Everything posted by ஏராளன்
-
திப்பு சுல்தான்: ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்ட இறுதி நாளின் முழு பின்னணி
திப்பு சுல்தான்: கொல்லப்பட்ட இறுதி நாளில் ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்டதன் முழு பின்னணி பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்டு, ஆங்கிலேயர்களுடனான போரில் வீழ்ச்சியடைந்த திப்பு சுல்தான், போர்க்களத்தில் மரணமடைந்த நாள் இன்று. திப்பு சுல்தானின் கடைசித் தருணத்தில் என்ன நடந்தது? பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மைசூர் நாட்டை ஆட்சிசெய்த திப்பு சுல்தான், தான் ஆட்சியில் இருந்த 17 ஆண்டுகளிலும் தொடர்ந்து ஆங்கிலப் படைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1799இல் நடந்த நான்காவது மைசூர் போரில் கொல்லப்பட்ட திப்பு சுல்தான் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் பல உணர்வுகளை எழுப்பக்கூடியவராக இருக்கிறார். திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாறு பல வரலாற்று ஆசிரியர்களால் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. இவற்றில், கொல்கத்தா பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியரான மொஹிபுல் ஹசன் எழுதிய 'History of Tipu Sultan', அவரைப் பற்றி எழுதப்பட்ட வரலாறுகளில் மிக முக்கியமானது. இந்த நூலில், திப்பு சுல்தானின் கடைசி நாட்கள் மிக விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. திப்பு சுல்தானுக்கு எதிரான கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES திப்பு சுல்தானுக்கு எதிராக 1787வாக்கிலேயே மெல்ல மெல்ல ஒரு பெரிய கூட்டணி உருவாக ஆரம்பித்திருந்தது. ஆங்கிலேயர்கள் - மராத்தியர்கள் - நிஜாம் ஆகியோர் ஒன்றாக இணைந்திருந்தனர். இதனால், பிரான்ஸ் அரசிடம் உதவிகோரி ஒரு தூதுக்குழுவை அனுப்பினார் திப்பு. ஆனால், சாதகமான பதில் வரவில்லை. ஆங்கிலேயர்களுடனான வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையை மீற, பிரான்ஸ் விரும்பவில்லை. இதற்குப் பிறகு இந்தியாவின் கவர்னர் ஜெனரலான கார்ன்வாலிஸுடன் கடிதங்களின் மூலம் சமாதானத்திற்கு அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார் திப்பு. ஆனால், கார்ன்வாலிஸ் இதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. இதுபோலவே தொடர்ந்து ஆண்டுகள் கழிந்தன. 1799ஆம் ஆண்டில் நிலவரம் உச்சகட்டத்தை எட்டியிருந்தது. அந்த ஆண்டு மீண்டும் அமைதிக்கு அழைப்பு விடுத்தார் திப்பு. இந்த முறை அவர் பேச்சு வார்த்தையை ஆங்கிலேயத் தளபதியான ஹாரிசுடன் நடத்த வேண்டியிருந்தது. திப்புவின் அழைப்பிற்கு ஹாரிஸ் அனுப்பிய பதில் கடிதத்தில் திப்பு தனது ராஜ்ஜியத்தில் பாதியை கம்பனிக்கு வழங்க வேண்டும் என்றும் இரண்டு கோடி ரூபாயை பிணைத் தொகையாகத் தர வேண்டும் என்றும் அதில் ஒரு கோடியை உடனடியாகவும் மீதி ஒரு கோடியை ஆறு மாதங்களிலும் தர வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதுவரை திப்பு தனது நான்கு மகன்களையும் நான்கு தளபதிகளையும் ஹாரிஸிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை ஏற்பதானால், அதை 24 மணிநேரத்திற்குள் செய்ய வேண்டும் என்றும் 48 மணிநேரத்திற்குள் எட்டுப் பேரையும் ஒரு கோடி ரூபாயையும் தர வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த நிபந்தனைகள் மிக மோசமானதாக திப்புவுக்கு தோன்றின. ஏப்ரல் 28ஆம் தேதி ஒரு கடிதத்தை ஹாரிசுக்கு அனுப்பினார் திப்பு. அதில், ஆங்கிலப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகச் சொன்னார் அவர். ஆனால், 29ஆம் தேதி மதியம் 3 மணிக்குள் ஏற்கெனவே சொன்ன நிபந்தனைகளை ஒப்புக்கொள்ள வேண்டுமெனக் கூறினார் ஹாரிஸ். இதற்கிடையில் ஸ்ரீரங்கப்பட்டனத்தின் கோட்டையைத் தகர்க்கும் பணிகளும் துவங்கியிருந்தன. ஏப்ரல் 28ஆம் தேதியிலிருந்தே கோட்டையை நோக்கி குண்டுகள் வெடிக்கப்பட்டன. மே 3ஆம் தேதி கோட்டையில் முதல் உடைப்பு ஏற்பட்டது. அந்தப் பிளவைப் பார்வையிட்ட ஆங்கில கம்பனி அதிகாரிகள், அடுத்த நாள் நண்பகலில் தாக்குதல் நடத்த முடிவு செய்தனர். அடுத்த நாள் நண்பகல், அந்த உடைப்புப் பகுதியை திப்பு சுல்தான் வந்து பார்வையிட்டார். அதைச் சரிசெய்ய உத்தரவிட்டுவிட்டு, அரண்மனைக்குச் சென்றார். அங்கு அவரைச் சந்தித்த ஜோதிடர்கள் அன்றைய தினம் நல்ல நாளில்லை என்று கூறினர். அவர்களது ஆலோசனைப்படி பலருக்கு தானங்களைச் செய்தார் திப்பு. திப்பு சுல்தானின் இறுதித் தருணங்கள் பட மூலாதாரம்,ULLSTEIN BILD DTL. படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இதற்குப் பிறகு தனது முகாமிற்கு வந்த திப்பு சுல்தான், சாப்பிடுவதற்காக அமர்ந்தார். அப்போதுதான், கோட்டையின் மேற்குப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்த சயீத் கபார் பீரங்கிக் குண்டு தாக்கி உயிரிழந்த தகவல் வந்து சேர்ந்தது. மிகுந்த விசுவாசியான சயீத்தின் மரணம் திப்புவை வெகுவாகப் பாதித்தது. அவர் உடனடியாக குதிரை மீதேறி உடைப்பு ஏற்பட்டிருந்த இடத்தைச் சென்றடைந்தார். ஆனால், அவர் அங்கு வந்து சேரும் முன்பே ஆங்கிலேயர்கள் அதைக் கைப்பற்றிக் கொடியேற்றியிருந்தனர். திப்புவின் வருகை அங்கிருந்த மைசூர் வீரர்களுக்கு உத்வேகமளித்தது. ஆனால், சிறிது நேரத்திலேயே ஆங்காங்கு வைக்கப்பட்டிருந்த தீயைப் பார்த்து, வீரர்கள் சிதறி ஓடத் துவங்கினர். அவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இருந்தபோதும் முழுக்க முழுக்க ஒரு சாதாரண வீரனைப் போல களத்தில் நின்றார் திப்பு. தொடர்ந்து வீரர்கள் சிதறி ஓடவே, நகரத்தை நோக்கிச் செல்லும் பாதையை நோக்கி நகர்ந்தார் திப்பு. அந்தப் பாதை மூடப்பட்டிருந்தது. அந்தப் பகுதியில் படைத் தலைவனாக இருந்த மீர் நதீம் ஏற்கெனவே ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக மாறியிருந்தார். அவர், அந்தப் பாதையைத் திறக்க மறுத்துவிட்டார். அப்போதே திப்புவுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. அதற்குப் பிறகு, கோட்டை வாசலை நோக்கி முன்னேறினார் திப்பு. அப்போது இரண்டாவது காயம் ஏற்பட்டது. தொடர்ந்து மைசூர் வீரர்களைத் தாக்கி அழித்தபடி வந்த ஆங்கிலேயப் படை மூன்றாவது காயத்தை ஏற்படுத்தியது. அவரது இடது நெஞ்சின் பக்கம் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. அவரது குதிரை கொல்லப்பட்டது. அந்த நேரத்தில் அவரை நெருங்கிய அவரது உதவியாளர் ரஜா கான், ஆங்கிலேயர்களிடம் அவர் யார் என்பதைச் சொல்லலாம் என்றார். ஆனால், திப்பு மறுத்துவிட்டார். அவர்களிடம் கைதியாக இருப்பதைவிட இறப்பதே மேல் எனக் கருதினார் திப்பு. அப்போது ஒரு ஆங்கில வீரன் அவரது இடையிலிருந்த வாளின் உறையைப் பிடுங்க முயன்றார். வீறுகொண்டு அதைப் பறித்தார் திப்பு. அந்த வீரன், தனது துப்பாக்கியை எடுத்து திப்புவைச் சுட்டார். நெற்றியில் குண்டுகள் பாய்ந்து கீழே விழுந்தார் திப்பு. அவர் உயிர் பிரிந்திருந்தது. திப்பு சுல்தானின் இறுதி ஊர்வலம் பட மூலாதாரம்,BONHAMS இதற்குப் பிறகு மைசூர் படையின் வீரர்கள் அனைவரும் கொன்று குவிக்கப்பட்டனர். திப்பு இறந்துவிட்ட தகவல் ஆங்கிலேயப் படைக்குத் தெரியவில்லை. அரண்மனையைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் அவரை அங்கே தேடினார்கள். அரண்மனையில் இருந்த இளவரசர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து தேடுதல் நடந்தபோது, அங்கு வந்த படைத் தலைவர் ஒருவர், திப்பு வடக்கு வாசலில் இறந்து கிடப்பதைச் சொன்னார். அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபோது, சடலங்கள் குவியலாகக் கிடந்தன. ஒருவழியாக திப்புவின் பல்லக்கு இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அருகில் ரஜா கான் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவர், திப்புவின் உடல் இருந்த இடத்தைக் காட்டினார். மறுநாள் திப்புவின் இறுதி ஊர்வலம் துவங்கியது. திப்புவின் உடல் இருந்த சவப்பெட்டியை அவரது தனி உதவியாளர்கள் சுமந்து வந்தனர். இளவரசர் அப்துல் காலிக் சவப்பெட்டியைப் பின்தொடர்ந்து வந்தார். ஊர்வலம் சென்ற தெருக்களில், மக்கள் விழுந்து வணங்கினர். லால் பாக் கல்லறையில் இறக்கி வைக்கப்பட்ட திப்புவின் உடலுக்கு ராணுவ மரியாதை செய்யப்பட்டது. மரியாதைகள் முடிந்த பிறகு ஹைதர் அலியின் உடலுக்கு அருகில் திப்புவின் உடலும் புதைக்கப்பட்டது. இதற்குப் பிறகு ஸ்ரீரங்கப்பட்டனமும் அரண்மனையும் சூறையாடப்பட்டன. மே 6ஆம் தேதி கர்னல் வெல்லெல்ஸி அங்கு வந்து கோட்டையின் அதிகாரத்தைக் கையில் எடுக்கும்வரை இது தொடர்ந்தது. அவ்வளவு சூறையாடல்களுக்குப் பிறகும் அரண்மனையில் அதிகளவிலான செல்வம் மீதம் இருந்தது. நேர்த்தியான அரியாசனம், வெள்ளியிலும் தங்கத்திலும் செய்யப்பட்ட தட்டுகள், விலை உயர்ந்த தரை விரிப்புகள், விலை மதிப்பற்ற நகைகள் உள்ளிட்டவை இருந்தன. இவற்றில் ஒரு வைர நட்சத்திரம், நகைகள், திப்புவின் வாட்களில் ஒன்று ஆகியவை வெல்லெல்ஸிக்கு பரிசாக அளிக்கப்பட்டன. சுல்தானின் சிம்மாசனத்தில் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட புலித் தலை வின்ஸர் கோட்டையின் அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட்டது, திப்புவின் தலைப்பாகை, மற்றொரு வாள் ஆகியவை கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸுக்கு அனுப்பப்பட்டன. திப்பு சுல்தானின் தோல்விக்கான காரணம் பட மூலாதாரம்,DD NEWS மிகப்பெரிய வீரராக அறியப்பட்டிருந்த திப்பு சுல்தான், ஆங்கிலப் படையிடம் தோல்வியைச் சந்திக்கக் காரணம் என்ன? "வங்காளத்திலும் பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான போர்களிலும் வெற்றி பெற்றிருந்த ஆங்கிலேயர் தென்னகத்தில் முதலில் ஹைதர் அலியிடமும் பின்னர் திப்பு சுல்தானிடமும் கடுமையான சவாலைச் சந்திக்க வேண்டியிருந்தது. கிழக்கிந்திய கம்பனி மிகப்பெரிய வல்லமையைக் கொண்டிருந்ததால் மராத்தியர், ஐதராபாத் நிஜாம் இரண்டாம் ஆசப் ஷா, ஆவாத்தின் நவாப் சூஜா-உத்-தவுலா ஆகியோர் இணைந்து ஆங்கிலேயருடன் போரிட விரும்பினார்கள். ஆனால், அந்தத் தருணத்தில் ஹைதர் அலியின் செல்வாக்கு தொடர்ந்து பெருகி வருவதை விரும்பாத ஆசப் ஷாவும், சூஜா உத்-தவுலாவும் ஹைதர் அலிக்கு ஒத்துழைக்க மறுத்தனர். மராத்தியர்களும் ராஜபுத்திரர்களும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள ஆங்கிலேயருக்கு ஒத்துழைத்தனர். இவையெல்லாம் மைசூர் அரசுக்கு எதிராக மாறியது. முடிவில், ஆங்கிலேயருடன் இணைந்து இந்திய அரசர்களுக்கு எதிராகப் போரிடுவதில்லை என உறுதி ஏற்றிருந்த திப்பு சுல்தான் இறுதிவரை ஆங்கிலேயருடன் போரிட்டு மடிய வேண்டியதாயிற்று," என்கிறார் மணிக்குமார். திப்பு சுல்தானுக்கு 12 குழந்தைகள் வரை இருந்தனர். அவர்களில் இரு இளவரசர்களுக்கு ஆண்டுக்கு 2,24,000 பகோடாக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவர்கள் அங்கிருக்கக்கூடாது என்றும் வேலூர் கோட்டைக்குள் சென்று வசிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. வேலூர் கோட்டையில் வெடித்த 1807ஆம் ஆண்டின் கலகத்தில் அவர்களுக்கு பங்கிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கொல்கத்தாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். https://www.bbc.com/tamil/articles/c0klj2xxppgo
-
கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்தார் தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!
04 MAY, 2024 | 05:32 PM தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானை மரியாதை நிமித்தமாக கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின்போது, இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டிருந்த தருணத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசில் நிதி அமைச்சராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இருந்த காலகட்டத்தில், இலங்கை மக்களுக்கு தமிழக அரசு வழங்கிய உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நினைவுகூர்ந்தார். அத்துடன், தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்புகளை வலுவாக பேணுவது தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடினர். https://www.virakesari.lk/article/182682
-
மருந்துகள், மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு!
நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நோயாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளில் இதுவரையில் 20 வீதமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுதாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் விஜேசூரிய தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அதற்கு மாற்று மருத்துகள் நாட்டில் உள்ளதாகவும் வைத்தியசாலைகளில் அரிதாக தேவைப்படும் 115 வகையான மருந்துகளுக்கு தட்டுபாடுகள் நிலவுவதாகவும் அவற்றை கொள்வனவு செய்வதற்கான நிதி மற்றும் அனுமதிகளை வைத்தியசாலைகளுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/300895
-
கனடா: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது - யார் அவர்கள்?
பட மூலாதாரம்,SIKH PA படக்குறிப்பு,ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கட்டுரை தகவல் எழுதியவர், ஜெசிகா மர்பி பதவி, பிபிசி நியூஸ் 47 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியா - கனடா இடையிலான உறவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா காவல்துறை தெரிவித்துள்ளது. காலிஸ்தானுக்கு ஆதரவாகப் பல வழக்குகளில் இந்திய அரசால் தேடப்பட்டு வந்த 45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 2023 ஜூன் மாதம் கனடாவின் சர்ரேயில் படுகொலை செய்யப்பட்டார். வான்கூவர் புறநகர்ப் பகுதியில் ஒரு பரபரப்பான கார் நிறுத்துமிடத்தில் முகமூடி அணிந்து, துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தக் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகளை டெல்லி திட்டவட்டமாக மறுத்தது. நிஜ்ஜார் கொலை வழக்கில் குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களைக் கைது செய்ததாக கனடாவை சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் மன்தீப் முகர் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தார். மேலும் கைதான மூன்று நபர்களின் பெயர்களையும் அறிவித்தார் - கரன் ப்ரார் (22), கமல் ப்ரீத் சிங் (22), மற்றும் கரண் ப்ரீத் சிங் (28) என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES கைது செய்யப்பட்ட மூவரும் ஆல்பர்ட்டா என்னும் பகுதியில் எட்மன்டனில் வசித்து வந்ததாக அவர் கூறினார். அவர்கள் மீது கொலை மற்றும் கொலைக்கான சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்கள் மூவரும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளாக கனடாவில் வசித்தவர்கள் என காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். இந்தக் கொலை வழக்கில் "இந்திய அரசாங்கத்துக்கு தொடர்புகள்" உள்ளனவா என்பது உட்படப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை கூறியது. இந்தக் கைது நடவடிக்கை குறித்து உதவி ஆணையர் டேவிட் டெபுல் கூறுகையில், "இந்த வழக்கில் கைதானவர்களிடம் தனித்தனியாக மற்றும் பிரத்யேக விசாரணைகள் நடந்து வருகின்றன. அதேநேரம், நிச்சயமாக இன்று கைது செய்யப்பட்டவர்களின் ஈடுபாடு மட்டுமின்றி அவர்களைத் தாண்டியும் விசாரணை நடத்தப்படும்,” என்று கூறினார். இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டுள்ள கனடா புலனாய்வு அதிகாரிகள் இந்திய புலனாய்வு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ஆனால், இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு கொஞ்சம் கடினமானதாகவும் சவாலாகவும் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்தக் கொலையில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும், மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். சீக்கிய பிரிவினைவாதத் தலைவரான நிஜ்ஜார், காலிஸ்தானுக்காக பகிரங்கமாக, இந்தியாவின் பஞ்சாப் பகுதியில் ஒரு சுதந்திர சீக்கிய தாயகம் உருவாக்கப்பட வேண்டும் என்று பிரசாரம் செய்தார். அழுத்தத்தை எதிர்கொள்ளும் ஜஸ்டின் ட்ரூடோ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சீக்கியர்கள் 1970களில் இந்தியாவில் ஒரு பிரிவினைவாத கிளர்ச்சியைத் தொடங்கினர். பிரிவினை கோரிக்கை உச்சத்தில் இருந்தது. இதனால் பல வன்முறை தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்தப் பிரச்னை தணிக்கப்படுவதற்கு முன்னரே, அடுத்த பத்து ஆண்டுகளில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அப்போதிருந்து, இந்த இயக்கம் பெரும்பாலும் சீக்கிய மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் மட்டுமே இயங்கி வருகிறது. இந்தியா கடந்த காலங்களில் நிஜ்ஜாரை ஒரு போர்க்குணமிக்க பிரிவினைவாத குழுவிற்குத் தலைமை தாங்கிய பயங்கரவாதி என்று குறிப்பிட்டது. "அவரது ஆதரவாளர்கள் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அவரது செயல்பாட்டின் காரணமாக கடந்த காலங்களில் அவருக்கு அச்சுறுத்தல்கள் வந்ததாக அவர்கள் கூறுவது ஆதாரமற்றது" என இந்தியா தரப்பில் கூறப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி வான்கூவருக்கு கிழக்கே 30 கிமீ (18 மைல்) தொலைவில் உள்ள சர்ரே நகரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் "ஹிட் லிஸ்ட்டில்" இருப்பதாகவும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும் அவர் இறப்பதற்கு முன்பு கனடாவின் உளவுத்துறையால் எச்சரிக்கப்பட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர். பிரிட்டிஷ் கொலம்பியா குருத்வாராஸ் கவுன்சிலின் உறுப்பினரான மொனிந்தர் சிங், நிஜ்ஜாருடன் 15 ஆண்டுகளாக நட்பு கொண்டிருந்தவர், ``விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு சீக்கிய சமூகம் நன்றியுடன் இருக்கும். இருப்பினும்,கொஞ்சம் பொதுப் பாதுகாப்பு பற்றிய கவலையும் நிறைய பதற்றமும் உள்ளது. இதனால் விரக்தி ஏற்பட்டுள்ளது. அனைத்தையும் தாண்டி வழக்கு நியாயமாக விசாரிக்கப்படும் என்ற ஒரு நம்பிக்கையும் உள்ளது,” என அவர் பிபிசி செய்தியிடம் கூறினார். நிஜ்ஜார் கொல்லப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, கனடாவின் நாடாளுமன்றத்தில் (House of Commons) உரையாற்றிய ஜஸ்டின் ட்ரூடோ, ”இந்திய அரசை நிஜ்ஜார் கொலையுடன் தொடர்புபடுத்தும் நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் இருக்கிறதா என கனடா கவனித்து வருகிறது,” என்று கூறினார். இந்தக் குற்றச்சாட்டை இந்திய அதிகாரிகள் கடுமையாக மறுத்தனர். கனடா "காலிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு" அடைக்கலம் அளித்ததாக இந்தியா தரப்பில் குற்றம் சாட்டினர். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக இந்தியாவில் உள்ள கனடா தூதர்களின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு டெல்லி ஒட்டாவாவிடம் கோரியது. நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவின் தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டும் ட்ரூடோ, தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை வழங்குவதற்கான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c51nvzjezywo
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணம் : அறிமுக அணியை கனடா குழாம் அறிவிப்பு : இலங்கையின் புபுது தசநாயக்க பயிற்றுநர் 04 MAY, 2024 | 10:13 AM (நெவில் அன்தனி) ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக பங்குபற்றும் கனடா, 15 வீரர்களைக் கொண்ட பலம் வாய்ந்த கிரிக்கெட் குழாத்தை அறிவித்துள்ளது. சாத் பின் ஸபார் அணித் தலைவராக பெயரிடப்பட்டுள்ளதுடன் அனுபவம் வாய்ந்த வீரர்கள் கனடா கிரிக்கெட் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கூட்டாக நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் ஐக்கிய அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் டலாசில் எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் ஏ குழுவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளுடன் இடம்பெறுகின்றன. பம்பலப்பிட்டி புனித பேதுருவானர் கல்லூரியின் பழைய மாணவரும் கனடாவுக்காக ரி20 அணியில் 2019முதல் விளையாடி வருபவருமான 6 அடி உயரமான ஸ்ரீமன்த ஏட்றியன் விஜேரத்ன உலகக் கிண்ண அணியில் இடம்பெறும் வாய்ப்பை துரதிர்ஷ்டவசமாக இழந்துள்ளார். ஐக்கிய அமெரிக்க அணியின் தலைமைப் பயிற்றுநராக இலங்கையின் முன்னாள் விக்கெட் காப்பாளரும் கனடாவின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான புபுது தசநாயக்க செயற்படுகிறார். கனடா குழாம் சாத் பின் ஸபார் (தலைவர்), ஆரோன் ஜோன்சன், டிலொன் ஹேய்லிகர், டில்ப்ரீத் பஜ்வா, ஹார்ஷ் தக்கர், ஜெரெமி கோர்டன், ஜுனைத் சித்திக்கி, கலீம் சானா, கன்வர்பால் தத்குர், நவ்னீத் தாலிவல், நிக்கலஸ் கேட்டன், பர்காத் சிங், ரவிந்தர்பால் சிங், ரய்யன்கன் பத்தான், ஷ்ரேயாஸ் மோவா. மாற்றுவீரர்கள்: தஜிந்தர் சிங், ஆதித்யா வரதராஜன், அம்மார் காலித், ஜட்டிந்தர் மதாரு, பர்வீன் குமார். https://www.virakesari.lk/article/182637
-
ஆசியாவில் கடும் வெப்பம்; வியட்நாமில் இலட்சக்கணக்கான மீன்கள் இறப்பு
Published By: DIGITAL DESK 3 03 MAY, 2024 | 09:42 PM வியட்நாமில் வெப்ப அலை வீசுவதால் நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் குறைந்து இலட்சக்கணக்கான மீன்கள் இறந்துள்ளன. வியட்நாமில் டோங்னாய் மாகாணத்தில் உள்ள 300 ஹெக்டேர் பரப்பளவுள்ள சாங் மே நீர்த்தேக்கத்தில் இறந்த மீன்கள் சூழ்ந்து காணப்படுகிறுது. அதாவது, கடந்த சில நாட்களில் குறைந்தது 200 தொன் மீன்கள் இறந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கிழக்கு மற்றும் தெற்காசியாவின் ஏனைய பகுதிகளைப் போலவே வியட்நாமும் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மழை பொழிவும் குறைந்து காணப்படுகின்றது. மீன்களின் இறப்பிற்கு அதிகரித்த வெப்பநிலை மற்றும் முறையற்ற பாராமரிப்பே காரணம் என உள்ளூர் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. கடந்த சில வாரங்களாக நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நீர்த்தேக்கத்தை முகாமைத்துவம் செய்யும் நிர்வாகம் விவசாய நிலங்களை பாதுகாப்பதற்கு நீரை வெளியேற்றியது. இன்று அவர்களின் அந்த முயற்சி பாழாகிவிட்டது. 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மீன்களுக்காக நீர்த்தேக்கத்தில் மேலதிக நீரை வெளியேற்றி சேறு மற்றும் குப்பைகளை அகற்றி நீர்த்தேக்கத்தை ஆழப்படுத்த நிர்வாகம் தீர்மானித்தது. இந்நிலையில், வெப்பம் தொடர்ந்து அதிகரித்தமையினால் வெளியேற்றப்பட்ட நீரை மீண்டும் நீர்த்தேக்கத்திற்கு விடுவிக்காமல் கீழுள்ள பகுதிக்கு வெளியிட நிறுவனம் முடிவு செய்தது. இதுவே நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவடைய வழிவகுத்தது. மீன்கள் மொத்தமாக செத்து மடிந்தன என அந்நாட்டுப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது நீர்த்தேக்கத்தில் இருந்து அதிகமாக துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். "கடந்த 10 நாட்களாக துர்நாற்றம் வீசுவதால் எங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது" என உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார். டோங்னாய் மாகாணத்தில் 40 செல்சியசுக்கு வெப்பநிலை அதிகரித்துள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் வரலாறு காணாத அளவில் வெப்ப அலை வீசுகிறது. ஆசியா முழுவதும் வெப்பத்தின் தாக்கம் மிகவும் கொடூரமான காணப்படுகிறது. இது உலக காலநிலை வரலாற்றில் மிகவும் தீவிரமான நிகழ்வு" என வானிலை வரலாற்றாசிரியர் மாக்சிமிலியானோ ஹெர்ரேரா தெரிவித்துள்ளார். வியட்நாமின் அயல் நாடான கம்போடியாவிலும் வெப்பம் அதிகரித்துள்ளது. அங்கு வெந்நிலை 43C ஐ அடையவுள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனால் பாடசாலைகளுக்கு விடுமுறை மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை தடுப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க தூண்டியது. தாய்லாந்தில், உடோன் தானி மாகாணத்தில் வெப்பநிலை 44C க்கும் அதிகமாக அதிகரித்தமையினால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மின்சாரப் பயன்பாடு அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸில் அணையில் நீர் மட்டம் குறைந்ததால் நீரில் மூழ்கிய 300 ஆண்டுகள் பழமையான நகரத்தின் எச்சங்கள் தென்படுகின்றன. பங்களாதேஷில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் கல்வி நடவடிக்கை இணையவழி முறையில் மேற்கொள்ளப்படுகிறது. இதேவேளை, இந்தியாவில் வெப்பம் பக்கவாதம் காரணமாக ஒன்பது பேர் உயிரிழந்துள்ளன. 2024 ஆம் ஆண்டு வெப்பத்தின் தாக்கம் கொடூரமாக இருக்கும் எனவும், கடந்த ஆண்டை விட வெப்பநிலை அதிகரித்து காணப்படும் எனவும் சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/182594
-
சனிக்கிழமையன்று இலங்கை வருகிறார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்
நாட்டை வந்தடைந்தார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் Published By: DIGITAL DESK 3 04 MAY, 2024 | 10:50 AM ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை (4) இலங்கைக்கு வருகைதந்துள்ளார். இன்றும் (04) , நாளையும் (05) நாட்டில் தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்திக்கவுள்ளார். அத்தோடு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா தலைமையிலான குழுவினருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளன. https://www.virakesari.lk/article/182641
-
சுத்திகரிப்பு பணியாளர்களின் உரிமைகளுக்கு பொறுப்பானவர்கள் அக்கறையின்மையால் தொழிலாளர்கள் அதிருப்தி - ஆசிர்வாதம் ஜோன்சன்
Published By: DIGITAL DESK 3 04 MAY, 2024 | 08:46 AM குப்பையில்லா தூய்மையான நாட்டை உருவாக்க கடுமையாக உழைத்து வரும் சுத்திகரிப்பு பணியாளர்களின் உரிமைகளுக்கு பொறுப்பானவர்கள் அக்கறையின்மையால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அதற்கு முன்தினம் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய வடமாகாண சுத்திகரிப்பு தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆசிர்வாதம் ஜோன்சன், தொழிற்சங்க இயக்கங்களின் ஆதரவுடன் நாட்டின் உயரிய கதிரைக்கு வந்தவர்களும் கூட பின்னர் தொழிலாளர் உரிமைகளை மறுப்பதாக சுட்டிக்காட்டினார். "நாங்கள் தோல்விடைந்துள்ளோம். எங்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றன. எங்களது உரிமைகள் குறித்து மகஜராக கையளித்தாலும் அது நிராகரிக்கப்படுகிறது. இந்த நாட்டின் ஒவ்வொரு ஜனாதிபதிகளும் தொழிற்சங்கத்தில் இருந்துதான் வந்திருக்கின்றார்கள். எனினும் அவர்கள் நாட்டின் தலைவர்களாக வந்த பின்னர் தொழிலாளர்களின் உரிமைகளை மறுக்கின்ற சூழல் உருவாகிறது.” என்றார். பணியில் இருக்கும் சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு அங்கிகள் மற்றும் உபகரணங்களை அதிகாரிகள் வழங்காததால், எதிர்காலத்தில் தொழிலாளர்கள் நோய்வாய்ப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். "தொழிலாளிகள் தமது வேலைகளை செய்கின்ற போது அவர்கள் பாதுகாப்பு அங்கிகளை பயன்படுத்த வேண்டும். எனினும் அது குறைவாக காணப்படுகிறது. எதிர்காலத்தில் தொழிலாளிகள் நோய்வாய்ப்படும் நிலைமை உருவாகிறது. வேலைகளை செய்கின்றபோது சீருடை, பாதணி, கையுறை அணிந்திருக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் குறித்து அந்தந்த பிரதேசத்தில் பொறுப்பாளர்களாக செயற்படுபவர்கள் மற்றும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.” என்றார். தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டியவற்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண சுத்திகரிப்பு தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆசிர்வாதம் ஜோன்சன் இந்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்தார். “வீதிகளில் பணியாற்றும் மற்றும் பல இடங்களில் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் காணப்படுகின்றோம். ஒன்று அரச ஊழியர்கள், ஒன்று தனியார் ஊழியர்கள். அரசாங்கம் எமக்குத் தர வேண்டியதை தர வேண்டும். எங்கள் சம்பளம் உயர வேண்டும். பொருளாதார நெருக்கடியிலும் நாங்கள் தொழிலை முன்னெடுக்கின்றோம் எனினும் எங்கள் சம்பளம் உயரவில்லை.” https://www.virakesari.lk/article/182629
-
முல்லைத்தீவில் 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு தவணை
நூற்றுக்கும் மேற்பட்ட வடக்கின் பரம்பரை நில உரிமையாளர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் துறை வழக்குத் தாக்கல் Published By: DIGITAL DESK 3 04 MAY, 2024 | 08:53 AM காணி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் காணப்படும் காணி உரிமையாளர்களுக்கு அரச காணிகளின் பூரண உரிமையை வழங்குவதற்காக பெரும் விளம்பரத்துடன், ஜனாதிபதி "உறுமய” வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னியின் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் பத்திரப்பதிவு செய்யப்பட்ட பரம்பரை காணிகளை அரசாங்க நிறுவனம் ஒன்று கையகப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்து தாவரங்களை சேதப்படுத்தியதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பங்கேற்ற புதுக்குடியிருப்பு கரியல்வயல் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர், தாம் பரம்பரையாக பயிரிட்டு வந்த காணியை வனஜீவராசிகள் திணைக்களம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் கையகப்படுத்த முயற்சிப்பதோடு, தற்போது தமக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தெரிவித்தார். “83 வரை நாங்கள் வயல் செய்தோம். அதன் பின்னர் அங்கு போக முடியாமல் போய்விட்டது. பின்னர் 2010 - 2012ற்கு இடையில் நாங்கள் மீள் குடியேறிய பின்னர் காணியை துப்பரவு செய்து விவசாயம் செய்து கொண்டு வருகின்றோம். 2015இல் வனஜீவராசிகள் திணைக்களம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமானது என அறிவித்தது. அதன் பின்னர் வழக்குத் தாக்கல் செய்தது.” என்றார். சுண்டிக்குளம் தேசிய பூங்காவிற்குள் அனுமதியின்றி பிரவேசித்தமை, பூங்காவிலுள்ள மரம், செடி, கொடிகளை வெட்டி அழித்தமை, பாதை உருவாக்கியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், புதுக்குடியிருப்பு, கரியல்வயல் பிரதேச மக்கள் 130 பேருக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களம் தாக்கல் செய்த வழக்கு, இரண்டாவது தடவையாக கடந்த மே 2ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் காரணமாக 80களின் முற்பகுதியில் தமது கிராம நிலங்களை விட்டு வெளியேறிய கரியல்வயல் கிராமத்தின் 130 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமது சொந்த கிராம நிலங்களுக்குத் திரும்பி, பரம்பரையாக பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்திய சுமார் 980 ஏக்கர் காணியில் சுமார் 610 ஏக்கர் நிலப்பரப்பை சுத்தப்படுத்தி விவசாய உற்பத்திகளை ஆரம்பித்ததாக தெரிவிக்கின்றனர். 2015ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் குறித்த காணி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமானது என அறிவித்து, அதனைத் தொடர்ந்து குறித்த கிராம மக்கள் மீது நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவித்தனர். இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 07ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதோடு, வழக்கு 2024ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதிக்கு நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்தது. வனஜீவராசிகள் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட 130 பேரில் 100க்கும் மேற்பட்டோர் தங்கள் நிலத்திற்கான உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை வைத்துள்ளதாக, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மே 2ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி வி. எஸ். தனஞ்சயன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். “இந்த வழக்குடன் தொடர்படைய மக்கள் ஏற்கனவே தனியார் காணிகளுக்கான, அதாவது பிரிடிஷ் உறுதி என அழைக்கப்படுகின்ற நூற்றாண்டுக்கு முற்பட்ட உறுதி வழங்கப்பட்ட மக்களும், தனியார் காணிகளுக்கு சொந்தமான மக்களும், அரச அனுமதிபத்திரம், எல்டிஓ அனுமதிப்பத்திரம் (LDO - Land Development Ordinance) பெற்ற மக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இருக்கும் குறைபாடுகளை ஏற்கனவே நாம் சுட்டிகாட்டி இருந்தோம். அதேபோல் இன்றைய தினமும் இந்த வழக்கில் குறைகளை சுட்டிகாட்டியிருந்தோம். நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான், குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய வேண்டி இருப்பின் தாக்கல் செய்யுமாறு, வழக்கு தொடுனர் தரப்புக்கு அறிவித்ததாக சடடத்தரணி வி. எஸ். தனஞ்சயன் தெரிவிக்கின்றார். "குறித்த விடயங்கள் தொடர்பாக மீள் பரிசீலனை செய்து, இந்த வழக்குகள் தொடர்பாக, குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய வேண்டி இருப்பின் தாக்கல் செய்யுமாறு, நீதிமன்றத்தினால் வழக்கு தொடுனர் தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டு குறித்த வழக்குகளில் ஒரு பகுதி வழக்குகள் எதிர்வரும் ஜுலை 25ஆம் திகதிக்கும், இதர திகதிகளுக்கும் தவணையிடப்பட்டுள்ளது." மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, தொல்பொருள் திணைக்களம், வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்கள் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் காணிகளை பலவந்தமாக சுவீகரிப்பதாக தொடர்ந்தும் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை வலுக்கட்டாயமாக சுவீகரிப்பது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, 1985ல் வனத்துறை உருவாக்கிய வரைபடத்திற்கு அமைய செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்ததாக, தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், 2023ஆம் ஆண்டு மே மாதம் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/182630
-
இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழு கிழக்கிற்கு விஜயம்
Published By: VISHNU 04 MAY, 2024 | 12:11 AM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழு கிழக்கு மாகாணத்துக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது. இந்த விஜயத்தின் போது உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, திருகோணமலையில் முன்னெடுக்கப்படும் இந்திய திட்டங்கள் மற்றும் எண்ணெய் தாங்கி முனையம், விமானப்படை தளம் உள்ளிட்ட முக்கிய இடங்களைச் சென்று பார்வையிட்டுள்ளார். அதற்கமைய இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த எரிசக்தி நிறுவனம்மற்றும் இலங்கை மின்சாரசபை ஆகியவற்றுக்கு இடையே ஒரு கூட்டு முயற்சியாக உருவாக்கப்படும் சம்பூரில் அமைந்துள்ள சூரிய சக்தி ஆலையையும் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பார்வையிட்டார். கடந்த ஆண்டு ஜூலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதுடில்லிக்கு விஜயம் செய்த போது, இந்த திட்டத்திற்கான ஆற்றல் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா திருகோணமலை எண்ணெய் தாங்கிகளையும் பார்வையிட்டார். அங்கு லங்கா ஐ.ஓ.பி.எல்.சி.யின் முதலீடுகள் மூலம் ஈர்க்கக்கூடிய அபிவிருத்தி குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. லூப்ரிகண்ட் கலப்பு ஆலை மூலம் இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதல் கிரீஸ் உற்பத்தி ஆலையையும் உயர்ஸ்தானிகர் பார்வையிட்டார். இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் இந்தியா - இலங்கை எரிசக்தி கூட்டாண்மைக்கு பங்களிக்கும், எண்ணெய் தாங்கி அபிவிருத்தி திட்டங்களின் வளர்ச்சியின் சாத்தியக்கூறுகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. இதே வேளை மூதூர் ஆதார வைத்தியசாலைக்கு லங்கா ஐ.ஓ.சி.பி.எல்.சி. மருத்துவ உபகரணத்தை வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்ட உயர்ஸ்தானிகர், திருகோணமலை எண்ணெய் தாங்கி முனையத்துக்கு அருகில் வசித்து வரும் மக்களுக்கு உணவுப் பொருட் பொதிகளையும் வழங்கி வைத்தார். இதே வேளை இலங்கை மக்கள் தங்கள் சொந்த வீடுகள் என்ற கனவை நிறைவேற்ற உதவும் வகையில் திருகோணமலையில் இந்தியாவினால் செயல்படுத்தப்பட்ட மாதிரி கிராம வீட்டுத் திட்டத்தையும் உயர்ஸ்தானிகர் பார்வையிட்டார். இதன் போது மக்களை மையப்படுத்திய திட்டத்திற்கு பயனாளிகள் நன்றி தெரிவித்தனர். மேலும் திருகோணமலையில் உள்ள விமானப்படை தளத்துக்கு விஜயம் செய்த உயர்ஸ்தானிகர், இலங்கையின் கடல்சார் கண்காணிப்பு திறன்களை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றிய இந்திய கடற்படை டோர்னியர் தொழில்நுட்பக் குழுவுடன் கலந்துரையாடினார். https://www.virakesari.lk/article/182625
-
க.பொ.த சாதரண தரப் பரீட்சைச் செய்திகள்
பரீட்சை அனுமதி அட்டையில் பிரச்சினை! 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இரண்டாவது தடவையாக தோற்றவுள்ள சுமார் 11,000 பரீட்சார்த்திகளுக்கு அவர்கள் விண்ணப்பிக்காத விஞ்ஞானப் பாடத்தை மேலதிக பாடமாக அறிவித்து பரீட்சை அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்த செயற்பாடு பரீட்சை பெறுபேறுகளில் தாக்கம் செலுத்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை அனுமதி அட்டைகளை கணினி மயமாக்கும் செயற்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை அனுமதி அட்டையில் மேலதிக பாடங்களின் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ள போதிலும் அந்த பரீட்சைக்கு தோற்ற வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/300848
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்திய மீனவர்கள் மூவர் விடுதலை! இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த மூன்று இந்திய மீனவர்கள் இன்று (03) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ். மேல் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் மூவரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதத்தின் இரு வேறு தினங்களில் கைது செய்யப்பட்டிருந்த குறித்த மீனவர்கள், 06 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். குறித்த மூவரும் படகோட்டிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பில் இந்திய அரசினால் யாழ். மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் விசைப் படகோட்டிகள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென்பதால், நல்லிணக்க அடிப்படையில் 06 மாத சிறைத்தண்டனையை இரத்து செய்து, யாழ். மேல் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இதற்கிணங்க, இன்று மூன்று இந்திய மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, யாழ். மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையும் வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மூவரையும் விடுதலை செய்யுமாறு ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாகரன் உத்தரவிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300829
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
கலைந்த மும்பையின் ப்ளே ஆஃப் கனவு - வரலாற்றை மாற்றி எழுதிய கொல்கத்தா அணி பட மூலாதாரம்,SPOORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐபிஎல் டி20 தொடரில் அனைத்து அணிகளும் 10 ஆட்டங்களை விளையாடிவிட்ட நிலையில் எந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும், வெளியேறும் என்று தெரியாமல் இருந்து வந்தது. அனைத்து அணிகளுக்குமே வாய்ப்புகள் திறந்திருந்ததால், எந்தப் போட்டியிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், நேற்றைய கொல்கத்தா-மும்பை ஆட்டத்தின் முடிவைத் தொடர்ந்து ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறவுள்ளது. மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 51வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 170 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 ஓவர்களில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மும்பை வான்ஹடே மைதானத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. இதற்கு முன் பல போட்டிகளில் விளையாடியிருந்தாலும், மும்பை அணியின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. ஆனால், தற்போது 12 ஆண்டுக்குப் பின் சொந்த மண்ணில் வைத்து மும்பை அணியை கொல்கத்தா அணி வீழ்த்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது இது 4வது முறை. ஒரே போட்டியில் 20 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. இதற்கு முன் 2018, ஏப். 24 (மும்பை-சன்ரைசர்ஸ்), 2017 ஏப். 23 (கொல்கத்தா-ஆர்சிபி), 2010 ஏப். 5 (டெக்கான்-ராஜஸ்தான்) ஆகிய போட்டிகளில் இரு அணிகளும் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளன. அதற்குப் பிறகு 6 ஆண்டுகள் கழித்து இப்போது இந்த ஆட்டத்தில் கொல்கத்தா, மும்பை அணிகள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருக்கின்றன. கொல்கத்தா அணி 12 ஆண்டுகள் கழித்துப் பெற்ற வெற்றி பட மூலாதாரம்,SPORTZPICS வெற்றிக்குப் பின் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில், “நாங்கள் சரியான நேரத்தில் கதவைத் தட்டியிருக்கிறோம். நாங்கள் தோற்றுவிட்டோம் என தொடக்கத்தில் பேசினார்கள். 12 ஆண்டுகளாக வான்ஹடேவில் கொல்கத்தா வென்றதில்லை. இன்று அந்தப் பெயரை மாற்றியுள்ளோம்," என்றார். தங்களுக்குச் சிறப்பாக உதவியதாகவும் மணிஷ் பாண்டே கிடைத்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்தியதால் நல்ல ஸ்கோரை எட்ட முடிந்ததாகவும் தெரிவித்தார் ஸ்ரேயாஸ் அய்யர். "எந்த ஸ்கோர் கிடைத்தாலும் டிபெண்ட் செய்ய வேண்டும் என வீரர்களிடம் தெரிவித்தேன். சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு அற்புதம். லைன் லென்த்தில் வீசி பேட்டர்களை திணறவிட்டனர். வெங்கடேஷ் பேட்டிங் மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்தார். வலுப்பெற்ற ப்ளே ஆஃப் வாய்ப்பு இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை நன்கு பிரகாசப்படுத்திக் கொண்டது. இதுவரை 10 போட்டிகளில் ஆடிய கொல்கத்தா 7 வெற்றி, 3 தோல்வி என 14 புள்ளிகளுடன் 2வது இடத்தில், நிகர ரன்ரேட்டில் 1.098 என வலுவாக இருக்கிறது. புள்ளிப் பட்டியலில் உள்ள எந்த அணியையும்விட நிகர ரன்ரேட்டில் வலுவாக இருப்பது கொல்கத்தா என்பதால், இன்னும் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றாலே கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிடும். கொல்கத்தா அணிக்கு இனி லக்னெள(மே 5), மும்பை(மே11) குஜராத்(மே13) ராஜஸ்தான்(மே 19) ஆகிய அணிகளுடன் போட்டிகள் உள்ளன. இதில் மும்பை அணியுடன் வரும் 11ஆம் தேதி கொல்கத்தாவில் இரண்டாவது முறையாக மோதுகிறது. இனி வரும் ஆட்டங்களில் ராஜஸ்தான், லக்னெள அணிகளுக்கு எதிரான ஆட்டங்கள் கொல்கத்தாவுக்கு சவாலாக இருக்கக்கூடும். கலைந்த மும்பையின் ப்ளே ஆஃப் கனவு பட மூலாதாரம்,SPORTZPICS மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொருத்தவரை இந்த சீசனில் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்புக் கதவு அடைக்கப்பட்டுவிட்டது. தற்போதைய கணக்குப்படி, ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல வேண்டுமானால் டாப்-3 அணிகளைத் தவிர்த்து மற்ற அணிகள் தாங்களே முன்வந்து தோற்க வேண்டும், இவையெல்லாம் நடந்தால் மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும். ஆனால், நடைமுறையில் அது சாத்தியமில்லை. "மோசமான கேப்டன்சி, அணிக்குள் குழுவாகப் பிரிந்திருத்தல், மோசமான வீரர்கள் தேர்வு, பலமான பந்துவீச்சின்மை போன்றவைதான் மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்குக் காரணம்," என்று விமர்சிக்கப்படுகிறது. இதற்கு முன் நடந்த பல சீசன்களில் 5 போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோற்றாலும், மீண்டு வந்து ப்ளே ஆஃப் சுற்றுக்குள் மும்பை சென்றுள்ளது. ரோஹித் சர்மா கேப்டன்சியில் இது பலமுறை நடந்துள்ளது. ஆனால், இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணி "அப்படி மீண்டெழ வேண்டுமென்ற உணர்வற்று இருந்ததே தோல்விக்கான பிரதான காரணம்" என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் ஆடி 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது. அடுத்து வரும் 3 ஆட்டங்களில் வென்றாலும் 12 புள்ளிகள் மட்டுமே மும்பையால் பெற முடியும். ஆனால், ப்ளே ஆஃப் சுற்றில் 4வது இடத்துக்கு இந்த முறை 16 புள்ளிகள் வரை போட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மும்பையின் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிட்டது. ஆட்டநாயகன் வெங்கடேஷ் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணி 169 ரன்கள் எனும் கௌரவமான ஸ்கோரை எட்டுவதற்கும், பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்வதற்கும் முக்கியக் காரணமாக முதுகெலும்பாக இருந்தவர் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர். கொல்கத்தா 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, மணிஷ் பாண்டேவுடன் சேர்ந்து 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெங்கடேஷ் அணியை மீட்டெடுத்தார். இறுதியில் 52 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த வெங்கடேஷ் அய்யருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. கொல்கத்தா 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை 5 ஓவர்களில் இழந்தாலும், 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளுக்கு 83 ரன்கள் என ரன்ரேட்டை குறையவிடாமல் வெங்கடேஷ், மணிஷ் பாண்டே பார்த்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. குறிப்பாக வெங்கடேஷ்-மணிஷ் பாண்டே ஆடிய ஆட்டம்தான் ஆட்டத்தின் உயிராக இருந்தது. இருவரும் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை குறையாமல் கொண்டு சென்றனர். மணிஷ் பாண்டே 31 பந்துகளில் 42 ரன்களில் 17வது ஓவரில் ஆட்டமிழந்தாலும், வெங்கடேஷ் 20வது ஓவர் வரை களத்தில் இருந்து ஆட்டமிழந்தார். டிபெண்ட் செய்த பந்துவீச்சாளர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS அதேபோல ஒரு கட்டத்தில் ஆட்டம் கொல்கத்தா அணியின் கையைவிட்டு நழுவுவதுபோல் இருந்தது. களத்தில் சூர்யகுமார், டிம் டேவி என இரு ஆபத்தான பேட்டர்கள் இருந்தபோது மும்பை வெற்றிக்கு 28 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டம் எந்த நேரத்திலும் மும்பை பக்கம் திரும்பலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மிட்ஷெல் ஸ்டார்க், ரஸல் வீசிய ஓவர்கள் ஆட்டத்துக்குப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தின. குறிப்பாக மிட்ஷெல் ஸ்டார்க் 3.5 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஐபிஎல் தொடரில் தனது சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார். வருண், நரைன் இருவரும் மும்பை அணியின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்து ரன்ரேட்டை சுருக்கினர். இருவரும் 8 ஓவர்கள் வீசி 44 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆண்ட்ரே ரஸல் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். 5 பந்துவீச்சாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு பேட்டர்கள் பலம் அதிகம் இருக்கும் மும்பை அணியை மும்பை மைதானத்தில் கொல்கத்தா சுருட்டியது பாராட்டுக்குரியது. பும்ரா சரியாக பயன்படுத்தப்படவில்லையா? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியின் 5 விக்கெட்டுகளை ஆட்டத்தின் முதல் 37 பந்துகளிலேயே எடுத்தும்கூட மும்பை அணி தோல்வியடைந்துள்ளது. ஆறாவது விக்கெட்டுக்கு வெங்கடேஷ்-மணிஷ் பாண்டேவை 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கவிட்டதுதான் மும்பை அணி செய்த மிகப்பெரிய தவறாகப் பார்க்கப்படுகிறது. பும்ரா ஏற்கெனவே ஒரு ஓவரை விளையாட முடியாத அளவுக்கு கட்டுக்கோப்பாக வீசி 2 ரன்கள் மட்டுமே அளித்திருந்தார். துல்லியமாகப் பந்துவீசும் பும்ராவை தொடர்ந்து பந்துவீச வைத்து வெங்கடேஷ்-பாண்டே பார்ட்னர்ஷிப்பை உடைத்து எளிதாக ஆட்டத்தை முடித்திருக்கலாம். வெங்கடேஷ்-பாண்டே செட்டிலான பிறகு நடுப்பகுதி ஓவர்களை வீச பும்ரா அழைக்கப்பட்டபோது, அவரின் ஓவரில் பாண்டே ஒரு பவுண்டரி, சிக்ஸரை விளாசினார். ஆனால் டெத் ஓவருக்கு பும்ரா தேவை என்று நினைத்து பும்ராவுக்கு கடைசி ஓவர்களை ஹர்திக் பாண்டியா வழங்கினார். 18வது ஓவரில் 2 ரன்களை மட்டும் வழங்கிய பும்ரா, கடைசி ஓவரில் வெங்கடேஷ் விக்கெட்டையும் எடுத்துக் கொடுத்தார். இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் பும்ராவை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் ஹர்திக் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. 'தொடர்ந்து போராடுவோம்' பட மூலாதாரம்,SPORTZPICS மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல முடியாது என்று தெரிந்தபின், பேட்டியளித்த ஹர்திக் பாண்டியா கூறுகையில், “நாங்கள் நல்ல பார்ட்னர்ஷிப்பை பேட்டிங்கில் அமைக்கவில்லை, தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்தது தோல்விக்கு முக்கியக் காரணம். ஏராளமான கேள்விகள் இருக்கின்றன, அதற்கு பதிலளிக்க அவகாசம் தேவை என்றார். "இப்போது அதுபற்றி கூற முடியாது. பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு விக்கெட்டை நன்கு பயன்படுத்தினர். நான் தவறு செய்யாமல் இருந்திருந்தால், விக்கெட் நல்ல விக்கெட்டாக இருந்திருக்கும். இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவும் இருந்தது. இந்த ஆட்டத்தில் என்ன தவறுகள் செய்தோம் என்று ஆலோசிப்போம், இன்னும் சிறப்பாக வரும் போட்டிகளில் எவ்வாறு விளையாடுவது எனச் சிந்திப்போம். தொடர்ந்து போராட வேண்டும், அதைத்தான் எனக்கு நானே கூறிக்கொள்வது. வாழ்க்கை என்பது சவாலானது. சவால்களை எதிர்கொண்டால்தான் சுவரஸ்யமாக இருக்கும்,” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,SPORTZPICS மும்பையின் தோல்விக்கு காரணம் பேட்டர்களா? சூர்யகுமார் யாதவ்(56), டிம்டேவிட் (24) ரன்களை தவிர்த்துப் பார்த்தால் 80 ரன்கள்கூட தேறாது. எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. குறிப்பாக கேப்டன் ஹர்திக் பாண்டியா இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 198 ரன்கள் மட்டுமே சேர்த்து 19.18 ரன்கள் சராசரி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை டி20 உலகக் கோப்பையில் விளையாட பிசிசிஐ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாததும் பேசுபொருளாகியுள்ளது. பவர்ப்ளே ஓவருக்குள் மும்பை அணி இஷான் கிஷன்(13), நமன்திர்(11), ரோஹித் சர்மா(11) விக்கெட்டுகளை இழந்தது. நடுவரிசையில் திலக் வர்மா(4), நேஹல் வதேரா(6), ஹர்திக் பாண்டியா(1) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மும்பை வான்ஹடே மைதானம் குறித்து நன்கு தெரிந்தும், சொந்த மைதானத்தில்கூட 170 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் மும்பை அணி தோற்றதற்கு தொடக்க வரிசை பேட்டர்களும், நடுவரிசை பேட்டர்களும் செயல்படாமல் போனதே முக்கியக் காரணம். https://www.bbc.com/tamil/articles/cjr7zl7lqp4o
-
கானா: 150 ஆண்டுகளுக்கு முன் கொள்ளையடித்த பொக்கிஷங்களை கடனாக கொடுத்த பிரிட்டன் - கொண்டாடும் மக்கள்
பட மூலாதாரம்,BRITISH MUSEUM படக்குறிப்பு,குமாசியில் இப்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களில், முடிசூட்டு விழாக்களில் மன்றத்தினர் அணியும் ஒரு சடங்கு தொப்பியும் உள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், ஃபேவர் நுனூ மற்றும் தாமஸ் நாடி பதவி, பிபிசி நியூஸ், குமாசி 3 மே 2024 பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கானா நாட்டிலிருந்து கொள்ளையடித்த கலைப் பொருட்கள், கானா மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அசான்டே (Asante) சாம்ராஜ்யத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கலைப் பொருட்கள் ஒருவழியாக கானாவுக்கு மீண்டும் வந்தடைந்துள்ளன. பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் அவற்றை எடுத்துச் சென்ற 150 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவை கானாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அசான்டே பிராந்தியத்தின் தலைநகரான குமாசியில் உள்ள மன்ஹியா அரண்மனை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 32 கலைப் பொருட்களைக் காண கானா மக்கள் அங்கு பெருங்கூட்டமாகத் திரண்டனர். "இது அசான்டேவுக்கு ஒரு முக்கியமான நாள். கறுப்பின ஆப்பிரிக்க கண்டத்துக்கும் முக்கியமான ஒரு நாள். நாங்கள் ஆத்மார்த்தமாக மதிக்கும் அற்புதமான ஒன்று மீண்டும் எங்களிடம் வந்துவிட்டது," என அசான்டே அரசர் இரண்டாம் ஓட்டம்போ ஓசி டுட்டு கூறினார். இந்தக் கலைப்பொருட்கள் கானாவிற்கு மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் கடனாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தக் கடனை நீட்டிக்க வாய்ப்புள்ளது. இந்த ஒப்பந்தம் இரண்டு பிரிட்டிஷ் அருங்காட்சியகங்களுக்கும் அசான்டே மன்னருக்கும் இடையே கையெழுத்திடப்படுள்ளது. (விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகம் மற்றும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம்) கானா அரசாங்கத்துக்கு இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தம் இல்லை. அசான்டே அரசர், அல்லது அசான்டேஹேன் (Asantehene) என்னும் பதவி பாரம்பரிய அதிகாரத்தின் ஓர் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. அவரிடத்தில் அவரது முன்னோடிகளின் ஆன்ம பலம் கடத்தப்பட்டிருக்கும் என்றும் மக்களால் நம்பப்படுகிறது. ஆனால் அவரது ராஜ்ஜியம் தற்போது கானாவின் நவீன ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. ஓய்வுபெற்ற காவல்துறை ஆணையரும், பெருமைக்குரிய அசான்டேவாசியுமான ஹென்றி அமங்க்வாடியா, ஆரவாரமான பறை ஓசைக்கு மத்தியில், “எங்கள் கெளரவம் மீட்டெடுக்கப்பட்டது,” என்று பிபிசியிடம் மகிழ்ச்சி பொங்கப் பேசினார். 'கறை படிந்த வரலாறு' பட மூலாதாரம்,BRITISH MUSEUM படக்குறிப்பு,தங்க முலாம் பூசிய வீணை (மேல் இடது), தங்க அணிகலன் (வலது) மற்றும் அரசரின் வாள் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தங்க முலாம் பூசிய வீணை (மேல் இடது) வழங்கப்பட்டது. ஆனால் தங்க அணிகலன் (வலது) மற்றும் அரசரின் வாள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட கலைப் பொருட்கள். விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகம் 17 கலைப் பொருட்களை கானாவுக்கு கடனாக வழங்கியுள்ளது, மீதமுள்ள 15 கலைப் பொருட்கள் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருந்து பெறப்பட்டவை. கானா தேசத்திற்குள் கலைப் பொருட்கள் மீண்டும் வந்திருக்கும் அதே நேரம் அசான்டேஹேனின் வெள்ளி விழா கொண்டாட்டமும் நடக்கிறது. "கானாவின் `அரச குடும்ப நகைகள்' என விவரிக்கப்படும் சில கலைப் பொருட்கள், 19ஆம் நூற்றாண்டின் ஆங்கிலோ-அசான்டே போர்களின்போது கொள்ளையடிக்கப்பட்டன, இதில் 1874ஆம் ஆண்டில் ஏற்பட்ட சர்கெண்டி போரும் அடங்கும். மேலும் தங்க வீணை (சாங்குவோ) போன்ற பிற கலைப் பொருட்கள் 1817இல் ஒரு பிரிட்டிஷ் தூதருக்கு விருப்பத்துடன் வழங்கப்பட்டது. பட மூலாதாரம்,AFP "இந்தக் கலைப் பொருட்களை காட்சிப்படுத்தயிருப்பது மகிழ்ச்சியான தருணம் என்றபோதிலும், இதைச் சுற்றியுள்ள வரலாறு மிகவும் வேதனையான ஒன்று என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஏகாதிபத்திய மோதல் மற்றும் காலனித்துவம் கொடுத்த காயங்களின் வடுக்களைச் சுமந்திருக்கும் கறை படிந்த வரலாறு அது" என்று இந்த விழாவிற்காக குமாசி வந்திருந்த விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகத்தின் இயக்குநர் முனைவர் டிரிஸ்டம் ஹன்ட் கூறினார். கானாவுக்கு அனுப்பப்பட்டுள்ள கலைப் பொருட்களில் அரச வாள், தங்க அமைதிக் கோல் மற்றும் அரசரின் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தப் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் அணியும் தங்கப் பதக்கங்கள் ஆகியவை அடங்கும். "இந்தப் பொக்கிஷங்கள் ஒரு பெரிய ராஜ்ஜியத்தின் வெற்றி மற்றும் போராட்டங்களுக்கு சாட்சியாக உள்ளன. மேலும் அவை குமாசிக்கு கொண்டு வரப்பட்டது கலாசார பரிமாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இது நல்லிணக்கத்தின் சான்று," என்று டாக்டர் ஹன்ட் கூறினார். தீராத சர்ச்சை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாரம்பரிய உடையில் கானா பெண்கள் கானா கொண்டுவரப்பட்டுள்ள கலைப் பொருட்களில் "இம்போம்போம்சுவோ (mpompomsuo)" என்று அழைக்கப்படும் வாள், அசான்டே மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது முக்கியமான உயர்மட்டத் தலைவர்கள், அரசருக்குப் பதவிப் பிரமாணம் செய்யும்போது பயன்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ வாள். அரச வரலாற்றாசிரியர் ஓசெய் - போன்சு சஃபோ-கண்டங்கா பிபிசியிடம் பேசுகையில், அசான்டேவில் இருந்து கலைப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட போது, "எங்கள் இதயத்தின் ஒரு பகுதி, எங்கள் உணர்வு, எங்கள் முழு இருப்பு ஆகியவற்றை இழந்ததாக உணர்ந்தோம்,” என்றார். கலைப் பொருட்கள் மீண்டும் ராஜ்ஜியத்திற்குள் வந்தது எவ்வளவு முக்கியமானதோ அதே அளவு சர்ச்சைக்குரியதும்கூட. பிரிட்டன் சட்டத்தின்கீழ், விக்டோரியா & ஆல்பர்ட், பிரிட்டிஷ் அருங்காட்சியகம் போன்ற தேசிய அருங்காட்சியகங்கள் தங்களுடைய சேகரிப்பில் உள்ள அபகரிக்கப்பட்ட பொருட்களை நிரந்தரமாகத் திருப்பிக் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய கடன் ஒப்பந்தங்கள், கலைப் பொருட்கள் அவற்றின் சொந்த நாடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கும் ஒரு வழியாகக் கருதப்படுகிறது. பிரச்னைக்குரிய கலைப் பொருட்கள் மீது உரிமை கோரும் சில நாடுகள், இதுபோன்ற கடன்கள் பிரிட்டனின் உரிமையை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கப் பயன்படுத்தப்படலாம் என்று அஞ்சுகின்றனர். கானா மக்களில் பலர் இந்தக் கலைப் பொருட்கள் நிரந்தரமாக நாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இருப்பினும், இந்தப் புதிய கலைப் பொருட்களைக் கடனாக வழங்கும் செயல்பாடு, பிரிட்டிஷ் சட்டக் கட்டுப்பாடுகளைக் கடக்க ஒரு வழியாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற வரலாற்று கலைப் பொருட்கள் மீதான உரிமையை மீட்டெடுக்கும் வகையில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களைத் திருப்பித் தருமாறு ஆப்பிரிக்க நாடுகள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளன. 'இருண்ட காலனித்துவ வரலாற்றை' கையாள்வதில் இது ஒரு படி என்று ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cp4gnpnv2gpo
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
ஐசிசி ரி20 உலகக் கிண்ண மத்தியஸ்தர் குழாத்தில் இலங்கையின் மடுகல்லே, தர்மசேன Published By: VISHNU 03 MAY, 2024 | 06:40 PM (நெவில் அன்தனி) ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு ஐசிசியினால் நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர்கள் குழாத்தில் இலங்கையின் ரஞ்சன் மடுகல்லே, குமார் தர்மசேன ஆகியோர் அடங்குகின்றனர். ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மத்தியஸ்தம் வகிக்க 20 கள மத்தியஸ்தர்களும் 6 போட்டி தீர்ப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். வருடாந்த ஐசிசி விருதுகளில் 2023க்கான வருடத்தின் அதிசிறந்த மத்தியஸ்தருக்கான டேவிட் ஷெப்பர்ட் விருதை வென்ற ரிச்சர்ட் இலிங்வேத், இலங்கையின் குமார் தர்மசேன, நியூஸிலாந்தின் கிறிஸ் கஃபானி, அவுஸ்திரேலியாவின் போல் ரைஃபல் ஆகியோரும் மத்தியஸ்தர்கள் குழாத்தில் இடம்பெறுகின்றனர். இவர்கள் நால்வரும் அவுஸ்திரேலியாவில் 2022இல் நடைபெற்ற ஐசிசி ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கள மற்றும் 3ஆவது, தொலைக்காட்சி மத்தியஸ்தர்களாக கடமையாற்றி இருந்தனர். இதேவேளை ஐசிசி ரி20 உலகக் கிண்ண போட்டிக்கு நியமிக்கப்பட்டுள்ள 6 தீர்ப்பாளர்களில் இலங்கையின் ரஞ்சன் மடுகல்லேயும் ஒருவராவார். அவர், இருபாலாருக்குமான சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 780 போட்டிகளில் தீர்ப்பாளராக கடமையாற்றியுள்ளார். 2022 ரி20 உலகக் கிண்ணப் போட்டியிலும் தீர்ப்பாளராக ரஞ்சன் மடுகல்லே கடமையாற்றி இருந்தார். ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்தில் மத்தியஸ்தர்களாக கிறிஸ் ப்றவுண், குமார் தர்மசேன, கிறிஸ் கஃபானி, மைக்கல் கோ, ஏட்றியன் ஹோல்ட்ஸ்டிக், ரிச்சர்ட் இலிங்வேர்த், அலாஹுடின் பலேக்கர். ரிச்சர்ட் கெட்ல்பறோ, ஜெயராமன் மதனகோபால், நிட்டின் மேனன், சாம் நோகாஜ்ஸ்கி, அஷான் ராஸா, ரஷித் ராஸா, போல் ரைஃபல், லெங்டன் ரூசியர், ஷஹித் சய்க்காத், ரொட்னி டக்கர், அலெக்ஸ் வாஃப், ஜோயல் வில்சன், அசிப் யாக்கூப் ஆகியோர் கடமையாற்றவுள்ளனர். தீர்ப்பாளர்களாக டேவிட் பூன், ஜெஃப் குறோ, ரஞ்சன் மடுகல்லே, அண்டி பைக்ரொவ்ட், ரிச்சி ரிச்சர்ட்சன், ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் கடமையாற்றவுள்ளனர். https://www.virakesari.lk/article/182615
-
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு: வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது பரிதாபம்
சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள், உடனடியாக பக்கத்து பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நடுவழியில் நிறுத்தினர். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய உறவினர்கள், கர்ப்பிணி தவறி விழுந்த இடம் நோக்கி ஓடிச் சென்று பார்த்தனர். ஆனால் அங்கு கர்ப்பிணி கிடைக்கவில்லை. பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு, விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. இரவு 8.10 மணிக்கு வர வேண்டிய ரெயில், 20 நிமிடம் தாமதமாக இரவு 8.30 மணிக்கு வந்தடைந்தது. ரெயிலில் இருந்து இறங்கிய கர்ப்பிணியின் உறவினர்கள் கதறி அழுதனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி கஸ்தூரி என்ற 7 மாத கர்ப்பிணி பெண் தவறி விழுந்து விட்டதாகவும், அவரை உடனடியாக மீட்டு தருமாறும் கூறினர். இதையடுத்து பொலிஸார் விரைந்து சென்று கஸ்தூரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உளுந்தூர்பேட்டையில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் கஸ்தூரி இறந்து கிடந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். தென்காசி மாவட்டம் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 25). இவர், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சென்னை பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த பி.எஸ்சி. நர்சிங் பட்டதாரியான கஸ்தூரி(22) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனிடையே மேலநீழிதநல்லூரில் நடைபெறும் கோவில் திருவிழாவில் பங்கேற்க செல்வதெனவும், அங்கேயே நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கஸ்தூரிக்கு வளைகாப்பு நடத்தவும் உறவினர்கள் திட்டமிட்டனர். அதன்படி கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு செல்ல சுரேஷ்குமார் தனது மனைவி மற்றும் உறவினர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அந்த ரெயிலில் எஸ்-9 பெட்டியில் அனைவரும் பயணம் செய்தனர். இந்த ரெயில் இரவு 8 மணி அளவில் உளுந்தூர்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, கஸ்தூரிக்கு வாந்திக்கான அறிகுறி ஏற்பட்டது. உடனே அவர், தனது உறவினர்கள் உதவியுடன் எஸ்-9 பெட்டியில் உள்ள கை கழுவும் இடத்திற்கு வந்தார். அந்த இடத்தில் வாந்தி எடுத்தபடி கஸ்தூரி நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம் தொடர்பாகவும், அபாய சங்கிலி செயல்படாத புகார் குறித்து விசாரிக்கவும் தெற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அபாய சங்கிலியை இழுத்தும் நிற்காத ரெயில் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள எஸ்-9 பெட்டியில்தான் கஸ்தூரி தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் பயணம் செய்தார். கை கழுவும் இடத்தில் இருந்து வாந்தி எடுத்துக்கொண்டிருந்தபோது கஸ்தூரி தவறி கீழே விழுந்தார். உடனே உறவினர்கள், அந்த பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். ஆனால் ரெயில் நிற்கவில்லை. அப்போதுதான், அந்த அபாய சங்கிலி, வேலை செய்யாமல் செயல் இழந்து இருந்தது தெரிய வந்தது. உடனே உறவினர்கள் பக்கத்தில் உள்ள எஸ்-8 பெட்டிக்கு ஓடிச் சென்று, அங்குள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். அதன்பிறகே ரெயில் நின்றுள்ளது. அதற்குள் அந்த ரெயில் கர்ப்பிணி விழுந்த இடத்தில் இருந்து 8 கிலோ மீற்றர் தூரத்திற்கு சென்று விட்டது. உடனடியாக ரெயில் நின்றிருந்தால் கர்ப்பிணியை காப்பாற்றி இருக்கலாம் என்றும், வரும் காலங்களில் அனைத்து பெட்டிகளிலும் அபாய சங்கலி செயல்படுவதை உறுதி படுத்த வேண்டும் என்றும் உறவினர்கள் கூறினர். https://thinakkural.lk/article/300787
-
2024 உலக பத்திரிகை சுதந்திர விருது பாலஸ்தீன பத்திரிகையாளர்களிற்கு -யுனெஸ்கோ
03 MAY, 2024 | 05:18 PM காசா மோதல் குறித்த செய்திகளை செய்தியறிக்கையிடுவதில் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் வெளிப்படுத்திவரும் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பிற்காக 2024 உலக பத்திரிகை சுதந்திர விருதிற்கு பாலஸ்தீன பத்திரிகையாளர்களை யுனெஸ்கோ தெரிவு செய்துள்ளது. பெரும் ஆபத்து காணப்படுகின்ற போதிலும்தொடர்ந்து செய்தியறிக்கையிடலில் ஈடுபட்டுள்ள பாலஸ்தீன பத்திரிகையாளர்களிற்கு ஆதரைவையும் அங்கீகாரத்தையும்; வழங்குவதற்காக இந்த விருது அவர்களிற்கு வழங்கப்படுகின்றது என விருது தெரிவுக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். கடினமான ஆபத்தான சூழ்நிலைகளின் மத்தியில் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் வெளிப்படுத்தும் துணிவை யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஆட்ரிஅசோலே பாராடடியுள்ளார். ஒக்டோபரில் மோதல் ஆரம்பித்த பின்னர் 97 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/182601
-
ராஜபக்ஷர்களை முன்னிலைப்படுத்தியுள்ள பொதுஜன பெரமுனவுக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது - பாட்டலி சம்பிக்க ரணவக்க
Published By: VISHNU 03 MAY, 2024 | 07:27 PM (இராஜதுரை ஹஷான்) பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ராஜபக்ஷர்களை முன்னிலைப்படுத்தியுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு அரசியல் எதிர்காலம் என்பதொன்று கிடையாது. இடம்பெறவுள்ள தேர்தல்களில் பொதுஜன பெரமுனவுக்கும், ராஜபக்ஷர்களுக்கும் மக்கள் தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது, மே தின கூட்டத்தில் எமது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினரும், ராஜபக்ஷர்களும் குறிப்பிடுவது நகைப்புக்குரியது. 2022 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மக்கள் போராட்டம் பலம் பெற்றதையும், ராஜபக்ஷர்கள் பதவிகளை விட்டு தப்பிச் சென்றதையும் மறந்து விட்டார்கள். பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ராஜபக்ஷர்களை முன்னிலைப்படுத்தியுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு அரசியல் எதிர்காலம் என்பதொன்று கிடையாது.இடம்பெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களில் ராஜபக்ஷர்களுக்கும்,பொதுஜன பெரமுனவுக்கும் நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தீர்மானமிக்கது. பொதுஜன பெரமுனவின் சார்பில் தேர்தலில் போட்டியிட எவருமில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முன்னிலைப்படுத்திக் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் செல்வாக்கு பெறலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு ராஜபக்ஷர்கள் செயற்படுகிறார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது நாட்டு மக்களுக்கு நன்மதிப்பு உள்ளது. ராஜபக்ஷர்களுடன் கூட்டணியமைத்து மக்களின் வெறுப்பை ஜனாதிபதி பெற்றுக் கொள்ள கூடாது. ராஜபக்ஷர்களிடமிருந்து விலகி செயற்படுவது ஜனாதிபதியின் அரசியலுக்கு சிறந்ததாக அமையும் என்றார். https://www.virakesari.lk/article/182617
-
இன்றைய வானிலை
நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகூடிய வெப்பநிலை! நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகூடிய வெப்பநிலை பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அதிகூடிய வெப்பநிலை பதிவாகும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அதிக வெப்பம் நிலவும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அடிக்கடி நிழலில் ஓய்வு எடுப்பது சிறந்ததாகும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அடிக்கடி நீராகாரங்களைப் பருகுவதுடன், வீட்டில் உள்ள நாட்பட்ட நோயாளர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/300794
-
தொழில்நுட்பம் கற்று சொந்தக்காலில் நிற்க மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் - சுவாமி விபுலானந்தர் ஜனன தின நிகழ்வில் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தாஜி
03 MAY, 2024 | 05:39 PM வெளிநாட்டில் உள்ளவர்களை நம்பியிருந்தால் எமது நாடு வளம் பெறாது. தொழில்நுட்பம் சார்ந்து உழைக்க கற்றுக்கொண்டு சொந்தக்காலில் நிற்க வேண்டும். அதற்காக மாணவர்கள் பயிற்சியளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை சுவாமி விபுலானந்தர் வலியுறுத்திவந்துள்ளதாக மட்டக்களப்பு இராம கிருஷ்ணமிஷனின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தாஜி மஹராஜ் தெரிவித்தார். உலகின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக் கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 132வது ஜனன தினம் மட்டக்களப்பில் இன்று (03) அனுஷ்டிக்கப்பட்டது. சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா சபையினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதியில் நடைபெற்றது. மட்டக்களப்பு இராம கிருஷ்ணமிஷனின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா ஜி மஹராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் தலைவர் கே.பாஸ்கரன் மற்றும் சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், விவேகானந்தா மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதன்போது சமாதியில் சுவாமிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று, மலர்மாலை அணிவிக்கப்பட்டு வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிகழ்வின்போது விசேடமாக சுவாமி விபுலானந்தரின் "வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ..." பாடல் பாடப்பட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த ஆண்டு சுவாமி விபுலானந்தரின் துறவறத்தின் நூற்றாண்டு நிகழ்வாக அனுஷ்டிக்கப்படவுள்ளதுடன், அவர் எழுதிய நூல்களை மீண்டும் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு இராம கிருஷ்ணமிஷனின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா ஜி மஹராஜ் இதன்போது தெரிவித்தார். https://www.virakesari.lk/article/182604
-
தமிழுக்கு அகராதியை கொடுத்தது யாழ்ப்பாணம் - உலக சிலம்பத் தலைவர் முனைவர் சுதாகரன் யாழில் பெருமிதம்
03 MAY, 2024 | 05:36 PM உலகில் தமிழுக்கு அகராதியை கொடுத்த இடம் யாழ்ப்பாணம் என்பதில் தான் பெருமை அடைவதாக உலக சிலம்பம் சங்கத்தின் தலைவர் முனைவர் சுதாகரன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை (03) யாழ்ப்பாணம் ரில்கோ தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச சிலம்பம் போட்டியை முதல்முறையாக 5 நாடுகளின் பங்கு பெற்றதுடன் யாழ்ப்பாணத்தில் நடாத்தவுள்ளமையட்டு பெருமை அடைகிறேன். யாழ்ப்பாணம் தமிழக்கு அகராதி கொடுத்த இடம் இங்கு பேசுகின்ற தமிழ் தூய்மையான செழுமையான தமிழ் அதையிட்டு நான் பெருமை அடைகிறேன். அவ்வாறான ஒரு இடத்தில் உலக சிலம்பம் சங்கத்தின் உறுப்பினர்களும் வெளிநாட்டு மாணவர்களும் இணைந்து எமது பாரம்பரிய கலைப் போட்டியை நிகழ்த்தவுள்ளோம். இலங்கை சிவலீமன் சங்கத்துடன் இணைந்து உலக சிலம்பம் சங்கம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் சர்வதேச சிலம்பம் போட்டிகளை நாளைய தினம் சனிக்கிழமை நடாத்தப்பட உள்ளது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் சிலம்பம் போட்டிகள் மாலை வரை இடம்பெற்று பரிசில் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெறும். ஆகவே குறித்த போட்டியில் பங்கு பெற்றும் மாணவர்களுக்கு சர்வதேச தரச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/182599
-
இலவசக்கல்வி, இலவச சுகாதாரத்தை விற்க அரசாங்கம் சதி செய்வதாகத் தெரிவித்து மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டம்
Published By: VISHNU 03 MAY, 2024 | 07:37 PM மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தினால் வெள்ளிக்கிழமை (3) கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஊடாக இலவசக்கல்வி மற்றும் இலவச சுகாதாரம் என்பவற்றை விற்பதற்கு அரசாங்கம் சதி செய்வதாக தெரிவித்து மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு-ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/182618
-
ஒரு நுட்பமான வார்த்தை விளையாட்டு
அண்ணை யாரைப் பிராண்டி விட்டு!! முட்டைக் கோப்பியை குடிக்க?!
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் அதிரும் அமெரிக்க பல்கலைகழகங்கள் - பல்கலைகழங்களிற்கு வெளியே முகாமிட்டு மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
கலிபோர்னியா பல்கலைகழகத்திற்குள் பொலிஸார் - பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்ற முயற்சி - பெரும் பதற்ற நிலை Published By: RAJEEBAN 02 MAY, 2024 | 03:53 PM அமெரிக்காவின் கலிபோர்னியாபல்கலைகழக வளாகத்திற்கு கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் பாலஸ்தீன மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரித்துள்ள பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி செல்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சில பகுதிகளில் மாணவர்களிற்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன. எங்களின் பல்கலைகழகத்திலிருந்து வெளியேறு என மாணவர்கள் கோசம் எழுப்பிவருகின்றனர். நூற்றுக்கணக்கான பொலிஸார் உள்ளே நுழைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன. https://www.virakesari.lk/article/182495
-
உலக பத்திரிகை சுதந்திர தினம்
உலக பத்திரிகை சுதந்திர தினம்: அச்சுறுத்தல்களால் சொந்த நாடுகளைவிட்டு வெளியேறிய 310 பிபிசி செய்தியாளர்கள் கூறுவது என்ன? படக்குறிப்பு,ஷாஜியா ஹயா செய்தியாளராக ஆப்கானிஸ்தான் முழுவதும் பயணித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்டீபனி ஹெகார்டி பதவி, பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் நாடுகளுக்கு வெளியே இருந்து செயல்படும் பிபிசி உலக சேவை பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட இருமடங்காகி 310 ஆக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புள்ளிவிவரங்கள் உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல் முறையாக வெளியிடப்பட்டது. இந்த எண்ணிக்கை ரஷ்யா, ஆப்கானிஸ்தான் மற்றும் எத்தியோப்பியாவில் நீடிக்கும் அடக்குமுறைகளை பிரதிபலிக்கின்றன. இரான் உட்பட பிற நாடுகளை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். பலர் சிறை தண்டனை, மரண அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களை நேரடியாகவும், இணையம் வாயிலாகவும் எதிர்கொள்கின்றனர். பிபிசி உலக சேவையின் இயக்குனர் லிலியன் லாண்டோர் கூறுகையில், "அவர்கள் செய்தியாளராக பணியைத் தொடர ஒரே வழி, தங்கள் நாடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்பதே. நாட்டைவிட்டு வெளியேறிய ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது பத்திரிக்கை சுதந்திரம் பற்றிய கவலையை அதிகரிக்கிறது." என்றார். ஆகஸ்ட் 2021 இல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியபோது, பிபிசி அதன் பெரும்பாலான பணியாளர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டியிருந்தது. அதன்பிறகு பெண் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை, அதே சமயம் ஆண் ஊழியர்களும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டனர். மியான்மர் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளிலும் செய்தியாளர்கள் மீது அழுத்தம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களால் சுதந்திரமாக செய்தி சேகரிக்கவோ பதிவிடவோ முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நூற்றுக்கணக்கான பிபிசி செய்தியாளர்கள் தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேறி பணியாற்றி வருகின்றனர். "நான் மிகவும் கவனமாக இருக்கிறேன்” என்கிறார் பிபிசி பாரசீக செய்தியாளர் ஜியார் கோல். அவர் செய்தி சேகரிக்க எங்கு சென்றாலும், எந்த அறைக்குள் நுழைந்தாலும், முதலில் தப்பிக்கும் வழி உள்ளதா என்பதையே தேடுகிறார். "எனது வீட்டில் நிறைய பாதுகாப்பு கேமராக்கள் உள்ளன, என் மகளின் பள்ளியை மாற்றுவது புத்திசாலித்தனமாக இருக்கும் என்று நான் எச்சரிக்கப்பட்டேன்" என்கிறார். 2007 இல் இருந்து ஜியார் இரானுக்குச் செல்லவில்லை. அவரது தாயார் இறந்த போது கூட, இறுதிச் சடங்கிற்கு செல்ல முடியவில்லை. ஒரு கட்டத்தில் தாயின் கல்லறையைப் பார்க்க எல்லை அருகே பதுங்கி இருந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி புற்றுநோயால் இறந்ததில் இருந்து ஜியார் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார். "எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், என் மகள் என்ன ஆவாள் என்பது மட்டும் தான் எப்போதும் என் மனதில் இருக்கும் ஒன்று" என்று அவர் கூறுகிறார். "இரானிய ஆட்சி அபாரமாக வளர்ந்துள்ளது. அவர்கள் கடுமையான தடைகளை எதிர்கொள்கின்றனர். இரான் தனிமைப்படுத்தப் பட்டிருப்பதால் சர்வதேச அரங்கில் இரான் பற்றி என்ன நினைக்கிறது என்பதை பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை." படக்குறிப்பு,நினா நசரோவா தனது கணவர் மற்றும் 16 மாத குழந்தையுடன் 2022 இல் ரஷ்யாவை விட்டு வெளியேறினார் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழுவைச் சேர்ந்த ஜோடி கின்ஸ்பர்க் கூறுகையில், "கடந்த மூன்று ஆண்டுகளில் நாடுகளை விட்டு வெளியேறும் பத்திரிகையாளர்களுக்கு நாங்கள் நிதி மற்றும் சட்டப்பூர்வ ஆதரவை வழங்குவது 225% அதிகரித்துள்ளது” என்றார். மேலும் பேசிய அவர் "சிறையில் உள்ள செய்தியாளர்களின் எண்ணிக்கையை ஓரளவுக்கு நாங்கள் சரியாக கணித்து விட்டோம். செய்தியாளர்கள் கொல்லப்படுவது 2015 க்குப் பிறகு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ரஷ்யா, இரான் மற்றும் செளதி அரேபியா போன்ற ராஜ்யங்கள், தங்கள் நாடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பதிவாகும் செய்தி அறிக்கைகளை கட்டுப்படுத்த தீவிரமாக முயற்சி செய்கின்றன ” என்றார். யுக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்பைத் தொடர்ந்து பிபிசி ரஷ்யன் செய்தியாளர் நினா நசரோவா தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டி இருந்தது. நினாவின் கணவரும் செய்தியாளர் தான். மாஸ்கோவில் இருந்து விமானம் புறப்பட்டதும், தனது கணவரை உற்று நோக்கினார். அவர் அழுது கொண்டிருந்ததை நினாவால் உணர முடிந்தது. "நான் உணர்வற்றுப் போனேன்," என்கிறார் நினா. புதிய தணிக்கை சட்டம் நடைமுறைக்கு வந்த நாள். "நான் போர் வரப்போகிறது என்று எச்சரித்தேன். இதற்காக நான் சிறையில் அடைக்கப்படலாம்” என்றார். நினா தங்கள் 16 மாத மகன், இரண்டு சூட்கேஸ்கள் மற்றும் ஒரு டிராலியை எடுத்துக்கொண்டு ரஷ்யாவிலிருந்து துருக்கிக்கு மலிவான டிக்கெட்டை முன்பதிவு செய்து புறப்பட்டார். அங்கு ஒரு வாரம் கடந்தது, பின்னர் அவர்கள் துபாயில் நாட்களை கழித்தனர், அவர்கள் போர் மூள்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே விடுமுறையை திட்டமிட்டு பணம் செலுத்தி ஏற்பாடு செய்தனர். பின்னர் அவர்கள் மாண்டினீக்ரோவிற்கு குடிபெயர்ந்தனர். அதன் பிறகு, லாட்வியன் தலைநகரான ரிகாவிற்கு குடிபெயர்ந்தனர். அங்கு பிபிசி நாட்டைவிட்டு வெளியேறிய ரஷ்ய ஊழியர்களுக்காக ஓர் அலுவலகத்தை அமைத்திருந்தது. இந்த ஆண்டு ஏப்ரலில், நினாவின் சக ஊழியரும், பிபிசி ரஷ்ய செய்தியாளருமான இலியா பரபனோவ், "வெளிநாட்டு உளவாளி" என்று முத்திரை குத்தப்பட்டார். "தவறான தகவல்களை பரப்பினார்" மற்றும் போரை எதிர்த்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார். இதை இலியாவும் பிபிசியும் நிராகரித்து நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். செய்தியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிய பிறகும் அவர்களுக்கு அச்சுறுத்தல்கள் தொடரலாம். மார்ச் மாதம் தனியார் தொலைக்காட்சி நிறுவனமான 'இரான் இன்டர்நேஷனல்’ தொகுப்பாளர் தனது லண்டன் வீட்டிற்கு வெளியே தாக்கப்பட்டார். மர்ம நபர்கள் அவரது காலில் கத்தியால் குத்தினர். சமீபத்தில் பிரிட்டிஷ் தீவிரவாத எதிர்ப்பு போலீசார் பிரிட்டனில் வசிக்கும் பிபிசி பாரசீக ஊழியர்களுக்கு அதிக அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரித்தனர். படக்குறிப்பு,பிபிசி பாரசீக தொகுப்பாளர்கள் ஃபர்னாஸ் காசிசாதே (இடது) மற்றும் ரானா ரஹிம்பூர் (வலது) இருவரும் இரானை விட்டு வெளியேறினர். 2022 ஆம் ஆண்டில் பிபிசி பாரசீக தொகுப்பாளர் ராணா ரஹிம்பூரின் கார் உடைக்கப்பட்டிருந்தது, ஒட்டு கேட்கும் சிறிய மைக் போன்ற சாதனம் உள்ளே வைக்கப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகித்தார். அவர் நினைத்தது போலவே அவர் தனது தாயுடன் நடத்திய உரையாடல் பதிவு செய்யப்பட்டு இரானிய அரசின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டது. அந்த உரையாடலில் ஆட்சியை ஆதரித்து பேசுவது போல் எடிட் செய்யப்பட்டது. இதனால் போட்டி ஊடகங்கள் அவரை இழிவு படுத்த இந்த சம்பவத்தை பயன்படுத்தியபோது, ராணா ஊடகத் துறையில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தார். "இந்த அரசு தரப்பு அதன் மிகவும் நுட்பமாக தந்திரமாக செயல்படுகிறது. எங்களை இழிவு படுத்தவும், மிரட்டவும் மற்றும் இறுதியில் எங்களை அமைதிப்படுத்தவும் முயற்சி செய்கின்றனர். எனக்கு நடந்திருப்பது அது தான்" என்று ராணா கூறுகிறார். இது அவரது நண்பர்களையும் சக ஊழியர்களையும் பதற்றத்தில் ஆழ்த்தியது. பிபிசி பாரசீகத்தின் மற்றொரு தொகுப்பாளரான ஃபர்னாஸ் காசிசாதே கூறுகையில், "இரானில் உள்ள எனது அம்மாவை நான் அலைப்பேசியில் அழைக்கும் ஒவ்வொரு முறையும், யாரோ நாங்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இது பயமாக இருக்கிறது, ஏனென்றால் அவர்கள் எங்களை அழிக்க எளிதில் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடியும்." என்றார். அவர் 21 ஆண்டுகளாக இரானுக்கு திரும்பவில்லை. மேலும் அவரும் அவரின் ஒன்பது சக ஊழியர்களும் நாட்டில் இல்லாத போது தங்களுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை சமீபத்தில் கண்டுபிடித்தனர். இரானிய நீதித்துறையில் இருந்து ஹேக்கர்கள் இந்த தகவல்களை கசியவிட்டனர். முன்னதாக, இரானிய வெளியுறவு அமைச்சகம் பிபிசி பாரசீக ஊழியர்கள் மீது வன்முறை, வெறுப்பு பேச்சு மற்றும் மனித உரிமை மீறல்களை தூண்டுவதாக குற்றம் சாட்டியது. ஃபர்னாஸின் கணவர் வலைப்பதிவில் எழுதியதற்காக 25 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு ஃபர்னாஸும் அவரது கணவரும் தங்கள் ஆறு மாத மகனுடன் நாட்டை விட்டு வெளியேறினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாடுகளை விட்டு வெளியேறிய பிபிசி உலக சேவை பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட இருமடங்காகி 310 ஆக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஃபர்னாஸின் தந்தை இரானின் பாதுகாப்பு பிரிவினரால் தொடர்ந்து விசாரணைக்கு வரவழைக்கப்பட்டார், அவருக்கு மிரட்டல் விடுத்தனர், அவர் தனது மகளை திரும்பி வரச் சொல்லும்படி அவரை வற்புறுத்தினர், மேலும் அவரது பேரக்குழந்தைகள் எங்கு பள்ளிக்குச் செல்கிறார்கள் என்பது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியும் என்று கூறி மிரட்டியுள்ளனர். 2022 ஆம் ஆண்டில், ஃபர்னாஸின் சகோதரர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார் . அவரது வயதான பெற்றோர்கள் அவரைப் பார்த்து கொள்ள முடியாமல் போராடினர். ஆறு வாரங்களுக்குப் பிறகு அவருடைய சகோதரர் இறந்துவிட்டார். அடுத்த ஆறு மாதங்களில் அவருடைய தந்தையும் இறந்துவிட்டார். "இந்த இழப்புகளில் இருந்து என்னால் முழுமையாக மீள முடியவில்லை. நான் உண்மையில் என் குடும்பத்திற்காக என் அம்மாவுக்காக அங்கு இருக்க விரும்பினேன். என்னால் முடியவில்லை" என்றார் ஃபர்னாஸ். "நான் இனி இந்த செய்திகளை, இந்த கொலை மிரட்டல்களை இனி கண்டுகொள்ள மாட்டேன். எனக்கு வரும் குறுந்தகவல்களை இனி திறக்க மாட்டேன். சில சமயங்களில் பாலியல் ரீதியாகவும் அசிங்கமாகவும் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்" என்கிறார் ஃபர்னாஸ். பிபிசி பாஷ்டோவைச் சேர்ந்த ஷாஜியா ஹயாவிற்கு, நாட்டை வருத்தமாக இருந்தாலும் கூடவே குற்ற உணர்வும் இருந்தது. 2022 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கட்டுப்பாட்டை முழுவதுமாக கைப்பற்றிய போது, அவரது பெற்றோரையும் சகோதரரையும் காபூலில் விட்டுவிட்டு அவர் தனியாக பிரிட்டனுக்கு வெளியேற்றப்பட்டார். "இரவு 02:00 மணியளவில் நான் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டேன், ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, அந்த சமயத்தில் என்னால் என் தம்பியை கட்டிப்பிடித்து விடை கொடுக்க முடியவில்லை என்பது வருத்தம் அளித்தது. நான் இங்கே சுதந்திரமாக இருக்கிறேன், ஆனால் அவர்கள் ஒரு வகையான சிறையில் இருக்கிறார்கள். தலிபான்கள் என் வேலையை காரணம் காட்டி என் குடும்பத்தினரை தண்டிப்பார்களோ என்று கவலையாக உள்ளது, அதனால் என் குடும்பத்தினரிடம் யாராவது என்னை பற்றி கேட்டால் அதை மறுக்கும்படி கூறியிருக்கிறேன்” என்றார். ஷாஜியாவுக்கு நாட்டை விட்டு வெளியேற பின்னரும், இணையத்தில் இடைவிடாத தொல்லை உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஷாஜியா உள்ளிட்ட பல பிபிசி பத்திரிகையாளர்களுக்கு இணையம் வழியாக மிரட்டல்கள் மற்றும் தொல்லைகள் கொடுக்கப்படுகிறது. ஒரு உலக சேவை பத்திரிகையாளர், தன் சொந்த நாட்டில் ஏதேனும் செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் தன் அடையாளத்தை மறைத்து சில தகவல்களை பகிர்ந்தார். அவருக்கும் அவரது சக ஊழியர்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய பயம் என்னவென்றால், அவரது அரசாங்கம் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுத்துவிடுமோ என்பது தான், அப்படி பாஸ்போர்ட்டை ரத்து செய்து விட்டால் நாடற்றவர்கள் ஆகிவிடுவோமோ என்று அஞ்சுகின்றனர். மேலும் தொலைதூரத்திலிருந்து தங்கள் நாடுகளைப் பற்றி செய்தி வாசிப்பது கடினமாக இருப்பதாகவும் கருதுகின்றனர். ஷாஜியா ஆப்கானிஸ்தானைச் சுற்றிப் பயணித்து, மக்களிடம், குறிப்பாக பெண்களிடம், அவர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசி வருகிறார். அப்படி பேட்டி அளித்தால் எந்த ஆபத்தும் வராது என மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இரானில் சாதாரண மக்கள் பிபிசியுடன் பேச அஞ்சுகின்றனர். பேட்டி அளிக்க கூடாது என அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். நினா தனது வேலை மிகவும் கடினமானது என்று கூறுகிறார். எங்குமே பயணிக்க முடியாமல், மேசையில் அமர்ந்து வேலை செய்தல், தன் திறமையை பறித்துவிடும் என்று அவர் கவலைப்படுகிறார். முக்கியமான குடும்ப நிகழ்ச்சிகளில் கூட நினாவால் கலந்து கொள்ள முடியவில்லை. தன் மகனை அனைவரும் பாராட்டுவதை கண்டு ரசிக்க முடியவில்லை. "காதல் இருக்கிறது, ஆனால் சற்று தொலை தூரமாகி விட்டது" என்கிறார் நினா. புலம்பெயர்ந்து வாழ்வதும் வேலை செய்வதும் ஒரு வகையான `பாதி வாழ்க்கை’ என்று தன் சூழலை விளக்குகிறார் ஃபர்னாஸ். "நான் நாட்டை விட்டு வெளியேறி விட்டேன், நான் இப்போது பிரிட்டிஷ் நாட்டின் குடிமகன் ஆகிவிட்டேன் என்று அவ்வளவு சுலபமாக நம்மால் வாழ முடியாது. இந்த சூழலில் என் வாழ்க்கையை உண்மையில் முழுமையாக வாழ முடியாது. நாங்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறோம், ஆனால் எங்கள் மனம் இன்னும் எங்கள் நாட்டில் தான் வசிக்கிறது” என்கிறார் ஃபர்னாஸ். https://www.bbc.com/tamil/articles/ceq3z06yp84o