Everything posted by ரசோதரன்
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
ட்ரம்பிலிருக்கும், புட்டினிலிருக்கும், மோடியிலிருக்கும், ஸ்டாலினிலிருக்கும், சுமந்திரனிலிருக்கும், சிறிதரனிலிருக்கும் அதே கரிசனை தான் சீமான் மீதும் எங்களுக்கு இருக்கின்றது. இவர்களைச் சார்ந்த மக்களுக்கும், பொதுவாக மற்றவர்களுக்கும் இவர்களால் பயன் உண்டா அல்லது ஏமாற்றப்படுகின்றார்களா என்ற அதே பார்வையைத் தான் நாங்கள் இங்கே முன்வைக்கின்றோம். பல வருடங்களின் முன், முல்லைப் பெரியாறு அணைக்கான போராட்டத்தில் சீமான் பங்குபற்றவில்லை.அப்பொழுது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நண்பன் கேட்டான், 'நாங்கள் ஏன் சீமானுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்................'. சீமான் பேசும் விடயங்களும், விடுதலைப் புலிகளின் தலைவர் கூட தங்களுக்கு எந்தளவு முக்கியம் என்றும் அவன் கேட்டான். தமிழ்நாட்டு பொதுசனங்களுடன் சீமானுக்கு இருக்கும் பெரிய இடைவெளிகளில் இதுவும் ஒன்று. முதன் முதலில் நீட் பரீட்சையால் தற்கொலை செய்து இறந்து போன அனித்தாவிற்கான போராட்டத்தில் சீமான் பங்குபற்றவில்லை. இதை இயக்குனர் ரஞ்சித் நேரடியாகவே மேடையில் கேட்டார். இன்றும் கூட பங்குபற்றமாட்டார். அதற்கான காரணமும் எங்களுக்கு தெரியும். சீமான் தொல் திருமாவுடன் ஒரு மேடையில் ஏறப் போவதும் இல்லை. பின்னர் இவர் எப்படி ஒரு சமூகப் போராளி ஆகின்றார்................. இவர்கள் பேசும் தமிழ்த்தேசியத்தை தொல் திருமாவோ அல்லது ரஞ்சித்தோ அல்லது அவர்களில் எவரோ ஏற்காததன் பின்னணியும் இதுவே. இங்கு ஒன்றுபட்ட ஒரு தேசியமே இல்லை. ஒரு சிறு வட்டம் மட்டுமே உள்ளது. ராமதாஸும் இவரைப் போன்ற ஒரு சமூகப் போராளியே. ஆணவக் கொலைகளையும், நாடகக் காதல் என்ற சொற்பதத்தையும் தமிழர்கள் மத்தியில் விதைத்து வளர்த்து வைத்திருப்பவர்கள் பாமகவினரே. வாழும் காலத்தில் காடுவெட்டி குரு ஒரு தாதாவாகவே வாழ்ந்து முடித்தார். இவர்கள் சமூகப் போராளிகளா........... இவர்களால் ஒரு பட்டியலின மக்களின் குடிசைக்குள் இன்றும் போக முடியுமா........... 'ஜெய்பீம்' என்ற ஒரு படத்தில் நடித்ததற்காக, அதில் வரும் ஒரு குறியீட்டுக்காக, நடிகர் சூர்யா படும் பாட்டைப் பாருங்கள். இது தான் பாமகவும், ராமதாஸும் சொல்லும் சமூக நீதியா.......... ஒரு சாதி பற்றி மட்டுமே இவர்கள் பேசுகின்றனர். சமூகம் பற்றி அல்ல. பிற சாதியினரை அடக்கி ஒடுக்குகின்றனர். பின்னர் இருவரும் சமூக நீதி, சமூகப் போராளிகள் என்கின்றனர். எம்ஜிஆரின் கட்சி எடப்பாடியாரின் கையால் முடிய வேண்டும் என்று இருக்கின்றது போல....................🫣.
-
உன்னால் முடியும் தம்பி
உங்களை நேரில் சந்திக்கும் ஒரு சந்தர்ப்பம் இப்படி நழுவிப் போய்விட்டதே, ஜஸ்டின். இதே போலவே நியூ ஜெர்சியில் இருந்து வருவதாகச் சொல்லிய ஒரு அணியும் கடைசி நேரத்தில் வரமுடியாமல் போய்விட்டது. அங்கிருந்து ஒரு சிலர் மட்டும் வந்தார்கள். என்னுடைய அணி செட்அப் வாலிபால் கிண்ணத்தை வென்றது. மொத்தமாகவே உலகெங்கும் எங்களில் செட்அப் வாலிபால் விளையாடுபவர்கள் குறைவு. இரண்டு 2கே அணிகள் கனடாவிலிருந்தும், ஒரு 2கே அணி அமெரிக்காவிலிருந்தும், மற்றும் என்னுடைய அணியும் கலந்துகொண்டன. அந்த இளையோர் அணிகள் எதிர்பார்க்காத விதத்தில் போட்டிகள் அமைந்தன. ஓவர் கேம் வாலிபாலில் கனடா அணி ஒன்று வென்றது. இரவு ஒன்றுகூடலும் நன்றாகவே இருந்தது.
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவரின் மறைவின் பின், விஜய்காந்தும் முற்றிலும் உடல், உணர்வுகள் தளர்ந்து போக, தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றார்கள். ஆனால் அவ்வாறான ஒரு வெற்றிடம் உருவாகவில்லை. ஸ்டாலின் திமுகவை கட்டுக்குள் வைத்துக்கொண்டார். ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸூம் இணைத்தலைமை என்று அதிமுகவை கொண்டு சென்றார்கள். அதனால் சீமான், கமல் போன்றோரின் நிலையில் எந்த பெரிய மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால், இன்று மீண்டும் ஒரு வெற்றிடம் இருப்பது போல தெரிகின்றது. அதிமுக இருந்த இடம் தெரியாமல் போகப் போகின்றது என்ற ஒரு ஊகம் பரவலாக இருக்கின்றது. அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்திருப்பதே அவர்களின் வீழ்ச்சியை துரிதப்படுத்தக்கூடும். விஜய்யின் தவெக திமுகவிற்கு ஒரு மாற்றாக, இரண்டாவது பெரிய கட்சியாக வரக்கூடும். அந்த நிலையில் தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியையும் இன்று காண முடியாதுள்ளது. சீமான் இது போன்ற சிறுபிள்ளைத்தனமான போராட்டங்களை கைவிட்டு விட்டு, பெரிய நீரோட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும். இது அவருக்கு கிடைத்திருக்கும் மிக நல்லதொரு சந்தர்ப்பம். இவ்வாறான போராட்டங்கள் - கள் இறக்குதல், ஆடு மாடுகளுக்கான மாநாடு, அடுத்தது என்ன........ கடற்கரையில் வலை பின்னுதலா........? - சிறுபிள்ளைத்தனமான போராட்டங்களே. இந்த வகைப் போராட்டங்களை பாரம்பரியமாகவே சிறு கட்சிகளாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட செய்வதில்லை. இவை இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் பரபரப்பான செய்திகளாக ஓரிரு நாட்களாக வருமேயன்றி வாக்குகளாக மாறப்போவதில்லை. திமுகவோ அல்லது அதிமுகவோ அல்லது தங்களை ஒரு பெரும் கட்சியாக எண்ணும் அவரும் இப்படியான ஒரு போராட்டத்தை நடத்துவதுமில்லை. இவை ஒரு விதத்தில் அசட்டுத்தனமான செயல்களே. நாதக இப்போது செய்ய வேண்டியது திமுக அரசு மற்றும் அதிமுக கட்சி மீது தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை அறிந்து, அதை மூலதனமாக்கி, 2026ம் ஆண்டில் தேர்தலை எதிர்கொள்வதே. தவெக அந்த வழியிலேயே பயணிக்கின்றது. இல்லாவிட்டால், கமல் ஒரு இடத்தில் தேங்கி நின்று இல்லாமல் போனது போலவே நாதகவின் நிலையும் ஆகும்.
-
உன்னால் முடியும் தம்பி
🤣........................ நானே ஒரு பூனைக்குட்டி போல ஆகிவிட்டேன் அந்த விமானப் பயணத்தில்......... கனடாவிலிருந்து திரும்பி வந்தவுடன் ஓடிப் போய் குட்டிகளைத்தான் எட்டிப் பார்த்தோம். ஒரு குட்டியும் அங்கிருக்கவில்லை. அன்று நாள் முழுவதும் குட்டிகள் கண்களில் படவேயில்லை குட்டிகளை யாரோ பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள் போல என்று கவலையாகவும், பரவாயில்லை, அவைகள் எங்காவது வீடுகளில் வளரட்டும் என்று ஒரு ஆறுதலாகவும் இருந்தது. நேற்று மீண்டும் பார்க்கும் போது மூன்று குட்டிகள் நின்றன. ஒன்றைத்தான் காணவில்லை. பொதுவாக மனிதர்கள் இல்லாத பிரச்சனைகளை அவர்களே உருவாக்கி, அதற்குள் சுற்றிச் சுழல்வார்கள் என்று சொல்வார்கள். உருவாக்கிக் கொண்டிருக்கின்றேன் போல...............🤣.
-
உன்னால் முடியும் தம்பி
அந்தப் புத்தகம் என்ன புத்தகம் என்று இணையத்தில் தேடிப் பார்த்தேன், சிறி அண்ணா........🤣. நான் இளவயதில் இருக்கும் போது ஆனந்த விகடனில் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் தன்னம்பிக்கை தரும் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தார். எங்களில் பலரும் அவற்றை அன்று வாசித்திருப்போம். கிட்டத்தட்ட அது போன்ற கட்டுரைகள் கொண்டது இந்தப் புத்தகம். 'உன்னால் முடியும் தம்பி' என்பதே உதயமூர்த்தி அவர்களின் ஒரு பிரபலமான தலைப்புத்தான்................ பின்னர் பாலச்சந்தர் - கமல் - ஜெமினி கணேசன் ஆக்கத்தில் இதே பெயரில் ஒரு படமும் வந்தது. மூன்று விரல்கள் காட்டிய அந்தக் குழந்தைக்காக அதை இங்கே எடுத்துக்கொண்டேன்..........
-
அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
அரசியல் தலைமைகளுக்கு வழங்கப்படும் சமாதான பரிசுகளுக்கு அந்த அரசியல் தலைமைகளின் முயற்சிகளே பெரும்பாலும் காரணமாக அமைகின்றது, அண்ணா. அந்த முயற்சிகளின் இறுதி முடிவுகள், நீங்கள் குறிப்பிட்டிருப்பது போலவே, எதிர்பார்த்த பலன்களை எப்போதும் கொடுப்பதும் இல்லை. பர்மாவில் அப்போது ஆட்சியில் இருந்த இராணுவ ஆட்சியை எதிர்த்த Aung San Suu Kyi க்கு 1991ம் ஆண்டு இந்தப் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் பர்மாவில் ரோகிங்கியா மக்களுக்கு எதிராக இவரது ஆட்சிக் காலத்திலேயே கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. ஆங் சூ இக் கொடுமைகளை எதிர்க்காதது மட்டும் இல்லாமல், ரோகிங்கியா மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஆதரவாகவும் நடந்துகொண்டார். கொடுக்கப்பட்ட சமாதானப்பரிசை திரும்பப் பெறவேண்டும் என்ற குரல்கள் உலகெங்கும் ஒலித்தன. ஆனால் செஞ்சிலுவைச் சங்கங்கள் போன்ற நிறுவனங்களுக்கும், அரசியல்/நிர்வாகம் சாராத தனிநபர்களுக்கும் அவர்கள் காத்திரமாக செய்த செயல்களுக்காகவே இந்தப் பரிசு வழங்கப்படுகின்றது. ஜிம்மி கார்ட்டரோ அல்லது ஓபாமாவோ அல்லது வேறு எந்த உலக அரசியல் தலைவர்களின் மொத்த நடவடிக்கைகளுமே விமர்சனத்துக்கு உட்பட்டதே. அவர்கள் பெறும் விருதுகளுக்கும், பாராட்டுகளுக்கும் அவர்கள் தகுதியுடையவர்களா என்பது பல முனைகள் கொண்ட விவாதமே. இன்றுடன் இஸ்ரேலின் காசா மீதான தாக்குதல் 643 நாட்களாகத் தொடர்கின்றது. உலகில் அமெரிக்காவையும், இஸ்ரேலையும் தவிர்த்து வேறு எந்த நாடும் இதை ஆதரிக்கவில்லை. அமெரிக்கா நினைத்தால் இதை இன்றே தடுக்கமுடியும். ஆனால் அமெரிக்காவோ எதிர்த்திசையிலேயே பயணிக்கின்றது. எம் மக்கள் மீதான முள்ளிவாய்க்கால் தாக்குதல் உலகின் பல நாடுகளால் மௌனமாக ஆதரிக்கப்பட்ட ஒரு நிகழ்வு. இந்தியாவின் பிரதான ஆதரவுடன் இலங்கை அரசு வேறு பல நாடுகளின், அமெரிக்கா உட்பட, இராணுவ மற்றும் வேறு பல உதவிகளுடன் இதை நிகழ்த்தியது. இதை தடுக்கும் கடப்பாடு இந்தியாவிடமே இருந்தது. காசா போன்று நீண்டு தொடரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே முள்ளிவாய்க்காலில் அமெரிக்கா என்ன செய்தது என்ற கேள்வியும், காசாவில் அமெரிக்கா என்ன செய்கின்றது என்ற கேள்வியும் தொடர்புபட்டவை அல்ல. இவை யாவும் மனிதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற சட்டகத்திலேயே பார்க்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். ஒரு தலைவருக்கு ஆதரவாகவும், இன்னொரு தலைவருக்கு எதிராகவும் பார்க்கப்பட வேண்டிய விடயங்கள் அல்ல.
-
உன்னால் முடியும் தம்பி
இவர் அவர் இல்லை............... இவர் அவராக இருப்பாரோ என்று செயற்கை நுண்ணறிவு உய்த்தறிந்து இப்படி ஒரு படத்தை கீறியிருக்கின்றது...............🤣. செயற்கை நுண்ணறிவை தொடர்ந்து நச்சரிக்கவும் மனது வர மாட்டேன் என்கின்றது. செயற்கை நுண்ணறிவு செயற்படும் Data Centers இருக்கும் அழகான, அமைதியான கிராமங்கள் எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டுப்பட்டிருக்கின்றன என்ற செய்திகள் வெளியே வர ஆரம்பித்துவிட்டன. அங்கங்கே நீர்வளம் அருகி அல்லது கெட்டுப் போய்க் கொண்டிருக்கின்றது. செயற்கை நுண்ணறிவை கேள்விகள் கேட்கும் போது, 'Please......' என்னும் ஒரு சொல்லை ஒரு தடவை தவிர்த்தால் ஒரு சிறிய போத்தல் தண்ணீர் மிச்சமாகும் என்று Sam Altman (CEO of OpenAI) சமீபத்தில் சொல்லியிருந்தார். அப்படியாயின் மொத்தமாக எவ்வளவு நீர் இதற்கு தேவைப்படுகின்றது என்ற கணக்கு மலைக்கவைக்கின்றது. கப்பலின் ஓட்டைகளை அடைப்பது போல உலகம் போய்க் கொண்டிருக்கின்றது போல. ஒரு ஓட்டையை அடைத்தால், இன்னொரு இடத்தில் புதிய ஓட்டை ஒன்று உருவாகின்றது.
-
உன்னால் முடியும் தம்பி
உன்னால் முடியும் தம்பி -------------------------------------- இவ்வளவு மலிவாக விமானச்சீட்டை வாங்கி விட்டோமே என்ற சந்தோசம் அமெரிக்காவிலிருந்து கனடா வந்த விமானப் பயணத்திலேயே தொலைந்து போயிருந்தது. அது இன்னொரு கதை. இது அதே மலிவு விலையில் கனடாவிலிருந்து திரும்பி அமெரிக்கா போகும் கதை. எங்கள் நான்கு பேர்களுக்கும் விமானத்தின் நாலு இடங்களில் நடு இருக்கைகளை கொடுத்திருந்தார்கள். கனடா விமான நிறுவனத்தின் இணையதளத்தில் இருக்கைகளை மாற்ற முற்படும் போது, ஒவ்வொரு புது இருக்கைக்கும் பயணச்சீட்டுக்கு கொடுத்திருந்த அளவில் கட்டணம் மீண்டும் கேட்டார்கள். சரி, விமானநிலையத்தில் போய் இலவசமாகக் கேட்டுப் பார்ப்போம் என்று விமான நிலையம் போய்ச் சேர்ந்தோம். கீழே நின்றவர்கள் பெட்டிகளை மட்டும் வாங்கிக் கொண்டார்கள். இருக்கைகள் அவர்களின் பொறுப்பில் வருவதில்லை என்றும், புறப்படும் கதவில் போய் கேளுங்கள் என்றும் சொன்னார்கள். கதவில் நின்ற அழகான, பணிவான பெண்ணிடம் அவரை விட பணிவாக நான் கேட்டேன். சிறிது நேரம் கணினியில் அவர் சுற்றிப் பார்த்தார். பின்னர் இருப்பதெல்லாம் நடு இருக்கைகள் மட்டுமே, அவை கூட முன்னுக்கு பின்னாகவும் இல்லை என்றார். விமானம் விழுந்தால், கடைசிக் கணத்தில் நால்வரும் தனித்தனியாக விழப் போகின்றோமே என்ற கவலையும், அக்கம் பக்கம் சரிந்து அடுத்தவர்கள் தோள்களில் விழாமல் தூங்கி வழியவேண்டுமே என்ற யோசனையுடனும் என்னுடைய நடு இருக்கையில் அமர்ந்தேன். வலக்கை பக்கம் ஒரு பெரிய பெண் வந்து இருந்தார். இடைக்கை பக்கம் ஒரு பெரிய ஆண் வந்து இருந்தார். என்னுடைய கைகளை இன்னும் கொஞ்சம் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டேன். சமீபத்தில் ஒரு இந்தியர் விமானப் பயணத்தின் போது அருகில் இருந்த பெண்ணுடன் ஏதோ செய்து கைது செய்யப்பட்டிருந்தார். கைபடாமல் இருக்க வேண்டும். அந்தப் பெண் ஏதோ எடுத்துக் கொண்டு என் பக்கம் திரும்பினார். அவரின் பெரிய கை என் விலாவில் நேராக இறங்கியது. 'மன்னிக்கவும், மன்னிக்கவும்............' என்று பதறினார். இடைக்கை பக்கம் அமர்ந்திருந்தவர் மடியில் ஒரு புத்தகம் வைத்திருந்தார், 'The Road To Character' என்று புத்தகத்தின் தலைப்பு இருந்தது. இந்த புத்தகத்தை பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. அதில் இருந்த எழுத்தாளர் பெயரும் கொஞ்சம் கூட பரிச்சயமற்றது. அருகில் இருந்த பெண்ணின் முன்னால் இருந்த சிறிய திரை அப்படியே உறைந்து போய் நின்று கொண்டிருந்தது. அவர் அந்த திரையில் ஒவ்வொரு புள்ளியையும் தனது விரல்களால் அமத்தினார். திரை அசையவே இல்லை. ஒரு விமான பணிப்பெண்ணைக் கூப்பிட்டார். விமானத்தின் இந்தப் பகுதியில் நடுவில் இருந்து வலப்பக்க முடிவு வரை உள்ள எவருக்கும் திரை வேலை செய்யவில்லை என்றார் பணிப்பெண். அங்கே பாருங்கள், இவருடையை திரை கூட வேலை செய்யவில்லை என்று என் முன்னால் இருந்த திரையைக் காட்டினார். நான் பணிப்பெண்ணைப் பார்த்தேன். பணிப்பெண் என்னுடைய திரையைப் பார்த்தார். அருகில் இருந்த பெண் திரையையும் என்னையும் பார்த்தார். நான் அந்த திரையை ஒரு தடவை கூட தொட்டிருக்கவில்லை. அது அப்படியே இருட்டாகவே இருந்தது. சரிசெய்துவிடுகின்றோம் என்றபடியே பணிப்பெண் அங்கிருந்து மெதுவாக நகர்ந்தார். எனக்கு இரண்டு பக்கமும் இருந்தவர்கள் பெரும் குடும்பங்களாக வந்திருந்தார்கள். குழந்தைகள், சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என்று இரு பக்கங்களும் கூட்டங்களாக இருந்தார்கள். அமெரிக்காவை சுற்றிப் பார்க்கப் போகின்றார்கள் என்று அவர்களின் உரையாடல்களில் இருந்து தெரியவந்தது. கொஞ்சம் துணிந்தவர்கள் போல. அதிபர் ட்ரம்பையும் மீறி இவர்கள் கனடாவிலிருந்து அமெரிக்கா வந்து கொண்டிருக்கின்றார்கள். இடக்கை பக்கம் இருந்தவரின் இரண்டு வயதான குழந்தை ஒன்று மிகவும் சந்தோசத்துடன் முன்னுக்கு இருந்த இருக்கையை கால்களால் உதைத்துக் கொண்டேயிருந்தது. சிறிது நேரம் போக, உதை வாங்கிக் கொண்டிருந்தவர், அவர் ஒரு இந்திய பெண்மணி, எழும்பி வந்தார். குனிந்து மெதுவாக அவர்களிடம் ஏதோ சொன்னார். சிரித்துக் கொண்டே உதைக்கும் இரண்டு வயது குழந்தை இப்பொழுது இடம் மாற்றப்பட்டது. தந்தையின் மடியில் அந்தப் புத்தகத்தின் மேல் அமர வைக்கப்பட்டார். எனக்கும் பின்னால் இருந்து இன்னொரு குழந்தையிடம் இருந்து உதைகள் விழுந்து கொண்டேயிருந்தது. பரவாயில்லை, குழந்தைகள் அழாமல், அடம்பிடிக்காமல் வருவதே பெரிய விடயம் என்று பேசாமல் இருந்துகொண்டேன். தந்தையின் மடியில் இருந்து மிகவும் சிநேகபூர்வமாக என்னைப் பார்த்து சிரித்தார். சுருட்டை முடியும், பளிங்குக் கண்களும் கொண்ட ஒரு அழகான பொம்மை போல அந்தக் குழந்தை இருந்தது. திடீரென இரு விரல்களை மடக்கிக் கொண்டு மூன்று விரல்களை காட்டியது. இது இரண்டு விரல்களால் காட்டப்படும் சமாதானத்திற்கும் மேலே. பக்கென்று சிரிப்பு வந்தது. என்னை விட அதிகமாக சிரித்தது குழந்தை. மூன்று விரல்களும், சிரிப்பும், சில கதைகளுமாக பயணம் பறந்து கொண்டிருந்தது. அந்த இந்தியப் பெண் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார். விமானம் நின்றதும் ஒவ்வொருவராக வரிசையில் இறங்கினர். எனக்கு வலது பக்கம் இருந்த பெண் அவரது தலைக்கு மேலே இருந்த அவரது பொருட்களை எடுத்துக் கொண்டு அவரது குடும்பத்துடன் இறங்கினார். என்னுடைய பொருட்கள் இடது பக்கம் மேலே இருந்தது. ஆனால் இடது பக்க குடும்பம் இறங்கவில்லை. எதையோ தேடிக் கொண்டேயிருந்தார்கள். இவர்களுக்கு நடுவில் புகுந்து என்னுடைய பொருட்களை எப்படி எடுப்பது என்றபடியே எழும்பி நின்று கொண்டிருந்தேன். 'ஓ.............. மன்னிக்கவும், உங்களின் பொதி இங்கே மேலேயா இருக்கின்றது................' என்று கேட்டார் அந்தக் குழந்தையின் தாய். ஆமாம் என்றேன். அவரே அதை எடுத்துக் கொடுக்க முன்வந்தார். 'நீங்கள் ஏன் எடுத்துக் கொடுக்க வேண்டும். அவரே எடுத்துக் கொள்வார் தானே............' என்று இழுத்தார் அவரின் கணவர். அந்தப் பெண் அதை காதில் வாங்கிக் கொள்ளாமலேயே என்னுடைய பொதியை எடுத்துக் கொடுத்தார். குட்டிக் குழந்தை மீண்டும் மூன்று விரல்களைக் காட்டி சிரித்தது. அப்படியே வலப்பக்கத்தால் நான் வெளியே வந்தேன். 'The Road To Character' என்ற அந்தப் புத்தகம் அந்த இருக்கையிலேயே அப்படியே திறக்கப்படாமல் கிடந்தது. அது வெறுமனே பயணம் போய் வருகின்றது போல.
- ReturnFlightFromToronto.jpg
-
அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
மனைவிமார்கள் சொல்லும் குற்றம் குறைகளை வைத்தும் ஒருவர் மதிப்பிடப்படலாம் என்றால், ஆபிரகாம் லிங்கன் கூட ஒன்றும் இல்லை என்று ஆகிவிடுவார். அல்பேர்ட் ஐன்ஸ்டைன் கூட அவருடைய நோபல் பரிசைத் திருப்பிக் கொடுக்கவேண்டும். ஓபாமாவிற்கு கொடுத்த நோபல் பரிசு விவாதத்திற்கு உட்பட்டதே. ஆனால் அவருக்கு அந்தப் பரிசை முன்மொழியவும், அதைக் கொடுக்கவும் தேவையான சரியான உறுதியான நடவடிக்கைகளை ஓபாமா அவரது பதவியின் முதல் வருடத்திலேயே எடுத்திருந்தார். ஓபாமாவை எந்த தனிநபர்களும் அரசியல் சார்பாகவோ அல்லது நலம் கருதியோ முன்மொழியவில்லை. மாறாக, நோபல் பரிசுக் குழுவே அவரை தெரிந்தெடுத்தது. ஒபாமாவை தெரிந்தெடுத்தற்கான காரணங்களாக நோபல் குழுமம் பின்வருபனவற்றை சொல்லியிருந்தார்கள்: இஸ்லாமிய நாடுகளுடன் இணக்கத்தை உண்டாக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. அமெரிக்காவில் இன்றும் கூட ஓபாமா மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு அவர் இஸ்லாமிய நாடுகளுக்கு பெருமளவில் விட்டுக் கொடுத்தார் என்பதே. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தங்களை புதுப்பித்தது அல்லது உண்டாக்கியது. யுத்தங்கள் அற்ற ஒரு சமாதான உலகை நோக்கிய நடவடிக்கைகளை அவர் முயற்சித்தார். ட்ரம்பின் சமாதான நடவடிக்கைகள் வெறும் பேச்சளவிலேயே இருக்கின்றன. ஏற்கனவே இருக்கும் ஒப்பந்தங்களை கூட தவிர்த்துவிட்டு, புதிய ஒப்பந்தங்களை பயமுறுத்தலின் ஊடாகவே அவர் செய்ய முனைகின்றார். அவைகளும் கூட மிகவும் ஒரு பக்கச் சார்பாக, அமெரிக்காவின் நலன்களை மட்டுமே முன்னிறுத்துகின்றன. இவர் உலகின் மீது தொடுத்திருக்கும் வர்த்தகப் போர்கள் கூட உலகின் ஸ்திரத்தன்மையை குலைத்துக் கொண்டிருக்கின்றன. இன்று என்ன, நாளை என்ன என்று எதுவும் தெரியாத நிலையிலேயே அமெரிக்கர்களும், உலகமும் இவரின் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் கொடுமை உலகம் கண்ட மிகக்கொடிய சில கொடுமைகளில் ஒன்று. 'ஒரு பை அரிசிக்காக பலஸ்தீனியர்கள் அவர்களின் உயிர்களைக் கூட விட தயாராக இருக்கின்றார்கள்...................' என்ற வசனம் எந்த மனிதனையும் அழவைக்கும். அமெரிக்காவும், ட்ரம்பும் நினைத்தால் இந்தக் கொடுமையை இன்றே நிற்பாட்டமுடியும். ஆனால் காசாவில் உல்லாச விடுதிகளைக் கட்டுவதைப் பற்றியே ட்ரம்பும், அவரது குடும்பமும் அக்கறையாக உள்ளது. ஈரானுடனான முரண்பாட்டில் கூட ட்ரம்ப் சமாதானத்தை தேடவில்லை. இன்னும் பல இப்படியே போய்க் கொண்டிருக்கின்றன. நான் மேலே குறிப்பிட்டவற்றை விட, இன்றைய திகதியில் உலகில் மிகப்பெரும் அட்டூழியங்கள் செய்யும் இஸ்ரேலின் தலைவரே ட்ரம்பை முன்மொழிந்திருக்கின்றார் என்ற ஒரு தகவலே ட்ரம்பிற்கு இந்தப் பரிசு கிடைக்கக் கூடாது என்பதற்கான பிரதான காரணம்.
-
ரஷ்ய ஜனாதிபதி புட்டினால் பதவி நீக்கப்பட்ட ரஷ்ய அமைச்சர் உயிரை மாய்த்தார்
அமெரிக்க அதிகாரிகள், அரசியல்வாதிகள் தான் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்வார்கள். ரஷ்யாவில் பொதுவாக மாடியிலிருந்து தவறுதலாக யன்னலூடாக விழுந்து செத்துப் போவார்கள். இப்போது ரஷ்யர்களும் முன்னேறிக் கொண்டு வருகின்றார்கள்..................
-
பயந்தாங்கொள்ளி
🤣......... கனடாவில் கார் ஓட்டிப் பாருங்கள்....... 'கமரா......... கமரா.........' என்று விடாமல் ஒரு பயம் காட்டுவார்கள் பாருங்கள்...... மன்னன் அலெக்ஸாண்டரே பயந்து போய் விடுவார்..........
-
பயந்தாங்கொள்ளி
இதற்காக ஒரு நோபல் பரிசை கேட்டுப் பார்ப்பமோ என்றும் ஒரு ஐடியா உள்ளுக்குள் வருகின்றது.........🤣.
-
பயந்தாங்கொள்ளி
அந்தப் பக்கம் நல்ல துணிவாகத்தான் இருக்குது....... நாங்கள் தான் இப்படி ஆகிவிட்டோம்...... கல்யாணத்தின் பின்........🤣.
-
பயந்தாங்கொள்ளி
இங்கும் சுத்தமாகவே இருக்கின்றன, அண்ணா. இவை என் வீட்டுப் பூனைகள் இல்லை, ஆனால் வந்து வந்து போய்க் கொண்டிருக்கின்றன. பாத்ரூமாக வேறு ஒரு அயல் வீட்டை உபயோகிக்கின்றன என்றே தெரிகின்றது...................🤣. ஒரு குட்டியை சாப்பிட்டு விடும் என்பது உண்மையல்ல என்றே நினைக்கின்றேன்.
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
பில் கிளின்டனுக்கு நோபல் பரிசு எதுவும் வழங்கப்படவில்லை. அமெரிக்க ஜனாதிபதிகளில் ஜிம்மி கார்ட்டருக்கு கொடுத்திருந்தார்கள். பின்னர் ஓபாமாவிற்கு கொடுத்தார்கள். மேலும் இருவருக்கு 100 வருடங்களின் முன் கொடுத்திருந்தார்கள். எம்ஜிஆருக்கு இந்தியாவின் சிறந்த நடிகர் விருது ஒரு முறை கொடுக்கப்பட்டிருக்கின்றது. சிவாஜிக்கு இந்த விருது ஒரு தடவையும் கொடுக்கப்படவில்லை. இதில் எது அதிகொடுமை.........🤣.
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
அமைதிக்கான நோபல் பரிசை மட்டும் அல்ல, கொடுக்கப்படும் மற்ற நோபல் பரிசுகளும் தனக்கே வேண்டும் என்று அடம்பிடிப்பார் அதிபர் ட்ரம்ப். அடுத்த மூன்று வருடங்களில் ஏதோ ஒரு நாள் காலையில் இந்த மனிதன் வேறு ஒரு எழுத்தாளரை வைத்து எழுதிய கவிதையோ அல்லது கதையோ கூட இவரின் பெயரில் வெளிவரலாம், இலக்கிய பரிசுக்காக. இவரின் பெயரில் வந்த 'Art of the Deal' போல. 'He doesn't have a soul...........' என்று பின்னர் சொல்லியிருந்தார் இந்தப் புத்தகத்தை உண்மையில் எழுதிய எழுத்தாளர். 'ஆன்மா அற்ற ஒரு மனிதன்...............' என்ற இந்த வசனம் இதை வாசித்த அந்தக் கணத்தையே அப்படியே சில்லிடவைத்தது. இவரால் உலகத்திற்கு பெரும் அழிவு கிட்டும் என்று யாழ் களத்தில் இவர் மீண்டும் வருவதற்கு முன்னர் எழுதியிருக்கின்றேன். இவரின் முன்னைய ஆட்சியில் கூட உலகம் சமாதானப் பூங்காவாக இருந்துவிடவில்லை. இவரின் முன்னைய ஆட்சிக் காலத்திலேயே அமெரிக்கா மிக அதிகமான ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டது. அப்போது ட்ரோன் தாக்குதல்கள் பற்றிய முழுமையான செய்திகள் வெளியே வருவது கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் அந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. உக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவே அமெரிக்காவின் வெளியே வாழும் ஈழத்தமிழர்கள் பலருக்கும் பைடன் மற்றும் ஜனநாயகக்கட்சியை புறம் தள்ளி, ட்ரம்பை சமாதானத்தின் தூதுவராக நினைக்கவைத்தது. அதிபர் ட்ரம்ப் வெறும் வாக்குறுதிகளைக் கொடுப்பவர், அடுத்த நாட்களிலேயே அவற்றை மறந்து விடுபவர், இந்த இயல்பு அவருடன் கூடவே என்றும் இருக்கின்றது. அவருடைய உண்மையான அக்கறை அவரின் மேலே மட்டுமே என்ற விடயத்தை எம் மக்கள் காணத் தவறினார்கள். உக்ரேனின் மீதோ, ரஷ்யாவின் மீதோ அல்லது உலகத்தின் மீதோ அல்ல. எங்களின் தனிப்பட்ட விருப்பு - வெறுப்புகளைக் கொண்டு, நிகழ்வுகளையும், மனிதர்களையும் கணிப்பது பெரும்பாலும் தவறான முடிவுகளுக்கே இட்டுச்செல்லும்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
பையன் சார், தமிழ்நாட்டை பற்றிய உங்களின் ஆதங்கம் புரிகின்றது. ஆனால் நான் இங்கே சொல்ல விரும்பிய விடயம் இதுவல்ல. இன்று இணையத்தில் உலாவும் காணொளிகள் எவ்வளவு போலியானவை, திட்டமிட்டு சோடிக்கப்பட்டு தயாரிக்கப்படுபவை என்றே சொல்ல நினைத்தேன். அதனால் இவற்றை மட்டும் ஆதாரங்களாகக் கொண்டு எதையும் நிறுவ முயலாமல் அல்லது புரிந்து கொள்ள முயலாமல், பல்வேறு தரப்புகளையும் நிகழ்வுகளையும் ஒன்றாகத் தொகுத்து ஒரு முடிவுக்கு வருவதே ஓரளவாவது சரியாக இருக்கும் என்று சொல்லவே வந்தேன். தமிழ்நாட்டு டாஸ்மாஸ்க் விடயம் ஒரு உதாரணம் மட்டுமே...................🤝.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
முதலீடுகள் இரண்டு வழிகளில் மட்டுமே வரும். ஒன்று சேமிப்பு. இரண்டாவது, போதிய சேமிப்பு இல்லாவிட்டால், கடன். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மிகக் குறைவாக சேமிப்பவர்கள் அமெரிக்கர்கள். சேமிப்பே கிடையாது. பிறகு முதலீடுகளுக்கு எங்கே போவது............. ஆனால் உலகமே அமெரிக்காவில் முதலிடுகின்றது. அமெரிக்காவிற்கு ஒவ்வொரு நாட்டுடனும் வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது. இலங்கையுடன் கூட. அது இலங்கை அமெரிக்காவில் இடும் முதலீடு. சீனா முதலிடுகின்றது, மெக்சிக்கோ முதலிடுகின்றது............. எல்லாமே கடன்களாக இந்த நாட்டுக்குள் வருகின்றன. அதுவே கட்டிடங்களாக, தொழில்நுட்பங்களாக, ஐபிஓக்களாக, எலான் மஸ்க்குகளாக மாறுகின்றன. இதை ஏன் வேறு ஒரு நாட்டில் உலகம் முதலிட முடியாதுள்ளது............ ரஷ்யாவில் முதலிட முடியாதா, சைனாவில் முதலிட முடியாதா.............. முடியாது என்பதே இன்றைய நிலவரம். இத்தனைக்கும் சைனாவிலோ அல்லது ரஷ்யாவிலோ அதன் தலைவர்கள் இறக்கும் வரை மாறுவதில்லை, அவர்களின் கொள்கைகளில் மாற்றம் இல்லை, அரச நிர்வாகத்தில் தனித்தனியான சுதந்திரம் உள்ள அமைப்புகளினால் ஏற்படும் கட்டுப்பாடுகள் அங்கு இல்லை. ஆனாலும் முதலிடுபவர்கள் எதிர்பார்க்கும் ஒரு நம்பகத்தன்மையும், வெளிப்படையும், சுதந்திரமான நிர்வாக அமைப்புகளும் அங்கு இல்லை. இந்த காரணங்களுக்காகவே டாலர் பெறுமதியாக இருக்கின்றது, அமெரிக்காவிற்கு கடன்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்கா எறியும் காசு அவர்களுடையது அல்ல. ஆனாலும் மற்றவர்களுக்கு அதை கொடுப்பதற்கு வேறு இடமும் இல்லை. அமெரிக்காவின் பிரச்சனை திருப்பிச் செலுத்தும் வட்டியின் அளவு. இது இப்படியே போய்க் கொண்டிருக்க முடியாது என்று சிந்திக்க ஆரம்பித்து இருக்கின்றார்கள். அதனால் அரசாங்கம் இனி சேமிக்கப் போகின்றார்களாம்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
நேற்று இரவு தமிழ்நாட்டு செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென்று ஒரு செய்தி பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நான் கேட்பது சரிதானா என்று மிகவும் உன்னிப்பாகக் கேட்டேன். என் காதில் செய்தி சரியாகவே விழுந்து கொண்டிருந்தது. அங்கு ஒரு ஊரில் அங்கிருக்கும் டாஸ்மாஸ்க் கடையை அகற்ற வேண்டாம் என்று சில பெண்கள் கூட்டமாக நின்று கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்!! அதைத் தொடர்ந்து வந்த அடுத்த செய்தியில் இன்னொரு ஊரில் அங்கிருக்கும் டாஸ்மாஸ்க் கடையை அகற்றும் படி பெண்கள் கூட்டமாக நின்று கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இதில் எது உண்மை, எது சோடிக்கப்பட்ட ஒரு நாடகம், களநிலை எது, தேவையானது எது என்பதை இந்த இரண்டு செய்தித் துண்டுகளில் இருந்தோ அல்லது இவற்றை துண்டு துண்டாக கொண்டு வரப் போகின்ற யூடியூப் காணொளிகளில் இருந்தோ மட்டும் சொல்லிவிடமுடியாது. தமிழ்நாட்டுக் கிராமங்களின் நிலை மற்றும் டாஸ்மாஸ்க் பற்றிய புரிதல் ஏற்கனவே இருந்தால் மட்டுமே இவற்றின் பின்புலங்கள் என்னவென்று தர்க்கரீதியாக சிந்திக்கமுடியும். அப்படியான புரிதல்கள் இல்லாவிட்டால், டாஸ்மாஸ்க் கடைகளுக்கு குடும்பப் பெண்களே ஆதரவு கொடுக்கின்றார்கள் என்ற செய்தியும் சரியென்றே தோன்றும்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இந்த இரண்டு நாடுகளினதும் இன்றைய கிரெடிட் ரேட்டிங் என்னதான் என்று தேடிப் பார்த்தால் ஆச்சரியம் தான் மிஞ்சுகின்றது. AAA ரேட்டிங்கிலிருந்து அமெரிக்காவின் ரேட்டிங் AA1 ஆகியுள்ளது. AA1 என்பது Stable Outlook. சீனாவின் ரேட்டிங் A1 என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. A1 என்றால் Negative Outlook.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
'கிரெடிட் ரேட்டிங்' விழுந்தது அதிபட் ட்ரம்ப் அவர்களின் நிலையற்ற பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அதன் பொருட்டான அவசர நடவடிக்கைகளால். அமெரிக்க - சீன போட்டியால் அல்ல. இந்த அரிதான உலோகங்கள் மீதான சீனாவின் அதிகாரம் என்பது மிகவும் சமீபமாக நடந்த ஒரு நிகழ்வு. அதற்கு பல வருடங்கள் முன்னரேயே அமெரிக்கவும் சீனாவும் ஒன்றும் இரண்டும் என்று உலகில் போட்டாபோட்டியில் இருக்கின்றன. இதன் அடிப்படையே ரஷ்யாவோ அல்லது வேறு எவருமோ அருகில் கூட இல்லை என்பதே. இன்று சீனாவிடம் அரிதான உலோகங்களின் மீதான அதிகாரம் இருக்கலாம். ஆனால் இன்னும் பல தொழில்நுட்பங்கள் அமெரிக்காவின் கைகளிலேயே இருக்கின்றது. ஒரு சாதாரண பயணிகள் விமானத்தை கூட சீனா பாதுகாப்பாக செய்து விற்க, அதை உலக நாடுகள் வாங்கும் நிலை இன்னும் வரவில்லை. நாங்களும் சீனா செய்யப் போகும் விமானங்களில் பயணிக்கும் நிலையிலும் இல்லை. இது ஒரு உதாரணம் மட்டுமே. இதுவே தான் மைக்ரோ பிராசசர் தொழில்நுட்பத்திலும். இந்த இருவரும் தொழில்நுட்பத்தில் உலகெங்கும் போட்டி போடுவார்கள். ஆனால் இராணுவ ரீதியாக இன்னொரு கண்டம் போய், இன்னொரு நாடு போய், அங்கே நின்று போரிடுவது என்பது இன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவால் மட்டுமே முடியும். வேறு எவரிடமும் அந்த வளங்களும், திறமைகளும் இல்லை.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
கடஞ்சா, சைனா மத்திய கிழக்கில் நடக்கும் சண்டைகள் என்று மட்டும் இல்லை, எந்தச் சண்டைகளிலுமே பங்குபற்றுவதில்லை. உலகில் இரு நாடுகளைத் தவிர வேறு எந்த நாடுகளுமே தங்கள் மேல் தீவிரமாக, தவிர்க்க முடியாமல் ஒரு சண்டை திணிக்கப்பட்டாலே அன்றி சண்டைகளில் ஈடுபடுவதில்லை. இன்றைய காலத்தில் ஒரு பத்து நாட்கள் நடக்கும் யுத்தமே ஒரு நாட்டை மிக இலகுவாக சில வருடங்கள் பின்னோக்கி கொண்டு சென்று விடும் என்ற தெளிவு எல்லா நாடுகளிடமுமே இருக்கின்றது. மிக அண்மையில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் பார்த்தோம். ஒருவரின் வான்வெளிக்குள் அடுத்தவரின் யுத்த விமானங்களே பறக்கவில்லை. தங்கள் தங்கள் வான்வெளிகளிலேயே இரண்டு நாட்கள் சுற்றிப் பறந்து விட்டு இறங்கினார்கள். பின்னர் சமாதானம் என்றார்கள். அமெரிக்காவும் இஸ்ரேலும் மட்டுமே தொடர்ச்சியாக உலகெங்கும் சண்டைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இஸ்ரேல் அதன் இருப்பிற்காக அங்கு பலருடன் போராடுகின்றது. அமெரிக்கா அதன் மதிப்பிற்காகவும், அதற்கு பொறுப்புகள் இருக்கின்றது என்றும் பல இடங்களுக்கும் போய் வருகின்றது. அமெரிக்கா வல்லரசே இல்லை, அமெரிக்காவிற்கு கேந்திர முக்கியத்துவமே கிடையாது என்று 25 வருடங்களாக வாசித்துக் கொண்டேயிருக்கின்றேன். அமெரிக்க டாலரே மூழ்கிவிட்டது என்பதையும் பல வருடங்களாக வாசித்துக் கொண்டேயிருக்கின்றேன். சீனா முன்னே போய்விட்டது என்றும் தான். கோவிட் காலத்தில் அமெரிக்க வல்லமை அற்றது என்று வந்த செய்திகள் ஏராளம். அடுத்த 25 வருடங்களுக்கும் இதே செய்திகள் வரும். ஆனால் அமெரிக்கா இருக்கும் இடத்திலேயே இருக்கும், அமெரிக்க டாலரும் அங்கேயே இருக்கும். அப்படியே நான் போய்ச் சேர்ந்து விடுவேன்............ வேற யாராவது வந்து இதைப் போல யாழில் எழுதுவார்கள்....................🤣.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
பையன் சார், நீங்கள் சொன்னது போலவே நடந்தது. இது போலவே உங்களுக்கு வேறு பல உலக விளையாட்டுகளில் இருக்கும் பரிச்சயமும், தெரிந்திருக்கும் தகவல்களும் ஆச்சரியமானவை..........👍. அரசியல் மற்றும் வரலாறு என்று வரும் போது பலரும் ஏற்கனவே ஒரு நிலைப்பாட்டில் இருந்து கொண்டிருப்பார்கள், நான் உட்பட. பார்வைகளும் அவரவர் நிலைப்பாட்டின் வழியே தான் பெரும்பாலும் செல்லும். சிலருக்கு பரந்த வாசிப்பு இருக்கும். சிலரிடம் மிக அதிக ஞாபகசக்தி இருக்கும். இன்னொரு பார்வையில் ஒரு உறுதியான கருத்து சரியான தரவுகளுடன் வரும் போது அதையிட்டு அமைதியில்லாமல் தவிக்க வேண்டிய அளவிற்கு நாங்கள் ஒருவரும் தொழில்முறை அரசியல்வாதிகள் இல்லைத்தானே..................... மாற்றுக் கருத்துகளையும் இலேசாகக் கடந்து போவது தான் சிறப்பு. இதற்காக எங்களின் உடல், மன ஆரோக்கியத்தை இழப்பது தேவையற்றது. சரியான தரவுகளின் பின்புலம் இல்லாமல் வரும் கருத்துகள்/காணொளிகள் அம்புலிமாமா கதைகள் போல, வாசித்தவுடன்/பார்த்தவுடன் மறந்துவிடவேண்டும்................🤣.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
என்ன கடஞ்சா நீங்கள்.................. மற்றவர்களுக்கு பரந்த சிந்தனை, அகண்ட பார்வை கிடையாது என்று சொல்லுகின்ற நீங்கள் எழுமானமாகவே தொடர்புகளை உண்டாக்குகின்றீர்கள். மலைக்கும், மண்ணுக்கும் மேல் தங்கள் இஷ்டப்படி குண்டுகள் போட்டவர்களுக்கு, அங்கே இருக்கும் இராணுவ கட்டமைப்புகள் மேல், அரச கட்டமைப்புகள் மேல், மக்களை வெளியேற சொல்லிவிட்டு பெரும் நகரங்கள் மேல் குண்டுகள் போடமுடியாதா? வெற்றி - தோல்வி - செருக்கு என்பதையும் தாண்டி, ஏதோ கொஞ்சமாவது மனிதம் இன்னும் வாழ்கின்றதே என்று ஆறுதல் அடையவேண்டியிருக்கின்றது. டோக்கியோ மீது அணுகுண்டை வீசவில்லை. ஹிரோசிமா மற்றும் நாகசாகி மீதே அணுகுண்டுகள் வீசப்பட்டன. அந்த இரு நகரங்களின் மேல் கூட வீசாமல், ஜப்பானில் இருக்கும் பொட்டல் வெளிகளிலோ அல்லது மலைகளிலோ வீசி இருக்கலாம். அதற்குப் பின்னும் ஜப்பான் பணிய மறுத்து இருந்தால், கடுமையான மிகக் கவலையான முடிவை அமெரிக்கா எடுத்திருக்க வேண்டும் என்று தானே இன்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம். கத்தாரில் இருக்கும் அமெரிக்க தளத்தின் மீது ஈரான் நடத்தியது ஒரு தாக்குதலா........ என்ன சேதம் விளைந்தது............. எங்கள் ஊர் அம்மன் கோவில் வேட்டைத் திருவிழாவில் விட்ட எலி வாணத்தாலாவது சில சேலைகள் பற்றி எரிந்தன....................