--கொழும்பில் நடந்த பெளத்த மாநாடு--
சிங்கள அரசியல் தலைவர்களுக்கு வழங்கிய செய்தி!
--- ---
*வடக்கு கிழக்கு உட்பட இலங்கை முழுவதும் பெளத்த தொல்லியல் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம். தடை விதிக்க முடியாது.
*பௌத்த சமயம் தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு அநுர பொறுப்புக் கூற வேண்டும்...
*பிக்குகள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு
---- ----- -----
இலங்கைத்தீவில் பௌத்த சமயத்திற்கும் பௌத்த தேரர்களுக்கும் ஏற்படும் அழுத்தங்கள், புத்த சாசனம் மற்றும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத் தீவின் தற்போதைய நிலைமை குறித்த கவலைகளை வெளிப்படுத்தி நடைபெற்ற பௌத்த மகா சங்க மாநாடு, சிங்கள அரசியல் தலைவர்களுக்கு பலவிதமான செய்திகளை வழங்கியுள்ளன.
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மாநாட்டில், அரசாங்கம் பௌத்த சமயவிதிகளின் பிரகாரம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற போதனைகள் முன்மொழியப்பட்டன.
பேராசிரியர் கோட்டாபிட்டியே ராகுல தேரர், அநுர அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து உரையாற்றினார். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பௌத்த சமயத்தை மதிக்கவில்லை எனவும் குறை கூறினார்.
அதேவேளை --
இலங்கையின் அரசியல் யாப்பில் உள்ள பௌத்த சமய முன்னுரிமையின் போதாமைகளை நிவர்த்தி செய்தல், பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு பொரளையில் உள்ள இலங்கை பௌத்த மகா சம்மேளன மண்டபத்தில் இடம்பெற்ற மாநாட்டில், ஆயிரத்துக்கும் அதிகமான பௌத்த தேரர்கள் பங்குபற்றியிருந்தனர்.
ஆனாலும் --
இந்த மாநாடு அஸ்கிரிய, மல்வத்த மற்றும் அமரபுர பௌத்த பீடங்களின் உத்தியோகபூர்வ பங்கேற்பு இன்றி தனிப்பட்ட தேரர்களின் பங்கேற்புடன் நடைபெற்றதாகவே உள்ளகத் தகவல்கள் கசிந்துள்ளன.
முத்தெட்டுவே ஆனந்த தேரர் முக்கிய உரையாற்றினார்.
இலங்கைத்தீவைப் பாதுகாப்பது மற்றும் பௌத்த சாசனம், கலாசாரம் மற்றும் தேசிய மரபுரிமைகளுக்கு எதிராக எழுந்துள்ள சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில், அரசியல் - பொருளாதார நலன்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என ஆனந்த தேரர் மாநாட்டில் வலியுறுத்தினார்.
அதேவேளை, பௌத்த மகா சங்க மாநாடு எந்த ஒரு அரசியல் நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டது அல்ல, இலங்கையின் கலாசாரம், மொழி மற்றும் நாகரிகத்தைப் பாதுகாப்பது பிரதான நோக்கம் என மிகிந்தலை விகாராதிபதி மாநாட்டில் நிகழ்த்திய விளக்கவுரையில் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக --
மிஹிந்து தேரர் கொண்டு வந்த பௌத்த விழுமியங்கள் தற்போது சிதைந்து வருகிறது. அதனைத் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ஏனைய சிங்களத் தலைவர்களுக்கு சுட்டிக்காட்டவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்றும் தேரர் விளக்கினார்.
பௌத்த மதத்தையோ அல்லது பௌத்த கலாசாரத்தையோ அழித்துவிட்டு எவராலும் இந்த நாட்டில் ஆட்சி செய்ய முடியாது என மிகிந்தலை விகாராதிபதி இடித்துரைத்தார்.
அத்துடன்---
தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்கள் ஆக்கிரமிக்கப்படுவது குறித்தும், பௌத்த உரிமைகள் பறிபோவது குறித்தும் பௌத்த தேரர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்துவதாகவும், கடந்த காலங்களில் சீகிரியா போன்ற இடங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளானபோது, மகா சங்கத்தினர் தலையிட்டுப் பாதுகாத்ததாகவும் விகாராதிபதி சுட்டிக்காட்டினார்.
சமூக ஊடகங்களில் பௌத்த மதத்திற்கு எதிராகவும், புத்தர் சிலைகளை அவமதிக்கும் வகையிலும் வெளியாகும் பதிவுகள் குறித்து தமது கடும் அதிருப்தியை வெளியிடுவதாகவும், இத்தகைய செயல்களைப் பார்த்துக் கொண்டு மகா சங்கத்தினர் அமைதியாக இருக்க முடியாது என்றும் உரத்துக் கூறிய தேரர், ஜனாதிபதி அநுரவும் அவரது அரசாங்கமும் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இது பற்றிய அறிக்கைப் பிரகடனம் ஒன்றும் மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
பௌத்த சமயத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்றும் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் --
சட்ட நடவடிக்கைகள் மூலமாகவோ அல்லது அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலோ, பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கான தேரர்களின் பயணத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அரசாங்கத்துக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் எதிர்கொள்ளும் அரசியல் சிக்கல்கள் பற்றி எடுத்துக் கூறியதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மாநாட்டில் பகிரங்கமாகக் கூறினார்.
அதாவது --
இந்த பௌத்த மாநாட்டை நிறுத்துங்கள் என்ற தொனியில் அநுர பேசியதாகவும், பௌத்த சமய முன்னுரிமைக்கு இடமளிப்பதாக அநுர உறுதியளித்தார் என்றும் தெரிவித்த ஆனந்த தேரர், எக் காரணம் கொண்டும் இந்த மாநாட்டை நிறுத்தப் போவதில்லை என தான் பதிலுக்குக் கூறியதாகவும் விபரித்தார்.
'தன்னையும் திட்டுகிறார்கள்' என்று அநுர தொலைபேசியில் கூறியதாகவும், “உங்களைத் திட்டினால் எனக்கு பிரச்சனை இல்லை” என தான் பதிலளித்தாகவும் தனது உரையில் விபரித்த ஆனந்த தேரர், இந்த மாநாட்டை நிறுத்தி தனது அரசாங்கத்துக்கான அழுத்தத்தை குறைப்பதே ஜனாதிபதி அநுரவின் நோக்கமாக இருந்தது என்றும் ஆனந்த தேரர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அநுர அரசாங்கம் பௌத்த சமயத்திற்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என பௌத்த தேரர்கள் ஒருமித்த குரலில் கருத்துரைத்தனர்.
அதேவேளை --
திரி-நிகாய மகாநாயக்க தேரர்கள் உட்பட மூன்று பிரிவுகளின் உயர் சங்க சபைகள் இந்த மகா சங்க மாநாட்டில் பங்கேற்க அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் அவர்கள் சமூகமளிக்கவில்லை எனவும் இருந்தாலும், ஆசிச் செய்தியை அவர்கள் அனுப்பியதாகவும் தினியாவெல பாலித தேரர் மாநாட்டில் தெரிவித்தார்.
சமூக ஊடகங்கள் மூலமாகவும் சில குழுக்களாலும் பௌத்த பிக்குகள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால், இந்த மாநாட்டின் தேவை எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டிய தேரர், தசராஜ தர்மத்தின்படி இலங்கைத்தீவை ஆளும் எந்தவொரு தலைவரும் மகா சங்கத்தினரின் ஆசிகளைப் பெறுவார்கள் என்றும் விளக்கமளித்தார்.
பௌத்த மகா சம்மேளனம், கொழும்பு இளைஞர் பௌத்த சங்கம் மற்றும் தாய்நாடு பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் உரையாற்றினர்.
பிரதானமாக நான்கு அம்சங்களை இந்த மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகளில் இருந்து அறிய முடிகிறது.
ஒன்று - தொல்லியல் ஆராய்ச்சிகள், தொல்பொருள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் போது பௌத்த தேரர்களுக்கு முக்கிய இடமளிக்கப்பட வேண்டும்.
இரண்டாவது - பௌத்த தேரர்களின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடக் கூடாது. ஆனால் அரசாங்க விதிமுறைகள் சட்டங்கள் போன்றவற்றுக்கு பௌத்த தேரர்கள் மதிப்பளித்து செயற்படுவர். அத்துடன் பொலிஸாரின் ஒத்துழைப்பு கோரப்படும்.
மூன்றாவது – அரசியல் தலைவர்கள் பௌத்த தேரர்களின் பரிந்துரைகளைப் பெற வேண்டும். அதாவது தசராஜ தர்மத்தின்படி செயற்பட வேண்டும். ஆசியும் பெற வேண்டும்.
நான்காவது - நிதியுதவிகள் என்ற பெயரில் வல்லாதிக்க நாடுகள் இலங்கையின் இறைமையில் தலையிட அனுமதிக்க முடியாது.
இந்த நான்கு அம்சங்களும் பௌத்த தேரர்களின் உரைகளிலும் பிரகடனத்திலும் தென்பட்டதாக மாநாட்டில் பங்கு பற்றிய சில சிங்கள செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை ---
இந்த பௌத்த மாநாட்டுக்குத் தேவையான ஒத்துழைப்புகள் அனைத்தையும் அரசாங்கம் செய்து கொடுத்ததாக ஜனாதிபதி அநுரவின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க தெரிவித்தார்.
அதேவேளை மெதகொட அபயதிஸ்ஸ தேரர், அமெரிக்க - இந்திய அரசுகள் தொடர்பாக மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னர் கடும் விமர்சனங்களை செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
குறிப்பாக --
மாகாண சபை தேர்தல் நடைபெற்றால்,தேர்தல் நடைபெற்று முடிந்த அடுத்த நாள் வடக்கு கிழக்கில் அமெரிக்க - இந்திய அரசுகளின் தலையீட்டில் மீண்டும் தமிழ்ப் பிரிவினைக்கு சார்பான திட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் எச்சரிக்கை விடுத்தார்.
அதேவேளை, இந்த மாநாட்டின் எதிரொலியாக அதாவது அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு மாற்றீடாக ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறவுள்ள இலங்கை அமரபுர மகா நிக்காயத்தின் உபசம்பத விநாயக நிகழ்வுக்கு, அனுசரணை வழங்க அநுர அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சென்ற வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அநுரவின் செயலாளர் கலாநிதி சனத்
குமநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கை அமரபுர மகா நிகாயத்தின் பிரதான செயலாளர், ராஜகாய பண்டித தர்ஷனபதி பலபிட்டியே சிறிசீவலி தேரர் ஆகியோர் சந்திப்பில் பங்குபற்றினர்.
எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை களுத்துறை போதி மரத்திற்கு அருகில் அமைந்துள்ள சீமா மலகாவில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட புதிய பௌத்த துறவிகள் பங்கேற்கும் வகையில் நிகழ்வு நடைபெற உள்ளது.
ஜனாதிபதி அநுர தலைமை தாங்குவார் என சிறிசீவலி தேரர் வெள்ளிக்கிழமை காலை ஊடகங்களுக்கு அறிவித்தார்.
அரச நிறுவனங்கள், முப்படைகள் மற்றும் பொலிஸார் மற்றும் பல தனியார் நிறுவனங்களின் ஆதரவுடன் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது இலங்கை அரசின் நிகழ்வு என சிறிசீவலி தேரர் கூறினார்.
ஆனால் ---
இதனை அரச நிகழ்வாக நடத்துவதால், அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அநுர அரசாங்கத்துடன் முரண்படக்கூடும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலங்களிலும் அமரபுர மகா நிக்காயத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-
By
ஈழப்பிரியன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.