Everything posted by ஏராளன்
-
பாலியல் வல்லுறவு குற்றவாளிகளை விடுவித்த உச்சநீதிமன்றம்: இந்திய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய உத்தரவு
பில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகள் விடுதலை ரத்து - குஜராத் அரசு பற்றி உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? பட மூலாதாரம்,CHIRANTANA BHATT 8 ஜனவரி 2024, 05:35 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 11 பேரின் விடுதலையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி, குற்றவாளிகள் மன்னிப்புக் கோரிய மனுவை விசாரித்த குஜராத் அரசு, 11 குற்றவாளிகளை விடுதலை செய்திருந்தது. தண்டனையில் விலக்கு அளிக்கவோ அல்லது எந்த முடிவையும் எடுக்கவோ குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசு முடிவெடுப்பதுதான் பொருத்தமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் இந்த உத்தரவை வழங்கியுள்ளனர். குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கியதன் மூலம் குஜராத் அரசு உண்மைகளை புறக்கணித்துள்ளது என்று நீதிபதிகள் கூறினர். குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சரணடையுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி, குற்றவாளிகளின் பொது மன்னிப்பு மனு மீது நடவடிக்கை எடுத்து, 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்தது. குற்றவாளிகள் அனைவரும் கோத்ரா துணை மாவட்ட சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அரசின் பொது மன்னிப்புக் கொள்கையின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த சமயத்தில் குஜராத் அரசு கூறியிருந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது. 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது பில்கிஸ் பானுவின் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டதுடன் அவர் கூட்டு பாலியல் வல்லுறவுக்கும் ஆளானார். இந்த வழக்கு இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகள் 11 பேரை குஜராத் அரசு விடுதலை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பில்கிஸ் பானுவும் அதனை எதிர்த்து மனு தாக்கல் செய்தார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தலைவர் சுபாஷினி அலி, பத்திரிகையாளர் ரேவதி லோல், லக்னோ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரூப் ரேகா வர்மா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா ஆகியோர் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசின் வாதம் என்ன? குற்றவாளிகள் 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்ததாகவும் அவர்களின் நடத்தையை கருத்தில் கொண்டு விடுவிக்கப்பட்டதாகவும் உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு கூறியது. மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் குஜராத் அரசு தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், பில்கிஸ் பானோ வழக்கில் குற்றவாளிகள் 11 பேரை விடுவித்ததற்கும், மூன்றாம் தரப்பு மனுதாரர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது. குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளித்த குஜராத் அரசு, 'காவல்துறை கண்காணிப்பாளர், சிபிஐ சிறப்புப் பிரிவு மும்பை மற்றும் சிறப்பு சிவில் நீதிபதி (சிபிஐ), சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம், கிரேட்டர் பாம்பே' என்று ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. கோத்ரா சிறை கண்காணிப்பாளருக்கு சிபிஐ எழுதியுள்ள கடிதத்தில், இவர்கள் செய்த குற்றம் கொடூரமானது மற்றும் தீவிரமானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. குஜராத் அரசு, “உண்மையில் அரசியல் ஆர்வலரான மனுதாரர் (சுபாஷினி அலி), கிரேட்டர் மும்பை சிறப்பு நீதிபதியால் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளை விடுவிக்கும் குஜராத் அரசின் முடிவை எதிர்த்து எந்த அடிப்படையில் மேல்முறையீடு செய்கிறார் என்பதை தெளிவுபடுத்தவில்லை? மனுதாரர் மாநில அரசின் முடிவில் எப்படி அதிருப்தி அடைகிறார் என்பதை விளக்கவில்லை. மேலும், இந்த மனுவில் அழுத்தமான வாதங்கள் மற்றும் அடிப்படை உரிமை மீறல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை," என்று வாதிட்டது. பட மூலாதாரம்,PRAKASH SINGH/GETTY IMAGES உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான குஜராத் அரசின் முடிவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், “குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432 வது பிரிவின் படி, வழக்கு விசாரணை செய்யப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்ட அரசாங்கத்திற்கேமன்னிப்பு வழங்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. குற்றம் நடந்த இடத்திலோ, குற்றவாளிகள் தண்டனை அனுபவிக்கும் இடத்திலோ இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.” என்று கூறியுள்ளது. நீதிபதி நாகரத்னா தீர்ப்பில், “இந்த விதியில் வழக்கு எந்த மாநிலத்திற்கு மாற்றப்பட்டது என்பதையும் உள்ளடக்கியது. இந்த அடிப்படையில் மட்டுமே, நிவாரண உத்தரவு ஒதுக்கி வைக்கப்படும். இந்த விஷயத்தில் குஜராத் அரசின் இந்த முடிவை எடுப்பதற்கான திறன் மிகவும் முக்கியமானது. ஆனால், முழுப் பிரச்சினையும் இங்கு முடிவதில்லை. 2022ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைக் குறிக்கும் வகையில் பொது மன்னிப்பு மனுவை குஜராத் அரசு பரிசீலிக்க வேண்டும். இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வந்த மனுவில் பல முக்கிய விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன. பம்பாய் உயர்நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு, தலைமை நீதிபதியின் கருத்து, குற்றவாளி ராதேஷ்யாம் ஷாவின் ரிட் மனுவில் சேர்க்கப்படவில்லை. மேலும் விண்ணப்பத்தில் தவறான தகவல்களும் கூறப்பட்டுள்ளன. எனவே இந்த முடிவு செல்லாது” என்றார். இந்த பொதுமன்னிப்பு முடிவு சட்டப்பூர்வமானதா என்ற கேள்விக்கு விளக்கம் அளித்த நீதிபதி நாகரத்னா, “இந்த விவகாரத்தில் குஜராத் அரசு தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது. ஆகவே பொதுமன்னிப்பு முடிவு ரத்து செய்யப்பட வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார். படக்குறிப்பு, குற்றவாளிகள் 11 பேரும் விடுதலை செய்யப்பட்ட போது குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு கிடைத்தது எப்படி? பொது மன்னிப்பு மனுக்களை பரிசீலனை செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில், இந்த வழக்கில் தண்டனை பெற்ற அனைவரும் குஜராத் அரசின் பொது மன்னிப்புக் கொள்கையின் கீழ் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மே 11, 2022 அன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பொது மன்னிப்பு வழங்க குஜராத் அரசு முடிவு செய்திருந்தது. இந்த வழக்கில் குஜராத் அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு குஜராத் அரசு கட்டுப்பட்டு இருப்பதாக கூறினார். இந்த வழக்கில் அரசின் பொது மன்னிப்பு கொள்கையின் கீழ் முடிவு எடுக்க வேண்டும் என்றும், இந்த விண்ணப்பங்கள் குறித்து அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் வாதாடினார். குஜராத்தின் 1992-ஆம் ஆண்டு பொது மன்னிப்புக் கொள்கையின்படி அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி எஸ்.வி. ராஜூ, 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் பில்கிஸ் பானுவின் மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து எடுக்கப்பட்ட குஜராத் அரசின் பொது மன்னிப்பு முடிவை அவர் ஆதரித்தார். இந்த குற்றவாளிகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தனர். அதில் ஒருவர் முன்கூட்டியே விடுதலை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் பொது மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு குஜராத் அரசை கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டதையடுத்து, அரசு ஒரு குழுவை அமைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த குழுவின் தலைவராக பஞ்சமஹால் மாவட்ட ஆட்சியர் சுஜல் மயாத்ரா இருந்தார். இந்த குற்றத்திற்காக தண்டனை பெற்ற ஜஸ்வந்த்லால் பாய், கோவிந்த் பாய், ஷைலேஷ் பட், ராதேஷ்யாம் ஷா, பிபின்சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, பிரதீப் மோர்தியா, பகபாய் வோஹானியா, ராஜூபாய் சோனி, மிதேஷ் பட் மற்றும் ரமேஷ் சந்தனா ஆகியோர் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகளை விடுவிப்பதற்கான முடிவுக்குப் பிறகு, பிபிசி குஜராத்தி பில்கிஸ் பானுவின் குடும்பத்தினரிடம் பேசி அவர்களின் மனநிலையை அறிய முயன்றது. அப்போது அவர்கள், “குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதையடுத்து, பில்கிஸ் பானு மற்றும் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். அவர்கள் அச்சத்தில் உள்ளனர்" என தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES பில்கிஸ் பானு வழக்கின் பின்னணி 2002 குஜராத் கலவரத்தின் போது, ஆமதாபாத் அருகே உள்ள ரந்திக்பூர் கிராமத்தில் ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு ஒரு கும்பலால் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார். மேலும், மூன்று வயது மகள் சலேஹாவும் கொடூரமாக கொல்லப்பட்டார். அப்போது பில்கிஸ் பானுவுக்கு சுமார் 20 வயது. பாலியல் வல்லுறவுக்குப் பின்னர் அவநம்பிக்கையான நிலையில் பில்கிஸ் பானு அருகேயுள்ள மலைப்பகுதிக்கு சென்று தன் உயிரை காப்பாற்றினார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, போலீசார் சிலர் பில்கிஸ் பானுவை மிரட்டி ஆதாரங்களை அழிக்க முயன்றனர். அவரது குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்யப்பட்டன. பில்கிஸ் பானுவை பரிசோதித்த மருத்துவர், அவர் பாலியல் வல்லுறவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பில்கிஸ் பானுவுக்குக் கொலை மிரட்டல்களும் வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், பில்கிஸ் பானு தொடர்ந்து போராடி குற்றவாளிகளை அடையாளம் காட்டினார். 2004-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்த பிறகு முதல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உதவியுடன், பில்கிஸ் பானு வழக்கு மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது, குஜராத் நீதிமன்றங்களால் நீதி வழங்க முடியாது எனக்கூறி பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. நீதிக்கான 17 ஆண்டுகால போராட்டத்தில், பில்கிஸ் பானு மற்றும் அவரது கணவர் யாகூப் ரசூல் ஐந்து குழந்தைகளுடன் பத்து வீடுகளை மாற்ற வேண்டியிருந்தது. 2017-ஆம் ஆண்டு பிபிசியின் கீதா பாண்டேவுக்கு அளித்த பேட்டியில், "காவல்துறையும் அமைப்பும் எப்போதும் தாக்குதல் நடத்துபவர்களை ஆதரித்துள்ளது. குஜராத்தில் கூட நாங்கள் வாயை மூடிக்கொண்டு இருக்கிறோம். எங்கள் முகவரியை யாருக்கும் கொடுக்க மாட்டோம்" என்று பில்கிஸ் பானு கூறினார். பில்கிஸ் பானுவுக்கு மகள்கள் ஹஜ்ரா, பாத்திமா, சலேஹா என 3 மகள்களும் யாசின் என்ற மகனும் உள்ளனர். தன் கண் முன்னே கொலை செய்யப்பட்ட மகளின் சலேஹா என்ற பெயரை இளைய மகளுக்கு சூட்டியுள்ளார் பில்கிஸ் பானு. பிடிஐ செய்தி முகமையின்படி, ஜனவரி 21, 2008 அன்று, மும்பையில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் பில்கிஸ் பானுவின் ஏழு குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்துவிட்டு, பில்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த 11 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மும்பை உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு முன்னதாக ஏப்ரல் 2019-இல், உச்ச நீதிமன்றம் குஜராத் அரசுக்கு ரூ. 50 லட்சம் வழங்க உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. பில்கிஸ் பானுவுக்கு விதிகளின்படி அரசு வேலை மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை ஏற்பாடு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு ஒரு பெண்ணாகவும் நாட்டின் குடிமகளாகவும் தனது கண்ணியத்தை மீட்டெடுத்ததாக பில்கிஸ் பானு அப்போது கூறினார். பில்கிஸ் பானு பாலியல் வல்லுறவு வழக்கில் சாட்சியங்களை சிதைக்க முயன்றதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட அதிகாரிகள் பலரின் ஓய்வூதிய பலன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. https://www.bbc.com/tamil/articles/c9e25v9l1p3o
-
மாலத்தீவு - லட்சத்தீவு ஒப்பீடு: இரண்டில் சுற்றுலா செல்ல சிறந்தது எது?
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் லட்சத்தீவு பயணத்தின் புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து தொடங்கிய விவாதம் தற்போது மாலத்தீவை எட்டியுள்ளது. பிரதமர் மோதி மற்றும் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்களை அந்நாட்டு அரசு இடைநீக்கம் செய்துள்ளது. இந்த கருத்துக்கு இந்தியாவை சேர்ந்த பல தலைவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாலத்தீவு தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் அங்குள்ள சுற்றுலாத் துறைக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. அக்ஷய் குமார், சல்மான் கான், சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரபலங்கள் பலரும் சுற்றுலாப் பயணத்தின் போது இந்திய கடற்கரைகள் மற்றும் தீவுகளுக்கு முன்னுரிமை கொடுப்பது குறித்து பேசியுள்ளனர். இந்த முழு விவாதமும் பிரதமர் மோதியின் லட்சத்தீவு பயணத்தின் போது தொடங்கியது. அந்த பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியான நிலையில், சமூக ஊடகங்களில் ஒரு பிரிவினர் இனி விடுமுறைக்கு மாலத்தீவுக்குப் பதிலாக லட்சத்தீவுக்குச் செல்லுங்கள் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES மாலத்தீவு - லட்சத்தீவு ஒப்பீடு இதுபோன்ற சமூக ஊடக பதிவுகளுக்கு பதில் அளிக்கும் போது, மாலத்தீவு அமைச்சர்கள், லட்சத்தீவுகளுடன் மாலத்தீவுகளை ஒப்பிடுவது சரியல்ல என்று ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தினர். மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகளை ஒப்பிடும் போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். இந்தியாவில் இருந்து மாலத்தீவை அடைவது எளிதானது. மேலும், குறைந்த நேரத்தில் அங்கு சென்றுவிடலாம். இந்தியாவிலிருந்து மாலத்தீவுக்கு செல்ல விசா தேவையில்லை. அதேசமயம், லட்சத்தீவு செல்ல உரிய அனுமதி பெற வேண்டும். இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் விமானங்கள் உள்ளன. அதேசமயம், லட்சத்தீவுக்கு குறைவான விமானங்களே உள்ளன. லட்சத்தீவுகளும் மாலத்தீவுகளும் வெவ்வேறான சூழல்களை கொண்டவை. அவற்றை ஒப்பிடுவது சரியா என இக்கட்டுரையில் பார்ப்போம். பட மூலாதாரம்,GETTY IMAGES மாலத்தீவு பற்றி தெரியுமா? மாலத்தீவில் 'மால்' என்ற வார்த்தை 'மாலா' என்ற மலையாள வார்த்தையிலிருந்து வந்தது. மாலத்தீவில், 'மால்' என்றால் மாலை மற்றும் ’தியு’ என்றால் தீவு. 1965-இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இங்கு முடியாட்சி இருந்தது. பின்னர், நவம்பர் 1968-இல் குடியரசாக அறிவிக்கப்பட்டது. மாலத்தீவு இந்தியாவின் தென்மேற்கில் அமைந்துள்ளது. இந்திய நகரமான கொச்சியில் இருந்து மாலத்தீவுக்கு சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரம் உள்ளது. இது 1,200 தீவுகளைக் கொண்டது. பெரும்பாலான தீவுகள் மக்கள் வசிக்காதவை. மாலத்தீவின் பரப்பளவு 300 சதுர கிலோமீட்டர். அதாவது, டெல்லியை விட இது ஐந்து மடங்கு சிறியது. மாலத்தீவின் மக்கள் தொகை சுமார் நான்கு லட்சம். மாலத்தீவில் திவேஹி மற்றும் ஆங்கிலம் பேசப்படுகிறது. அங்குள்ள தீவுகள் எதுவும் கடல் மட்டத்திலிருந்து ஆறு அடிக்கு மேல் இல்லை. காலநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயரும் அபாயத்தில் மாலத்தீவு உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த நாட்டின் பொருளாதாரம் சுற்றுலாவை நம்பியே உள்ளது. இங்குள்ள தீவுகளின் பொருளாதாரமும் சுற்றுலாவையே சார்ந்துள்ளது. மாலத்தீவின் பொருளாதாரத்தில் தேசிய வருவாயில் கால் பகுதிக்கு மேல் சுற்றுலாத்துறையில் இருந்து வருகிறது. 2019-ஆம் ஆண்டில், ஒவ்வொரு ஆண்டும் மாலத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 20 லட்சமாக இருந்தது. ஆனால், கொரோனா காலத்தில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. மாலத்தீவுக்குச் செல்பவர்களில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்களே. கடந்தாண்டு இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு சுமார் 2 லட்சம் பேர் சென்றுள்ளனர். 2021-இல் இந்த எண்ணிக்கை சுமார் மூன்று லட்சமாகவும், 2022-இல் இந்த எண்ணிக்கை இரண்டரை லட்சமாகவும் இருந்தது. மாலத்தீவின் ஊடக அமைப்பான AVAS-ன்படி, மாலத்தீவுக்கு வரும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியர்கள்தான். இங்கு நீலக் கடலால் சூழப்பட்ட வெள்ளை மணல் கடற்கரைகளைக் கொண்ட தீவுகள், உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. மாலத்தீவுக்கு எந்த நாட்டிலிருந்து எத்தனை பேர் வருகிறார்கள்? இந்தியா: 2 லட்சத்து 5 ஆயிரம் ரஷ்யா: 2 லட்சத்து 3 ஆயிரம் சீனா: 1 லட்சத்து 85 ஆயிரம் பிரிட்டன்: 1 லட்சத்து 52 ஆயிரம் ஜெர்மனி: 1 லட்சத்து 32 ஆயிரம் இத்தாலி: 1 லட்சத்து 11 ஆயிரம் அமெரிக்கா: 73 ஆயிரம் பட மூலாதாரம்,GETTY IMAGES மாலத்தீவில் என்னென்ன இடங்கள் உள்ளன? கொச்சியில் இருந்து மாலத்தீவுக்கு ஜனவரி 26-ம் தேதி செல்ல வேண்டும் என்றால், விமான டிக்கெட்டுக்கு சுமார் ரூ.10 ஆயிரம் செலவாகும். மாலத்தீவு செல்ல இரண்டு மணிநேரம் ஆகும். மாலத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் கூற்றுப்படி, மாலத்தீவில் 175 ஓய்வு விடுதிகள், 14 ஹோட்டல்கள், 865 விருந்தினர் இல்லங்கள், 156 கப்பல்கள், 280 ’டைவ்’ மையங்கள், 763 பயண முகவர் நிலையங்கள் மற்றும் ஐந்து சுற்றுலா வழிகாட்டி நிறுவனங்கள் உள்ளன. மாலத்தீவில் பார்க்க வேண்டிய இடங்கள். சூரிய தீவு ஒளிரும் கடற்கரை ஃபிஹாலஹோஹி தீவு மாலே நகரம் மாஃபுஷி செயற்கை கடற்கரை மாமிகிலி பல பயண வலைத்தளங்களின்படி, மாலத்தீவுக்குச் செல்ல சிறந்த மாதங்கள் ஜனவரி-ஏப்ரல். மே முதல் செப்டம்பர் வரை மாலத்தீவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாக இருக்கும். ஒருநாளைக்கு மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் கட்டணம் சுமார் ரூ.5 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது. பட மூலாதாரம்,ANI லட்சத்தீவு பற்றி தெரியுமா? லட்சத்தீவு இந்தியாவின் யூனியன் பிரதேசமாகும். மாலத்தீவு லட்சத்தீவில் இருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கேரளாவின் கொச்சியிலிருந்து 440 கிலோமீட்டர் தொலைவில் லட்சத்தீவு உள்ளது. லட்சத்தீவு என்பது 36 சிறிய தீவுகளின் கூட்டமாகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 96 சதவீதம் பேர் முஸ்லிம்கள். லட்சத்தீவின் மொத்த மக்கள் தொகை சுமார் 64 ஆயிரம். லட்சத்தீவின் பரப்பளவு சுமார் 32 சதுர கிலோமீட்டர்கள். அதாவது, மாலத்தீவின் பரப்பளவை விட இது சுமார் 10 மடங்கு குறைவு. லட்சத்தீவில் உள்ள 10 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். கவரட்டி, அகட்டி, அமினி, கத்மட், கிலாடன், செட்லாட், பித்ரா, ஆண்டோ, கல்பானி மற்றும் மினிகாய் ஆகியவை இதில் அடங்கும். பித்ராவில் 271 பேரும், வெறிச்சோடிய பங்காரம் தீவில் 61 பேரும் மட்டுமே வசிக்கின்றனர். இங்கு மலையாள மொழி பேசப்படுகிறது. மினிகாயில் மட்டுமே மக்கள் மாஹே பேசுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES மீன் பிடித்தல் மற்றும் தென்னை சாகுபடி ஆகியவை லட்சத்தீவில் உள்ள மக்களின் முக்கிய வருமான ஆதாரங்கள். லட்சத்தீவில் சுற்றுலாத் துறையும் வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்தாண்டு லட்சத்தீவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 25 ஆயிரம் என்று சில ஊடகச் செய்திகள் தெரிவித்தன. அதாவது, மாலத்தீவு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு குறைவு. அகட்டியில் விமான ஓடுதளம் உள்ளது, கொச்சியிலிருந்து அங்கு செல்லலாம். அகட்டியில் இருந்து கவரட்டி மற்றும் கடமட் வரை படகுகள் உள்ளன. அகட்டியில் இருந்து கவரட்டிக்கு ஹெலிகாப்டர் சேவை உள்ளது. கொச்சியில் இருந்து அகட்டிக்கு விமானத்தில் செல்ல சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகும். கொச்சியில் இருந்து 14 முதல் 18 மணிநேரத்தில் கப்பல் மூலம் லட்சத்தீவு சென்றடையலாம். இங்கு செல்வதற்கு எவ்வளவு பணமும் நேரமும் செலவிடப்படும் என்பது நீங்கள் எந்த தீவுக்குச் செல்கிறீர்கள், எத்தனை நாட்களுக்குச் செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. பட மூலாதாரம்,FACEBOOK/NARENDRA MODI லட்சத்தீவில் பார்க்க வேண்டிய இடங்கள்: கவரட்டி தீவு கலங்கரை விளக்கம் ஜெட்டி தலம், மசூதி அகட்டி பங்காரம் தின்னகர மாலத்தீவுகளைப் போலவே லட்சத்தீவுகளிலும் வெள்ளை மணல் கடற்கரைகள் உள்ளன. மே முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டம் இங்கு செல்ல சிறந்த நேரம். இங்கு வெப்பநிலை 22 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். டிசம்பர் முதல் பிப்ரவரி வரை இங்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், லட்சத்தீவுக்குச் செல்ல, நீங்கள் நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். மேலும் இங்குள்ள பல தீவுகளுக்குள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது அல்லது அரசாங்க அனுமதி தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். லட்சத்தீவு என்ற பெயரின் கதையும் சுவாரஸ்யமானது. லட்சத்தீவு என்றால் மலையாளம் மற்றும் சமஸ்கிருதத்தில் ஒரு லட்சம் தீவுகள் என்று பொருள். பட மூலாதாரம்,LAKSHADWEEP.GOV.IN லட்சத்தீவு பேசுபொருளானது ஏன்? சமீபத்தில், பிரதமர் மோதி லட்சத்தீவுக்கு சென்ற போது, பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியின்படி, பிரதமர் மோதியின் சமீபத்திய பயணமும் பாஜகவின் தேர்தல் வியூகத்துடன் தொடர்புடையது. பிரதமர் மோதி தனது சமீபத்திய பயணத்தின் போது, "2020-இல், அடுத்த 1,000 நாட்களில் லட்சத்தீவில் வேகமான இணையம் இருக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளித்தேன்" என்று கூறியிருந்தார். ”இன்று தொடங்கப்பட்டுள்ள ஆப்டிகல் ஃபைபர் திட்டம் 100 மடங்கு வேகமான இணைய வேகத்தை உங்களுக்கு வழங்கும்” என அவர் தெரிவித்தார். ’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியில், நாட்டின் மற்ற பகுதிகளில் வெற்றி பெற்ற பாஜகவால் கேரளாவில் இதுவரை வெற்றி பெற முடியவில்லை, இந்த சூழலில் கேரளாவுக்குள் நுழைய லட்சத்தீவு நுழைவுவாயிலாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. பிரஃபுல் படேல் 2020 முதல் லட்சத்தீவின் நிர்வாகியாக உள்ளார். லட்சத்தீவில் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்தும், சில நேரங்களில் வெள்ளிக்கிழமை விடுமுறையை ஞாயிற்றுக்கிழமையாக மாற்றுவது குறித்தும் சர்ச்சை எழுந்துள்ளது. லட்சத்தீவில் இந்திய கடலோர காவல்படை செயல்பாட்டில் உள்ளது. இதுதவிர, ஐஎன்எஸ் த்வீபிரக்ஷக் கடற்படை தளமும் கட்டப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES ராகுல் காந்தியைத் தவிர, லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசலின் வேட்புமனுவும் கடந்தாண்டு ரத்து செய்யப்பட்டது. ஜனவரி 11, 2023 அன்று, லட்சத்தீவு நீதிமன்றம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. முகமது ஃபைசலுக்கு கொலை முயற்சி வழக்கில் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவரது உறுப்பினர் பதவியை ரத்து செய்து மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது. ஜனவரி 25, 2023 அன்று, கேரள உயர் நீதிமன்றம் தண்டனையை பத்து ஆண்டுகள் நிறுத்தி வைத்தது. மாலத்தீவில் ‘இந்தியாவை வெளியேற்றுவோம்’ (India Out) என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்தித்த முகமது முய்ஸு, வெற்றி பெற்ற பின், இந்தியா தனது படைகளை திரும்ப பெறுமாறு கூறினார். பட மூலாதாரம்,@NARENDRAMODI என்ன சர்ச்சை? லட்சத்தீவில் டிசம்பர் 17-ம் தேதி வாராந்திர விடுமுறை வெள்ளிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டது. லட்சத்தீவில் வெள்ளிக்கிழமை தோறும் தொழுகையில் ஈடுபடுவதற்காக பல தசாப்தங்களாக அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. லட்சத்தீவைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி. முகமது ஃபைசல் இந்த முடிவு ஒருதலைபட்சமானது என எதிர்த்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கலந்தாலோசிக்காமல் பிரஃபுல் படேல் ஒருதலைபட்சமான முடிவுகளை எடுப்பதாக அவர் கூறியிருந்தார். இங்கு பள்ளி நேரமும் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணியாக மாற்றப்பட்டது. லட்சத்தீவு மற்றும் மாலத்தீவுகள் இரண்டும் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மாலத்தீவில் இந்தியாவின் இருப்பு வலுவிழந்தால், சீனா மாலத்தீவுக்கு மிக நெருக்கமாகிவிடும். லட்சத்தீவில் பாதுகாப்பு விஷயத்தில் ஏதேனும் குளறுபடிகள் ஏற்பட்டால், தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கான வாய்ப்பு ஆழமாகிவிடும். நவம்பர் 26, 2008 அன்று மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இருந்து லட்சத்தீவின் நிலைமையை புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. கேரளாவின் கடலோரப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் லட்சத்தீவு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/c4ny8p8e8k9o
-
லசந்த விக்ரமதுங்கவின் 15 ஆவது வருட நினைவு தினம்: சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிவிப்பு
லசந்தவை நினைவுகூருவதுடன் வடக்கு, கிழக்கில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களையும் நினைவுகூருவோம் - ரெய்சா விக்கிரமதுங்க Published By: RAJEEBAN 08 JAN, 2024 | 05:31 PM இனவெறி, அதிகார வெறி ஊழல் அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்பதை தவிர்ப்போம் என வேண்டுகோள் விடுத்துள்ள ரெய்சா விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவை மாத்திரமல்லாமல் அடிக்கடி பெயர்கள் மறக்கப்படும் வடக்கு கிழக்கை சேர்ந்த கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களை நினைவுகூருவோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். டுவிட்டர் பதிவில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியுள்ளதாவது : பாலஸ்தீனம், சூடான், கொங்கோ, யேமன் மற்றும் தாய்நாட்டுக்கு அருகில் பலோச்சிஸ்தான் ஆப்கானிஸ்தான் மியன்மாரிலிருந்து நாளாந்தம் மரணங்கள், காணாமல் போதல், காயங்கள், பசிபட்டினி குறித்து இருள்மயமான தகவல்கள் வெளியாகின்றன. இலங்கையர்களுக்கு இந்த காட்சிகள் பழக்கமானவை. நாங்கள் யுத்தத்தை அனுபவித்த நாட்டை சேர்ந்தவர்கள் லசந்தவின் மரணம் யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்புகளில் ஒன்று என ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் அவரது மகள் சுட்டிக்காட்டியுள்ளது போல கொல்லப்படுவதற்கு முன்னர் எனது அங்கிள் போர் சாதனமொன்று குறித்த செய்திகளை வெளியிட்டு வந்தார். கசப்பான உண்மைகளை வெளியிட்டு வந்தார். இலங்கையர்களான எங்களுக்கு மறப்பதே தேசப்பற்று என சொல்லப்பட்டுவந்துள்ளது, அதாவது இறுதிக்கட்ட போரின்போது இழக்கப்பட்ட உயிர்கள் பெரும் வெற்றிக்காக செலுத்தப்படவேண்டிய சிறிய விலை என எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இன்று நாங்கள் உலகம் எங்கிலும் மக்கள் அமைதி சமாதானத்திற்காக பேரணியாக செல்வதை பார்க்கின்றோம், அவர்கள் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன சிறுவர்களின் பெயர்களை வாசிக்கின்றனர். கொங்கோவிற்காக நிதி திரட்டுகின்றனர், டார்பூரில் இடம்பெறும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் எழுப்புகின்றனர். இந்த தருணத்தில் இளம் செயற்பாட்டாளர்கள் ஆச்சரியம் ஏற்படுத்தும் தார்மீக தெளிவை, முன்னோக்கி அணிவகுத்து செல்வதற்கு தாங்கள் தயார் என்பதை மாத்திரம் வெளிப்படுத்தவில்லை. மாறாக பகிஷ்கரிப்பு, புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கும் தங்களை பிரதிநிதித்துவம் செய்பவர்களை நோக்கி வேண்டுகோள்களை விடுப்பதற்கும் உலகில் இடம்பெறும் வன்முறைகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களை அறிவதற்கும் தாங்கள் தயார் என்பதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். லசந்த விக்கிரமதுங்கவை நினைவுகூருவதற்காக நாங்கள் அணிதிரண்டுள்ள இந்த தருணத்தில் இது குறித்து சிந்திப்பது பொருத்தமானது என நான் கருதுகின்றேன். அதிகாரம் குறித்து அதிகம் சிந்தித்த, ஊழல் அரசியல்வாதிகளையும் வர்த்தகர்களையும் அம்பலப்படுத்த முயன்றமைக்காக பெரும் விலையை செலுத்திய அவர் தற்போது எங்கள் மத்தியில் இல்லை என்றாலும் அவர் பணியாற்றிய அனைத்து ஆசிரிய பீடங்களையும் கடந்து சென்ற அனைத்து பத்திரிகையாளர்களிடமும் அவரது பாரம்பரியம் உயிர் வாழ்கிறது. அவர்களில் பலர் தொடர்ந்தும் ஊடகங்களில் பணியாற்றுவதுடன் தங்கள்அறிவை இளம் தலைமுறையினரிடம் பகிர்ந்துகொள்கின்றனர். இன்று உலகில் மாத்திரமல்ல இலங்கையிலும் ஈவிரக்கமற்ற சூழல் நிலவும் காலம். விலைகள் விண்ணை தொடுகின்றன- வரிகள் நாளாந்தம் அதிகரிக்கின்றன ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த ஒரு வருடகாலத்திற்கு மேல் வேண்டுகோள் விடுக்கின்ற போதிலும் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் நேர்மையான மாற்றத்திற்கான விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை. மறப்பதே தேசப்பற்று என மீண்டும் அவர்கள் எங்களிற்கு தெரிவிக்கின்றனர். பலர் அதனை ஏற்க தயாராக உள்ளனர் குறிப்பாக கொழும்பில். மாறாக ஒரு ஓரமாக நின்று கொண்டு கைகளை உயர்த்துவதற்கு பதில் நாங்கள் மறப்பதற்கு பதில் நினைவுகூருவதற்கு திடசங்கற்பம் பூணுவோம் என நான் முன்மொழிகின்றேன். லசந்த விக்கிரமதுங்கவை அவரது நகைச்சுவை உணர்வு, அவரது இரக்க குணம் ஒரு செய்திக்காக அவர் தொடர்ந்து முயற்சித்தல் போன்றவற்றை மாத்திரம் நினை கூருவதுடன் மாத்திரமல்லாமல் அவரை போன்ற அச்சமில்லாத தங்கள் உயிர்களை இழந்த ஊடகவியலாளர்கள் ஊடகப்பணியாளர்களை நினைவில்வைத்திருப்போம். குறிப்பாக அடிக்கடி பெயர்கள் மறக்கப்படும் வடக்கு கிழக்கை சேர்ந்த பத்திரிகையாளர்களை நினைவு கூருவோம். தேர்தல் என வரும்போது எங்கள் வாக்கை செலுத்தும் தருணம் வரும்போது நாங்கள் மனச்சாட்சியின் அடிப்படையில் வாக்களிப்போம் - இனவெறியர்களை ஊழல் அதிகார வெறிமிகுந்த அரசியல்வாதிகளை தவிர்ப்போம். எனது அங்கிள் தற்போதுஇருந்தால் அவர் தீவிரமாக செயற்படுவார் மக்களை சரியான தெரிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளும் கடுமையான தலையங்கங்களை எழுதுவார். ஆகவேநாம் சரியான தெரிவுகளை மேற்கொள்வோம். நினைவுகூருவோம் தொடர்ந்தும் எதிர்ப்போம். https://www.virakesari.lk/article/173448
-
தேசிய வருமான வரி : வருடத்திற்கு 12 இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுபவர்கள் உட்பட 14 தொழிற்துறைகளை சார்ந்தவர்கள் பதிவு செய்தல் கட்டாயம்
TIN எண் வரி ஏய்ப்பவர்களை அடையாளம் காண உதவும் – பேராசிரியர் அத்துகோரல 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் கட்டாய வருமான வரி பதிவு செய்வதை எதிர்ப்பவர்கள் வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு மறைமுக ஆதரவாளர்கள் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் வரிக் கோப்பினைத் திறந்து, அதனுடன் தொடர்புடைய எண்ணை வழங்க உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் எடுத்த தீர்மானம் மிக முக்கியமான நடவடிக்கை என்றும், வரி எண்ணைக் கொண்டிருப்பது அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என அர்த்தமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் பிரஜைகள் தொடர்பான துல்லியமான தரவு முறைமை உருவாக்கப்படும் என்றும், இதுவரை வரி செலுத்தும் கட்டமைப்பில் இல்லாதவர்கள் மற்றும் வேண்டுமென்றே வரி செலுத்துவதைத் தவிர்க்கும் நபர்களை அடையாளம் காண்பதற்கான பின்னணியை இது வழங்கும் என்றும் பேராசிரியர் அத்துகோரள தெரிவித்தார். ஒரு நாட்டில் 18 ஆண்டுகள் நிறைவடைந்த ஒவ்வொரு நபருக்கும் வரி எண் இருக்க வேண்டும் என்றும், அவர்களின் வருமானம், செலவுகள் மற்றும் சொத்துக்கள் குறித்த சரியான தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் வரி அட்டவணையை அரசு உருவாக்க முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இத்திட்டம் தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், வரி ஏய்ப்பு செய்பவர்களை இனங்கண்டு, முறைப்படி வரி செலுத்துபவர்களாக அமைப்பதற்கான பின்னணியை இது வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், ஓன்லைனில் வரி எண் பெறுவதில் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலை இருப்பதாகவும், இதனால் பதிவு பெறுவதில் மக்களின் ஆர்வம் குறையலாம் என்றும் அவர் கூறினார். வரி எண்ணைப் பெற விரும்பும் கிராமப்புற மக்கள் சிரமமின்றி, வரி எண் பெறும் முறைகளை எளிமையாக்குவது வருவாய்த் துறையின் பொறுப்பாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார். https://thinakkural.lk/article/287433
-
லசந்த விக்ரமதுங்கவின் 15 ஆவது வருட நினைவு தினம்: சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிவிப்பு
அனைத்து ஊடகவியலாளர்களையும் மௌனிக்க வைக்கும் உள்நோக்கத்துடன் லசந்த கொல்லப்பட்டார் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க அனைத்து ஊடகவியலாளர்களையும் மௌனிக்க வைக்கும் உள்நோக்கத்துடன் கொல்லப்பட்டதாகவும், அவர் கொல்லப்பட்டு 15 வருடங்கள் கடந்தும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த அதிகாரிகள் தவறியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. லசந்த 15 வருடங்களுக்கு முன்னர் இன்று போன்ற ஒரு நாளில் பட்டப்பகலில் கொல்லப்பட்டார் என்றும், இன்றுவரை ஒரு குற்றவாளியும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது என சங்கத்தின் தலைவர் கௌசல்யா நவரத்ன தெரிவித்துள்ளார். “அரசாங்க அதிகாரத்தை திணிப்பதன் மூலம் பத்திரிகையாளர்களை மௌனமாக்க முயல்வது, கருத்து மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கலாம்” என சிரேஷ்ட வழக்கறிஞர் கூறியுள்ளார். “ஜனநாயகத்தின் தூண்களில் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால், இதுபோன்ற கொடூரமான கொலைகள் ஒரு சமூகத்தில் நடைபெறாது. ஆசிரியர் விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் ஒரு உள்நோக்கம் இருந்தது. இதன் மூலம் அனைத்து பத்திரிக்கையாளர்களையும் வாயடைத்து விடலாம் என அதிகாரிகள் நினைத்தனர்,” என்றார். கொலை நடந்து 15 ஆண்டுகள் ஆன பிறகும், குற்றவாளிகளைக் கைது செய்து, அவர்களுக்குத் தண்டனை பெற்று, நீதியைக் காப்பாற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களில் ஒருவராக லசந்த விக்கிரமதுங்க போன்றவர்கள் பெரிதும் தவறவிடப்படுவார்கள் என சட்டத்தரணி நவரத்ன தெரிவித்தார். https://thinakkural.lk/article/287415
-
பங்களாதேஷின் சர்ச்சைக்குரிய தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சி வெற்றி
வங்காளதேசம்: : 5 ஆவது முறையாக பிரதமராகிறார் ஷேக் ஹசீனா வங்காளதேச நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த போதே ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 50 சதவீத இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இதனால் ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக வங்காளதேச நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார். 300 இடங்களில் 264 இடங்களுக்கான முடிவு அறிவிக்கப்பட்டபோது ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 204 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதன் கூட்டணி கட்சியான ஜதியா கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் மொத்தம் 350 தொகுதிகள் உள்ளன. இதில் 50 தொகுதிகளுக்கு அரசாங்கத்தால் பெண் எம்.பி.க்கள் நியமிக்கப்படுவர். எனவே 300 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். ஆனால் ஒரு வேட்பாளர் மரணம் அடைந்ததால் மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலை நியாயமான முறையில் நடத்த ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவ வேண்டும். அதன் தலைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆளும் அவாமி லீ கட்சி தலைமையிலான அரசாங்கம் அதனை ஏற்கவில்லை. இதனால் பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. மேலும் இந்த தேர்தலை புறக்கணிப்பதாகவும் அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் பிரதமரும், பங்களாதேஷ் தேசியவாத கட்சி தலைவருமான கலீதா ஜியா (வயது 78) வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் வாக்குச்சாவடி மையங்களாக அமைக்கப்பட்ட 5 பள்ளிக்கூடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது. இந்த பதற்றத்துக்கு மத்தியில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. எனவே தேர்தலை அமைதியான முறையில் நடத்த நாடு முழுவதும் பொலிஸார், இராணுவத்தினர் என சுமார் 7½ இலட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். https://thinakkural.lk/article/287355
-
இந்த ஆண்டில் இலங்கை எதிர்நோக்கும் 5 முக்கிய சவால்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சம்பத் தசநாயக்க பதவி, பிபிசி சிங்களா 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2022ம் ஆண்டு வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாது, வங்குரோத்து அடைந்த இலங்கைக்கு, ஐ.எம்.எப் கடன் திட்டத்தின் ஊடாக 2023ம் ஆண்டு நிவாரணம் கிடைத்திருந்தது. பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருந்த இலங்கை, பல சவால்களுக்கு மத்தியில் 2024ம் ஆண்டிற்குள் பிரவேசித்துள்ளது. ஆண்டொன்று முடிவடைந்து, புதிய ஆண்டொன்று பிறக்கும் போது பலர், பல்வேறு சவால்கள் மற்றும் இலக்குகளை கொண்டிருப்பார்கள். குறிப்பாக வீடொன்றை நிர்மாணித்தல், காரொன்றை வாங்குதல் உள்ளிட்ட இலக்குகளை தன்னகத்தே கொண்டிருப்பார்கள். எனினும், அந்த இலக்கை நோக்கி நகர்வதை விடவும், 2024ம் ஆண்டு தமக்கு கிடைக்கும் வருமானத்தில் அடிப்படை செலவுகளை முகாமைத்துவம் செய்துக்கொள்வதற்கு, அது இலகுவான விடயமாக இருக்காது. பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருந்த மக்களுக்கு, 2024ம் ஆண்டு மேலும் பிரச்னைகளை எதிர்நோக்கும் ஆண்டாக அமையும் என்பதாகும். 2022ம் ஆண்டு வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாது, வங்குரோத்து அடைந்த இலங்கைக்கு, ஐ.எம்.எப் கடன் திட்டத்தின் ஊடாக 2023ம் ஆண்டு குறிப்பிடத்தக்களவு நிவாரணம் கிடைத்திருந்தது. நான்கு வருட கடன் திட்டத்தின் கீழ், இரண்டாவது தவணை கடனுதவி இலங்கைக்கு தற்போது கிடைத்துள்ளது. இலங்கை பொருளாதார ரீதியில் மீண்டும் வழமைக்கு திரும்ப வேண்டும் என்றால், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில் செயற்பட வேண்டும். அந்த பயணம் மிகவும் கடினமானது. சாதாரண மக்களுக்கு பிரச்னைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். வங்குரோத்து அடைந்த நாடொன்று, ஏனைய நாடுகளிடமிருந்தோ அல்லது நிறுவனங்களிடமிருந்தோ கடன் உதவிகளை பெற்றுக்கொள்ளாமையினாலும், வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ளாமையினாலும் 2024ம் ஆண்டில் இலங்கை அதே கடின பாதையில் பயணிக்க வேண்டியிருக்கும் என அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையிலிருந்து சுமார் 1500 முதல் 2000 வரையான மருத்துவர்கள் வரை கடந்த ஆண்டில் வெளிநாடு சென்றனர். 'இதற்கு அப்பால் ஒரு சிக்கல் உள்ளது' ''ஆடு பாலத்திலிருந்து வெளியில் வந்தாலும், இதற்கு அப்பால் பிரம்மையொன்றே உள்ளது" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இலங்கை பொருளாதாரம் குறித்து ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார். ''சரியான பாதையில் செல்லாவிட்டால், கஷ்டத்தில் வீழ்வோம். வனத்திற்குள் செல்வோம்" எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ''சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய, இந்த வழியாக சென்று, வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்பினால் மாத்திரமே, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளிலிருந்து வெளியில் வர முடியும்" எனவும் அவர் கூறுகின்றார். இதேவேளை, தொழில் வல்லுநர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தமையே 2023ம் ஆண்டு நாடு எதிர்நோக்கிய பாரிய சவாலாக காணப்பட்டது. அதிக வரிச் சுமையே அதற்கான காரணம் என அவர்கள் கூறுகின்றனர். சுமார் 1500 முதல் 2000 வரையான மருத்துவர்கள் வரை கடந்த ஆண்டில் வெளிநாடு சென்றிருந்ததுடன், 500 பேர் வரை பிரித்தானிய சுகாதார சேவைக்கு சென்றிருந்தனர். மருத்துவர்களுக்கு மேலதிகமாக தாதியர்கள், கணக்காளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை தேடி சென்றிருந்தார்கள். கடும் போர் நிலவிய இஸ்ரேல் நாட்டிற்கு கூட இந்த நாட்டு இளைஞர், யுவதிகள் செல்லும் அளவிற்கான பாரிய பட்டியலொன்று காணப்பட்டது. தமது உயிரை பணயம் வைத்தேனும், தமது கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மக்கள் மத்தியில் காணப்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அமைந்தது. இதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில்;, 2024ம் ஆண்டு காலப் பகுதியிலும் பெருந்திரளான இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறும் எண்ணிக்கையில் குறைவு காணப்படாது. இந்த நிலைமையின் கீழ் 2024ம் ஆண்டில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை மிகவும் விரைவான மற்றும் புத்திசாலிதனமான விதத்தில் நடாத்தி செல்ல வேண்டியுள்ளது. இதன்படி, ஜனாதிபதி கூறும் விதத்தில் ஆடு பாலத்திலிருந்து வெளியேறியிருந்தாலும், பிரம்மைக்கு மத்தியில் இலங்கை எதிர்நோக்கும் சவால்கள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வட் வரி விதிப்பினூடாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்த வண்ணம் இருக்கிறது. 1. வாழ்க்கை செலவு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் தேதி முதல் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் என்றால், அது மிகையாகாது. 15 வீதமாக இதுவரை காணப்பட்ட வருமானம் சேர் வரி (வட் வரி), ஜனவரி முதலாம் தேதி முதல் 18 வீதமாக அதிகரித்துள்ளமையே இதற்கான காரணமாகும். இதுவரை வட் வரிக்கு உட்படுத்தப்படாத சுமார் 250 பொருட்கள் மற்றும் சேவைகள் மீதும் இந்த ஆண்டு வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வட் வரி அறவீட்டு விநியோக வரம்பு, ஆண்டொன்றிற்கு 80 முதல் 60 வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுவரை வட் வரி செலுத்தாத குழுவொன்று, இந்த வட் வரி செலுத்துவதற்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இதன்படி, வட் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், மக்களின் வாழ்க்கை செலவு அதிகரிக்கப்படும். டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றிற்கு வட் வரி உரித்தாவதுடன், இதுனூடாக அனைத்து பொருட்களுக்குமான விலைகள் அதிகரிக்கப்படுகின்றன. இதன்படி, போக்குவரத்து செலவுகளும் அதிகரிக்கப்படுகின்றன. உணவகங்களில் தேநீர் ஒன்றின் விலை 5 ரூபாவாலும், உணவு பொதி ஒன்றின் விலை 25 ரூபாவாலும் அதிகரிக்கப்படுகின்றது. இந்த மாதத்திற்கு நீர் கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது. 2024ம் ஆண்டு வட் வரியின் ஊடாக அரசாங்கத்திற்கு 1400 பில்லியன் ரூபா வருமானமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வட் வரி அதிகரிப்பினால், தொலைபேசி கட்டணங்கள், டேடா கட்டணங்கள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவைகளின் கட்டணங்களும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் தேதி முதல் அதிகரிக்கப்படுவதாக அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு தொலைபேசி அழைப்புக்கள், SMS சேவைகள் உள்ளிட்ட மேலதிக சேவைகள் மற்றும் Pay TV சேவை ஆகியவற்றுக்கு 42.02 வீதத்தினால் வரி அதிகரிக்கப்படுகின்றது. Data, Wi-Fi சேவை மற்றும் சர்வதேச தொலைபேசி அழைப்புக்களுக்கான கட்டணங்கள் 23.50 வீதத்தினால் அதிகரிக்கப்படுகின்றன. முற்கொடுப்பனவு Data கார்ட்டிற்கான Data கோட்டா குறைக்கப்பட்டுள்ளதுடன், அதில் வரி உள்ளிட்ட கட்டணத்தில் மாற்றம் கிடையாது. அத்துடன், கையடக்கத் தொலைபேசியின் விலை 35 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என கையடக்கத்தொலைபேசி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். வரி திருத்தம் காரணமாக மேலதிக செலவீனமொன்று ஏற்படுகின்ற போதிலும், சிலர் கூறும் விதத்தில் அதிகரிப்பு ஏற்படாது என நிதி அமைச்சு குறிப்பிடுகின்றது. 2024ம் ஆண்டு தலா தேசிய உற்பத்திக்கு ஒத்ததாக, வட் வரி வருமானம் 4 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2022ம் ஆண்டின் ஆரம்பத்தில் 22 முதல் 25 ரூபாவாக காணப்பட்ட உள்நாட்டு முட்டையின் விலை, தற்போது 50 முதல் 55 ரூபா வரை காணப்படுகின்றது. 2. ஊட்டச்சத்து பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையே, அதிக சவால் நிறைந்ததாக காணப்படுகின்றது. 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் குடும்பமொன்றின் மாதாந்த செலவீனமாக 177,687.44 ரூபா பதிவாகியிருந்ததாக குடிசன மதிப்பீட்டு திணைக்களத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறான செலவீனமொன்றை செலவிடும் அளவிற்கு மத்திய தர குடும்பமொன்றிற்கு முடியுமா?. நாளாந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் மற்றும் மாதாந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு இவ்வளவு பெரிய வருமானம் கிடைக்குமா? இவ்வாறான நிலைமைக்கு மத்தியில், இந்த மக்கள் 2024ம் ஆண்டு மேலும் வறுமை நிலைமையை நோக்கி நகருவார்கள். அவர்களின் கடன் சுமை மேலும் அதிகரிக்கும். பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களுக்கான சம்பளம் கடந்த காலங்களில் அதிகரிக்கப்படவில்லை. வீட்டு கூலி, நீர், மின்சார, எரிபொருள், தொலைத்தொடர்பு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள பின்னணியில், மக்கள் அசாதாரண நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர். மீன், இறைச்சி ஆகியவற்றை உட்கொள்வதை விடவும், மூன்று வேளை உணவு உட்கொள்வதே மிகவும் சிரமமான சவாலாக காணப்படுகின்றது. 2024ம் ஆண்டு வாழ்க்கை செலவு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஊட்டச்சத்து மிக்க உணவு உட்கொள்வதும் மக்களுக்கு சவாலாக அமைந்துள்ளது. குறைந்த விலையில் புரோட்டின் தேவைகளை முட்டையின் ஊடாகவே பலர் நிவர்த்தி செய்துக்கொள்கின்றனர். 2022ம் ஆண்டின் ஆரம்பத்தில் 22 முதல் 25 ரூபாவாக காணப்பட்ட உள்நாட்டு முட்டையின் விலை, தற்போது 50 முதல் 55 ரூபா வரை காணப்படுகின்றது. வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள பின்னணியில், ஆரோக்கியமான உணவுகளை உண்பதற்கு பதிலாக, பசியை போக்கும் உணவை மாத்திரம் உட்கொள்ள மக்கள் முயற்சிக்கின்றனர். புரோட்டீன் உள்ளடங்கிய மீன், இறைச்சி, முட்டை அல்லது நபரொருவருக்கு நாளானொன்றில் உட்கொள்ள வேண்டிய மரக்கறி மற்றும் பழ வகைகள் உரிய வகையில் கிடைக்குமா என்பதில் தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சிறார்கள் முதல் பெண் பிள்ளைகள் வரை ஊட்டச்சத்து தொடர்பில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும். வருமான வழிகள் தடைப்பட்டுள்ள நிலையில், ஊட்டச்சத்து குறைப்பாடுக்கு மேலதிகமாக, மக்கள் மன அழுத்த சூழ்நிலைக்கு தள்ளப்படும் அளவிற்கு பாரிய அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஸவிற்கு பின்னர், 134 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன், ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார். 3. அரசியல் ஸ்திரத்தன்மை நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை பேணுவதில், நாடு 2024ம் ஆண்டு பாரிய சவால்களை எதிர்நோக்க உள்ளது. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளை போன்று, 2024ம் ஆண்டு இலங்கைக்கும் தேர்தல் ஆண்டாக அமைந்துள்ளது. 69 லட்சத்திற்கும் அதிக வாக்குகளை பெற்றுக்கொண்ட மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனான நாடாளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொண்ட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் காரணமாக, ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஸவிற்கு நாட்டை விட்டு தப்பிச் சென்று, பதவி விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற தேசிய பட்டியல் ஊடான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தெரிவான ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ஸவிற்கு பின்னர், 134 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டார். உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்கு கடந்த ஆண்டு வேட்பு மனு கோரப்பட்ட போதிலும், தேர்தலை நடாத்துவதற்கு தேவையான நிதியை அரசாங்கத்தினால் வழங்க முடியாமை காரணமாக, திட்டமிட்ட வகையில் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடாத்தவில்லை. இலங்கை சோசலிச குடியரசின் 9வது நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு, இரண்டரை ஆண்டுகள், 2023ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ம் தேதி பூர்த்தியாகியிருந்தது. இதன்பிரகாரம், இனி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடாளுமன்றத்தை கலைத்து, புதிய தேர்தலுக்கான அழைப்பை விடும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வசமாகியுள்ளது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக பலரும் நம்புகின்றனர். ''இதுவொரு கலப்பு அரசாங்கம். இது ஒரு அரசாங்கம் கிடையாது. இந்த நாட்டில் ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்பி, நிலையான அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும்." என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பீடத்தின் தலைவர் மூத்த விரிவுரையாளர் சட்டத்தரணி விஷாகா சூரியபண்டார தெரிவிக்கின்றார். ''மக்களினால் நிராகரிக்கப்பட்ட அரசாங்கம் ஒன்றே தற்போது காணப்படுகின்றது. நிறைவேற்று அதிகாரம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டால், மக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைமை அல்ல காணப்படுகின்றது. அதனால், நிச்சயமான தேர்தல் ஒன்றை நடாத்த வேண்டும்." ''நாடாளுமன்றத் தேர்தலை நடாத்த வேண்டும். ஜனாதிபதித் தேர்தலை நடாத்த வேண்டும். மாகாண சபை கலைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகவாதிகளின் சிறந்த அடையாளம் இல்லை இது. நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றால், தேர்தல் முறையின் ஊடாக மக்களின் விருப்பம் முதலில் கோரப்பட்டிருக்க வேண்டும். இதனூடாகவே இந்த அரசாங்கம் அடுத்த கொள்கையை வகுக்க வேண்டும்." ''அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்றால், நல்ல அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்க வேண்டும்" என மூத்த விரிவுரையாளர் சட்டத்தரணி விஷாகா சூரியபண்டார தெரிவிக்கின்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ''நாம் சுயாதீனம் என கூறினாலும், நாம் பூகோள அரசியலில் சிக்குண்டுள்ளோம்" - வயம்ப பல்கலைக்கழக பேராசிரியர் அமித்த மெத்சிறி பெரேரா. 4. பூகோள அரசியல் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் 2024ம் ஆண்டு தேர்தல் நடாத்தப்படவுள்ளது. இலங்கையின் பிரதான கடன் வழங்குநராக இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் காணப்படுகின்றன. இலங்கை பொருளாதார வங்குரோத்து நிலைமையை எதிர்நோக்கியிருந்த தருணத்தில், அயல் நாடான இந்தியா 3 பில்லியன் டாலர் பெறுமதியான நிவாரண உதவிகளை வழங்கியிருந்தது. ''நாம் சுயாதீனம் என கூறினாலும், நாம் பூகோள அரசியலில் சிக்குண்டுள்ளோம்" என வயம்ப பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அமித்த மெத்சிறி பெரேரா தெரிவிக்கின்றார். ''நாம் எதிர்காலத்தில் இந்தியாவின் கடும் பிடியில் சிக்குவோம். அதானி நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் அதற்கான காரணமாகும். யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி, திருகோணமலை அபிவிருத்தி ஆகியன இந்தியாவிலிருந்து கிடைக்கும் அபிவிருத்தி திட்டங்கள். அதேபோன்று, சீன எமது பாரிய கடன் வழங்குநர்." என அவர் குறிப்பிட்டார். ''நாம் இந்தியாவுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதென்பது, நாம் சீனாவிற்கு எதிராக செயற்படுகின்றோம் என்று கூற முடியாது. எனினும், அதனூடாக பாரிய அழுத்தங்கள் வரக்கூடும்." ''இதனூடாக இணைந்து நடாத்தப்படும் கொடுக்கல் வாங்கல்களின் ஊடாக, பூளோக அரசியலில் பாரிய தாக்கம் செலுத்தக்கூடும். ஏனெனில், இந்தியாவில் தேர்தல் வருகின்றது. அமெரிக்காவில் தேர்தல் நடாத்தப்படவுள்ளது. அவர்கள் அனைவருக்கும் நாம் ஒரு தரப்பாக இருக்கின்றோம். அதனுடன் தொடர்புப்படுகின்றோம். மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்." என அவர் கூறுகின்றார். சர்வதேச நாடுகளின் பொருளாதார வங்குரோத்து நிலைமையானது, இலங்கையின் ஏற்றுமதித்துறையை பெரிதும் பாதித்துள்ளது. ஆடை உற்பத்தி உள்ளிட்ட பல ஏற்றுமதி துறைகளில் கடந்த காலங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "தேர்தலை நடாத்துவது மற்றும் கருத்து வேறுபாட்டிற்கு மக்களுக்கு உரிமை வழங்கப்படுவதும் அவசியம்" 5. சீர்திருத்தத் திட்டம், எதிர்ப்புகள் & அடக்குமுறைகள் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அரசாங்கம் பொருளாதார சீர்த்திருத்த திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது. இதன்படி, மறுசீரமைப்பு செய்ய வேண்டிய மற்றும் நட்டத்தில் இயங்கும், முறையற்ற முகாமைத்துவத்துடனான அரச நிறுவனங்களின் பட்டியலொன்றை அரசாங்கம் தயாரித்துள்ளது." பிரச்னை உள்ள 80 அரச நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 40 நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ''இதுவும் பாரிய சவாலாக காணப்படுகின்றது. இதன்போது, தொழிற்சங்கங்களின் தலையீடு காரணமாக, அரசாங்கத்தினால் அந்த இடத்திற்கு செல்ல முடியுமா என்பது சவால் நிறைந்ததே. வேலை நிறுத்தங்கள் எதிர்காலத்தில் அதற்கு சவாலாக அமையலாம். குறிப்பாக பாரிய வேலை நிறுத்த போராட்டங்கள் நடத்தப்படலாம். தேர்தல் ஒன்று நடாத்தப்படும் போது, வேலை நிறுத்த போராட்டங்கள் எப்படியும் வரும்" என வயம்ப பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அமித்த மெத்சிறி பெரேரா தெரிவிக்கின்றார். ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, கடும் அடக்குமுறைகளை நடைமுறைப்படுத்தியதுடன், அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த அனைத்து விதமான போராட்டங்களையும் கடும் போலீஸ் அதிகாரங்களை பயன்படுத்தி அடக்கி, எதிர் கருத்துக்களை வெளியிட்ட நபர்களை கைது செய்த விதத்தை கடந்த காலங்களில் காண முடிந்தது. ''எந்தவொரு ஜனநாயக நாட்டிலும், கருத்து வேறுப்பாட்டிற்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்" என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், பிபிசிக்கு தெரிவித்தார். ''எந்தவொரு அரசாங்கத்தின் கொள்கையுடன் இணைந்தோ அல்லது எதிர்த்தோ செயற்படுவதற்கு மக்களுக்கு இயலுமை காணப்பட வேண்டும். குறிப்பாக அடிப்படையற்ற விதத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தலை பிற்போட்டுள்ளார்கள். அதனால், தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு மக்களுக்கு தற்போது இயலுமை கிடையாது. ''வாயை மூடும் சட்டத்தை" கொண்டு வருவதற்கு அரசாங்கம் கடந்த காலங்களில் முயற்சிகளை மேற்கொண்டது. இணையவழி பாதுகாப்பு சட்டமூலம், இலத்திரனியல் ஊடக ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் பேசுகின்றார்கள். பயங்கரவாத தடுப்புச் சட்டம், போலீஸாரின் யுக்திய சோதனை திட்டம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட கருத்துக்களின் ஊடாக அடக்குமுறையை பயன்படுத்தி, நாட்டை ஆட்சி செய்ய முடியும் என அரசாங்கம் நினைக்கின்றது. எனினும், அடக்குமுறை ஊடாக நீண்ட காலம் வெற்றிகரமாக பயணிக்க முடியாது என்பதை நாம் அவதானித்துள்ளோம். ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சி காலம் மற்றும் அதன் பின்னரான அடக்குமுறை ஆட்சி காலத்தை நாம் அனுபவமாக எடுத்துக்கொள்ள முடியும். அது வெற்றியளிக்காது. தேர்தலை நடாத்துவது மாத்திரமே ஜனநாயகத்தின் முக்கியமான பகுதி என நான் நம்புகின்றேன். இரண்டாவது, கருத்து வேறுபாட்டிற்கு மக்களுக்கு உரிமை வழங்கப்படும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்" என அவர் கூறுகின்றார். ''சீர்த்திருத்தத்தின் ஊடாக மக்களுக்கு சந்தர்ப்பம் ஒன்று வழங்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனினும், அழுத்தங்களின் ஊடாக இது தான் மக்களுக்கு சரியானது என கூறி, அவர்கன் மீது சுமைகளை சுமத்துவது இல்லை என நான் நினைக்கின்றேன்." 2024ம் ஆண்டு தொடர்பில் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு மீள் எழுச்சி பெறும் சவால் மற்றும் எதிர்பார்ப்பு மிக்க ஆண்டான 2024ம் ஆண்டிற்குள் இலங்கை பிரவேசிக்கின்றது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். நாம் அனைவருக்கும் ஆயிரத்தொரு தனிப்பட்ட அபிலாஷைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் வெற்றியடையச் செய்வதற்கு தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து இலங்கையை மீட்டெடுப்பது இன்றியமையாதது என 2024ம் அண்டு புத்தாண்டு வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ''கடந்த ஆண்டு முழுவதும் உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் எதிர்நோக்கிய கஷ்டங்கள் காரணமாக நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெடுக்கும் ஆரம்ப கட்டம் வெற்றிகரமாக செய்வதற்கு முடிந்த போதிலும், பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொள்வதற்கு இதேபோன்று முன்னோக்கி செல்ல வேண்டும். இது மலர்களினால் பாதை கிடையாது. சவால்மிக்க மிகவும் கஷ்டமான பயணம்." என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/crg0lpjzm9lo
-
லசந்த விக்ரமதுங்கவின் 15 ஆவது வருட நினைவு தினம்: சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிவிப்பு
மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு தண்டனை வழங்கப்படுவதை நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் குழு ‘X’ பதிவில், அவரது படுகொலைக்கு காரணமானவர்கள் பொறுப்புக்கூறப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. “15 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை உள்நாட்டில் தீர்த்து வைப்பதாக இலங்கை அரசு உறுதியளித்த போதிலும், விசாரணை ஸ்தம்பித்துள்ளது. லசந்தவின் கொலைக்கான பொறுப்புக்கூறலுக்காக தொடர்ந்து போராடி வரும் அவரது குடும்பத்தினருக்கு இன்றுவரை நீதி கிடைக்காமல் போய்விட்டது” என குழு மேலும் தெரிவித்துள்ளது. மறைந்த இலங்கை ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 15ஆவது நினைவு தினம் இன்று (ஜனவரி 08) அனுஸ்டிக்கப்படும் நிலையில் சர்வதேச மன்னிப்புச் சபையின் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/287340
-
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் நோர்வேயில் காதலனால் சுட்டுக் கொலை! நோர்வேயில் பல் மருத்துவராக கடமையாற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவரது முன்னாள் காதலனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது முன்னாள் காதலனினால் துன்புறுத்தப்படுவதாக நோர்வே பொலிஸாரிடம் இதற்கு முன்னர் பல முறைப்பாடுகள் செய்துள்ளார். இருப்பினும் நோர்வேயின் Elverum என்ற இடத்தில் குறித்த பெண்ணை அவரது முன்னாள் காதலன் சுட்டுக் கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 30 வயதான வரதராஜன் ராகவி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். இந்தநிலையில், குறித்த பெண்ணின் முன்னாள் காதலன் நோர்வே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி கைது செய்யப்பட்ட நோர்வே இளைஞரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நோர்வே பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. https://thinakkural.lk/article/287336
-
கலிலியோ: ஜோதிடம் கூறும் வக்கிர திசை உண்மையல்ல என்று நிரூபித்த விஞ்ஞானி மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது ஏன்?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் அது கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபையின் ஆட்சி நடந்துகொண்டிருந்த 17ஆம் நூற்றாண்டு காலகட்டம். பைபிள் மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு மாறான கருத்துகளைக் கூறும் அறிவியல் கோட்பாடுகள் மத நிந்தனை என முத்திரை குத்தப்பட்டு, தண்டிக்கப்பட்ட காலகட்டம். அந்தக் காலகட்டத்தில், இந்தப் பேரண்டத்தில் பூமிதான் மையமாக இருப்பதாகவும் அதைச் சுற்றியே சூரியன் உட்பட அனைத்துக் கோள்களும் சுற்றுவதாகவும் நம்பப்பட்டது. அதை மறுப்பது கிறிஸ்தவ புனித நூலுக்கு எதிரானதாகக் கருதப்பட்ட காலகட்டம் அது. அந்தக் கோட்பாட்டைச் சந்தேகிக்கும் வகையில் பூமி உட்பட அனைத்து கோள்களுமே சூரியனைச் சுற்றித்தான் வலம் வருகின்றன என்று அறிவியல்ரீதியாக ஒரு வலுவான கோட்பாட்டை முன்வைத்தார் நிக்கோலஸ் கோப்பர்நிகஸ். அதைத் தனது தொலைநோக்கி மூலமாக வான்பொருட்களை ஆராய்ந்து உண்மையென நிறுவியவர் கலிலியோ கலிலி. அதற்காக அவர்மீது மத நிந்தனை வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் என்ன நடந்தது? கலிலியோ மண்டியிட்டு மன்னிப்பு கோரும் நிலைக்கு கத்தோலிக்க திருச்சபையால் தள்ளப்பட்டது ஏன்? அந்த வரலாற்றை விரிவாக இந்தக் கட்டுரையில் காண்போம்... பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிகோலஸ் கோப்பர்நிகஸ். போலந்தை சேர்ந்த இயற்பியலாளர், வானியலாளர், கணிதவியலாளர். கோப்பர்நிகஸ் புத்தகத்தை தடை செய்த கத்தோலிக்க திருச்சபை அவரது பெயர் நிகோலஸ் கோப்பர்நிகஸ். போலந்தை சேர்ந்த இயற்பியலாளர், வானியலாளர், கணிதவியலாளர். அவர் 1543ஆம் ஆண்டு தாம் இறப்பதற்குச் சில காலத்திற்கு முன்பு “ஆன் தி ரெவல்யூஷன் ஆஃப் தி ஹெவன்லி ஸ்பியர்ஸ் (On the Revolutions of the Heavenly Spheres)’ என்ற தனது நூலை வெளியிட்டார். அந்த நூல் அதிர்வலைகளை அப்போது ஏற்படுத்தியது. அது பரவலாக கத்தோலிக்க திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட டாலமி(Ptolemy) முன்வைத்த ‘பூமியே மையம், அதைச் சுற்றியே சூரியனும் மற்ற வான்பொருட்களும் சுற்றி வருகின்றன’ என்ற கோட்பாட்டைக் கேள்விக்கு உள்ளாக்கியது. இதுகுறித்து கிரிகோரி டபுள்யு. டாவ்ஸ் தனது ‘கலிலியோ மற்றும் அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையிலான முரண்பாடு’ என்ற நூலில் விரிவாக விளக்கியுள்ளார். மனிதர்கள் வாழ்ந்த பூமியை மையமாக வைத்துச் சொல்லப்பட்ட கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட திருச்சபையால், விண்ணில் சுற்றிக் கொண்டிருக்கும் பல வான்பொருட்களில் பூமியும் ஒன்று என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில், இந்தக் கோட்பாட்டில் பூமி தனித்துவமாக நிலைநிறுத்தப்படவில்லை. ஆகவே, அவரது புத்தகம் தடை செய்யப்பட்டது. கோப்பர்நிகஸ் கோட்பாட்டு அளவில் நிகழ்த்திய இந்தக் கண்டுபிடிப்புதான் பின்னாளில், கத்தோலிக்க ஆட்சியில் கலிலியோவை வரலாற்றுப் பிரசித்தமான ஒரு வழக்கில் சிக்க வைத்தது. அந்த வழக்கின் விவரங்களுக்குள் செல்வதற்கு முன்பாக, கோப்பர்நிகஸின் கோட்பாடு என்னவென்பதைப் பார்ப்போம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூமியை மையமாக வைத்து நம்பப்பட்ட எகிப்திய பார்வை(இடது), டாலமி முன்வைத்த பூமியைச் சுற்றிவரும் கோள்கள் கோட்பாடு(நடுவில்), கோப்பர்நிகஸ் முன்வைத்த சூரியனைச் சுற்றி வரும் பூமியும் பிற கோள்களும் என்ற கோட்பாடு(வலது)) ஜோதிடம் சொல்லும் வக்கிர திசை தவறு எனக் கண்டறிந்த கோப்பர்நிகஸ் கோப்பர்நிகஸ் காலகட்டத்தில் பூமி நிலையானது என்றும் அதைச் சுற்றி சூரியன், நிலா உட்பட ஏழு கோள்கள் சுற்றி வருவதாகவும் டாலமி முன்வைத்த கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், தமிழில் சொல்லக்கூடிய வக்கிர திசை என்பது அந்தக் கோட்பாட்டில் ஓர் இடராக துருத்திக்கொண்டே இருந்தது. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவை ஏதும் அறிவியல்பூர்வ விளக்கத்தை முழுமையாகக் கொடுக்கவில்லை. கோப்பர்நிகஸ் சூரியனைத்தான் பூமி உட்பட அனைத்துக் கோள்களும் சுற்றுகின்றன என்று உறுதி செய்தது எப்படி என்பதைப் புரிந்துகொள்ள நாம் ஜோதிடத்தை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். ஜோதிடத்தில் வக்கிர திசை என ஒன்றுண்டு. அதாவது, அனைத்து கோள்களும் கடிகார முள் சுற்றும் திசையில் வலப்பக்கமாகச் சுற்றி வரும் நிலையில், நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் அதற்கு எதிர்ப்பக்கமாக இடப்பக்கத்தில் நகர்ந்து 12 ராசிகளைக் கடந்து வரும் எனச் சொல்லப்படுவதுண்டு. “இதையே ஆங்கிலத்தில் ரெட்ரோகிரேட் Retrograde motion எனக் குறிப்பிடுவார்கள். பூமியை நிலையாகக் கொண்டு, மற்ற கோள்கள் அதைச் சுற்றி வருவதாக வைத்துக்கொண்டால், அதை அறிவியல்பூர்வமாக முழுமையாக விளக்க இயலவில்லை என்பதை கோப்பர்நிகஸ் கண்டறிந்தார்." என்று விளக்கினார் ப்ரேக்த்ரூ சயின்ஸ் சொசைட்டியை சேர்ந்த விஞ்ஞானி வெங்கடேசன். "ஆனால், சூரியனை மையத்தில் வைத்து பூமி உட்பட அனைத்து கோள்களுமே சூரியனைச் சுற்றி வருவதாகக் கற்பனை செய்து கணக்கிடும்போது, பூமி மற்றும் இதர கோள்களின் வானியல் செயல்பாடு குறித்த துல்லியமான புரிதல் கிடைப்பதை அவர் கண்டறிந்தார்,” என்கிறார் விஞ்ஞானி வெங்கடேசன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போலாந்தில், நிகோலஸ் கோப்பர்நிகஸ் பிறந்த ஊரில் அவருக்காக நிறுவப்பட்ட சிலை பூமியில் இருந்து பார்க்கும்போது, சிலவேளைகளில் செவ்வாய், வெள்ளி போன்ற கோள்கள் ஆண்டின் சில தருணங்களில் பூமிக்கு எதிர்த்திசையில் சுற்றுவதைப் போன்று தோற்றமளிக்கும். அதுவே வக்கிர திசை எனச் சொல்லப்படுகிறது. ஆனால், சூரியனில் இருந்து பார்க்கையில், பூமி தனது சுற்றுவட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வரும்போது சில இடங்களில் செவ்வாய் கோளையோ அல்லது வெள்ளி கோளையோ கடந்து செல்கிறது. அப்படி அந்தக் கோள்களைத் தாண்டிச் செல்லும்போது, அவை, பூமியிலிருந்து பார்க்கும்போது பூமிக்கு எதிர்த்திசையில் அந்தக் கோள்கள் சுற்றுவதைப் போலத் தோற்றமளிக்கும். ஆனால், உண்மையில் பூமி அந்தக் கோள்களைத் தாண்டிச் செல்கிறது. அவ்வளவே! ஆகையால், வக்கிர திசை என்பது பூமியிலிருந்து பார்க்கும்போது நிகழ்வதாகத் தெரிந்தாலும், உண்மையில் அப்படியொன்று நடப்பதே இல்லை என்று கூறுகிறார் விஞ்ஞானி வெங்கடேசன். இதையே கோப்பர்நிகஸ் கண்டறிந்து தனது தி ரெவல்யூஷன் ஆஃப் தி ஹெவன்லி ஸ்பியர்ஸ் (The Revolution of the heavenly spheres) என்ற நூலில் எழுதியிருந்தார். இதை அறிவியல்பூர்வமாக விவரித்து எழுதிய கலிலியோ பைபிள் குறித்து இப்படியாக விவரித்திருந்தார். “பைபிள் சொர்க்கத்திற்கு எப்படிச் செல்வது என்று மட்டுமே விவரிக்கிறது, அந்த சொர்க்கங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்று அல்ல.” அதாவது வான்பொருட்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை பைபிள் விவரிக்கவில்லை என்று கூறினார். இதன்மூலம் நிகோலஸ் கோப்பர்நிகஸ், தனது கோட்பாட்டில் பூமி உட்பட அனைத்து கோள்களும் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருவதாகக் கூறினார். ஆனால், இவற்றைக் கோட்பாட்டு ரீதியிலேயே அவர் கூறினார். வானியல் ஆராய்ச்சியின் மூலம் அவரது காலகட்டத்தில் அதை நிரூபிக்க முடியவில்லை. அதை சுமார் எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு கலிலியோ என்ற ஒருவர் தனது வானியல் அவதானிப்புகளின் மூலம் நிரூபித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கலிலியோவின் வானியல் ஆராய்ச்சி குறித்து சித்தரிக்கும் ஓவியம் கோப்பர்நிகஸைவிட கலிலியோ ஆபத்தானவராகத் தெரிந்தது ஏன்? இங்கு ஒரு கேள்வி எழலாம். டாலமியின் பூமியை மையப்படுத்திய கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட கத்தோலிக்க ஆட்சி அதை மறுக்கும் கோப்பர்நிகஸின் கோட்பாட்டை ஆபத்தானதாகக் கருதியது. ஆனால், அவரைப் பெரியளவில் தண்டிக்காத நிலையில், அதை ஆய்வு செய்து நிறுவிய கலிலியோ மீதுதான் வழக்கு பாய்ந்தது, அவர் தண்டிக்கப்பட்டார். ஆனால், கோப்பர்நிகஸ் மீது ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? ஏனெனில், கோப்பர்நிகஸ் ஒரு கருதுகோளை முன்வைத்தார். அதைச் சான்றுகளுடன் விளக்கினார். ஆனால், அது உண்மையென உறுதியாக ஆதாரங்களுடன் நிறுவப்படவில்லை. பின்னாளில் வந்த கலிலியோதான் அதைத் தனது ஆய்வின் மூலம் உண்மையென நிறுவினார். அதனால்தான், கோப்பர்நிகஸின் புத்தகத்திற்குத் தடை விதித்ததோடு கத்தோலிக்க திருச்சபை நிறுத்திக்கொண்டது. இருப்பினும் 1620ஆம் ஆண்டுக்குப் பிறகு, திருச்சபையின் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட அந்தப் புத்தகத்தின் பதிப்பு மீண்டும் அனுமதிக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடவுளின் குழந்தையாகக் கருதப்படும் இயேசு பிறந்து, வாழ்ந்த பூமிதான் பேரண்டத்தின் மையம் என்ற நம்பிக்கை அவசியமானது என கத்தோலிக்க திருச்சபை கருதியது. கலிலியோவின் கண்டுபிடிப்பை திருச்சபை ஆபத்தாகப் பார்த்தது ஏன்? கலிலியோவின் கருத்து ஆபத்தானதாக அவரது காலகட்டத்தில் ஏன் பார்க்கப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள நாம் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க தத்துவவாதி அரிஸ்டாட்டில் காலத்திற்குச் செல்ல வேண்டும். அரிஸ்டாட்டில், இந்தப் பேரண்டத்தில் இரண்டுவிதமான பொருட்கள் இருப்பதாகக் கூறினார். அதில் ஒன்று வான்பொருட்கள் (Celestial). மற்றொன்று நிலம்சார் பொருட்கள் (Terrestrial). வான்பொருட்கள் என்பது சொர்க்கங்களைக் குறிக்கும். நிலம்சார் பொருட்கள் என்பது பூமியைக் குறிக்கும். இதன்மூலம், வான்பொருட்களான கோள்கள், நட்சத்திரங்கள் அனைத்தும் பூமியில் இருந்து வேறுபட்டவை எனக் கருதப்பட்டது. இவை இரண்டுக்கும் தனித்தனி நகர்வு செயல்முறைகள் இருந்ததாக நம்பப்பட்டது. இது காலப்போக்கில், பூமியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கோட்பாட்டிற்கு வழிவகுத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூமி மையத்தில் நிலையாக இருப்பதாகவும் அதைச் சுற்றியே சூரியனும் பிற கோள்களும் சுற்றி வருவதாகவும் டாலமி முன்வைத்த கருதுகோளின் விளக்கப்படம். இந்தக் கோட்பாட்டை கிறிஸ்தவ மதமும் தனதாக்கிக் கொண்டது. ஏனெனில், அதில் கடவுளின் குழந்தையான இயேசு ஒரு மனிதராக பூமியில் பிறந்து, வாழ்ந்தார் என நம்பப்படுகிறது. இத்தகைய முக்கியமான ஒருவர் வாழ்ந்த பூமிதான் பேரண்டத்தின் மையமாக இருக்க வேண்டும் என்பது தங்கள் மத நம்பிக்கைக்கு அவசியமானது என்று கத்தோலிக்க திருச்சபை கருதியது. அப்போதைய மத அறிஞர்களைப் பொறுத்தவரை, பேரண்டம் என்பது இந்த சூரிய குடும்பம் மட்டுமே என்பதும் அவர்களுக்கு இந்தப் பேரண்டம் கோடிக்கணக்கான நட்சத்திரத் திரள்களை, சூரிய குடும்பங்களை உள்ளடக்கியது என்பதும் தெரியாது என்பதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். கலிலியோ, பூமியே மையம் என்ற கோட்பாட்டைப் பொய்யென நிரூபித்தது, தங்கள் மத நம்பிக்கையையே கேள்விக்கு உள்ளாக்குவதாக அப்போதைய திருச்சபை ஆட்சி நம்பியது. ஆகையால்தான், அவரது கண்டுபிடிப்பை ஆபத்தானதாக கத்தோலிக்க கிறிஸ்தவ ஆட்சி கருதியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆரம்பத்தில் கோப்பர்நிகஸின் கூற்றை ஆதரிப்பதற்காக கலிலியோ தனது வானியல் ஆய்வை மேற்கொள்ளவில்லை. கலிலியோவின் கண்டுபிடிப்பு ஏற்படுத்திய அதிர்வலைகள் கலிலியோ 1609-ஆம் ஆண்டில் இருந்து தனது புதிதாக உருவாக்கிய தொலைநோக்கியின் வாயிலாக வான்பொருட்களை ஆய்வு செய்யத் தொடங்கினார். அப்போது அவரது அவதானிப்புகள் கோப்பர்நிகஸின் கோட்பாட்டுடன் ஒத்துப் போவதைக் கண்டறிந்தார். அவரது ஆய்வின்போது தமிழில் வக்கிர திசை எனச் சொல்லப்படும் ஆண்டின் ஒரு காலகட்டத்தில் கோள்கள் பின்னோக்கிச் செல்லும் செயல்முறையை அவரும் கவனித்தார். இருப்பினும், அதை அவரால் டாலமியின் பூமியைச் சுற்றி மற்ற வான்பொருட்கள் சுற்றுவதாகச் சொல்லப்படும் கோட்பாட்டிற்குள் அடக்க முடியவில்லை. “அப்போதுதான் கோப்பர்நிகஸ் கூறியதுபோல் சூரியனை மையமாக வைத்து தனது வானியல் அவதானிப்புகளை அவர் பகுப்பாய்வு செய்து பார்த்தார். அதன்மூலம் அவரால் துல்லியமாக அவை பின்னோக்கிச் செல்வதைப் போல் தோன்றுவது ஏன் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது,” என்று விளக்கினார் விஞ்ஞானி வெங்கடேசன். மேலும், கலிலியோதான் எந்தவொரு அறிவியல் கோட்பாடும் செய்முறையில் நிரூபிக்கப்பட வேண்டியது அவசியம் என்ற கருத்தாக்கத்தையும் தொடக்கி வைத்ததாகக் கூறுகிறார் விஞ்ஞானி வெங்கடேசன். இதுகுறித்த தனது டயலாக் கன்சர்னிங் தி டூ சீஃப் வேர்ல்டு சிஸ்டம்ஸ் (Dialogue concerning the two chief world systems) என்ற நூலை கலிலியோ 1632ஆம் ஆண்டு வெளியிட்டார். இது திருச்சபை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இங்கு மற்றொரு விஷயத்தையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். 1616ஆம் ஆண்டில் கோப்பர்நிகஸின் புத்தகம் குறித்த வழக்கிலேயே இதுகுறித்துப் பேசவோ ஆதரிக்கவோ கூடாது என கலிலியோ எச்சரிக்கப்பட்டிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தனது புத்தகத்தில் கோப்பர்நிகஸ் முன்வைத்த 'பூமி இந்தப் பேரண்டத்தின் மையம் இல்லை' என்ற கோட்பாட்டை புனித அலுவலகத்தின் ஆலோசகர்கள் அபத்தமானது என்றனர். கோப்பர்நிகஸ் புத்தகத்தின் மீது போடப்பட்ட வழக்கு மத நிந்தனை எனக் குற்றம்சாட்டி கலிலியோ மீது போடப்பட்ட வழக்குக்கு முன்னதாக கோப்பர்நிகஸின் கோட்பாடு குறித்த புத்தகம் மீதான வழக்கு ஒன்று நடத்தப்பட்டது. அதாவது கோப்பர்நிகஸின் புத்தகம் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு முரணின்றி இருக்கிறதா என்பதை விசாரித்து உறுதி செய்வதே அந்த வழக்கின் நோக்கம். அது கிறிஸ்தவ நம்பிக்கைக்கு முரணானது என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தாலும் அதிகாரப்பூர்வமாக தீர்ப்பு வழங்கப்படவில்லை. அதிகாரபூர்வமாக தீர்ப்பு வழங்கப்பட்டால்தான் அதன்மீது நடவடிக்கை எடுக்க முடியும். புனித அலுவலகத்தின் ஆலோசகர்கள் கோப்பர்நிகஸ் கோட்பாடு குறித்து 1616ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி அறிக்கை வழங்கியதாக கிரிகோரி டபுள்யு, டாவ்ஸ் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கோப்பர்நிகஸ் முன்வைத்த இரண்டு விஷயங்களை புனித அலுவலகத்தின் ஆலோசகர்கள் கடுமையாகக் கண்டித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கலிலியோ 1632ஆம் ஆண்டு எழுதிய புத்தகத்தை விசாரிக்க குழு நியமித்ததோடு, அதை வழக்காக எடுத்து விசாரிக்குமாறு வலியுறுத்திய போப் எட்டாவது அர்பன். முதலாவது, சூரியன் நிலையானது, அதுதான் இந்தப் பேரண்டத்தின் மையத்தில் இருக்கிறது. ஆலோசகர்கள் இதை ‘முட்டாள்தனமானது, அதிகாரபூர்வமாக மத நிந்தனைக் கருத்து’ என்று கூறினர். இரண்டாவது. பூமி இந்தப் பேரண்டத்தின் மையத்தில் இல்லை, அது நிலையானதும் இல்லை. அது தன்னையும் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. புனித அலுவலகத்தின் ஆலோசகர்கள் ‘இதை அபத்தமானது, கடும் கண்டனத்திற்கு உரியது’ எனவும் கூறினர். இந்த அறிக்கையின் அடிப்படையில், அதே ஆண்டில் மார்ச் 6ஆம் தேதியன்று வேடிகன் திருச்சபை இந்த இரண்டு கோட்பாடுகளை உள்ளடக்கிய வகையில் கோபப்ர்நிகஸின் புத்தகத்தை அச்சிடவும் பயன்படுத்தவும் தடை விதித்தது. இந்தக் கோட்பாடுகளைத் தவிர்த்துவிட்டு அல்லது இந்தக் கோட்பாடு உண்மையல்ல என்று குறிப்பிட்டு புத்தகத்தைப் பயன்படுத்தலாம் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது. அதேவேளையில் இந்த விவகாரம் குறித்து கோர்ப்பநிகஸின் கோட்பாட்டை ஆதரிக்கும் வகையிலான வானியல் அவதானிப்புகளை மேற்கொண்டிருந்த கலிலியோவுக்கும் இயேசு இறையியலாளரான ராபர்ட் கார்டினல் பெல்லர்மைன் மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் கோபர்நிகஸின் கோட்பாட்டு அடிப்படையில் வியாழன் கோள் குறித்த சில அவதானிப்புகளை கலிலியோ மேற்கொண்டிருந்தார். ஆகையால் அத்தகைய செயல்பாடுகளை தொடர்ந்து கொண்டு செல்லக்கூடாது என்று அவருக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வேடிகனில் 1633ஆம் ஆண்டு தனது வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னதாக கலிலியோ மற்றும் புனித அலுவலகத்தின் அதிகாரிகள் சபையில் இருப்பதை விவரிக்கும் ஓவியம். கலிலியோ மீது போடப்பட்ட வழக்கு இதற்குப் பிறகு 1633ஆம் ஆண்டு கலிலியோ மீது ஒரு வழக்கு போடப்படுகிறது. அந்த வழக்கு, கோப்பர்நிகஸின் கோட்பாடு மீதான வழக்கில் அவருக்கு விடுக்கப்பட்ட உத்தரவைக் கடைபிடித்தாரா இல்லையா என்பதைப் பற்றிய வழக்கு. கலிலியோ மீது இந்த வழக்கு போடப்பட, 1632இல் அவர் வெளியிட்ட மேலே குறிப்பிடப்பட்ட புத்தகம்தான் காரணம். கலிலியோவுக்கு 1616ஆம் ஆண்டில் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்குப் பிறகும், 1632இல் அவர் கோப்பர்நிக்கஸின் கோட்பாட்டை வலுவாக ஆதரிக்கும் தனது வானியல் அவதானிப்புகள் அடங்கிய நூலை வெளியிட்டார். இந்த நூலின் உள்ளடக்கம் பல அதிர்வலைகளை உண்டாக்குகிறது. அப்போதைய போப் எட்டாவது அர்பன் அதை மேற்கொண்டு அச்சிடவும் விற்பனை செய்யவும் தடை விதித்ததோடு, அதை முழுமையாக விசாரிக்க ஒரு குழுவையும் நியமித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கலிலியோ வழக்கு விசாரணைக்காக 1633ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி ரோம் வந்தடைந்தார். போப் எட்டாவது அர்பன் நியமித்த அந்தக் குழு 1632 செப்டம்பரில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் போப் இந்த வழக்கை விசாரிக்குமாறு வலியுறுத்தினார். கலிலியோ அந்த வழக்கு விசாரணைக்காக 1633ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி ரோம் வந்தடைந்தார். இந்த வழக்கின் சாராம்சத்தை ஒரு வரியில் கூறிவிடலாம். இயேசு இறையியலாளரான ராபர்ட் கார்டினல் பெல்லர்மைன் 1616ஆம் ஆண்டு கலிலியோவுக்கு அளித்த உத்தரவை அவர் பின்பற்றினாரா இல்லையா என்பதுதான். இந்தச் சம்பவகளுக்கு நடுவில் இறையியலாளர் பெல்லர்மைன் இறந்துவிட்டதால், அவர் தனது தடை உத்தரவில் என்ன குறிப்பிட்டார் என்பதில் தெளிவின்மை நிலவியது. ஆனால், புனித அலுவலகத்தில் இருந்த ஆவணத்தின் அடிப்படையில் கோப்பர்நிக்கஸின் கோட்பாட்டை ஆதரிப்பதில் இருந்து தடை செய்யும் உத்தரவு பெல்லர்மைன் வாயிலாக கலிலியோவுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது உறுதியானது. அந்த உத்தரவையும் மீறி கலிலியோ அந்தக் கோட்பாட்டை ஆதரிக்கும் வகையில் செயல்பட்டாரா என்ற கேள்வி விசாரணையில் எழுப்பப்பட்டது. கலிலியோ அந்தக் குற்றச்சாட்டை மறுத்தார். தனது புத்தகம் பல்வேறு கோணங்களிலான கோட்பாடுகளைப் பகுபாய்வு செய்கிறது என்றும் அந்தப் புத்தகம் போப் ஆதரிக்கும் ஒரு வாதத்துடன்தான் நிறைவடைகிறது என்றும் அவர் வாதிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வழக்கு விசாரணையில், கலிலியோவின் வாதங்கள் நேர்மையற்றவை என்று முடிவானது. அதன் விளைவாக, அவர் செய்தது மத நிந்தனை எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. கலிலியோ மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது ஏன்? கோப்பர்நிகஸின் கோட்பாடுதான் வானியல் செயல்பாடுகளை விளக்குவதற்கான ஒரே வழி எனக் கூறுவது கடவுளின் சக்தியைக் குறைத்து மதிப்பிடுவதாகும் என்று விசாரணையின்போது வாதிடப்பட்டதாக கிரிகோரி டபுள்யு.டாவ்ஸ் தனது நூலில் குறிப்பிடுகிறார். வழக்கு விசாரணையில், கலிலியோவின் வாதங்கள் நேர்மையற்றவை என்று முடிவானது. அதன் விளைவாக, அவரது செயல் – அதாவது கோப்பர்நிகஸின் கோட்பாட்டை ஆதரிக்கும் தனது அவதானிப்புகள் அடக்கிய புத்தகத்தை எழுதியது – மத நிந்தனை எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அவரது காலகட்டத்தில், ஒரு பார்வையை தேவாலயம் புனித நூலுக்கு முரண்பட்டதாகக் கருதினால் அது தவறானதாகவும் உண்மையற்றதாகவும் கருதப்பட்ட காலம். ஒரு கோட்பாடு புனித நூலுடன் முரண்பட்டால் அது பொய்யாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்ட காலகட்டம். ஆகையால், கலிலியோவின் செயல் மத நிந்தனை குற்றமாகக் கருதப்பட்டது. அவர் காலவரையற்ற சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று திருச்சபை தீர்ப்பளித்தது. மேலும், மத நிந்தனைக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதைத் தடுக்க, அவரது மேற்கூறிய அவதானிப்புகள் பொய்யானவை எனக் கூறி அவற்றைத் தூற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கலிலியோ மீதான மத நிந்தனை வழக்கு விசாரணையை விவரிக்கும் விளக்கப்படம் இந்தத் தருணம் குறித்து நியூயார்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜான் வில்லியம் டிரேப்பர் தனது ‘அறிவியலுக்கும் மதத்திற்குமான முரண்பாடு குறித்த வரலாறு’ என்ற நூலில் இப்படியாக விவரித்துள்ளார்... “ஒரு மரியாதைக்குரிய, மிகவும் புகழ்பெற்ற மனிதர், அந்த வயதில் மரண அச்சுறுத்தலால் தனது அவதானிப்புகளை மறுக்குமாறும் நிந்திக்குமாறும் நிர்பந்திக்கப்பட்டார். அவருக்கும் அவரைத் தண்டித்த நீதிபதிகளுக்கும் உண்மை எனத் தெரிந்த கூற்றை மறுக்குமாறு அவர் கட்டாயப்படுத்தப்படுகிறார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.” ஒரு தியாகியாகும் எண்ணம் கொஞ்சமும் இல்லாத கலிலியோ, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மண்டியிட்டு புனித தேவாலயத்திடம் தனது அவதானிப்புகளையே நிந்தித்து, அதுகுறித்து மீண்டும் எதிர்காலத்தில் பேசாமல் இருப்பதாக கலிலியோ உறுதிபூண வேண்டியிருந்ததாக அவர் தனது நூலில் குறிப்பிடுகிறார். மேலும், இத்தகைய மத நிந்தனை செயல்களில் ஈடுபடும் யாரையேனும் தான் அறிய நேர்ந்தால், அவரைப் பற்றி புனித அலுவலகத்திடம் தெரிவிப்பதாகவும் அவர் கூற வேண்டியிருந்தது எனவும் தனது நூலில் கலிலியோவுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்துக் குறிப்பிடுகிறார் ஜான் வில்லியம் டிரேப்பர். இதைத்தொடர்ந்து கலிலியோ தனது வாழ்நாள் முழுவதும் வீட்டுச் சிறையில் வாழ்ந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆங்கில கவிஞர் ஜான் மில்டன் கலிலியோ சிறையில் இருந்தபோது அவரைச் சந்தித்ததை விவரிக்கும் விளக்கப்படம் கலிலியோ வழக்கு: மதத்திற்கும் நாத்திகத்திற்கும் இடையிலான சண்டையா? கோப்பர்நிக்கஸின் கோட்பாட்டைப் பொறுத்தவரை, திருச்சபை அதிகாரிகள் புனித நூலின் விளக்கம் குறித்த விஷயத்தில் தவறான முடிவுக்கு வந்திருக்கலாம் என்று 1922ஆம் ஆண்டில் போப் இரண்டாம் ஜான் பால் கூறினார். ஆனால், “எப்படியிருப்பினும், அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து, தீர்ப்பையும் உத்தரவையும் வழங்கியுள்ளனர். பைபிளின் அதிகாரம் தொடர்பான விஷயத்திலும் அதை விளக்குவது குறித்த திருச்சபையின் அதிகாரம் தொடர்பான விஷயத்திலும், தமது உத்தரவைப் பின்பற்றுவதில் முழு ஒழுக்கத்தை எதிர்பார்க்க திருச்சபைக்கு அனைத்து அதிகாரமும் உள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டார். கலிலியோவின் வழக்கில், நாத்திகத்திற்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை, அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையே எழுந்த ஒரு முரண்பாடுதான் இந்த வழக்கு என்றே வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கலிலியோவை எதிர்த்தவர்களைப் பொறுத்தவரை, பைபிளை மறுவிளக்கம் செய்யக்கூடாது. ஏனெனில், தனது வழக்கு விசாரணையின்போது கலிலியோவேகூட, புனித நூலின் விளக்கத்தில் இருந்து இது எந்தவிதத்திலும் முரண்படவில்லை என்றே அவர் குறிப்பிடுகிறார். கலிலியோ மற்றும் அவரது ஆதரவாளர்கள், அவரை எதிர்ப்பவர்களிடம் இருந்து வேறுபடுவது ஒரு விஷயத்தில்தான். கலிலியோவும் அவரது ஆதரவாளர்களும், அப்போது கோப்பர்நிகஸின் கோட்பாடு ஆதாரங்கள் அடிப்படையில் வலுவானதாக இருப்பதாகக் கருதினர். அதேவேளையில் அது புனித நூல் மற்றும் கத்தோலிக்க மரபுடன் ஒத்துப் போவதாகவும் அவர்கள் நம்பினார்கள். ஏனெனில், கலிலியோவை பொறுத்தவரை புனித நூல் வாழ்வுக்கான அறத்தைப் போதிக்கும் ஒன்று, அது அறிவியல்ரீதியிலானது அல்ல. ஆனால் அவரை எதிர்த்தவர்கள் அந்தக் கருத்துடன் உடன்படவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, பைபிளை மறுவிளக்கம் செய்யக்கூடாது. அதோடு, புனிதநூலுக்கான விளக்கம் என்பது திருச்சபை அல்லது திருச்சபையின் மதகுருமார்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும். https://www.bbc.com/tamil/articles/cg3xnzpy0djo
-
இலங்கையின் சனத்தொகையில் எதிர்கால வீழ்ச்சி குறித்து நிபுணர் எச்சரிக்கை
பிறப்பு வீதத்தின் வீழ்ச்சியினால் எதிர்காலத்தில் இலங்கை மக்கள் தொகையில் கணிசமான வீழ்ச்சியை சந்திக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் எமரிட்டஸ் சனத்தொகை பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது பிறப்பு வீதத்தில் 25% குறைந்துள்ளமை எதிர்கால சனத்தொகை வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இனங்காணப்பட்டுள்ளதாக பேராசிரியர் டி சில்வா தெரிவித்தார். 2022 இல் இலங்கையில் பதிவான பிறப்புகளின் எண்ணிக்கை 2013 இல் பதிவானதை விட 90,000 ஆக குறைந்துள்ளது என கூறிய அவர், தற்போதைய பிறப்பு விகிதம் இறப்பு எண்ணிக்கையை நெருங்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதால் இந்த நிலைமை மேலும் மோசமடையலாம் என பேராசிரியர் டி சில்வா எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/287399
-
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
பெற்றோரால் திருமணம் பேசி வைத்த பொடியன்(பழக்கவழக்கம்) சரி இல்லை என கொல்லப்பட்ட பிள்ளை திருமணம் செய்ய மறுத்துவிட்டதனால் தொடர் அச்சுறுத்தலின் பின் கொல்லப்பட்டுள்ளார்.
-
பிரதான ஐசிசி விருதுகள் உட்பட ஏனைய விருதுகளுக்கான குறும் பட்டியல்கள்
07 JAN, 2024 | 07:48 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்படவுள்ள ஐசிசி கிரிக்கெட் விருதுகள் 2023க்கான பிரதான விருதுகளுக்கு அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் வீரர்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள குறும்பட்டியலில் அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளின் வீரர்கள் மாத்திரமே இடம்பெறுகின்றனர். வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ரஷேல் ஹேஹோ விருதுக்கு அவுஸ்திரேலியா உட்பட 3 நாடுகளின் வீராங்கனைகள் இடம்பெறுகின்றனர். சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் விருதுக்குரிய வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீரருக்கான குறும்பட்டியலில் பெட் கமின்ஸ், ட்ரவிஸ் ஹெட் ஆகிய இரண்டு அவுஸ்திரேலியர்களும் விராத் கோஹ்லி, ரவிந்த்ர ஜடேஜா ஆகிய இரண்டு இந்தியர்களும் குறும்பட்டியலில் இடம்பெறுகின்றனர். ரஷேல் ஹேஹோ விருதுக்குரிய வருடத்தின் அதிசிறந்த வீராங்கனைக்கான குறும்பட்டியலில் இலங்கையின் சமரி அத்தப்பத்து, கடந்த வருடம் அதிசிறந்த வீராங்கனை விருதை வென்ற அவுஸ்திரேலியாவின் ஏஷ்லி கார்ட்னர், அவரது சக வீராங்கனை பெத் மூனி, இங்கிலாந்தின் நெட் சிவர் ப்ரன்ட் ஆகியோர் இடம்பெறுகின்றனர். ஏனைய ஐசிசி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்கள் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி டெஸ்ட் வீரர் விருதுக்கான குறும்பட்டியல்: ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்த்ர ஜடேஜா (இருவரும் இந்தியா), ட்ரவிஸ் ஹெட் (அவுஸ்திரேலியா), ஜோ ரூட் (இங்கிலாந்து). வருடத்தின் அதிசிறந்த ஐசிசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கான குறும்பட்டியல்: ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, மொஹமத் ஷமி (மூவரும் இந்தியா), டெரில் மிச்செல் (நியூஸிலாந்து). வருடத்தின் அதிசிறந்த ஐசிசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கான குறும்பட்டியல்: சமரி அத்தப்பத்து (இலங்கை), ஏஷ்லி கார்ட்னர் (அவுஸ்திரேலியா), அமேலியா கேர் (நியூஸிலாந்து), நெட் சிவர் ப்ரன்ட் (இங்கிலாந்து). வருடத்தின் அதிசிறந்த ரி20 சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதுக்கான குறும்பட்டியல்: மார்க் சப்மன் (நியூஸிலாந்து), அல்பேஷ் ராம்ஜானி (உகண்டா), சிக்கந்தர் ராஸா (ஸிம்பாப்வே), சூரியகுமார் யாதவ் (இந்தியா). வருடத்தின் அதிசிறந்த ரி20 சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கான குறும்பட்டியல்: சமரி அத்தப்பத்து (இலங்கை), சொஃபி எக்லஸ்டோன் (இங்கிலாந்து), ஹேலி மெத்யூஸ் (மேற்கிந்தியத் தீவுகள்), எலிஸ் பெரி (அவுஸ்திரேலியா). வருடத்தின் அதிசிறந்த ஐசிசி வளர்ந்துவரும் வீரர் விருதுக்கான குறும்பட்டியல்: ஜெரால்ட் கோயெட்ஸீ (தென் ஆபிரிக்கா), யஷஸ்வி ஜய்ஸ்வால் (இந்தியா). வருடத்தின் அதிசிறந்த ஐசிசி வளர்ந்துவரும் வீராங்கனை விருதுக்கான குறும்பட்டியல்: விருதுக்கு மாறுபா அக்தர் (பங்களாதேஸஷ்), லோரென் பெல் (இங்கிலாந்து), டாசி கார்ட்டர் (ஸ்கொட்லாந்து), ஃபோப் லிச்பீல்ட் (அவுஸ்திரேலியா). இந்த விருதுகளைவிட இணை உறுப்பு நாடுகளக்கான வருடத்தின் அதிசிறந்த ஐசிசி வீரர் மற்றும் வீராங்கனை, ஐசிசி கிரிக்கெட் நற்புண்பு விருது, வருடத்தின் அதிசிறந்த ஐசிசி மத்தியஸ்தர் ஆகிய விருதுகளும் வழங்கப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/173391
-
அல்ஜசீரா ஊடகவியலாளரின் துயரம் தொடர்கின்றது - இறுதியாக எஞ்சியிருந்த மகனும் இஸ்ரேலின் தாக்குதலில் பலி
Published By: RAJEEBAN 08 JAN, 2024 | 11:26 AM இஸ்ரேலின்தாக்குதலில் ஏற்கனவே தனது குடும்பத்தவர்கள் பலரையும்இழந்த அல்ஜசீரா ஊடகவியலாளர் வயல்டாவ்டோ இஸ்ரேலின் தாக்குதலில் பத்திரிகையாளரான தனது மகனை இழந்துள்ளார். காசாவின் கான்யூனிசில் இடம்பெற்ற இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் வயல்டாவ்டோவின் மகன் ஹம்சாவும் ( 27) முஸ்தபா டுரையா என்ற ஊடகவியலாளரும் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. காசாவின் தென்மேற்கில் உள்ள பாதுகாப்பான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ள அல் மவசிக்கு அருகில்உள்ள பகுதியை நோக்கிவாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தவேளை இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். குண்டுவீச்சினால் இடம்பெயர்ந்த மக்களை பேட்டி காண்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்தவேளையே ஹம்சாவின் வாகனம் தாக்கப்பட்டுள்ளது. தனது மகனின் உடலை அடக்கம்செய்த பின்னர் கருத்து தெரிவித்துள்ள வயல்டாவ்டோ இன்று காசாவில் தங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து நாளாந்தம் விடைபெறுபவர்களில் தானும் ஒருவர் என தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தில் மற்றுமொருவரை இழந்த துயரத்தை அனுபவிக்கின்ற போதிலும் காசாவில் என்ன நடக்கின்றது என்பதை உலகிற்கு தெரியப்படுத்தும் பாதையை தொடரப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். ஹம்சாவே எனக்கு அனைத்துமாகயிருந்தான் எனதுமூத்த மகன் இதுஇழப்பின் கண்ணீர் பிரிதலின் துயரத்தின் கண்ணீர் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/173405
-
பங்களாதேஷின் சர்ச்சைக்குரிய தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சி வெற்றி
Published By: RAJEEBAN 08 JAN, 2024 | 12:06 PM பங்களாதேஷில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பொதுத்தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா நான்காவது தடவையாக வெற்றி பெற்றுள்ளார். 300 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் 223 ஆசனங்களை ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி வெற்றிபெற்றுள்ளது. முக்கிய எதிர்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சி தேர்தலை பகிஷ்கரித்தமை குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஒரு மோசடி ஏமாற்று நாடகம் என எதிர்க்கட்சி விமர்சித்துள்ளது. 40 வீதமான வாக்காளர்களே வாக்களித்தனர் என உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை இதனை விட குறைவு என கருத்துக்கள் வெளியாகியுள்ளன. 2018 பொதுத்தேர்தலில் 80 வீதமானவர்கள் வாக்களித்திருந்தனர். https://www.virakesari.lk/article/173396
-
சைபர் மோசடி: ஆளை கடத்தாமலேயே கடத்தியதாக நம்ப வைத்து பல லட்ச ரூபாயை இவர்கள் பறிப்பது எப்படி?
கட்டுரை தகவல் எழுதியவர், இசாரியா பிரைதோங்யேம் பதவி, பிபிசி 7 ஜனவரி 2024 அமெரிக்காவில் உள்ள சீன மக்கள், குறிப்பாக மாணவர்கள் “மெய்நிகர் கடத்தல் மோசடிகள்” குறித்து விழிப்புடன் இருக்குமாறு வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. சுவாங் கய் எனும் 17 வயதான மாணவர் காணாமல் போனதாக புகார் எழுந்த நிலையில், கடந்த டிச. 31 அன்று யூட்டா மாகாணத்தில் பத்திரமாக மீட்கப்பட்டார். இதையடுத்துதான் சீன தூதரகம் இந்த அறிக்கையை வெளியிட்டது. தங்கள் மகன் கடத்தப்பட்டது போன்ற புகைப்படமும் அவரை மீட்க பெருந்தொகை தர வேண்டும் என்றும் தங்களுக்கு செய்திகள் வந்ததாக பள்ளி நிர்வாகத்திடம் சுவாங் கய்-யின் பெற்றோர் தெரிவித்தனர். இத்தகைய இணையவழி கடத்தல் மோசடிகளுக்கு ஆளானோர், தாங்கள் கடத்தப்பட்டு விட்டதாக தோன்றும் வகையிலான புகைப்படங்களை எடுக்க வேண்டும் என, கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கடத்தல்காரர்கள் நேரில் வராமல் அவர்களை ஃபேஸ்டைம், ஸ்கைப் உள்ளிட்ட செயலிகள் மூலம் கண்காணிக்கின்றனர். இதற்கு இணங்கவில்லை என்றால், இந்த மோசடியில் சிக்கியவரோ அல்லது அவருடைய குடும்பத்தினரோ துன்புறுத்தப்படலாம் என இரு தரப்பிடமும் கூறப்படுகிறது. உள்ளூர் போலீசாரின் கூற்றுப்படி சுவாங் கய்-யின் பெற்றோர் சீனாவில் உள்ள வங்கிக் கணக்குகளில் 80,000 டாலர்கள் செலுத்துமாறு ஏமாற்றப்பட்டுள்ளனர். அமெரிக்கா மட்டுமின்றி, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இதேபோல சீன மாணவர்களை குறி வைத்து இந்திய மதிப்பில் பல லட்ச ரூபாயை அந்த மோசடி கும்பல்கள் பறித்துள்ளன. மெய்நிகர் கடத்தல் மோசடி என்பது என்ன? படக்குறிப்பு, சுவாங் கய் மெய்நிகர் கடத்தல் மோசடியால் பாதிக்கப்பட்டார். அமெரிக்க உளவு அமைப்பான எஃப்.பி.ஐ கூற்றுப்படி, சட்ட அமலாக்க முகமைகள் இத்தகைய மெய்நிகர் கடத்தல் மோசடிகள் குறித்து குறைந்தது 20 ஆண்டுகளாக அறிந்துள்ளனர். சைபர், டிஜிட்டல் அல்லது மெய்நிகர் கடத்தல் மோசடிகள் பல வடிவங்களில் நடக்கும். எந்த வடிவத்தில் இருந்தாலும் இதுவொரு மிரட்டிப் பணம் பறிக்கும் யுத்தியாகும். இதில், தங்களின் அன்புக்குரியவர்களை விடுவிக்க பெரும் பணத்தைத் தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர்களை தாக்கிவிடுவோம் அல்லது கொலை செய்துவிடுவோம் என கடத்தல்காரர்கள் மிரட்டுகின்றனர். ’வழக்கமான’ கடத்தல் சம்பவங்களை போல் அல்லாமல், இந்த மெய்நிகர் கடத்தல்காரர்கள் யாரையும் உண்மையாக கடத்துவதில்லை என, எஃப்.பி.ஐ விவரிக்கிறது. மாறாக, தங்களின் திட்டம் தோல்வியடைவதற்கு முன்பாக, அத்தொகையை விரைவாக செலுத்துமாறு வற்புறுத்துதல் மற்றும் மிரட்டல்கள் மூலம் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். சீன மாணவர்கள் எங்கெல்லாம் குறி வைக்கப்படுகிறார்கள்? காவல்துறை கூற்றுப்படி, பணக்கார மேற்கு நாடுகளில் படிக்கும் சீன மாணவர்கள் இத்தகைய சைபர் கடத்தல்காரர்களால் குறிவைக்கப்படுகின்றனர். பிரிட்டனில் உள்ள சௌத் யோக்ஷா மாகாண காவல்துறையின் மோசடிகள் தடுப்பு குழு, ஷெஃபீல்ட் நகருக்கு செல்லும் சர்வதேச மாணவர்கள் இத்தகைய மோசடிக்காரர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு செப்டம்பர் 2023-ல் எச்சரித்திருந்தது. பிரிட்டனில் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் சீன மாணவர்கள் இத்தகைய மோசடிகளுக்கு குறி வைக்கப்படுவதாக அக்குழு தெரிவித்திருந்தது. இதில், சீன தூதரகம், குடிவரவு துறை, சுங்கத்துறை, சீன காவல்துறை அல்லது ராயல் மெயில் எனப்படும் பிரிட்டன் தபால் துறையிலிருந்து பேசுவதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு போலி அழைப்புகள் வருகின்றன. பின்னர் அவர்கள் சர்வதேச குற்றம் ஒன்றை விசாரிப்பதாக கூறி, சீனாவில் உள்ள வங்கிக் கணக்குக்கு பெரும் தொகையை பரிமாற்றம் செய்யுமாறு கூறுகின்றனர். இதில் குறி வைப்படுபவர்களை அவர்கள் அச்சுறுத்துவார்கள் என்றும் சௌத் யோக்ஷா காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் அவர்கள் மிரட்டுவார்கள் என்றும் கூறப்படுகிறது. படக்குறிப்பு, பிரிட்டனில் உள்ள சீன மாணவர்கள் இத்தகைய மோசடிகளால் பாதிக்கப்படுகின்றனர். ஆஸ்திரேலியாவில் இத்தகைய ‘மெய்நிகர் கடத்தல் மோசடிகள்” மிகவும் அதிநவீனமாகி வருவதாக, நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை அக்டோபர் 2023-ல் எச்சரித்திருந்தது. நியூ சௌத் வேல்ஸ் காவல்துறையின் உளவு கண்காணிப்பாளர் ஜோசப் தொய்ஹி, சீனாவில் தான் இத்தகைய மோசடிகள் ஆரம்பமானதாக கூறுகிறார். இந்த மோசடியில் சிக்குபவர்கள், சீன அதிகாரி போன்று நடித்து இன்னொருவரை ஏமாற்றவும் வற்புறுத்தப்படுகிறார்கள். ”நாங்கள் இதுவரை பார்த்திராத வகையில், பாதிக்கப்பட்டவர்கள் மாநிலங்களுக்குள்ளேயும் வெளிநாடுகளுக்கும் பயணிக்கும் வகையில் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். சிலர் தாய்லாந்து, கம்போடியா மற்றும் ஆஸ்திரேலியாவில் வெவ்வேறு மாநிலங்களுக்கு இதற்காக பயணித்துள்ளனர்,” என உளவு கண்காணிப்பாளர் ஜோசப் தொய்ஹி ஊடக சந்திப்பில் தெரிவித்தார். எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள்? ஆஸ்திரேலியாவின் பொது ஒலிபரப்புச் சேவையான ஏபிசி, நியூ சௌத் வேல்ஸ் காவல்துறையை மேற்கோளிட்டு கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 20 முதல் 23 வயது கொண்ட மூன்று இளைஞர்களிடம் சீன அதிகாரிகள் என்று கூறி இத்தகைய மோசடிகள் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. இச்சம்பவங்களில் அவர்கள் 3,38,880 டாலர்கள் செலுத்துமாறும் இல்லையென்றால் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு அவர்கள் மீது குற்றம் சுமத்தப்படும் என மிரட்டப்பட்டுள்ளனர். ஒரு சம்பவத்தில், சிட்னியில் 20 வயது இளைஞர் கைவிலங்கிடப்பட்டு, அடிலெய்ட் மற்றும் விக்டோரியாவில் இதுபோன்று மோசடியில் சிக்கியவர்களுக்கு ஷாங்காய் காவல்துறை சார்பாக "அதிகாரபூர்வ ஆவணங்களை" வழங்குவதற்காக உள்நாட்டு விமானத்தில் செல்லுமாறு வற்புறுத்தப்பட்டார். அவருடைய குடும்பத்தாரிடம் 1,35,750 டாலர்களை செலுத்துமாறு மோசடிக்காரர்கள் கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் அதனை மறுத்து நியூ சௌத் வேல்ஸ் காவல்துறையை அணுகினர். நடக்காத கடத்தலுக்குப் பணம் பறிப்பு 2020-ஆம் ஆண்டில் குறைந்தது 8 பேர் இத்தகைய ‘மெய்நிகர் கடத்தல்’ மோசடிகளுக்கு ஆளானதாக உறுதியானதைத் தொடர்ந்து, மொபைல் அழைப்புகள் மூலம் சீன மாணவர்கள் குறிவைக்கப்படுவதாக நியூ சௌத் காவல் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த சம்பவங்களில், நடக்காத கடத்தல் சம்பவங்களுகாக பலரும் மீட்புத்தொகையாக 13,55,538 டாலர்கள் செலுத்தியுள்ளனர். ஏப்ரல் 2020-ல், சிட்னி புறநகரில் மொபைல் அழைப்பின் மூலம் சீன காவல் அதிகாரி போன்று பேசி, சீன மாணவி ஒருவர் கடத்தப்பட்டதாக நம்ப வைக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினர் 2,03,300 டாலர்கள் செலுத்தியதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, அந்த மாணவி ஒருநாள் கழித்து பாதுகாப்பாக வீட்டுக்குச் சென்றார். படக்குறிப்பு, 2020-ஆம் ஆண்டில் இந்த மோசடியில் சிக்கியவர்கள், தாங்கள் கடத்தப்பட்டது போன்று எடுத்த புகைப்படம் ஆஸ்திரேலிய காவல்துறைக்கு அனுப்பப்பட்டது. இதேபோன்ற மோசடிகளில் ஜப்பானில் உள்ள சீன மாணவர்கள் மிரட்டப்படுவதாக ஜப்பான் டைம்ஸ் ஆகஸ்ட் 2023-ல் செய்தி வெளியிட்டது. அப்படி ஒரு சம்பவத்தில் சீன மாணவி ஒருவரின் பெற்றோர், தங்கள் மகள் தாக்கப்பட்டது போன்ற புகைப்படம் தங்களுக்கு வந்ததைத் தொடர்ந்து, சீன வங்கிக்கணக்குக்கு 42,300 டாலர்களை அனுப்பியுள்ளனர். பின்னர், சீன பாதுகாப்பு அதிகாரி என ஒருவரிடமிருந்து அம்மாணவிக்கு மிரட்டல் தொனியில் அழைப்பு வந்துள்ளது. அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிலிருந்து தப்பிக்க போலியாக தான் கடத்தப்பட்டதாக அரங்கேற்றி, அதன்மூலம் அவர் பெற்றோர் மூலமாக பணம் பெற வேண்டும் எனவும் அம்மாணவி மிரட்டப்பட்டுள்ளார். தங்களுக்கு வரும் அழைப்புகளை சீன சர்வதேச மாணவர்கள் சோதிக்க வேண்டும் எனவும் உள்நாட்டு தூதரக மட்டத்தில் உறுதி செய்துகொள்ள வேண்டும் எனவும் தாங்கள் இதுபோன்று குறிவைக்கப்பட்டால் காவல் துறையிடம் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். https://www.bbc.com/tamil/articles/c3gy7nl241po
-
தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கான முதலீட்டு தளமாக மாற்றப்படுகிறதா பூநகரி அபிவிருத்தி திட்டம் - செல்வராஜா கஜேந்திரன்
தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கான முதலீட்டு தளமாக மாற்றப்படுகிறதா பூநகரி அபிவிருத்தி திட்டம் - செல்வராஜா கஜேந்திரன் Published By: VISHNU 07 JAN, 2024 | 07:58 PM பூநகரி அபிவிருத்தி திட்டம் தொடர்பில் அப் பகுதி மக்களுடன் கலந்துரையாடப்படவில்லை. மாறாக ரணில் அரசின் தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கான முதலீட்டு தளமாக மாற்றப்படுகிறதா என்ற கேள்வி எழுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் சனிக்கிழமை (06) இடம்பெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 19 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வில் கலந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கு விஜயம் செய்து பெரிய ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். பூநகரியில் அபிவிருத்தி திட்டம் செய்யப் போவதாக அங்கு கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். 500 மில்லியன் ரூபாய் அவசர அவசரமாக ஒதுக்கபடபட்டு பூநகரி அபிவிருத்தி என்ற பெயரில் அது அரங்கேற்றப்படுகின்றது. அந்த அபிவிருத்தி தொடர்டபான கலந்துரையாடல் அந்த பிரதேசத்து மக்களுடன் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த 2 ஆம் திகதி பூநகரி பிரதேச சபை மண்டபத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நகர அபிவிருத்தி அதிகாரசபையால் ஒழுங்குபடுத்தப்பட்ட அக் கூட்டத்தில் வடமாகாண அதிகாரிகள் கலந்து கொண்டனர். அத் திட்டத்தை அப்போது விளங்கப்படுத்த முற்பட்டிருந்தார்கள். அந்த திட்டம் தயாரித்து அவர்கள் கொண்டு வந்திருந்தார்கள். அந்த திட்டம் தயாரிப்பதற்கு முன்னதாக அந்த பிரதேசத்து மக்களுடன் எந்தவிதமான கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அந்தக் கூட்டம் சிவில் அமைப்புக்களுடன் என கூறப்பட்டாலும் வெறும் ஈபிடிபி ஆதரவாளர்கள் 8- 10 பேருடன் தான் அந்தக் கூட்டம் நடைபெற்றது. ஏனையவர்கள் அனைவரும் திணைக்களங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களாக இருந்தார்கள். அந்த அபிவிருத்தி அந்த பிரதேசத்திற்கு பொருமத்தமானதா இல்லை என கருத்துச் சொல்லக் கூடிய எவரும் அங்கு கலந்து கொண்டிருக்கவில்லை. பூநகரி, பொன்னாவெளி என்ற இடத்தில் ஒரு சில வருடங்களாக சீமெந்துக்காக சுண்ணக்கல் அகழ்தல் தொடர்பான பிரச்சனை போய் கொண்டு இருகின்றது. அகழ்வுக்கு எதிராக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் அந்த பூநகரிப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். அந்த பிரதேசத்தை சேர்ந்த கிராஞ்சி, வேரவில், வலைப்பாடுஇ பாலாவி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த எவரும் அந்தக் கூட்டத்தில் அழைக்கப்பட்டிருக்கவில்லை. அதேபோல் பல கிராமங்களில் உள்ள பொது அமைப்புக்களைச் சார்ந்தோர் அழைக்கப்படவில்லை. முன்னர் பூநகரி பிரதேச சபை தவிசாளராக இருந்தவர் கூட அழைக்கப்படவில்லை. ஆனால் 2023 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேர்தலில் ஈபிடிபி சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களே அழைக்கப்பட்டிருந்தார்கள். அவ்வாறானவர்களே பல அபிவிருத்தி கூட்டங்களுக்கு அழைக்கப்பட்டு அவர்கள் மூலம் குழப்பங்களும் அச்சறுத்தல்களும் ஏற்படுத்தப்படுகின்றது. எதிர் கருத்துக்களை சொல்ல முடியாத நிலை ஏற்படுத்தப்படுகிறது. ஆகவே 500 மில்லியன் ரூபா அபிவிருத்தி என்பது வெறுமனே வாடியடியை மையப்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. 30 ஆண்டுகள் யுத்தம் நடந்துள்ளது. அபிவிருத்தியில் 50 ஆண்டுகள் பின்னோக்கி நின்கிறோம். அப்படிபட்ட நிலையில பூநகரியை அபிவிருத்தி செய்வதாக இருந்தால் வெளியில் உள்ள மக்கள் அங்கு வந்து மீள்குடியேறுவதற்கான உட்கட்டுமான வசதிகள் தேவை. அது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடற்கரையோரமாக காற்றாளைகள் அமைக்கப்படுகிறது. காற்றாளை அமைப்பதில் பொது மக்களுக்கு உடன்பாடில்லை. அவர்களது நிலம் பாதிக்கபடுவதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். கடற்கரையோரமாக அட்டைப் ப்ணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அட்டை பண்ணை வழங்குவதால் கரையோர மீன்பிடி பாதிக்கப்படுகிறது. மீன்பிடி இறக்கு துறைகள் புனரமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஒரு புறம் கடற்தொழில் அழிக்கப்பட்டு கடல் அட்டை பண்ணைகள வழங்கப்படுகிறது. மறுபுறம் இறங்கு துறைகள் அமைக்கப்படுகின்றன என்றால் பூநகரி மக்களின் பொருளாதாரத்திற்காக திட்டங்கள் போடப்படுகிறதா அல்லது ரணில் அரசின் தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கான முதலீட்டு தளமாக இது மாற்றப்படுகின்றதா என்ற கேள்வி எழுகிறது. பூநகரி அல்லது கிளிநொச்சி அல்லது வடக்கைச் சேர்ந்தவர்களுக்கு அங்கு முதலீடுகளை செய்வதற்கும், வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கும் தொழிற்சாலைகள் அமைக்கும் திட்டயங்கள் இருகின்றதா என்றால் இல்லை. விடுதிகள் அமைக்கப்படவுள்ளதாக அந்த திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த விடுதிகளுக்குரிய காணிகள் யாருக்கு வழங்கப்பட போகிறது. அதன் முதலீட்டாளர்கள் யார் என்பது வெளிப்படுத்தவில்லை. அங்கே பாரிய சந்தேகம் இருக்கிறது. ஒரு விவசாய பிரதேசம் எப்படி நகர அபிவிருத்தி பிரதேசமாக தெரிவு செயயப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுகிறது. பூநகரி பிரதேசம் முழுமையாக அதில் உள்வாங்கப்படவில்லை. அந்த பிரதேசத்திற்கான ஒரு முழுமையான திட்டமாக அது வகுக்கப்பட்டிருந்தால் அது பொருத்தமானதாக இருக்கும். ஆனால் அப்படியல்ல. ஏற்கனவே இவ்வாறான கவர்சிகரமான அபிவிருத்தி திட்டங்களை பற்றி எமக்கு தெரியும். யாழ்ப்பாணம், மயிலிட்டி திட்டம் இலங்கை மீன் உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கை வழங்கியிருந்தது. அந்த மயிலிட்டி துறைமுகம் 2017 ஆம் ஆண்டு இதே ரணில் பிரதமராக இருந்த போது முன்னுரிமை காட்டி அந்த துறைமுகம் அபிவிருத்தி செய்வதாக கூறி மக்களிடம் இருந்த துறைமுகம், மத்திய துறைமுக அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டது. முதல் கட்ட அபிவிருத்தி பிற்பாடு அந்த மக்கள் தொழில் செய்த நிலங்களை இழக்க வேண்டி வந்தது. அது போல தான் பூநகரி அபிவிருத்தி திட்டமும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் தலைமையில் இடம்பெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவு தின நிகழ்வில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வவுனியா மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/173356
-
உண்மையான நல்லிணக்கம் என்றால் எமது உறவுகளை விடுதலை செய்யுங்கள் : மகஜரைக் கையளித்த குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை
Published By: VISHNU 07 JAN, 2024 | 07:52 PM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயத்திற்கு சமாந்தமரமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்து வேட்டையினை, குரலற்றவர்களின் குரல் அமைப்பு முன்னெடுத்திருந்தது. அந்தவகையில், மிகநீண்ட காலங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள திகளையும், எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னதாக விடுதலைசெய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்னிறுத்தி; மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலதரப்பட்டவர்களிடம் இருந்தும் திரட்டப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய குறித்த மகஜர், நேற்று முன்தினம் யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கபட்டுள்ளது. அதன்போது ஜனாதிபதியிடத்தில், “சமூகங்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கம் மலர வேண்டுமானால், சிறையில் வாடும் எமது 12 தமிழ் அரசியல் கைதிகளையும் எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் விடுதலைசெய்ய வேண்டும்" எனத் தெரிவித்த, குரலற்றவர்களின் குரல் அமைப்பினுடைய ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன், அதற்கான கையெழுத்து மகஜரையும் ஜனாதிபதியிடத்தில் கையளித்துள்ளார். அதேநேரம், ‘மிக நீண்ட காலமாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்’ எனும் தலைமையில் உள்ள குறித்த மகஜரில், இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில், இந்த அழகிய சிறிய தீவில் வாழும் இனங்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் அரசியல் முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர, அரசாங்கத்தையும் சம்பந்தப்பட்ட தரப்பினரையும் ஒரு நியாயமான மற்றும் நிலையான சமாதானத்தை நோக்கி நகர்த்தும் வேலைத் திட்டத்தை நீங்கள் உருவாக்க வேண்டும். மூன்றரை தசாப்த கால யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் இனமுறுகல் மற்றும் முரண்பாடு காரணமாக பரஸ்பர புரிந்துணர்வும் நம்பிக்கையும் இன்னும் துளிர்விடவில்லை. தற்போதுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும் வரை இந்த நாட்டில் இன முரண்பாடுகளும் அவநம்பிக்கையும் தவிர்க்க முடியாததாகவே இருக்கும். இந்த நாட்டில் நீண்டகாலமாக இனம் என்ற வகையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இன, அரசியல் பிரச்சினைகளுக்கு நீதியான நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பது அவசியமானதுடன், போரினாலும் மற்றும் இன்றும் போரின் விளைவுகளாலும் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு நிரந்தர நீதியைப் பெற்றுக் கொடுப்பதும் அவசியமாகும். சமூகக் கண்ணோட்டம் கொண்ட மனித நேயமுள்ள சிவில் அமைப்புகளாக நாம் இதன் மூலம் மட்டுமே இலங்கைத் தீவில் உண்மையான, நிலையான, நியாயமான அமைதியை அடைய முடியும் என்று நம்புகிறோம். இவ்வகையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையானது தமிழ் மக்கள் மத்தியில் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது. தற்போதுள்ள இனப் பதற்றத்தைத் தீர்ப்பதற்கான நல்லெண்ண முயற்சியாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நீங்கள் ஏற்கனவே ஆரம்பித்திருந்தீர்கள். ஆனால், தற்போது அவ்வேலைத் திட்டம் தேக்கமடைந்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை தொடர்வது நல்லிணக்க முயற்சியாக தமிழ் மக்களுக்கு தங்கள் மீது வலுவான நம்பிக்கையை ஏற்படுத்த உதவும். வரலாறு முழுவதும், அரசியல் கைதிகள் அல்லது போர்க் கைதிகளின் விடுதலை அல்லது பரிமாற்றம் என்பது பிளவுபட்ட அல்லது போரில் இருக்கும் இரு தரப்பினரிடையே பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவிக்கும் செயலாக இருந்து வருகின்றது. நீக்கப்பட வேண்டியதும் சர்வதேச ரீதியில் நாட்டிற்கு அவமானத்தைத் தருவதுமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் காரணமாக நீண்டகாலமாக (15 முதல் 28 ஆண்டுகள் வரை) சிறையில் வாடும் 12 தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அதே சட்டத்தின் காரணமாக 14 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேல் நீதிமன்றத்தில் (வழ.இல.ர்ஊஃ3861ஃ2007) வழக்கை எதிர்கொண்டு '15 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூபா 25000 அபராதம்' என தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின் சட்டமா அதிபரின் மேன்முறையீட்டுக்கு அமைய மேன்முறையீட்டு நீதி மன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி செ.சத்தியலீலா ஆகியோரையும் எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் விடுவித்து அவர்களது உறவினர்களுடன் சாதாரண வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம். நீண்ட கால சிறைவாசம் காரணமாக இந்த தமிழ் அரசியல் கைதிகள் முதியவர்கள், நோயாளிகள், சிறையில் இளமையை இழந்தவர்கள் என உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு, தினம் தினம் விடியலை எதிர்பார்த்து நடை பிணங்களாக சிறையில் வாடுகின்றனர். மனிதாபிமான அடிப்படையிலும் மற்றும் இனங்களுக்கடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்புவதை நோக்கமாககக் கொண்டும் திருமதி சத்தியலீலா உட்பட, எஞ்சிய 12 தமிழ் அரசியல் கைதிகளையும் அனைத்து வழக்குகளில் இருந்தும் குற்றச்சாட்டுகளை விலக்குவது மூலமும் அல்லது தண்டனைகளில் இருந்து பொது மன்னிப்பு வழங்குவதன் மூலமும் எந்தவித பாகுபாடும் இன்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு, துன்பப்படும் எமது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/173382
-
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு செல்கிறார் ரணில்
ஜனாதிபதி ரணிலிடம் மூன்று கோரிக்கைகளை இந்து அமைப்புக்கள் கூட்டிணைந்து முன்வைப்பு Published By: VISHNU 07 JAN, 2024 | 04:50 PM மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும், பசுவதை தடைச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும், இந்து சமயத்தை அரசியலமைப்பில் முன்னுரிமைச் சமயம் ஆக்க வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் இந்து சமய அமைப்புக்கள் கூட்டிணைந்து முன்வைத்துள்ளன. குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜரை இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மாவட்டபுரம் அருள்மிகு கந்தசாமி கோயில் தலைவர் குருக்கள் ஐயா சிவ பூமி அறக்கட்டளை தலைவர் ஆறு திருமுருகன் சிவ சேனை தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் உள்ளிட்ட நூற்றுக்கும் கூடுதலானோர் கையொப்பமிட்டிருந்த நிலையில், இலங்கை இந்து அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் சிவபால தேசிகர், செயலாளர் சிறீந்திரன் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் வைத்து கையளித்தனர். குறித்த மகஜரில், உங்கள் ஆட்சிக் காலத்தில் திருகோணமலையில் தொல்லியல் திணைக்களத்தாரின் பௌத்த மேலாதிக்க அடாவடித்தனத்தை நிறுத்தினீர்கள், வெடுக்குநாறி மலையில் உடைந்த சைவத் திருவுருவங்களை மீண்டும் நிறுவ வழி செய்தீர்கள், பகவத் கீதைக்கான உலக மாநாட்டையும் சமஸ்கிருத மொழிக்கான உலக மாநாட்டையும் இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறீர்கள், இந்து சமய வழிபடு பயணிகளுக்காகக் காங்கேயன்துறை நாகப்பட்டினம் கப்பல் சேவையை ஏற்றினீர்கள் உள்ளிட்ட பத்து விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த நடவடிக்கைகளுக்காக பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அம்மகஜரில், தங்களது மேற்படி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக இந்து சமயத்திற்கு அரசியலமைப்பில் முன்னுரிமை, மதமாற்றத் தடைச் சட்டம், பசுக் கொலைத் தடைச் சட்டம் ஆகிய மூன்றையும் தங்களுடைய ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றி இலங்கையில் இந்துக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் வாழ்வியலையும் நன்நெறியையும் இடையூறின்றிக் பேணவும் போற்றவும் ஆவண செய்வீர்களாக. இந்த மூன்று கோரிக்கைகளுக்கும் செவி சாய்த்து உரிய நடவடிக்கை எடுப்பீர்களானால் இந்துக்களின் வாக்கு வங்கி ஆதரவை உங்களுக்காகப் பெற்று தருவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது, இலங்கை சிவபூமி. இலங்கையின் ஆதிசமயம் சைவ சமயம். சைவர்களோடு சேர்ந்து புத்தர்களும் விஷ்ணுவை சிவனை உமையை கண்ணகியை கல்வி செல்வம் வெற்றிகான அம்மன்களை விநாயகரை முருகனை வழிபடுகிறார்கள். இந்துக்கள் இந்த நாட்டில் உரிமையோடு வாழ்வதைப் புத்த சமயத்தவரும் உறுதி செய்கிறார்கள். இலங்கை சிவ பூமி என்பதைப் புத்த சமயத்தவரும் உறுதி செய்கிறார்கள் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/173347
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நான் கணனி ஊடாக இணைப்பதால் பிரச்சனை இல்லைப்போல!
-
சென்னை எண்ணூரில் நள்ளிரவில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு; மூச்சுத் திணறலால் தப்பியோடிய மக்கள் - என்ன நடந்தது?
அமோனியா வாயுக் கசிவால் மூச்சுத் திணறும் எண்ணூர்: தொடர் பாதிப்புகளால் தவிக்கும் மக்கள் படக்குறிப்பு, அமோனியா வாயுக்கசிவுக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எண்ணூரை சேர்ந்த சூரியகாந்திக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் சுழன்று கொண்டிருக்கும் சென்னை நகரின் வடக்கு முனையில் அமைந்திருக்கும் எண்ணூர் உண்மையாகவே மூச்சுவிடச் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் கலந்து வந்த எண்ணெய் கழிவுகள் எண்ணூர் மீனவக் கிராமங்கள் உட்பட, குடியிருப்புப் பகுதிகளையும் நாசம் செய்து ஒரு மாதம் கடந்துவிட்டது. அதன் சுவடு மறைவதற்குள் டிசம்பர் 26 நள்ளிரவு கோரமண்டல் உரத் தொழிற்சாலை அம்மோனியா குழாயிலிருந்து கசிந்த அம்மோனியா வாயு எண்ணூரையே கலங்கடித்தது. இந்தப் பிரச்னை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், "தற்காலிகமாக கோரமண்டல் நிறுவனத்தை மூடி வைத்துள்ளதாகவும் அதுகுறித்த ஆய்வறிக்கை அடிப்படையில் விரைவில் முடிவு எடுக்கப்படும்," என்றும் தெரிவித்தார். ஒரே மாதத்தில் அடுத்தடுத்து காற்றிலும், நீரிலும் பெரும் அழிவைச் சந்தித்த எண்ணூர் மக்களின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய களத்திற்குச் சென்றது பிபிசி தமிழ். நெஞ்சை கிழிக்கும் எண்ணூர் படக்குறிப்பு, 11 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எண்ணூர் பகுதி மக்கள் சூரியகாந்தி பாட்டிக்கு 70 வயதாகிறது. தினமும் மீன் விற்பது அவர் தொழில். அவருக்கு இரண்டு மகள்கள், இருவருமே திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் இருக்கிறார்கள்.கோரமண்டல் நிறுவனத்தின் சுவர்களை ஒட்டியுள்ள பெரியகுப்பம் 1வது தெருவைச் சேர்ந்தவர் இவர். கடந்த 26.12.2023 அன்று நள்ளிரவு தூங்கிக் கொண்டிருந்த சூரியகாந்தி வெளியே சத்தம் கேட்டு ஓடி வந்திருக்கிறார். காற்றில் கந்தக நெடி மூக்கைத் துளைக்க, சுவாசிக்க சிரமப்பட்டு மற்ற மக்கள் ஓடும் திசைநோக்கி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியுள்ளார். சூரியகாந்திக்கு நீண்ட நாட்களாக சர்க்கரை நோயும் இருந்திருக்கிறது. இந்நிலையில் அம்மோனியா புகையும் சேர்ந்துகொள்ள நெஞ்சடைப்பு மற்றும் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு அன்றிரவே திருவொற்றியூரில் உள்ள ஆகாஷ் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கே ஊசி மற்றும் மாத்திரை கொடுத்து அவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால், அங்கிருந்து வந்த மறுநாளே மாரடைப்பு ஏற்பட்டு மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அதில் அவருக்கு கை, கால், வாய் என அனைத்து இடங்களும் காயமடைந்தன. இந்நிலையில் 28.12.23 அன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சூரியகாந்தி. இந்த முறை அவருக்கு இதயத்தில் கோளாறு என்று கூறிய மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்து அன்றிலிருந்து 4.1.2024 வரை அவரை மருத்துவமனையில் வைத்திருந்தனர். இந்நிலையில் பிபிசி குழு அவரைச் சந்தித்தபோது தனக்கு இன்னமும் படபடப்பு, மயக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதாகவும் தன்னால் வீட்டிற்குச் செல்ல முடியாது என்றும் கூறினார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் தங்களை இன்றே வீட்டிற்குச் செல்லச் சொல்வதாகவும் குற்றஞ்சாட்டினார். நாம் அவரைச் சந்தித்துவிட்டு வந்த சில மணிநேரங்களில் மருத்துவமனை நிர்வாகம் அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டது. தொடரும் ஆஞ்சியோக்கள் படக்குறிப்பு, 48 பேர் எண்ணூரில் வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு ஆகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளனர். பெரியகுப்பம் கிராமத்தில் சூரியகாந்தி வசிக்கும் அதே தெருவில் வசிக்கும் மற்றொருவர் 57 வயதாகும் தேசராணி. 26.12.23 ஆண்டு நள்ளிரவில் கழிவறை செல்ல எழுந்து வந்தவர் அம்மோனியா புகையின் நெடி தாங்காமல் தூங்கிக் கொண்டிருந்த தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் எழுப்பி காப்பாற்றியுள்ளார். ஆனால், இவரும் சூரியகாந்தி பாட்டியைப் போலவே நெஞ்சடைப்பு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். அவரைப் போல இவருக்கும் முதல் நாளில் மாத்திரை ஊசிகள் வழங்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு வந்த பின்னர் ஒரு நாள் கழித்து மீண்டும் மயக்கம், மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இவருக்கும் ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளது. தேசராணிக்கு இதற்கு முன்னரே சர்க்கரை நோய் மற்றும் லேசான இதய கோளாறு இருந்துள்ளது. ஆனால், அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட பிறகுதான் இதயத்தின் நிலை முன்பைவிட மோசமாகியுள்ளதாகக் குறிப்பிடுகிறார் அவர். இவருக்கும் இன்னமும் பதற்றம், உடல் நடுக்கம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. ஆனால், இவரும் நாம் சந்தித்து வந்த அடுத்த சில மணிநேரங்களில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இவர்களோடு சேர்த்து 48 பேர் எண்ணூரில் வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு ஆகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இவர்கள் யாரிடமும் பணம் பெறக்கூடாது என்று முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் மற்றும் எம்எல்ஏ கே.பி.சங்கர் ஆகியோர் கூறியிருந்தனர். அதன் அடிப்படையில் இந்த மக்கள் யாரிடமும் ஆகாஷ் மருத்துவமனையில் பணம் வாங்கவில்லை. அம்மோனியா வாயு ஆஞ்சியோவுக்கு காரணமாகுமா? அம்மோனியா வாயுவால் ஆஞ்சியோ செய்ய வேண்டிய தேவை இருக்குமா என்று தெரிந்துகொள்வதற்காக பொன்னேரி அரசு மருத்துவமனை மருத்துவர் அணுரத்னா அவர்களிடம் பேசினோம். “இதுபோன்ற வாயு சார்ந்த பிரச்னைகள் நுரையீரலைத் தாக்கும். அதனால், மூச்சுத் திணறல், மயக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். அதற்காக 50 பேர் போகும்போது முதலில் அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கும் சிகிச்சை அளிக்கப்படும். அதில் 48 பேர் சரியாகி, இருவர் குணமாகவில்லை என்றால் அவர்களுக்கு வேறு ஏதும் பிரச்னைகள் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். அதில் முதலில் பார்ப்பது பரிசோதிக்கப்படுவது இதயம்தான். அதில் பிரச்னை உள்ளது தெரியவந்த பின் ஆஞ்சியாவை பரிந்துரைப்பார்கள்,” என்கிறார் அவர். எண்ணூர் எப்படி இருக்கிறது? படக்குறிப்பு, மீனவர்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப 1 வருடமாவது. அடுத்தடுத்து எண்ணெய் மற்றும் வாயுக் கசிவால் எண்ணூர் மூச்சுவிட முடியாமல் திணறி கொண்டிருக்கிறது. எண்ணெய்க் கழிவுகளால் பாதிக்கப்பட்ட முகத்துவாரக்குப்பம், எண்ணூர்குப்பம் மற்றும் அதை ஒட்டியுள்ள ஆற்றோரப் பகுதிகளின் கரைகளில் இன்னமும் எண்ணெய்க் கழிவுகள் மிதந்து கொண்டிருக்கின்றன. இதனால், தங்கள் படகுகள் மற்றும் மோட்டார்கள் சேதமடைந்த மக்கள் அவற்றை அரசு கொடுத்த நிவாரண நிதியோடு மேலும் கடன் வாங்கி சரி செய்யும் பணிகளில் இறங்கியுள்ளனர். "என்னதான் சரி செய்தாலும் மீனவர்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் 6 மாதம் முதல் 1 வருடமாவது தேவைப்படும். நேற்று பங்குனி ஆமைகளும் செத்து மிதந்திருக்கின்றன," என்கிறார் எண்ணூர் குப்பத்தைச் சேர்ந்த மீனவர் எம். ராமன். படக்குறிப்பு, தங்கள் மீன்களை காசிமேட்டில் யாரும் வாங்குவதில்லை என்கிறார் மீனவர் ராமன் அப்படியே சிறிது தூரமாகச் சென்று மீன்பிடித்து விட்டு வந்தாலும், எண்ணூர் பகுதியில் இருந்து வரும் மீன்களை காசிமேட்டில் யாரும் வாங்க முன்வருவதில்லை என்றும், அங்கிருக்கும் மீனவர்களே இவர்களை விற்க வேண்டாம் என்று சொல்வதாகவும் கூறுகிறார் மீனவர் ராமன். கடந்த 1990களில் நன்னீர் ஆறாக இருந்த இந்த இடம் அதற்குப் பின் பெருகிய நிறுவனங்களால் கொஞ்சம் கொஞ்சமாகப் பாழாகி விட்டதாகக் குறிப்பிடும் அவர், “மொத்தமா நாங்க அழிஞ்சி போயிட்டாக்கூட இன்னொரு பிறப்பு பிறந்து வாழலாம். ஆனால் இப்படியொரு வாழ்க்கை வாழவே கூடாது” என்று நொந்து கொண்டே தெரிவித்தார். எண்ணூரின் மூச்சை நிறுத்தும் வாயு படக்குறிப்பு, மழைக் காலங்களில் அம்மோனியா வாயு திறந்துவிடப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எண்ணூரில் 26.12.23 அன்று ஏற்பட்ட அம்மோனியா கசிவு விபத்துக்குப் பிறகு ஒரு சில காட்சிகள் மாறியுள்ளன. கோரமண்டல் நிறுவனத்தின் அம்மோனியா குழாய் கடலுக்குள் செல்லும் இடத்தில் புதிதாக ‘இது தடை செய்யப்பட்ட பகுதி’ என்ற எச்சரிக்கை போர்டு முளைத்துள்ளது. அதைச் சுற்றி எப்போதும் இரு காவலர்கள் இருக்கின்றனர். எண்ணூரில் இன்று நேற்றல்ல நீண்ட காலமாகவே மழைக் காலங்களில் அம்மோனியா வாயு திறந்து விடப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மழையோடு மழையாகத் திறந்து விடப்படுவதால் ஒன்றும் தெரியாது என்று கூறும் அவர்கள், தற்போது திடீர் குழாய் விபத்து எண்ணூரையே நிலைகுலையச் செய்துவிட்டதாகக் குறிப்பிடுகின்றனர். இதனால் அந்த கோரமண்டல் ஆலையை மூட வேண்டும் என்று கூறி எண்ணூர் பாதுகாப்புக் குழு என்ற ஒருங்கிணைப்பு அமைப்பை உருவாக்கி 10 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேசும்போது, இன்னமும் தாங்கள் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதாகக் கூறுகிறார்கள். சிறு குழந்தைகளுக்கு அதிகமாக தோல்சார் நோய்களும், சளி போன்ற நோய்களும் எப்போதுமே இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதற்காக மருத்துவர்களிடம் சென்றாலும், முதலில் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுங்கள், அப்போதுதான் இந்தப் பிரச்னைகள் சரியாகும் என்று எச்சரிப்பதாகவும் எண்ணூர் மக்கள் கூறுகின்றனர். எண்ணூர் மருத்துவர்கள் கூறுவது என்ன? படக்குறிப்பு, கோரமண்டல் தொழிற்சாலைக்கு எதிராக எண்ணூர் மக்கள் 12வது நாளாக கொட்டும் மழையிலும் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர். எண்ணூர் பகுதி சென்னையில் இருந்தாலும்கூட இன்னும் 33 கிராமங்களாகவே இயங்கி வருகிறது. இதில் 8 மீனவ கிராமங்களும் அடங்கும். இந்தப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிகம் நுரையீரல் தொடர்பான நோய்களாலும், தோல் நோய்களாலும் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கிறார் இதே பகுதியில் 30 வருடங்களாகப் பணியாற்றி வரும் மருத்துவர் உஷாதேவி. பெரிய குப்பம், சின்னக்குப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரகுப்பம், சத்யவாணி முத்துநகர், உலகநாதபுரம், தாளாங்குப்பம், நெட்டுக்குப்பம், சிவன்படை வீதி உள்ளிட்ட எண்ணூரை சுற்றியுள்ள மக்கள் பலரும் இவரிடம் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்காக வருகின்றனர். அவர்களில் பலரும் நுரையீரல் தொடர்பான பிரச்னைகள், ஒவ்வாமை, தோல் நோய்கள், கண், தொண்டை, நெஞ்செரிச்சல் ஆகிய பிரச்னைகளுக்காக வருவதாக அவர் தெரிவிக்கிறார். இதில் பலருக்கும் நீண்டகாலப் பிரச்னைகளாக ஆஸ்துமா, புற்றுநோய் உள்ளிட்டவையும் இருப்பதாகக் கூறுகிறார். அதில் ஆஸ்துமா மற்றும் அலர்ஜியால் போதிக்கப்பட்ட அதிகமான மக்கள் வருவதாகக் குறிப்பிடுகிறார் மருத்துவர் உஷாதேவி. மேலும் இந்தப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் அதிகமாக நிம்மோனியா, சளி மற்றும் பிற நுரையீரல் சார் பிரச்னைகளுக்கு அதிகம் அவரிடம் வருவதாக நம்மிடம் தெரிவிக்கிறார். குறிப்பாக இந்த மக்கள் ஆண்டுதோறும் படை உள்ளிட்ட தோல் நோய்களுக்காக அதிகம் செலவு செய்வதாகத் தெரிவிக்கும் இவர் இதற்குக் காரணமாக இந்தப் பகுதியின் தொழிற்சாலை மாசுவை முன்வைக்கிறார். “இன்று நேற்றல்ல பல காலமாக இந்த வாயுக்களை திறந்துவிடும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. காற்று எந்தத் திசையில் போகிறதோ அந்தத் திசையில் உள்ள மக்களை அது மெதுவாக தாக்கிக் கொண்டேதான் இருக்கிறது,” என்கிறார் அவர். “சமீபத்தில் வந்த எண்ணெய்க் கழிவுகளை அகற்றுவதற்குக்கூட மீனவ கிராம மக்களையே தினக் கூலியாகப் பயன்படுத்தினார்கள். அவர்களும் அதன் ஆபத்து தெரியாமல் அந்த எண்ணெயில் இறங்கி சுத்தம் செய்கின்றனர். ஆனால், அது மேலும் அவர்களுக்கு மோசமான நோய்களையே ஏற்படுத்தும் என்பது அந்த மக்களுக்குத் தெரிவதில்லை,” என்று கூறுகிறார் மருத்துவர் உஷாதேவி. எண்ணூர் பாதுகாப்புக் குழு படக்குறிப்பு, 11 நாட்களாக தொடரும் எண்ணூர் மக்கள் போராட்டம் பல ஆண்டுகளாகவே எண்ணூரில் செயல்பட்டு வரும் நிறுவனங்களை ஒழுங்குமுறை படுத்தக் கோரியும், சில நிறுவனங்களை அகற்றக் கோரியும் அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இந்த முறை கடந்த 11 நாட்களாக கோரமண்டல் நிறுவனத்தை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து எண்ணூரை சேர்ந்த 33 கிராம மக்களும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதுகுறித்து போராட்டத்தை முன்னெடுத்து வருபவர்களில் ஒருவரான மானுடவியல் ஆய்வாளர் முனைவர். அ.பகத் சிங்கிடம் பேசினோம். “எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் வந்து ஒரு மாதம் ஆகிறது. அம்மோனியா வாயு கசிந்து 10 நாட்கள் கடந்து விட்டது. ஆனால், மக்களிடம் முறையாக அதிகாரிகள் பேசுவதோ அல்லது அவர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுவதோ நடக்கவில்லை. இதுவே அடையாறு, அண்ணா நகரில் இதுபோன்று நடந்திருந்தால் தமிழ்நாடே ஆடிப் போயிருக்கும். ஆனால், இது எண்ணூர் என்பதால் அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கே மெத்தனப் போக்கு இருப்பதாகத் தெரிவிக்கிறார் அவர்." பட மூலாதாரம்,BAGATH VEERA ARUN படக்குறிப்பு, எண்ணூர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான முனைவர் பகத் சிங் இத்தனை நாட்கள் கழித்து சமீபத்தில்தான் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டமே நடந்தது என்று குறிப்பிடும் அவர் அதனால் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை என்கிறார். "இதுவரை கோரமண்டல் நிறுவனத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, வழக்குகள் பதியப்பட்டுள்ளதா, என்று எந்த விவரங்களும் இந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால், போராடும் மக்கள் மீது மட்டும் வழக்கு போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார் பகத் சிங். இந்த போராட்டக்குழுவைச் சேர்ந்த 30க்கும் மேற்ப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 353, 294B , 506 / 2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் பகத். இதை காவல்துறையும் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இணை ஆணையாளர் விஜயகுமார் அவர்களிடம் பேசியபோது, “முதல்நாள் மறியல் செய்ததற்காக மக்கள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளதாக” தெரிவித்தோர். ஆனால், என்ன பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்பதை விசாரணை காரணங்களுக்காகச் சொல்ல மறுத்துவிட்டார். மேற்கொண்டு பேசிய முனைவர் பகத் சிங், "இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட துறைகளான தொழில் துறை, சுற்றுச்சூழல் துறை, கடல்சார் துறை மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு ஆகிய துறைகள் இணைந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இன்று வரை அதெல்லாம் நடந்ததா என்பது கூட எங்களுக்குத் தெரியவில்லை. எது எப்படியோ, இந்த முறை கோரமண்டல் நிறுவனத்தை மூடும் வரை இந்த மக்களின் அறவழி போராட்டம் தொடரும் என்று முடித்தார் பகத் சிங். கோரமண்டல் நிறுவனம் மீது நடவடிக்கை? இதுவரை கோரமண்டல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை அல்லது வழக்குகள் பதியப்பட்டுள்ளதா என்ற கேள்வியை தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹுவிடம் கேட்டோம். “ஜனவரி 8ஆம் தேதியே இறுதி அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது. அதன் பின்னரே இது குறித்த முடிவுகள் எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்தத் தொழிற்சாலை மூடப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டார். படக்குறிப்பு, கோரமண்டல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கைகள் முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகள் கோரமண்டல் ஆலையில் இருந்து அம்மோனியா வாயு கசிந்ததை அடுத்து அந்நிறுவனம் 27ம் தேதி தனது முதல் அறிக்கையை வெளியிட்டது. பின்னர் இரு நாட்கள் கழித்து 29.12.23 அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் அரசுக்குழு நிறுவனம் சோதனை செய்து அறிக்கை சமர்ப்பித்து விட்டதாகவும், பாதுகாப்பு சோதனைகளைச் செய்த பிறகு இயங்க அந்நிறுவனம் அனுமதி கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது. ஆனால், அடுத்த நாளே (30.12.2023) தங்களது முந்தைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த அரசு சார்ந்த விஷயங்களை மறுத்து ஓர் அறிக்கையை வெளியிட்டது கோரமண்டல் நிறுவனம். மேலும், 29.12.23 தேதியிட்ட அறிக்கையிலேயே அம்மோனியா வாயுவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மேற்சொன்ன சூரியகாந்தி மற்றும் தேசராணி ஆகிய இருவரும் 4.1.2024 அன்றே மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி இந்த இருவருக்குமே உடல்நிலை மோசமடைந்து ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எண்ணூர் மக்களின் கேள்விகள் படக்குறிப்பு, எண்ணூர் பகுதிக்கு விரிவடைந்த சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். சூரியகாந்தி, தேசராணி ஆகிய இரு பெண்களும் அம்மோனியா வாயுக்கசிவால் பாதிக்கப்படவில்லை என்றும் இதயம் சார்ந்த பிரச்னைக்காகவே அனுமதிக்கப்பட்டனர் என்றும் ஆகாஷ் மருத்துவமனை நிர்வாகம் பிபிசி தமிழிடம் தெரிவித்தது. ஆனால், அம்மோனியா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட மற்ற 46 எண்ணூர்வாசிகளை போலவே சூரியகாந்தி, தேசராணி ஆகிய இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட இதயம் தொடர்பான சிகிச்சைக்கும் பணம் வசூலிக்கப்படவில்லை. வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை என அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், அதனுடன் தொடர்பில்லை என மருத்துவமனை தரப்பிலிருந்து கூறப்படும் இரு பெண்களுக்கும் அதே வகைப்பாட்டில் கட்டணம் வசூலிக்காமல் சிகிச்சை அளித்தது ஏன் எனக் கேட்டபோது, மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. மேலும், சில விடை கிடைக்காத வினாக்களை எண்ணூர் மக்கள் முன்வைக்கின்றனர். இந்த வாயுக்கசிவு எவ்வளவு தீவிரமாக எண்ணூர் மக்களைப் பாதித்துள்ளது? கோரமண்டல் நிறுவனம் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் அங்கு நடத்தப்படும் சோதனைகள் பற்றி இதுவரை அப்பகுதி மக்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படாதது ஏன்? சுகாதாரத் துறை செயலர் கூறுவது என்ன? படக்குறிப்பு, கோரமண்டல் தொழிற்சாலைக்கு எதிராக எண்ணூர் மக்கள் 12வது நாளாக கொட்டும் மழையிலும் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர். மக்களின் உடல்நிலையை இந்த வாயுக்கசிவு எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பது குறித்து சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடியிடம் கேட்டபோது, “ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேரும், மீதமுள்ளவர்கள் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். எங்களுக்குக் கிடைத்த கடைசி அறிக்கையின்படி, அவர்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டார்கள். இந்தப் பகுதி மாநகராட்சி எல்லைக்குள் வருவதால் அந்த அதிகாரிகளை விழிப்போடு இருக்க அறிவுறுத்தியுள்ளோம். ஆனால், இதுவரை புதிய தீவிரமான சுகாதார புகார்கள் எதுவும் வரவில்லை," என்று கூறினார். இந்த மக்களுக்கு ஏதேனும் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள இந்தப் பகுதிக்கு பிரத்யேகமான சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுமா என்று கேட்டபோது, மாநகராட்சி அதிகாரிகளிடம் இருந்து இறுதி அறிக்கை வந்த பின்பே அதுகுறித்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், ஆகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு 'டிஸ்சார்ஜ் சம்மரி' கொடுக்கப்படாததன் காரணத்தைக் கேட்டபோது, 'அது தனியார் மருத்துவமனை எனக்குத் தெரியாது" என்று கூறிவிட்டார் ககன்தீப் சிங் பேடி. சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் பதில் என்ன? "தற்காலிகமாக கோரமண்டல் நிறுவனத்தை மூடி வைத்துள்ளோம். தொழிற்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகம் சோதனை செய்து அந்த நிறுவனம் இயங்கலாம் என்று கூறிய பிறகே அந்நிறுவனத்தை மீண்டும் இயக்க உத்தரவு பிறப்பிக்கப்படும்," என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசின் குழு கோரமண்டல் நிறுவனத்தை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து விட்டதாகவும், விரைவில் அதுகுறித்த தகவல் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/cyxv96v62p2o
-
பொருளாதார நெருக்கடி! மக்களின் வருமானத்தில் பெரும் வீழ்ச்சி !
இலங்கையில் 34 இலட்சம் குடும்பங்களின் வருமானம் வீழ்ச்சி! பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் 34,48,000 குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கைகள் வெளிப்படுத்துவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். அதன்படி, மொத்த குடும்ப அலகுகளில் 60.5% வருமானம் குறைந்துள்ளதாக அவர் கூறினார். குறிப்பாக பெருந்தோட்ட துறையில் வருமானம் அதிகம் குறைந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 1,70,000 குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளது . இரண்டாவதாக, கிராமப்புற மக்களின் வருமானம் அதிக வீழ்ச்சியைக் காட்டுகிறது. கிராமப்புறங்களில் கிட்டத்தட்ட 45,00,000 குடும்பங்கள் இருப்பதாகவும், 27,00,000 குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. நாட்டின் நகர்ப்புற மக்கள் தொகை சுமார் 3.6 மில்லியன். இதில் ஏறக்குறைய 9,50,000 குடும்பங்கள் இருப்பதாகவும், அதில் 5,00,000 குடும்பங்கள் வருமானத்தில் சரிவைக் காட்டுவதாகவும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/287301
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சகோ யுரியூப் இணைப்பை கொப்பி பண்ணி பேஸ்ற் செய்தால் வேலை முடிஞ்சிடும்.
-
விசேட டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்
இன்று முதல் அமுலுக்கு வருகிறது விசேட டெங்கு ஒழிப்பு வாரம் - சுகாதார அமைச்சு Published By: NANTHINI 07 JAN, 2024 | 09:53 AM நாட்டில் டெங்கு நோய் பரவி வரும் சூழலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (7) தொடங்கி விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் அனோஜா தீரசிங்க அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் 70 சுகாதார வைத்திய பிரிவுகளை உள்ளடக்கி டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என அனோஜா தீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார். நாட்டில் டெங்கு பரவுவதற்கான சூழல் காரணிகளை நீக்குவதற்கான விசேட வேலைத்திட்டங்கள் தொடர்பில் இன்றைய தினம் பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/173308
-
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரைக் கைதுசெய்வதன் மூலம் தீர்வு வழங்கலுக்கான அரசாங்கத்தின் தன்முனைப்பைக் காண்பிக்கமுடியாது - அம்பிகா சற்குணநாதன்
Published By: DIGITAL DESK 3 06 JAN, 2024 | 09:10 PM (நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் போராட்டத்தைத் தடுப்பதன் மூலம் யுத்தத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதில் அரசாங்கம் கொண்டிருக்கும் அரசியல் ரீதியான தன்முனைப்பைக் காண்பிக்கமுடியாது எனவும், தமிழ் சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கமுடியாது எனவும் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வவுனியா விஜயத்துக்கு எதிராக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவி சிவநாதன் ஜெனீற்றாவும், மேலும் சிலரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். அதன்போது அவர்கள் பொலிஸாரால் பலவந்தமாக வண்டியில் ஏற்றப்படுவதைக் காண்பிக்கும் காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களைத் தோற்றுவித்திருக்கின்றன. குறிப்பாக இதுபற்றிக் கருத்து வெளியிட்டிருக்கும் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினரும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடும் அரசாங்கம், மறுபுறம் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுத்து, அவர்களைக் கைதுசெய்கிறது எனச் சுட்டிக்காட்டியிருக்கின்றார். அதுமாத்திரமன்றி யுத்தத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதில் அரசாங்கம் கொண்டிருக்கும் அரசியல் ரீதியான தன்முனைப்பைக் காண்பிப்பதற்கும், தமிழ் சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கும் இது வழியல்ல எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார். https://www.virakesari.lk/article/173289