Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2016: கூட்டமைப்பிடம் எதிர்பார்ப்பது என்ன?

Featured Replies

 
2016: கூட்டமைப்பிடம் எதிர்பார்ப்பது என்ன?
 

தெய்வீகன்

2015ஆம் ஆண்டு, தனது சகல பொறுப்புக்களையும் புதிய ஆண்டிடம் கையளித்துவிட்டு காலாவதியாவதற்கு காத்திருக்கிறது.

தமிழர் அரசியலை பொறுத்தவரை மிகவும் முக்கியமான ஆண்டாக கருதப்படும் கடந்து செல்லும் இந்த வருடத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் என்ன சாதனைகளை படைத்தார்கள், அவற்றின் ஊடாக தமிழ் மக்கள் தங்கள் விடிவை நோக்கி எவ்வளவு தூரம் பயணித்திருக்கிறார்கள் என்பவற்றை ஆத்ம பரிசோதனை செய்து பார்த்தால், வெறும் கவலைகளையும் கண்ணீரையும் ஏமாற்றத்தையும்தான் அதிகம் எஞ்சிக்;கிடக்கிறது.

இதுதான் யதார்த்தபூர்வமான பதிலாகவும் இருக்க முடியும். எல்லாமும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் வாக்களிக்காவிட்டாலும் எஞ்சியவையாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பெரும் ஆட்சிமாற்றத்தையே ஏற்படுத்தினார்கள் தமிழ் மக்கள். தமது பலத்தை முரசறையும் அசுர நம்பிக்கையுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு தமது ஏகோபித்த அரசியல் ஆணையை வழங்கி அதனை தமக்கான அரசியல் சக்தியாகவும் தெரிவு செய்து முன்னிறுத்தினார்கள்.

தமது கடமைகள் அனைத்தையும் செவ்வன செய்த மக்கள், அதே நேர்த்தியுடன் அரசு இயந்திரமும் தமது பிரதிநிதிகளும் தங்கள் கடமைகளை செய்யவேண்டும் என்று எதிர்பார்த்திருந்தார்கள்.

ஆனால், கடந்த ஒரு வருடம், மக்களின் எதிர்பார்ப்புக்கு எவ்வாறான பரிசை அல்லது பதிலை வழங்கியிருக்கிறது என்பது யாவருக்கும் தெரியும். குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அடுத்த வருடத்திற்குள் அடியெடுத்து வைக்கும் „அலங்கோலமும்... அதனை சீர் செய்வதில் அந்த கட்சியில் உள்ளவர்கள் மேற்கொள்ளும் பகீரதப் பிரயத்தனங்களும் இவை எல்லாவற்றையும் பரிதாபத்துடன் பார்த்து கண்ணீர் சிந்துகின்ற தமிழ் மக்களின் மனநிலையும் „யாரொடு நோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்... என்ற வரிகளைத்தான் கோடிட்டு காட்டுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை பற்றியும் அதில் அங்கம் வகிப்பவர்களின் அரசியல் ஒழுக்கம் மற்றும் செல்நெறி குறித்தும் பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அந்த பெரும் சக்தியை அவ்வளவு விரைவாக உடைத்து எறிந்துவிட முடியாது. உடைத்து விடக்கூடாது என்ற அக்கறை பலருக்கு இருந்ததுண்டு.

அந்த ஓர் உரிமையான- உன்னதமான நோக்கத்தின் பாதையில் பயணிப்பதற்காக் கூட்டமைப்பின் தான்தோன்றித்தனமான- தவறுவிடுகின்ற போக்குக்களை கைகட்டி பார்த்துநிற்க முடியாது. கை காட்டி வழியனுப்பி வைக்கவும் முடியாது. அடுத்த ஐந்து வருடங்களுக்கு தமது இருப்புக்கான அரசியலை பெரு நம்பிக்கையுடன் தாரை வார்த்துக்கொடுத்திருக்கும் இந்த அரசியல் சக்தியை வழி நடத்துவது அனைத்து தரப்பினரும் கடமை ஆகும்.

அப்படியானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்லாமல் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் இதயசுத்தியுடன் அரசியல் பணி செய்யும் கட்சிகள் புதிய ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய சத்திய பிரமாணம் என்ன? மக்கள் சேவைக்காக தம்மை முன்னிறுத்தியுள்ள இந்த கட்சிகள் தம்மோடு செய்து கொள்ளவேண்டிய உறுதிப்பிரமாணம் என்ன? அதுதான் அரசியல் நேர்மை

இது ஒன்றும் பெரிய கோரிக்கையும் அல்ல. அதனை நிறைவேற்றுவது ஒன்றும் டைனோசருக்கு கோவணம் கட்டுவது போன்ற கஷ்டமான காரியமும் அல்ல.

அரசியலில் நேர்மை எனப்படுவது அடிப்படை பண்பு. ஆனால், அதை கடைப்பிடிக்காத பாரம்பரியத்தை பார்த்தும் கேட்டும் படித்தும் பழகியும் பயணித்துக்கொண்ட மரபில் வந்துவிட்ட அரசியல்வாதிகள், அந்த பண்பினை ஏதோ அரியவகை மூலிகையால் பெறவேண்டிய அமானுஷ்ய சக்தி போலத்தான் பார்ப்பது வழக்கம்.

இது தமிழ் அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் ஏற்படவேண்டிய திடீர் ஞானோதாயம் என்றோ அல்லது மக்களால் விதிக்கப்படும் விரதமோ அல்ல. இது அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். ஆனால், தமிழ் அரசியல்வாதிகளுக்கு இங்கு அதிகம் வலியுறுத்துவதன் காரணம் கடந்த ஒரு வருட காலத்தில் இந்த நேர்மையின்மையால் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் விழுந்துள்ள பொத்தல்களும் அந்த ஓட்டைகளின் ஊடாக வழிந்தோடும் தமிழ் மக்களின் நம்பிக்கைகளும்தான்.

இன்றைய நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்திருக்கும் மிகப்பெரிய சவால் என்றால் „தமிழ் மக்கள் பேரவை... என்று கூறலாம்.

இதில் உண்மையை கூற விழைந்தால், இந்த அமைப்பு எப்போதோ தோற்றம் பெற்றிருக்கவேண்டிய ஒன்று. ஆனால், இவ்வாறான  அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பின் தோற்றத்துக்கான வெற்றிடம் தொடர்ச்சியாக காணப்பட்டு, தற்போது மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் பல்வேறு சந்தேகங்களுக்கு மத்தியில் தோற்றம் பெற்றிருக்கிறது. இந்த அமைப்பின் தோற்றம் இவ்வளவு காலமும் இழுத்தடிக்கப்பட்டதுக்கும் அது தற்போது தமிழ்த் தேசிய அரசியலில் மிகப்பெரிய அரசியல் சூறாவளியை ஏற்படுத்தியிருப்பதற்கும் முதலமைச்சர் முதல் பல்வேறு தரப்பினரின் தனிப்பட்ட அரசியல் வங்குரோத்தினையும் ஸ்திரமற்ற அரசியல் நிலைப்பாடுகளையும் காரணங்களாக கூறினாலும், மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நம்பிக்கையின் மையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முதல் காரணம் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் முறுகல்நிலையை தோற்றுவித்துக்கொண்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன், தனது சிறுபிள்ளைத்தனமான சச்சரவுகளை சுமந்திரனுடன் வளர்த்துக்கொண்டபோதும் அதற்கு சுமந்திரனும் சரிக்கு சரி மல்லுக்கட்டியபோதும் -

இவற்றையெல்லாம் பார்த்து சந்தி சிரிக்காத குறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மானம் கப்பலேறியபோதும் மூத்த தலைவரும் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவருமான சம்பந்தர் வாய் மூடி மௌனியாகவே இருந்தார்.

தமது கூட்டமைப்பில் எந்த சிக்கலும் இல்லை என்பதுபோல சிறிலங்காவின் தேசிய கருத்துக்களை குத்தகைக்கு எடுத்துக்கொண்ட „நேர்மையான... எதிர்க்கட்சி தலைவராக கொழும்பில் இருந்துகொண்டார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் மாற்றுக்கட்சி வரப்போகிறது, கூட்டமைப்பு பிளவுறப்போகிறது என்றெல்லாம் செய்திகள் கசிந்தபோதும்கூட „தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட சக்திகளை இணைத்துக்கொண்டு புதிய கட்சியை தோற்றுவிக்க விக்னேஸ்வரன் முயற்சிப்பாரானால், அவரையும் அவரது பரிவாரங்களையும் குப்பை தொட்டியில் தூக்கி எறிவர்... என்று இறுமாப்பாக மட்டக்களப்பில் பேசிய சம்பந்தன் -

தமிழ் மக்கள் பேரவை உருவாக்கம் இடம்பெற்ற பின்னர் கனகீஸ்வரன் ஊடாக பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் பேசுவதற்கு நேரம் கேட்டு சென்று, பிரச்சினையை தீர்த்;துவிட்டு ஒன்றாக பயணிக்குமாகறு கெஞ்சியிருக்கிறார். இவ்வளவு காலமும் முதலமைச்சருக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட  அவதூறு கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு மன்னிப்பும் கேட்டிருக்கிறார் என்று நெருங்கிய வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

முதலமைச்சர் தொடர்ந்தும் தடுமாறிக்கொண்டிருக்கும் அரசியல்பாதை மாகாணசபை நிர்வாகத்தில் அவர் காண்பிக்கும் இரண்டும் கெட்டான் நிர்வாகம் என்பவையெல்லாம் ஒருபுறமிருக்க, இந்த விவகாரத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை தன்னையும் மக்களையும் தொடர்ந்தும் இருட்டில் கட்டிவைத்திருந்துவிட்டு தற்போது ஓடிச்சென்று முதலமைச்சரின் முன்பான சாஷ்டாங்கமாக விழுந்து கிடந்து குத்துது குடையுது என்றால் இது யார் பிரச்சினை?

தேர்தலில் வென்று ஐந்து மாதங்களுக்குள் கட்சிக்குள்ளேயே ஒரு நேர்மையாக நடந்துகொள்ள முடியாமல் பதறியடிக்கும் கூட்டமைப்பின் தலைமை அடுத்த ஐந்து வருடங்களில் எவ்வாறு தமிழ் மக்களிடம் நேர்மையாக நடந்துகொள்ளப்போகிறது?

இது போலத்தான் தீர்வு தொடர்பான காலக்கெடுவையும் மக்கள் முன்வைத்து தனது வெறுமைகளை விளம்பரப்படுத்தி அரசியல் நேர்மையில் தொடர்ந்தும் கோட்டைவிட்டு வருகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

அடுத்தவருடத்திலாவது, இந்த விடயத்தில் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தனது இதயசுத்தியான நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.  அரசாங்கமே தீர்வு தொடர்பாக எந்த மூச்சும் காட்டாமல் தனது ஏமாற்று நாடகங்களை தொடர்ந்து அரங்கேற்றிவருகின்ற இந்த வேளையில்,

2016க்குள் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை எந்த அடிப்படையில் மக்களின் முன்னால் தொடர்ந்தும் கூட்டமைப்பின் தலைமை முன்மொழிந்துவருகிறது?

தீர்வை பெற்றுக்கொள்ளக்கூடிய எந்தவிதமான நம்பிக்கையும் தெரியாத வெட்ட வெளியில் நின்றுகொண்டு; தாம் காட்டும் கானல்நீர் மீது இனியும் மக்கள் நம்பிக்கை கொள்வர் என்று என்ன அடிப்படையில் கூட்டமைப்பின் தலைத்துவம் சிந்திக்கிறது?

இவை எவற்றுக்கும் எந்த பதிலும் தமிழ் கூட்டமைப்பின் தலைமைத்துவம் கூறியது கிடையாது. ஊடகவியலாளர் கேட்கும் கேள்விகள் கொஞ்சம் கறாரான பாதையில் செல்கிறது என்று கண்டால் „நன்றி வணக்கம்... தொலைபேசி தொடர்பை அறுத்துவிடுகிறார் சம்பந்தர். இதில் எங்கே அரசியல் நேர்மையை எதிர்பார்ப்பது? புலரப்போகும் 2016ஆம் ஆண்டு, தமிழ்த் தேசிய அரசியலில் அடிப்படை நேர்மையை முன்னிறுத்தியதாக அமையவேண்டும்.

தம்மை மதித்து வாக்களித்த மக்களுக்கு அரசியல்வாதிகள் இதயசுத்தியுடன் பணி செய்கின்ற ஆண்டாக அமையவேண்டும். மாயப்பந்தல் அமைந்து மந்திரப்பூ பறிக்கும் உத்தரவாதங்களை வழங்காமல் யதார்த்தங்களை மக்களுடன் பேசவேண்டும். இயலாதவற்றையும் பகிரங்கமாக மக்களிடம் ஒப்புக்கொள்ளவேண்டும். இது கட்சிகளின் மத்தியிலும் வெளிப்படையாக அமைதல் வேண்டும். 2016 ஆம் ஆண்டை நம்பிக்கையுடன் வரவேற்போம்.

- See more at: http://www.tamilmirror.lk/162535/-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A9-#sthash.oANInSlO.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

2016: கூட்டமைப்பிடம் எதிர்பார்ப்பது என்ன?

 

தமிழருக்கான ஒரு அரசியல்த்தீர்வு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.