Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முடிவாகிப் போனது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அவள் மனம் போலவே எங்கும் இருண்டுபோய் அடை மழை பெய்துகொண்டிருந்தது. பஸ்ஸில் ஓர இருக்கையில் அமர்ந்திருந்தபடியால் பூட்டிய கண்ணாடி யன்னல்களின் ஊடே தெறிக்கும்மழை நீர் அவள் முகத்திலும் இடைக்கிடை விழுந்தது. ஆனாலும் அதைத் துடைக்க வேண்டும் என்னும் நினைப்பே அற்று மழை நீரில் இருண்ட வானத்தைப் பார்ப்பதற்கான முயற்சியில் தோற்றுக்கொண்டிருந்தாள் சந்தியா.
ஏன் தான் இந்த உலகில் பிறந்தேனோ என்னும் சலிப்பு மனதில் எழ, எனக்கு வேறு வழியே இல்லை என்னும் தீர்மானத்துக்கு வருவதைத் தவிர வேறு மாற்று வழி தெரியாது, பெருமூச்சு ஒன்றே வெளிவந்து அவளை அசுவாசப்படுத்தியது.
வாழ்க்கை வாழ்வதற்குத்தான் எனில் ஒன்றை மட்டும் இறுகப் பற்றியபடி ஏன் வாழ்வை நாம் எதிர் கொள்ள வேண்டும். அந்த ஒன்றே யாதுமாகி, எதையும் அலட்சியம் செய்யவைத்து, மற்றவரின் ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் அலட்சியப்படுத்தி, மற்றவர் ஏன் அவளின் உற்ற நண்பி சுசியின் வார்த்தைகள் கூட அவள் செவிகளில் ஏறாது எல்லாமே வீணாகிப்போய் இப்ப தீர்மானம் எடுக்கும் வரை வந்துவிட்டது.
சுசியைப் போல் ஒரு நண்பி கிடைக்க மாட்டாள். கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளுமே இவளை மீட்பதற்காக அவளின் போராட்டம் தோல்விகண்ட பின்னும் தன்மேல் வெறுப்பு வராது தொடர்ந்தும் அவளால் எப்படி அன்பு செலுத்த முடிகிறது என எண்ணியவள் ஐந்து ஆண்டுகளாகத் தன் கூடவே இருக்கும் சுசியை விட்டுவிட்டு எப்படிப் போகப் போகிறேன். தான் இல்லாமல் அவள் எப்படித் தவித்துப்போவாள் என எண்ணவே கண்கள் நிரம்பி ஓரம் நனைக்கும் நீரைத் தடுக்க முடியவில்லை.
இந்த ஐந்து ஆண்டுகளில் சுசி இவளை இதுபோல் திட்டியதுமில்லை. இவளைக் குறை சொன்னதுமில்லை. சுசி சரியான சுத்தம். படுக்கை, மேசை,கதிரை, சமையலறை, குளியலறை எல்லாமே அவள் கை பட்டு பளிச்சென்று இருக்க, இவள் படுக்கை விரிப்பைக் கூட உதறிப்போடப் பஞ்சிப்படுவாள். இருவரும் மாறிமாறிச் சமையல் செய்வது என்று முடிவாகித்தான் ஒரு அறையில் இருப்பதற்கு முடிவெடுதாலும் இவளின் சோம்பல் காலைத் தூக்கத்தை இழக்க விடவில்லை. அரைவாசி நாட்கள் சந்தியா சமைக்க வேண்டிய சமையலைச் சுசியே சமைத்துவிட்டுப் போய் விடுவாள். ஒருநாள் கூட இன்று உன் முறை. நீ சமைக்கவில்லை என்று சொல்லியது இல்லை. ஆனால் இவளின் மனம் குறுகுறுக்க சுசிக்குப் பிடித்த எதையாவது வாங்கிவந்து கொடுத்து சுசி சமாதானம் அடைகிறாளோ இல்லையோ இவள் சமாதானமாகிவிடுவாள்.
தொடரும் இவள் நினைவுகளுக்குத் தடை போடுவதுபோல பேருந்து குலுங்கலோடு நிற்க, நினைவு களைந்து இறங்கும் இடம் வந்தது நினைவில் உறைக்க ஒரு பதைப்புடன் இறங்கினாள்.
 
*********************
 
தூரத்தில் குமார் இவளுக்காகக் காத்திருப்பது தெரிந்தது. அவனைக் கண்டதும் மனம் அவளை அறியாமலே மகிழ்ச்சியில் திளைப்பதை அவளால் உணரக்கூடியதாக இருக்க ஓட்டமும் நடையுமாக அவனுக்கருகிற் சென்று அவன் முகத்தைக் காதல் நிரம்பி வழியப் பார்த்தாள்.
அவன் முகம் இருண்டுபோய்க் கிடந்தது. அதைப்பார்த்த சந்தியாவுக்கு நெஞ்சில் பயம் பரவ என்ன குமார் பிரச்சனை என்று கேட்டாள். அவள் கேட்டது அவளுக்கே கேட்காததுபோல் மெலிந்துபோய் வந்தது குரல். அவனுக்கு அவள்மேல் உள்ள காதல் பற்றி எந்தச் சந்தேகமும் அவளுக்கு இல்லை. தன்னை விட அவன் தான் இவளில் பயித்தியமாகிவிட்டான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை.
எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சு போச்சு சந்தி என்றான் சோர்ந்த குரலில். என்ன நடந்தது என்றாள் மீண்டும் இவள். "யார் சொன்னார்களோ தெரியவில்லை. என் மாமாக்கு யாரோ சொன்னார்கள் என்று நேற்று எல்லோரும் வீட்டுக்கு வந்திட்டினை. நான் ஒண்டையும் மறுக்கேல்லை. செய்தது செய்ததாவே இருக்கட்டும். இனி உன்னை விட்டுவிடச் சொன்னார்கள். என்னால் முடியாது என்றுவிட்டேன். பாவம் சியாமி தான் அழுதுகொண்டே இருந்தவள். அவளை நினைக்கத்தான் பாவமாக இருக்கு என்றுவிட்டு நிறுத்தினான்.
 
அவன் சந்தியாவைச் சுருக்கிச் சந்தி என்று அழைக்கும் போதில் உலகமே தன் காலின் கீழானதாய் இவள் உணர்வாள். இன்னொருத்தியின் கணவன் என்பதெல்லாம் அவளுக்கு உறைக்காது போய் எத்தனையோ நாட்களாகிவிட்டன. அவன் சந்தியாவுக்கு முன்னாலே எப்போதும் தன் மனைவியின் பெயரையோ அல்லது கதையையோ கதைக்கவே மாட்டான். இன்று சியாமி என்று சுருக்கிச் சொன்னதைக் கேட்டதும் இவள் மனதில் ஒரு பதட்டம் வந்தது உண்மை. ஆனாலும் அதைக் காட்டாமல் பிறகு என்ன நடந்தது என்றாள். ஒண்டும் நடக்கேல்லை. நான் பதிலே சொல்லாமல் இருந்திட்டு இப்ப உமக்கு முன்னால வந்து நிக்கிறான். நீர் கொஞ்சம் கவனமாத் திரியும். சியாமியிண்ட தமையன்மார் மோடன்கள். ஏதும் செய்தாலும் செய்திடுவாங்கள் என்றபடி யோசினையில் ஆழ்ந்தான்.
 
இப்படிச் செய்தால் என்ன ?? நீர் வேற வீடு மாறிப் போய்ய் இருமன் சந்தி. அப்பதான் எனக்கு நின்மதி என்பவனை அன்பு ததும்பப் பார்த்தால் சந்தியா. இவனுக்கு என்மேல் அக்கறையும் அன்பும் இருக்கிறது. அதனால்த்தான் கவலை கொள்கிறான் என்ற நம்பிக்கை வர, "வீடுமாறிப் பிரயோசனம் இல்லை குமார். அவை நினைச்சா வேலை செய்யிற இடத்துக்குத் தேடி வர ஏலாதே?? யோசிப்பம் என்ன செய்யலாம் எண்டு" என்று இவள் கூறிக்கொண்டிருக்கும் போதே இவளின் கைகளைத் தரதர என்று இழுத்துக்கொண்டு அந்த முட்டுச் சந்தில் நுழைந்தான் குமார். அவனின் அவசரமும் வேகமும் இவளுக்கு எதையும் புரியவைக்க முதல் இவள் கைகளை இழுத்து அவனிடமிருந்து விடுவிக்க இயலாது போகவே தன் சக்தி எல்லாம் திரட்டி அவனின் வேகத்துக்குத் தடை போட்டபடி தன்னைத் தானே தடுத்து நிறுத்தினாள்.
 
சியாமளான்ர தமயன். இங்க எப்பிடி மோப்பம் பிடிச்சு வந்தவன் என்றான் பயத்தில் வியர்த்தபடி. உப்பிடிப் பயந்து ஓடி என்ன செய்யப்போறீங்கள் குமார். எவ்வளவு நாளைக்கு எண்டு ஓடுவீங்கள். நான் பாவம் எண்டு பார்த்தது. இனிச் சரி வராது. நீங்கள் தான் இனி முடிவெடுக்க வேணும் நான் வேணுமோ சியாமளா வேணுமோ எண்டு என்று கூறியபடி அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் சந்தியா. சந்தியா அவசரப்படாதையும். ஒரு கிழமை நாங்கள் இரண்டு பேரும் சந்திக்க வேண்டாம். ஒரு கிழமைக்குப் பிறகு நான் உம்மைச் சந்திக்கிறன். நீரும் யோசியும் நானும் யோசிக்கிறன் என்றுவிட்டு திரும்பியும் பாராமல் செல்பவனை அதிர்ச்சியுடன் பாத்துக்கொண்டே நின்றாள் சந்தியா.
 
நான் அவசரப்பட்டுக் கதைத்துவிட்டேனோ?? என்னை விட்டுவிடுவாரோ ??? இல்லை. அவரால் என்னை விட்டுவிட்டு இருக்க முடியாது என்று ஆணித்தரமாக நம்பியபடி நடந்து சென்று வீட்டுக்குப் போகும் பேருந்துக்குக் காத்திருக்க ஆரம்பித்தாள். வேலைக்குப் போவதற்கான மனநிலை இன்று இல்லை. வீட்டுக்குப் போனதும் போன் செய்து சொல்லிவிட வேண்டியதுதான் என எண்ணிக்கொண்டாள்.
 
**********************************
 
குமார் இவளுக்கு பஸ்சில்த்தான் அறிமுகமானான். அவனின் பார்வையும் பேச்சும் கூட நேர்மையாகத் தெரிந்தது அவளுக்கு. சில ஆண்கள் போல் பல்லிளித்துப் பேசாதது கூட அவன்மேல் ஒரு ஈடுபாட்டைத் தோற்றுவித்தது எனலாம். யார் யாரிடம் காதல் கொண்டார்கள் என்றில்லாமல் இருவருக்குமே ஒருவரிடம் மற்றவர் ஈர்க்கப்பட்டு ஒருநாள் பார்க்காவிட்டால் கூட நாள் முழுதும் தொலைந்துபோனதை உணர்ந்து, அப்போதுதான் முதல் முதல் அவளுக்கு தவிப்பும் பயமும் கூடவே எழுந்தது. நான் அவனை நேசிப்பதுபோல் அவனும் என்னை நேசிக்கிறானோ இல்லையோ? என்னை அவன் நேசிக்காவிடில் என்னால் உயிர் வாழ முடியுமா என்றெல்லாம் எண்ணி எண்ணி காச்சலில் விழுந்தவள் எழுந்திருக்க முன்னரே அவனின் காதலை அவனாகவே வெளிப்படுத்தும் சந்தப்பம் வந்தது.
 
முதல் நாள் அவள் எழுந்திருக்க முடியாமல் அனத்தியத்தில் சுசி பயந்துபோய் தனக்குத் தெரிந்த வைத்தியரிடம் சென்று இவளுக்கு மாத்திரைகள் வாங்கி வந்து கொடுத்து வேலைக்கும் போகாது இவளுடனே இருந்து பார்த்துக்கொண்டாள். அன்று இரவு கொஞ்சம் சுகம் வந்ததுதான் ஆயினும் அடுத்தநாளே வேலைக்குக் கிளம்பியவளை சுசி வெளியே விடவே மறுத்துத் தானே அவளது வேலை இடத்துக்கும் தொலைபேசியில் சந்தியாவுக்கு வருத்தம் மாறவில்லை இன்றும் வரமாட்டாள் என்று கூறிவிட இவளுக்கு குமாரைப் பார்க்கமுடியாதே என்று பதைப்பு ஏற்பட்டது.
 
அவனின் தொலைபேசி இலக்கம் கூட அவள் வாங்கி வைத்துக்கொள்ளவில்லை. இருவரும் காலையும் மாலையும் ஒருமணி நேரம் சேர்ந்தே இப்பொழுதெல்லாம் பயணம் செய்வதால் அந்தத் தேவை ஏற்படவில்லை. ஐயோ குமார் என்னைக் காணாமல் தவித்திருப்பாரா? என்று இவளுக்கு ஏற்பட்ட தவிப்பிலும்  இயலாமையிலும் எழுந்து அங்குமிங்குமாக நடந்து திரிவதைக் கண்ட சுசி "என்னடி, ஏன் குட்டிபோட்ட பூனை போல் திரிகிறாய். நான் தான் போன் செய்து சொல்லிவிட்டேனே பிறகென்ன" என்று கேட்டுவிட்டு, வா வந்து படு என்றவுடன் இவள் போய் கட்டிலில் சரிந்து படுப்பதைத்தவிர வேறு வழி இருக்கவில்லை.
சுசியிடம் சொல்வோமோ என்று எண்ணிய நினைப்பை உடனேயே அழித்துவிட்டு எனக்கே என் விடயம் சந்தேகம். இதற்குள் உவளுக்குச் சொல்லி வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று எண்ணியவளுக்கு சிரிப்பு வந்தது. காச்சல் கண்ட வாய்க்கு சுசி ஆசையும் அன்புமாய்ச் செய்த புளிக்கஞ்சி கூடச் சுவைக்கவில்லை. அவன் என்னை எதிர்பார்த்து ஏமாந்திருப்பானா இன்றும். அல்லது என்னை மறந்துவிட்டிருப்பானோ என்று விரும்பியவாறெல்லாம் கற்பனையில் கண்டபடி மனதை அலைய விட்டவளுக்கு கதவு தட்டும் சத்தம் கேட்டது. ஆனாலும் எழும்ப மனம் இன்றி சுசி எழுந்து செல்வதையே பார்த்தபடி இருந்தாள்.
 
சுசி யாருடனோ மெதுவாகக் கதைக்கும் சத்தமும் பின் இவள் பக்கம் திரும்பி "சந்தியா வாரும் உம்மைத் தேடி வந்திருக்கினம்" என்று சொல்லிவிட்டு வாசல் கதவடியில் நிற்பதும் உணர்ந்து இவள் வேண்டா வெறுப்புடன் யார் என்றபடி வாசல்வரை சென்றவள், வாசலுக்கு வெளியே குமார் நிற்பதைக் கண்டதும் குமார் என்றாள் வாஞ்சையும் காதலும் ஆவலும் திகைப்புமாக. அவளின் குரலிலேயே சுசிக்குப் புரிந்திருக்க வேண்டும். உள்ளுக்கு வாங்கோ என்றுவிட்டு கடகடவென குசினுக்குள் சென்றுவிட்டாள்.
வாங்கோ குமார் என்று இவளும் அழைக்க தயக்கத்துடன் உள்ளே நுழைந்தவன், ஏன் உம்மைக் காணவில்லை இரண்டு நாளாக என்றான். எனக்கு சரியான காச்சல். இண்டைக்குத் தான் எழும்பி இருக்கிறன். என்னெண்டு வீடைக் கண்டுபிடிச்சியள் என்றாள்.
 
நேற்று உம்மைக் காணேல்ல. இண்டைக்கு வருவீர்தானே எண்டு இருந்தான். இண்டைக்கும் வரேல்லை எண்டதும் உமக்கு ஏதுமோ என்று நினைச்சு பயந்திட்டன். பஸ் ஸ்ராண்டில உமோட கதைச்சுக்கொண்டு நிப்பா ஒராள். அவவிட்டை விசாரிச்சன். முதல்ல ஒண்டும் சொல்ல மாட்டன் எண்டுவிட்டா. கட்டாயம் இண்டைக்கு சந்திக்கவேணும் அவசரம் என்றதும் தான்  குறிப்புச் சொன்னா. அதுதான் உடனேயே வந்திட்டன். உம்மைப் பார்த்தபிறகுதான் நின்மதியாக இருக்கு என்றவனை பார்த்தவளுக்கு சொல்லாமலே அவன் காதல் புரிந்தது.
 
 
இன்னும் வரும்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர் விறு விறுப்பா போகும் போல தெரியுது......

ம்ம் ... தொடருங்கள்!! கதை நல்லாய் தான் இருக்கு  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைதந்த புத்தன், மீனா, புங்கை ஆகியோருக்கு நன்றி

மிச்சம் எப்பப்பா  :D

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதன் பின் அவர்களிடையேயான நெருக்கம் அதிகமாகி ஒருவரை ஒருவர் பார்க்காது இருகும் நாள் இல்லை எனும் அளவில் அவர்கள் அன்பு இறுகிப் போனது. எத்தனை தவறான வாழ்வைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று சந்தியாவுக்குத் தெரிந்தே இருந்தாலும் அவளால் அதையிட்டு மனபூர்வமாக யோசிக்கவோ அதிலிருந்து வெளிவரவோ முடியவில்லை.

 

அதன் பின் சுசி வேலைக்குப் போகும் நேரங்களில் தன் வீட்டிலும் அவனது நண்பன் ஒருவனின் வீட்டிலுமாக இருவரும் தம் ஆசையைத் தீர்த்துக்கொண்டனர் தான். ஆனாலும் ஒருவருக்கு ஒருவர்மேல் வெறுப்போ சலிப்போ இன்றுவரை ஏற்பட்டதே இல்லை.

 

அவன் தன் மனைவியை அவளின் வேலையிடத்தில் காக்க வைத்துவிட்டு இவளின் வேலை முடியும் நேரம் இவளுடன் சேர்ந்து இவளைக் கொண்டுவந்து அவள் வீடுவரையும் விட்டுவிட்டு, மனைவியைப் போய்க் கூட்டிக்கொண்டு வீட்டுக்குப் போவான். இதை அவனே சொல்லக் கேட்டிருந்தாலும், "நான் தனியே போகிறேன் நீங்கள் வரவேண்டாம்" என்று அவளும் சொல்லவில்லை அவன் மனைவியும் சொல்லவில்லை. அவனும் அலுக்காது தன்  கடமைபோல் இருவருடனும் பயணிப்பதைக் கேட்டு சுசிதான் சத்தியாவை அப்பப்ப திட்டுவாள். "உனக்கும் வேலையில்லை அவனுக்கும் வேலையில்லை" என்று.

 

என்னதான் நண்பி என்றாலும், சுசி அவன் என்று திட்டும்போது இவள் மனதில் தடிகொண்டு அடிப்பதுபோல் இருக்கும். சுசி எனக்கு அவரைப் பிடித்து நானும் தான் அவரை விடமுடியாமல் இருக்கிறன். தயவுசெய்து அவன் இவன் என்று கதைக்காதே. என்னால் தாங்க முடியாமல் இருக்கு என்று. அந்த நேரம் சந்தியாவைப் பார்க்க சுசிக்கே பாவமாகத்தான் இருக்கும். ஆனாலும் தொடர்ந்தும் அவன் என்றே பேசி அவள் முகம் சுருங்க வைப்பாள்.

 

எத்தனை தடவை சுசி திட்டினாலும் அத்தனை தடவைக்கும் மேலாக அவன் மீதான விருப்பம் அளவுகடந்து அவளை முற்றுமுழுதாக ஆக்கிரமித்து மீண்டு எழவே முடியாத பள்ளத்தில் தள்ளித்தான் விட்டது.

 

*******************************************

 

அவனைச் சந்தித்துவிட்டு தீர்க்கமான முடிவோடு இருவரும் அடுத்த நாளைப் பற்றித் திட்டமிட்டுவிட்டுப் பிரிந்தபின் இப்பத்தான் அவள் பஸ்ஸை விட்டு இறங்கி மழைத் தூறலில் நனைந்தபடியே வீட்டுக்குப் போகிறாள். பாவம் சுசி இனித் தனிய இருக்கப் போகிறாள். எத்தனை வருட நட்பு. அவளை மீறிக் கண்ணில் நீர்முட்டி மழைநீருடன் கலக்க வீடு வந்து சேர்ந்தவள், இன்னும் நண்பி வராததால் தலையைத் துவட்டிவிட்டுச் சமைக்கத் துவங்குகிறாள்.

 

சுசி உள்ளே வரும்போது சமையல் மனம் மூக்கை நிறைக்க ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு வந்தவள், அறையைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போகிறாள். அத்தனை அழகாக என்றுமில்லாதவாறு அறை பளிச்சிடுகிறது.

 

என்னடி சந்தியா நடந்தது. உனக்குப் பித்தம் எல்லாம் தெளிஞ்சு போச்சா என பகிடியாகக் கேட்டபடி சுசி சந்தோசத்தில் சிரிக்க, "பகிடி விட்டது காணும் கெதியா முகம் கழுவிப்போட்டு வாடி சாப்பிட" என்று அழைக்கும் சந்தியாவை ஆச்சரியத்துடனும் அன்புடனும் பார்த்தபடி குளியலறைக்குச் செல்கிறாள் சுசி.

 

சுசி வெள்ளன வந்தால் சந்தியாவுக்காகச் சாப்பிடாது காத்திருப்பாள். ஆனால் சந்தியாவோ ஒருதடவை கூட சுசிக்காகப் காத்திருந்தது கிடையாது. சசி சாப்பிட்டாயா என்று கேட்டால் சாப்பிட்டிட்டன் என்ற பதில்வரும்.அதற்காக சந்தியா குற்ற உணர்ச்சி கொண்டதும் கிடையாது சுசி கோபித்ததும் இல்லை. சுசிக்குத் தெரியும் சந்தியாவால் பசி கிடக்க முடியாதென. அப்படிப்பட்டவள் இன்று இவளுக்காகக் காத்திருப்பது என்றால் ஆச்சரியம் ஏற்படாமல் என்ன செய்வது ?

 

இருவரும் அன்றுபோல் மகிழ்வாகக் கதைத்துச் சிரித்து இதுவரை சாப்பிட்டதே இல்லை. அன்று சுசியோ சந்தியாவோ அவனின் கதை கூட எடுக்காது பழைய நினைவுகளில் திளைத்து .... சுசி இன்று படம் பார்க்கப் போவோமா என்று சந்தியா கேட்க.... இல்லையடி இன்று எனக்கு அலுப்பா இருக்கு. சனி போவம் என்று கூறிய சுசி அன்றைய பொழுதின் மகிழ்வில் நின்மதியாகத் தூங்கிப் போனாள்.

 

தமது விடயம் தன் தந்தைக்கு எப்படித் தெரிந்துபோனது என்று சந்தியாவுக்கே இன்னும் புரியவில்லை. சுசி சொல்லவில்லை என்பதில் அவளுக்கு எந்த சந்தேகமும் இல்லை. எனக்குத் தெரியாமல் யாரோ என்னை கண்காணித்துக் கொண்டு இருக்கிறார்களோ என்னும் எண்ணம் மேலோங்க, அப்படி இருக்காது என்று எண்ணியவளுக்கு அவனின் மனைவியின் அண்ணன் மார் தான் நிட்சயம் சொல்லியிருக்க வேண்டும் என்று புரிந்தது.

 

அதற்கு அப்பா என்னிடம் வந்து கதைக்காமல் ஏன் குமாரை வெருட்ட வேண்டும். பாவம் அவர். எத்தனை பக்கத்தால் அவருக்கு நெருக்குதல். ஆனாலும் அப்பாவும் கதைத்தபடியால்த்தானே இத்தனை சீக்கிரம் நல்லமுடிவை நாங்கள் எடுக்கமுடிந்தது. இல்லை என்றால் குமாரும் என்ன செய்யிறது என்று தெரியாமல் ...... எல்லாம் நல்லதற்கே என்று எண்ணியவள், இன்றுதான் இங்கு கடைசி இரவு. அதன்பின் குமாருடன் நான் .... அன்று முழுவதும் தூங்காமலே சந்தியாவின் இரவுகள் கழிய காலையிலும் வெள்ளன எழுந்து தானே காலை உணவு செய்து தேநீர் கூட தயார் செய்து சுசியைத் திக்குமுக்காட வைத்தாள். 

 

அன்று சுசி வேலைக்குப் போக ஆயந்தமாக சந்தியாவும் எழுந்து வெளிக்கிட்டு வெளியே போகமுதல் சுசியை கட்டித் தழுவ, என்ன இவளுக்கு வந்தது. ஒரேயடியா என்னை அன்பில் குளிப்பாட்டுகிறாள் என்று எண்ண மட்டுமே முடிந்தது சுசியால். அவள் அணைப்பை விலக்காமல் இருக்க, "சரிசரி காணும் விடு" என்று சுசி சொன்னாலும் அதில் தன் நண்பிக்கு தன்னில் எத்தனை அன்பு என்னும் பெருமையும் முகமெங்கும் பிரகாசிக்க வைத்தது.

 

***************************************************************

 

மாலை ஐந்துமணி இருக்கும். சுசி வேலையை முடித்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்ப நினைக்க, இவளது மேசையில் போன் அலறியது. இந்த நேரம் யாராக இருக்கும் என எண்ணிக்கொண்டே போனை எடுத்தவள், உடனே ஓரிடத்துக்கு வரும்படி அழைப்புவர, என்ன ஏதென்று கூடக் கேட்காது ஓட்டோவை நிறுத்தி ஏறிய பின்னும் மனதின் பதட்டத்தில் மூளை மரத்துப்போக உடல் தொய்ந்து சாய்ந்தபடி இருந்தாள். எப்பிடி என் தொலைபேசி அவர்களுக்குக் கிடைத்தது என்று எண்ணியவளாய் இறங்கும் இடம் வந்ததும் காசைக் கொடுத்துவிட்டு மிகுதி கூட வாங்காது ஓட்டமும் நடையுமாக சென்றவளை அங்கு நின்ற கூட்டம் பதைக்க வைத்தது.

 

ஆட்களை விலத்திக் கொண்டு சென்றவள், அவர்கள் இருவரையும் கண்டு உயிர் பிளப்பதான வேதனையில் "ஐயோயிடி சந்தியா உதுக்குத்தான் போகேக்கை என்னைக் கட்டிப்பிடிச்சுக் கொஞ்சினாயா" என்று வீரிட்டவாறே பிணங்களுக்கருகில் வந்தவளை ஒரு பெண் போலீஸ் பிணத்தின்மேல் விழுந்து விடாதவாறு தடுத்து நிறுத்தி "யார் நீ" எனச் சிங்களத்தில் கேட்டது.

 

சிறிது நேரத்தின் பின்தான் சுசிக்குத் தெரிந்தது அவர்கள் இருவரும் தற்கொலை செய்துகொண்டனர் என்று.

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

அற்ப சுகத்துக்கு ஆசைப் பட்டு அற்பாயுளில் ... "முடிவாகிப் போனது"...!  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.