Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் யாழை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் யுவதி அமு 29 DEC, 2023 | 12:35 AM (நெவில் அன்தனி) இலங்கையின் வட பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட அமுருதா சுரேன்குமார் என்ற 17 வயது யுவதி 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பெண்கள் பயிற்சி குழாத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வட லண்டனைச் சேர்ந்த சகலதுறை வீராங்கனையான அமுருதா, பயிற்சிக் குழாத்தில் இணைக்கப்பட்ட செய்தியை கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அமு என கிரிக்கெட் அரங்கில் செல்லமாக அழைக்கப்படும் இந்த யுவதி கடந்த ஜூலை மாதம் தனது 16ஆவது வயதில் சன்ரைசர்ஸ் சிரேஷ்ட அணியில் முதல் தடவையாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய சகலதுறைகளிலும் பிரகாசித்துவரும் அமு, கவுன்டி கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பிரபல மிட்ல்செக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 7 வயது சிறுமியாக இருந்தபோது அமுவின் ஆற்றலை நோர்த் லண்டன் கிரிக்கெட் கழகம் முதன் முதலில் இனங்கண்டது. யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் குடும்பத்தில் பிரித்தானியாவில் பிறந்த அமு, ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து குழாத்தில் இணைந்து உயர் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளார். உள்ளூர் மகிளிர் கிரிக்கெட் போட்டிகளில் சகலதுறைகளிலும் பிரகாசித்துவரும் அமு, அடுத்த வருடம் இலங்கை வருகை தரவுள்ள 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பெண்கள் அணியில் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளின் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகள் மும்முனை சர்வதேச கிரிக்கெட் தொடரில் அடுத்த வருடம் விளையாடும்போது அமுவும் அத் தொடரில் இடம்பெறுவார் என இலங்கை தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அமு இளம் வயதிலிருந்தே கிரிக்கெட் மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். ஏனெனில் அவரது தந்தை சிவா சுரேன்குமார், யாழ். சென். ஜோன்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரராவார். 1990இல் நடைபெற்ற 87ஆவது வடக்கின் மாபெரும் கிரிக்கெட் சமரில் அவர் குவித்த 145 ஓட்டங்கள் இன்னிங்ஸ் ஒன்றில் ஒருவர் பெற்ற சாதனைக்குரிய அதிகூடிய எண்ணிக்கையாக இருக்கிறது. பாடசாலை கல்வியை நிறைவு செய்த பின்னர் இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்த சிவா சுரேன்குமார் அங்கு லோகினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களின் சிரேஷ்ட புதல்வியாக அமுருதா 2006ஆம் ஆண்டு பிறந்தார். அமுருதாவின் ஆற்றல் குறித்து கருத்து வெளியிட்ட நோர்த் லண்டன் கிரிக்கெட் கழக அதிபர் மாட்டின் இஸிட், 'அவரிடம் குடிகொண்டுள்ள இயல்பான கிரிக்கெட் ஆற்றல்கள், கிரிக்கெட்டில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதில் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்புத்தன்மை என்பன அவரை கண்ட முதல் சந்தர்ப்பத்திலேயே எங்களைப் பிரமிக்கவைத்தன. அடுத்த தலைமுறையில் அதி உயிரிய ஆற்றல் மிக்க வீரராங்கனைகளை இனங்காணத் துடிக்கும் தேர்வாளர்களை அமுருதா வெகுவாக கவர்ந்துள்ளார்' என்றார். தனது முன்னேற்றத்தைப் பயன்படுத்தி விளையாட்டில் பெண்களின் பங்கேற்பை மேம்படுத்த விரும்புவதாக அமு தெரிவித்துள்ளார். 'கிரிக்கெட் விளையாட்டில் பாலின சமத்துவத்தை வளர்க்க நான் விரும்புகிறேன். உதாரணமாக பெண்கள் கிரிக்கெட் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் அதிமாக வெளியிடவேண்டும். அத்துடன் கிரிக்கெட்டில் அதிகளவிலான பெண்களை ஈடுபடச் செய்யவேண்டும். நான் எனது பெற்றோரினால் உந்தப்பட்டேன். ஜொ ரூட் (இங்கிலாந்து வீரர்), அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீராங்கனை எலிஸ் பெரி ஆகியோரே எனது முன்மாதிரி' என அமு தெரிவித்தார். https://www.virakesari.lk/article/172664
  2. யுக்திய நடவடிக்கையில் கைது செய்யப்படுவோரை தடுத்துவைக்கும் இடம் குறித்து நீதி அமைச்சர் விஜேதாச வெளியிட்ட தகவல் ! Published By: VISHNU 28 DEC, 2023 | 07:24 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நாடளாவிய ரீதியில் முற்படைகளால் மேற்கொண்டுவரும் யுக்திய நடவடிக்கையின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்படும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிறைச்சாலைகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் அரசுக்கு சொந்தமான பயன்படுத்தாமல் இருக்கும் கட்டிடங்களில் கைதிகளை தடுத்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பேரில் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிராேத நடவடிக்கைகளை கைதுசெய்யும் யுக்திய வேலைத்திட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை தடுத்துவைக்க எடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் முப்படைகள் மேற்கொண்டு வரும் யுக்திய நடவடிக்கையின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்படும் கைதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சிறைச்சாலைகளில் தற்போது இட நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது. யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நாடு பூராகவும் உள்ள 28 சிறைச்சாலைகளிலும் இரண்டாயிரத்து 255க்கும் அதிகமான புதிய கைதிகள் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றளர். அத்துடன் யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்க முன்பதாக சிறைச்சாலைகளில் 28ஆயிரம் கைதிகளே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். பொதுவாக இந்த நாட்டில் சிறைச்சாலைகளில் 11ஆயிரம் பேரே தடுத்து வைக்க முடியும். அதேநேரம் பெண் கைதிகளின் எண்ணிக்கையும் 800இல் இருந்து ஆயிரத்தி 124 வரை அதிகரித்திருக்கிறது. அத்துடன் சிறைச்சாலைகளின் நெருக்கடிக்கு நீண்ட கால தீர்வாக மில்லனிய பிரதேசத்தில் 50ஏக்கர் காணி தெரிவுசெய்து அங்கு கட்டிடங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. என்றாலும் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு அரசுக்கு சொந்தமான பயன்படுத்தாமல் இருக்கும் பாதுகாப்பான கட்டிடங்களை தெரிவுசெய்து, சிறைச்சாலைகளில் இருக்கும் மேலதிக கைதிகளை குறித்த கட்டிடங்களுக்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/172659
  3. தென்னாப்பிரிக்க பந்துவீச்சில் சரணடைந்த இந்திய வீரர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரபாடா கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 டிசம்பர் 2023, 03:39 GMT புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர் ஃபார்ஸ்ட் ஃபார்வேர்டு டெஸ்ட் போட்டி போன்று, தென் ஆப்பிரிக்காவும் ஃபார்ஸ்ட் ஃபார்வேர்டில் இந்திய அணியைச் சுருட்டி 3 நாட்களில் முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்களில் வெற்றியைப் பெற்றுள்ளது. செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது. இன்னும் ஆட்டம் முடிய 2 நாட்கள் முழுமையாக இருக்கும் நிலையில் இந்திய அணி சரண்டராகிவிட்டது. இந்திய அணி ஒட்டுமொத்தமாக 2வது இன்னிங்ஸில் 34.1 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 245 ரன்கள் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி, 108.4 ஓவர்களில் 408 ரன்களுக்கு ஆட்டமிழந்து 163 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து, 2வது இன்னிங்ஸை இன்று தேநீர் இடைவேளைக்குப்பின் ஆடத் தொடங்கிய இந்திய அணி, தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சின் முன் தாக்குப்பிடிக்க முடியாமல், 131 ரன்களில் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES 13 ஆண்டுகளுக்குப்பின்… கடந்த 2010ம் ஆண்டு இதே செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இன்னிங்ஸ் 25-ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோற்கடித்தது. ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்குப்பின அதேபோன்ற இன்னிங்ஸ் வெற்றியை தென் ஆப்பிரிக்கா மீண்டும் ருசித்துள்ளது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலை பெற்றுள்ளது. ஆட்டநாயகன் விருது 185 ரன்கள் குவித்த டீன் எல்கருக்கு வழங்கப்பட்டது. இந்திய அணியில் 2வது இன்னிங்ஸில் விராட் கோலி(76), சுப்மான் கில்(26) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து இந்தியாவின் தோல்வியை உறுதி செய்தனர். கேப்டன் ரோஹித் சர்மா டக்அவுட்டில் விக்கெட்டை இழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ரோஹித் சர்மாவுக்கு தண்ணிகாட்டிய ரபாடா தென் ஆப்பிரிக்காவில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி என்பது வெறும் 12 ரன்கள்தான். 6 பெரிய அணிகளுக்கு இடையே மிகக்குறைவான சராசரி வைத்துள்ள 2வது பேட்டர் ரோஹித் சர்மாதான். அதிலும் ரபாடா பந்துவீச்சு என்றாலே ரோஹித் சர்மா ஆட்டமிழக்கும் வாய்ப்பு அதிகமாகிவிடுகிறது. அவரின் பந்துவீச்சுக்கு எதிராக ரோஹித் சர்மாவின் சராசரி வெறும் 6 ரன்கள்தான், 6 இன்னிங்ஸில் ரபாடாவின் பந்துவீச்சில் ரோஹித் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். இரு இன்னிங்ஸ்களிலும் ரபாடா பந்துவீச்சில்தான் ரோஹித் சர்மா விக்கெட்டைப் பறிகொடுத்துள்ளார். அதிலும் 2வது இன்னிங்ஸில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தவிதம், கண்இமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது. ரபாடா சரியான லென்த்தில் “வாப்லிங் சீம்” என்று சொல்லக்கூடிய வகையில் காற்றிலேயே பந்து திசைமாறக்கூடிய வகையில் வீசினார். ரோஹித் சர்மா டிபென்ஸ் ப்ளே ஆட பிரன்ட்ஃபுட் ஆட முற்பட்டபோது, பந்து அவரை ஏமாற்றி க்ளீன் போல்டாகியது. இதுபோன்ற பந்துவீச்சை நிச்சயமாக ரோஹித் சர்மா தென் ஆப்பிரிக்காவில் மட்டும்தான் பார்த்திரக்கக்கூடும். இந்திய அணிக்கு எதிராக ரபாடா 50 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்து புதிய மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் இந்திய அணிக்கு எதிராக 50 விக்கெட்டுகளுக்கு மேல் குவித்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையில் 5-வது வீரராக இணைந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கே.எல்.ராகுல் விக்கெட்டை வீழ்த்திய பர்கர் 9 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன் இது தவிர இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால்(5), ஸ்ரேயாஸ் அய்யர்(6), ராகுல்(4), அஸ்வின்(0), ஷர்துல் தாக்கூர்(2) ஆகியோர் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களின் துல்லியமான லைன் லென்த்துக்கு முன் தாக்குப் பிடிக்கமுடியாமல் வரிசையாக பெவிலியன் திரும்பினர். இந்திய அணியில் 9 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி கடைசி 35 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அதாவது 96 ரன்கள் வரை 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்திருந்த இந்திய அணி, 131 ரன்களில் ஆட்டமிழந்துவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆறுதல் இது மட்டும்தான் இந்திய அணிக்கு ஆறுதல் தரக்கூடிய அம்சம் என்னவென்றால் கேஎல். ராகுல் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்ததும், 2-ஆவது இன்னிங்ஸில் கோலி 76 ரன்கள் சேர்த்து ஃபார்முக்கு வந்திருப்பதுதான். மற்ற வகையில் இந்திய பந்துவீச்சில் பும்ரா தவிர மற்றவர்கள் பந்துவீச்சு படுமோசமாக அமைந்தது. செஞ்சூரியன் மைதானம் என்றாலே பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரிதான். இந்த மைதானத்தின் தன்மையையும், சூழலையும், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவரும் பயன்படுத்தவில்லை. சரியான லைன் லென்த்தில் வீசப்பட்ட பந்துகள் அனைத்துமே இந்திய பேட்டர்களுக்கு சிரமத்தைக் கொடுத்தன, விக்கெட்டையும் இழக்க வைத்தன. ஆடுகளத்தின் தன்மையை பயன்படுத்திவில்லை செஞ்சூரியனில் கடந்த 2 நாட்களுக்குப் பின் நேற்று நன்றாக வெயில் அடித்ததால், ஆடுகளத்தில் இருந்த பிளவுகள், கோடுகள் நன்றாக தெரிந்தன. இதைத் தெரிந்து கொண்ட தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தின் தன்மையை சரியாகப் பயன்படுத்தி பவுன்ஸரை வீசி எகிறச் செய்தனர். இதே முறையை இந்தியப் பந்துவீச்சாளர்களும் பயன்படுத்தி இருந்தால், தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் சேர்த்திருக்க முடியாது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஹோம் ஓர்க் செய்யவில்லை தோல்விக்குப்பின் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் “ முதல் இன்னிங்ஸில் நல்ல ஸ்கோர் செய்திருந்தும் வெல்ல முடியவில்லை. இந்த செயல்பாடு நிச்சயமாகப் போதாது. பந்துவீச்சு, பேட்டிங்கில் 2வது இன்னிங்ஸில் மோசமாகச் செயல்பட்டோம். இந்த சூழலைப் பற்றி நன்கு புரிந்து கொள்ளாமல், ஆடுகளத்தின் தன்மையை அறிந்து கொள்ளாமல் வந்துவிட்டோம். 4 வேகப்பந்துவீச்சாளர்களும் சிறப்பாகவே பந்துவீசினர், கடினமாகவே உழைத்தனர், ஆனால், ஹோம்ஒர்க் செய்யாமல் வந்துவிட்டனர். எங்கு தவறு நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டோம். தவறுகளைத் திருத்தி இன்னும் வலிமையாக வருவோம். பிரசித் கிருஷ்ணா அனுபவம் குறைந்தவர்தான். இந்த ஆட்டத்தின் மூலம் தனது பந்துவீச்சு முறையை இனிவரும் நாட்களில் மாற்றிக்கொள்வார். இந்திய அணியின் பந்துவீச்சாளர்களில் சிலர் இல்லை, சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது, இருக்கின்ற பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்துதான் வர முடியும். நாங்கள் தேர்ந்தெடுத்து வந்த பந்துவீச்சாளர்கள், இங்குள்ள சூழலுக்கு எதிராக பந்துவீசக்கூடியவர்களாக இருக்கிறார்கள். பந்துவீச்சாளர்கள் குறித்து அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்தார் இந்தியத் தரப்பில் சிராஜ், ஷர்துல், பிரசித் கிருஷ்ணா ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர்களும் ரிதத்தை இழந்து பந்துவீசினர். இதில் பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், சிராஜ் ஆகிய 3 பந்துவீச்சாளர்களும் சேர்ந்து 285 ரன்களை வாரி வழங்கி, 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். செஞ்சூரியனில் நடந்த டெஸ்ட் போட்டியில் இதுபோன்று ரன்களை கொட்டிக் கொடுத்த பந்துவீச்சாளர்கள் இவர்களாகத்தான் இருக்க முடியும். டெஸ்ட் போட்டிகளில் வேகப்பந்துவீச்சாளர்கள் எக்னாமி ரேட் 5 ரன்களை வைத்தனர். இதில் விதிவிலக்காக, பும்ரா 26 ஓவர்கள் வீசி 69 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆடுகளத்தை கணிக்காமல், அதற்கு ஏற்றார்போல் பந்துவீச்சாளர்கள் பந்துவீசாதது, பேட்டர்கள் விரைவாக விக்கெட்டுகளை இழந்தது ஆகியவை தோல்விக்கு முக்கியக் காரணமாகும். இன்னும் முழுமையாக 2 நாட்கள் மீதம் இருக்கும்நிலையில் விரைவாகவே தோல்வியை இந்திய அணி ஒப்புக்கொண்டுவிட்டது. இந்திய அணியில் அறிமுகமாகிய பிரசித் கிருஷ்ணா இதுவரை முதல் தரப்போட்டிகளில் 12க்கு மேல் ஆடியதே இல்லை, பந்துவீசியதே இல்லை. செஞ்சூரியன் ‘கிங்’ தென் ஆப்பிரிக்கா தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சொந்த மைதானத்தில் கிங் என்பதை நிரூபித்துவிட்டனர். செஞ்சூரியன் மைதானத்தில் மட்டும் தென் ஆப்பிரிக்காவின் வெற்றி சதவீதம்79.31 சதவீதமாகும். அதாவது29 போட்டிகளில் 23 ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா வென்றுள்ளது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி செஞ்சூரியன் மைதானத்தையும், ஆடுகளத்தையும் எவ்வாறு புரிந்து, தெரிந்து வைத்துள்ளது என்பதை அறியலாம். தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் பெரிய பங்களிப்பு செய்தது டீன் எல்கர்தான். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆட்டநாயகன் விருது வென்ற எல்கர் பவுண்டரிகளால் சதம் கண்ட எல்கர் இந்த டெஸ்ட் தொடரோடு எல்கர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற இருக்கும் நிலையில் இந்த வெற்றியும், அவர் சேர்த்த சதமும் மறக்க முடியாத நினைவுகளாக மாறின. தொடக்க வீரராகக் களமிறங்கிய எல்கர் 185 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் டீன் எல்கர் தனது 14-வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்து 287 பந்துகளில் 185 ரன்கள் சேர்த்தார். எல்கர் பவுண்டரி மூலமே 112 ரன்கள் சேர்த்தார், அதாவது 28 பவுண்டரிகளை எல்கர் அடித்துள்ளார். அதிலும் எல்கர் சேர்த்த பெரும்பாலான பவுண்டர்கள் கவர்டிரைவ் மூலமும், ஆஃப் சைடிலும் அடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. வலுவான பார்ட்னர்ஷிப் எல்கருக்கு ஒத்துழைத்து ஜோர்சியும்(28), அறிமுக வீரர் பெடிங்காமும்(56) பேட் செய்ததால் 2வது நாளில் முன்னிலை பெற முடிந்தது. ஜோர்சியுடன் சேர்ந்து எல்கர் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், 4-வது விக்கெட்டுக்கு பெடிங்காமுடன் சேர்ந்து 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை உயர்த்தினார். 3-வது நாளான நேற்று, டீன் எல்கர்(185), மார்கோ யான்சென்(85) ரன்களும் சேர்த்து ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக அமைந்தனர். யான்சென்-எல்கர் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினர். எல்கரின் உணர்ச்சி பொங்கிய ஆட்டம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு கடினமான நேரத்தில் பலமுறை இதுபோன்று ஆடி சதம் அடித்து அணியை தூக்கி நிறுத்தியுள்ளார் எல்கர். கொரோனா காலத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் எல்கர் 95 ரன்கள் சேர்த்தது, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அணியை மீட்டது என பல தருணங்களில் தனது பேட்டிங் திறமையை எல்கர் வெளிப்படுத்தியுள்ளார். எல்கர் அளித்த பேட்டியில் கூறுகையில் “ எனது பேட்டிங்கை நிரூபிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை அணிக்கு பங்களிப்பு செய்கிறேன். நான் கடைசியாக விடைபெறும் போது டெஸ்ட் போட்டி அல்லது டெஸ்ட் தொடரை வென்று தர வேண்டும். எதையும் இழக்கவிரும்பவில்லை. இந்தப் போட்டி எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. இதுவரை செஞ்சூரியனில் சதம் அடித்தது இல்லை. இதுவே என் கிரிக்கெட் வாழ்க்கையில் மைல்கல்லாக இருக்கும். என்னுடைய குடும்பத்தார் என்னுடைய பேட்டிங்கைப் பார்க்க வந்துள்ளனர்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வேகப்பந்துவீச்சாளர் பர்கர் பர்கரின் அசத்தல் அறிமுகம் தென் ஆப்பிரிக்கத் தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பர்கர் மொத்தம் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்திய வேப்பந்துவீச்சாளர்கள் லைன் லென்த் கிடைக்காமல் தடுமாறியபோது, அனாசயமாகப் பந்துவீசி 7 விக்கெட்டுகளை பர்கர் அள்ளிச்சென்றார். தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரில் கண்டறிந்த முக்கிய வீரராக பர்கர் மாறியுள்ளார். வெற்றிக்கு முக்கியக் காரணம் என்ன? தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தவை சரியான லைன், லெங்த் என்பதைக் கண்டறிந்து வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசியது, இந்திய அணியின் மோசமான பந்துவீச்சும், பேட்டிங் ஆகியவைதான். ஆடுகளத்தின் தன்மையை, ஆடுகளத்தையும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் நன்கு பயன்படுத்தினர். எந்த இடத்தில் பந்தை பிட்ச் செய்தால் பேட்டர்கள் திணறுவார்கள், தடுமாறுவார்கள் என்பதை சரியாக கணித்து பந்துவீசினர். https://www.bbc.com/tamil/articles/c9029dwz8j1o
  4. விஜயகாந்த் உடல் நல்லடக்கம் குறித்து குடும்பத்தினர் அறிவிப்பு! பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் இன்று(28) காலமானார். சுகயீனமுற்றிருந்த அவர் கொரோனா தொற்றுக்குள்ளானதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மியாட் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதியானது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டபோதிலும், இன்று(28) காலை 6:10 மணியளவில் மருத்துவ சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு விஜயகாந்தின் உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். அத்துடன் விஜயகாந்த் உடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் விஜயகாந்தின் உடல் அவரது வீட்டில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களின் அஞ்சலிக்காக இன்றும், நாளையும் அவரது உடல் தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட உள்ளது. நாளை 29ஆம் திகதி மாலை 4.45 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/286210
  5. யாழில் கில்மிசாவிற்கு வரவேற்பு Published By: DIGITAL DESK 3 28 DEC, 2023 | 04:38 PM சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய கில்மிஷாவிற்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. கில்மிஷா, தனது பெற்றோருடன் இன்று வியாழக்கிழமை (28) சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து வரவேற்று வாகன தொடரணி மூலம் அரியாலை பகுதிக்கு அழைத்து சென்று , அங்கு கௌரவிப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. https://www.virakesari.lk/article/172648
  6. கத்தார்: மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களுக்கு தண்டனை குறைப்பு - முழு விவரம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தீபக் மண்டல் பதவி, பிபிசி செய்தியாளர் 28 அக்டோபர் 2023 புதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர் கத்தாரில் இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்களுடைய தண்டனை தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பின் முழு விவரங்கள் கிடைப்பதற்காகக் காத்திருப்பதாகவும் செய்திறிவிப்பில் வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. “கத்தாருக்கான இந்திய தூதர், ஏனைய அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்தனர். இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதல் இந்திய அரசு அவர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. மேலும் அனைத்து தூதரக, சட்ட உதவிகளைத் தொடர்ந்து வழங்குவோம். இந்த வழக்கு குறித்த விவரங்கள் ரகசியமானது மற்றும் உணர்திறன் மிக்கது என்பதால், இந்த நேரத்தில் மேற்கொண்டு எந்தக் கருத்தையும் கூற இயலாது,” என்றும் அந்தச் செய்தியறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேர் யார்? முன்னதாக, கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது இந்திய அரசுக்குப் பெரும் சவாலாக மாறியது. இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது. இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்த இந்திய அரசு, ஆனால் இந்த பிரச்னையைத் தீர்ப்பதற்கான அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்வதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. கத்தார் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் இந்திய கடற்படை ஊழியர்களை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றுவது இந்தியாவுக்கு பெரிய ராஜ்ஜீய சவாலாகக் கருதப்படுகிறது. மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்களில் கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சௌரப் வசிஷ்டா, கேப்டன் வீரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுக்னகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால் மற்றும் மாலுமி ராகேஷ் ஆகியோர் அடங்குவர். இவர்கள் பாதுகாப்பு சேவை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தனர். இந்நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெய்சங்கர் - இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இவர்கள் கடந்த ஆண்டு(2022) ஆகஸ்ட் 30ஆம் தேதி கத்தாரில் கைது செய்யப்பட்டனர். அன்றிலிருந்து அவர்கள் தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தொடங்கியது. அவர்கள் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டதற்கும் அவர்களுக்கு மரண தண்டனை விதித்ததற்கும் எந்தக் காரணமும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை. 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியின்படி, முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும் அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை. மோதி அரசு மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த விவகாரத்தில் மோதி அரசு தலையிட வேண்டும் என்று இந்தியாவில் அழுத்தம் எழுந்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக ஊடக பக்கத்தில், “கத்தாரில் 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் தொடர்பான விவகாரத்தில் மிகவும் மோசமான முன்னேற்றங்கள் இருப்பதை இந்திய தேசிய காங்கிரஸ் மிகுந்த வருத்தத்துடனும், வேதனையுடனும், உணர்ந்துள்ளது. மேல்முறையீடு செய்வதில் அதிகாரிகளுக்குப் போதுமான ஆதரவு கிடைப்பதை உறுதி செய்ய இந்திய அரசாங்கம் கத்தார் அரசுடனான தனது ராஜஜீய மற்றும் அரசியல் செல்வாக்கை முடிந்தவரை பயன்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம். மேலும், அவர்களை விரைவில் விடுவிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்று பதிவிட்டிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES இதேபோல், ஏஐஎம்ஐஎம் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி தனது X சமூக ஊடக பக்கத்தில், “பிரதமர் நரேந்திர மோதி முன்னாள் பணியாளர்கள் அனைவரையும் திரும்ப அழைத்து வர வேண்டும். கத்தாரில் சிக்கித் தவிக்கும் முன்னாள் கடற்படை அதிகாரிகளின் பிரச்னையை ஆகஸ்ட் மாதம், நான் எழுப்பினேன். இன்று அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகள் தன்னை எவ்வளவு நேசிக்கின்றன என்பதைப் பற்றி பிரதமர் மோதி பெரிதாகப் பேசுகிறார். அவர் முன்னாள் அதிகாரிகளைத் திரும்ப அழைத்து வர வேண்டும். அவர்கள் மரண தண்டனையை எதிர்கொள்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது,” என்று கூறியுள்ளார். மூத்த பத்திரிகையாளர் ஷீலா பட், “தனியார் நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு இந்திய அரசாங்கம் உதவ முயன்றபோது, கத்தார் ஒத்திசைய விரும்பவில்லை. ஏனெனில் அவர்கள் இந்த வழக்கு மூலம் பேரம் பேச விரும்பினர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சௌதி அரேபியாவுடனான இந்தியாவின் நிலையான இருதரப்பு உறவுகளை அது விரும்பவில்லை. ஆகவே, இந்தப் பிராந்தியத்தில் துருக்கி மற்றும் இரானுடன் இணைந்து கத்தார் ஒரு பெரிய அரசியல் ஆட்டத்தை விளையாடுகிறது,” என்று தனது சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் அல் டஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற பாதுகாப்பு சேவைகளை வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் இந்த நிறுவனம் ஓமன் குடிமகன் காமிஸ் அல்-அஜ்மிக்கு சொந்தமானது. அஜ்மி ராயல் ஓமன் விமானப்படையின் படைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்த எட்டு இந்தியர்களுடன் அவரும் கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவர் நவம்பர் 2022இல் விடுவிக்கப்பட்டார். நிறுவனத்தின் செயல்பாடுகள் என்ன? நிறுவனத்தின் பழைய இணையதளம் இன்னும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. கத்தார் அமிரி தேசியப் படைக்கு (QENF) பயிற்சி, தளவாடங்கள் மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்கியுள்ளது என்று நிறுவனத்தின் இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய இணையதளத்தில் நிறுவனத்தின் பெயர் டஹ்ரா குளோபல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கத்தார் அமிரி தேசிய படைக்கு வழங்கப்பட்ட அதன் சேவைகள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதன் தலைமைப் பொறுப்புகளில் இருந்த கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரிகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ராணுவ நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கு கத்தார் அரசுக்கு இந்நிறுவனம் உதவுவதாக பல ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளன. இருப்பினும், இதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் கைது செய்யப்படுவதற்கு முன் நான்கு முதல் ஆறு ஆண்டுகள் டஹ்ராவில் பணிபுரிந்துள்ளனர். முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு நிறுவனத்துடனான தொடர்பு என்ன? மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களில் ஒருவரான கமாண்டர் பூர்ணேந்து திவாரி இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2019இல் அவருக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கப்பட்டது. அப்போது கத்தாருக்கான அப்போதைய இந்தியத் தூதரும், கத்தார் பாதுகாப்புப் படைகளின் சர்வதேச ராணுவக் கூட்டுறவின் முன்னாள் தலைவருமான பி.குமரன் மூலம் கௌரவிக்கப்பட்டார். இந்திய கலாசார மையத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி கேப்டன் கவுசிக் விழாவில் கலந்துகொண்டார். தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் கைது செய்யப்படுவதற்கு முன் நான்கு முதல் ஆறு ஆண்டுகள் டஹ்ராவில் பணிபுரிந்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இதை இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சியும் உறுதி செய்துள்ளார். எதற்காக, எப்படி இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன? மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளை கத்தாரின் உளவுத்துறை நிறுவனமான ஸ்டேட் செக்யூரிட்டி பீரோ கைது செய்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் நடுப்பகுதியில் இந்திய தூதரகத்துக்கு தெரிய வந்தது. செப்டம்பர் 30 அன்று, இவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தொலைபேசியில் சிறிது நேரம் பேச அனுமதிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக அவர்களுக்கு தூதரக அனுமதி வழங்கப்பட்டது. அப்போது, இந்திய தூதரக அதிகாரி ஒருவர் இவர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பிற்குப் பிறகு, அடுத்த சில மாதங்களுக்கு கைது செய்யப்பட்ட இந்தியர்கள் ஒவ்வொரு வாரமும் தங்கள் குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இதை இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சியும் உறுதி செய்துள்ளார். விசாரணையின் போதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார். முன்னாள் கடற்படை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை இந்திய அரசோ அல்லது கத்தார் அரசோ பொதுவெளியில் தெரியப்படுத்தவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தனது சகோதரர் ஓய்வு பெறும் வரை இந்திய கடற்படையில் பணியாற்றியதாகவும் தனது அண்ணனை இந்தியாவுக்கு கொண்டு வருவது அரசின் பொறுப்பு என்றும் நவ்தீப் கூறினார். குடும்பத்தினர் என்ன கூறுகின்றனர்? எட்டு பேரும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட பிறகு, ஒரு இந்திய இணைய ஊடகம் கமாண்டர் பூர்ணேந்து திவாரியின் சகோதரி மருத்துவர் மிது பார்கவா மற்றும் கேப்டன் நவ்தேஜ் சிங் கில்லின் சகோதரர் நவ்தீப் கில் ஆகியோரிடம் பேசியது. அப்போது, கத்தாரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோதி அரசுக்கு மிது கார்கவா வேண்டுகோள் விடுத்திருந்தார். தனது சகோதரர் வயது முதிர்ந்தவர் என்றும் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார். அவர் 63 வயதில் தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் என்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார் என்பதைth தன்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்று மிது தெரிவித்திருந்தார். பூர்ணேந்து திவாரி சிறையில் இருந்து தங்களின் 83 வயதான தாயுடன் பேசியதாகவும், மகனின் பாதுகாப்பு குறித்து தாயார் கவலைப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். கேப்டன் நவ்தேஜ் சிங் கில்லின் பிறந்த நாளான செப்டம்பர் 6ஆம் தேதி அவருக்கு வாட்ஸ் ஆப்பில் வாழ்த்து செய்தி அனுப்பியதாகவும் அதற்கு அவர் பதிலளிக்காததால் சந்தேகம் அடைந்ததாகவும் அவரது சகோதரர் நவ்தீப் கில் கூறினார். பின்னர் அவருடனான தொலைபேசி தொடர்பு நின்றுபோனது. நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, கத்தாரின் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. நவ்தீப் கில், தனது சகோதரருக்கு உடல்நலப் பிரச்னைகள் இருப்பதாகக் கூறினார். தனது சகோதரர் ஓய்வு பெறும் வரை இந்திய கடற்படையில் பணியாற்றியதாகவும் தனது அண்ணனை இந்தியாவுக்கு கொண்டு வருவது அரசின் பொறுப்பு என்றும் நவ்தீப் கூறினார். கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கைது செய்யப்பட்ட இந்தியர்களை அழைத்து வருவதற்கு அரசு முன்னுரிமை அளிப்பதாகக் கூறியிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி இந்தியாவுக்கு இது எத்தகைய சவாலாக இருக்கிறது? இந்த விவகாரம் இந்தியாவுக்கு எவ்வளவு பெரிய அரசியல் சவாலாக இருக்கிறது? இந்தப் பிரச்னையைத் தீர்க்கவும் தனது முன்னாள் கடற்படை அதிகாரிகளை விடுவிக்கவும் இந்தியாவால் என்ன செய்ய முடியும்? இதைப் புரிந்துகொள்ள, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்கு ஆசிய ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் முடாசர் கமரிடம் பிபிசி ஹிந்தி பேசியது. ராஜஜீய மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படாவிட்டால், இந்த விவகாரம் எந்தத் திசையில் செல்லும் என்று கூறுவது கடினம் என்று அவர் கூறினார். மேலும், நிச்சயமாக இது இந்திய பொதுமக்களின் கருத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஆம், ஆனால் இது கண்டிப்பாக இந்தியாவில் பொதுமக்களின் கருத்தை பாதிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, முன்னாள் கடற்படை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை இந்தியாவோ அல்லது கத்தாரோ வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இதற்கு என்ன காரணம்? “இதுவோர் உணர்வுப்பூர்வமான விஷயம். இத்தகைய உணர்வுப்பூர்வமான விஷயம் தொடர்பாக பிரச்னை எழும்போது, நட்புறவு கொண்ட நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகின்றன. இரு நாடுகளும் எந்த உடனடி எதிர்வினையும் தெரிவிக்காத விதத்தை வைத்தே இது மிகவும் முக்கியமான விஷயம் என்று தெரிகிறது. அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படாததால், இதுவொரு முக்கியமான விஷயமாக இருக்காது என்று கூறிவிட முடியாது. மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதால், தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கலாம் அல்லது அவர்கள் ஏதேனும் கடுமையான குற்றம் செய்திருக்கலாம்,” என்று கமர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த விவகாரத்தில் இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும் என்கிறார் கமர். இந்தியாவுக்கு இது பெரிய ராஜதந்திர சவாலா? “இதை ராஜதந்திர சவால் என்று அழைப்பது சரியாக இருக்காது. ஏனெனில் அங்கு சென்றவர்கள் இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள். ஆனால் அவர்கள் அரசு பணி நிமித்தமாகச் செல்லவில்லை. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்கள். எனவே இதை ராஜதந்திர சவால் என்று கூறுவது கடினம். இது அரசியல் ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் சில தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதை இப்போதே சொல்வது கடினம்,” என்கிறார் கமர். மேலும் பேசிய அவர், “இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருந்ததால், இது குறித்து பொதுவெளியில் எந்தத் தகவலும் பகிரப்படவில்லை. எனவே, வெளிவிவகாரக் கொள்கையின்படி நிதானமான முறையில் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய அரசுக்கு முடிவு குறித்த விவரங்களை முதலில் தெரிவிக்க வேண்டும். இதில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பதை இந்திய அரசு ஆராயும். கத்தாரில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருந்தால், அதிலிருந்து எவ்வளவு அதிகபட்ச பலன் கிடைக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்,” என்றும் கூறினார். “இந்த விவகாரம் சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படுமா இல்லையா என்பதையும் பார்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் பல அம்சங்களைப் பார்க்க வேண்டும். இதை இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும்,” என்கிறார் கமர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கத்தாரில் சுமார் 8-9 லட்சம் இந்தியர்கள் பணிபுரிவதால், அங்குள்ள இந்தியர்களின் நலன்களுக்குப் பங்கம் விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க இந்திய அரசு முயற்சிக்கும். இந்தியா- கத்தார் இடையிலான உறவு எப்படிப்பட்டது? இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே நட்புறவு உள்ளது. ஆனால் இந்த உறவில் முதல் சவால் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வந்தது. பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முகமது நபியைப் பற்றி இழிவான கருத்துகளை வெளியிட்டார். அந்த நேரத்தில், இந்தியா 'பொது மன்னிப்பு' கோர வேண்டும் என்று கூறிய முதல் நாடு கத்தார். கத்தார் இந்திய தூதரை அழைத்து தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. இஸ்லாமிய நாடுகளில் கோபம் பரவாமல் இருக்க, பாஜக உடனடியாக நூபுர் ஷர்மாவை நீக்கியது. இப்போது எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை, இந்தியா-கத்தார் உறவுகளுக்கு இடையிலான இரண்டாவது பெரிய சவாலாகக் கருதப்படுகிறது. கத்தாரில் சுமார் 8-9 லட்சம் இந்தியர்கள் பணிபுரிவதால், அங்குள்ள இந்தியர்களின் நலன்களுக்குப் பங்கம் விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க இந்திய அரசு முயலும். இந்தியா கத்தாரில் இருந்து இயற்கை எரிவாயுவையும் இறக்குமதி செய்கிறது. கத்தார் மிகப்பெரிய அளவில் இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடு. காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில், அதிக அமெரிக்க பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்று கத்தார் இஸ்ரேலுடனும் பாலத்தீனத்துடனும் மத்தியஸ்தம் செய்ய முயலும் நேரத்தில் இந்த விவகாரம் வெளிச்சம் பெற்றுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cn48ldyvjr8o
  7. விஜயகாந்த் வாழ்க்கையின் 10 முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,VIJAYAKANTH/FACEBOOK 28 டிசம்பர் 2023, 07:41 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி, இதுதான் நடிகர் விஜயகாந்தின் இயற்பெயர். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி அழகர்சாமி என்ற ரைஸ் மில் முதலாளியின் மகனாகப் பிறந்தவர். நடிப்பதற்காக சென்னை வந்த பிறகு தனது பெயரை "விஜயகாந்த்" என மாற்றிக்கொண்டார். சினிமா வாய்ப்பு இவருக்கு பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தான் கிடைத்தது. அவரது முதல் படம், 1979-ஆம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான 'இனிக்கும் இளமை'. அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய திரைப்படம் 'சட்டம் ஒரு இருட்டறை'. இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறினார். 'புலன் விசாரணை', 'சேதுபதி ஐபிஎஸ்', 'சத்ரியன்', 'கேப்டன் பிரபாகரன்','வானத்தைப் போல', 'தவசி', 'ரமணா' என இதுவரை 150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் விஜயகாந்த். பட மூலாதாரம்,VIJAYAKANTH/FACEBOOK 54 புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்த ஒரே நடிகர் "தனது சினிமா வாழ்க்கையில் 54 புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்தவர் நடிகர் விஜயகாந்த். உலக சினிமாவில் இதை வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள். அதிகமான புதிய தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாய்ப்பு அளித்தவர்" "சொல்வதெல்லாம் உண்மை திரைப்படம் மூலம் என்னை தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தியது அவர் தான். இந்த காட்சி எதற்கு, வசனம் எதற்கு, கதையை இப்படி மாற்றலாமா என்றெல்லாம் அவர் பேசமாட்டார். கதையை ஒத்துக்கொண்டு, சம்பளம் வாங்கிவிட்டால் எதையும் பேசாமல், விரைவாக நடித்துக் கொடுத்து விடுவார். மிகச்சிறந்த மனிதர் என்பதைத் தாண்டி ஒரு நல்ல தொழில்முறைக் கலைஞர் விஜயகாந்த்" என்று கூறினார் தயாரிப்பாளர் டி. சிவா. பட மூலாதாரம்,VIJAYAKANTH/FACEBOOK பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு வாய்ப்பு அளித்தவர் பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் உடனான இவரது கூட்டணி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 1986ஆம் ஆண்டு வெளியான ஊமை விழிகள் எனும் திரைப்படத்தில், அப்போதைய நடிகர்கள் பலரும் நடிக்கத் தயங்கிய டி.எஸ்.பி தீனதயாளன் என்ற காவல்துறை அதிகாரி வேடத்தில் திரையில் தோன்றினார் நடிகர் விஜயகாந்த். தனது இமேஜ் பற்றிக் கவலைப்படாமல், சற்று வயதான வேடத்தில் இந்த படத்தில் அவர் நடித்திருப்பார். இந்த அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து திரைப்பட கல்லூரியிலிருந்து வந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி உழவன் மகன், செந்தூரப் பூவே, காவியத் தலைவன் போன்ற திரைப்படங்களைக் கொடுத்தார். பட மூலாதாரம்,DMDK சண்டைக் காட்சிகளில் டூப் வேண்டாமென மறுத்தவர் நடிகர் விஜயகாந்தின் திரைப்படங்களில் அதிகம் பேசப்படுவது அவரது சண்டைக்காட்சிகளே. பல திரைப்படங்களில் தனக்கு டூப் வேண்டாம் என மறுத்து, சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார். சண்டைக்காட்சிகளில் தனெக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கியிருந்தார் விஜயகாந்த. இதற்கு பின்னால் ஒரு முக்கிய சம்பவம் உள்ளது என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். 'நாளை உனது நாள்' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில், அவருக்கு டூப் போட்ட ஒரு ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு, இனிமேல் எனக்கான சண்டைக்காட்சிகளில் நானே நடித்துக் கொள்கிறேன், டூப் வேண்டாமென முடிவெடுத்துள்ளார். இதற்காக பிரத்யேக சண்டைப் பயிற்சிகளையும் அவர் எடுத்துள்ளார். தனது பெரும்பாலான படங்களில் டூப் போடாமல் நடித்ததால், பலமுறை இவருக்கு தோள்பட்டை இறக்கம் ஏற்பட்டுள்ளது. பட மூலாதாரம்,VIJAYAKANTH/FACEBOOK கமல்- ரஜினி அலையில் தனித்து தெரிந்தவர் 1984ஆம் ஆண்டு, விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஆண்டு. அந்த ஒரே ஆண்டில் மட்டும் விஜயகாந்த நடித்த 18 திரைப்படங்கள் வெளியாகின. மிகச்சில நடிகர்களுக்கு இந்த சாதனை உள்ளது. கமல் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள் என்ற தலைமுறை உருவான போது, அதற்கு இணையாக தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் விஜயகாந்த். தனது பல படங்களில் நீண்ட உணர்ச்சிபூர்வமான வசனங்களை, தன்னுடைய பாணியில் ஒரே டேக்கில் பேசி முடிப்பவர் விஜயகாந்த். "கிராமங்களில் இவரது படங்கள் வெளியாகும் தினத்தன்று திருவிழாவுக்கு செல்வது போல கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் வண்டி கட்டிக்கொண்டு படம் பார்க்கச் செல்வோம்", என்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த ரசிகர் அறிவுமணி. பட மூலாதாரம்,VIJAYAKANTH/FACEBOOK கேப்டன் என்ற பட்டம் கமல், ரஜினி, சத்யராஜ், பிரபு, கார்த்திக் என அப்போது இருந்த முன்னணி நடிகர்களுக்கு கூட 'நூறாவது படம்' என்றாலே தோல்வி தான். ஆனால் நடிகர் விஜயகாந்திற்கு நூறாவது படமான 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 1991ஆம் ஆண்டு, ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் வெள்ளிவிழா கொண்டாடியது. அந்த திரைப்படத்திற்கு பிறகு சினிமா துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் கேப்டன் என்றே அழைக்கப்பட்டார். பட மூலாதாரம்,VIJAYAKANTH/FACEBOOK நடிகராக இருந்தவர் நடிகர் சங்கத் தலைவரானார் விஜயகாந்த் 1999-ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவரானார். அவர் நடிகர் சங்கத் தலைவரானபோது, நடிகர் சங்கம் மிகப் பெரும் கடன் சுமையில் இருந்தது. அதனை வெளி நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் கடன்களை அடைத்தார். அதோடு மட்டுமல்லாமல், நலிந்த கலைஞர்களுக்கு, உதவி செய்வதற்காக ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார். 2002-ஆம் ஆண்டு காவிரி நதி நீர் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து “நீர் தராத கர்நாடகாவுக்கு மின்சாரம் இல்லை” என்ற போராட்டத்தை நெல்லையில் நடத்தினார். மனிதாபிமானமிக்க நடிகர் விஜயகாந்த் குறித்து பிபிசி தமிழுக்காக ஒருமுறை பேசிய நடன இயக்குனர் பிருந்தா, “விஜயகாந்த் சினிமா படப்பிடிப்புத் தளங்களில் ஒழுக்கத்தினைக் கடைப்பிடிப்பார். அவரது 'ஷாட்' முடிந்தவுடன் சென்று கேரவனில் அமர மாட்டார்." என்றார். "விஜயகாந்த் போன்று ஒரு நல்ல மனிதரைப் பார்க்கவே முடியாது. அவர் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது, நடிகர் சங்கத்தின் கடன்களை அடைக்க வெளிநாடுகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது, நடன இயக்குனர்களையும், நடனக் கலைஞர்களையும் மிகவும் அன்போடு கவனித்துக் கொள்வார். " "நடன இயக்குனர்களுக்கு சிங்கப்பூரிலிருந்து, மலேசியாவிற்குச் செல்லும்போது விமான டிக்கெட்டுகளையே முன்பதிவு செய்து கொடுத்தார். நடனக் கலைஞர்கள் தானே என அவர் எங்களை பேருந்தில் பயணம் செய்யவிடவில்லை. மிகவும் அற்புதமான மனிதர்” என்றார். இளம் நடிகர்களுக்கு கைகொடுத்தவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் 1993இல் வெளியான திரைப்படம் 'செந்தூரப் பாண்டி'. இந்த படத்தில் விஜய்க்கு அண்ணனாக, கவுரவ வேடத்தில் தோன்றியிருப்பர் நடிகர் விஜயகாந்த். இதேபோல 1999இல் 'பெரியண்ணா' என்ற திரைப்படம், அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த சூர்யா நடித்த திரைப்படம். அதிலும் ஒரு கவுரவ வேடத்தில் தோன்றியிருப்பர் நடிகர் விஜயகாந்த். "சூர்யா நடிப்பில் வந்த மாயாவி திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்திற்காக அவரிடம் பேசியபோது, உடனே ஒத்துக்கொண்டார். பொதுவாக அவரைப் போன்ற பெரிய நடிகர்கள் அவ்வளவு எளிதாக நடிக்க ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அடுத்த நாளே, ஏவிஎம் ஸ்டூடியோவில் தான் நடித்துக் கொண்டிருந்த படத்தின் உணவு இடைவெளியில் எங்களுக்கான பகுதியை முடித்து கொடுத்தார்" என மாயாவி திரைப்படத்தின் இயக்குனர் சிங்கம் புலி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். பட மூலாதாரம்,VIJAYAKANTH/FACEBOOK 'ஏழை எளியவர்களுக்கு உதவுவதில் விஜயகாந்த் போல் யாரும் இல்லை' விஜயகாந்த் குறித்து பிபிசி தமிழுக்காக ஒருமுறை பேசிய நடிகர் ரமேஷ் கண்ணா, "விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது, நான் இணைந்து கொள்ள விருப்பப்பட்டேன். அவர் என்னை அழைத்து நீ என் கட்சியில் சேர்ந்தால் ஓரு சார்பாளனாகிப் போவாய். நீ எல்லாருக்கும் பிடித்தவனாக இரு என அறிவுரை வழங்கினார். " என்றார். "பெரும்பாலான உதவி இயக்குனர்களுக்கு சாப்பாடு இருக்காது. வறுமை தான். அப்பொழுதெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு நாங்கள் நடிகர் விஜயகாந்த் வீட்டிற்குச் செல்வோம். அதேபோல், அவர் என்ன உணவு உண்பாரோ அதே உணவைத் தான் அனைவருக்கும் வழங்கச் சொல்வார்." "படப்பிடிப்புத் தளத்திலும் இதே தான், லைட் யூனிட்டிலிருந்து, சவுண்ட் யூனிட்டிலிருந்து அனைவருக்கும் ஒரே சாப்பாடு தான் வழங்கச் சொல்வார். படப்பிடிப்புத் தளத்தில் பாகுபாடு பார்க்காமல் அனைவருடனும் அமர்ந்து ஒன்றாக உணவு உண்பார்" என்றார். பட மூலாதாரம்,VIJAYAKANTH/FACEBOOK வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்ட விஜயகாந்தின் பிறந்தநாள் சினிமாவில் பல உச்சங்களைத் தொட்ட விஜயகாந்த் 2005-ஆம் ஆண்டு, செப்டம்பர் 14-ஆம் தேதி மதுரையில் மாபெரும் மாநாடை நடத்தி, அதில், ”தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்” என்ற தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு முழு நேர அரசியலில் இறங்கினார். விஜயகாந்த் 2006-இல் கட்சி தொடங்கிய பிறகு, ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த நாளை 'வறுமை ஒழிப்பு தினமாக' கடைபிடித்து வந்தார். அந்நாளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் விஜயகாந்தின் வழியைப் பின்பற்றி ஏழை, எளிய மக்களுக்கான நலதிட்ட உதவிகளை 'இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே' என்ற முழக்கத்தோடு செய்து வருகின்றனர். https://www.bbc.com/tamil/articles/c0xy9pdl4d6o
  8. நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பங்களின் மாதாந்த வருமானம் 60.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், வருமானம் குறைந்துள்ள நிலையில், 91 சதவீதமான குடும்பங்களின் சராசரி செலவு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ள 73.6 சதவீதமான குடும்பங்கள் அதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், மாதாந்த செலவு அதிகரித்துள்ள குடும்பங்களின் உணவுச்செலவு 99.1 வீதத்தாலும், போக்குவரத்து செலவு 83 வீதத்தாலும் அதிகரித்துள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில், பொருளாதார நெருக்கடி காரணமாக 22 குடும்பங்கள் கடன்சுமையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியினால், 21 வயதிற்கு உட்பட்டவர்களில் 54.9 சதவீதமானவர்கள் கல்வியில் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/286184
  9. ராகுலின் சதத்தை விஞ்சியது டீன் எல்கரின் சதம் : 11 ஓட்டங்கள் முன்னிலையில் தென் ஆபிரிக்கா 28 DEC, 2023 | 07:26 AM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் செஞ்சூரியன், சுப்பஸ்போர்ட் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கே.எல். ராகுலின் சதத்தை டீன் எல்கரின் சதம் விஞ்சியதுடன 2ஆம் நாள் ஆட்டத்தில் தென் ஆபிரிக்காவின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இந்தியாவை முதல் இன்னிங்ஸில் 245 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய தென் ஆபிரிக்கா 2ஆம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக நிறுத்தப்பட்டபோது அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 256 ஓட்டங்களைப் பெற்று 11 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது. டீன் எல்கர் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 14ஆவது டெஸ்ட் சதத்தைக் குவித்து ஆட்டம் இழக்காதிருந்தார். ஆரம்ப வீரர் ஏய்டன் மார்க்ராம் 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த போதிலும் டீன் எல்கரும் டோனி டி ஸோஸியும் 2ஆவது விக்கெட்டில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 104 ஓட்டங்களாக உயர்த்தினர். டி ஸோஸி 28 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, கீகன் பீட்டர்சன் ஆடுகளம் நுழைந்த சொற்ப நேரத்தில் 2 ஓட்டங்களுடன் வெளியேறினார். (113 - 3 விக்.) ஆனால், டீன் எல்கர், அறிமுக வீரர் டேவிட் பெடிங்ஹாம் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 123 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் மொத்த எண்ணிக்கையை அண்மிக்க உதவினர். டேவிட் பெடிங்ஹாம் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 56 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து கய்ல் வெரின் 4 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார். மறுபக்கத்தில் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டீன் எல்கர் 211 பந்துகளை எதிர்கொண்டு 23 பவுண்டறிகள் உட்பட 140 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். முன்னதாக போட்டியின் 2ஆம் நாளன்று தனது துடுப்பாட்டத்தை 8 விக்கெட் இழப்புக்கு 208 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இந்தியா, சகல விக்கெட்களையும் இழந்து 245 ஒட்டங்களைப் பெற்றது. இந்திய துடுப்பாட்டத்தில் தனி ஒருவராக பிரகாசித்த கே. எல். ராகுல் 137 பந்துகளில் 14 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 101 ஓட்டங்களைக் குவித்தார். இது அவர் பெற்ற 8ஆவது டெஸ்ட் சதமாகும். முதலாம் நாள் ஆட்டத்தில் விராத் கோஹ்லி 38 ஓட்டங்களையும் ஷ்ரேயாஸ் ஐயர் 31 ஓட்டங்களையும் ஷர்துல் தாகூர் 24 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்துவீச்சில் கெகிசோ ரபாடா 59 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் அறிமுக வீரர் நண்ட்ரே பேர்கர் 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/172593
  10. விஜயகாந்த் காலமானார் பட மூலாதாரம்,VIJAYAKANTH FACEBOOK 28 டிசம்பர் 2023, 03:10 GMT புதுப்பிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு முன்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "நிமோனியாவுக்காக அனுமதிக்கப்பட்ட அவர், வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்களின் தீவிர முயற்சியும் பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டார்" என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக "மருத்துவப் பரிசோதனையில் கேப்டன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்படுகிறது" என்று தேமுதிக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும் விஜயகாந்தின் இல்லத்தில் குவிந்து வருகிறார்கள். விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருக்கும் மியாட் மருத்துவமனையிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருக்கும் விஜயகாந்த் பல தருணங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். கடந்த மாதம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தி கடந்த 11-ஆம் தேதி வீடு திரும்பினார். கட்சியின் பொதுக்குழு கூட்டத்திலும் பங்கேற்றார். செவ்வாய்க்கிழமையன்று மீண்டும் மருத்துவமனை சென்ற விஜயகாந்துக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் காலமானார். தலைவர்கள் இரங்கல் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தின் பதிவில், "உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர்,சகோதரர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். அவர் நல்ல திரைப்படக்கலைஞர், நல்ல அரசியல் தலைவர், நல்ல மனிதர், நல்ல சகோதரர், ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம். சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்றில்லை" என்று கூறியுள்ளார். சிபிஎம் தலைவர் பாலகிருஷ்ணன் தனது இரங்கல் செய்தியில், "அவர் சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது, அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. எதையும் நேர்மையாக, தைரியமாக பேசக்கூடியவர். ஒரு எளிய மனிதன் போல பழகுபவர். சில நாட்களாக சிகிச்சையில் இருந்தார், அப்போது நலம் விசாரித்தேன். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறினார். கவிஞர் வைரமுத்து இரங்கல் பெரும் கலைஞனை இழந்துள்ளேன். என் பாடலை அழகாக பாடிய கதாநயகன், என் நீண்ட கால நண்பரை இழந்துள்ளேன். எரிமலை எப்படி பொறுக்கும் என்று சிவந்த கண்களோடு பேசிய அவர் மறைந்து விட்டார். திரையில் நல்லவர், அரசியலில் வல்லவர். சினிமாவிலும் அரசியலிலும் டூப் போடாமல் இருந்தார். கலைஞர் மறையட்டும் ,ஜெயலலிதா மறையட்டும், அதன் பிறகு அரசியல் பற்றி யோசிக்கலாம் என்று பலர் யோசித்த போது, அவர்கள் இருக்கும் போதே, எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியை எட்டிவிட்டார். ஒரு மதுரைக்காரரை இழந்து விட்டேன். விஜயகாந்த் எதையுமே என்னிடம் மறைத்ததில்லை. எனக்கு பிடித்த தலைவர்கள் பற்றிய பிடிக்காத கருத்துகளை என்னிடம் கூறுவார். பணிவை, கனிவை அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். அவருடைய மண்டபம் இடிபடக் கூடாது என்று கலைஞரிடம் வாதிட்டவர்களில் நானும் ஒருவர். பட மூலாதாரம்,VIJAKANTH விஜயராஜ், விஜயகாந்தாக மாறியது எப்படி ? மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி அழகர்சாமி என்ற ரைஸ் மில் முதலாளியின் மகனாகப் பிறந்தார் விஜயராஜ் என்ற விஜயகாந்த். படிப்பில் பெரிதாக ஆர்வமில்லாமல், விஜயகாந்த் தினமும் நண்பர்களுடன் இணைந்து தியேட்டருக்குச் சென்று எம். ஜி. ஆர் திரைப்படங்கள் பார்ப்பது வழக்கம். "ஒரு கட்டத்தில் எம்ஜிஆரின் திரைப்படங்களை ஒவ்வொரு காட்சியையும் விளக்குமளவிற்கு சினிமாவின் மீது ஆர்வமானார். அதனைத் தொடர்ந்து, விஜயகாந்த் சென்னைக்குச் சென்று சினிமாவில் சாதிக்க வேண்டுமென முடிவெடுத்துவிட்டார்." என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். சென்னை வந்தவரை தமிழ் சினிமா உடனே அள்ளி அணைத்துக் கொள்ளவில்லை. எங்கு சென்றாலும் விஜயகாந்த் கறுப்பு என அவரது நிறத்தைக் காரணம் காட்டியே பல நிராகரிப்புகளை அவர் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. தொடர் முயற்சியால், 1979-ஆம் ஆண்டு எம். ஏ. காஜாவின் இயக்கத்தில் “இனிக்கும் இளமை” என்ற திரைப்படத்தில் நடித்து தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார். எம். ஏ. காஜாவிற்கு விஜயராஜ் என்ற பெயரில் விருப்பமில்லை; அந்தக் காலக்கட்டத்தில் ரஜினிகாந்த் புகழின் உச்சத்திலிருந்ததால் அவரது பெயரிலிருந்த காந்த் என்பதை எடுத்து, விஜயராஜ் என்ற பெயரில் இணைத்து விஜயகாந்த் எனப் பெயர் மாற்றம் செய்தார். பட மூலாதாரம்,VIJAYAKANTH திரைத்துறையில் சாதனை படைத்த விஜயகாந்த் 'சட்டம் ஒரு இருட்டறை', 'தூரத்து இடி முழக்கம்', 'அம்மன் கோவில் கிழக்காலே', 'உழவன் மகன்', 'சிவப்பு மல்லி' என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களுள் ஒருவரானார் விஜயகாந்த். 'வைதேகி காத்திருந்தாள்', 'உழவன் மகன்', 'கேப்டன் பிரபாகரன்','வானத்தைப் போல', 'தவசி', 'ரமணா' என இதுவரை 150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ள விஜயகாந்த், 1984 ஆம் ஆண்டு மட்டும் ஒரே ஆண்டில் 18 திரைப்படங்களில் நடித்து சாதனை புரிந்தார். இயக்குநர் எஸ்.ஏ. சந்திர சேகர் மற்றும் இராம நாராயணன் ஆகிய இருவரும் தான் விஜயகாந்தின் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களை இயக்கினார்கள். அவை பெரும்பாலும் வசூலைக் குவித்தன. 1984 ஆம் ஆண்டு மட்டும் ஒரே ஆண்டில் 18 திரைப்படங்களில் நடித்து வரலாற்றுச் சாதனை புரிந்தார், விஜயகாந்த். https://www.bbc.com/tamil/articles/ce5j35dgpv1o
  11. அமோனியா கசிவு: நள்ளிரவில் கதவைத் தட்டி காப்பாற்றியது யார்? 8 கிராமங்களில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,CCAG/X கட்டுரை தகவல் எழுதியவர், பிரபாகர் தமிழரசு பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் உரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட மக்கள் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண், காது, மூக்கு, நெஞ்சு எரிச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொழிற்சாலையில் உரம் தயாரிப்பதற்கான திரவ அமோனியம் நேரடியாக கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு கடலுக்கு அடியில் உள்ள குழாய் மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அவ்வாறு, திரவ அமோனியாவை தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லும் குழாயில் விரிசல் ஏற்பட்டதால் வாயு கசிந்துள்ளது. இந்த திரவ அமோனியா, காற்றில் கலந்து , சுற்றியுள்ள பகுதிகளில் பரவியுள்ளது. காற்றில் பரவிய அமோனியா வாயுவால், தொழிற்சாலை அமைந்துள்ள பெரியகுப்பம் பகுதி மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள சின்ன குப்பம், உலகநாதபுரம், சத்தியவாணி மூர்த்தி நகர், தாழங்குப்பம் உள்ளிட்ட எட்டு மீனவ கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், விஞ்ஞானிகள், உள்ளிட்டோர் கொண்ட குழு அமைத்துள்ள தமிழ்நாடு அரசு, அந்தக் குழு தொழிற்சாலையை ஆய்வு செய்து அறிக்கையளித்த பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. அதுவரை, அந்த தொழிற்சாலையில் நடைபெறும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தள்ளார். தொழிற்சாலையை தற்காலிகமாக மூடவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கோரமண்டல் நிறுவனம், கடற்கரையோரம் தங்களது அமோனியா இறக்கும் குழாயில் அசாதாரண சூழலை உணர்ந்ததாகவும், உடனடியாக தங்களது நிலையான செயல்பாட்டு முறையை கையாண்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் தெரிவித்துள்ளது. நள்ளிரவில் என்ன நடந்தது? மக்கள் எப்படி உயிர் பிழைத்தார்கள்? அசம்பாவிதத்திற்கு யார் காரணம்? நள்ளிரவில் 8 கிராமங்களில் என்ன நடந்தது? செவ்வாய்க் கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் யாரோ சிலர் எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள வீடுகளின் கதவுகளைத் தட்டியுள்ளனர். மிரண்டு எழுந்த மக்கள், மூச்சுவிட சிரமப்பட்டு, கதவுகளைத் திறந்துள்ளனர். கதவைத் திறந்ததும் சிலர் அங்கேயே மயங்கியுள்ளனர், சிலர் கண் விழிக்க முடியாமலும், சிலர் முக எரிச்சல் தாங்க முடியாமலும், சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டும் அலறித் துடித்து சாலையில் ஓடினர். “சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் திருவொற்றியூர் நோக்கி ஓடிச் சென்று என் குழந்தைகளை விட்டுவிட்டு, பின் மீண்டும் வந்து அக்கம் பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த மக்களையும் கதவைத் தட்டி வெளியேற்றினேன்,” என்கிறார் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த சுபத்ரா. மீனவரான சுபத்ரா, தனது ஐந்து வயது மற்றும் இரண்டு வயது குழந்தைகளுடன் இரண்டு கிலோ மீட்டர் தூரம் ஓடி உயிர் தப்பியுள்ளார். “எனக்கு மூச்சுவிட சிரமமாகத்தான் இருந்தது. ஆனால், எனக்கே அப்படி இருந்தால், எப்படி உணர்கிறோம் என்று சொல்லத் தெரியாத என் குழந்தைகளுக்கு எப்படி இருக்கும் என நினைத்துக் கொண்டுதான், உயிரை கையில் பிடித்துக்கொண்டு அவர்களை காப்பாற்றினேன்,” என்றார் சுபத்ரா. சுபத்ராவைப் போலவே, அந்தச் தொழிற்சாலை அமைந்துள்ள பெரியகுப்பம் பகுதி மக்கள் அனைவரும் தங்களது உடமைகளை விட்டு, ஓடிச் சென்றுதான் உயிர் தப்பியுள்ளனர். நள்ளிரவில் கதவைத் தட்டி காப்பாற்றியது யார்? படக்குறிப்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயமூர்த்தி இரவு 11.30மணிக்கு வாயு கசிவு நடந்திருந்தாலும், வீட்டிற்குள் இருந்ததால், மக்கள் ஆரம்பத்தில் எதுவும் உணராமல் இருந்துள்ளனர். “நாங்கள் மீனவர்கள். என் கணவர் பெரும்பாலும் இரவு நேரத்தில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுவிடுவார். அதனால், இரவு கதவைச் சாத்தினால், அதிகாலையில் தான் திறப்போம். நள்ளிரவில் யாரோ கதவைத் தட்டி கூச்சலிட்டதால் முதலில் திறக்கவில்லை. பின்னர் தான் எனக்குத் தெரிந்தவர்களின் சத்தம் கேட்டு கதவைத் திறந்து வெளியேறினோம்,” என்றார் பெரியகுப்பத்தைச் சேர்ந்த ரோகிணி. சுமார் 11.30 மணியளவில், பெரியகுப்பத்தை கடந்து மற்ற கிராமங்களுக்கு செல்லும் வழிப்போக்கர்கள்தான் இந்த அமோனியா வாயு கசிவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டவுடன், அப்பகுதியில் இருந்த மக்களை வெளியேற்றியதாகக் கூறுகின்றனர் பெரியகுப்பம் கிராம மக்கள். “இந்த ஆலையின் நிர்வாகத்தினரோ, காவல்துறையோ அல்லது அரசு அதிகாரிகளோ எங்களை மீட்கவில்லை. இந்த வழியாகச் சென்றவர்கள்தான் எங்களை வெளியே வரும்படி கதவைத்தட்டி வெளியேற்றினர். இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்றதும்தான் அரசு பேருந்துகளும், ஆம்புலன்ஸ்களும் வந்தன. அங்கிருந்து தான் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்,” என்றார் நந்தினி. வழிப்போக்கர்கள் கதவை தட்டியபோது, பெரியகுப்பத்தில் தன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த விஜயமூர்த்தி, அடித்துப் பிடித்து வெளியேறி, தன் குடும்பத்தினர் மட்டுமல்லாது அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சுமார் 40க்கும் மேற்பட்டவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றியுள்ளார். இப்படி மக்களை மீட்டுக் கொண்டிருக்கும்போதே அமோனியா வாயுவைத் தொடர்ந்து சுவாசித்ததால், சாலையிலேயே ரத்த வாந்தி எடுத்து மயங்கி சரிந்திருக்கிறார் விஜயமூர்த்தி. அங்கிருந்து மீட்கப்பட்ட அவர், தற்போது திருவொற்றியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். “பெரும்பாலான ஆண்கள் மீன்பிடிக்கச் சென்றுவிட்டனர். அதனால், கிராமத்தில் ஆண்கள் குறைந்தளவிலேயே இருந்தோம். அதனால், அனைவரையும் பாதுகாப்பாக மீட்க வேண்டியிருந்தது. இப்போதும் சுவாசப் பிரச்னை இருக்கிறது. மருத்துவர்கள் முதலுதவி செய்து, எக்ஸ் ரே(X ray) மற்றும் பிற சோதனைகள் செய்துள்ளனர். முடிவு வந்த பிறகு தான் என்ன நிலை எனத் தெரியும்,” என்றார் விஜயமூர்த்தி. அமோனியா சுவாசித்த மக்களுக்கு என்னவானது? தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவருக்கும் பொதுவான அறிகுறிகளும், உடல் உபாதைகளும் இருப்பதாக தனியார் மருத்துவமனையின் இயக்குனர் செல்வராஜ் பிபிசியிடம் கூறினார். “அமோனியா சுவாசித்ததாக எண்ணூரில் இருந்து அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மூச்சு விடுவதில் சிக்கல், நெஞ்சு எரிச்சல் மற்றும் கண், காது, மூக்கு மற்றும் தோள்களில் எரிச்சல் உள்ளது. அவர்களுக்கு முதலுதவி செய்து சிகிச்சையளித்து வருகிறோம். குறைந்த பாதிப்பு உள்ளவர்கள் இன்றே வீடு திரும்புவார்கள், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் மட்டும் நாளை வரை மருத்துவமனையில் கண்காணிப்பில் இருப்பார்கள்,” என்றார். இன்று மாலை வரை எண்ணூரில் பாதிக்கப்பட்ட மக்களில், சுமார் 45 பேர் ஒரு தனியார் மருத்துவமனையிலும், 15 பேர் மற்றொரு தனியார் மருத்துவமனையிலும், ஆறு பேர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தின் போது அமோனியா வாயுவை சுவாசித்தவர்கள் மட்டுமின்றி, நிலைமை சரியாகிவிட்ட பின் தங்களது வீடுகளுக்குத் திரும்பச் சென்றவர்களும் அந்த அமோனியா வாயு தாக்கத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று மதியம் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே இருந்தனர். ஒரு தனியார் மருத்துவமனையில், இன்று காலை 11 பேர் மட்டுமே அமோனியா வாயு சுவாசித்ததால், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாலை 4 மணியளவில், அந்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தது. பிபிசி, திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் மூன்று பேர் சுவாசக்கோளாறால் மருத்துவமனைக்கு அவசரமாக அழைந்து வந்து அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் இன்றே வீடு திரும்புவார்கள் என்றும் கூறினார். மேலும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவையும் அரசே ஏற்கும் என்றும் அவர் தெரிவித்தார். தொடரும் மக்கள் போராட்டம் இதற்கிடையே, நேற்று நள்ளிரவு ஊரைவிட்டு வெளியேறிய மக்கள், இன்று காலை மீண்டும் தங்கள் ஊருக்கு வந்து, கோரமண்டல் ஆலையின் நுழைவாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். பிபிசியிடம் பேசிய லட்சுமி ஆலையை நிரந்தரமாக மூடினால் மட்டுமே தங்களது போராட்டத்தை கைவிடுவோம் என்றார். “இயல்பு நிலை திரும்பிவிட்டதாகக் கூறினர். ஆனால், நாங்கள் காலை வீட்டிற்கு திரும்ப வந்து, கதவைத் திறந்ததும், அதே புகை வாசம் இருந்தது. தற்போதும், அந்த வாசம் காற்றில் உள்ளது. இப்படி இருக்கையில், நிலைமை இயல்பாகிவிட்டதாக எப்படிக் கூற முடியும்,” எனக் கேட்டார். மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தபின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதுவரையில், ஆலையின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. எண்ணூரில் நடக்கும் தொடர் விபத்துகளுக்கு என்னதான் தீர்வு? தொழிற்சாலைகள் நிரம்பியுள்ள வட சென்னையின் எண்ணூர் பகுதியில், விஷவாயு கசிவு, அமோனியா வாயு கசிவு, கடலில் எண்ணெய் கலப்பது, மழை நீரில் எண்ணெய் கசிவு என தொடர் விபத்துகளால் எண்ணூர் பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பூவுலகின் நண்பர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், எண்ணூர் பகுதியில் இனி எந்த ஒரு புதிய தொழிற்சாலையோ அல்லது இருக்கும் தொழிற்சாலைகளின் விரிவாக்கமோ அறவே கூடாது என்றார். “எண்ணூர் பகுதி தொழிற்சாலைகளால் ஏற்படும் பாதிப்புகளை தாங்கும் திறனை தாண்டிவிட்டதாக பல ஆண்டுகளுக்கு முன்னரே தேசிய பதுமைத் தீர்பாயத்தின் அறிக்கையில் கூறிவிட்டனர். ஆனாலும், அதனை யாரும் பொருட்டுத்துவதில்லை. அதனால், எண்ணூரை தயவு செய்து தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும்,” என்றார். மேலும் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளும் உயர்தர பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றார். “நிறுவனங்கள் பல ஆண்டுகளாக அங்கேயே செல்பட்டு வருவதால், அவர்கள் அதே பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கழிவுகளை வெளியேற்றி வருகிறார்கள். தற்போதைய பாதிப்புகளை உணர்ந்து, அவர்கள் தங்கள் தொழில்நுட்பத்தை தகவமைத்துக் கொள்ள வேண்டும்,” என்றார். https://www.bbc.com/tamil/articles/c0kyv4ee0rqo
  12. 28 வயதிலேயே 500 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்! மிரண்டு போன இந்திய அணி தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் கசிகோ ரபாடா, சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ரபாடா மிரட்டல் செஞ்சுரியனின் Super Sport Park மைதானத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. AP 24 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் மீட்க போராடினர். ஆனால், ககிசோ ரபாடா (Kagiso Rabada) தனது மிரட்டலான பந்துவீச்சில் ஷ்ரேயாஸ் (31) மற்றும் கோலி (38) இருவரையும் வெளியேற்றினார். Twitter சாதனை அதனைத் தொடர்ந்து அவரது துல்லியமான பந்துவீச்சில் அஷ்வின் (8), ஷர்துல் தாக்கூர் (24) ஆகியோரும் ஆட்டமிழந்தனர். எனிமும் கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி அரைசதம் விளாசினார். இந்திய அணி முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 208 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ரபாடா 5 விக்கெட்டுகளும், பர்கர் 2 விக்கெட்டுகளும், ஜென்சென் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். கே.எல்.ராகுல் 70 ஓட்டங்களுடனும், சிராஜ் ஓட்டங்கள் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். PTI இந்த நிலையில் காகிசோ ரபாடா சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். இதுவரை 6 தென் ஆப்பிரிக்க வீரர்கள் இந்த மைல்கல்லை எட்டிய நிலையில், 28 வயதாகும் ரபாடா 7வது வீரராக இணைந்துள்ளார். https://news.lankasri.com/article/rabada-took-500-international-wickets-centurion-1703607001?itm_source=parsely-external
  13. யாழ் இணையம் இன்னமும் சிலவேளைகளில் குறிப்பாக செய்தி இணைக்க முன்னர் தேடும்போதும் செய்தியை இணைத்து சேமிக்கும்போதும் மெதுவாகத்தான் இயங்குகிறது. மோகன் அண்ணாவும் நிர்வாகிகளும் கவனியுங்கோ. தொடர்ந்து ஏதோ ஒரு வகையில் தொந்தரவு தந்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கோ.
  14. பாவையால் படும்பாட்டை எல்லோரும் எழுதும்போது நல்ல காலம் நான் தப்பிட்டேன் என்று மனதுக்குள் நினைப்பதுண்டு!😇
  15. சிறுவயதில் ஊர் இளைஞர்களுடனும் தந்தையுடனும் சேர்ந்து அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சியும் திருவெம்பாவையும் பாடித்திரிந்திருக்கிறோம்.
  16. Published By: DIGITAL DESK 3 27 DEC, 2023 | 11:12 AM ஜப்பானிய நிதி அமைச்சர் சுனிச்சி சுசுகி, ஜனவரி மாதம் 09 ஆம் திகதி முதல் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை மற்றும் கம்போடியாவிற்கு வருகைதரவுள்ளார். சுனிச்சி சுசுகி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கடன் மறுசீரமைப்பு பற்றி கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. "கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு நிலையான முன்னேற்றம் மிகவும் முக்கியமானது" என சுசுகி ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/172530
  17. படக்குறிப்பு, நள்ளிரவில் திடீரென காற்றில் ஒருவித நெடி பரவத் தொடங்கியதால் அதிர்ச்சியடைந்த மக்கள் தங்கள் வாகனங்களில் அந்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை, எண்ணூரின் பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் எனும் ஒரு உர உற்பத்தி ஆலையில் அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்துள்ளது. கோரமண்டல் ஆலை கடலில் அமைத்துள்ள திரவ அமோனியா வாயு எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா கசிந்ததுள்ளது. எண்ணூர் பகுதியில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய வெள்ளத்தினால் எண்ணெய்க் கழிவுகள் வெள்ள நீரில் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பாதிப்பிலிருந்து எண்ணூர் பகுதி மக்கள் மீள்வதற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. கோரமண்டல் ஆலைக்கான அமோனியா, எண்ணூர் துறைமுகம் வழியாக கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ள 2.5 கி.மீ நீளமுள்ள பைப்லைனைப் பயன்படுத்தி கரையில் உள்ள கோரமண்டல் ஆலைக்கு அனுப்பப்படுகிறது. பட மூலாதாரம்,CCAG/X படக்குறிப்பு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் மக்கள் நள்ளிரவில் கசிந்த அமோனியா நேற்று இரவு 12.45 மணிக்கு அந்த குழாயிலிருந்து அமோனியா கசிவு ஏற்பட்டுள்ளது. கசிவு ஏற்படத் தொடங்கி இரண்டு மணிநேரம் கழித்து, கோரமண்டல் ஆலையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் குழுவினர் அங்கு விரைந்து சென்று கசிவை சரி செய்துவிட்டதாக கோரமண்டல் ஆலை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமோனியா கசியத் தொடங்கியவுடன், பெரியகுப்பம், சின்னக்குப்பம் மற்றும் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் திடீரென காற்றில் ஒருவித நெடி பரவத் தொடங்கியதால் அதிர்ச்சியடைந்த மக்கள் தங்கள் வாகனங்களில் அந்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கோரமண்டல் நிறுவனம் சார்பாக செய்யப்பட்ட சோதனையில், ஆலையின் வளாகத்தில் 400 மைக்ரோ கிராம் இருக்க வேண்டிய அமோனியா 2090 கிராமாக இருந்தது. அதாவது வழக்கத்தை விட ஐந்து மடங்கு அமோனியா காற்றில் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடல் நீரில் லிட்டருக்கு 5 மி.கி இருக்க வேண்டிய அமோனியா 49 மி.கி என இருந்துள்ளது. இதனால் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே இனி குழாயை பதிக்க வேண்டும் மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. பட மூலாதாரம்,CCAG/X படக்குறிப்பு, வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் அன்புமணி ராமதாஸ் கூறியது என்ன? இது குறித்து பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தனியார் தொழிற்சாலையின் அலட்சியம் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகளால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு அதிர்ச்சியளிக்கிறது. எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து ஆலைக்கு அமோனியா வாயு கொண்டு வருவதற்காக குழாய் சேதமடைந்தது தான் வாயுக்கசிவுக்கு காரணம் ஆகும். எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனத்தில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்ததால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் முழுமையாக களையப்படாத நிலையில் அடுத்து வாயுக்கசிவு ஏற்பட்டிருக்கிறது. எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் போதிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.” என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES கோரமண்டல் ஆலை மீது நடவடிக்கை தேவை- பூவுலகின் நண்பர்கள் பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "பெரிய குப்பம் மீனவர் கிராமத்தில் இரவு தூங்கிக் கொண்டிருந்த மீனவமக்கள் சுவாசிக்க முடியாமல், மூச்சுவிட முடியாமல், நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு பலர் மயக்கமடைந்துள்ளனர்" "ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஒட்டுமொத்த மக்களும் பயந்து நள்ளிரவில் ஊரை விட்டு வெளியேறி 8 முதல் 10 கி.மீ. தொலைவு தாண்டி சமுதாயக் கூடங்கள், கோயில்கள், தேவாலயங்கள், மருத்துவமனைகளில் தஞ்சமடைந்தனர். திருவொற்றியூர் முதல் எண்ணூர் தாழங்குப்பம் வரை உள்ள கிராம மக்கள் அனைவரும் தெருக்களில் மாஸ்க் அணிந்தவாறு அச்சத்துடன் கூட்டம் கூட்டமாக இருந்துள்ளனர்" "30க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மூலம் மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள செய்தி வருத்தமளிக்கிறது. இதுமட்டுமின்றி எண்ணூரில் கடற்கரையோரம் மீன்கள், நண்டுகள், இறால்கள் ஏராளம் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. கடல் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது. "கசிவால் பாதிப்படைந்த கிராமங்கள் ஒவ்வொன்றிலும் சுகாதாரத்துறை சிறப்பு முகாம்களை அமைக்க வேண்டும், பொதுமக்களுக்கு ஏற்பட்ட சுகாதார பாதிப்புகளுக்கான இழப்பீட்டை கோரமண்டல் நிறுவனமே வழங்க வேண்டும்" என்று அந்த இயக்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் கோரமண்டல் உள்ளிட்ட சிவப்பு வகை தொழிற்சாலைகளின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டு ஆலைகளின் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககமும், தமிழ் நாடு கொதிகலன்கள் இயக்குனரகம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் இயக்கம் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cyxvww5e67go
  18. கே.எல் ராகுல் போராட்டத்தால் தப்பித்த இந்தியா, வாய்ப்பை இழந்த தென் ஆப்பிரிக்கா பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ரபாடா தனது துல்லியமான பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்தபோதிலும், கே.எல்.ராகுலின் தீர்மானமான போராட்டத்தால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஓரளவு கவுரமான ஸ்கோருடன் தப்பித்துள்ளது. செஞ்சூரியனில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல்நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால், 59 ஓவர்களுடன் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களுடன் ஓரளவுக்கு பாதுகாப்பான நிலையை எட்டியுள்ளது. இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட கே.எல்.ராகுல் 70 ரன்களுடனும், சிராஜும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். கே.எல்.ராகுல் மட்டும் நடுவரிசையில் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்க்காமல் இருந்திருந்தால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். 2021ம் ஆண்டில் இதே செஞ்சூரியன் ஆடுகளத்தில் இந்திய அணி 113 ரன்களில் வென்றபோது ராகுல் சதம் அடித்திருந்தார். அதேபோன்ற ஆட்டத்தை நேற்றும் வெளிப்படுத்தினார். ஆனால், கே.எல்.ராகுல் களத்தில் வெளிப்படுத்திய தன்னம்பிக்கை, 80 சதவீதம் மிகுந்த கட்டுப்பாடுடன், ஒழுக்கத்துடன் அடிக்கப்பட்ட ஷாட்கள், பாரம்பரிய கிரிக்கெட் முறையை பின்பற்றியவிதம் ஆகியவைதான் அவரை களத்தில் நங்கூரமிடச் செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிடாமல் இருந்திருந்தால், இந்தியா 250 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்க இருக்கும் நிலையில், ஆடுகளம் காலையில் ஈரப்பதத்துடன் இருக்கும். களத்தில் டெய்லெண்டரான முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மட்டுமே உள்ளனர். இருவரும் தென் ஆப்பிரிக்காவின் ஸ்விங் பந்துவீச்சையும், காலை நேரத்தில் ஈரப்பதத்துடன் இருக்கும் ஆடுகளத்தில் வேகமாக வரும் பந்துகளை எதிர்கொள்வார்களா என்பது சந்தேகம்தான். ஸ்ட்ரைக்கே ராகுல் தொடர்ந்து வைத்துக்கொள்ளும்பட்சத்தில் இந்திய அணி 250 ரன்கள் வரை சேர்க்கலாம். இல்லாவிட்டால் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க நேரிடலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வீரர்கள் ஷர்துல் தாக்கூர் மற்றும் கே.எல்.ராகுல் வரலாறு படைக்குமா இந்தியா இந்திய அணி கடந்த 1992 முதல் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 8 டெஸ்ட் தொடர்களில் இரு அணிகளும் விளையாடியுள்ளன. ஆனால், இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரைக் கூட கைப்பற்றியதில்லை. 2010-11ம் ஆண்டில் நடந்த டெஸ்ட் தொடரை மட்டும் கங்குலி கேப்டன்ஷியில் தொடரை சமன் செய்தது. மற்றவகையில் இதுவரை எந்த தொடரையும வென்றதில்லை. தென் ஆப்பிரிக்காவில் இதுவரை இந்திய அணி 2006, 2010, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. அதாவது தென் ஆப்பிரிக்காவில் நடந்த 15 டெஸ்ட்போட்டிகளில் இந்திய அணி 4 ஆட்டங்களில் மட்டுமே வென்றுள்ளது, 17 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வென்றுள்ளது, 10 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. அதிலும் முதல் டெஸ்ட் நடந்துவரும் செஞ்சூரியன் மைதானத்தில் கடந்த 2021ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவை 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று வரலாறு படைத்தது. அந்த நம்பிக்கையில்தான் இந்த ஆட்டத்திலும் இந்திய வீரர்கள் விளையாடுகிறார்கள். இந்திய அணி தற்போது தலைமுறை மாற்றத்துக்கு தயாராகி வருகிறது. சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் போன்றோருக்கு பதிலாக இளம் வீரர்களை உருவாக்கும் கட்டாயத்தில் இருக்கிறது. இதனால்தான் ஒவ்வொரு ஆட்டமும் இந்திய அணிக்கு கத்தியின் மீது நடப்பது போல்இருக்கிறது. சீனியர் வீரர்கள், ஜூனியர் வீரர்கள் கலந்து போட்டியை எதிர்கொண்டு வருகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென் ஆப்பிரிக்க அணி வாய்ப்பை இழந்த தென்ஆப்பிரிக்கா இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. தென்ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பல வாய்ப்புகளை தவறவிட்டனர், கேட்சுகளையும் பீல்டர்கள் கோட்டைவிட்டனர். தென் ஆப்பிரிக்காவில் காகிசோ ரபாடா, யான்செனைத் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 3 பந்துகளை தவறான லென்த்தில்தான் பந்துவீசினர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் இன்னும் கட்டுக்கோப்புடனும், ஒழுக்கத்துடனும் பந்துவீசியிருந்து, பீல்டர்கள் கேட்சுகளை கோட்டைவிடாமல் இருந்திருந்தால், இந்திய அணியை 150 ரன்களில் சுருட்டியிருக்கலாம். முதல் நாளில் தென் ஆப்பிரிக்கா கை ஓங்கியிருக்கும். அந்த வாய்ப்பை பந்துவீச்சாளர்கள், பீல்டர்கள் தவறவிட்டனர். திசைமாறிய ஆட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராத் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா செஞ்சூரியன் ஆடுகளம் கடினமானது, வேகப்பந்துவீச்சாளர்களுக்கே சாதகமானது. இந்த ஆடுகளத்தில் காலை நேரத்தில் நிலவும் ஈரப்பதம், கடினத்தன்மையைப் பயன்படுத்தி, இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர். ஆனால், கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் இருவருக்கும் 2 கேட்சுகளை கோட்டைவிட்டபோது, ஆட்டம் திசைமாறியது. ரபாடா கூட தொடக்கத்தில் சிறிது லைன் லென்த்தை கண்டுபிடித்து பந்துவீச சிரமப்பட்டார். ஆனால், சரியான இடத்தைக் கண்டறிந்து அதில் பந்துவீசத் தொடங்கியும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 14-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையும் படைத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஷர்துல் தாக்கூர் தவறான ஷாட்கள் இந்திய அணி டெஸ்ட் அனுபவம் குறைந்த ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மாவுடன் களமிறங்கியது. முதல் 11 ஓவர்களில் 17 முறை தவறான ஷாட்களை ஆடி 3 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் பந்து அதிகமாக ஸ்விங் ஆகும் என்பது தெரிந்ததே, அதைத் தெரிந்து கொண்டு பேட்டை நீட்டி விளையாடுவது இதுபோன்ற நிலைக்குத் தள்ளிவிடும். அதிலும் ரோஹித் சர்மாவின் பலவீனத்தைத் தெரிந்து கொண்ட ரபாடா ஷார்ட் பந்துவீச, சொல்லிவைத்தார்போல் ஃபைன்லெக் திசையில் கேட்ச் கொடுத்து 5 ரன்னில் வெளியேறினார். அனுபவம் குறைந்த ஜெய்ஸ்வால் அவுட்சைட் ஆஃப் ஸ்டெம்ப் சென்ற பந்தை தேவையின்றி தொட்டு 17 ரன்னில் பர்கரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இதுபோன்ற வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் 3 ஸ்லிப் பீல்டர்களை நிறுத்திவைத்து பந்துவீசும்போது, அவுட்சைட் ஆஃப்திசையில் செல்லும் பந்துகளுக்கு மதிப்பளித்து லீவ் செய்ய வேண்டும் இல்லாவிட்டால், இக்கட்டான நேரத்தில் இதுபோன்று விக்கெட்டுகளை இழக்கநேரிடும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்தே கில் பேட்டிங்கில் ஃபார்ம் இழந்து தவித்து வருகிறார். டெஸ்ட் போட்டியிலும் அவரின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. பர்கர் வீசிய அருமையான அவுட் ஸ்விங்கில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து கில் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த 3 விக்கெட்டுகளுமே தவறான ஷாட்களை ஆடியதால், இழக்க நேர்ந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட கோலி, ஸ்ரேயாஸ் அடுத்துவந்த விராட் கோலி, ஸ்ரேயாஸ் இருவரும் நிதானமாக ஆடி மதிய உணவு இடைவேளை வரை தாக்குப்பிடித்தனர். இருவரும் 4 ரன்கள் சேர்த்திருந்தபோது கேட்சை தென் ஆப்பிரிக்க பீல்டர்கள் கோட்டைவிட்டனர். ஆனால், அந்த வாய்ப்பைக் கூட கோலியும், ஸ்ரேயாஸும் பயன்படுத்தவில்லை. ஏற்கெனவே செய்த தவறுக்குத்தான் 3 விக்கெட்டுகளை இந்திய அணிஇழந்திருந்த நிலையில், கோலிக்கும், ஸ்ரேயாஸுக்கும் கிடைத்த அதிர்ஷ்ட வாய்ப்பை தக்கவைக்க இருவருமே தவறவிட்டனர். ரபாடா வீசிய துல்லியமான பந்தை டிபென்ட் செய்து பேக்ஃபுட்டில் ஆட ஸ்ரேயாஸ் முயன்றபோது க்ளீன் போல்டாகியது. 31 ரன்னில் ஸ்ரேயாஸ் வெளியேறினார். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர். அடுத்த சிறிது நேரத்தில் ரபாடாவின் மின்னல் வேக ஸ்விங் பந்துவீச்சுக்கு விராட் கோலி இரையாகினார். ரபாடா 142 கி.மீ வேகத்தில் வீசிய அவுட் ஸ்விங்கில், கோலியின் பேட்டில் பட்டு பந்து உரசிச் சென்று விக்கெட் கீப்பரிடம் தஞ்சமடைந்தது. விராட் கோலி 38 ரன்னில் பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சரிவிலிருந்து மீட்ட ராகுல் கே.எல்.ராகுல் களத்தில் இருந்தபோது இந்திய அணி 107 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது. அடுத்துவந்த அஸ்வினும் 8 ரன்னில் வெளியேறினார். 92 ரன்கள் வரை இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தநிலையில், அடுத்த 28 ரன்களுக்குள், மேலும் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்திய அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டபின், தொடர்ந்து நெருக்கடி கொடுக்க தென் ஆப்பிரி்க்கப் பந்துவீச்சாளர்கள் தவறிவிட்டனர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் உணவு இடைவேளைக்குப்பின் லைன் லென்த்தை தவறவிட்டு, தவறான லென்த்தில் பந்துவீசியதால், கே.எல்.ராகுல் ஷாட்களை அடித்து வேகமாக ரன்களைச் சேர்க்கத் தொடங்கினார். கே.எல்.ராகுல் தன்னுடைய பேட்டிங்கில் எந்த தவறான ஷாட்களையும் பெரும்பாலும் அடிக்காமல் 80 சதவீத ஷாட்களை கட்டுக்கோப்பாகவே ஆடினார். அதனால்தான் இதுபோன்ற ஆடுகளத்தில் அரைசதம்அடித்தநிலையிலும் களத்தில் நங்கூரமுடிந்தது. கே.எல்.ராகுல் தான் சந்தித்த ஒவ்வொரு 9 பந்துகளுக்கும் ஒரு பவுண்டரி அடித்தால்தான் உணவு இடைவேளைக்குப்பின் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஆடுகளம் பேட்டர்களுக்கு ஒத்துழைக்காமல் முழுக்க டிபென்ஸ் ப்ளே ஆடுவதற்கு ஏதுவாக இல்லை. இருப்பினும், ராகுலின் நேர்த்தியான பேட்டிங், பொறுமை, தவறான பந்துகளை மட்டுமே ஷாட்களாக மாற்றுவது என பாரம்பரிய கிரிக்கெட்டை மறக்காமல் பேட் செய்தார். கடந்த 2021ம் ஆண்டு செஞ்சூரியனில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்களில் வென்றது. அந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுலின் சதம்தான் இந்திய அணி வெல்வதற்கு முக்கியக் காரணமாகஅமைந்தது. அதுபோல் இந்த ஆட்டத்திலும் கே.எல்.ராகுல் சதமும், இந்திய அணியின் வெற்றியும் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/cjrge27jzeyo
  19. ஆழிப்பேரலையை நினைவுகூரும் சிற்ப கண்காட்சி! 26 DEC, 2023 | 02:42 PM ஆழிப்பேரலை பேரிடர் ஏற்பட்டு 19 ஆம் ஆண்டை நினைவுகூரும் பல்வேறு நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில் ஆழிப் பேரலை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வும் அத் தாக்கத்தை எடுத்துக்காட்டும் சிற்பக் கண்காட்சியும் தெல்லிப்பழை ஆனந்தன் சிற்பாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றது. ஆழிப்பேரலை தாக்கத்தை சித்தரிக்கும் விதமாக செதுக்கப்பட்ட நினைவுச் சின்னத்திற்கு முன்னால் சுடரேற்றி உயிரிழந்த மக்கள் அஞ்சலி செலத்தியதையடுத்து இவற்றுடன் தத்துரூபமாகச் செதுக்கப்பட்ட பல்வேறு சிற்பங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/172502
  20. மிக்க நன்றி அண்ணை. மிக்க நன்றி அண்ணை.
  21. சர்ச்சைக்குரிய தடுப்பூசி இறக்குமதி : கெஹெலியவிடம் வாக்குமூலம் பதிவு! சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தற்போது வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர். இதற்காக, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பிலுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இல்லத்துக்கு இன்று (26) முற்பகல் சென்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, சர்ச்சைக்குரிய தடுப்பூசியை இறக்குமதி செய்த நிறுவனத்தின் உரிமையாளர் சுகத் ஜானக பெர்னாண்டோ ஆகியோர் முன்னதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அத்தோடு இந்த சம்பவம் தொடர்பில் மருத்துவ விநியோக பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்ரமநாயக்க உள்ளிட்ட நால்வர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். https://thinakkural.lk/article/285992
  22. Published By: DIGITAL DESK 3 26 DEC, 2023 | 02:30 PM தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இல்லத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை (26) சென்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இதன்போது ரம்புக்வெல்லவுக்காக சட்டத்தரணிகள் குழுவொன்றும் அங்கு ஆஜராகியிருந்தது. இச்சம்பவம் தொடர்பில் சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/172505
  23. சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை இரண்டு நிமிட மௌன அஞ்சலி ! 26 DEC, 2023 | 09:07 AM சுனாமி அனர்த்தம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் 'தேசிய பாதுகாப்பு தினம்' இன்று செவ்வாய்கிழமை (26) அனுஷ்டிக்கப்படுகிறது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமிப் பேரலையில் இலங்கையில் 35,000க்கும் அதிகமானோர் உயிரிழந்ததோடு, 5,000க்கும் அதிகமானோர் காணாமல் போயினர். அதன்படி, 2005ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் வகையில் இன்று காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்படவுள்ளது. இன்று அனுஷ்டிக்கப்படும் தேசிய பாதுகாப்பு தினத்தையொட்டி, சுனாமி குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சுனாமி அபாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதிய வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/172482
  24. போர் நிறுத்தத்திற்கு தயாராகும் புட்டின் ரஷ்யா கடந்த ஆண்டு தனது அண்டை நாடுகளில் ஒன்றான உக்ரைன் மீது போர் தொடுத்தது. அந்த போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து மிகப்பெரிய பாதிப்புகளை ரஷ்யா ஏற்படுத்தி உள்ளது. என்றாலும் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து பதிலடி தாக்குதல்களை மேற்கொள்கிறார்கள். உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படைகள் கணிசமான இடத்தை தங்கள் வசம் கைப்பற்றி வைத்துள்ளன. என்றாலும் உக்ரைனை இது வரை ரஷ்யாவால் பணிய வைக்க இயலவில்லை. உக்ரைன் நாட்டுக்கு சர்வதேச அளவில் பல நாடுகள் உதவி செய்து வருகின்றன. இதன் காரணமாக ரஷ்யாவால் முழுமையாக போரை முடிக்க இயலவில்லை. இந்த நிலையில் உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக ரஷ்யாவுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்புகள் ஏற்பட தொடங்கி உள்ளன. இதையடுத்து உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி புட்டின் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அதை அவர் இதுவரை அதிகாரப் பூர்வமாக வெளியிடவில்லை. மிக இரகசியமாக அவர் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது. உக்ரைனுக்கும் தனக்கும் நெருக்கமாக இருக்கும் சிலர் மூலம் போர் நிறுத்தம் செய்ய கடந்த செப்டெம்பர் மாதம் புட்டின் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக மீண்டும் அவர் போர் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாக தெரிகிறது. https://thinakkural.lk/article/285883

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.