திமுக கூட்டணியில் 2 கட்சிகளின் வருகையால் புது பிரச்னையா? பின்னணி அலசல்
பட மூலாதாரம்,@mkstalin/X
கட்டுரை தகவல்
விஜயானந்த் ஆறுமுகம்
பிபிசி தமிழ்
12 மார்ச் 2026, 14:05 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
"கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆறு இடங்களில் போட்டியிட்டோம். இந்தமுறை ஓர் இடத்தைக் குறைத்து ஐந்து இடங்களைத் தருவதாக தி.மு.க கூறுகிறது. ஓர் இடத்தைக் கூடுதலாக ஒதுக்குமாறு கேட்டோம். வாய்ப்பில்லை எனக் கூறிவிட்டனர்" என்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்.
தி.மு.க உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டணிக்குள் புதுவரவான தே.மு.தி.க-வை காரணம் காட்டி தொகுதிகளின் எண்ணிக்கையை தி.மு.க குறைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் தி.மு.க தலைமை ஈடுபட்டு வருகிறது.
தற்போது வரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை தி.மு.க ஒதுக்கியது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
நான்கு தொகுதிகளில் மூன்றில் உதயசூரியன் சின்னத்திலும் ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் ம.தி.மு.க போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ம.தி.மு.க நிலை என்ன?
2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க, இந்தமுறை நான்கு தொகுதிகளில் போட்டியிடுகிறது. எண்ணிக்கை குறைந்தது குறித்து வைகோவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இதனை ''மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டுள்ளதாக'' கூறினார்.
"கட்சியின் பதிவைப் பாதுகாத்துக் கொள்வதற்காகு தனிச் சின்னத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம். இதில் சமரசம் என்ற பேச்சுக்கு இடமில்லை" என வைகோ தெரிவித்தார்.
பட மூலாதாரம்,Getty Images
'பா.ஜ.க எதிர்ப்பு... இடங்கள் குறைப்பு'
தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனும் குறைந்தது 2 முறை தி.மு.க தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது.
"ஏன் இவ்வளவு தாமதம்?" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியனிடம் பிபிசி தமிழ் கேட்டது.
"கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் ஆறு இடங்களில் போட்டியிட்டோம். இந்தமுறை ஓர் இடத்தைக் குறைத்து ஐந்து இடங்களைத் தருவதாக தி.மு.க கூறியுள்ளது. ஆனால், 6 பிளஸ் 1 என்ற அளவில் இடங்களை ஒதுக்குமாறு தெரிவித்துள்ளோம்" என்கிறார்.
ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என தி.மு.க பேச்சுவார்த்தைக் குழு கூறியதால் ஆறு இடங்களையாவது ஒதுக்குமாறு தங்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"இந்தமுறை ஆறு இடங்களைக் கேட்டுப் பெற வேண்டும் என்பது கட்சியின் முடிவாக உள்ளது. பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது" எனக் கூறுகிறார் மு.வீரபாண்டியன்.
தொடர்ந்து அவர் பேசும்போது, "சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை எதிர்ப்பது தான் தி.மு.க கூட்டணியின் பிரதான நோக்கமாக உள்ளது. அதற்காக ஏற்கெனவே பெற்ற இடங்களைக் குறைத்துக் கொள்வது நல்லதல்ல எனக் கூறியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
பட மூலாதாரம்,PremallathaDmdk/X
படக்குறிப்பு,தே.மு.தி.க முதல்முறையாக தி.மு.க கூட்டணியில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்றது.
'இந்தமுறையும் அதே காரணம்'
இதேபோன்ற நெருக்கடியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்கொண்டுள்ளது.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜிடம் பிபிசி தமிழ் பேசியது.
"கூடுதல் இடங்களை ஒதுக்குவதில் தி.மு.க தரப்பில் உள்ள சிரமங்களைக் கூறினார்கள். புதிய கட்சிகளை சேர்த்துள்ளதாகத் தெரிவித்தனர். ஆனால், கடந்தமுறை ஆறு இடங்கள் கொடுத்ததையே கட்சி நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ளவில்லை எனக் கூறிவிட்டோம்" என்கிறார்.
"2021 சட்டமன்றத் தேர்தலின்போது அரசியல் ரீதியாக சில காரணங்கள் இருந்ததால் தி.மு.கவிடம் ஆறு இடங்களை பெற்றுக் கொண்டோம்" எனக் கூறும் கனகராஜ், "அதே காரணத்தை இந்த முறை கூறுவதையும் சில காரணங்களைக் காட்டி இடங்களை குறைப்பதும் சரியல்ல எனக் கூறிவிட்டு வந்தோம்" என்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலினிடம் பேசிவிட்டு மீண்டும் தொடர்பு கொள்ள உள்ளதாக தி.மு.க பேச்சுவார்த்தைக் குழு தங்களிடம் கூறியதாகக் குறிப்பிட்ட கனகராஜ், "வரும் 14 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது" எனத் தெரிவித்தார்.
பட மூலாதாரம்,@tncpim/X
படக்குறிப்பு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இரண்டு முறை தி.மு.க தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
'மற்றவர்களோடு கணக்கிட வேண்டாம்'
தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க, ஆகிய கட்சிகளிடம் இதுவரை தி.மு.க பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இவற்றில் மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க ஆகிய கட்சிகள் முதல்முறையாக தி.மு.க கூட்டணியில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்றன.
வி.சி.க பொதுச்செயலாளர் ரவிக்குமாரிடம் பேசியபோது, "2021 சட்டசபைத் தேர்தலில் அன்றைய சூழலைக் கருத்தில் கொண்டு ஆறு இடங்களை ஏற்றுக் கொண்டோம். இந்தமுறை இதர கட்சிகளுடன் சேர்த்து விடுதலைச் சிறுத்தைகளைக் கணக்கிட வேண்டாம் என தி.மு.கவிடம் கூறிவிட்டோம்" என தெரிவித்தார்.
ஆனால், தி.மு.க போட்டியிடக் கூடிய தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டு கூட்டணிக் கட்சிகளிடம் பேசி வருவதாகக் கூறுகிறார், தி.மு.க செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தேர்தல் முடிவில் தனித்து ஆட்சியமைக்கும் வகையில் 170 இடங்களில் தி.மு.க போட்டியிட வேண்டும். புதிதாக கட்சிகள் இணைவது கூட்டணிக்குப் பலம் என்பதால் அவர்களைக் கணக்கில் வைத்து இடங்களை ஒதுக்குகிறோம்" என்கிறார்.
"கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் குறைக்கப்படுவது உண்மைதான். அதேநேரம், கூட்டணியில் யாரையும் விட்டுவிடக் கூடாது எனக் கருதுகிறோம். அவரவர் வலிமைக்கு ஏற்ப கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்" எனவும் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம்,Kamalhaasan/X
தொகுதி குறைப்புக்கு தே.மு.தி.க காரணமா?
தி.மு.க கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க ஆகிய கட்சிகளைக் காரணம் காட்டி தங்களுக்கான இடங்களைக் குறைப்பதாக, தி.மு.க கூட்டணிக் கட்சிகள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.
"புதிய கட்சிகளுக்கு அதிக இடங்களை தி.மு.க ஒதுக்கினால் நெருடல் ஏற்படும். அப்படியொரு சூழல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தி.மு.க தலைமைக்கு உள்ளது" என்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்.
"தே.மு.தி.கவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு பத்து இடங்களுடன் ராஜ்யசபா சீட் கொடுப்பதாக தி.மு.க சீனியர் நிர்வாகிகள் உறுதியளித்ததாக தகவல் வெளியானது. தற்போதைய நிலையில் இந்த எண்ணிக்கை குறையலாம்" என்கிறார், மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.
தே.மு.தி.கவுக்கு எட்டு இடங்களை தி.மு.க ஒதுக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறும் குபேந்திரன், "தே.மு.தி.கவுக்கு இணையான இடங்களை வி.சி.கவுக்கு ஒதுக்கலாம். ம.தி.மு.கவுக்கு இடங்கள் குறைந்ததுபோல இடதுசாரிக் கட்சிகளின் தொகுதிகளும் குறையலாம்" எனக் கூறுகிறார்.
தே.மு.தி.கவுக்கு அதிக இடங்கள் கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது குறித்து, டி.கே.எஸ்.இளங்கோவனிடம் பிபிசி தமிழ் கேட்டது.
"கூட்டணியில் அதிக இடங்களை தே.மு.தி.க கேட்டுள்ளது. சில திட்டங்களின் அடிப்படையில் அவர்களைச் சேர்த்துள்ளோம். தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக தே.மு.தி.க இருந்துள்ளது. அதைக் கணக்கிட்டு நல்லபடியாக வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறோம்" எனக் கூறுகிறார்.
தே.மு.தி.க முன்னாள் எம்.எல்.ஏ பார்த்தசாரதியிடம் இதுகுறித்துக் கேட்டபோது, "தற்போது பேச இயலாது" என்று மட்டும் பதில் அளித்தார்.
இலக்கு 200 வியூகம்
அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இல்லாவிட்டால் இடங்களைக் குறைத்துக் கொள்வதற்கு தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சம்மதம் தெரிவித்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
"தி.மு.க கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு வேறு வழியில்லை. வேறு கூட்டணிகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் இல்லை. ராஜ்யசபா சீட் கிடைத்ததால் தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்துவிட்டது. அதைக் காரணம் காட்டியே பிற கட்சிகளுக்கு இடங்கள் குறைக்கப்படுகின்றன" என்கிறார் ஷ்யாம்.
அதேநேரம், காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலைவிட மூன்று இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டிப் பேசிய ஷ்யாம், "பட்டியல் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மை வாக்குகள் தமிழக வெற்றிக் கழகத்துக்குச் சென்றுவிடக் கூடாது என்பதால் 28 இடங்களை தி.மு.க ஒதுக்கியது" எனக் கூறுகிறார்.
"காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கியதில் தி.மு.கவினரில் பலருக்கும் உடன்பாடு இல்லை" எனக் கூறும் ஷ்யாம், "200 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பது தி.மு.கவின் இலக்காக உள்ளது." என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c15x15jjx95o
By
ஏராளன் ·