Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திமுக ஆர்ப்பாட்டம். ஈழத்தமிழ் மீனவர்களை கண்டிக்கிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திமுக நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கோசம் எழுப்பியவர்கள்.. தமிழ் மீனவர்களை கைது செய்த ஈழத்தமிழ் மீனவர்களை கண்டிப்பதாக கோசம் எழுப்பி உள்ளனர்.

http://www.nakkheeran.in/users/frmMoreWebTv.aspx?WTV=770

இதன் மூலம் திமுக தமிழக மற்றும் ஈழத் தமிழ் மீனவர்களிடையே சிறீலங்கா அரசு சார்ப்பாக.. இந்திய மத்திய அரசின் நோக்கம் வேண்டியும் தனது அரசியல் இலாபம் வேண்டியும் தவறான பரப்புரையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

நீதியான தமிழக அரசியல்வாதிகளும் தமிழக மீனவ சங்கங்களும் இந்த விடயத்தில் விளக்கம் பெறுவதோடு ஈழத்தமிழ் - தமிழக உறவுகள் நலன் பேணும் வகையில் செயற்படும் தாயக மற்றும் நாடு கடந்த அரசு உண்மை நிலையை விளக்கி ஒரு அறிக்கையாவது விடுவது நன்று.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற பொறுப்புள்ளவர்கள்.. இது தொடர்பில் மெளனம் சாதிப்பது ஏனோ தெரியவில்லை. எமது மீனவர்களை தமிழக மீனவர்களுக்கு எதிரானவர்களாக சித்தரிக்க மேற்கொள்ளப்படும் இந்த அரசியல் இலாபம் தேடும் நாடகத்தை அனைவரும் ஒற்றுமையோடும் நல்ல புரிந்துணர்வோடும் முறியடிக்க முன் வர வேண்டும்.

இதுகுறித்து சீமான் அண்ணன் போன்றவர்கள் தகுந்த விளக்க அறிக்கை தருவது நன்று. அதேபோல் தாயகத்தில் இருந்தும் தருவது நன்று. நாடு கடந்த அரசும் நிலைமையை ஆராய்ந்து மீனவர்க்களின் அபிப்பிராயங்களோடு.. ஒரு விளக்க அறிக்கை தருவது நன்று.

கனிமொழியும், கருணாநிதியும் இரட்டை மடிக்கு ஆதரவா?

சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை தி.மு.க.முற்றுகை இட முயர்ச்சிஎடுத்து கனிமொழி உட்பட கைதாமே? இது எதற்காக? யாழ்ப்பாணம் அருகே இந்தியாவிலிருந்து சென்ற குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து சென்ற அதிலும் குறிப்பாக நாகப்பட்டினத்திலிருந்து சென்ற பதினெட்டு படகுகளை சேர்ந்த நூற்று ஆறு மீனவர்களை பிடித்துள்ளார்கள் என்பதே அந்த செய்தி.

இந்த மீனவர்களைக் கைது செய்தது அல்லது இடைமறித்தது யார்? தி.மு.க.தலைமை சொல்கிறது, அது இலங்கை கடற்படை என்று. சரி அப்படி இருந்தால் அந்த தி.மு.க. தலைமை ஏன் இதுவரை நடந்த தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை, இலங்கை கடற்படை வெட்டவெளிச்சமாக செய்தபோது சும்மா இருந்துவிட்டு இப்போது மட்டும் இலங்கை தூதரகமுற்றுகை என்று கிளம்பி உள்ளது?

ஏன் ஜெயகுமார் என்ற புஷ்பவனம் மீனவர் இலங்கை கடற்படையால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டபோது காட்டாத எதிர்ப்பை இப்போது திடீரென காட்டுகிறது? எதற்காக பாண்டியன் என்ற மீனவர் இலங்கை கடற்படையால் சமீபத்தில் கொல்லப்பட்டபோது கட்டத எதிர்ப்பை தி.மு.க. தலைமை காட்டுகிறது? தேர்தல் நேரம். தி.மு.க. தலைமை உண்மையாகவே தான் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதை பதிவு செய்யவேண்டும் என்றால் சரியானதுதான்.

சமீபத்திய ஜெயகுமார், பாண்டியன் கொலைகளுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு வந்துள்ளதால் தானும் அதனுடன் கலந்துகொண்டு மீனவர்களுக்காக குரல் கொடுத்தால் அதுவும் கூட ஒரு அரசியல் கட்சியை பொறுத்தவரை, அதுவும் தி.மு.க. போன்ற மாநில அரசியலை முன் நிறுத்தி பணியாற்றும் அரசியல் கட்சியை பொருத்தவரை சரியானதுதான். அதனால்தான் மீன்வள அமைச்சர் கே.பி.பி.சாமியின் ஏற்பாட்டில் அவரது கைகளிலேயே உள்ள அன்பழகனார் என்ற மீனவர் தலைவரது அமைப்பையும் பயன்படுத்தி இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கும் தி.மு.க.விற்கும் சமீபத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணையில் ஆ.ராஜாவை கிடிக்கி பிடி போடும் சீ.பி.ஐ.யால் ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவே இந்த ஆர்ப்பாட்டம் என்பது மட்டும்தான் உண்மையா? அப்படியானால் உண்மையில் நடந்ததுதான் என்ன?

மீனவர்களுக்கு மட்டுமே புரிந்த அல்லது தெரிந்த மீன்பிடி தொழில் பற்றி நிலம் சார்ந்த மக்களுக்கு தெரியாது. அதாவது இரட்டை மடி வலை, சுருக்கு வலை ஆகியவை ஒட்டுமொத்த மீனவர்களும் மீன் பிடிக்க முடியாமல் தடுக்கின்ற அல்லது அவர்களுக்கு மீன்கள் கிடைக்காமல் முழு கடலையும் அரித்து எடுக்கின்ற ஒரு தடை செய்யப்ப்பட்ட வலைகளாகும். அந்த வலைகளை சில குறிப்பிட்ட எண்ணிக்கையில் உலா மீனவர்கள் மட்டும் மற்ற மீனவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் ராமேஸ்வரத்திலும், நாகப்பட்டினத்திலும் பயன்படுத்துகிறார்கள். அதில் அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் கிடைகிறது. அதனால் மற்ற மீனவர்களுக்கு மீன்களே இல்லாமல் ஆகிவிடுகிறது.

இந்த தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை மீன்வளத் துறையின் ஊழல் அதிகாரிகளும், ஊழல் அரசியல்வாதிகளும் ஆதரிக்கிறார்கள். கையூட்டு வாங்கி கொள்கிறார்கள். இது விசைப்படகு மீனவர் சங்கங்களால் தொடர்ந்து எதிர்க்க படுகிறது. இதே தடை செய்யப்ப்பட்ட வலைகளை பயன்படுத்தி மன்னார், யாழ்ப்பாணம் வரை சென்று தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்கும் போதெல்லாம் சில ஆண்டுகளாகவே அங்குள்ள தமிழ் மீனவர்கள் எதிர்ப்பை கொடுத்துள்ளார்கள்.

அது தவிர யாழ்ப்பாணம், மன்னார் தமிழ் மீனவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் போல டிராலர்களை பயன்படுத்துவது இல்லை. அவர்கள் இன்னமும் நாட்டு படகு முறைகளையே பயன்படுத்துகிறார்கள். இப்போது அங்கே பிடிபட்டவர்கள் இரட்டை மடி வலைகளையும், ஒற்றை மடி வலைகளையும் பயன்படுத்தி டிராலர்கள் மூலம் மீன் பிடிக்க சென்றவர்கள். அங்கே வந்து மீன் பிடிப்பதை அங்குள்ள தமிழ் மீனவர்கள் எதிர்க்கவில்லை.

டிராலர்களை பயன்படுத்துவது அவர்களுக்கு இடையூறுதான் எராலும் அதைக்கூட அவரால் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் பல முறை எச்சரிக்கை விடுத்தும் இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்துவது அவர்களது வாழ்வுரிமையை பறிப்பதாக உள்ளது.அதுமட்டுமின்றி இவர்கள் யாழ்ப்பாண கரையோரம் சென்று மீன் பிடித்துள்ளனர். அது அவர்களது அன்றாட மீன் பிடித்தலுக்கே எதிரானது.

இரட்டை மடி மற்றும் சுருக்கு வலை என்ற தடை செய்யப்ப்பட்ட வலைகளை மீன் பிடிக்க பயன்படுத்த கூடாது என்பது தமிழகத்தில் மட்டுமல்ல, அனைத்து நாட்டளவிலேயே அமுலில் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஊழல் பிடித்த மீனவர் அல்லாத மீன்வளத்துறையின் அதிகாரிகள் தங்கள் பனிக்காலத்திற்குள் , எவ்வளவு சுருட்டலாம் என்ற நோக்கம் கொண்டவர்கள் கை நிறைய காசை வாங்கிக்கொண்டு அத்தகைய தடை செய்யப்ப்பட்ட வலைகளை பயன்படுத்துபவர்களுக்கு பல்லக்கு தூக்குகிறார்கள்.

கடலிலே இருக்கும் சூழலை பற்றியோ, கடலின் நீரோட்டங்கள் பற்றியோ, மீன்களின் வளர்ச்சி பற்றியோ, மீன்களை பிடிப்பதில் இருக்கவேண்டிய கட்டுப்பாடு, ஒழுங்குமுறை, மற்றும் விதிகள் பற்றியோ, வெவ்வேறு வகை மீன்களை வெவ்வேறு காலத்தில் பிடிப்பதற்கான வெவ்வேறு வகையான வலைகளை பற்றியோ எந்த அறிவும் இல்லாத அதிகாரிகள், மீன் வளத்துறையை ஆக்கிரமித்துள்ளனர். அதேபோல மீன்வளம் பற்றிய, மீன் பிடித்தல் பற்றிய அடிப்படை அறிவே இல்லாத அரசியல்வாதிகளும், இந்த நாட்டில் கடற்கரை தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களாக, மற்றும் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.

அநேக காலங்களில் கடலை பற்றிய அறிவே இல்லாத மீனவர் அல்லாத மாற்று சமூகங்களை சேர்ந்தவர்கள் அப்படிப்பட்ட அமைச்சர்களாக வந்துவிடுகிறார்கள். சிலநேரம் மீனவர் சமூகத்தை சேர்ந்த மனிதர்களே அமைச்சர்களாக வந்தாலும் அவர்கள் விவரம் தெரிந்தவர்களாக இருந்தாலும், தவறான அறிவியலுக்கு எதிரான வழிமுறைகளை கையாண்டு அதிகமான லாபத்தை சுரண்டலாம் என்ற லாப வெறி கொண்டவர்களாக இருக்கிறார்கள். அப்படித்தான் ஒரு அமைச்சர் இப்போது தமிழ்நாட்டு அமைச்சரவைக்கு கிடைத்துள்ளார்.

இவ்வாறு நிலம் சார்ந்த முதலாளிகளுகு, அதாவது நிலம் சார்ந்த முதலைகளுக்கு, கடல் சார்ந்த மக்களான மீனவர்கள் என்ற கடல் சார் பழங்குடிகள் பற்றிய அறிவே இருப்பதில்லை. அறிவு இருந்தாலே அதில் எப்படி ஊழல் அதிகமாக செய்து சொத்து சேர்க்கலாம் என்ற புத்தி கொண்ட இன்றைய உலகமயமாக்கல் காலகட்டத்தில், இயற்கை விதிகள் பற்றிய அறிவே இல்லாவிட்டால் எந்த மனச்சாட்சி உறுத்தல் கூட இல்லாமல் இந்த முதலைகள் தவறு செய்கின்றன. அப்படித்தான் இங்கே கடல் சார் உலகத்தை இவர்கள் கொடுமை படுத்துகிறார்கள்.

உதாரணமாக மீன் பிடித்தலில் பொதுவாக உலகம் முழுவதும் கில்நெட் வலையை பயன்படுத்துவார்கள். ஆனால் லாப வெறி பிடித்த தன்னலவாதிகள் இந்த தொழிலில் நுழைந்த பின், டிராலர் முறையை அறிமுகப்படுத்தி கொள்ளை அடிக்க தொடங்கினார்கள். இந்த டிராலர் முறை எல்லா மீனவர்களாலும் எப்போதும் எதிர்க்கப்படும் முறை. ஆனால் இன்றைய சாக்கடை அரசியலின் விளைவாக, ஊழல் பெருச்சாளிகள் அதிகாரிகளாக இருப்பதன் விளைவாக இந்த டிராலர் முறை பயன்படுத்தப்படுகிறது.

இலங்கை தீவில் தமிழ் மீனவர்களும், சிங்கள மீனவர்களும் டிராலர் முறையை பயன்படுத்துவதில்லை. அவர்கள் கில்நெட் முறையைத்தான் பின்பற்றுகிறார்கள். கேரளாவில் கடற்கரைகளில் டிராலர் முறையை பின்பற்றுவதில்லை. அவர்கள் கில்நெட் முறையைத்தான் பின்பற்றுகிறர்கள். ஆனால் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி தொடங்கி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் என்று எல்லா ஊர்களிலும் டிராலர் முறையை பின்பற்றி மீன் பிடிக்கிறார்கள்.

இந்த டிராலர் முறை என்பது கடலுக்குள் அடியாழம் வரை கருவி மூலம் வலையை கொண்டு சென்று, அரித்து எடுக்கும் தன்மை கொண்டது. அடுத்த மீனவனின் தேவைக்கு கிடைக்கவிடாமல் கடலை உடனடியாக காலி செய்யும் தன்மையுடையது. ஆறு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டு மீனவர் சங்கங்களை சந்திக்க வந்திருந்த இலங்கை மீனவர்களான தமிழ் மீனவர்களும், சிங்கள மீனவர்களும் இங்குள்ள விசைப்படகு மீனவர்களுடன் இது பற்றி ஒரு பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அந்த பேச்சுவார்த்தையில் இலங்கை மீனவர்கள் டிராலர் முறையை விட்டுவிடுங்கள் என்று வற்புறுத்தினார்கள். அதன்பிறகு ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் டிராலர் முறையில் இன்னும் எழுபது நாட்களுக்கு அதாவது இந்த ஆண்டிற்கு இந்த சீசன் காலத்தில் வேண்டுமானால் விடமுடியவில்லை என்பதால் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆனால் எங்கள் அதாவது இலங்கை கடற்கரைக்கு ஐந்து மைல்களுக்கு [ கடல் மைல்கள்] அப்பால் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அதேநேரம் அடுத்த ஆண்டிலிருந்து இத்தகைய டிராலர் பயன்படுத்தும் முறையை கைவிட்டு விடுங்கள் என்பதே அவர்களது கோரிக்கையாக வைக்கப்பட்டது. அதை இங்குள்ள விசைப்படகு மீனவர் சங்கங்களும் ஏற்றுக்கொண்டு அதில் கையெழுத்திட்டனர். அதன்பிறகு சமீபத்தில் கடந்த மூன்று வாரமாக இலங்கை தமிழ் மீனவர்கள் இந்திய தமிழ் மீனவர்களிடம் இதை நினைவு படுத்தி டிராலர் வேண்டாம் என்று அறைகூவல் விடுத்து வந்தனர். அதன்பிறகும் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஊழல் மீன்வளத்துறை அதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகளான ஆளும் கட்சிக்காரகளின் ஒத்துழைப்பில், அமைச்சரின் பங்களிப்புடன் இந்த சட்டவிரோத மீன்பிடிக்கும் முறை தொடரத்தொடங்கியது.

அதில் குறிப்பாக ராமேஸ்வரம் பகுதியின் மீன்வளத்துறை துணை இயக்குனர், இந்த ஆண்டுக்கான இலஞ்சத்தொகையாக இந்த சட்டவிரோத டிராலர்காரர்களிடம், ஆறு லட்சம் ரூபாயை பெற்றுள்ளார் எனச் சொல்கிறார்கள். அதேபோல நாகப்பட்டினம் பகுதியின் மீன்வளத்துறை அதிகாரிகள் ஐந்து கோடி ரூபாயை பெற்றுள்ளார்கள் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பணத்தில் ஒரு பகுதி அமைச்சகம் வரை செல்வதால் அவர்களும் இவர்களுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தகைய சூழலில்தான் பிப்ரவரி பதினைந்தாம் நாள் யாழ்ப்பாணம் கடற்கரை வரை சென்று, அதாவது அவர்கள் கேட்டுக்கொண்ட ஐந்து மைல் தூரத்திற்குள்ளும் சென்று டிராலரில் இரட்டை மடியையும், ஒற்றை மடியையும் கொண்ட வலைகளை வைத்துக்கொண்டு மீன் பிடித்த நாகப்பட்டினம் மீனவர்கள் நூற்று ஆறு பேரை அவர்களது பதினெட்டு படகுகளுடன், யாழ்ப்பாண தமிழ் மீனவர்கள் சுற்றிவளைத்துப் பிடித்து, கரைக்குக் கொண்டு சென்று, அவர்களுக்கு நல்ல உணவுகள் வழங்கிய பின்னர், படித்துறை என்ற காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகத் தெரியவருகிறது.

உண்மைநிலை இவ்வாறு இருக்கையில், மீனவர்களுக்கான போராட்டம் என்பதன் பேரில், இப்போது தி.மு.க. நடத்திய போராட்டம் தடை செயப்பட்ட வலைகளை பயன்படுத்துவோருக்கு ஆதரவாகவும், ஊழல் அமைச்சர்களுக்கும், ஊழல் அதிகாரிகளுக்கும் ஆதரவாகவும் இருகிறதே தவிர, உன்மையில் அப்பாவி மீனவர்கள் கடலில் இலங்கை கடற்படையால் சுடப்படுவதற்கு எதிரானதாகவோ, அத்தகைய எதிர்புப் போராட்டங்களுக்கு ஆதரவாகவோ இருக்கவில்லை.

அப்படி அவர்கள் ஆதரவாக குரல் கொடுக்க எண்ணினால் இதுவரை கொல்லப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் 538 முதல் தகவல் அறிக்கைகளையும், அடிக்கப்பட்ட, வலைகள் அறுக்கப்பட்ட, படகுகள் உடைக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் இருபதேட்டேட்டாண்டு வழக்குகளையும் சேர்த்து உயர்நீதி மன்றத்தில் போட்டு, இலங்கை கடற்படை தளபதிகள் மீது கைது வாரண்டை பிறப்பிக்க செய்யட்டும் என்பதே மீனவர்களுக்கான நியாயமான கோரிக்கையாக அமையும்.

இந்த உண்மைநிலையைச் சரிவரப் புரிந்து கொள்ளாவிடின், 'மீனவர் போராட்டம்' என்ற பொதுவான தலைப்பில், இருநாட்டு மீனவர்களுக்கும் இடையில், அரசியல்வாதிகளும், அவர்களது அடிவருடிகளும், மோதல்நிலையை உருவாக்கி. தங்கள் கல்லாக்களை நிரப்பிக்கொள்ளும் அபாயம் ஏற்படும். இதனால் என்றும் இறப்பதும், இழப்பதும் மீனவர்கள் என்பதே மாறாத உண்மையாகும்.

- 4தமிழ்மீடியா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.