Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘பாபாக்கள்’ உலகைப் புரிந்து கொள்ள முடியாது

Featured Replies

‘பாபாக்கள்’ உலகைப் புரிந்து கொள்ள முடியாது

 

 
babasjpg

‘நம் நாட்டின் எந்தப் பகுதியில் சதுர மைலுக்கு அதிக பாபாக்கள் வசிக்கிறார்கள்?’ என்ற கேள்வியை எழுப்பினால், சமீபத்திய பஞ்சாப்-ஹரியாணா வன்முறைச் சம்பவ செய்திகளைப் படிக்காமல் இருந்தால் திணறியிருப்பீர்கள்; இப்போது புரிந்திருக்குமே அது பஞ்சாப், ஹரியாணா என்று! இவ்விரு மாநிலங்களும் வேளாண் செழிப்பு, பாசன வசதிகள், வீரம், விளையாட்டு, தொழில் வளர்ச்சி என்று பலவற்றுக்குப் புகழ் பெற்றிருந்தாலும் தங்களைத் தாங்களே ‘பாபா’ என்று அழைத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கைக்காகவும் பெயர் போனவை.

எல்லா பாபாக்களுமே மோசமானவர்கள் அல்ல; சிலர் உண்மையிலேயே ஆன்மிக சித்தாந்தங்களை உருவாக்கியவர்கள், சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள், அறச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள், மக்களுக்கு சேவை செய்பவர்கள். எஞ்சியவர்களில் பெரும்பாலானவர்கள் நில ஆக்கிரமிப்பாளர்கள், அரசியல் தரகர்கள், அதிகாரத் தரகர்கள், நிழல் உலக தாதாக்கள். ஷோலே திரைப்படத்தில் வரும் கப்பர் சிங்கைப்போல கட்டப் பஞ்சாயத்துக்காரர்கள். உள்ளூர் அரசியல்வாதிகள், ‘அரே ஓ சம்பா…’ என்று பாபா கூப்பிட்டதுமே ஓடிச் சென்று ஏவல் செய்வார்கள். இப்படி நூறல்ல, ஆயிரமல்ல, லட்சக்கணக்கான சீடர்களைக் கொண்ட பாபாக்களும் இருக்கிறார்கள். பாலியல் வன்புணர்வு குற்றத்துக்காக ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்டு, அதே போன்ற இன்னொரு வழக்கின் விசாரணையில் சிக்கியிருக்கிறார் பாபா; அவருடைய குற்றச் செயல்களை அம்பலப்படுத்தியதற்காக ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டுவிட்டார்; முக்தி அளிக்கிறேன் என்று கூறி 400 சீடர்களைச் சீரழித்துள்ளார் பாபா.

நாம் இப்போது அறிய வேண்டியது அதிக சீடர்களைக் கொண்டுள்ள பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங் இன்சான் பற்றி. சிர்சா என்ற ஊரில் அவர் தங்கியிருக்கும் ஆசிரமத்தை ‘டேரா’ என்று அழைக்கின்றனர். அது குட்டி நகரம். அதற்கு அருகிலேயே ஹிசார் நகரில் இன்னொரு டேரா இருக்கிறது, அதன் பாபா, ராம் பால். அவரும் சிறையில்தான் இருக்கிறார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால் ஆயுள் முழுக்க அங்குதான் இருப்பார். 2014 நவம்பரில் ஹரியாணா காவல்துறையினர் அவருடைய ஆதரவாளர்களுடன் சண்டையிட்டு, கோட்டை போன்ற ஆசிரமத்துக்குள் நுழைந்தனர். அவரைக் கைது செய்வதற்குள் பலருடைய தலைகள் உருண்டன. ராம் பாலின் கமாண்டோக்களைக் காவல்துறை எதிர்கொள்ள நேரிட்டது என்று ஹரியாணா காவல்துறைத் தலைவர் எஸ்.என். வசிஷ்ட் அச் சம்பவத்தை விவரித்தார்.

இந்த டேரா அல்லது பிரிவுகளில் பொதுவான அம்சம், பாபாவை மையமாகக் கொண்ட பக்தி அல்லது விசுவாசம். ஹிசாரிலிருந்து சிர்சா வரை மேற்காக விழிகளை உருட்டினால், பஞ்சாபின் எட்டு மாவட்டங்களில் இவ்விரு பாபாக்களுக்கு மட்டும் லட்சக்கணக்கான சீடர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய தலைகளுக்குப் பின்னாலிருக்கும் ஒளிவட்டம் எப்போது மங்குகிறது அல்லது மறைகிறது என்றால் இன்னொரு பாபாவுக்கு செல்வாக்கு கூடும்போது. எல்லா பாபாவுமே போக்கிரிகள் அல்ல, சிலர் வாழும்போதும் சாகும்போதும் சுவாரசியத்தை ஏற்படுத்திவிடுகின்றனர்.

 

ராதா சுவாமி, நிரங்காரி

பஞ்சாபில் ராதா சுவாமி, நிரங்காரி என்று இரண்டு வழிபாட்டுப் பிரிவுகள் பிறந்து பிற மாநிலங்களிலும் சீடர்களைப் பெற்றுள்ளன. ராதா சுவாமி என்ற பிரிவு சர்ச்சைகளை ஏற்படுத்தியதில்லை. அதன் இப்போதைய தலைவரான பாபா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பஞ்சாபில் மதப்பிரிவுகளின் தலைவரை பாபா என்று அழைப்பதே பாதுகாப்பானது. ‘குரு’ என்று யாரையும் லேசில் அழைத்துவிட முடியாது, அது மத நிந்தனையாகிவிடும். சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங், நான்தான் கடைசி, உங்களுக்கெல்லாம் குரு நமது ‘கிரந்த சாஹிப்’ (மத நூல்) தான் என்று அறிவித்துவிட்டுச் சென்றிருக்கிறார். ராதா சுவாமியின் தலைநகரம் பியாஸ் நதிக்கரையில் ஜலந்தருக்கும் அமிர்தசரஸுக்கும் நடுவில் உள்ளது. பரம்பரையான வாரிசு யாரும் இல்லை. சுமுகமாக அடுத்த பாபாவைத் தேர்வுசெய்ய விரும்புகின்றனர். ரன்பாக்ஸி/ரெலிகேர்/ ஃபோர்டிஸ் தொழிலதிபர்கள் குடும்பத்தைச் சேர்ந்த பாய் சிவஇந்தர் மோகன் சிங்கை பாபாவாக்க முயற்சிகள் நடக்கின்றன. அவருடைய சகோதரர்தான் மால்விந்தர் மோகன் சிங். டெல்லிக்காரர்கள் இவர்களைக் குறும்பாக ‘எம்எம்எஸ்-எஸ்எம்எஸ்’ பிரதர்ஸ் என்பார்கள்.

நிரங்காரிகளுடைய வரலாறு இன்னும் சுவாரசியமானது. அதிக காலம் பாபாவாக இருந்த குர்பச்சன் சிங்கை, ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் ஆட்கள் சுட்டுக்கொன்றனர். காரணம், அவர் தன்னை ‘குரு’ என்று கூறிக் கொண்டாராம். 1978 ஏப்ரல் 13-ல் பிந்தரன்வாலேயின் ஆதரவு அமைப்பு தோன்றி பிறகு வளர்ந்தது. நிரங்காரிகளின் மத மாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க பிந்தரன்வாலேயின் சீடர்கள் சென்றனர். பிறகு நடந்த துப்பாக்கிச் சண்டையில் 16 பேர் இறந்தனர். நிரங்காரிகளுடன் மற்றவர்கள் எந்தவிதத் தொடர்பும் கொள்ளக்கூடாது என்று பொற்கோவிலில் இருக்கும் சீக்கியர்களின் தலைமைப் பீடம் அகால் தக்த், ஹூகம்நாமா என்ற கட்டளையைப் பிறப்பித்தது. பஞ்சாபியர்கள் இதை ‘ரோட்டி-பேட்டி கா சம்பந்த்’ தடை செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள். அதாவது அவர்களுடைய வீடுகளில் கை நனைப்பதும், பெண் எடுப்பதும் கூடாது.

 

நாம்தாரிகள்

இன்னொரு பிரிவினர் நாம்தாரிகள். வெள்ளைத் தலைப்பாகை அணியும் இவர்கள் நட்புணர்வு மிக்கவர்கள். அவர்களுடைய கடைசி தலைவர் ஜகஜீத் சிங்குக்கு மகன் இல்லை. உறவினர் மகனான உதய் சிங்கை வாரிசாக அறிவித்தார். உதய் சிங் தன்னுடைய அம்மா சாந்த் கௌர் உதவியோடு நாம்தாரிகளை வழிநடத்தினார். 2016 ஏப்ரல் 4-ல் மோட்டார் சைக்கிள்களில் வந்த துப்பாக்கியாள்கள் பாபா சாந்த் கௌரை சுட்டுக்கொன்றனர். உதய் சிங்கும் அவருடைய இன்னொரு உறவினரும் இந்தக் கொலை தொடர்பாக பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டனர்.

இந்த அமைப்புகளிலேயே சிறியது, ஆனால் நெருக்கமான பிணைப்புகளைக் கொண்டது பஞ்சாபின் ரூப்நகர் மாவட்டத்தில் நூர்புர் பேடி என்ற இடத்தில் உள்ள பணியாரா பாபா ஆசிரமம். மறைந்த காங்கிரஸ் தலைவர் பூட்டா சிங் இந்த பாபாவின் தீவிர பக்தர். பாபாவின் அற்புதங்கள்தான் தன் மனைவியைக் காப்பாற்றியது என்று பூட்டா சிங் நம்பினார். 2001-ல் அந்த பாபா, ‘பவசாகர் கிரந்த்’ என்ற நூலில் தன்னுடைய அற்புதங்களைப் பட்டியலிட்டார். இதை மற்ற சீக்கியர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஹரியாணாவில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்தபோது பப்பர் கால்சா ஆதரவாளர் ஒருவர், பணியாரா பாபாவைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டார்.

 

‘ஃப்ரீசர் பாபா’

இறுதியாக வருகிறார் ‘ஃப்ரீசர் பாபா’. பிஹாரைச் சேர்ந்த ஆசுதோஷ் பாபாவானார். அவருக்கு லட்சக்கணக்கான சீடர்கள் சேர்ந்தனர். 2014 ஜனவரியில் அவர் இறந்துவிட்டார். ஆனால், ‘அவர் இறக்கவில்லை - சமாதியில்தான் இருக்கிறார்’ என்று ஆதரவாளர்கள் கருதுகின்றனர். எனவே அவர் மீண்டும் எழுந்து நடமாடுவார் என்ற நம்பிக்கையில் தகனம் செய்ய மறுத்து, ஃப்ரீசரில் வைத்திருக்கின்றனர். அவரைத் தகனம் செய்ய கோரும் வழக்கு உயர் நீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகளாக நடக்கிறது. தகனம் செய்யுமாறு ஒற்றை நீதிபதி ஆணையிட்டார். கூடாது என்று ‘பெஞ்ச்’ அந்த ஆணையை ரத்து செய்துவிட்டது. ஆசுதோஷ் பாபா வந்துவிடுவார் என்று சீடர்கள் அவர் கண் விழித்து எழுந்திருக்கக் காத்திருக்கின்றனர்.

சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதிகளில் மட்டும் ஏன் பாபாக்கள் அதிகம் இருக்கின்றனர் என்று சமூகவியலாளர்கள் கேட்கின்றனர். பலர் பல காரணங்களைக் கூறுகின்றனர். உலகிலேயே மிகவும் இளைய மதம் சீக்கியம்தான். தோன்றி 500 ஆண்டுகள் ஆகின்றன. அது இன்னமும் ‘வளர்சிதை’ மாற்றங்களை அடைந்து கொண்டிருக்கிறது. சீக்கிய மதத்துக்குக் கடவுள், குரு எல்லாம் அதன் புனித நூல்தான். கிரந்த சாஹிப்பில் உள்ளபடிதான் நடக்க வேண்டும். இந்த பாபாக்கள் மக்களுடைய வாழ்வியல் பிரச்சினைகளை மூன்று வழிகளில் தீர்க்கின்றனர். வழிபாட்டையும் மதக் கடமைகளையும் எளிதாக்கிவிடுகின்றனர். சீக்கியர்கள் – இந்துக்கள் இருவரையும் ஒருசேர ஈர்க்கும் விதத்தில் இவர்களுடைய ஆசிரம நடைமுறைகள் இருக்கின்றன. பாபாக்களின் வழிமுறைகள் குறுகிய காலத்தில் அதிக பலன் தரும் கலப்பின ரகமாக இருக்கிறது! புனித நூலில் பல விஷயங்கள் இருக்கலாம். ஏதாவது பிரச்சினை அல்லது குழப்பம் நேரும்போது மனதுக்கு ஆறுதல் தரவும் வழிகளைக் காட்டவும் ஒருவர் தேவைப்படுகிறார். அவர் பாபாவாக இருக்கும்போது சீடர்களுக்கு உற்சாகம் ஏற்படுகிறது.

 

வியாபார உத்தி தெரிந்தவர்கள்

27CHGUNSHEKARGUPTA

சேகர் குப்தா   -  BL

பாபாவாகிறவர்கள் நல்ல வளமான வியாபார உத்தி தெரிந்தவர்கள். அவர்களுடைய ஆசிரமங்கள் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து நிம்மதியாக சாப்பிட்டு ஆடி, பாடி, உற்சாகம் அடைய எல்லா வசதிகளுடன் திகழ்கின்றன. பாபாக்களின் புகழைப் பாடும் திரைப்படங்கள், பாடல் கேசட்டுகள் மிக எளிதாக அவர்களைப் பிரபலப்படுத்துகின்றன. அவர்களுடைய ஆடை அலங்காரங்கள், நகைகள், வாகனங்கள், செல்வ வளம் சீடர்களை வியக்க வைக்கின்றன. ராம் ரஹீம் பாபா மிகுந்த ஆடம்பரவாசி. எனவே சீடர்களுக்குப் பிடிக்கும். அவர் தவறே செய்யமாட்டார் என்பதே சீடர்களின் நம்பிக்கை. நிரங்காரிகளுக்கு எதிராக மதக் கட்டளை பிறப்பித்த சீக்கியர்களின் உயர் மத அமைப்பான அகால் தக்த், 35 ஆண்டுகளுக்குப் பிறகு ராம் ரஹீம் பாபாவுக்கு எதிராகவும் கட்டளை பிறப்பித்தது. அவருடனும் அவரை ஆராதிப்பவர்களுடனும் ‘‘ரோட்டி-பேட்டி கா சம்பந்த்’ தொடர்புகள் கூடாது என்று தடை செய்திருக்கிறது. அவருடைய ஆதரவாளர்களுடைய வாக்குகள் கிடைக்கும் என்ற ஆசையில் அகாலிதளம்-பாஜக கூட்டணி அரசு அவர் விடியோ மூலம் மன்னிப்பு கோரியதை ஏற்குமாறு அகால் தக்திடம் பரிந்துரைத்தன. இதை மதத்தில் பிடிப்புள்ள சீக்கியர்கள் கடுமையாக எதிர்த்தனர். சி.பி.ஐ. வழக்கிலிருந்து தப்ப உதவும் என்ற நம்பிக்கையில், அகாலி-பாஜக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு ராம் ரஹீம் பாபா கட்டளையிட்டார். ஆனால் பஞ்சாப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிதான் வென்றது. பாபா மீதான ஒரு வழக்கில் விசாரணை முடிந்து இப்போது தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

பாபாக்களின் வாக்கு வங்கிகளும் அரசியல் கட்சிகளின் பேராசைகளும்தான் பஞ்சாப், ஹரியாணா அரசுகளின் சாபக்கேடாக விளங்குகின்றன. இதை முதலில் தொடங்கி வைத்தது காங்கிரஸ். அதனிடம் கற்றுக்கொண்டது பாஜக. டேராக்களை ஆதரித்து அகாலிகள் தொடர்ந்து இருமுறை ஆட்சி செய்தனர். ராம்சந்தர் சத்தர்பதி என்ற துணிச்சல் மிக்க பத்திரிகையாளர்தான் பாபாவின் பாலியல் வன்புணர்வு குற்றத்தை அம்பலப்படுத்தியவர். அதற்காகவே அவரைச் சுட்டுக்கொன்றனர். நாட்டின் எந்த சட்டத்துக்கும் தாங்கள் கட்டுப்பட்டவர்கள் அல்ல என்று பாபாக்கள் நினைக்கின்றனர். சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஜகதீப் சிங் நெஞ்சுரம் மிக்கவர். பாபாவாக இருந்தாலும் சரி, குற்றம் குற்றமே என்று தீர்ப்பளித்துவிட்டார்.

தமிழில்: ஜூரி

சேகர் குப்தா, ‘திபிரிண்ட்’ தலைவர், தலைமை ஆசிரியர்.

http://tamil.thehindu.com/india/article19569564.ece?homepage=true

  • தொடங்கியவர்

இரு மாநிலங்கள், 31 உயிர்கள்... குர்மீத் ராம் ரஹீம் எனும் ஆன்மிக பிக்பாஸின் கதை! #WhyInGodsName

 
 

ராம் ரஹீம்

சாமியோ... ஆசாமியோ தனி மனித துதி எவ்வளவு ஆபத்தானது என அரியானாவில் ரத்தச் சிதறல்களுக்கு மத்தியில் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. 

அஹிம்சையும், அமைதியும் நிலவவேண்டிய அவசியத்தை மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டிய ஒரு மதத் தலைவரின் கைது சம்பவத்துக்கு, அவரது ஆதரவாளர்கள் ஆற்றிய எதிர்வினை எதிர்பாராத திசையிலிருந்து வந்த எமனைப் போன்று, இந்திய அரசுக்கு மிகப்பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. 

மத தத்துவங்களை, கலாசாரங்களை அடுத்தடுத்த தலைமுறைகளிடம் கொண்டுசெல்ல மத குருமார்கள் காலம்காலமாக இயங்கிவருகிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன் சாமியார்களின் கொள்கைகள்தான் மக்களிடையே உரை நிகழ்த்தின. பக்தர்களின் ஆன்மாவுடன் அவை அந்தரங்கமாக உரையாடின. தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டதோடு, பக்தர்கள் அந்த எல்லையைத் தாண்டாமல் சாமியார்களை விட்டு ஒதுங்கி நின்றார்கள். பக்தர்களிடம் சாமியார்களும் அந்த எல்லையை மீறாமல் இருந்தனர். ஒருவேளை உணவு, துாய்மையான மனம், எளிமையான வாழ்க்கை இதுதான் அன்றைய மத பிரசாரகர்களின் வாழ்க்கை.

ராம் ரஹீம்

தமிழகத்தின் புகழ்பெற்ற மடத்தின் மூத்த மதத்தலைவர் 90 வயதிலும் ஒரு மாட்டுவண்டியின் பின்னே கைகளை தாங்கியபடி நகரின் வீதிகளில் ஆசீர்வதித்தபடியே செல்வார். ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி எல்லோரையும் மடத்தில் நிறுத்தி ஆசி வழங்குவார். எதிரில் நிற்பவர் பிரச்னையைச் சொல்லும் முன்னே அவனுக்குத் தீர்வைச் சொல்லி அனுப்பி வைப்பார். மடம் எத்தனை விமர்சனங்களுக்கு ஆளானபோதும் அந்த மதத்தலைவர் மாற்றுக்கருத்துக்கு ஆளானதில்லை. 

மக்களுக்கு தத்துவங்களையும் இன்னபிற மதக்கோட்டுபாடுகளையும் போதித்துவந்த மடங்கள் கார்ப்பரேட் அலுவலகங்களைப் போல் கட்டி எழுப்பப்பட்டபின் சாமியார்கள் அரசியல்வாதிகளைப்போல் அவதாரம் எடுக்க ஆரம்பித்து விட்டனர். இறைவனின் புகழை மக்களிடம் பேசியவர்கள், பின்னாளில் தாங்களே அந்த இறைவனின் அவதாரம் என்று சொல்லிக்கொள்ள ஆரம்பித்தனர். இந்த போலிகளுக்கு ஆன்மீக அந்தஸ்து ஒருகட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தியது. ஆள்பவர்களுக்கு ஆலோசனை சொல்பவர்களாக மாற விரும்பினர். இறைவனைத் தேடிப்போய் வணங்கிய அரசியல்வாதிகளின் இல்லத்திற்கே இவர்கள் நேரில் சென்று ஆசி வழங்கினார்கள். பகுத்தறிவுக் கொள்கைகளை முழங்கியவர்களேகூட இந்த மாயையில் சிக்கினர்.  அரசியல்வாதிகளுடன் உறவாடத்தொடங்கி அவர்களால் பாத பூஜைகளுக்கு ஆளானபின் இந்த கார்ப்பரேட்டுகள் தங்களை ஆண்டவர்களாக கருதத் துவங்கினர். 

இந்திய அரசியலில் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால், அதன் பின்னணியில் ஒளிந்து கிடப்பது தனிமனித ஆராதனை. அரசியல்வாதிகளுடனான நெருக்கத்தினால் ஆன்மீகவாதிகள் தங்களை மனிதர்களால் கொண்டாடப்பட வேண்டியவர்களாக கருதிக் கொண்டனர். டெல்லி அரசியலில் கடந்த காலத்தில் சந்திரா சாமியாரில் தொடங்கி.. திருவண்ணாமலையில் இட ஆக்கிரமிப்பு புகாரில் சிக்கியிருக்கும் இன்றைய நித்தியானந்தா வரை இந்தப் பட்டியல் நீளும். திரும்பத் திரும்ப ஒருவன் ஒரு பொய்யைச் சொல்லிக்கொண்டு இருக்கும்போது அவனே அந்தப் பொய்யை முதலில் நம்புபவனாக ஆகிறான். தான் கடவுள் என மக்களை நம்பவைக்க முயலும் இந்த கார்ப்பரேட் சாமியார்கள், கொஞ்ச காலத்தில் தங்களையே கடவுளாக பாவிக்கத் தொடங்கி கடவுளுக்கு டஃப் கொடுக்கத் தொடங்குகிறார்கள். மறைந்த தனது அரசியல் குருவின் படத்தை சிறியதாகப் போட்டு, தன் படத்தை பேனரில் வியாபிக்கச்செய்யும் நடப்பு அரசியல்வாதிகளைப்போல இவர்களும் பேனரில் 32 பற்களும் தெரிய படபடக்கிறார்கள். மோடியில் தொடங்கி எடப்பாடி வரை தொடரும் இந்த கலாசாரத்தை அச்சுபிசகாமல் பின்பற்றுகிறார்கள் இன்றைய கார்ப்பரேட் சாமியார்கள். 

அரசியல்வாதிகள் அனுசரணையாக இருப்பதால் சாமியார்கள் என்ற போர்வையில் இவர்கள் நிகழ்த்தும் குற்றச்செயல்கள் மன்னிக்கப்படுகின்றன. அரிதாகவே வழக்குகள் பதிவாகின்றன. அதுவும் நீதிமன்றத் தலையீட்டினால் இருக்கலாம். 

குர்மீத் ராம் ரஹீம் சிங் இந்தப் பின்னணியில் வளர்ந்த ஒரு சாமியார்தான். இந்திய தண்டனைச் சட்டத்திற்கு விதிவிலக்காக இங்கு யாரும் கிடையாது. அது தெரிந்தும் பாலியல் குற்றத்திற்காக தண்டனை பெற்ற ஒரு சாமியாருக்காக, ராணுவத்தை எதிர்த்து நின்று மரணத்தைத் தழுவியிருக்கின்றனர் இவரது பக்தர்கள். வளமான காலத்தில் தாங்கள் செய்கிற தவறுகளை எதிர்காலத்தில் மறைத்து சட்டத்தின் சந்துபொந்துகளில் ஒளிந்துகொள்ள வசதியாகவே தங்கள் பக்தர்களை மனிதக் கேடயங்களாகத் தயார்படுத்துகின்றனர் இதுபோன்ற கார்ப்பரேட் சாமியார்கள். 'தங்களின் இறைவன் யாரோ அல்ல; இவர்தான்' என மக்களை நம்பவைப்பதில் இவர்கள் அடைந்த வெற்றிக்குக் கிடைத்த பரிசுதான் அரியானாவில் இன்று உயிரைவிட்ட 30 பேர். 

தண்டனைக் கைதியாக குர்மீத் ராம் ரஹீம் சிங் இப்போது சிறையிலடைக்கப்பட்ட பின்னரும், பஞ்சாப் மாநிலமும், அரியானாவும், சண்டிகர் யூனியன் பிரதேசமும் பயம் குறையாத பதற்றத்திலேயே உள்ளன. இந்திய தண்டனைச்சட்டத்தின் கீழ் வருகிற ஒரு குற்றத்திற்காக பல்வேறு கட்ட விசாரணைக்குப்பின் ஒரு தீர்ப்பின் அடிப்படையில் கைதாகும் ஓர் சட்டப்படியான செயலை எதிர்த்து, மாநில அரசின் சட்டம்- ஒழுங்கை கேள்விக்குறியாக்கிய குர்மீத் ராம் ரஹீம் சிங் என்பவர் யார்....?

ராம் ரஹீம்

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் உள்ள கர்சார் மோடியா என்ற கிராமத்தில் ஜாட் பிரிவைச் சேர்ந்த சீக்கிய குடும்பத்தில் 1967-ம் ஆண்டு பிறந்தவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். சிறுவயதிலேயே சீக்கிய மதப்பிரசாரங்களில் ஆர்வம் இருந்திருக்கிறது. ஏழாவது வயதில் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பில் இணைந்தார். அடுத்த 15 ஆண்டுகளில் அதன் தலைமைப் பொறுப்புக்கு வரும் அளவுக்குத் தீவிரமாகப் பணியாற்றினார். இந்த அமைப்பில் மிக இளம்வயதில் தீக்சை பெற்றவர் என்ற பெருமையும் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு உண்டு. 

திராவிட இயக்கங்கள் இன்றுவரை மக்களிடம் மறுக்க முடியாத இடத்தைப்பெற்று அடுத்தடுத்து ஆட்சி அதிகாரங்களை பங்கிட்டுக்கொள்ள ஆதாரமானது, அண்ணா சொன்ன “மக்களை சந்தி, மக்களோடு இரு, மக்களுக்காக உழை” என்ற மூன்று முழக்கங்கள்தான். ரஹீம் சிங்கின் வெற்றி தொடங்கியதும் அப்படி ஓர் முழக்கத்தினால்தான். தலைமைப் பொறுப்புக்கு வந்தபின் தேரா சச்சாவின் செயல்பாடுகளை முற்றிலும் மாற்றியமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார் ரஹீம் சிங். 'ஒரு மதப் பிரசாரத்தைத் தாண்டி, தன் எல்லையை சமூகப்பணியில் விரிவடையச் செய்தார்' என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். தேரா சச்சா அமைப்பு பல்வேறு நேரடியான மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டது. இந்த பணிகளால் தன் பக்தர்கள் மத்தியில் புகழடைந்தார் ரஹீம் சிங். நுணுக்கமான சில வித்தியாசங்களுடன் சீக்கிய மதத்திலிருந்து பிரிந்துவந்த ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக தன்னை திட்டமிட்டு கட்டமைத்துக் கொண்டார். மதப் பிரசாரங்களின் ஊடே சாதிகளை புறந்தள்ளிய சமூக நீதியை ஒட்டிய பிரசாரம் இவருடையது. 

தன் அமைப்பின் மூலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, கிரிக்கெட் மைதானம் என மக்களுக்கு ஏற்படுத்தித் தந்தார். பாலியல் தொழிலாளிகளை மீட்பதும் தேரா சச்சாவின் சமூகப் பணிகளில் ஒன்று. ஆனால் இந்த விவகாரத்தில் மற்ற அமைப்புகளிலிலிருந்து இது மாறுபட்டது என்பதற்கு, 2010-ம் ஆண்டு தேரா சச்சா சவுதாவின் பல நுாறு தொண்டர்கள் பாலியல் தொழிலாளிகளை மீட்டு, அவர்களை திருமணம் செய்துகொண்டது ஆச்சர்ய உதாரணம். 

ரஹீம்சிங் அத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை. தனது அமைப்பின் மூலம் குறைந்த விலைக்கு உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்கினார். ஓர் அரசுக்கு இணையாக பல திட்டங்களை மக்களுக்கு அவர் செயல்படுத்தினார் என்கிறார்கள். மாநிலத்தில் இயற்கைப் பேரிடர் சமயங்களில் வேட்டியைத் தூக்கி கட்டியபடி, மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுபவர்களாக தன் தொண்டர்களை 24 மணி நேரமும் தயார் நிலையில் வைத்திருந்தார். மாநில அரசு நிர்வாகம், அங்கு வருவதற்கு முன் தேரா சச்சா தொண்டர்கள் அங்கு களப் பணியாற்றிக் கொண்டிருப்பார்கள். அரசின் மெத்தனங்களால் புறக்கணிப்புகளால் அடித்தட்டு மக்கள் பாதிப்புக்குள்ளாகிற தருணங்களில் தங்களுக்கு ஆபந்பாந்தவனாக வருபவனை காலம் எப்போதும் ஏற்கவே செய்யும். இதுதான் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் வெற்றியின் ரகசியம். அந்த வெற்றிக்கான சாட்சியைத்தான் பஞ்சாப், அரியானா என இரு மாநிலங்களின் வீதிகளிலும் உள்ள சாலைகளில் தெறித்துக் கிடக்கும் மனித ரத்தத் துளிகளில் காண்கிறோம்.  

சாமியார்கள் மக்களிடையே அதீத புகழ்பெறத் துவங்குகிறபோது, சர்ச்சைகள் எழுவதும் வாடிக்கைதான். நம்மூரில் சில 'கடவுளர்கள்' திரைப்படங்களில் நடித்ததுண்டு. தெய்வங்களை பின்னுக்குத்தள்ளி தங்களை முன்னிறுத்திக் கொள்ளும், இந்த யுக்தியை ரஹீம் சிங்கும் கையாண்டிருக்கிறார். கடவுளின் துாதுவன் எனப் பெயரிடப்பட்ட ஐந்து திரைப்படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். 2000-வது ஆண்டுகளின் மத்தியில் கிட்டத்தட்ட கடவுளாகவே பக்தர்களால் கொண்டாடப்பட்டார் ரஹீம் சிங். அரசியல் கட்சிகளிடையேயும் பெரும் ஆதரவு இருந்தது அவருக்கு. மாநிலத்தில் 2012-ல் காங்கிரசும், 2014 தேர்தலில் பி.ஜே.பி-யும் இவரது ஆதரவைக் கேட்டுப்பெற்று தேர்தலில் போட்டியிட்டன. 

ராம் ரஹீம்

இந்த ஆராதனையின் உச்சக்கட்டமாக, கடந்த 2007-ல் சீக்கிய மத குருவான குரு கோவிந்த் சிங் போன்று தன்னை சித்தரித்துக் கொண்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மற்ற சீக்கிய மதக் குருக்களிடம் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நிலைமை போனது. 2015-ம் ஆண்டில் விஷ்ணுபோன்று தன்னை சித்தரித்துக் கொண்டதிலும் இந்து அமைப்புகளின் கண்டனத்திற்கு ஆளாகினார். 

கடந்த 2002-ம் ஆண்டு ரஹீம்சிங் தன் ஆசிரமத்தின் இரண்டு பெண் சிஷ்யர்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகியதாக சர்ச்சை எழுந்தது. அந்த பெண்களில் ஒருவர் இளம் சிறுமி. மக்களிடையே முதன்முறையாக குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு எதிரான அலை எழுந்தது. ஆனாலும் பக்தர்கள் அவரை நம்பினர். இந்தக் காலக்கட்டத்தில் ஆசிரமத்தின் ஊழியர் ரஞ்சித் என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். ஆசிரமம் குறித்த மர்மங்களை தொடர்ந்து எழுதி வந்த ராம் சந்தர் சத்ரபதி என்ற பத்திரிகையாளரும் கொலை செய்யப்பட்டார். உச்சக்கட்டமாக தேரா சச்சா சவுதா ஆசிரம சீடர்கள் 400 பேருக்கு ஆண்மைநீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இதனிடையே பாலியல் வழக்கினை தாமாகவே முன்னெடுத்த நீதிமன்றம், சி.பி.ஐ- யிடம் அதை ஒப்படைத்தது. இந்தத் தீர்ப்பில்தான் தண்டனையை 28-ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துவிட்டு, குர்மீத் ராம் ரஹீம் சிங்கை ‘குற்றவாளி’ என அறிவித்துள்ளது சி.பி.ஐ நீதிமன்றம். இந்தத் தீர்ப்பின் எதிரொலியாக நடந்த கலவரத்தில் 30 மனித உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இன்னமும் பதற்றம் குறைந்தபாடில்லை. 

ராம் ரஹீம்

ரஹீம் சிங்கின் பராக்கிரத்தை அறிந்திருந்ததாலேயே 150 பட்டாலியன் ராணுவமும் வரவழைக்கப்பட்டிருந்தது என்கிறார்கள். மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் தகவல் தொடர்பு சாதனங்களை முற்றாக முடக்கி வைத்திருந்தது மாநில அரசு. தனக்கு இருந்த மக்கள் செல்வாக்கைக் கருதி ரஹீம்சிங் எந்த பதற்றமுமின்றி 200-க்கும் மேற்பட்ட கார்களின் அணிவகுப்போடுதான் தீர்ப்பு தினமான வெள்ளிக்கிழமை பஞ்ச்குலா நீதிமன்றத்துக்கு வந்தார். சட்டத்திற்கும் தங்களின் தனிப்பட்ட செல்வாக்குக்கும் இடையேயான வேறுபாட்டை உணராதபடி புகழ்போதையில் விழுந்து கிடப்பவர்களின் தவறு இதுதான். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காக பெங்களுரு சென்றபோது ஜெயலலிதா சென்ற விதமும் இப்படித்தான். ஒரு முதல்வராக தேசியக்கொடி பறந்த காரில் நீதிமன்றத்துக்குள் சென்றார். ஒருநாள் முன்னதாகவே பெங்களுரு சென்று, ஜெயலலிதாவின் கார் கடந்துசென்ற வீதிகளில் கையசைத்து நம்பிக்கை அளித்தனர் அவரது தொண்டர்கள். ஆனால், பிற்பகலுக்கு மேல் குன்ஹாவின் தீர்ப்பினால் காரிலிருந்த தேசியக்கொடியை கழற்ற வேண்டியதானது.

ரஹீம் சிங்குக்கும் அப்படித்தான் நிகழ்ந்தது. தீர்ப்பு நாளன்று லட்சக்கணக்கில் அவரது தொண்டர்கள் இரண்டு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் இருந்து திரண்டு வந்திருந்தனர். இவர்களில் பெண்கள் குழந்தைகளும் அடக்கம். இவர்களில் எளிய மனிதர்கள், மட்டுமின்றி மெத்தப் படித்த, மேல்குடி மக்களும் இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு நாட்களுக்கு முன்னதாக ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டன. 

ராம் ரஹீம்

பிற்பகலில் 'ரஹீம்சிங் பாலியல் வழக்கில் குற்றவாளி' என தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது கோபத்தின் உச்சிக்குப்போன அவரது ஆதரவாளர்கள் ஆங்காங்கே வன்முறைகளில் ஈடுபட்டனர். ரயில் நிலையங்கள், பெட்ரோல் பங்க்-களும் அடித்து நொறுக்கப்பட்டன. வன்முறையாளர்களை கலைக்க ராணுவம் எடுத்த பதில் நடவடிக்கைகளால் ஆதரவாளர்கள் பலர் செத்து விழுந்தனர். 

இப்போது பதற்றம் குறையாத நிலையிலேயே குர்மீத் ராம் ரஹீம் சிங் ரோதக்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனிடையே சாமியாரின் பலத்தை அறிந்தும் மெத்தனமாக இருந்து மாநிலத்தில் பெரிய வன்முறை நிகழ அரசு காரணமாகி விட்டதாக, இவ்விவகாரம் குறித்து, அரியானா உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இருமாநிலங்களிலும் நிகழ்ந்த வன்முறை குறித்த விவரங்களை இருமாநில முதல்வர்களிடமும் கேட்டுப்பெற்றுள்ள உள்துறை அமைச்சகம் அதுகுறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

தண்டனை குறித்த விவரம், வரும் 28-ம் தேதி வர இருப்பதால், இப்போது நடைபெற்றுள்ள வன்முறைச் சம்பவங்களை பகுதி-ஒன்றாகத்தான் கணக்கிட்டுள்ளது. மாநில காவல்துறை. அதனால் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து உஷார் நிலையிலேயே வைக்கப்பட்டு உள்ளனர். முக்கிய இடங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தங்கள் சுயநலத்துக்காக ஒரு ஆபத்தான மனிதரை வளர விட்டதற்காகவும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உணராமல் அதில் மெத்தனம் காட்டியதற்குமான விலையை மொத்தமாக தந்திருக்கின்றன இரு மாநிலங்களும். தர இருக்கின்றன இனியும்!

 

ஆன்மீகவாதி, ஆன்மீகவாதியாக இருப்பதிலேயே இத்தனை விபரீதங்கள் என்றால் அரசியல்வாதியாகும்போது விளைவுகள் என்னவாக இருக்கும் என்ற அதிபயங்கர சிந்தனையை ஏற்படுத்தியிருக்கிறார் குர்மீத் ராம் ரஹீம் சிங்... 

http://www.vikatan.com/news/coverstory/100415-the-story-of-a-gurmeet-ram-rahim-singh-who-arrested-for-rapping-case-in-hariyana.html

  • தொடங்கியவர்

800 ஏக்கர் பிரமாண்ட பங்களாவில் இருந்த ஹரியானா சாமியார்

பாலியல் வல்லுறவு வழக்கில் "தேரா சச்சா செளதா" அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து, ஹரியானாவின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. அம் மாவட்டத்தின் சிர்சா நகரிலிருந்து செய்திகளை வழங்குகிறார் பிபிசி செய்தியாளர் ஜஸ்டின் ரெளலட்.

800 ஏக்கர் பிரமாண்ட பங்களாவில் இருந்த ஹரியானா சாமியார்படத்தின் காப்புரிமைAFP

ஹரியானாவின் சிர்சா நகரம் ஒரு `பேய் நகரை` போல் காட்சியளிக்கிறது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன; தெருக்கள் அமைதியாக உள்ளன. இது அனைத்திற்கும் காரணம் கடுமையான 144 தடை உத்தரவு.

இங்குதான் சமீப நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் குரு ராம் ரஹீமின் மிகப்பெரிய தலைமையகம் அமைந்துள்ளது.

இங்கு பலத்த ராணுவம் நிறுவப்பட்டுள்ளது. சுமார் 5000 சிப்பாய்கள் இருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். "தேரா சச்சா செளதா" வின் கோட்டைக்கான அனைத்து சாலைகளையும் தடுத்து வைத்துள்ளனர்.

நம்மால், அதிகபட்ச நெருக்கமாக இரண்டு கிலோமீட்டர் தூர இடைவேளியில் மட்டுமே செல்ல முடிந்தது.

தீர்ப்பு வருவதற்கு முன் பாதுகாப்பு குறைவாக இருந்தது. வெள்ளியன்று அந்த சாமியாருக்கு சொந்தமான வளாகத்திற்குள் நான்கு மணி நேரம் இருந்த பத்திரிக்கையாளர் ஒருவரிடம் பேசியதில் நம்மால் சில தகவல்களை சேகரிக்க முடிந்தது.

800 ஏக்கர் பிரமாண்ட பங்களாவில் இருந்த ஹரியானா சாமியார்படத்தின் காப்புரிமைAFP

தனக்கென ரூபாய் நோட்டைக் கொண்ட "நகருக்கு உள்ளே இருக்கும் ஒரு நகரம்" என்று அந்த வளாகத்தை வர்ணித்தார் அவர். `குரு` வின் அற்புதங்களை போற்றும் வாக்கியங்கள் பொறிக்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் டோக்கனை நம்மிடம் காண்பித்தார் அவர்.

குரு ராம் ரஹிம், மாளிகையை போல் காட்சியளிக்கும் ஒரு பெரிய ஆடம்பர பங்களாவில் வாழ்ந்ததாக சொல்கிறார். அதில் விடுதி, ஓய்வு விடுதி மற்றும் தங்கும் அறைகள் இருந்ததாகவும், அதன் பரப்பளவு சுமார் 800 ஏக்கராக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த மாளிகையின் முக்கிய கட்டடம் பெரிய அரங்கம்; அங்குதான் குரு தனது சந்திப்புகளை நிகழ்த்துவார் என்றும் மேலும் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அங்குதான் அவரது வழிப்பாட்டாளர்கள் அவரின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவர் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் தேசிய தொலைக்காட்சி சேனலில் பணிபுரியும் அந்த பத்திரிக்கையாளர், அந்த வளாகத்தின் உள்ளே பலர் இருந்ததை பார்த்தாக தெரிவித்தார்.

 

அந்த வளாகத்தின் ஒவ்வொரு இடங்களிலும் போடப்பட்டிருக்கும் தடுப்புகளைப் பற்றி அவர் நம்மிடம் விவரித்தார்.

அடுக்கடுக்கான லத்திகள், மூங்கில் கொம்புகள் மற்றும் பிற அடிப்படை ஆயுதங்கள் அங்கு வைக்கப்பட்டிருந்ததை பார்த்த அந்த பத்திரிக்கையாளர், குருவின் வழிபாட்டாளர்கள் சிலர் அந்த மாளிகையை தாக்குதலில் இருந்து காப்பாற்ற தயார்படுத்துகின்றனர் என நம்பியதாக தெரிவித்தார்.

அந்த வளாகத்தின் உள்ளே அதிகாரிகள் நுழைய திட்டமிட்டுள்ளனரா என்று தற்போது தெரியவில்லை.

800 ஏக்கர் பிரமாண்ட பங்களாவில் இருந்த ஹரியானா சாமியார்படத்தின் காப்புரிமைMANOJ DHAKA

யாரையும் அந்த மாளிகையில் செல்ல விடாமல் தடுப்பது மட்டுமே தற்போதைய யுக்தி என்றும், குருவின் வழிபாட்டாளர்கள் யாரேனும் வெளியே செல்ல விரும்பினால் செல்லலாம் என்றும், பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாதவர்கள் தெரிவித்தனர்.

அதிகாரிகளுக்கு தற்போது இருக்கும் முக்கிய பொறுப்பு ஆணையை காப்பாற்றுவதே ஆகும்.

திங்களன்று குரு ராம் ரஹிமிற்கு தண்டனை விதிக்கப்படலாம். எனவே வன்முறைகள் மேலும் வெடிக்கலாம் என அச்சங்கள் உள்ளன.

இரண்டு பாலியல் வல்லுறவு வழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு ஏழு வருடச் சிறை தண்டனை அல்லது ஆயுள் சிறை கிடைக்கலாம் என பிபிசி புரிந்து கொள்கிறது.

http://www.bbc.com/tamil/india-41065094

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பணிகளை செய்து இருக்கிறார் .....
இவ்வளவு அதிகாரம் இருந்தும் வெறும் இரண்டு பாலியல் குற்ற சாட்டு 
என்பதால் .........
கொஞ்சம் நல்ல மனிதராக இருக்குமோ என்று எண்ண தோன்றுது 
அல்லது செய்தி முழுமையாக இல்லையோ தெரியவில்லை. 

நாட்டுக்கு நிறைய நல்லது செய்திருக்கு மனுஷன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.