Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. நானும் காரணங்களை எல்லாம் வாசித்தேன். பல விடயங்களை அறியக்கூடியதாக இருந்தது. நன்றி. எனினும், சட்டத்தின் பார்வையில் திருமணம் என்று அமையாவிட்டால் பலவகைகளில் தன்பாலின தம்பதியினர் புறக்கணிக்கப்படுவார்கள். சமத்துவமான உரிமைகள் இருக்காது. இந்தக் கோணத்திலும் பார்க்கவேண்டும்.
  2. @goshan_che இனி உய்ய வாய்ப்பில்லை! மழையும், மெதுவான ஆடுகளமும் அமெரிக்க @பிரபா வுக்கே வாய்ப்புக்களைக் கொடுக்கின்றன. அவுஸ்திரேலியா சம்பியனாக வந்தால் அவரைப் நாலுகால் பாய்ச்சலில் கலைத்தாலும் பிடிக்கேலாது! பிட்ச் இன்ஸ்பெக்ஸன் நடக்குது! அம்பயர்மார் மிதித்துப் பார்க்கினம்!
  3. தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயாராக உள்ளதாக அறிவித்துளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பிலேயே அவர் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயாராக இருப்பதான விடயத்தை அவர் தெரிவித்தார். அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வேட்பாளராக முன்நிறுத்தப்பட கூடாதென்பதே வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் 45 சிவில் அமைப்புகளின் கூட்டணியான தமிழ் மக்கள் சபையின் தலைமையில் வடக்கு,கிழக்கு தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டுமென்ற கலந்துரையாடல்கள் கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன. தமிழ் மக்கள் சபையின் தலைமையில் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ஆழமான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி, ஈபிஆர்எல்எப், ரொலோ, புளொட் உட்பட பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் இந்த கலந்துரையாடல்களில் கலந்துகொண்டன. தொடர்ச்சியாக இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வரும் பின்புலத்திலேயே அனந்தி சசிதரன் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். என்றாலும், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அரசியல் பதவிகளில் இருந்தவர்கள் எவரும் தேர்தலில் களமிறக்கப்பட கூடாதென்ற நிலைப்பாட்டின் பிரகாரமே சிவில் அமைப்புகளின் கூட்டணியான தமிழ் மக்கள் சபை கலந்துரையாடல்களை நடத்திவந்தது பேராசிரியர் ஒருவரை களமிறக்கும் அடிப்படையிலான கலந்துரையாடல்களும் இடம்பெற்றிருந்தன. இவ்வாறு பேச்சுகள் தொடரும் சூழலில் சிவில் அமைப்புகளுக்கு தெரியாது அனந்தி சசிதரன், தாம் பொது வேட்பாளராக களமிறங்க தயாராக உள்ளதாக எந்த அறிவித்துள்ளார் என்பது தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.. அனந்தி சசிதரன் வெளியிட்டுள்ள அறிக்கை. இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் தேசத்தின் பாரம்பரிய வரலாற்றுத் தாயகம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் உள்ளது. எழுபத்தைந்து வருடங்களுக்கு மேலாக சிங்கள தேசம் ஒரு தலைப் பட்சமாகத் தீர்மானித்துவந்துள்ள இலங்கை ஒற்றையாட்சி அரசு ஈழத்தமிழர் தேசத்தையும் அதன் தாயகத்தையும் ஆக்கிரமித்துள்ளது. ஆக்கிரமித்துள்ள சிங்கள தேசம் நிர்ணயிக்கும் தேர்தல் அரசியலுக்குள் புகுந்து விளையாடி ஆக்கிரமிக்கப்பட்ட தேசம் தனக்குரிய அரசியற் தீர்வைக் கண்டுவிடச் சற்றும் இடமளிக்காத வகையில் இலங்கை அரசின் ஒற்றையாட்சித் தன்மையும் மத ரீதியான முதன்மைத்துவமும் அரசியலமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தல் அரசியலில், அதுவும் குறிப்பாக பாராளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சித் தேர்தல்களில் ஏன் தமிழர்களான நாமும் பங்கேற்கிறோம் என்றால், அதற்கு ஒரு காரணம் உள்ளது. ஈழத்தமிழர்களின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தாயகத்தின் பிரதேச வாரியான பிரதிநிதித்துவம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு எமது தேசிய இனத்தின் அரசியல் வேணவா மறுதலிக்கப்படுவதற்கும் மலினப்படுத்தப்படுவதற்கும் இந்தத் தேர்தல் அரசியல் ஓர் அரசியல் வெளியாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்பதற்காகவும் எமது மக்களிற் பெரும்பான்மையினரின் ஜனநாயக ஆணை இல்லாதோர் எமது பிரதிநிதிகள் போல வலம்வந்து எமது தேசிய வேணவாவைத் திரிபு படுத்தாமல் இருப்பதற்காகவும் எமது பிரதேச ரீதியான தேர்தல் அரசியலை நாம் ஓர் தடுப்பு உத்தியாகப் பயன்படுத்துகிறோமே அல்லாது, தேர்தல் அரசியலை மூலோபாய வழிவகையாக ஈழத்தமிழர்கள் பயன்படுத்தவில்லை. இத் தேர்தல்களில் நாம் போட்டியிடுவதன் மூலம் இலங்கையின் ஒற்றையாட்சி முறையை நாம் அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்வதாக எவரும் ஒரு போதும் பொருள்கோடல் செய்ய இயலாது. அதுமட்டுமன்றி, அவ்வப்போது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வளங்களை ஏதேனும் ஒரு வகையில் ஆற்றுப்படுத்த இயலுமா என்ற முயற்சியிலும் இந்தப் பிரதிநிதித்துவத்தைப் பயன்படுத்துகிறோம். சர்வதேசத் தளத்தை நோக்கி எமது குரலை ஓங்கி ஒலிப்பதற்கு இந்தப் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று சிந்தித்துப் பயன்படுத்துகிறோம். இவ்வகையில் மாகாண சபையின் அங்கீகாரத்தோடு ஐ. நா. மனித உரிமைப் பேரவைக்குச் சென்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது தேசத்தின் கருத்தியலை எண்ணற்ற வழிகளில் முன்வைத்து வந்துள்ளேன். பாராளுமன்றப் பிரதிநிதித்துவமும் மாகாண சபைப் பிரதிநிதித்துவமும் எவ்வாறு பொருத்தமாகப் பயன்படுத்தப்படலாம் என்பதில் விரல் விட்டு எண்ணப்படக்கூடிய மிகச் சில தமிழ் அரசியல் பிரதிநிதிகளே செயற்பட்டுள்ளனர். காத்திரமான சில நகர்வுகளை மாத்திரமே மேற்கொள்ள முடிந்துள்ளது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2015 ஆம் ஆண்டு வடமாகாண சபை நிறைவேற்றிய இன அழிப்பு நீதிக்கான தீர்மானம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. தேர்தல் அரசியல் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இலங்கைத் தீவில் ஒரு மூலோபாய வழியாக அமையும் தகுதியை எப்போதோ இழந்துவிட்டது. அதை எந்த அளவில் உத்தியாகப் பயன்படுத்துவது என்பதில் மட்டுமே நாம் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் என்பது பெயரளவில் ஜனாதிபதி என்ற ஒரு தனிமனிதரிடம் வைப்பாக்கம் செய்யப்பட்டிருந்தாலும் அந்த நிறைவேற்று அதிகாரம் அரசியலமைப்பின் ஒற்றையாட்சித் தன்மையையோ ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகம் மீதான மத ரீதியான முன்மைத்துவத்துவத்தையோ எமது மூலோபாயத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பதற்கு எந்த வகையிலும் இடமளிக்காது. இதைப் போலவே இலங்கைப் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இந்த அரசியலமைப்பின் ஒற்றையாட்சித் தன்மையையும் தீவு முழுவதிலுமான தேரவாத சிங்கள அரசியற் பௌத்தத்தின் முதன்மைத்துவத்தையும் மாற்றுவதற்கோ நீர்த்துப்போகச் செய்வதற்கோ எவ்வகையிலும் இடமளிக்கப் போவதில்லை. இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதியாகினும் சரி, பாராளுமன்றப் பெரும்பான்மையாகினும் சரி ஈழத்தமிழர் தேசத்தின் சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட எந்தத் தீர்வையும் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட அழுத்தம் இன்றி ஒருபோதும் அங்கீகரிக்கப்போவதில்லை. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் இன அழிப்புப் போரின் பின்னரான முழுமையான ஆக்கிரமிப்புச் சூழலில் அந்த நிலைமை இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தின் மூலம் மெய்நடப்பு அரசொன்றைக் கட்டியெழுப்பி, அமைதிப் பேச்சுக்களைத் தீவுக்கு அப்பாலான மூன்றாம் தரப்புச் சர்வதேச அனுசரணையோடும் மத்தியஸ்தத்தோடும் ஏற்படுத்தும் சூழலைத் தோற்றுவித்து, ஒற்றையாட்சித் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு எமக்குத் தேவையான மூலோபாய அழுத்தத்தை ஏற்படுத்த முடிந்தது. அதன் போது தனது சுயநிர்ணய உரிமையை ஈழத்தமிழர் தேசம் நடைமுறையில் எடுத்தாண்டது. அதன்மூலம் அரசியற் தீர்வுக்கான அரசிலமைப்புக்கு அப்பாலான சூழல் உருவாக்கப்பட்டு அரசியற் தீர்வு பற்றிப் பேசப்பட்டது. யார் பேச்சுவார்த்தை மேசையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகப் பங்கேற்கவேண்டும் யார் பங்கேற்கக் கூடாது என்பதை மக்களாணையோடு எடுத்தாள தேர்தல் அரசியல் பயன்பட்டது. அதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானது. எப்போதோ தந்தை செல்வா அவர்களால் முடித்துவைக்கப்பட்டு சாகடிக்கப்பட்டிருந்த கட்சி மீண்டும் மேற்கொண்டுவரப்பட்டது தேர்தல் இலச்சினையை ஒரு அரசியல்வாதி முடக்கியதால் நேர்ந்த ஒரு விபத்து மாத்திரமே. இதையெல்லாம் மீண்டும் சிறிதாவது மக்களுக்கு நினைவுபடுத்தவேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 15 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஆண்டாண்டு காலமாக ஈழத்தமிழர் மீது இழைக்கப்பட்டு வருகின்ற சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்கு இலங்கை அரசை உள்ளாக்க சர்வதேச அழுத்தம் ஒன்றே ஈழத்தமிழர் தேசத்திடம் எஞ்சியுள்ள வழிவகையாக உள்ளது. இதுவே மூலோபாய முன்னெடுப்புக்கான பாதை. ஈழத்தமிழர் தேசத்தின் சுயநிர்ணய உரிமை எனப்படுவதும் இன அழிப்புக்கான சர்வதேச நீதி எனப்படுவதும் இரண்டு பெரும் மூலோபாயத் தூண்கள். ஆகவே, இந்த மூலோபாய வழிவகையை ஈழத்தமிழர் தேசம் எடுத்தாள வேண்டுமானால் சிங்களப் பேரினவாத வேட்பாளர்களை நிறைவேற்று அதிகாரமுள்ள ஆட்சியாளர்களாக்கும் தேர்வுகளுக்குள் ஆக்கிரமிக்கப்பட்ட ஈழத்தமிழர் தேசம் ஈடுபடுவது எதுவகையிலும் பொருத்தமற்றது. அவர்களோடு பேரம் பேசியும் எதையும் சாதிக்கமுடியாது. அவர்கள் நலிவடைந்துள்ளார்கள், பிளவடைந்துள்ளார்கள் என்று எம்மை நாமே ஏமாற்றி தெரிவுகளை மேற்கொண்டு எதையும் மூலோபாய ரீதியாகச் சாதித்துவிட இயலாது. இதற்கு ஏற்கனவே வரலாறு பல பாடங்களைப் புகட்டியுள்ளது. தற்காலிக உத்தியாக ஜனாதிபதித் தேர்தலைக் கையாண்டு மூலோபாயத்துக்குரிய அரசியற் பயணத்தைச் சிதைத்துவிடுவது தவறானது மட்டுமல்ல ஆபத்தானதுமாகும். இதனாற் தான், ஜனாதிபதித் தேர்தலை நாம் எவ்வாறு கையாளுவது என்பதில் மூலோபாயத்துக்குரிய அணுகுமுறைக்கே நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற கருத்து மேலெழுகிறது. இதனாற் தான் பொதுவேட்பாளர் என்ற சிந்தனையை நானும் ஆதரிக்கிறேன். ஆனால், அதற்கு ஏற்ற சரியான கொள்கை வகுப்பு இருக்கவேண்டும். அதுமட்டுமன்றி அதற்குரிய சரியான வேட்பாளரும் எம்மிடம் இருக்கவேண்டும். ஈழத் தமிழருக்கான சர்வதேச அரசியலை முன்னெடுப்பதில் கட்சிகளுக்கிடையே ஒற்றுமையற்ற சூழலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சூழல் உருவாக்கியுள்ளது. ஆதலால், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் ஈழத்தமிழருக்கான ஒரு பொதுப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்து அவரை ஈழத்தமிழர்களின் நிழல் ஜனாதிபதியாக சர்வதேசம் கணிப்பிடும் நிலையைத் தோற்றுவிப்பதே காலத்தின் தேவையாக உள்ளது. இருப்பினும் இதைச் சரிவரச் செய்யவேண்டுமானால், ஆக்கிரமித்துள்ள தேசத்தின் ஜனாதிபதி வேட்பாளர் எவரையும் விட அதிக வாக்குகளைப் பெறும் வகையில் ஒருவரை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள ஈழத்தமிழர் தேசம் தகுந்த தேர்தல் விஞ்ஞாபனத்தோடு நிறுத்தவேண்டும். அவர் அதிக வாக்குகளால் வெற்றிபெறவேண்டும். அவர் எமது நிழல் ஜனாதிபதியாக இயங்கவேண்டும். பொதுவேட்பாளரின் முழுமுயற்சியும் இன அழிப்புக்கான சர்வதேச நீதி நோக்கியதாக அமையவேண்டும். இதற்குரிய அஞ்சாநெஞ்சத் துணிவும், தகைமையும் வன்மையும் பொருந்திய ஒருவர் ஈழத்தமிழர் நிழல் ஜனாதிபதிக்குரிய பொது வேட்பாளராகத் தெரிவு செய்யப்படவேண்டும். இதற்கு அனைத்துக் கட்சிகளையும் ஒத்துழைக்க நிர்ப்பந்திப்பது ஈழத்தமிழர் ஒவ்வொருவரதும் கடமையாகும். அதுமட்டுமல்ல, அரச பொறுப்புக்கூறல், சர்வதேச நீதி போன்றவற்றின் தார்ப்பரியங்களைப் புரியாத, அவற்றை எடுத்தாள இயலாத ஒருவர், அதுவும் இவ் விடயங்களில் முன் அனுபவம் எதுவும் இல்லாத ஒருவர் பொதுவேட்பாளராகி இந்தக் கைங்கரியத்தைச் சாதிக்கமுடியாது. ஆகவே, 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன அழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் நேரடிக் குரலாக சர்வதேச நீதி கோரிய பயணத்தில் காத்திரமாகப் பங்கேற்ற தன்மைகளோடு பயணித்து அனுபவமுள்ளவளாகிய நான் அந்தக் களத்தில் பயிற்சி பெற்றுள்ள அனுபவத்தோடு துணிந்து களமிறங்கத் தயாராக உள்ளேன் என்பதை இது குறித்த அக்கறையுள்ள அனைவரின் கவனத்துக்கும் இத்தருணத்தில் கொண்டுவருவது எனது கடமையாகிறது. அதுவும், எந்தக் கட்சியினதும் அல்லது கூட்டினதும் பிரதிநிதியாக அன்றி, ஈழத்தமிழருக்கான பொதுப் பிரதிநிதியாக என்னை மாற்றிக்கொள்ளவும், இதற்கான பொருத்தமான கொள்கை வகுப்பு மேற்கொள்ளப்படும்போது அதற்குக் கட்டுப்பட்டு இயங்கவும் தயாரக உள்ளேன் என்பதையும் பரந்துபட்ட சமூகத்துக்குத் தெரிவிப்பதும் எனது கடமையாகிறது. அதுமட்டுமன்றி, இவ்வாறான தன்மைகளோடு என்னை விடவும் ஆற்றலுள்ள வேறு எவரேனும் நம்பகமாக நிறுவப்படக் கூடிய வகையில் முன்வைக்கப்பட்டால் அவ்வாறான வேட்பாளரை ஆதரிக்கவும் நான் தயாராக உள்ளேன் என்பதையும் நான் சுட்டிக்காட்டவும் விரும்புகிறேன். ஆகவே, இதற்கான பொருத்தமான கொள்கை வகுப்பை ஏற்படுத்தப்பட்டுள்ள பொதுச்சபை மேற்கொள்ளவேண்டும். அதனால், இதைச் சரிவர மேற்கொள்ள இயலுமா என்பதை நிறுவுவதும் அதை நடைமுறையிற் சாதிப்பதும் ஒட்டுமொத்த ஈழத்தமிழர் தேசத்தின் சமூகப் பொறுப்பாகும். பொதுவேட்பாளர் வேண்டுமா வேண்டாமா என்று விவாதித்துக்கொண்டிருப்பதிலேயே காலத்தைச் செலவிட்டு எந்தவித பொறுப்புக்கூறலும் அற்ற வகையில் விவாதங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்காமல் நடக்கவேண்டிய விடயத்தை பொறுப்புக்கூறலுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இதயசுத்தியுடனும் அணுகவேண்டும். இதை எதிர்பார்க்கும் வேளையில், குறிப்பாக எதிர்வரும் நாட்களில் தென்னிலங்கையில் களமிறங்கத் தயார் என்று அறிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர்களிடம் இயன்றளவு நேரடிச் சந்திப்புகளை மேற்கொண்டு சில ஆழமான கேள்விகளை எழுப்பி இலங்கை ஒற்றையாட்சி ஜனாதிபதிக்கான சிங்கள தேசத்தின் வேட்பாளர்களை ஈழத்தமிழர்கள் ஏன் நிராகரிக்கவேண்டியுள்ளது என்பதை அவர்களிடம் நேரடியாகவே தெரிவிக்கவுள்ளேன். அதன் விளைவுகளை மக்களுக்கும் அறிவிக்கவுள்ளேன். என்னால் இயன்ற அர்த்தமுள்ள பங்கு இதுவாகவே இருக்கமுடியும். குறிப்பாக, ஆறாம் சட்டத்திருத்தத்தை அகற்றி, ஈழத்தமிழர் பாரம்பரியத் தாயகக் கோட்பாட்டை அங்கீகரித்து, தீவின் வடக்கு-கிழக்குப் பகுதியில் பௌத்தத்திற்கான முதன்மைத்துவத்தை நீக்குவதே தனது விருப்பம் என்று பகிரங்கமாக எந்த ஒரு சிங்கள வேட்பாளரேனும் தெரிவிக்கத் தயாராக உள்ளாரா என்ற கேள்வியையும், இலங்கைத் தீவில் இன அழிப்பு நடைபெற்றதா இல்லையா என்பதை இன அழிப்பைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான பட்டயத்தின் அடிப்படையில் சர்வதேச விசாரணைக்கு உள்ளாக்கி அரச பொறுப்புக்கூறலை விசாரிக்க சர்வதேச நீதி மன்றை நாடும் துணிவு சிங்கள வேட்பாளர்களில் எவருக்கேனும் உண்டா என்றும் அவர்களிடன் நேரடியாகவே வினவி அவர்கள் அதற்குத் தரும் பதிலை ஈழத்தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தவும் என்னாலியன்ற முயற்சியை மேற்கொள்ள உள்ளேன். ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தைப் போலவே, புலம் பெயர் சமூகத்திலும் ஒற்றுமையின்மை காணப்படுகிறது. இதற்கு, பிராந்திய அரசியலும் சர்வதேச அரசியலும் பிரதான காரணம். இமாலயப் பிரகடனம் எங்கிருந்து இங்கு வந்தது என்ற கேள்வியைக் கேட்டால் இதற்குரிய விடை கிடைக்கும். இருப்பினும் இலங்கை அரசின் இன அழிப்புக்கான அரச பொறுப்பைச் சர்வதேச விசாரணைக்கு உள்ளாக்குவதில் சில காத்திரமான நகர்வுகள் பல முனைகளில் இருந்தும் புலம்பெயர் ஈழத்தமிழர் தரப்புகளால் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தவகையில், காத்திரமான நகர்வுகள் முன்னேறிச் செல்லும் வகையில் எமது மூலோபாய முடிவுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை இத்தால் வலியுறுத்துகிறேன். https://oruvan.com/sri-lanka/2024/06/14/ananthi-sasitharan-is-running-as-a-tamil-general-candidate
  4. அனந்தி சசிதரன் பொதுவேட்பாளராக தான் களமிறங்கத் தயார் என்று அறிவித்திருக்கின்றார்! பொது வேட்பாளருக்கே பத்துபேர் குடுமிபிடி சண்டை பிடிப்பார்கள் போலிருக்கு!
  5. 29வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பபுவா நியூகினி அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 95 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான்அணி குறைவான ஓட்ட இலக்கை 15.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 101 ஓட்டங்கள் எடுத்து அடைந்தது. முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இந்த வெற்றி மூலம் ஆப்கானிஸ்தான் சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைகின்றது. அதேவேளை நியூஸிலாந்து அணி சுப்பர் 8 சுற்றுக்கு செல்லும் தகுதியை இழந்துள்ளது! அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.
  6. தமிழ்நாட்டில் பாஜக காலூன்றி வரும் வரலாறு! -சாவித்திரி கண்ணன் பாஜகவின் வளர்ச்சி சமீப காலமாக வேகமெடுத்துள்ளது தமிழ் நாட்டில்! ஒன்பது தொகுதிகளில் அதிமுகவை முந்தி, இரண்டாம் இடம் பெற்றுள்ளது. நோட்டாவுக்கும் கீழே ஓட்டுகள் பெற்ற பாஜக தற்போது லட்சங்களில் ஒட்டு பெறும் நிலைக்கு உயர்ந்துள்ளதன் பின்னணியை ஆதியோடந்தமாக ஆய்வு செய்கிறது இந்தக் கட்டுரை; தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி 11.24% ஆகியுள்ளதெனினும், சில கூட்டாளிகளின் வாக்குகளை கழித்துப் பார்த்தால், 9 % மாகிறது என்பதே உண்மை. பாமகவைத் தவிர்த்து பார்த்தால், மிக பலவீனமானதே பாஜக. பாமகவும் சமீப காலமாக மிகவும் பலவீனப்பட்டே உள்ளது. இந்த நிலையில் சுமார் 18 சதவித வாக்குகளை பாஜக கூட்டணி பெற்றுள்ளது. அண்ணாமலை போட்டியிட்ட கோவையில் 4.50 லட்சம் வாக்குகள் பெற்றதும் இரண்டு தொகுதியில் மூன்று லட்சத்து சொச்சம் பெற்றதும், ஒன்பது தொகுதிகளில் இரண்டு லட்சம் முதல் 2,90,000 வரை பெற்று இருப்பதும் மற்ற சில தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக வாங்கி இருப்பதும் புதிய வளர்ச்சிப் போக்காகும். வான் புகழ் போற்றும் வள்ளுவனும், ஜீவ காருண்யத்தை கற்பித்த வள்ளல் பெருமானும் அவதரித்த தமிழ் மண்ணில் வன்முறைக் கட்சியான பாஜக எப்படி காலூன்றி வருகிறது..? தமிழ்த் தேசிய இயக்கங்களும், திராவிட இயக்கங்களும், சோசலிச இயக்கங்களும், காந்திய இயக்கங்களும் காலூன்றிய தமிழகத்தில் 1977 வரை ஜனசங்கமாகத் தான் அறியப்பட்டு இருந்தது, இன்றைய பாஜக! 1967 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தான் ஜனசங்கத்தினர் தமிழகத்தில் களம் கண்டனர். நான்கு தொகுதிகளில் நின்று, அவர்கள் பெற்ற மொத்த வாக்குகள் வெறும் 0.2% மட்டுமே! அதாவது, அரை சதவிகித வாக்குகள் கூட பெறுவதற்கு அருகதையற்ற நிலையில் தான் காமராஜர், அண்ணா காலத்தில் ஜனசங்கம் இருந்தது! இந்த படுதோல்விக்கு பிறகு 1971 தேர்தலில் ஒற்றைத் தொகுதியில் மட்டும் ஒப்புக்கு நின்று தோல்வி கண்டது. 1977 ஆம் ஆண்டு காந்தியவாதியான ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் எமர்ஜென்ஸி கால நெருக்கடிகளை எதிர் கொள்ள ஜனதா கட்சியை உருவாக்கிய போது, அதற்குள் ஐக்கியமானது ஜனசங்கம். ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் ஜனதா கட்சிக்குள் வரக் கூடாது. ஆகவே, ஜனசங்கத்தினர் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் பதவியை ராஜுனாமா செய்ய வேண்டும் என்ற நிலையில் இவர்கள் ஜனதா ஆட்சியையே கவிழ்த்துவிட்டனர். இதையடுத்து வாஜ்பாய், அத்வானி ஆகியோர் 1980 ஆம் ஆண்டு பாஜகவை உருவாக்கிய காலத்தில் அந்தக் கட்சி தென் தமிழகத்தின் கடைக் கோடி மாவட்டமான நாகர் கோவிலில் மட்டுமே அறியப்பட்ட கட்சியாகத் தான் இருந்தது. அந்த வகையில் அவர்கள் 1984 ஆம் ஆண்டு நாகர்கோவில் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும் போட்டியிட்டு 07% வாக்குகளை பெற்றனர்! இதற்கு பிறகு அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தை பேசிய வகையிலும், பாபர் மசூதியை இடித்த வகையிலும் இந்தக் கட்சி தமிழக மக்களால் அறியப்பட்டது. இதையடுத்து 1991 நாடாளுமன்றத் தேர்தலில் 15 இடங்களில் போட்டியிட்டு 1.65% வாக்குகளை பெற்றது பாஜக. இந்த காலகட்டத்தில் மத்தியில் நரசிம்மராவ் ஆட்சி காங்கிரஸ் கட்சியை பலமிழக்க வைத்தது. போதாக்குறைக்கு இங்கு ஊழலில் திளைத்த ஜெயலலிதாவோடு கூட்டு சேர்ந்தது காங்கிரசை மேலும் பலவீனப்படுத்தியது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட பாஜக, 1996 தேர்தலில் முதன்முதலாக 37 தொகுதிகளில் களம் கண்டு 3 சதவிகித வாக்கு வங்கியை பெற்றது. இதே தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசின் வாக்கு வங்கி, ஜெயலலிதாவோடு கைகோர்த்துமே கூட 5.5% சதவிகிதத்தை பெற்று சரிந்தது. அடுத்த இரண்டே ஆண்டுகளில் திராவிட கட்சிக்கு தலைவியான ஜெயலலிதா முதன்முதலாக அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கி, அதன் வாக்கு வங்கியை ஆறாக உயர்த்தி, ஒரு எம்.பியையும் பெற்றுத் தந்தார். ஆனால், 13 மாதத்தில் பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்ட ஜெயலலிதா, ”தவறு செய்து விட்டேன். இனி எக்காலத்திலும் அக் கட்சியோடு கூட்டு சேரமாட்டேன்” எனச் சொன்னார். ஆனால், அதிமுக கழட்டிவிட்ட பாஜகவோடு திமுக கை கோர்த்து, அதிமுக பாஜகவிற்கு ஒதுக்கிய தொகுதிகளை விட கூடுதலாக ஒன்றைச் சேர்த்து, 1999 ஆம் ஆண்டு ஆறு தொகுதிகளை ஒதுக்கி தந்து, அதன் வாக்கு வங்கியை ஏழாக உயர்த்தியதோடு, நான்கு எம்.பிக்களையும் பெற்றுத் தந்தது. ஆக, தமிழகத்தில் முதன் முதலாக பலசாலியாக வளர்த்தது திமுக தான்! பிறகு, மீண்டும் 2004 ஆம் ஆண்டு அதிமுகவும், பாஜகவும் பழைய விரோதத்தை மறந்து மீண்டும் கூட்டணி கண்டன. ஆனால், ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்தையும் இழந்த பாஜக ஐந்து சதவித வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொண்டது. இதற்கிடையில் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு பாஜகவில் சேர்ந்து அதன் பலத்தை அதிகரிக்க முயன்று பார்த்து முடியாமல், அந்தக் கட்சியில் இருந்தே விலகி காங்கிரசில் சேர்ந்தார். 2009 ஆம் ஆண்டு பாஜகவானது அதிமுக அல்லது தேமுதிகவுடன் கூட்டணி காண பெருமுயற்சி செய்தது! ஜெயலலிதாவும், விஜயகாந்தும் திட்டவட்டமாக மறுத்து விட்டனர். ஆனால், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியும் கூட்டு கண்டன. அப்போது பாஜக பெற முடிந்த வாக்கு சதவிகிதம் 2.3 சதவிகிதம் மட்டுமே! 2014 ஆம் ஆண்டு, ”இரு திராவிட கட்சிகளையும் ஒழித்தே தீருவேன்” என சபதம் எடுத்த தமிழருவி மணியன், பாஜக தலைமையில் ஒரு மெகா அணியை உருவாக்கினார். அந்த மெகா அணியில் பாமக, தேமுதிக, மதிமுக, ஆகிய கட்சிகள் சேர்ந்து களம் கண்டு 18.5% வாக்குகளை பெற்றன. பாஜக பெற்றதோ 5.5% வாக்குகள்! ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவுக்கு அழுத்தம் தந்த போதிலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி ஐந்து தொகுதிகளை மட்டுமே ஒதுக்கினார். அப்போது பெற முடிந்த வாக்குகளோ 3.7 % தான். இதே போல 2021 தேர்தலில் சட்டமன்ற தேர்தலுக்கு எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுகவானது பாஜகவிற்கு வெறும் 20 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியது. அப்போது பெற முடிந்த வாக்குகள் 2.6 % தான்! அதிமுக பாஜகவுடன் உறவு கொண்டிருந்த போதிலும், அதற்கு குறைவான தொகுதிகளை மட்டுமே ஒதுக்கி அதன் வளர்ச்சியை மட்டுப்படுத்தி வைத்திருந்தது. இது தான் அண்ணாமலைக்கு அதிமுக மீது கோபம் உருவானதற்கு காரணமாகும். அதிமுக என்ற ஆழமரத்தின் நிழலில் தமிழக பாஜக வளர முடியாது என்பதை உணர்ந்து தனிப் பாதை கண்டார். இதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழகத்தில் பாஜக அரசு வேகத்தில் வளரத் தொடங்கியது. இதற்கு பிரதான காரணம், திமுக அரசின் ஊழல்களை உக்கிரமாகத் தட்டிக் கேட்பதற்கு இங்கு அதிமுக காட்டிய சுணக்கம் ஒரு காரணமாகும். அதிமுகவின் அடிப்படை கட்டமைப்பான திமுக எதிர்ப்பு நீர்த்துப் போன நிலையில், அதற்கான தேவையை பாஜக பூர்த்தி செய்ய ஆரம்பித்தது. மேலும், திமுகவின் ஊழல் முறைகேடுகள், மக்கள் விரோத செயல்பாடுகள், குடும்ப அரசியல் ஆகியவற்றை அதன் கூட்டணி கட்சிகளான இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், காங்கிரசும் தட்டிக் கேட்காமல் மெளனப் பார்வையாளர்களாகக் கடந்து போன ஒரு துரதிர்ஷ்டமான சூழலில், இந்த அரசியல் தேவையை நிறைவேற்றும் வகையில் பாஜகவின் அண்ணாமலை துணிந்து கேட்டது, அக் கட்சியின் மீது ஒரு பெரிய ஈர்ப்பை உருவாக்கி தந்து விட்டது. மேலும், பாஜகவின் அண்ணாமலை தற்குறித்தனமாகவும், தான்தோன்றித்தனமாகவும் திமுகவை கடுமையாக வசைபாடிய போதிலெல்லாம், திமுக தரப்பில் சரியான எதிர்வினை ஆற்றாமல் மெளனமாக கடந்து சென்றனர்! பாஜகவின் அண்ணாமலைக்கு செமத்தியாக பதிலடி தருவதற்கானவர்கள் திமுகவில் நிறைந்திருந்த போதிலும், திமுக தலைமை அவர்களை அடக்கி வைத்து விட்டது. இது மட்டுமீறிய ஊழலில் திளைத்த திமுகவின் கோழைத்தனமாக பார்க்கப்பட்டதோடு, அண்ணாமலைக்கு சில இளைஞர்களிடையே ஹீரோ அந்தஸ்த்தையும் உருவாக்கித் தந்தது. இவையெல்லாவற்றையும் விட, பாஜகவின் மக்கள் விரோத தொழிலாளர் கொள்கை, விவசாயிகளிடம் இருந்து நிலம் பிடுங்கும் அடாவடித்தனங்கள், அதானிக்கு தமிழகத்தில் பெரு முக்கியத்துவம் தருவது, தேசிய கல்வி திட்ட அமலாக்கம்.. என அனைத்தையும் அமல்படுத்தி பாஜகவுக்கு அனுசரணையாக நடந்து கொண்டது திமுக. அத்துடன் பிரதமர் மோடியை பல நிகழ்ச்சிகளுக்கு அழைத்து விழாக்கள் நடத்தி முதல்வர் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் நெருக்கம் பாராட்டியது பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. தமிழக இந்து அறநிலையத் துறையானது முழுக்க, முழுக்க பாஜகவின் இந்துத்துவா கொள்கையை அமல்படுத்தி வருகிறது. அதாவது, திமுகவின் பகுத்தறிவு கொள்கைகள், பெரியாரிய சித்தாந்தங்கள், திராவிட இயக்க லட்சியங்கள் இவை அனைத்தையும் பேச்சளவில் மட்டுமே வைத்துக் கொண்டு நடைமுறையில் திமுகவானது, கொள்கை இல்லாத கொள்ளைக் கூட்டமாக நீர்த்துப் போனதே பாஜக வளர்ச்சிக்கு சாதகமான சமூக சூழலை உருவாக்கித் தந்தது. ஆக, திமுக, அதிமுக இரண்டும் தங்கள் சித்தாந்த தடத்தில் இருந்து வெகு தூரம் விலகிச் சென்றதும், ஊழல், முறைகேடுகளில் ஊறித் திளைத்ததும், ஒருவரை ஒருவர் அனுசரித்து மறைமுக தொழில் கூட்டாளிகளாக அரசியல் செய்வதும், எல்லாவற்றுக்கும் மேலாக வீரியம் இழந்த வீணர்களாகிப் போனதுமான சூழலில், இந்த வெற்றிடத்தை அதிகார பலம் தரும் அசாத்திய திமிரில் பாஜக நிரப்பி வருகிறது. சாதி அமைப்புகளை வளைத்து போட்டு இருப்பது, சிறிய கோவில்கள் முதல் பெரிய கோவில்கள் வரை தலையை நுழைத்து அரசியல் செய்வது, பார்ப்பன மற்றும் பணத்திற்கு விலை போகும் ஊடகங்களின் ஆதரவு ஆகியவற்றின் பின்னணியில் பாஜக பலம் பெற்று வருவது கண்கூடாகத் தெரிகிறது. இந்தச் சூழலில் திராவிட இயக்கங்கள், முற்போக்கு இயக்கங்கள் தங்களை சுய பரிசீலனைக்கு உட்படுத்திக் கொண்டு, தங்கள் தவறுகளைக் களைந்து, மக்கள் நலன் சார்ந்த உண்மையான அரசியலை முன்னெடுத்தால் மட்டுமே தீர்வாகும். சாவித்திரி கண்ணன் அறம் இணைய இதழ் https://aramonline.in/18120/t-n-bjp-development-annamalai/
  7. முற்றிலுமாக அகற்றப்படும் நியூயோர்க் கிரிக்கெட் மைதானம் - 8 போட்டிகளுக்காக செலவிடப்பட்ட 200 கோடி ரூபாய் அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறும் போட்டிகள் புறநகரில் உள்ள Nassau County International Cricket Stadium என்ற இடத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியானபோது இங்கு தரமான மைதான கட்டமைப்பே இல்லாத நிலை இருந்தது. இதனால் போட்டி எப்படி நடைபெறும் என்ற கேள்வி எழுந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டே மாதங்களில் 34,000 இரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரமாண்டமான மைதானம் அமைக்கப்பட்டது. இந்த மைதானத்தில் கோல்ஃப் மற்றும் கால்பந்து மைதானத்தில் பயன்படுத்தப்படும் பெர்முடா வகை புற்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும், ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் பயன்படுத்தப்படும் ஆடுகளம் இங்கு கொண்டுவரப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் 8 போட்டிகள் நடைபெற்ற நிலையில், நேற்று (12) இந்த மைதானத்தில் நடைபெற்ற கடைசி போட்டியான இந்தியா – அமெரிக்கா அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த மைதானம் முற்றிலுமாக அகற்றப்பட உள்ளது. இந்த மைதானத்தின் கட்டமைப்புக்காக சுமார் 200 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்ட நிலையில், தொடர்ந்து அந்த மைதானத்தில் நிறைந்த கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரம் இந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளால் அமெரிக்காவில் கிரிக்கெட் போட்டிகள் பிரபலமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.thinakaran.lk/2024/06/13/breaking-news/65683/முற்றிலுமாக-அகற்றப்படும/
  8. காணி, பொலிஸ் அதிகாரங்களை இரத்தம் சிந்தியாவது தடுப்போம் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு எவராவது முயன்றால் வீதிக்கு இறங்குவோம் என்பதுடன், இரத்தம் சிந்தியாவது நாட்டை பாதுகாப்போம் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதன்போது அவர் மேலும் கூறுகையில், வடக்கிற்கு சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் 13ஆவது திருத்தத்தை வழங்குவதாக கூறுகின்றார். அதில் என்ன கொடுக்கப் போகின்றார். காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கப் போகின்றாரா? அந்த அதிகாரங்கள் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாகாணத்திற்கென தனித்தனி அதிகாரங்கள் இருக்க முடியாது. இதனால் வீண் பேச்சுக்களை விடுத்து தமது கொள்கை பிரகடனங்களை வெளியிடுங்கள். மக்கள் எப்போதும் ஏமாற்ற முடியாது. அது இலகுவானது அல்ல. இதேவேளை காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு நாங்கள் உயிருடன் இருக்கும் வரையிலும் எவருக்கும் இடமளிக்க மாட்டோம் என்பதனை கூறிக்கொள்கின்றேன். எவராவது வழங்க தயாரானால் வீதிக்கு இறங்குங்கள். நாங்கள் இரத்தம் சிந்தியாவது இந்த நாட்டை பாதுகாப்போம். https://akkinikkunchu.com/?p=279981
  9. தமிழ்ப் பொதுவேட்பாளரால் சமஷ்டிக்குப் பாதிப்பில்லை! - விக்னேஸ்வரன் விளக்கம் (ஆதவன்) பொதுவேட்பாளரை நிறுத்துவதால் எமது சமஷ்டிக் கோரிக்கை அடிபட்டுப்போகும் என்ற எண்ணம் சுமந்திரனின் சட்டத்தரணி மூளையில் உதித்திருக்கும் ஒரு கற்பனைப் பிராந்தி - இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவரது மாதாந்த கேள்வி பதில் அறிக்கையில் இதைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படுவதன் அவசியம் பற்றியும் அதை எதிர்ப்பவர்கள் பற்றியும் அதில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்ப் பொதுவேட்பாளர்களை எதிர்ப்பவர்கள் தொடர்பில் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- சம்பந்தன் கூறும் 'ஒஸ்லோ உடன்பாடு' பற்றிப் பார்ப்போம். ஒஸ்லோ உடன்பாடு என்று எதுவுமே உண்மையில் இல்லை. அது இருதரப்பார் அறிவிப்பு அல்லது அறிக்கையாகும். இருதரப்பாராலும் இவ்வாறாகக் கூறப்பட்டது என்று பதிவுக்காக எழுத்தில் இடப்பட்ட ஓர் ஆவணமே அன்றி தரப்பாரிடையிலான உடன்பாடு அல்ல. அது தற்போது வழக்கொழிந்து போய்விட்டது. அதன் அடிப்படையில் அரசாங்கத்தை 'அப்படிச் செய்' 'இப்படிச் செய்' என்று நிர்ப்பந்திக்க முடியாது. சம்பந்தன் இந்தத் தள்ளாத காலத்திலும் தமிழ்ப்பொதுவேட்பாளரை நிறுத்துவதை எதிர்க்கின்றார் என்றால் அதற்கான காரணங்கள் தமிழர்தம் அரசியல் காரணங்களாக இருக்க முடியாது. தமிழ் மக்கள் அதற்கான காரணங்களை ஊகித்து அறியவேண்டும். அடுத்து சுமந்திரனின் அங்கலாய்ப்பு. பொது வேட்பாளரை நிறுத்துவது ஒரு விஷப் பரீட்சை என்பதே அவரின் கருத்து. காரணம் ஏற்கனவே சமஷ்டி வேண்டும் என்று கட்சிகள் தீர்மானம் எடுத்துள்ளன. பொது வேட்பாளருக்குப் போதிய ஆதரவு கிட்டாவிடில் எமது சமஷ்டித் தீர்வுக்கான அத்தியாவசியமும் பலமும் அடிபட்டுப் போய்விடும் என்பது அவரின் கருத்து. இது ஓர் அத்திபாரமில்லாத அங்கலாய்ப்பு. தமிழ் மக்களின் சமஷ்டிக் கோரிக்கை அன்றும் இருந்தது. இன்றும் இருக்கின்றது. எமக்கு பிரிவினையோ சமஷ்டியோ கிடைக்கும் வரையில் அல்லது எமது பிரதேசங்கள் பிறிதொரு நாட்டின் ஆட்சிக்குக் கீழ் வரும் வரையில் என்றும் இருக்கும். அப்படி வந்தாலும் நாம் அங்கும் சமஷ்டியையே கேட்போம். பொது வேட்பாளரை நிறுத்துவதால் எமது சமஷ்டிக் கோரிக்கை அடிபட்டுப் போகும் என்பது சுமந்திரனின் சட்டத்தரணி மூளையில் உதித்திருக்கும் ஒரு கற்பனைப்பிராந்தி. உண்மையில் எமது நிலையை இன்னும் ஸ்திரப்படுத்தி எம்மை சமஷ்டியை நோக்கி எடுத்துச் செல்லவல்லதே தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற பதவிநிலை. வடக்கு கிழக்கு மக்களின் தீர்ப்பைப் பெற பன்னாட்டு நாடுகள் முன்வரவேண்டும் என்று கோருவது எவ்வாறு சமஷ்டிக் கோரிக்கையை வலுவற்றதாக்கும்? நாம் சமஷ்டியைக் கோரி தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தவில்லையே! நாம் எமது குறைகளை, நிலைகளை, நிர்ப்பந்தங்களை உலகுக்கும் எடுத்துரைக்க உள்ளோம். 'சமஷ்டியைத்தா' என்று தமிழ்ப் பொதுவேட்பாளர் கேட்கப் போவதாக யார் சுமந்திரனுக்குக் கூறினார்களோ நான் அறியேன். அடுத்து அவர் அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகளே இதனை முன்னெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆலோசனைகளை மட்டும் வழங்கலாம் என்றுள்ளார். ஒரு சமூகத்தின் சமூக சேவையாளர்கள் அல்லது செயற்பாட்டாளர்கள் அரசியல் வாதிகளுக்கு வாக்குகள் வழங்கும் மக்களிடையே இருந்து வருகின்றவர்கள். அவர்கள் அந்நியர்கள் அல்ல. சுமந்திரன் மனதிலே ஒரு தப்பபிப்பிராயம் குடிகொண்டுள்ளது. ஒருவர் எப்பாடுபட்டா நாடாளுமன்ற உறுப்பினராக வந் தால் அதன்பின் மக்களுக்குப் பேச இட மில்லை என்று நினைக்கின்றார். மக்க ளின் மனம் அறியாமல் அவர்களின் நல உரித்துகளுக்கு எதிராக ஒரு நாடா மன்ற உறுப்பினர் நடந்து கொண் டால் அடுத்த தேர்தல் வரையில் மக்கள் அது பற்றி எதுவும் பேசமுடியாது என்ற வகையில் அவரின் கருத்தை முன்வைத் துள்ளார். நாம் யாவரும் பணி செய்வது எமது தமிழ் மக்களின் இன்றைய மற்றும் வருங்கால நலன் கருதியே. சுமந்திரனின் கருத்துப்படி ஒரு நாடாளு மன்ற உறுப்பினர் தேர்தலில் வென்று விட்டால் அவர் அடுத்த ஐந்து வருடங்க ளுக்கு தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளலாம் என்பதே. இவ்வாறு நினைத் தவர்கள்தான் தமது மக்களிடம் கேட்கா மல் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்து டன் கதைத்துப் பேசிப் பல சுய நன்மை களைப் பெற்று வந்துள்ளார்கள். இன்று மக்களும் தமிழ் அரசியல் தலை வர்களும் சேர்ந்தே தமிழ்ப்பொதுவேட்பா ளரை முன்நிறுத்த முன் வந்துள்ளார் கள். அதில் எந்தத் தவறும் இல்லை. மத்திய அரசில் பதவி வகிக்கும் ஒருவ ருக்கு ஜால்ரா அடிக்க எண்ணி தமது மக்களைப்புறக்கணிக்க முன்வருவோரை தமிழ்ச் சமூகம் மன்னிக்காது. மக்கள் சார்பில் இந்தச் செயற்பாட்டில் ஈடுபடுவ தாக இருந்தால் சுமந்திரன் எம்முடன் சேர்ந்து பயணிக்கட்டும். இல்லையேல் ஒதுங்கியிருக்கட்டும். சிங்கள வேட்பாளர்கள் நலன்கருதி தமிழ் மக்களின் நலன்களை விற்காது இருக்குமாறு அன்புடன் அவரைக் கேட்டுக் கொள்கின்றேன் என்றுள்ளது. (ச) https://newuthayan.com/article/தமிழ்ப்_பொதுவேட்பாளரால்_சமஷ்டிக்குப்_பாதிப்பில்லை!
  10. பிரித்தானிய நேரப்படி நாளை வெள்ளி (14 ஜூன்) இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 29) முதல் சுற்று குழு C : வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான் எதிர் பபுவா நியூகினி AFG எதிர் PNG அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப் போட்டியில் அனைவருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது பபுவா நியூகினி முட்டை கொடுக்குமா? 30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா எதிர் அயர்லாந்து USA எதிர் IRL நான்கு பேர் மாத்திரமே ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனவும் மற்றைய 19 பேரும் அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! ஐக்கிய அமெரிக்கா வீரப் பையன்26 நிலாமதி தியா தமிழ் சிறி இப்போட்டியில் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?
  11. 28வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 13.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 47 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி குறைவான ஓட்ட இலக்கை அடைய மிகவேகமாக அடித்தாடி 3.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 50 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது அனைவரும் இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 28 போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 46 2 ரசோதரன் 46 3 கோஷான் சே 46 4 ஈழப்பிரியன் 44 5 சுவி 44 6 நந்தன் 44 7 தமிழ் சிறி 40 8 ஏராளன் 40 9 கிருபன் 40 10 கந்தப்பு 40 11 வாத்தியார் 40 12 எப்போதும் தமிழன் 40 13 நீர்வேலியான் 40 14 வீரப் பையன்26 38 15 நிலாமதி 38 16 குமாரசாமி 38 17 தியா 38 18 வாதவூரான் 38 19 அஹஸ்தியன் 38 20 கல்யாணி 38 21 புலவர் 36 22 P.S.பிரபா 36 23 நுணாவிலான் 36 முதல்வர் பதவியில் அமெரிக்கப் பிரபா அமர்ந்துள்ளார்!
  12. மூனா அண்ணாவின் மகன் துமிலனுக்கு Stern Award விருது கிடைத்ததில் நாங்களும் பெருமைப்படுகின்றோம்🙌 துணிச்சல் மிக்க துமிலனுக்கு பாராட்டுக்கள்👏👏👏
  13. 27வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தில் நிலைத்து நிற்கமுடியாமல் விக்கெட்டுகளை இழந்தபோதிலும் ஷகிப் அல் ஹசனின் ஆட்டமிழக்காமல் அடித்த 64 ஓட்டங்களின் உதவியுடன் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நெதர்லாந்து அணி வெற்றியை நோக்கி 14 ஓவர்கள் வரை சென்றாலும், அதன் பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: பங்களாதேஷ் அணி 25 ஓட்டங்களால் வெற்றியீட்டியது பங்களாதேஷ் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @வாதவூரான்க்கு புள்ளிகள் கிடையாது!
  14. தமிழ்த்தேசியம் பலமாக உள்ளதா? பலவீனப்பட்டுள்ளதா? June 12, 2024 — கருணாகரன் — தமிழ்த்தேசியம் பலமாக உள்ளதா? பலவீனப்பட்டுள்ளதா? பலவீனப்படுத்தப்படுகிறதா? போன்ற கேள்விகள் இன்றைய ஈழத்தமிழரின் அரசியலில் முக்கியமானவையாக உள்ளன. ஏனென்றால், தமிழ்த்தேசியம் பலவீனப்பட்டுக் கொண்டுபோகிறது. அதை எப்படியாவது பலப்படுத்த வேண்டும். காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்தோடு பலரும் உள்ளனர். இதில் ஒரு தொகுதியினர், “தமிழ்த்தேசியத்தைப் பலப்படுத்த வேண்டுமானால், அதற்கு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தப்படும்போது சிதறிக் கிடக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் தமிழ்த்தேசிய உணர்வும் திரட்சியடைந்து ஒன்றிணையும். அது தமிழ் மக்களின் கூட்டுணர்வையும் அரசியல் நிலைப்பாட்டையும் (உறுதிப்பாட்டையும்) எடுத்தியம்பும்” என்று சொல்கின்றனர். இதற்காக இந்தப் பூமியிலே ஒரு அதிசயமான பொதுவேட்பாளரைத் தேடிக் கொண்டுமிருக்கின்றனர். (தயவு செய்து சிரித்து விடாதீர்கள். இதை அவர்கள் மிகச் சீரியஸாகவே சொல்கிறார்கள் அல்லது கருதுகிறார்கள்). எனவே இதைப்பற்றிச் சுருக்கமாகவேனும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. 1. தமிழ்த்தேசியம் பலமாக உள்ளதா? தமிழ்த்தேசியக் கருத்துநிலையும் உணர்வும் இலங்கையிலும் இலங்கைக்கு வெளியே வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களிடத்திலும் தமிழ்நாட்டிலும் ஆழமாகவே உள்ளன. இதற்குக் காரணம், பிறமொழியினர், பிற ஆட்சியதிகாரத் தரப்புகள் தமிழர்கள் மீது மேற்கொள்ளும் அல்லது மேற்கொள்ள முயற்சிக்கும் – ஆதிக்கம் அல்லது ஒடுக்குமுறையே ஆகும். ஒடுக்குமுறை அதிகரிக்க அதிகரிக்க தேசியவாத உணர்வு மேலோங்குகிறது. தேசியவாதத்தின் ஓரம்சம் இதுவாகும். கூடவே, தமிழர்கள் சமூக, பொருளாதார, அரசியற் பிரச்சினைகளிலிருந்து தம்மை விடுவித்து, தம்மை நிலைப்படுத்திக்கொள்ளும் நோக்கில் உருவாகிய கருத்தியலும் இதுவென்பதால், அந்தச் சிக்கல்களும் பிரச்சினைகளும் தீரும் வரையில் இது பலமாகவே இருக்கும். ஆகவே தமிழ்த்தேசியக் கருத்தியல் என்பது இனவிடுதலைக் கொள்கையாகவும், அதற்கான அரசியற் திரட்சியைக் கொள்வதாகவும் இருக்கிறது. சமனிலையில் சமூக, பொருளாதார, பண்பாட்டு, அறிவியல் நிலைப்படுத்தலையும் வளர்ச்சியையும் உள்ளடக்கி நிற்கிறது. இது தமிழர் செறிந்து வாழும் நிலப்பரப்புகளில், மொழிஅடிப்படையிலான சமூகத்தைப் பலமானமுறையில் இணைப்பதற்கான ஒரு கோட்பாடாக வளர்ச்சியடைந்திருக்கிறது. சுருக்கிச் சொன்னால், தமிழ்த்தேசியம் என்பது தமிழர்கள் தங்களைப் பல வகையிலும் ஒரு தேசிய இனமாகத் திரட்டி, சமூக, அரசியல், பொருளாதார ரீதியில் வலுப்படுத்திக்கொள்வதற்கான ஒரு கருத்தோட்டம் எனலாம். “தமிழ்த்தேசியம்” என்ற சொல்லை அறிமுகமாக்கி, அந்தக் கருதுகோளை தமிழ்ப்பரப்பில் முதலில் விரித்தவர், “சிலம்புச்செல்வர்” ம.பொ.சிவஞானம். 1940 களின் முற்பகுதியில் அன்றிருந்த இந்தியச் சூழலில் ம.பொ.சி, இதைக்குறித்து விபரிப்பதற்காக சென்னையில் “தமிழ் முரசு” என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். அதில் இதைப்பற்றி விளக்கி எழுதினார். ஆக, தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களை – தமிழக மக்களை மையமாகக் கொண்டே முதலில் இவ்வாறு சிந்திக்கப்பட்டது. இதற்காக ம.பொ.சி, தொடர்ந்து 1946 இல் “தமிழரசுக் கழகம்” என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். அந்த உணர்வுநிலை வளர்ந்து 1969 இல் தமிழ்நாடு என்ற உருவாக்கமாக வெற்றியடைந்தது. இதில் பெருஞ்சித்திரனாரின் பங்களிப்பும் முக்கியமானதாக இருந்தது. தமிழ்த் தேசியத்தில் பெண் விடுதலை, சாதியப் பிரச்சினைகளை (தலித்தியம்) எப்படிக் கையாள்வது என பல விதமான உரையாடல்களும் போராட்டங்களும் நடந்தன. அவை கவனத்திற்குரியன. இலங்கையில் தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட விலக்கல்களும் ஒடுக்குமுறையும் தமிழ்த்தேசிய உணர்வையும் தனிநாட்டுக் கோரிக்கையையும் 1930 களில் உருவாக்கியது. தமிழகச் சூழலை முன்னுதாரணமாகக் கொண்டு, “இலங்கைத் தமிழரசுக் கட்சி” 1949 இல் ஆரம்பிக்கப்பட்டது. மொழிவாரி மாநிலமாக “தமிழ்நாடு” உருவாகியதை அடிப்படையாகக் கொண்டு “தமிழீழம்” என்ற தனிநாட்டுக் கோரிக்கை 1970 களில் உருவாகியது. அதாவது தமிழ்நாட்டுச் சாயலுடன் இவை முன்னெடுக்கப்பட்டன. இதேவேளை தமிழ்த்தேசிய உணர்வையும் அதன் சமூகத் திரட்சியையும் இலங்கை அரசாங்கம் கடுமையான முறையில் ஒடுக்கியது. சட்டத்தின் மூலமும் படைகளின் மூலமும் இந்த ஒடுக்குமுறை தீவிரப்படுத்தப்பட்டது. ஒடுக்குமுறை தீவிரப்படுத்தப்பட தமிழ்த்தேசிய உணர்வும், தமிழ்த்தேசிய உணர்வின் அடிப்படையில் தமிழின விடுதலைப் போராட்ட உணர்வும் மேலோங்கியது. இது தமிழகச் சூழலை விடவும் ஈழச் சூழலில் தீவிரநிலைப்பட்டதாக மாறியது. இதனால் தமிழ்த்தேசியக் கருத்து நிலையை வலியுறுத்திய ஆயுதப்போராட்டம் உருவாகி, பெரு வளர்ச்சியடைந்தது. 2009 இல் ஆயுதப்போராட்டத்தை இலங்கை அரசு முறியடித்தது. ஆனாலும் இனவிடுதலை உணர்வும் தமிழ்த்தேசியக் கருத்து நிலையும் அதே கொதிநிலையில்தான் உள்ளன. இன்று ஈழத்தில் தமிழ்த்தேசியம் என்பது தமிழர்களின் கூட்டுளம், சமூகத்திரட்சி, இனவிடுதலை போன்றனவற்றை உள்ளடக்கி நிற்கிறது. இந்த உணர்வு (தமிழ்த்தேசியம்) உலகளாவிய அளவில் தமிழர்களைப் பெரும்பாலும் ஒருங்கிணைக்கும் ஒன்றாகவும் மாற்றமடைந்திருக்கிறது. ஆக, சிங்கள பௌத்த பெருந்தேசியவாத ஒடுக்குமுறையே ஈழத்தில் தமிழ்த்தேசியவாதச் சிந்தனையை வலுப்படுத்தி, அதைத் திரட்சியடைய வைத்துள்ளது. ஒடுக்குமுறை தீவிரமடையத் தீவிரமடைய தமிழ்த்தேசிய உணர்வும் கருத்துநிலையும் மேலும் மேலும் வலுப்பெற்றுக்கொண்டேயுள்ளது. இன்று ஈழத்தமிழ்ப்பரப்பில் உள்ள பெரும்பாலான ஊடகங்களும் அரசியற் கட்சிகளும் மக்களின் வாக்களிப்பு வீதமும் இதை உறுதியுரைக்கின்றன. இப்போது கூட அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ்ப்பிரதேசங்களின் மீதான நில அபகரிப்பு, பௌத்த மயமாக்கல், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள சிங்கள வேட்பாளர்களின் இனப் பாரபட்சமான நிலைப்பாடு போன்றவற்றை முன்னிறுத்தியே தமிழ்த்தேசிய உரையாடல்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஆகவே, தமிழ்த்தேசியக் கருத்தியலும் உணர்வும் வலுவானதாக உள்ளதென்றால், அது சிங்களப் பெருந்தேசியவாத ஒடுக்குறையின் விளைவினாலேயாகும். மற்றும்படி, தமிழ்த்தேசியத்தின் அடிப்படைகளான சமூக, பொருளாதார, பண்பாட்டு, அறிவியல் வளர்ச்சிகளையும் சமூக சமத்துவம், பெண் விடுதலை போன்றவற்றைக் கொண்டதாக அல்ல. ஆயுதப்போராட்டகால அரசியலுக்குப் பிறகு (2009க்குப்பின்) தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்த தரப்புகளும் கருத்துநிலையாளர்களும் தமிழ்ச் சமூகத்தை அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு, அறிவியல் அடிப்படையில் வளர்த்தெடுக்கவேண்டும் என்று சிந்திக்கவில்லை. மட்டுமல்ல, பால் சமத்துவம் (பெண் ஒடுக்குமுறை), சாதிய சமத்துவம், பிரதேச சமத்துவம் போன்றவற்றிலும் உரிய கவனத்தைக் கொள்ளத் தவறின. மேலோட்டமாக அனைத்துத் தமிழர்களும் ஒருமுகப்பட்டுள்ளனர் எனச் சொல்லப்பட்டாலும் (காட்டப்பட்டாலும்) உள்ளே இடைவெளிகளும் பாரபட்சங்களும் நிறைவின்மைகளோடு கொதித்துக் கொண்டேயிருக்கின்றன. இவற்றைக் குறித்த உரையாடல்கள் கூட குறைந்த பட்ச அளவிலேனும் நடக்கவில்லை. (தமிழகச் சூழல் வேறு. அங்கே உரையாடல்களும் விவாதங்களும் ஜனநாயக அடிப்படையிலான பொறிமுறைகளும் பலமாக உள்ளன. அறிவியல், பண்பாட்டு வளர்ச்சி, புத்தாக்கத்திறன், சமூக வளர்ச்சி போன்றன கவனத்திற் கொள்ளப்படுகிறது. தமிழக அரசு மட்டுமல்ல, அதற்கப்பாலான சமூக நிலையிலும் இதைப்பற்றிய கரிசனைகள் வலிமையாக உண்டு). ஈழத்தில் சிங்களப் பௌத்த ஒடுக்குமுறையை முன்னிறுத்திப் பிரச்சாரப்படுத்தப்படும் ஒரு எதிர்ப்பு உள நிலையாகவே இன்றைய தமிழ்த்தேசியம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ் மக்கள் பல வகையான அரசியலிலும் சிதறுண்டுள்ளனர். பொருளாதாரத்தில் மிகப் பலவீனப்பட்டுள்ளனர். புலம்பெயர் தமிழர்கள் பொருளாதாரப் பலத்தோடிருந்தாலும் ஈழத்தில் நிலவரம் அப்படியல்ல. ஈழ நிலவரம் தலைகீழானது. அதோடு அறிவுப் புலத்திலும் புத்தாக்கப் புலத்திலும் தமிழர் பின்னடைந்தேயுள்ளனர். கல்விச் சுட்டிகளைக் காட்டி இதைச் சிலர் மறுதலித்து விவாதிக்கலாம். அறிவு, புத்தாக்கம் என்பது தொழில்முறைக்கான கற்கை – கல்வி அறிவுக்கு அப்பால், சமூக, பொருளாதார, அறிவியல் வளர்ச்சிக்கான விஞ்ஞானபூர்மான அறிவாற்றலையும் புத்தாக்கத்தையும் உள்ளடக்கமாகக் கொண்டது. அந்த வகையில் ஈழத்தமிழரின் அறிவுப்புலம் விருத்தியடையவில்லை. பண்பாட்டுப் புலத்திலும் பின்னடைவான நிலையே காணப்படுகிறது. எனவே உணர்வு நிலையிலும் கருத்து நிலையிலும் பலமாக இருக்கும் தமிழ்த்தேசியமானது, பிரயோக முறையிலும் (நடைமுறையிலும்) உள்ளடக்கத்திலும் மிகப் பலவீனப்பட்டே உள்ளது. இதை நிமிர்த்துவதற்கு எந்த வகையிலும் ஒரு சர்வரோக நிவாரணியாக தமிழ்ப் பொதுவேட்பாளர் இருக்க முடியாது. ஆனால், அப்படித்தான் பொதுவேட்பாளரை முன்னிறுத்துவோர் கருதுகின்றனர். ஒரே கல்லில் ஒன்பது மாங்காய் விழும் என. ஆ. தமிழ்த்தேசியக் கருத்தை – உணர்வை முன்னிறுத்திச் செயற்படும் – செயற்படுத்தப்படும் அரசியல். தமிழ்த்தேசியக் கருத்தை – உணர்வை முன்னிறுத்திச் செயற்படும் – செயற்படுத்தப்படும் அரசியலானது, அரச எதிர்ப்பு, சிங்கள பௌத்த எதிர்ப்பு, முஸ்லிம் எதிர்ப்புவாதமாக இயங்குகிறது. இதனால் பன்முகத்தன்மையைக் கொண்ட ஜனநாயக அடிப்படைகளில் பலவீனப்பட்டுள்ளது. மறுபக்கத்தில் தமிழ்த்தேசியத்தின்பால் பற்றுக் கொண்டவர்களைக் கொண்டாடுதல், அந்தப் பற்றோடு போராடி மரணத்தைத் தழுவிக் கொண்டோரைப் போற்றுதல், வழிபடுதல் என நிகழ்கிறது. கூடவே மொழி, நிலம், பண்பாடு ஆகியவற்றை முன்னிறுத்திய சொல்லாடல்களில் அரசியல் உணர்வூட்டத்தைச் செய்தலாக மட்டுமே நிகழ்த்தப்படுகிறது. மேலும் தமிழ்த்தேசியக் கருத்துநிலையைத் தொடர்ச்சியாகப் பேசுதல், இனரீதியாக அடையாளப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறையைத் எதிர்க்க முற்படுதல், அதை வெளிப்படுத்துதல் என இது நீள்கிறது. ஆனால், இதற்குரிய வலுவான செயற்கட்டமைப்புகளும் வலுவான எதிர்ப்பு வடிவங்களும் எதிர்ப்பு நிலைகளும் திரட்சித் தன்மையும் தொடரியக்கமும் இன்றில்லாது போய்விட்டது. இதைப்பற்றிய ஆய்வுகளும் விமர்சனங்களும் உரையாடல்களும் இல்லாதொழிந்து விட்டன. முன்வைக்கப்படும் விமர்சனங்களையும் கவனப்படுத்தல்களையும் திறந்த மனதோடு ஏற்கும் நிலையுமில்லை. அப்படி விமர்சனங்களை முன்வைப்போரை, சதிக்கோட்பாட்டாளர்கள், அரச ஒத்தோடிகள், துரோகிகள், இனவிரோதிகள் என எதிர்நிலையாளர்களாக நோக்கும் நிலையே வளர்ந்துள்ளது. இதனால், வெளிவிரிய வேண்டிய தமிழ்த்தேசியமானது, உட்சுருங்கும் தமிழ்த்தேசியமாகியுள்ளது. 2. தமிழ்த்தேசியம் பலவீனப்பட்டுள்ளதா? மக்களின் உணர்வு நிலையில் தமிழ்த்தேசியக் கருதுகோள் பலவீனப்பட்டுள்ளதாகக் கருதமுடியாது. தேர்தல்களின்போது தமது கூட்டுணர்வை தமிழ்த்தேசிய அடையாளத்தின்பாற்பட்டே அநேகமாக ளெிப்படுத்துகின்றனர். இந்த அடிப்படையில் ஒடுக்குமுறை அரசையும் சிங்களப் பேரினவாதச் சிந்தனையையும் எதிர்த்தே கடந்த 70 ஆண்டுகளாக மக்கள் போராடியிருக்கிறார்கள். பேரிழப்புகளைச் செய்துள்ளனர். பெரும் தியாகங்களைப் புரிந்துள்ளனர். ஆகவே தமிழ்த்தேசியம் மக்களின் தளத்தில் பலவீனப்பட்டுள்ளதாகச் சொல்ல முடியாது. அரச ஒடுக்குமுறை இல்லாதொழிந்தால் இந்த நிலையில் மாற்றம் நிகழலாம். ஆனால் தமிழ்த்தேசியம் என்ற அடையாளத்தோடு மேற்கொள்ளப்படும் தமிழ் அரசியலின் பலவீனத்தையும் அது சமூக, பொருளாதார, பண்பாட்டு அம்சங்களில் மந்த நிலையைப் பராமரிப்பதையும் கண்டு மக்கள் அதிருப்தியடைந்திருக்கின்றனர். நிலமும் மக்கள் தொகையும் சுருங்கி வருவதையிட்டு மக்களுக்குக் கவலையுண்டு. ஒன்றாகத் திரட்சியடைந்து நின்று “விடுதலை அரசியலை” மேற்கொள்ள வேண்டிய அரசியற் சக்திகள், கட்சிகளாகப் பிளவுண்டு “தேர்தல் அரசியலில்” சிக்கிச் சிதறிக் கிடப்பதையிட்டு மக்கள் வெறுப்படைந்துள்ளனர். இந்தக் கட்சிகள் கூட்டாகவும் தனித்தனியாகவும் பிரகடனப்படுத்திய எதையும் நிறைவேற்றத் தவறியதும் மக்களுக்கு நம்பிக்கையீனத்தை உண்டாக்கியிருக்கிறது. சாதிய விடுதலை, பெண்ணுரிமை போன்றவற்றைச் சரியான முறையில் – பிரயோக முறையில் – தமிழ்த்தேசியம் தனக்குள் கொள்ளவில்லை. முஸ்லிம்கள், மலையக மக்கள் உட்படப் பிற சமூகத்தினருடனான உறவாடலுக்கான விரிபரப்பை இலங்கைத் தமிழ்த்தேசியம் கொள்ளத் தவறியுள்ளது என்ற கவலைகளும் மக்களுக்குண்டு.இவையெல்லாம் தமிழ்த்தேசியத்தின் சரிவைச் சந்திக்கும் அபாயநிலையே. தமிழ்த்தேசியத்தின் பலவீனங்களே! 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அயோத்திதாசப் பண்டிதர் முதன்முதலில் தமிழ்த்தேசிய அடையாளங்களின் தொடக்கப்படிவுகளைக் கண்டடைந்திருந்தார். ‘தமிழன்’ என்ற தேசிய இனப்பெயரை – அடையாளத்தை அதற்கான அரசியல் சமூகப் பொருளோடு பயன்படுத்திய முதல் தமிழ்ச் சிந்தனையாளரும் அயோத்திதாசப் பண்டிதரே. அப்பொழுது அவர் வலியுறுத்தியது, சாதியைக் கடக்காமல் தமிழர்கள் இன ஓர்மைகொள்ள முடியாது என்பதாகும். அதற்குப் பிறகு நூற்றாண்டு கடந்து விட்டது. ஆனாலும் நிலைமையில் பெரிய மாற்றங்கள் இல்லை. இதுவும் தமிழ்த் தேசியம் பலவீனமடைவதற்கான பிரதான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். 3. தமிழ்த்தேசியம் பலப்படுத்தப்படுகிறதா? தமிழ்த்தேசியத்தையும் அதற்கான அரசியலையும் பலப்படுத்தும் நடவடிக்கைகளை இன்றைய தமிழ் அரசியற் சக்திகளோ, அவற்றை வலியுறுத்தும் அமைப்புகளோ முன்னெடுப்பதற்கு அக்கறை கொள்ளவில்லை. அல்லது அதில் நிறையப் போதாமையுண்டு. தமிழ்த்தேசியம் என்ற கருதுகோளைப் பலப்படுத்த வேண்டும் என்றால், அதற்கான செயலூக்கமுள்ள செயற்றிட்டங்களும் செயற்பாடுகளும் தேவை. அவை எதுவும் இன்றுவரை வரையப்பட்டுச் செயற்படுத்தப்படவில்லை. அதற்கான உள்ளார்ந்த உரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். சுய விமர்சனத்துக்கு இடமளிக்கப்படுவது அவசியம். மெய்யான அர்த்தத்தில் வலுவான தமிழ்த்தேசியம் அமைய வேண்டுமெனில், அதைப் பன்முகப் பரிமாணத்தோடு வளர்த்தெடுக்க வேண்டும். பெண்ணுரிமை, சாதிய விடுதலை, சமத்துவ அடிப்படைகள், பிற தேசிய இனங்களோடுள்ள ஜனநாயக அடிப்படையிலான சக்திகளுடனான உறவுகள் என இந்தப் பரிமாணம் அமையும். ஒரு எண்ணக்கரு மட்டும் முழு வடிவத்தைக் கொள்வதில்லை. அது செயலாகுமிடத்தே அதற்கான பெறுமான வலுவுண்டு. இந்தக் குறைபாட்டை மறைத்துக் கொள்வதற்கே “போட்டி இனவாதம்” (Competitive racism) வளர்க்கப்படுகிறது. போதாமைக்கு தமிழின ஐக்கியம், ஒற்றுமை, தேசியம் எனத் தோற்ற மாயைகள் (Ilusion of appearance)உருவாக்கப்படுகிறது. மெய்யான பொருளில் இதய சுத்தமாக ஐக்கியம், ஒற்றுமை, தேசியம் என இது இயங்குமானால், பன்மைத்துவம், ஜனநாயகம் ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்துச் சக்திகளையும் உள்ளீர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மற்றவர்களின் கழுத்தைப் பிடித்துத் தள்ளி, பழியுரைத்து, தம்மைப் புனிதப்படுத்திக் கொள்ளும் மூடத்தனங்கள் நிகழாது. துயரமான நிலை என்னவெனில், தமிழ்த்தேசியவாதத்தை விரிவும் ஆழவும் கூடிய பல்பரிமாணப் பெறுமானமாக்குவதற்கு எவரும் முயற்சிக்கவேயில்லை. ஆக, வெறும் அரச எதிர்ப்பில் மட்டுமே தமிழ்த்தேசிய அரசியற் கட்சிகளும் ஊடகங்களும் தமிழ்த்தேசியச் சிந்தனையாளர்களும் தொங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம். ஒடுக்குமுறைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்ப்பைக் கண்டு ஒடுக்குமுறையாளரோ அரசோ நகைக்கிறதே தவிர, அச்சமடையவில்லை. இதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளவும் இல்லை. என்பதால் எதிர்ப்பு அரசியலில் தமிழ்த்தேசியம் பலவீனமாகவே உள்ளது. கூடவே அரசியல் ரீதியாக தமிழ்த்தேசியக் கட்சிகள் தொடர்ந்து பிளவுண்டு சிதறிக் கொண்டேயிருக்கின்றன. தமிழ்த்தேசியம் என்பது பேரினவாத ஒடுக்குமுறையை மட்டுமல்ல, தமிழ்த்தேசியத்தை அடிப்படையாகக் கொண்ட மக்களைப் பாதுகாக்கவும் அவர்களை மேம்படுத்தவும் வேண்டும். அதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வது அவசியம். இதிற் கவனமில்லாத காரணத்தினால்தான் மக்கள் மண்ணை விட்டு வெளியேறுவது தொடக்கம், வடக்குக் கிழக்கில் இருக்கும் மக்கள் கூட பிற அரசியற் தரப்புகளின் பின்னால் செல்லக் கூடிய நிலை உருவாகியுள்ளது. என்பதால் தமிழ்த்தேசியத்தைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக பலவீனப்படும் – பலவீனப்படுத்தும், காலம் கடத்தும் காரியங்களே நடக்கின்றன. தொகுத்துச் சொன்னால், ஏற்பட்டுள்ள – ஏற்படுத்தப்படும் நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டு நிமிரக்கூடிய அளவுக்குச் செயற்றிட்டமும் சிந்தனையும் இல்லாத நிலையிலேயே, தமிழ்த்தேசியம் உள்ளது. இது அடுத்த பலவீனப்படுதலாகும். எனவே தமிழ்த்தேசியம் பலப்படுத்தப்படவில்லை. 4. தமிழ்த்தேசியம் பலவீனப்படுத்தப்படுகிறதா? ஆம், நிச்சயமாக. இருநிலைகளில் (தமிழ்த்தேசிய எதிர்ப்புத் தரப்பு – ஆதரவுத் தரப்பு) தமிழ் மக்கள் பலவீனப்படுத்தப்படுகின்றனர். இரட்டை அழுத்தத்துக்குட்படுகின்றனர். 1. தமிழ்த்தேசியத்தைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை அரசும் பேரினவாதச் சக்திகளும் தொடர்ச்சியாகவே செய்து வருகின்றன. அரசோடு இணைந்த நிலையில் பிராந்திய – சர்வதேச சக்திகளிற் சிலவும் செயற்படுகின்றன. கூடவே தமிழ்த்தேசியத்துக்கு எதிரான – அரச ஆதரவுத் தரப்புகளும் (கட்சிகள் உள்ளடங்கலாக) இதைச் செய்கின்றன. கருத்துநிலைச் சிதைப்பாகவும் – பௌதீக ரீதியாக நிலத்திலும் சனத்தொகையிலும் சமூகப் பொருளாதாரத்திலும் வீழ்ச்சியடையச் செய்வதன் மூலமும் இது நிகழ்த்தப்படுகிறது. 2. தமிழ்த்தேசியவாதத்தைப் பேசும் இன்றைய அரசியல் – ஊடகத்தரப்பினரும் தமிழ்த்தேசிய அடையாளத்தையும் அந்தக் கருதுகோளையும் (உணர்வையும்) கொண்ட மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் விதத்தில் செயற்படுகின்றனர். நம்பிக்கை இழப்பைச் செய்கின்றனர். “விடுதலை அரசியலைச் செய்கிறோம், ஒடுக்குமுறையை எதிர்க்கிறாம், மக்களை மேம்படுத்துகிறோம்” எனச் சொல்லிக் கொண்டே இனவாதப் பொறிக்குள் மக்களைச் சிக்க வைக்கின்றனர். இதனால் மக்கள் தீராச் சுமைகளுக்குள்ளாகின்றனர். நெருக்கடிகளால் சுற்றியிறுக்கப்படுகின்றனர். கூடவே தமது ஆட்சி அல்லது அதிகாரத்துக்குட்பட்ட உள்ளுராட்சி சபைகள், மாகாணசபை உள்ளிட்ட அடுக்குகளில் மேற்கொள்ளப்படும் அதிகார துஸ்பியோகம், வினைத்திறனின்மையான செயற்பாடுகள், ஊழல், பாரபட்சம், தூரநோக்கின்மையான திட்டங்கள், தனிநபர் அல்லது குழு நலன்சார்ந்த நடவடிக்கைகள் போன்றவற்றால் சமூக ரீதியான பாதிப்பைப் பலமான முறையில் ஏற்படுத்தியுள்ளனர். எனவே தமிழ்த்தேசியம் இரு நிலைகளில் பல்வேறு தரப்புகளால் பலவீனப்படுத்தப்படுகிறது. இறுதியாக – தமிழ்த்தேசியத்தைப் பிற்போக்கான – தமிழ் மக்களுடைய வளர்ச்சிக்கு எதிரானதாகவும் மாறானாதாகவும் பார்ப்போரின் பார்வையிலிருந்து நோக்கினால், 1. இன, மொழி, மத, பிரதேச உணர்வுகளைத் தூண்டி அல்லது அதை மறைமுகமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் தமிழ்த்தேசியம் தன்னைத் தனிமைப்படுத்தியே வைத்துள்ளது. இதனால்தான் அது வடக்குக்கிழக்கில் உள்ள முஸ்லிம்களுடன் கூட பொது வேலைத்திட்டத்தில் இணைய முடியாதுள்ளது. சமவேளையில் இலங்கையில் உள்ள சிறுபான்மைத் தேசிய இனங்களோடு ஒருங்கிணைந்து செயற்பட விதியற்றிருக்கிறது. 2. பெண்களுக்கும் ஒடுக்கப்படும் நிலையில் உள்ள சாதியினருக்குமான சமநிலைகளை இன்னும் வழங்க முடியாத குறைநிலைத் தமிழ்த்தேசியமாக உள்ளது. நாளாந்த வாழ்வின் முதல் பிரச்சினையான பொருளாதாரப் பிரச்சினையைப் பற்றி அதனால் கவனம் கொள்ளமுடியவில்லை. மொழியை முன்னிறுத்தி முற்போக்கான போராட்ட சக்திகளை வீணடிக்கின்றது. மனிதரிடையே காணப்படும் ஏழ்மை, ஏற்றதாழ்வுகள், வேலையின்மை போன்ற அடிப்படை பொருளாதார சிக்கல்களுக்கு தகுந்த முக்கியத்துவம் தராமல் தமிழ்த் தேசியம் கவனத்தை சிதறடிக்கின்றது. முக்கியமாகச் சமூகப் பாதுகாப்பை அது கவனத்திற் கொள்ளவில்லை. 3. தமிழ்த் தேசியமானது, தமிழ் உயர்நிலை மக்களின் கருத்தியலாகவே இருக்கின்றது. நுண்கலைகள் தொடக்கம், நிர்வாக அதிகாரம் வரையில் சராசரித் தமிழருக்கு அப்பாலேயே இருக்கின்றன. 4. இன்றைவரைக்கும் தமிழ்த் தேசியவாதத்தால் முழுமையாக முகம்கொடுக்க முடியாத பிரச்சினையாகச் சாதியம் இருக்கிறது. காரணம், தமிழ்ச் சமூகத்துக்கு உள்ளே இருக்கிற ஒடுக்குமுறைகளை – ஜனநாயகமின்மையை மழுப்பியே இதுவரையான தமிழ்த் தேசியம் தன்னை நிலைநிறுத்தி வந்துள்ளது. எனவே இங்கே முன்வைக்கப்பட்டுள்ள விவாதப்பொருள்களை மனங்கொண்டு புதிய நிலைக்கு ஈழத்தமிழரின் (தமிழ்த்தேசிய) அரசியல் முன்னெடுக்கப்படவேண்டியுள்ளது. இது காலத்தின் வலியுறுத்தலாகும். https://arangamnews.com/?p=10865
  15. இலங்கை முன்னென்றும் காணாத அரசியல் பரிசோதனையில் இறங்கும் ஜனாதிபதி ரணில் June 11, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கையில் இதுவரையில் நடைபெற்ற எட்டு ஜனாதிபதி தேர்தல்களில் எந்த ஒன்றின்போதும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தற்போது நிலவுகின்றதைப் போன்ற குழப்பகரமான அரசியல் சூழ்நிலையை நாம் கண்டதில்லை. நாட்டு மக்களின் மனநிலையை உண்மையில் அறிந்து கொண்டவர்களாகத்தான் அரசியல்வாதிகள் தேர்தல்களைப் பற்றி பேசுகிறார்களா என்று கேட்கவேண்டியிருக்கிறது. தேர்தல்களைப் பற்றி தினமொரு விசித்திரமான கருத்துக்களை அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். அந்த கருத்துக்களின் தகுதி எத்தகையதாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்துக்கும் குறைவில்லை. இறுதியாக, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தேர்தல்கள் தொடர்பில் கருத்தை வெளியிட்டு கடந்த சில நாட்களாக அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தார். அவரது கருத்தை அவரது கட்சியே நிராகரித்த பின்னரும் கூட அவர் தன்னை தொடர்ந்தும் நியாயப்படுத்தி வாதிட்டுக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகோத்தாவில் மே 28 ஆம் திகதி செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய ரங்கே பண்டார இவ்வருடம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலும் அடுத்த வருடம் நடத்தப்பட வேண்டியிருக்கும் பாராளுமன்ற தேர்தலும் ஒத்திவைக்கப்படவேண்டும் என்றும் ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக்காலங்களை இரு வருடங்களால் நீடிக்கவேண்டும் என்றும் ஒரு யோசனையை வெளியிட்டார். புத்தளம் மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான ரங்கே பண்டார அவ்வாறு பதவிக் காலங்களை நீடிப்பதற்கு பாராளுமன்றத்தில் சகல கட்சிகளினதும் ஆதரவுடன் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு மக்களின் அங்கீகாரத்துக்காக சர்வஜனவாக்கெடுப்புக்கும் விடப்படவேண்டும் என்று கூறினார். உடனடியாகவே எதிரணி கட்சிகள் கடுமையான கண்டனத்தை வெளியிட்டதுடன் அவரின் யோசனையின் பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டவும் தொடங்கின. ரங்கே பண்டார ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு சாதாரண உறுப்பினர் அல்ல. கட்சியின் பொதுச் செயலாளரான அவர் தன்னால் வெளியிடப்படும் கருத்துக்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளக்கூடிய அரசியல் முதிர்ச்சியைக் கொண்டவராக இல்வை என்றே தோன்றுகிறது. ஆனால், அவரின் கருத்துக்கள் தோற்றுவித்திருக்கும் சர்ச்சையினால் தனக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை உணர்ந்த ஜனாதிபதி விக்கிரமசிங்க தன்னை அதிலிருந்து தூரவிலக்கிக் கொண்டார். அரசியலமைப்பின் பிரகாரம் உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று ஏற்கெனவே பல தடவைகள் கூறிவிட்டதால் ரங்கே பண்டாரவின் கருத்து குறித்து பிரத்தியேமாக எதையும் கூறவேண்டியதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பிறகு பிரதமர் தினேஷ் குணவர்தனவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரியநேரத்தில் ஜனாதிபதி தேர்தலும் அதைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலும் நடத்தப்படும் என்று அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். இவையெல்லாம் நடந்து முடிந்த பின்னரும் கூட கடந்த வாரம் மீண்டும் ஒரு செய்தியாளர்கள் மகாநாட்டைக் கூட்டிய ரங்கே பண்டார ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக்காலங்களை நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவேண்டும் என்ற தனது கருத்தை நியாயப்படுத்தினார். சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பிலான அரசியலமைப்பு ஏற்பாட்டைப் பற்றி மாத்திரமே பேசியதாகவும் இந்த விடயத்தில் மற்றைய அரசியல் கட்சிகள் அவற்றின் நிலைப்பாடுகளை வெளியிடவேண்டும் என்று கேடடுக் கொண்டதாகவும் அவர் கூறினார். அவரது கருத்தை கண்டனம் செய்த எதிரணி அரசியல்வாதிகளும் அவதானிகளும் 1977 ஜூலை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பெற்ற ஆறில் ஐந்து பெரும்பான்மை வெற்றியை அடுத்து அதன் அன்றைய தலைவர் ஜே.ஆர். ஜெயவர்தன தேர்தல் வரைபடத்தை இலங்கை அடுத்த 40 வருடங்களுக்கு சுருட்டிவைக்கமுடியும் என்று கூறியதையும் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை ஆறு வருடங்களால் நீடிப்பதற்கு அவரது அரசாங்கம் 1982 டிசம்பரில் படுமோசமான மோசடிகளுக்கு மத்தியில் நடத்திய சர்வஜனவாக்கெடுப்பின் விளைவாக ஏற்பட்ட விளைவுகளையும் நினைவுபடுத்தத் தவறவில்லை. கடந்த இரு வருடங்களாக ஜனாதிபதி விக்கிரமசிங்க தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளின் இதுவரையான பயன்களை தேர்தல் பிரசாரங்கள் பாதித்துவிடக்கூடும் என்ற அக்கறையே இரு தேசிய தேர்தல்களையும் ஒத்திவைக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைப்பதற்கு ரங்கே பண்டாரவை தூண்டியிருக்கக்கூடும். ஏற்கெனவே தேர்தல்கள் ஒத்திவைப்பு குறித்தும் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து பேசிய அரசியல்வாதிகளும் இதே நியாயத்தையே கற்பித்தார்கள். மக்கள் தேர்தல்களை அல்ல, மூன்றுவேளை உணவையை கேட்கிறார்கள் என்றும் ரங்கே பண்டார செய்தியாளர்கள் மகாநாட்டில் கூறினார். தேர்தல்களில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்று ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் ஏற்கெனவே கூறியிருந்தார். சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் நுவரேலியாவில் நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசிய சட்ட மகாநாட்டில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி நாட்டு மக்களில் இளைஞர்கள் உட்பட அதிகப் பெரும்பான்மையானவர்கள் தேர்தல்களில் மாத்திரமல்ல அரசியல் கட்சிமுறைமையிலும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்றும் பாராளுமன்றத்தில் உள்ள சகல கட்சிகளும் சேர்ந்து பெறக்கூடிய வாக்குகளும் கூட மொத்த வாக்குகளில் ஐம்பது சதவீதத்தை தாண்டப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் பங்காளிகளான ஜனாதிபதியின் ஐக்கிய தேசிய கட்சியும் ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தேர்தல்களுக்கு முகங்கொடுப்பதற்கு அஞ்சுகின்றன என்பது ஒன்றும் இரகசியமல்ல. எந்த தேர்தலையும் எந்த நேரத்திலும் சந்திக்க தாங்கள் தயார் என்று அடிக்கடி கூறுகின்ற ராஜபக்சாக்கள் கடந்த வருட முற்பகுதியில் நடத்தப்படவிருந்த உள்ளூராட்சி தேர்தல்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதற்கு காரணமாக அமைந்த ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அடாத்தான நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைத்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். தேர்தல்களுக்கு முகங்கொடுக்காமல் இருபபதற்காக ஜனாதிபதியும் அரசாங்கமும் எத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளிலும் இறங்கத் தயங்கமாட்டார்கள் என்பது உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த நடவடிக்கைகளுக்கு அவர்கள் ஏற்படுத்திய முட்டுக்கட்டைகள் தெளிவாக உணர்த்துகின்றன. உள்ளூராட்சி தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திறைசேரி நிறுத்திவைக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவையும் அரசாங்கம் மீறியது. ‘ அறகலய ‘ மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு நாட்டு மக்களின் அரசியல் சிந்தனைகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றங்களையும் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலான அவர்களின் எண்ணத்தையும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை உள்ளூராட்சி தேர்தல்கள் நிச்சயமாக வழங்கியிருக்கும். ஆனால் அந்த வாய்ப்பை மக்களிடம் இருந்து பறித்தது மாத்திரமல்ல மாகாணசபை தேர்தல்களையும் நீண்டகாலமாக நடத்தாமலும் இருக்கும் அரசாங்கமோ அல்லது அதைச் சார்ந்த அரசியல்வாதிகளோ நாட்டு மக்கள் தேர்தல்களை விரும்பவில்லை என்று கூறுவதற்கு உண்மையில் அருகதையற்றவர்கள். ஆனால், ஒரு வித்தியாசம். மற்றைய தேர்தல்களைப் பற்றி பேசாவிட்டாலும் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தல்களைப் பற்றி தொடர்ச்சியாகப் பேசிவந்திருக்கிறார். அதற்கு காரணம் அவரின் அரசியல் எதிர்காலத்துடன் அந்த தேர்தல் சம்பந்தப்பட்டதாக இருப்பதேயாகும். ஆனால், ஜனாதிபதியாக விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னரான கடந்த இரு வருடகாலத்தில் அரசாங்க அரசியல்வாதிகள் தேசிய தேர்தல்களை ஒத்திவைக்கும் உள்நோக்கத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது குறித்தும் தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது குறித்தும் அடிக்கடி பேசிவந்திருக்கிறார்கள். ஆனால் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து அவர்கள் அதைக் கைவிட்டார்கள். சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இளம் சட்டத்தரணிகளுடனான சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருப்பதாக அறிவித்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் ஜனாதிபதி பதவிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களை ஒழிப்பது குறித்து எதுவும் பேசுவதில்லை என்று கூறியிருந்தார். அவர்கள் நிறைவேற்று அதிகாரங்களை ஒழிப்பதற்கு முன்வந்தால் அதற்கான சட்டவாக்க செயன்முறைகளை முன்னெடுப்பதற்கு தேவையான கால அவகாசத்தைக் காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில்தான் அவ்வாறு அவர் கூறினாரோ தெரியவில்லை. கடந்த வருட பிற்பகுதியில் நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ச பாராளுமன்ற தேர்தல்களை முன்னைய தொகுதி முறையையும் தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையையும் உள்ளடக்கிய கலப்புமுறையின் கீழ் நடத்துவதற்கான சீர்திருத்த யோசனைகளை முன்வைத்தது எமக்கு நினைவிருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் பாராளுமன்றத்தில் அதன் ஒரேயொரு உறுப்பினராகவும் இருக்கும் வஜிர அபேவர்தன எல்லாவற்றுக்கும் மேலாக அடுத்த ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக எவரும் களமிறங்காமல் அவர் போட்டியின்றி ஜனாதிபதியாக தெரிவாவதற்கு வழிவிடவேண்டும் என்று ஒரு தடவை கேட்டிருந்தார். ஜனாதிபதி தேர்தலை இந்த வருடம் நடத்தினால் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கத்திடம் நிதியில்லாமல் போகும் என்றும் கூட அபேவர்தன கூறினார். தேர்தல்களை நடத்தவேண்டும் என்று கோருபவர்கள் நாட்டை நிலைகுலைய வைக்கவே விரும்புகிறார்கள் என்று அவர் கூறியதும் பதிவில் இருக்கிறது. ஜனாதிபதி விக்கிரமசிங்கவை மேலும் பல வருடங்களுக்கு ஆட்சிசெய்ய அனுமதித்தால் ஐரோப்பிய பெண்கள் இலங்கைக்கு வந்து வீட்டுப் பணிப்பெண்களாக பணியாற்றக்கூடிய அளவுக்கு நாட்டை பொருளாதார சுபிட்சமுடையதாக மாற்றிக்காட்டுவார் என்று கூட ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கூறினார். இவ்வாறாக ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகள் கருத்துக்களை தெரிவித்துவரும் தொடரில் பிந்தியதாக ரங்கே பண்டாரவின் யோசனை வந்திருக்கிறது. ஒருபுறத்தில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கும் அதேவேளை மறுபுறத்தில் ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகள் தேர்தலுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கிறார்கள். உண்மையிலேயே ஐக்கிய தேசிய கட்சி மக்கள் மத்தியிலான ஆதரவையும் கட்சி ஒழுங்கமைப்புகளையும் பொறுத்தவரை மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதே அதன் அரசியல்வாதிகளின் குழப்பகரமான கருத்துக்களுக்கு பிரதான காரணமாகும். ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற ஜனாதிபதியின் அறிவிப்பு தனது தலைமையின் கீழ் மூன்று தசாப்தங்களாக இருந்துவரும் கட்சியின் இன்றைய நிலை பற்றிய அவரின் தெளிவான புரிதலை பிரகாசமாக வெளிக்காட்டியது. தற்போதைக்கு தனது கட்சியை மீளக்கட்டியெழுப்ப முடியாது என்று நன்றாக உணர்ந்துகொண்டதன் காரணத்தினாலேயே பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய பரந்தளவிலான கூட்டணி ஒன்றின் சார்பிலான சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதே புத்திசாலித்தனமானது என்ற முடிவுக்கு விக்கிரமசிங்க வந்தார். ஆனால், அந்த பரந்தளவிலான கூட்டணியை அமைப்பதற்கான அவரின் முயற்சிகள் இதுவரையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணவில்லை. பலதரப்பினரதும் ஆதரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து உத்தியோகபூர்வமாக இதுவரையில் அறிவிக்கவில்லை. கடந்த வாரம் கொழும்பில் தனது அரசியல் அலுவலகத்தை திறந்துவைத்த வேளையிலும் கூட அவரிடமிருந்து அந்த அறிவிப்பு வரவில்லை. பொருளாதார நிலைவரத்தில் ஏற்பட்டு வருகின்ற மேம்பாடு காரணமாக நாட்டு மக்கள் மத்தியில் தனக்கு கணிசமான ஆதரவு வளர்ந்திருப்பதாக ஜனாதிபதி நம்புகிறார். அவரது பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பயனாக பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்பது உண்மையே. ஆனால் கிடைக்கக்கூடியதாக இருக்கும் பொருட்களை வாங்கக்கூடிய வசதிபடைத்த சமூகப் பிரிவினர் விக்கிரமசிங்க தொடர்ந்தும் பதவியில் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாட்டுமக்களில் அதிகப் பெரும்பான்மையானவர்களினால் பெரும்பாலான பொருட்களை வாங்குவதற்கு பணம் இல்லை. பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி எடுத்துவரும் நடவடிக்கைகளுக்காக மாத்திரம் அடுத்த தேர்தலில் நாட்டு மக்கள் அவருக்கு அமோகமான ஆதரவை வழங்கி மீண்டும் ஜனாதிபதியாக்கிவிடுவார்கள் என்று கூறமுடியாது. தேர்தல்கள் என்று வரும்போது அதில் கட்சி அரசியல், வாக்கு வங்கி போன்ற பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துவது வழமை. அவரது கட்சி தொடர்ந்தும் பலவீனமானதாக இருப்பதே பரந்தளவிலான கூட்டணியை அமைப்பதற்கான அவரது முயற்சிகள் பெருமளவுக்கு வெற்றிபெற முடியாமல் இருப்பதற்கு காரணமாகும். அவரை ஆதரிக்க முன்வரக்கூடிய வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தங்களது எதிர்கால பாராளுமன்ற வாய்ப்புக்களையும் மனதில் கொண்டுதான் வியூகங்களை வகுப்பார்கள். பலவீனமான ஒரு கட்சியின் தலைவர் சுயாதீனமான பொது வேட்பாளராக களமிறங்கி மற்றைய கட்சிகளிடமிருந்து கிடைக்கக்கூடிய ஆதரவின் மூலமாக மக்களின் அமோக ஆதரவைப் பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறக்கூடியதாக இருக்குமேயானால், அது இலங்கை அரசியலில் முன்னென்றும் இல்லாத வகையிான ஒரு பெரும் அரசியல் சாதனையாகவே இருக்கும்! ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் முன்னைய எந்த அரசியல்வாதியும் செய்திராத ஒரு புதிய பரிசோதனையில் இறங்கியிருக்கிறார் ஜனாதிபதி விக்கிரமசிங்க. ராஜபக்சாக்கள் விக்கிரமசிங்கவை ஆதரிப்பார்கள் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், அவர்கள் தங்களது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பிலான ஜனாதிபதி வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிக்கப் போவதாகவும் அடிக்கடி கூறிக்கிறார்கள். அதற்கு மேலதிகமாக தங்களது ஆதரவுடனான வேட்பாளரே அடுத்த ஜனாதிபதியாவார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். தங்களது அரசியல் எதிர்காலத்தை உறுதிசெய்வதற்கான வியூகத்தில் மாத்திரம் அக்கறை செலுத்தும் ராஜபக்சாக்கள் இறுதியில் எத்தகைய முடிவை எடுப்பார்கள் என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. அதேவேளை, ராஜபக்சாக்களின் ஆதரவு விக்கிரமசிங்கவுக்கு கிடைக்குமானால் அது அவருக்கு அனுகூலமாக இருக்குமா என்ற இன்னொரு கேள்வியும் எழுகிறது. ஜனாதிபதி விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடுவார் என்பது நிச்சயம். ஆனால் அவரைச் சுற்றியுள்ள அரசியல் நிலைவரம் குழப்பகரமானதாகவே இருக்கிறது. https://arangamnews.com/?p=10863
  16. நான் தோல்வியுற்றால் மீண்டும் வரிசையுகம் மிரட்டுகிறார் ரணில்! (ஆதவன்) எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் நான் தோல்வியடைந்தால், தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார மறுசீரமைப்பு தோல்வியடைந்தால் நாட்டில் மீண்டும் வரிசையுகம் தான் ஏற்படும் என்று அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். அரசதலைவர் தேர்தலில் போட்டியிடுவாரா. இல்லையா என்பதை ரணில் பகிரங்கமாக வெளிப்படுத்தாத நிலையில், பத்தர முல்லயில் வைத்து அவர் விடுத்துள்ள இந்த அறிவிப்புகள். தேர்தல் பரப்புரையின் ஆரம்பமாகவே பார்க்கப்படுகின்றது. இது தொடர்பில் அரசதலைவர் ரணில் மேலும் தெரிவித்ததாவது:- நாட்டின் பொருளாதார ரீதியான வங்குரோத்து நிலை தொடர்பில் பலரும் பேசுகிறார்கள். அதனை நான் ஏற்றுகொள்ளப் போவதில்லை. இந்த நாடு பொருளாதார ரீதியாக மாத்திரமன்றி அரசியல் ரீதியாகவும் வங்குரோத்தடைந்துள்ளது என்பதே உண்மையாகும். இவை இரண்டும் பிரித்துப் பார்க்கமுடியாத பிரச்சினைகளாகும். நாட்டில் சரியான பொருளாதார முறைமை இன்மையே அதற்குக் காரணமாகும். நாட்டில் இதுவரையிலும் இறக்குமதியை மையப்படுத்திய பொருளாதாரமே காணப்பட்டது. தேவையான அனைத்துப் பொருள்களையும் இறக்குமதி செய்தோம். அதற்குச் செலுத்தத் தேவையான பணமும் எம்மிடம் இருக்கவில்லை. அதற்கு மத்தியில் போருக்கும் செலவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால் போருக்குப் பின்னர் துரிதமான பொருளாதார வளர்ச்சியை எட்டிப்பிடிப்பதற்கான வாய்ப்பு நாட்டுக்கு கிடைத்திருந்தது. போர் நிறைவடைந்து 15 வருடங்களான பின்பும் நாம் அந்த முன்னேற்றத்தை அடையமுடியவில்லை. நாம் பழைய முறைகளையே பின்பற்றினோம். பணம் இல்லாதவேளையில் கடன் பெற்றுக்கொண்டோம். அதனை மீளச் செலுத்த முடியாமற்போனது. நாட்டின் வருமானத் தேவையைக் கருத்தில்கொண்டு 2015ஆம் ஆண்டு நான் தலைமை அமைச்சராக பதவிவகித்த காலத்தில் வரி அதிகரிப்புச் செய்ய வேண்டியிருந்தது. 2019ஆம் ஆண்டில் முன்னாள் அரசதலைவர் கோத்தாபய ராஜபக்ச வரிகளை குறைத்தார். அதனால் நாட்டின் வருமானம் குறைந்தது. அந்த நேரத்தில் கொவிட் தொற்றும் பரவியது. நாட்டுக்கு 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு கையிருப்பு தேவைப்பட்டது. இருப்பினும் நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் ஒருவரும் அது பற்றி பேசவில்லை. உலகின் வேறு எந்தவொரு நாட்டிலும் ஓர் ஆசனத்தை வென்று நாடாளுமன்றத்துக்கு தெரிவானவர்கள் தலைமை அமைச்சர் அல்லது அரசதலைவராக பதவியேற்ற தில்லை. ஆனால் இலங்கையில் அது நடந்தது. நாட்டின் அரசியல் வங்குரோத்து நிலையே அதற்குக் காரணமாகும். நாட்டை பொறுப்பேற்றுக் கொண்டு பிரச்சினைகளைத் தீர்க்க எவரும் முன்வரவில்லை. அதனால் நான் அரசதலைவர் பதவியை ஏற்றுக்கொண்டேன் - என்றார். இந்தச் சந்திப்பில் இளைஞர் ஒருவரால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது, அந்தச் சவாலை ஏற்று வெற்றிகரமாக அதனை எதிர்கொண்டீர்கள். ஆனால், எவ்வாறேனும் அடுத்த தேர்தலில் நீங்கள் தோல்வி அடைந்தால், தற்போதைய திட்டத்தை தொடர யாராவது தலைமை தாங்குவார்களா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அரசதலைவர் ரணில், இந்தத் தேர்தலில் தீர்மானிக்கப்படுவது எனது வெற்றி தோல்வி அல்ல. நாடு தோற்கடிக்கப்படுமா? இல்லையா? என்பதே தீர்மானிக்கப்படும். தற்போது பன்னாட்டு நாணய நிதியத்துடன் கலந்துரையாடி பொருளாதார வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளோம். அதை நடைமுறைப்படுத்தவே பொருளாதார மாற்ற சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அது சரிந்தால் மீண்டும் அந்நியச் செலாவணியை நாம் இழக்கநேரிடும். மீண்டும் மருந்து. பெற்றோல், எரிபொருள் இல்லாமல் வரிசையில் நிற்க வேண்டியேற்படும். எனவே, அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்கவேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்தப் பொருளாதார மாற்ற சட்டத்தை ஆதரிக்கவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு இல்லையெனில், ஒரு மாற்றுவழியை முன்வைக்கவும். இந்தத் தேர்தலில் தனிநபரை அன்றி, பொறிமுறையையே தெரிவு செய்ய வேண்டும். இந்த முறை தொடர வேண்டும் என்பதில் நீங்கள் திருப்திந்தால், இந்த முறையுடன் முன்நோக்கிச் செல்லலாம். அவ்வாறின்றி எடும் வீழ்ச்சியடைந்த பொருளாதார அந்நியச்செலாவணி இல்லாத. மருந்து, உரம் இல்லாத நாடு வேண்டுனால் இன்னொரு தரப்பினரைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல விரும்பினால். நீங்கள் அரச வேலைத் திட்டத்துடன் முன்னோக்கிச் செல்லலாம். அரசின் வேலைத்திட்டம் சரியில்லை என்றால் அதற்கு மாற்றுவழியை முன்வைக்க வேண்டும். ஆனால் இது வரையில் அவ்வாறான மாற்றுத் திட்டத்தை யாரும் முன்வைக்கவில்லை. பன்னாட்டு நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து ஒப்பந்தம் திருத்தப்படும் என்று சிலர் கூறுகின்றனர். ஒப்பந்தத்தை மாற்றமுடியாது என பன்னாட்டு நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுபடுவதற்கு என்னால் கையெழுத்திடாமல் இருக்கமுடியுமா? அதனால், உங்கள் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் - என்றார். (ச) https://newuthayan.com/article/நான்_தோல்வியுற்றால்_மீண்டும்_வரிசையுகம்;__மிரட்டுகிறார்_ரணில்!
  17. ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல்! adminJune 13, 2024 யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து உடைமைகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் இன்றைய தினம் வியாழக்கிழமை (13.06.24) அதிகாலை 12.15 மணியளவில் அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது நடத்தப்பட்டது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்ற ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பலே குறித்த வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து கொளுத்தப்பட்டது. “திருநங்கைளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே” என அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள வீட்டில் போடப்பட்டுள்ளது. தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://globaltamilnews.net/2024/204200/
  18. சிலரது கருத்துக்களைப் பார்த்தால் தன்பாலீர்ப்பு, இருபாலீர்ப்பு பற்றிய அடிப்படைப் புரிதல்கள் இல்லை என்று தெரிகின்றது. பாலியல்வரட்சியால் சிறுபையன்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களையும், தன்பாலீர்ப்பாளர்களையும் குழப்பிக்கொள்கின்றார்கள் போலிருக்கின்றது. குழந்தைகளையும், சிறுவர்களையும், மனவளர்ச்சி குன்றியவர்களையும், பிறவகையில் பாதுகாப்பாற்றவர்களையும் துஷ்பிரயோகம் செய்வது பாரிய குற்றங்கள். இப்படியானவர்களை ஓரினச் சேர்க்கையாளர்கள், தன்பாலீர்ப்பாளர்கள் என்று குழப்பக்கூடாது.
  19. 26வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி துடுப்பாட்டத்தில் நிலைத்து நிற்கமுடியாமல் விக்கெட்டுகளை இழந்தாலும், ஷேர்ஃபேன் ரதஃபோர்ட்டின் ஆட்டமிழக்காமல் அடித்த 68 ஓட்டங்களின், குறிப்பாக இறுதி ஓவர்களில், உதவியுடன் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி வெற்றி இலக்கை அடைய வேகமாக ஓட்டங்களை எடுக்கமுடியவில்லை. தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 13 ஓட்டங்களால் வெற்றியீட்டியது மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நியூஸிலாந்து வெல்லும் எனக் கணித்த 07 பேருக்குப் புள்ளிகள் கிடையாது!
  20. பிரித்தானிய நேரப்படி நாளை வியாழன் (13 ஜூன்) மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 26) முதல் சுற்று குழு C : வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் நியூஸிலாந்து WI எதிர் NZ 16 மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனவும் 07 பேர் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! மேற்கிந்தியத் தீவுகள் ஈழப்பிரியன் வீரப் பையன்26 சுவி நிலாமதி தியா தமிழ் சிறி பிரபா USA கிருபன் ரசோதரன் அஹஸ்தியன் கந்தப்பு வாத்தியார் எப்போதும் தமிழன் நந்தன் நீர்வேலியான் கல்யாணி நியூஸிலாந்து குமாரசாமி புலவர் P.S.பிரபா நுணாவிலான் வாதவூரான் ஏராளன் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்? 27) முதல் சுற்று குழு D : வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து BAN எதிர் NED 22 பேர் பங்களாதேஷ் அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் நெதர்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். நெதர்லாந்து வாதவூரான் இந்தப் போட்டியில் 22 பேருக்கா புள்ளிகள் கிடைக்குமா அல்லது @வாதவூரான்க்கா புள்ளிகள் கிடைக்கும்? 28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து எதிர் ஓமான் ENG எதிர் OMA அனைவரும் இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா?
  21. 25வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 110 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இந்திய அணி குறைவான ஓட்ட இலக்கை அடைய வேகமாக ஓட்டங்களை எடுக்கமுடியவில்லை. ஆரம்பத்திலேயே விராட் கோலி, ரோகித் சர்மா ஆட்டமிழந்தாலும், சூரியகுமாரின் 50 ஓட்டங்களின் உதவியுடன் இறுதியில் 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 25 போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள் (மாற்றமில்லை): நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கோஷான் சே 42 2 பிரபா USA 40 3 ரசோதரன் 40 4 ஈழப்பிரியன் 38 5 சுவி 38 6 நந்தன் 38 7 வாதவூரான் 36 8 ஏராளன் 36 9 குமாரசாமி 34 10 தமிழ் சிறி 34 11 கிருபன் 34 12 கந்தப்பு 34 13 வாத்தியார் 34 14 எப்போதும் தமிழன் 34 15 நீர்வேலியான் 34 16 வீரப் பையன்26 32 17 நிலாமதி 32 18 தியா 32 19 புலவர் 32 20 P.S.பிரபா 32 21 நுணாவிலான் 32 22 அஹஸ்தியன் 32 23 கல்யாணி 32
  22. அம்பயர் 5 பெனால்ரி ஓட்டங்களை இந்தியாவுக்கு கொடுத்து உதவியுள்ளார்👽. இது இந்தியா வெல்ல பெரிய உதவி!
  23. இந்தியா எல்லோருக்கும் முட்டை 🥚🍳போடும் போலிருக்கு😱
  24. 23வது போட்டியில் மழை காரணமாக ஒரு பந்துகூடப் போடமுடியவில்லை. எனவே போட்டியில் விளையாடவிருந்த சிறிலங்கா அணிக்கும் நேபாளம் அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கின்றன. முடிவு: முடிவில்லை! இப்போட்டிக்கு யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! 24வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 17 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 72 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி குறைவான ஓட்ட இலக்கை மிகவேகமாக அடித்தாடி 5.4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் இழப்புடன் 74 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: அவுஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது அனைவரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.