Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மதுக்கூடத்தில் ஒரு கண்ணாடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதுக்கூடத்தில் ஒரு கண்ணாடி

எம்.டி.முத்துக்குமாரசாமி
 


 
the-false-mirror-1928---rene-magritte-su

 
 
மாதவன் அந்தக் கண்ணாடியை மதுக்கூடத்தில் கொண்டு வந்து வைத்த நாளிலிருந்துதான் அங்கே வியாபாரம் செழிக்கத் தொடங்கியது என்பது ஹோட்டலில் ஒரு பரவலான நம்பிக்கை. மாதவன் அந்த ஆளுயரக்கண்ணாடியை பழம்பொருள்கள் அங்காடியிலிருந்து வாங்கிவந்திருந்தான். தேக்கு மர ஃபிரேமுக்கு வார்னீஷ் அடித்தவுடன் அதற்கு ஒரு புதுப் பொலிவு வந்து விட்டது. ஆங்காங்கே ரசம் போய் சிறு சிறு வெள்ளைப்புள்ளிகள் கண்ணாடியெங்கும் விரவியிருந்ததை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. நீங்கள் அந்த ஆளுயரக் கண்ணாடியில் உங்களைப்பார்க்கும்போது ரசம் போன புள்ளிகள் வேறொரு கோலத்தினை உங்கள் மேல் வரைந்தன. கோலத்தினை பார்ப்பவர்கள் தங்களைப் பார்க்க இயலுவதில்லை; தங்களைப் பார்ப்பவர்கள் கோலத்தினைப் பார்க்க இயலுவதில்லை. நல்ல நிறை போதையில் கண்ணாடியில் பார்க்கையில் கோலங்கள் அதிக உயிர்ப்புடன் திரள்வதான தோற்றம் பெற்றன. காலடிச்சுவடு, கனவு, கல்தூண், முகமூடி, கடற்கரை என தன் உருவத்தின் மேல் கண்ணாடியால் எழுதப்படும் கோலங்களைப் பலர் பல விதமாகக் கண்டனர். கண்டவர் விண்டிலர்.
 
தன் மேல் வரையப்படும் கோலங்களை விட தனக்கென்று முகம் இருப்பதே முக்கியமானது என்று மாதவனுக்கு தோன்றும்; மதுக்கூட கண்ணாடியில் இப்போதெல்லாம் அவனால் தன் முகத்தைப் பார்க்கவே முடிவதில்லை. மாதவன் மதுக்கூடத்தில் வேலை செய்ய வேண்டும் என்று எந்தக் கடவுளுக்கும் நேர்ந்துகொண்டிருக்கவில்லை. அவன் கேடரிங் டெக்னாலஜி படித்து முடித்து வேலை தேடியபோது இந்த மூன்று நட்சத்திர ஹோட்டல் அவனை உடனடியாக வேலைக்கு எடுத்துக்கொண்டது. அவனுக்கு கல்லூரியில் சீனியரான மிருதுளா அதே ஹோட்டலில் மேலாளராக இருந்ததால் அவள் சிபாரிசின் பேரில் நல்ல சம்பளமும் கிடைத்தது. மாதவன் குடிப்பதில்லை புகைப்பதில்லை என்பதினால் அவனை மதுக்கூட மேலாளராக்கிவிட்டார்கள். 

பழம்பொருள் அங்காடியில்கண்ணாடி வாங்க மாதவன் சென்றபோது மிருதுளாவும் கூட வந்திருந்தாள்.  மதுக்கூடத்தின் மத்திப் பகுதியில் அசௌகரியமான வெற்றிடம் ஒன்று இருந்தது. அதில் கண்ணாடி வைத்தால் நல்லது என்று மாதவன் யோசனை சொன்னான். நிர்வாகம் ஒத்துக்கொண்டது மட்டுமல்லாமல் பழம்பொருள் மதிப்பு கொண்ட அலங்காரக் கண்ணாடியினை வாங்கும்படி பணித்தது. மிருதுளா அன்று மஞ்சள் நிற கையில்லா ரவிக்கை அணிந்திருந்தாள். மாதவனுக்கு அவளுடைய காட்டன் சிவப்புப் புடவையும் அதற்கு அவள் அணிந்திருந்த  வான்கோ மஞ்சள் நிற ரவிக்கையும் பிரமாதமான ஒத்திசைவு கொண்டவையாகத் தோன்றின. மிருதுளாவும் அவனும் கண்ணாடி கண்ணாடியாகப் பார்த்துக்கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பழம்கண்ணாடி முன்னும் அவர்கள் சற்று  நின்று கடந்தபோது ஜென்மாந்திரங்களைக் கடப்பதான பாவனையை ஒவ்வொரு கண்ணாடியும் அவர்களுக்கு காட்டியது போலத் தோன்றியது. ஜென்மாந்திரங்களை ஒன்றாக காலத்தில் முன்னோக்கி கடந்தார்களா பின்னோக்கி கடந்தார்களா காலக்குழப்பங்களின்படி கடந்தார்களா என்று சொல்வதற்கில்லை. உண்மையில் ஒவ்வொரு கண்ணாடியையும் ஒரு ஜென்மேந்திரம் போல இருக்கிறதே என்று மிருதுளா தற்செயலாய் சொல்லப்போய்தான் அவர்களுக்கு அப்படி தோன்ற ஆரம்பித்திருக்க வேண்டும். வித விதமான அலங்கார சட்டகங்களுடன் இருந்த கண்ணாடிகள் காலங்கள் போலவே அவர்களை தங்களுக்குள் பிம்பப்படுத்தின. அங்காடியின் நீள் கூடத்தில் ஒரு கண்ணாடியிலிருந்து மறு கண்ணாடிக்கு சென்றபோது முதல் பிம்பம் நினைவாய் மனதில் தங்கி  இரண்டாம் பிம்பத்தைப் பார்ப்பதைத் தீர்மானித்தது. முதல் பிம்பத்தை மீண்டும் பார்க்கலாம் என்று முந்தைய கண்ணாடிக்குச் சென்றால் நினைவில் தங்கிய பிம்பம் அகப்படுவதாயில்லை. புதியதாய் ஒரு சட்டகத்திற்குள் அவர்கள் அகப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

கண்ணாடிகளுக்கு நினைவு இருப்பதில்லை என்றான் மாதவன் மெதுவாக. தன்னுடைய ஜென்மேந்திரியம் பற்றிய கூற்று தன் வாயிலிருந்து வந்ததுதானா என்று திகைப்படைந்திருந்த மிருதுளாவுக்கு மாதவன் சொன்னது ஆசுவாசமாயிருந்தாலும் தங்களிடையே ஒரு உறவு வளர்வதான மயக்கம் ஏற்பட்டது.

உண்மையில் அவர்களுக்கிடையே வெறும் ஹாய் பை உறவுதான் இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது  டிஸ்கோவில் கூட்டத்தோடு கூட்டமாய் கும்பலாய் நடனமாடியிருக்கிறார்கள். அப்போது  மாதவனின் கை மிருதுளாவின் மேல் படக்கூடாத இடங்களில் பட்டதற்கு அவள் எதுவும் சொல்லவில்லை. அவர்களிருவரும் நல்ல ஜோடி என்பது கண்ணாடிக்கடையில்தான் அவர்களுக்கு தெரிய வந்தது போல. 

கடைசியில் மாதவன் வாங்கிய கண்ணாடிக்கு முன் அவர்கள் நின்றபோது ஒரு அழகான புகைப்படம் போல இருந்தார்கள். மாதவன் மிருதுளாவைவிட ஒரு தலை உயரமாக இருந்தான். ரசம் போன வெண்புள்ளிகள் அவர்கள் மாலையும் கழுத்துமாய் இருப்பதான கிறக்கத்தினை ஏற்படுத்தின. இது எதிர்காலக் கண்ணாடி என்று மாதவன் மனதிற்குள் சொல்லிக்கொண்டபோது அவன் காஃப்காவின் 

வாக்கியமொன்றினை சொல்லிக்கொள்கிறோம் என்று அறிந்திருக்கவில்லை. மிருதுளாவுக்கு அந்தக் கண்ணாடியை ஹோட்டலுக்கு வாங்குவதில் விருப்பமில்லை. ஆனால் மாதவன் பிடிவாதமாய் அந்தக் கண்ணாடியையே வாங்குவது என்று ஒற்றைக்காலில் நின்று வாங்கிவிட்டான். மிருதுளாவுக்கு மாதவனுடைய திடீர் அறுதியிடல் ஆச்சரியமாக இருந்தது. மிருதுளா சட்டென்று திரும்பியபோது மாதவனுடைய பெல்ட்டில் இருந்த சிறு கம்பி அவள் பின் இடுப்பில் கீற அவள் கிளர்ச்சியடைந்ததால் அப்போது அவனை எதிர்த்துப் பேசாமல் இருந்துவிட்டாள்.

ஆனாலும் மாதவனை விடப் பெரிய அதிகாரியான தான் அவன் இஷ்டப்பட்ட கண்ணாடியை வாங்கிவிட்டோமே என்று அவளுக்குள் குமைந்து கொண்டிருந்தது. மதுக்கூடம் ஹோட்டலின் பேஸ்மெண்ட்டில் இருந்தது. எந்த வெற்றிடத்தை நிரப்ப அந்தக் கண்ணாடியை வாங்கினார்களோ அந்த இடத்தில் வைக்கக்கூடாது என்று மிருதுளா வாதிட்டாள். மாதவன் சின்னதாக ஆட்சேபித்துவிட்டு பின்னால் பேசாமல் இருந்துவிட்டான். கண்ணாடியை பல நாற்காலிகளை நகர்த்திவிட்டு இடம் மாற்றி வரிசையில் அடுக்கி மதுப்புட்டிகள் வைத்திருக்கும் உயர் மேஜைக்கு நேர் எதிரில் மிருதுளா சொன்ன இடத்தில் வைத்தார்கள். ஏற்கனவே வெளிச்சம் குறைவாக இருந்த மதுக்கூடத்தில் அக்கண்ணாடியை இன்னும் இருள் கூடிய இடத்தில் வைத்ததால் அதன் வெண் புள்ளிகள் உடனடியாகத் தெரிவதாக இல்லை. பழம் கண்ணாடி என்பதால் அதற்கு ஒரு அமானுஷ்யம் கூடிவிட்டது போல மர்மப்படலம் ஏறிவிட்டது. மதுக்கூடத்தில் இருந்த இதர கண்ணாடிகளின் பிரதிபலிப்புகளையும் அது தன்னுள்ளே வாங்கியதால் அந்தக் காட்சிக்கலவை அசாத்தியமாக இருந்தது. ஹோட்டல் முதலாளி உட்பட எல்லோரும் மிருதுளாவின் அழகுபடுத்தும் திறமையை பாராட்டினார்கள். மிருதுளாவின் இந்த சிறிய வெற்றியில் மாதவன் எரிச்சலும் வியப்பும் அடைந்தான். 

மிருதுளாவுக்கு கண்ணாடியை மதுக்கூடத்தில் அவள் விரும்பிய இடத்தில் வைத்ததில் மேலும் ஒரு வெற்றியும் இருந்தது. அவள் மேல்தளத்தில் தன் அலுவலகத்தில் இருந்து பார்க்கும் மேலாண்மை கண்காணிப்பு கேமரா மதுக்கூடத்தின் கண்ணாடியை நோக்கி வைக்கப்பட்டிருந்தது. கண்காணிப்பு கேமரா வழி மிருதுளாவினால் மாதவனையும், மதுக்கூடத்தையும் முழுமையாகக் கண்காணிக்க முடிந்தது. ஆட்களில்லா மதிய நேரமொன்றில்  மாதவன் கண்ணாடி முன் நின்று குரங்கு சேஷ்டைகள் செய்வதை மிருதுளா பார்த்து வெகுவாக மகிழ்ச்சி அடைந்தாள். மாதவனுக்கு மிருதுளா தன்னை சதா வேவு பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்ற எண்ணம் இருக்கவில்லை. இன்னொரு மதியம் மாதவன் கண்ணாடி முன் நின்று கண்ணாடியின் வழியே அவனுக்குப் பின்னால் தரையை சுத்தம் செய்துகொண்டிருந்த பெண்ணின் இடுப்பையும் மார்புகளையும் வெறிப்பதை மிருதுளா பார்த்தாள். 

‘மிர்தூஸ்’ என்று மாதவன் மிருதுளாவை செல்லமாக எப்போது இருந்து அழைக்க ஆரம்பித்தான் என்று சொல்ல இயலாது. கண்ணாடி வாங்க அவர்களிருவரும் ஒன்றாகச் சென்ற நாளுக்குப் பிறகுதான் என்று மிருதுளாவும் குரங்குக்குட்டிகளோடு உறங்கும் மிருதுளாவைக் கனவில் கண்டபின்தான் என்று மாதவனும் நம்பினர். அது ஒரு அழகான ஈரக் கனவு. பதின்பருவத்திற்குப் பிறகு அது போன்ற ஈரக் கனவு மாதவனுக்கு வெகு நாட்களுக்குப் பிறகு வந்தது. குற்றாலம் போல மலையும் சாரலுமாய் இருக்கக்கூடிய இடம். அதில் ஒரு கல்மண்டபத்தில் உள்ள மேடையில் மிருதுளா ஆடையில்லாமல் உறங்கிக்கொண்டிருக்கிறாள். அவள் மேல் நாலைந்து குரங்குக்குட்டிகள் படுத்திருக்கின்றன. மண்டபத்தின் தூண்கள் ஓவியச் சட்டகம் ஒன்றினை அமைக்க அதன் வழி வானமும் வானத்தில் நிலவு வெளிச்சமும் தெரிகின்றன. குரங்குக்குட்டிகள் நன்றாக விழித்திருந்தன. மாதவன் மிருதுளாவை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறான். மாதவனைப் பார்த்த குரங்குக்குட்டிகள் மிருதுளாவை மிரட்சியில் தங்கள் கைவிரல்களால் பிராண்டிப் பிடிக்கின்றன. குரங்குக்குட்டிகளின் விரல் நகங்கள் மிருதுளாவின் தோள்களிலும் பிருஷ்ட வளைவுகளிலும் அழுந்துகின்றன. மிருதுளாவோ சலனமின்றி தொடர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். மண்டபத்தின் தரையில் மாதவன் கால் வைத்தபோது கண்ணாடியில் கால் வைத்தது போல தரை பாளம் பாளமாய் நொறுங்கியது. மாதவன் துள்ளி அவன் கண்களுக்குப் புலப்படாமல் தரையில் படுத்திருந்த குரங்குக்குட்டிகளின் மேல் நளுக் நளுக்கென்று மிதிக்கிறான். மௌனத் திரைப்படமொன்றின்  காட்சி போல சப்தமில்லாமல் குரங்குக்குட்டிகள் பாவனைகள் காட்டி ஓடுகின்றன. மேலும் தரைக்கண்ணாடிகள் பாளங்களாக நொறுங்க மாதவன் துள்ளிய வேகத்தில் மிருதுளாவின் மேல் படுத்திருந்த குரங்குக்குட்டிகள் சிதறி ஓடுகின்றன. மாதவனின் உடல் தீண்டலில் மண்டபத்தின் மேடையில் படுத்திருக்கும் மிருதுளாவின் இமைகள் திறக்கின்றன. அவளுடைய இமைகள் திறக்கையில் மாதவன் வெடித்து ஈரமானான். 

மறுநாள் மாதவன் வெல்வெட்டும் பஞ்சும் கலந்த குரங்குக்குட்டி உருவத்தில் செய்த தோள்ப்பையினை வாங்கி மிருதுளாவுக்குப் பரிசளித்தான். அதைக் கொடுக்கும்போது பரிசுப்பொதியின் மேல் அட்டையில் ‘மிர்தூஸுக்கு’ என்று எழுதிக்கொடுத்தான். சிறு புன்னகையோடு அதை வாங்கிக்கொண்ட மிருதுளா அதை உடனடியாகத் திறந்து பார்க்கவில்லை.

மதுக்கூடத்தில் கல்லூரி இளைஞர்களும் யுவதிகளும் ஏற்பாடு செய்திருந்த விருந்து நடந்துகொண்டிருந்தது. எல்லோரும் வெறித்தனமாய் ஆடிக்கொண்டிருந்தார்கள். கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து நகர பழக்க வழக்கங்களையெல்லாம் மாதவன் நன்றாக அறிந்திருப்பவன்தான் என்றாலும் அவனுக்கே அந்த விருந்து கடுமையான உளத் தொந்திரவுகளை உருவாக்கியது. இளம் பெண்கள் பிருஷ்டங்களின் வளைவுகளும், தொப்புள்களும், மார்பின் பிளவுகளும் வித விதமாய் வெளியில் தெரியும்படி  குறைந்த ஆடைகள் அணிந்திருந்தார்கள். கண் மூடித்தனமாய் எல்லோரும் குடித்தார்கள். மாதவன் அதுவரை கேட்டிராத இசை மதுக்கூடம் முழுக்க நிறைந்திருந்தது. மிருக ஒலிகளும் தாப முனகல்களும் நிறைந்திருந்த அந்த இசைக்கேற்ப ஆணுடல்களும் பெண்ணுடல்களும் குழைந்துகொண்டிருந்தன. மதுக்கூட பார் மேஜையின் பின்னால் நின்று கொண்டிருந்த மாதவன் தான்  மிருதுளாவுக்கு வாங்கிக் கொடுத்த குரங்குக்குட்டி பொம்மை, சிகரெட் புகையினால் ஆன சிறு மேகங்களில் ஏறி அணைந்து அணைந்து எரியும் விளக்குக்குகேற்ப பல உடல்களின் வழி மிதந்து பயணம் செய்வதை கண்ணாடியில் பார்த்தான். மிருதுளாவும் தான் வாங்கிக்கொடுத்த குரங்குக்குட்டித் தோள்ப்பையை முதுகில் மாட்டிக்கொண்டு ஆடுகிறாளோ என்று மாதவன் ஒரு கணம் எண்ணி மீண்டான். காமவெறியும், போதையும் ஏறியிருந்த சூழலில் மாதவனுக்கும் ஏதாவது உடலைத் தீண்டவேண்டும் போல இருந்தது. மேற்பார்வை பார்க்கின்ற ஊழியரின் தீவிர முகபாவத்துடன் நடனக்கூட்டத்தினூடே செல்லலானான். யாரோ ஒருவர் அவன் கையிலும் ஒரு மதுக்கிண்ணத்தை திணித்தார்கள். மாதவன் ஒரு மிடறு குடித்து வைத்தான். மதுவில் கூடவே வேறு போதையும் சேர்த்திருப்பார்கள் போல; மாதவன் முழுக்கோப்பையையும் ஒரே மடக்கில் குடித்தான். 

மதுக்கூடத்தின் மத்தியில் சிறு இடம் உண்டாக்கி அதில் இரு பெண்கள் தலைமுடியை முழுவதுமாக அவிழவிட்டு அவற்றைச் சுற்றி சுற்றி ஆட்டிக்கொண்டே கைகளை முன்னோக்கி நீட்டியவர்களாய் வா வா என்று சைகைகள் செய்து ஆடினர். மாதவனுக்கு எங்கோ தூரத்தில் மிருக ஒலிகள் கேட்டன. கனவில், தூக்கத்தில் நடப்பவன் போல மாதவன் அந்த இரு பெண்களிடையே போய் நின்று கொண்டான். ஆணுடல்களும் பெண் உடல்களும் ஒன்றையொன்று தழுவி சுற்றி நெருங்கி மாதவனை இரண்டு பெண்ணுடல்களின் மத்தியில் தள்ளின. இரு பெண்களின் கூந்தல்களும் மாதவனை முன்னும் பின்னும் வருட மாதவன் தன் டை, சட்டை, பனியன் எல்லாவற்றையும் ஏதோ ஆவேசத்திற்கு ஆட்பட்டவனாய் கழற்றி விட்டெறிந்தான். அந்தப் பெண்கள் இருவரும் தங்களின் மென்மையான கூந்தல்களால் சாமரம் வீசுவது போல தலையை சுழற்றி சுழற்றி  அவனுடைய வெற்று மேலுடலில் வருடினர். பின்னணியில் ஒலித்த இசையில் உக்கிரம் ஏறியிருந்தது. திடீரென ஹோட்டல் ஊழியர் தங்களோடு சேர்ந்து நடனமாடுகிறாரே என்று கவனிக்கும் நிலையில் நடனக்கூட்டத்தினர் இல்லை. கூந்தல் சுழற்றும் பெண்கள் திரும்பி ஆடியபோதுதான் அவர்களின் முதுகுகளை கூந்தல் தவிர வேறெதுவும் மறைத்திருக்கவில்லை என்று தெரிந்தது. அவர்களின் வெற்று முதுகுகளில் சர்ப்பங்களை பச்சை குத்தியிருந்தனர்.

பச்சை சர்ப்பங்களின் வால் நுனிகள் அவர்களின் பிருஷ்டங்களின் வளைவின் ஆழத்தில் இறங்கியிருந்தன. மாதவனுக்கு இரண்டு பெண் தலைகளுடைய சர்ப்பங்கள் ஆடுவது போல தோன்றியது. அவன் எப்படி வெல்வெட் மயிரடர்ந்த குரங்குக்குட்டி புகையில் மிதந்து வருவதை இந்த சர்ப்பங்களைத் தாண்டி கண்டான் என்று தெரியவில்லை. புகையில் நளினமாக மிதந்த குரங்குக்குட்டியை அவன் ஆடியபடியே எட்டி எட்டி பிடிக்க முயற்சி செய்தான். இல்லாத குரங்குக்குட்டியை பிடிக்க அவன் செய்யும் யத்தனங்களாய் அவன் அசைவுகள் ரம்மியமாயின. மெதுவாக சுற்றியிருந்த நடனக்கூட்டம் மாதவனின் போதை நடனத்தைக் கவனிக்கத் தொடங்கியது. அவனைத் தங்களின் கூந்தல்களாலும் தங்கள் இடுப்புகளின் களிவெறியேற்றும் அசைவுகளாலும் சீண்டிய பெண்கள் மேலும் உற்சாகமாயினார். சோடியம் குழல் விளக்குகளும் அணைந்து அணைந்து எரிய, வண்ணக் குமிழ் விளக்குகளின் ஒளிப்புள்ளிகள் மதுக்கூடமெங்கும் அலைய பெண் தலைகள் கொண்ட சர்ப்பங்களின் நடனம் உன்மத்தம் ஏற்றுவதாய் இருந்தது.

குரங்குக்குட்டிகளை மாதவன் முன் ஒன்றும் பின் ஒன்றும் அணைத்ததான பிரமையிலிருந்தான். மதுக்கூடத்தின் கண்ணாடியைத் தன் காமெரா வழி பார்த்த மிருதுளாவுக்கு இரு பெண் தலை சர்ப்பங்களுக்கு இடையில் சிக்கிய உடலாய் மாதவன் தெரிந்தான். மாதவனோடு நடனமாடிய இரு பெண்களும் அவனை முன்னும் பின்னுமாய் கட்டி அணைத்தபடியே தொடர்ந்து நடனமாடத் தலைப்பட்டனர். அவர்கள் தங்கள் கூந்தல்களை ஒய்யாரக் கொண்டையாய் இப்போது தூக்கிக் கட்டியிருந்ததால் அவர்கள் முதுகுகளில் இருந்த சர்ப்பங்கள் விளக்கொளிகளின் அலைவுறுதலுக்கு ஏற்ப  நெளிவதான காட்சியைத் தோற்றுவித்தன. முன்னிருந்த பெண்ணைத் தழுவியிருந்த மாதவனுக்கோ தான் தடவுவது பெண்ணின் முதுகு என்று தெரிந்திருக்கவில்லை. அவன் குரங்குக்குட்டியொன்றின் வெல்வெட் முதுகு ஒன்றினை தடவுவதாகவே நினைத்திருந்தான். மாதவனை அவன் பின்புறமிருந்து தழுவியிருந்த பெண்ணின் கைகளும் மாதவன் முன்னிருந்த பெண்ணின் முதுகு வரை நீண்டன.

பின்னணியில் மதுக்கோப்பைகள் கருங்கல்லில் மோதி உடைவதான ஒலிகளுடன் இசை தொடர்ந்தது. ஓய்யாரக்கொண்டை பெண் தலைகள் மதுக்கோப்பைகள் உடைய உடைய அவைகளுக்கு ஏற்ப சிலிர்த்து கண்களை போதையில் மீண்டும் சொருகுவதான பாவனைகளைக் காட்டின. இரு சர்ப்பங்களின் வழவழத்த நெளிவுகளுக்குள் சிக்கிய மாதவனின் உடலையும் தலையையும் பார்த்த மிருதுளாவுக்கு அந்தக் காட்சியை கல்லாய் எங்கேயோ பார்த்திருப்பதாய் நினைவில் தட்டியது. பெண்தலை சர்ப்பங்களிடையே சிக்கிய மாதவன் அவளுக்கு மேலும் வசீகரமானவனாய்த் தோன்றினான். சட்டென்று மிருதுளாவுக்கு நினைவு வந்தது. கோவில் பிரகாரங்களில் வால் நுனிகளில் நின்று ஒன்றையொன்று பின்னி ஓரு தலையாய் நிற்கும் சிறு கற்சிலைகளுள் ஒன்று உயிர் பெற்றுவிட்டதோ? அப்படியா? உண்மைதானா? சிறு கற்சிலை கல் தூணாகிவிட்டதா?

மீண்டுமொருமுறை மதுக்கோப்பைகள் சிலீர் சிலீரென இசையில் உடைய மதுக்கூடத்தின் நிலைக்கண்ணாடி பாகாய் உருகி வழிய ஆரம்பித்தது. கண்ணாடிக் குழைவின் உருகிய பாகின் வழி மாதவன் தான் அணைத்த குரங்குக்குட்டியோடு தாவி கண்ணாடியினுள் நுழைந்தான். மிருதுளா அவனை போதையூட்டப்பட்டவனாக ஒரு கணம் கூட அவதானிக்கவில்லை. அவளுக்கு அவனுடைய முகமூடி கழன்று விழுந்து அவனுடைய நிஜ முகம் இந்தப் பாம்பு நடனத்தின் மூலம் தெரிவந்துவிட்டதாக நினைத்து கோபம் கலந்த ஏமாற்ற உணர்வை அடைந்தாள். மாதவனை ஏதாவது ஒரு விதத்தில் தண்டிக்கவேண்டும் என்று மனதிற்குள் கருவிக்கொண்டாள். இசையாய் உடைந்த மதுக்கோப்பைகள் கிரேக்க மதுக்கோப்பைகளோ? அவைகளின் அடிப்பாகத்தில் டயனோஷியசின் உருவம் செதுக்கப்பட்டிருந்ததா? மதுவின் திரவப் படலத்தில் தன் முகம் பார்க்கிறவன் தன்னைக் காண்கிறானா டயனோஷியசின் உருவத்தைப் பார்க்கிறானா? மிருதுளாவின் எண்ணங்கள் அவள் மேஜையில் இருந்த கிரேக்க மதுக்கோப்பையைச் சுற்றியும் வந்து கொண்டிருந்தன.

கன்ணாடிக்குள் நுழைந்துவிட்ட மாதவனோ ஆரஞ்சு நிற மேகங்கள் நிறைந்த கடற்கரையில் இருந்தான். அதிகாலை. கடற்கரை. நித்தம் சிறுகாலை வந்துன்னை சேவித்தே, வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை என்று ஏதேதோ மனனம் செய்த வார்த்தைகள் எப்போதோ கேட்ட வார்த்தைகள் மாதவனின் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. முப்பத்தியிரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் பிரஜாபதியிடம் திரும்பிய இந்திரனா மாதவன்?. ஆனால் எந்த ஜென்மத்தில்? ஜென்மேந்திரியங்களைக் கடக்கவில்லையா மிருதுளாவும் தானும் ஒவ்வொரு கண்ணாடி தாண்டும்போதும்? சர்ப்பங்கள் இறுக்க கடற்கரையில் நடனம் தொடர்ந்தது. 

மதுவோடு என்ன போதைமருந்தை கலந்திருப்பார்கள் இந்த நடன விருந்தினர் என்று யோசித்தாள் மிருதுளா. வேறு ஏதோ கனவுகளையும் பிரேமைகளையும் உருவாக்கும் போதையை உட்கொள்ளாமல் மாதவன் இந்த மாதிரியான நடத்தையில் ஈடுபட்டிருக்கமாட்டான் என்று அவள் தனக்குள் சொல்லிக்கொண்டாள். மாதவன் கண்ணாடியின் முன் இரு பெண்களின் அணைப்பில் லயத்தோடு ஆடிக்கொண்டிருந்தான். அவனை வேலையை விட்டு நீக்கிவிடுவார்கள் என்று மிருதுளா நினைத்தாள். ஆனாலும் மதுக்கூடத்திற்குக் கீழே இறங்கிச் சென்று அவனை மீட்டெடுத்துக் கூட்டி வரவேண்டும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. அவன் அதிக போதையிலும் காமக்களியாட்டத்திலும் நெஞ்சு வெடித்து இறந்துவிடுவானோ என்று சில வினாடிகள் பதறினாள். ஆனாலும் அவள் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. தன்னைத் தவிர ஹோட்டலின் மேல் தள நிர்வாகத்தினர் யாருக்கும் மாதவனின் நிலைமை தெரியக்கூடாது என்று அவள் கவனமாக இருந்தாள். அவள் மேலதிகாரி அவள் மேஜையை நோக்கி வந்த போது அவள் தன்னிடமிருந்த அலங்கார கிரேக்க மதுக்கோப்பையை காட்டி அதைப் பற்றி பேசி அவர் கவனத்தைத் திசை திருப்பினாள். கிரேக்க மதுக்கோப்பைகள் உள்ள மதுக்கூடம் இன்னும் அழகு பெறும் என்று அவள் சொன்னதைக்கேட்ட அவர் ஆமாம் நீயும் மாதவனும் வாங்கி வந்த  கண்ணாடியைப் போல என்று சொல்லி நகர்ந்தார்.

மாதவன் குரங்குக்குட்டியாய் தன்னை உணர்ந்தான். இரு பாம்புகளுடையே மாட்டிக்கொண்ட குரங்குக்குட்டியாய் அவன் கடற்கரையில் நடனமாடிக்கொண்டிருந்தான். சர்ப்பப்பெண்கள் அவன் உடலை இறுக்கி மேலும் மேலும் பிணைத்தார்கள். அவன் குரங்குக்குட்டி விரல் நகங்களினால் அவர்களைக் கீறினான். கிறீச்சிட்டு கிறீச்சிட்டுக் கீறினான். அவனுடைய ஓவ்வொரு கீறலும் சர்ப்பப்பெண்களிடம் அதீத தாபத்தினை ஏற்படுத்தின. கடற்கரை பொன்னிறமாய் நீண்டு கிடந்தது. சர்ப்பப்பெண்களின் ஒய்யாரக் கொண்டைகள் தளர்ந்துவிட்டிருந்தன. அவர்கள் மாதவனின் இடுப்பைப் பிடித்துக்கொண்டு இரு புறமும் இழுத்து இழுத்து நடனமாடினர்.

“கண்ணாடிகளின் மேற்புறங்கள் கள்ளமற்றவையல்ல அவை ஆழ்பிரதிகள் இருப்பதான மாயைகளை உண்டாக்குகின்றன. ஆழ்பிரதிகள் எவற்றுக்குமே இல்லை எல்லாமே மேற்புறங்கள்தான்”  என்று கிரேக்க மதுக்கோப்பையின் அடியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதை வாசித்தவாறே மிருதுளா மாதவனின் களி நடனத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கேமராவே அவள் கண்ணாகிவிட்டதுபோல அவள் இயக்கமற்று உறைந்திருந்தாள்.

எவ்வளவு நேரம் மிருதுளா மாதவனை மட்டுமே  பார்த்துக்கொண்டிருந்தாள் என்று சொல்வதற்கில்லை. தற்செயலாய் அவளுக்கு மாதவன் கொடுத்த பரிசுப்பொதியை பிரித்தே பார்க்கவில்லையே என்பது நினைவுக்கு வந்தது. அவள் தன் மேஜையின் கீழ் இழுப்பறையில் இருந்த பரிசுப்பொதியை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். குரங்குக்குட்டித் தோள்ப்பை! அதைத் தடவி தோளில் மாட்டிப்பார்த்தாள். அதன் வெல்வெட்தன்மை அவளை வெகுவாக ஆசுவாசப்படுத்தியது.

ஏதோ ஒரு சக்தியால் உந்தப்பட்டவள் போல மிருதுளா படபடவென்று கீழே மதுக்கூடத்திற்கு இறங்கிப் போனாள். நடனக்கூட்டத்தினரை விலக்கி நடுவில் இரு பெண்களோடு ஆடிக்கொண்டிருந்த மாதவனைக் கையைப்பிடித்து இழுத்தாள். அவன் கழற்றி எறிந்திருந்த அவனுடைய சட்டை, டை, பனியன் ஆகியவற்றைப் பொறுக்கினாள். மாதவனைத் தரதரவென்று மாடிப்படிகளில் இழுத்து வந்து அவனைத் தன் அலுவலகத்தில் இருந்த பாத்ரூமிற்குள் தள்ளினாள். ஹேண்ட் ஷவரினால் அவன் முகத்தில் தண்ணீரை அடித்தாள். அவனுடைய பனியன், சட்டையை மாட்டிவிட்டாள். தன் இருக்கையில் அவனை அமரவைத்து அவன் கையில் கிரேக்க மதுக்கோப்பையில்  சுத்தமான நீரை ஊற்றி அவனுக்கு புகட்டி விட்டாள். மாதவனுக்கு சிறிது தெளிர்ச்சி ஏற்பட்டது. அவர்கள் இருவரும் பிறர் பார்வைக்கு நல்ல ஜோடி என்பதாகவே தோற்றமளித்தனர்.

 

http://mdmuthukumaraswamy.blogspot.co.uk/2013/02/blog-post_15.html

காதலன் காதலி ஆயினும் இருவர்க்கும் இடையே உள்ள முரண்களைச் சொன்ன விதம் அழகு . ஆனாலும் அழகு அறிவில் மிகுதியான மிருதுளாவை இறுதியில் சாதாரண பெண் இயல்பிற்கு கொண்டு வந்ததை ஏற்கமுடியவில்லை . இணைப்பிற்கு நன்றி கிருபன் .

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றுதான். ஆனால் ஒருவன்மேல் ஆசை கொண்டால் பெண் எத்தனையைச் சகிகவேண்டி உள்ளது. நீங்கள் ஒரு கதை எழுதுங்கோவன் கிருபன் :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒரு கதை எழுதுங்கோவன் கிருபன் :rolleyes:

 

தினமும் படிப்பவையே மலைப்பையும் பிரமிப்பையும் வியப்பையும் தருவதால் கதை எழுதலாம் என்ற  யோசனை மங்கி மறைந்து போகின்றது. அத்தோடு ஏகாந்தமும், அமைதியும் உள்ள சூழல் இருந்தாலும் வேலைப் பளுக் காரணமாக சக்தி உறிஞ்சப்பட்டு உற்சாகம் வடிந்து போய்விடும் மாலைகளில் எதுவும் எழுத மனம் வருவதில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.