Everything posted by ஏராளன்
-
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது!
கெஹல்பத்ர குழுவை இந்தோனேசியாவில் கைது செய்த அதிகாரிகள்! வெளியாகிய முழுமையான காணொளி இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக குழு தலைவர், கெஹல்பத்ர குழு தொடர்பிலான மற்றுமொரு காணொளி வெளியாகியுள்ளது. இந்தோனேசிய பாதுகாப்பு தரப்புகள், இன்டர்போல் உள்ளிட்ட குழு எவ்வாறு அவர்களை கைது செய்தனர் என்பதை குறித்த காணொளி ஜாக்லின்_சாப்பர்ஸ் என்ற எக்ஸ் தள பதிவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சொகுசு விடுதியொன்றில் தங்கியிருந்த குழுவை பாதுகாப்பு குழு கைது செய்தமை இதன்மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. https://tamilwin.com/article/full-video-the-arrest-of-the-kehalbhadra-indonesia-1757401423#google_vignette
-
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025
17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம் 17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று (09) ஆரம்பமாகின்றது. தொடரின் ஆரம்ப ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி ஹொங்கொங் அணியை எதிர்கொள்கிறது. செப்டம்பர் 28 ஆம் திகதி வரை நடைபெறும் இந்த தொடரில் 8 அணிகள் ஆசிய கிண்ணத்திற்காக போட்டியிடவுள்ளன. இலங்கை அணி எதிர்வரும் சனிக்கிழமை பங்களாதேஸ் அணிக்கு எதிராக தமது முதல் போட்டியை ஆரம்பிக்கவுள்ளது. குழு நிலை போட்டிகளில் எதிர்வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவுள்ளன. திட்டமிடப்பட்ட 19 போட்டிகளில், இறுதிப் போட்டி உட்பட 11 போட்டிகள் டுபாயில் நடைபெறவுள்ளதுடன் எஞ்சிய எட்டு போட்டிகள் அபுதாபியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சம்பியனான இந்தியா, எட்டு கிண்ணங்களை ஆசிய கிண்ண வரலாற்றில் பெற்றுள்ள அணியாகும். இலங்கை 6 தடவைகளும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் 2 தடவைகளும் கிண்ணம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmfbwx9pl00b9o29nukep9rc9
-
அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளுங்கள் - இந்தியா இலங்கையிடம் வலியுறுத்தல்
அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளுங்கள் - மாகாணசபைத்தேர்தல்களை உடன் நடத்துமாறு பேரவையில் இந்தியா இலங்கையிடம் வலியுறுத்தல் Published By: Vishnu 09 Sep, 2025 | 03:39 AM (நா.தனுஜா) நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துதல் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளல் என்பவற்றுக்கு நடவடிக்கை எடுக்குமாறு பேரவையில் இலங்கையை வலியுறுத்திய இந்தியா, சகலரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மற்றும் நியாயமான நல்லிணக்க செயன்முறை என்பன நிலையான அமைதிக்கு வழிகோலும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தோடு சகல தரப்பினரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மற்றும் நியாயமான நல்லிணக்க செயன்முறை என்பன நிலையான அமைதிக்கு வழிகோலும் எனவும ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமானது. நேற்றைய தொடக்க அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதத்தில் கருத்துரைத்த இந்தியப் பிரதிநிதி, 2009 ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் நாட்டைக் மீளக்கட்டியெழுப்புவதற்கும், மக்களை மீள்குடியமர்த்துவதற்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவு வழங்கிவந்ததாக சுட்டிக்காட்டினார். அதேபோன்று 2022 ஆம் ஆண்டு இலங்கை மிகத்தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் இந்தியாவினால் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பில் நினைவுகூர்ந்த அவர், 2024 இல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டமையும், 2025 ஏப்ரலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமையும் இருநாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு நல்லுறவைக் காண்பிப்பதாகக் குறிப்பிட்டார். அதேவேளை இலங்கையின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையுடன் தமிழ்மக்களின் அபிலாஷைகளான சமத்துவம், நீதி மற்றும் கௌரவத்தை இந்தியா எப்போதும் வலியுறுத்திவருவதாகத் தெரிவித்த அவர், நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துமாறும், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்துவதாகக் கூறினார். அத்தோடு சகல தரப்பினரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மற்றும் நியாயமான நல்லிணக்க செயன்முறை என்பன நிலையான அமைதிக்கு வழிகோலும் எனவும் அவர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/224580
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் 8 ஆம் திகதி ஆரம்பம்
மனிதப்புதைகுழி அகழ்வு சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவேண்டும் - பேரவையில் உறுப்புநாடுகள் வலியுறுத்தல் Published By: Vishnu 09 Sep, 2025 | 01:31 AM (நா.தனுஜா) இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவேண்டும் எனவும், தனிநபர்களை இலக்குவைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் எனவும் பிரிட்டன், நியூஸிலாந்து, சுவிட்ஸர்லாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பேரவையின் உறுப்புநாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமானது. நேற்றைய தொடக்க அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதன்படி தேசிய நல்லிணக்கத்தையும், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிப்படுத்துவதற்கான உள்ளகக் கட்டமைப்புக்களின் இயலுமையையும் கட்டியெழுப்புவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டைப் பெரிதும் வரவேற்பதாகத் தெரிவித்த ஜப்பான், வட-கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பில் பாராட்டை வெளிப்படுத்தியது. அதேபோன்று நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அறிவித்தது. அதேவேளை நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டைப் பாராட்டிய பிரிட்டன், மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தியது. அத்தோடு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சிறுபான்மையின மக்களை இலக்குவைத்து ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவது குறித்தும், பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், இன்னமும் அச்சட்டம் நீக்கப்படாமை குறித்தும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. அதேபோன்று தாம் இலங்கையின் நீண்டகால நட்புறவு நாடாகத் திகழ்வதாகத் தெரிவித்த அவுஸ்திரேலியா, மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும், நிலைமாறுகால நீதியை உறுதிசெய்வதற்கும் இலங்கையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டது. அத்தோடு நபர்களைத் தன்னிச்சையாகக் கைதுசெய்வதற்கும், தடுத்துவைப்பதற்கும் பயன்படுத்தப்படும் பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் எனவும், நிகழ்நிலைக்காப்புச்சட்டம் திருத்தியமைக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியது. மேலும் நியூஸிலாந்து, சுவிட்ஸர்லாந்து மற்றும் மொன்டெனேக்ரோ ஆகிய நாடுகள் இலங்கையில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டியது அவசியம் எனவும், சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படவேண்டும் எனவும் வலியுறுத்தின. https://www.virakesari.lk/article/224579
-
விசா விதிகளை மாற்றும் டிரம்ப்: அமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு புதிய சிக்கல்
பட மூலாதாரம், Getty Images 8 செப்டெம்பர் 2025 அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கும் மற்றும் அங்கு செல்லத் திட்டமிடும் இந்திய மாணவர்கள், எதிர்காலத்தில் அதிக சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம். அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, எஃப் 1 (F1) மாணவர் விசாக்களுக்கு விதிகளை மாற்ற முன்மொழிந்திருப்பது தான் இதற்குக் காரணம். முன்மொழியப்பட்ட மாற்றங்கள் என்னென்ன? அவை இந்திய மாணவர்களை எவ்வாறு பாதிக்கும்? என்பதைத் தெரிந்துகொள்வோம். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மாதிரி படம் புதிய மாற்றங்கள் என்னென்ன ? பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் விசாவைத் தவறான முறையில் பயன்படுத்துவதைத் தடுக்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் புதிய விதிகளை முன்மொழிந்துள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. பொதுவாக, அமெரிக்காவில் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு எஃப் 1 (F1) விசா வழங்கப்படுகிறது. பரிமாற்றத் திட்டங்கள் மூலம் செல்லும் மாணவர்களுக்கு ஜே1 (J1) விசா வழங்கப்படுகிறது. இதுவரை, இந்த மாணவர் விசாக்கள் 'படிப்பு தொடரும் வரை அனுமதி' (duration of status) என்ற முறையில் இருந்தன. அதாவது, ஒரு மாணவர் அமெரிக்காவில் படிப்பைத் தொடரும் வரை, அவர்களின் நிலை 'மாணவர்' என்றே இருக்கும். அவர்கள் அனைத்து விசா விதிகளையும் பின்பற்றும் வரை அமெரிக்காவில் தங்கலாம். இப்போது, அந்த முறையை நீக்க ஒரு திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. மாணவர் விசாவின் காலம் 4 ஆண்டுகளாக குறைக்கப்படவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மாதிரி படம் குறிப்பிட்ட அந்த கால அளவுக்குப் பிறகு, ஒரு மாணவர் அமெரிக்காவில் தொடர்ந்து தங்க விரும்பினால், 'படிப்பு தொடரும் வரை அனுமதி' எனும் நிலையை நீட்டிக்க விண்ணப்பிக்க வேண்டும். இல்லையெனில், அமெரிக்காவை விட்டு வெளியேறி, மீண்டும் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். இதனால், இளங்கலைப் பட்டம் முடித்து, முதுகலை அல்லது முனைவர் பட்டத்தைத் தொடர விரும்பும் மாணவர்கள், புதிய விசா செயல்முறையைத் தொடங்க வேண்டியிருக்கும். மற்றொரு முக்கிய மாற்றம் என்னவென்றால், இளங்கலை மாணவர்கள் சேர்க்கைக்குப் பிறகு உடனடியாக வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற முடியாது. அதாவது, எஃப் 1 விசா பெற்ற மாணவர்கள், முதல் ஆண்டு முடிந்த பிறகே வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற முடியும். பட்டதாரி மாணவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்தவுடன், தங்கள் பாடத்திட்டத்தையோ அல்லது பல்கலைக்கழகத்தையோ உடனடியாக மாற்ற முடியாது. அவர்களுக்கு விசா வழங்கப்பட்ட போது, I-20 படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்குச் செல்லவேண்டும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரே மட்டத்தில் பல பட்டங்களைப் பெறுவது இனி எளிதல்ல. அதாவது, அமெரிக்காவை விட்டு வெளியேறி புதிய விசாவிற்கு விண்ணப்பிக்காமல், ஒரு பாடத்தில் முதுகலைப் பட்டம் முடித்து, பின்னர் வேறு பாடத்தில் முதுகலைப் பட்டத்தை தொடருவது இனி சாத்தியமில்லை. மேலும், விருப்ப செயல்முறை பயிற்சி (OPT) முடிந்த பிறகு மாணவர்கள் தங்கக்கூடிய காலமும் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விருப்ப செயல்முறை பயிற்சி (OPT) முடிந்த பிறகு, மாணவர்கள் 60 நாட்கள் அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்பட்டனர். இப்போது, அந்த காலத்தை 30 நாட்களாகக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது. மொழிப் படிப்புகளுக்கான அனுமதி 24 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மாதிரி படம் இந்திய மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? ஓபன் டோர்ஸ் தரவுகளின்படி, தற்போது அமெரிக்காவில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் உள்ளனர். இவர்களில் 3,30,000 க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள். டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்த விதிகள் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் வரை, மாணவர்களுக்கு எந்தவிதமான பிரச்னையும் ஏற்படாது. ஆனால், அந்த விதிகள் அமலுக்கு வந்தவுடன், மாணவர்களின் விசா காலம் குறைக்கப்படலாம். பல்கலைக் கழகங்களை மாற்ற முடியாது என்ற விதி, இந்த ஆகஸ்ட் மாதம் சேர்க்கை பெறும் (இலையுதிர்கால சேர்க்கை) மாணவர்களுக்கு பொருந்தும். அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் முடித்த பிறகு வேலைவாய்ப்பு அல்லது ஹெச்-1பி (H-1B) விசா கிடைக்காத மாணவர்கள் பலரும் 'இரண்டாவது முதுகலைப் படிப்பு' படிப்பதன் மூலம் அமெரிக்காவில் தொடர்ந்து வசிக்கும் வாய்ப்பை பெறுகிறார்கள். புதிய மாற்றங்கள் அமலாகும் பட்சத்தில், அவ்வாறு செய்ய முடியாது. 5–6 ஆண்டுகள் ஆகும் பிஎச்டி (முனைவர் பட்ட படிப்பு) போன்ற படிப்புகளுக்கு, எப் -1 (F-1) விசா பெற்ற மாணவர்கள் 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசா செயல்முறையை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதில், விசா கட்டணம் செலுத்துதல், பயோமெட்ரிக்ஸ் முறையில் பதிவு செய்தல் மற்றும் நிதி ஆதாரத்தை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பித்தல் ஆகியவை அடங்கும். இந்த மாற்றங்கள் முதலில் 2020-ல் டிரம்ப் அதிபராக இருந்தபோது முன்மொழியப்பட்டன. பைடன் நிர்வாகம் 2021-ல் அதனைத் திரும்பப் பெற்றது. ஆனால் இப்போது, டிரம்ப் நிர்வாகம் அதை மீண்டும் கொண்டு வருகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly12513yqeo
-
ஐ.நா. வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் இலங்கைக்கு ஆதரவாக செயல்படுங்கள் - பன்னாடுகளிடம் அரசாங்கம் கோரிக்கை
ஐ.நா மனித உரிமைகள் பேரவை பக்கச்சார்பின்றி செயற்படவேண்டும் - இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தான், லாவோஸ், எரித்ரியா Published By: Vishnu 09 Sep, 2025 | 01:29 AM (நா.தனுஜா) ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது பக்கச்சார்பின்றி நியாயத்துவத்தின் அடிப்படையில் செயற்படவேண்டும் என பேரவையில் வலியுறுத்திய பாகிஸ்தான், லாவோஸ், எரித்ரியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள், இலங்கையின் உள்ளக செயன்முறைகளைத் தாம் ஆதரிப்பதாகவும் அறிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (8) ஜெனீவாவில் ஆரம்பமானது. தொடக்க அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அங்கு கருத்து வெளியிட்ட லாவோஸ், பாகிஸ்தான், எரித்ரியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு ஆதரவாகக் கருத்துரைத்தனர். குறிப்பாக கடந்த கூட்டத்தொடரில் 57ஃ1 தீர்மானத்தை இலங்கை நிராகரித்திருந்த போதிலும், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டமை தொடர்பில் அவர்கள் பாராட்டு வெளியிட்டனர். அதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது பக்கச்சார்பின்றி நியாயத்துவத்தின் அடிப்படையில் செயற்படவேண்டும் என வலியுறுத்திய அந்நாடுகளின் பிரதிநிதிகள், இலங்கையின் உள்ளக செயன்முறைகளைத் தாம் ஆதரிப்பதாகவும் அறிவித்தனர். அதேபோன்று ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் சம்பந்தப்பட்ட நாட்டின் ஒப்புதலின்றி முன்னெடுக்கப்படுவதாகவும், தற்போது ஐ.நா சபை நிதிப்பற்றாக்குறைக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில், இந்நிதியை வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தமுடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். https://www.virakesari.lk/article/224578
-
சோமரத்ன ராஜபக்ஷவை மீண்டும் சந்திப்பதா? -பெறப்பட்ட தகவல்களை ஆராய்ந்து இன்று தீர்மானம் - காணாமல் போனோர் பற்றிய அலுவலகம்
Published By: Vishnu 09 Sep, 2025 | 03:50 AM (நா.தனுஜா) பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரண தண்டனை அனுபவித்து வரும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை மீண்டும் சந்திப்பதற்கான தேவைப்பாடுகள் உள்ளனவா என்பது குறித்து ஆராயப்படும் என காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக பெயரிடப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ அவரது மனைவி ஊடாக அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார். அதனையடுத்து காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பிரதிநிதிகள் அவரை சிறைச்சாலைக்கு சென்று சந்தித்து அவரிடம் விடயங்களை கேட்டறிந்திருந்தனர்.இருப்பினும் அச்சந்திப்பில் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த மற்றும் நிறைவேற்று அதிகாரி ஜெகநாதன் தற்பரன் ஆகியோர் பங்கேற்றிருக்கவில்லை. இந்நிலையில் அச்சந்திப்பில் பங்கேற்ற காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளால் சோமரத்ன ராஜபக்ஷவிடமிருந்து திரட்டப்பட்ட தகவல்கள் போதுமானவையா என்பது குறித்து இன்றைய தினம் நடைபெறவிருக்கும் அலுவலகத்தின் நிர்வாகசபை கூட்டத்தில் ஆராயப்படுமெனவும் அதன்பின்னர் அவரை மீண்டும் சந்திப்பதா இல்லையா என்பது பற்றி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் மகேஷ் கட்டுலந்த கேசரியிடம் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/224584
-
போட்டியிடும் கடல் நீரில் கோபால்ட்டைப் பெறுவதற்கான இந்தியப் போட்டியைத் தூண்டிவிடும் என்று சீனா அஞ்சுகிறது.
செய்தி தொடர்பான திரிகள் சில கீழே. ஆழ்கடல் சுரங்கம்: கனிமங்களை கைப்பற்றி வல்லரசு நாடுகளை முந்த முயலும் இந்தியா இலங்கையின் கடற்படுக்கையில் உள்ள மிகவும் பெறுமதியான கனிய வளம் - கண் வைத்தது அதானி நிறுவனம் மத்ஸயா 6000: பெருங்கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு செல்லப் போகும் இந்திய விஞ்ஞானிகள் பேட்டரிகளுக்காக உலகமெங்கும் சீனா நடத்தும் கனிம வேட்டை; அதிகரிக்கும் பதற்றம் - பிபிசி கள ஆய்வு
-
கடந்தகால மீறல் வழக்குகளைக் கையாள பிரத்யேக நீதிப்பொறிமுறையை நிறுவுங்கள் - ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் வலியுறுத்தல்
Published By: Vishnu 09 Sep, 2025 | 03:48 AM (நா.தனுஜா) இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் மற்றும் வன்முறைகளாலும், தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கினாலும் உருவான காயங்களை ஆற்றுவதற்கும், அவற்றிலிருந்து மீள்வதற்கும் தற்போது தகுந்த வாய்ப்பு கிட்டியிருப்பதாக பேரவையில் சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், கடந்த தசாப்தங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காக சுயாதீன விசேட சட்டவாதியின் பங்கேற்புடன்கூடிய பிரத்யேக நீதிப்பொறிமுறையை இலங்கை அரசாங்கம் ஸ்தாபிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (8) ஜெனீவாவில் ஆரம்பமானது. கூட்டத்தொடரின் தொடக்கநாள் அமர்வில் ஜெனீவா நேரப்படி காலை 12.15 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 3.45) உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான தனது எழுத்துமூல அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து உரையாற்றினார். அதன்படி கடந்தகால மீறல்கள் மற்றும் வன்முறைகளாலும், தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கினாலும் உருவான காயங்களை ஆற்றுவதற்கும், அவற்றிலிருந்து மீள்வதற்கும் இலங்கைக்கு தற்போது வரலாற்று முக்கியத்தும் மிக்க வகையில் வாய்ப்பு கிட்டியிருப்பதாக சுட்டிக்காட்டிய உயர்ஸ்தானிகர், நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதற்கான சந்தர்ப்பம் அமைந்திருப்பதாகத் தெரிவித்தார். அத்தோடு அண்மையில் தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது முன்னெப்போதுமில்லாத வகையில் சீரான புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக அரசாங்கம் வாக்குறுதியளித்ததாகவும், அவ்வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் அளித்து அவை உரியவாறு நிறைவேற்றப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அதேபோன்று எதிர்வருங்காலங்களில் நாட்டில் நிலையான நல்லிணக்கத்தையும் அமைதியையும் கட்டியெழுப்புவதற்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதி நிலைநாட்டப்படவேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்ட வோல்கர் டேர்க், இலங்கைக்கான விஜயத்தின்போது கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் துயரத்தையும், அத்துமீறல்களையும் அனுபவித்துவருவதாகவும், செம்மணி மனிதப்புதைகுழியைப் பார்வையிடச்சென்றபோது அங்கிருந்தவர்கள் தாம் முகங்கொடுத்துவரும் துன்பத்தைத் தன்னிடம் முறையிட்டதாகவும் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி தெற்கைச்சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவருக்காக நீண்டகாலமாகக் காத்திருப்பதாகத் தன்னிடம் கூறியதாகவும் குறிப்பிட்ட அவர், எனவே தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, நீதி வழங்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தார். அடுத்ததாக கடந்த காலங்களில் அரசு, பாதுகாப்புப்படையினர் மற்றும் ஆயுதக்குழுவான தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட தரப்பினரால் மீறல்கள், வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன என்ற விடயத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் எனக் கூறிய உயர்ஸ்தானிகர், நினைவுகூரல்களில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்பட்டிருப்பது சாதகமான விடயம் எனக் குறிப்பிட்டதுடன் மீள்நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் அவசியமான சட்ட மறுசீரமைப்புக்க்ள மேற்கொள்ளப்படவேண்டும் என்றார். குறிப்பாக சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தை ஸ்தாபிக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்திருப்பதை வரவேற்பதாகவும், அச்செயன்முறையில் சிவில் சமூகம் உள்ளடங்கலாக சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் உள்வாங்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், கடந்த தசாப்தங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காக சுயாதீனமான விசேட சட்டவாதியின் பங்கேற்புடன்கூடிய பிரத்யேக நீதிப்பொறிமுறையை இலங்கை அரசாங்கம் ஸ்தாபிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும் 'பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரயோகம் உடன் இடைநிறுத்தப்படவேண்டும். நிகழ்நிலைக்காப்புச்சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டம், அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான உத்தேச சட்ட வரைவு மற்றும் தனிநபர் தரவுப்பாதுகாப்பு தொடர்பான உத்தேச சட்ட வரைவு என்பன உள்ளடங்கலாக மீறல்களுக்கு வழிவகுக்கக்கூடிய சட்டங்கள் உரிய நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்படவேண்டும். வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் காணி சுவீகரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இயங்கிவரும் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மீதான ஒடுக்குமுறைகளும், அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன. அவை உடனடியாக முடிவுக்குக்கொண்டுவரப்படவேண்டும். அதுமாத்திரமன்றி பாதுகாப்புத்துறை மறுசீரமைக்கப்படவேண்டும். வட, கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கம் முடிவுக்குக்கொண்டுவரப்படுவதுடன் தனியாருக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்படவேண்டும். மலையகத் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்' என்றும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தெரிவித்தார். அத்தோடு இலங்கை தொடர்பில் தமது அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக இலங்கையின் கடந்தகால மீறல்கள் தொடர்பில் 105,000 ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் திரட்டப்பட்டிருப்பதாகவும், சர்வதேச நியாயாதிக்கத்தின் ஊடாக இவற்றைப் பயன்படுத்தி பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு உறுப்புநாடுகள் முன்வரவேண்டும் எனவும் அழைப்புவிடுத்த உயர்ஸ்தானிகர், மனிதப்புதைகுழிகளின் அகழ்வு நடவடிக்கைகளுக்கு அவசியமான உதவிகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். https://www.virakesari.lk/article/224583
-
போட்டியிடும் கடல் நீரில் கோபால்ட்டைப் பெறுவதற்கான இந்தியப் போட்டியைத் தூண்டிவிடும் என்று சீனா அஞ்சுகிறது.
அநுர அரசுக்கு கடலுக்கு அடியில் கிடைத்த பல பில்லியன் ஜாக்பொட்... இலங்கை தற்போது ஐ.எம்.எப்பின் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளும், ஆனால் அதிலிருந்து முற்றாக வெளிவரும் நேரம் வரும் என்று பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தற்போதைய பூகோள அரசியலில் கனிம வளங்களை நோக்கிதான் உலக அரசுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்து சமுத்திரத்தின் கீழுள்ள கனிமவளங்களை நோக்கி இந்தியா நகர்வதால் சீனா அச்சமடைந்துள்ளதாக சர்வதேச பத்திரிக்கையொன்று தகவல் வெளியிட்டது. அதனை தொடர்ந்து இலங்கையின் ஆட்சி மாறிவிட்ட நிலையில், தற்போது இந்த விடயத்தில் சீனாவிற்கு எந்த பிரச்சனையுமில்லை. இந்த கனிமங்கள் நிறைந்த மலை இலங்கையின் பொருளாதாரத்தை வெகுவாக உயர்த்தி விடும். இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி.... https://tamilwin.com/article/multi-billion-jackpot-found-under-the-sea-anura-1757345658?itm_source=article
-
உயரத்துக்கு ஏற்ற வீடு; உயர்ந்து நிற்கும் காதல் - நெகிழ வைக்கும் மாற்றுத்திறனாளி தம்பதி
இந்த மினி தம்பதி மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள மண்டூர் என்ற சிறிய கிராமத்தில் வசிக்கிறார்கள். சமூக ஊடகங்களில் பிரபலமான இந்த ஜோடி, தங்கள் உயரத்திற்கு ஏற்ற வீட்டைக் கட்டியுள்ளனர். பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், சமூகப் பிரச்னைகள் குறித்தும் வித்தியாசமான வீடியோக்களை உருவாக்க விரும்புகிறார்கள். #Couple #MiniCouple இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவியின் கடிதம் குறித்து அவதானம் - நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு
08 Sep, 2025 | 04:34 PM (நா.தனுஜா) கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை அனுபவித்துவரும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவியினால் கடந்த ஜூலை மாதம் தமக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், அக்கடிதம் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டிருப்பதாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பிரத்யேக செயலாளர் அறிவித்துள்ளார். பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம 10.07.2025 எனும் திகதியிடப்பட்ட கடிதமொன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைத்திருந்தார். அவற்றின் பிரதிகள் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. அக்கடிதத்தில் 7ஆம் இராணுவக் காலாட்படைத் தலைமையகத்தில் படுகொலை செய்யப்பட்டு செம்மணி சோதனைச்சாவடிக்குக் கொண்டுவரப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமியினதும், அவரது குடும்பத்தினரினதும் சடலங்களை கப்டன் லலித் ஹேவாகேயின் ஆணைக்கு அமைவாகப் புதைத்ததைத் தவிர தனது கணவர் வேறெந்தக் குற்றத்தையும் புரியவில்லை எனவும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியமளிப்பதற்கு சோமரத்ன ராஜபக்ஷ தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதியமைச்சர் ஆகியோருக்கு கடந்த ஜுலை மாதம் அனுப்பிவைக்கப்பட்ட இக்கடிதம் தொடர்பில் எந்தவொரு பதிலும் கிட்டாததன் காரணமாக, சோமரத்ன ராஜபக்ஷ அவரது மனைவியின் ஊடாக கடந்த வாரம் மீண்டும் ஜனாதிபதிக்கு மற்றுமொரு கடிதத்தை அனுப்பிவைத்திருந்தார். செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், நீதித்துறைக்கும் வெளிப்படுத்துமாறு தனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக அவ்வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில் 'மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தினர் ஜனாதிபதியிடம் முன்வைக்கும் மேன்முறையீடு எனும் தலைப்பின்கீழ் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட 10.07.2025 எனும் திகதியிடப்பட்ட கடிதம் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், அக்கடிதம் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அறியத்தருகிறோம்' என அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பிரத்யேக செயலாளர் லஹிரு சமரசிங்கவினால் அனுப்பிவைக்கப்பட்ட பதில் கடிதம் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி எஸ்.சி.விஜேவிக்ரமவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை கிடைக்கப்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/224539
-
மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் சர்வதேச அறிக்கை வெளியீடு
ஒரு வழக்கு எவ்வாறு விசாரிக்கப்படக்கூடாது என்பதற்கான உதாரணமே மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை வழக்கு - சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் புதிய அறிக்கை 08 Sep, 2025 | 05:14 PM (நா.தனுஜா) ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை குறித்த வழக்கானது உண்மையில் ஒரு வழக்கு விசாரணை எவ்வாறு இடம்பெறக்கூடாதோ அதற்கு உதாரணமாகக் குறிப்பிடக்கூடிய விசாரணை சார்ந்த தோல்விகளைக்கொண்ட ஒரு வழக்காகும் என ரெட்ரெஸ் மற்றும் சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டம் இணைந்து வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.பி.சி ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை குறித்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் தோல்வி பற்றி சித்திரவதைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், தப்பிப்பிழைத்தவர்களுக்கான நீதியைக் கோருவதற்குமான 'ரெட்ரெஸ்' அமைப்புடன் இணைந்து சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள 70 பக்க விரிவான அறிக்கை திங்கட்கிழமை (8)வெளியிடப்பட்டது. 'இலங்கையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஊடகவியலாளர்களின் படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் திட்டமிட்டுப் பாதுகாக்கப்பட்டுவருகின்றனர். 2000 - 2010 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் உள்நாட்டுப்போர் குறித்து செய்தியறிக்கையிட்டுவந்த ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களின் சுமார் 44 பேர் கொல்லப்பட்டனர். இருப்பினும் இன்றுவரை இப்படுகொலைகளுடன் தொடர்புடைய எந்தவொரு குற்றவாளியும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை' என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கையில் தொடரும் இத்தகைய தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கானது, தமது உயிரைப் பயணம்வைத்து, சுயதணிக்கை செய்து அல்லது வேறு நாடுகளில் வாழும் இலங்கையைச்சேர்ந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் அச்சுறுத்தலை விளைவித்திருப்பதாக சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யஸ்மின் சூக்கா விசனம் வெளியிட்டுள்ளார். அதேபோன்று ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை குறித்த வழக்கானது உண்மையில் ஒரு வழக்கு விசாரணை எவ்வாறு இடம்பெறக்கூடாதோ அதற்கு உதாரணமாகக் குறிப்பிடக்கூடிய விசாரணை சார்ந்த தோல்விகளைக்கொண்ட ஒரு வழக்காகும் என இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிமலராஜனின் கொலை இடம்பெற்ற இடம் ஒருபோதும் பாதுகாக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படவில்லை. படங்கள் எவையும் எடுக்கப்படவில்லை. தடயவியல் ஆதாரங்கள் எவையும் சேகரிக்கப்படவில்லை. சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று இரவு கடமையில் இருந்த சில பாதுகாப்புப்படையினரை விசாரிப்பதற்கே பல வருடங்கள் எடுத்தது. ஆனால், பலர் ஒருபோதும் அடையாளம் காணப்படவும் இல்லை. விசாரணைக்கு உட்படுத்தப்படவும் இல்லை என இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/224551
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் 8 ஆம் திகதி ஆரம்பம்
இலங்கைக்கு மிக முக்கியத்துவமானது : அரசாங்கம் மிக நுணுக்கமாக அணுக வேண்டும் - பேராசிரியர் பிரதீபா மஹாநாம 08 Sep, 2025 | 01:58 PM (எம்.மனோசித்ரா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டத் தொடர்பில் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 2010 இலிருந்து இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பிரேரணைகள் நிறைவுக்கு கொண்டுவரப்படாவிட்டால் அவற்றை இணைத்து ஐ.நா. பொதுசபைக் கூட்டத்திலும் பின்னர் பாதுகாப்பு சபையிலும் சமர்ப்பிக்கக் கூடிய அபாயம் காணப்படுகிறது. எனவே அரசாங்கம் இதனை மிகவும் நுணுக்கமாக அணுக வேண்டும் என பேராசிரியர் பிரதீபா மஹாநாம தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 2010ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வாறிருக்கையில் இவ்வாண்டும் புதிய பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பிரேரணைகளை நாம் நிறைவுக்கு கொண்டு வராவிட்டால் இவை அனைத்தையும் இணைத்து நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. பொதுசபைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பர். அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அதனை நேரடியாக பாதுகாப்பு சபை கூட்டத்துக்கும் அனுப்ப முடியும். இது மிகவும் பாரதூரமானதாகும். பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் எமக்கு சார்பாக இந்த பிரேரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படாவிட்டால் எமக்கு வெவ்வேறு தடைகள் விதிக்கப்படக் கூடும். எனவே இம்முறை ஜெனீவா கூட்டத்தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இம்முறை இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை குறித்த வரைவொன்று வெளிவிவகார அமைச்சிற்கு வழங்கப்பட்டது. அதில் இலங்கை செய்ய வேண்டியவை தொடர்பில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் பிரதானமானது புதிய பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்க வேண்டும் என்பதாகும். ஆனால் இலங்கை அரசாங்கம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளமை சிறந்ததாகும். காரணம் இலங்கை ஒரு சுயாதீன இராச்சியமாகும். எவ்வாறிருப்பினும் இதற்கு முந்தைய பிரேரணைக்கு அமெரிக்க இணை அனுசரணை வழங்கியிருக்கிறது. ஆனால் தற்போது அமெரிக்கா அதன் அங்கத்தவர்களை விலக்கிக் கொண்டுள்ளது. இதனால் இதற்கு இணை அனுசரணை வழங்கிய பிரித்தானியா தற்போது தனித்து விடப்பட்டுள்ளது. எனவே தான் அவர்கள் எம்சார்பில் சிறந்த விடயங்களை முன்வைத்திருந்தனர். தற்போது மனித உரிமை மீறல்கள் தொடர்பான வேலைத்திட்டங்கள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறிருப்பினும் பிரதான சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவற்றில் முதலாவது ரோம் உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என்பதாகும். இதில் கையெழுத்திட்டால் இராணுவத்தினர் எவருக்கும் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது. இரண்டாவது பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதற்கு நாம் இணக்கம் தெரிவித்திருக்கின்றோம். அதற்கு பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிறந்த விடயமாகும். திட்டமிட்ட குற்றச்செயல்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெறுவதால் இது தொடர்பில் சிந்தித்து தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். அடுத்தது தேசிய நல்லிணக்கம், புனர்வாழ்வளிப்பு உள்ளிட்டவையாகும். அவை சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. இறுதியான வடக்கிலுள்ள காணி விடுவிப்பு பிரச்சினையாகும். தற்போது வடக்கில் பெரும்பாலான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஜெனீவாவில் 77 அங்கத்துவ நாடுகள் உள்ளன. அவற்றில் குறைந்தபட்சம் 24 நாடுகளின் ஆதரவைப் பெற்றால் போதுமானது. அதற்கான சாதகமான சூழல் எமக்கு காணப்படுகிறது. இதில் கால அவகாசத்தை கோருவதை விட முறையான நீண்டகால வேலைத்திட்டத்தை திட்டமிட வேண்டும். எவ்வாறிருப்பினும் இவற்றில் முக்கியமானது இந்தியாவின் நிலைப்பாடாகும். இந்தியா, இலங்கைக்கு சாதமாக தீர்மானத்தை எடுக்கும் பட்சத்தில் அதிகளவான நாடுகளின் ஆதரவைப் பெற முடியும் என்றார். https://www.virakesari.lk/article/224511
-
இளம் தலைமுறைக்கு சட்டம் கற்பிக்கவேண்டும் - ஆணைக்குழு தலைவர் ரங்க திஸாநாயக்க
08 Sep, 2025 | 01:46 PM (இராஜதுரை ஹஷான்) சட்டத்தை மதிக்கும் சமூகம் ஒன்று தோற்றம் பெற வேண்டுமாயின் நாட்டு மக்கள் அனைவரும் சட்டத்தை பற்றி முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும். அடிப்படை சட்டத்தை பாடத்திட்டத்துக்குள் உள்ளடக்கினால் சிறந்த சமூகத்தை உருவாக்கலாம். தற்போதைய இளம் தலைமுறையினரின் எதிர்காலத்துக்காக சட்டத்தை அவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தலைவர் ரங்க திஸாநாயக்க தெரிவித்தார். சட்டத்தை மதிக்கும் சமூகம் தொடர்பில் தனியார் தொலைக்காட்சியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கைதுகள் தொடர்பில் தற்போது மாறுப்பட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. நாட்டு மக்கள் அனைவரும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்கிறார்கள். 225 உறுப்பினர்கள் ஒட்டுமொத்த மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சட்டத்தை இயற்றுகிறார்கள். ஆகவே மக்கள் தாம் தெரிவு செய்யும் பிரதிநிதிகள் பற்றி போதுமான தெளிவை பெற்றிருக்க வேண்டும். நாட்டின் சட்டத்தை பற்றி மக்கள் பூரண தெளிவில்லாமல் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தால் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஆகவே அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டம் தொடர்பில் முதலில் மக்கள் தெளிவுப்பெற வேண்டும். எமது கால சூழல் தற்போது கிடையாது.தற்போதைய இளம் தலைமுறையினர் மாறுப்பட்ட வகையில் உள்ளார்கள். அவர்களுக்கு சட்டம் மற்றும் அடிப்படை விடயங்கள் குறித்து போதுமான புரிதல் கிடையாது. குறைந்தபட்சம் அவர்கள் பத்திரிகை கூட வாசிப்பது கிடையாது. சட்டத்தை மதிக்கும் சமூகம் ஒன்று தோற்றம் பெற வேண்டுமாயின் நாட்டு மக்கள் அனைவரும் சட்டத்தை பற்றி முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும். அடிப்படை சட்டத்தை பாடத்திட்டத்துக்குள் உள்ளடக்கினால் சிறந்த சமூகத்தை உருவாக்கலாம்.தற்போதைய இளம் தலைமுறையினரின் எதிர்காலத்துக்காக சட்டத்தை அவர்களுக்கு கற்பிக்க வேண்டும். முதலில் சட்டத்தை கடுமையாக செயற்படுத்த வேண்டும் அதற்கு முதலில் சட்டத்தை பற்றி அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும். தமக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எவ்வாறு சட்டத்தின் ஊடாக காப்பீடு பெற்றுக்கொள்வது, எங்கு சென்று முறையிடுவது என்பது கூட பெரும்பாலானோருக்கு தெரியாது. ஆகவே அடிப்படை சட்டத்தை கல்வி கட்டமைப்புக்குள் உள்ளடக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/224518
-
15 வைத்தியசாலைகளுக்கு தொற்றுக் கழிவு மேலாண்மை உபகரணங்களை ஒப்படைத்தது ஜப்பான்
08 Sep, 2025 | 06:29 PM இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா, திருகோணமலை பொது வைத்தியசாலையில் தொற்று கழிவு மேலாண்மை உபகரணங்களை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார். சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன மற்றும் JICA இலங்கை அலுவலகத்தின் தலைமை பிரதிநிதி கென்ஜி குரொணுமா ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த உபகரணங்கள் தொற்று கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன, இதற்காக ஜப்பான் அரசாங்கத்தால் ஏப்ரல் 2023இல் JPY 503 மில்லியன் (அண்ணளவாக USD 3.7 மில்லியன்) நிதி உதவியுடன் குறிப்புகள் பரிமாற்றம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், இலங்கையின் 9 மாகாணங்களிலும் உள்ள 15 வைத்தியசாலைகளுக்கு வெப்பநிலை கட்டுப்பாடு மற்றும் வெளியேற்ற வாயு சுத்திகரிப்பு அமைப்புகளுடன் கூடிய மருத்துவ கழிவு எரியூட்டிகள் வழங்கப்படுகின்றன. முறையான கழிவு மேலாண்மை மற்றும் உபகரண செயல்பாடு குறித்த தொழில்நுட்பப் பயிற்சியுடன், நாடு முழுவதும் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திறனை வலுப்படுத்துவதஇந்தத் திட்டத்தின் நோக்கமாகும். தூதுவர் இசொமதா தனது கருத்துக்களில், இந்தத் திட்டம் தொற்றுக் கழிவு மேலாண்மைக்கான மேம்பட்ட வசதிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கைசன், 5S மற்றும் TQM முறைகளின் பயிற்சி மூலம் சுகாதாரப் பணியாளர்களின் திறனை வலுப்படுத்துகிறது என்று வலியுறுத்தினார். இந்தத் திட்டம் அதன் திறன் மேம்பாட்டுக் கூறு, பயிற்சியாளர்களுக்கான பயிற்சி (ToT) அணுகுமுறையில், நவீன நடத்தை அறிவியலை அடிப்படையாகக் கொண்ட நட்ஜ் கோட்பாட்டைப் பயன்படுத்தி ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதையும் அவர் எடுத்துரைத்தார். இந்த ToT அணுகுமுறையைப் பயன்படுத்தி, சுகாதார அமைச்சக அதிகாரிகளிடமிருந்து மருத்துவமனை தொற்று கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் மருத்துவ சேவை பணியாளர்களின் பரந்த குழுக்களுக்கு கற்றறிந்த அறிவு, பரந்த அடிப்படையில் பாதுகாப்பான மருத்துவ சூழலை திறம்பட உருவாக்குகிறது. திருகோணமலை பொது மருத்துவமனையில் ஒரு வடிகுழாய் ஆய்வகம் இரண்டு ஆண்டுகளில் தொடர்ச்சியான யென் கடன் திட்டத்தின் மூலம் நிறுவப்படும் என்றும், இதன் மூலம் கிழக்கு மாகாணம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் மருத்துவ சேவைகளின் தரம் மேலும் மேம்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் தேசிய நல்லிணக்கம் நெருக்கமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தொடர்ந்து ஆதரவை வழங்குவதற்கான ஜப்பானின் உறுதிப்பாட்டை தூதர் மீண்டும் உறுதிப்படுத்தினார். எதிர்காலத்தில் இருதரப்பு ஒத்துழைப்பு நிலையானதாக இருக்க, அரசாங்கத்திற்கு அரசு ஒத்துழைப்பு மட்டுமல்லாமல், மருத்துவம் மற்றும் தொடர்புடைய தொழில்துறை துறைகள் உட்பட தனியார் துறை கூட்டாண்மையும் மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். நிலையான வளர்ச்சியை அடைவதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பை மேலும் ஆழப்படுத்துவதிலும் இலங்கையை ஆதரிப்பதில் ஜப்பான் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உள்ளது. https://www.virakesari.lk/article/224566
-
அவுஸ்திரேலியாவில் விஷக்காளான் உணவைக் கொடுத்து மூவரை கொன்ற பெண்! - 33 ஆண்டுகள் பிணையில்லாத ஆயுள் தண்டனை!
Published By: Digital Desk 1 08 Sep, 2025 | 01:23 PM அவுஸ்திரேலிய பெண் எரின் பேட்டர்சனுக்கு 33 ஆண்டுகள் பிணை இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2023ஆம் ஆண்டு நச்சுத்தன்மையான மதிய உணவினை பரிமாறி மூன்று உறவினர்களைக் கொன்றதாகவும், மற்றொருவரைக் கொல்ல முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மதிய உணவின்போது அவர் நச்சுத்தன்மை வாய்ந்த காளான்கள் கலந்த மாட்டிறைச்சியை தனது உறவினர்களுக்கு பரிமாறியுள்ளதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டு, எரின் பேட்டர்சன் குற்றவாளி என கடந்த ஜூலை மாதம் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது. 50 வயதான எரின் விசாரணைகளின்போதும் எந்த விதத்திலும் உணர்ச்சிவசப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் கண்களை மூடிக்கொண்டு நின்ற எரின், நீதிபதி தீர்ப்பினை அறிவிக்கையில் குற்றத்துக்கான தண்டனையை வாசிக்கும்போது மட்டுமே கண்களைத் திறந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி எரின் பரிமாறிய உணவினை உட்கொண்டவர்களில் எரினின் முன்னாள் மாமனார் டான் பேட்டர்சன், மாமியார் கெயில் பேட்டர்சன் மற்றும் கெயிலின் சகோதரி ஹீதர் வில்கின்சன் ஆகியோர் அந்த உணவை உட்கொண்ட பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சில நாட்கள் கழித்து உயிரிழந்தனர். அத்துடன், நச்சுத்தன்மையான உணவினை உட்கொண்ட மற்றுமொருவரான, ஹீதர் வில்கின்சனின் கணவர் இயன் வில்கின்சன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று, உயிர் பிழைத்த நிலையில், நீதிமன்ற அறைக்கு வெளியே செய்தியாளர்களிடம் தமது கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/224495
-
பல்தரப்பு “ பசுபிக் ஏஞ்சல் 25” பயிற்சி நடவடிக்கையை ஆரம்பிக்கும் அமெரிக்கா மற்றும் இலங்கை
Published By: Priyatharshan 08 Sep, 2025 | 05:17 PM அமெரிக்காவும் மற்றும் இலங்கையும் பசுபிக் ஏஞ்சல் (Pac Angel) 25 பயிற்சி நடவடிக்கையை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இன்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்தன. இந்த பயிற்சி நடவடிக்கையை ஆரம்பிக்கும் நிமித்தம் இலங்கைக்கான அமெரிக்க பாதுகாப்பு தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் மெத்தியூ ஹவுஸ் இலங்கை விமானப்படையின் அதிகரிகளுடன் இணைந்துக் கொண்டார். பேரனர்த்த பதிலளிப்பு மற்றும் உயிர்காப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் நிமித்தம் செப்டெம்பர் 8 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை நடக்கும் இந்த 5-நாள் பல்தரப்பு நிகழ்வானது, சுமார் 90 அமெரிக்க மற்றும் 120 இலங்கை விமானப்படை வீரர்களை ஒன்றிணைப்பதுடன், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இந்தியா, ஜப்பான், மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களும் மற்றும் பார்வையாளர்களும் இதில் கலந்துகொள்கின்றனர். இந்த பயிற்சியானது, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை, மருத்துவ தயார்நிலை, வான் பாதுகாப்பு மற்றும் பொறியியல் ஒத்துழைப்பு என்பன தொடர்பில் கவனம் செலுத்துகிறது. அமெரிக்காவின் இரண்டு C-130J விமானங்கள் மற்றும் இலங்கையின் Bell-412, B-212 ஹெலிகப்டர்கள் மற்றும் கிங் எயார் 350 விமானம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெறும் இந்த Pac Angel 25 பயிற்சி நடவடிக்கையானது, நடப்பு உலக நெருக்கடிகளுக்கு அவசியமான விரைந்த மற்றும் உறுதியான பதிலளிப்பு செயற்பாடுகளுக்கான அணியமைப்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புகிறது. இந்த பயிற்சி நடவடிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், பசுபிக் ஏஞ்சல் 25 இந்த ஆண்டில் இலங்கையில் நடத்தப்படும் மிகப்பெரிய பல்தரப்பு பயிற்சி நடவடிக்கையாகும் என்பதுடன், அவுஸ்திரேலியா, பங்காளதேஷ், இந்தியா, ஜப்பான், மாலைத்தீவு, இலங்கை மற்றும் அமெரிக்காவில் இருந்து இதில் கலந்துகொள்பவர்களை வரவேற்பதில் நாம் பெருமை கொள்கிறோம். பேரனர்த்த பதிலளிப்பு முதல் மனிதாபிமான நெருக்கடிகள் வரையான நடப்பு உலக சவால்களுக்கு தயாராவதன் நிமித்தம் எமது நாடுகள் எப்படி ஒன்றுபட்டு பணிபுரிகின்றன என்பதை இந்த பயிற்சி நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது. இந்து-பசுபிக் பிராந்தியத்தின் பங்காண்மையாளர்கள் என்ற வகையில், நாம் பாதுகாப்பு மற்றும் திறந்த வர்த்தகத்தை பேணிப் பாதுகாப்பதுடன், எமது இந்த பிராந்தியம் தங்கியிருக்கும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதன் நிமித்தம் சவால்களுக்கு ஒன்றுசேர்ந்து முகம் கொடுப்பதற்கான எமது ஆற்றலை Pac Angel போன்ற பயிற்சி நடவடிக்கைகள் வலுப்படுத்துகின்றன, என்று தெரிவித்தார். இலங்கைக்கான அமெரிக்க பாதுகாப்பு தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் மெத்தியூ ஹவுஸ் இந்த பயிற்சி நடவடிக்கையின் நடைமுறை தாக்கத்தை சுட்டிக்காட்டி அதில் கலந்துகொள்பவர்களை அமெரிக்காவின் சார்பில் வரவேற்றார். “Pac Angel நடவடிக்கையானது ஒரு சாதாரண பயிற்சிக்கும் மேலானதாகும். இது நெருக்கடி நிலைமைகளுக்கான துரித மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பதிலளிப்பு செயற்பாடுகளை சாத்தியமாக்கும் எமது நண்பர்கள் மற்றும் பங்காண்மையாளர்களுடனான நடப்பு உலக ஒத்துழைப்பை உருவாக்குவது பற்றியதாகும். ஒன்றிணைந்து பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் நாம் நம்பிக்கையை வலுப்படுத்துகிறோம், அச்சுறுதல்களை தடுக்கிறோம், மற்றும் பேரனர்த்தங்கள் தாக்கும் போது எம்மால் விரைந்தும் மற்றும் பயனுறுதிமிக்க வகையிலும் பதிலளிக்க முடியும் என்பதையும் உறுதிபடுத்துறோம். நாம் இன்று ஒன்றிணைந்து கட்டமைக்கும் ஒவ்வொரு முயற்சியும் நாளைய பொதுவான பாதுகாப்புக்கான அடித்தளமொன்றாகும், என்று அவர் குறிப்பிட்டார். பசுபிக் ஏஞ்சல் என்பது அமெரிக்க பசுபிக் விமானப்படைகளின் தலைமையிலும் அமெரிக்க இந்து-பசுபிக் கட்டளையகத்தின் (U.S. Indo-Pacific Command - USINDOPACOM) அனுசரணையிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மனிதாபிமான பதிலளிப்பு செயற்பாடுகள் தொடர்பான பயிற்சி நடவடிக்கையொன்றாகும். இந்த பயிற்சியானது தற்போது அதனது 18 ஆவது ஆண்டில் உள்ளது. 2008 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட பசுபிக் ஏஞ்சல் பயிற்சி நடவடிக்கையானது, கிரிபாஸ், நவூரு மற்றும் வனுவாட்டு ஆகியவற்றுக்கு முக்கியமான உதவிகளை வழங்கிய அதனது 2007 ஆம் ஆண்டு தொடக்க நடவடிக்கையின் வெற்றியின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அதிலிருந்து தமது பசுபிக் அயலவர்களுக்கான அமெரிக்காவின் நீடித்த உறுதிப்பாட்டை பிரதிபலித்து இந்து-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஈடுபாட்டின் இன்றியமையாத அம்சமொன்றாக Pac Angel உருவெடுத்துள்ளது. பசுபிக் ஏஞ்சல் பயிற்சி நடவடிக்கைகளானது அதை நடாத்தும் நாட்டு அரசாங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதுடன், பல மாதங்களுக்கு முன்பாகவிருந்தே அது திட்டமிடப்படுகிறது. இந்த நடவடிக்கைகளானது எந்தவொரு தற்போதைய நடப்பு உலக நெருக்கடிகளுக்குமான பதிலளிப்பு செயற்பாடாக அமையவில்லை. மாறாக இந்த பயிற்சியை நடத்தும் நாடுகள் தமது குடிமக்களுக்கு உதவுவதற்கும் மற்றும் இயற்கை பேரனர்த்தங்கள் மற்றும் ஏனைய சவால்களுக்கு ஆக்கப்பூர்வமாக பதிலளிப்பதற்கும் அவற்றின் ஆற்றல்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டவையாகும். கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றுடன் அமெரிக்காவும் இலங்கையும் பசுபிக் ஏஞ்சல் 25 பயிற்சி நடவடிக்கையை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்தன. இலங்கை விமானப்படை அதிகாரிகள் மற்றும் பசுபிக் ஏஞ்சல் 25 பயிற்சி நடவடிக்கையின் ஏனைய பங்கேற்பாளர்களின் முன்னிலையில் இலங்கைக்கான அமெரிக்க பாதுகாப்பு தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் மெத்தியூ ஹவுஸ் உரையாற்றுவதை இங்கு காணலாம். இலங்கை, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், ஜப்பான் மற்றும் மாலைத்தீவில் இருந்து இந்த பயிற்சியில் பங்கேற்பவர்கள் பசுபிக் ஏஞ்சல் 25 நடவடிக்கை ஆரம்பமாவதற்கு முன்னதாக எடுத்துக் கொண்ட புகைப்படம். https://www.virakesari.lk/article/224555
-
சமூகவலைத்தள முடக்கத்துக்கு எதிராக நேபாளத்தில் வெடித்த 'Gen Z' இளைஞர்கள் போராட்டம்
பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்த பலரும் நியூ பனேஷ்வரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த சுமார் 150 பேர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காத்மாண்டுவில் உள்ள உள்ளூர் செய்தியாளர் பிபிசிக்கு தகவல் அளித்துள்ளார். மேலும் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ராணுவமும் தெருக்களில் குவிந்துள்ளதாகவும், கடுமையான மோதல் நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்தார். "இந்த சூழலிலும் போராட்டக்காரர்கள் பின் வாங்கவில்லை. உயிரிழப்பு ஏற்பட்ட பிறகும் அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்" எனக் கூறினார். உள்ளூர் நிர்வாகம் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தங்களை Gen Z தலைமுறை என குறிப்பிடும் போராட்டக்காரர்கள் ஊழல் குறித்தும் குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றனர். இளைஞர்களின் போராட்டம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரவு 10 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காத்மாண்டுவில் உள்ள சிங்கா துர்பாரில் இன்று (திங்கட்கிழமை) காலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் திரண்டனர். பின் நியூ பனேஷ்வரில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி அவர்கள் பேரணி சென்றனர். "சில போராட்டக்காரர்கள் தடுப்புகளை தாண்டி நாடாளுமன்ற வளாகத்திற்குள் செல்ல முயன்றதாகவும், அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்" என பிபிசி செய்தியாளர் கேஷவ் கொய்ரலா கூறுகிறார். ராஷ்டிரபதி பவன், ஷீதல் நிவாஸ், நாராயண் தர்பார் அருங்காட்சியகம், பிரதமர் இல்லம் மற்றும் நாடாளுமன்ற வளாகப் பகுதிகளில் இரவு 10 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் கட்டுக்கடங்காமல், தடை உத்தரவுகளை மீறுவதாக செய்தித்தொடர்பாளர் கூறுகிறார். ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதும், தெருக்களில் நேபாள ராணுவம் குவிக்கப்பட்டது. நேபாள ராணுவத்தின் செய்தித்தொடர்பாளரான துணை ஜெனரல் ராஜாராம் பேட்னெட், "எழுத்துப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின், அமைதியை நிலைநாட்டுவதற்காக சிறிய ராணுவ படை அனுப்பப்பட்டது" எனக் கூறினார். சில போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். போராட்டத்தின்போது கலவரம் ஏற்பட்டதாகவும் அதில் காயமடைந்த பலரும் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர். நேபாளத்தில் இருந்து கிடைக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் திரளான போராட்டக்காரர்கள் காணப்படுகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் ஒருவர், "இங்கு நிலநடுக்கத்திற்கான அவசியம் இல்லை. தினமும் ஊழலால் நேபாளம் நடுங்கிக்கொண்டுதான் உள்ளது" என்ற வாசகம் கொண்ட பதாகையை ஏந்தியிருந்தார். இளைஞர்கள் பலரும் ஊழலுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி வந்திருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் நேபாளத்தில் அரசாட்சியை நிலைநாட்ட ஓர் போராட்டம் நடந்தது. அப்போதும் போராட்டக்காரர்கள் ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பினார்கள். சமூக வலைதளம் மீதான தடை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நேபாள அரசு 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தது. கடந்த வாரம் நேபாள அரசு 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதித்திருந்தது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட பிரபல சமூக வலைதளங்களும் இதில் அடங்கும். நாட்டின் சட்டத்திற்கு இணங்க சமூக வலைதள நிறுவனங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. சீனாவைச் சேர்ந்த டிக்-டாக் கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் நிபந்தனைகளை பூர்த்தி செய்துகொண்டதால் அதற்கு தடை விதிக்கப்படவில்லை. நேபாளத்தைச் சேர்ந்த மிகப்பெரிய அளவிலான மக்கள் வெளிநாட்டில் வசிக்கின்றனர். இந்த சமூக வலைதளங்களின் தடையால் வெளிநாட்டில் வசிக்கும் நேபாள குடிமக்கள் தங்களின் குடும்பத்தினரை தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. டிக் டாக் மூலம் திரண்ட போராட்டக்காரர்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நேபாளத்தில் டிக் டாக் ட்ரெண்டிங்கில் உள்ளது. சமூக வலைதளங்களின் தடைக்குப் பிறகு இளைஞர்கள் போராட்டத்திற்கு ஒன்று திரண்டுள்ளனர். தற்போது நேபாளத்தில் டிக் டாக் ட்ரெண்டிங்கில் உள்ளது. போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் டிக் டாக்கில் வீடியோக்களை பகிர்ந்து இளைஞர்களை போராட்டத்திற்கு அழைத்துள்ளனர். டிக் டாக்கில் 'நெப்போ பேபி' என்ற வார்தையும் ட்ரண்டில் உள்ளது. அதில் அரசியல்வாதிகளின் குழந்தைகளின் சொகுசு வாழ்க்கை குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. இதில் அரசியல்வாதிகளால் அவர்களின் குழந்தைகள்தான் பயனடைகிறார்கள் ஆனால் நாட்டிற்கு அவர்கள் வேலை செய்வதில்லை என கேள்வி எழுப்பப்படுகிறது. பல வீடியோக்களில் நோபாளத்தில் உள்ள தொலைதூர பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் வசதியாக வாழும் தலைவர்களையும் ஒப்பிட்டுள்ளனர். கடந்த வியாழன் அன்று நேபாள அரசு சமூக வலைதளங்களுக்கு தடை விதித்திருந்தது. அப்போதில் இருந்து இளைஞர்கள் இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளனர். போலீஸ் குவிப்பு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு. காத்மாண்டு மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (திங்கட்கிழமை) காலை முதலே காத்மாண்டு மற்றும் பல்வேறு நகரில் போராட்டங்கள் நடைபெற்று வருவதாக போலீசாரின் செய்தித் தொடர்பாளர் பினோத் கிமிரே தெரிவித்தார். "காத்மாண்டு மட்டுமல்லாமல் நகரின் பல்வேறு பகுதிகளில் போராடி வருகின்றனர். காவல்துறை இவர்களை கண்காணித்து வருகிறது. அமைதியை நிலைநாட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் திட்டமிட்டு அனைத்து இடங்களிலும் படைகளை குவித்துள்ளோம்" என கிமிரே பிபிசி நேபாளத்திடம் கூறியுள்ளார். போராட்டம் ஏன்? அந்நாட்டு அரசின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் பதிவு செய்யாததால் X, யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை கிளப்பியது. இதனையடுத்து டிக் டாக் மூலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டக் களத்தில் ஒன்று திரண்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்கள் ஆவர். இதனால் இதனை Gen-Z போராட்டம் எனக் குறிப்பிடுகின்றனர். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c70183j4l53o
-
வீரர்களின் உடல்நிலை குறித்து அணி நிர்வாகம் அக்கறை கொள்வதில்லை - ஷர்துல் தாக்கூர் வேதனை!
தொடர்ந்து விளையாடி வரும் வீரர்களின் உடல்நிலை குறித்து அணி நிர்வாகம் எவ்வித அக்கறையையும் வெளிப்படுத்துவது இல்லை என்று ஷர்துல் தாக்கூர் வேதனை தெரிவித்துள்ளார். கடந்த 11 மாதங்களாக இடைவெளியின்றி பல்வேறு போட்டிகளில் விளையாடி வரும் ஷர்துல் தாக்கூர், வீரர்களின் உடல் தகுதி விஷயத்தில் கவனம் செலுத்தும் அணி நிர்வாகம் தொடர்ந்து விளையாடும் வீரர்களின் உடல் நிலை குறித்து கவனம் கொள்வதில்லை என வேதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர், "ஆண்டு முழுதும் பல்வேறு தொடர்களில் ஆடுகிறோம். எனவே ஒரே மாதிரியான உடல்தகுதியினை பராமரிப்பது கடினம். பெரும்பாலான நேரங்களில் நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுகிறோம். நிர்வாகம் உயர்ந்த மட்டத்தில் இல்லை. பல மாதங்கள் ஆடிய பிறகும் கூட எங்கள் உடல் நிலை என்ன? எப்படியிருக்கிறது? எப்படி உணர்கிறோம் என்று யாரும் எங்களிடம் நேரடியாகக் கேட்பது கூட கிடையாது. ஆனால் நான் என் உடல்தகுதியை சுயமாகவே பரமாரிக்கிறேன். விளையாடுவதற்குத்தானே எல்லாம். விளையாடாமல் ஆட்டத்திலிருந்து விலகுவதற்காகவா இருக்கிறோம்? ஆனால் சிலபல இடைவெளிகளும் ஓய்வுகளும் அவ்வப்போது அவசியமாகிறது. ஏனெனில் ஆட்டத்திற்குள் நுழைந்து விட்டால் பணிச்சுமை பற்றியெல்லாம் பேச முடியாது. அங்கு ஆட்டச்சூழ்நிலையில் நாம் மூழ்கி விடுவோம். ஆட்டத்திற்குள் நுழைந்து விட்டால் நம்மால் சிறப்பாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து தான் ஆகவேண்டும். ஆனால் ஆட்டத்திற்கு இடையே ஓய்வு முக்கியம். அந்த ஓய்வில்தான் உடல்நிலையைப் பாதுகாக்க முடியும், பரமாரிக்க முடியும். ஆட்டத்தில் நமக்கு பெரிய ரோல் இல்லை என்றால் வலையில் கொஞ்சம் அதிக நேரம் செலவழிக்கலாம். ஆனால் ஆட்டத்தில் முழுச்சுமையும் உங்கள் மேல் இருக்கும் போது வலையில் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கலாம்" என தெரிவித்துள்ளார். அவர் இப்படிக் கூறக் காரணம், பும்ராக்களையும் ஷமிக்களையும் யோசிக்கும் நிர்வாகம், சலுகை அளிக்கும் நிர்வாகம் ஷர்துல் தாக்கூர்களைக் கண்டு கொள்வதில்லை என்பதுதான் உண்மை. அவர் கடந்த 11 மாதங்களாக இடைவெளியில்லாமல் கிரிக்கெட் ஆடி வருகிறார். கடந்த அக்டோபரில் இரானி கோப்பையில் தொடங்கிய சீசன் அவருக்கு 2024-25 ரஞ்சி சீசன், விஜய் ஹஜாரே டிராபி, சையத் முஷ்டாக் அலி கோப்பை, முதலில் விற்கப்படாமல் போனாலும் 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஆட நேரிட்டது, பிறகு இந்தியா ஏ தொடர் என்று வரிசையாக அவர் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஆடிவருகிறார். எனவே பணிச்சுமை விவகாரம் சில எலைட் வீரர்களுக்கு ஒருதலைப்பட்சமாகச் சாதகமளிக்கும் வேளையில் ஷர்துல் தாக்கூர் போன்ற விளிம்பில் இருக்கும் வீரர்களுக்கு சாதகமாக இருப்பதில்லை. https://www.hindutamil.in/news/sports/1375793-there-is-no-concern-about-the-health-of-the-players-shardul-thakur-1.html
-
இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!
போதைப்பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மித்தெனியவில் போராட்டம்! 08 Sep, 2025 | 04:45 PM அநுராதபுரத்தில் மித்தெனிய பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக போதைப்பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகள் சிலர் இணைந்து இன்று திங்கட்கிழமை (08) பிற்பகல் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நாடளாவிய ரீதியில் பரவி வரும் போதைப்பொருள் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் போதைப்பொருளுக்கு உடந்தையாக உள்ள அரசியல்வாதிகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுமாறும் பேராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மித்தெனியவில் உள்ள காணி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, “கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் கிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224547
-
5 நாட்களில் ரூ.5.8 கோடி இழந்த பெண் - டிஜிட்டல் கைதுகளை வங்கிகள் எப்படி கையாளுகின்றன?
பட மூலாதாரம், Anahita Sachdev/BBC படக்குறிப்பு, ஓராண்டுக்கு முன்பு 'டிஜிட்டல் கைது' செய்யப்பட்ட அஞ்சலி* 5.8 கோடி ரூபாயை இழந்துள்ளார். கட்டுரை தகவல் நிகில் இனாம்தார், கீதா பாண்டே பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அஞ்சலியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்ததால் ரூ.5.8 கோடி விலை கொடுத்துள்ளார். தொலைபேசியில் அழைத்தவர் தான் ஒரு கூரியர் நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்று கூறினார். அஞ்சலி பெய்ஜிங்கிற்கு அனுப்பிய போதைப்பொருள் பார்சலை மும்பை சுங்கத்துறை பறிமுதல் செய்ததாக அவர் அஞ்சலியிடம் கூறினார். இந்திய தலைநகர் டெல்லியின் புறநகர்ப் பகுதியான குருகிராமில் வசிக்கும் அஞ்சலி, "டிஜிட்டல் கைது" மோசடிக்கு இரையானவர்களில் ஒருவர். மோசடி செய்பவர்கள் வீடியோ அழைப்புகளில் சட்ட அமலாக்க அதிகாரிகளாக வேடமிட்டு, அவர் கீழ்ப்படியாவிட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அவரது மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அச்சுறுத்தினர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்து நாட்கள் அவர்கள் அஞ்சலியை ஸ்கைப்பில் 24 மணி நேர கண்காணிப்பின் கீழ் வைத்திருந்தனர். அவரை மிரட்டி பயமுறுத்தினர், அவரது சேமிப்பு கணக்குகளிலிருந்து பணத்தை வேறு வங்கிக் கணக்குகளில் மாற்றவும் வற்புறுத்தினர். "அதன் பிறகு, என் மூளை வேலை செய்யவில்லை. என் மனம் நொறுங்கிப் போனது" என்கிறார் அவர். அழைப்புகள் வருவது நின்றது, ஆனால் அதற்குள் அஞ்சலி உடைந்து போனார் - அவரது நம்பிக்கை சிதைந்தது . இது போன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்கள் அஞ்சலியைப் போன்று நிறைய பேர் உள்ளனர். "டிஜிட்டல் கைதுகளால்" இந்தியர்கள் கோடிக்கணக்கான பணத்தை இழந்ததாக அரசாங்க தகவல்கள் காட்டுகின்றன, 2022 மற்றும் 2024 க்கு இடையில் பதிவான வழக்குகள் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து, 1,23,00 வழக்குகள் பதிவாகியிருந்தன. இந்த மோசடி மிகவும் பரவலாக நடந்து வருகிறது. அரசு முழு பக்க விளம்பரங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி பிரசாரங்களை செய்து வருகிறது. பிரதமரும் கூட எச்சரிக்கை விடுத்துள்ளார். மோசடியுடன் தொடர்புடைய கிட்டத்தட்ட 4,000 ஸ்கைப் ஐடிகள் மற்றும் 83,000 க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அஞ்சலி கடந்த ஒரு வருடமாக காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் மாறி மாறி அலைந்து வருகிறார். இழந்த தனது பணத்தை தேடி, பிரதமர் உட்பட அதிகாரிகளிடம் உதவி கோரி மனு அளித்தார். பட மூலாதாரம், Anahita Sachdev/BBC படக்குறிப்பு, அஞ்சலி தான் இழந்த பணம், எந்த கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என்ற விவரங்களை மிகுந்த முயற்சி எடுத்து சேகரித்துள்ளார். அதிகரித்து வரும் மோசடிகள், பலவீனமான வங்கி பாதுகாப்புகள் மற்றும் மோசமான பண மீட்பு ஆகியவை டிஜிட்டல் வங்கி பரிவர்த்தனைகளில் உள்ள ஒழுங்குமுறை இடைவெளிகளை அம்பலப்படுத்துகின்றன. இதில் அனைத்து வர்க்க மக்களும் சிக்கிக் கொள்வதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். அஞ்சலி தனது பணத்தை மீட்க முயன்ற போது, இந்தியாவின் முன்னணி வங்கிகளின் ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள பாதுகாப்பு குறைகள் அம்பலமாகின என்று அவர் கூறுகிறார். செப்டம்பர் 4, 2024 அன்று இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கடன் வழங்குநரான தனது எச்.டி.எஃப்.சி வங்கிக் கிளைக்கு விரைந்ததாகவும், மோசடி செய்பவர்களின் வீடியோ கண்காணிப்பின் கீழ் பீதியடைந்ததாகவும், ஒரு நாள் 2.8 கோடி ரூபாயையும் அடுத்த நாள் மேலும் 3 கோடி ரூபாயையும் தனது வங்கிக் கணக்கிலிருந்து அனுப்பியதாக அஞ்சலி பிபிசியிடம் தெரிவித்தார். அவர் அப்படி அனுப்பிய தொகைகள் அவரது வழக்கமாக பரிமாற்றம் செய்யும் தொகைகளை விட 200 மடங்கு அதிகமாக இருந்தபோதிலும், வங்கிக்கு அது ஒரு எச்சரிக்கை மணியாக தெரியவில்லை, அசாதாரண பரிவர்த்தனைகள் ஏன் நடந்தன என்று வங்கி கவனிக்க தவறிவிட்டது என்று அவர் குற்றம் சாட்டுகிறார். பிரீமியம் கணக்கு வைத்திருக்கும் தனக்கு தனது வங்கி உறவு மேலாளரிடமிருந்து ஏன் அழைப்பு வரவில்லை என்றும், இவ்வளவு பெரிய பரிவர்த்தனையை வங்கி ஏன் கவனிக்க தவறியது என்றும் அவர் ஆச்சரியப்படுகிறார். "மூன்று நாட்களுக்குள் நான் செய்த பரிமாற்றங்களின் தொகை சந்தேகத்தை எழுப்பவும், குற்றத்தைத் தடுக்கவும் கூட போதுமானதாக இருந்திருக்க வேண்டாமா? கிரெடிட் கார்டு மூலம் 50,000 ரூபாய் செலவழித்தால் சரிபார்ப்பு அழைப்புகள் வரலாம் என்றால், சேமிப்புக் கணக்குகளில் இருந்து ஏன் பல கோடி பண பரிமாற்றம் செய்யும் போது அதை சரிபார்க்கக் கூடாது" என்று அஞ்சலி கேட்கிறார். அஞ்சலிக்கு அனுப்பிய மின்னஞ்சலில், எச்.டி.எஃப்.சி வங்கி தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை "ஆதாரமற்றது" என்றும், மோசடி சம்பவம் இரண்டு-மூன்று நாட்கள் தாமதத்திற்குப் பிறகு வங்கிக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. அவரது அறிவுறுத்தலின் பேரில் பரிவர்த்தனைகள் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டன, எனவே வங்கி அதிகாரிகளை இதில் குற்றம் சொல்ல முடியாது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எச்.டி.எஃப்.சிக்கு எதிரான அஞ்சலியின் புகாரை இந்தியாவின் வங்கி குறைதீர்ப்பாளர் 2017 விதியை மேற்கோள் காட்டி முடித்து வைத்து விட்டார். அஞ்சலி போன்ற வாடிக்கையாளர்கள் மோசடி செய்ததாக கருதினால் முழு இழப்பையும் தாங்களே ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டது. பிபிசியின் கேள்விகளுக்கு எச்டிஎஃப்சி வங்கி பதிலளிக்கவில்லை. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோடிக் கணக்கில் வாடிக்கையாளர்களை பணத்தை இழந்த பிறகு, அரசு இது போன்ற சைபர் மோசடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. நாங்கள் அஞ்சலியைச் சந்தித்தபோது, அவரது பணம் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு எவ்வாறு சென்றது என்பது குறித்து அவர் தொகுத்த ஒரு பெரிய விளக்கப்படத்தை எங்களிடம் காட்டினார். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கடன் வழங்குநர்களில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கியில் "திரு பியூஷ்" என்ற நபர் வைத்திருக்கும் கணக்கிற்கு எச்.டி.எஃப்.சி.யிலிருந்து பணம் முதலில் சென்றது என்று அது காட்டியது. பணப் பரிமாற்றம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த பரிவர்த்தனைக்கு முன்பாக, பியுஷின் கணக்கில் சில ஆயிரம் ரூபாய் மட்டுமே இருப்பு இருந்தது தெரியவந்தது. "இதுபோன்று திடீரென பெரிய அளவில் தொகைகள் வங்கிக் கணக்கில் வரும் போது எந்தவொரு வங்கியின் பணமோசடி எதிர்ப்பு கடமைகளின் கீழ் தானியங்கி பரிவர்த்தனை கண்காணிப்பு அமைப்புகளைத் தூண்டியிருக்க வேண்டும்" என்று அஞ்சலி கேள்வி எழுப்புகிறார். பியூஷின் கணக்கிலிருந்து பணத்தை தற்காலிகமாக முடக்காமல் அல்லது உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) சரிபார்ப்பு செய்யாமல் வங்கி எவ்வாறு பணத்தை விரைவாக வேறு கணக்குக்கு அனுப்ப அனுமதித்தது என்றும் அவர் ஆச்சரியப்படுகிறார். பியுஷ் கைது செய்யப்பட்டு சிறிது காலத்திலேயே பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் மீது ஐ.சி.ஐ.சி.ஐ புகார் அளித்துள்ள நிலையில், கணக்கை முடக்குவதில் ஏற்பட்ட தாமதம் தனக்கு மிகுந்த இழப்பை ஏற்படுத்தியதாக அஞ்சலி கூறுகிறார். பிபிசிக்கு அளித்த அறிக்கையில், ஐசிஐசிஐ கணக்கைத் திறக்கும்போது "உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்" என்று பரிந்துரைக்கப்பட்ட அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியதாகவும், சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகள் நடைபெறும் வரை சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் எதுவும் பியூஷின் கணக்கில் நடத்தப்படவில்லை என்றும் கூறியது. "வங்கி அதன் கடமைகளில் தவறியது என்ற எந்தவொரு குற்றச்சாட்டும் முற்றிலும் ஆதாரமற்றது" என்று அது கூறியது. அஞ்சலியின் புகாரைத் தொடர்ந்து உடனடியாக கணக்கை முடக்கியதாகவும், அஞ்சலி போலீஸ் வழக்கைப் பதிவு செய்யவும், போலி கணக்கு வைத்திருப்பவரைக் கண்டுபிடிக்கவும் உதவியதாகவும் வங்கி கூறியது. பியூஷின் கணக்கைத் திறக்கும்போது வங்கி கேஒய்சி விதிகளைப் பின்பற்றியதாகவும், மோசடி நடவடிக்கைகளுக்கு அந்த கணக்கு பயன்படுத்தப்படும் என்று முன்பே கணித்திருக்க முடியாது என்றும் ஐ.சி.ஐ.சி.ஐ.க்கு எதிரான அஞ்சலியின் புகாரை குறைதீர்ப்பாளர் முடித்து வைத்தார். ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கணக்கில் பணம் வந்தவுடன் நான்கு நிமிடங்களுக்குள், ஹைதராபாத் நகரத்தில் உள்ள பெடரல் வங்கியின் துணை நிறுவனமான ஸ்ரீ பத்மாவதி கூட்டுறவு வங்கியில் உள்ள 11 கணக்குகளில் அந்த பணம் செலுத்தப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். 11 கணக்குகளில் எட்டு கணக்குகளின் உரிமையாளர்களின் முகவரிகள் போலியானவை என்றும், கணக்கு வைத்திருப்பவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவர்கள் கண்டறிந்தனர். அவர்களின் கே.ஒய்.சி ஆவணங்களும் வங்கியில் இல்லை. மீதமுள்ள மூன்று கணக்குகளை வைத்திருப்பவர்கள் ஒரு ரிக்ஷா ஓட்டுநர், ஒரு சிறிய குடிசை பகுதியில் தையல் வேலை செய்யும் கணவரை இழந்த பெண் மற்றும் ஒரு தச்சர். இவர்களில் ஒருவரைத் தவிர, மற்றவர்களுக்கு தங்கள் கணக்குகளில் பரிவர்த்தனை செய்யப்பட்ட பெரிய தொகைகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதை போலீசார் கண்டறிந்தனர். மே மாதத்தில், கூட்டுறவு வங்கியின் முன்னாள் இயக்குநர் சமுத்ராலா வெங்கடேஸ்வரலுவை போலீசார் கைது செய்தனர் - அவர் சிறையில் உள்ளார். "இணைய மோசடிகளின் தீவிரம் மற்றும் நீண்டகால தாக்கத்தை கருத்தில் கொண்டு" அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் மூன்று முறை நிராகரித்தது. இந்த கணக்குகளில் பல வெங்கடேஸ்வரலுவின் உத்தரவுக்கு உட்பட்டு தொடங்கப்பட்டவை என்றும், அவை போலி கணக்குகள் என்றும் போலீஸ் அறிக்கை குற்றம் சாட்டுகிறது - அவை மற்றவர்களின் பெயர்களில் திறக்கப்பட்டுள்ளன. பணத்தை வெள்ளையாக்குவதற்காக அவற்றை இயக்கும் குற்றவாளிகளுக்கு விற்கப்பட்டுள்ளன. பிபிசியின் விரிவான கேள்விகளுக்கு ஃபெடரல் வங்கியோ அல்லது ஸ்ரீ பத்மாவதி வங்கியோ பதிலளிக்கவில்லை. பட மூலாதாரம், Anahita Sachdev/BBC படக்குறிப்பு, அஞ்சலி தான் இழந்த 5.8 கோடியில் ஒரு கோடி ரூபாயை மட்டுமே மீட்க முடிந்துள்ளது. பணத்தை இழந்த அஞ்சலியும் மற்றவர்களும் ஜனவரி மாதம் இந்தியாவின் உச்ச நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது வங்கிகளின் "சேவைகளில் குறைபாடு" என்ற அடிப்படையில் அவர்களின் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதற்கு வங்கிகள் பதிலளிக்க வேண்டும், நவம்பரில் விசாரணை நடைபெற உள்ளது. இத்தகைய மோசடிகள் மிகவும் சிக்கலானதாக இருப்பதால், நிதி மோசடிக்கு இறுதியில் யார் பணம் செலுத்துகிறார்கள் - வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் என்ன பொறுப்பைக் கொண்டுள்ளனர் என்பது குறித்து உலகளவில் விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த அக்டோபரில் இங்கிலாந்து கட்டண சேவை வழங்குபவர்களின் பொறுப்பு குறித்த விதிகளை கடுமையாக்கியது. சில வகையான நிதி மோசடிகளுக்கு பலியாகக்கூடியவர்கள் தவிர, பிற வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும். என்று கூறியது. "வாடிக்கையாளர்கள் மீது அக்கறை செலுத்த வேண்டிய கடமை வங்கிகளுக்கு உள்ளது. ஒரு வங்கி அதன் ஒட்டுமொத்த பரிவர்த்தனை முறைகளுக்கு முரணான எந்தவொரு செயல்பாட்டையும் கவனித்தால், அது அந்த பரிவர்த்தனையை நிறுத்த வேண்டும்" என்று அஞ்சலி உட்பட டிஜிட்டல் கைதுகளால் பாதிக்கப்பட்ட பத்துக்கு மேற்பட்டவர்களின் வழக்குகளை எடுத்து வாதாடும் வழக்கறிஞர் மகேந்திர லிமாயே பிபிசியிடம் தெரிவித்தார். போலி கணக்குகளைத் திறப்பதன் மூலம் புகார்தாரர்களின் நிதி தற்கொலைக்கு வங்கிகள் மறைமுகமாக "உடந்தையாக" இருப்பதாகவும், வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாக்கவும் தங்கள் கடமையில் தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஆனால் இதுவரை, அஞ்சலிக்கு நிவாரணம் பெரிய அளவில் கிடைக்கவில்லை - மோசடியால் இழந்த 5.8 கோடி ரூபாயில் ஒரு கோடியை மட்டுமே அவரால் மீட்டெடுக்க முடிந்தது. இது ஒரு நீண்ட போராட்டமாக இருக்கும் என்று வழக்கறிஞர் லிமாயே கூறுகிறார். தன்னிடமிருந்து திருடப்பட்ட பணத்திற்கு வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அஞ்சலி கூறுகிறார். மோசடி செய்பவர்களிடம் இழக்கப்பட்டாலும் கூட, முதலீட்டு ஆதாயங்களுக்கு வரி விதிக்கப்படுகின்றன. அவர் இப்போது அத்தகைய வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்குமாறு மன்றாடுகிறார். "இதுவரை, இதுபோன்ற குற்றங்களை வருமான வரித் துறை அங்கீகரிக்கவில்லை, இது பாதிக்கப்பட்டவர்களின் நிதி துயரத்தை அதிகரிக்கிறது", என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3e78kpv0gno
-
உள்நாட்டுப் பொறிமுறை மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை அடைய முடியும் : ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்
Published By: Vishnu 08 Sep, 2025 | 07:54 PM இலங்கையின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதையும், சர்வதேச தலையீடுகளை நிராகரிப்பதாகவும் உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை அடைய முடியும் என இலங்கை நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். வெளித் தலையீடுகள் அதன் உள்நாட்டு நீதி மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்குத் தடையாக இருக்கும் என்றும் இலங்கை மக்கள் ஒரு நியாயமான, சமமான மற்றும் வளமான சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறார்கள் என்றும், வெளிப்புற நடவடிக்கைகள் பிரிவினையை மட்டுமே ஏற்படுத்தும் என்றும் மேலும் தெரிவித்தார். 60 ஆவது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை தொடர்பாக இலங்கை அரசு சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் கடந்த 11 மாதங்களில் அடைந்துள்ள முன்னேற்றங்கள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் ஊழல் ஒழிப்புக்கான உறுதிப்பாடுகள் குறித்து இந்த உரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதில், அரசியல் மற்றும் ஆட்சிமுறை மாற்றங்கள் * 2024 செப்டம்பர் ஜனாதிபதித் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு (NPP) மக்கள் அமோக ஆதரவை வழங்கினர். * வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள மக்கள் ஒரு கட்சிக்கு இவ்வளவு ஆதரவு வழங்கியது இலங்கையின் வரலாற்றில் இதுவே முதல்முறை. * பல்வேறு சமூகத்தினரையும், சாதனை படைத்த எண்ணிக்கையிலான பெண்களையும் உள்ளடக்கிய இலங்கையின் வரலாற்றிலேயே மிகச் சிறந்த நாடாளுமன்றம் இது. முதன்முறையாக, மலையக சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண் உறுப்பினர்களும், ஒரு கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். * பல ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. எந்தவித வன்முறைச் சம்பவங்களும், அரச வளங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட நிகழ்வுகளும் இல்லாமல் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற்றன. பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்கள் * அரசாங்கம் பொறுப்பேற்றபோது நாடு எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முன்னுரிமை அளித்து, சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்கள் மூலம் பொருளாதார சவால்கள் குறைக்கப்பட்டன. * விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய துறைகளுக்கு சிறப்பு நிவாரணங்கள் வழங்கப்பட்டன. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கு வரலாற்றுபூர்வமான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. * வறுமையில் வாடுவோர், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்காக சமூக நலன்புரி நிதி அதிகரிக்கப்பட்டது. * மீள்குடியேற்ற தேவைகளைப் பூர்த்தி செய்யவும், வீட்டுத் திட்டங்களை விரைவுபடுத்தவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும் ரூ. 1500 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் * பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்குப் பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உருவாக்குவதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் இந்த மாதமே வர்த்தமானியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. * இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. * காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் (OMP), இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் (ONUR) போன்ற உள்நாட்டு நல்லிணக்க பொறிமுறைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. * காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்த காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்கு (OMP) ரூ. 375 மில்லியன் மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. * செம்மணி புதைகுழி உட்பட பல்வேறு புதைகுழிகள் குறித்து சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. * பொலிஸ் துறையின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டு, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் போன்ற பல நீண்டகால வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படுகின்றன. * பெரும்பாலான தனியார் காணிகள் உரிமையாளர்களிடம் விடுவிக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பிற்கு அத்தியாவசியமான காணிகள் மட்டுமே அரசு கட்டுப்பாட்டில் வைக்கப்படும், அதற்கான உரிய இழப்பீடு வழங்கப்படும். * மோதல்களில் உயிரிழந்தோரை நினைவு கூரும் உரிமைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது, இதனால் இந்த ஆண்டு பல இடங்களில் நினைவு நிகழ்வுகள் சுதந்திரமாக நடத்தப்பட்டன. * சிவில் சமூக அமைப்புகளுக்கு சுதந்திரமாக செயல்பட ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. ஊழல் ஒழிப்பு மற்றும் சீர்திருத்தங்கள் * கடந்த சில மாதங்களில், ஊழல் ஒழிப்புக்கு வலுவான புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சமூக நிலை எதுவாக இருந்தாலும், அரசியல் தலையீடு இல்லாமல், குற்றச்சாட்டுகள் குறித்த சுதந்திரமான விசாரணைகள் மற்றும் வழக்குகள் தொடரப்பட்டு பல முக்கிய தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. * இந்த ஆண்டின் தொடக்கத்தில், புதிய அரசியல் கலாசாரம் மற்றும் நெறிமுறை சார்ந்த நல்லாட்சியை ஊக்குவிக்கும் நோக்கில் 'தூய இலங்கை' என்ற நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்டது. * ஊழலற்ற இலங்கை ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்திற்கும், நலனுக்கும் இன்றியமையாதது என அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்கள், பார்வையாளர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், அதன் முயற்சிகளைப் புரிந்து கொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் இலங்கை கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களைப் பயன்படுத்திக்கொண்டு, உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் அனைத்து இலங்கை மக்களின் உரிமைகளையும் மேம்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதையும், வெளிநாட்டுத் தலையீடுகளை நிராகரிப்பதையும், உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை அடைய முடியும் என இலங்கை நம்புகின்றது. மேற்குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் விஜித்த ஹேரத் தனது உரையில் குறிப்பிடப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/224569
-
யாழில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்
யாழ் மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். செய்தி குறிப்பொன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயின் பரம்பல் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் 937 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் பதிவு செய்யப்படவில்லை. யாழ் மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைக்கும் நோக்குடன் கடந்த செப்டெம்பர் 4ம் திகதி மாவட்ட டெங்கு கட்டுப்பாட்டுக்குழுக் கூட்டம் இடம் பெற்றது. இதன் அடுத்த கட்டமாக பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச டெங்கு கட்டுப்பாட்டு குழுக் கூட்டங்களும் , கிராமசேவையாளர் தலைமையில் கிராம மட்ட டெங்கு கட்டுப்பாட்டு குழுக் கூட்டங்களும் எதிர்வரும் செப்டெம்பர் 08ம் திகதி முதல் 12ம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெறும். பொதுமக்கள் மத்தியில் டெங்கு கட்டுப்பாட்டு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நிறுவனங்களிலும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 14ம் திகதி சகல வணக்கத்தலங்களிலும் , 15ம் திகதி சகல அரச நிறுவனங்களிலும் , 16ம், 17ம் திகதிகளில் சகல பாடசாலைகளிலும் இந்த டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெறும். இதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 22ம் திகதி முதல் 24ம் திகதி வரையிலான மூன்று தினங்களும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக பிரகடனப்படுத்தப்படுகின்றன. இந்த காலப்பகுதியில் சகல வீடுகளிலும், வேலைத்தலங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் வர்த்தக நிலையங்களிலும், பொது இடங்களிலும் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்கும் சிரமதானப்பணி ஏற்பாடு செய்யப்படவேண்டும். இக்காலப் பகுதியில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஏற்பாட்டில் மேற்பார்வைக்குழுக்கள் வீடுகளையும் , வேலைத்தலங்களையும் , கல்வி நிறுவனங்களையும் , வர்த்தக நிலையங்களையும் பார்வையிடுவர். இக்குழுக்களில் சுகாதார திணைக்கள, பிரதேச செயலக , உள்ளூராட்சி மன்ற மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பங்குபற்றுவர் எனவே யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரிடமும் கோரிக்கை விடுப்பதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி ஆ. கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmfat3qgx009qqplpo0zf89ka
-
இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!
“கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி; சம்பத் மனம்பேரியை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி! 08 Sep, 2025 | 11:01 AM “கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரியை 7 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய மேல்மாகாண வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) அனுமதி வழங்கியுள்ளது. மித்தெனியவில் உள்ள காணி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, “கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் கிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி கடந்த சனிக்கிழமை (06) கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது “கெஹெல்பத்தர பத்மே”, “கொமாண்டோ சலிந்த” மற்றும் “பாணந்துறை நிலங்க” உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது. இதனையடுத்து “கெஹெல்பத்தார பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்தையடுத்து அவர்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224503