Everything posted by கிருபன்
-
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம்
ஈரானில் போராட்டங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000 ஐ தாண்டியது 17 January 2026 ஈரானில் நடைபெற்று வரும் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக இதுவரை 3,090 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும். இந்தநிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது. வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த இணைய சேவையை அரசாங்கம் துண்டித்துள்ளது. இயல்பு நிலை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://hirunews.lk/tm/441082/death-toll-from-protests-in-iran-exceeds-3000
-
2048 இலக்கை நோக்கிய இலங்கையின் கல்விப் பயணம்
2048 இலக்கை நோக்கிய இலங்கையின் கல்விப் பயணம் விக்னேஸ்வரன் கோபிகா, கல்வியில் சிறப்பு கற்கை இலங்கையின் கல்வி வரலாற்றில் 1943ஆம் ஆண்டு சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முறைமை ஒரு புரட்சிகரமான மைல்கல்லாகும். எனினும், தசாப்தங்கள் கடந்த நிலையில், தற்போதைய பரீட்சை மையக் கல்வி முறைமை மாணவர்களின் படைப்பாற்றலை முடக்குவதாகவும், உலகளாவிய சவால்களுக்கு அவர்களை தயார்ப்படுத்தத் தவறுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில், 'தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பு 2023-2033' (NEPF) இன் கீழ் 2026ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள், இலங்கையின் கல்வி வரலாற்றில் இரண்டாவது பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகின்றன. சீர்திருத்தத்தின் பின்னணியும் நோக்கமும் 2048 ஆம் ஆண்டில் இலங்கை ஒரு முழுமையான அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் என்ற தேசிய இலக்கை நோக்கியே இச்சீர்திருத்தங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தரம், சமத்துவம் மற்றும் சிறந்து விளங்குதல் ஆகிய மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்ட இத்திட்டம், வெறும் பாடத்திட்ட மாற்றம் மட்டுமல்லாது, ஒரு சமூக-பொருளாதார மறுசீரமைப்பாகும். 2026 ஜனவரி முதல் தரம் 1 மற்றும் தரம் 6 ஆகிய வகுப்புகளுக்கு முதற்கட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஐந்து பிரதான தூண்கள் புதிய மாற்றங்கள் ஐந்து முக்கிய பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன: 1. கலைத்திட்ட மறுசீரமைப்பு: பாடங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, 21ஆம் நூற்றாண்டின் திறன்களான டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் நிலைபேறான அபிவிருத்தி ஆகியவற்றை உள்ளடக்குதல். 2. ஆசிரியர் பயிற்சி: புதிய கற்பித்தல் முறைகளுக்காக 10,000 முதன்மைப் பயிற்றுவிப்பாளர்கள் மூலம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல். 3. உட்கட்டமைப்பு மேம்பாடு: பாடசாலைகளுக்கிடையிலான வள ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, வகுப்பறை மாணவர் எண்ணிக்கையை 35 ஆகக் குறைத்தல். 4. மதிப்பீட்டு முறைகள்: பரீட்சை மைய முறையிலிருந்து விலகி, 'தொடர்ச்சியான மதிப்பீடு' (Continuous Assessment) மற்றும் GPA முறையை அறிமுகப்படுத்துதல். 5. சமூக பங்களிப்பு: பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே புதிய முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல். பாடசாலை நேர மாற்றமும் சவால்களும் செயற்பாடு சார்ந்த கற்றலுக்காகப் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2.00 மணி வரை நீடிக்க எடுக்கப்பட்ட முடிவு, ஆசிரியர் சங்கங்களின் எதிர்ப்பு மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் காரணமாகப் பல விவாதங்களை ஏற்படுத்தியது. இறுதியில், மாணவர் நலன் கருதி பாடசாலை நேரம் 1.30 மணி வரை எனத் தீர்மானிக்கப்பட்டது. இது மாணவர்களின் சோர்வைக் குறைக்கும் அதேவேளை, மேலதிக செயற்பாடுகளுக்கான நேரத்தையும் உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி மாற்றங்கள் ஆரம்பக் கல்வியில் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக 'செயற்பாட்டுப் புத்தகங்கள்' அறிமுகப்படுத்தப்படவுள்ளன. தரம் 6 முதல் 9 வரையிலான மாணவர்களுக்கு 'கடன்' (Credit) அடிப்படையிலான கற்றல் மற்றும் நிதிசார் கல்வியறிவு, தொழில்முனைவு போன்ற பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுவது ஒரு முக்கிய நகர்வாகும். தற்போதைய சாதாரண தரப் பரீட்சை முறையானது மாணவர்கள் ஒன்பது பாடங்களைக் கற்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது. இது மாணவர்களுக்குக் கடும் மன அழுத்தத்தையும், பாடசாலை நேரத்திற்கு அப்பால் மேலதிக வகுப்புக்களை (Tuition) நாடிச் செல்லும் சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. இதைக் கருத்திற் கொண்டு 2029 இல் முதன்முறையாக நடத்தப்படவுள்ள புதிய சாதாரண தரப் பரீட்சையில் புரட்சிகரமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 1. பாடங்களின் எண்ணிக்கை குறைப்பு புதிய முறைமையின் கீழ், ஒரு மாணவர் தோற்ற வேண்டிய பாடங்களின் எண்ணிக்கை 9 இலிருந்து 7 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களின் பாடச் சுமையைக் குறைப்பதோடு, அவர்கள் கற்கும் விடயங்களை ஆழமாகவும் செய்முறை ரீதியாகவும் உள்வாங்க வழிவகுக்கும். 2. பாடக் கட்டமைப்பு (Core & Electives) மாணவர்களின் அடிப்படை அறிவை உறுதி செய்யவும், அதேவேளை அவர்களின் தனிப்பட்ட ஆர்வத்தை ஊக்குவிக்கவும் பாடங்கள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: • கட்டாயப் பாடங்கள் (Common Core Curriculum - 5): 1. தாய்மொழி (சிங்களம் அல்லது தமிழ்) 2. ஆங்கில மொழி 3. கணிதம் 4. விஞ்ஞானம் 5. சமயமும் விழுமியக் கல்வியும் • விருப்பப் பாடங்கள் (Elective Subjects - 2): மாணவர்கள் தங்களின் எதிர்கால இலக்குகளுக்கு ஏற்ப பின்வரும் தொகுதிகளில் இருந்து இரண்டு பாடங்களைத் தெரிவு செய்யலாம்: * சமூக அறிவியல்: வரலாறு, புவியியல். * தொழில்நுட்பம்: தகவல் தொழில்நுட்பம் (ICT), விவசாயம், உணவுத் தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம். * கலை மற்றும் ஆரோக்கியம்: அழகியல் பாடங்கள் (சங்கீதம், நடனம், சித்திரம்), சுகாதாரம் மற்றும் உடற்கல்வி. 3. மதிப்பீட்டு முறையில் மாற்றம் (GPA அறிமுகம்) இதுவே இந்தப் புதிய சீர்திருத்தத்தின் மிக முக்கியமான பகுதியாகும். இதுவரை நடைமுறையிலிருந்த ஏ (A), பி (B), சி (C), எஸ் (S), எஃப் (F) என்ற தரப்படுத்தல் முறை நீக்கப்பட்டு, தரப் புள்ளிச் சராசரி (GPA) முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. • தோல்வி (Fail) என்ற நிலை இல்லை: புதிய முறைமையின் கீழ் எந்தவொரு மாணவரும் 'தோல்வியடைந்தார்' எனக் கருதப்பட மாட்டார்கள். • தொடர்ச்சியான மதிப்பீடு (70:30 விகிதம்): இறுதிப் பரீட்சைக்கு மாத்திரம் 100% புள்ளிகளை வழங்காமல், 70% புள்ளிகள் இறுதிப் பரீட்சைக்கும், 30% புள்ளிகள் பாடசாலையில் நடத்தப்படும் 'தொடர்ச்சியான மதிப்பீடுகளுக்கும்' (Assignments, Projects, Attendance) வழங்கப்படும். • மன அழுத்தக் குறைப்பு: ஒரு மாணவர் ஒரு பாடத்தில் குறைவான புள்ளிகளைப் பெற்றாலும், அது அவருடைய ஒட்டுமொத்த GPA புள்ளிகளைப் பாதிக்காது என்பதோடு, அவர் அடுத்த கட்டத்திற்கு (உயர்தரம் அல்லது தொழிற்கல்வி) செல்வதற்குத் தடையாக இருக்காது. உயர்தரம் மற்றும் திறனாய்வுத் தேர்வுகள் 2027 முதல் உயர்தரப் பிரிவில் 'இரட்டைப் பாதை' (Dual Pathway) முறை அறிமுகமாகிறது. பல்கலைக்கழகம் செல்ல விரும்புவோருக்கு 'கல்விப் பாதை'யும், விரைவாக வேலைவாய்ப்பைப் பெற விரும்புவோருக்கு 'திறன் பாதை'யும் (NVQ சான்றிதழுடன்) வழங்கப்படும். மேலும், தரம் 9 இல் அறிமுகப்படுத்தப்படவுள்ள 'உளவியல் தேர்வு' (Psychometric Test), மாணவர்கள் தங்களின் இயல்பான திறமைகளைக் கண்டறிந்து சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க உதவும். தொழில்நுட்பம் மற்றும் ஒழுக்க விழுமியங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கோடிங் (Coding) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், மாணவர்களின் ஆளுமையைச் செதுக்க 'ABCDE' (Attendance, Belongingness, Cleanliness, Discipline, English) என்ற புதிய கட்டமைப்பு முன்மொழியப்பட்டுள்ளது. இது கல்வியுடன் ஒழுக்கத்தையும் இணைக்கும் ஒரு முயற்சியாகும். வரப்பிரசாதமா அல்லது சுமையா? இப்புதிய சீர்திருத்தம் பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும், சில சவால்களையும் கொண்டுள்ளது: • வரப்பிரசாதங்கள்: பரீட்சை பயம் குறைதல், தொழில்சார் திறன்கள் மேம்படுதல், பாடச் சுமை குறைதல் மற்றும் நெகிழ்வான கற்றல் சூழல். • சுமைகள்: கிராமப்புற பாடசாலைகளில் நிலவும் உட்கட்டமைப்பு மற்றும் இணைய வசதி குறைபாடுகள், ஆசிரியர்களுக்கான போதிய பயிற்சி கால அவகாசம் இல்லாமை மற்றும் தொகுதி நூல்களில் (Modules) காணப்படும் தொழில்நுட்பத் தவறுகள். 2026 புதிய கல்விச் சீர்திருத்தம் என்பது ஒரு மாற்றத்தின் ஆரம்பமே. இது வெற்றியடைய வேண்டுமாயின், வளங்கள் சமமாகப் பகிரப்பட வேண்டும் மற்றும் ஆசிரியர்கள் இத்திட்டத்தின் உண்மையான பங்காளிகளாக மாற்றப்பட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு, மாணவர்களின் எதிர்காலத்தை மட்டும் கருத்திற்கொண்டு இதை நடைமுறைப்படுத்தினால், இது இலங்கையின் எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு மாபெரும் 'வரப்பிரசாதமாக' அமையும் என்பதில் ஐயமில்லை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/2048-இலக்கை-நோக்கிய-இலங்கையின்-கல்விப்-பயணம்/91-371129
-
பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை!
பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை! adminJanuary 16, 2026 இங்கிலாந்தின் லிவர்பூல் (Liverpool) நகரில், பிரிந்து வாழ்ந்த தனது மனைவியை மக்கள் நடமாட்டம் உள்ள கடையொன்றில் வைத்து இரக்கமற்ற முறையில் குத்திக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 47 வயதான நிமலராஜா மதியபரணம் என்பவரே இந்த அதிர்ச்சிகரமான குற்றத்தைச் செய்தவர். செஃப்டன் (Sefton) பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்த தனது மனைவி நிலானி நிமலராஜாவை (44), கடந்த ஜூன் 20 அன்று மதியபரணம் கத்தியால் தாக்கிப் படுகொலை செய்தார். நிலானி தனது மகள்களுடன் அந்தக் கடைக்கு மேல் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தார். “அம்மாதான் எனக்கு எல்லாமே. இந்தச் சம்பவத்தால் நான் என் அம்மா, அப்பா, வீடு என அனைத்தையும் இழந்துவிட்டேன். தந்தையர் குடும்பத்தைப் பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும், அதை அழிப்பவர்களாக இருக்கக் கூடாது. என் தந்தை எனக்குத் துரோகம் இழைத்துவிட்டார்.” பாதிக்கப்பட்ட நிலானி, ஒரு கனிவான மற்றும் ஒழுக்கமான பெண்ணாக வாழ்ந்தவர் என்பதை நீதிபதி தனது தீர்ப்பில் பதிவு செய்தார். https://globaltamilnews.net/2026/226663/
-
பராசக்தி - சுப.சோமசுந்தரம்
இலண்டனில் இந்திய தணிக்கை குழுவின் கத்தரி இல்லாமல் திரையில் பார்த்தேன். இந்தி திணிப்புக்கு எதிரான கதை எனினும் பல சமசரங்களுடன்தான் திரைக்கதை அமைந்துள்ளது. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் கட்சிகளால்தான் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டது என்பது புரிதல். ஆனால் படத்தில் இந்திய நாடு முழுவதும் பரவிய இரகசிய மாணவர் அமைப்பினால் (அதுவும் தமிழ்ப் பெயராகிய புறநானூற்றுப் படை) முன்னெடுக்கப்பட்டதாகக் காட்டப்பட்டது புனைவு. திராவிடக் கட்சிகள், இடது சித்தாந்தக் கட்சிகளின் பங்களிப்பு காட்டப்படவில்லை. இப்போதைய "ஜென் Z" தலைமுறைக்கு இப்படி ஒரு வரலாறு இருந்தது என்பதைச் சொல்லத்தான் வேண்டும். ஆனால் இன்னும் உணர்வோடு சொல்லியிருக்கலாம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதுவரை போட்டியில் கலந்து கொண்ட 10 பேரின் பதில்கள் தரவேற்றப்பட்டுள்ளது. வெற்றிபெற வாழ்த்துக்கள்! 1 செம்பாட்டான் 2 ஏராளன் 3 வசீ 4 புலவர் 5 சுவைப்பிரியன் 6 அல்வாயன் 7 ஈழப்பிரியன் 8 நியூ பலன்ஸ் 9 வாத்தியார் 10 கறுப்பி பாகிஸ்தான், ஐக்கிய அமெரிக்கா, சிறிலங்கா, இத்தாலி, மேற்கிந்தியத் தீவுகள், ஐக்கிய அமீரகம் ஆகிய ஆறு அணிகள் இன்னமும் தங்கள் வீரர்களின் பட்டியலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@Newbalance , உங்கள் தெரிவுகளின்படி இந்தக் கேள்விக்கான பதில் SA அல்லது WI. உங்கள் தெரிவைத் தாருங்கள்.
-
“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்! 16 Jan, 2026 | 12:48 PM வெனிசுவெலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவைச் சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம். நான் செய்த பணிக்காக மரியா தனது அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு வழங்கினார். பரஸ்பர மரியாதையின் அற்புதமான செயல் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததோடு, மரியா கொரினா மச்சாடோவுக்கு தனது நன்றியினையும் வெளிப்படுத்தியுள்ளார். நேற்று வியாழக்கிழமை (15) வெள்ளை மாளிகைக்கு சென்று ட்ரம்பை சந்தித்த வெனிசுவெலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தான் பெற்ற 2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுப் பதக்கத்தை ட்ரம்பிடம் வழங்கினார். தனது நாட்டின் சுதந்திரத்துக்கான ட்ரம்பின் தனித்துவமான அர்ப்பணிப்புக்கு, தான் அளிக்கும் கௌரவம் என்று கூறிய மரியா கொரினா மச்சாடோவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ட்ரம்ப் சமூக ஊடகத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். “மரியா கொரினா மச்சாடோ, பலவற்றைக் கடந்து வந்த ஒரு அற்புதமான பெண்மணி. நான் செய்த பணிக்காக மரியா தனது அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு வழங்கினார். பரஸ்பர மரியாதையின் அற்புதமான செயல். நன்றி மரியா!” என்றும் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு இந்த நோபல் பரிசுக்காக உலகில் இடம்பெறும் போர்களையெல்லாம் நிறுத்தியதாக ட்ரம்ப் வெற்றி முழக்கமிட்டதாக சர்வதேச ஊடகங்களும் தெரிவித்திருந்தன. எனினும், 2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்ப் பெறாத காரணத்தினாலும் அந்தப் பரிசை மரியா பெற்றதனாலும் தனது அதிருப்தியை அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார். அதன் பின்னர், வெனிசுவெலா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், ட்ரம்பின் ஆலோசனைப்படி அமெரிக்க இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அதன் பின்னர், அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர், ட்ரம்பின் செயலுக்காக, தான் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கு வழங்கி கௌரவிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். எனினும், ஒருவர் பெற்ற நோபல் பரிசை இன்னொருவருக்கு கைமாற்ற முடியாது என நோபல் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே நேற்று மரியா, தனது அமைதிக்கான நோபல் பரிசை, வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்தபோது அவருக்கு வழங்கியுள்ளார். Virakesari.lk“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ;...“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
-
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விசேட குழுவின் இலங்கை வருகை!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விசேட குழுவின் இலங்கை வருகை! 16 Jan, 2026 | 11:57 AM எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை சர்வதேச நாணய நிதியத்தின் உண்மை கண்டறியும் குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கொசக் (Julie Kozack) அறிவித்துள்ளார். அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியின் சேதவிபரங்களை இந்தக் குழு மதிப்பீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டம் தொடர்பான கொள்கை விவாதங்களையும் அவர்கள் நடத்துவார்கள் என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கொசக் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/236159
-
இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து பகிரங்கக் குற்றச்சாட்டு - பொறுப்புக்கூறலில் இலங்கையின் மௌனம் கலைக்கப்படுமா?
இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து பகிரங்கக் குற்றச்சாட்டு - பொறுப்புக்கூறலில் இலங்கையின் மௌனம் கலைக்கப்படுமா? 15 January 2026 அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன் விசாரணை செய்து, வழக்குத்தொடர்வதற்கு, இலங்கை அரசாங்கங்கள் தவறிவிட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தற்போதைய அரசாங்கம் 2024 இல் பதவிக்கு வந்த போது, நீதி வழங்குவதாக உறுதியளித்த போதிலும், இதுவரையில் வெளிப்படையான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களும், உயிர் பிழைத்தவர்களும் நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து வருவதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், மோதல் தொடர்பான பாலியல் வன்முறையை, இலங்கை நிவர்த்தி செய்யத்தவறியது, பொறுப்புக்கூறல் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் உரிமைகள் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு உள்நாட்டுயுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட போது, இரு தரப்பினரும் ஏராளமான போர்க்குற்றங்களைச் செய்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்கள், விசாரணைகளை முடக்கி, நீதியை மறுத்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டறிந்துள்ளதாகவும், அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/440847/public-accusations-about-sri-lankas-war-crimes-will-sri-lankas-silence-on-accountability-be-broken
-
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறை
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறை தென்கொரியவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ சட்ட அமுலாக்கம் மற்றும் கிளர்ச்சி ஆகிய விவகாரங்களில், தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இன்று (16) இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது. கடந்த 2024, டிசம்பர் 3ஆம் திகதி நள்ளிரவில், ஜனாதிபதி யூன் சுக் இயோல் திடீரென இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தி பாராளுமன்றை முடக்க முயன்றார். இருப்பினும், எம்.பிக்கள் மற்றும் பொதுமக்களின் துணிச்சலான போராட்டத்தால் சில மணிநேரங்களிலேயே இந்த முயற்சி தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், வழக்கும் தொடரப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையின் பின்னர் இன்று இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmkgilyic03zko29nrtecabjc
-
யாழில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட ஜனாதிபதி : மக்களுடன் உரையாடினார் !
நடந்து சென்று பலாலி காணிகளை பார்வையிட்ட ஜனாதிபதி Editorial / 2026 ஜனவரி 16 , மு.ப. 09:55 பலாலியில் இராணுவ படைத் தளபதிகளை இன்று (16.01.2026) காலை சந்தித்த ஜனாதிபதி அனரகுமார திஸாநாயக்க வலி வடக்கின் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் குறித்து கலந்துரையாடியுள்ளார். எழுபது வீதமான காணிகளை விடுவிப்பதாக இராணுவத்தினர் ஜனாதிபதியிடம் உறுதியளித்ததாக தெரிய வருகிறது. https://www.tamilmirror.lk/செய்திகள்/நடந்து-சென்று-பலாலி-காணிகளை-பார்வையிட்ட-ஜனாதிபதி/175-371115
-
🌾 தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க பங்கேற்பு! ✨
🌾 தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க பங்கேற்பு! ✨ adminJanuary 15, 2026 யாழ்ப்பாணம், வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் இன்று (15) நடைபெற்ற வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க அவர்கள் கலந்துகொண்டார். தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழாவில் யாழ். மக்களுடன் இணைந்து கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி இதன்போது நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். ஜனாதிபதியின் உரையில் பல இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 🗣️ குறிப்பாக தேசிய ஒருமைப்பாடு – “எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவதே தமது இலக்கு.” எனக் குறிப்பிட்டுள்ளார் இனவாதமற்ற சமூகத்துடனான பாகுபாடுகளற்ற, தேசிய ஒருமைப்பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது எனவும், கலாசார மதிப்பை பேண “ஒரு நாடு அழகாக இருக்கவும், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும் ஒவ்வொரு சமூகத்தின் கலாசாரத்தையும் மதித்து ஏற்றுக்கொள்வது அவசியம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தி உள்ளார். பொதுமக்களின் உற்சாகமான வரவேற்புடன் நடைபெற்ற இவ்விழா, வடக்கு மற்றும் தெற்கு மக்களிடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு நிகழ்வாக அமையும் என எதிர்பாரக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2026/226606/
-
வல்வெட்டித்துறை கடற்கரையில் பட்டதிருவிழா!
வல்வெட்டித்துறை கடற்கரையில் பட்டதிருவிழா! adminJanuary 16, 2026 வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகவும் இணைந்து நடாத்திய பட்டத் திருவிழா வல்வெட்டித்துறை கடற்கரையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (15.01.26) இடம்பெற்றது. இதில் முதலாம் இடத்தை யோ. பிரகாஷின் அச்சுலேட்டர் பட்டம் பெற்றது. இரண்டாம் இடத்தை லோ.கோபிசாந்தின் விண்ணில் சிதறிய ரத்தினங்கள் பட்டமும், மூன்றாம் இடத்தை யோ.பிரகாஷின் சாகசம் காட்டும் விமானம் பட்டமும் பெற்றது. இந்த நிகழ்வில் விருந்தினர்களாக இந்திய துணைத் தூதர் சாய் முரளி, வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் எம்.கே சிவாஜிலிங்கம், யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதிபராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2026/226615/
-
💔மன்னார் பேசாலையில் பெரும் சோகம்: கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி! 🌊
💔மன்னார் பேசாலையில் பெரும் சோகம்: கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி! 🌊 adminJanuary 16, 2026 மன்னார் பேசாலை கடல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (15) மாலை நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நண்பர்களுடன் இணைந்து பேசாலை கடல் பகுதிக்கு நீராடச் சென்றுள்ளனர். இதன்போது எதிர்பாராத விதமாக அவர்கள் அலையில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளனர். உயிரிழந்தவர்கள் 16 முதல் 18 வயதுடைய பேசாலை, வசந்தபுரம் மற்றும் உதயபுரம் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ஒரு பாடசாலை மாணவரும் அடங்குவார். நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் நேற்று இரவு கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டு, மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு இளைஞன் உயிருடன் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். பேசாலை காவற்துறையினர் இந்த துயரச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தைப்பொங்கல் கொண்டாட்டங்களின் மத்தியில் நிகழ்ந்த இந்த உயிரிழப்புகள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே மீளாத் துயரை ஏற்படுத்தியுள்ளது. https://globaltamilnews.net/2026/226620/
-
அச்சமும், தப்பியோடும் விருப்பும் மரியாதைக்குரியது : சயந்தன்
அச்சமும், தப்பியோடும் விருப்பும் மரியாதைக்குரியது : சயந்தன் அனோஜன் பாலகிருஷ்ணன் கேள்வி: ஆறாவடு வெளியாகி சில வருடங்கள் கழித்து, ஆதிரை வெளியாகியது. அதன் பின்னர் கணிசமான காலம் கழித்து அசேரா, மீண்டும் நீண்ட காலம் கடந்து ‘திசை ஒன்பது’ வெளியாகிறது. நாவல்கள் எழுதப்படுவதற்கு இடையிலான பருவங்கள் அதிகமாகவே உங்களுக்கு இருக்கின்றன. இந்த இடைப்பட்ட காலங்கள் உங்களுக்கு எவ்வாறு கழியும், என்ன வகையான தொந்தரவுகளை எதிர்கொள்வீர்கள் ஒரு எழுத்தாளராக? பதில்: நாவல்கள் மட்டுமல்ல, பொதுவாக நான் எழுதுவதே அதிக கால இடைவெளியைக் கொண்டிருக்கிறது. கடைசியாக பூரணம் சிறுகதையை 2019இல் எழுதிய பிறகு இன்னொரு சிறுகதையை இன்னமும் எழுதவில்லை. நாவல்களுக்கிடையிலும் கிட்டத்தட்ட 5 ஆண்டுகால இடைவெளி உண்டு. இடைப்பட்ட காலங்களில் தொந்தரவெல்லாம் இல்லை. எழுத்தை தலையிலே சுமந்தபடி இறக்கிவைக்க முடியாத அவஸ்தையிலும் தத்தளிப்பிலும் சிக்கினேன், அதை உருவாக்கும் வேதனையில் உழன்றேன் என்றெல்லாம் சொல்லும்படியாக எழுத்தை நான் ‘அந்தளவுக்கு’ ரொமான்டிசைஸ் செய்யவில்லை. அப்ப நான் ஏன் எழுதுகிறேன்… என்றால் எழுதுவது எனக்குப் பிடித்திருக்கிறது. அதனால் எழுதுகிறேன். அதை எனக்குப் பிடித்த மாதிரி எழுதுகிறேன். வாசிப்பவர்களுக்கும் பிடித்தால் மகிழ்கிறேன். அவ்வளவுதான். எழுத்தென்றல்ல, எல்லா இலக்கியச் செயற்பாடுகளும் எனக்கு விருப்பமானவையே… எழுதாத நேரங்களில் அப்படியொன்றில் ஈடுபடுவேன். வாசிப்பேன். மொழிபெயர்ப்புகளில், குறிப்பாக ஆபிரிக்க எழுத்துகளில் ஆர்வம் உண்டு. இப்ப கொஞ்சக்காலமாக தமிழிலிருந்து சிங்களத்துக்குக் கொண்டுசெல்கிற வேலைகளை விரும்பிச் செய்கிறேன். சிங்களப் புத்தகங்களைப் பதிப்பிக்கிறேன். எதுவுமில்லையென்றால் ஆகக் குறைந்தது அகழ் இணையத்தின் லேஅவுட் டிசைனை மாற்றுகிறேன் பேர்வழி என்று எதையாவது நோண்டுவேன். அதுவும் ஒருவகையில் இலக்கியச் செயற்பாடுதானே…நாவல்களுக்கிடையில் ஐந்து ஆண்டுகள் என்று சொன்னேன்…அதில் எழுதும் காலமும் அடக்கம். ஆதிரைக்கு மூன்று ஆண்டுகள். திசை ஒன்பதுக்கு இரண்டு ஆண்டுகள். அப்படிப் பார்த்தால் நான் கொஞ்சம் ஸ்லோதான். அதுவொன்றும் பெரிய பிரச்சனை இல்லைத்தானே.. கேள்வி: ஒவ்வொரு நாவலுக்கும் நீங்கள் பயன்படுத்தும் மொழி வித்தியாசமானது. ஆறாவடு வில் இருந்த துள்ளலான நடை, ஆதிரையில் இருக்காது. அஷேராவில் வேறு மாதிரி. திசை ஒன்பது நாவலில், மீண்டும் ஆறாவடுவில் பார்த்த நடையை உணர இயல்கிறது. நாவலின் கரு, மொழியைத் தேர்வு செய்கிறதா? அல்லது மொழிக்காக நாவலின் கருக்களைப் பெறுகிறீர்களா?, சுருக்கமாகக் கேட்டால், வடிவத்தை நோக்கி நீங்கள் செல்கிறீர்களா அல்லது வடிவம் உங்களை நோக்கி வருகிறதா? பதில்: பார்ப்பதற்கு அப்பாவி போல இருக்கும் இவர்… என்றுதான் தொடங்க வேண்டும். உங்களுக்கே தெரியும், கேலியும் கிண்டலும், நக்கலும் நையாண்டியும் counter பகிடிகளும்தான் என்னுடைய இயல்பு. ஆறாவடுவில் அது அழகாக வெளிப்பட்டது. ஆறாவடுவை புறவயமான சம்பவங்களுக்கூடாக, பாத்திரங்களின் அகத்தைத் தொடாமல், அதை விசாரணை செய்யாமல் எழுதி இருந்ததால் அந்த மொழி பொருத்தமாக வசப்பட்டிக்கக் கூடும். முகத்துக்கு நேரே நீட்டப்பட்டிருக்கும் துவக்கிலிருந்து சீறி வெளியேறும் சன்னம் நெற்றியைத் தொடுமுன்னர் மனதில் அலைஅலையென எழும் எண்ணங்களை பத்துப் பக்கங்களுக்குக் குறையாமல் எழுதலாம் என்று எனக்கு அப்போது தெரியவில்லை. அதற்குப் பிறகு ஆதிரை. அது மாபெரும் துயரக்கதை. ஒடுக்கப்பட்டவர்கள், விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்களின் கதைகளைச் சொல்லும்போது சிரித்துவிளையாட முடியாது. அது அறமும் இல்லை. அதேபோல அஷேராவும் பிறழ்வடைந்த மனங்களின் கதை. ஆங்காங்கே கறுப்புப் பகிடிகள் இடப்பெற்றாலும் அந்த மொழியும் தீவிரமானது. திசை ஒன்பது கதையாகத் திரண்டபோதே, அது கோர்த்துச் செல்கிற சம்பவங்கள் கற்பனையில் விரிந்தபோதே, இதற்குத் தீவிரமற்ற கொஞ்சம் பகிடியான மொழி போதும் என்றும் தோன்றிவிட்டது. ஆழத்தில் எங்கோ ஒரு நெஞ்சடைப்பை உணரமுடிந்தாலும் திசை ஒன்பது பெரும் துயரோ கடும் வலியோ கொண்ட ஒன்றல்ல. அதே நேரம், துப்பாக்கிச் சன்னம் நெற்றியைத் தொடுவதற்கிடையில் பத்துப் பக்கங்களுக்கு மனம் அலைபாயவும் செய்கிற கதை. இப்போதெல்லாம் புறச் சம்பவங்களை விட்டுவிட்டு மனித மனங்களை நெருங்கி ஆராய்ந்து எழுதுவது கிளர்ச்சியாக இருக்கிறது. கதை மாந்தர்களுடைய மூளையை நான் எழுத்தால் துப்பறிவதுபோன்ற ஓர் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு விதத்தில் ஆதிரைக்கும் அஷேராவுக்கும் பிறகு குண்டு வெடிக்காத கதையொன்றை எழுதவும் விரும்பியிருந்தேன். அதனாலும் திசை ஒன்பதை எழுதினேன். உங்களுடைய கேள்விக்கான பதில் – எழுதும் கருவே மொழியைத் தெரிவு செய்கிறது. அப்புறம் மொழியிலும் வடிவத்திலும் உத்திகளிலும் ஒவ்வொரு நாவல்களிலும் வேறுபட்டிருப்பது, ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்தன்மையைக் கொடுக்குமல்லவா… சயந்தன் கேள்வி: திசை ஒன்பது நாவலின் கரு எப்படி உருவாகியது? அதன் வீச்சை விரிவாக்க என்ன வகையான தயாரிப்புகளைச் செய்தீர்கள்? பதில்: ஒரு தமிழ் இளைஞரை தற்செயலாகச் சந்தித்ததுதான் நாவலுக்கான தொடக்கம். அதற்கு முன்னிருந்தே, ஒரு கதையை இலங்கைக்கு வெளியே எழுதினால்தான் என்ன என்று மனது அசைபோட்டுக்கொண்டே இருந்தது. அஷேராவில் அதை முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் என் திட்டத்தையும் மீறி அது ஈழத்துக்குப் போய்விட்டது. ஆகவே, மேற்சொன்ன தற்செயல் சந்திப்பு ஒரு முழுமையான கதைப்படத்தை இலங்கைக்கு வெளியே எனக்குள் வரைந்தது. எழுதத் தொடங்கிவிட்டேன். அதற்குப் பிறகு எழுத்துக் கோரிய தயாரிப்புக்களைச் செய்தேன். அது பெருமளவுக்கு நிலவரைபியல் தொடர்புபட்டதுதான். பிறகு கதையின் மையத்துடன் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத உலகளாவிய புவியியலும் வரலாற்றுத் துன்பங்களும் இயல்பாக இணைந்தன. முக்கியமான ஒரு விஷயம். கேள்வி: ஆதிரை நாவலில், நிலப்பரப்பு சார்ந்த சித்தரிப்பில், மிக நுண்மையான அவதானங்கள் திரண்டு வந்தன – மரம், செடி, பறவைகள் என்பன துல்லியமக உள்வந்தன. திசை ஒன்பது, முழுக்க ஐரோப்பாவைச் சுற்றி வருகின்றது. இங்கே அதே வகையான துல்லியத்தைக் கொண்டுவருவதற்குக் கடும் சவால்கள் இருந்தனவா? பதில்: ஆதிரை பற்றிய உங்களுடைய அவதானங்களைச் சொன்னது, சந்தோசம். தெரிந்த நிலத்தை எழுதுவதற்கும் தெரியாத நிலத்தை எழுதுவதற்கும் சவால்கள் உண்டுதானே.. இடைவெளிகள் இருக்கும்தானே. அவற்றை புனைவால் இட்டு நிரப்புவதால்தானே புனைவெழுத்தாளர் எனப்படுகிறோம். உக்ரேனையும் ரஷ்யாவையும் அப்படித்தான் எழுதியிருக்கிறேன். நாவலில் இரண்டு பாத்திரங்களாகக் கூடவே வருகிற குளிரையும் இருளையும் எழுதுவதற்கு எனக்குச் சிரமமாகவே இருக்கவில்லை. அந்த இரண்டும் இங்கே ஐரோப்பாவிலே என்னைக் கொல்லும் சனியன்கள். அப்புறம், பரீட்சயம் இல்லாத நிலத்தை எழுதுவதில் ஒரு நல்வாய்ப்பும் இருக்கிறது. அந்த நிலத்தை, சூழலை முதலில் நமக்குள் இழைத்து இழைத்து கற்பனையில் உருவாக்க வேண்டியிருக்கும். அது எதையும் தவறவிடமால் எழுதுவதற்கு உதவும். ஆறாவடு எழுதியிருந்த சமயத்தில் ஒரு விமர்சகர், “அளவெட்டியில் நீங்கள் சொன்ன இடத்தில் மதிலே இல்லை. வேலிதான் இருக்கிறது” என்று சொன்னார். அளவெட்டியைத் தெரியாதவர்களுக்கு அங்கே ஒரு மதில் இருந்தது என்று நம்பப்பண்ணுவதுதானே புனைவின் வெற்றி. கேள்வி: கதையின் மையப்பாத்திரம், இத்தனைத் தடைகளைக் கடந்து புலம்பெயர்வதற்கு பின்னுள்ள காரணத்தை, அவனது தேசிய அடையாளத்தின் ஒரு அங்கமாக மட்டும் நாம் குறுக்கிக்கொள்ள இயலுமா? பதில்: நாங்கள் புலம்பெயர்வதற்கு நிறையக் காரணங்களைச் சொல்கிறோம். போர், உயிர் அச்சம் இந்த மாதிரி.. யோசித்துப்பார்த்தால் இது எதுவுமே இல்லாமல் கூட.. “நான் எனக்குப் பிடித்த ஒரு வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். அவ்வளவுதான்” என்பதற்காகக் கூட எவரொருவரும் புலம்பெயரலாம் என்றே தோன்றுகிறது. ஒரு பொறியியலாளர் புலம்பெயர்வதைப்போல.. ஒரு டொக்ரர் புலம்பெயர்வதைப்போல.. எவரொருவரும் நானும் புலம்பெயரப் போகிறேன் என்று ஆசைப்படுவதில் தப்பிருக்குமா என்ன? இருக்காது. அப்படிப்பட்ட ஆசையில் ஒருவருடைய தேசிய அடையாளம் என்ன செல்வாக்குச் செலுத்துகிறது என்பதுதான் கதை. கேள்வி: சமகாலத்தில் வெளியாகும் ஈழ நாவல்கள், பெரும்பாலும் நினைவு கூர்தலை அடிப்படையாகக் கொண்டவை என்று கூடச் சொல்லலாம். சமகாலத்தில் இருந்து விலகி பத்து வருடங்கள் தொலைவிற்குச் சென்றே கதைகள் ஆரம்பிக்கின்றன அல்லது நிகழ்கின்றன. திசை ஒன்பது சமகாலத்தில் உள்ளது. உலகம் முழுவதும் எழுந்து வரும் வலது சாரிய எழுச்சி, குடியேற்றம் மற்றும் அகதிகளுக்கு எதிரான மனநிலை, என்று பல்வேறு தரப்புகளை அணுகுகிறது. அதில் அதிகம் சுவாரசியம் தருவது, பொதுவாக அகதிகள் என்று நாம் சுருக்கினாலும், எந்த நாட்டில் இருந்து, எந்த நிறத்தில் இருந்து வரும் அகதி என்பதற்கு ஏற்ப வரவேற்பு மாறுபடுகின்றது என்ற நுட்பமான இடத்தை நாவல் பிரதானமாக தொடுகிறது. இந்த நாவலின் அடிப்படை conflict இதுதான் என்று தோன்றுகிறது. ஏற்கிறீர்களா? பதில்: ஏற்கலாம். ஆயினும் அடிப்படை என்று பார்த்தால் மனிதர்களுடைய அச்சமும், தப்பியோடும் விருப்பும் மரியாதைக்குரியது, மதிக்கப்பட வேண்டியது என்பதுதான். குழந்தை வீரர்களின் கதைகள் மட்டுமல்ல வளர்ந்த கோழைகளின் கதைகளும் பாடப்படவேண்டியவை. அவர்களுடைய ஓட்டத்தில் குறுக்கிடும் (அகதிகள் விவகாரத்தில்) ஐரோப்பிய மனநிலை என்றவாறாக ஒரு கோட்டை நாம் வரையலாம். கேள்வி: ஈழநாவல்கள் பெரும்பாலும் ஒரு பெரிய நாவலின் தனித் தனி அத்தியாயங்களாக மதிப்பிடப்படுகிறன. மதிப்பிடத்தக்க மாதிரியே அமைந்தும் விடுகின்றன. இந்தச் சவாலை மீறி கதை சொல்வது எப்படி? பதில்: நான் தனிப்பட இதற்கு வெளியே வரவேண்டுமென்று விரும்புகிறேன்தான், ஆதிரையை எழுதிவிட்டு அப்படி நினைப்பதும் தகும். அது வேறு விடயம், ஆனால் ‘இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஈழத்துப் போரையே எழுதிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்’ என்ற கேள்வியை ஈழ எழுத்தாளர்கள் சட்டை செய்யவே தேவை இல்லை. அழுது தீராத துயரங்கள், நீதி கிடைக்காத குற்றங்கள் இருக்கும்வரை சொல்லித் தீராத கதைகளும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும். அந்த வாழ்வை நீங்களும் வாழ்ந்து பாருங்கள் என்பது எழுத்தாளரின் கோபமாக வெளிப்படலாம். கெஞ்சலாக வெளிப்படலாம். ஆனால் வெளிப்படும். கேள்வி: உங்களுடைய முதல் நாவலுக்கு பதினைந்து வயதாகிறது. இன்றைக்கு இலக்கியத்தை எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்? பதில்: நாவலுக்கு நிறையக் காலத்துக்கு முன்னரே எழுதிக்கொண்டுதான் இருந்தேன். போர் நடந்துகொண்டிருந்த காலத்தில் இலக்கியம் எப்படி அறிமுகமாயிற்று என்றால், புலிகள் ஒரு போரைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அந்தப் போரின் நியாயத்தை மக்களுக்கு எடுத்துரைக்கவே கதைகளும் கவிதைகளும் நாடகங்களும் ஓவியங்களும் எழுதப்படுகின்றன என்ற ஒரு சித்திரமாகத்தான் அறிமுகமாயிற்று. தொன்னூறுகளில் பத்து வயதில் இருந்த எல்லோருக்கும் இது பொருந்தும். ஈழநாதமும் வெளிச்சமும் எங்களுக்கு அதைத்தான் சொல்லித்தந்தன. இதிலிருந்து வெளியேறி இலக்கியத்தை வேறு விதமாகப் புரிந்துகொள்வதற்கு எனக்கு நிறையக் காலங்கள் ஆனது. அதற்குப் பிறகுதான் நிறையத் தயக்கங்களைக் களைந்தேன். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைச் சிறு உதாரணத்துடன் சொல்வதென்றால், அஷேரா நாவலில் புலிகளால் நடாத்தப்பட்ட ‘கந்தன் கருணைப் படுகொலை’ வரிக்கு வரி விபரிக்கப்படும். ஒரு நண்பர், நீயா இப்படி எழுதினாய் என்று கேட்டார். ஓம். எழுத்துக் கோரினால், எழுதுவேன் என்றேன். இதுதான் இப்போது வந்திருக்கிற இடம். 000 திசை ஒன்பது : தமிழினி வெளியீடு https://akazhonline.com/?p=11255
-
நூல் அறிமுகம் : உட்துறைமுகம்!
நூல் அறிமுகம் : உட்துறைமுகம்! ஆசிரியர்: வி. கௌரிபாலன் நூல் வகை: தமிழ் நாவல்; 332 பக்கங்கள் பதிப்பகம்: விடியல் பதிப்பகம் வெளியீட்டு ஆண்டு: 2022 “உட்துறைமுகம்” ஒரு தமிழ் நாவல். ஆயுதப் போருக்குப் பிந்திய தற்கால ஈழச் சமூகத்தில் இலங்கையின் திருகோணமலையை மையமாக கொண்ட தனியொருவனுக்கு நேரும் அவலத்தையும் எதிர்கொள்ளலையும் சித்தரிக்கும் ஒரு படைப்பு. வி. கௌரிபாலன் எழுதிய இந்நாவலை விடியல் பதிப்பகம் 2022-ம் ஆண்டு வெளியிட்டது, மேலும், இது அகமும் புறமும் இழந்து நிற்கும் தற்கால ஈழச் சமூகத்தில் மறைக்கப்படும் ஒரு போராட்டத்தை உள்ளோட்டமாக விவரிக்கிறது. ‘உட்துறைமுகம்’ என்பது திருகோணமலை நகரின் ஒரு நிலக் குறியீடு, அடையாளம். இது மட்டுமல்ல வாழ்வியலின் குறியீடு; குறுக்கு வெட்டி: துறைமுக உள்ளக விசாலத்தை கொண்டுணர உதவும் ஒரு நிலப்பாதை. ‘Inner Harbor Road ‘ என்றாலே பலருக்கு திருகோணமையின் முகவெட்டை, குறிப்பாக துறைமுக வனப்பை அள்ளித்தரும் ஒரு பாதைவலையம். வெறும் 2.54 km அளவுள்ள ஒரு பாதை. ஆனால், அது தான் திருகோணமலை நகரின் உயிர்ப்பாதை; கடலும் நிலமும் இணையும் ஒரு புள்ளிக்கோடு. ‘உட்துறைமுகம்’, இந்நாவலின் பெயராக அமைவது நாவலின் உள்ளக வீச்சை, 1970 -கள் முதல் 2022 வரையான ஒரு காலகட்ட நிகழ்வுகளின் படலங்களாகத் தரும் நாவல் ஆகத் திகழ்கிறது. இதனால் இந்நாவல் கொண்டிருக்கும் வரலாற்றுச் சம்பவங்களால் இது வரலாற்று விபரண ஆவணமாக கவனம் கொள்ள வைக்கிறது. ‘உட்துறைமுகம்’ நாவல் முன்வைக்கும் ‘கரு’ என்பது திருகோணமலையின் ஒரு வரலாற்று முகம். சுதந்திரத்துக்கு பின்னரான திருகோணமலையின் சமூகப் பொருளாதாரம் மற்றும் இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவ இடம் சார் புவியியல், அரசியல் செல்நெறிப்போக்கு மிகவும் சிக்கலானது; பல களங்களை கண்டது; பல்முனைத் கடலசார் பயணத் தளங்களில் வலம் வருபவை. பல வல்லரசுகளின் கண்கொண்ட நிலம், மற்றும் தமிழர்களின் கனவுத் தலைநகரம்; இதயபூமி. இந்த ஈழத் தமிழர்களின் இதயத்தில் செருகிய பல கூர்முனை வாட்களின் வலிகள்; பீறிட்டு வடிந்த இரத்தக் கறைகள் தரும் அழிக்கமுடியாத விம்பங்கள் நாவலின் படிமங்களாகின்றன. இவை ஓர் ஆழ்ந்த வாசகனுக்கு பல்பரிமாணத் தரிசனங்களாகின்றன. நீண்ட காலமாக மனித் தடம் படாத ஓர் அடர்ந்த காட்டின் மௌனமாக, தேடல்களில் காணக் கிடைக்கும் மணற்குன்றுகளில் படிந்துள்ள கனிமப் படிமங்களாகப் புலப்படுகின்றன. ஈழத்தமிழர்களின் கடந்த காலங்களையும் சமகாலப் போக்குகளையும் உள்ளெடுத்து சிலாகித்து வெளிப்படுத்தும் நாவல் இலக்கியப் படைப்புக்கள் தனித்த ஈர்ப்பைப் பெறுகின்றன. ஏனெனில், மற்றைய படைப்புக்களை விட ஓர் உயிர்ப்பான பல நினைவுகொள் காலங்களை, பலரது வாழ்வின் நினைவழியாத் துண்டங்களை, அதில் வாழ்ந்த மனிதர்களது பல்நிலை மௌனங்களை, கரைந்து போக முடியாக் காலத்துயர்களை வாசகர் கண்முன் காட்ட முடியும். இதன் ஒரு சான்றாக ‘உட்துறைமுகம்’ நாவல் அமைந்திருக்கிறது. ஒரு நாவல், தனக்குள் கொண்டிருக்கும் பரந்த காலத்தை அதன் களத்தை முன்வைத்து எம்முடன் உறவு கொண்டாடினாலும் அதன் கனதி, மொழி, முன்வைப்பு, அசைவு மற்றும் முக்கியமாக அதன் கரு போன்றவனவால் ஒரு சிறந்த நாவல் இலக்கிய படைப்பாகின்றது. கௌரிபாலனின் நாவல் நடை, மொழி ஒரு சினிமா விம்பங்களுக்குரிய அனுபவ உணர்வுநிலை மொழிவழி காட்சியாக வாசகர்களுக்கு விரிகின்றது. ஒரு படைப்பு குறிப்பாக ஒரு நாவல் சிறந்தது என உணரவைப்பது, ஒவ்வொரு தனி மனிதருக்குள்ளும் புதையுண்ட பல்வேறு அனுபவங்களிலிருந்து வெளித்தள்ளும் ஒத்திசைவான உணர்நிலை உந்துகைதான். ‘உட்துறைமுகம்’ கொண்டிருக்கும் ஒவ்வொரு சொல்லும் அதைத் தேர்தெடுத்த மொழி தரும் அனுபவம் மற்றும் குறியீடுகள் கடந்த கால வாழ்வின் கனதியை, ஆழத்தை மதிப்பீடுகளாகின்றன. உட்துறைமுக ஆக்கத்தின் மூலம் கிடைக்கும் அனுபவம் என்பது கடந்த கால நிகழ்வுகள் தரும் உணர்வு நிலையாக வாசகரை நிலைக்க வைக்கிறது. திருகோணமலையில் வாழ்ந்த, வாழும் ஒவ்வொருவருக்கும் மெய்நிலை தளங்களில் தம்மைக் காணும் ஒரு அனுபவ நிலையை இந்நாவலின் வழி வாசகர்க்குக் கடத்துகிறார் படைப்பாளி. திருக்கோணமலையின் முகங்கள் எங்கும் பல தழும்புகள்- வதைகள், வேதனைகள் பல. நிலச்சுவாந்தர்களின் அடாவடித்தனங்கள், அடிமைத்தனங்கள், துறைமுகக் கலாச்சாரம் கொண்டுவந்த பெண்கள் மீதான வன்முறைகள், குடியேற்றங்கள் கொடுத்த வன்முறைகள், அதற்கு எதிரான உள்ளுர் மக்களின் தொடர் போராட்டங்கள், ஆயுத எதிர் வன்முறைகள். ஆயுத குழுக்களின் வருகை, ஆயுத இயக்கங்கள் மற்றும் அதன் மீதான அரச வன்முறையின் முழுப்பலத்தையும் எம்முள் தன தாங்கும் வலி, உட்கொள்ளும் வேதனை தான் ‘உட்துறைமுகம்’ வாசிப்பு அனுபவ நிலை. திருகோணமலை மாவட்டம் மூன்று நில மண்டலங்களை கொண்டது. வட திருகோணமலை வடமாகாணத்தின் ஒரு தொடர் பகுதி எனலாம். தெற்கு திருகோணமலை, மூதூர் மண்டலம், மட்டக்கிளப்பு மாவட்டத்தின் தொடக்க தளம். திருகோணமலை நகர், இந்த இரண்டு மண்டலங்களின் செல்வாக்கு கொள்ளும் மற்றும் செல்வாக்கு கொடுக்கும் ஒரு துறைமுக நகர். இந்த மூன்று மண்டலங்களும் மூன்று சமூகப் பொருளாதார தளங்களில் இயங்கினாலும் கடந்தகால வன்முறைகளின் ஒட்டுமொத்த செல்வாக்கும் இந்த மூன்று மண்டலங்களிலும் பரந்த, படிந்த ஓன்று. கடந்தகால திருகோணமலை மாவட்ட வன்முறைகளின் வரலாறு முழுமையாக வருவதாயின் ‘உட்துறைமுகத்தின்’ பங்கு அதற்கு வலுவாக இருக்கும். புதிய திசைகளைத் திறந்துவிட்ட எழுத்து கொலம்பிய எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸுடையது. அவரின் மொழியும் கதை சொல்லும் முறையிலும் ஒரு வீச்சத்தை தந்தவர். தனி மனிதர்களின், அவர்களின் அகம் புறம் மற்றும் சுற்றும் சூழலின் மனஉணர்வுகளை, அழுத்தங்களை, பார்க்கப்படாத யதார்த்த அசைவுகளை தனது மாய எதார்த்தத்தால் வளம் படுத்தியவர். கௌரின் ‘உட்துறைமுகம்’ தரும் ‘தரிசனமும்’ அதுதான். பெத்தவன், அல்லது அரியமாக வலம் ஒரு தனி மனிதனை சுற்றி சுழலும் வாழ்வின் அழுத்தங்களை நாவல் மையம் கொண்டு நகருகின்றது. வாழ்வின் மீதான நெருக்கடிகள்-அவனின் குடுப்பம், ஊரும் உறவுகளும் கொள்ளும் வன்முறை நெருக்கடிகளை திருகோணமலையின் குறிப்பாக திருகோணமலை நகரின் அரச வன்முறைகளின் நிலப்படவரவியலை அழகாக படம்பிடிக்கின்றது; துளிர் விடும் இன வாதம் எவ்வாறு ஒரு சகவாழ்வு நிலமாக திகழ்ந்த திருகோணமலையின் சிதைவுக்கு வழிவிட்டது என்பதை நாவல் தரும் சம்பவங்களும், கதை மாந்தர்களும், அவர்களின் உரையாடல்களும் தரும் உணர்வு நிலை வாசகர்கர்களை உள்ளிழுத்துச் செல்லும் வகையில் சிறப்பாக அமைந்திருக்கின்றது. உட்துறைமுகத்தின் வலுவான உயிர் என்பது கதை மாந்தர்களின் ‘கதைதான்’. திருகோணமலையின் கடந்த அறுபது ஆண்டுகளின் காலத்துயரை, தனிமையை, சிதைவை, தன் உயிரான மக்களின் வாழ்வை அவர்களின் சந்தோசத்தை, இழப்பை, கைவிடாத பழக்க-வழக்க நம்பிக்களை, மக்களின் பன்முகத்தன்மையை அக மன உணர்வு நிலையில் கொடுக்கும் படைப்புதான் ‘உட்துறைமுகம்’. பெண்களின் மீதான இந்திய இராணுவப் பாலியல் வன்முறைகளை ஆவணப்படுத்திய டாக்டர் ஞானி அவர்களின் அலுவலக எரிப்பும் அவரின் கொலையும், ‘தனு’வை நினைவுகொள்வது போல் மூதூர் வில்லுக்குளத்தை சேர்ந்த நித்திலா சுமந்து வரும் கைக்குண்டும் நேர்த்தியான பதிவுகளாகி (பக்க எண்: 274 -275), மொழிவழி தரும் பகிர்வு ஒரு நாவலின் ஊடாக எவ்வளவு வலிமையாகக் கடந்த காலத்தை சொல்லமுடியும் என்பதற்கு ‘உட்துறைமுகம்’ ஒரு நல்ல சான்று. பிரதான நகர்வு பாத்திரமான முன்னாள் போராளி அரியம் மலக்குழிக்குள் இறந்து போகும் முடிவு என்பது ஒரு குறியீடாக வந்து விழுகின்றது. தமிழ் மக்களின் போராட்டம் குறிப்பாக ஆயுத இயக்கங்களின் ஒட்டுமொத்த வகிபாகம் மீதான ஓர் இலக்கியப் படைப்பு வழி வெளிவரும் ஒரு காத்திரமான சமூக விமர்சனமாக, மலக்குழியினுள் விழும் காட்சிப் படிம நிலை சிந்திக்க வைக்கிறது. ஈழத்து இன்றைய சூழ்நிலையில், நாவல் வெளிவந்து பல ஆண்டுகள் கடந்தும் ‘கிணற்றில் போட்ட கல்லாக’ ‘உட்துறைமுகம்’ இருப்பதானது கடந்த கால காலத் துயரங்களை உட்புதையல்களாக்கி சமூகம் மௌனமாக கடந்து போகும் நிலையை உணர்த்துகிறது. ஆனால், வரலாறு ஒரு பின்தொடரும் நிழலாக காலங்கள் கடந்தும் நிழலாடும் என்பதற்கு ‘உட்துறைமுகம்’ நாவல் ஓர் உதாரணம். மனிதர்களால் கண்டடைந்த சொல்லும் எழுத்தும் அதை கொண்ட மொழி வனையும் ஆற்றல்மிகு வனைஞன் இருக்கும் வரை காலம் கடக்கும் பகிர்வுகள் படைப்புகளாகத் தொடர்ந்த வண்ணமே இருக்கும். கௌரிபாலனின் ‘உட்துறைமுகம்’ காலம் காவும் ஒரு படைப்பு. – வை. ஜெயமுருகன் பிற்குறிப்பு : எழுத்தாளர் கௌரிபாலன் அவர்களின் பூர்வீகம் உப்புவெளி, திருகோணமலை. இவரது மொழி வலிமை, பொலிவு, செறிவு என முப்பரிமாண தனித்துவ அழகியலானது இவர் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் வலி உமிழ்பவை; சொல்லடுக்குப் படலம் ஒரு காலத்துயர் வதைகளின் அதிர்வைச் சித்தரிப்பவை. ‘உட்துறைமுகம்’, திரு. கௌரிபாலன் அவர்களின் முதல் நாவல்(2022). இதுவென அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அதேவேளை சொல்லொணாத் துயர் சுமந்த ஈழச் சமூகத்தில் வெளிப்படும் ஒரு நம்பிக்கை தரும் வரலாற்றுப் புதின எழுத்தாளராக இவரை இனம் காண வைக்கிறது. இவரின் முதல் சிறுகதை “தாயம்மா’ வெளிவந்தது 1994-களில். ‘ஒப்பனை நிழல்’ என்னும் சிறுகதை நூலும் ‘வானுறையும் தெய்வத்தினுள்’ 2003-களில் வெளிவந்தன. 2010-களில் ‘நதிப்பாதையின் மேலே’ என்னும் கட்டுரை தொகுப்பு நூல் வெளியானது. பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் பாண்டிச்சேரி மற்றும் பென்குயின் இந்தியா வெளியிட்ட “Time will write a song for you ‘ (Contemporary Tamil writing from Sri Lanka) தொகுப்பில் இவரின் மூன்று சிறுகதைகளின் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கௌரிபாலனின் முழுச் சிறுகதைகளின் தொகுப்பு ‘காற்றில் மிதக்கும் தழும்பின் நிழல்’ (2016) விடியல் பதிப்பக வெளியீடாக வந்தது. https://globaltamilnews.net/2026/226579/
-
பிரான்ஸில் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் ; இலங்கைத் தமிழர் செய்த செயலால் ஒரு வருட சிறை
பிரான்ஸில் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் ; இலங்கைத் தமிழர் செய்த செயலால் ஒரு வருட சிறை பிரான்ஸில் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, மனைவி, பிள்ளைகளை கொடூரமாக தாக்கிய இலங்கைத் தமிழருக்கு 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 5ஆம் திகதி நீதிமன்றத்தில் இலங்கை தமிழரான ஜோசப் கே என்ற நபர் தனது மனைவி மற்றும் மகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்டார். கடந்த வருடம் அதிக போதையில் இருந்த அவர், தனது மனைவியின் மூக்கை உடைத்த நிலையில் பாதிக்கப்பட்ட மனைவிக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் பிரான்ஸ் வந்த காலப்பகுதியில் இருந்து மனைவியை துன்புறுத்தி வந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணையில் ஜோசப் கே.வின் மகள் தாயாருக்கு மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டு நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். அதேவேளை, ஜோசப் கேவின் வதிவிட அனுமதி காலவதியான நிலையில், அவர் எந்த நேரத்திலும் நாடு கடத்தப்படலாம் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக குடும்பத்தினருடன் அவர் இணைந்து இருப்பது, அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்துத் தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், இலங்கை தமிழரான ஜோசப் கே.க்கு 12 மாத சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. https://akkinikkunchu.com/?p=356145
-
ஆதாரங்களின் தொகுப்பு: இருளில் இருந்து சான்றுகள்
என்னவென்று சொல்வது எங்கள் இனப்பெண்கள் பட்ட துன்பங்களை, இனமானம் உயிர் என கொண்ட இனத்தை, அவமானம் செய்து பாலியல் வன்முறை கொடுமைகள் செய்த ஶ்ரீலங்கா இராணுவ கஜவர்களின் நடத்தைகள் இவை: இது கதையல்ல உண்மை…!
-
ஏழு கோடித் தமிழர்களுடனும் உறவைப் பேணத் தவறியது ஏன்?; கஜேந்திரகுமார் எம். பி. கேள்வி
ஏழு கோடித் தமிழர்களுடனும் உறவைப் பேணத் தவறியது ஏன்?; கஜேந்திரகுமார் எம். பி. கேள்வி ஏழு கோடி மக்கள் தமிழ் நாட்டில் இருந்தும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் எமது மக்கள் அனாதைகளாக இருந்தார்கள்.ஏன் கடந்த காலத்தில் மக்கள் ஆணை பெற்ற தமிழ் தலைவர்கள் அதை செய்யவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பினார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு செவ்வாய்க் கிழமை நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றபோது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், அண்மையில் தமிழகத்திற்கு நாம் விஜயம் செய்து எமது நிலைப்பாட்டை தமிழகத் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தோம்.எங்கள் முயற்சி தொடர்பான விளக்கக் குறைவு காரணமாக கணிசமானோர் விமர்சிக்கின்றனர். தமிழ் நாட்டுக்கு செல்வது தொடர்பாக எங்கள் அமைப்புக்குள் நீண்டகாலமாக பேசி வந்தோம். தமிழ் நாட்டை ஆண்ட தலைவர்களை சந்திக்க முடியாமல் ஏனைய கட்சிகளின் தலைவர்களை சந்திப்பது பொருத்தமற்றது என்பதால் அதனை தவிர்த்திருந்தோம். தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்ததால் தமிழகத்திற்கு சென்று காங்கிரஸை தவிர அனைத்து கட்சித் தலைவர்களுடன் நாம் சந்தித்தோம். காங்கிரஸ் தலைவர்கள் தமிழகத்திற்கு வெளியில் இருந்ததால் அவர்களை சந்திக்க முடியவில்லை. இந்தச் சந்திப்புக்களின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு முக்கிய கடிதத்தை எழுதியிருந்தார். ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்ட அணி தமிழ் தேசிய நிலைப்பாட்டை தமிழகத்திற்கு சென்று வலியுறுத்திய போது தமிழ் நாட்டு அரசாங்கம் பிரதமர் மோடிக்கு பலமான கடிதம் எழுதுமாக இருந்தால்,தமிழ் தேசிய அணியின் பலமாக பத்துப் பேரும் ஒன்றாக இணைந்து செயற்பட்டால் எவ்வளவு விடயங்களை செய்ய முடியும். கடந்த காலங்களில் மக்கள் அங்கீகாரம் பெற்ற எமது தலைவர்கள் அந்த முயற்சியில் ஈடுபடவில்லை. தமிழகத்துடனான உறவைப் அவர்கள் பேணவில்லை. ஏழு கோடி மக்கள் தமிழ் நாட்டில் இருந்தும் எமது மக்கள் அனாதைகளாக இருந்தார்கள். ஏன் கடந்த காலத்தில் மக்கள் ஆணை பெற்ற தலைவர்கள் அதை செய்யவில்லை. தமிழ் தேசிய நீக்கம் அவர்களின் நோக்கம் என்றதால் அவர்களுக்கு தமிழ் நாடு தேவையில்லாமல் இருந்தது – என்றார். https://akkinikkunchu.com/?p=356208
-
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்திடமிருந்து விடுவிக்க வலியுறுத்தல்!
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்திடமிருந்து விடுவிக்க வலியுறுத்தல்! January 15, 2026 கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல காணி இராணுவத்திற்கு கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பிரதேச அபிவிருத்திக் குழுவில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், இராணுவம் அங்கு முகாமிட்டிருப்பது உரிமை மீறலாகும். உறவுகள் அஞ்சலிப்பதற்கான உரிமையினை உறுதிப்படுத்தும் வகையில் அக் காணியினை விடுவிக்க அபிவிருத்திக் குழுவில் தீர்மானம் உடன் நிறைவேற்றப்பட வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் வலியுறுத்தினார். இராணுவத்தினரால் விடுவிக்கப்படவேண்டிய காணிகள் விடயத்தில், 19.42 ஏக்கர் நிலம் உரிமையாளர் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு – சுவிகரிப்பு தொடர்பான தற்போதைய நிலை அரச காணி (03.09.2014) இராணுவத்தினருக்குக் கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற கோப்பாய் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது. இதனையடுத்து இவ்விடயத்தில் குறுக்கிட்டு பேசிய வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் , மாவீரர் துயிலும் இல்ல காணி இராணுவத்தினருக்கு கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை நாம் புதிதாக தற்போதே கேள்விப்படுகின்றோம். அது முன்னைய காலங்களில் இடம்பெற்றதாக தங்களால் வெளிப்படுத்தப்படுகிறது. இந்த இரகசிய தகவலை நாம் அறியும் நிலையில், நாம் அதனை கடுமையாக எதிர்க்கின்றோம். துயிலும் இல்லத்தில் எமது உறவுகளின் வித்துடல்கள் விதைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு மரணித்தவர்களை நினைவு கொள்ளும் உரிமை, அஞ்சலிக்கும் உரிமை எமது உறவுகளுக்கு கிட்டவேண்டும். இதற்கு பதிலளித்த அபிவிருத்திக் குழுவின் தலைவர் ரஜிவன் எம்.பி, இது 2014 ஆம் ஆண்டு இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றார். இதனையடுத்து குறுக்கிட்ட தவிசாளர் 2014 ஆம் ஆண்டு எந்த அடிப்படையில் கையளிக்கப்பட்டிருக்கின்றது? காணி கையளிப்பு சட்டங்கள் எவ்வாறு பின்பற்றப்பட்டன? எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அபிவிருத்திக்குழுவின் தலைவர் ரஜிவன் எம்.பி, மாவீரர் துயிலும் இல்ல நிலங்களை அரசாங்கம் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். அது நடக்கும் என்றார். இராணுவம் இருக்கின்ற பெருமளவான காணிகள் விடுவிக்கப்படும் என்றார். https://www.ilakku.org/demand-to-release-the-kopayi-maveerar-thuyum-illam-from-the-military/
-
மன்னாரில் ஜனாதிபதியால் காற்றாலை மின் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.!
ஜனாதிபதியால் காற்றாலை மின் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.! Vhg ஜனவரி 15, 2026 இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மன்னாரில் 50 மெகாவாட் 'ஹேவிண்ட் வன் லிமிட்டெட் நிறுவனத்தின்' (HayWind One) காற்றாலை மின் திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று (15.01.2026)வியாழக்கிழமை மன்னார் கொன்னயன் குடியிருப்பில் நடைபெற்றது. ஹேலிஸ் பென்டன்ஸ் (Hayleys Fentons) மற்றும் ஹேலிஸ் (The World of Hayleys) குழுமத்தின் அங்கமான ஹேவிண்ட் வன் லிமிட்டெட் நிறுவனம், இலங்கை மின்சார சபையுடன் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்நிகழ்வில் வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வலுசக்தி பிரதி அமைச்சர் முஹமது இலியாஸ் முஹமது அஹ்ரம் கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோரும், மன்னார் மாவட்டச் செயலாளர் கே.கனகேஸ்வரன், முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். மன்னார் பகுதியில் முன்னெடுக்கப்படும் இந்த 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டமானது, நாட்டின் தேசிய மின்வழங்கலுக்குத் தூய எரிசக்தியைச் சேர்ப்பதோடு, சூழலுக்கு உகந்த மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் ஒரு முன்னோடித் திட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் 18 மாதங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. https://www.battinatham.com/2026/01/blog-post_542.html
-
புதிய வற் வரி விலைப்பட்டியல் முறை: நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கலந்துரையாடல்
புதிய வற் வரி விலைப்பட்டியல் முறை: நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கலந்துரையாடல் 15 Jan, 2026 | 12:52 PM புதிய VAT வரி விலைப்பட்டியல் (VAT Tax Invoice) வடிவம் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தேவைகள் குறித்து சர்வதேச வர்த்தக சபை இலங்கையின் (ICCSL) வரிக்குழு அண்மையில் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. எமதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ள இந்த மாற்றங்களுக்குக் கொள்கை வகுப்பாளர்கள், வரி வல்லுநர்கள் மற்றும் வணிக சமூகம் எவ்வளவு தூரம் தயாராக உள்ளது என்பதை ஆராய்வதே இதன் பிரதான நோக்கமாகும். இந்தக் கருத்தரங்கின் முக்கிய நோக்கங்களாக, புதிய VAT விலைப்பட்டியல் முறைக்கு வணிகங்களின் தயார்நிலையை மதிப்பீடு செய்தல், நடைமுறை இடைவெளிகள் மற்றும் தெளிவற்ற தன்மைகளைக் கண்டறிதல் என்பன அமைந்திருந்தன. இதன் மூலம், புதிய முறையை வணிகங்களுக்கு உகந்த வகையில் சுமூகமாக நடைமுறைப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான முன்மொழிவுகளை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு (IRD) வழங்க ICCSL திட்டமிட்டுள்ளது. முக்கிய உரை மற்றும் கொள்கை விளக்கங்கள் நிகழ்வின் ஆரம்ப உரையை ஆற்றிய சர்வதேச வர்த்தக சபை இலங்கையின் தலைவர் திரு. ஜொனி பெர்னாண்டோ, இந்த சீர்திருத்தம் ஒரு சாதாரண நிர்வாக மாற்றம் மட்டுமல்ல, இது வணிகங்கள் பரிவர்த்தனைகளை ஆவணப்படுத்தும் மற்றும் வரி வரவுகளைக் கோரும் முறையில் ஏற்படும் ஒரு கட்டமைப்பு மாற்றமாகும் என வலியுறுத்தினார். வருவாய் இலக்குகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளைப் பாதுகாப்பதற்குத் தெளிவான நடைமுறைகளும், போதிய கால அவகாசமும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். KPMG நிறுவனத்தின் வரி மற்றும் ஒழுங்குமுறை சேவைகளின் முதல்வர் செல்வி. ரிஃப்கா ஸியாத் (Ms. Rifka Ziyard), புதிய விலைப்பட்டியல் வடிவத்தின் பின்னணியில் உள்ள கொள்கை ரீதியான காரணங்களை விளக்கினார். போலி விலைப்பட்டியல்களைத் தடுத்தல், டிஜிட்டல் முறைக்கு மாறுதல் மற்றும் உள்ளீட்டு வரி வரவு (Input Tax Credit) முறைகேடுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டே இந்த மாற்றம் கொண்டுவரப்படுவதாக அவர் தெரிவித்தார். நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சவால்கள் ஏர்ன்ஸ்ட் அண்ட் யங் (Ernst & Young) நிறுவனத்தின் வரித்துறை முதல்வர் திரு. வேலாயுதபிள்ளை சக்திவேல், நடைமுறைச் சிக்கல்கள் குறித்துப் பேசுகையில் பின்வரும் முக்கிய சவால்களைப் பட்டியலிட்டார்: * மென்பொருள் மற்றும் முறைமைகளைத் தயார்படுத்துவதில் உள்ள சிக்கல்கள். * சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு (SMEs) ஏற்படும் மேலதிக சுமை. * சிறிய பிழைகளுக்காக விலைப்பட்டியல்கள் நிராகரிக்கப்படும் அபாயம் மற்றும் வரி வரவுகள் மறுக்கப்படுதல். * அதிகரித்த இணக்கப்பாட்டுச் செலவுகள் வணிக சமூகத்தின் கோரிக்கைகள் 2026 ஏப்ரல் 1 ஆம் திகதிக்கு முன்னர் நிலவும் தெளிவற்ற தன்மைகளைத் தீர்க்காவிட்டால், அது பொருளாதார ரீதியாகப் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனப் பங்கேற்பாளர்கள் எச்சரித்தனர். குறிப்பாக, அதிக பரிவர்த்தனைகள் நடைபெறும் மற்றும் சேவை சார்ந்த துறைகளில் இந்த சிக்கலான நடைமுறை தினசரி நடவடிக்கைகளைப் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. இதனைச் சீர்செய்யப் பங்கேற்பாளர்கள் முன்வைத்த பரிந்துரைகள்: * முறைமைகளை மாற்றியமைக்க மற்றும் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கப் போதிய கால அவகாசத்தை IRD வழங்க வேண்டும். * தெளிவான வழிகாட்டிக் குறிப்புகள் மற்றும் உதாரணங்களை வழங்க வேண்டும். * ஆரம்பக் கட்டத்தில் கடுமையான தண்டனைகளைத் தவிர்த்து, கல்வி மற்றும் வழிகாட்டல்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சர்வதேச வர்த்தக சபை இலங்கையின் துணைத் தலைவர் திரு. ஹேமக்குமார குணசேகர மற்றும் முன்னாள் தலைவர் திரு. ஷனில் பெர்னாண்டோ உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர். இந்தக் கருத்தரங்கில் பெறப்பட்ட கருத்துகள் அனைத்தும் முறைப்படுத்தப்பட்டு, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்படும் என சர்வதேச வர்த்தக சபை இலங்கை உறுதி அளித்தது. வரிச் சீர்திருத்தங்கள் பொருளாதார வளர்ச்சியைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக இந்த நிகழ்வு அமைந்தது. https://www.virakesari.lk/article/236088
-
’கோல்டன் டோம்’ திட்டத்துக்கு கிரீன்லாந்து அவசியம்
’கோல்டன் டோம்’ திட்டத்துக்கு கிரீன்லாந்து அவசியம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து மிகவும் இன்றியமையாதது என்றும், தான் உருவாக்கி வரும் 'கோல்டன் டோம்' பாதுகாப்புத் திட்டத்திற்கு இது மிகவும் முக்கியமானது என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், தாம் கட்டி எழுப்பி வரும் 'கோல்டன் டோம்' பாதுகாப்பு அமைப்பிற்கு கிரீன்லாந்து நாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானது எனவும் குறிப்பிட்டள்ளார். மேலும், நாம் கிரீன்லாந்தை எடுக்காவிட்டால், ரஷ்யாவோ அல்லது சீனாவோ அதனைக் கைப்பற்றிவிடும். அது ஒருபோதும் நடக்காது என அவர் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் பெரும் இராணுவ பலம் இன்றி நேட்டோ ஒரு பயனுள்ள சக்தியாக இருக்க முடியாது என்றும் கிரீன்லாந்து அமெரிக்காவின் கைகளில் இருக்கும்போது நேட்டோ இன்னும் வலிமையானதாக மாறும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இதனை விடக் குறைவான எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாதுஎனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், தனது முதல் பதவிக்காலத்தில் கட்டியெழுப்பிய இராணுவ பலத்தை இப்போது அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். (a) https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/கோல்டன்-டோம்-திட்டத்துக்கு-கிரீன்லாந்து-அவசியம்/50-371046
-
இலங்கை உள்ளிட்ட 75 நாடுகளுக்கு அமெரிக்கா விடுத்த அறிவிப்பு
இலங்கை உள்ளிட்ட 75 நாடுகளுக்கு அமெரிக்கா விடுத்த அறிவிப்பு அமெரிக்காவில் பொது நலத்திட்டங்களை அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில், 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான குடியேற்ற விசா செயலாக்கத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் ஈரான், பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், ரஷியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை தனது ‘எக்ஸ்‘ தள பக்க பதிவில் கூறியிருப்பதாவது:- “அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை அதிக அளவில் சாரும் குடியேற்றவர்களை கொண்ட 75 நாடுகளிலிருந்து வரும் விசா விண்ணப்பங்கள் இடைநிறுத்தப்படுகின்றன. புதிய குடியேற்றவர்கள் அமெரிக்க மக்களின் செல்வத்தை சுரண்ட மாட்டார்கள் என்பதை உறுதி செய்யும் வரை இந்த இடைநிறுத்தம் தொடரும்” என்று தெரிவித்துள்ளது. அதேபோல், வெள்ளை மாளிகை வெளியிட்ட பதிவில், “புதிய குடியேற்றவர்கள் பொதுச் சுமையாக மாறாமல் இருப்பதை உறுதி செய்யும் வரை விசா செயலாக்கம் நிறுத்தப்படுகிறது. அமெரிக்க நாட்டுக்கே முன்னுரிமை என்று கூறப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/இலங்கை-உள்ளிட்ட-75-நாடுகளுக்கு-அமெரிக்கா-விடுத்த-அறிவிப்பு/50-371077
-
போதைக்கு அடிமையானவர்களை மீட்க யாழில். புனர்வாழ்வு மையம்!
போதைக்கு அடிமையானவர்களை மீட்க யாழில். புனர்வாழ்வு மையம்! adminJanuary 15, 2026 போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க யாழ்ப்பாணத்தில் புனர்வாழ்வு நிலையம் அமைக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், முழு நாடும் ஒன்றாக – தேசிய வேலைத்திட்டத்தின் செயற்பாட்டு குழுவொன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், காவல்துறையினர் மாத்திரமின்றி, முப்படையினர் , மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர், அதன் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் இணைந்து செயற்படவுள்ளனர். இதனூடாக போதைப்பொருட்களை இல்லாது செய்வதுடன், அதனுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களையும் இல்லாதொழிப்பதே நோக்கம் அந்த வகையில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை, அதிலிருந்து மீட்டெடுக்க அமைக்கப்படும் புனர்வாழ்வு நிலையங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க 1818 என்ற தொடர்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் எந்தவித அச்சமும் இன்றி, நம்பிக்கையுடன் தகவல்களை வழங்க முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். https://globaltamilnews.net/2026/226564/