Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியம், சீமான் – திருமுருகன்,வை.கோ.. ஒரு வேண்டுகோள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியம், சீமான் – திருமுருகன்,வை.கோ.. ஒரு வேண்டுகோள்!

seemanthiru-300x169.jpg

தமிழ்த் தேசியம் என்றால் என்ன? தமிழ்ப் பேசுகின்ற எல்லோரும் ஒரே தேசிய இன வகைக்குள் அடங்குவார்கள் என்பதே அதன் மறு அர்த்தம். ஆக, தமிழ் நாடு, வட கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இன்னும் தமிழ்ப் பேசும் இஸ்லாமியர்கள், வேண்டுமானால் புலம்பெயர் தமிழர்கள் போன்ற அனைவரையும் இணைத்து ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்வதே தமிழ்த் தேசியமா என்ன? தமிழ்த் தேசியவாதிகள் பல சந்தர்ப்பங்களில் தம்மைத் தமிழ் உணர்வாளர்கள் என்றும் அழைத்துக்கொள்கிறார்கள். தமிழ்த் தேசியவாதிகள் என்று தம்மை அழைத்துக்கொள்பவர்களின் பொதுவான ஆரம்பமே தாம் ஏனைய மொழி பேசும் மக்களைவிட உயர்வானவர்கள் என்பதே. இவர்கள் அனைவரதும் மற்றொரு முழக்கம் ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பது என்பதாகும் எனப் புரிந்துகொள்ளலாம்.

முதலில் நாற்பது வருடகாலம் ஆயுதம் தாங்கிய ஈழப் போராட்டத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கையின் மத்திய பகுதியில் வாழும் தமிழர்கள் பங்கேற்றதில்லை. இன்றும் கூட வட கிழக்கில் தமிழர்களிடம் வாக்குக் கேட்கும் தமிழ் அரசியல் கட்சிகள் மலையகத்தில் இல்லை. மலையகத் தமிழர்களுக்கான அரசியல் கட்சிகளே அங்கு தேர்தல்களில் பெரும்பான்மையாக வெற்றிபெறுகின்றன. மலையகத் தமிழர்கள் வட கிழக்குத் தமிழர்களுடன் தம்மை எப்போதும் அடையாளப்படுத்தியதில்லை. பல வீரம் செறிந்த மக்கள் போராட்டங்களை நடத்திய மலையகத் தமிழர்கள் தம்மைத் தனியான தேசிய இனமாகவே உணர்கின்றனர். வட கிழக்கைச் சார்ந்த அரசியல் கட்சிகளோ, அன்றி வட கிழக்கில் தோன்றிய விடுதலை இயக்கங்களோ அவர்களின் அடிப்படையான அந்த உணர்வை மதித்ததில்லை.

1972 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற வாக்குக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு தனி நாட்டுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது, வாக்கைச் சிதறவிடாமல் தடுப்பதற்காக மலையகத்தின் பலமான அரசியல் கட்சியின் தலைவரான சவுமிய மூர்த்தி தொண்டைமானுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டனர்.

அதன் பின்னர் மலையக மக்களையும் இணைத்தே ஈழம் என்ற கோட்பாட்டை ஈரோஸ் என்ற விடுதலை இயக்கம் முன்வைத்து மலையகப் பகுதிகளில் அரசியல் வேலைகள் முன்னெடுத்துத் தோற்றுப் போனது. 80 களின் ஆரம்பத்தில் ஈழப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு மலையக மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான இயக்கங்கள் தோன்றின. இலங்கை பேரினவாத ஒடுக்குமுறையின் கோரத்திற்கு அப்போதே அந்த இயக்கங்கள் பலியானமைக்கு அவற்றின் வர்க்கம் சார்ந்த போர்க்குணமும் ஒரு காரணம் எனலாம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு மீண்டும் வாக்குக் கட்சிகள் தோன்றிய போது, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையினான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மீண்டும் மலையக் மக்களை அன்னியப்படுத்தும் வகையிலான கோரிக்கைகளை முன்வைத்தது. தமிழர்கள் அனைவரும் ஒரே தேசத்திற்கு உரித்தானவர்கள் என்றும் இலங்கை என்பது ஒரு நாடு அதனுள் இரண்டு தேசங்கள் அடங்கும் என்ற முழக்கத்தை முன்வைத்தனர். மலையகத்தில் மட்டுமன்றி வட கிழக்கிலும் அவர்களை யாரும் ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை.

ஆக. ஒரு நாட்டின் எல்லைக்குளேயே வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் இரண்டு தேசிய இனங்களாக வளர்ந்து தமக்கான உரிமைகளைக் கோருகின்றனர். இங்கு மலையக மக்களின் சுய நிர்ணைய உரிமையை மதித்து அவர்களுடன் இலங்கைப் பேரினவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் கூட்டிணைவை ஏற்படுத்திக்கொள்வதே அதிகாரவர்க்கைதைப் பலவீனப்படுத்தும். தவிர தமிழர்கள் என்ற அடிப்படையில் இணைந்து வட கிழக்குத் தமிழர்களின் ஆதிக்கத்திற்கு உட்படுமாறு மலையகத் தமிழர்களைக் கோருவது மேலாதிக்க மனோபாவமே தவிர வேறெதுவுமில்லை.

தமிழ் நாட்டிலிருந்து ஈழம் பிடித்துவருவதாகக் கூறும் ‘தமிழ்’ தேசியவாதிகளில் பலருக்கு மலையகத் தமிழர்கள் குறித்த அறிவிற்கு வாய்ப்பில்லை என்பது வேறு விடையம்

ஒரு நாட்டின் எல்லைக்குள்ளேயே இரண்டு தேசிய இனங்களாக தமிழர்கள் உணரும் போது, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை இணைத்துத் தமிழ்த் தேசிய இனம் எனக் கூறுவது எவ்வளவு அபத்தமானது?
நான்கு தசாப்தங்கள் நடைபெற்ற வீரம்செறிந்த ஈழப் போராட்டம், அதில் பங்காற்றிய இயக்கங்கள், முன்வைக்கப்பட்ட அரசியல் போன்றன தொடர்பாக எந்தக் குறைந்தபட்சப் புரிதலுமின்றி, ஈழப் போராட்டத்தை முன்வைத்து தமிழ்த் தேசியம் என்று கற்பனை செய்து சினிமாப் படம் எடுத்தால் கூட அதில் பந்தாடப்படுவது ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஈழத் தமிழர்களே.

தமிழ்த் தேசியம் என்ற சினிமாப்பாணியிலான கற்பனையை மலையக மக்களின் வரலாறு மட்டுமன்றி ஈழத்தின் இலங்கையின் ஏனைய தேசிய இனங்களின் வரலாறும் இணைந்தே  சிதறடித்துவிடுகின்றன.

தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் இலங்கையில் ஒரு போதும் ஈழப் போராட்டத்தில் இணைந்துகொண்டதில்லை. அவர்களை முஸ்லீம் காங்கிரஸ் போன்ற வாக்குக் கட்சிகளே பிரதிநித்துவம் செய்தன. அக்கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைப்பை ஏற்படுத்தி பின்னர் தனியாகப் பிரிந்த வரலாறும் உண்டு. ஈரோஸ் மற்றும் சிறிய இடதுசாரி இயக்கங்கள் தவிர்ந்த அனைத்து விடுதலை இயக்கங்களும் முஸ்லீம்களை சாரிசாரியாகப் படுகொலை செய்த கறைபடிந்த வரலாறும் உண்டு. அதன் மறுபக்கதில் இலங்கை அரசின் துணை இராணுவப் படைகளுடனும் அடிப்படை வாதக் குழுக்களுடனும் முஸ்லீம்களின் ஒரு பகுதியினர் தொடர்பை ஏற்படுத்தி படுகொலைகளில் ஈடுபட்ட துயர்படிந்த வரலாறும் நம்முடையது தான்.

இவற்றின் உச்சமாக வடக்கில் பரம்பரைகளாக வாழ்ந்துவந்த அனைத்து முஸ்லீம் தமிழர்கள் 1990 ஆம் ஆண்டு ஒரு இரவிற்குள் விடுதலைப் புலிகளால் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் முஸ்லீம்களை நிரந்தர எதிரிகளாக்கிற்று. இனப்படுகொலையோடு விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், முஸ்லீம்கள் மிண்டும் வடக்கில் தமது இருப்பிடங்களில் குடியேற ஆரம்பித்தனர்.

ஆக, இலங்கையின் எல்ல்லைகுள் வாழுகின்றன வெவ்வேறு தேசிய இனங்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவை. அவர்களின் தனித்துவத்தை மதிக்காமல் அவர்களைத் தமிழ்த் தேசியம் என்ற ஒற்றை எல்லைக்குள் உட்படுத்த முற்பட்டு அது அழிவுகளுக்கு வித்திட்டதை வரலாற்றின் பாடமாக கொள்ளலாம்.

இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதே நிலை தான். ஆங்கிலம் பேசும் இங்கிலாந்துக் காரர்கள் அயர்லாந்து மக்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள் என்பதற்காக ஒரே தேசிய இனமாக இணைத்துக்கொள்ள முற்பட்டதன் விளைபலன் தான் அயர்லாந்து மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம். பிரான்ஸ் நாட்டில் பிரஞ்சு மொழி பேசும் கோர்சிகா மக்கள் பிரான்ஸ் நாட்டிலிருந்து பிரிந்து செல்லும் உரிமைக்காப் போராடுகிறார்கள்.

ஆக, ஒரு மொழியைப் பேசுகின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஒரே தேசிய இனம் என்று வலிந்து இணைத்துக்கொள்வது இன்னொரு வகையான ஒடுக்குமுறை மட்டுமன்றி ஆபத்தானதும் கூட என்பதை வரலாறு எமக்கு உணர்த்துகிறது.

இலங்கை அரச கட்டமைப்பு என்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. இன்றைய அமைதிச் சூழல் தற்காலிகமானது. தமிழ் மக்கள் மூச்சுவிடுவதற்குக் கிடைத்த இடைவெளிதான் இது. இச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு இலங்கைப் பேரினவாதிகளைப் பலவீனப்படுத்துவதும் அதற்காக ஒடுக்கப்படும் சிங்கள உழைக்கும் மக்களிடம் உரையாடுவதும் ஈழத் தமிழர்களின் இன்றைய கடமை. இலங்கையில் வாழும் ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையை மதித்து அதன் அடிப்படையிலான இணைவை ஏற்படுத்துவது மற்றைய பணி.

நீங்கள் வெவ்வேறு காரணங்களுக்காக மேடை போட்டு முழங்கும் தமிழ்த் தேசியம் மற்றொரு பணியையும் செய்து முடிக்கிறது. சிங்கள பௌத்த பேரினவாதிகளைப் பலப்படுத்துகிறது. உங்களைக் காரணம் காட்டி பேரினவாதிகள சிங்கள மக்களை தமது பிடிக்குள் வைத்துக்கொள்ள நீங்கள் துணை போகிறீர்கள்,

தமிழ் நாட்டிலிருந்து உங்களுக்குத் தோன்றும் சினிமாப் பாணிக் கற்பனைக் கதைகளுடன் நீங்கள் பேசும் தமிழ்த் தேசியத்தை நிறுத்திக்கொண்டு உங்களை ஆக்கிரமிக்க எண்ணும் இந்துத்துவ அடிப்படைவாதிகளுக்கு எதிராக போராடினாலே அது மனிதகுலத்திற்கு நீங்கள் ஆற்றும் சேவையாகக் கருதப்படும்.

 

http://inioru.com/tamil-nationalism-seeman-thirumurugan/

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

வைகோ, சீமான்,திருமுருகன் போன்றோர் தமிழ் தேசியத்தைப் பற்றி பேசுவது ஒருபுறம் இருக்கட்டும்

பல்லாயிரக்கணக்கான போராளிகள், பொதுமக்களின் தியாகங்கள்,முப்பது வருட ஆயுதப் போராட்டம் என்று ஏகப்பட்ட அனுபவங்களை கொண்ட ஈழத் தமிழர் சிலருக்கு, மேலே குறிப்பிட்டவர்கள் சொன்னால்தான் ஈழஅரசியல் புரிகிறது. அவர்கள் வந்து சுடரேற்றினால்தான் மாவீரர் சுடர் ஒளிர்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

தமிழ்த் தேசியம், சீமான் – திருமுருகன்,வை.கோ.. ஒரு வேண்டுகோள்!

......

இலங்கை அரச கட்டமைப்பு என்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. இன்றைய அமைதிச் சூழல் தற்காலிகமானது. தமிழ் மக்கள் மூச்சுவிடுவதற்குக் கிடைத்த இடைவெளிதான் இது. இச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு இலங்கைப் பேரினவாதிகளைப் பலவீனப்படுத்துவதும் அதற்காக ஒடுக்கப்படும் சிங்கள உழைக்கும் மக்களிடம் உரையாடுவதும் ஈழத் தமிழர்களின் இன்றைய கடமை. இலங்கையில் வாழும் ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையை மதித்து அதன் அடிப்படையிலான இணைவை ஏற்படுத்துவது மற்றைய பணி.

....

http://inioru.com/tamil-nationalism-seeman-thirumurugan/

இந்த ஞானம் 50 வருடங்களுக்கு முன்னர் வந்திருந்தால் நல்லது.

குறைந்த பட்சம் ஆயுதப் போராட்டத்தை கையிலெடுக்கும்போதாவது வந்திருக்கலாம்.. லட்சக்கணக்கான மக்கள் அநியாயமாக நீங்கள் உணர்ந்திருக்கும் பேரினவாதத்திற்கு பலியாகமல் இருந்திருப்பார்கள்.

இருக்கும் ஓரளவு உயிர்ப்பையும் குழிதோண்டி புதைக்கும் கட்டுரை. இம்மாதிரி நாலு பேர், சே..சே.. இவர் மாதிரி ஒருத்தர் போதும், ஒரு பயல் உங்கள் பக்கமே எட்டிப்பார்க்க மாட்டார்கள்.

சந்தேகக்கோடு அது சந்தோசக்கேடு..!  இது சிங்களவருக்கும், தமிழருக்கும் பொருந்தும்.

முயற்சியுங்கள், சிங்கள பேரினவாதத்தை இணக்கமாக அனுபவிக்க வாழ்த்துக்கள்..! :)

.

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடதுசாரிச் சிந்தனை உள்ளவரால் எழுதப்பட்ட கட்டுரை. என்னதான் சரியாக இருந்தாலும் கேட்பதற்கும் செயலாற்றுவதற்கும் யாரும் முன்வரமாட்டார்கள்.

உணர்ச்சி அரசியலை செய்பவர்களை நம்பும் சாதாரண தமிழ் மக்கள் பிறர் ஏதாவது தீர்வைப் பெற்றுத் தருவார்கள் என்று இன்னமும் நம்பிக்கொண்டு இருக்கின்றனர்.

அதில் ஒரு பகுதியினர் சிரிய அகதிகளை ஈழத்தமிழன் ஒருவன் விமானத்தில் கனடா கொண்டு சேர்பித்தான் என்று நம்பி முகநூலில் போலிச் செய்தி பரப்புமளவிற்கு அடி முட்டாள்களாக இருக்கின்றனர்.?

இந்த இலட்சணத்தில்  நூதனமாக இன அழிப்பு தொடர்வதை எப்படி அறிவார்கள்?

கேப்பாபிலவு மக்களின் எங்கள் நிலம் எங்களுக்கே வேண்டும் என்ற போராட்டத்தை பலர் காண்டுகொள்வதில்லை. காணாமல் போனவர்களின் உறவினர்கள் நடாத்தும் சில எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் பலர் பங்குகொள்வதில்லை. மைத்திரி/ரணிலின் நல்லாட்சி அரசு எதுவும் தமிழர்களுக்கும் செய்யாதபோதும் சிங்களவர்களுக்கு இனவாதியான மகிந்ததான் இப்போதும் நாயகன் என்று அண்மைய தேர்தல் சொல்லியுள்ளது.

இந்நிலையில் தமிழ்த் தேசியம் என்று வெற்று உணர்ச்சிக்கோஷம் போட்டு சிங்கள கடும்போக்காளர்களை சிங்கள மக்களின் பெருத்த ஆதரவோடு ஆட்சிக்கு வரப்பண்ண உதவினால் தமிழர்களின் சகல பகுதிகளும் விரைவில் திருகோணமலை போலக் கபளீகரம் செய்யப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தேசியம் என்று கோசம் போட, முன்னெடுக்கச் சொல்லவில்லை. 'இனியாவது ஒருமித்துச் செல்லுங்கள்' என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும். 'எத்திசையில் செல்வது' என்பது ஈழத்தமிழர்களின் உரிமை. :108_metal:

சமீபத்திய தமிழீழ மாநாட்டில் கவிஞர்.காசி ஆனந்தன் உரையை கேட்டுப்பாருங்கள், நம்ப முடியாமல் இருக்கும்.

சுதந்திரம் கிட்டிய நாளிலிருந்து ஈழத்தமிழர்களிடையே ஒருமித்த அரசியல் தொலை நோக்கு சரியாக அமையவில்லை. மேலே கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் பல்வேறு 'தேசிய இனங்களை/அவர்களின் விருப்பங்களை' அக்கால தமிழ்த் தலைமைகள் கருத்தில் கொள்ளாமலா அரசியல் செய்திருப்பார்கள்..?

சில முயற்சிகளை செய்து பார்த்தார்கள், வாய்ப்பும் வந்தது, துரதிஷ்டவசமாக தவறிவிட்டது.

நிலைமை கைமீறி, எல்லால் முடிந்தபின், இப்போது ஞானம் வந்து, ஏற்கனவே விட்ட பிழைகளை(???) ஆற்றாமையால் மற்றவர் மீது ஏற்றி, 'எல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நீங்கள் கம்முன்னு கிடவுங்கள்' என இப்போது சொல்வது சரியன்று..! :unsure:

 

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்போது படித்த கட்டுரை ஒன்றில் சொல்லப்பட்டதானது:

“இராசபக்ஷே போட்டுத் தந்த பாதையில் நடக்கும் சிறிசேன அரசாங்கம், தேர்ந்த இராஜதந்திர நுட்பத்துடன் சீனாவை அணைத்து – ஒரு நாள் இந்தியாவை ஓரங்கட்டுவதில் முற்றிலும் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை. இதன் வினைகளைப் பட்டு அனுபவிக்கப் போகிற நாட்களில் - இந்தியப் பாதுகாப்பு ஈழப்பிரதேசத்திலும், ஈழத் தமிழர்களிடமும் தங்கியுள்ளது என்பதை உணருகிற நாளில் - இந்தியாவும் அமெரிக்காவும் தமிழ் தேசிய இன விடுதலைக்கு கை கொடுப்பது தவிர்க்க முடியாமல் ஆகிவிடும்”

இலங்கைத்தீவு இரண்டாக உடைவதுதான் இந்தியாவினதும், மேற்குலகினதும் நலனுக்கான ஒரேயொரு தவிர்க்க முடியாத மாற்று வழியென உணரப்படும் காலம் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில ஆண்டுகளில் உருவாகும்”

“முள்ளிவாய்க்கால் பேரழிவு வரை மட்டுமன்றி அதற்கு பின்பு இன்று வரையுங்கூட தமிழீழப் போராட்டத்திற்கான இராஜந்திர அணியோ, அதற்கான இராஜதந்திர அமைப்புக்களோ அல்லது அதற்கான அறிஞர்குழாம், அறிஞர்படை சார்ந்த ஏற்பாடுகளோ அமைப்பு ரீதியாக எதுவும் இதுவரை (2018) இல்லை என்பது மட்டுமே தமிழ் அரசியலின் கேடுகாலத்தை உணர்த்தப் போதுமானதாகும்.”

“அதற்கு முன்பு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையைத் தொடர்வதன் மூலம் தமிழர்கள் – தமிழ்ப்பிரதேசம் உருத்தெரியாமல் அழிக்கப்பட்டு விடாமல் இருக்க வேண்டும். ஏனெனில் சிங்களவரின் அடுத்த ராசதந்திர நகர்வு இலங்கையில் தமிழினம் இடமற்று, பொருளற்று, வாழ்வற்று, நசிவுற்று, மக்கள் தொகையே இல்லாமல் செய்து விடுவதன்மூலம், இந்தியாவின் தலையீட்டை முற்றிலும் நீக்கி விடவும், மொத்த இலங்கைத் தீவையே சிங்கள இனத்தின் தீவாக மாற்றிவிடவும் உறுதி பூண்டிருக்கிறது. ஈழத்தில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. இது நடக்க சில பத்தாண்டுகள் ஆகலாம்”

 

ஆக இன்னும் பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியம் என்று கோஷம் போடத் தேவையிருக்காது.

 

 

 

On 3/3/2018 at 1:14 AM, கிருபன் said:

இலங்கை அரச கட்டமைப்பு என்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. இன்றைய அமைதிச் சூழல் தற்காலிகமானது. தமிழ் மக்கள் மூச்சுவிடுவதற்குக் கிடைத்த இடைவெளிதான் இது. இச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு இலங்கைப் பேரினவாதிகளைப் பலவீனப்படுத்துவதும் அதற்காக ஒடுக்கப்படும் சிங்கள உழைக்கும் மக்களிடம் உரையாடுவதும் ஈழத் தமிழர்களின் இன்றைய கடமை. இலங்கையில் வாழும் ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையை மதித்து அதன் அடிப்படையிலான இணைவை ஏற்படுத்துவது மற்றைய பணி.

தமிழ் மக்கள் மூச்சு விட எந்த இடைவெளியும் ஏற்படவில்லை. முதலில அமைதிச் சூழல் என்பதே ஒரு மாயை. 

ஒடுக்கப்படும் சிங்கள மக்களுடன் சேரவும் முடியாது அவ்வாறு சேர்ந்து பேரினவாதிகளை பலவீனப்படுத்தவும் முடியாது ஏனெனில் பேரினவாதத்தின் இயக்க சக்தி என்பது சிங்கள உழைக்கும் மக்களிடமும் இருப்பதுதான். எவ்வாறு சாதீயம் மதம் போன்றன சிங்கள ஒடுக்குமுறைக்குள்ளாகி பாதிக்கப்பட்ட தமிழ்மக்களிடம் தேசீயவாதத்தை மேவி உயிர்ப்புடன் உள்ளதோ அவ்வாறே சிங்களப்பேரினவாதமும் அவர்களிடம் உள்ளது. இடதுசாரிச் சிந்தனை மற்றும் அது சார்ந்த அணுகுமுறை என்பது எப்போதும் எமது சமூகத்தில் மாற்றுசக்கதியாக உருவாகமுடியாது. எமக்குள் இருக்கும் சாதி மத பிரதேசவாத சமூக முரண்பாடுகள் அதற்கு இடமளிக்காது  என்பது இதுவரைகால வரலாற்று அனுபவமாக இருந்தாலும் இடதுசாரி சிந்தனையில் ஊறிப்போனவர்களுக்கு அது புரியப்பேவதில்லை. ஏதோ சீமான் திருமுருகன் காந்தி போன்ற சிலரால் தான் தமிழ்த்தேசீயவாதம் ஞாபகப்படுத்தப்படுகின்றது. அவர்களும் அமைதியானால் தேசீயவாதத்தை பெயரளவில் வைத்திருக்கக் கூட  இங்கேயாரும் இல்லை.  தேசீயவாதத்தை கதைத்தால் பேரினவாதம் பலப்படும் என்று பயந்து அதை நிறுத்திக்கொண்டால் பேரினவாதம் பலப்பபடவேண்டிய தேவையே இல்லாமல் அது அதன் இலக்கை  அடைந்துவிடும். பேரினவாதம் செய்யவேண்டிய வேலையை இடதுசாரிகள் செய்ய முற்படுகின்றார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.