இரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன?
பட மூலாதாரம்,AL-ARAB, AL-AKHBAR
படக்குறிப்பு,சில வளைகுடா நாடுகள் இரானின் சக்தியைக் கட்டுப்படுத்துமாறு அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருப்பதை பல அரபு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
கட்டுரை தகவல்
பிபிசி மானிடரிங்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
இரான் போரின் காரணமாக, வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலை குறித்து அரபு பிராந்திய மற்றும் உள்நாட்டு ஊடகங்களில் தொடர்ச்சியான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் அமெரிக்கா தொடர்பான வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளின் பல்வேறு கருத்துகளும் வெளிப்பட்டு வருகின்றன.
ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், இரானை நிரந்தரமாக செயலிழக்கச் செய்யுமாறு வளைகுடா நாடுகள் அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறும் ராய்ட்டர்ஸ் செய்திக்குச் சில ஊடகங்கள் கணிசமான முக்கியத்துவம் அளித்துள்ளன.
இதற்கு மாறாக, வேறு சில ஊடகங்கள் இரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் முடிவை விமர்சித்தும், "வளைகுடா நாடுகள் இலக்கு வைக்கப்படும் சூழலை அமெரிக்கா புறக்கணிப்பதாக" குற்றம் சாட்டியும் செய்திகளை வெளியிட்டுள்ளன.
வளைகுடா ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி வெளிவரும் சில தகவல்கள், அமெரிக்கா மீதான தங்களின் நீண்டகால பாதுகாப்புச் சார்புநிலையை வளைகுடா நாடுகள் மறுமதிப்பீடு செய்யும் என்று தெரிவிக்கின்றன.
நேட்டோ பாணியிலான ஒரு கூட்டுப் பாதுகாப்பு அமைப்புக்கான கோரிக்கைகளும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன.
பதற்றத்தைக் குறைப்பதற்கான வளைகுடா நாடுகளின் முயற்சிகள் குறித்து பல ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன. இதில் ராணுவ மோதல்களைத் தவிர்ப்பதற்கும், சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் விடுக்கப்பட்ட அழைப்புகளும் அடங்கும்.
'இரானின் திறன்களை அழிக்க' விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
பட மூலாதாரம்,AFP via Getty Images
படக்குறிப்பு,மார்ச் 18 அன்று, இரான் இஸ்ரேல் மீது புதிய ஏவுகணைகளை ஏவியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரோனிலிருந்து எடுக்கப்பட்ட காட்சி.
மார்ச் 16 அன்று வெளியான இந்த ராய்ட்டர்ஸ் செய்தி, சில அரபு ஊடகங்களில் முக்கியச் செய்தியாக இடம்பிடித்துள்ளது.
பெத்லஹேமைச் சேர்ந்த 'மா-ஆன்' செய்தி இணையதளம், "டிரம்பிற்கு வளைகுடா நாடுகளின் செய்தி: இரானின் திறன்கள் அழிக்கப்படும் வரை நிறுத்தாதீர்கள்" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
"இரான் மீதான தாக்குதல்களைத் தொடருமாறு அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வளைகுடா நாடுகள் : நாங்கள் மட்டும் தனியாகத் துன்பப்படுமாறு விடப்படுவதை விரும்பவில்லை" என்று லெபனானின் ஹெஸ்பொலா ஆதரவு நாளிதழான 'அல்-அக்பர்' எழுதியுள்ளது.
"வளைகுடா நாடுகள் இரானுடன் போரைத் தொடங்குமாறு அமெரிக்காவைக் கேட்கவில்லை என்றாலும், இப்போது பல நாடுகள் அமெரிக்கா இந்த வழியில் இருந்து பின்வாங்கக் கூடாது என்றும், வளைகுடா எண்ணெய் விநியோகப் பாதைகள் மற்றும் அவற்றைச் சார்ந்திருக்கும் பொருளாதாரங்களை அச்சுறுத்தும் நிலையில் இரானை விட்டுவிடக் கூடாது என்றும் விரும்புகின்றன"என மூன்று வளைகுடா வட்டாரங்கள் கூறியதாக அந்த செய்தி மேற்கோள் காட்டியுள்ளது.
"அமெரிக்கர்கள் தங்கள் பணி முடிவதற்குள் வெளியேறினால், நாங்கள் இரானை தனியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று சௌதி அரேபியாவைச் சேர்ந்த வளைகுடா ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அப்துல் அஜீஸ் சகிர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
அமெரிக்கா அச்சுறுத்தலைப் புறக்கணித்ததா?
பட மூலாதாரம்,AFP via Getty Images
படக்குறிப்பு,வேறு சில அரபு ஊடகங்கள் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்து, அமெரிக்கக் கொள்கையை விமர்சித்தன.
வேறு சில அரபு ஊடகங்கள் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்து அமெரிக்கக் கொள்கையை விமர்சித்தன.
ஒரு தாக்குதல் நடத்தப்பட்டால் இரான் வளைகுடா நாடுகளை இலக்கு வைக்கக்கூடும் என்று அமெரிக்க உளவு அமைப்புகள் எச்சரித்திருந்ததாகவும், ஆனால் அமெரிக்கா இந்தச் சூழலை 'புறக்கணித்திருக்கலாம்' என்றும் லண்டனைச் சேர்ந்த நாளிதழான 'அல்-அரப்' செய்தி வெளியிட்டுள்ளது.
இரானின் எதிர்வினை குறித்த தவறான கணிப்பின் விளைவாகவோ அல்லது அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கைகளை விட தனது அரசியல் கணக்குகளுக்கே முன்னுரிமை அளித்தது என்பதற்கான அறிகுறியாகவோ இது இருக்கலாம் என்று அந்த செய்தி கூறியது.
ஓமன் பத்திரிகையாளரும் ஆராய்ச்சியாளருமான சலீம் அல்-ஜஹோரி எகிப்திய தனியார் சேனலான 'யோம்7'-னிடம் கூறுகையில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகள் அமெரிக்கா மீதான தங்கள் "பாதுகாப்புச் சார்புநிலையை" மறுபரிசீலனை செய்யும் என்றும், ஒரு பொதுவான தடுப்பு முறையை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கும் என்றும் தெரிவித்தார்.
வளைகுடா நாடுகள் "போருக்குள் இழுக்கப்பட்டுள்ளன" என்றும், அவற்றின் எல்லைகளில் உள்ள ராணுவத் தளங்களில் இருந்து ஏவுகணைகளை ஏவுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், அவர்கள் "எந்த வகையிலும் இந்தப் போரில் ஈடுபட மாட்டார்கள்" என்றும் அவர் கூறினார்.
அல் ஜசீராவிடம் அல்-மாதர் அரசியல் ஆய்வு மையத்தின் தலைவர் சலே அல்-முதைரி கூறுகையில், 'அமெரிக்காவை விட வளைகுடா நாடுகள் இந்தப் போருக்கு அதிக விலையை கொடுக்க வேண்டியிருக்கும், குறிப்பாக அதன் நீண்டகால பொருளாதார தாக்கம் காரணமாக இது நிகழும்' என்றார்.
அல் ஜசீராவிடம் ஓமன் எழுத்தாளரும் ஆராய்ச்சியாளருமான முகமது அல்-அரைமி கூறுகையில், அச்சுறுத்தல் என்பது இரானிடமிருந்து மட்டுமல்ல, இந்தப் பிராந்தியத்திற்கான "அபாயகரமான இஸ்ரேலியத் திட்டத்திலிருந்தும்" வருகிறது என்று தெரிவித்தார்.
ஹோர்முஸ் நீரிணையை திறக்க டிரம்ப் வேண்டுகோள்
பட மூலாதாரம்,AFP via Getty Images
படக்குறிப்பு,ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் என்ற டிரம்பின் அழைப்புகளுக்கு அரபு ஊடகங்களிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் என்ற டிரம்பின் அழைப்புகளுக்கு அரபு ஊடகங்களிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தின் முக்கிய அரபு தேசிய தொலைக்காட்சி சேனல்களும் அமெரிக்காவின் நட்பு நாடுகளின் எதிர்வினைவினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பின.
குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக செயல்பாட்டில் வைப்பதற்கான சர்வதேசக் கூட்டணியை உருவாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை அவை முன்னிலைப்படுத்தின.
பல நாடுகளின் எதிர்வினையானது "சந்தேகத்திலிருந்து நேரடி எதிர்ப்பு வரை" பலவாறாக இருப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த 'ஸ்கை நியூஸ் அரேபியா' தெரிவித்தது.
பல அமெரிக்க நட்பு நாடுகள் "கவனமாகவோ அல்லது தயக்கமாகவோ" இருப்பதாகத் தெரிவதாகவும், சில நாடுகள் இப்பிரச்னையைத் தீர்க்க மாற்று வழிகளைக் கூட பரிந்துரைத்துள்ளதாகவும் கத்தாரின் 'அல் ஜசீரா' தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
அல் ஜசீரா செய்தியின்படி, லக்சம்பர்க் பிரதமர் லூக் ஃப்ரைடன், அமெரிக்காவின் 'அழுத்தத்திற்கு' தனது நாடு பணியாது என்று கூறியுள்ளார்.
இரான் மீது இஸ்ரேல் ஒருபோதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்ற டிரம்பின் கூற்றையும் சில சேனல்கள் முன்னிலைப்படுத்தின.
இஸ்ரேலிடம் சுமார் 90 அணு ஆயுதங்கள் இருப்பதாக அமைதி ஆராய்ச்சி நிறுவனம் மதிப்பிட்டுள்ளதாக சௌதி அரேபியாவின் 'அல்-அரேபியா' மற்றும் 'ஸ்கை நியூஸ் அரேபியா' செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் தன்னிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றும், ஆனால் நிபுணர்கள் மற்றும் ஊடக தகவல்கள் அந்நாட்டிடம் பல்வேறு அல்லது நூற்றுக்கணக்கான அணு ஆயுதங்கள் இருக்கலாம் எனத் தெரிவிப்பதாகவும் ரஷ்யாவின் 'ஆர்டி' ஊடகம் கூறியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c20l0wng7xqo
By
ஏராளன் ·