இராணுவ ரோந்து அணி - நான்கு நான்கு பிராவோ
நான்கு நான்கு பிராவோ என்று அழைக்கப்பட்ட ராணுவ ரோந்து அணி மாதகல் முகாமிலிருந்து வழமைபோல கிளம்பியது. இரவு 8 மணியளவில் குருநகர் இராணுவ முகாமை ரோந்து அணி வந்தடைந்தது. இலங்கை இலகு காலாட்படையின் முதலாவது பட்டாலியன் படைப்பிரிவைச் சேர்ந்த அந்த அணிக்கு இரண்டாம் லெப்டினன்ட் வாஸ் குணவர்த்தன தலைமைதாங்கினார். சுமார் ஒரு வார காலத்திற்கு முன்னர்தான் அவரது அணி மாதகல் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இந்த இராணுவ அணி குருநகர் முகாமை வந்தடைந்ததும் வாஸ் குணவர்த்தனவைச் சந்திப்பதற்காக யாழ்ப்பாணத்தின் ராணுவ புலநாய்வுத்துறையின் தளபதி மேஜர் சரத் முனசிங்க காத்துநின்றார். வாஸ் அங்கு வந்து சேர்ந்ததும், செல்லக்கிளி தலைமையில் ராணுவ ரோந்து அணிமீது யாழ்ப்பாணத்தில், நள்ளிரவிற்குச் சற்றுப்பின் தாக்குதல் ஒன்றை நடத்த புலிகள் தயாராகி வருவதாக தனக்குச் செய்தி கிடைத்திருப்பதாக அவர் கூறினார். புலிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் ஒன்றினைக் கொடுக்க முனசிங்க முடிவெடுத்தார். அதன்படி தன்னுடன் கொமாண்டோ அணியொன்றினை அழைத்துக்கொண்டு யாழ்நகரை ரோந்து சுற்றிவர அவர் தீர்மானித்தார். ஆகவே, வாஸ் குணவர்த்தனவின் ரோந்து அணி வழமைக்கு மாறாகா நள்ளிரவுக்கு முன்னரே யாழ்நகர எல்லையைத் தாண்டிச் சென்றுவிட வேண்டும் என்று அவர் பணித்தார்.
1983 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியிலேயே ராணுவத்தினரும் பொலீஸாரும் இணைந்து பலமான புலநாய்வுக் கட்டமைப்பொன்றினை யாழ்ப்பாணத்தில் உருவாக்கியிருந்தனர். யாழ் குருநகர் இராணுவ முகாமிலிருந்து இயங்கிவந்த இந்த கூட்டுப் புலநாய்வு அணியினர், போராளி இயக்கங்களிலிருந்து கழன்று வீழ்ந்தவர்களை பணத்தாசை காட்டி தம்முடன் இணைத்துக்கொண்டனர். 1982 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திக்கம் பகுதியில் நிறைபோதையில் தடுமாறிக்கொண்டு நின்ற இளைஞர் ஒருவரை முனசிங்க பிடித்துவந்து குருநகர் முகாமில் அடைத்து வைத்திருந்தார். விசாரணைகளின்போது அந்த இளைஞர் முன்னர் புலிகள் அமைப்பில் இணைந்து இயங்கிவந்தவர் என்றும் பின்னர் இயக்கத்திலிருந்து கழன்று வந்திருந்தார் என்பதும் தெரியவந்தது.புலிகளின் மூத்த உறுப்பினர்கள், அவர்களின் குடும்பங்கள், அவர்கள் வசித்துவந்த வீடுகள் பற்றிய பல விடயங்களை அவர் அறிந்துவைத்திருந்தார். பிரபாகரன், ராகவன், ராஜன், பேபி சுப்பிரமணியம், ரகு, சங்கர் , பண்டிதர் ஆகியவர்களை அந்த இளைஞர் நன்றாக அறிந்துவைத்திருந்தார்.
அந்த இளைஞரின் பலவீனங்களான மதுபானம் மற்றும் பணம் ஆகியவற்றினைக் கொடுத்து தமது நலன்களுக்காக அவரை இராணுவப் புலநாய்வுத்துறையினர் பாவிக்கத் தொடங்கினர். புலநாய்வுத்துறையால் அவருக்கு "சேவியர்" என்கிற பெயரும் வழங்கப்பட்டது. சீலனின் உடலை யாழ் வைத்தியசாலையில் அடையாளம் காட்டியவரும் அவரே. ஆடி 23 ஆம் திகதி இராணுவ ரோந்து அணிமீது செல்லக்கிளி தலைமையில் புலிகள் தாக்குதல் ஒன்றினை நடத்தப்போகிறார்கள் என்கிற தகவலை இராணுவத்தினருக்கு வழங்கியவரும் இதே சேவியர்தான். முனசிங்கவின் தேடுதல் வேட்டைகளின்போது அவருக்கு உதவியாக இருந்த சேவியர், புலிகளின் முக்கியஸ்த்தர்களின் வீடுகளையும் ராணுவத்தினருக்குத் தொடர்ச்சியாகக் காட்டிக் கொடுத்து வந்தார்.
புலிகளால் நடத்தப்படவிருப்பதாக தான் அறிந்துகொண்ட தாக்குதல் குறித்து வாஸிடம் கூறிவிட்டு, அவரைத் தன்னுடன் மதுபானம் ஒன்றினை அருந்த வருமாறு முனசிங்க அழைத்தார்.
"மதுபானம் அருந்துவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்கிற கேள்வியுடன் வாஸ் குணவர்த்தனவை அழைத்தார் முனசிங்க.
"இல்லை, வேண்டாம். நான் இரவு உணவை உட்கொண்டுவிட்டு உடனடியாக மாதகல் முகாம் நோக்கிப் புறப்பட வேண்டும்" என்று வாஸ் பதிலளித்தார்.
பின்னர் வாஸும் அவரது ராணுவ அணியினரும் அவசர அவசரமாக தமது இரவுணவினை குருநகர் முகாமில் முடித்துக்கொண்டனர். பின்னர் முனசிங்கவைப் பார்ப்பதற்காக அவரது அறைக்குச் சென்றார் வாஸ் குணவர்த்தன. தன்னுடன் வைத்திருந்த பிறிஸ்ட்டல் சிகரெட் ஒன்றினை முனசிங்கவிடம் கொடுத்து, அதனைப் பற்றவைத்துவிட்டார் வாஸ். தானும் ஒரு சிகரெட்டினை புகைத்துக்கொண்டே முனசிங்கவுக்கு, "இரவு வணக்கங்கள்" என்று கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றார்.
தான் பயணிக்கும் ஜீப் வண்டியில் வாஸ் ஏறிக்கொள்ள மேலும் இரண்டு இராணுவ வீரர்கள் ஜீப்பின் பின் இருக்கைகளில் ஏறி அமர்ந்துகொண்டனர். ஜீப்பை இராணுவச் சாரதி மானதுங்க ஓட்டிச் சென்றார். பின்னால் வந்த இராணுவ ட்ரக்கில் பத்து இராணுவ வீரர்கள் ஏறிக்கொண்டனர். ட்ரக்கினை இராணுவக் கோப்ரல் பெரேரா ஓட்டிவந்தார். குருநகர் முகாமிலிருந்து கிளம்பிய இந்த ரோந்து அணி யாழ்நகர சந்தைப்பகுதியூடாக மெதுவாக ஊர்ந்து சென்று நாகவிகாரையினை அடைந்ததும் சில நிமிடங்கள் அங்கு தரித்து நின்றுவிட்டு பின்னர் நல்லூர், கோப்பாயூடாக உரும்பிராய் நோக்கித் தனது ரோந்தினை ஆரம்பித்தது. உரும்பிராயை அடைந்ததும், வாஸ் குணவர்த்தன குருநகர் முகாமுடன் தொடர்புகொண்டு தனது அறிக்கையினைத் தாக்கல் செய்தார்.
"நான்கு நான்கு பிராவோ" என்று ஆரம்பித்த அவரது அறிக்கை, "எல்லாம் சாதாரணமாகவே இருக்கிறது. அமைதியாகக் காணப்படுகிறது. நாங்கள் எமது முகாம் நோக்கிச் செல்கிறோம்" என்று கூறியது.
அதன்பின்னர் தனது வழமையான முகாம் திரும்பும் பாதையான கோண்டாவில், கொக்குவில், திருநெல்வேலி பின்னர் மாதகல் எனும் ஒழுங்கில் தனது முகாம் நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது.
மளிகைக்கடையின் கூரையின் மேல் பதுங்கியிருந்த செல்லக்கிளியும் விக்டரும் வீதியை மிகுந்த அவதானத்துடன் பார்த்துக்கொண்டு நின்றனர். தூரத்தில் வந்துகொண்டிருக்கும் ராணுவ வாகனங்களின் இரைச்சலினை அவர்களால் கேட்க முடிந்தது. சிறிது நேரத்தின் ராணுவ வாகனங்களின் மின்விளக்குகளை அவர்களால் பார்க்க முடிந்தது. செல்லக்கிளி கண்ணிவெடியை இயக்குகம் கருவியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையில் இருந்து சீலன் எடுத்துவந்த நான்கு கண்ணிவெடி இயக்கிகளில் ஒன்றையே செல்லக்கிளி அன்று தன்னுடன் வைத்திருந்தார். சீலன் இறுதியாகப் பங்குபற்றிய தீரமான சம்பவமும் காங்கேசந்துறைச் சீமேந்துத் தொழிற்சாலையிலிருந்து கண்ணிவெடிகளைக் கைப்பற்றிச் சென்றதுதான். சீலன் அன்று எடுத்துவந்திருந்த கண்ணிவெடிகளைப் பாவித்தே சீலனின் மரணத்திற்கான பழிவாங்கலை புலிகள் செய்ய முடிவெடுத்திருந்தனர்.
தமது தாக்குதலை ஆரம்பிப்பதற்கு அழைப்பு விடுக்கும் மெல்லிய விசில் சத்தத்தை அவர்கள் கேட்டார்கள்.
கண்ணிவெடியின் இயக்கியை செல்லக்கிளி அழுத்தினார். இரண்டு கண்ணிவெடிகளும் ஒரேநேரத்தில் வெடித்தன. மிகப் பலத்த சத்ததுடன் அவை முளங்கின. சுமார் மூன்று நான்கு கிலோமீட்டர்கள் தொலைவிலிருந்தவர்களும் அந்த வெடியோசையை அன்றிரவு கேட்டார்கள். குருநகர் முகாமிலிருந்த ராணுவத்தினரும் அந்த வெடியோசையினை மிகத் தெளிவாகக் கேட்டனர்.
முதலாவது கண்ணிவெடி, ஜீப் வண்டி அதன் மேலாகச் செல்லும்போது வெடித்தது. மேலே தூக்கியெறியப்பட்ட ஜீப் வண்டி வீதியின் ஓரத்தில் நொறுங்கி வீழ்ந்தது. இத்தாக்குதல் குறித்து பின்னாட்களில் தமிழ் இதழான தேவியில் பேட்டியளித்த கிட்டு, வெடிப்பின்போது ஜீப் வண்டி ஒரு தென்னைமரத்தின் உயரத்திற்கு மேலே தூக்கி வீசப்பட்டதாகக் கூறியிருந்தார். இரண்டாவது கண்ணிவெடி, ட்ரக் வண்டியிலிருந்து ஒரு சில மீட்டர் தூரத்தில், வண்டியின் முன்னால் வெடித்தது. உடனடியாக ட்ரக் வண்டியை நிறுத்திய சாரதி, கண்ணிவெடியால் உருவாக்கப்பட்ட பள்ளத்தில் அது வீழ்வதிலிருந்து தவிர்த்துக்கொண்டார். இரண்டு வெடிப்புக்களும் வீதியில் பாரிய பள்ளங்களை ஏற்படுத்தியிருந்தன.
ஜீப்பில் பயணம் செய்து வந்த அனைவருமே அதிலிருந்து தூக்கி வீசப்பட்டிருந்தனர். சாரதி மானதுங்கவின் சடலம் வண்டியின் சாரதி இருக்கைக்கு அருகில் வீழ்ந்து கிடந்தது. அதிகாரி வாஸ் குணவர்த்தனவின் உடல் வீதியிலிருந்து சில மீட்டர்கள் தூரத்தில் தூக்கி வீசப்பட்டுக் கிடந்தது. பின்னால் இருந்துவந்த இரு ராணுவ வீரர்களினதும் உடல்களும் வாகனத்தின் பிற்பகுதியில் சிதைந்த நிலையில் காணப்பட்டன. அவர்களது மரணங்கள் வெடிக்கும்போதே நிகழ்ந்துவிட்டன.
பின்னர் பிரபாகரனும் ஏனைய போராளிகளும் ட்ரக்கில் இருந்த ராணுவத்தினர் மீது வீதியின் இரண்டு பக்கத்திலிருந்தும் சரமாரியாகச் சுடத் தொடங்கினர். ட்ரக்கிலிருந்து வெளியே குதித்துத் தப்பிக்க முயன்ற பல ராணுவத்தினர் சூடுபட்டு இறந்து வீழ்ந்தனர்.
யாழ் மாவட்டத் தளபதி பிரிகேடியர் லைல் பல்த்தசாரும், மேஜர் முனசிங்கவும் வெடியோசையினைக் கேட்டனர். இதுகுறித்து பின்னாட்களில் என்னுடன் பேசிய முனசிங்க பின்வருமாறு கூறினார்,
"நான் எனது இரவுணவை முடித்துக்கொண்டு எனது அறைக்குச் சென்றேன். உணவு உட்கொள்ளும் மண்டபத்திலிருந்து மிக அருகிலேயே எனது அறை இருந்தது. நான் தூங்குவதற்காக கட்டிலில் அமரும்போது அந்த பாரிய வெடியோசையினைக் கேட்டேன். நல்லூர் கோயில் இருக்கும் திசையிலிருந்தே அந்த வெடியோசை கேட்டது. அப்போது இரவு 11:20 ஆகியிருக்கும். நான் அவசர அவசரமாகக் கட்டிலில் இருந்து எழுந்துகொண்டேன். எனது அறையின் யன்னலில் தட்டி உடனடியாக என்னை வெளியில் வருமாறு தளபதி பல்த்தசார் அழைத்தார். நாங்கள் இருவரும் ரேடியோ அறைக்கு ஓடிச் சென்றோம். ரோந்தில் ஈடுபட்டிருந்த ராணுவ அணியுடன் தொடர்பினை ஏற்படுத்த நாம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. அப்பக்கத்திலிருந்து எவருமே எமது அழைப்புக்களுக்குப் பதிலளிக்கவில்லை".
"புலிகளுக்கெதிரான நள்ளிரவு நடவடிக்கை ஒன்றிற்காக நாம் தயார்ப்படுத்தி வைத்திருந்த ஜீப் வண்டியொன்றில் நாம் ஏறிக்கொண்டோம். நான் அதனை ஓட்டிச் செல்ல, பல்த்தசார் எனக்கருகில் தாவி ஏறிக்கொண்டார். சில கொமாண்டொ வீரர்களும் எமது ஜீப்பின் பின்புறத்தில் ஏறிக்கொண்டார்கள். எம்மைப் பின்தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று இராணுவ வாகனங்களும் அவற்றின் பின்னால் உயர் பொலீஸ் அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு ஜீப் ரக வாகனமும் விரைந்து வந்துகொண்டிருந்தன. யாழ்ப்பாணம் பலாலி வீதியில் நான் அசுர கதியில் எனது ஜீப்பைச் செலுத்திக்கொண்டு போனேன். திருநெல்வேலிச் சந்தியை அண்மிக்கும்போது ராணுவ ஜீப்வண்டியொன்று ஒரு பக்கமாக வீழ்ந்த நிலையில் நொறுங்கிப் போயிருந்ததை நான் கண்டேன்" என்று கூறினார்.