Everything posted by ரசோதரன்
-
ஒரு பயணமும் சில கதைகளும்
முகராசி போல................. நீங்களே முன்னர் சொல்லியிருக்கின்றீர்கள்...........🤣. ஆபத்தில்லாதவன் என்று தெரிந்து தான் அருகில் வருகின்றார்களாக்கும்.
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
முண்டி அடித்து நெருங்கி ஒருவர் மேல் ஒருவர் என்று ஒருவர் மேல் அறுவர் என்று வீழ்ந்து இறந்து போன உடல்களில் ஆறு அழகாக இடைவெளி விட்டு அடுக்கப்பட்டு புத்தம் புதிய வெள்ளைகளால் முழுவதும் சுற்றப்பட்டு புதிய நீண்ட மாலைகள் போடப்பட்டு காத்துக் கொண்டிருக்கின்றன வந்து கொண்டிருக்கும் முதல்வரின் அஞ்சலிக்காக. ஏலவே அங்கே வந்தவர்கள் அங்கேயே நின்று அழலாம். நேரே வர முடியாதவர்கள் ட்வீட்டரில் கலங்கலாம் துன்பத்தில் உழலாம் வெடித்துச் சிதறி நொருங்கிப் போகலாம். இது தவிர்க்க முடியாத விபத்து என்றும் ஒருவர் சொல்லலாம். மோட்டுத் தமிழினமே என் சனமே எலிகள் கூட பொறிக்குள் இப்படி போய் மீண்டும் மீண்டும் மாட்டுவதில்லையே...................😭.
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
-
ஒரு பயணமும் சில கதைகளும்
8. படமின்றி அமையாது பயணம் -------------------------------------------------- பயணம் போனால் அங்கங்கே படம் எடுத்து அங்கே இங்கே போடுவது இன்றியமையாதது. ஆனாலும் கடந்த வருடங்களுக்கு இந்த வருடம் மானிடர்களிடையே இந்தப் போக்கு கொஞ்சம் குறைந்தது போலத் தெரிகின்றது. பூமியில் குப்பை, எவரெஸ்டில் குப்பை, விண்வெளியில் குப்பை என்பது போல டிஜிட்டல் குப்பை என்றும் ஒன்று உள்ளதா என்று தெரியவில்லை. இந்த 1 அல்லது 0 என்ற எண்களின் தொகுப்பாக இருக்கும் மொத்தத்தையுமே உடனடியாகவே பூமியில் இருந்து அழிக்க வேண்டிய அவசரம் ஒன்று வந்தால், அதை எப்படிச் செய்யலாம் என்ற யோசனையும் வந்தது. விமானத்தில், இருட்டில், சுற்றிவர எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்க, நான் மட்டும் கொட்டக் கொட்ட முழித்திருந்தால், இப்படியான யோசனைகள் வரத்தான் செய்யும். வேற்றுக் கிரகவாசிகளையும், என்னுடைய டிஜிட்டல் குப்பை யோசனையையும் கலந்து ஒரு கதை வந்தால், அது இயக்குனர் ஸ்பீல்பேர்க்குக்கு அடுத்த ஒரு படத்திற்கு ஒரு உதவியாகக் கூட அமையலாம். இந்தியாவில் சமீபத்தில் நடந்த விமான விபத்து பற்றியும் ஒரு யோசனை வந்தது. விசாரணையின் முடிவு என்னவானது என்று தெரியவில்லை. ஒரு விமானியின் மேல் குற்றம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சிங்கம் மற்றும் பல காட்டு மிருகங்கள் தங்களின் இறுதி முடிவும், அந்த நாளும் தெரிந்தவுடன், கூட்டத்தை விட்டு தனியே போய் விடுமாம். அப்படியே தனியே எங்கோ போய், அவை தங்கள் வாழ்க்கைகளை தனியே முடித்துக் கொள்ளுமாம். பல வருடங்களின் முன் ஒரு நாள் காலையில் இங்கு வீட்டின் பின் வளவுக்குள் நிற்கும் கொய்யா மரமொன்றின் அடியில் ஒரு கறுப்பு பூனை படுத்திருந்தது. நான் அதன் அருகே போய்ப் பார்த்தேன். அது அசையாமல் கண்ணை மட்டும் மெதுவாகத் திறந்து பார்த்தது. நான் அதை ஒன்றும் செய்யவில்லை. பின்னர் மனைவியும் அதைப் பார்த்தார். என்ன, பூனை ஒன்று அசையாமல் படுத்திருக்குதே என்றார். இன்று அல்லது நாளை அதன் காலம் முடியப் போகுது போல, அதை அப்படியே விட்டு விடுங்கள் என்றேன். அடுத்த நாள் காலை அதன் காலம் முடிந்திருந்தது. அது ஏன் தேடி இங்கே வந்தது என்று தெரியவில்லை. அந்த இந்திய விமானியும் தன் முடிவை முன்னரே அறிந்திருந்தார் என்றால், அவர் மட்டும் தனியே எங்காவது போயிருந்திருக்கலாம். இப்படியே இருந்தால் 14 மணி நேரப் பயணத்தில் 14 ஆயிரம் யோசனைகள் வரும், அதனால் ஏதாவது சில படங்களை பார்த்தே ஆக வேண்டும் என்று சின்னத்திரையில் தேடினேன். 'Nebraska (நெப்ராஸ்கா)' என்ற படத்தை பற்றிய சிறிய விவரம் வித்தியாசமாக இருந்தது. 2013 ம் ஆண்டில் வெளியான அது ஒரு கறுப்பு - வெள்ளை படம். நெப்ராஸ்கா என்றவுடன் மனதில் வரும் பெயர் Warren Buffett. உலகப் பணக்காரராக மாறி மாறி வந்து போகின்றவர்களில் இவரும் ஒருவர். இப்பொழுது 95 வயது. நெப்ராஸ்காவிலிலேயே வசிக்கின்றார். முன்னர் அவரிடம் அலைபேசி இருக்கவில்லை என்றார்கள். இப்பொழுதும் இருக்கின்றதா என்று தெரியவில்லை.இவரை விட இவரின் தனிப்பட்ட செயலாளர் அதிக வரிகள் கட்டுவதாகச் சொல்லி, அமெரிக்காவின் வரி முறைமையை கேள்விக்கு உண்டாக்குபவர்களும் உண்டு. இவரின் வீடு கூட ஒரு சிறு ஊரில் இருக்கும் சாதாரண ஒரு சிறு வீடாகவே படங்களில் இருந்தது. அவருக்கு ஒரு தனிப்பட்ட செயலாளரும், பங்குச் சந்தையில் பங்குகளும் உண்டு என்பதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், என் வாழ்க்கையும் அவர் வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கின்றது. நான் அவரை விட அதிகமாக அமெரிக்க அரசுக்கு வரி கொடுத்துக் கொண்டிருக்கின்றேன் போல. நெப்ராஸ்கா படம் போல நான் சில படங்களை முன்னரேயே பார்த்திருக்கின்றேன். ஒரு மிகவும் வயதான தந்தையும், மகனும் ஒரு நீண்ட பிரயாணம் போவதே கதை. படத்தின் ஆரம்பத்தில் தந்தைக்கும், மகனுக்கும், குடும்பத்துக்கும் இடையே மன விலகல்கள், மனஸ்தாபங்கள் என்பன இருக்கும். முதலில் மகன் தந்தையுடன் பயணம் போக மறுப்பார். பின்னர் வேறு வழியின்றி போவார். வழி வழியே நிகழும் சில நிகழ்வுகளால் தந்தையை மகனும், மகனை தந்தையும் புரிந்துகொள்வார்கள். இப்படியான முன்னர் பார்த்த ஒரு படத்தில் ஒரு தந்தையும் மகனும் பிரான்ஸிலிருந்து மெக்காவிற்கு போகின்றார்கள். இறுதியில் மெக்காவில் தந்தை இறந்து போகின்றார். நெப்ராஸ்காவில் தந்தை இறக்கவில்லை, ஆனால் இப்படியான ஒரு கதைக்கு இப்படியான சில நிகழ்வுகள் இருந்தே ஆக வேண்டும் என்பது போல காட்சிகள் வந்து கொண்டிருந்தன. படம் பரவாயில்லாமல் இருந்தது. சில காட்சிகளில் நடிகர்கள் நன்றாகவே ஒன்றிப் போய் இருந்தார்கள். சில இடங்களில் ஒரு செயற்கைத்தனம் இருந்தது போலவும் இருந்தது. சில நாட்களின் பின்னர் இந்தப் படத்தை பற்றிய விபரத்தை இணையத்தில் தேடிப்பார்த்தேன். தூக்கி வாரிப் போட்டது என்று தான் சொல்லவேண்டும். இந்தப் படம் ஐந்து ஆஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றது. கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்ககான விருது இந்தப் படத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும் பற்பல விருதுகள் உலகெங்கும். நான் தான் படத்தை சரியாகப் பார்க்கவில்லை போல. எனக்குள்ளும் ஒரு புளூ சட்டை மாறன் தூங்கிக் கொண்டிருக்கின்றார், அவர் அன்று விமானப் பயணத்தில் என்னுடன் சேர்ந்து முழித்து இருந்து இந்தப் படத்தை பார்த்திருக்கின்றார் போல. அடுத்த படமாக மிகவும் பிரபலமான, விருதுகள் வாங்கிய 'லிங்கன்' படத்தை தெரிவுசெய்தேன். நல்ல படம், சிறந்த இயக்குனர், பல விருதுகள் வாங்கிய படம் என்று எனக்கு நானே சொல்லி, புளூ சட்டை மாறனை இல்லாமல் ஆக்கினேன். படம் நன்றாகவே இருந்தது. சிரிக்காதீர்கள்.......... உண்மையிலேயே நல்ல ஒரு படம். ஆபிரகாம் லிங்கன் மீது பெரும் விருப்பம் எப்போதும் உண்டு. அவர் தெருவிளக்கில் படித்தார் என்ற தகவலும் (உண்மையோ பொய்யோ), அவரது கனிந்த முகவெட்டும், அதனுடன் ஒட்டிப் போகும் தாடியும் அவர் உண்மையில் என்ன செய்தார் என்பதையும் மீறி அவர் மீது மிக நல்லதொரு அபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருந்தது. லிங்கனாக நடித்திருந்தவர் அபாரம், நான் நினைத்திருந்தத லிங்கனையே கண் முன் நிறுத்தினார். இக்கட்டான சூழ்நிலைகளில் லிங்கன் சின்னச் சின்ன கதைகள் சொல்லுகின்றார். நிகழ்வுகளையே கதையாகச் சொல்லுகின்றார். அந்தக் கதைகளில் சிரிப்பும் இழையோடுகின்றது. எந்தச் சுழ்நிலையையும் தாண்டி, செய்ய வேண்டியவற்றை செய்து முடிக்கின்றார். ஒரு தலைவன் எனப்படுபவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மனம் இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றது. இறுதியில் சுட்டுக் கொல்லப்படுகின்றார். நல்ல தலைவர்கள் இப்படித்தான் இறக்க வேண்டும் போலவும். இனிமேல் இந்தப் பயணத்தில் எந்த படமும் பார்க்க முடியாது. லிங்கன் மனதை விட்டு இப்போதைக்கு போகமாட்டார். எப்படியோ நேரம் ஓடி, ஒரு காலத்தில் லிங்கனின் நாடாக இருந்த நாட்டில் விமானம் இறங்கியது. (முற்றும்.) ** அனபான கள நட்புகளுக்கும், உறவுகளுக்கும் மிக்க நன்றி. உங்களின் ஆதரவும், தொடர் வாசிப்பும், கருத்துகளுமே என்னை தொடர்ந்து எழுத வைத்தது.....................🙏.
- PlaneLanding.jpg
-
மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகள்; 4வது இடத்தில் இலங்கை
நம்பியோவில் எவரும் தரவுகளை பதியவும், மாற்றவும் முடியும் போல......... இலங்கையை இன்னும் கீழே இறக்கி விடவும் முடியும் போல..............🤣. https://www.numbeo.com/quality-of-life/rankings_by_country.jsp Rank Country Quality of Life Index Purchasing Power Index Safety Index Health Care Index Cost of Living Index Property Price to Income Ratio Traffic Commute Time Index Pollution Index Climate Index 1 Luxembourg 218.2 183.1 66 75.1 73.5 9.6 27 22.9 82.6 2 Netherlands 216.5 144.5 74.2 80.6 68.1 7.4 22.7 20.9 86.8 3 Denmark 215.1 152.7 74 78.3 74.1 6.1 27.7 20.9 81.2 4 Oman 215.1 170.9 81.4 63.3 39.3 2.8 24.3 36.4 71.3 5 Switzerland 210.9 183.5 73.3 70.8 106.8 10.7 34 24 80.6 6 Finland 208.3 142.9 73.5 77.4 64.5 7.8 25.1 11.7 54.4 7 Norway 199.2 133.3 67.2 75.8 78.9 8.5 26.3 18.3 70.9 8 Iceland 198 124.3 74.2 67.9 94.5 7.7 21.2 16.7 68.8 9 Austria 197.7 122 71.7 78.5 67.6 11.8 23.2 20.6 76.6 10 Germany 195.2 144.3 60.4 71.7 64.7 8.5 29.6 28.8 82.8 11 Australia 195.1 148.7 52.6 73.1 63 8.4 37.4 26.9 94.2 12 New Zealand 194.7 140.5 51.5 68.1 59.3 7.6 32.3 26 97.3 13 Sweden 192.2 144.7 51.9 68.6 62.8 8.2 28.9 17.6 64.7 14 United States 192.1 163.4 50.8 67.5 64.8 3.4 33.1 36.9 76.1 15 Estonia 189.8 91.5 76.5 74.8 55.9 11.1 21.4 16.9 71.2 16 Qatar 189.4 177.6 84.6 73.5 46.9 6.2 29 60 36 17 Japan 188.8 129.4 77.3 80.2 48.9 11.3 40.1 38.2 84.1 18 Spain 187.2 110.7 62.8 77.3 48.6 8.6 26.7 35.3 92.7 19 Slovenia 182.4 92.6 75.6 66.3 50.6 13.4 25.2 22.2 80.6 20 Croatia 181.7 98.1 74.6 64.8 48.6 12.1 25.2 31.6 89.9 21 Lithuania 178.8 92.9 67 74.7 48.3 11.1 23.6 25.9 69.9 22 United Kingdom 177.2 131.7 51.6 72.5 64.2 8.7 34.8 40.7 88.1 23 Czech Republic 176.3 97.6 73.4 75.5 48.2 13.6 28.9 34.6 78.7 24 United Arab Emirates 174.2 131.6 85.2 70.7 53.4 8.3 36.1 48.2 43.4 25 Saudi Arabia 173.7 155 76.3 61.9 41.5 3.5 30.2 62.4 39.3 26 Belgium 173.7 131 50.5 75.8 63.6 6.6 34.5 49.2 86.4 27 Canada 170.5 123.6 54.2 68.6 60.7 9.4 33.5 29.8 55.9 28 Ireland 169.6 122.2 51.4 51.5 66.6 6.8 37.5 34.9 89.8 29 France 169.5 122.8 44.4 77.2 64.4 9.9 34.4 43.7 89.9 30 Israel 169.5 127.8 68.3 73.4 69.6 13.2 36.8 56.7 93.8 31 Portugal 169.1 67.7 67.6 72 45.8 14.6 28.5 29.5 97.7 32 Latvia 168.1 83.6 63.4 62.9 49 8.6 28.6 30.1 76.8 33 Kuwait 167.9 197.2 67.3 58.4 40.4 7.1 34.7 69.4 20.2 34 Cyprus 160.4 90.6 67.3 56.5 55.2 8.2 25.1 55.4 93.3 35 Taiwan 160.2 108.2 83 87 49.4 23.5 32.4 64.1 83.9 36 Slovakia 159.4 83.3 69 58.2 46.7 13.2 27.4 37.1 73.9 37 Poland 157.2 103.3 71.3 58 43.7 10.9 32.1 55.3 75.6 38 Singapore 156.7 108 77.4 71.8 85.3 22.4 41 32.3 57.5 39 Puerto Rico 156.6 122.6 38.7 59.1 59.8 5 32.6 47.9 71.2 40 Italy 154.4 96 52.8 64.9 57.2 9 32.1 53.4 90.1 41 South Africa 153.8 118.3 25.4 64 32 3.3 38.5 56.7 95.4 42 South Korea 153.5 122.2 73.1 82.8 62.4 23.4 39.7 57.5 68.5 43 Bulgaria 148.3 88.2 64.1 58.2 39.3 9.1 29.1 62.8 81.5 44 Hungary 147.1 81.4 66.3 54.1 42.3 13.6 35.5 46.7 79.3 45 Romania 145.1 81.7 67.4 56.8 38.3 10.4 33 58.2 76.3 46 Greece 140.4 66.6 53.6 58.5 51 13.1 32.8 49.4 93.1 47 Hong Kong (China) 139 115.5 78.5 66.5 72.2 28.5 41.8 66.5 83.6 48 Uruguay 137.2 55.9 47.7 68.5 51.3 15.2 40 43.3 98.5 49 Bosnia And Herzegovina 136.8 68.4 58.8 54.9 35.7 13.2 25.9 59.7 82.9 50 Malaysia 136.7 85.9 51.4 70.7 31.1 8.9 37 60.9 58.3 51 Malta 136.1 86.4 57 52.8 53.1 10.8 28.2 75.7 97.8 52 Belarus 134.8 67.4 50.9 49.3 25.3 12.6 31.3 44.5 69.3 53 Turkey 134 60.4 58.6 71.3 38.2 9.7 43.7 64.1 90.2 54 Ecuador 130.8 53.1 37.4 78 29.3 11 37.1 59.1 94.5 55 Costa Rica 130.2 56.6 46.3 65.1 50.3 9.9 60 41.6 93.1 56 Georgia 129.1 46.7 74 56.4 31.2 12 37.1 67.6 88.5 57 China 127.7 90.4 76.5 68.7 29.4 25.2 38.7 76.7 73.6 58 Mexico 127.4 52.6 46.8 72.7 37.6 11.6 39.2 58.3 83.3 59 Serbia 127.2 65.4 62.8 52.3 40.9 15.8 30.5 65.9 83.2 60 Jordan 126.9 57.4 60.2 65.5 36.7 7.5 40.3 77.1 91.2 61 Panama 125.6 49.3 57.3 61.2 43.3 11 35.2 55.6 68.2 62 India 124.4 85.5 55.8 65.5 19 11.7 46.5 72.8 64.5 63 North Macedonia 123.5 66.5 58.6 55.3 33.6 12.5 24.5 79.2 79.2 64 Argentina 122.1 49.3 36.7 67.9 38.3 15.2 43.8 50.8 94.9 65 Armenia 120.2 42.7 77.6 60 40.5 20.9 29.3 61.8 63.4 66 Tunisia 119 38.2 55 57.2 27.5 12 33.7 69.7 94.1 67 Ukraine 117.8 52.3 53 55.8 26.1 12.9 37.8 62.2 71.9 68 Brazil 117.8 47.6 35.8 59.2 28.6 15.1 40.5 52.8 91.8 69 Azerbaijan 114.4 45.1 68.2 49.1 29.3 16.8 40.2 72 91.4 70 Morocco 114.1 45.5 52.5 47 30 13.5 35.2 68.4 91.7 71 Russia 113.5 64.3 61.6 61.7 36.1 15.5 43.4 58.5 36.3 72 Chile 112.1 58.1 39.5 63.7 35.8 15 36.2 77.4 95.6 73 Thailand 110.2 53.3 63.2 77.3 35.3 23.8 38.1 75.6 69.3 74 Kazakhstan 108.2 56.5 54.4 60.7 26.6 9.7 35.8 72.9 38.8 75 Colombia 106.3 42 39 68.9 28 17.4 46.7 62.2 82.3 76 Pakistan 105.7 34 57.6 59.4 17.7 14.3 38.3 73.2 70.8 77 Albania 104.1 46.3 55.8 48.2 43.7 16.3 36.3 77.3 86.3 78 Lebanon 102.8 40.3 53.1 63.7 40.5 13.8 38.5 89.6 94.7 79 Indonesia 101.6 34.1 53.9 61.2 24.6 16.3 43.1 68.1 66.7 80 Philippines 98.1 41.3 56.6 66.8 29.5 24.3 41.6 72.5 69 81 Vietnam 96.6 47.2 59.6 61.9 25.9 27.3 29.4 83.8 71.1 82 Kenya 95.4 36.9 44.2 62.2 28.5 20.7 51.6 69 87.1 83 Peru 90.7 49.1 33.3 56.7 30 16.9 49.8 81.9 93.3 84 Iran 86.7 32.8 49.5 52.7 22.7 18.7 46.8 75.3 66.9 85 Egypt 83.2 23.1 53.1 47.5 19.6 20.9 47.7 82.7 90.8 86 Sri Lanka 82.8 20.9 57.7 71.4 32.5 35.3 54.2 58 64.1 87 Bangladesh 77 39.3 38.5 41.7 21.2 11.5 56.5 85.6 72.9 88 Venezuela 73.7 18.9 19.5 39.6 35.6 16.1 32.6 73.7 77.1 89 Nigeria 15.6 10.6 33.9 49.1 25.7 53.4 65.3 87.9 66.3
-
ஒரு பயணமும் சில கதைகளும்
❤️............... மிக்க நன்றி பாஞ்ச் ஐயா. யாழில் உங்களின் எழுத்து ஒரு தனிரகம், அவற்றை நான் ரசித்து வாசிப்பேன்..........👍.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
🤣.................. அல்வாயனின் பதிவைப் பார்த்த பின், ஈழப்பிரியன் அண்ணாவிற்கு நித்திரை நன்றாகவே வந்திருக்கும் என்று நினைக்கின்றேன்................🤣. அந்த அடையாள அட்டையால் 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்.............' என்று அன்று இரண்டு கன்னங்களையும் காட்டிக் கொண்டே பல இடங்களில் நிற்க வேண்டி இருந்தது. இரண்டு கன்னங்களையும் காட்டியதற்காக பரலோகம் போகும் போது, பிதா என்னை அதிகமாக ஆசீர்வதிப்பார்............. வல்வெட்டித்துறை, பொலிகண்டி, கம்பர்மலை, தொண்டைமனாறு, இவை எல்லாம் ஒரே கணக்கிலேயே வரும்............ இவர்களில் எவரும் தப்பவே முடியாது அந்த நாட்களில். 'பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை..............' என்ற நடைப்பயணம் சில வருடங்களின் முன் நடந்த போது, மீண்டும் பொலிகண்டியா என்று மெல்லிய சிரிப்பு வந்தது.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
🤣................ எதை எதையோ எல்லாம் பாடசாலையிலும், பின்னரும் படித்து மனனம் செய்த பின், இப்போதெல்லாம் இப்படியான சில வரிகள் தான் சட்டென்று ஞாபகத்திற்கு வருகின்றது...............
-
ஒரு பயணமும் சில கதைகளும்
7. சிரமத்திற்கு மன்னிக்கவும் -------------------------------------------- சிட்னியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸீக்கு திரும்பி வரும் விமானத்தின் புறப்படும் நேரம் காலை ஒன்பது மணி என்றிருந்தது. கிட்டத்தட்ட 14 மணி நேரங்கள் பயணம். இதை விட விமானத்தில் பறப்பதற்கு மோசமான ஒரு நேரத்தை கண்டுபிடிப்பது கடினம். காலைத் தூக்கம் முடிந்து, எழும்பி விமான நிலையம் வந்தால், அதற்குப் பின் பறக்கும் நீண்ட பயணத்தில் தூக்கம் எங்கே வரப் போகின்றது. ஆனாலும் விமானத்தில் விளக்குகளை அணைத்து இருட்டாக்கப் போகின்றார்கள். பலரும் கண்ணை ஒரு மறைப்பால் மறைத்து, மெல்லிய மற்றும் சற்றே கடுமையான சத்தங்களுடன் தூங்கப் போகின்றார்கள். விமானப் பணிப்பெண்கள் இடையிடையே வந்து போகப் போகின்றார்கள். நான் முழித்தே இருக்கப் போகின்றேன் என்பதும் விளங்கியது. எத்தனையோ வருடங்களின் முன் எமிரேட்ஸ் விமானத்தில் இலங்கைக்கு போய்க் கொண்டிருக்கும் போது, விமானத்தில் கடைசியாக படம் பார்த்திருக்கின்றேன். அதன் பின்னர், அந்தப் படத்தால், விமானத்தில் படம் பார்ப்பதில் ஒரு பலத்த ஒவ்வாமை ஏற்பட்டு, பயணம் முழுவதும் முன்னால் இருக்கும் கறுப்புத் திரையே பரவாயில்லை என்ற மனநிலைக்கு வந்திருந்தேன். விமானப் பயணத்தில் கடைசியாகப் பார்த்த அந்தப் படம் 'தெறி'. சில நண்பர்கள் ஏற்கனவே அந்தப் படத்தை சிலாகித்து சொல்லியிருந்தார்கள். அந்த நண்பர்களின் வரலாறு தெரிந்த நான் தான் கவனமாக இருந்திருக்கவேண்டும். ஆடம்பரமான ஒரு கடைத் தொகுதிக்கும், மலிவு விலை கடைத் தொகுதிக்கும் இருக்கும் வித்தியாசங்கள் என்று சிலவற்றை சொல்லிக் கொள்ளலாம். பொருட்களின் தரத்தில் இருக்கும் வேறுபாடு என்பது மிகப் பொதுவாக சொல்லப்படும் ஒரு வித்தியாசம். உதாரணமாக, அதிக விலையில் விற்கும் இடங்களில் விற்கப்படுபவை சாயம் போகாத, கசங்காத, நீண்டகாலம் நிற்கும் உடுப்புகள் என்று சொல்வார்கள். இங்கு அமெரிக்காவில் தொழில்நுட்பத்துறையில், வேறு பல துறைகளிலும் கூட, அணியும் ஆடைகளுக்கு எந்த மதிப்புமே கிடையாது. ஏதோ ஒன்றை போட்டுக் கொண்டு அலுவலகம் போனால் போதும். ஆள் நூறு, ஆடை பூச்சியம். சாயம் இருந்தாலும் போடலாம், சாயம் இழந்தாலும் போடலாம். போடும் உடுப்பு சாயம் போய், கசங்கி, அத்துடன் தலையையும் இழுக்காமல் அலுவலகம் போனால், ஆள் ஒரு அறிவுஜீவி போல என்று முதல் தோற்றத்தில் நம்புகின்றவர்களும் உண்டு. ஆனால் எது உண்மையோ, அது போகப் போக வெளியே வந்துவிடும். குறைவாகக் கதைப்பதும், கதைத்துக் கொண்டே நடுநடுவே அடிக்கடி கூரையை நிமிர்ந்து பார்ப்பதும் அறிவுஜீவி என்னும் பிம்பத்தை மேலும் சில காலத்துக்கு நீட்ட உதவலாம். இன்னொரு பெரிய வித்தியாசம் என்று சொல்லப்படுபவது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் இருக்கும் வேறுபாடுகள் என்கின்றனர். மலிவு விலைக் கடைகள் ஒரு அரச திணைக்களம் போல செயல்படுவார்கள். தியானத்தில் இருப்பவர்கள் போலக் கூட அங்கே சிலர் இருப்பார்கள். லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். உலகில் உள்ள மோசமான விமான நிலையங்கள் என்ற பட்டியலில் இது இருக்கும் என்றே நினைக்கின்றேன். ஆனாலும் சிட்னி விமான நிலையத்தில் பொதிகளைப் போடும் இடம் 'வேற லெவல்' என்றே சொல்லவேண்டும். சிட்னி விமான நிலையத்தின் அந்தப் பகுதிக்கு அரச திணைக்களங்களே பல மடங்கு பரவாயில்லை என்று சொல்லலாம். வரிசையில் காத்திருக்கும் ஒருவரின் அலுவல்கள் முடிவதற்கே பத்து அல்லது இருபது நிமிடங்கள் போய்விடுகின்றது. ஐந்து அல்லது ஆறு பேர்களே எங்களுக்கு முன்னால் நின்றார்கள். ஆனால் கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் அங்கே போனது. இதுவே வேறொரு விமான நிலையம் என்றால் ஒரு பத்து நிமிடங்களில் முடித்திருப்பார்கள். லாஸ் ஏஞ்சலீஸில் பொதிகளை எங்கள் கண் முன்னாலேயே தூக்கித் தூக்கி எறிந்திருப்பார்கள். பொதியின் உள்ளே இருக்கும் மஞ்சள் தூளும், மிளகாய் தூளும் கலந்து, நல்ல கறித்தூள் கிடைப்பதற்கு கூட சாத்தியங்கள் உண்டு. விமான நிலையத்தில் முற்றிலும் எழுந்தமானமாகவே ஓரிருவரை முழுச் சோதனைக்கு தெரிவு செய்கின்றார்கள் என்கின்றனர். அப்படித் தெரிவு செய்யப்படுபவர்களைப் பார்த்தால் அவர்கள் சொல்லும் எழுந்தமானம் பொய்யென்றே தெரியும். ஒரு கூட்டத்தில் எவர் எவரையெல்லாம் தெரிவு செய்வார்கள் என்றே சொல்லிவிடலாம். என்னைத் தெரிவு செய்தார்கள். காலணியை ஆராய்ந்தார்கள். நான் சிட்னிக்கு ஒரே ஒரு காலணியை மட்டுமே எடுத்துப் போயிருந்தேன். அங்கு வீட்டுக்கு அருகில் இருக்கும் கால்பந்தாட்ட மைதானத்தில் அதே காலணியுடனேயே அநேக நாட்களில் ஓடியும் இருக்கின்றேன். திரும்பி வரும் பயணத்திற்கு முந்திய நாளில் கூட, பெரிய மழை ஒன்றின் பின் வந்த சிறிய மழைக்குள் ஓடியிருந்தேன். காலணி கொஞ்சம் உப்பியே இருந்தது. பின்னர் கைப் பொதியை திறந்து பார்த்தார்கள். 'எல்லாமே சாக்லெட்................' என்றார்கள். 'இங்கிருந்து வேறு என்ன கொண்டு போவது என்று தெரியவில்லை......................' என்றேன். இறுதியாக 'சிரமத்துக்கு மன்னிக்கவும், சுகமாக போய் வீடு சேருங்கள்.............' என்று சொன்னார்கள். எத்தனை தடவை தான் சிரமத்துக்கு மன்னிப்பது. 9/11 அனர்த்தம் நிகழ்ந்த அடுத்த அடுத்த நாட்களில் ஒரு நாள். வேலையில் மதியம் சாப்பிட்டு விட்டு, வழமை போலவே நடந்து கொண்டிருந்தேன். வீதியைக் கடந்து அடுத்த பக்கம் வந்தால் கடற்கரைக்கு செல்லும் ஒரு குறுக்கு வீதி இருக்கின்றது. அந்தக் குறுக்கு வீதியில் கடற்கரைக்கு செல்லும் முன்பே ஒரு சிறிய மேம்பாலம் உள்ளது. மேம்பாலத்தின் கீழே இன்னொரு வீதி கடற்கரையை ஒட்டிச் செல்லுகின்றது. நான் அந்த மேம்பாலத்தில் நடந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று சில போலீஸ் வாகனங்கள் என்னை மறித்து எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்து நின்றன. 'எங்கே போகின்றீகள்...............' 'கடற்கரைக்கு...................' 'ஏன்.........................' 'தினமும் மதியம் போவேன்..............' 'எங்கே வேலை செய்கின்றீர்கள்..............' அங்கிருந்து பார்க்கும் போதே நான் வேலை செய்யும் அந்த உயர்ந்த கட்டிடம் தெரியும். அதைக் காட்டினேன். அடையாள அட்டை ஏதாவது இருக்கின்றதா என்றார்கள். கொடுத்தேன். ஒருவர் அதை எடுத்துக் கொண்டு அவர்களின் ஒரு வாகனத்துக்குப் போனார். சிறிது நேரத்தில் திரும்பி வந்தார். சிரமத்திற்கு மன்னிக்கவும், நீங்கள் போகலாம் என்றார்கள். அங்கே அப்படியே நின்று கொண்டிருந்தேன். முன்னர் சிறிது காலம் திருகோணமலையில் தங்கியிருந்த போது, ஒரு நாள் அங்கே தெருவில் நாங்கள் பலர் நின்று கதைத்துக் கொண்டிருந்தோம். சற்றுத் தள்ளி வேறு சிலரும் கூட்டமாக நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வழியால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இராணுவத்தினர் அவர்களின் மோட்டார் சைக்கிளை சடாரென்று நிற்பாட்டி விட்டு, அருகே கதைத்துக் கொண்டு நின்ற ஒருவரை ஏதோ கேட்டு விட்டு, இரு கன்னங்களிலும் அறைந்து விட்டுப் போனார்கள். கையாலாகாத நிலையின் ஒரு உச்சத்தில் நாங்கள் அங்கே நின்று கொண்டிருந்தோம். இங்கு நான் மேம்பாலத்தின் மேல் அப்படியே நிற்பதைப் பார்த்த ஒரு காவலர் திரும்பி வந்தார். 'ஆர் யு ஓகே...............' 'ம்............ ஒன்றுமில்லை.............' 'நான் மிகவும் வருந்துகின்றேன்............' என்றவர், யாரோ ஒருவர் அவர்களின் காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் அழைத்து, மேம்பாலத்தின் மேலே ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நிற்கின்றார் என்று அவசரத் தகவல் தெரிவித்ததாலேயே தாங்கள் இங்கே வந்ததாகச் சொன்னார். இது என்ன புதிதா எங்களுக்கு. (தொடரும்.......................)
- SorryFor.jpg
-
ஒரு பயணமும் சில கதைகளும்
🤣............... பலரும் வசதியாகவும், பாதுகாப்பாகவும் ஒரு இடத்தில் தமது வாழ்க்கைகளை அமைத்தவுடன், அங்கே புதியவர்கள் வந்து சேருவதை விரும்புகின்றார்கள் இல்லை போல............ எந்த ஒரு மக்கள் திரளின் மீதும் அவர்களின் அடையாளத்துடன் ஊடாக சந்தேகங்களை விதைப்பதும், குற்றங்களை சுமத்துவதும் சரியான ஒரு விடயமும் இல்லை என்றும் தோன்றுகின்றது.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
நீங்கள் நாதகவினர் மட்டுமே மேடைகளில் பேசும் கொள்கைகளையும், விடயங்களையும் பட்டியல் இட்டுள்ளீர்கள், புலவர். நீங்கள் சொல்லுவது சரியே. ஆனால் நான் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா அரசியல் கட்சிகளும், பாஜக தவிர, பேசும் விடயங்களை மட்டுமே பட்டியலாக்கினேன். நான் குறிப்பிட்டவை எல்லா தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கும் பொதுவானவை. ஒவ்வொரு கட்சிக்கும் மட்டுமே உரித்தான தனித்தனியான விடங்கள் அல்லது கொள்கைகள், திட்டங்கள் என்று பார்த்தால், அது இன்னொரு நீண்ட பட்டியலாகப் போகும். உதாரணமாக, பாமகவின் வன்னிய மக்களுக்கான 20 வீத உள் ஒதுக்கீடு. தமிழ் நாட்டை இரண்டாகப் பிரிப்பது கூட பாமகவின் இனனொரு கொள்கை மற்றும் திட்டம். விசிகவுக்கும் அவர்களுக்கே மட்டும் உரியதாக சில தனிக் கொள்கைகள் இருக்கும். நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் கட்சியின் கொள்கைக் கையேட்டை வாசித்தால், அங்கும் அவர்களுக்கென்று சில பிரத்தியேக கொள்கைகளும், திட்டங்களும் இருக்கும். தலைநகரை சென்னையிலிருந்து மதுரைக்கு மாற்றுவது கூட ஏதோ ஒரு கட்சியின் கொள்கையாக, திட்டமாக இருக்கக்கூடும். ஆதரவு - எதிர் என்னும் நிலையைக் கடந்து, சாத்தியங்களையும் குறுகிய மற்றும் நீண்டகால விளைவுகளையும் நான் பார்க்க முற்படுகின்றேன். ஆதரவாக இருப்போர் அவர்களுடைய தரப்பின் எல்லா நடவடிக்கைகளையும் ஆதரிப்பார்கள்; எதிராக இருப்போர் அந்த தரப்பின் எல்லா நடவடிக்கைகளையும் எதிர்ப்பார்கள். இந்த ஒற்றைப்படையான நிலைப்பட்டால் நாங்கள் எங்களின் சுயத்தை கூட இழந்து போகும் அபாயம் உள்ளது. நாதகவின் நீர் மேலாண்மை பற்றிய அறிக்கையை நான் இன்னமும் வாசிக்கவில்லை. அப்படி ஒரு அறிக்கை வந்ததா என்றும் தெரியவில்லை. ஆடு மாடுகள் வளர்க்கும் திட்ட அறிக்கை போல நடைமுறை சாத்தியம் இல்லாத ஒன்றாக இருக்கும் என்பதே இவர்களுடனான என் அனுபவம். தமிழ்நாடு ஒரு நியூசிலாந்தோ அல்லது டென்மார்க்கோ அல்ல. வருடத்தின் பெரும் பகுதியில் அனல் புழுதி பறக்கும் மாவட்டங்களே தமிழ்நாட்டில் அதிகம். இயற்கை விவாசாயம் என்று உலகம் போயிருந்தால், 70ம் ஆண்டுகளின் பின் உலகமே ஒரு கொடிய பஞ்சத்தில் அழிந்திருக்கும். இன்றும் கூட 800 கோடிக்கு மேற்பட்ட உலக மக்களுக்கு தேவையான உணவை நாங்கள் உற்பத்தி செய்யக் கூடியதாக இருப்பதன் பின்னால் இருப்பது மரபணுக்கள் மாற்றப்பட்ட அல்லது அவற்றின் திறனை அதிகரித்த விஞ்ஞான நடவடிக்கைகளே. கோதபாயாவின் ஒரு வருடம் மட்டுமே நீடித்த இயற்கை விவசாயத் திட்டம் முழு இலங்கயையுமே பட்டினிக்குள் தள்ளியதை சமீபத்தில் பார்த்தோமே. தமிழ்த்தேசியத்தை யார் பேசுவது என்றில்லையா............. தன் பிள்ளைகளை ஆங்கிலப் பாடசாலையில் படிப்பித்துக் கொண்டு, தமிழ்த்தேசியம் பேசுவது அடுத்த தலைமுறைக்கு செய்யும் துரோகம் இல்லையா........... இப்படியே ஒவ்வொரு கட்சியினரின் ஒவ்வொரு கொள்கைகளையும், திட்டங்களையும் ஆராய்ந்து பார்க்கமுடியும். அந்த அந்த கட்சிகளின் ஆதரவாளர்கள் அசௌகரியப்பட்டு எதிர்வினை ஆற்றுவார்கள்; எதிர்த்தரப்பினர் கைதட்டுவார்கள். இவை இரண்டையும் தாண்டி, தமிழ்நாடும் அந்த மக்களும் முன்னேற வேண்டும் என்பதே என் விருப்பம்.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
6. பண்ணையாரும் பலரும் ----------------------------------------- 'அமெரிக்கா உங்களுக்குப் பிடித்திருக்கின்றதா.............' என்று கேட்டார் அவர். மிகவும் தயக்கத்துடனேயே கேட்டார். நான் யார் என்று அவருக்கு கைகொடுத்து அறிமுகப்படுத்திய பின்பே கேட்டார். அவர் யார் என்ற விபரங்கள் முன்னமே எனக்கு ஓரளவு சொல்லப்பட்டிருந்தது. இதே கேள்வியை சில சில மாற்றங்களுடன் என்னிடம், தயக்கத்துடன், ஆரம்பிக்கும் நாலாவது மனிதர் இவர். சிட்னியில் ஒரு பல்கலையில் வேலை செய்து கொண்டிருக்கின்றார். 'பிடித்தது, பிடிக்கவில்லை என்றில்லை.............. பழகிவிட்டது. பிள்ளைகளும் அங்கேயே பிறந்து, வளர்ந்து விட்டார்கள்............' என்றேன். அவர் சில பெயர்களைச் சொல்லி, அவர்களின் காணொளிகளை டிக்டாக்கில் பார்த்தது உண்டா என்று கேட்டார். டிக்டாக்கில் இதுவரை நானறிந்து ஒரு காணொளி தன்னும் நான் பார்த்ததில்லை. அதை அப்படியே சொல்லுவது மரியாதை இல்லை என்று நினைத்து, நான் அவை எதுவும் பார்த்ததில்லை என்றேன். அவர்கள் எல்லோரும் அமெரிக்க பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளர்களாகவும், பேராசிரியர்களாகாவும் இருப்பவர்கள் என்றார். அவர் சொல்லிய பல்கலைக் கழகங்களின் பெயர்களை அறிந்திருக்கின்றேன், ஆனால் இந்த டிக்டாக்கில் வரும் பேராசிரியர்களில் எவரையும் நான் கேள்விப்பட்டது இல்லை. அமெரிக்கா செய்து கொண்டிருப்பது சுத்தமான அயோக்கியத்தனம் என்பதே அவருடைய உரையாடலின் சாரம். இதற்கு முன்னர் அமெரிக்கா பிடித்திருக்கின்றதா என்று கேட்ட மற்ற மூவரும் கூட அதே சாரத்தையே சொல்லியிருந்தார்கள். மற்ற மூவரும் அமெரிக்கா அழிந்து விடும் என்றும் சொல்லியிருந்தார்கள். ஆனால் அமெரிக்கா அழிந்தால் அது உலகத்திற்கு பெரும் பாதிப்பாக முடியும் என்று இவர் சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய தமிழ் வழக்கு மலையக மக்களின் தமிழ் போன்று இருந்தது. இடையிடையே வந்து போகும் சுத்தமான முழு ஆங்கில வசனங்கள் அவர் நிச்சயம் ஆங்கில வழியில் கல்வி கற்ற ஒருவர் என்பதைக் காட்டியது. ரஷ்யாவின் நியாயங்களைச் சொன்னார். சீனாவின் முன்னேற்றங்களை வரிசைப்படுத்தினார். இந்தியா வல்லரசாகும் என்றார். நான் ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்காக 25 வருடங்களின் முன்னேயே விண்ணப்பித்து இருந்தேன் என்று இடையில் சொன்னேன். அந்தச் சூழ்நிலையை இலகுவாக்க இப்படிச் சொல்வது எனக்கு ஒரு தேவையாக இருந்தது. நாங்கள் உண்மையிலேயே ஒரு காலத்தில் விண்ணப்பித்தும் இருந்தோம். அதன் பின்னர் அவர் கொஞ்சம் தணிந்தார் என்று தான் சொல்லவேண்டும். அவர் மலேசியாவில் இருந்து ஆஸ்திரேலியாவில் படிக்க வந்து, மீண்டும் மலேசியா போய், பின்னர் மீண்டும் ஆஸ்திரேலியா வந்து, நிரந்தரமாகக் குடியேறியதாகச் சொன்னார். பூர்வீகம் யாழ்ப்பாணம். 'புயலிலே ஒரு தோணி' வாசித்திருக்கின்றீர்களா என்று கேட்டேன். அது என்ன என்பது போல பார்த்தார். நல்ல ஒரு தமிழ் நாவல், கதையின் பெரும் பகுதி மலேசியாவிலேயே இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் நடக்கின்றது என்றேன். இப்பொழுது அவர் பார்வையில் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. இந்த ஊர் நூலகத்திலேயே அந்த நாவல் உள்ளது என்றேன். அமெரிக்கா மீதும், அதிபர் ட்ரம்பின் அதிரடியான நடவடிக்கைகளின் மீதும் கடுமையான ஒரு பார்வை உலகெங்கும் எம் மக்கள் எல்லோரிடமும் இருக்கின்றது போல. கனடாவிலும் நான் இதே போன்ற கடுமையான எதிர்வினைகளைக் கேட்டிருக்கின்றேன். இதில் உள்ள ஒரு முரண்பாடு என்னவென்றால், எனக்கு தெரிந்து இன்று எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கும் பலரும் அமெரிக்க தேர்தலின் முன்னர் அதிபர் ட்ரம்பிற்கு ஆதரவாகவும், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராகவும் கருத்துகள் சொல்லிக் கொண்டிருந்தவர்களே. இவர்கள் என்ன மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிந்தார்களோ தெரியவில்லை, ஆனால் இன்றைய அமெரிக்க அதிபரால் மிகவும் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்பது தெரிந்தது. நான் தனிப்பட்ட ரீதியில் ஏமாற்றப்படவில்லை. அவர் பதவியேற்ற அன்றே நான்கு வருடங்களிற்கும் தயாராகவே இருந்தேன். பொதுவாக பலவீனமானவர்களே மிகவும் பலசாலி போன்ற ஒரு தோற்றத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படியானவர்களை மக்கள் ஏன் தலைவர்களாக தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பதன் அடிப்படையே அது தான் போல. கூட்டமாக அன்றாடம் தலைப்பு செய்திகளை உண்டாக்குகின்றார்கள். வெற்றி, வெற்றி என்று முழங்குகின்றார்கள். பின்னர் அந்தச் செய்தி அப்படியே கைவிடப்படுகின்றது. அடுத்த நாள் வரப் போகின்ற புதியதொரு தலைப்பு செய்திக்கு தயாராகின்றார்கள். சிட்னியின் அந்த புறநகர்ப் பகுதியில் பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் புதிதாக, கடந்த ஐந்து வருடங்களுக்குள், கட்டப்பட்டிருக்கின்றன. அவற்றில் குடியிருப்பவர்களில் நூறு வீதமானவர்களும் இந்திய மக்கள் போன்றே தெரிகின்றது. இவர்கள் கடந்த ஐந்து வருடங்களுக்குள் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வந்தவர்கள் போல. அங்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டிக் கொள்வதற்கு அரசாங்கம் கொடுக்கும் அனுமதி தனித்தனி வீடுகளை ஒரு தெருவிலும், தெருவின் அடுத்த பக்கத்தில் அல்லது அடுத்த தெருவில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டவும் அனுமதிக்கின்றது. இது அங்கே வீடுகளில் குடியிருப்பவர்களுக்கும், அடுக்குமாடிக் குடியிருப்பவர்களுக்குமிடையே உரசல்களை உண்டாக்குகின்றது. புதிய குடியிருப்புகளுக்கு ஏற்ப மற்ற புதிய உட்கட்டமைப்புகள் எதுவும் அமைக்கப்படவில்லை. பிரதான வீதிகள், பாடசாலைகள், வணிக வளாகங்கள், நூலகங்கள், பூங்காக்கள் என்று எந்த வசதிகளும் இந்த பெருக்கத்துக்கு ஈடாக புதிதாக உருவாக்கப்படவில்லை. இதுவும் ஏற்கனவே அங்கே இருப்பவர்களுக்கும், புதிதாக குடிவருபவர்களுக்குமிடையே பிணக்குகளை உண்டாக்குகின்றது. சட்டம், ஒழுங்கு, நாகரிகம் கெட்டுப் போகின்றது என்று புதியவர்களை குற்றம் சாட்டுகின்றார்கள். பல வருடங்களின் முன், லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்கள் சில இலங்கை தமிழர்களுடன் சேர்ந்து எம்மவர்களின் வீடுகளில் திருடுகின்றார்கள் என்ற அபிப்பிராயம் எம்மவர்களிடையே இருந்தது. எந்த வீடுகளில் என்ன விழா எப்போது நடக்கின்றது என்ற தகவலையே எம்மவர்களில் சிலரே அவர்களுக்கு கொடுக்கின்றார்கள் என்றனர். விழாக்களில் அணிவதற்காக வங்கிகளிலிருந்து வெளியே வரும் நகைகளை திருடுவதே அவர்களின் இலக்கு என்றனர். பின்னர் இலங்கையிலிருந்து வேறு வழிகளில் சிட்னி வந்த இளைஞர்கள் மீது வேறு விதமான குற்றங்களைச் சொன்னார்கள். சில இடங்களுக்கு பாதுகாப்பாக போய் வரவே முடியாதிருந்ததாகச் சொன்னார்கள். இன்று புதிதாக குடிவரும் இந்தியர்கள் மீது எல்லோரினதும் கவனங்கள் திரும்பியிருக்கின்றன. இந்தப் புதிய அபரிதமான குடிவரவால் வீடுகளின் விலைகள் ஏறிக் கொண்டு போவதைப் பற்றி பேச்சும் இருக்கின்றது. பல தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இந்திய மாணவர்களின் ஆதிக்கம் பற்றிய ஆதங்கமும் இருக்கின்றது. எதிர்காலத்தில் எங்களின் பிள்ளைகளுக்கு சரியான வேலைகள் கூட கிடைக்காமல் போய் விடக் கூடும் என்று ஒருவர் சொன்னார். இப்படி பல காரணங்களாலும் புதிதாகக் குடியேறுபவர்களுக்கு எதிராக போராட்டங்கள் மெதுமெதுவாக ஆரம்பித்துள்ளன. எம்மக்களின் பலரும் இதற்கு ஆதரவாக உள்ளனர். ஆஸ்திரேலியாவையும், சிட்னியையும், எம்மக்களையும் ஒரு கணம் மறந்து விட்டு, அமெரிக்காவையும், அதிபர் ட்ரம்பையும், அவரின் ஆதரவாளர்களையும் நினையுங்கள். இந்த விடயத்தில் ஏதாவது வேறுபாடுகள் இருக்கின்றதா?
- FingerPointing.jpg
-
வணக்கம்
வணக்கம் ரதன். உங்களை மிக்க மகிழ்வுடன் வரவேற்கின்றேன். தொடர்ந்து உங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் எழுதுங்கள்.............❤️.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
தமிழ்நாட்டில் அரசியல் செய்யு எந்த அரசியல் கட்சியும், அரசியல் தலைவரும் பின்வருபவனவற்றை மேடையில் சொல்லியே ஆகவேண்டும் (பாஜகவும், அதன் தமிழ்நாட்டு பிரதிநிதிகளும் இந்த சட்டகத்துக்குள் வரமாட்டார்கள்): இந்தி எதிர்ப்பு நீட் தேர்வு எதிர்ப்பு ஊழலை அடியோடு அழித்தல் சமூகநீதியை ஏற்படுத்தல் இலங்கை கடற்படையிடம் இருந்து அப்பாவி தமிழக மீனவர்களை பாதுகாத்தல் கச்சதீவை மீட்டல் இலங்கை தமிழ் மக்களின் அகதிமுகாம்களை மேம்படுத்தல் ........ ஒரு துரும்பைக் கூட இந்த தலைவர்களால் அதன் இடத்திலிருந்து அசைக்க முடியாது என்பதே உண்மை. ஆனால் காலத்தின் மாற்றங்களால் சமூகநீதி அதன் பாதையில், ஒப்பீட்டளவில், சில முனைகளில் முன்னே சென்று கொண்டிருக்கின்றது. பாஜகவினர் மேடையில் சொல்ல வேண்டிய ஒரே விடயம்: பாரத மாதாக்கு ஜே..............
-
அதீத நினைவுத் திறன்; வரமா சாபமா? - உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா?
இது ஒரு சுமையாகவே இருக்கும் என்று தான் எனக்கும் தோன்றுகின்றது. இந்த மாதிரியான அச்சொட்டான ஞாபகசக்தி இல்லாமல், ஒருவருக்கு இருக்க வேண்டிய சாதாரண ஞாபகசக்தியை விட கொஞ்சம் அதிகமாக இருந்தாலே சில தர்மசங்கடங்கள் ஏற்பட்டுவிடுகின்றது. சில வருடங்களின் முன், 30 வருடங்களின் பின் ஒரு நண்பனைச் சந்தித்தேன். அவன் கடைசியாக ஊரில் இருந்த போது அவனிடம் ஒரு சிறிய கீபோர்ட் இருந்தது. மேற்கு நாடுகளில் எங்களின் பிள்ளைகளுக்கு அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போது வாங்கிக் கொடுக்கும் பொம்மை, பிளாஸ்டிக் கீபோர்ட் போன்றது அது. அதில் சில அடிப்படை இசைத் துணுக்குகளை உருவாக்கலாம். அப்பொழுது அக்னி நட்சத்திரம் படத்திலிருந்து 'ராஜா................. ராஜாதி ராஜா இந்த ராஜா.......................' பாடல் மிகப் பிரபலமாக இருந்தது. நண்பன் அதைப் போன்ற ஒன்றை அவனிடம் இருந்த கீபோர்ட்டில் உருவாக்கி, ஒரு நாள் எங்களுக்கு வாசித்துக் காட்டியிருந்தான். நான் இதை அவனிடம் சொன்ன போது, அவன் அப்படி ஒரு விடயம் நடக்கவேயில்லை என்று மறுத்துவிட்டான். அவனிடம் அப்படி ஒரு கீபோர்ட் இருக்கவும் இல்லை என்றும் சொன்னான். ஆனால் அந்த ஞாபகம் இன்றும் அப்படியே என்னிடம் இருக்கின்றது. கடல், மிகச் சிறிய திறந்த கடற்கரை, அதையொட்டி பிரதான வீதி, வீதியின் இந்தப் பக்கமாக அவனின் வீடு. முன்பக்கம் தலைவாசலும், சுற்றுச் சுவரும் உள்ளது அவன் வீடு. முற்றம் தாண்டிச் சென்றால், வீட்டின் வலக்கை பக்கம் இருக்கும் சிறிய அறையிலேயே நாங்கள் அன்று இந்தப் பாடலை கேட்டோம். பின்னர் சுனாமியில் அந்த அறை உடைந்து போயிருந்தது.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
ஒரு பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்ல, சில பக்கத்து வீட்டுக்காரர்களுன் இதே போலவே தான். அவர்களுக்கு மிகவும் வயதாகி விட்டது, அத்துடன் அவர்களுடைய பிள்ளைகளும் தூர இடங்களுக்கு போய்விட்டார்கள். முன்னர் இந்த தெருவில் இருந்த சிலர் போயும் விட்டார்கள். இங்கே பல்லிகள் வீடுகளுக்குள் பொதுவாக வருவதில்லை. ஆனால் வளவுகளுக்குள் ஓடித் திரிகின்றன. பூச்சிகளை இடைவிடாமல் தேடிக் கொண்டிருக்கின்றன. அவர் தான் பல்லியை இதற்கு முன் இங்கே கண்டதேயில்லை என்று சொல்லி, பயத்தில் துள்ளிக் கொண்டிருந்தார். அதையே அவர் கூரையில் நின்றார் என்று சொல்லியிருந்தேன். அவர் குஜராத்தில் இருக்கும் போது அவர் வீட்டில் பணியாளர்கள் இருந்ததாகவும் சொல்லியிருக்கின்றார். அங்கே அவருடைய வீட்டுக்குள் பல்லிகள், பூச்சிகள் வராமல் அந்தப் பணியாளர்கள் 24 மணி நேரங்களும் காவலுக்கு இருந்திருக்கின்றார்கள் போல........
-
ஒரு பயணமும் சில கதைகளும்
🤣................ ஒரு படத்தில் ஒரு காட்சியில் விவேக்கிற்கு பெண்கள் வெளியே சொல்லாமல் மனதில் நினைக்கும் விடயங்கள் கேட்க ஆரம்பிக்கின்றன. அதன் பின்னர் வரும் காட்சிகள் நல்ல சிரிப்பை வரவழப்பவை. ஆனால் எங்களின் மனதுகளின் தோன்றுபவற்றை அப்படியே வெளியே சொன்னால், அங்கே சிரிப்பு இருக்காது, பெரிய வெட்டுக் குத்துகள் ஆவது மட்டும் இல்லை, அதன் பின்னர் ஒரு தனிமனிதனாக அலையவும் வேண்டி இருக்கும்...........🤣. 👍.......... சமீபத்திலும் கோமியம் (பசு மாட்டின் சிறுநீர்) அருந்துவது மற்றும் அதன் மருத்துவக் குணங்கள் பற்றிய ஒரு விவாதம் உண்டானது. சென்னை ஐஐடியின் இயக்குனர் காமக்கோடி மற்றும் ஶ்ரீதர் வேம்பு போன்ற பலராலும் அறிவாளிகள் என்றும், முன்னோடிகள் என்றும் கருதப்படும் பலரும் கோமியம் அருந்துவதை ஆதரித்து கருத்துகள் தெரிவித்திருந்தார்கள். நேற்று தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவம் பற்றி ஶ்ரீதர் வேம்பு ஏதோ சொல்லியிருப்பதாக செய்திகளில் இருந்தது. அந்தச் செய்தியில் என் மனம் ஒட்டவில்லை, மாறாக கோமியம் பற்றியே சிந்தனை ஓடியது. தேடிப் பெறும் எந்த அறிவுமே அசைக்க முடியாத கண்மூடித்தனமான நம்பிக்கைகள் எங்கும் இருக்கின்றன போல..............🫣.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
நீங்கள் சொல்லுவதையே தானும் நானும் நினைத்திருந்தேன். நாராயணர் என்பவர் ஒரு அவதாரம் என்பதே என் எண்ணமாகவும் இருந்தது. பத்து அவதாரங்கள் என்று வரிசைப்படுத்தப்படுபவை: 1. மச்ச அவதாரம் 2. கூர்ம அவதாரம் 3. வராக அவதாரம் 4. நரசிம்ம அவதாரம் 5. வாமன அவதாரம் 6. பரசுராமர் அவதாரம் 7. ராமர் அவதாரம் 8. கிருஷ்ணர் அவதாரம் 9. பலராமர் அவதாரம். சிலர் பலராமருக்கு பதிலாக புத்தரை ஒன்பதாவது அவதாரமாகக் கருதுவதும் உண்டு 10. கல்கி அவதாரம். புராணங்களின் படி, 10 வது அவதாரம் மட்டுமே மிச்சமுள்ளது. கலியுகத்தை முடித்து வைப்பதற்க்கான அவதாரம் இது. பிரகலாதன் - இரணிய மன்னனின் கதையில் வரும் நரசிம்ம அவதாரமே நாராயணரின் தொடர்புடையது போல. இவை எல்லாமே புராண காலத்தவை, புத்தர் மட்டுமே ஒரு விதிவிலக்கு, அவரை ஒரு அவதாரமாகக் கருதுவது கூட பொதுவான ஒரு அபிப்பிராயம் இல்லை. சுவாமி நாராயணன் என்று குஜராத்தி மக்களால் வழிபடப்படுபவர் பிரிட்டிஷ் கால இந்தியாவில், 1781 - 1830 ஆண்டுகளில், வாழ்ந்த ஒரு துறவி. 200 வருடங்களுக்கு முன் மனிதராக வாழ்ந்த ஒருவர். இவர் ஒரு புராண அவதாரம் இல்லை என்றும், பெயர்க் குழப்பமே இங்குள்ளது என்றும் நினைக்கின்றேன்...............
-
விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!
தமிழ்நாட்டு மக்கள் மிக இலேசாக கடந்து போய்க் கொண்டிருக்கும் விடயங்களில் இதுவும் ஒன்று. இதையே எங்கள் நாட்டில் ஒரு அரசியல் தலைவரோ அல்லது முக்கியம் மிக்க ஒருவரோ செய்து விட்டு, இவ்வளவு இலேசாக இருந்து விடமுடியாது. தமிழ்நாட்டில் பல தலைவர்களின் கதைகளில் பலர் வந்து போயிருக்கின்றார்கள். ஊழல் செய்தார், லஞ்சம் வாங்கினார் அல்லது கொள்ளை அடித்தார் என்பது இன்னும் ஒரு இலேசாகக் கடக்கப்படும் நிகழ்வு. இதை ஒரு பரபரப்பான செய்தியாகப் பார்ப்பார்களே அன்றி, அதற்கான விளைவுகள் மக்களால் ஆற்றப்படுவதில்லை. அங்கே ஊழலும், லஞ்சமும் சாதாரண ஒருவரின் வாழ்க்கையிலேயே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதிகமாகவே கலந்திருப்பதால், இவை ஒரு குற்ற உணர்வை தொடர்ந்தும் எவர் மனதிலும் உண்டாக்குவதில்லை. சமீபத்திய கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் போன்ற நிகழ்வுகள் கூட மறக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் அழகிரியின் எல்லை மீறிய கட்டப் பஞ்சாயத்துகள் மற்றும் கொலைகள், பொன்முடியின் சமீபத்திய மேடைப் பேச்சு போன்றன ஒருவரை அங்கே அரசியல் அநாதை ஆக்கக்கூடியன. சாதி, இனம், மொழி, மதம் என்று கோடுகளால் பிரித்து, வெறுப்பை வளர்க்கும் அரசியல்வாதிகளுக்கு அங்கே இடம் இருந்தாலும், அவர்களுக்கான ஆதரவு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதே.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
5. இன்னொரு பாலம் -------------------------------- எளிமையான பல நம்பிக்கைகளின் ஒரு தொகுப்பாகவே எங்களின் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கின்றது. அந்த நம்பிக்கைகளில் பலவற்றை நாங்கள் சாதாரண சூழ்நிலைகளில் கேள்விக்குட்படுத்துவதும் கிடையாது. உதாரணமாக, பொதுவாக பெரும்பாலான மனிதர்களிடம் இருக்கும் கடவுள் இருக்கின்றார் என்ற நம்பிக்கை. இதே போலவே தெய்வம் என்ற மேலான ஒரு சக்தி கிடையவே கிடையாது என்ற நம்பிக்கையும் பல மனிதர்களிடம் பரவலாகவே இருக்கின்றது. மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் என்று நம்பி வாழ்பவர்களும் உண்டு. மனிதர்களும் ஒரு விலங்கே, அங்கே சுயநலம் மட்டுமே உண்டு என்று உறுதியாக எதிர்த் திசையில் நம்புவர்களும் உண்டு. புதுமைப்பித்தனின் 'கடவுளின் பிரதிநிதி' என்னும் கதையில் கடவுள் நம்பிக்கை கொண்ட ஒருவரின் நம்பிக்கை ஒரு தருணத்தில் கேள்விக்கு உட்படுகின்றது. அந்தக் கணத்தில் அவர் அப்படியே உடைந்து சிதறிப் போகின்றார். நாங்கள் நம்பிக் கொண்டிருப்பது பொய்யாக இருக்குமோ என்ற சந்தேகம் எட்டிப் பார்க்க ஆரம்பித்தால், எந்த வாழ்க்கையும் அங்கே உடைந்து தான் போகும். என் வீட்டருகே இரண்டு கோவில்கள் இருக்கின்றன. நாங்கள் இப்பொழுது இருக்கும் வீட்டிற்கு ஒரு 25 வருடங்களின் முன் குடிவந்தோம். இந்தக் கோவில்களும் ஏறக்குறைய அதே காலத்திலேயே இங்கு வந்தன. ஒன்று சுவாமி நாராயணன் கோவில், மற்றையது தமிழ்நாட்டு வகை கோவில். இரண்டுமே இந்த இடத்தில் மிக செழிப்புடன் இருக்கும் குஜராத்தி மக்களாலேயே உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. என் மனைவி ஆரம்பத்திலிருந்தே தமிழ்நாட்டு வகை கோவிலின் முதல் வகுப்பு குடிமகள்களில் ஒருவர். என் அயலவர், அவர் குஜராத்தி இனத்தை சேர்ந்தவர், சுவாமி நாராயணன் கோவிலின் முதல் வகுப்பு குடிமகன்களில் ஒருவர். ஊரில் வளர்ந்த சுழ்நிலையோ அல்லது கண்டதையும் கடியதையும் வாசித்ததாலோ, வளரும் நாட்களில் தெய்வம் என்னும் நம்பிக்கை மீது பெருத்த சந்தேகமே இருந்தது. எங்களில் பலருக்கும் நடந்தது போலவே, மிகப் பெரிய இழப்புகளும் ஏற்பட்டன. இவ்வளவும் கேட்பாரன்றி நடந்த பின், எல்லாவற்றுக்கும் மேலே ஒரு சக்தி இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் மனைவி 'இன்று நீங்கள் கோவிலுக்கு வரவேண்டும்............' என்று சொல்லிக் கூட்டிப் போகும் நாட்களில் போய்க் கொண்டிருக்கின்றேன். குஜராத்தி அயலவரின் மகன் திருமணச் சடங்கு ஒன்று சுவாமி நாராயணன் கோவிலில் நடந்தது. அதற்காக அந்தக் கோவிலுக்கு ஒரு தடவை போயிருக்கின்றேன். அங்கு இருக்கும் கடவுள் கிருஷ்ணரே என்று நினைத்திருந்தேன். சிட்னியில் சுவாமி நாராயணன் கோவில் ஒன்று கட்டப்பட்டிருப்பதாகவும், அதைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். மிகப் பிரமாண்டமான கோவில் என்றார்கள். என் வீட்டருகே 25 வருடங்களாக இருக்கும் சுவாமி நாராயணன் கோவில் ஓரளவு பெரியது. என் வீட்டிலிருந்து ஒரு 25 மைல்கள் தூரத்தில் மிகப் பிரமாண்டமான சுவாமி நாராயணன் கோவில் ஒன்றை குஜராத்தி மக்கள் கட்டியிருக்கின்றார்கள். அதை எல்லோரும் போய்ப் பார்க்கின்றார்கள், வியக்கின்றார்கள். நியூ ஜெர்சி, துபாய் என்று உலகெங்கும் மிகப் பிரமாண்டமான சுவாமி நாராயணன் கோவிலை கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். சிட்னியில் கட்டிக் கொண்டிருப்பது 400 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவில் என்று சொன்னார்கள். சிட்னி நகரிலிருந்து கொஞ்சம் வெளியே ஒரு இடத்தில் கட்டியிருக்கின்றார்கள். முன்பே அந்தக் கோவிலுக்கு போய் வந்தவர்களும், இப்போது தான் முதன்முதலாக போயிருப்பவர்களும் ஒருங்கே ஒரு அதிசயத்தை பார்ப்பது போலவே அந்த இடத்தை பார்த்துக் கொண்டு நின்றார்கள். கோவிலின் முன்பு ஒரு சாது ஒற்றைக் காலில் நிற்கும் பெரிய சிலை ஒன்று இருந்தது. இந்தியப் பிரதமர் மோடி வந்து அதைத் திறந்து வைத்ததாகச் சொன்னார்கள். சிலையின் உயரம் 49 அடிகள் என்று இருந்தது. அந்தச் சிலையில் இருப்பவர் தான் சுவாமி நாராயணன் என்று அழைக்கப்படுகின்றார் என்றும் இருந்தது. அவர் ஏழு வருடங்கள் தொடர்ச்சியாக இப்படியே ஒற்றைக் காலில் தவம் இருந்ததாக அங்கிருக்கும் பல கல்வெட்டுகளில் தகவல்கள் பதிக்கப்பட்டு இருந்தன. இவர் 49 வருடங்கள் மட்டுமே வாழ்ந்த காரணத்தால், 1781 - 1830 ஆண்டுகள், சிலையின் உயரம் 49 அடிகளாக உள்ளது என்ற தகவலும் ஒரு கல்வெட்டில் இருந்தது. சுவாமி நாராயணன் என்றால் கிருஷ்ணர் என்று நான் இதுவரை நினைத்திருந்தது பொய் என்பது ஏமாற்றமாகவே இருந்தது. என்னுடைய அயலவரிடம் சுவாமியின் வரலாற்றை நான் கேட்டிருக்க வேண்டும். அவர் அடிக்கடி என்னிடம் ஏதாவது கேட்பார். ஒரு தடவை அவர் வீட்டிற்குள் பல்லி ஒன்று வந்து விட்டதாகவும், உடனே ஓடி வா என்று கூப்பிட்டார். நான் போகும் போது, அவர் கிட்டத்தட்ட கூரையில் நின்று கொண்டிருந்தார். நான் பல்லியைப் பிடித்து, அவர் வீட்டிற்கும், என் வீட்டிற்கு இடையில் இருக்கும் இன்னொரு வீட்டின் முன் வளவினுள் விட்டுவிட்டேன். இப்படி நான் அவருக்கு ஏராளமான உதவிகள் செய்திருக்கின்றேன். நான் கேட்டிருந்தால், வரலாற்றை மகிழ்ச்சியாக சொல்லியிருப்பார். அன்று நான் பிடித்த பல்லியை நடுக்காணியில் விட்டது அவருக்கு தெரியாது. கோவில் வளாகம் ஒரு பெரும் சரிவில் பல தொகுதிகளாக கட்டப்பட்டிருந்தது. சுவாமியின் 49 அடி சிலை சரிவின் அடிவாரத்தில் ஆரம்பமாக இருந்தது. அதன் பின்னால் ஒன்றன் பின் ஒன்றாக, 400 மில்லியன் ஆஸ்திரேலியா டாலர்களில் செலவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும், கோவிலின் பகுதிகள் இருந்தன. முதல் தொகுதியில் அபிஷேகம் செய்யும் இடம் ஒன்று இருந்தது. சில டாலர்கள் கொடுத்து நாங்களே அபிஷேகம் செய்யலாம் என்றார்கள். எங்களில் ஒருவர் செய்தார். என் மனைவியின் வீட்டார்கள் மிகுந்த தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் என்றாலும், அவர்கள் எந்த அவதார புருஷரையும், பாபாக்களையும், குருக்களையும், சாமியார்களையும் நம்புவதும் இல்லை, பின்பற்றுவதும் இல்லை. அந்த நாராயணனை நினைத்து இந்த நாராயணனுக்கு அபிஷேகம் செய்திருக்கின்றார்கள். அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். அதன் பின்னால் உணவு விடுதி ஒன்று இருந்தது. எங்களில் சிலர் உள்ளே போனார்கள். என்ன பெரிது என்று சொல்லிக் கொண்டே, ஆனால் வெறுங்கைகளுடன் திரும்பி வந்தார்கள். வட இந்திய சைவ உணவாக இருக்க வேண்டும் போல. ஒருவருக்கு ஒருவர் சொல்லாமல் அப்படியே வெளியே வந்துவிட்டார்கள். அதன் பின்னால் ஏறிப் போனால், இந்தப் பிரிவின் இன்றைய குருவின் பெரிய பெரிய படங்களும், அவர் சொல்லும் விடயங்களும் இருந்தன. இது ஒரு குரு வழியாக, தொடராக தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றது. இந்த குரு சமாதி அடைந்தால், இன்னொரு குரு வருவார். குருவிற்கு செய்யும் பணிவிடைகள் இறைவனுக்கே செய்யும் பணிவிடைகள் என்று ஒரு செய்தி இருந்தது. இறைவனுக்கும், எங்களுக்குமிடையே குரு ஒரு பாலமாக இருக்கின்றார் என்று இன்னொரு செய்தி இருந்தது. அங்கிருந்து பார்க்கும் போது சுவாமி நாராயணனின் 49 அடி சிலையின் பின் பக்கம் தெரிந்தது. இவர்கள் எழுதி வைத்திருப்பது போலவே அவர் ஏழு வருடங்கள் ஒற்றைக் காலில் தவமிருந்தார் என்று வைத்துக் கொண்டாலும், இப்படியான பாலங்களை தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்பதற்காகவா அவர் தவமிருந்திருப்பார்? சேலத்தில் நித்தியும், கோயம்புத்தூரில் சத்குருவும், புட்டபர்த்தியில் சாயிபாபாவும், இலங்கையில் பிரேமானந்தாவும், இன்னும் எண்ணற்ற மனிதர்களாப் பிறந்து சாமிகளான பலரும் இதே பாலம் என்ற உருவகத்தை தானே வெவ்வேறு வழிகளில் சொல்லி தங்களை முன்னிறுத்தினார்கள். ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பி வந்த அடுத்த நாள் அயலவரைப் பார்த்தேன். 'சிட்னியில் உங்கள் கோவிலுக்கு போயிருந்தேன்..............' 'ஓ.......... போயிருந்தியா............ அதை மோதிஜி திறந்து வைத்தார்...............மந்திர் எப்படியிருக்கின்றது?' 'ஆ....... மோடி தான் திறந்தது என்று அங்கே சொன்னார்கள். 400 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவு செய்து கட்டியிருக்கின்றார்கள்.' 'அவர்களிடம் பணம் நிறையவே இருக்கின்றது. எங்களில் பலர் தங்கள் வருமானத்தில் 25 வீதத்தை இதற்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்............' தங்களின் நம்பிக்கைகள் பொய்த்துப் போகும் போது மனிதர்கள் உடைந்து போகின்றார்கள் என்றால், கண்மூடித்தனமான நம்பிக்கைகளுடனே வாழும் மக்கள் வாழ்நாள் முழுவதும் ஏமாற்றப்பட்டுக் கொண்டும் இருக்கின்றார்களோ என்றும் தோன்றுகின்றது. (தொடரும்......................)
- Swami.jpg