Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. திருத்தங்களை உள்வாங்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம் Published By: DIGITAL DESK 3 29 AUG, 2023 | 03:30 PM தற்போது வரைவாக்கம் செய்யப்பட்டுள்ள சட்ட மூலத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திருத்தங்களை உள்வாங்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை மீண்டும் தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்தை அரச வர்த்தமானியில் வெளிளிடுவதற்காக கடந்த 27 ஆம் திகதி மார்ச் மாதம் 2023 ஆண்டு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில பிரிவுகள் தொடர்பாக ஆர்வம் காட்டுகின்ற பல தரப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களைக் கருத்தில் கொண்டு அச்சட்ட மூலத்திற்கு தேவையாக திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/163437
  2. பள்ளத்தை உணர்ந்த பிரக்யான் ரோவர்; பாதையை மாற்றிய இஸ்ரோ - தற்போதைய நிலவரம்? பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, பாதுகாப்பான இடத்தில் இருந்து அந்தப் பள்ளத்தை உணர்ந்ததால், இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் பாதையை மாற்றியமைத்துள்ளனர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சந்திரயான் -3 நிலாவில் தரையிறங்கியதில் இருந்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், நேற்று(ஆகஸ்ட் 27) விண்கலத்தின் பிரக்யான் ரோவர் பயணித்த பாதையில் பெரும் பள்ளத்தை உணர்ந்துள்ளது. பாதுகாப்பான இடத்தில் இருந்து அந்தப் பள்ளத்தை உணர்ந்ததால், இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் பாதையை மாற்றியமைத்துள்ளனர். அதன்படி, தற்போது ரோவர் புதிய பாதையில் சீராகப் பயணிப்பதாக இஸ்ரோ தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளது. முன்னதாக சந்திரயான்-3 திட்டத்தின் மூன்று இலக்குகளில் இரண்டை எட்டிவிட்டதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. அதேபோல, நிலாவின் தென் துருவத்தில் உள்ள வெப்பநிலை குறித்து விக்ரம் லேண்டரில் உள்ள ChaSTE என்ற கருவி அனுப்பிய தகவல்களையும் இஸ்ரோ பகிர்ந்திருந்தது. பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, நேற்று (ஆகஸ்ட் 27) விண்கலத்தின் பிரக்யான் ரோவர் பயணித்த பாதையில் பெரும் பள்ளத்தை உணர்ந்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் வெப்பநிலை என்ன? பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, சந்திரயான்-3 விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் நல்ல முறையில் உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது விக்ரம் லேண்டரில் உள்ள ChaSTE கருவியில் இருந்து முதல் கட்ட தரவுகளை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ChaSTE கருவி சந்திரனின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள, தென் துருவத்தைச் சுற்றியுள்ள நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணின் வெப்பநிலையை அளவிடுகிறது. அதில் உள்ள வெப்பநிலையை அளவிடும் சாதனம் மேற்பரப்புக்கு கீழே 10 செ.மீ. அடியில் ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டது. அதில் வெப்பநிலையை அளவிடும் 10 சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. மூன்றில் இரு இலக்குகளை எட்டிவிட்டோம்- இஸ்ரோ பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்குவது, நிலவின் மேற்பரப்பில் ரோவர் நகர்ந்து செல்வது ஆகிய 2 இலக்குகள் பூர்த்தியாகி விட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது சந்திரயான்-3 திட்டத்தின் 3 இலக்குகளில் இரண்டை எட்டிவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான்-3 திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் கால் பதித்த விக்ரம் லேண்டரும், அதில் இருந்து நிலாவில் தரையிறங்கி ஊர்ந்து சென்ற பிரக்யான் ரோவரும் கச்சிதமாக தங்களது பணியைச் செய்வதாக இஸ்ரோ கூறியுள்ளது. சந்திரயான்-3 திட்டத்தின் 3 இலக்குகள் என்ன? அவற்றில் இதுவரை எட்டப்பட்ட இலக்குகள் என்ன? என்பது குறித்து இஸ்ரோ தனது பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது. அதன்படி, நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்குவது, நிலவின் மேற்பரப்பில் ரோவர் நகர்ந்து செல்வது ஆகிய 2 இலக்குகள் பூர்த்தியாகி விட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் நல்ல முறையில் உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. லேண்டர் எனப்படும் தரையிறங்கி கலனில் இருக்கும் மூன்று கருவிகள் செயல்பாட்டிற்கு வந்துவிட்டதாக இஸ்ரோ அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், ரோவர் எனப்படும் ஊர்திக்கலன் நகரத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி உந்துவிசை கலனில் இருக்கும் ஷேப் எனப்படும் கருவியும் கடந்த ஞாயிறு முதல் இயங்கத் தொடங்கிவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. உந்துவிசை கலனில் உள்ள இந்தக் கருவி சூரிய மண்டலத்திற்கு வெளியே இருக்கும் பூமியைப் போன்ற தோற்றம் கொண்ட புறக்கோள்களைக் கண்டறியும் ஆய்வுகளை மேற்கொள்ளும். ரோவர் என்ன செய்யும்? பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, நிலாவின் காலநிலை குறித்த தரவுகளைப் பகுப்பாய்வு செய்து தரவுகளை அனுப்பும் ரோவர் ஊர்திக்கலமான ரோவர், அதன் தாய்க்கலமான லேண்டரில் இருந்து வெளியே வந்துவிட்டதை உறுதி செய்யும் வகையில் தாயும் சேயும் ஒன்றையொன்று படமெடுத்து அனுப்பிவிட்டன. நிலாவின் தரையில் இறங்கிவிட்ட இந்த 26 கிலோ எடை கொண்ட இஸ்ரோவின் குழந்தை என்னவெல்லாம் செய்யும்? நிலாவின் தரைப்பரப்பில் விநாடிக்கு ஒரு செ.மீ என்ற வேகத்தில் ரோவர் நகரும். அப்படி நகரும் நேரத்தில் அது அங்குள்ள பொருட்களை ஸ்கேன் செய்துகொண்டே நகரும். மேலும், நிலாவின் காலநிலை குறித்த தரவுகளைப் பகுப்பாய்வு செய்து தரவுகளை அனுப்பும். அதுமட்டுமின்றி, நிலாவின் மேற்பரப்பின் தன்மை குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ளும். எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், சேய் கலமான ரோவர் நிலாவின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து தரைப்பரப்பின் தன்மை என்ன, வெப்பம் எந்த அளவுக்கு உள்ளது, தண்ணீர் உள்ளதா என்பன போன்ற தகவல்களைச் சேகரித்து அனுப்பும். இயல்பாகவே ஒரு பொருளை உடைத்தால்தான் அதற்குள் என்ன இருக்கிறது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். அதேபோல் ரோவர் மண்ணைக் குடைந்து அதிலிருந்து மாதிரிகளை எடுத்து, அதை லேசர் மூலம் உடைத்துப் பார்க்கிறது. பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, ரோவர் மூலமாக நிலாவின் மணற்பரப்பில் என்னென்ன வகையான தாதுக்கள், கனிமங்கள் இருக்கின்றன என்பதை இஸ்ரோவால் தெரிந்துகொள்ள முடியும். நிலாவின் மண்ணில் என்னென்ன தனிமங்கள் உள்ளன என்பதை அதனால் கண்டறிய முடியும். ஊர்திக்கலன் நிலாவின் தரையைக் குடைந்து மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்யும். அதன்மூலம் அந்த மாதிரிகளில் மெக்னீசியம், அலுமினியம், இரும்பு, சிலிகான், டைட்டானியம் என என்னென்ன தனிமங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடிக்கும். அதோடு நிலாவின் மேற்பரப்பில் உள்ள வேதிம கலவைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்றவற்றின் இருப்பு, கனிமங்கள் என்னென்ன உள்ளன என்று நிலாவின் மண்ணை எடுத்து ஆய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு அலைமாலை அளவி என்ற கருவியை ரோவர் பயன்படுத்துகிறது. இந்த அலைமாலை கருவியால் ஒரு பொருளில் இருக்கக்கூடிய பல்வேறு தனிமங்களைப் பிரித்துப் பார்த்து வகைப்படுத்த முடியும். அதன்மூலம், நிலாவின் மணற்பரப்பில் என்னென்ன வகையான தாதுக்கள், கனிமங்கள் இருக்கின்றன என்பதை இஸ்ரோவால் தெரிந்துகொள்ள முடியும். அவற்றைத் தெரிந்துகொள்வது எதிர்காலத்தில் நிலவை மனிதர்கள் மற்ற கோள்களுக்கு விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும்போது ஒரு தளமாகப் பயன்படுத்தக்கூட உதவும். இதற்குச் சான்றாக செவ்வாய் கோளுக்கான பயணத் திட்டத்தைக் கூறலாம். இரண்டு வாரங்களுக்கு மட்டுமே ஆய்வு செய்யும் சந்திரயான்-3 பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, அடுத்த இரண்டு வாரங்களில் ரோவரும் லேண்டரும் அனுப்பவுள்ள தரவுகள்தான் உலகளவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தை ஒரு புதிய பரிமாணத்திற்குக் கொண்டு செல்லப் போகின்றன இந்தத் திட்டத்தின் கீழ் நிலாவில் இந்தியா மேற்கொள்ளப்போகும் ஆய்வுகள் அனைத்துமே இரண்டு வாரங்களுக்கு மட்டும்தான். ஏனென்றால், இரண்டு வாரம் முடிந்ததும் நிலாவில் இரவு தொடங்கிவிடும். இரவு நேரத்தில் அங்கு மைனஸ் 200 டிகிரி செல்ஷியஸ் வரைக்குமே வெப்பநிலை குறையும். அந்த உறைபனிக் குளிரில் லேண்டர், ரோவர் இரண்டுமே இயங்க முடியாது. அவை இயங்குவதற்குத் தேவையான சூரிய ஒளி அடுத்த இரண்டு வாரங்களுக்குக் கிடைக்காது. அது மட்டுமின்றி, இரவு நீடிக்கும் அந்த இரண்டு வாரங்களிலும் நிலவும் உறைபனிக் குளிர் அவற்றின் பாகங்களில் விரிசல்கள் விழச் செய்யலாம். இதனால் அவை விரைவிலேயே இறந்துவிடும். உறைபனிக் குளிரில் இந்தக் கருவிகளால் இயங்க முடியாது என்பதையும் தாண்டி, அவற்றின் கட்டமைப்பிலேயே சேதங்கள் ஏற்படக்கூடும். உலோகங்களால் உறைபனிக் குளிர் வெப்பநிலையைத் தாங்க முடியாது. அதிலும் 200 டிகிரி செல்ஷியஸ் வரைக்கும் செல்லும்போது, அத்தகைய வெப்பநிலையில் அவை சேதமடையக்கூடும். இதனால், லேண்டர், ரோவரின் பாகங்கள் செயலிழக்க வாய்ப்புள்ளது. ஆக, அடுத்த இரண்டு வாரங்களில் ரோவரும் லேண்டரும் அனுப்பவுள்ள தரவுகள்தான் உலகளவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தை ஒரு புதிய பரிமாணத்திற்குக் கொண்டு செல்லப் போகின்றன. https://www.bbc.com/tamil/articles/c0dg9mlm4ddo
  3. அமைச்சர்கள் மீதான முடிக்கப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்கலாமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி செய்தியாளர் 26 ஆகஸ்ட் 2023 சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன் வந்து மேலும் இரண்டு அமைச்சர்களை விடுவித்த வழக்குகளை விசாரிக்கவுள்ளது. ஏற்கெனவே, அமைச்சர் பொன்முடியை வேலூர் நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன்பாக விடுவித்த வழக்கை எடுத்து விசாரணைக்கு எடுத்துள்ளது. தற்போது அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்ட வழக்குகளையும் மறு விசாரணை செய்யவுள்ளது. இப்படி தீர்ப்பு வழங்கப்பட்ட முடிந்துபோன வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்துவது வழக்கமான ஒன்று அல்ல என நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி என்ற வகையில் இந்த வழக்குகளை மறு விசாரணை செய்வதாக நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தங்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்குகளிலிருந்து கீழமை நீதிமன்றங்களால் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர். அந்த வழக்குகளில் வழக்கு தொடுத்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை மேல் முறையீடு செய்யவில்லை. இந்நிலையில், தற்போது மறுவிசாரணைக்கு இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து எடுத்துள்ளது. அரசியல் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு பட மூலாதாரம்,THANGAM THENNARASU FB அமைச்சர்கள் மூவரும் விடுவிக்கப்பட்ட வழக்குகளில் அரசியல் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி இருப்பதாகவும், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நியாயமாக இல்லை எனவும், கீழமை நீதிமன்றங்கள் முறையாக விசாரிக்காமல் ஆட்சியில் இருப்பவர்கள் என்ற காரணத்தினால் அவர்களை விடுவித்தன என்றும் நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ் தனது உத்தரவுகளில் விமர்சித்துள்ளார். கடந்த 2006-2011ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக ஆட்சிக் காலத்தில் தங்கம் தென்னரசு கல்வி அமைச்சராக இருந்தார். அவர்மீது, 2006ஆம் ஆண்டு மே15ஆம் தேதி முதல் 2010ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 74.58 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீதும் அவரது மனைவி மீதும் 2012ம் ஆண்டு வழக்கு போடப்பட்டது. பத்து ஆண்டுகள் கழித்து, 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். பட மூலாதாரம்,KKSSR RAMACHANDRAN அதேபோன்று, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன், 2006ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி முதல் 2007ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி வரை சுகாதாரத்துறை அமைச்சராகவும், பின்னர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தார். கடந்த 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2010ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.44.59 லட்சம் சொத்து குவித்ததாக அமைச்சர், அவரது மனைவி, மற்றும் ஒரு நண்பர் மீது 2011ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது. பல்வேறு நீதிமன்றங்களுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு வந்த நிலையில், இறுதியாக இந்த ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி அவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அமைச்சர் பொன்முடி மீதான வழக்கும் சொத்து குவிப்பு வழக்கே. கடந்த 1996-2001ம் ஆண்டு நடைபெற்ற திமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது, வருமானத்திற்கு அதிகமாக 1.36 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2002ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. இருபது ஆண்டுகளாக நடைபெற்ற அந்த வழக்கில் வேலூர் நீதிமன்றம் கடந்த ஜூன் 28ஆம் தேதி அமைச்சரை விடுவித்து தீர்ப்பளித்தது. இந்த மூன்று வழக்குகளுமே திமுக ஆட்சி நடைபெற்றபோது சொத்து குவித்ததாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட வழக்குகள். அதே போன்று இந்த மூன்று வழக்குகளுமே மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முடித்து வைக்கப்பட்டவை. ஆட்சி மாற்றத்துக்குப் பின் முடிக்கப்பட்ட வழக்குகள் ஆட்சி மாற்றம் 2021ஆம் நடந்த பிறகு வழக்கு தொடுத்த மாநில அரசின் கீழ் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையும், குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்களும் தற்போது விளையாட்டில் ஒரே அணியில் விளையாடுபவர்களாக மாறிவிட்டார்கள், எனவே விசாரணை முறையாக நடைபெறவில்லை என்று சுட்டிக் காட்டுகிறார் ஆனந்த் வெங்கடேஷ். “குற்றம் சாட்டப்பட்டவர்கள், குற்றம் சாட்டியவர்கள் அனைவரும் ஒரு விளையாட்டில் ஒரே அணியிலிருந்து விளையாடுபவர்களாகி விட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதை உணர்ந்த போட்டி நடுவர், அதாவது சிறப்பு நீதிமன்றம் தன்னையே ஆட்டத்தில் தோற்கடித்துக் கொள்வதுதான் உகந்த வழி என்று முடிவு செய்து விட்டதாகத் தெரிகிறது. எனவே, இது, ஆட்சி அதிகாரத்தின் காரணமாக சீர்குலைக்கப்பட்ட மற்றொரு கிரிமினல் விசாரணையின் உதாரணம்,” என்று தனது உத்தரவில் கடுமையாக சாடியுள்ளார். அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரின் வழக்குகளை மறுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய காரணங்களை நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் விளக்குகிறார். இரண்டு வழக்குகளிலும் திட்டமிடப்பட்ட ஒரே மாதிரியான அணுகுமுறைகள் வெளிப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக இருந்ததாக அவர் தெரிவிக்கிறார். மேலும், ஏற்கெனவே நடத்தப்பட்ட விசாரணையை, 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு மாற்றத்துக்கு, “சில மாதங்கள் கழித்து, அரசு தாராள மனதுடன் முன்வந்து, “மேலும் விசாரணை” செய்தது. இந்த “மேலும் விசாரணை”யின் விளைவாக அவர்கள் விடுவிப்பதற்கு தகுந்த இறுதி அறிக்கையை அளித்தது. ஏற்கெனவே அளித்திருந்த விசாரணை அறிக்கையிலிருந்து மாறுபட்ட விசாரணை இறுதி அறிக்கை சமர்பிக்கப்பட்டதாகவும் இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் விசாரணை அறிக்கைகள் முரணாக இருந்தாலும், சமீபத்தில் சமர்ப்பிக்க அறிக்கையை ஏற்றுக்கொண்டு அவர்களை விடுவித்தாகவும் தெரிவிக்கிறார். ஏன் திமுக அமைச்சர்களை மட்டும் குறி வைக்க வேண்டும்? நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சுட்டிக்காட்டியுள்ள சட்டரீதியான குளறுபடிகளை யாரும் மறுக்கவில்லை என்றாலும், ஏன் திமுக அமைச்சர்களின் வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன, என கேள்வி எழுப்பப்படுகின்றது. சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி என்ற வகையில், நீதிபதிக்கு இவற்றை விசாரிக்க அதிகாரம் உண்டு என்று ஒப்புக்கொள்ளும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ். பாரதி, ஏன் திமுக அமைச்சர்கள் குறி வைக்கப்படுகின்றனர் எனக் கேட்கிறார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “விசாரணைக்கு வழக்குகளை எடுத்துக் கொள்ளும்போது, அவற்றில் உள்நோக்கம் இருக்கக்கூடாது என்பது விதி. அதிமுக அமைச்சர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி ஆகியோர் எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்களோ, அதே முகாந்திரத்தின் அடிப்படையில்தான் இவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏன் அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு தொடுக்கவில்லை,” எனக் கேள்வி எழுப்புகிறார் அவர். மேலும், எடப்பாடி பழனிசாமி மீது தான் போட்ட 4 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கு தன் முன் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியதையும் சுட்டிக்காட்டினார் ஆர்.எஸ். பாரதி. முரண்பட்ட அறிக்கைகளைக் கொடுத்த லஞ்ச ஒழிப்புத் துறை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான வழக்குகளில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. “டென்மார்க் அரசில் ஏதோ ஒன்று அழுகியுள்ளது என ஷேக்ஸ்பியர் கூறுவார், அதுபோல, ஆவணங்களை ஆராய்ந்தபோது, ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஏதோ ஒன்று மிகவும் அழுகியுள்ளது,” என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார். சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி எழுதிய தீர்ப்பை, எழுதிய நீதிபதி உட்பட யாருமே புரிந்துகொள்ள முடியாத படி இருக்கிறது என விமர்சனம் செய்துள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். அமைச்சர் தங்கம் தென்னரசு சம்பந்தப்பட்ட வழக்கில், 2016ஆம் ஆண்டு அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கூடாது என்று எந்த விசாரணை அதிகாரி கூறினாரோ, அதே அதிகாரி தற்போது, அவர் மீது குற்றம் இல்லை என்று கூறுவதாக நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக் காட்டினார். “நிறைய ஆவணங்களைத் திரட்டி உச்சநீதிமன்ற முடிவுகளை எல்லாம் சுட்டிக்காட்டி குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்படக் கூடாது எனக் கூறிய அதே அதிகாரி 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் திடீரென, குற்றம் சாட்டப்பட்டவர் அமைச்சரான பிறகு, ‘மேலும் விசாரணை’ நடத்தி மாறுபட்ட அறிக்கையை அளித்துள்ளார்” என்று கூறுகிறார். “ஊழல் வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் அரசியல்வாதிகளின் தாலாட்டுக்கு நடனமாட ஆரம்பித்தால், பாரபட்சமற்ற விசாரணை என்பது நாடகமாகிவிடும்,” என்று கடுமையாக சாடியுள்ளார். இதே போன்று அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட வழக்கையும் தாமாக முன் வந்து எடுத்திருக்கும் நீதிபதி என் ஆன்ந்த் வெங்கடேஷ், இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த கீழ் நீதிமன்ற நீதிபதியை கடுமையாக சாடியிருந்தார். முடியும் தருவாயில் இருந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டபோது உரிய நடைமுறைகள் பின்பற்றவில்லை எனத் தனது உத்தரவில் தெரிவிக்கிறார். “இந்த வழக்கின் இறுதி வாதங்கள் எழுத்து வடிவில் ஜூன் 23ஆம் தேதி வேலூர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கே நாட்களில் 176 சாட்சியங்கள், 381 ஆவணங்களை சரி பார்த்து நீதிபதி 28ஆம் தேதி 228 பக்கத் தீர்ப்பு வழங்கினார். இது சாதனையாகும், அரசியல் சாசன நீதிமன்றங்களில் இருப்பவர்கள்கூட இதுபோன்ற சாதனை படைக்க கனவு மட்டுமே காண முடியும். அடுத்த இரண்டு நாட்களில் நீதிபதி நிம்மதியாக ஓய்வு பெற்றுவிட்டார்,” என்று சாடியிருந்தார். நீதிபதி முன்முடிவுடன் இருக்கலாமா? பட மூலாதாரம்,ADV VIJAYAKUMAR இப்படி வெளிப்படையாகத் தனது கருத்துகளைத் தெரிவிக்கும் நீதிபதி எப்படி இந்த வழக்குகளை விசாரிக்க முடியும் என்கிறார் மூத்த வழக்கறிஞர் விஜயகுமார். பிபிசி தமிழிடம் பேசியபோது, “இந்த வழக்குகளில் இப்படி கருத்துகளை வெளிப்படுத்துவது, அவர் முன்முடிவுடன் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. விசாரணைக்கு முன்பே, முன்முடிவுடன் இருப்பவர் எப்படி வழக்கை விசாரிக்க முடியும்,” என்கிறார் அவர். இதுபோன்று நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து முடிந்தபோன வழக்குகளை மறு விசாரிணை செய்ய சட்டத்தில் இடம் இருந்தாலும், இது வழக்கமான ஒன்று அல்ல என்கிறார் ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன். “வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள், நீதிபதியின் நோக்கத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, சிலரது வழக்குகளை மட்டும் விசாரிக்கிறார் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடியும்,” என்கிறார் அவர். "ஆட்சிக்கு அதிகாரத்துக்கு சாதகமாகவே அரசு இயந்திரங்கள் செயல்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியமாகும்." நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்-ன் நோக்கத்தை கேள்வி கேட்ட அதே செய்தியாளர் சந்திப்பில், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது, அவர் மீது தான் தொடுத்த வழக்கு குறித்து பேசிய ஆர் எஸ் பாரதி, “எடப்பாடி மீது போடப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. ஆனால் அவர் மாநில காவல்துறை விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சென்றார். அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தது. மாநில காவல்துறையே விசாரிக்கட்டும் எனக் கூறி, உச்சநீதிமன்றத்தில் எனது வழக்கை வாபஸ் வாங்குவதாகத் தெரிவித்து விட்டேன்,” என்றார். லஞ்ச வழக்குகள் எதை எடுத்தாலும் இதுபோன்ற பல சிக்கல்கள் இருக்கலாம், என்கிறார் மூத்த வழக்கறிஞர் விஜயகுமார். எல்லாவற்றையும் மறு விசாரணை செய்துகொண்டே இருக்குமா உயர்நீதிமன்றம் என்று கேட்கிறார் அவர். “மக்களை நேரடியாகப் பாதிக்கக்கூடிய பிரச்னைகள் பல இருக்கும் போது, அதைவிட்டு இந்த வழக்குகளை எதற்காக எடுத்து விசாரிக்க வேண்டும்? கீழமை நீதிமன்றங்களில் நீதி கிடைக்காமல் உயர்நீதிமன்றங்களுக்கு வரும் பொதுமக்களின் வழக்குகள் பட்டியலில் இடம் பெறுவதுகூட கடினமாக உள்ளது. ஆனால் இந்த வழக்குகள் உடனடியாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன” என்றும் கூறும் வழக்கறிஞர் விஜயகுமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 2 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று சுட்டிக்காட்டுகிறார். https://www.bbc.com/tamil/articles/c9rwkl39d73o
  4. நிலாவில் ஆய்வு செய்யும்போது பிரக்யான் ரோவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, நிலவில் ஆய்வு மேற்கொள்ளும்போது பிரக்யான் ரோவர் அங்குள்ள நிலவியல்ரீதியிலான சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கட்டுரை தகவல் எழுதியவர், சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 25 ஆகஸ்ட் 2023, 03:44 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த இரண்டு நாட்களாக சந்திரயான்-3 பற்றிய பேச்சுதான் இந்திய மக்களின் வார்த்தைகளிலும் காதுகளிலும் நிரம்பியிருந்தன. இந்த வெற்றி இஸ்ரோவுக்கு மட்டுமின்றி இந்தியாவின் விண்வெளி ஆய்வுத்துறையின் எதிர்காலத்திற்கே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. தற்போது நிலாவில் நான்காவது நாடாக தடம் பதித்துவிட்ட இந்தியா, அங்கு செய்யப்போகும் ஆய்வுகள் இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றுக்கும் பேருதவியாக இருக்கக்கூடும். ஆனால், அத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ளும்போது பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டர் இரண்டும் என்ன வகையான சவால்களை எதிர்கொள்ளும், அந்த சவால்களைச் சமாளிக்கும் முன்னேற்பாடுகள் அவற்றில் செய்யப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் பலருக்கும் எழுகிறது. பல கிலோமீட்டர் உயரத்திற்குப் பறக்கும் நிலவின் தூசுகள் பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, நிலாவில், 0.07 மி.மீ விட்ட கொண்ட நுண்ணிய துகள்களைப் போல் அதன் மண் இருக்கும். நிலாவின் மேற்பரப்புக்கும் பூமியின் மேற்பரப்புக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன. அங்குள்ள தரைப்பரப்பு மிகவும் அலங்கோலமானது என்றுகூட சொல்லலாம். விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விண்கற்கள் பல்லாண்டுக் காலமாக மோதியதன் தாக்கம், பெரும் பள்ளங்களாக நிலவில் அவற்றின் காயங்களை விட்டுச் சென்றுள்ளன. கோடிக்கணக்கான ஆண்டுகளாக விண்கற்கள் நிலவின் மேற்பரப்பில் குண்டு மழை பொழிவதைப் போல் பொழிந்துள்ளன. இந்தத் தாக்கம் இனியும் நடைபெறும். நிலாவின் மேற்பரப்பு ரெகோலித் எனப்படும் தன்மை கொண்டதாக உள்ளது. நிலவில், 0.07 மி.மீ விட்ட கொண்ட நுண்ணிய துகள்களைப் போல் அதன் மண் இருக்கும். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, நிலாவிலுள்ள மண்ணின் விட்டம் மிகச் சிறிய அளவில் இருக்கும். ஆனால், அவற்றைத் தோண்டினால் கீழே கடினமான பாறை இருக்கும். ரெகோலித் என்பது நிலவின் மேற்பரப்பில் விண்கற்களின் தாக்கத்தால் ஏற்பட்ட ஒரு பரப்பு என்கிறார் பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் லெனின். “இந்த மேற்பரப்பு பாறை போன்ற அமைப்புடையதுதான். ஆனால், இதில் மண் துகள் மிகவும் சிறியதாக, தூசுகளாக இருக்கும். எளிதில் மேலெழும்பிப் பறக்கக்கூடியதாக இருக்கும். ஆனால், அதற்குக் கீழே தோண்டிப் பார்த்தால் கடினமான பாறை அமைப்புகள் இருக்கும்,” என்று கூறுகிறார். விட்டம் மிகச் சிறிய அளவில் இருக்கும் கடற்கரை மணல் எளிதில் தூசுகளாக மேலே பறக்கும். ஆனால், அவற்றைத் தோண்டிக் கீழே பார்த்தால் கடினமான பாறை இருக்கும் அல்லவா! அதைப் போலவேதான் இதுவும். இந்தத் தூசு போன்ற மண்ணை பூமியுடன் ஒப்பிட்டால் அதன் அளவு குறித்த புரிதல் இன்னும் தெளிவாகக் கிடைக்கும். பூமியிலுள்ள மண்ணின் விட்டம் 2.0 முதல் 0.05 மி.மீ வரை இருக்கும். இதில் இருப்பதிலேயே மிகக் குறைந்த விட்டம் கொண்ட மண்ணின் அளவுக்குத்தான் நிலவிலுள்ள மண் சாதாரணமாகவே இருக்கும். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, நிலாவில் தரையிறங்கிய பிறகு தனது நிழல் தெரியும் வகையில் விக்ரம் தரையிறங்கி கலனின் லேண்டர் இமேஜர் கேமரா அனுப்பிய புகைப்படம். விக்ரம் லேண்டரின் ராக்கெட் இன்ஜின் செயல்பாடு, இறுதிக்கட்ட தரையிறக்கம் ஆகியவற்றின் தாக்கத்தால் மேற்பரப்பில் உள்ள தூசுகள் அதிகளவில் மேலே எழும்பியது. அந்தத் தூசுகள் நிலவில் அதிக தூரத்திற்குச் சிறிது சிறிதாகப் பயணிக்கும். அப்படிப் பயணிக்கும் அந்த மண் பல கி.மீ உயரத்திற்குப் பறக்கின்றன. பிறகு, அந்தத் தூசுகள் நிலவின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படும் வரை பறந்துகொண்டே இருக்கும். பூமியின் ஈர்ப்புவிசையில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே இருக்கும் நிலவின் ஈர்ப்பு விசை, வளிமண்டலமே இல்லாத அதன் மேற்பரப்பு ஆகியவற்றால், தூசுத் துகள்கள் அடங்க சில மணிநேரங்கள் ஆனது. இவை அனைத்தும் அடங்கிய பிறகே லேண்டர் திறந்து, ரோவர் வெளியே வந்தது. ரோவர் பள்ளங்களில் விழும் ஆபத்து உள்ளதா? “பிரக்யான் ஊர்திக்கலன் நிலாவில் நகர்வதற்கு விக்ரம் தரையிறங்கி கலன் வழிகாட்டும். ரோவரில் மொத்தம் ஆறு சக்கரங்கள் உள்ளன. அந்த ஆறு சக்கரங்களுக்கும் தனித்தனியாக டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது,” என்கிறார் சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் முனைவர். எஸ்.பாண்டியன். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, பிரக்யான் ரோவரின் ஆறு சக்கரங்களுக்கும் தனித்தனி டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. பூமியில் நாம் பார்க்கக்கூடிய நான்கு சக்கர வாகனங்களில் இருசக்கர இயக்கம், நான்கு சக்கர இயக்கம் போன்ற இயக்கவியல் செயல்முறையைப் பார்த்திருப்போம். அவற்றில், இரண்டு சக்கரங்களுக்கு ஒரு மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். அந்த இரண்டு சக்கரங்களும் இணைந்தே இயங்கும். ஆனால், நிலவில் ஆய்வு செய்யப்போகும் ரோவரின் ஆறு சக்கரங்களுக்கும் தனித்தனியாக மோட்டார்கள் உள்ளன. இதனால், “ஒவ்வொரு சக்கரமும் அவற்றின் போக்கில் சுதந்திரமாகச் செயல்பட முடியும். அவற்றுக்கு வேறுபாட்டுத் தடை (Differential Braking) பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். இவையனைத்தும் பொதுவான ஒரு கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும். அந்த செயற்கை நுண்ணறிவு கணினிதான், எந்த சக்கரம் எங்கு செல்ல வேண்டும் என்பதற்கான கட்டளைகளை வழங்கும்,” என்று விளக்குகிறார் பாண்டியன். இதன்மூலம், நிலவின் தரைப்பரப்பில் உள்ள பள்ளங்களில் ஏதேனும் ஒன்றில் ரோவரின் ஏதாவது ஒரு சக்கரம் சிக்கினாலும்கூட அதை மற்ற ஐந்து சக்கரங்களும் சேர்ந்து வெளியே கொண்டுவந்துவிடும். படக்குறிப்பு, தரையிறங்கியபோது கிளம்பிய தூசுகள் ரோவரைவிட லேண்டர் மீதுதான் அதிகமாகப் படிந்திருக்கும். அது மட்டுமின்றி விநாடிக்கு ஒரு சென்டிமீட்டர் என்ற வேகத்தில் ரோவர் பயணிக்கும். லேண்டரும் ஒருபுறம் அதற்குத் தொடர்ச்சியாக வழிகாட்டிக் கொண்டே இருக்கும் என்றும் அவர் கூறுகிறார். தரையிறங்கி கலன், ரோவரின் பாதையில் எங்கேயாவது பெரும் பாறைகள் கிடந்தால் அவை குறித்த எச்சரிக்கைகளை வழங்கும். அதன்மூலம் எங்கும் மோதிவிடாமல் ரோவர் பாதுகாக்கப்படும். நிலவின் மண் துகள்கள் மின்சார உற்பத்தியை பாதிக்குமா? பூமியிலேயே தொடர்ந்து தூசு படிந்துகொண்டே இருந்தால், அதன் திறன் குறைந்துவிடுகிறது. அப்படியிருக்கும்போது நிலாவில் இருக்கும் மண்ணின் சராசரி அளவே இங்குள்ள தூசுகளைப் போலத்தான் என்னும்போது அது சூரிய மின்சார உற்பத்தியை பாதிக்குமா என்ற சந்தேகமும் எழுகிறது. அதேபோல தரையிறங்கும்போது கிளம்பிய புழுதிகள் தரையிறங்கி கலன் மீது படியும். இந்தப் புழுதிகள் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புண்டு என்கிறார் முனைவர்.எஸ். பாண்டியன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லேண்டரின் சூரிய மின் தகடுகள் மீது படிந்துள்ள தூசுகளால் அவற்றின் மின்சார உற்பத்தித் திறன் குறையலாம். “விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது பெரியளவில் புழுதி கிளம்பியிருக்கும். அந்தப் புழுதி அதன்மீது படியும். லேண்டரின் வயிற்றுக்குள்ளே இருந்த காரணத்தால், இந்தப் புழுதியால் ரோவரின் செயல்பாடுகளுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. ஆனால், லேண்டரில் அதன் தாக்கம் இருக்கும். அதிலுள்ள சூரிய மின் தகடுகளின் மின்சார உற்பத்தித் திறன் குறையும். பூமியில் ஆறு மாத காலத்தில் படியக்கூடிய அளவிலான தூசுகள், தரையிறங்கிய நேரத்திலேயே லேண்டர் மீது படிந்திருக்கும்,” என்கிறார் முனைவர் பாண்டியன். இதை நம்மால் தடுக்க இயலாது. ஆனால் அந்தத் திறன் குறைபாட்டை எப்படிச் சமாளிப்பது என்று இஸ்ரோ முன்கூட்டியே திட்டமிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அதாவது நிலவில் எங்கே இந்த விண்கலம் தரையிறங்கியதோ அங்கு எவ்வளவு புழுதி கிளம்பும், அது எந்தளவுக்கு மின்சார உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பனவற்றை இஸ்ரோ கணக்கிட்டுள்ளது. அதே நேரத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது கிளம்பும் புழுதியைத் தவிர அங்கு வேறு புழுதி கிளம்புவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆகவே, “அந்தத் தருணத்தில் எவ்வளவு புழுதி கிளம்ப வாய்ப்புள்ளது, அப்படிக் கிளம்பும் புழுதி லேண்டரின் சூரிய மின் தகடுகளில் படிவதால் எந்தளவுக்கு உற்பத்தித் திறனை அது பாதிக்கும் என்பனவற்றைத் தோராயமாக இஸ்ரோ கணக்கிட்டது. அதன் அடிப்படையில், அத்தகைய உற்பத்தித் திறன் குறைபாடு ஏற்பட்ட பிறகு கிடைக்கும் ஆற்றல் லேண்டருக்கு தேவையான ஆற்றலாக இருக்கும் வகையில், தரையிறன்கி கலனைச் சுற்றி மின் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன,” என்றும் விளக்கினார் பாண்டியன். ஆகவே ஆற்றல் உற்பத்தியில் ஏற்படக்கூடிய திறன் குறைபாட்டை லேண்டரால் சமாளிக்க முடியும் என்று நம்பப்படுகிறது. பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, குறைந்தபட்சம் மணிக்கு 40,000 கி.மீ முதல் ஒரு லட்சம் கி.மீ வேகத்தில் விண்கற்கள் நிலவில் வந்து மோதுகின்றன. இதுபோக நிலவில் வந்து மோதும் விண்கற்களால் கிளம்பும் தூசுகளும் லேண்டர் மற்றும் ரோவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் இத்தகைய செயல்முறைகள் கணிக்க முடியாதவை என்பதால், அவற்றால் ஏற்படும் விளைவுகளை முன்கூட்டியே கணிக்க முடியாது. அப்படியான நிகழ்வு ஏதும் நடந்தால், அது ரோவரின் செயல்பாடுகளை பாதிக்கும் அபாயம் இருப்பதையும் தவிர்ப்பதற்கில்லை. அதேபோல், கணிக்க முடியாத விண்கற்களின் தாக்குதல் ரோவர் ஆய்வு செய்யும் இடத்தில் ஏற்படாது என உறுதியாகக் கூற முடியாது என்று கூறுகிறார் த.வி.வெங்கடேஸ்வரன். கணிக்கக்கூடிய சவால்களை சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இஸ்ரோ திட்டமிட்டு அனுப்பியுள்ளது. இருப்பினும் குறைந்தபட்சம் மணிக்கு 40,000 கி.மீ முதல் ஒரு லட்சம் கி.மீ வேகத்தில் வந்து மோதக்கூடிய விண்கற்களின் தாக்கத்தை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அப்படியான தாக்கத்தால் கிளம்பும் தூசுகளையும் தவிர்க்க முடியாது. சவால்கள் நிறைந்ததுதானே விண்வெளிப் பயணம். அந்த சவால்களையும் அபாயங்களையும் சமாளித்து ஆய்வுகளை மேற்கொண்டு தாயும் குழந்தையுமான விக்ரமும் பிரக்யானும் சாதனை புரியும் என்று உலகமே காத்துக் கொண்டிருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/cd1mdpxdnljo
  5. வாக்னர் குழுவின் தலைவர் வாழ்க்கையில் பல பாரிய தவறுகளை செய்தவர் – மௌனம் கலைத்தார் புட்டின் Published By: RAJEEBAN 25 AUG, 2023 | 07:22 AM வாக்னர் கூலிப்படையின் தலைவர் விமானவிபத்தில் கொல்லப்பட்டார் என வெளியான தகவல்களுக்கு மத்தியில் ரஸ்யா ஜனாதிபதி இந்த விபத்து குறித்து மௌனம் கலைத்துள்ளார். பிரிகோஜின் மிகவும் திறமைவாய்ந்தவர், ஆனால் வாழ்க்கையில் பல பாரதூரமான தவறுகளை இழைத்தவர் என புட்டின் தெரிவித்துள்ளார். மொஸ்கோவிற்கு வடமேற்கே இடம்பெற்ற விமானவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு புட்டின் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். எனினும் வாக்னர் குழுவின் தலைவர் உயிரிழந்தார் என்பதை புட்டின் உறுதி செய்யவில்லை. விமானவிபத்தின் பின்னர் கிரெம்ளின் இறுக்கமான மௌனத்தை கடைப்பிடித்தது, தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கான வீடியோ உரையிலும் புட்டின் இது குறித்து எதனையும் குறிப்பிடவில்லை. எனினும் புதன்கிழமை மாலை அது மாறியது. விமானவிபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் நான் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என புட்டின் ரஸ்யாவிற்கான தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார். விமானத்தில் வாக்னர் ஊழியர்கள் காணப்பட்டனர் என புட்டின் தெரிவித்தார். உக்ரைனில் உள்ள நவநாஜி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் என்ற பொதுவான இலக்கிற்கு பெரும் பங்களிப்பு செய்தவர்கள் அவர்கள் என புட்டின் தெரிவித்தார். பிரிகோஜின் குறித்து கருத்து வெளியிட்ட புட்டின் 90களின் ஆரம்பம் முதல் அவரை எனக்கு தெரியும் அவர் குழப்பகரமான வாழ்க்கையை கொண்டவர் என குறிப்பிட்டார். பிரிகோஜினையும் அவரது படையினரையும் உக்ரைனில் அவர்களின் பங்களிப்பையும் புட்டின் பாராட்டினார். அவர் வாழ்க்கையில் பாரிய தவறுகளை இழைத்தார், எனவும் தெரிவித்துள்ள புட்டின் எனினும் பிரிகோஜின் மரணத்தை உறுதிசெய்ய தவறியுள்ளார். https://www.virakesari.lk/article/163136
  6. 9 வருடங்களுக்கு பின்னர் ரஸ்யாவின் பிடியில் உள்ள கிரிமியாவில் உக்ரைன் படையினர் – தேசிய கொடியையும் ஏற்றினர் Published By: RAJEEBAN 24 AUG, 2023 | 07:40 PM ரஸ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவின் கடற்பரப்பில் தனது படையினர் தரையிறங்கியுள்ளனர் என உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஸ்ய படையினருக்கு எதிராக இதுவரை முன்னெடுக்கப்பட்ட மிகவும் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு ரஸ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள கிரிமியாவில் தனது படையினர் தரையிறங்கியுள்ளனர் என உக்ரைன் தெரிவித்துள்ளது. கிரிமியாவின் மேற்குகடற்கரை பகுதியில் ஒலெனிவ்கா மாயக் குடியிருப்புகளிற்கு அருகில் உக்ரைன் படையினர் தரையிறங்கியுள்ளனர். உக்ரைன் கடற்படையினருடன் இணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் ஆக்கிரமிப்பாளர்களுடன் மோதலில் ஈடுபட்டனர் எதிரிப்படையினர் பெருமளவு இழப்புகளை சந்தித்தனர் அவர்களின் ஆயுததளபாடங்கள் அழிக்கப்பட்டன என உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் சுதந்திரதினமான இன்று அங்கு உக்ரைனின் தேசியக்கொடியும் ஏற்றப்பட்டதாக உக்ரைன் தரப்பினர் தெரிவித்துள்ளனர். 2014 இல் ரஸ்யா கிரிமியாவை ஆக்கிரமித்தது. https://www.virakesari.lk/article/163134
  7. வாக்னர் கூலிப்படை தலைவரின் மரணம் - ஆச்சரியமளிக்கவில்லை என பைடன் தெரிவிப்பு Published By: RAJEEBAN 24 AUG, 2023 | 07:19 AM வாக்னர் கூலிப்படை குழுவின் தலைவர் விமானவிபத்தில் உயிரிழந்துள்ளார் என வெளியான தகவல்கள் குறித்து நான் ஆச்சரியமடையவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வாக்னர் தலைவரின் உயிரிழப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். புட்டினின் தொடர்பு இல்லாமல் ரஸ்யாவில் எதுவும் இடம்பெறுவதில்லை என பைடன் தெரிவித்துள்ளார். ரஸ்யாவில் இடம்பெற்ற விமானவிபத்தில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாவதாக பிபிசி தெரிவித்துள்ளது. ரஸ்ய விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது அதிலிருந்த பத்துபேரும் உயிரிழந்துள்ளனர் அதில் பயணம் செய்தவர்களில்; வோக்னர் கூலிப்படையின் தலைவரின் பெயரும் உள்ளது என ரஸ்யாவின் உள்நாட்டு விமானப்போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை வாக்னர் தலைவரின் தனிப்பட்ட விமானத்தை ரஸ்யா சுட்டுவீழ்த்தியது என்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின்றன. https://www.virakesari.lk/article/163057
  8. வவுனியா இரட்டைக் கொலை பிரதான சந்தேக நபரிடம் இருந்து சிறைச்சாலையில் தொலைபேசி மீட்பு : தினமும் பெண் ஒருவருடனும் 90 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடல் Published By: DIGITAL DESK 3 24 AUG, 2023 | 02:30 PM வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை பிரதான சந்தேநபரிடம் இருந்து வவுனியா சிறைச்சாலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்கள் உள்ளடங்களாக 35 தடவைகள் உரையாடியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த நபர்கள் அவ் வீட்டில் இருந்த ஒருவர் மீது வாள் வீசி தாக்கியதுடன், வீட்டிற்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்தனர். இச்சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர்களான கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் மரணமடைந்திருந்தனர். இச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பிரதான சந்தேக நபர்கள் உட்பட 5 பேர் வவுனியா சிறைச்சாலையிலும், ஒருவர் அநுராதபுரம் சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வவுனியா சிறைச்சாலையில் இருந்த பிரதான சந்தேக சந்தேக நபர் தொலைபேசி பாவித்துள்ளமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இன்று வியாழக்கிழமை (24) அதிகாலை சிறைச்சாலையில் மேற்கொண்ட திடீர் சோதனையில் பிரதான சந்தேக நபரிடம் இருந்து கைத்தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த தொலைபேசி ஊடாக 3,292 வெளிச் செல்லும் அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதில் 3 அழைப்புக்கள் குறித்த நபரின் மனைவிக்கும், பிறிதொரு பெண்ணுக்கு ஒன்றரை மணித்தியாலப்படி 35 தடவைகள் அழைப்பு எடுத்து கதைத்துள்ளமையும் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று குற்றப் புலனாய்வு திணைக்கள கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/163088
  9. இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலின் வெற்றியின் ரகசியம் என்ன? பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, சந்திரயான்- 3 விண்ணில் ஏவப்பட்டு, நேற்று (ஆகஸ்ட் 23) வெற்றிகரமாக நிலாவில் தரையிறங்கியது. இந்த வெற்றிச் செய்தி குறித்து பகிர்ந்த திட்ட இயக்குநர் வீர முத்துவேல், இத்திட்டத்தில் பணியாற்றி அனைத்து விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார். 2 மணி நேரங்களுக்கு முன்னர் “நான் ஒரு சாதாரண மனிதன். என்னால் இந்த அளவுக்கு வர முடியும் என்றால், எல்லோராலும் வர முடியும். வாய்ப்புகள் எல்லோருக்கும் இருக்கிறது. அதனை நாம் எப்படி பயன்படுத்திக்கொள்கிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது." "என்னைப் பொறுத்தவைரக்கும், சுய ஒழுக்கம், 100% ஈடுபாடு, எதிர்பார்ப்புகளில்லா கடின உழைப்பு, நம்மிடம் இருக்கின்ற தனித்தன்மை நமக்கு நிச்சயம் வெற்றியைப் பெற்றுத்தரும், கடின உழைப்பு எப்போதும் வீண்போகாது,” இப்படித்தான் தனது வெற்றியின் ரகசியத்தை பற்றி விவரிக்கறார் சந்திரயான் 3-யின் திட்ட இயக்குநர் வீர முத்துவேல். சந்திரயான்- 3 விண்ணில் ஏவப்பட்டு, நேற்று (ஆகஸ்ட் 23) வெற்றிகரமாக நிலாவில் தரையிறங்கியது. இந்த வெற்றிச் செய்தி குறித்து பகிர்ந்த திட்ட இயக்குநர் வீர முத்துவேல், இத்திட்டத்தில் பணியாற்றி அனைத்து விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார். இந்நிலையில், அவர் சந்திரயான்-3 திட்டத்திற்கு பொறுப்பேற்ற பிறகு வெளியிட்டிருந்த வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது பகிரப்பட்டு வருகிறது. அதில், தன்னால் சாதிக்க முடியும் என்றால், அனைவராலும் முடியும் என ஊக்கமளித்துள்ளார். "அனைத்து நேரங்களிலும் படித்துக்கொண்டிருக்கமாட்டேன்" பட மூலாதாரம்,SOUTHERN RAILWAYS/ TWITTER படக்குறிப்பு, வீரமுத்துவேல் சராசரி மாணவராகத் தான் இருந்தார் எனக் கூறுகிறார் வீர முத்துவேல் படித்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ஜே. அமோஸ் ராபர்ட் ஜெயச்சந்திரன் விழுப்புரத்தில் பிறந்த வீர முத்துவேல், 10 ஆம் வகுப்பு வரை ரயில்வே பள்ளியில் படித்துவிட்டு, தனியார் கல்லூரியில் டிப்ளமோ சேர்ந்துள்ளார். “பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் தரப்பில் யாருக்கும் கல்விப்பின்புலம் இல்லை. நண்பர்களுடன் சேர்ந்து இயந்திரவியலில் டிப்ளமோ படித்தேன். அப்போதுதான் பொறியியல் மீது ஒரு ஆர்வம் வந்தது. அதனால், என்னால் 90% மதிப்பெண் எடுக்க முடிந்தது,” என்றார். தன்னுடைய கல்லூரிக் கல்வி குறித்து பகிர்ந்துகொண்ட அவர், அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்காக அனைத்து நேரங்களிலும் படித்துக்கொண்டிருக்கமாட்டேன் எனக் கூறியுள்ளார். “அனைத்து செமஸ்டர்களிலும்(Semester) முதல் அல்லது இரண்டாம் இடம் பிடிப்பேன். அது வருவதற்காக அனைத்து நேரங்களிலும் படித்துக்கொண்டிருக்கமாட்டேன். படிக்கும்போது 100% கவனம் செலுத்தி, புரிந்து படிக்க வேண்டும் என நினைப்பேன். அதுவே எனக்கு நல்ல மதிப்பெண்களைப் பெற்றுக்கொடுத்தது,” எனக்கூறியுள்ளார். விழுப்புரத்தில் வீர முத்துவேல் படித்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ஜே. அமோஸ் ராபர்ட் ஜெயச்சந்திரனிடம் பிபிசி பேசியது. அப்போது அவர், வீரமுத்துவேல் சராசரி மாணவராகத் தான் இருந்தார் எனக் கூறினார். வீரமுத்துவேல் கல்வி ஆவணங்கள் சொல்வது என்ன ? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அவர் சராசரியாக ஒரு 70% முதல் 80% எடுக்கும் மாணவராகத்தான் இருந்துள்ளார். “அவர் சுமார் 25 வருடங்களுக்கு முன் எங்கள் கல்லூரியில் படித்துள்ளார். அவருக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் யாரும் இங்கு இல்லாததால், அவரது கல்வி ஆவணங்களை எடுத்துப்பார்த்தோம். அவர் சராசரியாக ஒரு 70% முதல் 80% எடுக்கும் மாணவராகத்தான் இருந்துள்ளார். ஆனால், அவர் அந்த காலக்கட்டத்திலேயே கல்லூரி செய்முறைத் திட்டங்களை (College Project) அவரே செய்துள்ளார்.” என பகிர்ந்தார். வீர முத்துவேல் குறித்து மேலும் பகிர்ந்துகொண்ட அமோஸ், “அவர் படிக்கும் காலத்தில், தற்காலத்திற்கு தேவையான அளவு மட்டும் கல்வியில் செலவழித்துவிட்டு, எதிர்காலத்திற்காக தனது ஆற்றலை வளர்த்துக்கொள்வதில் அப்போதே முனைப்புடன் இருந்திருக்கிறார் என்பது அவரது கல்வி ஆவணங்களைப் பார்க்கும்போது தெரிகிறது,” என்றார். வீரமுத்துவேலின் வெற்றிக்கு, அவரது அர்பணிப்பே காரணம் என்றகிறார் அவரது தந்தை பழனிவேல். பிபிசியிடம் பேசிய அவர், “வீர முத்துவேலுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்ட நாள் முதல் அவர் வீட்டிற்கு கூட செல்லாமல், அவரும் அவரது குழுவினரும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த திட்டத்துக்காக எனது மகன் வீர முத்துவேல் அவரது பெயருக்கு ஏற்ற வகையில் விடா முயற்சி, வீர முயற்சி எடுத்து வீரமாக வெற்றி கண்டதை நினைத்து பார்க்கையில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்,” தங்கை திருமணத்துக்கூட செல்லாத வீரமுத்துவேல் பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, தங்கையின் திருமணத்திற்குக்கூட அவர் வராமல் சந்திரயான்-3 திட்டத்திற்காக பணியாற்றியதாகக்கூறி நெகிழ்ந்தார் வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் திட்டத்திற்கு பொறுப்பேற்றது முதல் தன்னுடன் கூட சரியாக பேசவில்லை எனக்கூறிய பழனிவேல், தங்கையின் திருமணத்திற்குக்கூட அவர் வராமல் சந்திரயான்-3 திட்டத்திற்காக பணியாற்றுவதாகக் கூறி நெகிழ்ந்தார். “இந்த திட்டத்தில் என்றைக்கு பொறுப்பாளராக எனது மகன் நியமிக்கப்பட்டாரோ அன்று முதல் விழுப்புரத்திற்கு வரவில்லை. என்னுடன் அடிக்கடி பேச மாட்டார். குறிப்பாக எனது மகளின் திருமண நிச்சயதார்த்தத்திற்கும் வர முடியாது என்று சொன்னார். அதுபோல் கடந்த 20ஆம் தேதி எனது மகளின் திருமணமும் நடைபெற்றது. அதற்கும் அவர் முடியாது என்று சொன்னார் நான் பரவாயில்லை உன்னுடைய பணி இந்த நாட்டுக்கே முக்கியம் என்று சொல்லி அவரை மேலும் ஊக்கப்படுத்தினேன்,” என்றார். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தந்தை தொடர்ந்து பேசிய அவர், “முத்துவேல் என்னைப் பற்றியோ எனது குடும்பத்தைப் பற்றியோ நினைக்க மாட்டார். அவரது பணியில் மிகுந்த ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பார். இப்படிப்பட்ட சூழலில் அவர் இன்றைக்கு வெற்றி கொண்டிருக்கிறார்,” என்று ஆனந்த கண்ணீருடன் கூறினார் . மற்றவர்களிடம் தன்னை வீர முத்துவேலின் தந்தை என அடையாளப்படுத்திக் கொள்வதில் பெருமை கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். “மேலும் எனது மகளின் திருமண பத்திரிகையை எடுத்துச் சென்று உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் வழங்கும்போது அவர்களது குழந்தைகளை அழைத்து இவர் தான் விஞ்ஞானி வீர முத்துவேலின் தந்தை இவரது மகனை போல் நீங்கள் பணியாற்றி நாட்டிற்கு வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று ஒவ்வொரு வீட்டிலும் கூறி மகிழ்ச்சி அடைந்தனர். இது என்னால் மறக்க முடியாது” என்றும் கூறினார். வீரமுத்துவேல் இஸ்ரோவில் சேர்ந்தது எப்படி? படக்குறிப்பு, விழுப்புரம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட வீர முத்துவேல், 10-ஆம் வகுப்பு வைர ரயில்வே இருபாளர் பள்ளியில் படித்துள்ளார் விழுப்புரம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட வீர முத்துவேல், 10-ஆம் வகுப்பு வைர ரயில்வே இருபாலார் பள்ளியில் படித்துள்ளார். பின், விழுப்புரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரவியலில் டிப்ளமோ படித்த அவர், பொறியியல் கல்ந்தாய்வு மூலமாக தனியார் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியலில் இளங்களை பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர், திருச்சியில் உள்ள ஆர்.இ.சி., கல்லூரியில் முதுகலை பொறியியல் பட்டம் பெற்ற வீர முத்துவேல், கோவையில் உள்ள தனியார் இயந்திரவியல் நிறுவனத்தில் மூத்த பொறியாளராக பணியாற்றியுள்ளார். பின், விண்வெளி ஆராய்ச்சியில் தனக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக, பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கொஞ்ச காலத்திற்கு பிறகு, தனது கனவான இஸ்ரோவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்து திட்ட பொறியாளராக பணியில் சேர்ந்துள்ளார். பணியில் இருக்கும்போதும், விண்வெளி அறிவியல் மீது தனக்கிருந்த ஆர்வத்தின் காரணமாக, ஐஐடி மெட்ராசில் பிஎச்டி., ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்து, வெற்றிகரமாக படித்து முடித்துள்ளார். அதற்கு பிறகு, இஸ்ரோவில் முதல் நேனோ (NANO) விண்கலத்தை ஏவுவதற்காக குழுவை வழிநடத்தும் வாய்ப்பை பெற்று, மூன்று நேனோ விண்கலன்களை ஏவியுள்ளார். அதற்குப்பிறகு, பல்வேறு இணை பொறுப்புகள் வகித்த வீர முத்துவேல், சந்திரயான்-3 இன், திட்ட இயக்குநராக 2019 நியமிக்கப்பட்டார். https://www.bbc.com/tamil/articles/cd1gqyz01w3o
  10. ரஸ்யாவில் விமானவிபத்தில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் பலி – பிபிசி Published By: RAJEEBAN 24 AUG, 2023 | 05:59 AM ரஸ்யாவில் இடம்பெற்ற விமானவிபத்தில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாவதாக பிபிசி தெரிவித்துள்ளது. ரஸ்ய விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது அதிலிருந்த பத்துபேரும் உயிரிழந்துள்ளனர் அதில் பயணம் செய்தவர்களில்; வோக்னர் கூலிப்படையின் தலைவரின் பெயரும் உள்ளது என ரஸ்யாவின் உள்நாட்டு விமானப்போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. இதே வேளை வாக்னர் தலைவரின் தனிப்பட்ட விமானத்தை ரஸ்யா சுட்டுவீழ்த்தியது என்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின்றன. ரஸ்யாவிற்கு துரோகமிழைப்பவர்களின் நடவடிக்கை காரணமாக பிரிகோஜின் உயிரிழந்தார் என டெலிகிராமில் பதிவொன்று வெளியாகியுள்ளது. மொஸ்கோவிற்கு வடமேற்கில் உள்ள வெர் பிராந்தியத்திலேயே விமானவிபத்து இடம்பெற்றுள்ளது. ரஸ்யாவின் விமானப்படை தளபதி பதவியிலிருந்து சேர்கேய் செரோவிகின் நீக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியான அதேநாளில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவருக்கும் இடையில் சிறந்த உறவு காணப்பட்டதும் - வாக்னர் குழுவின் கலகத்தின் பின்னர் விமானப்படை தளபதி பொதுவெளியில் காணப்படாததும் குறிப்பிடத்தக்கது. பிரிகோஜினின் எம்பிரேரர் விமானம் ஏழு பயணிகள் மூன்று விமானபணியாளர்களுடன் மொஸ்கோவிலிருந்து சென்பீட்டர்ஸ்பேர்க்கிற்கு சென்றுகொண்டிருந்தது என ரஸ்யாவின் விமானபோக்குவரத்து அதிகாரி சபை தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட விமானத்தில் 2014 இல் வாக்னர் குழுவை ஆரம்பித்த சிரேஸ்ட தளபதி டிமிட்ரி உட்கினும் பயணித்துள்ளார். விமானம் மொஸ்கோவிற்கும் சென்பீட்டர்ஸ்பேர்க்கிற்கும் இடையில் உள்ள குசேன்கினோ கிராமத்தில் விழுந்து நொருங்கியுள்ளது. வாக்னர் தலைவரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பத்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என இன்டர்பக்ஸ் தெரிவித்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் பொதுமக்கள் இரண்டு சத்தங்களை கேட்டனர் என கிரேஜோன் டெலிகிராம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/163055
  11. பிரக்ஞான் ரோவர்: வெறும் 26 கிலோ எடையுள்ள இஸ்ரோவின் குழந்தை நிலவில் என்ன சாதிக்கும்? பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, சந்திரயான்-3 விண்கலத்தின் மொத்த எடையில் வெறும் 26 கிலோ மட்டுமே எடையுள்ள இந்தச் சிறிய ரோவர்தான் முக்கியமான ஆய்வுகளை நிலாவில் செய்யப் போகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், க. சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 23 ஆகஸ்ட் 2023, 19:43 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிவிட்டது. தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் எனப்படும் ஊர்திக்கலன் வெளியேறி பணிகளைத் தொடங்கி உள்ளது. நிலவில் என்ன செய்யப் போகிறது? அதுகுறித்த தகவல்களை இஸ்ரோ அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது. சந்திரனின் ஒரு நாள் என்பது பூமியில் 28 நாட்களுக்குச் சமம். அதாவது அங்கு 14 நாட்களுக்குப் பகல் மற்றும் 14 நாட்களுக்கு இரவு நிலவும். இதில் 14 நாட்களுக்கு பகல் நீடிக்கும் காலகட்டத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியுள்ளது. இந்த இரண்டு வார காலகட்டத்தில் இஸ்ரோவின் ஆய்வுகளை அது நிலவில் மேற்கொள்ளும். அங்கு விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வரும் பிரக்ஞான் ரோவர் மேற்கொள்ளப் போகும் ஆய்வுகள் இந்தியாவின் எதிர்கால நிலவு மற்றும் விண்வெளித் திட்டங்களில் குறிப்பிடத்தக்கப் பங்கு வகிக்கும். விக்ரம் லேண்டர் சேகரிக்கும் தகவல்களை என்ன செய்யும்? பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, விக்ரம் லேண்டரில் உள்ள சாய்வுக்கதவு திறக்கும்போது, ரோவர் வெளியே வந்து நிலவின் தரையைத் தொடும். விக்ரம் லேண்டர் தரையிறங்கியதால் எழும்பிய புழுதி அடங்கிய பிறகு நிதானமாக வெளியே வந்த பிரக்ஞான் ரோவர், நிலா குறித்து அனுப்பும் தகவல்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள். அந்தத் தரவுகள் லேண்டர் மூலம் பூமிக்கு அனுப்பப்படும். மின்காந்த அலைகளாக மாற்றப்படும் அந்தத் தரவுகளை ஒருவேளை லேண்டர் மூலம் பூமிக்கு அனுப்பும் முயற்சி தோல்வியடைந்துவிட்டால் என்ன செய்வது? அதற்கும் இஸ்ரோ ஒரு மாற்றுத் திட்டத்தை வைத்துள்ளது. இந்த இடத்தில்தான் சந்திரயான்-2இன் ஆர்பிட்டர் உள்ளே வருகிறது. அந்த ஆர்பிட்டர் தரையிறங்கி கலனுடன் தொடர்பில் இருக்கும். விக்ரம் தரையிறங்கி கலன் ரோவரிடம் இருந்து பெறும் தகவல்களையும் அது மேற்கொள்ளும் ஆய்வுகளின் தரவுகளையும் மொத்தமாக பூமிக்கு அனுப்பும். அதேவேளையில், அந்தத் தரவுகளை ஆர்பிட்டருக்கும் அனுப்பி வைக்கும். பிறகு, அந்தத் தரவுகள் ஆர்பிட்டர் மூலம் பூமிக்கு மீண்டும் அனுப்பப்படும். இரண்டில் ஏதாவது ஒரு திட்டத்தில் பிரச்னை ஏற்பட்டாலும் தரவுகள் தங்கள் கைக்குக் கிடைத்துவிட வேண்டும் என்பதற்காக இத்தகைய யுக்தியை இஸ்ரோ பயன்படுத்துகிறது. ரோவர்: 26 கிலோ மட்டுமே எடைகொண்ட இந்தக் கலன் என்ன செய்யும்? பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, நிலாவின் தரைப்பரப்பில் விநாடிக்கு ஒரு செ.மீ என்ற வேகத்தில் ரோவர் நகரும். ஊர்திக்கலமான ரோவர், அதன் தாய்க்கலமான லேண்டரில் இருந்து வெளியே வந்துவிட்டதை உறுதி செய்யும் வகையில் தாயும் சேயும் ஒன்றையொன்று படமெடுத்து அனுப்பிவிட்டன. நிலாவின் தரையில் இறங்கிவிட்ட இந்த 26 கிலோ எடை கொண்ட இஸ்ரோவின் குழந்தை என்னவெல்லாம் செய்யும்? நிலாவின் தரைப்பரப்பில் விநாடிக்கு ஒரு செ.மீ என்ற வேகத்தில் ரோவர் நகரும். அப்படி நகரும் நேரத்தில் அது அங்குள்ள பொருட்களை ஸ்கேன் செய்துகொண்டே நகரும். மேலும், நிலாவின் காலநிலை குறித்த தரவுகளைப் பகுப்பாய்வு செய்து தரவுகளை அனுப்பும். அதுமட்டுமின்றி, நிலாவின் மேற்பரப்பின் தன்மை குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ளும். எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், சேய் கலமான ரோவர் நிலாவின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து தரைப்பரப்பின் தன்மை என்ன, வெப்பம் எந்த அளவுக்கு உள்ளது, தண்ணீர் உள்ளதா என்பன போன்ற தகவல்களைச் சேகரித்து அனுப்பும். இயல்பாகவே ஒரு பொருளை உடைத்தால்தான் அதற்குள் என்ன இருக்கிறது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். அதேபோல் ரோவர் மண்ணைக் குடைந்து அதிலிருந்து மாதிரிகளை எடுத்து, அதை லேசர் மூலம் உடைத்துப் பார்க்கிறது. பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, நிலாவின் தரைப்பரப்பில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொள்ளப் போவது இந்த பிரக்ஞான் ரோவர்தான். நிலாவின் மண்ணில் என்னென்ன தனிமங்கள் உள்ளன என்பதை அதனால் கண்டறிய முடியும். ஊர்திக்கலன் நிலாவின் தரையைக் குடைந்து மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்யும். அதன் மூலம் அந்த மாதிரிகளில் மெக்னீசியம், அலுமினியம், இரும்பு, சிலிகான், டைட்டானியம் என என்னென்ன தனிமங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடிக்கும். அதோடு நிலாவின் மேற்பரப்பில் உள்ள வேதிம கலவைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்றவற்றின் இருப்பு, கனிமங்கள் என்னென்ன உள்ளன என்று நிலாவின் மண்ணை எடுத்து ஆய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு அலைமாலை அளவி என்ற கருவியை ரோவர் பயன்படுத்துகிறது. இந்த அலைமாலை கருவியால் ஒரு பொருளில் இருக்கக்கூடிய பல்வேறு தனிமங்களைப் பிரித்துப் பார்த்து வகைப்படுத்த முடியும். அதன்மூலம், நிலாவின் மணற்பரப்பில் என்னென்ன வகையான தாதுக்கள், கனிமங்கள் இருக்கின்றன என்பதை இஸ்ரோவால் தெரிந்துகொள்ள முடியும். அவற்றைத் தெரிந்துகொள்வது எதிர்காலத்தில் நிலவை மனிதர்கள் மற்ற கோள்களுக்கு விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும்போது ஒரு தளமாகப் பயன்படுத்தக்கூட உதவும். இதற்குச் சான்றாக செவ்வாய் கோளுக்கான பயணத் திட்டத்தைக் கூறலாம். சந்திரயான்-3இன் ஆய்வுகள் மனிதன் விண்வெளிக்குச் செல்ல உதவுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த ஆய்வுகளின் மூலம் எதிர்காலத்தில் நிலாவில் ஒரு தளம் அமைக்க முடிந்தால், மனிதர்களின் விண்வெளிப் பயணங்கள் எளிமையாகிவிடும். செவ்வாய் கிரகத்திற்குப் பயணிக்கும் ஒரு திட்டம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். பூமியில் இருந்தே அந்தப் பயணத்திற்குத் தேவையான எரிபொருள்களையும் நாம் எடுத்துச் செல்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஒருவேளை இந்த ஆய்வுகளின் மூலம் எதிர்காலத்தில் நிலாவில் ஒரு தளம் அமைக்க முடிந்தால், நிலவுக்குச் செல்வதற்குத் தேவையான எரிபொருளை மட்டும் நிரப்பிக்கொண்டு பூமியில் இருந்து கிளம்பினால் போதுமானது. நிலவை அடைந்த பிறகு, அங்குள்ள தளத்தில் அங்கேயே சேகரிக்கப்படும் ஹைட்ரஜன் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜன் எரிவாயுவை பயன்படுத்தி செவ்வாய் கோளுக்கான பயணத்தை மனிதர்கள் மேற்கொள்ள முடியும். இத்தகைய முயற்சிகள் உடனடியாக சாத்தியப்படாது என்றாலும், அவற்றுக்கான தொடக்கமாக இஸ்ரோவின் இந்த ஆய்வு இருக்கக்கூடும் என்பதே விஞ்ஞானிகளின் கூற்று. சந்திரயான்-3 விண்கலனின் மொத்த எடையில் வெறும் 26 கிலோ மட்டுமே எடைகொண்ட ஊர்திக்கலனில் இருக்கும் எல்.ஐ.பி.எஸ். (LIBS), ஏ.பி.எக்ஸ்.எஸ் (APXS) என்ற இரண்டு கருவிகள்தான் இந்த ஆய்வுகள் அனைத்தையும் மேற்கொள்ளப் போகின்றன. இந்த ஆய்வுகள் எதிர்காலத்தில் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளே விண்வெளிப் பயணங்களை மேற்கொள்வதற்குக்கூட உதவலாம் என்று கூறுகிறார் சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் முனைவர் எஸ்.பாண்டியன். நிலாவின் தரைப்பரப்பில் இத்தகைய குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொள்ளப் போவது இந்த பிரக்ஞான் ரோவர்தான். இதற்கிடையே, பிரக்ஞான் ரோவரில் உள்ள சக்கரங்களும் ஒரு முக்கிய வேலையைச் செய்யும். இப்படியாக பிரக்ஞான் ரோவர் முன்னோக்கி நகர்ந்துகொண்டே ஆய்வுகளைச் செய்யும்போது, அதன் ஆறு சக்கரங்களும் நிலாவின் தரைப்பரப்பில் இந்தியாவின் மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோவின் லோகோவை நிலவின் மேற்பரப்பில் பதிய வைக்கும். படக்குறிப்பு, அடுத்த இரண்டு வாரங்களில் ரோவரும் லேண்டரும் அனுப்பவுள்ள தரவுகள்தான் உலகளவில் இஸ்ரோவை ஒரு புதிய பரிமாணத்திற்குக் கொண்டு செல்லப் போகின்றன. இரண்டு வாரங்களுக்கு மட்டுமே ஆய்வு செய்யும் சந்திரயான்-3 இந்தத் திட்டத்தின் கீழ் நிலாவில் இந்தியா மேற்கொள்ளப்போகும் ஆய்வுகள் அனைத்துமே இரண்டு வாரங்களுக்கு மட்டும்தான். ஏனென்றால், இரண்டு வாரம் முடிந்ததும் நிலாவில் இரவு தொடங்கிவிடும். இரவு நேரத்தில் அங்கு மைனஸ் 200 டிகிரி செல்ஷியஸ் வரைக்குமே வெப்பநிலை குறையும். அந்த உறைபனிக் குளிரில் லேண்டர், ரோவர் இரண்டுமே இயங்க முடியாது. அவை இயங்குவதற்குத் தேவையான சூரிய ஒளி அடுத்த இரண்டு வாரங்களுக்குக் கிடைக்காது. அது மட்டுமின்றி, இரவு நீடிக்கும் அந்த இரண்டு வாரங்களிலும் நிலவும் உறைபனிக் குளிர் அவற்றின் பாகங்களில் விரிசல்கள் விழச் செய்யலாம். இதனால் அவை விரைவிலேயே இறந்துவிடும். உறைபனிக் குளிரில் இந்தக் கருவிகளால் இயங்க முடியாது என்பதையும் தாண்டி, அவற்றின் கட்டமைப்பிலேயே சேதங்கள் ஏற்படக்கூடும். உலோகங்களால் உறைபனிக் குளிர் வெப்பநிலையைத் தாங்க முடியாது. அதிலும் 200 டிகிரி செல்ஷியஸ் வரைக்கும் செல்லும்போது, அத்தகைய வெப்பநிலையில் அவை சேதமடையக்கூடும். இதனால், லேண்டர், ரோவரின் பாகங்கள் செயலிழக்க வாய்ப்புள்ளது. ஆக, அடுத்த இரண்டு வாரங்களில் ரோவரும் லேண்டரும் அனுப்பவுள்ள தரவுகள்தான் உலகளவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தை ஒரு புதிய பரிமாணத்திற்குக் கொண்டு செல்லப் போகின்றன. https://www.bbc.com/tamil/articles/cw481197yleo
  12. சந்திரயான்-3: தரையிறங்கும்போது ஏற்பட்ட தடுமாற்றத்தை விக்ரம் லேண்டர் எப்படி சரி செய்தது? படக்குறிப்பு, தரையிறங்கிக் கொண்டிருந்த அந்த 15 நிமிடங்களில் ஒரு 30 விநாடிகளுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திரயான்-3 நடுங்க வைத்துவிட்டது. 42 நிமிடங்களுக்கு முன்னர் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலாவில் தரையிறங்கிவிட்டது. மொத்த உலகின் கண்களும் இஸ்ரோ மீது பதிந்திருந்த நேரத்தில் இந்த வரலாற்றுச் சாதனையைப் புரிந்திருக்கிறது. ஆனால், தரையிறங்கிக் கொண்டிருந்த அந்த 15 நிமிடங்களில் ஒரு 30 விநாடிகளுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திரயான்-3 நடுங்க வைத்துவிட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் மனதில் திட்டத்தின் வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கிய அந்த 30 நிமிடங்களில் என்ன நடந்தது? விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது என்ன நடந்தது? இப்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது 800 மீட்டர் என்ற உயரத்தை எட்டும் வரை விக்ரம் தரையிறங்கி கலன் எதிர்பார்த்த அனைத்து அளவுகளுக்கு உள்ளே தான் இருந்துள்ளது என்கிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன். அதன் செயல்பாடுகள் திட்டமிட்டபடி இருந்ததோடு, பெரிய மாற்றங்கள் இருக்கவில்லை என்று கூறும் அவர், ஆனால் 150 மீட்டர் உயரத்திற்குச் சென்றபோதுதான் அது தரையிறங்குவதாக இருந்த இடத்தின் தரைப்பகுதியில் இடர் இருப்பதை உணர்ந்துள்ளது என்று விளக்கினார். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, தரையிறங்கும் செயல்முறை தொடங்கிய “18வது நிமிடத்தில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்து பிறகு அதைச் சரிசெய்து விக்ரம் லேண்டர் தரையிறங்கியுள்ளது.” அதை உடனடியாக உணர்ந்த விக்ரம் லேண்டர், அந்த நேரத்தில் மாற்று இடத்தில் தரையிறங்குவதற்காக பக்கவாட்டில் நகர்ந்தது. “இது சாதாரணமாக நேரலையில் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இது மிகவும் கூர்மையான, நுட்பமான இடர். இறுதி வரை கச்சிதமாக வந்த விக்ரம் தரையிறங்கி கலன், தடம் பதிக்கப் போகும் நேரத்தில் அந்த இடத்தில் இடர் இருப்பதைக் கண்டறிந்தது. அந்தத் தருணம் ஒரு படபடப்பை ஏற்படுத்திவிட்டது,” என்கிறார் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன். தரையிறங்கும் செயல்முறை தொடங்கிய “18வது நிமிடத்தில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்து பிறகு அதைச் சரிசெய்து விக்ரம் லேண்டர் தரையிறங்கியுள்ளது.” இந்த மாற்றங்கள் காரணமாக திட்டமிட்ட கால அளவில் 30 விநாடிகள் கூடுதலாக எடுத்துக்கொண்டது. இந்த மாற்றத்தை பெங்களூருவில் இருக்கும் இஸ்ரோ தொலைத்தொடர்பு மையத்தில் இருந்து கண்ட விஞ்ஞானிகளின் முகத்தில் படபடப்பு தென்பட்டது என்று கூறும் த.வி.வெங்கடேஸ்வரன், இறுதியில் அதைச் சரிசெய்து லேண்டர் தரையிறங்கியதும் நிம்மதியடைந்தனர் என்கிறார். பிறகு தரையிறங்கும் வேகத்தை எதிர்பார்த்த வகையில் சரிசெய்து கச்சிதமான வேகத்தில் தரையைத் தொட்டது. அதேபோல், “தரையிறங்குவதற்கான சென்சார் கருவிகள், வழிகாட்டும் கருவிகள், வேகத்தை அளக்கும் கருவிகள், சேதங்களைக் கண்டறியும் கருவிகள் என அனைத்தும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன என்பது இதன் மூலம் தெரிய வருகிறது,” என்று தெரிவித்தார். ரோவர் எப்போது வெளியே வரும்? படக்குறிப்பு, “அந்தக் கதவு திறந்து சுமார் இரண்டு மணிநேரம் கழித்து ஊர்திக்கலனில் இருக்கும் சூரிய மின் தகடுகளை மேலே நிமிர்த்துவார்கள்." இவற்றைவிட இன்னும் விரிவான பகுப்பாய்வுகளை மேற்கொண்டு, விண்கலத்தின் பாகங்களில் என்ன மாதிரியான தாக்கம் தரையிறங்கியதன் மூலம் ஏற்பட்டுள்ளது, அவற்றின் நிலை என்ன என்பன போன்ற தகவல்களைக் கண்டறிவதற்கு உதவும் தரவுகள் இனிமேல்தான் கிடைக்கும். தரையிறங்கும் முயற்சி வெற்றி பெற்றுவிட்டாலும், ஊர்திக்கலன் அதன் தாய்க்கலமான லேண்டரில் இருந்து வெளியே வரவேண்டும். இந்தச் செயல்முறை இன்று இரவு 8:15 மணிக்குத் தொடங்கும். அந்தச் செயல்முறை குறித்து விளக்கிய விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், “அந்தக் கதவு திறந்து இரண்டு மணிநேரம் கழித்து ஊர்திக்கலனில் இருக்கும் சூரிய மின் தகடுகளை மேலே நிமிர்த்துவார்கள். அதன்பிறகுதான் அந்த ஊர்திக்கலன் வெளியே வரும். சாய்வுக் கதவு திறந்தவுடன் ஊர்திக்கலன் வெளியே வந்துவிடாது. சாய்வுக்கதவின் சரிவு எந்த அளவுக்கு உள்ளது, அது பாதுகாப்பானதா என்பன போன்ற தகவல்களை ஆய்வு செய்து, உறுதி செய்த பிறகே சாய்வுக்கதவு வழியாகச் சரிந்து கீழே இறங்கும்,” என்று கூறினார். விக்ரம் லேண்டர் தரையிறங்கி சுமார் நான்கு மணிநேரங்கள் கழித்து இந்தச் செயல்முறை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். ஊர்திக்கலன் வெளியே வந்து சுமார் ஒரு மணிநேரம் சூரிய ஒளியில் சார்ஜ் ஆன பிறகு, மொத்த உலகமும் காத்துக் கொண்டிருக்கும் அந்தப் புகைப்படத்தை எடுக்கும். தாய்க்கலன் எடுக்கும் ஊர்திக்கலனின் புகைப்படம் மற்றும் சேய்க்கலமான ஊர்திக்கலன் அதன் தாய்க்கலமான ஊர்திக்கலனை எடுக்கும் புகைப்படம் இரண்டும்தான் இந்தத் திட்டத்தின் வெற்றியை 100 சதவீதம் உறுதி செய்யும். ஆனால், இதுவரைக்கும் 95 சதவீத வெற்றிப்பாதையைக் கடந்துவிட்டதாகவும், இதில்தான் மிகவும் சவாலான கட்டமே இருந்தது என்றும் கூறுகிறார் சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் முனைவர்.எஸ்.பாண்டியன். ஆகவே, இதற்கு மேல் ரோவர் வெளியே வருவது மற்றும் அது மேற்கொள்ளும் ஆய்வுகள் ஆகியவற்றில் பெரும்பாலும் எந்தச் சிக்கலும் வர வாய்ப்பில்லை என்று தெரிவிக்கிறார் எஸ்.பாண்டியன். இஸ்ரோவுக்கு முக்கியமான மைல்கல் பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, கடந்த 2008ஆம் ஆண்டு சந்திரயான்-1 ஏவப்பட்டபோது இஸ்ரோ விஞ்ஞானிகளின் லட்சியமாக இருந்த கனவுத் திட்டம் 15 ஆண்டுகள் கழித்து இன்று நிறைவேறியுள்ளது. இஸ்ரோவுக்கு இதுவொரு முக்கியமான மைல்கல் என்றே சொல்லலாம். ஏனெனில், நிலாவில் மென்மையாகத் தரையிறங்கித் தடம் பதித்த நான்காவது நாடு என்ற பெருமை மட்டுமில்லை, தென் துருவப்பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையையும் கூடவே செய்துள்ளது. நிலாவின் மேற்பரப்பில் இருந்து 31.5 டிகிரி என்ற தொலைவில் நீள்வட்டப்பாதையில் வந்த விக்ரம் தரையிறங்கி கலன், அதற்குப் பிறகு வந்த அடுத்த 15 நிமிடங்களில் மிகக் கச்சிதமாக அதன் பணியைச் செய்து முடித்தது. இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திரயான்-3 விண்கலம் அவர்களிடம் பேசுவது போன்ற ஒரு ட்வீட்டை பகிர்ந்துள்ளது. “சந்திரயான்-3: நான் எனது இலக்கை அடைந்துவிட்டேன். நீங்களும் உங்கள் இலக்கை அடைந்துவிட்டீர்கள்,” என்று உணர்ச்சிப் பெருக்குடன் இஸ்ரோ அந்த ட்வீட்டை பகிர்ந்துள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு சந்திரயான் 1 விண்ணில் ஏவப்பட்டது. அது திட்டமிடப்பட்ட போது இஸ்ரோவுக்கு இருந்த கனவு, அதன் சொந்த முயற்சியில் நிலவை முத்தமிட வேண்டும் என்பது. அந்தக் கனவு 15 ஆண்டுகள் கழித்து இன்று நனவாகியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/ce7w5907530o
  13. சந்திரயான்-3: நிலாவைத் தொட்டது விக்ரம் லேண்டர் - அடுத்து என்ன செய்யும்? பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, விக்ரம் லேண்டர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. படிப்படிப்பாக லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டு மாலை 6.04 மணிக்கு நிலவின் தரைப்பகுதியில் விக்ரம் லேண்டர் கால்பதித்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை தென் ஆப்ரிக்காவில் இருந்து காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரோ குழுவினருடன் இணைந்து பார்த்தார். விக்ரம் லேண்டர் தரையிறங்கியது தொடர்பாக காணொளி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோதி, “இது போன்ற வரலாற்றுத் தருணங்களைப் பார்க்கும் போது நமக்குப் பெருமையாக இருக்கிறது. இது புதிய இந்தியாவின் விடியல். இந்த தருணம் மறக்க முடியாதது. இந்த தருணம் இதற்கு முன் நடந்திராதது. துயரக் கடலை கடக்கும் தருணம் இது." "140 கோடி இந்தியர்களின் துடிப்பால் இந்த தருணம் உருவாகியுள்ளது. இந்த தருணத்துக்காக இஸ்ரோ பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்துள்ளது. 140 கோடி நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துகள். நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பாலும் திறமையாலும், உலகில் எந்த நாடும் அடைய முடியாத நிலவின் தென் துருவத்தை அடைந்துள்ளோம்” என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,ISRO விக்ரம் லேண்டர் பத்திரமாகத் தரையைத் தொட்டதும் விஞ்ஞானிகள் கட்டிப் பிடித்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்கள். சந்திரயான்- 3 திட்டத்தின் திட்ட இயக்குநராக தமிழ்நாட்டின் வீர முத்துவேல் செயல்பட்டு வருகிறார். விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கியதும் பேசிய அவர் "எனது குழுவினர் முழுமையான பங்களிப்பை வழங்கினர்" என்று கூறினார். விழுப்புரத்தில் விஞ்ஞானி வீர முத்துவேல் அவர்களின் தந்தையார் பழனிவேல் சந்திராயன் நிலவில் தரை இறங்கும் காட்சியை ஆர்வமுடன் அவர் வீட்டில் இருந்தபடியே கண்டு ரசித்தார் பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, விக்ரம் லேண்டர் இனி என்ன நடக்கும்? நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் முதலில் ஒன்றுமே செய்யாமல் ஓய்வெடுக்கும். 10 மீட்டர் உயரத்தில் இருந்து தொப்பென கல் விழுவதைப் போல் தரைப்பரப்பில் விழுந்திருப்பதால் எழும் புழுதிகள் அடங்கும் வரை விக்ரம் தரையிறங்கி கலன் எதுவும் செய்யாமல் அமைதியாக ஓய்வெடுக்கும். அந்தப் புழுதி முழுவதும் அடங்கிய பிறகு, மென்மையாக அந்த தரையிறங்கி கலன் தனது வயிற்றுக்குள் வைத்து ஒரு குழந்தையைப் போல் பாதுகாத்து நிலா வரைக்கும் கொண்டு வந்த ரோவர் எனப்படும் ஊர்திக்கலனை வெளியே அனுப்பும். லேண்டரில் ஒரு சாய்வுக்கதவு திறந்து, அதன் வழியே ஊர்திக்கலன் சறுக்கிக்கொண்டு வெளியே வரும். இங்கே இந்த தரையிறங்கிக் கலன், ஊர்திக்கலன் இரண்டையும் தாய் கலன், சேய் கலன் என விவரிக்கிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானியான த.வி.வெங்கடேஸ்வரன். “விக்ரம் தரையிறங்கிக் கலன் வெற்றிகரமாகத் தரையிறங்கிய சில மணிநேரங்கள் கழித்து அதன் சேய் கலமான ரோவர் வெளியே வரும். இதுவும் வெற்றிகரமாக நடந்து முடியும்போதுதான் இந்த முயற்சியில் இஸ்ரோ முழு வெற்றி பெற்றதாக அர்த்தம்.” https://www.bbc.com/tamil/articles/c51j7k170kyo
  14. சந்திரயான்-3: நிலாவை முத்தமிடும் இந்தியா - நேரலை பட மூலாதாரம்,ISRO 23 ஆகஸ்ட் 2023, 07:56 GMT புதுப்பிக்கப்பட்டது 48 நிமிடங்களுக்கு முன்னர் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று நிலவில் தரையிறங்குகிறது. இன்று மாலை 5.44 மணிக்கு விக்ரம் லேண்டரை தரையிறக்க ஆயத்தமாவோம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து, மாலை 6.04 மணிக்கு நிலவின் தரைபரப்பில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும். "நிலவில் விக்ரம் லேண்டரை தரையிறங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளும் தயார். தரையிறங்கிக் கலன் திட்டமிட்டப்படி, குறிப்பிட்ட அந்த இடத்திற்கு மாலை 5.44 மணிக்கு சென்றடையும். தானியங்கி தரையிறங்கி செயல்பாட்டு கட்டமைப்பிடம் இருந்து கட்டளையைப் பெற்றவுடன் தரையிறங்கிக் கலன், கீழே இறங்குவதற்காக அதிலுள்ள என்ஜின்களை இயங்கச் செய்யும். நிலவில் விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான குழு, கட்டளைகள் சரியான வரிசையில் பெறப்படுகிறதா என்பதை உறுதி செய்யும்." இஸ்ரோ தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது. இஸ்ரோ நிறுவனர் விக்ரம் சாராபாயின் மகன் கார்த்திகேய சாராபாய் இந்த நிகழ்வு குறித்து ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், “இது மிதுவும் முக்கியமான நாள். மற்றவற்றிலிருந்து வேறுபட்ட ஒரு செயல்முறையின் மூலமாகவும், துல்லியமாகவும் சந்திரயான் 3-ஐ அனுப்ப முடிந்திருப்பது இந்தியாவுக்குமட்டுமல்ல பூமியில் உள்ள அனைவருக்கும் ஒரு அற்புதமாக விசயம். அறிவியல், பொறியியல் ஆகியவற்றில் தவறில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்கிறோம். நிலவின் தென் துருவத்தில் யாராலும் இறங்க முடியவில்லை. அப்படியிருக்கும் இது மனிதகுலத்திற்கு ஒரு பெரிய விஷயமாக இருக்கும்” என்றார். ஒடிசாவை சேர்ந்த பிரபல மணற் சிற்ப கலைஞரான சுதர்ஷன் பட்நாயக், சந்திரயானுக்கு வாழ்த்து தெரிவித்து மணற்சிற்பம் வடித்துள்ளார். சந்திரயான் விண்கலத்தை சுமந்து சென்ற ராக்கெட், நிலவில் இந்திய கொடி பறப்பது போன்றவற்றுடன் ஜெய் ஹோ என்ற வாசகத்துடன் இந்த சிற்பத்தை அவர் வடித்துள்ளார். பட மூலாதாரம்,ISRO பிரிட்டனின் முதல் விண்வெளி வீராங்கனையான ஹெலன் ஷர்மன் இந்தியாவின் சந்திரயான் திட்டம் குறித்து பிபிசியின் மோனிகா மில்லருக்கு பேட்டியளித்தபோது, இது புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் என்று குறிப்பிட்டார். மேலும், “ நீங்கள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பப் போகிறீர்கள் என்றால், நிச்சயமாக பனி மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அவர்கள் நீர் குடிக்க விரும்புவார்கள். அவர்கள் தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரித்து ஆக்ஸிஜனை சுவாசிக்க விரும்புவார்கள். அதிலிருந்து ராக்கெட்க்கு தேவையான எரிபொருளையும் தயாரிக்கலாம். எனவே பனி மிகவும் அவசியம். ஆனால், நிலவின் தென் துருவத்தில் உள்ள அந்த பள்ளம் உண்மையில் உயர்ந்த விளிம்பைக் கொண்டுள்ளது. மேலும் அந்த விளிம்பின் ஒருசில பகுதிகளில் நிலையான சூரிய ஒளி இருக்கும். ஒருசில பகுதிகளில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சூரிய ஒளி இருக்கும். எனவே, நீங்கள் சோலார் மின்சாரத்தை உருவாக்கும் இயந்திரத்தை அங்கு வைத்தால், தொடர்ந்து மின்சாரத்தை உருவாக்கிக்கொண்டே இருக்க முடியும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், மனிதர்கள் இல்லாமல் நிலவில் தரையிறங்குவது, மனிதர்களுடன் தரையிறங்குவதை விட கடினமானது என்றும் தெரிவித்தார். பட மூலாதாரம்,SUDARSAN PATTNAIK பட மூலாதாரம்,GETTY IMAGES “குழுவினர் இல்லாமல் செல்வதால், உங்கள் கருவிகள் சரியான முறையில் வேலை செய்ய வேண்டும். இரண்டாவது முயற்சியில் ஈடுபடுவதற்கு உங்களுக்கு மிகக் குறைந்த எரிபொருளே இருக்கும். தென் துருவத்தில் மலைகளும் பள்ளங்களும் அதிகமாக இருக்கும். எனவே, நிச்சயமாக அது சவாலானது. யாராவது மனிதர்கள் செல்லும்போது அந்த நேரத்தில் வழிநடத்த முடியும். காலதாமதம் ஆகும் வாய்ப்பு உள்ளது. எனவே, உங்களின் இயந்திரங்கள் வேகமாக வேலை செய்ய வேண்டும். தூசிகளும் பிரச்னையாக விளங்கலாம். இதற்கு முன்பு சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள்தான் இதனை சமாளித்துள்ளன. ஒருவேளை இந்தியா இதனை சமாளித்தால் பெரிய விசயம். ” என்றும் அவர் குறிப்பிட்டார். விண்வெளி ஆய்வில் இந்தியாவில் நிலா குறித்த திட்டம் புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் என்றும் ஹெலன் ஷர்மன் கூறினார். சந்திரயான் 3 திட்டம் கடந்து வந்த பாதையை பார்ப்போம். சந்திரயான் 3 திட்டத்துக்கான செலவு எவ்வளவு? இந்தியாவின் முதல் நிலவு திட்டமான சந்திரயான் -1 கடந்த 2008 இல் ரூ.386 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டது. சந்திரயான் - 2 திட்டத்துக்கு ரூ.978 கோடி செலவிடப்பட்டது. சந்திரயான் 3 திட்டத்துக்கான செலவு ரூ.615 கோடி மட்டுமே? சந்திரயான் 3 விண்கலம் எப்போது விண்ணில் ஏவப்பட்டது? ஜூலை 6: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது ஜூலை 11: 24 மணி நேர ஏவுதல் ஒத்திகை வெற்றிகரமாக செய்யப்பட்டது ஜூலை 13: சந்திரயான் 3 விண்கலத்தின் கவுண்ட் டவுன் பிற்பகல் 1.05-க்கு ஸ்ரீஹரிகோட்டாவில் தொடங்கியது. ஜூலை 14: சந்திரயான் -3 விண்கலத்தை சுமந்துகொண்டு எல்விஎம்3 எம்4 ராக்கெட் மதியம் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. பட மூலாதாரம்,ISRO சந்திரயான் 3 விண்கலத்தின் பாதை உயரம் எத்தனை முறை மாற்றப்பட்டது? சந்திரயான் விண்கலத்தின் பாதை உயரம் உயர்த்தும் (Orbit raising) நடவடிக்கை 5 முறை மேற்கொள்ளப்பட்டது. அவை; ஜூலை 15: சந்திரயான் 3 விண்கலத்தின் முதல் பாதை உயரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 41762 கி.மீ x 173 கி.மீ தொலைவுள்ள நீள்வட்டப் பாதையில் விண்கலம் செலுத்தப்பட்டது. ஜூலை 17: 2வது முறையாக விண்கலத்தின் பாதை உயரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 41603 கி.மீ x 226 கி.மீ தொலைவுள்ள நீள்வட்டப் பாதையில் விண்கலம் செலுத்தப்பட்டது. ஜூலை18: மூன்றாவது முறையாக சந்திரயான் 3 விண்கலத்தின் பாதை உயரம் உயர்த்தப்பட்டது ஜூலை 20: நான்காவது முறையாக சந்திரயான் 3 விண்கலத்தின் பாதை உயரம் உயர்த்தும் நடவடிக்கையை இஸ்ரோ மேற்கொண்டது ஜுலை 25: 5வதாக மற்றும் இறுதியாக சந்திரயான் 3 விண்கலத்தின் பாதை உயரம் உயர்த்தப்பட்டது. பட மூலாதாரம்,ISRO நிலவை நோக்கிய பயணத்தை சந்திரயான் 3 தொடங்கியது எப்போது? ஆகஸ்ட் 1: புவியின் சுற்றூவட்டப் பாதையில் சுற்றிவந்த சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 1ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 1 மணி இடையிலான நேரத்தில் நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது. ஆகஸ்ட் 5: சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமான நிலவின் நீள்வட்ட பாதைக்குள் செலுத்தப்பட்டது. அப்போது, 164 கி.மீ x 18074 கி.மீ தொலைவுள்ள நிலவின் நீள்வட்டப் பாதையில் சந்திரயான் 3 இருந்தது. ஆகஸ்ட் 6: நிலவில் சந்திரயான் 3 விண்கலத்தின் பாதை உயரம் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 170 கி.மீ x 4313 கி.மீ தொலைவுள்ள நிலவின் நீள்வட்டப் பாதையில் சந்திரயான் 3 இருந்தது. ஆகஸ்ட் 9: 174 கி.மீ x 1437 கி.மீ என்ற நீள்வட்டப் பாதையில் சந்திரயான் 3 விண்கலம் சுற்றும்படி பாதை சுற்றுவட்டம் குறைக்கப்பட்டது. ஆகஸ்ட் 14: 151 கி.மீ x179 கி.மீ என்ற நீள்வட்டப் பாதையில் சந்திரயான் 3 விண்கலம் சுற்றும்படி பாதை சுற்றுவட்டம் குறைக்கப்பட்டது. ஆகஸ்ட் 16: நிலவைச் சுற்றி 153 கி.மீ x163 கி.மீ என்ற நீள்வட்டப் பாதையில் சந்திரயான் 3 விண்கலம் சுற்றும்படி பாதை சுற்றுவட்டம் குறைக்கப்பட்டது. பட மூலாதாரம்,ISRO விக்ரம் லேண்டர் பிரிந்தது எப்போது? ஆகஸ்ட் 17: சந்திரயான் 3 உந்து சக்தி கலனில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது. ஆகஸ்ட் 19: 113 கிமீ x 157 கிமீ என்ற நீள்வட்டப் பாதையில் விக்ரம் லேண்டர் நிலவை சுற்றத் தொடங்கியது ஆகஸ்ட் 20: 25 கிமீ x 134 கிமீ என்ற நீள்வட்டப் பாதையில் விக்ரம் லேண்டர் நிலவை சுற்றத் தொடங்கியது ஆகஸ்ட் 23: விக்ரம் லேண்டர் நிலவின் நிலப்பரப்பில் தரையிறங்கவுள்ளது விக்ரம் லேண்டர் நிலவில் என்ன பணிகளை செய்யும்? நிலாவின் தென் துருவப்பகுதியில் 70 டிகிரி அட்சரேகையில் லேண்டர் தரையிறங்குகிறது. அந்தப் பகுதியில்தான் சந்திரயான்-3 தனது ஆய்வுகளைச் செய்யப் போகிறது. நிலாவில் வெப்பம் அதிகமாக இருக்கும் மண் பகுதியில் நடக்கும் மாற்றங்களை அறிவது, நிலாவில் உள்ள பொருட்கள் என்ன நிலையில் உள்ளன, அங்குள்ள வெப்பத்தைத் தாங்கும் தன்மை கொண்டதா அல்லது அந்த வெப்பத்தில் உடையக்கூடிய பொருட்களாக உள்ளனவா என்பது போன்ற தகவல்களை கண்டறிவது ஆகிய பணிகள் மேற்கொள்ளபடவுள்ளன. இதேபோல், பூமியைப் போலவே நிலாவிலும் நில அதிர்வுகள் உள்ளனவா, இப்போது இல்லையென்றால் முன்பு இருந்தனவா என்பன போன்ற தரவுகள் சேகரிக்கப்படவுள்ளன. விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பின்னர், அதன் உள்ளே இருக்கும் ரோவர் வெளியே வரும். இந்த ரோவர் நிலாவின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து தரைப்பரப்பின் தன்மை என்ன, வெப்பம் எந்த அளவுக்கு உள்ளது, தண்ணீர் உள்ளதா என்பன போன்ற தகவல்களைச் சேகரித்து அனுப்பும். https://www.bbc.com/tamil/articles/cgxg1dw70pyo
  15. சில திரிகளை மோகன் அண்ணை திறந்து விட்டுள்ளார் போல இருக்கிறது. கருத்துப் பதிய என நினைக்கிறேன்.
  16. தினேஷ் ஷாப்டர் மரணம் : நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய உத்தரவு! அரசாங்க இராசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் அணிந்திருந்த ஆடைகளை மீட்டு அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய வைத்திய நிபுணர் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில், குறித்த வழக்கு நேற்று அழைக்கப்பட்டது. இதன்போது, அங்கு முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் வர்த்தகர் இறந்த இடத்திலும் அவரது வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட பொருட்களை விசாரணைக்காக ஐவரடங்கிய வைத்திய நிபுணர் குழுவிடம் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில், குறித்த வழக்கு மீதான விசாரணை அடுத்த மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://thinakkural.lk/article/269814
  17. ரஸ்யாவின் சுப்பர்சோனிக் குண்டு வீச்சு விமானம் உக்ரைனின்ஆளில்லா விமானதாக்குதலில் அழிப்பு Published By: RAJEEBAN 22 AUG, 2023 | 05:44 AM உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் ரஸ்யாவின் நீண்டதூர சுப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களை தாக்கி அழித்துள்ளன சென்பீட்டர்ஸ்பேர்க்கிற்கு தெற்கே சொல்ட்சி 2 விமானதளத்தில் டுப்பொலொவ் டு22 விமானம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை உறுதி செய்ய முடிவதாக பிபிசி தெரிவித்துள்ளது. ஆளில்லா விமானங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாகவும் எனினும் விமானமொன்று சேதமடைந்துள்ளதாகவும் மொஸ்கோ தெரிவித்துள்ளது. டு 22 விமானம் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லக்கூடியது – உக்ரைன் நகரங்களை தாக்குவதற்கு ரஸ்யா இவற்றை பயன்படுத்தியுள்ளது. இதேவேளை ஆளில்லா விமானதாக்குதல் சனிக்கிழமை நொவ்கொரோட் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது என ரஸ்யா தெரிவித்துள்ளது - இந்த பிராந்தியத்திலேயே டு 22 விமானங்களின் தளங்கள் அமைந்துள்ளன. ஆளில்லா விமானமொன்றை வான்வெளி கண்காணிப்பு பிரிவினர் கண்டு அதன் மீது தாக்குதலை மேற்கொண்டனர் சிறிய ஆயுதங்களால் அது தாக்கப்பட்டது- ஒரு விமானம் சேதமடைந்துள்ளது உயிரிழப்புகள் இல்லை என ரஸ்யா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/162890
  18. சந்திரயான் 3: தலையெழுத்தே இந்த '15 நிமிடங்களில்' தான் உள்ளது - விக்ரம் லேண்டர் எப்படி தரையிறங்கும்? முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் பதவி, முதுநிலை விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார் அமைப்பு 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆகஸ்ட் 23ஆம் தேதி, மாலை 5:32. அப்போதுதான் இஸ்ரோ விஞ்ஞானிகளை பதைபதைக்க வைக்கும் 15 நிமிடங்கள் தொடங்கவுள்ளன. அந்தப் பதினைந்து நிமிடங்களில்தான் நிலாவுக்கு மேலே 30 கி.மீ உயரத்தில் இருக்கக்கூடிய சந்திரயான்-3 விண்கலத்தை நிலாவில் தரையிறக்குவார்கள். கடந்த முறை சந்திரயான் 2 திட்டத்தில் இந்த இடத்தில்தான் தோல்வியடைந்தது. அப்போது நடந்த தவறுகளை பகுப்பாய்வு செய்து, இந்த முறை அதிலிருந்து மேம்படுத்தப்பட்ட சந்திரயான் விண்கலத்தை அமைத்துள்ளார்கள். இந்த 15 நிமிடங்களில் சந்திரயான் அது எட்டு கட்டங்களாக தரையிறங்கும் செயல்முறையை மேற்கொள்கிறது. அந்த எட்டு கட்டங்கள் என்னென்ன, கடந்த முறை நடந்த தவறு இப்போது நடக்காமல் இருக்க என்ன மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பன குறித்து இனி விரிவாகக் காண்போம். படக்குறிப்பு, விண்வெளியில் நிலாவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் சந்திரயான் விண்கலம் முதலில் நிலாவைச் சுற்றி வரும். பிறகு நீள்வட்டப் பாதையில் கோழி முட்டையைப் போன்ற வடிவில் சுற்றி வரும். தரையிறங்கும் நிகழ்வின் முதல் கட்டம்: வைரத்தை வைரத்தால் அறுக்கும் யுக்தி விண்வெளியில் நிலாவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் சந்திரயான் விண்கலம் முதலில் நிலாவைச் சுற்றி வரும். பிறகு நீள்வட்டப் பாதையில் கோழி முட்டையைப் போன்ற வடிவில் சுற்றி வரும். அந்த நேரத்தில், நிலவுக்கு நெருக்கமாக இருக்கையில் 30 கி.மீ தொலைவிலும் தூரத்தில் இருக்கும்போது 100 கி.மீ தொலைவிலும் இருக்கும். அப்படிச் சுற்றி வரும் நேரத்தில், ஆகஸ்ட் 23ஆம் தேதி 30 கி.மீ. என்ற நெருக்கமான தொலைவில் இருக்கும் சூழலில் தான் நிலாவின் தென் துருவத்தில் மென்மையாகத் தரையிறங்கும் செயல்முறையை அது மேற்கொள்ள இருக்கிறது. இந்த நேரத்தில் விண்கலம் தரையிறங்குவதற்குப் பயன்படுத்தும் அதன் நான்கு கால்களும் கீழ்நோக்கி இருக்காமல், பக்கவாட்டில் நோக்கியிருக்கும். அதை எப்படி கீழ்நோக்கித் திருப்பி, தரையிறக்குவார்கள்? படக்குறிப்பு, ஒருபுறத்தில் ராக்கெட்டின் எரிபொருள் எரியும்போது மறுபுறத்தில் விண்கலத்திற்கு தள்ளுவிசை கிடைக்கும். அதற்குப் பின்னால் இருப்பதும் ராக்கெட் தொழில்நுட்பம்தான். வைரத்தை வைரத்தால் அறுப்பது போல, ராக்கெட் உதவியுடன் விண்வெளிக்கு ஏவப்பட்ட சந்திரயான் விண்கலத்தை, அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலாவிலும் தரையிறக்கப் போகிறார்கள். இதை ஓர் எளிமையான சான்றோடு கூற முடியும். தோட்டத்தில் நீர் பாய்ச்சும்போது குழாயில் இருந்து தண்ணீர் படுவேகமாக வரும். அப்போது, அதற்கு எதிர்புறத்தில் குழாயைப் பிடித்திருப்பவர் கைகளில் ஒரு தள்ளுவிசை உணரப்படும். அதுதான் ராக்கெட் தத்துவம். ஒரு புறத்தில் ராக்கெட்டின் எரிபொருள் எரியும்போது மறுபுறத்தில் தள்ளுவிசை கிடைக்கும். சந்திரயான் விண்கலத்தில் பக்கவாட்டில் தெரியும் கால்களில் சிறு ராக்கெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். அவற்றை இயக்கினால் அதற்குப் பின்புறத்தில், அதாவது விண்கலத்தின் மேல் பகுதியில் ஒரு தள்ளுவிசை கிடைக்கும். படக்குறிப்பு, தள்ளுவிசை காரணமாக வேகம் படிப்படியாகக் குறைந்து நிலாவிலிருந்து 7.4 கி.மீ தூரத்திற்கு வரும்போது அதன் வேகம் மணிக்கு வெறும் 1200 கி.மீ. என்ற அளவுக்கு குறையும். அப்போது முன்னோக்கிச் செல்லும் விண்கலத்தின் வேகம் குறையும். அப்படி வேகம் குறைந்தால் அது மென்மையாகத் தரையிறங்கும். முப்பது கி.மீ தொலைவில் நிலவைச் சுற்றி வரும்போது சந்திரயானின் வேகம் மணிக்கு 6000 கி.மீ. இந்தத் தள்ளுவிசை காரணமாக வேகம் படிப்படியாகக் குறைந்து நிலாவிலிருந்து 7.4 கி.மீ தூரத்திற்கு வரும்போது அதன் வேகம் மணிக்கு வெறும் 1200 கி.மீ. என்ற அளவுக்கு குறையும். இந்த மொத்த நிகழ்வும் நடந்து முடிய 10 நிமிடங்கள் ஆகும். ஆக, தரையிறங்குவதற்கான அந்த 15 நிமிடங்களில் 10 நிமிடங்கள் முடிந்துவிட்டது. அடுத்த ஐந்து நிமிடங்களில் சந்திரயான் ஏழு கட்டங்களை வெற்றிகரமாகத் தாண்டியாக வேண்டும். இரண்டாவது கட்டம்: நிலாவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்த கூகுள் மேப் படக்குறிப்பு, முடிவு செய்யப்பட்ட இடத்தில் தரையிறங்குவதற்கான பாதையில் சரியாகச் செல்கிறதா அல்லது பாதையைச் சிறிதளவு மாற்றி, சரிசெய்ய வேண்டுமா என்ற முடிவை இரண்டாவது கட்டத்தில் எடுப்பார்கள். இரண்டாவது கட்டத்தில் 7.4 கி.மீ உயரத்தில் இருந்த விண்கலத்தை படிப்படியாகக் குறைத்து 6.8 கி.மீ உயரத்திற்குக் கொண்டு வருவார்கள். இந்தக் கட்டத்தில் இரண்டு முக்கியமான விஷயங்கள் நடக்கின்றன. அதில் முதலாவதாக பக்கவாட்டில் பார்த்தவாறு இருக்கும் விண்கலத்தின் கால்களை தரையிறங்க வசதியாக கீழ்நோக்கித் திருப்ப வேண்டும். பக்கவாட்டில் இருக்கும் கால்களை சுமார் 50 டிகிரி அளவுக்குத் திருப்புவார்கள். இரண்டாவதாக, முடிவு செய்யப்பட்ட இடத்தில் தரையிறங்குவதற்கான பாதையில் சரியாகச் செல்கிறதா அல்லது பாதையைச் சிறிதளவு மாற்றி, சரிசெய்ய வேண்டுமா என்ற முடிவை இந்தச் சூழலில்தான் எடுப்பார்கள். நாம் கார் ஓட்டும்போது வழியைத் தெரிந்துகொள்ள கூகுள் மேப்பை பயன்படுத்துவது போலத்தான் இதுவும். விண்கலத்தில் இருக்கும் செயற்கை நுண்ணறிவு கருவி அதற்கான பணிகளைச் செய்யும். அதை எப்படிச் செய்யும்? மொபைல்களில் முகத்தை அடையாளம் கண்டு அன்லாக் செய்துகொள்வதற்காகப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைப் போலவே, விண்கலத்தின் செயற்கை நுண்ணறிவு கருவியில் ஒரு தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. அந்தத் தொழில்நுட்பத்தில் ஏற்கெனவே தரையிறங்கும் பகுதியைப் படம்பிடித்து பதிவேற்றியுள்ளார்கள். படக்குறிப்பு, படங்களை ஒப்பிட்டு விண்கலத்தின் வழித்தடப் பாதையை முடிவு செய்து செயற்கை நுண்ணறிவு கணினி விண்கலத்தை இயக்கும். இந்த இரண்டாவது கட்டத்தில் விண்கலத்தின் செயற்கை நுண்ணறிவு கருவி அதன் பாதையைப் படம்பிடித்துக்கொண்டே செல்லும். அது எடுக்கும் படங்களை, அதில் பதிவேற்றி வைத்துள்ள படங்களோடு ஒப்பிட்டு, சரியான பாதையைக் கண்டறிந்து செல்லும். படங்களை ஒப்பிட்டு விண்கலத்தின் வழித்தடப் பாதையை முடிவு செய்து அந்த செயற்கை நுண்ணறிவு கணினி விண்கலத்தை இயக்கும். மூன்றாவது கட்டம்: விண்கலத்தின் ‘ராக்கெட் பிரேக்’ தற்போது நிலாவின் மேற்பரப்பில் இருந்து 800 மீட்டர் உயரத்திற்கு விண்கலம் இருக்கும் வகையில் அதைக் கீழே இறக்குவதுதான் மூன்றாவது கட்டம். பக்கவாட்டில் 50 டிகிரிக்கு திருப்பப்பட்ட விண்கலத்தின் கால்களை நேராக கீழ்நோக்கி இருக்கும் வகையில் திருப்புவதுதான் இந்தக் கட்டத்தில் செய்யப்படும் முதல் விஷயம். சைக்கிளில் பிரேக் பிடித்தால் வேகம் குறைவதைப் போல், ராக்கெட்டின் இஞ்சினை முன்புறமாக இயக்கினால் விண்கலத்தின் வேகம் படிப்படியாகக் குறைந்துகொண்டே வரும். மணிக்கு 1200 கி.மீ வேகத்தில் சென்றுகொண்டிருந்த விண்கலம், 800 மீட்டர் உயரத்திற்கு வரும்போது, அதன் முன்னோக்கிச் செல்லும் வேகம் பூஜ்ஜியமாகிவிடும். நான்காவது கட்டம்: அடி மேல் அடி வைத்து நகரும் விக்ரம் லேண்டர் படக்குறிப்பு, விண்கலம் அடி மேல் அடி வைத்து 800 மீட்டர் உயரத்தில் இருந்து 150 மீட்டர் உயரத்திற்கு வந்து சேரும். இந்தக் கட்டத்தில் விண்கலத்தின் ராக்கெட் விசையைக் குறைத்துவிடுவார்கள். விண்கலம் அடி மேல் அடி வைத்து 800 மீட்டர் உயரத்தில் இருந்து 150 மீட்டர் உயரத்திற்கு வந்து சேரும். அப்படி வந்து சேர்ந்ததும், 22 நொடிகளுக்கு அந்தரத்தில் அப்படியே மிதக்கும். இந்தச் சூழ்நிலையில்தான் விண்கலத்தில் இருக்கும் ‘இடர் உணர் ஆபத்து தவிர் கேமராக்கள்’ வேலை செய்யத் தொடங்கும். தரையிறங்கும் விண்கலத்தின் நான்கு கால்களில் ஒன்று பாறை மேல் பட்டாலோ, குழிக்குள் சென்றாலோ விண்கலம் சாய்ந்துவிடும். சரிவில் தரையிறங்கினால் கவிழ்ந்து தலைகுப்புற விழுந்துவிடக்கூடும். இத்தகைய இடர்கள் இல்லாத இடத்தைக் கண்டறிய வேண்டும். அத்தகைய இடத்தைத் தேர்வு செய்யக்கூடிய செயற்கை நுண்ணறிவு கருவி சந்திரயான் 3இன் கணினியில் பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டத்தில்தான் நிலாவின் எந்தப் பகுதியில் தரையிறங்குவது என்பதைத் துல்லியமாக அந்த விண்கலம் முடிவு செய்யும். நிலா தனது ஈர்ப்புவிசையால் விண்கலத்தைப் பிடித்து இழுக்கும். அதற்கு சரிசமமாக விண்கலத்தின் கால்களில் உள்ள ராக்கெட்டுகள் மேல்நோக்கிய தள்ளுவிசையைக் கொடுக்கும் வகையில் இயங்கும். இதன்மூலம் விண்கலம் கீழேயும் விழாமல் மேலேயும் செல்லாமல் அந்தரத்தில் இருக்கும். அப்போது கீழே இருக்கும் பகுதிகளில், பெரிய குழிகள் மட்டுமின்றி சின்னச் சின்ன குழிகள், சிறு சிறு கற்கள் உட்பட அனைத்தையும் அதனால் மிகத் துல்லியமாக ஆராய முடியும். இப்படியே பக்கவாட்டில் நகர்ந்தபடி ஆராய்ந்து துல்லியமாக எந்த இடத்தில் தரையிறங்க வேண்டும் என்பதை முடிவு செய்யும். ஐந்தாவது கட்டம்: நிலாவின் மேற்பரப்பை நெருங்கும் விண்கலம் படக்குறிப்பு, இந்த முறை விண்கலத்தில் லேசர் டாப்லர் வெலாசிமீட்டர் என்ற புதிய கருவியை இஸ்ரோ இணைத்துள்ளது. நிலாவின் மேற்பரப்பில் இருந்து 150 மீட்டரில் இருந்த விக்ரம் தரையிறங்கி கலன், 60 மீட்டர் உயரத்திற்கு கீழே இறங்குவதுதான் ஐந்தாவது கட்டம். இப்போது எந்த இடத்தில் தரையிறங்க வேண்டுமோ அந்த இடத்தில் விண்கலம் இருக்கிறது. இந்த நிலையில், கீழ்நோக்கி இறங்கக்கூடிய ராக்கெட்டின் விசையைக் கொஞ்சம் குறைத்தால் என்ன நடக்கும்? நிலாவினுடைய ஈர்ப்புவிசையின் கை ஓங்கி, மெல்ல மெல்ல காற்றில் மிதந்து விழுகும் இறகைப் போல விண்கலம் கீழ்நோக்கிச் செல்லும். இந்த முறை விண்கலத்தில் லேசர் டாப்லர் வெலாசிமீட்டர் என்ற புதிய கருவியை இஸ்ரோ இணைத்துள்ளது. இந்தக் கருவி நிலாவின் தரையை நோக்கி ஒரு லேசர் கற்றையை அனுப்பும். அந்த லேசர் கற்றை திரும்பி மேல்நோக்கி வரும். அதை உணர்ந்து, விண்கலம் எவ்வளவு வேகத்தில் கீழ்நோக்கிச் செல்கிறது என்பதை கணத்திற்கு கணம் கணக்கிடும். அதைப் பொருத்து, கூடுதல் வேகம் இல்லாமல் தேவைப்படும் வேகத்தில் தரையிறங்கும் வேலையை அந்தக் கணினி செய்யும். அந்த அளவுக்கு ராக்கெட்டை நுணுக்கமாக இயக்கும் வேலையை செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினி செய்யும். ஆறாவது கட்டம்: விண்கலத்தை கீழே விழாமல் தடுக்கும் எளிய நுட்பம் படக்குறிப்பு, அதிக வேகத்தில் கீழே இறங்கினால் மென்மையாகத் தரையிறங்காமல் விழுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதைத் தவிர்க்க இஸ்ரோ ஒரு புதுமையான நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. அதன்பிறகு அறுபது மீட்டர் உயரத்தில் 10 மீட்டர் உயரத்திற்கு விண்கலத்தைக் கீழே இறக்குவதுதான் ஆறாவது கட்டம். இந்தச் சூழலில் பயன்படுவதற்காக விண்கலத்தில் மற்றுமொரு சிறப்பம்சத்தை விஞ்ஞானிகள் வைத்துள்ளார்கள். விண்கலத்தின் கீழ்பகுதியில் தரையைப் பார்த்தவாறு ஒரு கேமரா பொருத்தப்பட்டிருக்கும். அது தொடர்ச்சியாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டே இருக்கும். அது எதற்காக? இதை ஒரு எளிய சான்றுடன் விளக்கலாம். நமக்கு எதிரே ஒரு பேருந்து வந்துகொண்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம். அது தொலைவில் இருக்கும்போது அதன் உருவம் மிகவும் சிறியதாகத் தெரிகிறது. ஆனால், பேருந்து நம்மை நெருங்க நெருங்க, அந்த உருவம் பெரிதாகிக் கொண்டே வரும் அல்லவா! பேருந்தின் உருவம் எவ்வளவு வேகமாக நம் கண்களுக்குப் பெரிதாகப் புலப்படுகிறது என்பதை வைத்து பேருந்தின் வேகத்தைக் கணக்கிட முடியும். அதேபோல, விண்கலம் கீழ்நோக்கிச் செல்லும்போது அது எடுக்கும் புகைப்படங்களில் நிலவின் தரைப்பரப்பு எவ்வளவு வேகமாகப் பெரிதாகிறது என்பதை அடிப்படையாக வைத்து எவ்வளவு வேகத்தில் விண்கலம் கீழ்நோக்கி வருகிறது என்பதைக் கணக்கிடலாம். ஒன்றுக்கு இரண்டான பாதுகாப்பு என்பதே இதன் நோக்கம். அதிக வேகத்தில் கீழே இறங்கினால் மென்மையாகத் தரையிறங்காமல் விழுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதைத் தவிர்க்கவே இத்தகைய புதுமையான நுட்பங்கள். ஏழாவது கட்டம்: விண்கலத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் திக்... திக்... நிமிடங்கள் படக்குறிப்பு, நிலாவின் தரைப்பரப்பு முழுக்க மிகவும் மெல்லிய மண் துகள்கள் நிறைந்திருக்கும். இப்போது நிலவின் தரைப்பரப்பில் இருந்து வெறும் 10 மீட்டர் உயரத்தில் விண்கலம் இருக்கிறது. இந்த நேரத்தில் ராக்கெட் அனைத்தையும் ஆஃப் செய்துவிட்டு விண்கலத்தை நிலத்தில் கல் விழுவதைப் போல் தொப்பென விழ வைப்பார்கள். இதுதான் ஏழாவது கட்டம். தரையிறங்கும் கடைசி நொடி வரை ஏன் ராக்கெட்டுகளை இயக்கவில்லை? ஏனெனில், நிலாவின் தரைப்பரப்பு முழுக்க மிகவும் மெல்லிய மண் துகள்கள் நிறைந்திருக்கும். தரை வரைக்கும் ராக்கெட்டை இயக்கிக்கொண்டே இறங்கினால், அந்த மண் துகள்கள் புழுதியாக மேலெழும்பும். அப்படி எழும்பும் தூசுகள் விண்கலத்தின் மேற்பரப்பில் உள்ள சூரியத் தகடுகளில் படிந்து சூரிய ஒளியைத் தடுத்து மின்சாரமே உற்பத்தி செய்ய முடியாத அபாயம் ஏற்பட்டுவிடலாம். அதைத் தவிர்ப்பதற்காகவே இந்த யுக்தி. அப்படி விழும்போது நொடிக்கு 2 மீட்டர் என்ற வேகத்தில் விழ வைக்கவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. ஆனால் தவறுதலாக நொடிக்கு 3 மீட்டர் என்ற வேகத்தில் விழுந்தாலும்கூட அதைத் தாங்கக்கூடிய அளவுக்கு தரையிறங்கி கலனின் கால்களை அமைத்துள்ளார்கள். முதல் கட்டம் முடிந்த பிறகு, இரண்டாவது கட்டத்தில் 800 மீட்டர் உயரத்தில் இருந்த விண்கலம் ஏழாவது கட்டத்தில் வெறும் பத்து மீட்டர் உயரத்திற்கு வந்து சேர வெறும் 4:30 நிமிடங்களே ஆகும். இந்த நேரத்தைத்தான் விண்கலத்தின் “திக்... திக்... நிமிடங்களாக” விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். படக்குறிப்பு, ஊர்திக்கலன் வெளியே வந்ததும் அதன் தாய்க்கலனான தரையிறங்கி கலனை புகைப்படம் எடுக்கும். தாய்க்கலன் ஊர்திக்கலனை புகைப்படம் எடுக்கும். இந்த விண்கலத்திற்கு வாழ்வா சாவா என்று அதன் தலையெழுத்தை தீர்மானிக்கப் போகும் நிமிடங்கள் அவை. இந்த நேரத்தில் விண்கலம் எப்படி இயங்க வேண்டும், பக்கவாட்டில் நகர வேண்டுமா, கீழே எவ்வளவு வேகத்தில் இறங்க வேண்டும் என அனைத்தையும் விண்கலத்தின் உள்ளே இருக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு கணினிதான் தீர்மானிக்கும். அந்த நேரத்தில் விண்கலத்தின் தலையெழுத்து அந்த செயற்கை நுண்ணறிவு கையில்தான். எட்டாவது கட்டம்: கண்கொள்ளா காட்சியை காணக் காத்திருக்கும் உலகம் ஒருவழியாக தரையிறங்கி கலன் கீழே இறங்கிவிட்டது. ஆனாலும் விழுந்த வேகத்தில் தூசுகள் மேலே எழும்பியிருக்கும். அவை அடங்கும்வரை ஏதும் செய்யாமல் விண்கலம் அப்படியே இருக்கும். அனைத்தும் அடங்கிய பிறகு, கங்காரு தனது வயிற்றுக்குள் குட்டியை வைத்திருப்பது போலவே, வயிற்றுக்குள் தரையிறங்கி கலன் வைத்திருக்கும் ஊதிக்கலனை வெளியே கொண்டு வரும். ஊர்திக்கலன் வெளியே வந்ததும் அதன் தாய்க்கலனான தரையிறங்கி கலனை புகைப்படம் எடுக்கும். தாய்க்கலன் ஊர்திக்கலனை புகைப்படம் எடுக்கும். அந்த புகைப்படங்களின் கண்கொள்ளாக் காட்சியைக் காண இந்தியா மட்டுமின்றி உலகமே காத்திருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/c90jpn908zxo
  19. ஆகா, ஒரு குறும்பரிடம் மாட்டிக் கொண்டேனே!!
  20. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுக்கு நிதி கிடைக்கவில்லை! நிதியை வழங்க பின்னடிக்கிறதா அரசாங்கம் ? மீளவும் வழக்கு Published By: VISHNU 18 AUG, 2023 | 09:48 AM முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளுக்கான நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு இதுவரை கிடைக்கப் பெறாத காரணத்தினால் எதிர்வரும் 21.08.2023 அன்று திட்டமிடப்பட்டிருந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வு தொடர்பிலான வழக்கு விசாரணைகள் வியாழக்கிழமை (17) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சட்டத்தரணி வி கே நிரஞ்சன், தொல்பொருள் திணைக் களத்தினுடைய முல்லைத்தீவு வலய பொறுப்பதிகாரி ஆர் ஜி ஜே பி குணதிலக, கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் எம். அஜந்தன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் முல்லைத்தீவு மாவட்ட தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி உள்ளிட்ட தரப்பினர் வழக்கு விசாரணைகளில் ஆஜராகியிருந்தனர். இதன்போது தொல்பொருள் திணைக்களத்தினுடைய முல்லைத்தீவு வலய பொறுப்பதிகாரி ஆர் ஜி ஜே பி குணதிலக அவர்களால் குறித்த அகழ்வு பணிக்கு ஆறு வாரங்களுக்கு 1.2 மில்லியன் ரூபா பாதீடு நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கான நிதிகள் கிடைக்கப்பெறாமல் அதனுடைய வேலைகளை ஆரம்பிக்க முடியாது என்று சட்ட வைத்திய அதிகாரி அவர்களினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னணியில் உரிய நிதிகள் கிடைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக 15 நிமிடங்கள் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் நீதிமன்றம் ஆரம்பமாகி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த வழக்கில் சட்டத்தரணி வி கே நிரஞ்சன் அவர்கள் மாவட்ட செயலகத்திற்கு இதுவரை நிதி கிடைக்கவில்லை என்பதை தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததன்படி 21 ஆம் திகதி அகழ்வுப்பணிகளை முன்னெடுக்க முடியாது என்றும் அதன் தொடர்ச்சியாக இந்த அகழ்வுப்பணிகள் தொடர்பாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் குறித்த அகழ்வு பணி இடத்திலே முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைகள் தொடர்பாக பல்வேறு திணைக்களங்கள் இதில் கலந்துரையாடுவதற்கு இந்த இடத்தில் இல்லாத காரணத்தினால் அவர்களையும் அடுத்த தவணையில் அழைத்து உரிய தீர்வுகளை எட்டி இந்த அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா அவர்களால் நீதிமன்றத்திற்கு கருத்தை முன்வைத்தார். இதன் அடிப்படையில் இலங்கை மின்சார சபை, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபையினுடைய செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினுடைய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அரசாங்க அதிபர் அல்லது மேலதிக அரசாங்க அதிபர் அல்லது நிதி தொடர்பாக கையாளக்கூடிய அதிகாரி, தொழில்நுட்ப உத்தியோகத்தர், நில அளவை திணைக்களத்தினுடைய அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், தொல் பொருள் திணைக்கள அதிகாரிகள், கொக்குளாய் பொலிஸ் நிலைய அதிகாரிகள், தடயவியல் பொலிசார், காணாமல் போனோர் அலுவலகத்தினுடைய பிரதிநிதிகள், கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியினுடைய கிராம அலுவலர் உள்ளிட்ட தரப்பினர் அனைவரையும் அடுத்த தவணையில் மன்றில் பிரசன்னமாக உத்தரவிடுமாறும் அவர்கள் அனைவருடனும் கலந்துரையாடி உறுதியான தீர்மானத்தை எடுத்து அகழ் பணிகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார். சட்டத்தரணி நிரஞ்சன் அவர்கள் குறித்த வழக்கில் அகழ்வு பணியுடன் தொடர்புடைய பொறுப்பு வாய்ந்த அனைத்து அதிகாரிகளையும் அழைத்து உரிய முடிவை எடுத்து மழைக்கு முன்பதாக இந்த அகழ்வு பணியினை விரைவுபடுத்தி அகழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதினால் அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதனடிப்படையில் குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 31.08.2023 அன்றுக்கு தவணையிட்டு அன்றைய தினம் (31) அனைத்து தரப்பினரையும் நீதிமன்றில் முன்னிலையாக கட்டளை ஆக்கினார். https://www.virakesari.lk/article/162614
  21. எனக்கு மெய்யாலுமே சந்தேகமா இருந்ததால் கேட்டேன். மற்றும்படி சுவியண்ணை வருத்தம் தெரிவிக்கத் தேவையில்லை.
  22. தற்போது வரை 603 பேர் பார்த்துள்ளார்களாம் அண்ணை. மூவர் கருத்தெழுதி ஊக்கப்படுத்தினாலும் கணிசமானோர் வாசித்திருக்கிறார்கள்.
  23. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி : அகழ்வுப் பணிக்கான செலவு அறிக்கை சமர்ப்பிப்பு முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பார்த்திபன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்தப் பகுதியில் அகழ்வுப் பணிக்கான செலவு தொடர்பான அறிக்கையை தொல்பொருள் திணைக்களத்தினர் இன்று மன்றில் சமர்ப்பித்தனர். இந்நிலையில், நிதி கையாளுகை தொடர்பில் மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை அதிகாரிகள் மன்றில் ஆஜராகாதமையினால், அவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொக்குத்தொடுவாயில் கடந்த மாதம் 29 ஆம் திகதி சில மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. https://thinakkural.lk/article/268940
  24. சந்திரயான் -3 விண்கலம்: லேண்டர் தனியாக பிரிந்தது..! 17 AUG, 2023 | 01:57 PM சந்திரயான்-3' விண்கலம் 40 நாள் பயணமாக புவி சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவு சுற்றுவட்டப்பாதையின் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், 'சந்திரயான்-3' விண்கலத்தை கடந்த மாதம் 14-ந் தேதி நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக வெற்றிகரமாக அனுப்பியது. விண்கலம் 40 நாள் பயணமாக புவி சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவு சுற்றுவட்டப்பாதையின் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதனை பெங்களூருவில் உள்ள தரைகட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். தற்போதைய நிலையில், 'சந்திரயான்-3' 100 கிலோ மீட்டர் தொலைவிலான நிலவு அடுக்குக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் திட்டமிட்டபடி 23-ந் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் 'சந்திரயான்-3' விண்கலம் தரையிறங்க இருக்கிறது. https://www.virakesari.lk/article/162567

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.