Everything posted by ரசோதரன்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அமெரிக்காவைச் சுற்றி சோவியத் யூனியனின் தளங்கள் இருந்திருக்கலாம், பையன் சார். அங்கு அமெரிக்காவின் முக்கிய நகரங்களை நோக்கி ஆயுதங்கள் நிறுத்தப்பட்டும் இருக்கக்கூடும். அமெரிக்காவும், சோவியத் யூனியனும் இதை உலகெங்கும் தளங்கள் அமைத்து செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைய ரஷ்யா மிகவும் பின்தங்கிவிட்டது. அமெரிக்கா நன்றாக முன்சென்றுவிட்டது. அன்றைய கியூபா, இன்றைய வெனிசுவேலா என்று மிகக் குறைந்த ஆதரவு நாடுகளே ரஷ்யாவிற்கு இந்தப் பக்கங்களில் உண்டு. இன்று வெனிசுவேலாவில் கூட ரஷ்யாவால் தளம் அமைக்க முடியாத நிலை. ஆனால் மிக வேகமான விமானங்களும், ஏவுகணைகளும் தளங்களின் தேவையை ஓரளவு குறைக்கும். ரஷ்யாவைச் சுற்றி அமெரிக்காவின் தளங்கள் பல இன்றும் இருக்கின்றன. இங்கு அமெரிக்காவில் சில மாநிலங்கள் பெரியவை, பொருளாதாரத்திலும் மேம்பட்டவை. சில மாநிலங்கள் மிகச் சிறியவை, வசதி வாய்ப்புகளும் குறைந்தவை. பெரும் மாநிலங்கள் சிறிய மாநிலங்களை பாதுகாக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. இதுவே சரியான நடைமுறையும் கூட. ஆனால் சில பெரிய மாநிலங்களில் சிலர் இது போன்ற காரணங்களால் பிரிந்து போகப் போகின்றோம் என்று சொல்லிக் கொள்வார்கள்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
பையன் சார், இங்கு நாங்கள் எழுதுவது வெறும் கருத்துப் பரிமாற்றம் மட்டுமே. உங்கள் மீது எனக்கிருக்கும் வாஞ்சையில் ஒரு துளியேனும் இந்தக் கருத்துகளால் குறைந்து விடப்போவதில்லை. ரஷ்யா மக்கள் மீதும், அந்தப் பெரும் தேசத்தின் மீதும், அது ஒரு காலத்தில் கட்டி எழுப்பப்பட்ட கோட்பாடுகளின் மீதும் மற்றும் அதன் இலக்கியவாதிகளின் மீதும் பெரும் மதிப்பும் விருப்பும் எனக்கு உள்ளது. ஊரில் வாழ்ந்த பதின்ம வயதுகளில் கூட ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளிலும் சோவியத் யூனியனே பதக்கப்பட்டியலில் முதலாவதாக வர வேண்டும் என்று உளமார விரும்பியும் இருக்கின்றேன். ஆனால் அந்த சோவியத் யூனியன் அல்ல இன்றிருக்கும் ரஷ்யா. அதிபர் புடின் அந்த தேசத்தையே அழித்துவிட்டார். மேலும் கோட்பாடுகள் வேறு, நடைமுறை வாழ்க்கை வேறு என்று கிடைத்த வாழ்க்கை மிக நல்லாகவே கற்றுக் கொடுத்தும் விட்டது. அன்றிருந்த சோவியத் யூனியனைப் பற்றியே இன்று சில கேள்விகள் உள்ளே இருக்கின்றன.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
பையன் சார், ஈரானின் நட்பு நாடுகள் இதுவரை ஈரானுக்கு ஏதாவது உதவி செய்திருக்கின்றார்களா என்று பார்த்தால், சீனா, ரஷ்யா உட்பட, எந்த உதவிகளும் செய்யவில்லை என்றே தெரிகின்றது. பாகிஸ்தானுக்கு சீனா செய்த உதவிகளைக் கூட சீனா ஈரானுக்கு செய்யவில்லை. இத்தனைக்கும் ஈரானிடமிருந்து எவ்வளவு எண்ணெயை மிக மலிவு விலையில் சீனா வாங்கிக் கொண்டிருக்கின்றது. கைமாறாக பிஎல் - 15 ரகம் போன்ற ஏவுகணைகளையும், அதை சுமந்து செல்லும் சில யுத்த விமானங்களையும் சீனா ஈரானுக்கு கொடுத்திருக்ககலாம் தானே. இவற்றை வைத்துத்தானே பாகிஸ்தான் இந்திய விமானங்களை தாக்கியது. இந்தியாவுக்கு அடிப்பது என்றால் கொடுப்பார்கள், ஆனால் அமெரிக்காவிற்கு அடிப்பது என்றால் கொடுக்காமல் பின்வாங்குகின்றார்களா? இஸ்ரேலும், அமெரிக்காவும் வேறு வேறல்ல. இரு நாடுகளும் ஒன்றே தான். இதில் ஒருவரை ஒருவர் போர்க் குற்றவாளி என்று என்றும் சொல்லப்போவதில்லை. அணு குண்டை அமெரிக்கா முதலில் செய்தது அமெரிக்காவினது மட்டும் இல்லை, உலகின் அதிர்ஷ்டமும் கூட. இதையே அன்று ஜேர்மன் அல்லது ஜப்பான் செய்திருந்தால், இன்று நாலு கண்டங்களின் பெரும் பகுதிகள் பூமியில் மனிதர்கள் இல்லாத பாலைநிலங்களாக இருந்திருக்கும். அதன் பின்னர் அணு ஆயுதங்கள் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் பல் நாடுகளால் சுயமாக தயாரிக்கப்பட்டன. அமெரிக்காவால் எவரையும் அன்று தடைசெய்ய முடியாது. சில நாடுகளிடம் இருப்பதும் நன்மைக்கே. ஒற்றை ஏகாதிபத்தியம் என்ற நிலையை அது இல்லாமல் செய்கின்றது.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரானுக்கு அதன் ஆதரவு நாடுகளிலிருந்து ஒரு உதவி தன்னும் கிடைக்கப் போவதில்லை. ஏதோ எங்கள் வீட்டில் சுட்ட தோசையை தட்டில் மூடிக் கொண்டு போய் அடுத்த வீட்டிற்கு கொடுப்பது போல, ரஷ்யாவிலிருந்தும், வட கொரியாவிலிருந்தும் ஈரானுக்கு அணு ஆயுதங்கள் கொடுப்போம் என்று கேலிக்கூத்தான வாய்மொழி ஆதரவு மட்டும் தான் கிடைத்துக் கொண்டிருக்கும். ஒரு நாடு அணு ஆயுதத்தை தன் நாட்டில் வைத்திருப்பதற்கே அந்த நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒரு அணு ஆயுத திட்டமும், பராமரிப்பு சேவைகளும் இருக்கவேண்டும். ஈரானிடம் அப்படியான வசதிகள் எதுவும் இல்லை. மேலதிகமாக ரஷ்யாவே வட கொரியாவிடமிருந்து வட கொரிய வீரர்களையும், ஆயுதங்களையும் பெற்றுக் கொண்டிருக்கின்றது. மூன்றரை வருடங்களாக சேத்துக்குள் விட்ட காலை வெளியே எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார் ரஷ்ய அதிபர் புடின். டாலர் கடைகளில் எண்ணெய் வாங்குவது போல ஈரானிடம் நேரடியாகவும், மறைமுகமாகவும் மிகவும் மலிவு விலையில் எண்ணெய் வாங்கிக் கொண்டிருக்கும் சீனா கூட எந்த விதமான தளபாட உதவிகளும் செய்யப்போவதில்லை. அடுத்ததாக எண்ணெய்க்கு என்ன செய்யலாம் என்பதே அதன் ஒரே ஒரு யோசனை. ஈரான் அழிந்து போகாமல் தப்பிக்க, தற்காலிகமாகவேனும் அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டிற்கு வருவதே இன்றுள்ள நல்ல ஒரு தெரிவு. அழிந்து போன தேசங்கள் பல அப்படியே அழிந்த நிலையிலேயே இன்னும் இருக்கின்றன. இல்லாவிட்டால் ஈரானும் அந்த வகையில் இன்னொன்று ஆகிவிடும். அதன் வான்வெளியில் சுத்தமாகவே எந்தக் கட்டுப்பாடும் அற்ற ஈரான் மிகவும் ஒரு பலவீனமான நிலையிலேயே இருக்கின்றது. அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் ஏற்கனவே அந்த நாட்டை பிடிக்கின்றேன், இந்த நாட்டை பிடிக்கின்றேன் என்று சொல்லியபடியே இருக்கின்றார். இது அவருக்கு இன்னும் உற்சாகத்தை கொடுக்கப் போகின்றது. அடுத்ததாக கிரீன்லாந்த் கதையை ஆரம்பிக்கப் போகின்றார்.................... பொதுவாகவே ட்ரம்ப் எதைச் செய்ய முயன்றாலும் இங்கு சில மாநிலங்களில் மிகக் கடுமையான எதிர்ப்புகள் காட்டப்படும். இதில் முன்னிலை வகிக்கும் மாநிலம் கலிஃபோனியா. ஆனால் ஈரான் மீதான தாக்குதலுக்கு வழமையான அளவிற்கு எதிப்புகள் இங்கு காட்டப்படவில்லை. ஒரு விதமான ஆதரவுப் போக்கே இருக்கின்றது.
-
இரான் மீது அமெரிக்கா தாக்குதல்
அமெரிக்கா ஈரான் மீது இராட்சத குண்டுகளைப் போட்டு விட்டது என்ற செய்தியைக் கேட்டவுடன், இவர்கள் இப்படிச் செய்து விட்டார்களே என்ற ஒரு பெருத்த ஏமாற்றமும், இப்போது கூட யோசனையாகவுமே இருக்கின்றது. உலகம் ஒரு ஒழுங்கில் இல்லாமல், பலம் உள்ளவர்கள் எதையும், எங்கேயும் செய்யலாம் என்பது எப்படியான ஒரு உலகத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கின்றது. கடந்த நான்கு வருடங்களாக இப்படியான தான்தோன்றித்தனமான நிகழ்வுகள் எத்தனை ஆரம்பிக்கப்பட்டு, முழு உலகமுமே அவற்றின் பாதிப்புகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. உலக சுகாதார மையத்தில் தலைமை விஞ்ஞானிகளில் ஒருவராக இருந்த தமிழ் பெண்மணி ஒருவரின் பேட்டி ஒன்று கடந்த வாரம் ஒரு இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் போனது. கோவிட் வைரஸ் எங்கே ஆரம்பித்திருக்கலாம் என்ற மூன்று ஊகங்களை சொல்லி, அதில் ஒன்றை முற்றாக நிராகரித்து விட்டு, மற்றைய இரு ஊகங்களையும் உறுதிப்படுத்தி, உரிய நடவடிக்கைகளை எடுத்து, எதிர்காலத்தில் இவ்வாறான ஒன்று மீண்டும் நிகழாமல் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் இருக்கும் உலக சுகாதார மையத்தின் நிலையைச் சொன்னார். இந்தப் பெரிய நாடுகளுக்கு கொஞ்சம் கூட, தங்கள் நலன்கள் தவிர, அக்கறை என்பதே கிடையாது. சில தலைவர்களும் அப்படியே. மிகவும் முன்யோசனையற்ற ஏட்டிக்குப் போட்டியான செயல்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். சர்வாதிகாரிகளும், மத/இன அடிப்படைவாதிகளும் மட்டும் இல்லை, ஜனநாயக வழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் இப்படியே செய்வது ஆபத்தான ஒரு எடுத்துக்காட்டு.
-
பயந்தாங்கொள்ளி
இளகிய மனது, வெள்ளை மனது என்பதை விட பயந்த மனது என்று சொல்வது தான் சரி போல.........🤣. உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்த ஒரு பூனைக்குட்டியைக் கூட தூக்கி விட துணிவில்லாமல், மனைவியை துணையாகக் கூட்டிக் கொண்டு போனதை வேறு என்னவென்று சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை............. அதுவும் ஓடும் போது கையில் ஒரு துவாயையும் எடுத்துக் கொண்டே ஓடினேன் பாருங்கள்........... அந்த நாலாவது பூனைக்குட்டியை விட நான் தான் ஒரு பயந்தாங்கொள்ளி...............🤣. கொஞ்சம் வெளியே நின்று ஒவ்வொருவரும் எங்களை நாங்களே கவனித்து பார்த்தால் சரியான வேடிக்கையாக இருக்கும் போல...............
-
பயந்தாங்கொள்ளி
பயந்தாங்கொள்ளி ---------------------------- புலி ஒன்று ஒரு தடவையில் மூன்று குட்டிகளுக்கு மேல் ஈன்றாலும், அநேகமாக அவைகளில் ஒன்றே ஒன்று மட்டுமே தப்பிப் பிழைக்கும் என்கின்றார்கள். எந்தக் குட்டி தப்பிப் பிழைக்கப் போகின்றது என்பது கூட சில நாட்களிலேயே தெரிந்துவிடும். மூன்று குட்டிகளில் ஒன்று மிகத் துணிவானதாக இருக்கும், இன்னொன்று பயந்தாங்கொள்ளியாக இருக்கும், மூன்றாவது குட்டி ஒன்று எச்சரிக்கையுடன் இருக்கும். துணிவானதும், எச்சரிக்கையானதுமான இரு குட்டிகளும் சேர்ந்தே இருக்கும். பயந்தாங்கொள்ளி ஒதுங்கிப் பதுங்கி தனியாக இருக்கும். பூனையும் புலியும் ஒரு விலங்காகவே இருந்திருக்கவேண்டும். பரிணாம வழியில் எங்கோ இரண்டு விலங்குகளாக பிரிந்து ஒன்று புலியாகவும், இன்னொன்று பூனையாகவும் மாறிவிட்டன. ஆனாலும் பதுங்கிப் பாய்வதும், 24 மணி நேரத்தில் 20 மணி நேரத்துக்கு நாக்கால் நீவி நீவி சுத்தம் செய்வதும் இரண்டு விலங்கிடமும் அப்படியே இன்னமும் இருக்கின்றது. பூனைக்கும் பொல்லாத கோபம் வருகின்றது. மியாவ் என்னும் வழமையான ஒரு மெல்லிய ஒலியை விட, அது இன்னொரு கடுமையான ஒலியை கோபத்தில் எழுப்புகின்றது. காட்டில் புலி சந்தோசமான தருணங்களில் மியாவ் போல மெலிதான ஒலி ஏதாவது எழுப்புகின்றதா என்று தெரியவில்லை. வீட்டுக்கு வந்து போகும் கறுப்பு வெள்ளை பூனைக்கு என்று கொஞ்சம் கொஞ்சமாக பல வகைச் சாப்பாடுகள் வாங்கி வைத்திருக்கின்றோம். அது ஒரு தெருப்பூனை. அது எங்கே படுக்கின்றது, என்ன செய்கின்றது என்று கூட எங்களுக்கு தெரியாது. சில நாட்களில் அதிகாலையிலே வாசலில் நிற்கும். அதன் உணவைக் கொடுத்தால் சாப்பிடும். பின்னர் போய்விடும். மதியம் வரும், பின்னேரத்திலும் சில நாட்களில் வரும். இன்னும் சில நாட்களில் நன்றாக இருட்டும் வரை வீட்டின் பின்பக்கம் படுத்திருக்கும். இரண்டு வருடங்களின் பின், அதன் வாய் திறந்து மியாவ் என்று சொல்ல ஆரம்பித்தது. நன்றி என்று சொல்வதைப் போல அதன் மியாவ் இருப்பதில்லை. 'நீங்கள் நல்லா இருக்கிறீர்களா..............' என்று கேட்பது போலவே அதன் மியாவ் இருக்கின்றது. சில நாட்களில் ஒன்றும் சொல்லாது. அதன் பிரச்சனை அதற்கு என்று நினைத்துக்கொள்வேன். சேர்ந்தால் போல ஒரு மாதம் வரை வீட்டுப் பக்கம் வராமலும் இருந்துவிடும். அதன் கதை முடிந்து விட்டது போல, இனி இந்த மூட்டை மூட்டையாக கிடக்கும் பூனை உணவுகளை என்ன செய்வது என்று நினைக்க, ஒரு நாள் திடீரென்று வாசலில் வந்து நிற்கும். ஒரு நாள் நான்கு குட்டிகளை கூட்டிக் கொண்டு வந்து, அவைகளுக்கும் உணவு வேண்டும் என்று கேட்டால் எப்படி இருக்கும் என்று இடைக்கிடை நினைத்துக்கொள்வேன். ஆனால் இது ஆண் பூனை. ஆண் விலங்குகள் பொதுவாக அவ்வளவு பொறுப்பாக நடப்பது இல்லை. சில விதிவிலக்குகள் இருக்கின்றன, ஆனால் பூனைகளில் இல்லை என்று நினைக்கின்றேன். ஆகவே நான்கு குட்டிகள் என்றும் வீட்டுப் பக்கம் வரப் போவதில்லை என்றே இருந்தேன். பல வருடங்களின் முன் இங்கிருக்கும் ஒரு வார இறுதி திறந்த வெளிச் சந்தையில் ஒரு மாதுளம் கன்று வாங்கி வீட்டில் நட்டோம். அதை ஏசியன் மாதுளை என்று அவர்கள் சொன்னதாலேயே வாங்கினோம். அமெரிக்கன் மாதுளை கடும் சிவப்பு முத்துகள், அத்துடன் பெரும்பாலானவை பல்லைக் கூச வைக்கும் கூர்மையான புளிப்புச் சுவையும் கலந்தவை. பல்லுப் போனால் சொல்லும் போய்விடும் என்பது ஊரில், இங்கே பல்லுடன் சேர்த்து சொத்தும் போய்விடும். சொத்து ஏற்கனவே இல்லாவிட்டால் பல் வைத்தியம் பார்த்த கடன் ஒரு தலைமுறைக்கு நிற்கும். அதனால் எதுக்கு இந்த அமெரிக்கன் மாதுளை என்று அதை நாங்கள் வீட்டில் வைக்கவில்லை. ஏசியன் மாதுளை ஏசியன் மாதுளை தான். ஊரில் இருக்கும் அதே மாதுளம் பழத்தின் இயல்புகள் தான். ஒரே ஒரு வித்தியாசம் மரத்தில் இருந்தது. மாதுளை மரம் ஒரு சின்ன ஆலமரம் போல பெரிதாக வளர்ந்து வந்தது. இங்கு எல்லாமே பெரிதாகவே இருக்கும், அதற்காக மாதுளை மரமுமா ஆல் போல வளர வேண்டும். அது வளர்ந்து பக்கத்து வீடு, பின் வீடு என்று இரு வீடுகளுக்குள்ளும் புகுந்து நின்றது. அந்த மனிதர்கள் அருமையானவர்கள். இதுவரை எதுவும் சொன்னதில்லை. இந்த மாதுளை மரத்தின் கீழே ஒரு சின்ன கொட்டகை இருக்கின்றது. அதை முன்னர் பார்க்கும் போது பெரிய கொட்டகையாகத்தான் இருந்தது. ஆனால் மாதுளை பிரமாண்டமாக வளர்ந்த பின், கொட்டகை சிறியதாக தெரிய ஆரம்பித்தது. ஒரு நாள் காலை அந்தப் பக்கமாக போன பொழுது கொட்டகையின் கூரையில் சில அசைவுகள் தெரிந்தன. என்னுடைய உயரத்துக்கு கொட்டகைக் கூரையின் மேற்பகுதி முழுவதுமாகத் தெரியாது. ஏணி ஒன்றில் ஏறிப் பார்த்தால், அங்கே நான்கு பூனைக் குட்டிகள் என்னைப் பார்த்துக்கொண்டு நின்றன. நான்கில் ஒரு குட்டி கறுப்பு வெள்ளை. ஆனால் எங்களின் கறுப்பு வெள்ளை இவ்வளவு பொறுப்பானவர் இல்லையே, இந்த நான்கும் எங்கேயிருந்து இங்கே வந்திருக்கும் என்று யோசனையாக இருந்தது. மண் நிறத்திலான வரிவரிப் பூனை ஒன்றும் வந்து போவதுண்டு. எங்களைக் கண்டவுடனேயே அது தலை தெறிக்க ஓடிவிடும். அது ஒரு பெண் பூனையாக இருக்கலாம். ஆனாலும் அதன் குட்டிகளை கொண்டு வந்து எங்கள் வீட்டில் விடும் அளவிற்கு அது எங்களை நம்புமா என்று தெரியவில்லை. நான்கு குட்டிகளில் இரண்டு வரிவரிப் பூனைக் குட்டிகளே. பூனைக் குட்டிகள் ஏற்கனவே ஓரளவு வளர்ந்திருந்தன. ஆடி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. இரவிரவாக நித்திரை குழம்பிக் கொண்டேயிருந்தது. கூரையில் இருந்து அவை கீழே விழுந்து விடுமா, வேறு ஏதாவது விலங்கு ஒன்று வந்து இந்தக் குட்டிகளை பிடித்து விடுமா என்று பலப்பல யோசனைகள் வந்து கொண்டேயிருந்தன. எங்கோயோ பிறந்து இவ்வளவு நாட்களும் மிக ஆரோக்கியமாக ஒரு தாய்ப்பூனையால் மட்டும் வளர்க்கப்பட்ட அந்தக் குட்டிகள் இன்று என் கண்ணில்பட்டதால் என் கற்பனையில் பல ஆபத்துகளின் ஊடாக போய் வந்து கொண்டிருந்தன. காலை பொழுது விடிந்தும் விடியாததுமாக பின்பக்கம் ஓடினேன். ஏணியில் ஏறி எட்டிப் பார்த்தேன். மண் நிற வரிவரி அம்மா அங்கே குட்டிகளுடன் படுத்திருந்தார். என்னை அது நன்றாகப் பார்த்தது. உடனேயே ஏணியில் இருந்து இறங்கி வீட்டுக்குள் வந்துவிட்டேன். பின்னர் அது அங்கே இல்லாத நேரங்களில் நான்கு குட்டிகளையும் நன்றாகப் பார்த்துக்கொண்டேன். எது துணிந்த குட்டி, எது பயந்தாக்கொள்ளி என்று அடையாளம் கண்டுகொண்டேன். பயந்தாங்கொள்ளிக் குட்டிக்கு வெளி உதவிகள் கிடைக்காவிட்டால் அது தப்பிப் பிழைப்பது கஷ்டம் என்று வாசித்தது மனைதில் வந்து கொண்டேயிருந்தது. அடுத்த நாள் காலை அவைகளை பார்த்து விட்டு, மதிய நேரம் மீண்டும் போனேன். மூன்று குட்டிகள் மட்டுமே கூரையில் நின்றன. ஒரு வரிவரிக் குட்டியைக் காணவில்லை. அது தான் பயந்தாங்கொள்ளிக் குட்டி. அய்யய்யோ............ நான் நினைத்தது நடந்து விட்டதோ என்று நன்றாகத் தேடினேன். கொட்டகையின் ஒரு பக்கத்துடன் ஒட்டி இருந்த மாதுளைக் கிளை ஒன்றுக்கு இடையில் அந்தக் குட்டி மாட்டுப்பட்டிருந்தது. கீழேயும் விழாமல், மேலேறி கூரைக்கும் போக முடியாமல் அது கிளைக்கும் கொட்டகை சுவருக்கும் இடையில் சிக்கி தொங்கிக் கொண்டிருந்தது. ஆனால் சின்ன அசைவு இருந்தது. அது உயிருடன் தான் இருக்கின்றது என்று தெரிந்தவுடன், வீட்டுக்குள் மீண்டும் ஓடினேன். 'னேய், பூனைக்குட்டி ஒன்று நசிந்து தொங்குது. நீங்கள் ஒருக்கால் வாங்கோ...............' 'அதைப் பிடித்து விடுகிறது தானே................' 'நீங்கள் ஒருக்கால் வாங்கோ............' மனைவி அவசரம் அவசரமாக வந்தார். அங்கே இருந்த ஒரு சின்ன துவாயை எடுத்துக் கொண்டு நான் அவர் பின்னால் அவசரமாக ஓடினேன். நான் இந்த மரக் கொப்பை இழுக்கின்றேன், நீங்கள் குட்டியை கீழு பிடித்து கூரைக்கு தள்ளி விடுங்கள் என்றார். அவர் சொன்னபடியே செய்தேன். குட்டி துள்ளிப் பாய்ந்து கூரைக்கு ஓடியது. போன உயிர் வந்தது. பயந்தாங்கொள்ளிகளுக்கு எப்போதும் ஒரு துணையும் உதவியும் தேவைப்படுகின்றது.
- FourKittens.jpg
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
பையன் சார், அமெரிக்கா அழிந்து போக வேண்டும் என்று நீங்கள் நினைப்பதில் புதிதாக எதுவும் இல்லை. பலரும் இப்படியே தான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் போல. சாதாரண வேலிச் சண்டையிலேயே பக்கத்து வீட்டுக்காரர்களை பாம்பு கடிக்க வேண்டும் என்று நினைக்கின்றவர்கள் நாங்கள். இவ்வளவு செய்யும் அமெரிக்காவை விட்டு விடுவோமா என்ன. அமெரிக்கா போக இன்னொருவர் அந்த இடத்திற்கு வரப் போகின்றார் என்றால், அந்த மாற்றம் நடக்காமலேயே இருக்கலாம். எந்த தனி வல்லரசுமே தர்மம் அற்றது, சுயநலம் மிக்கது. வேற்றுமையில் ஒற்றுமை தேடுவோம் என்ற அடிப்படை சீனாவிடமோ அல்லது ரஷ்யாவிடமோ கிடையாது, அதனாலேயே நாங்கள் அங்கே குடியேறுவது கிடையாது. மேற்கு நாடுகளில் சிலரிடமாவது இந்த இயல்புகள் உண்டு. அதனாலேயே நாங்கள் மேற்கு நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கின்றோம். சைனா தனிப்பெரும் வல்லரசாவதும், ட்ரம்ப் அமெரிக்க அதிபராக வந்ததும் ஒரே மாதிரியான நிகழ்வுகள். அவலை நினைத்து உரலை இடிப்பது போல...................
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் அணு ஆயுதத்தை வைத்துள்ளது. ஏன் அவர்களுக்கு பொருளாதார தடை இல்லை? முதலாவது காரணம், இஸ்ரேல் 1960 ம் ஆண்டுகளிலேயே, மற்றைய ஐந்து அணு ஆயுத நாடுகள் போன்று, அணு ஆயுதங்களை தயாரித்துவிட்டது. அன்று எவரும் எவர் மேலும் தடை விதிக்கும் நிலை உலகில் இருக்கவில்லை. இரண்டாவது காரணம், அமெரிக்கா - பிரான்ஸ் - இங்கிலாந்து - இஸ்ரேல் என்றும் ஒரே அணியிலேயே இருக்கின்றார்கள். இதில் பிரான்ஸ் மட்டுமே அவ்வப்போது இஸ்ரேலின் கொடுமைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஒரு நாடு. இவர்கள் இஸ்ரேலுக்கு எந்தப் பொருளாதார தடைகளையும் அறிவிக்கமாட்டார்கள் ஏனெனில் நட்பு நாடுகள். ஆனால் ரஷ்யாவும், சீனாவும் கூட்டாக இஸ்ரேலுக்கு எதிராக பொருளாதார மற்றும் தொழில்நுட்ப தடைகளை அறிவிக்கலாம். இவர்கள் இருவரும் தடைகளை அறிவித்தாலும் எதுவும் ஆகப் போவதில்லை. அணு ஆயுதம் வரை, பொருளாதார தடை வரை , ஒரு நாளுக்கு 50 ஆக கொன்றால் ஒரு இனத்தை அழிக்கலாம் என்ற குரூரம் யாரிடம் உள்ளது? ஒரு உதாரணம்???? வேறு இனமோ அல்லது வேறுபாடுகள் கொண்ட மனிதர்களை கொன்று அழிக்கலாம் என்ற கொடூரம் காலம் காலமாகவே பல்லாயிரம் ஆண்டுகளாகவே மனிதர்களிடம் இருக்கின்றது. ஹிட்லரும், அவரது படையினரும் யூதர்களை இலட்சக் கணக்கில் கொன்று அழித்தார்களே. ஒரு நாளைக்கு 50 அல்ல, ஐம்பதினாயிரம் யூதர்களை ஹிட்லர் கொன்றார். பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்ட பெரும் பஞ்சத்தால் இந்தியாவில் தினமும் நூற்றுக் கணக்கான மக்கள் செத்து விழுந்தார்களே. ருவாண்டாவில் ஒரு இனம் இன்னொரு இனத்தை தினமும் கொன்று அழித்தார்களே. அமெரிக்கப் பழங்குடிகள், ஆஸ்திரேலியப் பழங்குடிகள் என்று கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்டார்களே. இப்படி ஆயிரம் நிகழ்வுகள் பூமியில் சில ஆயிரம் வருடங்களாக நடந்து கொண்டேயிருக்கின்றது. அணு ஆயுதம் இன்றைய உச்ச ஆயுதமாக இருக்கின்றது. நச்சு வாயு ஒரு காலத்தில் இருந்தது. தீக்குண்டம் ஒரு காலத்தில் உச்ச ஆயுதமாக இருந்திருக்கும். கழுமரம் கூட ஒரு காலத்தில் இருந்திருக்கும். தனது நலம் எப்படி முழு அரபு உலகமும் வேடிக்கை பார்க்கும் போது பலஸ்தீனத்துக்கு மட்டும் உதவ முயல்கிறது. அதுவும் பலஸ்தீனியர்கள் வேறு முஸ்லீம்களாக உள்ள போது?? பலஸ்தீனத்தில் ஹமாஸிற்கு உதவியது போலவே சிரியாவில் அசாத்துக்கு உதவி செய்தது, லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு உதவி செய்தது. ஈராக்கில் ஒரு புரட்சிப்படையை உருவாக்கி உதவி செய்தது, ஹூத்தீஸ் அமைப்பிற்கு உதவி செய்வது என்று பலவற்றை ஈரான் செய்து கொண்டிருக்கின்றது. இது பொதுவான மனிதநலமா அல்லது தன்னலமா என்ற கேள்வி இங்கு எப்படி வருகின்றது? சி ஐ ஏ ,மொசாட் செய்த கொலைகளை காட்டிலுமா??? சிஐஏ, மொசாட் செய்த கொலைகளை விடவா இலங்கை அரசு செய்து விட்டது என்றும் இலங்கை அரசு சார்பான ஒருவர் கேட்கக்கூடும். அதற்கும், உங்களின் கேள்விக்கும் பதில் ஒன்றே.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
மதங்கள் பிரச்சனையே அல்ல. மத அடிப்படைவாதம் தான் பிரச்சனை. இஸ்லாமிய அடிப்படைவாதம், இந்து அடிப்படைவாதம், கிறிஸ்தவ அடிப்படைவாதம், பௌத்த அடிப்படைவாதம்,......... இப்படி எதுவுமே மனிதர்களை ஒன்றாக்குவதில்லை, பிரித்து அழிக்கின்றன. இதற்கு எதிராகவே இது நடைபெறுகின்றது, இன வேறுபாடு அடிப்படையில் அல்ல. மற்றபடி, பல பாகுபாடுகள், துவேஷங்கள் எல்லா மனிதர்களின் உள்ளேயும் இருக்கின்றது. வெள்ளை மனிதர்கள் மட்டும் தான் பிரித்துப் பார்ப்பவர்கள் என்றில்லை, நாங்களுமே பிரித்துப் பார்ப்பவர்கள்தான். ஊருக்குள்ளேயும் பிரிக்கின்றவர்கள் நாங்கள், ஊர் ஊராகவும் பிரிகின்றவர்கள் நாங்கள். ஈரானால் முடியாது. பொதுவாக இருக்கும் இஸ்ரேல், அமெரிக்க எதிர்ப்பு மனப்பான்மையினால், ஈரான் அடிப்பது போன்று பிரமை உருவாக்கப்படுகின்றது. போன வருடம் அவர்களின் ஒரு ஹெலிகாப்டர் விழுந்த போதே, அதை தேட முடியாமல் அவர்கள் தவித்த போது, ஈரானின் நிலை தெரிந்தது. சீனாவோ, ரஷ்யாவோ ஹெலிகாப்டர்கள் கூட கொடுக்கவில்லை. மற்றைய பலமான நாடுகளைப் போலவே ஈரானும் தன் நலன் கருதியே பல குழுக்களுக்கு உதவி செய்கின்றது. ஆனால் ஈரானின் அடிப்படைவாதமும், சர்வாதிகார அரச நிர்வாகம், அதன் மூலம் குழுக்களுக்கு கிடைக்கும் கட்டற்ற வசதிகள் போன்றனவே பல நாடுகளுக்கு பயத்தை உண்டாக்குகின்றன.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
வழமையாக ஒற்றை வரியில் கேள்வி கேட்பீர்கள். இன்று எழுதியிருக்கின்றீர்கள்................👍. நிகழ்தகவை குறைக்க எப்படி பாகிஸ்தான் அணுஆயுதத்தை வைக்க மேற்குலகு விட்டது?.இந்தியாவுக்கு செக் வைக்க பாகிஸ்தான் தேவைப்பட்டது மேற்குலகுக்கு. இந்தியாவைக் கட்டுப்படுத்தவே பாகிஸ்தானை அனுமதித்தார்கள் என்றால் அதுவும் அணு ஆயுத யுத்த நிகழ்தகவை கட்டுப்படுத்தவே என்று தானே வருகின்றது. இந்தியாவிடம் மட்டுமே இருந்தால், அது இந்தியாவின் மேலாதிக்கத்தை நிறுவும் அல்லவா. சமீபத்தில் இருவரும் இரண்டு நாட்கள் சண்டை போட்டதாகச் சொன்னார்கள். பின்னர் பின்வாங்கிவிட்டார்களே. இஸ்ரேலிடமும். எகிப்திடமும் அணு ஆயுதங்கள் இருந்தால், அந்தப் பிரதேசம் ஓரளவாவது அமைதியாக இருக்கக்கூடும். நிகழ்தகவை குறைக்க இன்னொரு நாட்டை செய்யாமல் தடைசெய்வது ஒரு வகை. ஏன் வைத்திருப்பவர்கள் குறைக்க அல்லது இல்லாமல் செய்ய முடியாது?? நிகழ்தகவை குறைக்க இஸ்ரேல் எந்த வகைக்குள் வரும்??? வைத்திருப்பவர்கள் அணு ஆயுத பரம்பல் கட்டுப்பாடு ஒப்பந்தம் மூலம் புதிய அணு ஆயுதங்களை செய்வதை கட்டுப்படுத்திக் கொண்டு தானே இருக்கின்றார்கள். புதிய பரிசோதனைகளுக்கு கூட தடை உள்ளதே. பழைய ஆயுதங்களை பயன்பாட்டில் இல்லாமல் ஆக்குவதும் அவர்களில் ஒப்பந்தத்தில் இருக்கின்றது தானே. இது அமெரிக்காவை விட சுத்துமாத்து. பலஸ்தீனத்துக்கு ஈரான் உதவுவது தான் மிக மிக முக்கிய காரணம். ஈரானை அடக்கி விட்டால் பலஸ்தீனியர்கள் ஏதிலிகள் ஆகி போராட மாட்டார்கள் என்பதுடன் நாளுக்கு சராசரியாக 50 பேரை கொன்றால் அவர்களின் போராடும் வீரியம் குறையும் என்ற தந்திரமே. பலஸ்தீனத்துக்கு எவருமே உதவவில்லை. அந்த மக்கள் நிவாரணம் பெற நிற்கும் போது கூட இஸ்ரேல் இராணூவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இங்கே கேட்க நாதியற்ற மக்கள் அவர்கள். ஹமாஸ் குழுவிற்கு ஈரான் உதவுவது பலஸ்தீன மக்களுக்கு உதவுவது அல்ல. ஈரானை அழித்து தான் பலஸ்தீனத்தை அடக்க வேண்டும் என்ற நிலை கிடையாது. இன்றைய காசாவில் ஈரானால் எதுவுமே செய்யமுடியாது. யாரந்த பல நாடுகள்?? நேட்டோவில் இருக்கும் எந்த நாடும் ஈரானின் அணு அயுத திட்டத்திற்கு ஆதரவு கிடையாது. அமெரிக்காவுடனான தலபானின் கொண்டாட்டம், இஸ்ரேலின் ஐ எஸ் எஸ்லின் கொண்டாட்டம், பின்லாடனின் தந்தையின் வெள்ளை மாளிகை சிவப்பு கம்பள வரவேற்பு என கூறிக்கொண்டே போகலாம்.இவை எதற்குள் அடங்கும்?? இவை அமெரிக்க அரசின் தன் நலன் கருதிய நடவடிக்கைகள் என்பதற்குள் வரும். இதையே தான் ரஷ்யா செய்கின்றது. சீனா செய்கின்றது. இந்தியா செய்கின்றது. இங்கு எந்த வல்லரசும் இப்படி செய்யாமல் இருப்பதில்லை. ஈரானும் இதையே செய்தாலும், தேர்ந்தெடுத்த ஒரு அரச நிர்வாகப் பொறிமுறைகளில் இருக்கும் கட்டுப்பாடுகள் தேர்ந்தெடுக்கப்படாத சர்வாதிகார அரச நிர்வாகத்தில் கிடையாது. இது தான் ஈரான் அரசுக்கும், அமெரிக்க அரசுக்கும் இருக்கும் முக்கிய வேறுபாடு. வடகொரியாவின் அணுஆயுத பரிசோதனைகள் அமெரிக்காவின் உற்ற நண்பர்களான ஜப்பானின் அடுப்படியில் விழுகிறது. தென் கொரியாவின் கடற்கரையில் விழுகிறது. என்ன சகோ இப்படி சப்பை கட்டு கட்டுகிறீர்கள்?? அவை அணு ஆயுதப் பரிசோதனைகள் கிடையாது. ஏவுகணைகள். அத்துடன் வட கொரிய மீது அமெரிக்காவும், மேற்குலகும் விதித்திருக்கும் தடைகள் மிகக் கடுமையானவை.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
🤣..................... பையன் சார், நலமா, இந்தப் பக்கம் வருவது குறைவு போல தெரிகின்றது. டிக்டாக்கில் ஒரு ஸ்டார் ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள் போல.................... வட கொரியா அதிபரின் புதுக்கப்பல் கடலில் விட்ட அன்றே இரண்டாகப் பிளந்து போய்விட்டது. மனிதர் கடும் கோபத்தில் சிலரை பிடித்து அடைத்து வைத்திருக்கின்றார். அவர்களை அவர் கொன்று கூட இருக்கலாம். இப்பொழுது அந்தக் கப்பலை ஒட்டுவது தான் அவரது முதல் வேலை. அந்தக் கப்பல் ஒரு துண்டாக கடலில் மிதந்த பின் தான் தலைவன் வெளியே வேறு அலுவல்களுக்கு வருவார்...............🤣. அதிபர் ட்ரம்ப் தான் ஒரு அமைதி விரும்பி என்று சொல்லுவார். நீங்கள் உட்பட பலரும் அதையே திருப்பிச் சொன்னீர்கள். அதிபர் ட்ரம்ப் விரும்புவது அவரை மட்டுமே என்று நாங்கள் சிலர் எப்போதும் தான் சொல்லிக் கொண்டிருக்கின்றோமே............... நாலு வருடங்கள் பட்டுத்தான் பாருங்களேன்.............😜. நிகழ்வுகளை மூன்று வகைகளாக எழுதலாம் என்றிருக்கின்றது: எங்களுக்கு தெரிந்தவற்றை எழுதுவது எங்களுக்கு விருப்பமானவற்றை ஊகங்களாக எழுதுவது எங்களின் அரசியல் தேவைகள் கருதி திரித்து எழுதுவது நீங்கள் இரண்டாவது வகையில் மிக நல்லாகவே எழுதியிருக்கின்றீர்கள்.....................👍.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஐநா பாதுகாப்புச்சபையில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் ஐந்து நாடுகளும் அணு ஆயுதங்கள் தயாரித்த அதே காலத்திலேயே இஸ்ரேலும் அணு ஆயுதங்கள் தயாரித்தது. இன்றுவரை இஸ்ரேல் தன்னுடைய அணு ஆயுத விபரங்களை ஏற்றுக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை. ஆகவே ஏன் இந்த ஐந்து நாடுகளில் எவையும் இஸ்ரேலை கேட்கவில்லை என்ற கேள்வி இல்லாமல் ஆகுகின்றது. ஆனால் அணு ஆயுதங்கள் தயாரிக்க இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா இந்த மூன்று நாடுகளையும் எப்படி ஐந்து அணு வல்லரசுகளும் விட்டார்கள் என்பது ஒரு விடயமே. இலேசாக அவர்களை விடவில்லை. முழுத்தடைகளை விதித்தார்கள். அதிலும் வட கொரியா, மேற்கு நாடுகளின் தடைகளால் இந்த நாடே பல தசாப்தங்கள் பின்னோக்கிப் போய்விட்டது. இனி இன்றிருக்கும் அணு ஆயுதங்களால் வரும் அழிவு என்பது மனிதகுலத்தின் அழிவே. ஆகவே அதற்கான நிகழ்தகவைக் குறைக்கும் முயற்சியே இன்று போய்க் கொண்டிருக்கின்றது. என்னதான் வட கொரியா சொன்னாலும், அவர்கள் அணு ஆயுதத்தை பிரயோகிக்கமாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கை பொதுவாக இருக்கின்றது. ஆனால் ஈரானின் மீது அந்த நம்பிக்கை பல நாடுகளுக்கு இல்லை. மற்றும் ஈரானுடனான தீவிரவாத இயக்கங்களுக்கு இருக்கும் நெருக்கமான, வெளிப்படையான தொடர்புகளும் இந்த விடயத்தில் ஒரு காரணமாக அமைகின்றது. அணு ஆயுதங்கள் சில குழுக்களுக்கு கைமாறி விடக்கூடாதே என்ற ஒரு கவனம்.
-
மனிதநேயம் எங்கே
வணக்கம் மந்தாகினி. உங்கள் வரவு நல்வரவாகுக. கவிதை நன்றாக இருக்கின்றது..........👍.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
நேற்று இரவு நியூஸ் 18 இல் ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்கள் இருக்கும் இடங்கள் பற்றிய ஒரு சிறிய செய்தி தொகுப்பொன்று போய்க் கொண்டிருந்தது. அதில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டிருக்கும் Fordo Plant குறித்த தகவல்கள் பிழையானவை போன்று தெரிந்தது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் தான் செறிவூட்டப்பட்ட யுரேனியம் 60 கிலோகிராம் வரையில் சேமிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இதன் மேற்கூரை மேற்பரப்பிலிருந்து 90 அடிகள் கீழே இருக்கின்றது என்று செய்தியில் சொன்னார்கள். இவை 90 அடிகள் அல்ல, 90 மீட்டர்கள் கீழே என்பதே சரியானது என்று வேறு தகவல்கள் சொல்லுகின்றன. பி - 2 விமானத்தின், ஜிபியூ - 57 இராட்சதக் குண்டின் ஆழத்தாக்கு திறன் பற்றியும் அவர்களின் தகவல்கள் சரியானது அல்ல. இந்த ராட்சத குண்டுகள் 200 அடிகள் வரை உள்ளே போய், பின்னர் அங்கே வெடிக்கும் திறன் வாய்ந்தவை. 60 அடிகள் என்றே செய்தியில் சொன்னார்கள். இதை முடிப்பது தான் அமெரிக்காவினதும், இஸ்ரேலினதும் முடிவு என்றால், இரண்டு பாரிய தாக்கங்கள் நிகழக்கூடும். முதலாவது, அங்கிருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தாக்கமுற்று அதனால் அந்தப் பிரதேசம் முழுவதும் ஏற்படப் போகும் கதிர்வீச்சு. அந்தப் பிரதேசமே 50 வருடங்களுக்கு மேலே மனிதர்கள் வசிக்க முடியாத வெறும் நிலம் ஆகிவிடும். இரண்டாவது, இந்தப் பிரதேசத்தில் அந்த மலையின் கீழே போய்க் கொண்டிருக்கும் fault lines. மிகவும் ஆழத்தில் ஒரு நெருக்கப்பட்ட இடத்தில் சில இராட்சத குண்டுகள் வெடிக்கும் போது, அவற்றின் வீரியம் இன்னும் அதிகமாக, கூர்மையாக இருக்கும். இந்த வீரியத்தால் fault lines அசையக்கூடும். அது பெரிய பூகம்பங்களை அந்தப் பகுதியிலும், சுற்றுப் பிரதேசங்களிலும் ஏற்படுத்தவும் கூடும். ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யாது என்று தான் உறுதிமொழி கொடுக்கின்றேன் என்று ரஷ்ய அதிபர் புடின் இன்று சொல்லியிருக்கின்றார். இங்கே சிரிப்பு வந்தால், சிரித்துக் கொள்ளலாம். இது நல்ல ஒரு நகைச்சுவையே. தற்போதைக்கு ஈரானுக்கு உண்மையில் என்ன தெரிவுகள் இருக்கின்றன............ ஒரே ஒரு தெரிவாக அணு ஆயுத திட்டத்தை தற்காலிகமாகவேனும் நிற்பாட்டிக் கொள்வது தான் உள்ளது. ஒரே ஒரு அணு மின்நிலையமே நாட்டில் இருக்கும் போது, 2000 க்கும் மேற்பட்ட கருவிகளில் யுரேனியத்தை செறிவூட்டும் ஈரானின் நோக்கம் வெளிப்படையே.
-
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
❤️........... நானும் பங்குபற்றுகின்றேன்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அண்ணா, ஈரான் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்று மேற்குநாடுகள் சிலவற்றை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நீண்டகாலமாக தொடரும் தவறுகள், குறுகியகாலத்தில் நடந்த தவறுகள் என்று இரண்டாகப் பார்க்கலாம். நீண்டகாலம்: ஈரான் அணு ஆயுத தயாரிப்புக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல். ஈரானிடம் அணு ஆயுதப்பலம் கிடைக்கும் என்பது இஸ்ரேல் மற்றும் மேற்கு நாடுகளுக்கு மிக ஆபத்தானது, இஸ்ரேல் என்னும் நாடே இல்லாமல் போகலாம் என்ற, உண்மையோ பொய்யோ, ஒரு கருத்து இவர்களிடையே உள்ளது. ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் சிரியா, ஈராக், யேமன் என்று பல நாடுகளில் ஈரான் ஆயுதக் குழுக்களை வளர்த்து வைத்திருக்கின்றது. இந்தக் குழுக்கள் இஸ்ரேல் மீது இடைக்கிடையே தாக்குதலை மேற்கொள்ளுகின்றன. குறுகியகாலம்: ஈரான் அணு ஆயுதத்தை தயாரிக்கும் நிலையை மிகவும் நெருங்கி விட்டது என்னும் தகவல். இது உண்மையில்லாமல் கூட இருக்கலாம். ஈராக்கின் இரசாயன ஆயுதங்கள் போன்ற ஒரு அவசரமான, ஆனால் பிழையான தகவலாகவும் இது இருக்கலாம். முன்னர் ஈராக்கின் அணு ஆயுத முயற்சிகளையும் இஸ்ரேல் அழித்திருந்தது. அதிபர் ட்ரம்ப் ஈரானுடன் அணு ஆயுதம் தொடர்பாக பேச்சுவார்த்தை ஆரம்பித்தார். 60 நாட்கள் கெடு என்றார். ஈரான் எந்த உடன்பாட்டிற்கும் வரவில்லை. 61ம் நாள் இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது. அமெரிக்கா முதலில் தங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் எதுவும் கிடையாது என்றது. ட்ரம்ப் முற்றிலுமாக உறுதித்தன்மை அற்றவர். மற்றும் பழிவாங்கும் இயல்பும் கொண்டவர். ஈரான் மீதான் எந்த விதமான தாக்குதலுக்கும் மிகவும் வெளிப்படையாகவே இஸ்ரேலை ஆதரிப்பது மட்டும் இல்லை, உதவிகளும் செய்வார். ஈரானிடம் மொத்தமாகவே இரண்டாயிரம் ஏவுகணைகள், ballistic missiles, தான் உள்ளன என்கின்றனர். முதல் நாள் அன்று ஈரான் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியது. இப்பொழுது இன்னும் சிலவற்றை ஏவிக் கொண்டிருக்கின்றது. இதே வேகத்தில் போனால் இரண்டு வாரங்களுக்குள் அவை முடிந்துவிடும். ஈரானுக்கு ரஷ்யாவோ அல்லது சீனாவோ உடனடியாக எந்த உதவியும் செய்யப் போவதில்லை. வெறும் வார்த்தைகள் மட்டுமே அவர்களின் ஆதரவு. வெளியே பலமான ஒன்றாக தெரியும் ஈரான் உண்மையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் நீண்ட ஒரு சண்டைக்கு தயாராகவில்லை என்பதே இன்றைய நிலை. இஸ்ரேல் ஈரானுக்குள் எந்த இடத்தையும், எந்த வேளையிலும் தாக்கி அழிக்கலாம் என்பது ஈரானியர்கள் உட்பட எல்லோருக்குமே ஒரு அதிர்ச்சி.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
நடந்து விடும் போலவே தெரிகின்றது.............. ஆனால் தென்னாபிரிக்கா என்றபடியால் நடக்காமல் போய் விடுமோ என்ற ஒரு ஐயமும் வருகின்றது...................🤣.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
இப்ப தென்னாபிரிக்கா அவசரமாக சரித்திரம் படைக்க வேண்டும் என்றும் இல்லை............ அடுத்தடுத்த உலக டெஸ்ட் சாம்பியன் போட்டிகளில் படைக்கட்டுமே............. ஆஸ்திரேலியா இந்த தடவையும் வெல்லட்டுமே..........😜.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
🙃............................ நானா அது.................... அதுவரை வேறு எவரும் கமிண்சை தெரிவு செய்யாமல் இருந்ததால் அவரை நான் தெரிவு செய்திருந்தேன். மற்றபடி அதே கிளி தான்................🤣.
-
பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !
ஆர். பாலகிருஷ்ணனை தலைவராக நியமித்தது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கே. தொல்லியல்துறைக்கு அல்ல. தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருப்பதற்கு பாலகிருஷ்ணன் தகுதியுடையவரே. கீழே உள்ளவை தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நோக்கங்கள். இது அந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் இருக்கின்றது: தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞரிடையே தொடர்பு கொண்டு தமிழறிஞர்களும், நிறுவனமும் பயன்கொளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் என்பன உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அடிப்படை இலக்காக, தலையாய நோக்கமாக அமைகின்றன. தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் கற்பித்தல் என்பது பிறிதொரு நோக்கமாகும். இவற்றின் அடிப்படையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பல்வேறு திட்டங்களின் வழிச் செயலாற்றி வருகிறது.
-
குடியேற்றவாசிகள் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து லொஸ் ஏஞ்சல்சில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் - வாகனங்கள் தீக்கிரை - ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த தேசிய காவல்படையினரை அழைத்தார் டிரம்ப்
இந்த ஊரை, லாஸ் ஏஞ்சலீஸ், போன்ற ஊர்கள் உலகில் மிகச்சிலவே இருக்கும். அடிக்கடி எரிந்தும் போகின்றது. ஆனாலும் இந்த ஊர் இங்கு வந்து தங்கும் மனிதர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துக் கொண்டேயிருக்கின்றது. இதுவரை அதிபர் ட்ரம்பின் நிர்வாகம் அமெரிக்காவை விட்டு வெளியேற்றிக் கொண்டிருக்கும் சட்டரீதியற்ற குடியேற்றவாசிகளின் நாளாந்த எண்ணிக்கை முன்னைய அதிபர் பைடனின் காலத்தில் வெளியேற்றப்பட்ட அதே அளவு தான் என்பது நம்ப முடியாத ஒரு தகவல். அரச நிர்வாகத்தின் இவ்வளவு அதிவேக நடவடிக்கைகளும் எண்ணிக்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றால் எதற்குத்தான் இந்த ஆள் அம்பு சேனை என்ற கேள்வி வரும். மிக அதிகமாக சட்டரீதியற்று தங்கியிருப்பவர்கள் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றி தான் இருக்கின்றார்கள் என்று இங்கே பிடிக்க வந்திருக்கின்றார்கள் போல. வீட்டருகே ஒரு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பெரிய மைதானம் ஒன்று இருக்கின்றது. பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் வருவார்கள். பல விளையாட்டுகள் ஒரே நேரத்தில் போய்க் கொண்டிருக்கும். வீட்டிலிருந்து நடந்து தான் போவேன். எல் சால்வடோர் போய் வரும் பலன் இருக்கின்றதோ தெரியவில்லை................🤣.
-
பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !
கடஞ்சா, இந்த திரியின் நோக்கம் கீழடி தொல்லியல் ஆய்வுகளையும், அதன் முடிவுகளையும் நிறுவும் அல்லது மறுக்கும் ஒன்றல்ல. மாறாக இது தமிழர் - திராவிடர் என்ற பேதத்தின் மூலம் பல துறைகளில் தமிழுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் பெரும் பணியாற்றிய சிலரை துரோகிகள் என்றும், வஞ்சகர்கள் என்றும், தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள் என்றும் சிலர் அபாண்டமாகக் குற்றம் சுமத்துவதும், வேறு சிலர் அந்தக் குற்றங்களை ஆதாரங்களுடன் நிராகரிப்பதும் ஆகும். கி.ராஜநாராயணன் அவர்களுக்கும் தொல்லியியல் துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அவர் தமிழ் கண்ட ஆகச் சிறந்த கரிசல் காட்டு கதைசொல்லி. அவர் கரிசல் கதைகளை மட்டும் எழுதவில்லை, கரிசல் வட்டார அகராதியையும் அவரே உருவாக்கினார். இன்றும், என்றும் எழுதுபவர்களுக்கு இவர் ஒரு முன்னோடி. ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒருவரால் இப்படியும் எழுத முடியும் என்பது எவ்வளவு ஒரு நம்பிக்கையை இந்த உலகத்திற்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் ராஜ்யசபா உறுப்பினராக அறிவிக்கப்பட்ட கவிஞர் எழுத்தாளர் சல்மா எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கின்றார் என்பதும் இங்கே குறிப்பிடப்படவேண்டும். கி.ராவை ஒரு தமிழர் அல்ல என்றும், அவர் ஒரு கன்னடர் என்று சொல்லப்படுவதையும், அவர் மேல் விழும் பழிகளையுமே நான் மறுதலிக்க முற்படுகின்றேன். கோவில்பட்டியில் பிறந்து, வளர்ந்து, தன் நிலத்துக்கும் தமிழுக்கும் என்றும் நிலைத்து நிற்கும்செயல்களை செய்து முடித்து, அந்த மண்ணிலேயே மறைந்து போன ஒரு ஆசான் அவர். இதுவே தான் மேலே குறிப்பிடப்பட்டிருந்த மற்றவர்களின் நிலைமையும் கூட. இவர்கள் மேல் சுமத்தப்படும் பழிகள் அன்றாட அரசியல் சார்ந்தது. தமிழோ அல்லது வரலாறோ சார்ந்தது அல்ல. மிகவும் குறு நோக்குகள் கொண்டவை. ஐராவதம் மகாதேவனோ அல்லது பாலகிருஷ்ணனோ தொல்லியல் நிபுணர்கள் என்று நான் சொல்லவில்லை. இங்கே தொல்லியல் நிபுணர்கள் அமர்நாத் ராமகிருஷ்ணன் மற்றும் அவருடன் தமிழ்நாட்டு தொல்லியல்துறையில் பணிபுரியும் இன்னும் சிலர். நீங்கள் வழமை போலவே 'மத்தி எப்படி வேலை செய்கின்றது என்று மாநிலத்திற்கு தெரியாது............' என்று மீண்டும் ஆரம்பிக்கப் போகின்றீர்கள். அமர்நாத்தை மத்திய அரசுப் பணியிலிருந்து மாநிலத்திற்கு, மாநிலத்தில் இருந்து மத்திய அரசுப் பணிக்கு, மீண்டும் மத்திய அரசிலிருந்து மாநிலத்திற்கு என்று மாற்றி மாற்றி நியமிக்கும் போது, அமர்நாத் போன்றோர் எதையும் அறியாமலா ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு போய் வந்து கொண்டிருப்பார்கள்? ** தமிழ்நாட்டில் சூடை மீனை மத்தி என்று சொல்லுவார்கள். மத்தி என்னும் சொல்லை பார்க்கும் போதெல்லாம் வலையில் தொங்கிக் கொண்டிருக்கும் சூடை மீன்கள் தான் மனதில் வருகின்றது.
-
சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி
உங்களின் அனுபவம் போலவே எனக்கும் இந்த விடயத்தில் சில அனுபவங்கள், அதே காலப்பகுதியில், கிடைத்திருக்கின்றன, கவிஞரே. மேலும், நீங்கள் சொல்லியிருப்பது போலவே இப்படி ஒரு உலகம் இருந்தது பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஒரே ஊரில் கூட என் நண்பர்கள் பலருக்கும் கூட தெரிந்திருக்கவில்லை. எழுபதாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ஒரு நாள் அயல்வீட்டு அண்ணா ஒருவர் எங்களின் வீட்டு தலைவாசலில் ஏறி நின்று கொண்டு, 'நான் பறக்கின்றேன்................ பறக்கின்றேன்............' என்று சொல்லிக் கொண்டே இருந்தார். ஒரு நாள் முழுவதும். அம்மாவிடம் என்னவென்று கேட்டேன், 'அவன் கறுப்பைத் தின்றிருக்கின்றான். தெளியட்டும்.......... நாலு போட்டால் இனித் தொடவேமாட்டான்...........' என்றார் அம்மா. அந்த அண்ணாவின் தந்தையார் சும்மாவே அவர் வீட்டில் ஆட்களை நொறுக்கித் தள்ளுவார். பின்னர் 80ம் ஆண்டுகளின் முடிவில் மிகவும் பரிதாபமாக முடிந்தது இந்த அண்ணனின் வாழ்க்கை. 70ம் மற்றும் 80ம் ஆண்டுகளின் ஆரம்பங்களில் இந்தப் பொருட்களை வாங்கிச் செல்ல இலங்கையில் தென்பகுதிகளில் இருந்து சில வியாபாரிகள் வருவார்கள். குருணாகல் பகுதியில் இருந்து வரும் இருவரின் முகங்கள் இன்றும் என் மனதில் இருக்கின்றது. 90 - 94ம் ஆண்டுகளில் பேரூந்தில் கண்டியிலிருந்து குருணாகல் போய், அங்கு புகையிரதத்தில் ஏறி வவுனியா போய் வருவேன். குருணாகல் புகையிரத நிலையத்திலிருந்து குருணாகல் பேரூந்து நிலையம் தள்ளியே இருந்தது. நடந்தே போவேன். அப்படி நடக்கும் போது அந்த இருவரும் எங்காவது தென்படுவார்களா என்ற யோசனையும் வந்திருக்கின்றது. இன்னும் சிக்கலான, நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்கும் சிலவும் உண்டு. 80ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் என்று நினைக்கின்றேன். வரும் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்த ஒருவர் இருந்தார். ஒரு இளைஞன் அப்படியே பலிக்கடாவாகிப் போன நிகழ்வுகள் அவை. அப்படியே காணாமல் போனவர்களின் கதைகளும் உண்டு.