Jump to content

theeya

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    500
  • Joined

  • Last visited

Everything posted by theeya

  1. நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம். இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.
  2. இன்று நாம் பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது தியா - காண்டீபன்
  3. உண்மை... ஆனால் இப்போதைக்கு அவர்கள் தொழிற் சங்கங்கள் மூலம் அல்லது அரசாங்கம் மூலம் 3-6 மாதங்களுக்கு வருவாய் பெற வாய்ப்புள்ளது. உண்மையான இழப்பு அரசுக்குத்தான். மறு பக்கம் இதனைப் புனரமைத்து மீண்டும் உருவாக்கம் செய்யும் பலருக்கு வேலைவாய்ப்பை இது வழங்கும்🙃 இப்போதுதான் பார்த்தேன் கவிதைக் களம் பகுதியில் இணைக்க வேண்டியதை மாறி இங்கே இணைத்து விட்டேன்
  4. நன்றி ... பால்டிமோரின் பிரான்சிஸ் ஸ்காட் கீ பிரிட்ஜ் நீரில் மூழ்கியதால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஒரு "பெரிய பேரழிவு" ஆகும். இது அமெரிக்காவின் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு நாளும் 30,000 வாகனங்களுக்கு மேல் பயணப்படும் இந்த பாலம் முக்கியமானது. அமெரிக்கர்களுக்கான உடனடி விளைவு... வெளிநாட்டிலிருந்து புதிய கார் வருவதற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டி வரலாம். பால்டிமோர் துறைமுகம் அமெரிக்காவில் உள்ள கார்கள், இலகுரக டிரக்குகளுக்கான நாட்டின் முன்னணி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தளமாக உள்ளது. அத்துடன் பால்டிமோர் துறைமுகம் அமெரிக்காவில் வருடம்தோறும் 15,300க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்குகிறது, மேலும் 140,000 வேலைகள் துறைமுகத்தின் செயல்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் விவரத்துக்கு ... நம்புங்கள் இதுவும் கவிதைதான் 😁
  5. ஆமாம்... பார்க்கவே மனம் கனக்கிறது. 140,000 வரையான மக்கள் வேலை வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளனர். இன்னும் மூன்று வருடத்தில் பொன்விழாக் காண இருந்த பாலம் சரிந்தது, இது வரும் காலத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கும் பாதிப்பே. அக்கா, வரிகளில் இருந்த இடைவெளியை திருத்தி விட்டேன் - நன்றி
  6. செய்தி : அமெரிக்காவில் இருந்து கொழும்பு நோக்கிய பயணம் செய்த சிங்கப்பூர் கப்பல் அமெரிக்க தேசிய கீதத்தை எழுதிய கவிஞர் பிரான்சிஸ் ஸ்காட் கீ அவர்களின் பெயர் கொண்ட பாலத்தில் மோதியது. பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இன்று ஒரு கப்பலால் காணாமல் போனது ஒரு கப்பல் பாலத்தை இடித்தது ஒரு கப்பல் அவசர நிலையைப் பிரகடனம் செய்தது ஒரு கப்பல் அமெரிக்க தேசிய கீதம் பாடிய கவிஞன் பெயரை தண்ணீரில் வீழ்த்தியது ஒரு கப்பல் இலட்சம் பேரின் வேலையை கேள்விக்குறி ஆக்கியது இன்றைய குளிர் இரவில் அந்தப் பயங்கரம் நடந்தது இரும்புச் சட்டங்கள் காற்றில் பறந்தன பயணிகள் பலர் நீரில் மூழ்கினர் ஒரு நாட்டின் அடையாளம் நதியில் மூழ்கியது ஒரு கப்பலால் அதைச் செய்ய முடிந்தது அது இப்போது எஃகு நதி ஒரு தேசியக் கவிஞனின் பெயர் பொறித்த பாலம் தண்ணீருள் மூழ்கியது ஒரு கப்பலால் அதைச் செய்ய முடியுமென்றால் இப் பூவுலகில் பாலங்கள் பாதுகாப்பானவையா என்ன? தியா - காண்டீபன்
  7. ம்... அதையும் வாசித்ததால் தான் சொல்கிறேன் அண்மையில் "பான் கி மூனின் றுவாண்டா" வும் படித்தேன். அகரமுதல்வன் போன்ற சிலருக்கு நல்ல சொல்வளம் இருந்தென்ன பயன் எழுத்தில் குப்பைத்தனம் இல்லாமல் இருக்க வேண்டுமே... எழுத்தாளனின் பணி குறுக்கு வழிகளில் உயரம் தொடுவதல்ல... எழுத்தின் மூலம் சிகரம் தொடுவதாக இருக்க வேண்டும்
  8. இதுவரை இந்தக் கதையின் 19 அத்தியாயங்களை வாசித்து முடித்துள்ளேன். நிறையக் கருத்துக்களை அகரமுதல்வன் சொல்ல முற்பட்டாலும் யதார்த்தம் தாண்டிப் பல இடங்களில் கட்டுக் கதைகளைத் தாராளமாக அள்ளி வீசுகின்றார் என்று எண்ணத் தோன்றுகின்றது. இவரின் முன்னைய பல சிறுகதைகளையும் நான் வாசித்துள்ளேன் பல கதைகளில், தமிழகத்துக்கு குடிபெயர்ந்த ஈழப் பெண்கள் இழிவான பல சித்தரிப்புகளுடன் எழுதியுள்ளதைக் கண்டுள்ளேன். தமிழகத்துக்குக் குடிபெயர்ந்துள்ள பல ஈழத்து எழுத்தாளர்கள் பல கட்டுக் கதைகளை உண்மைபோல் எழுதித் தள்ளி ஜெ.மோ போன்ற புண்ணியவான்களிடம் பாராட்டைப் பெற முயல்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. இது ஒருவகையில் இலக்கியத் தற்கொலை, நமது ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பற்றிய, நாம் கடந்து வந்த பாதை பற்றிய தவறான புரிதலை மற்றைய மக்களிடம் கொண்டு செல்லத் தூண்டுகிறது/துணை புரிகின்றது என்பது எனது தாழ்மையான கருத்து.
  9. முள்ளிக்குளம்தான் சரி. நான் மதவாச்சி/ வவுனியா - மன்னார் பாதையில் இருக்கும் குளங்களை எல்லாம் மூளையைக் கசக்கியும், கூகிள் மாப்பைப் பார்த்தும் முள்ளிக்குளம் நினைவுக்கு வரவில்லை! முள்ளிக்குளம்... மூன்று முறிப்பூடாக மடு செல்லும் பாதையில் உள்ளது. 1995 களில் நான் சைக்கிளில் திரிந்த இடங்கள் இவை. இதில் நான் சொன்ன மூன்று குறிப்புக்கு ஒரு சிறப்புண்டு. இந்தக் கிராமம் வவுனியா-மன்னார்-முல்லைத்தீவு மாவட்டங்களை இணைக்கும் மையப் புள்ளியில் இருப்பதாகும்
  10. எனது நீ கொன்ற எதிரி நான் தான் தோழா கவிதைப் புத்தகத்துக்காக, என்னை IBC தமிழ் நிறுவனத்தினர் நேர்காணல் செய்திருந்தனர். சர்மிளா வினோதினி அவர்களின் மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன். நன்றி தியா - காண்டீபன் நன்றி தியா - காண்டீபன்
  11. உலகில் எல்லோருடைய தலைகளுக்குள்ளும் நிறையக் கதைகள் தேங்கிக் கிடக்கின்றன, சிலர் அவற்றை அவ்வப்போது மற்றவர்களுடன் பகிர்ந்து தங்கள் தலைப் பாரத்தைக் குறைத்துக்கொள்கின்றனர், இன்னும் பலர் அதை வெளியில் சொல்லத் தெரியாமல் அப்படியே தலைக்குள் குப்பையாகத் தேக்கி வைத்து தம்முடனேயே அதையும் புதைத்து விடுகின்றனர். இதில் நான் சொன்ன முதல்ரகம்தான் இந்த ‘வனநாயகன்’ நாவல், 2016 இல் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவந்த இந்த நாவலை இன்றுதான் வாசிக்கும் வாய்ப்பு பெற்றேன். இதை எழுதியவர் ஆரூர் பாஸ்கர், இவர் அமெரிக்காவின் கிழக்கில் உள்ள புளோரிடா மாநிலத்தில் வசிக்கிறார். “வனநாயகன் என்றால் என்ன?” என்று இப்போது நீங்கள் உங்கள் தலைக்குள் கேட்பது எனக்குப் புரிகிறது. மலேசியாவில் அதிகமாக இருக்கும் ‘உராங் குட்டான்’ என்ற குரங்கினத்தைத்தான் ‘வனநாயகன்’ என்று சொல்வார்கள் என இந்தக் கேள்விக்கான பதிலை இந்த நாவலின் இரண்டாவது அத்தியாயத்திலேயே எழுத்தாளர் அவர்கள் சொல்லிவிடுகிறார். “சரி அதற்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்மந்தம்?” “திரும்பவும் கேள்வியா…? “சொல்லுங்க பாஸ்…” “ம்ஹூம்… என்கிட்டேயா? சொல்லமாட்டேனே… முதலில் இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.” எல்லாக் கதைகளின் தலைப்பும் கதைகளுடன் ஒத்துப்போக வேண்டுமென்றில்லை. ஆனாலும், இந்தக் கதையில் ஏதோ ஒரு மையப் புள்ளி எங்கோ ஒரு இடத்தில் கதையின் தலைப்புடன் ஒத்துப் போகிறது. “கண்ணாமூச்சி ரே ரே… கண்டுபிடி பார்ப்போம்…” https://www.panippookkal.com/ithazh/archives/26724 -தியா காண்டீபன்-
  12. தீபச்செல்வனின் "பயங்கரவாதி" நாவல், கதையல்ல காவியம். ஈழத்தைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ள "பயங்கரவாதி" நாவல் இன்னும் புத்தக வடிவில் எனக்குக் கிடைக்கவில்லை, ஆனாலும் அமேசான் கிண்டல் தளத்தில் வாங்கிப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். ஈழ மண்ணிலிருந்து இப்படி ஒரு படைப்பை, உள்ளிருந்த படைப்பாக எழுதுவது அவ்வளவு இலகுவான காரியமல்ல, அது கத்தி முனையில் நடப்பதற்குச் சமமானது. இருந்தும், தான் கொண்ட கொள்கையில் எந்த சமரசமும் செய்யாமல் 2005 - 2009 வரையான 4 ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நடந்த நிகழ்வுகளை மிகவும் நேர்த்தியான முறையில் கதையாகச் சொல்லியுள்ளார். தீபச்செல்வன் ஒரு சிறந்த கவிஞர் என்பதைத் தாண்டி ஒரு சிறந்த யதார்த்த எழுத்தாளர் என்பதை அவரின் "நடுகல்" நாவல் படித்தவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள். அதை இந்த நாவலின் மூலம் இன்னும் ஒரு முறை உரத்துக் கூறியிருக்கிறார். நான் 2000 - 2004 வரையான காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்தவன் என்றவகையில், "பொங்குதமிழ்" நிகழ்வின் ஆரம்ப காலம் பற்றியும் அதன் பின்னரான விளைவுகள் பற்றியும் பட்டுணர்ந்தவன், நன்கறிந்தவன். அதற்குப் பின்னர், இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுடனான சமாதான ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக முறித்துக்கொண்டு போரினை வலிந்து துவங்கிய 2006 இல் இருந்து போர் முடிவுற்ற 2009 வரையிலான காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குள்ளும் வெளியிலும் நடந்த அத்தனை துன்பகரமான நிகழ்வுகளையும் உள்வாங்கிக்கொண்டு "பயங்கரவாதி" நாவல் நகர்கிறது. இந்தக் கதையைப் பற்றியோ கதையில் வரும் பாத்திரங்கள் பற்றியோ நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை. கதையின் நாயகன் மாறன், மலரினி, துருவன், சுதர்சன், பாரதியம்மா, மகிழன், குமணன், மற்றும் சிறு சிறு பாத்திரங்களில் வரும் அனைவரும் கதையின் உயிரோட்டமாக நின்று தொய்வில்லாமல் கதையைத் தாங்கிச் செல்கின்றனர். தமிழீழப் போராட்டம் வெறுமனே ஆயுதப்போராட்டம் மட்டுமல்ல அதையும் தாண்டிப் பேசப்படவேண்டிய பல விடயங்கள் உள்ளன என்பதை இந்த நாவல் நிச்சயம் உங்களுக்குச் சொல்லும். ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பங்கு என்ன என்பதையும் அன்றைய யுத்த காலத்தில் மாணவர்கள் கடந்து வந்த கடினமான நாட்களையும் தாங்கி நகர்கிறது நாவல். இந்த நாவல் வாசிப்புக்கிடையில் பல இடங்களில் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. நட்பு, நம்பிக்கைத் துரோகம், குழிபறிப்பு, உற்ற சொந்தங்களின் இழப்பு, வலி மிகுந்த வாழ்க்கைக்கு இடையில் ஒரு மெல்லிய காதல், பல்கலைக் கழக மாணவர்களின் வழமையான குறும்புகள் என்று நகர்கிறது கதை. நாவலின் ஒவ்வொரு பக்கமும் படிக்கப் படிக்கக் கண்களின் முன் காவியமாய், படக் காட்சிகளாய் விரிந்து உயிர்ப்பயம் கொள்ளச் செய்கின்றன. உண்மையைச் சொல்வதானால், “பயங்கரவாதி” நாவல் வாசித்து முடித்த பின்னரும் என்மனம் பல்கலைக்கழககத்தையும் விடுதியையும் சுற்றி அலைகிறது. அன்பான வாசகர்களே, நண்பர்களே, தயவுசெய்து ஒருமுறையாவது “பயங்கரவாதி” நாவலை வாங்கிப் படியுங்கள். என் அதிகபட்ச ஆசை என்னவென்றால், ஈழம் பற்றிய நல்ல படம் (சினிமா) எடுக்க முனையும் தென்னிந்திய சினிமா படத் தயாரிப்பாளர்கள் / இயக்குனர்களில் யாராவது ஒருவர் இக்கதையை படமாகக் கொண்டுவர முயலவேண்டும். தீபச்செல்வனின் "பயங்கரவாதி" நாவல் - துரோகத்தின் கதை என்ற தலைப்பில் இந்த நாவலுக்காக வந்த முதல் விமர்சனம், 2022இல் நான் எழுதிஇருந்தேன். -தியா- 15/03/2022
  13. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பொதுச்சபைக் கூட்டம் இன்று தமிழர் தலைநகர் திருகோணமலையில் இடம்பெற்றது. இந்தநிலையில், 184 வாக்குகளைப் பெற்று சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்த்துப் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 137 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.
  14. இவருடைய நல்லதாக செயல்கள் உள்ளது... கடந்த முறை யாழ் மாநகர தேர்தலில் நின்று தோல்வியைத் தழுவி இருந்தார், ஆனாலும் இன்றுவரை உதவிக்கொண்டே இருக்கின்றார். ஆனாலும் இவரின் அண்மைய செவ்வியில் இருந்து இரண்டு விடயங்கள் கேள்விகளாகத் தொக்கி நிற்கின்றன... நான் சந்தேகப்பட்டுக் கேட்கவில்லை அறியும் ஆவலில் கேட்கிறேன், யாராவது தெரிந்தால் சொல்லுங்கள். 1. சுவிஸில் இவரின் மகள் ஏதோ சுவில் கிளையின் நிதி நிலைப் பொறுப்பில் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்... அவர் மூலம் சவேந்திர சில்வாவுக்கு 100 கோடி கொடுத்தார்கள் என்கிறார், ஏன் கொடுத்தார்கள்? அது யாருடைய பணம்?
  15. பன்மொழிப் புலமை, சட்டவாளர் இதெல்லாம் தலைமைக்கு வெளிப் பூச்சுகளே... இனம் சார்ந்து சிந்திக்கும், தம் இன மக்களுக்காக குரல் கொடுத்து அவர்களுடன் களத்தில் இறங்கி வேலை செய்யும் தலைமை வேண்டும். கோட்டுப் போட்டவர் தான் தலைமைக்குரியவர் என்ற மனநிலை மாற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
  16. வடக்கு கிழக்கு மக்கள் கடந்த முப்பது ஆண்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள். இந்த நிலையில் பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் இம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இடம்பெற்ற இனவழிப்புப் போரில் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு நீதியை வலியுறுத்தும் வாழ்வும் போராட்டமாக வடக்கு கிழக்கு மக்கள் உள்ளனர். இந்த நிலையில் நாட்டின் ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளுகின்ற போது தமது எதிர்பார்ப்புக்களை செவிசாய்க்க வேண்டும் என்று அம் மக்கள் எதிர்பார்ப்பது இயல்பானது. அண்மையில் வடக்கிற்கு ஜனாதிபதி ரணில் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அது தமிழ் மக்களுக்கு எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்ததா? ஏமாற்றத்தை அளித்ததா என்று இப் பத்தி ஆராய விளைகின்றது. நான்கு நாள் பயணம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த சனவரி 04ஆம் திகதி வடக்கிற்கு தனது விஜயத்தை ஆரம்பித்திருந்தார். உலங்குவானூர்தி மூலம் வந்து யாழ் நகர பாடசாலை மைதானம் ஒன்றில் வந்திறங்கிய வேளை யாழ் நகரத்தின் இன்னொரு பக்கத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை காவல்துறையினர் தடுப்பு இட்டு தடுத்து வைத்திருந்ததுடன் சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு ஜனாதிபதியின் வருகையின் போது மக்கள் தமது குரல்களை வெளிப்படுத்த முனைந்த போராட்டம் இடம்பெற்றது. சனவரி 4ஆம் திகதி வந்த ஜனாதிபதி சனவரி 7ஆம் திகதி வரை பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தார். இதன்போது யாழ் மாவட்ட செயலகத்தில் அரச அதிகாரிகள் மட்டத்திலான சந்திப்பு இடம்பெற்றிருந்தது. அத்துடன் பல்கலைக்கழக சமூகத்துடனும் அவர் சந்திப்பை மேற்கொண்டிருந்தார். இதை தவிர ஜனாதிபதியின் பயணத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு சந்திப்புக்களும் இடம்பெற்றுள்ளன. இளைஞர்கள், யுவதிகளுடனான சந்திப்பும், ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த சந்திப்பும் இடம்பெற்றது. தென்னிந்திய தொலைக்காட்சியில் பாடல் போட்டியில் வெற்றி பெற்ற சிறுமி கில்மிசாவையும் ஜனாதிபதி சந்தித்து செல்பி எடுத்துக்கொண்டார். இதுதானே மக்களின் பிரச்சினை தான் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளுகின்ற போதெல்லாம், வடக்கு மக்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான பிரச்சினையையும் அரசியல் தீர்வையும் மாத்திரமே கோருகின்றனர் என்றும் இதனைத்தாண்டியும் பல பிரச்சினைகள் உள்ளன என்றும் அதனை ஆராயவே தான் விரும்புவதாகவும் இம்முறை விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் கூறியுள்ளார். வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினையாக, தமிழ் மக்கள் அமைதி மற்றும் நிம்மதியை இழப்பதற்கு ஏதுவான பிரச்சினைகளாக இவைகளே உள்ள நிலையில் மக்கள் இதனைப் பற்றித்தானே எடுத்துரைப்பார்கள். இப்படி பாதிக்கப்பட்ட மக்கள் தெருவிலும் நகரங்களிலும் போராடி வருகின்றார்கள். இவர்களை சந்திக்காமல் அரச அதிகாரிகளை மாத்திரம் சந்திப்பதனால் என்ன பயன்? அதிலும் வடக்கு கிழக்கு இந்தப் பிரச்சினைகளால் இன்னமும் பாதிக்கப்பட்டு, உக்கிரமான போராட்டங்களை முன்னெடுக்கும் போது, இந்த மக்களை சந்திக்க தவறுவதும், இம் மக்களின் குரல்களை கேட்க மறுப்பதும் அர்த்தமுடைய செயலாக அல்லது பயன்தரும் செயலாக அமையுமா? அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களை கேட்டு அதற்கு பதிலும் செயலும் அளிக்காத ஒரு பயணமாகவே ஜனாதிபதியின் பயணம் அமைந்தது. ஆடம்பர பயணம் நாடு பாரிய பொருளாதார பின்னடைவில் உள்ளது. அண்மையிலும் எரிபொருட்களின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழர் தேச மக்கள் மாத்திரமின்றி தென்னிலங்கை மக்களும் வாழ வழியற்ற நிலையில் வெளிநாடுகளுக்கு தப்பி ஒடுகின்றனர். இந்த நிலையில் ஜனாதிபதியின் பயணம் ஆடம்பரப் பயணம் என்று தென்னிலங்கையை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமர் ரட்ணாயக்க, ஜனாதிபதியின் பயணத்தை வெற்றுப் பயணம் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்க எதிர்வினையாகும். மேலும், காணி விடுவிப்பு, மீள்கட்டுமானம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வு, மற்றும் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு என தமிழ் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் வடக்கிற்கு வருகை தந்த அதிபர் ரணில் விக்ரமசிங்க ஒரு துண்டு காணியேனும் அந்த மக்களுக்கு விடுவித்துக் கொடுக்கவில்லை என்றும் ஜனாதிபதி, ஆடம்பரமாக வாகன தொடரணிகள் சகிதம் வருகை தந்து நான்கு நாட்கள் வடக்கில் முகாமிட்டமை மக்களின் பிரச்சனையை தீர்க்க அல்ல என்றும் விமல் ரட்ணாயக்க குறிப்பிட்டுள்ளார். ஏன் இந்தப் பயணம் அரசியல் தீர்வு குறித்து தனது கரிசனையை ஜனாதிபதி இப் பயணத்தின் போது வெளிப்படுத்தவில்லை என்ற ஆதங்கம் தமிழ் தலைவர்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் உள்ளது. கடந்த காலத்தில் அரசியல் தீர்வொன்றை தனது ஆட்சியில் முன்வைப்பேன் என்றும் கடந்த காலத்தில் அது சாத்தியமாகவில்லை இம்முறை அதனை நிறைவேற்றுவேன் என்றும் ஜனாதிபதி ரணில் வாக்குறுதி அளித்திருந்தார். அண்மையில் தென்னிலங்கையில் ஒரு பாடசாலை நிகழ்வில் பேசிய போதும் பொருளாதார மேம்பாடு ஏற்பட வேண்டும் என்றால் அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்று ரணில் குறிப்பிட்டு இருந்தார். அத்துடன் வடக்கில் சிறந்த பொருளாதார வளம் காணப்படுகிறது என்ற கருத்தையும் ஜனாதிபதி கடந்த காலத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தற்போதைய பயணத்தின்போது பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்துவதில்தான் அதிக கரிசனையை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் தலைவர்கள் இந்த விடயத்தில் அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் இம்முறை பயணத்தில் தொடக்கத்தில் அவர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அரசியல் தீர்வு காணும் பட்சத்தில் இலங்கையில் பொருளாதார மேம்பாடு இலகுவாக ஏற்படும் என்பதை ஜனாதிபதி ரணில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து வடக்கின் பொருளாதாரத்தில் கண் வைத்துக் கொண்டு இத்தகைய விஜயங்களை மேற்கொள்ளுவது, இனப்பிரச்சினையை தீர்க்காமல், தமது இலக்கான பொருளாதார நெருக்கடியை தீர்க்க எடுக்கினற முனைப்பாகவே அமையும். ஆனால் இனப்பிரச்சினையை தீர்க்காமல் காலத்தை இழுத்தடிக்கும் ஒவ்வொரு நொடியும் இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளும். அதுவே நடந்தது. இனியும் நிலமை தொடர்ந்தால் அதுவே நடக்கும். -அலெக்ஸ் தமிழ்தேசியவாதி-
  17. ஈழத்து எழுத்தாளரும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் செயலாளருமான தீபச்செல்வன் அவர்களின் “பயங்கரவாதி” நாவல் அறிமுக விழா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் 10.01.2024 (புதன்கிழமை) அன்று நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் திரு.கு.துவாரகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர். சி.ரகுராம் அவர்களும், சிறப்பு அதிதியாக அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். நூலின் சிறப்புப் பிரதியினை பிரதம அதிதி, கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் அவர்கள் வெளியிட்டு வைக்க பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் திரு.சோ.சிந்துஜன் அவர்கள் பெற்றுகொண்டார். பயங்கரவாதி நாவலினுடைய வெளியீட்டுரையை நாடகக்கலைஞரும் விமர்சகருமான சத்தியானந்தன் அவர்களும், நூலினுடைய விமர்சனவுரையினை இந்துக்கற்கைகள் பீட முதுநிலை விரிவுரையாளர் திரு. தி.செல்வமனோகரன் அவர்களும் நிகழ்த்தியிருந்தனர் என்பதோடு, நூலாசிரியர் தீபச்செல்வன் அவர்களினால் ஏற்புரையும் முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்வில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், அனைத்துப் பீடங்களினதும் மாணவர் ஒன்றியத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
  18. ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வன் எழுதிய முதல் கவிதை நூலான பதுங்கு குழியில் பிறந்த குழந்தை கவிதைத் தொகுப்பு அனுஷா சிவலிங்கம் அவர்களால் சிங்களத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு கடந்த வெள்ளியன்று (29 / 9 /2023) ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அரங்கம் நிறைந்த மக்கள் மத்தியில் இடம்பெற்றது. சிங்கள படைப்பாளிகள் மற்றும் கலைஞர்கள் பலர் நூல் தொடர்பிலும் ஈழ மக்களது போராட்டம் தொடர்பிலும் பல முக்கிய உரைகளை நிகழ்த்தினர். ஈழத்தமிழர் போராட்டம், விடுதலைப் புலி போராளிகள் தொடர்பில் சிங்கள மக்கள் படைப்பாளிகள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்களை தீபச்செல்வனின் உரை அமைந்தது (உரையை இணைப்பில் பார்க்கலாம்). ஈழத்து இலக்கிய உலகில் வலிமை மிக்க குரலாக கொண்டாடப்படுகிற தீபச்செல்வனின் இத் தொகுப்பு சிங்களத்திலும் பெரும் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை தீபச்செல்வனின் முதல் நாவலான நடுகல் சிங்களத்தில் மொழியாகி பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
  19. கதை சொல்லவா? 13/ தமிழ் புத்தன்/ திரு தியா காண்டீபன் - எழுத்தாளர்
  20. கதை சொல்லவா? (12)/ மனிதாபிமானம்/ திரு தியா காண்டீபன் - எழுத்தாளர் கதை சொல்லவா? 13/ தமிழ் புத்தன்/ திரு தியா காண்டீபன் - எழுத்தாளர்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.