தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியைக் குழிதோண்டிப் புதைத்தல்
யாழ்ப்பாணத்தில் ஆடி 25 ஆம் திகதி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினால் நடத்தப்பட்ட சத்தியாக்கிரக நிகழ்வு பற்றிய செய்தி லேக் ஹவுஸ் நிறுவனத்திற்குக் கிடைத்தபோது அங்கிருந்தோர் அனைவரும் மிகவும் அகமகிழ்ந்தனர். பின்னர் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிக்கைகள் ஊடாக இச்செய்தி சிங்கள மக்களிடையே பரவியபோது அந்த மகிழ்ச்சி அவர்களையும் பற்றிக்கொண்டது.
இச்செய்தி வெளிவந்தபோது வாராந்த பத்திரிக்கையாளர் கூட்டத்திற்காக தகவல்த் திணைக்களத்திற்குச் சென்றிருந்தேன். அமைச்சரவைப் பேச்சாளரும், அரசாங்க அமைச்சருமான ஆனந்த திஸ்ஸ தி அல்விஸ் மிகுந்த அக்களிப்புடன் இச்செய்தியைப் பகிர்ந்துகொண்டார். "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் காலம் முடிவடைந்துவிட்டது" என்று அவர் கூறினார். "இந்தச் சூழ்நிலையில் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பேசுவதில் என்ன பயன் இருக்கப்போகிறது என்கிற கேள்வியும் எழுகிறது" என்று அவர் மேலும் கூறினார்.
டெயிலி நியூஸ் பத்திரிகைக்காக சத்தியாக்கிரகம் தொடர்பான செய்தியை நான் எழுதினேன். ஆனந்த திஸ்ஸ தி அல்விஸின் கேள்வியைத் தலைப்பாக இட்டு நான் எழுதிய கட்டுரையில் யாழ்ப்பாணத்திலிருந்து எமது நிருபர்கள் தொலைபேசியூடாக தொடர்ச்சியாக வழங்கிவந்த உடனடிச் செய்திகளையும் கோர்த்து எழுதினேன். "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாதை முடிந்துவிட்டது" என்கிற தலைப்பில் அச்செய்தி வெளியாகியிருந்தது.
லலித் அதுலத் முதலி உடனடியாக செயலில் இறங்கினார். டெயிலி நியுஸ் மற்றும் சண் பத்திரிக்கைகளில் அவர் ஒரு செய்தியை விதைத்தார். " தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் இனிமேல் சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றுவதன் மூலம் என்ன பலன் இருக்கப்போகிறது என்று தம்மை அடையாளம் காட்ட விரும்பாத அரச தரப்புத் தகவல்கள் கருத்துத் தெரிவிக்கின்றன" என்பதே அவர் விதைத்த செய்தி. அப்படியானால், அவர்கள் யாரைத்தான் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்? என்கிற கேள்வியையும் அச்செய்தி கேட்டிருந்தது.
தலைப்புச் செய்தியாக தாம் இட்டதையே ஆசிரியர்த் தலையங்கமாகவும் சண், டெயிலிநியூஸ் உட்பட்ட ஆங்கில மற்றும் சிங்களப் பத்திரிக்கைகள் வெளியிட்டிருந்தன. இந்தச் செய்திகள், குறிப்புக்கள், தலையங்கங்கள் அனைத்தினதும் நோக்கம் ஒன்றுதான். அதுதான் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினை குழி தோண்டிப் புதைத்து விடுவது. தமிழர்களே அக்கட்சியை நிராகரித்துவிட்டார்கள். சிங்கள மக்கள் அதனைத் தூக்கிச் சுமக்கவேண்டிய தேவை என்ன? ஆகவே புதைத்துவிடலாம் என்பதே அவர்களின் செய்தி.
முன்னணியினரின் நம்பகத்தன்மையினைக் கேள்விகேட்கும் முடிவு ஜெயவர்த்தனவினாலேயே எடுக்கப்பட்டது. இந்த முடிவினை அவர் எடுப்பதற்கான காரணம் இந்தியாவும் சர்வதேசமும் முன்னணியினருடன் பேசுவதனூடாக தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றினைக் காணுமாறு அவர் தலைமையிலான அரசாங்கத்தின் மீது கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து வந்திருந்தன. மேலும், தில்லியில் செய்துகொள்ளப்பட்ட இணக்கப்பாடான இணைப்பு "சி" இற்கு அமைவாகவே தீர்வு அமையவேண்டும் என்று முன்னணியினரும் தொடர்ச்சியாக் கோரிவந்திருந்தனர். ஆனால், இணைப்பு "சி" இன் அடிப்படையில் ஓரளவிற்கேனும் அதிகாரங்களைத் தமிழர்களுக்கு வழங்குவதை அரசாங்கம் சிறிதும் விரும்பவில்லை. ஆகவேதான், இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அரசாங்கம், முன்னணியினரைத் தமிழர்களே நிராகரித்து விட்டதனால், அவர்களுடன் தொடர்ந்து பேசுவதில் என்ன பயன் இருக்கப்போகிறது எனும் கேள்வியை முன்வைக்கத் தொடங்கியது.
ஆனாலும், தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு யாருடன் அரசாங்கம் இனிமேல் பேசப்போகிறது எனும் கேள்வி தொடர்ந்தது. இதற்கான ஜெயவர்த்தனவின் பதில், "அரசாங்கம் யாருடனும் பேச வேண்டிய தேவையில்லை, எதற்காகப் பேசவேண்டும்?" என்பதாக இருந்தது.
யாழ்ப்பாணத்தில் முன்னணியினரால் நடத்தப்பட்ட சத்தியாக்கிரக நிகழ்வு தோல்வியில் முடிவடைந்தமை அக்கட்சியினைத் தமிழர்கள் நிராகரித்துவிட்டார்கள் என்பதனையே காட்டியது. மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யாமல், தம்மை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சியோடு பேச்சுக்களில் ஈடுபடுவதில பயன் ஏதும் இருக்கப்போவதில்லை என்பது உண்மைதான். ஆனால், சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாத இலட்சியமான ஈழம் எனும் தனிநாட்டிற்காகப் போராடிவரும் ஆயுதம் ஏந்திய போராளிகளுடன் பேசவேண்டிய தேவை இருக்கிறது. ஆனாலும், சுய கெளரவம் கொண்ட எந்த அரசும் பயங்கரவாதிகளுடன் பேசாது என்பதும் திண்ணம்.
அப்படியானால் நடக்கப்போவது என்ன? தமிழர்களுடன் சமரசப் பேச்சுக்களில் ஈடுபடுங்கள் என்று சர்வதேசம் கொடுத்துவரும் அழுத்தங்கள் இனிமேல் செயல் இழக்கப்போகின்றன. குறிப்பாக இந்தியாவினால் இராஜதந்திர ரீதியில் இதுவரை கொடுக்கப்பட்ட அழுத்தங்களுக்கான அடிப்படை இனிமேல் இருக்கப்போவதில்லை.
அரசியல் ரீதியிலான இணக்கப்பாடு ஒன்றிற்கான அழுத்தங்கள் இனிமேல் இல்லாது போகுமிடத்து அரசாங்கம் செய்யவேண்டியதெல்லாம் தமிழர்களின் கவலைகளைப் போக்குவது மட்டும்தான் என்கிற ரீதியில் அரசதரப்பிலிருந்து நியாயங்கள் பேசப்பட்டு வந்தன. அதனையே ஜெயவர்த்தனவும் செய்ய முடிவெடுத்தார். மேலும், பயங்கரவாதத்தினை அழிக்கிறேன் என்கிற போர்வையில் தமிழரின் விடுதலைக்கான ஆயுத ரீதியிலான போராட்டத்தையும் முற்றாக தன்னால் அழித்துவிடமுடியும் என்றும் அவர் உறுதிபூண்டார்.
பேச்சுவார்த்தையிலிருந்து போர்க்களத்திற்கு களம் மாற்றப்பட்டிருப்பதற்கான நியாயப்படுத்தல்கள் இவ்வாறு அமைந்திருந்தன. பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவந்த அரசியல் அமைப்பொன்றினை முற்றாக நிராகரித்திருக்கும் ஒரு சமூகத்துடன் எப்படி தொடர்ந்தும் பேச்சுக்களில் ஈடுபட முடியும்? அச்சமூகம் ஜனநாயக அரசியலைக் கைவிட்டு போராளிகளுக்கு தமது விசுவாசத்தை தற்போது காட்ட ஆரம்பித்திருக்கிறது. ஆனால், போராளிகளோ ஆயுதத்தின் மூலமாக மட்டுமே பேசலாம் என்கிற முடிவில் இருக்கிறார்கள். ஆகவே, அவர்களுடன் ஆயுத மூலமாகப் பேசுவதைத் தவிர அரசாங்கமான எமக்கும் வேறு தெரிவுகள் இல்லை என்பதே அந்த நியாயப்படுத்தல்களின் சாராம்சம்.
ஜெயவர்த்தனவின் போருக்கான நியாயப்படுத்தலை அனைத்துச் சிங்கள ஊடகங்களும் பிரதிபலித்ததோடு அதற்கான முழு ஆதரவினையும் வழங்கத் தொடங்கின. ஆனால், ஒற்றைச் சிங்கள ஊடகவியலாளரான லங்கா கார்டியனின் மேர்வின் டி சில்வா மட்டும் இதனால் வரப்போகும் ஆபத்தினை உணர்ந்திருந்தார். தனது செய்தி ஆய்வில், "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைப் புதைத்தது யார்?" என்கிற தலைப்பில் 1984 ஆம் ஆண்டு ஆவணி 1 ஆம் திகதி கட்டுரை ஒன்றை அவர் வரைந்தார். "இது ஒரு தூரநோக்கற்ற, முட்டாள்த்தனமான நடவடிக்கை" என்று அதனைக் குறிப்பிட்டார்.
முன்னணியினரின் அரசியலைப் புதைப்பதன் ஊடாக ஜெயாரும் அவரது ஆலோசகர்களும் வெறுமனே அக்கட்சியை மட்டும் புதைக்கவில்லை, மாறாக வன்முறையற்ற - ஜனநாயக வழி இணக்கப்பட்டிற்கான வழியையும் முற்றாகவே புதைத்துவிட்டார்கள் என்று அவர் எச்சரித்தார். "முன்னணியினரைத் தனிமைப்படுத்தி ஒதுக்கிவிடும் கைங்கரியம் முற்றுப்பெற்றுவிட்டது. ஆனால் யாரின் இலாபத்திற்காக இது செய்யப்பட்டது? யாரின் திட்டமிடலின் கீழ் இது செய்யப்பட்டது? சரித்திரமே இதற்கான பதிலை வழங்கட்டும்" என்று தனது செய்தி ஆய்வினை அவர் முடித்திருந்தார்.
சரித்திரம் அதற்கான பதிலை வழங்கியது. மேர்வின் எதிர்வுகூறியது போன்றே தமிழ்ப் போராளிகள் இதனால் இலாபமடைந்தார்கள். மிகச் சிறந்த அரசியல் அவதானியாகவும், இராணுவ திட்டமிடலாளராகவும் வளர்ந்துவிட்டிருந்த பிரபாகரன் தனது அமைப்பிற்காக ஜெயார் உருவாக்கித் தந்திருந்த இந்த அரிய சந்தர்ப்பத்தினை தனக்குச் சாதகமான முறையில் பயன்படுத்திக்கொண்டார்.
மேர்வின் டி சில்வாவின் எச்சரிக்கையினைச் சற்றேனும் சட்டைசெய்திராத ஜெயவர்த்தன, தனது தூரநோக்கற்ற அரசியல் முன்னெடுப்பில் முற்றாகக் காலெடுத்துவைத்தார். அவரைச் சுற்றி துதிபாடும் குழு ஒன்றிருந்தது. அதுலத் முதலி, ஆனந்த திஸ்ஸ தி அல்விஸ் மற்றும் காமிணி திஸாநாயக்க என்று அக்குழு அவர் செய்யும் விடயங்களைத் தொடர்ச்சியாக ஆதரித்து, முண்டுகொடுத்து வந்தது. அன்றிலிருந்து சர்வகட்சி மாநாடு என்பது தமிழரின் கவலைகளுக்கு தீர்வு வழங்குவோம் என்கிற போர்வையில், நடைமுறையில் இருந்துவந்த அரசியல் பொறிமுறைக்கான மெருகூட்டலினை மட்டுமே செய்யத் தொடங்கியது. ஜெயாரினால் அமைக்கப்பட்ட இரு குழுக்களும் வெறுமனே இந்த நோக்கத்திற்காக அவரால் பாவிக்கப்பட்டன.