Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. கேள்வியிலே ஒரு தவறு இருப்பதை கவனித்தீர்களா Paanch? நீங்கள்தான் சிறீலங்காவில் இருந்து யேர்மனிக்கு வந்தீர்கள். உங்கள் பேரன் அல்ல. உங்கள் பேரன் பிறப்பால் யேர்மனியன். ஆக நீங்கள் வந்த காரணத்தைச் சொன்னால் போதும். அவர் புரிந்து கொள்வார்.
  2. ஜனாதிபதி பொது வேட்பாளருக்கும் பாதுகாப்பு கிடைத்ததாகக் கேள்வி
  3. கதை நல்லதுதான் முதல்பாதி நன்றாகச் சொல்லப்படிருந்தது. இரண்டாவது பாதி இழுவை. குறும் படத்துக்கான கதையை 2.30 மணித்தியாலத்துக்கு நீட்டி இருக்கிறார்கள். ஆனாலும் மோசமில்லை. பார்க்கக் கூடிய படம். அவரவர்களுக்கு தந்த பாத்திரங்களை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
  4. 1969 க.பொ.த. சாதாரணப் பரீட்சை. அன்று ஆங்கிலப்பாட சோதனை. நடுத்தர வயது மனிதர் ஒருவரும் பரீட்சை எழுத மண்டபத்திற்கு வந்திருந்தார். ஒரு நண்பன் சொன்னான், “ அவர்தான் தமிழரசுக்கட்சி எம்.பி. கே.துரைரத்தினம். சட்டம் படிக்க ஆங்கிலத்திலே கிறெடிற் தேவை. அதுக்குத்தான் சோதனைக்கு வந்திருக்கிறார்” என்றான். கே.துரைரத்தினம் முதலில் வாத்தியார். எம்பி ஆனதன் பின்னால் சட்டம் படித்தார். அரசியல் என்பது சட்டத்தோடு பின்னிப் பிணைந்தது. சட்டத்தரணிகள் எம்பிகளாக வருவது அனுகூலமே. எங்களுடைய பிள்ளையான் மாதிரி எம்ஜிஆர், காமராஜர் எல்லாம் மாநில முதல்வர்கள். ரீகன் ஒரு பட்டதாரி மட்டுமல்ல அவருக்கு வேறு தகமைகளும் இருக்கின்றன. எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது, “தமிழக அரசு சார்பாக, இலங்கைப் போராளிகளுக்கு ஆயுதம் வாங்க 4 கோடி தரப்படும்” என்று அறிவித்தார். அவரது அறிவித்தலைக் கேட்ட இந்திரா காந்தி மிரண்டு போனார். “யோவ் இதெல்லாம் மத்திய அரசு செய்யும் வேலை. உனது மாநிலத்தை மட்டும் பார் போதும்” என இந்திரா காந்தி அதட்டி வைக்க, கருணாநிதியிடம் மாட்டிக் கொண்டார். உடனடியாக பல்டி அடித்து, தமிழர்களது புனர்வாழ்வுக்காக தனது சொந்தப் பணம் (?) நாலு கோடியை புலிகளுக்குக் கொடுத்து தப்பித்துக் கொண்டார். அரசியல் அறிவு மட்டுமல்ல, சட்டமும் தெரிந்திருக்க வேண்டும்.
  5. theeya, உண்மைதான். இலங்கையில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் இந்தியாவில் திரையிடப்படுவதில்லை என்ற உங்கள் கருத்து சரியானதுதான். உள்குத்தாகவும் இருக்கலாம். உள் நோக்கமாகவும் இருக்கலாம். சிறீமா காலத்தில் (எழுபதுகளில்) இந்தியத் திரைப்படங்கள் மட்டுப் படுத்தப்பட்டன. அப்பொழுது இலங்கைத் திரைப்படக் கூட்டுத் தாபனம் ஊடாகத்தான் இந்தியத் திரைப்படங்கள் வாங்கப்பட்டன. அவர்கள் தெரிவு செய்து வாங்கும் படங்களை மட்டுமே திரையிட முடியும். திரைப்படங்களின் தரங்கள், விலைகள் எல்லாம் கவனிக்கப்பட்டன. அதேநேரம் இலங்கையில் தமிழ் திரைப்படங்கள் தயாரிப்பதற்கு ஊக்கமும் உதவிகளும் வழங்கப்பட்டன. அந்த நேரத்தில் இலங்கையில், நிர்மலா, குத்துவிளக்கு, கோமாளிகள், வாடைக்காற்று, நான் உங்கள் தோழன்… என்று பல தமிழ்ப்படங்கள் வெளிவந்தன. அவற்றுக்கு ஆதரவும் இருந்தன. ‘இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது’ என்று இந்தியா இலங்கையுடன் சேர்ந்து கூட்டுத் தயாரிப்பில் ஈடுபட்டது. பைலற் பிரேம்நாத், தீ, இரத்தத்தின் இரத்தம், நங்கூரம், மாமியார் வீடு….. என பல படங்கள் தயாராகின. பின்னர் போராட்டச் சூழலிலானாலும் ஜேஆரின் ஆட்சியில் இருந்த தாராளக் கொள்கையினாலும் நிலமை மாறி ‘பழைய குருடி’ கதையானது. இப்பொழுது இலங்கையில் வந்துள்ள ஆட்சி மாற்றத்தினால் ‘உள் நோக்கம்’ கூட இருக்கலாம். புலிகளை, போராட்டத்தை கொச்சைப் படுத்தி படம் இருப்பதால் ‘உள்குத்து’ ஆகவும் இருக்கலாம். அல்லது வடக்குப்பகுதி இந்தியாவுக்குள் வந்து விட்டது என்ற எண்ணமாகவும் கூட இருக்கலாம். ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இலங்கைத் திரைப்படம் தமிழகத் திரையரங்குகளில் வெளிவர வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
  6. Paanch, நாலு எலிகளைத்தான் உடனடியாகப் பிடிக்க முடிந்தது
  7. துண்டுப் பிரசுரம் விநியாகிப்பது குற்றம் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்தபின் அதை ஒரு சட்டத்தரணியான கஜே செய்திருக்கின்றார் என்றால் இது ஒருவிதமான தேர்தல் பிரச்சார உத்திதான்.
  8. சுமந்திரனுக்கு ஆதரவாக கம்மன் பில பிரச்சாரம் செய்ய வெளிக்கிட்டாரா?
  9. உண்மை. அது அவரது படைப்பு. பார்ப்பவர்கள் விமர்சனத்தை வைக்கட்டும்.
  10. தொலைந்துபோன 39 ஆண்டுகள் 1980ம் ஆண்டு. அவரது வயது24. அவர்,அவரது பெற்றோருடன் வசிக்கிறார். ஆனால் அவரது உண்மையான வயது 68. லூசியானோ டி அடாமோ திருமணமானவர், ஒரு மகன் இருக்கிறான். பெற்றோரை விட்டு விலகி நீண்ட காலங்களாகி விட்டன. இப்பொழுது அவரைப் பற்றி இத்தாலியின் ஊடகங்கள் தலைப்புச் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. லூசியானோ டி அடாமோ தனது வாழ்க்கையில் கடந்த 39 ஆண்டுகளை மறந்து விட்டார் என்பதே அந்தச் செய்தி. 2019ம் ஆண்டு, ரோம் நகரில் நடந்த ஒரு கார் விபத்தில் சிக்கி லூசியானோ டி அடாமோ, தனது நினைவுகளை இழந்து கோமா நிலைக்குப் போய்விட்டார். சில நாட்கள் கோமா நிலையில் இருந்த அவர் மீண்டும் விழித்தபோது அவருக்கு எல்லாமே அந்நியமாக இருந்தன. அவரால் தனது மனைவியையும் மகனையும் கூட அடையாளம் காணமுடியாதிருந்தது. முதன்முறையாக கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தபோது, வெள்ளை முடியுடன் கண்ணாடியில் தோன்றிய உருவத்தைப் பார்த்துப் பயந்துவிட்டார். தனது தாயாரைப் பார்க்க வேண்டும், என்று வைத்தியர்களிடம் அடம் பிடிக்க ஆரம்பித்தார். நரைத்த முடியுடன் ஒரு பெண் அவரது அறைக்குள் வந்து, „லூசியானோ“ என்று அழைத்த போது, அவளுக்கு எப்படி என் பெயர் தெரியும் என்று குழம்பிப் போய்விட்டார். அந்தப் பெண் வேறு யாருமில்லை. அவரது மனைவி. “எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே, நிச்சயதார்த்தம் மட்டும்தானே செய்துகொண்டேன். அதுவும் 60 வயது மதிக்கத் தக்க இந்தப் பெண்ணுடன் இல்லையே! அவளுக்கு 19 வயதுதானே!”, எனக் குழம்ப ஆரம்பித்தார். 35 வயதான ஒரு இளைஞன், தன்னை அவரது மகன் என்று சொன்னான். தனக்கே 24 வயதுதான் நடக்கிறது. இந்த 35 வயது ஆண் எப்படி தனக்கு மகனாக இருக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டார். தனது திருமணம், பேர்லின் சுவர் இடிப்பு, செப்ரெம்பர் 11 தாக்குதல், இத்தாலிக்குக் கிடைத்த இரண்டு உலக வெற்றிக் கிண்ணங்கள் எதுவும் லூசியானோ டி அடாமோவுக்கு நினைவில் இல்லை. யூரோ நாணயங்கள், அலைபேசிகள் எல்லாமே அவருக்குப் புதியவையாக இருக்கின்றன. 68 வயதான லூசியானோ டி அடாமோ, தனது குடும்ப உறுப்பினர்களதும் நண்பர்களதும் உதவியுடன் தனது மறந்து விட்ட 39 ஆண்டுகால வாழ்க்கையைக் கண்டறிய இப்பொழுது முயற்சி செய்து கொண்டிருக்கின்றார். இருந்தாலும், அது அவருக்குப் பெரும் சிரமமாக இருக்கிறது. மருத்துவர்கள் மற்றும் உளவியலாளர்களின் உதவியுடன் மீண்டும் தனது சுற்றுப்புறங்களைச் சுற்றி வருவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். சில நேரங்களில் நினைவாற்றல் இழப்பு தற்காலிகமானது, சில சமயங்களில் அது நிரந்தரமானது. https://www.thesun.co.uk/news/31236895/dad-hit-car-coma-1980/
  11. அக்கினிக் கரங்கள் புத்தகத்தின் முற்பக்கங்களில் உள்ள விடயங்களையும் இணைத்திருக்கின்றேன். 21.10,1987 .அன்று இந்திய அமைதிப் படையினரால் யாழ். போதனா வைத்திய சாலையில் கொலை செய்யப்பட்ட வைத்தியர்கள், தாதியர், ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கும் இந்நூல் காணிக்கை! பதிப்புரை ஈழத் தமிழரின் இனப்பிரச்சினையைப் பகைப்புலமாகக் கொண்ட உண்மை நிகழ்வுகளை கலாபூர்வமாகப் பதிவு செய்து வைக்கும் பணியிலேயே, திரு.நாவண்ணனின் இலக்கிய வாழ்வின் பெரும் பகுதி கழிந்திருக்கின்றது. எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து இன்றுவரை அவர், படைத்த இலக்கியங்கள் அதற்குச் சாட்சி. இந்த வகையில், உண்மை நிகழ்வுகளை இலக்கியப் படைப்புக்களாக உருவாக்கும் பணியில், தமிழீழ இலக்கிய வரலாற்றில் திரு. நாவண்ணனுக்கு தனித்துவமான ஓரிடம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. அக்கினிக் கரங்கள் என்ற இந்தக் குறுநாவலும் அந்த வகைக்குள்ளேயே அடங்குகின்றது! 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 ஆம், 22ஆம் திகதி களில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் இந்தி யப்படை புரிந்த படுகொலையை மையமாக வைத்தே இக் குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. உலகின் கண்களில் இருந்து கணிசமான அளவுக்கு மறைக்கப்பட்டிருந்த இந்த வைத்தியசாலைப் படு கொலையின்போது, அதிற் சிக்கி உயிர் தப்பிய .... சாட்சிகளிடமிருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு நாவண்ணன் இந்தக் குறுநாவலைப் படைத்துள்ளார்! போராட்ட நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் இத்தகைய இலக்கிய முயற்சிகளுக்கு நூலுருக் கொடுத்து வெளியிடுவதில் நாம் மன நிறைவடைகின்றோம். தமிழ்த்தாய் வெளியீட்டகம் அணிந்துரை இது ஒரு 'குறுநாவல்' என்கின்ற பரிமாணத்தையும் மீறி ஒரு காலத்தின் 'வரலாற்றுப் பதிவாகவே" அமைந்திருக்கின்றது. இந்தக் குறுநாவலைப் படிக்கின்ற போது எமது சரித்திரத்தின் அந்தக் கொடூரமான கால கட்டத்தில் வாழ்ந்து - அந்தக் கொடுமையான சம்பவங்களைக் கண்டு உயிர் தப்பிய என்போன்றவர்களுக்கு, இந் நிகழ்வுகள் திரைப்படமாகவே மனதில் வந்து செல்லும். இந்த நூலில் ஆக்கிரமிப்பாளர்களின் சுயரூபம் மிக அழகாக எடுத்துக்காட்டப்படுகின்றது. உலகில் மிகப் பெரிய 'ஜனநாயக நாடு' இந்தியா என்று தம்மைப் பற்றித் தம்பட்டம் அடிப்பவர்கள் - மிகப் பெரிய இராணுவக் கட்டமைப்பைக் கொண்டவர்கள்; "ஒரு யுத்த களத்தில் காயப்பட்டவர்களுக்கு உதவி செய்கின்ற தொண்டர் கூட, நடு நிலையாளராகக் கருதப்பட்டு மதிக்கப்படல் வேண்டும்' என சர்வதேசச் சட்டங்களும் தர்மங்களும் கூறுகின்ற வேளையில் ஒரு மருத்துவமனை, அதனுள் சீருடைகளில் தாதிகள், ஊழியர்கள், டொக்ரர்கள், காயத்துடனும், வேறு நோய்களுடனும் இருக்கின்ற நோயாளிகள் என்கின்ற மனிதநேயம் இல்லாமல்' அங்கு அத்துமீறி நடாத்திய அநர்த்தங்கள் யாவினையும் ஆசிரியர் மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். ஒரு நாள் உலகம் நீதி கேட்கின்ற போது, இது போன்ற உண்மை நிகழ்வுகளை உள்ளடக்கிய குறுநாவல் கள் நிச்சயமாக உண்மையை விளம்பும் மனச்சாட்சிகளாக - உறுதிப் படுத்தப்பட்ட ஆவணங்களாகத் தீச் சுவாலைகளுடன் எழுந்து நிற்கும். எதிர்கால சந்ததியினர் ஒரு காலத்தில் இங்கு என்ன நடந்தது ...... சுதந்திரம் பெறுவதற்காக இந்த மண் கொடுத்த விலை என்ன...... நாம் சிந்திய இரத்தம் எவ்வளவு...... என்பதைச் சொல்வதற்கு இந்தக் குறுநாவல் உதவும். இது எங்களுடைய தேசப்பற்றை இன்னும் வளர்த்து இந்த மண்ணிற்கு மேலும் உரமூட்ட உதவும். எதிர்காலத்தில் திரைப்படமாக்கப்பட்டு மக்களின் மனங்களில் இவை சரித்திர நிகழ்வுகளாகப் பதிவு செய் யப்படல் வேண்டும். இவ் வரலாற்றுப் பணியைச் செய்த நாவண்ணன் அவர்களை, அன்று அநியாயமாக கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்களும் அவர்கள் உறவினர்களும் தமிழ் மக்களும் நன்றியுடன் நினைவு கூருவார்கள் என்றே நம்புகின்றேன். இவருடைய இலட்சியப் பணி தொடர வேண்டும் என வாழ்த்துவதோடு இது சம்பந்தமாக குறிப்பாக 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ஆம், 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நடந்த கொடூரங்கள் பற்றியும் அன்று அங்கு கொலை செய்யப்பட்டவர்கள், கடமை புரிந்தவர்கள், சிகிச்சை பெற்றவர்கள் பற்றிய மேலும் தகவல்களையும் தரவுகளையும் பெற்று இந்நிகழ்வை சரித்திரப் பெரும் நாவலாக எழுத வேண்டுமெனப் பணிவன்போடு கேட்டு மீண் டும் வாழ்த்துகின்றேன். வைத்திய கலாநிதி எஸ். பி. ஆர். சீர்மாறன் 23.12.1994 ஏன் எழுதினேன்? 'யாவும் கற்பனை' என்ற, அடிக்குறிப்புடனே இலக்கியம் படைக்கும் காலம் எமக்கு இன்று இல்லை. கற்பனையை விஞ்சிய அவலங்களும், அதிசயங்களும் நிகழும் யதார்த்தத்தில் நாமின்று வாழுகின்றோம்! எனவே, நாம் வாழுகின்ற காலத்தின் நிகழ்வுகளை உடனுக்குடன் கலைத்துவத்துடன் பதிவு செய்து வருங்காலச் சந்ததிக்கு வழங்கிச் செல்வது எம் போன்றோரின் நிகழ்காலக் கடமையாகும். 1989 இல் இந்தியஅமைதிப்படையின் ஆக்கிரமிப்பு மூச்சிழுக்கத் தொடங்கிய காலத்திலேயே, நண்பன் பாலநடராஜனின் ஆதரவுடன் 'காந்திய நாட்டின் காட்டுமிராண்டிகள் 'எனும் தலைப்பில் அமைதிப்படை எமக்கிழைத்த அக்கிரமங்களை பதிவு செய்யத் தொடங்கினேன். பாரிய அந்தப் பணியைத் தொடரப் போதிய பொருள் வளம் இன்மையால் ஆரம்ப முயற்சிகளோடு அது கைவிடப்பட்டது. சென்ற ஆண்டில் 'சுபமங்களா' ஆசிரி யர் திரு. கோமல் சுவாமிநாதன் அவர்கள், தமிழீழத்துக்கு வருகை தந்து சென்ற பின்னர் இலங்கை எழுத்தாளர்களுக்கான, ஈழத்தை நிலைக்களனாகக் கொண்ட குறுநாவல் போட்டியை இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து நடாத்துவதாக விளம்பரம் செய்திருந்தார். ஆரம்பத்தில் இதிற் கலந்து கொள்ளும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. ஆனால். 1994 ஜூலை மாத சுபமங்களாவில் வெளியான திரு. கோமல் சுவாமி நாதனின் ‘அதிர்வலைகளை மீட்டும் யாழ்’ கட்டுரையின் சில வரிகள் என் மனதின் அதிர்வலையைத் தட்டிவிட்டன. அந்த வரிகள்….. "ஒரு காலத்தில் பல கூட்டங்களிலும் மாநாடுகளிலும் உங்கள் பிரச்சினைகள் பற்றிப் பேசப்பட்டன. ஈழத் தமிழர்களுக்கும் பொது அடைப்புகளும் பேரணிகளும் கூட நடந்தன. அரசாங்கம் கூட உங்களுக்கு ஆதரவாகப் பல உதவிகள் செய்தது. இதனை எல்லாம் நீங்கள் அறிவீர்கள்! ஆனால், ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பின் எல்லாமே முற்றிலும் மாறி விட்டது. மக்கள் அந்தச் சம்பவத்தின் மூலம் திகைப்பும் அதிர்ச்சியும் அடைந்தனர். பரிதாப உணர்வு ... கோபமாக மாறியது. இன்று. புலிகளின் இயக்கத்துக்கு தமிழ் நாட்டில் தடை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ஈழத் தமிழர் பிரச்சினை அங்கு பேசப்படவில்லை .....!" மேற் கூறப்பட்ட வசனங்கள் ஓட்டுமொத்தமாக இந்தியர்களின் - இந்தியத் தமிழர்களின் கருத்து என்பதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், நிச்சயமாக இது திரு. கோமல் சுவாமி நாதனின் கருத்து என்பதை மறுப்பதற்கில்லை. தனது கருத்தை. இந்தியர்களின் கருத்து எனக் கூறுவ தன் மூலம் அங்குள்ள தமிழீழ அனுதாபிகளைக் கூடக் கொச்சைப்படுத்த முயலும் செயல் இது என்பதையும் உணர்ந்தேன். அதேவேளையில், ஒரு ராஜீவ் காந்தியின் மரணம் இந்திய மக்களிடையே தமிழீழ மக்களுக்கு எதிரான உணர்வை இந்த அளவுக்கு ஏற்படுத்தியிருக்குமானால் ராஜீவ் காந்தியின் பணிப்பின் பேரில் இந்திய ஆக்கிரமிப்புப் படை இங்கு செய்த கொலைகளும் அட்டூழியங்களும் தமிழீழ மக்களுக்கிடையே எத்தகைய எதிர்ப்புணர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதை உணர்த்தவே இந்தக் குறுநாவலை எழுதவேண்டிய கடமைப்பாட்டை உணர்ந்தேன் 1987 இல் "கிறிஸ்துமஸ் நாளிலாவது யாழ்ப் பாணத்தில் யுத்த நிறுத்தமொன்றை மேற்கொள்ளலாமே!" என்று ராஜீவ் காந்தியிடம் கேட்கப் பட்டபோது."கிறிஸ்துமஸ் நாளில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ள சிறிலங்கா ஒரு கிறிஸ்தவ நாடு அல்ல." என்று ராஜீவ் காந்தி திமிருடன் கூறிய பதிலை அன்றைய நாளிதழ்களில் படித்தபோது தமிழர்களைத் திட்டமிட்டு அடக்கி அழிப்பதில் ராஜிவ் காந்தி கொண்டிருந்த வெறியைக் கண்டு மனம் நொந்தவர்களில் நானும் ஒருவன்! எனவே தான், இந்திய ஆக்கிரமிப்புப் படையின் ஆக்கிரமங்களில் ஒரு துளியான யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலைகளை, தீபாவளித் தினத்தன்று அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொலை வெறியாடியதைப் பகைப்புலமாகக் கொண்டு இக் குறுநாவலை எழுதி அனுப்பினேன். கூடவே திரு. கோமல் சுவாமிநாதனுக்கு ஒரு குறிப்பும் அனுப்பியிருந்தேன்... "நீங்கள் எனது இந்தக் குறுநாவலுக்குப் பரிசு தரமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால். 'சுபமங்களா 'ஆசிரியரும், பரிசுக்குரிய நாவலைத் தெரிவு செய்யும் நடுவர்குழுவும், இதைப் படித்தாலே போதும் ! நான் இந்த நாவலை எழுதியதன் நோக்கம் நிறைவேறியதாகக் கொள்வேன்." என்பதே அது. அந்த நோக்கம்கூட, முழுமையாக நிறைவேறியிருக்கும் என்பதில் எனக்கு ஐயப்பாடு உண்டு. யாழ். போதனா வைத்தியசாலைப் படு கொலைகளின் எட்டாவது ஆண்டு நினைவு நாளில் நூல்வடிவில் இதனை வெளியிடுவது என்று நான் முயற்சி செய்துகொண்டிருந்த போது தான், 'தமிழ்த்தாய் வெளியீட்டகம்" குறிப்பிட்ட நாளில் இந்நூலை வெளியிடுவதற்கு முன்வந்தது ! காலத்தின் தேவை கருதி இந்நூலை வெளியிடும் தமிழ்த்தாய் வெளியீட்டகத்தினருக்கு என் இதய நன்றிகள். வைத்தியசாலைப் படுகொலை அவலத்தில் சிக்கி தாம் பட்ட அனுபவங்களை என்னோடு பகிர்ந்துகொண்டு இதனை எழுதி முடிக்க உதவியவர்களை நன்றியோடு நினைவு கூருகின்றேன். இந்தப் படுகொலை ஏனைய வைத்தியர்கள், நிகழ்வின் போது ஊழியர்களுடன் 'எக்ஸ் - றே 'பிரிவினுள் ஒளிந்து நின்று உயிர் தப்பியவரான வைத்திய கலாநிதி எஸ். பி. ஆர் சீர்மாறன் அவர்களிடம், அணிந்துரை பெற்ற தன் நோக்கமே. நான் எழுதியுள்ள உண்மைச் சம்பவங்களுக்கு அவரும் ஒரு சாட்சி என்பதால் தான்! மனமிசைந்து இந்நூலுக்கு அணிந்துரை தந்தமைக்கு என் நன்றிகள். போட்டிக்காக எழுதப்பட்ட பிரதியில் தவிர்க்கப்பட்டிருந்த சில விடயங்கள் பின்னர், திருத்தி எழுதப்பட்டு கதையோடு இணைக்கப்பட்டுள்ளன. எனது முன்னைய நூல்களுக்குக் கிடைத்தது போன்ற ஆதரவு இந்நூலுக்கும் கிடைக்கும் என்பதால் வாசகர்களை அன்புடன் நினைவு கூருகின்றேன். நன்றி. நாவண்ணன்
  12. புத்தகம் 60 பக்கங்கள். மொத்தமாகப் போட்டால் நல்லது என்று தோன்றியது. அதையும் பிரித்துப் பிரித்துப் போடுவதால் வாசிக்க இலகுவாக இருக்குமென்று நம்பினேன். ஈழப்பிரியன் நேரம் இருக்கும் போது அவ்வப்போது வாசியுங்கள்.
  13. இங்க பயங்கரப் பிரச்சினை என்று. எல்.ரீ.ரீ.ஈ ஆஸ்பத் திரிக்குள்ள நின்று இந்தியன் ஆமியைத் தாக்கினதால, ஆமி உள்ள புகுந்து அவங்களைத் தாக்கினதிலை டொக்ரர்களும் நேர்ஸ்மாரும் கொல்லப் பட்டிட்டாங்களாம்." என்று அவன் சொன்னான். " மண்ணாங்கட்டி, இருபத்திநாலு மணித்தியாலமும் நானும் ஆஸ்பத்திரிக்குள்ள தான் இருந்தன். அப்படி ஒரு வரும் ஆஸ்பத்திரிக்குள்ள இருந்து தாக்கேல்ல ..... ஆனால், அவங்களுக்கு நாங்கள் போராளிகளை, இங்கே வைத்து வைத்தியம் செய்யிறோம் என்று சந்தேகம் .....! அது தான் இப்படிச் செய்திருக்கிறாங்கள். வாற வழியில உனக்கு ஒரு பிரச்சினையும் இல்லையே. இந்தியன் ஆமியைச் சந்திக்க வில்லையே?" பக்கத்தில் நின்ற இன்னுமொருவரைச் சுட்டிக் காட்டிய படி 'நானும் இவரும்தான் கே.கே.எஸ்.இல் இருந்து வந்தனாங்கள். இவரும் யாழ்ப்பாணத்தில இருக்கிற தங்கட சொந்தக்காரரின்பாடு என்னவோ என்று பார்க்க வந்தவர். நாங்கள் றோட்டால வர இல்லை ஆமிக்காரன் வந்த மாதிரி ஒழுங்கைக்குள்ளாலையும், வளவுகள், தோட்டங்களுக்குள்ளாலையும் தான் வந்தனாங்கள். எல்லா இடமும் ஒரே பிண நாத்தம். நல்ல காலம் நாங்கள் ஒரு இடத்தில தப்பினதே அருந்தப்பு......!" ..ஏன் ஆமி சுண்டிட்டானா..?" “இல்லை. ஒரு வீட்டுக் கோடிக்குள்ள ஒரு வயசு போன கிழவரின் பிணத்தைச் சுத்தி நாலைஞ்சு நாய்கள் திண்டு கொண்டு நிண்டுதுகள் .... அந்தப் பக்கம் ஆட்கள் யாருமே இல்லை! அதுகளுக்கெல்லாம் நல்ல பசி போல... நாய்கள் எங்களைக் கண்டிட்டு அந்த மனிசன்ர பிணத் தைத் தின்ற ருசியில எங்களுக்கு மேல பாயத் தொடங்கிற்றுதுகள். நல்ல காலம்! வேலிக் கம்பை முறிச்சு அந்த நாய்களை அடிச்சி விரட்ட நாங்கள் பட்ட பாடு?…”என்று சொல்லிக் கொண்டு போனவன் தன் பேச்சை நிறுத்தி, “அக்கா! உனக்கு விஷயம் தெரியுமா?" என்று கேட்டு நிறுத்தினான். " என்னடா .....?" “அக்கா! அந்த உடுவில் அன்ரி மிஸிஸ் சிவபாதம் அவங்கள் எல்லாரும் குடும்பத்தோட சரி ..." “ஏனடா?" "காரணம் ஒண்டும் தெரியாது முத்தத்தில இருந்து அரிசி கழுவிக் கொண்டிருந்த அவவை, றோட்டில நின்ற ஆமிக்காரன் வரச்சொல்லிக் கூப்பிட்டிருக்கிறான். மனுசி போகவே, பின்னால பிள்ளைகள் மூன்று பேரும் போயிருக்குதுகள். அதுகளுக்குப் பின்னால அன்ரியிட தாய்க் கிழவியும் போயிருக்கிறா. அவ நல்ல படிச்சவ தானே......! இங்கிலிஷ் எல்லாம் நல்லாய் பேசுவாதானே. அப்படியிருந்தும் ஒன்றும் விசாரிக்க இல்லையாம்... மதிற் சுவரோட ஐந்து பேரையும் வரிசையா நிற்க வைச்சு அப்படியே ஓட்டோவில விட்டு மெஷின் கண்ணால சுட்டிருக்கிறாங்க. கிழவியும் மூத்த பெடியனும் அந்த இடத்திலேயே சரி ...... அவங்களுக்கு உதவி செய்ய யாருமே போக இல்லை. ஆமிக்காரன் போன பிறகு தான்.... மற்ற மூண்டுபேரும் தவண்டு தவண்டு ஒழுங்கைக்குள்ள போயிருக்குதுகள் ... இளைய மகனும் பிள்ளைகளும் பின்னால் தவழ்ந்து வருகுதுகள் தானே .......! என்ற நினைப்பில் அந்த அன்ரி முன்னுக்கே போயிற்றா. ஆனால், அந்தப் பிள்ளைகள் அவளைத் தொடர்ந்து போக முடியாமல் நடுவழியிலேயே இரத்தம் வெளியில் போய் செத்துட்டுதுகளாம். இவவுக்கும் ஒழுங்கைக்குள்ள வந்த உடனேயே அறிவு மயங்கிற்றுதாம் ...... அதனால். பிள்ளைகள் பற்றின தகவலை இவவைக் காப்பற்றின சனங்களுக்கு சொல்ல முடியாமல்ப் போயிற்றுது. அவ, சீரியசா இருந்து இப்ப ஆபத்து இல்லை என்று சொல்லினம். சங்கானை ஆஸ்பத்திரியில இருக்கிறாவாம்......" அந்த அன்ரியையும் பிள்ளைகளையும் நினைத்துக் கொண்டேன். இந்தியாவின் மேல் அவர் கொண்டிருந்த விசுவாசத்தையும், 'உணவுப் பொட்டலம்' போட்ட அன்று அவவும் அந்தப் பிள்ளைகளும் சந்தோஷத்தால் துள்ளிக் குதித்த காட்சியையும், இந்தியப் படையினர் அவர்கள் வீட்டைத் தாண்டிப் போகும் போதெல்லாம், அவர்கள் கைகாட்டி மகிழ்ந்து செய்த ஆரவாரங்களையும் நினைத்தேன். எல்லாம் போயிற்று. அண்டைக்குத் தீபாவளி நாளில் எங்கள நரகாசுரன்களாகவும் தங்கள கண்ண பிரான்களாகவும் நினைத்து இப்படிச் சங்காரஞ் செய்தாங்களே....... ! பெருமூச்சு ஒன்று தான் விட முடிந்தது. "தம்பி நீ கெதியில கவனமாய் வீட்டை போய் சேரு. அங்க பாட்டியும் பிள்ளைகளும் அழுது கொண்டிருப்பினம். இன்னும் ஒரு கிழமையால வா..! அதுக்குள்ள நான் லீவு கேட்டு ஆயத்தமாய் இருக்கிறன். நீ வந்த பிறகு உடனே லீவு போட்டிட்டு வாறன் அதுகளை கவலைப் படாமல் இருக்கச் சொல்லு. இப்ப எல்லாம் நோமலுக்குத் திரும்பிக் கொண்டிருக்கு. இனிப் பிரச்சினையில்ல. நீ போறது தான் கவனம். வந்தபோது நாய்களிட்ட மாட்டுப் பட்ட மாதிரி ஏதும் ஆபத்தில மாட்டப் போறாய்." "அது தான் அக்கா யோசனையாய் இருக்கு. வந்த வழியால போகவும் பயமாய் இருக்கு. வேற எந்த வழியால போறது ? என்று தீர்மானிக்கவும், முடியாமல் இருக்கு. ஏனென்றால் கம்பெஸ் பக்கமெல்லாம் சரியான பிரச்சினையாம். அங்க பிரம்படி ஒழுங்கையில் பொதுமக்களைச் சுட்டிட்டு, டாங்கிகளை ஆக்களுக்கு மேலால எல்லாம் ஏத்திக் கொண்டு போயிருக்கிறாங்கள். அந்தச் சில்லுகளுக்குக் கீழ நசுங்கி அப்பிடியே சனங்கள் சப்பளிஞ்சு போயிற்றாங்களாம்." எனக்கு கேட்கக் கேட்கத் தலையை என்னவோ செய்தது ! " சரிசரி...... நீ கவனமாய் போயிற்று வா!!" என்று சொல்லி அனுப்பி விட்டு கடமைக்காகத் திரும்புகின்றேன். என் கண்களுக்குச் சடலங்களை எரித்த சாம்பர்த் தடங்கள் வரிசையாகத் தெரிகின்றன. இந்தக் கொடுமைகள் எல்லாம் ஏன் .....? கேணல் ப்றார், டொக்ரர் சிவபாதசுந்தரத்தைச் சுட்டதற்கான காரணத்தைச் சொன்னாரே !" " ஒரு டொக்ரர். வயதாளி. டொக்ரருக்கான சீருடையுடன் - கையில் 'ஸ்தெதஸ்கோப்புடன்' நின்றவரை அடையாளம் தெரியாமலா உங்கள் சிப்பாய் சுட்டான்? " என்று எங்கள் டொக்ரர்கள் கேட்டதற்கு ... கேணல் ப்றார் சொன்ன பதில்! “யுத்தத்தில் எதுவும் நடக்கலாம்." யுத்தமா......? இவர்கள் யாருக்கு எதிராக யுத்தம் செய்ய வந்தவர்கள்...... ! தமிழரைப் பாதுகாக்கத்தான் வந்தவர்கள் என்றார்களே! அப்படிச் சொல்லித்தான் உணவுப் பொட்டலமும் போட்டார்களே? திலீபனைக் காப்பாற்றினார்களா......? அவர்களது பொறுப்பில் இருந்த பதின்மூன்று போராளிகளைக் காப்பாற்றினார்களா ......? எங்களைக் காப்பாற்ற வந்தவர்கள், எங்கள் எதிரிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு எம் மக்களை அல்லவா கொன்று குவித்து விட்டார்கள். அன்று முதல் நாம் இந்தியாவில் வைத்திருந்த விசுவாசத்தையும் கொன்றுவிட்டார்கள் ! அந்தச் சர்மா சொன்னானே 'Belive Indian' என்ற அந்த நம்பிக்கைக்கு இவர்கள் செய்த கைமாறு இதுதானா? இவர்கள் செய்யும் யுத்தம். தமிழ் மக்களுக்காகவே போராடிக் கொண்டிருக்கும் போராளிகளை தமிழ் மக்க ளிடமிருந்து அந்நியப்படுத்துவதற்காக இடம் பெறும் யுத்தம்......! மக்கள் அஞ்சி நடக்க வேண்டும்; போராளிகளுக்கு ஆதரவு கொடுப்பதனாற்தானே நாம் இத்தனை கொடுமைகளுக்கும் உள்ளாகிறோம் என்று உணர்ந்து விட்டு ஒதுங்க வேண்டும்! அவர்களை தமது துன்பங்களுக்குக் காரணமான போராளிகளைப் பொதுமக்கள் தாமாகவே காட்டிக் கொடுக்க முன்வரவேண்டும். அத்தகைய சூழ்நிலை ஏற்படுவதற்காக இராணுவம் இத்தகைய ஈவிரக்கமற்ற கொலை வெறியாட்டத்தைச் செய்வது தான் இராணுவத் தர்மமாம்! இராணுவம் கொலை செய்யலாம் கொள்ளையடிக்கலாம் கற்பழிக்கலாம் எதுவும் செய்யலாம். இதனையெல்லாம் இராணுவ தர்மம் அனுமதிக்குமாம். தர்மத்திற்குப் பேர் போன இந்தியா. ஜே. ஆரின் தார்மீக அரசின் ஆதரவோடு அந்தத் தார்மீகச் செயல்களையே செய்து கொண்டிருந்தது. இவர்களின் இந்த நடவடிக்கைகளின் விளைவுகள் இவர்களது எதிர்பார்ப்புக்கு முழுமையும் எதிராகவே திரும்பி உள்ளன என்பதை இவர்கள் அறியும் காலம் விரைவில் வரும்! ஒரு காலத்தில், " இந்தியாவே! நீ எப்பொழுது வரப் போகிறாய்?" என்று காங்கேசன்துறைக் கடற்கரையில் நின்று கூவி அழைக்க நினைத்த என் வாயால் இந்தியனே! நீ எங்கள் நாட்டைப் பிடித்த பீடை. எப்பொழுது எம்மை விட்டுத் தொலையப் போகிறாய்......? என்று உரத்துக்கூவ வேண்டும் போல் இருந்தது. 'வெள்ளையனே வேளியேறு! " என்று கோஷமிட்டுச் சுதந்திரப் போர் நடத்திய இந்தியனை இந்தியனே வெளியேறு!" என்று ஈழத் தமிழர் கோஷமிட்டுக் கலைக்க வேண்டிய காலமிது என்பதை என் மனம் உறுதியாக நம்பியது. சிறுவயதில் நான் கற்பனை செய்த எம் ஜி. ஆர். அண்ணாத்துரை, காந்தீயம்; இந்திய சுதந்திரப் போராட்டம்..... மிராஜ் விமானம். உணவுப் பொட்டலம் சர்மா...... எல்லாரும் என் மனதில் வந்து போகின்றார்கள். நாட்டில் நல்லவை நடக்க வேண்டுமென்பதற்காக பலி கொடுத்து வேள்விகள் செய்வார்கள். இவர்கள் எமது தமிழீழத்தில் தமிழ் மக்களுக்கு அமைதியை பெற்றுத் தரவந்தவர்கள். அதற்காகத் தான் இவர்கள் எங்களையே பலிப் பொருளாக்கி அமைதி வேள்வி செய்து முடித்திருக்கிறார்கள். இந்தியாவின் கரங்களை, அணைக்கும் கரங்களாக நினைத்திருந்தேன்......! ஆனால், அக்கினிக் கரங்களாக அவை எம்மைச் சுட்டுக் கருக்கிவிட்டன ! நான் நடந்து கொண்டிருக்கின்றேன் .. எனது ஒவ்வொரு அடியும் வெறுப்போடு தரையில் பதிகின்றது...! எனது நம்பிக்கைகள் அவற்றுள் மிதிபட்டு நசிகின்றன.
  14. அங்கு இறந்து கிடந்தவர்கள் தவிரக் குற்றுயிராய்க் கிடந்தவர்களை சத்திர சிகிச்சைப் பிரிவுக்கும். மருந்து கட்டும் இடங்களுக்கும் தூக்கிச் சென்றோம். நேற்றைய வேகம் மீண்டும் வந்து விட்டது. வசதியாக நடைபாதை யிலே ஆங்காங்கு கிடந்த பிணங்களை, போகவர ஒதுக்கி விட்டு ஓடி ஓடி இயங்கினோம். நேற்றுப் பிற்பகல் முதல் அதுவரையில் தண்ணீர் கூட வாயில் விடாமல் தவித்துக் கொண்டிருந்த எம்மில் யாராவது ஒரு சொட்டு தண்ணீர்தானும் அருந்தினார்கள் என்பது எனக்கு நினைவில்லை. என்னுடைய சட்டையெல்லாம் இரத்தம் தோய்ந்து, காய்ந்து மடமடவென்று முரட்டுத் தன்மையுடன் இருந்தது. விடுதிக்குச் சென்று உடையை மாற்றி என் உடம்பில் இருந்த கறையை எல்லாம் கழுவிக் கொண்டேன். உடம்பை நான் கழுவும் போது எனக்கே அருவருப்பாக இருந்தது. அந்த இரத்த வாடை அப்பப்பா..! உடலில் தண்ணீர் படும்போது சுகமாக இருந்தது. அன்று மாலைக்குள் அனைவருக்கும் செய்ய வேண்டிய சிகிச்சைகளைச் செய்து முடித்து விட்டோம்! இனி இறந்தவர்கள் யார் யார் என்று அடையாளம் காண வேண்டும். மறுநாள் காலையில் அதைச் செய்யலாம் என்று இராணுவ அதிகாரிகள் சொன்னார்கள். ஆனால், எமக்கு இருந்த வேகத்தில் "இல்லை, நேரம் தாமதித்தாலும் பரவாயில்லை. எம்மில் யார் யாரை இழந்துவிட் டோம் என்று இன்றே அறிய வேண்டும். '' என்று கூறி அவர்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டு சென்றோம்...... ஒவ்வொரு பிணங்களாக அடையாளம் கண்டோம்... சிலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கோரமாகச் சிதைந்தும் கருகியும் இருந்தன......! அந்தக் கூடத்துக்குள் கால் வைக்கவே தயக்கமாக இருந்தது. பிணவாடை வேறு... அந்த இடத்தைச் சுற்றியுள்ள ஒவ்வொரு அறையை யும் திறந்தபார்வையிட்டோம்..... கண்ணாடி யன்னல்கள் ஊடாக சிலர் சூடுபட்டு இறந்திருக்கின்றார்கள். உயிராபத்தான காயங்களாய் இல்லாவிட்டாலும் அங்கு நிகழ்ந்த மரணங்கள் பெரும்பாலும் இரத்தப் பெருக்கினால் ஏற்பட்டவையே. கண் வைத்தியப் பிரிவில் இருந்த ஒரு பெரியவர் கூட, படுக்கையில் இருந்தபடியே சுடப்பட்டு இறந்து கிடந்தார். ஒவ்வொரு அறையாகத் திறந்து கொண்டு சென்ற நாம், நிர்வாக அலுவலரின் அறையைத் திறந்த போது அங்கே...... மேற்றன் வடிவேலு குப்புறக் கிடந்தார்! அவரது நெஞ்சைக் குண்டு துளைத்திருந்தது. நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டு கவிழ்ந்து கிடந்த அவரது கைகளில், மெழுகுவர்த்தியும் கந்தசஷ்டிக் கவசமும் இறுகப் பிடித்தபடியே இருந்தன. தாதிகள் பதிவேடு பக்கத்தில் கிடந்தது. அவரது உடலைக் கண்டதும், அதுவரை கட்டுப் படுத்திக் கொண்டிருந்த அழுகையை என்னால் அடக்க முடியவில்லை. வாய்விட்டு அழுது விட்டேன் . நேற்று நான் தான் அவரோடு இறுதியாகக் கதைத்தவள்..... அவருடைய உணவை இறுதியாகப் பகிர்ந்து கொண்டவள். எமக்கெல்லாம் தாய் போல விளங்கிய அந்த உத்தமியை - கடைசி வரை கடமை உணர்வுடனே உயிர் விட்ட எங்கள் வழிகாட்டியை உயிரற்றவளாகக் கண்ட போது என்னால் தாங்க முடியாமல் இருந்தது . அன்று காலை, வைத்தியசாலையின் முன் பகுதியில் கொலை செய்யப்பட்ட டொக்ரர் பரிமேலழகரின் உடலும் அங்கு கொண்டு வரப்பட்டது. காயமுற்றவர்கள் போக மொத்தம் டொக்ரர். எம். சி. கணேசரட்ணம் உட்பட வைத்தியசாலை ஊழியர்கள் இருபத்தியொரு பேர். முதல் நாளும், அன்றுமாக வைத்தியசாலைக்குள்ளே மட்டும் நோயாளர் உட்பட அறுபத்தெட்டுப் பேர் சுடப்பட்டுக் கொலை செய்யப் பட்டிருக்கிறார்கள். மறுநாள் காலை எமது வைத்திய சாலையின் முன் வீதியில், பின் வீதியில் அநாதரவாகக் கிடந்த உடல்கள் எல்லாம்..... நூற்றுக்கும் அதிகமான சடலங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. குழந்தை வைத்திய நிபுணரான டொக்ரர் சிவபாதசுந்தரத்தின் உடலையாவது அவர் மனைவி மக்களிடம் ஒப்படைக்க - அவர்களை அழைத்து வந்து காண்பிக்க முயற்சி செய்யப்பட்டது. இராணுவம் அதை அனுமதிக்க வில்லை! புதிய வைத்தியப் பிரிவு கட்டுவதற்காக, அடுக்கப்பட்டிருந்த மரங்கள் எல்லாம் இந்தச் சடலங்களின் சிதைகளுக்கு விறகுகளாயின. அனைத்தையும் எமது வைத்திய சாலையின் ஊழியர்களே செய்து முடித்தார்கள். எமது இருபத்திரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் யார், எவர் என்று அடையாளம் காணப்படவில்லை... ! இவர்களில் சம்பவ தினத்தன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை அளிக்க முடியாமற் போனதால் இறந் தவர்களின் உடல்களும் அடங்கும். அடையாளம் காண முடியாமற் போன சடலங்களில் நான் அறிந்த அந்த இரண்டு சடலங்கள் திபோவுடையினதும் அவன் மனைவி யுடையதும். பாவம் ! அந்த இளம் தம்பதிகள், தங்கள் மரணத்திலும் ஒன்றாகி விட்டார்கள் . திபோ சிறீலங்கா இராணுவத்தாற் சுடப்பட்ட பொழுதே இறந்திருக்கலாம். அப்படி நடந்திருந்தால் அவன் மனைவியாவது அவர்களது இரண்டு பிள்ளைகளுக்கும் துணையாக வாழக் கிடைத்திருக்கும் ...! இந்தக் கொடுமை இவர்களுக்கு மட்டும் தானா? இன்னும் எத்தனையோ...! அதோ......! அந்த நூற்றுக்கும் அதிகமான சிதைகளும் கொழுந்து விட்டு எரிகின்றன... எங்கள் எல்லாரது நெஞ்சங்களிலும் வெடித்து எழும் துயரச் சுவாலைகளும் அந்தத் தீயுடன் கலந்து எரிகின்றது. வாரம் ஒன்று கழிந்து விட்டது. வைத்தியசாலை இயங்கிக் கொண்டிருக்கிறது. எம்முடன் சேர்ந்து இந்திய இராணுவத்தின், வைத்தியப் பிரிவும் இயங்கிக் கொண்டி ருக்கின்றது. அவர்கள் ஆற்றிக் கொண்டிருக்கும் சேவையைக் கூட, கட்டாயத்தின் பேரில் பெற்றுக் கொண்டிருந்தோமே ஒழிய மன விருப்புடன் அல்ல அவர்கள் செய்து விட்ட கொடுமைக்கு இவைகள் மூலம் பிராயச்சித்தம் தேடிக் கொள்ள முடியுமா.....? பரந்து இருந்த நோயாளர் விடுதிகள் எல்லாம் மாற்றி அமைக்கப்பட்டு ஒரு குறுகிய வட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டன. நோயாளிகளும் மிகக் குறைவு. ஓரளவு சுகமடைந்தவர்கள் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு விட்டதால் உடனுக்குடன் வெளியேறிக் கொண்டிருந்தனர். பிணங்களை எல்லாம் தகனம் செய்த மறுதினம் தான் நான், கழுத்து நாடாவை அறுத்து எடுத்த அந்தப் பையனைக் கண்டேன். அவன் என்னைக் கண்டதும் என் கையை வாஞ்சையோடு பற்றிக் கொண்டான்." 'அக்கா! நீங்கள் எல்லாரும் தப்பிற்றீங்களா ...? " என்று கேட்கும்போது அவன் விம்மத் தொடங்கி விட்டான். அவன் இப்படி அன்போடு என்னை விசாரித்து அழுவதற்கு நான் அவனுக்கு என்ன செய்து விட்டேன் ..... ! வைத்தியருக்குரிய முழு உடையுடன் - கையில் ஸ்தெதஸ்கோப்புடன் நின்ற பெரியவரான டொக்ரர் சிவபாதசுந்தரத்தையே அடை யாளம் கண்டு கொள்ள முடியாமல் சுட்டுக் கொன்றவர்கள் இவன் மீது சந்தேகப் பட்டிருந்தால்......! ஆராய்ந்து பார்த்திருப்பார்களா ......? நான் அன்று நடந்து கொண்டது முன்னெச்சரிக்கையான விடயம் தான். ஏன் அப்படிச் செய்தேன்? எந்தச் சக்தி என்னை அப்படிச் செய்யத் தூண்டியது என்று நான் இன்றும் வியக்கின்றேன். '' அக்கா! அன்றைக்கு இந்த வாட்டுக்குள்ள வந்து துவக்கை நீட்டிக் கொண்டு எங்களை யெல்லாம் மிரட்டின போது நான் உங்களைத் தான் நினைச்சுக் கொண்டேன். நீங்க செய்த புண்ணியத்தைத் தான் நினைச்சுக் கொண்டேன். உங்களுக்கு ஒன்றும் நடக்கக் கூடாது என்றுதான் மன்றாடிக் கொண்டிருந்தேன்.'' என்று அவன் தன் ஷேர்ட்டிலே தொங்கிக் கொண்டிருந்த சிலுவையைத் தொட்டுக் கொண்டு சொன்னான். பெண்கள் பிரிவில், சம்பவம் நடந்த அன்று அனுமதிக்கப்பட்ட ஒரு இளம் பெண் அவளது முழங்காற் சில்லு - பெயர்ந்திருந்தது. அடிக்கடி அவள் அழுவதை என்னால் காண முடிந்தது. அவளிடம் ஏனோ ஒரு பாச உணர்வு ....! அவளுக்கு ஆறுதல் கூற வேண்டும் என்று முயற்சி செய்தேன். அப்பொழுது அவளிடமிருந்து கிடைத்த விட யங்கள் ...... அவள் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல்யமான வஸ்தியாம்பிள்ளை புத்தகசாலை உரிமையாளரின் மகள்! பெயர் சியாமளா - அவள் கூறினாள்....... நாங்கள் பாதுகாப்புக்காக, பற்றிக்ஸ் கல்லூரியில் போய்க் குடும்பமாய் அங்கே ஒரு வகுப்பறையில் தான் இருந்தோம். அம்மா. எங்கள் எல்லோருக்கும் சோறு குழைச்சுத்தரச் சாப்பிட்டோம். திடீரென்று நாங்கள் இருந்த இடத்தில ஷெல் விழுந்திச்சு ! எனக்கும் என் தங்கச்சி விஜயந்திக்கும் காலில காயம். எங்களை உடனே காரில் ஏற்றி இங்க அனுப்பி வைச்சிட்டாங்க...... தங்கச்சிக்கு இஞ்ச மருந்து கட்ட ஏலாமல் போச்சுது. ரத்தம் போயே எனக்குப் பக்கத்திலேயே அவ செத்துப் போயிற்றா......" " எங்களை அனுப்பி வைச்ச பிறகு அம்மாவும், அபப்பாவும் ஆஸ்பத்திரிக்கு எங்களைப் பார்க்க வந்திருக்கிறாங்க. மற்றவங்கள் தடுக்கத் தடுக்க வந்தாங்களாம்... ஆஸ்பத்திரிக்குப் பின்பக்கமாகத் தான் வந்தாங்களாம். பிறகு அவங்களுக்கு என்ன நடந்ததென்றே தெரியேல்ல...." என்ன நடந்திருக்கும் என்பதை அவளா சொல்ல வேண்டும்..? வைத்தியசாலையின் பின் வீதியில் எத்தனையோ பொது மக்கள் வயது வேற்றுமை இல்லாமல் சுடப்பட்டு இறந்து கிடந்தார்களே ......! நிச்சயமாக அந்த அடையாளம் காணப்படாத நிலையில் வைத்தியசாலையின் பின் பக்கம் கொண்டு வந்து எரிக்கப்பட்ட பிணங் களுடன் அவையும் சேர்ந்திருக்கும். அவர்கள் மட்டும் தானா? காயப்பட்டவர்களை ஒன்றாக ஆண், பெண், சிறுவர்கள் என்று ஏற்றிக்கொண்டு வந்த மோட்டார் கார்களை வைத்தியசாலைக்கு முன்னால் மறித்து கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், எவரையும் வெளியேற விடாமல் அப்படியே பெற்றோல்' . ஊற்றி உயிருடன் கொளுத்தியிருக்கிறார்களே ...... ! அதுவும், இந்தியாவின் தேசபிதா, அகிம்சாமூர்த்தி காந்தி மகானின் சிலைக்கு அண்மையில் அப்படிப்பட்டவர்கள் இந்த வயோதிபத் தம்பதிகளைக் கொல்லாமலா விட்டிருப்பார்கள் ....? நாட்கள் செல்லச் செல்ல, எனக்கு வீட்டு நினைவு அதிகரித்துக் கொண்டிருந்தது. மூன்று வாரங்களுக்கு மேலாக நான் வீட்டில் உள்ளவர்கள் எவரையும் சந்திக்க வில்லை. இங்கு நடந்த அவலங்களுக்குள் எனக்கு அவர்களை நினைப்பதற்கு சந்தர்ப்பம் குறைந்திருந்தது. இப்பொழுது அவர்கள் நினைவு என்னை வாட்டிக் கொண்டிருந்தது. அங்கு நிலைமை எப்படியோ...... ! என் பிள்ளைகளின் நிலை, பாட்டியின் நிலை, தம்பி ..... இப்படியாகப் பயந்து கொண்டிருந்தேன். ஆனால், கே. கே. எஸ். பக்கம் பிரச்சினைகள் எதுவும் நடந்ததாகத் தகவல்கள் இல்லாத படியால்.... என்னைத் தேற்றிக் கொண்டேன். வைத்தியசாலையில் தாதிகள் பற்றாக் குறையால் லீவும் பெற முடியாது! அப்படி லீவு கிடைத்தாலும் ஊரடங்குச் சட்டம். போவதற்கு வாகன வசதி எதுவுமே இல்லை. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட இரண்டாம் நாள் பகல்..... கடமையில் இருந்த போது, 'என் தம்பி வந்து வைத்தியசாலையின் பின் கேற்றில் எனக்காகக் காத்து நிற்பதாக " என்னிடம் யாரோ கூறினார்கள். நான் சக தாதியிடம் சொல்லி விட்டு அங்கு விரைந்தேன்! தம்பியைக் கண்டதும் நான் அழுது விட்டேன். அவனும் அழுதான். " நீ என்னை உயிரோடு பார்க்கிறது தெய்வச் செயலடா!" என்றேன். ஓமக்கா. அங்க வீட்டில செத்தவீடு தான். பாட்டியும் பிள்ளைகளும் நீ செத்திட்டதாகவே தீர்மானிச்சு, சாப்பிடாமல் அழுது கொண்டே கிடக்குதுகள்....!" எப்பிடித் தம்பி அங்கால பிரச்சினைகள் ஒன்றும் இல்லையே?" என்று கேட்டேன். அந்தப் பக்கம் ஒருவித பிரச்சினையும் இல்லை இஞ்ச என்ன நடந்தது என்று அங்க ஒருவருக்கும் தெரியாது. அங்கால ஊரடங்குச் சட்டம் கூடஇல்லை. அந்த ஆமிக்காரன் சர்மா தான் சொன்னான்,

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.