Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    9977
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    88779
    Posts
  3. island

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    1824
    Posts
  4. putthan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    14698
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/10/24 in Posts

  1. பொருநைக் கரையினிலே - 1 - சுப.சோமசுந்தரம் காவ்யா பதிப்பக நிறுவனர் பேரா.சு.சண்முகசுந்தரம் அவர்கள் தமது புதினங்களான பொருநை, கூவம் இவற்றில் முறையே தமது நெல்லை, சென்னை வாழ்க்கையினைச் சொல்லோவியமாய் வரைந்துள்ளார். இத்தலைப்புகளால் ஈர்க்கப்பட்ட அடியேன், "என் வாழ்க்கையைச் சித்தரிக்கப் பெரிதாக ஏதுமில்லையெனினும், பொருநைக் கரையிலேயே அநேகமாக வாழ்நாள் முழுதும் கழிக்கும், களிக்கும் பேறு பெற்ற நான் இங்கு கற்றதையும் பெற்றதையும் குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாய் அல்லது கட்டுரைத் தொடராய்ப் பதிவு செய்யலாமே என எண்ணியதன் வெளிப்பாடே இந்த என் எழுத்து. அக்காலத்தில் (ஓரளவு இக்காலத்திலும்) தலைப்பிள்ளை தாயாரின் ஊரில் பிறக்க வேண்டும் என்ற வழக்கத்தின்படி நான் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணிக் (பொருநை) கரையிலுள்ள அரியநாயகிபுரம் எனும் அழகிய கிராமத்தில் பிறவி எடுக்கும் பேறு பெற்றேன். பிறந்த ஊர் என்பதும் பள்ளிப் பருவத்தில் நீண்ட விடுமுறை நாட்களில் அங்கிருந்த ஆச்சி - தாத்தா வீட்டிற்குச் செல்வேன் என்பதுமே எனக்கும் அந்த கிராமத்துக்குமான தொடர்பு. மற்றபடி எனது தந்தையாரின் ஊரான பாளையங்கோட்டையே நான் வளர்ந்த, வாழ்ந்த ஊர். அதுவும் பொருநையின் கரையில் அமைந்த ஊர் என்பது எனக்கான பெரும்பேறு. தந்தையார் நெல்லை மாவட்டத்தில் அரசுப்பணியில் இருந்ததால், எனது சிறார் பருவத்தில் அவர்கள் வேலை பார்த்த கிராமத்தில் ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். செய்தி அறிந்த என் ஆச்சி (இந்த ஆச்சி என் அப்பாவின் தாயார்) உடனே அங்கு வந்து, "எங்கெங்கெல்லாமோ இருந்து நம்ம ஊரைத் தேடி வந்து பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். நீ என்ன இந்தப் பட்டிக்காட்டில் (!!) பிள்ளையைச் சேர்த்து இருக்கிறாய் ?" என்று என் அப்பாவைக் கடிந்து, என்னைப் பாளையங்கோட்டையில் படிக்க வைக்கத் தூக்கி வந்து விட்டாள். திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியதும் மேற்கொண்டு அன்று பேருந்து எதுவும் ஓடாது என்றதும் (அப்போதுதான் பிரதமர் நேரு இறந்த செய்தி வெளிவந்திருந்தது), என்னைத் தூக்கிக்கொண்டு சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாளை வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தாள். வரும்போது பாலத்தில் நின்றபடி எனக்குத் தாமிரபரணியைக் காண்பித்தாள். என் வாழ்க்கையில் விவரம் தெரிந்து நான் முதன் முதலில் பொருநையைக் கண்ணுற்ற தருணம் அது. நாங்கள் நின்ற அந்தப் பாலம் வரலாற்றுப் புகழ்பெற்ற சுலோச்சன முதலியார் பாலம் என்பதெல்லாம் பின்னர் என் ஆச்சி கதையாகக் கூறியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஓரளவு இறுதியில் கட்டப்பட்டது இந்தப் பாலம். அதற்கு முன் பொருநையாற்றின் கிழக்கில் உள்ள பாளையங்கோட்டைக்கும் மேற்கில் உள்ள திருநெல்வேலிக்கும் இடையே போக்குவரத்து, பரிசல் மூலமாகவே நடைபெற்று வந்துள்ளது. பரிசலில் இடம் கிடைக்க அவற்றை இயக்குவோருக்குக் கையூட்டு தரவேண்டிய சூழல் நிலவியபோது, பரிசல் குழாமில் அடிக்கடி தகராறுகளும் வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்று வந்துள்ளன. எனவே மாவட்ட ஆட்சியரின் பல பரிந்துரைகளுக்குப் பின் அங்கு ஒரு பாலம் அமைக்க ஆங்கில அரசால் ஒத்துக் கொள்ளப்பட்டது. எனினும் அதற்குரிய திட்டச் செலவான ஐம்பதாயிரம் ரூபாயை அதன் பயனாளிகளான மக்களிடமே நன்கொடையாகப் பெறத் திட்டமிடப்பட்டது. தங்களுக்குப் பெரிதும் பயனில்லாத திட்டங்களுக்கு ஆங்கிலேய அரசு (அன்றைய கம்பெனி அரசு) வரி வருவாயில் இருந்து செலவு செய்வதில்லை. அக்காலத்தில் செல்வந்தரும் நல்லுள்ளம் படைத்தவருமான திரு. சுலோச்சன முதலியார், அவருக்குக் கௌரவப் பதவியாக அளிக்கப்பட்டிருந்த சிரஸ்தார் பொறுப்பில் இருந்தார். மக்களிடம் நன்கொடை பெற்றுப் பாலம் கட்டும் பொறுப்பை அவரிடமே அளித்தது கம்பெனி அரசு. செல்வந்தரான அவர் பிறரிடம் நன்கொடை கேட்பதில் ஏற்பட்ட தயக்கத்தின் காரணமாகத் தமது சொந்தச் செலவிலேயே பாலம் கட்டித் தரத் தீர்மானித்தார். சில சொத்துக்களை விற்றது போக எஞ்சிய தொகைக்குத் தமது துணைவியாரின் இசைவுடன் அவர்தம் நகைகளையும் விற்றுக் கட்டினார். லண்டனில் தேம்ஸ் நதியின் மீது உள்ள 'வெஸ்ட் மினிஸ்டர்' பாலத்தின் மாதிரியில் கட்டப்பட்டது இப்பாலம். பின்னர் இயல்பாக சுலோச்சன முதலியார் பெயராலேயே இப்பாலம் வழங்கலாயிற்று. இப்பாலத்தையொட்டிய ஆற்றுப்பகுதியில் நான் கண்டவையும் கேட்டவையும் படித்தவையும் சில எப்போதும் நெஞ்சில் நிழலாடுகின்றன. பாலத்திலிருந்து பார்த்தால் தெரிகிறதே தைப்பூச மண்டபம் ! 1908 ல் 'திருநெல்வேலி எழுச்சி' எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க, மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்திற்குச் சில நாட்கள் முன்பு வங்காளப் புரட்சியாளர் விபின் சந்திரபாலின் விடுதலையைக் கொண்டாடும் வகையில் வ.உ.சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும் ஆங்கில ஆட்சியரின் தடையை மீறி இதே தைப்பூச மண்டபத்தில் வீர எழுச்சியுரை நிகழ்த்தினர் என்பது தோழர் இரா.வேங்கடாசலபதியின் 'திருநெல்வேலி எழுச்சி'யில் வாசித்து அறிந்தது. நெல்லை சந்திப்பில் அப்போது செயல்பட்ட ம.தி.தா. இந்துக் கல்லூரி வளாகத்தில் ஆரம்பித்த ஊர்வலம் தபால் நிலையம், நகராட்சி வளாகம் போன்றவற்றைத் தீக்கிரையாக்கிய திருநெல்வேலி எழுச்சியும், அதைத்தொடர்ந்து ஆங்கிலேயரின் அடக்கு முறையும் வாசித்து அறிந்தவை. நெல்லைக்காரனாக என்னைத் தலைநிமிரச் செய்பவை. 1970 களின் ஆரம்பத்தில் தூய சவேரியார் கல்லூரிப் பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் காவல்துறையினரால் அநியாயமாகத் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட பெருங் கொந்தளிப்பில் மாணவர் லூர்துநாதன் காவல்துறையின் தடியடிக்குப் பலியானது சுலோச்சன முதலியார் பாலத்திற்குக் கீழேதான். லூர்துநாதனை ஆற்றில் இருந்து மக்கள் தூக்கிய காட்சியை ஒரு பள்ளி மாணவனாக நான் பார்த்தது நேற்று நடந்தது போல் தோன்றுகிறது. 1999 ல் கூலி உயர்வு உட்பட நியாயமான காரணங்களுக்காகப் போராடிய மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் காவல்துறையால் ஓட ஓட விரட்டப்பட்டதும், உயிரைக் காத்துக் கொள்ள ஆற்றில் இறங்கியவர்களையும் விடாமல் அடித்ததில் பெண்கள், கைக்குழந்தை உட்பட பதினேழு பேர் உயிர்நீத்ததும் பொருநைக் கரைக்கு ஏற்பட்ட நீங்காத கறை. முதலாளிகளுக்குச் சேவகம் செய்வதில் ஜனநாயக (!) அரசுகள் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல போலும் ! தினமும் பாலத்தைக் கடந்து அலுவலகம் செல்லுகையில் இரத்தவாடை அடிக்கிறதே, அது என் போன்றோர்க்கு ஏற்பட்ட மனநல பாதிப்போ ! 1992 லும் தற்போது 2024 லும் பாலத்தை மூழ்கடித்துப் பொருநை ஆடிய கோரத்தாண்டவமும் மக்களுக்கு ஏற்பட்ட பெருஞ்சேதமும் என்றென்றும் நெஞ்சைப் பதற வைப்பவை. சுலோச்சன முதலியார் பாலத்தைக் காட்டிய ஆச்சி அதனைக் கடந்து சிறியதொரு பாலத்தின் கீழே ஓடுகிற ஒரு ஓடையைக் காட்டினாள். அதன் பெயர் 'பிள்ளையைப் போட்டுப் பலாப்பழம் எடுத்த ஓடை' என்றாள். பிற்காலத்தில் சுருக்கமாக 'பலாப்பழ ஓடை' என்றாகி தற்போது யாருக்கும் பெயரே தெரியாத ஓடையாகி விட்டது. ஒன்பதாம் நூற்றாண்டின் நடுவில் நிகழ்ந்ததாக ஒரு கதை சொன்னாள். அந்த ஓடையில் மிதந்து வந்த ஒரு பெரிய பலாப்பழத்தை எடுக்க ஆசைப்பட்ட தாய் ஒருத்தி தனது குழந்தையைக் கரையில் விட்டு விட்டுப் பலாப்பழத்தை விரட்டிச் சென்றிருக்கிறாள். குழந்தை மெதுவாகத் தவழ்ந்து ஆற்றில் மூழ்கி விட்டது. எனவே அந்த ஓடைப்பாலத்திற்கு அப்பெயர். இப்படி எத்தனையோ கதைகள் ஊரைச் சேர்ந்த பலர் சொல்வதால் அவற்றில் சில ஓரளவு உண்மையாய் இருக்க வேண்டும். எது எப்படியோ சில செவிவழிக் கதைகள் சுவாரஸ்யமானவை. பழைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் புகழ்பெற்ற தாமிர சபையான நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயில், சித்திர சபையான குற்றாலநாதர் - குழல்வாய்மொழி அம்மை திருக்கோயில், நவ திருப்பதி, நவகைலாய திருத்தலங்கள், குற்றாலம் மற்றும் பாபநாச நீர்வீழ்ச்சிகள், திருநெல்வேலி அல்வா, பத்தமடைப் பாய் என நெல்லையின் சிறப்புகள் எண்ணிலடங்கா. ஐவகை நிலங்களையும் தன்னகத்தே கொண்டது நான் சிறுவனாய்ப் பார்த்த பழைய திருநெல்வேலி மாவட்டம். இவையெல்லாம் பெரும்பாலும் அனைவரும் அறிந்தமையின், வெகுசனம் அறியாத சிலவற்றைத் தொட்டுச் செல்வது இங்கு பொருந்தி அமைவது. நானே கண்டுணர்ந்த எனது எண்ணவோட்டத்தைப் பகிர்ந்து அளித்தல் அதுவேயாம். இன்றைய பாளையங்கோட்டை நகரின் நடுப்பகுதிக்கு மேற்கே 'மேலக்கோட்டை வாசல்' உள்ளது. அதன் மேல் தளத்தில் 'மேடைப் போலீஸ் ஸ்டேஷன்' இருந்தது. இப்போது காவல்துறை சார்ந்த தகவல் கட்டுப்பாட்டு நிலையம் உள்ளது. கிழக்கே 'கீழக்கோட்டை வாசல்' உள்ளது. அதில் தற்போது தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம் இருக்கிறது. கோட்டையின் வடபக்க மதிற்சுவர் இன்றைய வடக்குக் கடைவீதி வழியாகச் சென்றது; தென்புறத்து மதிற்சுவர் சவேரியார் கல்லூரியின் முன்புறம் தற்போது செல்லும் முக்கிய சாலையின் மீது அமைந்திருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதி வரை பாளையங்கோட்டை ஒரு கோட்டை நகரமாக இருந்துள்ளது. அது ஒரு கற்கோட்டை. பதினெட்டாம் நூற்றாண்டிலேயே சிதிலமடையும் நிலையில் இருந்த கோட்டையின் மதிற் சுவர்கள் மக்களின் பாதுகாப்பு கருதி ஒரு சட்ட வரைவின் மூலமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயரால் தகர்க்கப்பட்டது. கோட்டையின் கிழக்கு, மேற்கு வாசல்கள் உறுதியானவையாக வீரர்கள் தங்கும் வசதியுடன் இருந்தன. அவை மட்டும் இடிபடாமல் மேற்கூறியவாறு இன்றும் பயன்பாட்டில் உள்ளன. நான் சிறுவனாக இருக்கும்போது அக்கோட்டை பற்றி என் ஆச்சி உட்பட சுற்றாரும் உற்றாரும் சொன்ன தவறான பாடம், அது வீரபாண்டிய கட்டபொம்மனால் கட்டப்பட்டது - அதாவது, பாளையக்காரர்களின் கோட்டை - என்பது. அதற்கேற்றாற் போல் சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கோட்டை இருந்த இடத்தின் தென்மேற்கு மூலையில் (பாளை பேருந்து நிலையம் அருகில்) கட்டபொம்மன் சிலை நிறுவப்பட்டிருந்தது. இக்கோட்டை நகரத்துக்கு 'பாளையங்கோட்டை' என்பது ஒரு தவறான பெயர் (misnomer) என்பதை என் குருநாதர் பேரா. தொ.பரமசிவன் அவர்களிடமே தெரிந்து கொண்டேன். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் திருநெல்வேலி ஆட்சியராயிருந்த ஜாக்ஸன் துரை பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் ஆட்சி புரிந்த வீரபாண்டிய கட்டபொம்மனை, வரி கட்டாமல் தவறியமைக்காக பாளையங்கோட்டை (அப்போது ஸ்ரீ வல்லப மங்கலத்தின் ஒரு பகுதி) கிழக்கு வாசலில் அக்காலத்தில் அமைந்திருந்த கச்சேரியில் (நீதிமன்றத்தில்) ஆஜராகுமாறு பணித்திருந்தார். அதன்படியும், தமது அமைச்சர் தானாபதிப் பிள்ளையின் ஆலோசனையின்படியும் கட்டபொம்மன் ஆஜரானார். மக்களால் பரவலாகப் பேசப்பட்ட இந்நிகழ்வு இவ்வூருக்கும் பாளையக்காரர்களுக்கும் உள்ள ஒரு தொடர்பு (ஆஜரான கட்டபொம்மனை ஜாக்ஸன் சந்திக்காமல் குற்றாலத்திற்கும் ராமநாதபுரத்திற்கும் பாளையக்காரர் படையினை அலைய விட்டதும், ராமநாதபுரத்தில் ஆங்கிலேய கம்பெனி படையினரோடு மோதல் ஏற்பட்டதும் தனிக்கதை). மற்றுமொரு தொடர்பு உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரை, முதல் பாளையக்காரர் போரில் கம்பெனிப் படையினரால் பிடிக்கப்பட்டு பாளையங்கோட்டையின் (அன்றைய ஸ்ரீ வல்லபமங்கலம்) கிழக்குக்கோட்டை வாசலின் கீழ்த் தளத்தில் சிறை வைக்கப்பட்டார். பின்னர் 1801 ல் அச்சிறையில் இருந்து தப்பினார் (சிறிது காலத்திற்குப் பின்னர் வேறு பாளையக்காரர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு, ஆங்கிலேயரிடம் மீண்டும் சிறைப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார் என்பதுவும் தனிக்கதை). இவ்விரண்டு நிகழ்வுகளும் மக்களால் பரவலாகப் பேசப்பட்டன. இக்கதைகளை மக்களிடம் பிற்காலத்தில் வாய்மொழியாகத் திரட்டிய ஒரு ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் (அவரது பெயர் தொ.ப என்னிடம் சொல்லி நான் மறந்தது. தொ.ப இப்போது இல்லை. வாய்ப்பை ஏற்படுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆவணக் காப்பகத்தில் பெயரைத் தேட வேண்டும்) மக்கள் பேசிய மொழியிலிருந்து அரைகுறையாகப் புரிந்து, அக்கோட்டை பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்கள் கட்டியது எனப் பதிவு செய்துவிட்டார். அவர் ஒரு அரைகுறை வரலாற்று ஆய்வாளர் என்பதற்குச் சான்று - ஊர் மக்கள் ஏதோ ஒரு மலபாரி மொழி பேசினர் என்று அவர் குறிப்பது; தொன்மையான தமிழ் மொழி பற்றி ஏதும் அறியாதவர் என்பது. உடனே அப்போது இருந்த அரைவேக்காட்டு மாவட்ட அதிகார வர்க்கம் ஊருக்கு 'பாளையங்கோட்டை' எனப் பெயரிட்டிருக்க வாய்ப்புள்ளது. மற்றபடி அக்கோட்டை ஒன்பதாம் நூற்றாண்டில் வீரநாராயண பராந்தக பாண்டியனால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது கோட்டைக்கு நடுவே அம்மன்னனால் கட்டப்பட்ட கோபாலசுவாமி கோயிலில் கிடைத்த கல்வெட்டுகளின் தரவுகள் அடிப்படையில் அனுமான விதியாகக் (rule of inference) கொள்ளலாம் என்று பண்பாட்டு அறிஞர் தொ.பரமசிவன் அவர்களிடம் கேட்டிருக்கிறேன். அக்கோயிலின் பெருமாள் அம்மன்னன் பெயராலேயே 'வீரநாராயணர்' (வீரநாராயணர் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி) என்று முதலில் அழைக்கப்பட்டு, இப்போதிருந்து சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு 'வேதநாராயணர்' (வேத நாராயணர் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி) எனப் பெயர் மாற்றம் பெற்ற தகவல் அக்கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்தி. வேதாகமத்தினருக்கு 'வீரநாராயணர்' சரி வரவில்லை போலும். மேலும் வீரநாராயண பராந்தகனின் தந்தை பராந்தக நெடுஞ்சடையன் ஸ்ரீமாறன் ஸ்ரீ வல்லபன் ஆவார்; தனது தந்தையார் பெயரைக் கொண்டே அவ்வூருக்கு 'ஸ்ரீ வல்லப மங்கலம்' எனும் பெயர் சூட்டினான். பின்னர் அது 'பாளையங்கோட்டை' ஆன கதை முன்னம் நாம் பார்த்தது. மேற்கூறிய ராஜகோபாலசுவாமி கோயிலுக்குக் கிழக்கே சற்று தூரத்தில் அமைந்த சிவன் கோயில் (திரிபுராந்தீஸ்வரர் ஆலயம்) சேர மன்னன் உதயமார்த்தாண்ட வர்மன் ஆட்சிக் காலத்தில் (கிபி 16 ஆம் நூற்றாண்டில்) கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலிலும் பதினொரு கல்வெட்டுகள் கிடைக்கப் பெறுகின்றன. கோட்டை மற்றும் இவ்விரண்டு கோயில்கள் பற்றி மேலும் செய்திகளைப் பெற பேரா. தொ.பரமசிவன், பேரா. ச.நவநீதகிருஷ்ணன் எழுதிய "பாளையங்கோட்டை - ஒரு மூதூரின் வரலாறு" என்னும் நூலில் காணலாம். கோட்டையின் மேற்கு வாசலுக்கு அருகில் உள்ள ராமசாமி கோயில் பற்றிய குறிப்பும் அந்நூலில் உள்ளது. இவை தவிர நாட்டார் தெய்வங்களாக சிறிய அம்மன் கோயில்கள் பல உள்ளமை கோட்டை நகரத்தின் மற்றொரு வரலாற்றுச் சிறப்பு. இந்த அம்மன்கள் போர்க்காலத்தின் தாய்த் தெய்வங்கள் ஆகும் (War Deities). கோயில்கள் தோன்றிய வரிசைப்படி இந்த அம்மன்கள் சகோதரிகளாக மக்களால் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். மூத்த அம்மனான ஆயிரத்தம்மன் ஆயிரம் படை வீரர்களைக் கொண்ட பாசறைத் தெய்வமாக இருந்திருக்க வேண்டும். பதினெட்டாம் நூற்றாண்டில் போருக்குச் செல்லுமுன் இக்கோயிலில் வீரன் ஒருவனை நரபலி கொடுக்கும் வழக்கமும், பின்னர் அது எருமைப் பலியாகி, தற்காலத்தில் போர்க்கால விழாவான தசராவில் ஆடு பலியாக உருமாறி உள்ளது என்பது மக்களிடம் உள்ள செவிவழிச் செய்தி. பொருநையாற்றின் கரையில் வண்ணார்பேட்டையில் அமைந்துள்ளது பேராற்றுச்செல்வி அம்மன் கோயில். போருக்குச் செல்லும்போது கோட்டையின் வடக்கு வாசல் வழியாகவே படை கிளம்பி செல்வது வழக்கம். எனவே அவ்வாசலருகில் அமைந்திருக்கும் அம்மனான 'வடக்கு வாசல் செல்வி' இப்போது 'வடக்குவாச் செல்வி'. இப்படியே பல. இப்போது வருடந்தோறும் பாளையில் தசரா எனக் கொண்டாடப்படும் போர்க்கால விழா சுற்று வட்டாரத்தில் மிகப் பிரபலம். சுமார் பதினைந்து அம்மன்கள் சப்பர பவானியாக வருவது மக்களுக்குக் கண்கொள்ளாக் காட்சி. பதினெட்டாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் பாளையங்கோட்டை சிறிது காலம் ஆற்காட்டு நவாபின் தளபதியாய் இருந்த யூசுப் கானின் கட்டுப்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அப்போது இப்பகுதியில் தோன்றிய இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு ஊர்வலத்திற்கு எதிர்வினையாகவே, யூசுப் கான் ஆங்கிலேயரால் கொல்லப்பட்ட பிறகு, அம்மன் கோயில்களின் சப்பர பவனியோடு தசரா விழா கொண்டாடும் வழக்கம் பாளையில் தோன்றியிருக்கலாம் என்ற தொ.ப வின் ஊகத்தைக் கேட்டிருக்கிறேன். பழைய கோட்டையில் மேலவாசலில் இருந்து வட திசையில் சென்ற மதிலை ஒட்டிய தெரு சிறிது காலம் முன்பு வரை பாடைத் தெரு என வழங்கியது. ஊரில் இறந்தோரைத் தூக்கிச் செல்லும் பாடைகள் மற்ற தெருக்களுக்கு ஊடே செல்லாமல் ஊரின் மேற்குக் கோடியில் இருந்த அத்தெருவின் வழியே சென்று தாமிரபரணியின் வெள்ளக்கோயில் பகுதியைச் சென்றடையும். எனவே அது பாடைத் தெரு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மதிற்சுவர் இடிக்கப்பட்ட பின் அங்கே ஒரு ராணுவ உணவகம் (military canteen) அமைந்திருந்தது. அது பஞ்சாபி மொழியில் 'லங்கர் கானா' என அழைக்கப்பட்டது. சீக்கிய குருத்வாராக்களில் சமையல் செய்யும் இடத்திற்குப் பெயர் லங்கர் கானா. பாடைத் தெருவில் வீடுகள் வர ஆரம்பித்த பின் தெருவின் பெயரை 'லங்கர் கானா தெரு' என மாற்றிவிட்டனர். அங்கு வாழ்ந்த மக்களுக்கு 'பாடை' ஏதோ மனதை உறுத்தியிருக்கலாம். அத்தெருவிற்குக் கிழக்கே அதற்கு இணையாகச் செல்வது பெருமாள் மேல ரத வீதியாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் கோட்டை ஆங்கிலக் கம்பெனிப் படை மற்றும் யூசுப் கானின் தலைமையில் ஆற்காட்டு நவாபின் படை கோட்டையைத் தாக்கிய போது இறந்த வீரர்களின் உடல்கள் விழுந்த இடத்தில் சுடலை, கருப்பசாமி முதலிய நாட்டார் தெய்வங்களைத் தோற்றுவித்தனர். மேல ரத வீதியின் மேற்குப் புறத்தில் வீடு கட்டும் போது அத்தெய்வங்களின் பூடங்களை வீடுகளின் பின்புறம் வைத்துக் கட்டினர். வருடத்தில் ஒருமுறை அத்தெய்வங்களுக்குப் படையல் வைக்கும்போது கருப்பசாமிக்கு தோசை மாவில் கருப்பட்டி கலந்து, சுட்டு கருப்பட்டி தோசை படைக்கும் வழக்கம் இருந்தது. அதன் விவரம் மூத்தோரிடம் கர்ண பரம்பரையாக வந்திருக்க வாய்ப்பு இருந்தமையாலும், நான் அந்தத் தெருக்காரன் என்பதாலும் அவ்விவரம் சேகரிக்க பேரா. தொ.ப என்னைப் பணித்தார். கருப்பசாமிக்கும் கருப்பட்டிக்கும் பொதுவில் 'கருப்பு' எனும் வேடிக்கை விளக்கம் தவிர என்னால் வேறு விவரம் சேகரிக்க இயலவில்லை (!). கோட்டையைப் பாதுகாத்த படை பெரும்பாலும் மதுரையிலிருந்து வந்திருந்ததால், இறந்த வீரன் சார்ந்த இடத்தை வைத்து அவன் கருப்பசாமி ஆகியிருப்பான் என்பதும் அவன் வாழ்ந்த இடத்தில் கருப்பசாமிக்கான படையலில் அந்த வழக்கம் இருந்திருக்கலாம் என்பதும் ஒரு ஊகம். இப்படி பல வழக்கங்களும் கதைகளும் ! கருப்பட்டி தோசை கூட பண்பாட்டு அசைவின் ஒரு குறியீடோ ! இவ்வாறு நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுக்கான சிறந்த களமாக பாளையங்கோட்டை திகழ்வதும் இவ்வூருக்கான ஒரு சிறப்பு. ஒவ்வொரு சாதி, சமய, இனக்குழுவின் பங்களிப்பும் உண்டு. உதாரணமாக, விசயநகர ஆட்சிக் காலத்திலும் பின்னர் திருமலை நாயக்கர் காலத்திலும் மதுரைக்குப் புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் பரவிய சௌராட்டிரர்களின் பங்களிப்பினைப் பாளை சிவன் கோயில் சுற்று வட்டாரத்தில் காணலாம் - நெல்லை நகரில் தற்காலத்தில் நெல்லையப்பர் கோயில் சமீபத்தில் மார்வாடி ஜைன சமூகத்தினரைப் போல. நமது பாளையங்கோட்டைச் சித்திரம் இதுகாறும் பெரும்பாலும் கோயில்களையும் சாமிகளையும் சுற்றி அமைந்தது இயல்பான ஒன்றே ! நாத்திகராயிருப்பினும் பேரா. தொ.பரமசிவன் மக்களை வாசிக்க அவர்களின் கோயில்களையும் சமய நம்பிக்கைகளையும் அவை சார்ந்த பழக்க வழக்கங்களையும் வாசிக்க வேண்டுமென்பார். அவரிடம் பாடம் படித்த மாணவன் வேறு எப்படி எழுத முடியும் ? சரி, கோவில்கள், கோட்டை கொத்தளங்கள் மட்டும் இன்றைய பாளையங்கோட்டை ஆகுமா ? கோட்டை இடிந்து போயிற்றே ! அதன் எச்சங்களான மேல, கீழக்கோட்டை வாசல்கள் வரலாற்றுச் சின்னங்கள் ஆகிவிட்டனவே ! பாளையங்கோட்டைக்காரனாகிய நான் 'நான்' ஆக ஆனது 'தென்னகத்து ஆக்ஸ்போர்டு' என்று பெருமையுடன் நிற்கும் பாளையங்கோட்டையில் ஆயிற்றே ! அந்த முகத்தை இவ்வூருக்குத் தந்த கிறித்தவ மிஷனரிகளின் வரலாற்றைக் கூறினால்தானே இவ்வூரின் வரலாறு ஓரளவு முழுமை பெறும் ? பொருநைக்கு அக்கரையில் அமைந்த நெல்லை நகரத்தையும் சிறிதளவு தொட்டுக் காட்டினால்தானே கட்டுரைத் தலைப்பிற்கும், நான் அநேகமாகத் தினந்தோறும் அந்நகரைக் கடந்து சென்றதற்கும் நியாயம் கற்பிப்பதாகும் ? இவற்றை அடுத்த தொடராகப் பார்ப்போமா ?
  2. 5 டானியல்(32), சேர்பிய நாட்டைச் சேர்ந்தவன். வேலை வாய்ப்புத் தேடி தனது மனைவி நத்தலி, பத்து, பன்னிரண்டு வயதான இரண்டு பிள்ளைகளுடன், 2022 செப்ரெம்பரில் யேர்மனிக்கு வந்தவன். தெரிந்தவர்கள் மூலமாக ஸ்வேபிஸ்ஹால் நகரத்துக்கு வந்து சேர்ந்தான். அவர்களுடன் சேர்ந்தே கட்டிட வேலைகள், தோட்ட வேலைகள் என்று கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். வேலை வாய்ப்புகளுக்காக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து பலர் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். இதில் அநேகமானவர்கள் கட்டிடத் தொழிலிலேயே கவனம் செலுத்துகிறார்கள். சிலர் அஸ்பாரகஸ் பிடுங்கி எடுப்பது ஸ்ரோபரி பழங்கள் பறிப்பது போன்ற வேலைகளை தோட்டங்களிலும் செய்வதுண்டு. கறுப்பு வேலை செய்து துரிதமாக பணம் சம்பாதித்துக் கொண்டு தங்கள் நாட்டுக்குப் போய் விடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் டானியல் குடும்பமாக யேர்மனிக்கு வந்தது, நிரந்தரமாகத் தங்குவதற்கான எண்ணமாக இருந்திருக்கலாம். டானியலின் மனைவி நத்தலி, அவுஸ்திரியாவில் சில காலம் வசித்ததால் அவளுக்கு யேர்மனிய மொழி தெரிந்திருந்தது. வேலைகள் ஓரளவுக்குக் கிடைக்க, வாழ்வதற்கு ஓரளவு பணம் அவர்களுக்கு வர ஆரம்பித்தது. தெரிந்தவர்களுடன் தங்கியிருந்தாலும் தங்கள் குடும்பத்துக்கு என்று தனி வீடு தேவை என்பதை உணர்ந்து, அவர்கள் வீடு தேட ஆரம்பித்தார்கள். அப்பொழுதுதான் டானியல் குடும்பத்துக்கு ரன்ஜா (34) அறிமுகமானார். ரன்ஜாவும் அவளது கணவரும் ஸ்வேபிஸ் ஹாலுக்கு அடுத்த நகரத்தில் புதிதாக ஒரு வீட்டை வாங்கியிருந்தார்கள். அங்கு சென்று வாழ்வதற்காக, தற்போது அவர்கள் வாழும் வீட்டை வாடகைக்கு, அதுவும் தற்காலி கமாக யாருக்காவது கொடுக்கலாம் என்று விளம்பரம் செய்ய, முதலாவதாக அவர்கள் முன் வந்து நின்றது டானியலும், அவனது மனைவி, பிள்ளைகளுமே. 1300 யூரோக்கள் மாத வாடகைக்கு அந்த வீடு டானியலுக்குக் கிடைத்தது. நத்தலிக்கு மொழி தெரிந்ததால் டானியலுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. வேலைக்குப் போவது. மாலையில் நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பது என்று அவன் எப்பொழுதும் வெளியிலேதான் இருந்தான். நத்தலி மட்டும் வீட்டில் இருந்தாள். ஹைடமேரியின் கொலையாளியைக் கண்டு பிடிக்க முடியாமல் பொலிஸார் திண்டாடிக் கொண்டிருந்தார்கள். சில தடயங்களை அவர்கள் சேகரித்து வைத்திருந்தாலும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள். நாட்கள் ஒவ்வொன்றாகக் கடக்க, 2020இல் நடந்த கொலையையே துப்புத் துலக்கி கண்டு பிடிக்காதவர்கள், இதைக் கண்டு பிடித்து விடுவார்களா? என்ற ஏளனப் பேச்சு வரத் தொடங்கியது. அதாவது பொலிஸ் துறையின் கையாலகத் தன்மையைக் குறித்து விமர்சனம் பெரிதாக வர ஆரம்பித்தது. மீண்டும் ஒரு புதன்கிழமை. 25.01.2023 ஸ்வேபிஸ் ஹாலில் இருந்து பத்து கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள மிஹேல் பாக் என்ற கிராமம் அல்லோலகலப்பட்டது.” ஹேரயுற்றே (83) என்ற மூதாட்டி கொல்லப்பட்டார் " என்ற செய்தி வந்தது. இருந்த தலையிடி காணாதென்று பொலிஸாருக்கு மேலும் தலையிடி கூடியது? ஹேரயுற்றே சாவியால், தனது வீட்டுக் கதவைத் திறந்து உள் நுளையும் போது, பல தடவைகள் மறந்து போய் சாவியை கதவிலே விட்டு விடுவதுண்டு. அதே குடியிருப்பில் வசிக்கும் ஒரு மூதாட்டி இதை அவதானித்து ஹேரயுற்றேயிடம் பல தடவைகள் எச்சரித்தும் இருக்கிறார். “இங்கை யார் வரப்போயினம்?” என்று ஹேரயுற்றே அவருக்குப் பதில் சொல்லியிருக்கிறார். ஆனால் கொலையாளி வந்திருந்தான். கதிரையில் சாய்ந்தபடி அவர் உடல் இருந்தது. அவரைச் சுற்றி இரத்தங்கள் தெறித்திருந்தன. தலை சிதைக்கப்பட்டிருந்தது. கை,தோள்பட்டை, தலை ஆகிய பகுதிகளில் குறைந்தது 26 தடவைகள், தாக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பபட்டிருப்பதாக அறிக்கை வந்தது. ஹேரயுற்றே வீட்டுக்கு வெளியே வெறும் 100 மீற்றர் தூரத்தில் ஒரு புதருக்குள் இரண்டு கையுறைகளையும், ஒரு சுத்தியலையைம் பொலிஸார் கண்டெடுத்தார்கள். ஹைடமேரியின் கொலைக்கான ஆயுதம் கிடைக்காது திணறிக் கொண்டிருந்த பொலிஸார் , ஹேரயுற்றேயின் கொலைக்கான ஆயுதம் கிடைத்த போது மிகுந்த உசாரானார்கள். அதைத் துப்புத்துலக்குதலுக்கான பெரும் உந்துதலாக அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். புதிதாக வாங்கிய சுத்தியல்.அதன்மேல் ஒட்டப்பட்டிருந்த விலை கூட இன்னமும் அகற்றப்படவில்லை. பழுப்பு நிறமான கைப்பிடியின் பிற்பகுதி சிவப்பு நிறத்தில் இருந்தது. அந்த சுத்தியலைத் தயாரித்த நிறுவனம் கோனெக்ஸ் என்றிருந்தது. அதை ஸ்வேபிஸ்ஹாலில் விற்பனை செய்பவர்கள் ‘ஹேசெலே’ கட்டிட பொருட்கள் விற்பனை நிலையம் என்பதும் தெரிந்தது. இரண்டு பொலிஸார் ஹேசெலே கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்துக்குச் சென்றார்கள். “சமீபத்தில் இந்தவகையான சுத்தியலை யாராவது வாங்கியிருக்கிறார்களா? என்று பார்த்துச் சொல்லுங்கள்” என உரியவர்களிடம் கேட்டார்கள். கணினியில் நன்றாக அலசிப் பார்த்த அவர்கள் சொன்னார்கள், “யாரும் சமீபத்தில் இந்தச் சுத்தியலை வாங்கவில்லை” என்று “வேறு எங்கே வாங்கலாம்” பொலிசார் கேட்டார்கள். “ஒன் லைனில் கிடைக்கிறது” என்றார்கள்.
  3. 4 ஸ்வேபிஸ் ஹால் நகரசபைக்கு உட்பட்டதுதான் இல்ஸ்கொபன் கிராமம். இது ஸ்வேபிஸ் ஹால் நகரில் இருந்து 10 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் இன்னுமொரு அமைதியான கிராமம். 87 சதவீதமான விவசாய நிலப்பரப்பைக் கொண்டது, இங்கு 6000க்கு சற்று அதிகமான மக்களே வசிக்கிறார்கள். பெரிய தொடர்மாடிக் குடியிருப்புகள் அதிகம் இல்லாத இந்தக் கிராமத்தில் தனித்தனி வீடுகளிலேயே பெரும்பாலானோர் வசிக்கிறார்கள். ஜனவரி 16, திங்கட்கிழமை அன்று, வீட்டின் அழைப்புமணிச் சத்தம் கேட்டு, முதியவர் (86) வந்து கதவைத் திறந்து பார்த்தால் அங்கே, கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒருவர் தனது கையில் லீடில் (Lidl super market) சுப்பர் மார்க்கெற்றின் வாராந்த பிரசுரங்களுடன் நின்றார். பனி விழும் குளிர்காலம். சூரியன் ஓய்வெடுக்கும் தருணம். கறுப்புக் கண்ணாடியுடன், சிரித்துக் கொண்டே, தன் வீட்டுக்கு முன்னால் நின்ற அந்நபரைக் கண்டதும், முதியவருக்கு ஆச்சரியமாக இருந்தது. “என்ன வேண்டும்?” என்று கேட்டார் அவன் கையில் இருந்த லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களைத் தூக்கிக் காண்பித்தான். “இதெற்கெல்லாம் பெல் அடிக்கத் தேவையில்லை. இந்தத் தபால் பெட்டிக்குள் போட்டு விட்டுப் போ” என்றார். அவன் அவரை நெருங்கி வந்தான். ஏதும் பேசவில்லை அவர் கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்தப் பிரசுரத்தைத் திணித்துவிட்டுப் போனான். “யாராயிருக்கும்? நான் சொன்னது இவனுக்கு விளங்கவில்லையா? வின்ரரிலும் கூலிங்கிளாஸ் போட்டிருக்கிறான். தலையில் ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ?” மனதில் எழுந்த கேள்விகளுடன் முதியவர் வாசல் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே போனார். அடுத்தநாள் மதிய நேரம். முதியவர், உணவை முடித்து விட்டு வரவேற்பறையில் இருந்தார். ஒரு குட்டித் தூக்கத்துக்காக அவரது மனைவி ஷோபாவில் படுத்திருந்தார். வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. வழமையாக இந்த நேரங்களில் யாரும் அழைப்பு மணியை அழுத்துவதில்லையே என்ற கேள்வி எழுந்தாலும், எழுந்து வந்து கதவைத் திறந்தார். அதே கறுப்புக் கண்ணாடி அணிந்த மனிதன். அதே உடுப்பு. நேற்றையைப் போல் இன்றும் அவன் கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் பிசுரங்கள். வீட்டின் வாசலில் நின்றபடியே,“நேற்றுத்தானே தந்துவிட்டுப் போனாய். பிறகு எதுக்கு இப்ப? அதுவும் மத்தியான நேரம்” என்று எரிச்சல் கலந்த குரலில் முதியவர் கேட்டார் முதியவரின் கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை. முதல்நாள் போலவே இன்றும் அவரை நெருங்கி வந்தான். தனது வலது கரத்தால் அவன் விட்ட குத்து, அவர் கண்ணாடிக்குக் கீழ், மூக்கின் மேல் வேகமாக வந்து விழுந்தது. வாசல் படியில் நின்ற முதியவர், நிலைதடுமாறி, வீட்டினுள்ளே விழுந்தார். வீழ்ந்தவர் அதிர்ச்சியில் இருந்து மீள முன்னரே அவரது நெற்றியில் அவனது துப்பாக்கி முனை இருந்தது. வெளியில் கேட்ட சத்தங்கள், முதியவரின் மனைவியின் சிறு தூக்கத்தைக் கலைத்து விட்டிருந்தது. ஷோபாவில் இருந்து எழுந்தவரை, கணவனின் “உதவி, உதவி செய்யுங்கள்” என்ற கூப்பாடு விரைவு படுத்தியது. விழுந்திருந்த முதியவரை அவன் காலால் உதைக்க எத்தனித்தபோது, வாசலோடு ஒட்டியிருந்த அறையின் ஒளி புகாத கண்ணாடிக் கதவினூடாக ஒருவர்( முதியவரின்மனைவி ) ஓடி வருவதை அவதானித்தான். யாரோ வருகிறார்கள் என்ற பதட்டத்தில் அவன் கால் ஒரு அடி பின் வைக்க, அந்தச் சந்தர்ப்பத்தை பயன் படுத்தி, தரையில் விழுந்திருந்த முதியவர் தன் காலால் பலம் கொண்ட மட்டும் கதவைத் தள்ள வாசல் கதவு மூடிக் கொண்டது. அவன் வெளியே. அவர்கள் உள்ளே. தகவல் கிடைத்து பொலிஸார் வந்திருந்தனர். கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தான் என்பதை முதியவர் மறக்காமல் சொன்னார். அவன் என் நெற்றியில் துப்பாக்கியை அழுத்திப் பிடித்த போது “நீ பணம்” என்று சொன்னான், என்பதையும் சொன்னார். பொலிஸாருக்குப் புரிந்து விட்டது. வந்தவன் வெளிநாட்டுக்காரன் மட்டுமல்ல, சமிபத்தில்தான் யேர்மனிக்கு வந்திருக்கிறான் என்பதுவும். இல்ஸ்கொபன் கிராமத்தின் வீதிகள், பூங்காவனம், விளையாட்டு மைதானம் என்று எல்லா இடங்களிலும் பொலிஸார் தேடினார்கள். அவன் அகப்படவில்லை. “கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களுடன் கறுப்புக் கண்ணாடியுடன் யாராவது நடமாடியதைப் பார்த்தீர்களா? “ என விசாரித்துப் பார்த்தார்கள். ஒரு பெண் சொன்னாள். “இன்று ஹோம் ஒபீஸ். மதிய இடைவேளைக்கு கொஞ்சம் காற்றாட வெளியே வந்த போது கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களுடன் ஒருவனைக் கண்டேன். கனிவான முகத்துடன்… “ஹலோ” சொல்லிச் சிரித்தான். நானும் ‘ஹலோ’ சொல்லிவிட்டுப் போனேன்” என்று. ஹேபாப் கடை வைத்திருந்தவர் சொன்னார், “ இங்கு உணவருந்த வருபவர்களை, அவர்கள் வெளியூரா, உள்ளூரா என என்னால் இனம் கண்டு கொள்ள முடியும். அவன் வெளிநாட்டவன்” என்று. ‘வந்தவன் கிராமத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவன் நிச்சயமாக இல்ஸ்கொபனை விட்டு வெளியே போயிருப்பான்’ என்று பொலிஸருக்குப் புலப்பட்டது. “புதிதாக, சந்தேகப்படும்படியான, வெளியாருடைய வாகனங்களை யாராவது கண்டீர்களா?” என்று கேட்டுப் பார்த்தார்கள். கொஞ்சம் பலன் கிடைத்தது. ஒரு கார். அதன் இலக்கத் தகட்டில் பொதிகளை ஒட்டும் நாடாவால் ( duct tape)ஒட்டிய தடயங்கள் இருந்தன. அந்தக் கார் VW station wagon, Silver நிறம் என அடையாளங்களைத் திரட்டிக் கொண்டார்கள். தேடுதலின் போது, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 250 மீற்றர் தூரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை அண்டிய பகுதியின் புதர்களுக்குள் இருந்து ஒரு சோடி கையுறைகளையும் ஒரு விளையாட்டுத் துப்பாக்கியையும், லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களையும் பொலிஸார் கண்டெடுத்தார்கள். அவனுடைய அங்க அடையாளங்களை முதியவரிடம் பெற்று, ஒரு கற்பனை முகத்தை (Fandom image) வரைய ஏற்பாடு செய்தார்கள்.
  4. இந்தப் பதிவுகள் நடந்து நீண்டகாலமானாலும் திரும்பவும் படிக்க மனதுக்கு மிகவும் கஸ்டமாக உள்ளது.
  5. 5ஆம் பகுதியும் வாசித்துவிட்டேன் அண்ணை.
  6. நடுப்பக்கம் நக்கி · பாகுபலில பனைய வளைச்சு பறக்கிறது Graphic எண்டு எவன்டா சொன்னது.....!
  7. கொக்கிளாய், நாயாறு சிங்கள மீனவக் குடியேற்றங்களும் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட படுகொலைகளும் கொக்கிளாய் சிங்கள மீனவக் குடியேற்றம் ஒன்று மறுநாள், மார்கழி 1 ஆம் திகதி பெண்போராளிகள் அடங்கிய புலிகளின் அணி நாயாறு மற்றும் கொக்கிளாய் பகுதிகளில் அரச ஆதரவுடன் குடியேறியிருந்த சிங்கள மீனவக் கிராமங்கள் மீது தாக்குதல் ஒன்றினை நடத்தினர். சுமார் 15 கிலோமிட்டர்கள் இடையே அமைக்கப்பட்டிருந்த இக்குடியேற்றங்கள் மீதான தாக்குதலில் 59 சிங்கள மீனவக் குடியேற்றக்காரர்கள் கொல்லப்பட்டனர். திருகோணமலை முதல் முல்லைத்தீவு வரை கடற்கரைகளை அண்மித்து தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களின் வடக்கு எல்லையிலேயே கொக்கிளாயும் நாயாறும் அமைந்திருந்தன. இக்குடியேற்றங்களில் வசித்துவந்த பெரும்பாலான சிங்களவர்கள் நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். புலிகளின் தாக்குதலில் காயப்பட்ட சில சிங்களவர்கள் அருகிலிருந்த முல்லைத்தீவு இராணுவ முகாமுக்கு உதவிகேட்டு ஓடியபோதே தாக்குதல் குறித்து இராணுவத்தினர் அறிந்துகொண்டனர். சிங்களக் குடியேற்றம் அமைந்திருந்த பகுதிக்குச் சென்ற இராணுவ வாகனம் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானது. அப்பகுதியில் சிங்களவர்களால் உரிமைகோரி நிறுவப்பட்டிருந்த கல்வெட்டுக்களும் புலிகளால் அழிக்கப்பட்டன. புலிகளின் இத்தாக்குதல்கள் எதிர்பாரா விதமாக இன்னும் பல சம்பவங்களுக்கு அடிகோலியிருந்தது. தமிழர் தாயகத்தில் சிங்கள அரசால் உருவாக்கப்பட்டிருந்த இக்குடியேற்றங்களில் வாழ்ந்துவந்த சிங்கள விவசாயிகளும், மீனவர்களும் அங்கிருந்து இடம்பெயரத் தொடங்கினர். சிங்கள மக்களிடையே முதலாவது அகதிகள் பிரச்சினையினை இத்தாக்குதல்கள் தோற்றுவித்தன. புலிகளின் தாக்குதல்களின் பின்னர் டொலர் பண்ணைக்குச் சென்ற நிவாரணப் பணியாளர்கள் அங்கு வாழ்ந்துவந்த சிங்களவர்கள் தமது உடைமைகளையும் எடுத்துக்கொண்டு பதவியா நோக்கித் தப்பிச் செல்வதாகத் தெரிவித்திருந்தார்கள். தாம் வாழ்ந்துவந்த குடியேற்றங்களில் இருந்து இராணுவத்தினர் விலக்கிக்கொள்ளப்பட்டமையினால் தொடர்ந்தும் அப்பகுதிகளில் வாழ அச்சப்படுவதாகவும், அதனாலேயே தாம் அங்கிருந்து தப்பிச் செல்வதாகவும் கூறியிருக்கின்றனர். இதனையடுத்து அப்பகுதிகளுக்கு அண்மையாக அமைக்கப்பட்டிருந்த பெளத்த விகாரைகளிலும் பாடசாலைகளிலும் சிங்கள அகதிகள் அடைக்கலம் புகுந்தனர். வலி ஓயாப் பகுதியில் குடியேற்றப்பட்டிருந்த சிங்கள கைதிகளுக்கு நிவாரணம் வழங்கச் சென்றவர்களில் ஹேர்மன் குணரட்ணவும் ஒருவர். இறையாண்மையுள்ள நாட்டை நோக்கி என்று தான் எழுதிய புத்தகத்தில் புலிகளின் தாக்குதல்களின் பின்னர் தான் கண்ட காட்சிகளை விபரித்திருந்தார். "நூற்றுக்கணக்கானோர் தமது மனைவிகளுடன், கைகளில் பிள்ளைகளையும் ஏனைய அவசியப் பொருட்களையும் ஏந்திக்கொண்டு அகதி முகாம்களுக்கு ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டேன்". இராணுவத்தினரும், சிறைக் கைதிகளும் மணலாற்றில் (தற்போதைய வலி ஓயா) பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழர்களை முற்றாக அங்கிருந்து விரட்டி விடும் நடவடிக்கைகளில் இறங்கினர்.இந்த விரட்டியடிப்பு முன்னெடுக்கப்பட்ட விதத்தினை தமிழ்ச் செய்தியாளர்களும் சரித்திர எழுத்தாளர்களும் விளக்கமாகப் பதிவிட்டிருந்தனர். மிகவும் தந்திரமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமிழர்களின் வாழிடங்களுக்குச் சென்ற இராணுவத்தினர் இப்பகுதி மீது தாக்குதல் ஒன்று நடத்தப்படப் போகிறது, ஆகவே உயிரைக் காத்துக்கொள்ள இங்கிருந்து ஓடுங்கள் என்று முதலில் எச்சரிப்பார்கள். தமது எச்சரிக்கையினை ஏற்றுக்கொள்ள மறுத்த தமிழர்கள் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்ட இராணுவத்தினர், அவர்களின் விலைமதிப்பான பொருட்களை சூறையாடியபின்னர் வீடுகளுக்குத் தீமூட்டினர். இளம்பெண்கள் இருந்த வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர் அப்பெண்களை வெளியே இழுத்து வந்து கூட்டுப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டனர். இவையெல்லாம் நடந்து முடிந்ததன் பின்னர் இப்பகுதி மீது பாரிய நேரடித் தாக்குதல் ஒன்றினை நடத்தி தமிழர்களை அங்கிருந்து முற்றாக விரட்டியடித்தனர். மணலாறு மற்றும் ஒதியாமலை ஆகிய தமிழ்க் கிராமங்களில் சிங்கள இராணுவத்தாலும், சிங்களக் குடியேற்றக்காரர்களாலும் படுகொலைசெய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை பலநூறுகளைத் தாண்டும் என்று வரலாற்று பதிவாளர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும், ஒதியாமலைப் படுகொலையில் 25 பெண்களும் சிறுவர்களும் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டமையும் பதிவாகியிருக்கிறது. பதவியாவில் ஆரம்பித்து சிறிபுரவாக முன்னெடுக்கப்பட்டு ஈற்றில் ஜனகபுர வரை விஸ்த்தரிக்கப்பட்டிருக்கும் சிங்களப் பேரினவாதிகளின் தமிழர் இதயபூமி மீதான வல்வளைப்பு திருகோணமலை மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்திருந்த பாரம்பரியமான தமிழ்க் கிராமம்தான் அமரவயல். இதற்கு அருகிலேயே சிங்களக் குடியேற்றக் கிராமமான பதவியா அமைக்கப்பட்டிருந்தது. அமரவயல் கிராமத்திற்கு நடந்த அனர்த்தமே முல்லைத்தீவு, திருகோணமலை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்த பல பாரம்பரிய தமிழ்க் கிராமங்களுக்கும் நடைபெற்றிருந்தது. இக்கிராமம் அரசாங்கத்தால் முற்றாக கைவிடப்பட்டிருந்ததுடன், வயற்செய்கைக்கு மிகவும் உகந்த இடமான இப்பகுதியைக் கைப்பற்றுவதற்காக அயலில் குடியேறி இருந்த சிங்களக் காடையர்கள் தொடர்ச்சியாக முயன்று வந்தனர். இக்கிராமங்களுக்குள் அடிக்கடி புகுந்து வன்முறைகளில் ஈடுபட்ட காடையர்கள் இங்கு வசித்துவந்த தமிழ் மக்களை எப்படியாவது விரட்டிவிட முயன்று வந்தனர். மணலாறு எனும் புத்தகத்தை எழுதிய திரு விஜயரட்ணம் இக்கிராமத்திற்கு நடந்த அநர்த்தம் பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதல்கள் முடிவடைந்து மூன்று நாட்களின் பின்னர் அமரவயல்க் கிராமத்தில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த தமிழ்க் கிராமங்களுக்கு இராணுவத்தால் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது. உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள், இல்லையேல் கொல்லப்படுவீர்கள் என்பதே அது. இதுகுறித்து விஜயரட்ணம் எழுதிய விபரங்கள் கீழே, "இராணுவத்தினரிடமிருந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கையினையடுத்து இங்கு வாழ்ந்துவந்த தமிழர்கள் தம்மால் எடுத்துச் செல்லக்கூடிய சில பொருட்களையும் சில உடுபுடவைகளையும் எடுத்துக்கொண்டு அயலில் இருந்த காட்டுப்பகுதிக்குள் தஞ்சம் புகுந்தனர். அந்த இரவு முழுவதும் காட்டிற்குள்ளேயே அவர்கள் மறைந்து இருந்தனர். திடீரென்று தமது கிராமமம் இருந்த திசையிலிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்க ஆரம்பித்தன. பின்னர் கிராமத்திலிருந்து வானை நோக்கித் தீபிழம்புகள் எழுவதை அவர்கள் கண்டனர். எரிந்துகொண்டிருந்த இதயத்தோடு அங்கிருந்து வெளியேறி முல்லைத்தீவில் அமைக்கப்பட்டிருந்த அகதிமுகாம் நோக்கி அவர்கள் நடக்கத் தொடங்கினர். அகதிமுகாமில் தஞ்சமடைந்த மக்களில் இளவயது ஆண்களும் பெண்களும் புலிகளுடன் இணைந்து தமது கிராமத்தை விடுவிக்க உறுதிபூண்டனர். அவர்களுக்கு வெற்றி இன்னமும் கிட்டவில்லை, ஆனால் அவர்கள் வெல்வார் என்பது நிச்சயம்". சி.குருநாதன் எனும் எழுதாளரும் "அகதிக் கிராமங்கள்" எனும் பெயரில் ஒரு தொடரினை தினக்குரல் பத்திரிக்கையில் 2002 இல் எழுதியிருந்தார்.இத்தொடரில் பல விடயங்களை அவர் குறிப்பிட்டிருந்தார். தமிழரின் பாரம்பரியக் கரையோரக் கிராமமான தென்னைமரவாடியில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து குருநாதன் பின்வருமாறு எழுதுகிறார். "மீனவக் குடியேற்றங்கள் மீதான புலிகளின் தாக்குதல்கள் நடைபெற்ற நாளுக்கு அடுத்தநாள், கொக்கிளாய் மற்றும் நாயாறுக் குடியேற்றங்களில் இருந்து பெருமளவு சிங்களக் குடியேற்றவாசிகளும் இராணுவத்தினரும் தென்னைமரவாடிக் கிராமத்தினுள் நுழைந்தனர். அவர்கள் அனைவரதும் முகங்களில் குரோதமும், தமிழர்களை அழிக்கவேண்டும் என்கிற வெறியும் காணப்பட்டது. தமிழர்கள் மீது பழிதீர்க்க வந்திருக்கிறோம் என்று கத்திக்கொண்டே அப்பகுதிக்குள் அவர்கள் நுழைந்திருந்தார்கள். துப்பாக்கிகள், வாட்கள், கத்திகள், கோடரிகள், இரும்புக் கம்பிகள் போன்ற ஆயுதங்களுடன் அவர்கள் தமிழர்களைத் தாக்க வந்திருந்தனர். சுமார் 200 தமிழ்க் குடும்பங்கள் தென்னைமரவாடி எனப்படும் பாரம்பரிய தமிழ்க் கிராமத்தில் அப்போது வாழ்ந்து வந்திருந்தனர். சிங்களவர்கள் ஆவேசத்துடன் அப்பகுதிநோக்கி வருவதைக் கண்டதும் தமிழர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி அருகிலிருந்த காடுகளுக்குள் ஓடி ஒளித்துக்கொண்டனர். தாம் தேடிவந்த தமிழர்களைக் காணமுடியாததால் அவர்களின் வீடுகளுக்கும் உடைமைகளுக்கும் தீவைத்துவிட்டு அங்கிருந்து சென்றது அந்தக் கும்பல். மறுநாளும் தமிழர்களைத் தேடி அந்தக் கும்பல் தென்னைமரவாடிக் கிராமத்திற்கு வந்தது. வீடுகளுக்குள் தமிழர்களைக் காணாததால் அருகிலிருக்கும் காடுகளுக்குள் அவர்களைத் தேடி நுழைந்தது. சில தமிழர்களைக் கண்டதும் அவர்களை வெளியே இழுத்துவந்து சுட்டுக் கொன்றது சிங்கள இராணுவம். தமிழ் இளைஞர்கள் வரிசையில் நிற்கவைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பெண்களை காடுகளுக்குள் இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வில் இராணுவத்தினரும் சிங்கள‌ மீனவர்களும் ஈடுபட்டார்கள். கொக்கிளாய் வாழ் தமிழர்கள் மீது இரு நாட்களில் இராணுவமும் சிங்கள மீனவர்களும் நடத்திய தாக்குதல்களில் 131 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். மூன்றாவது நாள், மார்கழி 4 ஆம் திகதி தென்னைமரவாடிக் கிராமத்தின் பூர்வ குடிகளான தமிழ் மக்கள் அங்கிருந்து பாதுகாப்புத் தேடி தமது பயணத்தை ஆரம்பித்தார்கள். நான்கு நாட்களாக காடுகளுக்குள் நடந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளைப் பகுதியை அடைந்தார்கள். அப்பகுதியில் தற்காலிகக் கொட்டகைகளை அமைத்துத் தங்கிக் கொண்டார்கள். தமது தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்ட பகுதிக்கு "பொன் நகர்" என்று அவர்கள் பெயரிட்டனர். அவர்கள் 18 வருடங்களுக்கு மேலாக இன்னமும் அங்கே வாழ்ந்து வருகிறார்கள்" (2002 இல் எழுதப்பட்ட தொடரின்படி). அமர வயலும் தென்னமரவாடியும் வலி ஓயாப் பகுதியிலிருந்து தமிழ் மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்ட பல கிராமங்களுக்குள் இரண்டு கிராமங்கள் ஆகும். புதிதாகக் குடியேற்றப்படும் சிங்களக் குடியேற்றக்காரர்களின் பாதுகாப்பிற்காக சுற்றியிருக்கும் அனைத்துத் தமிழ்க் கிராமங்களிலிருந்து தமிழர்களை விரட்டிவிட்டு அக்கிராமங்களை அழிப்பது என்பது அரசாங்கத்தின் கொள்கை போன்றே அன்று செயற்படுத்தப்பட்டது. 1984 ஆம் ஆண்டு மார்கழி 24 ஆம் திகதி இராணுவத்தினர் மீது கண்ணிவெடித் தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அப்பகுதியெங்கும் ஒலிபெருக்கி அறிவித்தல் ஒன்றினை மேற்கொண்ட இராணுவத்தினர் கொக்கிளாய், கொக்கொத்துடுவாய், கருநாற்றுக் கேணி, காயடிக்குளம், கோட்டைக் கேணி ஆகிய கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் 24 மணி நேரத்திற்குள் அங்கிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று கட்டளையிட்டனர். 1984 ஆம் ஆண்டு மார்கழி மாதத்தின் முடிவில் இப்பகுதிகளிலிருந்து குறைந்தது 2,700 தமிழ்க் குடும்பங்கள் இராணுவத்தினரால் அச்சுருத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர். இவற்றுள் ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் முல்லைத்தீவு மாவட்டத்திலும், தென்னைமரவாடி கிராம சேவகர் பிரிவு திருகோணமலை மாவட்டத்திலும் அமைந்திருந்தன. 1984 மார்கழி முதல் 1985 தை மாத இறுதிவரை வரை இப்பகுதியில் நடத்தப்பட்ட தமிழ் மக்கள் மீதான படுகொலைகளின் சாராம்சம், ஓதியாமலை - ‍ மார்கழி 1, 1984 ‍- 27 தமிழர்கள் குமுழமுனை ‍- மார்கழி 2, 1984 - குறைந்தது 7 தமிழர்கள் செட்டிகுளம் - மார்கழி 2, 1984 - 52 தமிழர்கள் மணலாறு - மார்கழி 3, 1984 - குறைந்தது 100 தமிழர்கள் மன்னார் - மார்கழி 4, 1984 - 59 தமிழர்கள் கொக்கிளாய் - மார்கழி 15, 1984 - 31 பெண்களும், 21 சிறுவர்களும் அடங்கலாக 131 தமிழர்கள் முள்ளியவளை - தை 16, 1985 ‍- 17 தமிழர்கள் வட்டக்கண்டல் - தை 30, 1985 - 52 தமிழர்கள் (மேலதிக வாசிப்பிற்கு : https://tamilgenocidememorial.org/wp-content/uploads/2022/09/Massacres-of-Tamils-1956-2008.pdf) தென்னைமரவாடிப் படுகொலைகளின் பின்னர் உயிர்தப்பி வாழும் தமிழர்கள் (2004) 1988 ஆம் ஆண்டு ஊடகங்களுக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சம்பந்தன் வழங்கிய தகவலில் மகாவலி "L" வலயத்திலிருந்து 3,100 தமிழ்க் குடும்பங்கள் இராணுவத்தினராலும், சிங்களவர்களாலும் அடித்து விரட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இவர்களுள் 2,910 குடும்பங்கள் வவுனியா மாவட்டத்திலிருந்தும், 290 குடும்பங்கள் வவுனியா மாவட்டத்திலிருந்தும் விரட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தமிழரின் பூர்வீகத் தாயகத்தின் சுமார் 15 கிராமங்களில் இருந்து தமிழ் மக்கள் இவ்வாறு விரட்டப்பட்டிருந்தனர். இந்தக் கிராமங்களில் பெரும்பான்மமையானோர் கொக்குத்தொடுவாய் (861 குடும்பங்கள்), கருநாற்றுக் கேணி (370 குடும்பங்கள்), கொக்கிளாய் (507 குடும்பங்கள்) மற்றும் முகத்துவாரம் (1004 குடும்பங்கள்) ஆகிய கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். சம்பந்தனின் அறிக்கையின்படி தமிழ் மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்ட கிராமங்களின் பட்டியலொன்று வெளியிடப்பட்டது, கொக்கிளாய், கருநாற்றுக் கேணி, கொக்குத்தொடுவாய், நாயாறு, ஆண்டான்குளம் கணுக்கேணி, உத்தராயன் குளம் மற்றும் உதங்கை என்பனவாகும். மேலும் தமிழர்கள் பகுதியளவில் வெளியேற்றப்பட்ட கிராமங்களாக ஒதியாமலை, பெரியகுளம், தண்டுவன், குமுழமுனை (கிழக்கும் மற்றும் மேற்கு), தண்ணியூற்று, முள்ளியவளை, செம்மலை, தண்ணிமுறிப்பு மற்றும் அள‌ம்பில் ஆகியவை அடையாளம் காணப்பட்டன. இதேவகையான தமிழ் நீக்கச் செயற்பாடுகள் மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் காணப்பட்ட பாரம்பரிய தமிழ்க் கிராமங்களிலும் அரசால், இராணுவத்தினரின் துணைகொண்டு அரங்கேற்றப்பட்டு வந்தது.
  8. கென்ட் - டொலர் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதல்கள் இராணுவ இலக்குகளாகவே பார்க்கப்படல் வேண்டும் ‍- சிங்களப் பாதிரியார் கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் இருந்து இந்திய வம்சாவளித் தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டதும் பின்னர் வலி ஓயாவில் குடியேறிய சிங்கள் காடையர்கள் அயலில் உள்ள பாரம்பரிய தமிழ்க் கிராமங்களுக்குள் புகுந்து தமிழ் மக்களுக்கு சொல்லொணாத் துன்பங்களைக் கொடுத்து வந்ததும் தமிழ் மக்களுக்கு மிகுந்த வலியினை ஏற்படுத்தியிருந்தது. சிங்களத் தலைவர்களிடமிருந்து நியாயத்தன்மையினை ஒருபோதுமே எதிர்பார்க்க முடியாது என்கிற நிலைக்குத் தமிழ் மக்கள் வந்துவிட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் தொண்டைமான். என்னுடன் தனிப்பட்ட ரீதியில் அவர் பேசும்போது சிங்களத் தலைவர்கள் தூரநோக்கற்றுச் செயற்படுகிறார்கள் என்றும் தமது செயற்பாடுகளால் தமிழ் மக்கள் எவ்வகையான துன்பங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்றோ அல்லது தமிழ மக்களின் இதுதொடர்பான உணர்வுகள் என்னெவென்றோ அவர்கள் சிறிதும் சிந்திக்கவில்லை என்றும் கூறினார். "இதற்குச் சரியான விலையினை அவர்கள் விரைவில் செலுத்த வேண்டி வரும்" என்று என்னிடம் அவர் மேலும் கூறினார். அவர் கூறியவாறே தமது செயல்களுக்கான விலையினை சிங்களத் தலைவர்கள் 1984 ஆம் ஆண்டு கார்த்திகை 30 ஆம் திகதி செலுத்தினார்கள். மறுநாள்க் காலை தொண்டைமானைச் சந்திப்பதற்காக அவரது அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். நான் உள்ளே நுழையும்போதே என்னைப் பார்த்துப் புன்னகைத்தார் அவர். "செய்தி கேள்விப்பட்டீர்களா?" என்று என்னைக் கேட்டார். அவர் சொல்வதைக் கேட்கவேண்டும் என்பதற்காக எதுவும் தெரியாதவர் போல அவரைப் பார்த்துக்கொண்டு நின்றேன். கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் அரசால் குடியேற்றப்பட்டிருந்த காடையர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்துப் பேசிய அவர், "தம்மிடம் அதிகாரப் பலம் இருப்பதால் தாம் எதனையும் செய்துவிடமுடியும் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இவர்களைக் காட்டிலும் பலமான சக்திகளும் இருக்கின்றன" என்று கூறினார். தொண்டைமானிடமிருந்து தமிழ் உணர்வு வெளிப்பட்டது இதுவே முதற்தடவையுமல்ல. அப்பாவிச் சிங்களவர்கள் கொல்லப்பட்டது தனக்கு வருத்தத்தினையளிப்பதாக அவர் கூறினாலும், தமிழர்களுக்கும் சுயகெளரவம், கண்ணியம், தமது மொழி மீதான பற்று, தமது மதம் மீதான பற்று, தமது அடையாளம் குறித்த பெருமை ஆகியன இருப்பதை சிங்களத் தலைமைகள் கண்டுகொள்ளாமைக்கான தண்டனையாக இத்தாக்குதல்களை அவர் பார்த்தார். கென்ட் - டொலர் பண்ணைகள் மீதான தாக்குதல் கார்த்திகை 30 ஆம் திகதி நடைபெற்றது. சென்னையில் தங்கியிருந்த பிரபாகரன் இத்திட்டத்தினை வகுக்க, தாயகத்தில் இருந்த மாத்தையா அதனை செயற்படுத்தினார். சுமார் 50 போராளிகள் கொண்ட குழுவினர் இரவு வேளையில் பஸ் வண்டிகளில் ரைபிள்கள், இயந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் என்பவற்றைத் தாங்கியவாறு அப்பகுதி நோக்கிச் சென்றனர். ஒரு பஸ் கென்ட் பண்ணை நோக்கிச் செல்ல மற்றையது டொலர் பண்ணை நோக்கிச் சென்றது. அதிகாலை வேளையில் ஒரே நேரத்தில் இந்த பண்ணைகள் மீது தாக்குதல்கள் ஆரம்பமாகின. தாக்குதலில் ஈடுபட்ட புலிகள், காவலாளிகள், ஆண்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன் சிலரை வெட்டியும் கொன்றனர். சில காடையர்கள் அறைகளுக்குள் அடைக்கப்பட்டுக் குண்டுவைத்துக் கொல்லப்பட்டார்கள். டொலர் பண்ணையில் அன்று 62 சிங்களவர்களும் மூன்று சிறைக் காவலர்களும் புலிகளால் கொல்லப்பட்டார்கள். டொலர் பண்ணையில் இருந்து 8 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்த கென்ட் பண்ணைக்குச் சென்ற புலிகள் அங்கும் 20 சிங்களவர்களைக் கொன்றார்கள். மறுநாள்க் காலையில் இராணுவமும் பொலீஸாரும் அவ்விடத்தை அடையுமுன்னர் புலிகளின் அணி அங்கிருந்து வெளியேறியிருந்தது. காலையில் அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினரும் பொலீஸாரும் அப்பகுதியைச் சுற்றித் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன்போது 30 புலிகளைத் தாம் கொன்றுவிட்டதாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால் அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் அனைவருமே அயலில் இருந்த தமிழ்க் கிராமங்களில் இருந்து இராணுவத்தால் இழுத்துவரப்பட்ட பொதுமக்கள் தான் என்று கிராமவாசிகள் தெரிவித்தனர். தாக்குதலில் ஈடுபட்ட தமது அணி இழப்புக்கள் எதுவுமின்றி பாதுகாப்பாக தளம் திரும்பியதாக புலிகள் பின்னர் அறிவித்திருந்தனர். பொதுமக்கள் மீது புலிகள் முதன்முதலாக நடத்திய தாக்குதலே கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் மீதான தாக்குதல்களாகும்.இத்தாக்குதல்களை புலிகளுக்கெதிரான தீவிரப் பிரச்சாரப் பொருளாக அரசு பாவித்தது. சிங்களப் பொதுமக்கள் மீதான இத்தாக்குதல்கள் ஏனைய போராளி அமைப்புகளுக்குள்ளும் தமிழ் மக்களுக்குள்ளும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியிருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் பத்மநாபா இத்தாக்குதல்களைக் கண்டித்திருந்தார். தமிழ் மக்களின் போராட்டம் சிங்கள அரசுக்கும் அதன் இராணுவத்திற்கும் எதிரானதேயன்றி சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்று அவர் கூறினார். பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் மனச் சாட்சிக்கு விரோதமானவை என்று புலிகள் கருதியதால் இத்தாக்குதல்களுக்கு உரிமை கோருவதில் இருந்து விலகிநின்றனர். ஆனால், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் அமைப்பினர் சிலர் பிரபாகரனிடம் தனிப்பட்ட ரீதியில் இத்தாக்குதல்கள் குறித்து வினவியபோது அதனைத் தாமே நடத்தியதாக அவர் ஒத்துக்கொண்டிருந்தார். ஆனால், தம்மால் கொல்லப்பட்டவர்கள் சாதாரண பொதுமக்கள் இல்லையென்பதை ஆணித்தரமாக மறுத்த அவர், தமிழரின் தாயகத்தைக் கூறுபோடுவதற்காக அரசாலும், இராணுவத்தாலும் அப்பகுதியில் அடாத்தாக குடியேற்றப்பட்ட சிங்களக் கிரிமினல்கள் மீதே தாம் தாக்குதல் நடத்தியதாக அவர் வாதிட்டார். மேலும், தாக்குதல்களின்போது பெண்களையும் குழந்தைகளையும் தவிர்த்து விடுமாறு தனது போராளிகளுக்குக் கடுமையான உத்தரவுகள் வழங்கப்பட்டிருந்தன என்றும் அவர் கூறினார். தாக்குதலில் ஒரேயொரு பெண் மட்டுமே கொல்லப்பட்டதாகவும், அவர்கூட தனது கணவரை அணைத்தபடி அறைக்குள் சென்றபோது அவ்வறை மீது குண்டெறியப்பட்ட வேளை கொல்லப்பட்டதாக அவர் கூறினார். இத்தாக்குதல் குறித்து இரு சிங்களக் கத்தோலிக்கப் பாதிரியார்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். அவர்களில் ஒருவரான செலெஸ்ட்டின் பெர்ணான்டோ எனும் பாதிரியார், வலி ஓயா குடியேற்றத் திட்டம் அரசால் வேண்டுமென்றே வலிந்து உருவாக்கப்படதென்றும், தமிழ் மக்களையும் போராளிகளையும் சீண்டும் நோக்கிலேயே இது ஆரம்பிக்கப்பட்டதென்றும் கூறியதோடு, இத்தாகுலை பொதுமக்கள் மீதான தாக்குதல் என்று பார்க்கமுடியாதென்றும் இராணுவ இலக்காகவே பார்க்கப்படல் வேண்டும் என்றும் கூறியிருந்தார். தாக்குதல் நடந்தவேளையில் அங்கிருந்து உயிர்தப்பிய சிங்களப் பெண்ணான ஜெஸி நோனா என்பவர் தானும் தனது மகளும் அயலில் இருந்த இன்னொரு சிங்களக் குடியேற்றக் கிராமமான‌ பதவியாவின் பராக்கிரமபுரவுக்குள் ஓடிச் சென்றதாகவும், தனது மருமகன் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் மனிதவுரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திடம் தெரிவித்திருந்தார். லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சிங்களப் பத்திரிக்கையான சிலுமினவுக்குப் பேட்டியளித்த ஹேமசிறி பெர்ணாண்டோ சாவிலிருந்து தான் எவ்வாறு தப்பி வந்தேன் என்பதை விளக்கியிருந்தார். "எனது குடும்பத்தினருடன் ஆழ்ந்த உறக்கத்தில் நான் இருந்தேன். திடீரென்று நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. கூடவே துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கேட்கத் தொடங்கின. என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு வீட்டிற்கு வெளியே வந்தேன். யாரோ ஒருவர் எனது முகத்தை நோக்கி டோர்ச் வெளிச்சத்தைப் பாய்ச்சுவது தெரிந்தது. என் முகத்திற்கு நேரே துப்பாக்கியை ஏந்திப் பிடித்த அவர் எனது கைகளை உயர்த்துமாறு கட்டளையிட்டார். பின்னர் சத்தம் போடாமல் ஓடிவிடு என்று மெதுவான குரலில் என்னைப் பணித்தார், நானும் அதற்குப் பணியச் சம்மதித்தேன்.." "அவர் என்னை அருகிலிருந்த ஒரு குடிசைக்குள் இழுத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து இன்னொரு குடிசைக்கு இழுத்துச் செல்லப்பட்டேன். என்னைப்போல இன்னும் மூன்று ஆண்களை அவர் பிடித்து வைத்திருந்தார். நாங்கள் நடத்திச் செல்லப்படும்போது குண்டு வெடிக்கும் ஓசையொன்று கேட்டது. அவ்வெடிப்பில் 15 கைதிகள் கொல்லப்பட்டனர். அதுவே போராளிகள் தாக்குதலை முடித்துக்கொண்டு திரும்புவதற்கான சமிக்ஞையாக இருந்திருக்கும்" என்றும் அவர் கூறினார்.
  9. தமிழ்க் கிராமங்களைச் சூறையாடி, தமிழ்ப் பெண்களை இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட சிங்களக் குடியேற்றக்காரர்கள் தனது குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள, தான் அமைத்த இணைந்த தலைமையகம் உதவும் என்று லலித் கருதினார். இத்தலைமையகத்தின் முக்கிய கடமைகளாக மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பினைக் கண்காணிப்பது, சிவில் நிர்வாகத்தைக் கண்காணிப்பது, நில வழங்கலைக் கையாள்வது என்பன காணப்பட்டன. மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் "L" வலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இந்தத் தலைமையகம் தனது கட்டுப்பாட்டினைக் கொண்டிருந்தது. இத்தலைமையகத்திற்கு முப்படைகள், அரச திணைக்களங்கள் மற்றும் ஏனைய அமைப்புக்களின் முற்றான ஆதரவு கிடைக்கப்பெற்று வந்தது. தமிழர்களின் பூர்வீகப் பிரதேசமான மணலாற்றில் தான் விரும்பிய வகையில் இராணுவ மயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை அமைத்துக்கொள்ளும் அதிகாரத்தினை இணைந்த தலைமையகத்தினூடாக லலித் அதுலத் முதலி பெற்றுக்கொண்டார். மணலாறு பிரதேசம் ஏற்கனவே அமைக்கப்பட்டு வந்த இன்னொரு சிங்கள குடியேற்றமான பதவியாவிற்கு வடக்கே அமைந்திருந்தது. மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்கு உட்பட்ட பகுதி எனும் அடிப்படையில், இப்பிரதேசத்தில் இருக்கும் காணிகளில் தனது திட்டத்திற்கென்று எவற்றையும் கையகப்படுத்தும் அதிகாரம் லலித்திற்கு வழங்கப்பட்டிருந்தது. அசோக டி சில்வா மகாவலி அபிவிருத்தித் திட்டத்தினுள் உள்வாங்கப்படுகின்ற பகுதி எனும் போர்வையில் மணலாற்றின் நிர்வாகத்தை பெரும்பான்மைச் சிங்களவர்களைக் கொண்ட‌ அநுராதபுரத்திற்கு லலித் மாற்றினார்.இப்பகுதியை முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததுடன் தமிழர்களை இப்பகுதியிலிருந்து முற்றாக வெளியேற்றினார் லலித்.வவுனியா, திருகோணமலை, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் தமிழ் நிர்வாக அதிகாரிகள் கூட இராணுவத்தினரின் அனுமதியின்றி இப்பகுதிக்குள் செல்வது தடுக்கப்பட்டது. இராணுவத் தேவைக்காக வலி ஓயா (மணலாறு) தனிமாவட்டமாக கணிக்கப்பட்டு இப்பகுதிக்கென்று தனியான ஒருங்கிணைப்பு அதிகாரியொருவரும் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டார். லலித்தின் கூட்டுச் சேவைகள் தலைமையகத்திற்கு முன்னாள் கடற்படைத் தளபதியான அசோக டி சில்வா நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவியாளராக முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும், மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமாகக் கடமையாற்றிய டி.ஜே. பண்டாரகொட நியமிக்கப்பட்டார். பண்டாரகொடவுக்கு வழங்கப்பட்ட ஒரே பணி வலி ஓயா திட்டம் வெற்றிகரமாக நடத்தப்படுவதைக் கண்காணிப்பது மட்டும்தான். பண்டாரகொடவை ஜெயார் தனது சொந்த விருப்பின் பெயரில் முன்னர் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமித்திருந்தார். ஜெயாரின் அபிமானத்தைப் பெற்றிருந்த பண்டாரகொடவும் தனது நிர்வாகத்தின்கீழ் திருகோணமலை மாவட்டத்தில் பெரும் எடுப்பிலான சிங்களக் குடியேற்றங்களை முன்னெடுத்ததுடன், தமிழர்களின் சனத்தொகை வீதாசாரத்தில் பாரிய வீழ்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தார். இவரையே வலி ஓயா திட்டத்திற்கும் அரசாங்கம் நியமித்திருந்தது. லலித்தினால் ஆரம்பிக்கப்பட்ட கூட்டுச் சேவைகள் தலைமையகம் உடனடியாகச் செயற்பாட்டில் இறங்கியது. இதன் செயற்பாடு குறித்து 1984 ஆம் ஆண்டு மார்கழி 2 ஆம் திகதி வீக்கெண்ட் எனும் வார இறுதிப் பத்திரிக்கையில் டொன் மிதுன இவ்வாறு எழுதுகிறார், "கிழக்கு மாகாணத்தில் சர்ச்சைக்குரிய‌ வடமுனையில் சிங்களவர்களைக் குடியேற்ற அரசு முன்னெடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்ததையடுத்து அவர்களை வேறு பகுதியில் குடியமர்த்தவேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டிருந்தது. ஆகவே, பதவியாவின் எல்லையோரமாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் நெடுங்கேணியிலிருந்து பதவியா வரையான பகுதிகளை சிங்களப் பாதுகாப்பு அரணாக மாற்றும் நோக்கத்துடன் சிங்களக் குடியேற்றத்தை உருவாக்க‌ அரசு தீர்மானித்திருக்கிறது". ஆரியகுண்டம், டொலர் பண்ணை மற்றும் அதனையண்டிய பகுதிகளில் இருந்த காடுகளை அரசு அழித்து துப்பரவு செய்ய ஆரம்பித்தது. பதவியா சிங்களக் குடியேற்றத்திலிருந்து டொலர் பண்ணை, கும்பகர்ணன் மலை, ஆரியகுண்டம், கொக்குச்சான்குளம், கொக்குத்தொடுவாய் மற்றும் வெடுக்கன் மலை ஆகிய பகுதிகளை இணைக்க நான்கு சாலைகள் அமைக்கப்பட்டன. வலி ஓயா குடியேற்றத்தை முன்னெடுக்க இராணுவ வாகனங்கள், விவசாயக் கூட்டுத்தாபனத்தின் வாகனங்கள், இல்மனைட் தொழிற்சாலையின் வாகனங்கள், புகையிலைக் கூட்டுத்தாபனத்தின் வாகனங்கள், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வாகனங்கள் என்பன பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. டொலர் பண்ணைப் பகுதியில் உடனடியாகவே சில சிங்களக் குடும்பங்கள் குடியேறத் தொடங்கியிருந்தன. வவுனியா மற்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர்கள், உதவி அரசாங்க அதிபர்கள், காணி அதிகாரிகள் என்று தமிழ் பேசும் எவருமே வலி ஓயாத் திட்டம் குறித்து எதுவித தகவல்களையும் அறிந்துகொள்ளாதபடி இருட்டில் வைக்கப்பட்டிருந்தனர். இப்பகுதியினை இராணுவம் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன் விமானப்படையினருடன் இணைந்து தொடர்ச்சியான ரோந்துகளும் இப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு, வெளியார் இப்பகுதிக்குள் நுழைவதை முற்றாகத் தடுத்து வந்தனர். முல்லைத்தீவில் வசித்துவந்த தமிழர்கள் இரவுவேளைகளில் தொடர்ச்சியாக பாரிய புல்டோசர்கள் காட்டுப்பகுதிகளில் இயங்கிவருவதைக் கேட்டதுடன், பாரிய குழாய்கள் அப்பகுதி நோக்கிக் கொண்டுசெல்லப்படுவதையும் கண்டிருக்கின்றனர். பிரபல சிங்களச் செய்தியாளர் ஒருவரின் அறிக்கை கீழே. "தமிழர்களின் தாயகமான தமிழ் ஈழத்தின் முக்கிய மாகாணங்களான வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் முக்கிய நிலப்பகுதியை உடைத்து சிங்களக் குடியேற்றம் ஒன்றினை ஏற்படுத்து அரச உயர்மட்டத்தின் இரகசியத் திட்டத்தின் ஆரம்பமே இந்தக் குடியேற்றமாகும்". இத்திட்டத்தின்படி 200,000 சிங்களவர்களை வலி ஓயாவில் அரசு குடியேற்றியதாக குணரட்ண பின்னாட்களில் என்னிடம் கூறினார். கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் குடியேற்றப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் ஆகும். களவு, கள்ளச்சாரயம் காய்ச்சுதல், வன்முறைகளில் ஈடுபடுதல், பொதுமக்களை அச்சுருத்தல் ஆகிய குற்றங்களுக்காகத் தென்பகுதிச் சிறைகளில் அடைக்கப்பட்டவர்களையே குடும்பங்களுடன் இப்பகுதியில் அரசு குடியேற்றியது. பின்னாட்களில் இப்பண்ணைகளில் அரசால் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதல்களையடுத்து பல தென்பகுதி ஊடகங்களும், அரச ஊடகங்களும் கடுமையான பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருந்தன. தாக்குதலில் உயிர்தப்பிய சில சிங்களவர்கள் பேசும்போது சிங்களக் குடியேற்றத்திற்கு அருகில் இருந்த தமிழ்க் கிராமங்களுக்குள் சென்ற இராணுவத்தினரும், சிறைக் காவலர்களும், சிறைக் கைதிகளும் தமிழர்களைத் தொடர்ச்சியாகத் துன்புறுத்தி வந்ததுடன், அப்பகுதிகளில் இருந்து தமிழர்களை விரட்டுவதிலும் ஈடுபட்டு வந்ததை ஒத்துக்கொண்டிருந்தனர். சிங்களக் குடியேற்றத்திற்கு அயலில் இருந்த‌ தமிழ்க் கிராமங்களில் இளைஞர்களைத் தாக்கித் துன்புறுத்தியதுடன், அங்கிருந்து கால்நடைகளையும் விவசாயப் பொருட்களையும் மிரட்டி எடுத்துவந்ததாகவும் அவர்கள் மேலும் கூறினர். மனிதவுரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எனும் அமைப்பினர் புலிகளின் தாக்குதலின் பின்னர் உயிர்தப்பியவர்களுடன் நடத்திய நேர்காணலில் சில விடயங்களைச் சிங்களக் குடியேற்றவாசிகள் தெரிவித்திருந்தனர். சிங்களக் கைதிகளையும், காடையர்களையும் இப்பகுதியில் குடியேற்றியதன் இன்னொரு நோக்கம் அயலில் உள்ள தமிழர்களை விரட்டுவது ஆகும் என்று கூறினர். மேலும் பல தமிழ்ப்பெண்களை இழுத்துவந்து கூட்டாகப் பாலியல் வன்புணர்வில் சிங்களவர்கள் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இராணுவத்தினரால் இழுத்துவரப்படும் தமிழ்ப்பெண்கள் முதலில் இராணுவத்தால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுள்ளாக்கப்பட்டபின்னர் சிறைக் காவலர்களிடம் கொடுக்கப்படுவார்கள் என்றும், சிறைக்காவலர்கள அவர்களைக் கூட்டாக வன்புணர்ந்த பின்னர் இறுதியாக சிங்களக் கைதிகள் அப்பெண்கள் மீது வன்புணர்வில் ஈடுபடுவார்கள் என்றும் உயிர்தப்பிய சிங்களவர்கள் தெரிவித்தனர். Jessi Nona, Hemasiri Fernando and others also spoke of harassment of Tamils living in surrounding villages by soldiers, prison guards and some convicts. Those from the settlement stole poultry, cattle and agricultural produce. They assaulted Tamil youths. The UTHR (J) report quotes a Sinhala activist from a leftwing political group who went to Dollar and Kent Farms for humanitarian work following the LTTE attack thus: Winner of the Young Journalist Award for 2002, Amantha Perera of the Sunday Leader, in his On the Spot Report published in his paper of 19 May 2002, says: "The convicts, in fact, had been used to stealing from Tamil villages from the area and incidents of rape too had been attributed to the convicts".
  10. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களின் உளவுப்படையான மொசாட்டின் ஆலோசனைகளின் படி செயற்பட்ட லலித் லலித்தும் அவருடன் வந்தோரும் நெடுங்கேணிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்திய வம்சாவளித் தமிழர்கள் அடைக்கலமாகியிருந்த கென்ட் மற்றும் டொலர் எனப்படும் செழிப்பான பண்ணைகளுக்கு நாம் அழைத்துச் செல்லப்பட்டோம். சிறு தானியப் பயிர்ச்செய்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்களை பேட்டி காண்பதற்கு எமக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தமக்குப் போதுமான வருமானம் கிடைப்பதால் தாம் மகிழ்ச்சியாக அங்கு வாழ்ந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். அப்பிரதேசமெங்கும் பச்சைப் பசேல் என்று காட்சியளித்தது. காந்தியம் பண்ணையில் அடைக்கலமாகி வாழும் இந்திய வம்சாவளித் தமிழர் ஒருவர் ஆனால், அதேவருடம் ஆனியில் இப்பகுதியில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்த அவர்கள் விரட்டப்பட்டனர். வவுனியா பொலீஸ் அத்தியட்சகர் ஹேரத் இந்த விரட்டியடிப்பிற்கான சூழ்நிலையினை ஏற்படுத்தினார். இப்பண்ணைகள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பாவிக்கப்பட்டு வருவதாக சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களுக்கு அவர் வதந்திகளைக் கசியவிட்டார். அதன்பிறகு இப்பண்ணைகள் வேலைபார்த்துவந்த மலையகத்தைச் சேர்ந்த விவசாயிகள் பஸ்வண்டிகளில் ஏற்றப்பட்டு, மலையகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு தெருக்களில் அநாதரவாக விடப்பட்டனர். இந்திய வம்சாவளித் தமிழர்களின் தலைவரான தொண்டைமானை இச்செயல் கடும் சினங்கொள்ள வைத்தது. மந்திரிசபையில் இந்த விவகாரத்தை தான் எழுப்பியதாக அவர் என்னிடம் கூறினார். அதற்குப் பதிலளித்த இனவாதியான சிறில் மத்தியூ பண்ணைகளில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வந்ததாக கர்ஜித்தார். சிறில் மத்தியூவிற்கு ஆதரவாக காமிணி திசாநாயக்கவும் அமைச்சரவையில் தொண்டைமானுடன் தர்க்கித்தார். அங்கு பேசிய லலித் அதுலத் முதலி அரசாங்கத்தின் ஒரே நோக்கம் தமிழ்ப் பயங்கரவாதத்தை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்பதுதான் என்று கூறினார். பின்னர் ஜெயாருடனான தனியான சந்திப்பொன்றில் இப்பிரச்சினை குறித்து தான் பேசியதாக தொண்டைமான் கூறினார். ஆனால், சிரித்துக்கொண்டே தொண்டைமான் கூறிய விடயங்களை அவர் புறங்கையால் தட்டிவிட்டதாக தொண்டைமான் கூறினார். "இதன் பின்னால் இருந்தது ஜெயார் தான் என்பதை நான் அப்போது உணர்ந்துகொண்டேன்" என்று தொண்டைமான் என்னிடம் கூறினார். எஸ் தொண்டைமான் டொலர் பண்ணையிலிருந்து துரத்தப்பட்ட இரு மலையகத் தமிழ்க் குடும்பங்களை தொண்டைமான் சந்தித்துப் பேசினார். அக்குடும்பங்களில் ஒன்றின் தலைவரான‌ பாண்டியன் அவிசாவளையில் அமைந்திருந்த இறப்பர் தோட்டத்தில் பணியாற்றி வந்தவர். அவர் வாழ்ந்துவந்த லயன் அறை 1977 ஆம் ஆண்டுக் கலவரத்தின்போது சிங்களவர்களால் எரிக்கப்பட்டிருந்தது. சிலகாலம் அகதிகள் முகாம் ஒன்றில் தங்கியிருந்துவிட்டு பின்னர் வவுனியாவுக்குச் சென்றது அவரது குடும்பம். வவுனியாவில் அவரது குடும்பத்தைப் போலவே சிங்களவர்களால் மலையகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பல இந்திய வம்சாவளித் தமிழர்கள் அடைக்கலமாகியிருப்பதை அவர் கண்டார். "நாங்கள் மகிழ்ச்சியாகவே வாழ்ந்துவந்தோம். எமது பண்ணையில் கடலையும், மிளகாயும் பயிரிடப்பட்டிருந்தன. நல்ல விளைச்சலும் எமக்குக் கிடைத்தது. 1984 ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்களை இப்பண்ணைகளில் இருந்து பொலீஸார் விரட்டியடித்துவருவதாக எமக்குத் தகவல் கிடைத்தது. வெள்ளியன்று மாலை நான்கு பஸ்களில் பொலீஸார் வந்திறங்கினர். ஒலிபெருக்கியூடாகப் பேசிய பொலீஸார் அப்பகுதியில் இருந்த ஆண்களையெல்லாம் முன்னால் வரும்படி கூறினார்கள். அவர்கள் கூறியதன்படியே வீதியில் நாம் வரிசையில் வந்து நின்றோம். எங்களனைவரையும் மீண்டும் எமது குடிசைகளுக்குச் சென்று அங்கிருந்த மனைவி மற்றும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, உடைமைகளையும் எடுத்துக்கொண்டு மீண்டும் வீதிக்கு வருமாறு பொலீஸார் கட்டளையிட்டனர். ஏன் என்று கேட்ட சிலர் பொலீஸாரினால் கடுமையாகத் தாக்கப்பட்டனர்" என்று பாண்டியன் கூறினார். "பின்னர் எங்களை தாம் கொண்டுவந்த பஸ்வண்டிகளில் ஏறுமாறு பொலீஸார் கட்டளையிட்டனர். நாம் மறுக்கத் தொடங்கினோம். உடனடியாக எம்மீது தாக்குதல் நடத்திய பொலீஸார் எம்மைப் பலவந்தமாக பஸ்களில் ஏற்றினர். எம்மீது தாக்குதல் நடத்தப்படுவதைப் பார்த்து அழுதுகொண்டிருந்த எமது குடும்பங்களையும் பொலீஸார் பஸ்களில் பலவந்தமாக ஏற்றினர். இரவோடு இரவாக நாம் அங்கிருந்து மலையகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டோம். காலை புலரும் வேளைக்கு முன்னர் பஸ்களில் இருந்து எம்மை வீதியில் தள்ளி இறக்கிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். பொழுது புலரும்போது நாம் இறக்கிவிடப்பட்டிருப்பது ஹட்டன் நகரம் என்பது எமக்குப் புரிந்தது. பின்னர் அங்கிருந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அலுவலகத்திற்குச் சென்றோம்" என்று பாண்டியன் மேலும் கூறினார். இரண்டாவது குடும்பத்தின் தலைவரான வடிவேலும் இதே சம்பவத்தை தானும் நினைவுகூர்ந்தார். மேலும், பொலீஸார் தம்மை பலவந்தமாக பஸ்களில் ஏற்றிய வேளை தமது குழந்தைகளின் ஒன்று கடும் சுகவீனமுற்று இருந்ததாகவும், பொலீஸார் தம்மீது நடத்திய தாக்குதல்களைக் கண்ணுற்ற அவரது குழந்தை கடுமையான அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டு சில வாரங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார். இந்தியாவில் இருந்து வெளிவந்த சஞ்சிகை ஒன்றிற்காக இச்செய்தியை நான் அப்போது எழுதியிருந்தேன். இந்திய வம்சாவளித் தமிழர்களை இப்பண்ணைகளில் இருந்து விரட்டியடிக்கும் கைங்கரியத்தை லலித் மிகவும் சாதுரியமாகக் கையாண்டார். தனது நடவடிக்கைக்கான சூழலை ஊடகங்களில் பொய்யான செய்திகளைப் பரவ விட்டதன் மூலம் உருவாக்கிக் கொண்டார். ஆனால், பொதுக்கூட்டங்களில் பேசிய லலித் தான் மலையகத் தமிழர்களையோ இலங்கைத் தமிழர்களையோ வெறுக்கவில்லை என்று தொடர்ச்சியாகக் கூறிவந்தார். பயங்கரவாதிகளிடமிருந்து அவர்களைக் காக்கவே தான் பாடுபட்டு வருவதாக அவர் வாதாடினார். இந்திய வம்சாவளித் தமிழர்களை அச்சுருத்தி, அவர்களின் பிள்ளைகளைக் கடத்திச் சென்று பயங்கவாத‌ நடவடிக்கைகளில் ஈடுபடுத்த தமிழ்ப் பயங்கரவாதிகள் முயன்றுவருவதாக அவர் மேலும் கூறினார். இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழ்ந்துவரும் கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் அரசாங்கத்தின் நிலத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அவை அரசாங்கத்தால் குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறிய லலித், அவற்றினை அரசாங்கம் மீள எடுத்துக்கொள்ளும் காலம் வந்துவிட்டதாகவும் கூறினார். மேலும், இந்திய வம்சாவளித் தமிழர்கள் இப்பகுதிகளில் இருந்து விரட்டப்பட்ட பின்னர் இப்பகுதி திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டு கைதிகள் குடியமர்த்தப்படுவர் என்றும், அவர்களுடன் அவர்களது குடும்பங்களும் இப்பகுதிகளில் குடியேறி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார். கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் அரசாங்கத்தால் மீளக் கையகப்படுத்தப்பட்டதுடன் அவற்றில் திறந்த வெளிச் சிறைச்சாலைகளை அமைப்பதாக விசேட வர்த்தமாணி அறிவித்தல் மூலம் அரசு தெரிவித்தது. சில நாட்களிலேயே சுமார் 450 கைதிகளும் அவர்களது குடும்பங்களும் இப்பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். இந்திய வம்சாவளித் தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்டு செழிப்பாக வளர்க்கப்பட்டு வந்த பயிர்களும், தமிழர்கள் வாழ்ந்து வந்த நிரந்தரக் குடிசைகளும் சிங்களக் கைதிகளுக்கு வழங்கப்பட்டன. சிங்களக் குற்றவாளிகளை வெற்றிகரமாக நெடுங்கேணியின் டொலர் மற்றும் கென்ட் பண்ணைகளில் குடியேற்றிய கையோடு ஒன்றிணைந்த படைகளின் விசேட படையணியின் தலைமையகத்தினை அநுராதபுரத்தில் லலித் நிர்மாணித்தார். இஸ்ரேலிய புலநாய்வுத்துறையான மொசாட்டின் பயங்கரவாத எதிர்ப்புத் திட்டத்திற்கமைய தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டின் அடித்தளத்தினைச் சிதைக்கும் நடவடிக்கைகளை இந்த தலைமையகத்திலிருந்தே லலித் முன்னெடுக்க ஆரம்பித்தார். இஸ்ரேலிய உளவுப்படையான மொசாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைத் திட்டம் பின்வரும் விடயங்களைக் கொண்டிருந்தது, 1. இப்பகுதிகளில் இருந்து தமிழர்களை முற்றாக விரட்டியடிப்பது. 2. தமிழர்கள் வாழும் கிராமங்களை அழிப்பதன் ஊடாக தீவிரவாதிகளுக்கு உதவிகள் கிடைப்பதைத் தடுப்பது. 3. தமிழர்களால் நேற்கொள்ளப்பட்டு வரும் பயிர்ச்செய்கைகளை அழிப்பதுடன் அவர்கள் தொடர்ந்தும் இப்பகுதிகளில் பயிர்ச்செய்களில் ஈடுபடுவதைத் தடுப்பது. இவ்வகையான திட்டத்தினை மலேசியாவை ஆக்கிரமித்து நின்றவேளை பிரிட்டிஷாரும் நடைமுறைப்படுத்தியிருந்தனர். அன்று அவர்கள் பயன்படுத்திய திட்டத்தினை தமக்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்த இஸ்ரேலியர்கள், எல்லையோர யூதக் குடியேற்றங்களை உருவாக்கி அப்பகுதியூடாக ஊடறுத்து உள்நுழையும் பலஸ்த்தீனப் போராளிகளை தடுக்க முயன்று வந்தனர். தாம் ஆக்கிரமித்துவரும் பலஸ்த்தீனத்தில் தாம் கைக்கொள்ளும் திட்டத்தினையே இலங்கையும் கைக்கொள்ள வேண்டும் என்று மொசாட் அதிகாரிகள் லலித்திடம் வலியுறுத்திவந்தனர். "பயங்கரவாதிகள் உள்நுழையும் வழிகளை அடைத்துவிடுங்கள், அவர்களுக்கான வளங்களை தடுத்துவிடுங்கள்" என்பதே அவர்களின் தாரக மந்திரமாகும். தமிழர்களின் தாயகத்திற்கான அடித்தளத்தினைச் சிதைத்து ஜெயாருக்குப் பின்னர் ஜனாதிபதியாகும் கனவில் இருந்த லலித்திற்கு மொசாட் அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகள் மிகுந்த திருப்தியைக் கொடுத்தன.
  11. வலி ஓயவாக மாறிய தமிழர்களின் தாயகப்பகுதியான மணலாறு தமிழர் தாயகத்தின் இரு மாவட்டங்களான திருகோணமலைக்கும் முல்லைத்தீவிற்கும் இடையிலான நிலத்தொடர்பினை தந்திரமாக அறுத்தெறிவதுதான் யான் ஓயா அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தினை வகுத்தவர்களின் நோக்கம் இப்பகுதியூடாகப் பாய்ந்து, திருகோணமலையின் வடக்கில் அமைந்திருக்கும் திரியாய்ப் பகுதிக்கூடாகக் கடலில் கலக்கும் யான் ஓயாவின் கரைகளில் சிங்களவர்களைக் குடியேற்றுவதன் மூலம் இதனைச் செய்வதாகும். யான் ஓயாவின் கரைகளில் சிங்கள விவசாயிகளையும், முல்லைத்தீவின் கரைகளில் சிங்கள மீனவர்களையும் குடியமர்த்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது மாதுரு ஓயா ஆக்கிரமிப்புத் திட்டம் தோல்வியடைவதை உணர்ந்த மகாவலி அபிவிருத்தி அமைச்சின் தலைவர் பண்டிதரட்ண, மாதுரு ஓயாவிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள விவசாயிகளைக் குடியமர்த்துவதற்கு வவுனியாவுக்கு அருகில் உகந்த பகுதியொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பணித்து கருணாதிலக்கவை அனுப்பிவைத்தார். 1983 ஆம் ஆண்டு ஐப்பசி மாத முதல்வாரத்தில் வவுனியாவுக்குச் சென்ற கருணாதிலக்க, வவுனியாவின் பொலீஸ் அத்தியட்சகர் ஆதர் ஹேரத்தையும், வவுனியாவுக்கான மேலதிக அரசாங்க அதிபரான சிங்களவரையும் சந்தித்துப் பேசினார். முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கும் நெடுங்கேணிக்கு கருணாதிலக்கவை அழைத்துச் சென்ற அவர்கள் இருவரும், அப்பகுதியில் காணப்பட்ட செழிப்பான விவசாய‌ நிலங்களை அவருக்குக் காண்பித்தனர். இப்பகுதியின் பெரும்பாலான நிலங்களில் பாரம்பரிய தமிழ் விவசாயக் கிராமங்கள் காணப்பட்டன. மேலும், மீதியிடங்களில் தமிழருக்குச் சொந்தமான தனியார் நிறுவனங்கள் பண்ணைகளை குறுகிய மற்றும் நீண்டகால குத்தகை அடிப்படையில் அமைத்துச் செயற்பட்டு வந்தன. 1965 ஆம் ஆண்டிலிருந்து 99 வருடக் குத்தகைக்கு இக்காணிகள் தமிழர்களுக்கு அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டிருந்தன. தனிப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு காணித் துண்டும் சுமார் 10 இலிருந்து 50 ஏக்கர்கள் வரை கொண்டிருந்தது. வியாபா நிறுவனங்கள் பாரிய பண்ணைகளை இப்பகுதியில் அமைத்திருந்ததுடன், இவ்வகையான 16 வியாபாரப் பண்ணைகள் சுமார் 1000 ஏக்கர்கள் அல்லது அதற்கும் அதிகமான நிலப்பரப்பினைக் கொண்டிருந்தன. அவ்வாறான பாரிய பண்ணைகளில் நாவலர் பண்ணை, சிலோன் தியெட்டர்ஸ் பண்ணை, ரயில்வே குறூப் பண்ணை, போஸ்ட் மாஸ்ட்டர் பண்ணை, கென்ட் பண்ணை, டொலர் பண்ணை ஆகியவற்றைக் குறிப்பிட முடியும். 1977 ஆம் ஆண்டு மலையகத்தில் தமிழர்கள் மீது சிங்களவர்களால் நடத்தப்பட்ட படுகொலைகளையடுத்து அங்கிருந்து விரட்டப்பட்ட பல தமிழர்கள் கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் வாழ்ந்துவந்தனர். இப்பண்ணைகளில் இருந்து பெறப்பட்ட சிறப்பான அறுவடைகளையடுத்து இப்பெயர்கள் அனைவராலும் அக்காலத்தில் அறியப்பட்டிருந்தன. இக்காணிகளை கருணாதிலக்கவிடம் காண்பித்த பொலீஸ் அத்தியட்சகர் இவற்றில் வசிப்பவர்கள் பயங்கரவாதிகள் என்றும், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் என்றும் கூறியதோடு ஈ.பி.ஆர்.எல்.எப் பயங்கரவாதிகள் இந்தப் பண்ணைகளில் தங்கியிருப்பதாகவும் கூறினார். இப்பண்ணைகளினால் பதவிய எனும் சிங்களக் குடியிருப்பின் வடக்கு நோக்கிய விஸ்த்தரிப்பு தடைப்பட்டு நிற்பதாகவும் அவர் தெரிவித்தார். ஐப்பசி 12 ஆம் திகதி தனது அறிக்கையினை கருணாதிலக்க மகாவலி அதிகார சபையிடம் கையளித்தார். அவரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் பின்வருமாறு, "சட்டத்திற்குப் புறம்பானதும், தேசியத்திற்கு எதிரானதுமான இத்தமிழ்க் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் குடியேற்றங்களினால் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்கள் தட்டுக்கப்பட்டு வருவதோடு, தேசியப் பாதுகாப்பிற்கும் இவற்றால் அச்சுருத்தல் ஏற்பட்டிருக்கிறது". வடக்கு நோக்கி விஸ்த்தரிக்கப்பட்டு வந்த பதவியா சிங்களக் குடியேற்றம் ஆனால், நெடுங்கேணியில் சிங்களவர்களைக் குடியேற்றும் திட்டத்தினை ஜெயாரிடம் கொண்டுசெல்வதில் மகாவலி அபிவிருத்திச் சபைக்கு ஒரு சிக்கல் இருந்தது. ஏனென்றால், மாதுரு ஓயா ஆக்கிரமிப்புத் திட்டம் காமிணியின் தாந்தோன்றித்தனத்தினால் பிசுபிசுத்துப்போனதனால் கோபம் அடைந்திருந்த ஜெயார், யான் ஓயாத் திட்டத்தை லலித் அதுலத் முதலியிடமே கொடுத்திருந்தார். அவரும் அதனை மிகவும் தந்திரமாக நடைமுறைப்படுத்திக்கொண்டிருந்தார். 1984 ஆம் ஆண்டு பங்குனி 24 ஆம் திகதி நாட்டின் தேசியப் பாதுகாப்பு அமைச்சராகவும், உதவிப் பந்தோபஸ்த்து அமைச்சராகவும் லலித் நியமிக்கப்பட்டார். விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட திட்டமான கொவி பொல என்பதை மாங்குளத்தில் ஆரம்பித்து வைக்க அப்பகுதிக்குச் சென்றார் லலித் அதுலத் முதலி. அவரது விஜயத்தை செய்தியாக்கும் நோக்குடன் அங்குசென்ற பத்திரிக்கையாளர் குழுவில் நானும் அங்கம் வகித்தேன். லலித்தும், காமிணியும் செய்தித்தாள்களின் முதற்பக்கங்களில் எவ்வாறு இடம்பிடிப்பது எனும் கைங்கரியத்தில் மிகவும் கைதேர்ந்தவர்களாகத் திகழ்ந்தனர். இவர்களிடமிருந்து முக்கியமான செய்திகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் பத்திரிக்கையாளர்களும் இவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கிச் செய்தி வெளியிட்டனர். இவர்கள் இருவர் பற்றியும் செய்திகளை வெளியிட எனக்குச் சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தன. இதற்கிடையில், 1984 ஆம் ஆண்டு கார்த்திகை 26 ஆம் திகதி லலித்தின் பிறந்தநாளிற்கு நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது அவர் என்னிடம் பின்வருமாறு கூறினார், "சபா, இன்றைக்கு பிரபாகரனுக்கும் பிறந்தநாள் என்பதை நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள். நாங்கள் இருவரும் ஒரே நாளில், ஒரே மாதத்தில் பிறந்திருக்கிறோம். அவர் என்னைவிடவும் வயதில் நன்கு இளையவர். நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரம வைரிகளாக மாறியிருக்கிறோம். இருவரில் எவர் வெற்றிபெறப்போகிறோம் என்பது எனக்குத் தெரியாதுவிட்டாலும் ஒன்று மட்டும் நிச்சயம். நாம் இருவரும் இலங்கையின் சரித்திரத்தில் முக்கியமான பங்கினை ஆற்றவே படைக்கப்பட்டிருக்கிறோம்" என்று கூறினார். பிரபாகரனோ தமிழரின் தனிநடான ஈழத்தை அமைக்கப் பாடுபட்டு வந்தார். ஆனால் லலித்தோ அந்த ஈழத்திற்கான அடித்தளத்தை அழிக்கப் பாடுபட்டு வந்தார். தமிழர் தாயகத்தின் அடித்தளத்தை அழிக்கும் அவரது முயற்சியின் முதற்பகுதியான மாங்குளம் - நெடுங்கேணிப் பகுதியை அவருடன் சென்று பார்க்க எனக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவருடன் பயணித்த ஊடகவியலாளர் குழுவில் நானும் இருந்தேன். வழமைபோல கொவி பொல (விவசாயிகள் சந்தை) சனிக்கிழமை காலை ஆரம்பமானது. தன்னுடன் வந்திருந்த செய்தியாளர்களுக்கு சிறப்பான செய்தியொன்றினை லலித் வழங்கினார். கொழும்பிலிருந்து வெள்ளிக்கிழமை வந்திருந்த செய்தியாளர்களும், வர்த்தகக் குழுவினரும் மாங்குளம் விருந்தினர் மாளிகையின் அன்றிரவு தங்கினர். அங்கு அவர்களுக்கு இரவு விருந்தொன்றும் வழங்கப்பட்டது. வவுனியா பொலீஸ் நிலையத்தின் அத்தியட்சகர் ஆதர் ஹேரத்தும் அந்த இரவுணவில் கலந்துகொண்டார். அவருடன் நீண்ட உரையாடல் ஒன்றில் நான் ஈடுபட்டேன். நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவன் என்பதைத் தெரிந்துவைத்திருந்த ஹேரத், மலையகத் தமிழர்கள் இப்பகுதிகளில் குடியேற்றப்பட்டுள்ளதால் வவுனியாவைச் சேர்ந்த தமிழ் விவசாயிகளுக்கும், யாழ்ப்பாணத்திலிருந்து இப்பகுதியில் குடியேறி வாழும் விவசாயிகளுக்கும் கடுமையான இடைஞ்சல் ஏற்பட்டிருப்பதாக என்னிடம் கூறினார். "இந்த இந்தியர்கள் மிகவும் குறைவான சம்பளத்திற்கு வேலை செய்கின்றனர். இதனால் இப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளிகள் வேலையின்றித் திண்டாடுகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்குச் சொந்தமாகவேண்டிய அரச காணிகளை இந்தியத் தமிழர்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்” என்று கூறினார். மறுநாள்க் காலை சந்தை திறந்துவைக்கப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த சில வியாபாரிகளுடன் பேசிய ஹேரத் முன்னாள் இரவு என்னிடம் கூறிய அதே முறைப்படுகளை அவர்களிடமும் கூறினார். இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கெதிராக யாழ்ப்பாணத் தமிழர்களையும், வன்னித் தமிழர்களையும் தூண்டிவிடவே ஹேரத் முயல்கிறார் என்பது எனக்கு அப்பட்டமாகத் தெரிந்தது.
  12. கைவிடப்பட்ட நிதியம் மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றத் திட்டம் குறித்த தகவல்கள் வெளியே வருவதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து காமிணி கவலைப்படவில்லை. தனது அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு நவீன துட்டகைமுனுவாக சிங்களவரின் முன்னால் தன்னை அவர் காண்பிக்க நினைத்தார். ஆகவே, தனது உத்தியோகபூர்வ‌ வாசஸ்த்தலத்திற்கு முன்னணிச் சிங்கள வர்த்தகர்களை அழைத்த காமிணி தமிழரின் இலட்சியமான தமிழ் ஈழத்தின் அடித்தளத்தை எப்படி அழிக்கலாம் என்று ஆலோசனை நடத்தினார். தன்னுடைய‌ அமைச்சான மகாவலி அபிவிருத்திச் சபையில் பணிபுரியும் அதிகாரிகளை தமது இரகசியத் திட்டம் குறித்து வந்திருந்த வர்த்தகர்களுக்கு விளக்குமாறு அவர் கூறினார். தமது இரகசியத் திட்டம் இந்தியாவை உசுப்பேற்றிவிடும் என்பதனால், அரசாங்கத்தின் ஊடாக தமது திட்டத்தை நடைமுறைப்படுத்த இயலாது என்று அவர் தெரிவித்தார். ஆகவே தனியாரின் உதவியின் மூலம் பணம் திரட்டப்பட்டு சிங்கள குடியேற்றத் திட்டம் நடத்தப்படவேண்டும் என்று அவர் வாதிட்டார். காமிணி திசாநாயக்க‌ தாச முதலாளி காமினியிடம் பேசும்போது "இந்த இரகசியக் குடியேற்றம் குறித்து ஜனாதிபதி அறிவாரா?" என்று கேட்டார். அதற்கு ஆமென்று பதிலளித்தார் காமிணி. மேலும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து இக்குடியேற்றத்திட்டத்திற்குத் தேவையான பணத்தைத் தரமுடியும் என்று கூறியதாகவும் காமிணி குறிப்பிட்டார். அதன்பின்னர், நிதியத்திற்கான தகுந்த பெயர் ஒன்றினை தேடும்படியும், நல்லநாள் பார்த்து நிதியத்தை ஆரம்பிக்கலாம் என்றும் தாச முதலாளியிடம் கோரினார் காமிணி. தாச முதலாளி நிதியத்தின் தொடக்க நாள் நிகழ்வும் காமிணியின் வீட்டிலேயே நடைபெற்றது. தாச முதலாளி முதலாவதாக பத்து இலட்சம் ரூபாவுக்கான காசோலையினை நிதியத்திற்கு வழங்கினார். அன்று அங்கு வருகை தந்திருந்த ஏனைய சிங்கள வர்த்தகர்களும் தமது பங்களிப்பைச் செய்தனர். மொத்தமாக அன்று 35 லட்சம் ரூபாய்கள் நிதியத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், இவ்வாறு வழங்கப்பட்ட காசோலைகள் வங்கியில் மாற்றப்படும் முன்னரே ஜெயவர்த்தன இந்த விவகாரத்தில் தலையிட்டு, திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஹேர்மன் குணரட்ணவைக் கைது செய்ததுடன் தமிழர் காணிகளில் அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட சிங்களவர்களையும் அங்கிருந்து அகற்றினார். பதறிப்போன காமிணி, தனக்கும் மாதுரு ஓயாத் திட்டத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லையென்று நழுவி விட்டார். இந்தியாவிடமிருந்தும் சர்வதேசத்திடமிருந்தும் ஜெயார் மீது கடுமையான அழுத்தம் பிரியோகிக்கப்பட்டது. சென்னையில் அப்போது தங்கியிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இத்திட்டம் குறித்து இந்திரா காந்தியை எச்சரித்திருந்தனர். லண்டனில் இருந்து இந்திராவையும், பார்த்தசாரதியையும் தொடர்புகொண்டு பேசிய அமிர்தலிங்கம், "தமிழருக்கு ஜெயார் கொடுக்கவிருக்கும் இறுதித்தீர்வின் ஒரு அங்கமே அவர் முன்னெடுத்திருக்கும் மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றம்" என்று கூறியிருந்தார். என்னுடன் பின்னர் பேசிய அமிர்தலிங்கம் மாதுரு ஓயாத் திட்டம் குறித்து அறிந்துகொண்டபோது இந்திரா கோபப்பட்டதாகக் கூறினார். கொழும்பிலிருந்த இந்தியத் தூதரான சத்வாலிடம் இந்தியாவின் ஆட்சேபத்தினை ஜெயவர்த்தனவிடம் தெரிவிக்கும்படி இந்திய வெளியுறவுத்துறை கோரியது. அதன்படி, ஜெயாருடன் பேசிய சத்வால் மாதுரு ஓயா ஆக்கிரமிப்பை இந்தியா எதிர்க்கிறது என்று கூறினார். இதனால் ஆத்திரப்பட்ட ஜெயவர்த்தன, தனது கோபத்தினை காமிணி மீது காட்டினார். காமிணி தன்னை அவமானப்படுத்திவிட்டதாக அவர் கருதினார். இரகசியமாகத் தான் முன்னெடுக்க விரும்பிய ஆக்கிரமிப்புத் திட்டத்தினை காமிணி வெளிப்படையாகப் போட்டுடைத்து விட்டதாக அவர் உணர்ந்தார். 500 அல்லது 1000 பேருடன் ஆரம்பித்திருக்க வேண்டிய தனது திட்டத்தை, காமிணி ஒரே நேரத்தில் 45,000 சிங்களவர்களைக் குடியேற்ற முற்பட்டதன் மூலம் கெடுத்துவிட்டதாக அவர் காமிணி மீது கோபப்பட்டார். மகாவலி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் பல கூட்டங்களை ஜெயார் நடத்தினார். ஆக்கிரமிப்புத் திட்டத்தின் முன்னோடியான பண்டிதரட்ணவிடம் அப்பகுதியில் அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருக்கும் சிங்களவர்களை உடனடியாக விலக்கிவிடுமாறு பணித்தார். அதற்குப் பதிலளித்த பண்டிதரட்ண, "சிங்களவர்களை அங்கு அழைத்துச் சென்றது திம்புலாகலை பிக்குதான்" என்று பதிலளித்தார். இதனால் கோபமடைந்த ஜெயார், "மகாவலி அதிகார சபையினை திம்புலாகலை பிக்குவே நடத்துவதாக இருந்தால், நான் அவரை தலைவராக நியமிக்கிறேன், நீங்கள் எனக்குத் தேவையில்லை, வீட்டிற்குச் செல்லலாம்" என்று கூறினார். பண்டிதரட்ணவும் ஏனைய அதிகாரிகளும் மாதுரு ஓயா ஆக்கிரமிப்பினை சிறிய விடயமாகக் காண்பிக்க எத்தனித்தனர். உள்நாட்டுப் பத்திரிக்கைகளிலும், இந்தியாவின் ஊடகங்களிலும் வெளிவரும் அறிக்கைகள் ஊதிப் பெருப்பிக்கப்பட்டவை என்று அவர்கள் கூறினர். வெறும் 2000 சிங்கள விவசாயிகளே மாதுரு ஓயா ஆக்கிரமிப்புப் பகுதிக்குச் சென்றதாக அவர்கள் ஜெயாரிடம் கூறினர். ஆனால், கூட்டத்தில் கலந்துகொண்ட லலித் அதுலத் முதலியும் இன்னும் சிலரும் ஊடகங்களில் வந்த செய்திகள் உண்மைதான் என்று ஜெயாரிடம் வலியுறுத்தினர். மேலும், நேர்த்தியாகச் செய்யப்படவேண்டிய ஆக்கிரமிப்பினை காமிணி போன்றவர்கள் தவறாக வழிநடத்தி வெளிக்கொணர்ந்துவிட்டனர் என்று ஜெயாரிடம் கூறினர். காமிணியுடனான ஜெயாரின் தற்காலிக வெறுப்பினைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஜெயாருடன் நெருக்கமாகலாம் என்று லலித் கணக்குப்போட்டுக் கொண்டார். ஜெயார் செய்துவந்த அரசியல் நடைமுறை அவருக்கான படுகுழியினை அவரே தோண்டும்படி செய்துவிட்டிருந்தது. தனது அமைச்சர்களுக்கிடையே போட்டி மனப்பான்மையினை அவரே தூண்டிவிட்டார். லலித்தும் காமிணியும் இளமையான, அரசியலில் வளர வேண்டும் என்கிற ஆசையைக் கொண்டிருந்த மனிதர்கள். ஜெயாருக்குப் பின் கட்சியின் தலைமைப்பதவிக்குத் தாமே சரியானவர்கள் என்பதை இருவரும் தனித்தனியாக அவ்வப்போது வெளிப்படுத்தி வந்திருந்தனர். ஆனால், பிரதமாரான பிரேமதாசவும் கட்சியின் தலைமைப் பொறுப்பில் ஆர்வமாக இருந்தார். ஆனால், இவர்கள் மூவரிலும் காமிணியையே ஜெயார் அதிகம் விரும்பினார் என்பது இரகசியமல்ல. அமைச்சுக்களில் முக்கியமான காணிகள் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சு எனும் பதவி காமிணிக்கு வழங்கப்பட்டிருந்தது. லலித்தோ ஆரம்பத்திலிருந்தே எப்படியாவது ஜெயாருக்கு நெருக்கமாக வரவேண்டும் என்று அயராது முயன்று வந்திருந்தார். நான்கு இனவாதிகள் :காமிணி பொன்சேக்கா, லலித், காமிணி திசாநாயக்கா மற்றும் ஜெயார் இக்காலத்தில் ஜெயாருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த ஏ.ஜே.வில்சன் (தந்தை செல்வாவின் மருமகன்) முன்னாள் இந்தியத் தூதுவர் திக்சீத் எழுதிய "கொழும்பில் எனது பணி" எனும் புத்தகத்திற்கான உரையில் ஜெயாரின் இந்த மூன்று அமைச்சர்களிடையேயும் நிலவிவந்த போட்டி மனப்பான்மையினை தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். 1998 ஆம் ஆண்டு மாசி மாதம் 8 ஆம் திகதி ஐலண்ட் நாளிதழில் வில்சன் எழுதிய இவ்வுரையில், ஜெயாரின் மைதானத்தில் இந்த மூன்று அமைச்சர்களுக்கிடையேயும் நிகழ்த்தப்பட்டு வந்த சூழ்ச்சிகள் பற்றி எழுதியிருந்தார். "தனக்குப் பின்னர் ஜனாதிபதிப் பொறுப்பு காமிணிக்கே வழங்கப்படவேண்டும் என்று ஜெயார் விரும்பியிருந்தது ஒன்றும் இரகசியமல்ல. தொண்டைமானே ஒருமுறை காமிணி பற்றிப் பேசும்போது அவர் ஜெயாரின் செல்லப்பிள்ளை என்று குறிப்பிட்டிருந்தார். ஜெயாருடனான எனது சம்பாஷணைகளின்பொழுது காமிணிக்கு ஜெயார் தனது இதயத்தில் தனியான இடம் ஒன்றினைக் கொடுத்திருந்தார் என்பதை உணர்ந்துகொண்டேன். 1982 ஆம் ஆண்டுத் தேர்தல்களின் பின்னர் தொல்லைகொடுப்பவரான பிரதமர் பிரேமதாசவை அகற்றிவிட்டு காமிணியைப் பிரதமராக்கும் எண்ணம் ஜெயாருக்கு இருந்தது" என்று வில்சன் எழுதியிருந்தார். ஜெயாருக்குப் பின்னர் தான் தலைமைப் பொறுப்பினை எடுக்கமுடியாது என்பதை லலித் நன்கு அறிந்தே இருந்தார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் ஒன்றியத்தில் செயலாளராக ஆரம்பத்தில் பதவி வகித்து பின்னர் ஒன்றியத் தலைவராக வந்ததுபோல ஐக்கிய தேசியக் கட்சியில் பின்னாட்களில் இணைந்தபோதும் கூட ஒருநாள் நிச்சயமாக தலைமைப் பதவியினைப் பிடிப்பேன் என்று தனது ஆதரவாளர்களிடம் அவர் பலமுறை கூறியிருக்கிறார். லலித்திற்குக் கிடைத்த சந்தர்ப்பம் மாதுரு ஓயா ஆக்கிரமிப்புத் திட்டம் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அரசாங்கத்திற்கு அவப்பெயரினை ஏற்படுத்திய சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாகப் பாவிக்க லலித் நினைத்தார். மாதுரு ஓயா ஆக்கிரமிப்புத் திட்டம் வெளிவந்ததையடுத்து சர்வதேசத்தில் ஜெயாரின் பெயருக்கு இழுக்கு ஏற்பட்டிருப்பதாக ஜெயாரின் காதுகளில் உரைக்கத் தொடங்கினார் லலித். அக்காலப்பகுதியில் இந்தியாவிடமிருந்தும், சர்வதேசத்திடமிருந்தும் மிகக் கடுமையான அழுத்தம் ஜெயார் மீது பிரியோகிக்கப்பட்டு வந்தது. ஆகவே, ஜெயாரின் கோபம் காமிணி மீதும், பண்டிதரட்ண மீதும் திரும்பியது. அவர்களுடன் பேசுவதையே ஜெயார் தவிர்க்கத் தொடங்கினார். அவர்களுக்குச் செவிமடுப்பதையோ அல்லது அவர்கள் கூறுவதை நம்புவதையோ அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். போல் பெரேரா தனக்கு நெருக்கமான இன்னொரு அமைச்சரான போல் பெரேராவிடம் மாதுரு ஓயா ஆக்கிரமிப்புப் பகுதிக்கு மேலால் உலங்குவானூர்தியில் சென்று, நிலைமைகளை ஆராய்ந்து தனக்கு அறிவிக்குமாறு பணித்தார் ஜெயார். அதன்படி ஐப்பசி 1 ஆம் திகதி அப்பகுதியின் மேலாக வானூர்தியில் வலம் வந்தார் பெரேரா. அவர் கொழும்பிற்கு வந்தவுடன் அவருடன் தொலைபேசியில் நான் உரையாடினேன். உலங்கு வானூர்தியில் இருந்து பார்க்கும்போது சுமார் 20,000 குடிசைகளை அப்பகுதியெங்கும் தான் கண்டதாக பெரேரா என்னிடம் கூறினார். உடனடியாக செயலில் இறங்கிய ஜெயார், பெரேராவை பொலொன்னறுவை மாவட்டத்தில் மேலதிக அமைச்சராக நியமித்ததுடன் மாதுரு ஓயாவில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருக்கும் சிங்களவர்களை உடனடியாக அப்பகுதியிலிருந்து அகற்றுமாறு பணித்தார். தேவையேற்படின் பொலீஸ் மற்றும் இராணுவத்தினரின் உதவியினையும் கோரலாம் என்றும் அவருக்குக் கூறப்பட்டது. தன்னார்வ ஆயுதப் படைகளின் அதிகாரியான கேணல் பெனடிக்ட் சில்வா பெரேராவுக்கு உதவியாளராக ஜெயாரினால் நியமிக்கப்பட்டார். ஆனால், பெரேராவோ உடனடியாக செயலில் இறங்க விரும்பவில்லை. தனது பணிக்குச் சார்பான சூழ்நிலையினை ஊடகங்கள் ஊடாக உருவாக்க அவர் நினைத்தார். அவர் என்னிடம் ஒரு விசேட கதையொன்றினைக் கூறினார். அக்கதையின்படி, மாதுரு ஓயாவை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களவர்களிடம் தமது பகுதிகளுக்குத் திரும்புமாறு தான் கேட்கப்போவதாகக் கூறினார். அரசுக்குச் சொந்தமான நிலங்களை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் அதிகாரம் தனியாருக்கு இல்லையென்று தான் கூறப்போவதாக அவர் தெரிவித்தார். மேலும், தனது கோரிக்கைக்கு விவசாயிகள் இணங்காதவிடத்து வேறு வழியின்றி தான் பலத்தைப் பிரியோகிக்க வேண்டி ஏற்படும் என்பதையும் மிகவும் நாசுக்காக அவர் கூறினார். போல் பெரேரா தனக்குக் கொடுக்கப்பட்ட பணியினை மிகவும் திறம்படச் செய்யத் தொடங்கினார். தனது கோரிக்கையினை நிராகரித்து மாதுரு ஓயாவில் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட சிங்கள விவசாயிகளை பொலீஸாரையும் இராணுவத்தினரையும் கொண்டு அகற்றினார். பொலொன்னறுவைக்குச் சென்ற பெரேரா அங்கு இராணுவத்தினருடனும் பொலீஸாருடனும் சந்திப்புக்களை மேற்கொண்டார். மிகவும் தந்திரமாக செயற்படுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். "அவர்கள் அனைவருமே தவறாக வழிநடத்தப்பட்ட மக்கள். அவர்கள் மீது தாக்குதல் எதனையும் நடத்த வேண்டாம்" என்று அவர் படையினரிடமும், பொலீஸாரிடமும் கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் அங்கிருந்த சிங்கள விவசாயிகள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர். திம்புலாகலைப் பிக்குவும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். ஆரம்பத்தில் பொலீஸாரை உதாசீனம் செய்து அப்பகுதியில் தொடர்ந்தும் தங்கியிருக்க பிக்கு முயன்றபோதும், ஜெயாரின் கட்டளைக்கு அமைவாகவே தாம் அவரை வெளியேற்றுவதாகப் பொலீஸார் கூறியவுடன் அவர் அங்கிருந்து வெளியேறச் சம்மதித்தார். ஜெயாருக்கு நெருக்கமாகும் தனது முயற்சியில் லலித் சிறிது தூரம் தற்போது பயணித்திருந்தார். தேசியப் பாதுகாப்பிற்கான அமைச்சராகவும், உதவிப் பந்தோபஸ்த்து அமைச்சராகவும் ஜெயாரினால் நியமிக்கப்பட்ட அவர் எட்டு மாதங்களின் பின்னர், 1984 ஆம் ஆண்டு வைகாசி மாதம், அமைச்சரவையில் மிகப் பலம் பொறுத்தியவராக வலம்வரத் தொடங்கினார். இதனால் பிரேமதாசவுக்கான முதலாவது எதிரியாகவும் அவர் தெரியத் தொடங்கினார். காமிணி சிறிது சிறிதாக வெளிச்சத்திலிருந்து மறைந்து போய்க்கொண்டிருந்தார். தனது முக்கியத்துவத்தினை மீளக் கட்டியெழுப்ப காமிணிக்கு மூன்று வருடங்கள் பிடித்தது. இந்தியாவுக்கு நெருக்கமானவராகத் தன்னைக் காட்டிக்கொண்டதுடன், 1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு இலங்கை அரசு சார்பாக செயற்பட்டவர்களில் முக்கியமானவராகத் தன்னைக் காட்டிக்கொண்டதன் மூலமும் அந்நிலையினை அவரால் எய்தமுடிந்தது. மாதுரு ஓயா ஆக்கிரமிப்புத் திட்டத்தை இரத்துச் செய்ய ஜெயார் இட்ட ஆணையினை மீளப் பெறச் செய்யும் நோக்குடன் காமிணியையும், பண்டிதரட்ணவையும் சந்திக்க கொழும்பிற்குச் சென்றார் திம்புலாகலைப் பிக்கு. மகாவலி அமைச்சிற்குச் சென்ற அவரைச் சந்திக்க காமிணியும், பண்டிதரட்ணவும் மறுத்து விட்டனர். அதன்பின்னர் கொழும்பில் இயங்கிய அனைத்துச் செய்திதாள்களின் அலுவலகங்களுக்கும் அவர் சென்றார். லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு வந்த அவர் தினமின நாளிதழின் ஆசிரியரைச் சந்தித்தார். பின்னர் ஆசிரியரின் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த அவர் ஆசிரியர் அலுவலக ஊழியர்களிடம் பேசினார். தினமின ஆசிரியர்ப் பீடத்தின் அருகிலேயே டெயிலி நியூஸ் பத்திரிக்கையின் ஆசிரியர்ப் பீடமும் அமைந்திருந்தது. நான் அன்று அங்கு நின்றிருந்தேன். திம்புலாகலைப் பிக்கு மிகுந்த ஆவேசமாகக் காணப்பட்டார். உச்சஸ்த்தானியில் கடுமையாகப் பேசிக்கொண்டிருந்தார். சிங்கள நாட்டிற்கும், சிங்களத் தேசியத்திற்கும் எதிராக போல் பெரேரா செயற்பட்டுள்ளதாக அவர் கடுமையாகச் சாடினார். பெரேரா ஒரு கத்தோலிக்கர் என்பதாலேயே சிங்கள பெளத்தர்களுக்கெதிராகச் செயற்பட்டுள்ளதாக பிக்கு குற்றஞ்சுமத்தினார். தான் கொண்டுவந்த பெரிய குடையினை உயர்த்திக் காட்டிய பிக்கு, "அவனைக் கண்டால் இதனாலேயே அவனை அடிப்பேன்" என்று கத்தினார். மாதுரு ஓயா ஆக்கிரமிப்புத் திட்டத்திலிருந்து தன்னை அந்நியப்படுத்துவது ஜெயாருக்கு அன்று தேவையாக இருந்தது. தேவநாயகம் பதவி விலகிச் செல்வதை ஜெயார் விரும்பவில்லை. இன்னொரு இனக்கலவரம் ஆரம்பிக்கப்படுவதையும் அவர் விரும்பவில்லை. இவை எல்லாவற்றையும் விட, இந்தியா இராணுவ ரீதியில் இலங்கையில் தலையிடுவதை எப்படியாவது தடுத்துவிடவேண்டும் என்று அவர் கருதினார். மாதுரு ஓயா ஆக்கிரமிப்பின் மூலம் இந்திரா காந்தி மிகவும் சினங்கொண்டிருப்பதாக இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்த்தானிகர் பேர்ணாட் திலகரட்ண ஜெயாரிடம் அப்போது கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆகவே, இச்சிக்கலில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள சில விடயங்கள ஜெயாரினால் செய்யவேண்டியிருந்தது. முதலாவதாக ஹேர்மன் குணரட்ணவும் இன்னும் 40 மகாவலி உயர் அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், ஈழத்திற்கான அடித்தளத்தினைச் சிதைப்பதை ஜெயார் தொடர்ந்தும் முன்னெடுக்க கங்கணம் கட்டினார். தனது இரகசியத் திட்டத்தினைக் குழப்பியதற்காக காமிணி, ஜெயாரினால் ஓரங்கட்டப்பட்டார்.அப்பொறுப்பினை காமிணியின் எதிரியான லலித்திடம் ஜெயார் கொடுத்தார். யன் ஓயா அபிவிருத்தித் திட்டத்தினைக் கையாளும் பொறுப்பு லலித்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்த தகவல்களை அடுத்துவரும் பதிவுகளில் பார்க்கலாம்.
  13. நீதிபதியை, தலை சுற்ற வைத்த... விவாகரத்து வழக்கு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.