத்துக்கள உறவுகள்

மனதை உருக வைக்கும் நிகழ்வுகள்.

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் மக்களுக்காவே வாழ்ந்தவர்.

அவரின் இழப்பு ஈழ மக்களுக்கு ஓர் பேரிழப்பு.

வாத்தியார்

*********

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.