Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிச் சுற்று - திரை விமர்சனம்

Featured Replies

இறுதிச் சுற்று - திரை விமர்சனம்

 
 
irudhi_2718115f.jpg
 

பெண்களுக்கான குத்துச்சண்டைப் பயிற்சியாளராக ஹரியாணாவில் வேலை பார்ப்பவர் பிரபு (மாதவன்). குத்துச்சண்டைக் கூட்ட மைப்பின் தலைவருடனான முன்விரோ தத்தால் சென்னைக்கு இடமாற்றம் செய் யப்படுகிறார். வடசென்னை குப்பத் தில் உள்ள குத்துச்சண்டைப் பயிற்சி மையத்துக்கு வந்து சேர்கிறார். அங்கு பயிற்சி பெறும் பெண்களிடம் காணப் படாத இயல்பான திறமையையும் உத்வேகத்தையும் மீன் விற்கும் தடாலடிப் பெண்ணான ரித்திகா சிங்கிடம் (மதி) கண்டு வியக்கிறார்.

தன் அக்கா குத்துச்சண்டையில் வெற்றி பெற்று போலீஸில் சேர வேண்டும் என்பதுதான் மதியின் கனவு. ஆனால், மதியிடம் ஒரு சாம்பியனுக்கான கூறுகள் இருப்பதைக் கண்டு அவளுக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்குகிறார் மாதவன். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஏற்படும் தடைகள், குத்துச்சண்டைக் கூட்டமைப்பின் அசிங்கமான அரசியல் ஆகியவற்றைத் தாண்டி மாதவனால் தன் நோக்கத்தில் வெற்றிபெற முடிந்ததா?

இயக்குநர் சுதா கொங்கரா, தனது 3 ஆண்டுகால உழைப்பை அற்புதமான திரைவடிவமாக மாற்றியிருக்கிறார். 2010-ம் ஆண்டிலேயே ‘துரோகி’ படம் மூலமாகத் தமிழ் சினிமாவில் கால்பதித்த இவர், ‘இறுதிச் சுற்று’ படத்தில் நாக்அவுட் முத்திரை பதித்திருக்கிறார். ஒரு சாமானியப் பெண் அசாத்தியமான வெற்றியை அடைய முடியும் என் பதை நம்பத்தகுந்த வகையில் திரைக்கதையாக வடித்திருப்பது பாராட்டுக்குரியது. நம்பகத்தன்மை, சுவாரஸ்யம், அழுத்தமான காட்சிகள் ஆகியவை திரைக்கதையின் பலம்.

பல காட்சிகள் அழியாமல் மனதில் பதிந்துவிடுகின்றன. தன் தங்கையே தனக்குப் போட்டியாளராக வந்துவிட்டா லும் அவளுடைய வலியைக் கண்டு துடித்துப்போகும் அக்கா, மதியின் வெற்றி ஒட்டுமொத்தப் பெண்களின் வெற்றி என்பதைக் காட்சிப்படுத்தும் விதமாக தங்கள் முகத்திரையை விலக்கி உற்சாகமாக எழுந்து நிற்கும் பர்தா அணிந்த இரு இளம் பெண்கள் என தனது தனித்துவத்தை நிரூபித்திருக்கிறார் சுதா.

மதியை சாம்பியனாக்க மாதவன் படும் கஷ்டங்கள் மிகைப்படுத் தப்படாமல் சித்தரிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு இடையே மலரும் உறவு அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பல விஷயங்கள் சொல்லாமலேயே உணர்த்தப்படுவது இயக்குநரின் பக்கு வத்தைக் காட்டுகிறது. உதாரணம், தன் கை முறிந்தது யாரால் என்று மதிக்குத் தெரியும் என்பது உணர்த்தப்படும் விதம். எனக்கு ஏன் அப்படிப் பயிற்சி அளிக்கவில்லை என்று மதியின் அக்கா கேட்கும்போது மாதவன் பதில் சொல்லும் விதம் பக்குவ மான படமாக்கத்துக்கு இன்னொரு சான்று.

‘‘இது நம்ம ரெண்டும் பேருக்கும் இடையில இருக்கற பிரச்சினை இல்ல. பாக்ஸிங் கனவோட வாழும் ஒட்டுமொத்த இந்தியப் பெண்கள் சம்பந்தப்பட்டது’’ என்பது போன்ற அருண் மதீஸ்வரனின் வசனங்கள் படத்துக்கு கம்பீரம் சேர்க்கின்றன. நாசரும் காலி வெங்கட்டும் சென்னைத் தமிழில் நகைச்சுவையை ஆங்காங்கே தூவிச் சிரிக்க வைக்கிறார்கள்.

பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் ரித்திகாவை மாதவன் மிகச் சுலபமாக விடுவித்து தன்னோடு ஹரியாணாவுக்கு அழைத்துச் செல்வதும், தான் வலுக்கட்டாயமாகப் பயிற்சிக்கு அழைக்கும் ஒரு பெண்ணை அவர் முரட்டுத்தனமாக அணுகுவதும் திரைக்கதையின் உறுத்தல்கள்.

கனமான கதாபாத்திரங்களை நன்கு கையாளக்கூடிய நடிகர்களைத் தமிழ் சினிமா சரியாக பயன்படுத்துகிறதா என்ற கேள்விக்கான பதிலாக அமைகிறது மாதவனின் பாத்திர வார்ப்பு. பாத்திரத்துக்கேற்ற தோற்றத்தாலும் மிகையற்ற நடிப்பாலும் கவர்கிறார் மாதவன்.

இதைவிடவும் பொருத்தமான தேர்வு இருக்க முடியாது எனும் அளவுக்கு அனாயாசமாக நடித்திருக்கிறார் ரித்திகா சிங். நிஜமாகவே குத்துச் சண்டை வீராங்கனை என்பதால் சண்டைக் காட்சிகளைக் கச்சிதமாகச் செய்திருப்பதில் ஆச்சரியமில்லை. முரட்டுத்தனம், ஆர்ப்பாட்டம் நிறைந்த பெண்ணாகவும், காதல்வசப்பட்டுத் தன்னை அறியாமலேயே நளினமாகும் பெண்ணாகவும் அட்டகாசமாக நடித்திருப்பது அசத்தல்.

கனமான கதாபாத்திரங்களைக் கம்பீரமாக தாங்கி நிற்கும் நாசர், சற்றே கோமாளித்தனமான பாத்திரத் தில் கச்சிதமாகத் தன்னைப் பொருத்திக்கொள்கிறார்.

பொதுவெளியில் தன்னை நிரூ பிக்க எத்தனிக்கும் பெண்கள் ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பாலியல் சீண்டலை, அத்துமீறலை முகத்திரை கிழித்துக் காட்டுகிறார் இயக்குநர். காவலில் வைக்கப்படும் ரித்திகா எப்படியாவது ஒரு ஃபோன் கால் செய்துவிடப் போராடும்போது அவர் அருகில் உட்கார்ந்திருக்கும் பாலியல் தொழிலாளர் தன் மொபைலை ரகசியமாக ரித்திகாவுக்குக் கொடுப்பது விளிம்பு நிலையினர் குறித்த புரிதலும் அக்கறையும் கொண்ட இயக்குநரின் அடையாளம்.

மீன் வாசமும் புழுதியும் நிறைந்த வட சென்னையையும், வட மாநிலங்களின் வளமான சில பகுதிகளையும் சிவகுமார் விஜயனின் கேமரா அச்சு அசலாகப் பதிவு செய்திருக்கிறது. ஆடை வடிவமைப்பாளர், ஒப்பனை, சிகை அலங்காரக் கலைஞர்களுக்குத் தனி கைதட்டல். பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணன் தன் திறமையை மீண்டும் நிரூபித்திருக்கிறார். ‘ஏ… சண்டக்காரா’, ‘உசுரு நரம்புல’ பாடல்களுக்கு பாடகி ‘தீ’யின் குரல் கன பொருத்தம்.

மொத்தத்தில் தமிழ் சினிமா வுக்கு பல சாம்பியன்களை அறிமுகப் படுத்தியிருக்கிறது இறுதிச் சுற்று.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article8174739.ece?ref=sliderNews

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படம் உண்மையாகவே நடந்த கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. அந்தப் பொண்ணு ரித்திகாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. ரித்திகா அழகாய் இல்லா விட்டாலும் சுப்பராய் நடித்து உள்ளார்.விருது குடுக்க வேண்டும்

நேற்று குடும்பத்துடன் போய் பார்த்தேன். மிக மிக அருமையான படம்.

இலக்கின்றி வெட்டியாய் சுற்றும் ரஜனி முருகன் போன்றவர்களை கதாநாயகர்களாக கொண்டு, குறிக்கோள் அற்ற வாழ்க்கையை முன்னிலை படுத்தி எடுக்கப்பட்டு வரும் தமிழ் சினிமாவின் இன்றைய நிலையில் இறுதிச்சுற்று ஒரு மிகப் பெரிய மாற்றம்.

ஒவ்வொரு காட்சியும் மிகவும் கவனித்தும், அடர்த்தியாகவும் எடுக்கப்பட்டு இருக்கு. ரித்திகாவின் நடிப்பை சொல்வதற்கு வார்த்தை இல்லை. மாதவனின் நடிப்பும்....அதுவும் இறுதிக் காட்சிகள் ஒன்றில் மொங்கோலியனின் தலை முடியை நினைவுபடுத்த தலையை ஆட்டி ஆட்டி காட்டும் நடிப்பும்... அருமை!

பிள்ளைகளை கூட்டிக் கொண்டு போய் பார்க்க வேண்டிய படம். அதுவும் வீட்டில் பெண் பிள்ளை இருந்தால் கண்டிப்பாக கூட்டிக் கொண்டு போய் காட்டுங்கள்.

இன்னும் 10 தரமாவது இப் படத்தினை பார்ப்பேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.