Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. அமெரிக்காவின் தாக்குதல் - நித்திய விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என ஈரான் எச்சரிக்கை 22 JUN, 2025 | 10:45 AM ஈரானின் அணுஉலைகள் மீதான அமெரிக்கா தாக்குதலை கண்டித்துள்ள ஈரானின் வெளிவிவகார அமைச்சர் இந்த தாக்குதலால் நித்திய விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார். இன்றுகாலை நிகழ்வுகள் மூர்க்கத்தனமானவை மேலும் அவை நித்திய விளைவுகளை ஏற்படுத்தும் என தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அபாஸ் அரக்சி ஈரானிற்கு அதன் இறையாண்மையை பாதுகாப்பதற்காக அனைத்து சாத்தியப்பாடுகளையும் பயன்படுத்த தயார் என குறிப்பிட்டுள்ளார். ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா ஈரானின் அமைதியான அணுஉலைகளை தாக்கியதன் மூலம் ஐநா சாசனம் சர்வதேச சட்டம் மற்றும் அணுஆயுத தடை பரவல் ஒப்பந்தம் என்பவற்றை கடுமையாக மீறியுள்ளது என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218111
  2. 22 JUN, 2025 | 11:22 AM மலையக மக்கள் சிறுபான்மையினமா? தேசிய இனமா? இந்திய வம்சாவழியா? மலையகத் தமிழரா? என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது. மலையக மக்களின் காணி உரிமை பிரச்சனை தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சனிக்கிழமை (21) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லகீதரன், யாழ்ப்பாண பல்கலைக்கழக மலையக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மைக்கல் பெவன், கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் உப தலைவர் திருச்செல்வம் , மற்றும் மலையக மாணவர் ஒன்றியத்தின் உப தலைவர் லக்சரண், முகாமைத்துவ பீடம், விஞ்ஞான பீடம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டு மலையக மக்களின் காணி உரிமை தொடர்பான கருத்துக்களை ஊடகங்களுக்கு முன்வைத்தனர். மலையக மக்களின் காணி உரிமை பிரச்சனை தொடர்பான ஊடக அறிக்கையில், மலையக மக்களின் அடிப்படை உரிமைகளில் காணி உரிமையும் முக்கியமான தொன்றாக இருக்கின்றது. நீண்ட காலமாகவே நிலத்திற்கான உரிமையற்ற ஒரு சமூகமாக மலையக மக்கள் இருப்பதோடு எங்கள் உறவுகளின் தலைமுறைக்கே நில உரிமை என்பது மறுக்கப்பட்ட இருளாகவே காணப்படுகின்றது. அதற்கான வெளிச்சம் இதுவரையிலும் எட்டப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. மனிதர்கள் காலடி படாத காடுகளை அழித்து அதில் பெருந்தோட்டங்களை உருவாக்கி இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு உழைப்பை வழங்கிய மலையக மக்களின் விழித்தோன்றல்களுக்கு அடிப்படையான காணி உரிமை என்பது மறுக்கப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது. உண்மையிலேயே இது நீதியானதா? இதற்கான நீதியை நிலைநாட்ட அரசாங்கங்களும் பெருந்தோட்ட கம்பெனிகளும் அதற்கான முற்றுமுழுதான முனைப்போடு தொழிற்சங்கங்களும் முன்வருவதில்லை என்பது கேள்விக்குறிய விடயமாகும். மக்கள் அவர்களுக்கான காணி உரிமையை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு போராட்டங்களை அன்று தொட்டு இன்று வரை மேற்கொண்டு தான் வருகிறார்கள். ஆனாலும் இன்று வரை தீர்வு காண முடியாத தன்மையே காணப்படுகின்றது. காணி உரிமைக்கான முதலாவது போராட்டம் 1946 ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி மலையக மக்களின் முதலாவது காணிக்கான போராட்டம். கேகாலையின் உருலவள்ளி பெருந்தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. அப்பெருந்தோட்டத்தில் அம்மக்களின் 400 ஏக்கர் குடியிருப்பு நிலம் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமது காணிகளைப் பாதுகாக்க முன்னெடுக்கப்பட்ட போராட்டமாக அது அமைந்திருந்தது. இலங்கைப் பெருந்தோட்டங்களில் உள்ள இந்திய வம்சாவளித் தொழிலாளர்களின் காணி உரிமைகளைக் கோரி இப்போராட்டத்தில் கேகாலை மற்றும் களனிப் பள்ளத்தாக்கு பிரதேசங்களைச் சேர்ந்த 125,000 த்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றிருந்தனர். 1972 ஆம் ஆண்டின் காணிச் சீர்திருத்தச் சட்டம் குடியேற்றங்கள் உருவாகவும் காணிக் கையகப்படுத்தல்கள் நிகழவும் வழிவகுத்தது. தொடர்ச்சியான காணிக் கையகப்படுத்தல்கள் போராட்டங்களுக்கு வழிவகுத்தன. டெவோன் தோட்டத்தின் 7,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராக மே 11, 1977 அன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது சிவானு லட்சுமணன் என்ற இளம் தோட்டத்தொழிலாளி பொலிசாரினால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் விளைவாக பெருந்தோட்ட நிலங்களை பறிமுதல் செய்யும் திட்டம் கைவிடப்பட்டது. அதே போன்று, 2000 ஆம் ஆண்டில், மேல் கொத்மலை நீர் மின்சார திட்டத்துக்காக அப்பிரதேச மக்களை வெளியேற்றும் முன்னெடுப்பு தொடர்ச்சியான மக்கள் போராட்டம் காரணமாக கைவிடப்பட்டது. 2014 ஆம் ஆண்டு பதுளை மாவட்டத்தின் ஹபுத்தளை பிரதேசத்தில் மிரியாபேத்த பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவு பேரழிவின் பின்னர், மலைநாட்டில் வாழும் மக்களுக்கு குடியிருப்புக்கு பொருத்தமான இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க கோரிக்கை நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும் முன்வைக்கப்பட்டது. காணி உரிமைகள் மற்றும் ஏனைய உரிமைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் மேற்கொண்ட தியாகங்கள் அளப்பெரியன. மலையக மக்களின் காணி உரிமைக்கான அங்கீகாரத்தை பாதுகாக்க பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதும், அவர்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதுடன் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மீறல்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. எனவே, இந்தக் கோரிக்கை இலங்கையின் உரையாடலில் உள்ளடக்கப்படும் ஒரு தேவை தற்போது எழுந்துள்ளது. மேலும் மலையக மக்களுக்கு பெருந்தோட்டக் காணிகளை வழங்குவதற்கு பெருந்தோட்டக் கம்பெனிகளுக்கும் அரச நிறுவனங்களுக்கும் இடையே காணப்படுகின்ற குத்தகை ஒப்பந்தம் காரணமாக காணி உரிமை மறுக்கப்பட்டு வருகின்றது. அத்தோடு பெருந்தோட்ட கம்பெனிகளுடன் எவ்வித தொடர்புமற்ற காணி சீர்திருத்த ஆணைக்குழு (JEDB),(SLSPC),(TRI) ஆகிய அரச நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள பெருந்தோட்ட காணிகளை அவற்றில் வாழும் மலையக மக்களுக்கு குடியிருப்பு தேவைக்காக அனுமதிப்பத்திரம், அழைப்பு பத்திரம், அளிப்பு பத்திரம் அறுதியீட்டு உறுதி ஊடாக வழங்குவதற்கு இதுவரையில் எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மையாகும். மலையக மக்களுக்கு குடியிருப்புக்காக காணி வழங்கப்படும் பொழுது மாத்திரம் மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட தேயிலைச் செடிகளுக்கும் ரப்பர் மரங்களுக்கும் அம்மக்களை விட அதிக மதிப்பு வழங்கப்பட்டு தேயிலைச் செடிகளையும் ரப்பர் மரங்களையும் காப்பாற்றுவதாக கூறி அவர்கள் தொடர்ந்து லயங்களிலே வாழவைக்கப்படுகின்றனர். மலையக சமூகங்களின் காணி உரிமைகளை உறுதி செய்வதற்காகவும் காணியற்றவர்களுக்காக காணிகளைக் கோருவதற்காக ஒத்த சிந்தனையுள்ளவர்களை ஒன்று திரட்டவும் ஒரு தேசிய தினமாக "காணி தினம்" இருக்கின்றது. இதன் அடிப்படையில் நான்காவது காணி தினத்தினை நேற்று சனிக்கிழமை (21) அட்டன் நகரில் முன்னெடுப்பதற்கு "நிலமற்றோர்க்கு நிலம்" எனும் தொணிப்பொருளில் "மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் ஏற்பாடுகளை செய்து வருவதாக அறியப்படுகிறது. மலையக மக்களின் காணி பிரச்சினை இன்னும் ஒரு கொள்கை ரீதியில் தேசிய வேலைத் திட்டத்துடன் முன்னெடுக்கப்படாத நிலையில், தற்போது அதற்கான அழுத்தங்கள் பாரியளவில் எழுந்திருப்பது முக்கியமான விடயமாகும். நீண்ட காலமாக மக்களின் தேவையாகவும் மக்களின் நிலம் சார்ந்த இருப்பியலை தக்க வைத்து கொள்வதற்கு இவ்விடயத்தில் முன்னேடுப்புக்களை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இனிமேல் சிறிதும் பின் நிற்காது முற்றுமுழுதாக ஆதரவளிக்கும் என்று தெரிவித்துக்கொள்கின்றோம் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/218116
  3. நிலத்தடியில் 200 அடி ஆழம் ஊடுருவி தாக்கும் 13,600 கிலோ வெடிகுண்டு - எவ்வாறு செயல்படும்? பட மூலாதாரம்,US AIR FORCE படக்குறிப்பு,US B-2 ஸ்பிரிட் மட்டுமே GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) வெடிகுண்டை ஏவும் வகையில் கட்டமைக்கப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், லூயிஸ் பார்ருச்சோ பதவி, பிபிசி உலக சேவை 18 ஜூன் 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த தாக்குதல்களில் B-2 குண்டுவீச்சு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரானின் பாதுகாப்பான அணுசக்தி தளமாக கருதப்பட்ட ஃபோர்டோ மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை இரான் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. கோம் மாகாண நெருக்கடி மேலாண்மைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் மோர்டெசா ஹெய்தாரி, "ஃபோர்டோ அணுசக்தி நிலையப் பகுதியின் ஒரு பகுதி வான்வழித் தாக்குதலுக்கு இலக்கானது" என்று கூறியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரான் தலைநகர் டெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 60 மைல் (96 கிமீ) தொலைவில் ஒரு மலைப் பகுதியில் ஃபோர்டோவில் யுரேனியம் செறிவூட்டல் தளம் அமைந்துள்ளது. நிலத்தடி வசதி, யுரேனியத்தை செறிவூட்டப் பயன்படுத்தப்படும் மைய விலக்கு இயந்திரங்களையும், சிறிய சுரங்கப்பாதைகளின் வலையமைப்பையும் கொண்டிருந்த 2 முக்கிய சுரங்கப்பாதைகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. இந்த தளத்தை தாக்குமாறு அமெரிக்காவிடம் இஸ்ரேல் ஏற்கனவே முறையிட்டது. ஏனெனில், நிலத்தடியில் இருந்த அந்த அணுசக்தி தளத்தை தகர்க்கும் திறன் கொண்ட பங்கர் பஸ்டர் குண்டு அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது. பி-2 ரக அதிநவீன ஸ்டெல்த் ரக குண்டுவீச்சு விமானம் மூலம் அமெரிக்கா இந்த குண்டுகளை ஃபோர்டோ அணுசக்தி தளத்தின் மீது வீசியதாக கருதப்படுகிறது. GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் உலகின் மிகப்பெரிய அணுஆயுதம் அல்லாத "பங்கர் பஸ்டர்" ("bunker buster") வெடிகுண்டு அமெரிக்காவிற்கு மட்டுமே உள்ளது. துல்லியமாக வழிகாட்டப்படும், 30,000 பவுண்ட் (13,600 கிலோ) எடையுள்ள இந்த வெடிகுண்டு, ஒரு மலைக்குள் ஆழமாக புதைக்கப்பட்டுள்ள இரானின் ஃபோர்டோ அணுசக்தி எரிபொருள் செறிவூட்டல் வளாகத்தை ஊடுருவிச் சென்று தகர்க்கும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது. GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் ஆயுதம் என்ன செய்யும்? அதன் சவால்கள் என்ன? அதை எவ்வாறு பயன்படுத்த முடியும்? அமெரிக்க அரசாங்கத்தின் கூற்றுப்படி, GBU-57A/B என்பது, "ஆழமாக புதைக்கப்பட்ட மற்றும் உறுதியாக கட்டப்பட்ட பதுங்கு குழிகள் மற்றும் சுரங்கங்களைத் தாக்கும் திறன் கொண்ட ஒரு பெரிய ஊடுருவக்கூடிய ஆயுதம்" என அறியப்படுகின்றது. இந்த வெடிகுண்டு சுமார் ஆறு மீட்டர் நீளமுடையது. இது வெடிக்கும் முன் சுமார் 200 அடி (61 மீட்டர்) ஆழத்தில் நிலத்தின் உள்ளே ஊடுருவக்கூடியது என நம்பப்படுகிறது. இதுபோன்ற வெடிகுண்டுகள் தொடர்ச்சியாக வீசப்பட்டால், ஒவ்வொரு வெடிப்பும், நிலத்தை ஆழமாக துளையிட்டு, இலக்கைச் சேதப்படுத்தும் திறனை அதிகரிக்கிறது. போயிங்கால் தயாரிக்கப்பட்ட எம்ஓபி (MOP), தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது இதுவே முதன் முறையாகும். இது அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் மிஸைல் ரேஞ்ச் (White Sands Missile Range) என்ற ராணுவ சோதனை மையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. "அனைத்து வெடிகுண்டுகளின் தாய்" என அழைக்கப்படும் 21,600 பவுண்ட் (9,800 கிலோ) எடையுள்ள Massive Ordnance Air Blast (MOAB) வெடிகுண்டை விட இது அதிக சக்தி வாய்ந்தது. இந்த MOAB, 2017 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் போருக்காகப் பயன்படுத்தப்பட்டது. "MOAB போலவே பெரிய அளவிலான ஆயுதங்களை உருவாக்க முயற்சித்த அமெரிக்க விமானப்படை, வெடிபொருளை மிகவும் வலிமையான உலோகப் பெட்டிக்குள் வைத்திருக்கும் வகையில் வடிவமைத்தது. அதன் விளைவாக உருவானது தான் GBU-57A/B மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டர்" என்று கூறுகிறார் பிரிட்டனின் ப்ராட்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலுள்ள அமைதிக் கல்வித் துறையின் பேராசிரியரான பால் ரோஜர்ஸ். படக்குறிப்பு,பதுங்கு குழியை தகர்க்கும் குண்டு தற்போது , எம்ஓபி வெடிகுண்டை ஏவுவதற்காக கட்டமைக்கப்பட்டும், நிரலாக்கம் செய்யப்பட்டும் இருப்பது அமெரிக்காவின் B-2 ஸ்பிரிட் என்ற ஸ்டெல்த் பாம்பர் மட்டும் தான். B-2 என அழைக்கப்படும் இந்த போர் விமானம், நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனம் தயாரித்தது. அமெரிக்க விமானப்படையின் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் மேம்பட்ட போர் விமானங்களில் ஒன்றாக இந்த விமானம் கருதப்படுகின்றது. இந்த விமானத்தின் உற்பத்தியாளரான நார்த்ரோப் க்ரம்மனின் கூற்றுப்படி, B-2 விமானம் 40,000 பவுண்டு (18,000 கிலோ) வரை சுமக்கக்கூடியது. ஆனால், இரண்டு GBU-57A/B "பங்கர் பஸ்டர்" வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் B-2 விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்ததாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. இதன் மொத்த எடை சுமார் 60,000 பவுண்டு (27,200 கிலோ). குண்டுவீச்சுக்குப் பயன்படும் இந்த நீண்ட தூர கனரக விமானம், எரிபொருள் நிரப்பாமல் சுமார் 7,000 மைல்கள் (11,000 கிமீ) வரை பறக்கக்கூடியது. பறக்கும் நிலையில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், அதன் வரம்பு 11,500 மைல்கள் (18,500 கிமீ) ஆக அதிகரிக்கிறது. இதன் மூலம், உலகின் எந்தப் பகுதியையும் சில மணி நேரங்களில் இந்த விமானத்தால் அடைய முடியும் என நார்த்ரோப் க்ரம்மன் கூறுகிறது. இரான் போன்ற நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய நாட்டிற்கு எதிராக எம்ஓபி வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டால், B-2 குண்டுவீச்சு விமானங்களுடன் கூடுதல் விமானங்களும் அதில் பங்கேற்க நேரிடும். எடுத்துக்காட்டாக, எதிரியின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக F-22 ஸ்டெல்த் விமானங்கள் பயன்படுத்தப்படலாம். அதன் பிறகு, சேதத்தை மதிப்பீடு செய்யவும், அதற்குப் பிறகும் தாக்குதல்களைத் தொடர வேண்டுமா என்பதை தீர்மானிக்கவும் டிரோன்கள் பயன்படுத்தப்படலாம் என்று பேராசிரியர் ரோஜர்ஸ் கூறுகிறார். இந்த எம்ஓபி வெடிகுண்டுகள் அமெரிக்காவிடம் மிகக் குறைந்த அளவே இருப்பதாக அவர் மதிப்பிடுகிறார். "அவர்கள் சுமார் 10 அல்லது 20 எம்ஓபி வெடிகுண்டுகளை வைத்திருக்கக்கூடும்" என்கிறார் பேராசிரியர் ரோஜர்ஸ். பட மூலாதாரம்,WHITEMAN AIR FORCE BASE படக்குறிப்பு,எம்ஓபி வெடிப்பதற்கு முன் மேற்பரப்பில் இருந்து சுமார் 200 அடி (61 மீட்டர்) வரை ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டதாக நம்பப்படுகிறது. பாதுகாப்பான தளமாக கருதப்பட்ட ஃபோர்டோ ஃபோர்டோ என்பது இரானின் இரண்டாவது அணுசக்தி செறிவூட்டல் நிலையமாகும். நடான்ஸுக்கு பிறகு இதுவும் ஒரு முக்கிய மையமாகக் கருதப்படுகிறது. டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே சுமார் 60 மைல் (95 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள கோம் நகருக்கு அருகில், ஒரு மலையின் ஓரத்தில் இந்த நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையத்திற்கான கட்டுமானம் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பின்னர், 2009ஆம் ஆண்டு இந்த நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையம் அங்கு செயல்படுவதை, இரான் அதே ஆண்டில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது. 80 மீட்டர் (260 அடி) ஆழத்தில் பாறை மற்றும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருப்பதுடன், இரான் மற்றும் ரஷ்ய தயாரிப்புகளான தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணை அமைப்புகளால், ஃபோர்டோ வளாகம் பாதுகாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில், சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA), அந்த தளத்தில் ஆயுத தரத்திற்கு அருகிலுள்ள 83.7% தூய்மையுடைய யுரேனியம் துகள்களைக் கண்டறிந்தது. இரானின் ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டத்தை முற்றிலும் அழிப்பதே, இரான் மீது தாக்குதல் நடத்துவதன் நோக்கம் என இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார். அதனை, "இஸ்ரேலின் இருப்புக்கே (existential) ஓர் அச்சுறுத்தல்" எனவும் அவர் விவரித்தார். எப்போதுமே தனது அணுசக்தித் திட்டம் முற்றிலும் அமைதியானது என்றும் அணு ஆயுதத்தை உருவாக்க அவர்கள் எப்போதும் முயற்சி செய்யவில்லை என்றும் இரான் கூறி வருகிறது. ஆனால் கடந்த வாரம் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் 35 நாடுகளைக் கொண்ட நிர்வாக குழு, 20 ஆண்டுகளில் முதல் முறையாக இரான் தனது அணுசக்திப் பரவல் தடைகளை மீறியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 'கேம் சேஞ்சர்' "ஃபோர்டோ தளம் செயல்பாட்டில் இருக்கும் வரை, இரான் அணு ஆயுதம் தொடர்பான அபாயத்தை ஏற்படுத்தும் நிலைமையில் தான் இருக்கிறது. டெஹ்ரானுக்கு, அந்த தளத்தில் செறிவூட்டலை அதிகரிக்கவோ அல்லது யுரேனியத்தை வேறு இடத்துக்கு மாற்றவோ வாய்ப்பு இருக்கிறது" என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கத்தின் அணுசக்தி பரவல் தடுப்பு கொள்கைக்கான இயக்குநர் கெல்சி டேவன்போர்ட் கூறுகிறார். எம்ஓபி பயன்படுத்தப்பட்டாலும், இரானின் அணு ஆயுதத் தளங்கள் எவ்வளவு ஆழத்தில் இருக்கின்றன, எவ்வளவு பாதுகாப்பாக உள்ளன என்பது தெரியாததால், இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தினால் மட்டுமே வெற்றி கிடைப்பதற்கும் உத்தரவாதம் இல்லை என்று பேராசிரியர் ரோஜர்ஸ் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cew0lwxwx02o
  4. Published By: VISHNU 22 JUN, 2025 | 12:22 AM 2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படுவது தொடர்பாக கல்வி அமைச்சு சிறப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 2024 (2025) சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் 21ஆம் திகதி சனிக்கிழமை நள்ளிரவில் வெளியிடப்படும் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்புடைய தேர்வு முடிவுகள் இன்று நள்ளிரவில் வெளியிடப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று நள்ளிரவில் வெளியிடப்படாது என்றும், முடிவுகள் வெளியிடப்படும் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் அனைத்து செய்திகளும் தவறானவை என்றும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/218089
  5. தோனி சாதனையை தகர்த்த ரிஷப் பந்த்: புதிய கேப்டன் கில் பவுலர்களை கையாளும் உத்தி பற்றி எழும் கேள்விகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சதம் அடித்த இந்திய வீரர் ரிஷப் பந்த் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹெடிங்லியில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம், வாய்ப்புகளையும் எதிரணி செய்யும் தவறுகளையும் சரியாக பயன்படுத்தியவர்களுக்கு உரிய நாளாக அமைந்தது. அந்த வகையில் நேற்றைய நாள் இங்கிலாந்தின் நாளாகவே இருந்தது. இந்திய அணியில் ரிஷப் பந்தின் 7-வது டெஸ்ட் சதத்தைத் தவிர பெரிதாக இந்திய வீரர்கள் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 3 விக்கெட் இழப்புக்கு வரை 430 ரன்கள் என்று வலுவாக இருந்த இந்திய அணி, எப்படியும் 600 ரன்களை எட்டும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், அடுத்த 41 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளையும் மளமளவென இழந்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணியும் தனது முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. தோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்திருப்பது நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தின் முக்கிய அம்சம் ஆகும். ரிஷப் பந்த் சதம் அடித்ததன் மூலம் எட்டியு புதிய மைல்கற்கள் என்ன? கேப்டன் கில் - ரிஷப் பந்த் ஜோடி சிறப்பான ஆட்டம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தது. கில் 127 ரன்களுடனும், துணைக் கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து 2வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ரிஷப் பந்த் வேகமாக ரன்களைச் சேர்க்கவே, கில் நிதானமாக ஆடினார். ரிஷப் பந்த் வழக்கத்தைவிட பவுண்டரிகளை அடித்து சதத்தை நெருங்கினார். 99 ரன்களில் இருந்த ரிஷப் பந்த் பஷீர் பந்தில் சிக்ஸர் அடித்து, டெஸ்ட் அரங்கில் 7-வது சதத்தை நிறைவு செய்தார். சதம் அடித்தவுடன் ரிஷப் பந்த் தனது ஹெல்மெட்டை கழற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, தனது வழக்கமான "சம்மர்சால்ட்" பல்டி அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். இந்த பார்ட்னர்ஷிப் 200 ரன்களைக் கடந்தது. சுப்மான் கில் 150 ரன்களை எட்டும் நிலையில், விக்கெட்டை இழந்தார். பஷீர் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முற்பட்டபோது, ஸ்குயர் லெக் திசையில் டங்கிடம் கேட்ச் கொடுத்து 147 ரன்களில் கில் விக்கெட்டை இழந்தார். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 209 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். இதன் மூலம் கேப்டனாக அறிமுக ஆட்டத்திலேயே அதிக ரன்கள் சேர்த்த 2வது வீரர் என்ற பெருமையை கில் பெற்றார். முதலிடத்தில் விஜய் ஹசாரே 160 ரன்களில் முதலிடத்தில் உள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கில் 127 ரன்களுடனும், துணைக் கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து 2வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர் திருப்புமுனை கேட்ச் அடுத்து வந்த கருண் நாயர், ரிஷப் பந்துடன் சேர்ந்தார். 8 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணிக்காக களமிறங்கியதால் கருண் நாயர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை கவர் திசையில் தூக்கி அடித்தார் கருண் நாயர். நிச்சயமாக கருண் நாயர் அடித்த ஷாட்டில் கேட்ச் பிடிப்பது கடினமானது. ஆனால், பீல்டிங்கில் இருந்த ஒலி போப் அந்தரத்தில் தாவிச் சென்று அற்புதமான கேட்ச் பிடித்து கருண் நாயர் விக்கெட்டைவீழ்த்தினார். மிகுந்த ஆசைகளுடன் களமிறங்கிய கருண் நாயர் இந்த கேட்சை நிச்சமயாக எதிர்பார்த்திருக்கமாட்டார். மிகுந்த ஏமாற்றத்துடன் கருண் நாயர் டக்அவுட்டில் வெளியேறினார். ஆட்டத்தில் கருண் நாயர் விக்கெட்தான் திருப்புமுனையாக அமைந்து, இங்கிலாந்தின் கரங்களுக்கு ஆட்டம் மாறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கருண் நாயர் ஆட்டமிழந்து வெளியேறிய காட்சி ரிஷப் பந்தும் சிக்ஸரும் அடுத்து ஜடேஜா களமிறங்கினார். ரிஷப் பந்த் சதம் அடித்தபின் பவுண்டரி, சிக்ஸர் என அடித்து வேகமாக ரன்களைச் சேர்க்கத் தொடங்கி, 150 ரன்களுக்கு நெருங்கினார். ஆனால், டங்க் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ரிஷப் பந்த் 134 ரன்களில் ஆட்டமிழந்தார், இவர் கணக்கில் 6 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் அடங்கும். கேப்டன் சுப்மான் கில் (147), ரிஷப் பந்த் (134) ஜோடி 209 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டமிழந்தபின் நடுவரிசை பேட்டர்கள், கடைசிவரிசை பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 41 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இந்திய அணி அதிர்ச்சிகரமாக இழந்து முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழந்த காட்சி இங்கிலாந்து வலுவான தொடக்கம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கியது. அப்போது லேசான மேக மூட்டம், குளிர்ந்த காற்று வீசியதை பயன்படுத்திய பும்ரா தனது ஸ்விங் பந்துவீச்சில் புதிய பந்தில் கிராளி விக்கெட்டை எளிதாக வீழ்த்தினார். ஆனால், 2வது விக்கெட்டுக்கு டக்கெட், போப் இருவரும் சேர்ந்து விக்கெட் சரிவைத் தடுத்து பேட் செய்தனர். பென் டக்கெட் 15 ரன்களில் இருந்தபோது ஸ்லிப்பில் அடித்த ஷாட்டை ரவீந்திர ஜடேஜா கேட்ச் பிடிக்கத் தவறினார், போப் 10 ரன்களில் இருந்தபோது பேட்டில் தெறித்த பந்தை கேட்ச் பிடிக்க ஜெய்ஸ்வால் தவறி இரு வாய்ப்புகளை வீணடித்தனர். இந்த இரு வாய்ப்புகளையும் இங்கிலாந்து பேட்டர்கள் பயன்படுத்தி நங்கூரமிட்டனர். சிறப்பாக ஆடிய டக்கெட் 68 பந்துகளில் அரைசதம் அடித்து 19-வது அரைசதத்தை நிறைவு செய்தார். 2-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்து டக்கெட் 62 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் போல்டாகினார். போப் 64 பந்துகளில் அரைசதம் அடித்தார். அடுத்துவந்த ஜோ ரூட், போப்புடன் சேர்ந்தார். இருவரையும் பிரிக்க பல பந்துவீச்சாளர்களை கேப்டன் கில் பயன்படு்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2வது விக்கெட்டுக்கு டக்கெட், போப் இருவரும் சேர்ந்து விக்கெட் சரிவைத் தடுத்து பேட் செய்தனர் பும்ராவை விரக்தி அடையச் செய்த நோபால் நிதானமாக ஆடி வந்த ஜோ ரூட் 28 ரன்கள் சேர்த்திருந்தபோது, பும்ரா பந்துவீச்சில் கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 80 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து ஹேரி புரூக் களமிறங்கி, போப்புடன் சேர்ந்தார். 125 பந்துகளில் போப் சதத்தை நிறைவு செய்தார். கடைசி நேர ஓவர்களில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதி பும்ரா தனது முழு முயற்சியையும் செலுத்தினார். 2வது நாளின் கடைசி ஓவரை பும்ரா வீசியபோது, ஹேரி ப்ரூக் அடித்த ஷாட்டை கருண் நாயர் கேட்ச் பிடித்தார். ஆனால், அது நோபாலாக அறிவிக்கப்படவே பும்ரா விரக்தி அடைந்தார். பும்ரா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 3 நோபால்களை வீசினார். இந்திய அணித் தரப்பில் 3 விக்கெட்டுகளையும் பும்ரா மட்டுமே வீழ்த்தினார். பிரசித் கிருஷ்ணா, சிராஜ், ஜடேஜா 10 ஓவர்களுக்கு மேல் வீசியும் ஒருவிக்கெட்டையும் இந்த ஆடுகளத்தில் வீழ்த்த முடியவில்லை. 3வது நாளில் ஆடுகளம் இந்திய பந்துவீச்சாளர்களை இன்னும் சோதிக்கப் போகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,125 பந்துகளில் போப் சதத்தை நிறைவு செய்தார். கில் கேப்டன்சி மீது எழும் கேள்வி ஷர்துல் தாக்கூரை 40 ஓவர்களுக்கு மேல் பயன்படுத்தியும் எந்த பயனும் இல்லை. பந்து நன்றாக தேய்ந்துவிட்டநிலையில் ஷர்துல் தாக்கூரால் எந்த தாக்கத்தையும் பந்துவீச்சில் ஏற்படுத்த முடியவில்லை. புதிய பந்தாக இருக்கும்போதே பிரசித் கிருஷ்ணா, பும்ரா, சிராஜ், ஷர்துல் என 4 பேருக்கும் சமமான வாய்ப்புக் கிடைத்திருந்தால் இன்னும் கூடுதலாக விக்கெட்டை வீழ்த்தியிருக்கலாம். ஆனால், கேப்டன் கில் 3 பந்துவீச்சாளர்களையே பிரதானமாகப் பயன்படுத்தினார். சுழற்பந்தவீச்சாளர் ஜடேஜாவுக்கு நேற்று 9 ஓவர்கள் மட்டுமே வழங்கினார். இதுவே கோலி, ரோஹித் சர்மாவாக இருந்திருந்தால், சுழற்பந்துவீச்சுக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்கியிருப்பார்கள். ஆடுகளம் தனது தன்மையை இழந்து தூசி படிந்து வருவதால், இந்த நேரத்தில் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதுதான் சிறந்தது. ஆனால், கில் ஏன் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளி்க்கிறார் எனத் தெரியவில்லை. தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களில் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த விக்கெட் கீப்பர்களில் தோனியின் 6வது சதத்தை முறியடித்து, ரிஷப் பந்த் புதிய சாதனை நிகழ்த்தினார். இதன் மூலம் இந்திய விக்கெட் கீப்பர்களில் டெஸ்ட் அரங்கில் அதிக சதங்களை அடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார் ரிஷப் பந்த். பிரிட்டன் மண்ணில் ரிஷப் பந்த் அடித்த 3வது சதம் இதுவாகும். எந்த அணியின் விக்கெட் கீப்பரும் இங்கிலாந்து மண்ணில் 3 சதங்களை விளாசியது இல்லை. ரிஷப் பந்த் தவிர்த்து ஜிம்பாப்பே விக்கெட் கீப்பர் ஆன்டி பிளவர் இந்தியாவில் 3 சதங்களையும், இங்கிலாந்தின் லெஸ் ஆம்ஸ் மே.இ.தீவுகளிலும் 3 சதங்களை விளாசியுள்ளனர். பிரிட்டன் மண்ணில் வெளிநாட்டு அணியின் விக்கெட் கீப்பர் ஒருவர் டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்களை அடித்ததில் ரிஷப் பந்த்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளார். வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்களை விளாசிய 2வது இந்திய பேட்டர் என்ற பெருமையும் ரிஷப் பந்த்துக்கு கிடைத்துள்ளது, முதலிடத்தில் ஹர்திக் பாண்டியா இலங்கையில் 7 சிக்ஸர்களை விளாசி முதலிடத்தில் உள்ளார். ரிஷப் பந்த் சேர்த்த 134 ரன்கள் தான் ஹெடிங்லி மைதானத்தில் விக்கெட் கீப்பர் சேர்த்த 2வது அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன், இலங்கைக்கு எதிராக பேர்ஸ்டோ 140 ரன்கள் சேர்த்துள்ளார். 2018ம் ஆண்டுக்குப்பின் ஒரு இன்னிங்ஸில் 3 இந்திய பேட்டர்கள் சதம் அடிப்பது இதுதான். இதுவரை 5 முறை இதுபோல் 3 பேட்டர்கள் சதம் அடித்துள்ளனர். கடைசியாக 2002ம் ஆண்டில் இதே ஹெடிங்லி மைதானத்தில் திராவிட், கங்குலி, சச்சின் சதம் அடித்த நிலையில் ஏறக்குறைய 23 ஆண்டுகளுக்குப்பின் ஜெய்ஸ்வால், கில், ரிஷப் பந்த் சதம் அடித்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சிக்ஸர் அடித்து சதம் 3 முறை ரிஷப் பந்த் டெஸ்ட் போட்டியில் சிக்ஸர் அடித்து சதத்தை நிறைவு செய்துள்ளார். 2018ல் ஓவல் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் அடில் ரஷீத் பந்தில் சிக்ஸர் அடித்தும், 2021ல் ஆமதபாத்தில் ஜோ ரூட் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்தும், இப்போது பஷீர் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்தும் ரிஷப் பந்த் சதத்தை நிறைவு செய்துள்ளார். சச்சின் 6 முறையும், ரோஹித் சர்மா 3 முறையும் சிக்ஸர் அடித்து சதம் நிறைவு செய்துள்ளனர். 2002ம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் அரங்கில் ரிஷப் பந்த்தைப் போல் டெஸ்ட் அரங்கில் எந்த விக்கெட் கீப்பரும், பேட்டரும் சிக்ஸர் அடித்து சதத்தை நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆடுகளம் எப்படி? ஆடுகளத்தில் பெரிதாக பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வேகப்பந்துவீச்சாளர்கள் உயிரைக் கொடுத்து பந்துவீசினாலும் ஸ்விங் ஆவதற்கு மறுக்கிறது, அதனால்தான் ஒன்றரை நாட்களில் இந்திய அணியால் 470 ரன்கள் சேர்க்க முடிந்தது, இங்கிலாந்து அணியும் விரைவாக 200 ரன்களை எட்ட முடிந்தது. 2வது நாளிலேயே ஆடுகளம் இவ்வாறு பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்காமல் இருந்தால், அடுத்துவரும் நாட்களில் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவால் காத்திருக்கிறது என்றே கூற வேண்டும். கடைசி இரு நாட்களில் ஆடுகளம் வறண்டால் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும். அப்படி நடக்கும் பட்சத்தில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஆட்டத்தில் தாக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c939gqrl03go
  6. இரான் மீது அமெரிக்கா தாக்குதல்: 3 அணுசக்தி தளங்கள் மீது குண்டுவீச்சு - நேரலை விவரம் பட மூலாதாரம்,US AIR FORCE படக்குறிப்பு, பி-2 குண்டுவீச்சு விமானம் 22 ஜூன் 2025, 01:11 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரானில் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதை டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இரானை உடனடியாக சமாதானத்திற்கு வருமாறும், இல்லாவிட்டால் அதிக அளவில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் தாக்குதல் பற்றி இரான் கூறுவது என்ன? 'ஓர் அற்புதமான இராணுவ வெற்றி' இரானில் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அந்நாட்டு மக்களுக்கு டிரம்ப் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹானில் இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தினார். "இந்த பயங்கரமான அழிவுகரமான தளங்களை அவர்கள் கட்டியெழுப்பும் போது எல்லோரும் பல ஆண்டுகளாக அந்தப் பெயர்களைக் கேட்டனர். இன்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஒரு அற்புதமான இராணுவ வெற்றி என்று நான் உலகிற்கு தெரிவிக்க முடியும். இரானின் முக்கிய அணு செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன" என்று டிரம்ப் தெரிவித்தார். பட மூலாதாரம்,REUTERS இரானுக்கு டிரம்ப் மிரட்டல் இரான் இப்போது சமாதானம் முன்வராவிட்டால், எதிர்காலத்தில் அமெரிக்காவின் தாக்குதல்கள் மிக அதிகமாக இருக்கும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். "அமைதி விரைவில் ஏற்படும் அல்லது கடந்த எட்டு நாட்களில் நாம் கண்டதை விட இரானுக்கு மிகப் பெரிய சோகம் ஏற்படும்" என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். "நினைவில் கொள்ளுங்கள், இன்னும் நிறைய இலக்குகள் உள்ளன. இன்றிரவு அவற்றில் மிகவும் கடினமானதாகவும், மிகவும் ஆபத்தானதாகவும் இருந்தது. ஆனால் அமைதி விரைவில் வரவில்லை என்றால், நாங்கள் துல்லியம், வேகம் மற்றும் திறமையுடன் மற்ற இலக்குகளை நோக்கிச் செல்வோம்," என்று அவர் கூறினார். "இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒரு குழுவாக செயல்பட்டன" இரானின் முன்னாள் இராணுவத் தளபதி காசிம் சுலைமானியால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக டிரம்ப் கூறுகிறார். "இது நடக்க விடமாட்டேன், இது தொடராது என்று நான் நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்தேன்" என்று குறிப்பிட்ட அவர், "இஸ்ரேலுக்கு எதிரான இந்த பயங்கரமான அச்சுறுத்தலை" அழிக்க இஸ்ரேலுடன் ஒரு "குழுவாக" பணியாற்றியதாகக் கூறி, பெஞ்சமின் நெதன்யாகுவை வாழ்த்தினார். டிரம்ப் உரை சுமார் நான்கு நிமிடங்கள் நீடித்தது. இரானில் 3 அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் முன்னதாக, "ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இரானின் 3 அணுசக்தி தளங்கள் மீதான எங்களது வெற்றிகரமான தாக்குதலை நாங்கள் முடித்துவிட்டோம். அனைத்து விமானங்களும் இப்போது இரான் வான்வெளிக்கு வெளியே உள்ளன," என்று டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் குறிப்பிட்டிருந்தார். அனைத்து விமானங்களும் அமெரிக்காவிற்குத் திரும்பி வந்தன என்றும் டிரம்ப் மேலும் கூறினார். இரான் மீதான அமெரிக்க தாக்குதல்களில் B-2 குண்டுவீச்சு விமானங்கள் ஈடுபட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக, அமெரிக்காவின் பி-2 ரக ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் அமெரிக்க தீவுப் பகுதியான குவாமுக்கு முன்பே மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது இரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக் கூடும் என்ற ஊகத்தை அதிகப்படுத்தியிருந்தது. 'ஃபோர்டோ தகர்க்கப்பட்டுவிட்டது' "ஃபோர்டோ தகர்க்கப்பட்டுவிட்டது" என்ற ஒரு புலனாய்வு பயனரின் பதிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுபதிவு செய்துள்ளார். "இது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகிற்கு ஒரு வரலாற்று தருணம்" என்று அவர் தனது ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளார். "இரான் இப்போது இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார். அமெரிக்காவுடன்முழு ஒருங்கிணைப்பு - இஸ்ரேல் இரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு இஸ்ரேல் அமெரிக்காவுடன் "முழு ஒருங்கிணைப்பில்" இருந்தது என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் இஸ்ரேலிய பொது ஊடகமான கானிடம் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GOOGLE EARTH ஃபோர்டோ - ரகசிய இரானிய அணுசக்தி தளம் தலைநகரம் டெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 60 மைல் (96 கிமீ) தொலைவில் ஒரு மலைப் பகுதியில் ஃபோர்டோவில் யுரேனியம் செறிவூட்டல் தளம் அமைந்துள்ளது. நிலத்தடி வசதி, யுரேனியத்தை செறிவூட்டப் பயன்படுத்தப்படும் மைய விலக்கு இயந்திரங்களையும், சிறிய சுரங்கப்பாதைகளின் வலையமைப்பையும் கொண்டிருந்த 2 முக்கிய சுரங்கப்பாதைகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. இந்த தளத்தை தாக்குமாறு அமெரிக்காவிடம் இஸ்ரேல் ஏற்கனவே முறையிட்டது. ஏனெனில், நிலத்தடியில் இருந்த அந்த அணுசக்தி தளத்தை தகர்க்கும் திறன் கொண்ட பங்கர் பஸ்டர் குண்டு அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது. இரான் பதில் அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு இலக்கான அணுசக்தி தளங்களை தாங்கள் ஏற்கனவே காலி செய்துவிட்டதாக இரானிய அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஊடகத்தின் துணை அரசியல் இயக்குநர் ஹசன் அபேதினி அரசு தொலைக்காட்சியில் தோன்றி பேசினார். இரான் இந்த மூன்று அணுசக்தி தளங்களையும் முன்னதாகவே காலி செய்துவிட்டதாக அவர் கூறினார். டிரம்ப் சொல்வது உண்மையாக இருந்தாலும் கூட, இரான் அந்த அணுசக்தி தளங்களில் இருந்த பொருட்களை ஏற்கனவே பாதுகாப்பாக வெளியே எடுத்துவிட்டதால், இந்த தாக்குதலால் பெரிய பின்னடைவு எதையும் சந்திக்கவில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தாக்குதலை உறுதிப்படுத்திய இரான் இரானில் இருந்த பாதுகாப்பான அணுசக்தி தளமாக கருதப்பட்ட ஃபோர்டோ மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை இரான் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. கோம் மாகாண நெருக்கடி மேலாண்மைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் மோர்டெசா ஹெய்தாரி, "ஃபோர்டோ அணுசக்தி நிலையப் பகுதியின் ஒரு பகுதி வான்வழித் தாக்குதலுக்கு இலக்கானது" என்று கூறியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல், நடான்ஸ், இஸ்பஹான் அணுசக்தி தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இரான் கூறியுள்ளது. இஸ்பஹானின் பாதுகாப்பு துணை ஆளுநர் அக்பர் சலேஹி, "நடான்ஸ் மற்றும் இஸ்பஹானில் பல வெடிப்புகள் கேட்டன, இஸ்பஹான் மற்றும் நடான்ஸின் அணுசக்தி நிலையங்களுக்கு அருகில் தாக்குதல்களைக் கண்டோம்" என்று கூறியுள்ளார். இதன் மூலம், டிரம்ப் குறிப்பிட்ட 3 அணுசக்தி தளங்களும் தாக்குதலுக்கு இலக்கானது இரானிய அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,REUTERS இரானிடம் முன்னறிவித்த அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்னரே அதுகுறித்து இரானிடம் அமெரிக்கா தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமையன்று இரானை "ராஜதந்திர ரீதியாக" தொடர்பு கொண்டு தாக்குதல் நடத்த மட்டுமே செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், "ஆட்சி மாற்றத்திற்கான முயற்சிகள் திட்டமிடப்படவில்லை" என்றும் அமெரிக்கா கூறியதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் செய்தி கூறுகிறது. இந்த வார தொடக்கத்தில், இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியைக் கொல்லும் நெதன்யாகுவின் திட்டத்தை டிரம்ப் நிராகரித்துவிட்டதாக பல அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ்ஸிடம் தெரிவித்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn0q81z52xzo
  7. நான்காம் பகல் போசன இடைவேளையின்போது இலங்கை 465 - 6 விக்; கமிந்து மெண்டிஸ் 83 ஆ.இ. Published By: DIGITAL DESK 3 20 JUN, 2025 | 12:34 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் இருதரப்பு டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியின் நான்காம் நாளான இன்றைய பகல் போசன இடைவேளையின்போது இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 465 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. கமிந்து மெண்டிஸ் 83 ஓட்டங்களுடனும் மிலன் ரத்நாயக்க 38 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். போட்டியின் நான்காம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்பு 368 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, தனஞ்சய டி சில்வா (19), குசல் மெண்டிஸ் (5) ஆகியோரின் விக்கெட்களை இழந்தது. எனினும் கமிந்து மெண்டிஸ், மிலன் ரத்நாயக்க ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 79 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளனர். பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 495 ஓட்டங்களைப் பெற்றது. https://www.virakesari.lk/article/217986
  8. 21 JUN, 2025 | 05:53 PM அராலி பகுதியில் சனிக்கிழமை (21) உழவு இயந்திரம் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வர்த்தக ஸ்தாபனம் ஒன்றுக்கு சொந்தமான உழவு இயந்திரம் ஒன்று வாடிக்கையாளர் ஒருவருக்கு பொருட்களை ஏற்றிச் சென்றவேளையில், வீதியின் குறுக்கே மாடு பாய்ந்ததால் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்துஇடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது மின்கம்பமானது உழவு இயந்திரத்தின் மீது விழுந்துள்ள நிலையில் சாரதி எந்தவிதமான காயங்களும் இன்றி உயிர்தப்பியுள்ளார். விபத்தின்போது சேதமடைந்த மின்சார இணைப்பினை சரிசெய்யும் நடவடிக்கையில் வட்டுக்கோட்டை மின்சார சபையினர் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/218084
  9. 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார் தொடர்ந்து பேசிய அவர், "ருவாண்டா விவகாரத்தில் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும். இன்னும் காங்கோ, செர்பியா, கொசோவோ என நிறைய சொல்லலாம். முக்கியமாக இந்தியா- பாகிஸ்தான் விவகாரம். நான் நான்கு, ஐந்து முறை பெற்றிருக்க வேண்டும். ஆப்ரஹாம் ஒப்பந்தத்துக்காகவும் தந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எனக்கு நோபல் பரிசு தரமாட்டார்கள். அவர்கள் லிபரல்களுக்கு மட்டும்தான் தருவார்கள்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj9vnx4k0ylo
  10. 21 JUN, 2025 | 04:10 PM வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இருந்து பெரியார்குளம் முருகன் ஆலயம் வரையான 1200 மீற்றர் நீளம் கொண்ட வீதி புனரமைக்கும் பணிகள் சனிக்கிழமை (21) ஆரம்பிக்கப்பட்டது. கிராமப்புற வீதிகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் இந்த பணிக்காக அண்ணளவாக 11 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகரசபையின் வட்டார உறுப்பினர் சி.கிருஸ்ணதாசின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனின் ஒழுங்குபடுத்தலில் இந்த வீதி புனரமைக்கப்படுகின்றது. நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர், வீதி அமைக்கும் பணியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர் சி.கிருஸ்ணதாஸ் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் சிரேஸ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் பிரமேரஞ்சன், கிராமத்தின் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/218075
  11. பெத்தும் நிஸ்ஸன்கவின் அபார சதத்தின் உதவியுடன் பங்ளாதேஷுக்கு இலங்கை துணிச்சலான பதில்; ஏஞ்சலோ மெத்யூஸுக்கு பங்களாதேஷ் வீரர்கள், இரசிகர்கள் மரியாதை Published By: VISHNU 19 JUN, 2025 | 08:53 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸட் சம்பியன்ஷிப் மற்றும் இருதரப்பு தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க குவித்த அபார சதத்தின் உதவியடன் இலங்கை துணிச்சலான பதில் அளித்துள்ளது. இது இவ்வாறிருக்க தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஏஞ்சலோ மெத்யூஸ் களம் புகுந்தபோதும் களம் விட்டு வெளியேறியபோதும் அவருக்க பலத்த மரியாதை செலுத்தப்பட்டது. பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் பெற்ற 495 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் இலங்கை போட்டியின் மூன்றாம் நாளான இன்று வியாழக்கிழமை (19) ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 368 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதல் இன்னிங்ஸில் மேலும் 6 விக்கெட்கள் மீதம் இருக்க பங்களாதேஷைவிட 127 ஓட்டங்களால் இலங்கை பின்னிலையில் இருக்கிறது. மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க தனது 17ஆவது டெஸ்ட் போட்டியில் 3ஆவது சதத்தைக் குவித்ததுடன், 64ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது டெஸ்ட் போட்டிகளில் 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தார். பெத்தும் நிஸ்ஸன்கவும் 31வயதான அறிமுக வீரர் லஹிரு உதாரவும் 47 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது லஹிரு உதார 29 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் பெத்தும் நிஸ்ஸன்கவுடன் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த தினேஷ் சந்திமால் அரைச் சதம் பெற்றதுடன் 157 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டார். தினேஷ் சந்திமால் 119 பந்துகளில் 4 பவுண்டறிகளுடன் 54 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து ஏஞ்சலோ மெத்யூஸ் தனது கடைசி டெஸ்டில் விளையாட களம் புகுந்தபோது பங்களாதேஷ் வீரர்களும் மத்தியஸ்தர்களும் இருமருங்கில் வரிசையாக நின்று அவருக்கு மரியாதை செலுத்தி வரவேற்றனர். நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஏஞ்சலோ மெத்யூஸ் 3 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 39 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்து மைதானத்தை விட்டு வெளியேறியபோது அரங்கில் இருந்த அனைவரும் கரகோஷம் எழுப்பி அவரை பாராட்டி கௌரவித்தனர். மறுபக்கத்தில் திறமையாகவும் ஆக்ரோஷமாகவும் துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க 256 பந்துகளை எதிர்கொண்டு 23 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 187 ஓட்டங்களைக் குவித்தார். டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும். கமிந்து மெண்டிஸ் 37 ஓட்டங்களுடனும் தனஞ்சய டி சில்வா 17 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்புக்கு 484 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பங்களாதேஷ் மொத்த எண்ணிக்கை 495 ஓட்டங்களாக இருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது. துடுப்பாட்டத்தில் முஷ்பிக்குர் ரஹிம் 163 ஓட்டங்களையும் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 148 ஓட்டங்களையும் லிட்டன் தாஸ் 90 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 85 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மிலன் ரத்நாயக்க 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அறிமுக வீரர் தரிந்து ரத்நாயக்க 196 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். https://www.virakesari.lk/article/217954
  12. ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம் 2026, ஆரம்பப் போட்டியில் இலங்கை - இங்கிலாந்து 19 JUN, 2025 | 05:57 AM (நெவில் அன்தனி) இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி - 20 உலகக் கிண்ணத்தின் ஆரம்பப் போட்டியில் இலங்கையும் வரவேற்பு நாடான இங்கிலாந்தும் விளையாடவுள்ளன. இப் போட்டி பேர்மிங்ஹாம் எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் 2026 ஜூன் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தின் 10ஆவது அத்தியாயம் இங்கிலாந்தில் 2026ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் திகதி ஆரம்பமாகி லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஜூலை 5ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் நிறைவுபெறும். ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல் 3 அத்தியாயங்களில் (2009, 2010, 2012) 8 அணிகளும் அடுத்த 6 அத்தியாயங்களில் (2014, 2016, 2018, 2020, 2023, 2024) 10 அணிகளும் பங்குபற்றின. பத்தாவது அத்தியாயத்தில் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை 10ஆக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், நியஸிலாந்து ஆகியவற்றுடன் குழு 2இல் இலங்கை இடம்பெறுகிறது. அத்துடன் பிராந்தியங்களில் நடைபெறும் மகளிர் ரி10 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றிலிருந்து இரண்டு அணிகள் இக் குழுவில் இணையும். குழு 1இல் அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், 2 தகுதிகாண் அணிகள் ஆகியன இடம்பெறும். 10 அணிகள் பங்குபற்றும் மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் மொத்தம் 30 லீக் போட்டிகளும் 3 இறுதிச் சுற்று போட்டிகளும் நடத்தப்படும். லீக் போட்டிகள் யாவும் ஜூன் 29ஆம் திகதியுடன் நிறைவடையும். அரை இறுதிப் போட்டிகள் தி ஓவல் விளையாடரங்கிலும் இறுதிப் போட்டி லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெறும். முதலாவது அரை இறுதிப் போட்டி ஜூன் 30ஆம் திகதியும் இரண்டாவது அரை இறுதிப் போட்டி ஜூலை 2ஆம் திகதியும் இறுதிப் போட்டி ஜூலை 5ஆம் திகதியும் நடைபெறும். லீக் போட்டிகள் எஜ்பெஸ்டன், ஹெடிங்லே, ஓல்ட் ட்ரஃபோர்ட் கிரிக்கெட் விளையாட்டரங்கு, பிறிஸ்டல் கவுன்ட் மைதானம், ஹெம்ப்ஷயர் பௌல் ஆகிய மைதானங்களில் நடைபெறும். இலங்கையின் போட்டிகள் (குழு 2) ஜூன் 12 எதிர் இங்கிலாந்து (எஜ்பெஸ்டன்) ஜூன் 16 எதிர் நியூஸிலாந்து (ஹெம்ப்ஷயர் பௌல்) ஜூன் 20 எதிர் மேற்கிந்தியத் தீவுகள் (பிறிஸ்டல் கவுன்டி) ஜுன் 23 எதிர் தகுதிகாண் அணி (பிறிஸ்டல் கவுன்டி) ஜூன் 25 எதிர் தகுதிகாண் அணி (ஓல்ட் ட்ரஃபோர்ட்) https://www.virakesari.lk/article/217868
  13. நில அபகரிப்பிற்கு தீர்வை காணுமாறு ஐநா மனித உரிமை ஆணையாளர் இலங்கை விஜயத்தின்போது வேண்டுகோள் விடுக்கவேண்டும் - மனித புதைகுழி அகழ்வின் போது சர்வதேச பிரசன்னம் அவசியம் - ஓக்லாந்து நிறுவகம் Published By: RAJEEBAN 21 JUN, 2025 | 12:58 PM ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க்கர் இலங்கைக்கு 23ம் திகதி முதல் விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கையில் தற்போது இடம்பெறும் நில அபகரிப்புகள் கடந்த கால நில அபகரிப்புகள் மற்றும் தமிழர்களிற்கு எதிரான மனித உரிமைமீறல்களிற்கு இலங்கை அரசாங்கம் தீர்வை காணவேண்டும் என ஐக்கியநாடுகள் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என ஓக்லாந்து நிறுவகம் வேண்டுகோள் விடுக்கின்றது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களாகின்ற போதிலும்,1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்தது முதல் ஒடுக்குமுறைக்குள்ளான புறக்கணிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்னமும் நீதிக்காக காத்திருக்கின்றார்கள். பொறுப்புகூறல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்பை மனித உரிமை ஆணையாளரின் விஜயம் வழங்குகின்றது. கடந்தமாதம் பல சிறுவர்கள் உடல்கள்கள் உட்பட 19 பேரின் மனித எச்சங்கள் காணப்பட்ட மனித புதைகுழி கடந்த மாதம் இலங்கையின் வடக்கில் யாழ் நகரத்திற்கு அருகில் உள்ள செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த காலங்களில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டபோதிலும்,பல தசாப்தங்களாக தண்டனை விடுபாட்டுரிமை,அவற்றை விசாரணை செய்ய தவறியமை போன்றவை காணப்பட்டதால் ,மனித புதைகுழியை தோண்டும்போது சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்ற காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் வேண்டுகோள்களுடன் ஒக்லாந்து நிறுவகம் இணைந்துகொள்கின்றது. நிலைமையை முழுமையாக மதிப்பிடுவதற்கு ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வடக்குகிழக்கின் அனைத்து பகுதிகளிற்கும் விஜயம் மேற்கொள்ளவேண்டும். 2009ம் ஆண்டு யுத்தத்தின் இறுதியில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட படுகொலைகள் காரணமாக 169 796 தமிழர்கள் காணாமல்போயுள்ளதாகவும் கொல்லப்பட்டதாக கருதப்படுவதாகவும் முள்ளிவாய்க்காலிற்கு மனித உரிமை ஆணையாளர் விஜயம் மேற்கொள்ளவேண்டும் என காணாமல்போனவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த விஜயங்கள் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புகள்,நில அபகரிப்பு,கண்காணிப்பு, அச்சுறுத்தல் தமிழர்களின் பாரம்பரியம் திட்டமிடப்ட்டு சிதைக்கப்படுதல்,தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களில் புத்தவிகாரைகள் உருவாக்கப்படுதல் தடையின்றி தொடர்தல் போன்றவற்றைமதிப்பிடுவதற்கும் பார்ப்பதற்கும் உதவியாக அமையும். யாழ்ப்பாணம் தையிட்டியில் படையினரின் சட்டவிரோத விகாரைகளிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.தமிழர்களின் வரலாற்றை கலாச்சாரத்தை அழிப்பதற்கு இலங்கையின் ஆட்சியாளர்கள் முன்னெடுத்துவரும் திட்டமிட்ட தந்திரோபாயம் இதுவாகும். அநீதிகள் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வடக்குகிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் சட்டங்களை மீறியமைக்கா பொலிஸ் விசாரணை அச்சுறுத்தல் போன்றவற்றை எதிர்கொண்டுள்ளனர். ஓக்லாந்து நிறுவகம் ஆவணப்படுத்தியுள்ளபோல தங்கள் நிலங்கள் காலனித்துவம் செய்யப்படுவது தொடர்வதால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் வீடுகள் நிலங்களில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் உள்ளனர். வடக்குகிழக்கை பிரிப்பதன் மூலம் தமிழர் தாயகத்தை பிரிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் தொடர்கின்றன.நீர்ப்பாசன திட்டங்கள், இராணுவ குடியேற்றங்கள் தொல்பொருள் ஒதுக்கீடுகள், சரணாலயங்கள்,பௌத்தமயமாக்கல், போன்றவற்றின் மூலம் இதனை செய்கின்றனர். வடக்குகிழக்கு தொடர்ந்தும் பெரும் இராணுவமயப்படுத்தலின் கீழ் காணப்படுகின்றது இது அந்த மக்களின் நாளாந்த நடவடிக்கைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இலங்கையிலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் பொறுப்புக்கூறல் நீதிக்கான தமிழ்மக்களின் தடையற்ற அர்ப்பணிப்பு-இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச சமூகம் அழுத்தங்களை பேண உதவியுள்ளது. மோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காணவேண்டும்,பொறுப்புக்கூறல் இடைவெளிக்கு முடிவை காணஅரசமைப்பு நிர்வாக சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும்,என டேர்க் முன்னர் விடுத்த வேண்டுகோள்களால் நாங்கள் நம்பிக்கைகொண்டுள்ளோம். ராஜபக்ச யுகம் முடிவிற்கு வந்துள்ள போதிலும்,ஜனாதிபதி திசநாயக்கவின் அரசாங்கம் முன்னைய ஆட்சியாளர்களின் கொள்கைகளையே பின்பற்றுகின்றது. சர்வதேச சட்டத்தினால் பாதிக்கப்பட்ட கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தியமைக்காக பொதுமக்களை தன்னிச்சையாக தடுத்துவைப்பதற்கு மிக மோசமான பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. சர்வதேச நடவடிக்கைகளை தூண்டுவதற்கு மனித உரிமை ஆணையாளரின் விஜயமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 59 வது அமர்வும் முக்கியமானவை. சர்வதேச மனித உரிமை மனிதாபிமான சட்டங்களை மீறியமைக்காகவும்,மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்காகவும் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படவேண்டும். இராணுவமயப்படுத்துதலை நிறுத்தவேண்டும்,களவாடிய நிலங்களை மீள கையளிக்கவேண்டும்,வடக்குகிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள குடியேற்றவேண்டும் என அதற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படவேண்டும். நம்பகதன்மை மிக்க உண்மையை தெரிவிக்கும் நடைமுறை, நீதி,இழப்பீடு போன்றவற்றை ஆரம்பிப்பதற்கும்,தமிழ் மக்களின் நீண்டகால துயரங்களிற்கு தீர்வை காண்பதற்கான அரசியல் தீர்வு ஆகியவற்றிற்கு இது அவசியமானது. https://www.virakesari.lk/article/218058
  14. இரானுக்குள் ஒரு ரகசிய வலையமைப்பை உருவாக்கி தளபதிகள், ராணுவ தளங்களை 'மொசாட்' தாக்கியது எப்படி? பட மூலாதாரம்,THE IDF படக்குறிப்பு, இரானில் தாக்குதல்களை மேற்கொள்வதில் மொசாட் முக்கிய பங்கு வகித்ததாக ஊகங்கள் உள்ளன. கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி பாரசீக சேவை பதவி, 21 ஜூன் 2025, 08:36 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு வெளிவந்த பல அறிக்கைகள், போர் முனை வானத்தில் மட்டுமல்ல, நிலத்திலும் இருப்பதைக் குறிக்கின்றன. இரானில் ஆழமாக மேற்கொள்ளப்பட்ட உளவுத்துறை நடவடிக்கைகள் மற்றும் ஊடுருவும் செயல்பாடுகள் மூலம் இஸ்ரேல் இதற்கு நீண்ட காலமாக தயாராகி வந்துள்ளது. இருப்பினும், இரானின் பாதுகாப்புப் படைகளுக்குள், இஸ்ரேல் ஊடுருவலாம் என்ற அச்சத்தை இரானிய அதிகாரிகள் ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் இந்த முழு சம்பவத்தில் இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாட்டின் பங்கு எந்தளவுக்கு இருந்தது என்பதை மதிப்பிடுவது எளிதான காரியமல்ல. இஸ்ரேல் பொதுவாக மொசாட்டின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. அதேபோல், இரானில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் பிற உளவுத்துறை அமைப்புகளும் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது. ஆயினும், இரானிய மண்ணில் இலக்குகளை அடையாளம் காண்பதிலும், நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் மொசாட் முக்கிய பங்கு வகித்ததாக நம்பப்படுகிறது. பட மூலாதாரம்,ATTA KENARE/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட இரானிய ராணுவத் தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் டெஹ்ரானில் ஒரு பதாகை வைக்கப்பட்டது. இரானுக்குள் நீர்மூழ்கி எதிர்ப்பு அமைப்புகள், ஏவுகணை கிடங்குகள், கட்டளை மையங்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தனிநபர்கள் மீது ஒரே நேரத்திலும், மிகவும் துல்லியமாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பதை பல ஊடக அறிக்கைகளும், சில இஸ்ரேலிய அதிகாரிகளின் கருத்துகளும் தெளிவுபடுத்துகின்றன. இரானுக்குள் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த உளவுத்துறை நடவடிக்கைகள் மூலம் இந்தத் தாக்குதல்களை இஸ்ரேல் சாத்தியமாக்கியுள்ளது. இரான் உளவுத்துறைக்கு பெரும் இழப்பு பட மூலாதாரம்,MAJID SAEEDI/GETTY IMAGES படக்குறிப்பு,இரானின் தலைநகர் டெஹ்ரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலின் புகைப்படம் (13 ஜூன் 2025) இஸ்ரேலின் தாக்குதல்கள் இரானின் ராணுவம் மற்றும் அணுசக்தி நிலையங்களை குறிவைத்தது மட்டுமல்லாமல், அதன் உளவுத்துறை திறன்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இரான் தலைவர்களும், ராணுவத் தளபதிகளும் குழப்பமும், திகைப்பும் அடைந்துள்ளனர். தாக்குதல்கள் நடந்த ஐந்தாவது நாளில் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை, உளவுத்துறை அபாயங்கள் குறித்து அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் கடுமையான கவலை இருப்பதைக் காட்டுகிறது. அந்த அறிக்கையில், அதிகாரிகள் மற்றும் அவர்களது பாதுகாப்புக் குழுக்கள் மொபைல் போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் அல்லது மடிக்கணினிகள் போன்ற எந்தவொரு தகவல் தொடர்பு நெட்வொர்க்குடனும் இணைக்கப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அதிகாரிகளுக்கு மட்டும் அல்ல. பொதுமக்களும் இந்த சாதனங்களை முடிந்தவரை குறைவாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த அளவிலான பொது எச்சரிக்கை என்பது வெறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமன்றி, இரானுக்குள் சைபர் பாதுகாப்பில் ஆழமான ஊடுருவல் குறித்த அச்சம் வேகமாக வளர்ந்து வருவதைக் காட்டும் ஒரு அறிகுறியாகவும் உள்ளது. இரானுக்குள் தளவாடங்களை கடத்தி, ஒருங்கிணைத்து, ஆயுத உற்பத்தியா? இஸ்ரேலிய மற்றும் மேற்கத்திய ஊடகங்கள் கூறுவதுபோல, இஸ்ரேலின் நடவடிக்கைகள் வெறும் முக்கியமான தகவல்களை அறிந்து கொள்வதோடு மட்டும் நின்றுவிடவில்லை. இஸ்ரேல், இரானிய மண்ணில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களைத் தயாரிக்கவும் , அவற்றை பயன்படுத்தவும் ஒரு திட்டமிட்ட வலையமைப்பை உருவாக்கியிருப்பதாக இந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. நீண்ட காலம் நீடித்ததாகக் கூறப்படும் இந்த நடவடிக்கைகள், உள்ளூர் முகவர்களின் வலையமைப்பு, அவர்களுக்காக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு, போக்குவரத்து அமைப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டன. சமீபத்திய தாக்குதல்களுக்கான அடித்தளம் இந்த முன்தயாரிப்புகளில் இருந்தே கட்டமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இராக் வழியாகச் செல்லும் லாரிகள், வணிகக் கொள்கலன்கள் மற்றும் பயணிகளின் சூட்கேஸ்களில் பொருட்கள் மறைத்து வைக்கப்படும் கடத்தல் முறைகளை பயன்படுத்தி, இஸ்ரேல் டிரோன்கள் மற்றும் ஏவுகணை உபகரணங்களை ஒவ்வொன்றாக இரானுக்குள் நகர்த்தியுள்ளதாக ராணுவ விவகார கண்காணிப்பாளரான 'தி வார் சோனும்' மற்றும் பிற ஆதாரங்களும் தெரிவித்துள்ளன. இந்த சாதனங்களில் மின்னணு கருவிகள் (electronic fuses), மேம்பட்ட எலக்ட்ரோ-ஆப்டிகல் கேமராக்கள், லித்தியம் பேட்டரிகள், இலகு ரக இயந்திரங்கள், ஜிபிஎஸ் அடிப்படையிலான வழிகாட்டுதல் அமைப்புகள் மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவையும் அடங்கும். பின்னர், பல ஆண்டுகளாக இரானின் பல்வேறு பகுதிகளில் மொசாட் அமைத்த ரகசிய இடங்களில், இந்த பாகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களாக மாற்றப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன. டெஹ்ரானுக்கு அருகில் மூன்று மாடி கட்டிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது தற்கொலை டிரோன்களை தயாரிக்கவும் சேமிக்கவுமான ஒரு தளமாக இருந்ததாக அதிகாரிகள் விவரித்துள்ளதாகவும் இரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பட மூலாதாரம்,MIZAN படக்குறிப்பு,இரானின் பல்வேறு பகுதிகளில், மொசாட் அமைத்த ரகசிய இடங்களில், பாகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு ஆயுதங்களாக மாற்றப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன. இரானிய அரசு தொலைக்காட்சி வெளியிட்ட ஒரு செய்தியில், கட்டடத்தின் உள்ளே உள்ள மேசைகள் மற்றும் அலமாரிகளில் குறைந்தது ஒரு ட்ரோன், அதன் இறக்கைகள், பல்வேறு பாகங்கள் மற்றும் கட்டுப்பாட்டு உபகரணங்கள் இருந்தது காட்டப்பட்டது. அங்கே ஒரு 3D பிரிண்டரும் காணப்பட்டது. 'தி வார் ஸோன்' என்ற வலைதளத்தின் தகவல்படி, இந்த வகையான பிரிண்டர் யுக்ரேனில் டிரோன் பாகங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 16 திங்கட்கிழமையன்று டெஹ்ரானில் உள்ள ஒரு பகுதியில் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில், மொசாட்டுடன் தொடர்புடைய 2 "முகவர்கள்" கைது செய்யப்பட்டதாக இரானிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அவர்களிடம் இருந்து 200 கிலோகிராமுக்கும் அதிகமான வெடிபொருட்கள், 23 டிரோன் பாகங்கள், லாஞ்சர்கள், கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் ஒரு நிசான் கார் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இரானின் மிகவும் முக்கியமான அணுசக்தி நிலையங்கள் அமைந்துள்ள இஸ்ஃபஹானில், ஏராளமான டிரோன் மற்றும் மைக்ரோ-டிரோன் உற்பத்திக்கான உபகரணங்கள் மற்றும் பாகங்களை வைத்திருந்த ஒரு பட்டறையை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சோதனை செய்தார். இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3D பிரிண்டர்கள் மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி டிரோன்கள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன என்பது இந்த தகவல்களின்படி தெரியவருகின்றது. இதனால் அதிக அளவில் பாகங்களை கடத்த வேண்டிய தேவை இல்லாமல் போவதால், இரான் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு மொசாட் சப்ளை சங்கிலியை கண்டுபிடிப்பது கடினமாகிவிட்டிருந்தது. இந்தக் கூற்றுகளை பிபிசி சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை இரானிய பாதுகாப்பு நிறுவனங்கள் இதற்கு முன்பு பலமுறை கைது செய்துள்ளன. ஏவுகணைகள், நவீன ஆயுதங்கள் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் பயன்படுத்துதல் பட மூலாதாரம்,TELEGRAM படக்குறிப்பு,ஸ்பைக் ஏவுகணை லாஞ்சர்களின் படங்கள், தரையில் உள்ள முக்காலி போன்ற அமைப்பின் மீது அதன் உருவத்தை மறைக்கும் உறைகளுடன் வைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களின் தகவல்களின்படி, இஸ்ரேல் ரகசிய நடவடிக்கையின் ஒரு முக்கிய அம்சமாக, இரானிய மண்ணில் உள்ள இலகுரக, துல்லியமான மற்றும் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஏவுகணை அமைப்புகள் காணப்படுகின்றன. இத்தகைய நவீன மற்றும் சிறப்பு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை, அவற்றை இயக்குபவரின் உதவி இல்லாமல் இரானுக்குள் இருந்து சுட முடியும். தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில், இது பாரம்பரிய முறைகளை நேரடியாக சவால் செய்யும் ஒரு நடவடிக்கையாகக் கருதப்படுகின்றது. இரானின் ஆங்கில செய்தி சேவையான பிரஸ் டிவி திங்களன்று தனது டெலிகிராம் சேனலில், "இரானிய வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த ஸ்பைக் ரக ஏவுகணைகளை இரானிய உளவுத்துறை அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன. இந்த அமைப்புகளில் இணைய-தானியங்கி மற்றும் ரிமோட் கண்ட்ரோல் பொருத்தப்பட்டிருந்தது" என்றும், "இந்த அமைப்பு மொசாட் முகவர்களால் இயக்கப்பட்டது"என்றும் அது குறிப்பிட்டுள்ளது. அவை ஒரு வாகனத்திலோ அல்லது டிரோனிலோ பொருத்தப்படவில்லை. மாறாக அவற்றை மறைக்கும் உறையுடன் கூடிய முக்காலி போன்ற அமைப்பின் மீது நிறுவப்பட்டு, தரையில் வைக்கப்பட்டிருந்தன என்பதை ஸ்பைக் லாஞ்சர் ஏவுகணைகளின் படங்கள் காட்டுகின்றன. இந்த ஏவுகணைகளில் எலக்ட்ரோ-ஆப்டிகல் வழிகாட்டுதல் அமைப்புகள், அதிநவீன கேமராக்கள் மற்றும் செயற்கைக்கோள் தொடர்பு ஆண்டெனாக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இதனால், தூரத்திலிருந்து கூட அவற்றுக்கு கட்டளை வழங்கப்படலாம். இதற்கு முன்பும், இரானில் இஸ்ரேல் ரிமோட் கண்ட்ரோல் ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2020 நவம்பரில், இரானில் அணுசக்தி திட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு மூத்த விஞ்ஞானி, ஒரு பிக்அப் வேனில் பொருத்தப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் ஆயுதத்தால் படுகொலை செய்யப்பட்டதாகவும், சம்பவம் நடந்த நேரத்தில் தாக்குதலில் ஈடுபட்ட எந்த நபரும் சம்பவ இடத்தில் இல்லை என்றும் இரானிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். பட மூலாதாரம்,MAJID SAEEDI/GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலிய தாக்குதலால் அழிக்கப்பட்ட இரானிய கட்டிடம் (13 ஜூன் 2025) இரானின் வான் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் அமைப்புகளை முடக்க திட்டம் இரான் மீது வான்வழி தாக்குதல்களை நடத்துவதற்கு முன்பு, இரானின் வான் பாதுகாப்பு வலையமைப்பை முடக்க ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்துவதே இஸ்ரேலிய நடவடிக்கையின் முக்கிய பகுதி என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன. சிறிய தற்கொலை டிரோன்கள், தரையில் இருந்து ஏவப்படும் இரானிய ஏவுகணைகள் மற்றும் மின்னணு போர் இயந்திரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் பல்வேறு முயற்சிகள் இந்த உத்தியில் இணைக்கப்பட்டிருந்தன. இரானின் ரேடார் அமைப்புகளை முடக்குவது, வான் பாதுகாப்பு ஏவுகணை கட்டமைப்பை அழிப்பது மற்றும் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்த வசதியாக ஒரு பாதுகாப்பான வழியை உருவாக்குவது ஆகியவையே அதன் ஒட்டுமொத்த நோக்கமாக இருந்துள்ளது. ராணுவ விவகாரங்களை மையமாகக் கொண்ட வலைத்தளங்களின்படி, இந்த நடவடிக்கையின் தொடக்கத்தில், சிறிய மற்றும் இலகுரக குவாட்காப்டர் போன்ற டிரோன்கள் மற்றும் மைக்ரோ ட்ரோன்களின் தொகுதி ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய மாதங்களில் இந்த டிரோன்கள் ஏற்கனவே இரானின் பல பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. இரானின் முக்கிய தளபதிகளுக்கு குறி பட மூலாதாரம்,TASNIM/KHAMENEI படக்குறிப்பு,இரானிய இராணுவம் மற்றும் புரட்சிகர காவல்படையின் மூத்த அதிகாரிகளை இஸ்ரேல் குறிவைக்கிறது இரானிய ராணுவம் மற்றும் புரட்சிகர காவல்படையின் நிர்வாக அமைப்பை பலவீனப்படுத்துவதற்காக முக்கிய தளபதிகளுக்கு குறிவைத்தது தான் இஸ்ரேலின் நடவடிக்கையின் மற்றொரு முக்கிய அம்சமாகக் கருதப்படுகின்றது. மொசாட் மற்றும் அதன் கூட்டாளிகள் உளவுத் தகவல்கள் மற்றும் ஸ்மார்ட் ஆயுதங்களை பயன்படுத்தி, இரானின் பாதுகாப்புத்துறையில் கட்டளை பிறப்பிக்கும் அதிகார கட்டமைப்பில் சேதத்தை ஏற்படுத்தி, அதன் ராணுவ தயார் நிலையை மந்தமாக்கவும் முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையின் தொடக்கத்தில், ராணுவ தளங்கள் அல்லது ஏவுகணை ஏவுதளங்களை சில தாக்குதல்கள் குறிவைக்கவில்லை. மாறாக, உயர் அதிகாரிகளின் வீடுகள் அல்லது அலுவலகங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தாக்குதல்கள் இரானுக்குள் இருந்தபடியே ஸ்பைக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டன என ஊடக அறிக்கைகளும் குறிப்பிடுகின்றன. இந்த ஏவுகணைகளால், நேரடி கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் கட்டடங்களுக்குள் இருக்கும் மனிதர்களை நேரடியாக குறிவைக்க முடியும். இரான் தளபதிகளுக்கு மொசாட் குறி தாக்குதலுக்கு முன்பு மட்டுமல்லாமல், தாக்குதல் நடைபெறும் போதும் இஸ்ரேலின் உளவுத்துறை நடவடிக்கைகள் தொடர்ந்தன என்றும், அப்போது இரானின் உயர் ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டனர் என்றும் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. மூன்றாவது நாள் நடந்த தாக்குதலில் புரட்சிகர காவல்படையின் உளவுத்துறைப் பிரிவு தலைவர் முகமது கசெமியும் அவரது உதவியாளரும் குறிவைக்கப்பட்டனர். வெள்ளிக்கிழமை கொல்லப்பட்ட தளபதிக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட அதிகாரியும் அடுத்த 4 நாட்களுக்குப் பிறகு கொல்லப்பட்டார். இஸ்ரேலின் முழுமையான உத்தி பல வருடங்களாக நடந்த தயாரிப்புகளின் விளைவு என அமெரிக்க சிந்தனைக் குழு 'ஹட்சன் இன்ஸ்டிடியூட்' வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகின்றது. இந்த திட்டத்தில், தொடர்ச்சியான தகவல் சேகரிப்பு, நேரலையில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் திட்டமிடப்பட்ட இலக்குகளை ஆழமாக அணுகும் நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2ez7yz1zmvo
  15. மூன்றாம் நாள் பகல் போசன இடைவேளையின்போது இலங்கை 100 - 1 விக் 19 JUN, 2025 | 12:25 PM (நெவில் அன்தனி) காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் முதலாவது இன்னிங்ஸில் பெற்ற 495 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் இலங்கை 3ஆம் நாள் பகல் போசன இடைவெளையின்போது ஒரு விக்கெட்டை இழந்து 100 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பெத்தும் நிஸ்ஸன்க 46 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமால் 22 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். போட்டியின் 3ஆம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்புக்கு 484 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பங்களாதேஷ் மொத்த எண்ணிக்கை 495 ஓட்டங்களாக இருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது. துடுப்பாட்டத்தில் முஷ்பிக்குர் ரஹிம் 163 ஓட்டங்களையும் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 148 ஓட்டங்களையும் லிட்டன் தாஸ் 90 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 85 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மிலன் ரத்நாயக்க 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தரிந்து ரத்நாயக்க 196 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை சார்பாக பெத்தும் நிஸ்ஸன்கவுடன் 31 வயதான அறிமுக வீரர் லஹிரு குமார ஆரம்ப ஜோடியாக களம் இறங்கினர். இருவரும் 47 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது லஹிரு குமார 29 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து பெத்தும் நிஸ்ஸன்கவும் தினேஷ் சந்திமாலும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 100 ஓட்டங்களாக உயர்த்தினர். பந்துவீச்சில் தய்ஜுல் இஸ்லாம் 34 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளார். https://www.virakesari.lk/article/217892
  16. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 20 ஜூன் 2025 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் சன் நெட்வொர்க் நிறுவனத்தின் பங்குகளை மோசடியாகத் தனது பெயருக்கு கலாநிதி மாறன் மாற்றிக் கொண்டதாக குற்றம் சாட்டி, வழக்கறிஞர் மூலமாக அவரது சகோதரர் தயாநிதி மாறன் எம்.பி நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். 'முரசொலி மாறனின் சொத்து அவரது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு முறையாகப் பகிர்ந்து அளிக்கப்படவில்லை' எனவும் நோட்டீஸில் தயாநிதி மாறன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் அவதூறானவை என சன் குழுமம் விளக்கம் அளித்துள்ளது. சன் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மாறன் உள்பட 8 பேருக்குத் தனது வழக்கறிஞர் மூலமாக கடந்த ஜூன் 10ஆம் தேதியன்று தயாநிதி மாறன் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சட்டவிரோத பங்கு பரிமாற்றம் மூலம் சன் நெட்வொர்க்கின் சொத்துகளை கலாநிதி மாறன் அபகரித்துக் கொண்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். அதில், "கடந்த 1985ஆம் ஆண்டு டிசம்பர் 12 முதல் சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனம், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி மு.க.தயாளு மற்றும் மல்லிகா மாறனால் நடத்தப்பட்டது. இதனால் இந்த இரு குடும்பங்களும் தலா 50 சதவிகித பங்குகளை வைத்திருந்தன" எனக் கூறியுள்ளார். "தயாநிதி மாறனின் தந்தை எஸ்.என்.மாறன் என்ற முரசொலி மாறனுக்கு 47,500 பங்குகளும் மல்லிகா மாறனுக்கு 9 ஆயிரம் பங்குகளும் ஒதுக்கப்பட்டன. ஏற்கெனவே மல்லிகா மாறனிடம் ஆயிரம் பங்குகள் இருந்ததால், இத்துடன் சேர்த்து 10 ஆயிரம் பங்குகளாக இருந்தன" எனக் கூறியுள்ளார் தயாநிதி மாறன். இந்த சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் பின்னர் சன் டிவி லிமிடெட்டாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நோட்டீஸில் என்ன உள்ளது? பட மூலாதாரம்,GETTY IMAGES "கடந்த 2002ஆம் ஆண்டு பங்குதாரர்களுக்கும் முரசொலி மாறன் மற்றும் மல்லிகா மாறனுக்கும் போனஸ் பங்குகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி முரசொலி மாறனின் கணக்கில் 95 ஆயிரம் பங்குகளும் மல்லிகா மாறனின் கணக்கில் 20 ஆயிரம் பங்குகளும் சேர்ந்தன" எனவும் தயாநிதி மாறன் கூறுகிறார். தொடக்கத்தில் இருந்து 2003 செப்டம்பர் 15 வரை சன் நெட்வொர்க் நிறுவனத்தில் சம்பளம் பெறும் ஊழியராக கலாநிதி மாறன் இருந்ததாகக் கூறியுள்ள தயாநிதி மாறன், "இந்த நிறுவனங்களில் எந்தவித பங்கும் அவருக்கு இல்லை. ஆரோக்கியத்துடன் முரசொலி மாறன் இருந்தபோது கலாநிதிக்கு எந்தப் பங்குகளையும் அவர் அளிக்கவில்லை" என்கிறார். கடந்த 2002ஆம் ஆண்டில் முரசொலி மாறனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடல் உறுப்புகள் செயலிழந்ததால், கோமா நிலைக்குச் சென்றதாகக் கூறியுள்ள தயாநிதி மாறன், "2002 நவம்பர் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டபோது, சிகிச்சைகள் பலன் அளிக்கவில்லை" எனக் கூறியுள்ளார். இதன் பிறகு தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட முரசொலி மாறன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தார். தந்தையின் உடல்நிலை மோசமான நேரத்தில் குடும்பமே அதுகுறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது, "தனிப்பட்ட நலனுக்காக முழு சொத்துகளையும் அபகரிக்கும் நோக்கில் தனது சதித் திட்டத்தை கலாநிதி மாறன் செயல்படுத்தினார்" என தயாநிதி மாறன் நோட்டீஸில் விமர்சித்துள்ளார். தயாநிதி மாறன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES சன் நெட்வொர்க் குழுமத்தின் 12 லட்சம் பங்குகளை கருணாநிதி குடும்பம் உள்பட பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறாமல் தனது பெயருக்கு கலாநிதி மாறன் மாற்றிக் கொண்டார். கடந்த 2003ஆம் ஆண்டில் சன் நெட்வொர்க்கின் பங்கு மதிப்பு தோராயமாக 2,500 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாயாக இருந்தது. அப்படி இருக்கும்போது, 10 ரூபாய் மதிப்பில் பங்குகளை மாற்றியுள்ளார். கடந்த 2003, மார்ச் 31ஆம் தேதியன்று நிறுவனத்தின் இருப்பு மற்றும் உபரித் தொகையாக 253 கோடியே 53 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் இருந்தது. 15.9.2003 வரை நிறுவனத்தின் ஒரு பங்குகூட கலாநிதி மாறனிடம் இல்லை. ஆனால், ஒரே நேரத்தில் பெரும்பான்மையான பங்குதாரராக மாறினார். முரசொலி மாறன் 2003 நவம்பர் 23 அன்று உயிரிழந்தார். சென்னை மாநகராட்சிக்குத் தெரிவிக்கப்பட்டு நவம்பர் 28 அன்று அவரது இறப்பு பதிவு செய்யப்பட்டது. அவர் உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை. பல்வேறு நிறுவனங்களில் அவரது பங்குகளை உள்ளடக்கிய சொத்து, இந்து வாரிசுரிமை சட்டத்தின் 8வது பிரிவின்படி தாய் சண்முகசுந்தரம், மல்லிகா மாறன், கலாநிதி மாறன், தயாநிதி மாறன், மகள் அன்புக்கரசி ஆகியோருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கப்படவில்லை. கருணாநிதி கேட்ட கேள்வி முரசொலி மாறனின் இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு (2003 நவம்பர் 24) அன்று, "சொத்து மற்றும் தொழில்களைப் பிரிப்பது தொடர்பாக ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டதா?" எனத் தன்னிடம் கருணாநிதி கேட்டதாக தயாநிதி மாறன் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார். அதற்கு "தந்தையைப் போலவே குடும்பத்துக்கு நன்மை தரக்கூடிய செயல்களை கலாநிதி மாறன் செய்வார்" எனத் தான் கருணாநிதியிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளதோடு, "ஆனால், அதிர்ச்சியளிக்கும் விதமாக தனது திட்டத்தை அவர் செயல்படுத்தினார்" எனவும் கூறியுள்ளார். நம்பிக்கையை மீறுவது, ஏமாற்றுதல், மோசடி செய்தல், குற்றவியல் சதி ஆகியவற்றை இது தெளிவாக உணர்த்தியுள்ளதாகக் கூறியுள்ள தயாநிதி மாறன், "இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 406, 409, 463, 465, 467, 468, 471 மற்றும் 120பி (கூட்டு சதி) ஆகிய பிரிவுகளின்கீழ் இவை தண்டனைக்குரியது" என்று தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார். சன் குழுமம் மற்றும் அதனுடன் தொடர்புள்ள நிறுவனங்களை 15.9.2003 அன்று இருந்த நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் எனவும் "பங்குகளை உரிமையாளர்களான மு.க.தயாளு மற்றும் முரசொலி மாறனின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு மீண்டும் வழங்க வேண்டும்" எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். குற்றச்சாட்டுகள் குறித்து சன் குழுமம் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை சன் குழுமம் முழுமையாக மறுத்துள்ளது. மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு நிறுவனத்தின் செயலாளர் ரவி ராமமூர்த்தி, வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 20) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சன் நெட்வொர்க் உரிமையாளருக்கும் குடும்ப உறுப்பினருக்கும் இடையில் நடக்கும் விவகாரம் சில ஊடகங்களில் வெளியாகியுள்ளதாக, அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது குற்றம் சுமத்தப்படும் விஷயங்கள், 22 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனமாக இருந்தபோது நடந்தவை என்றும் ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை, அவதூறானவை என்றும் சட்டப்படி எந்த உண்மையும் இல்லை எனவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படியே மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ள சன் நெட்வொர்க் குழுமம், "இடைத்தரகர்களால் அவை சரிபார்க்கப்பட்டன" எனத் தெரிவித்துள்ளது. "கட்டுரைகளில் கூறப்பட்டுள்ள தகவல்கள், வணிகம் அல்லது அதன் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் உரிமையாளரின் குடும்ப விவகாரங்களில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை" எனவும் சன் குழுமம் குறிப்பிட்டுள்ளது. "பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள பங்குதாரர்கள் எந்தவித குழப்பத்தையும் அடையக்கூடாது" என்பதற்காக சன் குழுமம் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், வழக்கறிஞர் நோட்டீஸ் தொடர்பான எந்த விவரங்களையும் கடிதத்தில் சன் குழுமம் குறிப்பிடவில்லை. இது தொடர்பாக, தயாநிதி மாறனின் வழக்கறிஞர் சுரேஷை பிபிசி தமிழ் தொடர்புகொண்டது. "இதுதொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை" என்று மட்டும் அவர் பதில் அளித்தார். சன் குழுமம் உருவான கதை பட மூலாதாரம்,GETTY IMAGES சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிறுவனம், 1985 டிசம்பர் 12ஆம் தேதி முதல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி மு.க.தயாளு மற்றும் மல்லிகா மாறனால் நடத்தப்பட்டது. கடந்த 1989ஆம் ஆண்டில் முரசொலி நாளேட்டின் நிர்வாகப் பொறுப்பை கலாநிதி மாறன் கவனித்து வந்தார். 1990ஆம் ஆண்டில் 'பூமாலை' என்ற பெயரில் மாதம் இருமுறை வீடியோ கேசட் ஒன்றை அவர் வெளியிட்டு வந்தார். செய்திகளை பின்னணிக் குரலுடன் அதற்கான படங்களைக் காட்சிப்படுத்தி வீடியோவாக உருவாக்கி வெளியிட்டனர். பிறகு 'சுமங்கலி பப்ளிகேஷன்ஸ்', 'சன் டிவி லிமிடெட்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 1993ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி சன் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. இதன் பின்னணியில் முரசொலி மாறனும் கலாநிதி மாறனும் இருந்தனர். இதில் தயாளு அம்மாவும் பங்குதாரராக இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES சன் தொலைக்காட்சி உருவான காலத்தில் தூர்தர்ஷன் தவிர வேறு தொலைக்காட்சிகள் இல்லாததால் அது பிரபலமடையத் தொடங்கியது. அப்போது 'தமிழ் மாலை' என்ற பெயரில் மூன்று மணிநேரம் மட்டும் ஒளிபரப்பு நடத்தப்பட்டது. பிறகு கேபிள் தொழிலிலும் கலாநிதி மாறன் இறங்கினார். சுமங்கலி கேபிள் விஷன் (எஸ்சிவி) நிறுவனத்தைத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் கேபிள் தொழிலை நடத்தி வருகிறார். சன் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதில் இருந்து 2007 வரையில் தி.மு.க தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் செயல்பட்டது. சன் குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 'தினகரன்' நாளேட்டில் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரியை மையப்படுத்தி கருத்துக் கணிப்பு ஒன்று வெளியானது. இதனால் அழகிரி தரப்பினர் கோபம் அடையவே, மதுரை தினகரன் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூன்று ஊழியர்கள் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக மாறன் சகோதரர்களை கருணாநிதி விலக்கி வைத்தார். அண்ணா சாலையில் இருந்த சன் தொலைக்காட்சி அலுவலகம், அடையாறுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. 2007ஆம் ஆண்டு செப்டம்பரில் கலைஞர் தொலைக்காட்சி உருவானது. 'இதற்கான நிதி ஆதாரம் எங்கிருந்து வந்தது?' என அப்போதைய அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த கருணாநிதி, "சன் டிவியில் என் மனைவி தயாளு அம்மாள் வசமிருந்த 20 சதவிகித பங்குகளை முழுமையாக விட்டுக் கொடுத்ததால் 100 கோடி ரூபாய் கிடைத்தது" எனக் கூறியிருந்தார். தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காளி, மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் தொலைக்காட்சி சேனல்களை சன் குழுமம் நடத்தி வருகிறது. அந்த வகையில், சன் டிவி, சன் நியூஸ், சன் மியூசிக், ஆதித்யா, கே டிவி, ஜெமினி டிவி, சன் லைஃப், சுட்டி டிவி, ஜெமினி மூவிஸ் டிவி, ஜெமினி மியூசிக், ஜெமினி காமெடி, குஷி டிவி, ஜெமினி லைஃப், உதயா டிவி, சூர்யா டிவி, சூர்யா மூவிஸ், சூர்யா காமெடி, சூர்யா மியூசிக், கொச்சு டிவி, சன் பங்களா, சன் மராத்தி என இருபதுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களை நடத்தி வருகிறது. மாறன் குடும்பத்தின் பின்னணி பட மூலாதாரம்,GETTY IMAGES முத்துவேல் மற்றும் அஞ்சுகம் தம்பதியின் மூன்றாவது மகனாகப் பிறந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு, பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் இருந்தனர். சண்முக சுந்தரத்தம்மாள் என அழைக்கப்பட்ட சண்முகசுந்தரத்துக்கு முரசொலி மாறன், முரசொலி செல்வம் ஆகிய மகன்களும் பெரிய நாயகத்துக்கு அமிர்தம் என்ற மகனும் இருந்தனர். முரசொலி மாறனின் இயற்பெயரான தியாகராஜ சுந்தரம் என்பதை நெடுமாறன் என கருணாநிதி மாற்றினார். ஆனால், இந்தப் பெயரில் இருவர் இருந்ததால், முரசொலி நாளேட்டின் பெயரையும் சேர்த்து முரசொலி மாறன் என்று அவர் வைத்துக் கொண்டார். இவருக்கு கலாநிதி மாறன், தயாநிதி மாறன் என இரு மகன்களும், அன்புக்கரசி என்ற மகளும் உள்ளனர். வெளிநாட்டில் எம்.பி.ஏ படிப்பை முடித்த கலாநிதி மாறன், தொடக்கத்தில் முரசொலி நாளேட்டின் நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வந்துள்ளார். இவருக்கு காவேரி என்ற மனைவியும் காவ்யா என்ற மகளும் உள்ளனர். கடந்த 2003ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதியன்று முரசொலி மாறன் மறைந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து தீவிர அரசியலுக்குள் தயாநிதி மாறன் வந்தார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். 2004ஆம் ஆண்டு மத்திய சென்னை தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். 2004 மே முதல் 2007 மே 13 வரை இந்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தார். கருணாநிதியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 2008ஆம் ஆண்டு டிசம்பரில் மோதல் முடிவுக்கு வந்தது. இதுகுறித்து அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "கண்கள் பனித்தது, இதயம் இனித்தது" என்று பதில் அளித்தார். கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தயாநிதி மாறன், இந்திய ஜவுளித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2011ஆம் ஆண்டு வரை பதவியில் நீடித்தவர், 2ஜி விவகாரம் காரணமாகத் தனது பதவியை ராஜினாமா செய்தார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjel0l2pj80o
  17. Published By: RAJEEBAN 18 JUN, 2025 | 12:23 PM By Jeevan Ravindran இலங்கையின் வடபகுதியின் தலைநகரமான யாழ்ப்பாணத்தில் மிகவும் மும்முரமான வீதியிலிருந்து 100 மீற்றர் தொலைவில் இரண்டு பொலிஸார் சுடலையின் இரண்டு துருப்பிடித்துப்போன நிறத்தில் உள்ள கேட்களின் பின்னால் நின்று அவதானித்தவண்ணமுள்ளனர். இலங்கையில் மிகச்சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்கு பாதுகாப்பளிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த புதைகுழியிலிருந்து இதுவரை 3 குழந்தைகள் உட்பட 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பாரிய மனித புதைகுழிகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இலங்கை தமிழர்களின் காயங்களை மீள கிளறியுள்ளது.இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழர்களிற்கு தனிநாடு கோரிய பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் இடையிலான 26 வருட யுத்தம் காரணமாக தமிழ்மக்கள் துயரங்களை அனுபவித்தனர். அரசாங்கம் பலரை பலவந்தமாக காணாமலாக்கியது, 2017 இல் சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட அறிக்கை 1980களின் பின்னர் இலங்கையில் 60,000 முதல் 100,000 வரையிலானவர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்திருந்தது. 2009 இல் முடிவிற்கு வந்த யுத்தத்தின் இறுதிகாலப்பகுதியில் 170,000 கொல்லப்பட்டனர் என தமிழ் சமூகம் குற்றம்சாட்டுகின்றது. ஐக்கியநாடுகள் 40,000 பேர் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளது. 1996ம் ஆண்டு பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி இலங்கை இராணுவத்தினரால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது முதல் கடந்த 25 வருடங்களாக செம்மணி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்;துள்ளது. அவரது தாயார், சகோதரர், குடும்ப நண்பர் ஆகியோரும் கொலை செய்யப்பட்டனர், அவர்களின் உடல்கள் செம்மணியில் 1996 இல் மீட்கப்பட்டன. கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவு கொலையில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட முன்னாள் இராணுவ கோப்ரல் சோமரட்ண ராஜபக்ச, 1998 விசாரணையின் போது செம்மணி புதைகுழியில் 300 முதல் 400 பேரை புதைத்ததாக தெரிவித்திருந்தார். அவர் வழங்கிய தகவல்களை தொடர்ந்து அடுத்த வருடம் 15 உடல்கள் மீட்கப்பட்டன, இதில் இருவர் 1996 இல் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டவர்கள் என அடையாளம்காணப்பட்டனர். புதிய புதைகுழியின் கண்டுபிடிப்பு நீதிக்கான தேடலில் தமிழ் சமூகத்தினை தொடர்ந்து காயப்படுத்தி வரும் ஒரு பழைய கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. கடந்த கால விசாரணைகள் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் யுத்தகால கொலைகள் குறித்த கேள்விகளிற்கு விடைகளை வழங்கவில்லை, அரசாங்கம் இந்த விடயங்கள் குறித்து தொடர்ச்சியாக கவனம் செலுத்தாதது இதற்கான ஒரு ஒரு காரணம் என்கின்றனர் தொல்லியல் நிபுணர்கள். செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி போன்றவற்றால் இவற்றிற்கு விடையை வழங்க முடியுமா? பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் செம்மணியில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை பெப்ரவரி மாதம் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. மே மாத நடுப்பகுதியில் தோண்டும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின மீட்கப்பட்ட 19 உடல்களில் 3 உடல்கள் பிறந்த குழந்தைகளுடையவை அல்லது பத்துமாதத்திற்கு உட்பட குழந்தைகளுடையவை என அல்ஜசீராவிற்கு தெரிவித்தார் மனித புதைகுழிஅகழ்வுகளிற்கு தலைமைதாங்கும் தொல்லியல் நிபுணர் ராஜ்சோமதேவ. உடல்களை இறுதியில் மருத்துவர்கள் பகுப்பாய்வு செய்து அவற்றின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய முயல்வார்கள் என தெரிவித்த அவர் உடல்கள் புதைக்கப்பட்ட திகதியை கண்டறிவதற்காக ஆடைகள் அல்லது செல்லோபோன் உறைகள் போன்றவற்றை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்தார். மனித உடல்களுடன் பொருட்கள் எவையும் கிடைக்கவில்லை என்றால் கதிரியக்க காலமதிப்பீட்டு முறையை பயன்படுத்தப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார். மனித புதைகுழிகளின் 40 வீதத்தினை மாத்திரமே இதுவரை அகழ்ந்துள்ளோம் என அல்ஜசீராவிற்கு தெரிவித்த அவர் செயற்கோள் படங்கள் மற்றும் ஆளில்லா விமான படங்கள்மூலம் இரண்டாவது மனித புதைகுழி இருப்பதற்கான சாத்தியக்கூறினை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தார். நான் இடைக்கால அறிக்கையொன்றை நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளேன்,இந்த புதைகுழிகளை பாரிய மனித புதைகுழிகள் என கருதலாம் என தெரிவித்துள்ளேன்,மேலதிக விசாரணைகள் தேவை என தெரிவித்துள்ளேன் என ராஜ்சோமதேவ தெரிவித்தார். நான் காணாமல்போன தங்கள் அன்புக்குரியவர்களை தேடும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 600 பேருடன்இணைந்து பணியாற்றுகின்றேன் இவர்களில் அதிகளவானவர்கள் 1996ம் ஆண்டிற்கும் 2008ம் ஆண்டிற்கும் இடையில் காணாமல்போனவர்கள் என காணாமல்போனவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா அல் ஜசீராவிற்கு தெரிவித்தார். இவர்களில் பலர் 1995 இல் யாழ்ப்பாணத்திலிருந்து இடமபெயர்ந்தவர்கள்,நாட்டின் தமிழர் தாயகத்தின் வடமாகாணத்தின் தலைநகர். காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் உடல்களை தோண்டும் நடவடிக்கைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவருகின்றனர் என தெரிவித்த அவர் அடையாளம் காணும் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறவேண்டும் என விரும்புகின்றனர் என தெரிவித்தார். மனித புதைகுழிகளை அகழும் முன்னைய நடவடிக்கைகள் மூலம் முடிவுகள் எதுவும் வெளியாகாத நிலையிலேயே இம்முறை உடல்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். அந்த பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பொலிஸாருக்கு காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் உதவுகின்றனர். தோல்வியில் முடிவடைந்த விசாரணைகளின் வரலாறு. இதேவேளை செம்மணி மனித புதைகுழியிலிருந்து என்ன நடந்தது என்பதற்கான துப்புகளை கண்டுபிடிப்பதற்கு அகழ்வில் ஈடுபட்டிருப்பவர்களிற்கு உதவுவதற்கு தமிழ் சமூகம் கொண்டுள்ள விருப்பம்,கடந்த கால அனுபவங்களால் பாதிக்கப்படுகின்றது. இலங்கையில் சமீபத்தில் ஏனைய மனித புதைகுழிகள் தோண்டப்பட்ட போதிலும் அவை அர்த்தமுள்ள பதில்களுக்கு வழிவகுக்க தவறிவிட்டன.மூடிமறைக்கப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. மன்னார் கொக்குதொடுவாய் ,திருக்கேதீஸ்வரம் .மனித புதைகுழிகளிற்கு நிகழ்ந்தது செம்மணி மனித புதைகுழிக்கும் நடக்கலாம் என அச்சம் கொண்டுள்ளதாக பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் சங்க தலைவி யோகராஜா கனகரஞ்சனி தெரிவித்தார். 'இதனையும் ஏனைய மனித புதைகுழிகள் போல அவர்கள் எந்த பதிலையும் நீதியையும் வழங்காமல் மூடிமறைக்கலாம்," என அவர் தெரிவித்தார். இவரின் மகன் அமலன் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர், 2009 இல் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல்போனார்.' கொலைகாரர்களை நீதி வழங்குமாறு கேட்டால் அவர்கள் நீதி வழங்குவார்களா"? மிகப்பெரிய மனித புதைகுழி அகழ்வு வடமேற்கு மன்னாரிலேயே இடம்பெற்றது. 2018 இல் இது ஆரம்பமானது. சோமதேவாவே இதனை தோண்டும் நடவடிக்கைகளிற்கு தலைமைதாங்கினார். 346 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன, நீதியமைச்சும் காணாமல்போனோர் அலுவலகமும் இந்த மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தன. எனினும் சோமாதேவ மன்னார் புதைகுழி விடயத்தை அரசாங்கம் கையாளும் விதத்தினை கண்டித்தார். மூன்று வருடத்திற்கு முன்னர் நான் நான் ஆரம்ப கோரிக்கைகளை விடுத்திருந்த போதிலும் கடந்த வாரமே உடல்களை தோண்டியவேளை மீட்கப்பட்ட பொருட்களை கையளித்தார்கள் என குறிப்பிட்டார். அவற்றை ஆராய்வதற்கான நிதியை அரசாங்கம் இன்னமும் ஒதுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான சூழ்நிலைகளில் பணியாற்ற முடியாது எவரும் பொறுப்பேற்பதில்லை, காணாமல்போனோர் அலுவலகம் ஒரு வெள்ளை யானை என ராஜ்சோமதேவ தெரிவித்தார். செம்மணி புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளில் காணாமல்போனோர் அலுவலகம் ஒரு பார்வையாளராகவே இணைந்துகொண்டுள்ளது என தெரிவித்த அதன் பிரதிநிதி, மன்னார் புதைகுழி அகழ்வில் அது நீதியமைச்சுடன் இணைந்து செயற்பட்டது என குறிப்பிட்டார். வழங்கப்படவேண்டிய கட்டணங்கள் எதுவும் இல்லை என தெரிவித்த அவர் முறைப்படியான முறைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். 2024 இல் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுப்பதற்கு போதுமான நிதி மனித மற்றும் தொழில்நுட்ப வளங்கள் இல்லை என்பது கவலை அளிக்கிறது மேலும் இது தொடர்பாக சர்வதேச ஆதரவைப் பெற அரசாங்கத்தை ஊக்குவிக்கிறது" என்று கூறியது. கடந்தகாலத்தில் மனித புதைகுழி அகழ்வின் போது காணப்பட்ட குறைபாடுகள் பலவீனங்கள் செம்மணியிலும் காணப்படுகின்றன என தெரிவித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த அடையாளம் கொள்கை ஆராய்ச்சிகளிற்கான நிலையம், சர்வதேச நிபுணத்துவமோ மேற்பார்வையோ இல்லாமல் செம்மணி மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என குறிப்பிட்டது. மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கை வெளிப்படையாக நேர்மையாக நடைபெறுகின்றது என தமிழ் சமூகமும் குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களும் கருதவேண்டும் என அரசாங்கம் விரும்பினால், முதலில் போதுமான நிதி ஒதுக்கீட்டுடன் அரசாங்கம் தெளிவான மற்றும் விரிவான மனித புதைகுழிகளை தோண்டும் கொள்கையை பின்பற்றவேண்டும், சர்வதேச பங்களிப்பிற்கு அனுமதி வழங்கவேண்டும், சர்வதேச நிபுணத்துவத்தை நாடவேண்டும், மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளில் காணாமல்போனோரின் குடும்பத்தவர்கள் பங்கெடுப்பதற்கும், சட்டபூர்வ பிரதிநிதித்துவத்தை பெறவும் அனுமதிக்கவேண்டும் என அடையாளத்தின் பிரதிநிதியொருவர் அல்ஜசீராவிற்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்தார். ஜனாதிபதியாக செப்டம்பரில் அனுரகுமார திசநாயக்க தெரிவு செய்யப்பட்டமை அவர் நீதிக்கு ஆதரவை வழங்குவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது ஆனால் இதுவரை அவர் அந்த நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதத்தில் இடம்பெறவில்லை என கனகரஞ்சினி தெரிவித்தார். ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 8 மாதங்களாகின்றது. இதுவரை அவர் எங்களின் பிரச்சினைகளை சிறிதளவும் கருத்தில் கொள்ளவில்லை என தெரிவித்த அவர் ஆட்சியாளர் மாறியுள்ளார் ஆனால் யதார்த்தம் நீடிக்கின்றது என்றார். https://www.virakesari.lk/article/217798
  18. மழையினால் இரண்டரை மணி நேர தாமதத்தின் பின் பங்களாதேஷின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டது ; 26 ஓட்டங்களுக்குள் 6 விக்கெட்களை இலங்கை வீழ்த்தியது 19 JUN, 2025 | 05:54 AM (நெவில் அன்தனி) காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய பங்களாதேஷ், மழையினால் ஆட்டம் இரண்டரை மணி நேர ம் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் பின்னர் மீண்டும் தொடர்ந்தபோது 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 6 விக்கெட்களை இலங்கையிடம் தாரைவார்த்தது. தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 292 ஓட்டங்களில் இருந்து இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த பங்களாதேஷ் ஒரு கட்டத்தில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 458 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது. ஆனால், இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் 9 விக்கெட்களை இழந்து 496 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இந்த மொத்த எண்ணிக்கையில் மத்திய வரிசை வீரர்களான நஜ்முஸ் ஹொசெய்ன், முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகிய மூவரும் 411 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டனர். இந்தப் போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்தளவு சோபிக்கத் தவறிய போதிலும் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா நால்வரையே மீண்டும் மீண்டும் பந்துவீச்சில் ஈடுபடுத்தியது பெரும் ஆச்சரியத்தையும் அதிருப்தியையும் தோற்றுவித்தது. எவ்வாறாயினும் இரண்டாம் நாள் ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் இலங்கை 6 விக்கெட்களை வீழ்த்தி பங்களாதேஷை ஓரளவு கட்டுப்படுத்தியது. தனது இன்னிங்ஸை 136 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ தனது எண்ணிக்கைக்கு மேலும் 12 ஓட்டங்களை சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். 279 பந்துகளை எதிர்கொண்ட ஷன்டோ 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 148 ஓட்டங்களைப் பெற்றார். மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஷன்டோ 4ஆவது விக்கெட்டில் முன்னாள் அணித் தலைவர் முஷ்பிக்குருடன் 264 ஓட்டங்களைப் பகிர்ந்தார். அவர் ஆட்டம் இழந்த பின்னர் முஷ்பிக்குர் ரஹிமும் லிட்டன் தாஸும் இலங்கை பந்துவீச்சாளர்களை இலகுவாக எதிர்கொண்டு 114 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 423 ஓட்டங்களாக உயர்த்தியபோது கடும் மழை பெய்ததால் பிற்பகல் 1.40 மணி அளவில் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. இரண்டரை மணித்தியாலங்கள் தாமதத்தின் பின்னர் பிற்பகல் 4.15 மணிக்கு மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது. மொத்த எண்ணிக்கை 458 ஓட்டங்களாக இருந்தபோது முஷ்பிக்குர் ரஹிமும் லிட்டன் தாஸும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுததாடிய முஷ்பிக்குர் ரஹிம் 350 பந்துகளில் 9 பவுண்டறிகளுடன் 163 ஓட்டங்களைப் பெற்றார். சற்று ஆக்ரோஷமாக துடுப்பெடுத்தாடிய லிட்டன் தாஸ் 123 பந்துகளில் 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 90 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரும் 5ஆவது விக்கெட்டில் 149 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இந்த இருவரின் விக்கெட்களுடன் மேலும் 4 விக்கெட்கள் 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன. பந்துவீச்சில் மிலன் ரத்நாயக்க 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 80 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தரிந்து ரத்நாயக்க 196 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பங்களாதேஷ் அணியினர் பெரும்பாலும் இரண்டாம் நாள் ஆட்டத்துடன் தமது முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டு நாளைக் காலை இலங்கைக்கு துடுப்பெடுத்தாடுமாறு அழைப்பு விடுப்பர் என கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/217867
  19. 7 நிமிடங்களில் 2,000 கிமீ பாயும்: இஸ்ரேல் மீது இரான் ஏவிய செஜில் ஏவுகணை எவ்வளவு சக்தி வாய்ந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இரான் 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக செஜில் ஏவுகணையை பரிசோதித்தது. 21 ஜூன் 2025, 06:48 GMT புதுப்பிக்கப்பட்டது 31 நிமிடங்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையிலான மோதல் இரு நாடுகளின் போர்த் திறன்களையும், அவற்றின் ஆயுதங்களையும் பரிசோதிக்கும் ஒரு களமாகவும் அமைந்துள்ளது. புதன்கிழமை இரவு இஸ்ரேலைத் தாக்கிய போது, முதன்முறையாக உள்நாட்டு தயாரிப்பான செஜில் ஏவுகணையைப் பயன்படுத்தியதாக, இரான் கூறியது. செஜில் என்பது கனமான, அதிக வெடிபொருள் பொருத்தப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணையாகும். இருப்பினும், இஸ்ரேல் பாதுகாப்புப் படை செஜிலை வெற்றிகரமாக இடைமறித்துவிட்டதாக இஸ்ரேல் கூறுகிறது . செஜில் ஏவுகணை இரானின் நடான்ஸ் நகரத்திலிருந்து ஏவப்பட்டால், இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவை ஏழு நிமிடங்களில் அடைய முடியும் என்பதிலிருந்தே அதன் வேகத்தை மதிப்பிடலாம் . ஏனென்றால், நடான்ஸிலிருந்து டெல் அவிவ் வரையிலான தூரம் சுமார் 2000 கிலோமீட்டர். புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்தத் தாக்குதல்கள் 'ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 3' இன் கீழ் நடத்தப்பட்டதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கூறியுள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு, செஜில் ஏவுகணை பேசுபடு பொருளாக தீவிரமடைந்துள்ளது. செஜில் ஏவுகணை எவ்வளவு சக்தி வாய்ந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,செஜில் ஏவுகணையின் நீளம் சுமார் 18 மீட்டர், மேலும் திட எரிபொருளால் இயக்கப்படுவதால் அது ஆபத்தானதும் கூட . ஜூன் 19, வியாழக்கிழமை, இந்தியாவில் உள்ள இரானிய தூதரகம், ஐ.ஆர்.ஜி.சி-யை மேற்கோள் காட்டி செஜில் ஏவுகணை பற்றிய தகவலை வழங்கியுள்ளது. "இது 'ட்ரூ ப்ராமிஸ் 3' 'ஆபரேஷனின் பன்னிரண்டாவது பதிலடி தாக்குதல் ஆகும், மிகவும் கனமான மற்றும் நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய இரண்டு-நிலைகளை கொண்ட செஜில் ஏவுகணை ஏவப்பட்டது" என்று இரானிய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது. "செஜில் ஏவுகணைகள் திட எரிபொருளில் இயங்குகின்றன. அவை இரானின் மிகவும் துல்லியமான மற்றும் சக்தி வாய்ந்த மூலோபாய ஆயுதங்களில் ஒன்றாகும். எதிரி இலக்குகளை ஊடுருவி அழிக்கக்கூடிய திறனை அவை கொண்டுள்ளன." செஜில் ஏவுகணை சுமார் 18 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் திட எரிபொருளால் இயங்கக் கூடியது. இது மற்ற எரிபொருட்களைக் காட்டிலும் கூடுதல் அனுகூலங்களை வழங்கக் கூடியது. போர்க்களத்தில் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தும் இந்த ஏவுகணையை துரிதமாக ஏவுவதற்கு தயார் செய்யவும் முடியும். தூரம்: செஜில் ஏவுகணை அதிகபட்சமாக 2000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இது நடுத்தர தூரம் வரை சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையாக வகைப்படுத்தப்படுகிறது. இந்த ஏவுகணையின் மூலம் இஸ்ரேல், தென்கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியாவின் சில பகுதிகள் மற்றும் இஸ்ரேல் உள்பட மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் உள்ள இலக்குகளை இரானால் தாக்க முடியும். சுமந்து செல்லும் எடை: இந்த ஏவுகணை சுமார் 700 கிலோ எடையுள்ள வெடிபொருளை சுமந்து செல்லக்கூடிய திறன் கொண்டது. இதன் மூலம் தாக்குதலுக்கு இலக்காகும் இடத்தல் பெரும் சேதத்தை விளைவிக்க முடியும். ஏவுகணையின் மொத்த எடை: ஏவப்படும் ஏவுகணையின் மொத்த எடை தோராயமாக 23,600 கி.கி. இருக்கும். அதாவது அதன் எரிபொருள், சுமந்து செல்லும் வெடிபோருள் உள்பட ஏவுகணையின் மொத்த எடை இதுவாகும். இந்த ஏவுகணையின் முதல் வெற்றிகரமான சோதனை 2008-ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. பரிசோதனையின் போது செஜில் ஏவுகணை 800 கி.மீ தூரம் பறந்தது. நவீன தொழில்நுட்பம் மற்றும் அதனை வழி நடத்தும் அமைப்புகளை சோதிக்க மே 2009ல் இரண்டாவது முறையாக செஜில் ஏவப்பட்டது . அமெரிக்காவின் மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் (CSIS) தகவல்படி, செஜில் ஏவுகணையில் பல வகைகள் இருக்கக்கூடும். 2009 ஆம் ஆண்டில், 'செஜில் 2' என அழைக்கப்பட்ட ஏவுகணையை இரான் சோதித்தது. உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள், 'செஜில் 3' என்பது இன்னும் மேம்பட்டதாக இருக்கலாம் எனக் கூறுகின்றன. செஜில் 3 ஏவுகணை மூன்று நிலைகளைக் கொண்டதாகவும், அதிகபட்சமாக 4,000 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடியதாகவும் கூறப்படுகிறது. செஜில் ஏவுகணை 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு பொதுவெளியில் சோதிக்கப்படாததால், அது படையில் சேர்க்கப்பட்டுவிட்டதா இல்லையா என்பது குறித்த நிச்சயமற்ற நிலை நீடித்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2021-ஆம் ஆண்டு ஒரு ராணுவப் பயிற்சியின் போது, இரான் இந்த ஏவுகணையை பயன்படுத்தியது. இஸ்ரேல்-இரான் மோதல்: இதுவரை நடந்தது என்ன ? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவியது. ஜூன் 13-ஆம் தேதி, டெஹ்ரான், நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் உள்ளிட்ட பல இரானிய ராணுவ மற்றும் அணுசக்தி நிலைகளை இஸ்ரேல் தாக்கியது. இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்று இஸ்ரேல் பெயரிட்டது. இரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளில் எந்த தீர்வும் கிடைக்கவில்லை, எனவே இரானை தாக்குவது மட்டுமே ஒரே வழி என்று இஸ்ரேல் கூறுகிறது. தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மீது டிரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இரான் ஏவியது. இரான் ஏவுகணை தாக்குதலில், தெற்கு இஸ்ரேலின் பீர்ஷெபாவில் உள்ள சொரோகா மருத்துவமனை சேதமடைந்தது. இருப்பினும், மருத்துவமனைக்கு அருகில் இருந்த ராணுவ தளம் தான் தனது இலக்காக இருந்தது என்கிறது இரான். இந்த தாக்குதலில் 71 பேர் காயமடைந்ததாக இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அன்றிரவு முழுவதும் இஸ்ரேலின் பல பகுதிகளிலும் தாக்குதல்கள் நடந்தன. இஸ்ரேலால் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இரான் முதல் செஜில் ஏவுகணை தாக்குதலை நடத்தியதாகக் கூறியது. மருத்துவமனை மீதான ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, இரானில் உள்ள அரக் மற்றும் நடான்ஸ் உள்ளிட்ட பல அணுசக்தி மற்றும் ராணுவத் தளங்களை இஸ்ரேல் குறிவைத்தது. இதற்கிடையில், அராக் கனரக நீர் உலை உட்பட இரானின் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் இரவில் தாக்குதல் நடத்தியது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8z9y1j738o
  20. பலம் வாய்ந்த நிலையில் பங்களாதேஷ் 18 JUN, 2025 | 12:26 PM (நெவில் அன்தனி) இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் இருதரப்பு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் மிகவும் பலமான நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை 3 விக்கெட் இழப்புக்கு 292 ஓட்டங்களிலிருந்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் மதிய போசன இடைவேளையின்போது 4 விக்கெட்களை இழந்து 383 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதலாம் நாள் ஆட்டத்தில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி சதங்கள் குவித்த அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவும் முன்னாள் தலைவர் முஷ்பிக்குர் ரஹிமும் 4ஆவது விக்கெட்டில் 264 ஓட்டங்ங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். ஷன்டோ 148 ஓட்டங்களைப் பெற்று அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஏஞ்சலோ மெத்யூஸிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். தொடர்ந்து முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 383 ஓட்டங்களாக உயர்த்தினர். முஷ்பிக்குர் ரஹிம் 7 பவுண்டறிகள் அடங்கலாக 141 ஓட்டங்களுடனும் லிட்டன் தாஸ் 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 43 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ, தரிந்து ரத்நாயக்க ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றியுள்னர். https://www.virakesari.lk/article/217801
  21. கில், ஜெய்ஸ்வால் அபார சதம்: இந்திய இளம் படை இங்கிலாந்து மண்ணில் முதல் நாளே புதிய சாதனை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சதம் அடித்த கேப்டன் சுப்மன் கில்லும், ஜெய்ஸ்வாலும் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் ஆகியோரின் அபார சதம், ரிஷப் பந்தின் அரைசதம் ஆகியவற்றால் இளம் இந்திய அணி டெஸ்ட் சகாப்தத்தை மிரட்டலாகத் தொடங்கியுள்ளது. ஹெடிங்லியில் நேற்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருக்கிறது. ஜெய்ஸ்வால் (101) ரன்களில் ஆட்டமிழக்கவே, கேப்டன் சுப்மன் கில் 127 ரன்களுடனும், துணை கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். முதல் விக்கெட்டுக்கு கேஎல்.ராகுல், ஜெய்ஸ்வால் கூட்டணி 91 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்ததே நடுவரிசை வீரர்கள் அழுத்தமின்றி பேட் செய்ய முடிந்தது. தமிழக வீரர் சாய் சுதர்சன் 4 பந்துகளை சந்தித்த நிலையில் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றினார். வலுவான தொடக்கம் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுக்கவே, இந்தியா சார்பில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் களமிறங்கினர். இங்கிலாந்து வீரர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இந்திய அணியின் பேட்டிங் அவர்களை திணறடிக்கும் வகையில் அமைந்திருந்தது. ராகுல், ஜெய்ஸ்வால் கூட்டணி அற்புதமாக இங்கிலாந்து பந்துவீச்சைச் சமாளித்து ஆடினர். குறிப்பாக ஜெய்ஸ்வால் பெரிய ஷாட்களுக்கு முயற்சிக்கவில்லை. நல்ல பந்துகளுக்கு மதிப்பளித்து லீவ் செய்து, ஆப் சைடிலேயே தனது பெரும்பகுதி ஷாட்களில் ரன்களைச் சேர்த்தார். ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கில் நிதானமும், பொறுமையும் நன்கு தெரிந்தது. 15 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை எட்டியது. ராகுல் 42 ரன்கள் சேர்த்த நிலையில் கார்ஸ் பந்துவீச்சில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராகுல் 42 ரன்கள் சேர்த்தநிலையில் கார்ஸ் பந்துவீச்சில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் சுதர்சன் டக் அவுட் ராகுல், ஜெய்ஸ்வால் முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்துப் பிரிந்தனர். அடுத்து அறிமுக ஆட்டத்தில் களமிறங்கிய சாய் சுதர்சன், 4 பந்துகளில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார். சுதர்சன் களமிறங்கிய போது லெக் திசையில் ஸ்லிப் வைத்து ஸ்டோக்ஸ் பந்து வீசினார். லெக் சைடில் விலக்கி வீசப்பட்ட 2வது பந்தில் சுதர்சன் தட்டவே பந்து கால்காப்பில் பட்டு கேட்சானது, இங்கிலாந்து வீரர்கள் நடுவரிடம் அப்பீல் செய்யவே அவுட் வழங்கவில்லை. இந்த சம்பவத்திலேயே சுதர்சன் தன்னை சுதாரித்துக் கொண்டிருக்க வேண்டும், ஆனால், 4வது பந்தும் அதே போன்று ஸ்டோக்ஸ் வீச, தேவையற்ற ஷாட்டை சுதர்சன் ஆடி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் செஷனில் இந்திய அணி 100 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,4 பந்துகளில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறிய சாய் சுதர்சன் கில், ஜெய்ஸ்வால் வலுவான கூட்டணி 3வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், கேப்டன் கில் ஜோடி சேர்ந்தனர். ஜெய்ஸ்வால் ஏற்கெனவே நன்கு செட்டில் ஆகி இருந்தார். ஜெய்ஸ்வால் 96 பந்துகளில் அரைசதம் அடித்தார், கில் 56பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் அரைசதத்தை வேகமாக எட்டினார். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கார்க், வோக்ஸ், டங், ஸ்டோக்ஸ் ஆகியோர் மாறிமாறிப் பந்துவீசியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. சுழற்பந்துவீச்சாளர் ஷோயிப் பஷீர் பந்துவீச்சில் கில், ஜெய்ஸ்வால் இருவரும் ரன் எடுக்கும் வேகத்தை குறைத்தார்களே தவிர தடுமாறவில்லை. இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களைக் கடந்து சென்றது. ஜெய்ஸ்வால் 144 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 14 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடக்கமாகும். ஜெய்ஸ்வால் தனது சதத்தில் பெரும்பாலான ரன்களை ஆப் சைடிலேயே அடித்திருந்தார். வழக்காக லெக்திசையில் சிறப்பாக பேட் செய்யக்கூடிய ஜெய்ஸ்வால் பந்துவீச்சுக்கு ஏற்ப பேட்டிங்கை மாற்றி தனது முதிர்ச்சியை வெளிப்படுத்தினார். பிற்பகல் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்து 2வது செஷனில் வலுவாக காலூன்றியிருந்தது. தேநீர் இடைவேளைக்குப்பின் ஜெய்ஸ்வால் விக்கெட்டை இந்திய அணி இழந்தது. ஜெய்ஸ்வால் சதம் அடித்து 101 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் போல்டாகி பெவிலியன் திரும்பினார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 129 ரன்கள் சேர்த்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால், கேப்டன் கில் ஜோடி நேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரிஷப் பந்த் அதிரடி தொடக்கம் 4வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த் களமிறங்கி கில்லுடன் சேர்ந்தார். கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாக இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய ரிஷப் பந்த், தான் சந்தித்த 2வது பந்திலேயே கவர் திசையில் பவுண்டரி அடித்தார். இதைப் பார்த்த பந்துவீச்சாளர் ஸ்டோக்ஸ் சிரித்துக்கொண்டே ரிஷப் பந்தை கடந்து சென்றார். ரிஷப் பந்த், கில் இருவரும் 3வது செஷனில் ஆதிக்கம் செய்து ரன்களை வேகமாகச் சேர்த்தனர். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு இருவருக்கும் பெரிதாக எந்த சிரமத்தையும் அளிக்கவில்லை. தேநீர் இடைவேளைக்குப்பின் இந்திய அணி 300 ரன்களை எட்டியது. சுப்மன் கில் வேகமாக அரைசதம் அடித்திருந்த நிலையில் 140 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். ரிஷப் பந்த் 90 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் முயற்சி எந்த பலனையும் அளிக்கவில்லை. ரிஷப் பந்த் நிதானமாக பேட் செய்தாலும் அவ்வப்போது தனது பெரிய ஷாட்கள் மூலம் பவுண்டரிகளை அடித்து ரன்களைச் சேர்த்தார். ரிஷப் பந்த் பொதுவாக கடினமான ஆடுகளங்களில் சிறப்பாக பேட் செய்து ரன்களைச் சேர்க்கக் கூடியவர். ஹெடிங்லி ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்ட ரிஷப் பந்த் அதற்கு ஏற்றார்போல் தனது ஆட்டத்தை மாற்றி நிதானமாக பேட் செய்தார். 2வது புதிய பந்து 80-வது ஓவரில்தான் எடுக்கப்பட்டது. புதிய பந்து எடுத்தபின் விக்கெட் வீழ்த்தலாம் என்ற நம்பிக்கையுடன் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் இருந்தனர். ஆனால், ஏற்கெனவே செட்டில் ஆன பேட்டர்கள் கில், ரிஷப் பந்த் இருவரும் பந்துகளை நன்கு எதிர்கொண்டு ஆடியதால், அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. 4வது விக்கெட்டுக்கு கில், ரிஷப் பந்த் இருவரும் 138 ரன்கள் சேர்த்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சுப்மன் கில் வேகமாக அரைசதம் அடித்த நிலையில் 140 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார் இங்கிலாந்தில் இந்திய இளம் படை முதல் நாளே புதிய சாதனை சீனியர் பேட்டர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் ஆகியோர் இல்லாத நிலையில் இளம் இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் என்ன செய்யப் போகிறது, அதிலும் ஸ்விங்கிற்கும், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் எவ்வாறு சமாளித்து ஆடுவார்கள் என்ற எதிர்பார்ப்பிற்கும், கேள்விக்கும் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி பதில் அளித்துவிட்டனர். ஹெடிங்லி மைதானத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்டத்தில் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 2022-ம் ஆண்டில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் முதல் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் சேர்த்ததுதான் இந்திய அணியின் அதிகபட்சமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு அணிகள் முதல் நாள் ஆட்டத்தில் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹெடிங்லி மைதானத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்டத்தில் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 89 ஆண்டுகளுக்குப்பின் ஜெய்ஸ்வால் புதிய சாதனை ஜெய்ஸ்வால் கடந்த 18 மாதங்களுக்கு முன் இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்த போது டெஸ்ட் தொடரில் 712 ரன்கள் குவித்திருந்தார், இப்போது மீண்டும் அந்த அணிக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் சதம் அடித்து ஜெய்ஸ்வால் தன்னை நிரூபித்துள்ளார். வெளிநாடுகளில் ஜெய்ஸ்வால் அடித்த 3வது சதம் இதுவாகும். 2023-ல் ரோஸோவில் 171 ரன்கள், 2024-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் 161 ரன்கள், லீட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக 101 ரன்கள் என 3 சதங்களை ஜெய்ஸ்வால் வெளிநாட்டு மண்ணில் அடித்துள்ளார். இதுவரை எந்த பேட்டரும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் அறிமுக ஆட்டத்தில் 3 சதங்களை அடித்தது இல்லை. 96 பந்துகளில் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால், அடுத்த 48 பந்துகளில் விரைவாக 50 ரன்கள் சேர்த்து 144 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். இதில் 17 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கும். 23 வயதில், ஜெய்ஸ்வால் இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்துள்ளார். இதற்கு முன் சயத் 1936ம் ஆண்டு ஓல்டு ட்ராபோர்ட் மைதானத்தில் 21 வயதில் 112 ரன்கள் சேர்த்த முஸ்தாக் அலிதான் குறைந்த வயதில் இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்த பேட்டர் ஆவார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,96 பந்துகளில் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால், அடுத்த 48 பந்துகளில் விரைவாக 50 ரன்கள் சேர்த்து 144 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். கில்லின் 'தில்' பதில் கடந்த முறை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்படாத நிலையில் தனக்கு கிடைத்த கேப்டன் வாய்ப்பிலும், ஆட்டத்திலும் கில் சாதித்து பதில் அளித்துவிட்டார். சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டபின், கேப்டன் பொறுப்பு சுமையுடன் அவரின் பேட்டிங் எவ்வாறு இருக்கப் போகிறது என்ற கேள்விக்கும், எதிர்பார்ப்புக்கும் சரியான பதில் அளித்துள்ளார். கேப்டன் பொறுப்பு ஏற்றவுடன் முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்த 4வது இந்திய வீரர் என்ற பெயரை சுப்மன் கில் பெற்றார். இதற்கு முன் விஜய் ஹசாரே(1951, இங்கிலாந்து), சுனில் கவாஸ்கர்(1976, நியூசிலாந்து) திலீப் வெங்சர்க்கர்(வெஸ்ட் இண்டீஸ், 1987), விராட் கோலி(2014, இங்கிலாந்து) ஆகியோர் கேப்டன் பொறுப்பேற்றவுடன் முதல் ஆட்டத்தில் சதம் விளாசியிருந்தனர். சுப்மன் கில் களத்துக்கு வந்ததில் இருந்து டெஸ்ட் போட்டியைப் போன்று நிதானமாக ஆடவில்லை. மாறாக வேகமாக ரன்களைச் சேர்த்து, 56 பந்துகளில் அரைசதம் அடித்தார். அடுத்த 50 ரன்களைச் சேர்க்க 84 பந்துகளை எடுத்துக்கொண்டு 140 பந்துகளில் தனது 6-வது டெஸ்ட் சதத்தை அடித்தார். இங்கிலாந்து பந்துவீச்சு சொதப்பல் இங்கிலாந்து அணியில் ஆண்டர்ஸன், ஸ்டூவர்ட் பிராட் இல்லாத குறை நன்றாகவே வெளிப்பட்டது. கார்ஸ், டங், வோக்ஸ், ஸ்டோக்ஸ் பந்துவீச்சு எந்த விதத்திலும் இந்திய பேட்டர்களுக்கு சிரமத்தை அளிக்கவில்லை. விதிவிலக்காக இருந்தது சுழற்பந்துவீச்சாளர் ஷோயிப் பஷீர் பந்துவீச்சு மட்டும்தான். இங்கிலாந்து மண்ணில் நன்கு பந்தை திருப்பும் பஷீர், இந்திய பேட்டர்களை சற்று யோசித்து ஆடவைத்தது. வேகப்பந்துவீச்சில் கார்ஸ் பந்துவீச்சு மட்டுமே பரவாயில்லை ரகம். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பெரும்பாலும் "லைன் அன்ட் லென்த்தில்" சரிவர பந்துவீசாததே முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பெரிய ஸ்கோர் சேர்க்க காரணமாக இருந்தது. முதல் நாள் ஆட்டத்தின் பின், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் தங்களின் பந்துவீச்சில் எத்தனை பந்துகளை "ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப்" வீசியிருக்கிறோம் என ஆய்வு செய்தால் அவர்களின் தவறு தெரிந்துவிடும். காயத்திலிருந்து மீண்டுவந்த கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் வேகம் இருக்கிறது, 145 கி.மீ வேகத்தில் பந்துவீசினாலும் சரியான லைன் அன்ட் லென்த் இல்லை என்பதால் அவரது பந்துவீச்சு பேட்டர்களுக்கு பெரிதாக சிரமத்தை தரவில்லை. ஹெடிங்லி ஆடுகளம் பேட்டர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ள நிலையில், அதைப் புரிந்து கொண்டு இங்கிலாந்து அணி அதற்கேற்ப பந்துவீசவில்லை. இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்விங், காற்றின் வேகத்துக்கு ஏற்ப பந்தை திருப்பும் பாணி, துல்லியமான யார்கர்கள் என எதுவுமே இல்லை. முதல் நாளில் செய்த தவறுகளை இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆய்வு செய்து திருத்தி விட்டு 2வது நாளான இன்று ஆட்டத்தை எதிர்கொண்டால் மட்டுமே அந்த அணியால் சமாளிக்க முடியும். இல்லாவிட்டால், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் பிரமாண்ட ஸ்கோராக மாறிவிடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c14elmx1yyyo
  22. 21 JUN, 2025 | 09:57 AM “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போதைப் பொருள் பாவனையோடு தொடர்புபட்ட முறைப்பாடுகள் எவையும் கடந்த ஓராண்டு காலமாக கிடைக்கப் பெறவில்லை” என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் “போதைப் பொருட் பாவனை” தொடர்பில் கோரப்பட்ட விடயங்களிற்கு பதிலளிக்கும் போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் பின்வருமாறு தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்க் கோரப்பட்ட பின்வரும் விடயங்களிற்கு பதிலளிக்கும் போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் போதைப் பொருள் பாவனையோ அதுசார்ந்த முறைப்பாடுகளோ கிடைக்கப் பெறவில்லை என்று பதிலளித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தினுள் போதைப் பொருள் பாவனையோடு தொடர்புபட்டதாக முறைப்பாடுகள் எவையேனும் பல்கலைக்கழக மாணவர்கள், கலைப்பீட மாணவர்களிற்கு எதிராக கடந்த ஆறு மாத காலப் பகுதிக்குள் பதிவாகியுள்ளதா? அவ்வாறு பதிவாகியிருப்பின் பதிவாகிய சம்பவங்கள் எத்தனை? பதிவாகிய சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை? பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளிற்கு தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? போதைப் பொருட்கள் எவையேனும் கைப்பற்றப்பட்டிருப்பின், கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் தற்போது யாருடைய பாதுகாப்பில் ஃ கையிருப்பில் உள்ளன? போதைப் பொருள் பாவனையோடு தொடர்புடைய மாணவர்கள் மீள கற்றல் நடவடிக்கைளிற்கு திரும்புவதற்கு ஏதேனும் ஆற்றுப்படுத்தல் அல்லது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போதைப் பொருள் பாவனை உள்ளதென்று பல்கலைக்கழக மாணவர்களின் மீது பாராதூரமான குற்றச்சாட்டினை முன்வைத்து கலைப்பீடப் பீடாதிபதி சி.ரகுராம் கடந்த 25, சனவரி 2025 அன்று பதவி விலகி, ஒரு வாரகாலத்தினுள் மீள பொறுப்பேற்றிருந்தார். மாணவர்களிற்கு எதிராக தான் மேற்கொண்ட நிர்வாக முறைகேடுகளை மூடிமறைப்பதற்காகவே அவர் ஒட்டுமொத்த பல்கலைக்கழக மாணவர்களிற்கும் எதிராக இவ்வாறான பொய்யானதொரு அவதூறினை பரப்பியிருந்தார் என்பது தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களின் ஊடாக உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக 25, சனவரி அன்று நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் அவரது முறைகேடுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அவரது நிர்வாக முறைகேடுகள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளராக பணியாற்றிய சட்டத்துறை மாணவனினால் சவாலிற்கு உட்டபடுத்தப்பட்டது. பேராசிரியர் ரகுராமின் வலியுறுத்தலின் பேரில் அவதூறு பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டு குறித்த மாணவனுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டது. எனினும் குறித்த வகுப்புத்தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினையடுத்து மாணவனிடம் சரணடைந்த பல்கலைக்கழக நிர்வாகம், 26.03.2025 அன்று எவ்வித நிபந்தனைகளுமின்றி வகுப்புத்தடை, விசாரணைச் செயன்முறைகள் யாவும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து நீக்கப்படுவதாக துணைவேந்தர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கீழ் அளித்துள்ள பதிலின் அடிப்படையில் அவரது குற்றச்சாட்டு பொய்யானதொன்று என்பது நிரூபிக்கப்பட்டள்ளது. மேலும் போதைப் பொருளை ஒழிக்க வேண்டும் என்று கோரிய பேராசிரியர் ரகுராமினால் கூட எவ்வித முறைப்பாடுகளும் முன்வைக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/218041
  23. Published By: DIGITAL DESK 3 20 JUN, 2025 | 03:31 PM சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தினால் அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க, 2013 ஆம் ஆண்டு தி ரோயல் பவுண்டேஷனுடன் இணைந்து பிரித்தானிய இளவரசர் வில்லியம் “வனவிலங்குகளுக்காக ஒன்றுபடுவோம்” (United for Wildlife) என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்புடன் இணைந்து இளவரசர் வில்லியம் நடத்தும் Guardians Of The Wild நிகழ்ச்சியில் இலங்கை வனவிலங்கு தொடர்பான ஆவணத் தொடர் வெளியிட்டப்பட்டுள்ளது. “யானைகளும் மனிதர்களும் அருகருகே வாழும் தீவு” என்ற ஆவணப்படம் பிபிசி எர்த் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வனப்பகுதி, தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்களில் பாதுகாப்பில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த சிந்தக பத்திரணவை பிரித்தானிய துணை உயர்ஸ்தானிகர் லிசா வான்ஸ்டால் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரி குழு வரவேற்றது. இதன்போது வனவிலங்கு சுகாதார மற்றும் வனவிலங்கு பாதுகாப்புது்துறையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ரஞ்சித் மாரசிங்க மற்றும் பணிப்பாளர் நாயகம் டாக்டர் தாரக்க பிரசாத் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர். இலங்கையின் காட்டு பகுதிகளில் யானைகள் தங்களைச் சுற்றியுள்ள உலகம் விரைவாக மாறுவதால், அவை புதிய சவால்களை எதிர்கொள்கின்றன, அவை மனிதர்களுடன் மேலும் நெருக்கமான தொடர்பு எல்லைக்குள் வருகின்றன. இருப்பினும், சிந்தக தலைமையில் அர்ப்பணிப்புடன் வனப்பகுதி, தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்களில் பாதுகாப்பில் ஈடுபடும் குழு, இந்த மென்மையான இராட்சத உயிரினத்தை பாதுகாக்க போராடி வருகின்றது. மேலும் மக்களும் யானைகளும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை அவர்கள் திட்டமிடுகின்றார்கள். https://www.virakesari.lk/article/217999
  24. வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த உதவி கோரல் 20/06/2025 மாரீசங்கூடல் உயரப்புலத்தில் வசிக்கும் சிவானந்தராசா லக்சன் (பேசமுடியாதவர், மகனும் பேசமுடியாதவர், மனைவி இதய நோயாளி) என்பவருக்கு அரசின் பத்து லட்சம் ரூபா வீட்டுத்திட்டம் கிடைத்துள்ளது. வீடு கட்டும் பணிகளை நிறைவு செய்ய மேலும் ஏழரை லட்சம் ரூபா தேவையாக உள்ளது. கருணை உள்ளம் கொண்ட கொடையாளர்களே உங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி ஒரு குடும்பத்தை குடியிருக்க உதவுமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம். தொடர்புகொள்ள +94 77 777 5448, +94 77 959 1047 (WhatsApp, Viber)
  25. அணித் தலைவர் ஷன்டோ, முன்னாள் தலைவர் ரஹிம் குவித்த அபார சதங்களுடன் பலமான நிலையில் பங்களாதேஷ் Published By: VISHNU 17 JUN, 2025 | 07:32 PM (நெவில் அன்தனி) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ, முன்னாள் தலைவர் முஷ்பிக்குர் ரஹிம் ஆகியோர் குவித்த ஆட்டம் இழக்காத அபார சதங்களின் உதவியுடன் பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 292 ஓட்டங்களைக் குவித்துள்ளது. நான்காவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சி அத்தியாயத்தில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இதுவாகும். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. மொத்த எண்ணிக்கை 5 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர்களில் ஒருவரான அனாமுல் ஹக் ஓட்டம் பெறாமல் அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து ஷத்மான் இஸ்லாம் 14 ஓட்டங்களுடனும் மொமினுள் ஹக் 29 ஓட்டங்களுடனும் இலங்கையின் அறிமுக சுழல்பந்துவீச்சாளர் தரிந்து ரத்நாயக்கவின் பந்துவீச்சில் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெளியேறினர். 17ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு 45 ஓட்டங்களாக இருந்தபோது ஜோடி சேர்ந்த ஷன்டோவும் ரஹிமும் மிகவும் பொறுப்புணர்வுடன் சுமார் 5 மணித்தியாலங்கள் துடுப்பெடுத்தாடி இலங்கை பந்துவீச்சாளர்களை பெரும் சொதனைக்குள்ளாக்கினர். அவர்கள் இருவரும் அபார சதங்களைக் குவித்ததுடன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 247 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணியை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளனர். நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 260 பந்துகளில் 14 பவுண்டறிகள், ஒரு சிச்ஸ் அடங்கலாக 136 ஓட்டங்களுடனும் முஷ்பிக்குர் ரஹிம் 186 பந்துகளில் 5 பவுண்டறிகள் உட்பட 105 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். தனது 36ஆவது டெஸ்டில் விளையாடும் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 6ஆவது சதத்தைக் குவித்ததுடன் தனது 97ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 38 வயதான மூத்த வீரர் முஷ்பிக்குர் ரஹிம் 12ஆவது சதத்தைப் பெற்றார். விளையாட்டிற்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் முஷ்பிக்குர் ரஹிம் அபாரமாக துடுப்பெடுத்தாடினார். இலங்கை அணியில் ஆரம்ப வீரர் லஹிரு உதாரவும் சுழல்பந்துவீச்சாளர் தரிந்து ரத்நாயக்கவும் டெஸ்ட் அறிமுகம் பெற்றனர். தரிந்து ரத்நாயக்க ஆரம்பத்தில் சிறப்பாக பந்துவீசி 5 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். ஆனால் அதன் பின்னர் அவர் வீசிய 27 ஓவர்களில் 105 ஓட்டங்களைக் கொடுத்த அவரால் மேலதிக விக்டெகட் எதனையும் கைப்பற்ற முடியாமல் போனது. (124 - 2 விக்) தனது முதல் 15.5 ஓவர்களை வலதுகையால் பந்துவீசிய தரிந்து ரத்நாயக்க 16ஆவது ஓவரில் இடது கையால் பந்துவீச ஆரம்பித்தார். ஆனால் அவரால் பந்துவீச்சில் சாதிக்க முடியாமல் போனது. அசித்த பெர்னர்ணடோ 51 ஓட்டங்களுடக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தியதுடன் மிலன் ரட்நாயக்க கட்டுப்பாட்டுடன் 12 ஓவர்கள் வீசி 19 ஓட்டங்களை மட்டும் கொடுத்தார். இலங்கையின் நட்சத்திர சுழல்பந்துவிச்சாளர் ப்ரபாத் ஜயசூரிய 28 ஒவர்களில் 85 ஓட்டங்களைக் கொடுத்து விக்கெட் எதனையும் கைப்பற்றவில்லை. பகுதிநேர பந்துவீச்சாளர் கமிந்து மெண்டிஸை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா பயன்படுத்தாதது ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. இரண்டாம் நாள் ஆட்டம் நாளை புதன்கிழமை காலை 10.00 மணிக்கு தொடங்கும். https://www.virakesari.lk/article/217756

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.