Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலை களமாக சிரியா : இந்தக் கொலைகள் எல்லாம் ஏன் நடக்கிறது.?

Featured Replies

கொலை களமாக சிரியா : இந்தக் கொலைகள் எல்லாம் ஏன் நடக்கிறது.?

 

 

ஆர்.யசி

ஒரு சில நாட்களில் ஏன் ஒரு சில மணித்தியாலங்களைக் கூட ஒப்பந்தத்தை மீறிய அடுத்த போராட்டங்கள். 

இதனிடையில் 2018. 02.24 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூடி 30 நாட்கள் போர் நிறுத்தத்தை முன்னெடுக்க ஒப்பந்தம் செய்கின்றது.  பல ஆண்டுகளாக களத்தில் குருதி கண்ட அமெரிக்கா  30 நாட்கள் ஓய்வை விரும்புகின்றது. ஆனால் புதிய நண்பனான ரஷ்யா ஓய்வை விரும்பவில்லை. ஒரு நாளைக்கு ஐந்து மணிநேர போர் நிறுத்தம் போதும் என்ற நிபந்தனையில் தொடர்ச்சியாக யுத்தத்தை நடத்தி வருகின்றது. 

ஒரு நாட்டின் அரசியலை யுத்தங்களே தீர்மானிக்கின்றன. அரசியல்வாதிகள் யுத்தங்களை தீர்மானிப்பதும்,யுத்தங்கள் அரசியலை தீர்மானிப்பதும் முடிவற்ற சுழற்சியாகும். ஒவ்வொரு தேசத்தின் சரித்திரத்திலும் கோடிக்கணக்கான வலிகள் நிறைந்திருக்கின்றன. போராட்டங்களுக்காகவே பலநூறு ஆண்டுகளை மக்கள் கழித்துள்ளனர். உணவுக்கும், உரிமைக்கும் நிம்மதிக்குமாகவே  எத்தனையோ பாடுகளை பட்டுள்ளனர். 

இன்றைய நவீன, தொழில்நுட்ப காலத்திலும் மக்களின் உரிமைக்கான போராட்டங்கள் நிறைவடைந்ததாக இல்லை. மத்திய கிழக்கினை பொறுத்தவரை இன்றும் பல்வேறு நெருக்கடிகள் காணப்படுகின்றன. இவ்வாறானதொரு நிலையில்  உலகின் முழுமையான பார்வை சிரியாவை நோக்கித் திரும்புகின்றது. சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸ். சரித்திரத்தில் அழுத்தமாக பதியப்பெற்ற நகரம்.  உலகில் மக்கள் வசித்து வரும் பழமையான  சில நகரங்களில் சிரியாவும் ஒன்றாகும். 

எனினும் இன,மத மோதல்களில் சிக்கி தமது இனத்தை அழித்துக்கொள்ளும் துர்ப்பாக்கியம் நிகழ்ந்துவிட்டது. உள்நாட்டு கிளர்ச்சிகளுக்கு முன்பிருந்தே சிரியாவில் வாழ்வாதார போராட்டங்கள் நிறைந்தே காணப்பட்டன. அரசியல் நெருக்கடி, ஊழல், இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் என பல திண்டாட்டங்களின் உச்சமே உள்நாட்டு கிளர்ச்சியாக பரிணாமம் எடுத்தது. ஆரம்பத்தில் அமைதியான முறையில் இடம்பெற்ற போராட்டங்களின் ஒரு கட்டம், அதுதான் 2011 அரபு வசந்த போராட்டம். 

மத்திய கிழக்கின் அரபு வசந்தத்தால் ஈர்க்கப்பட்ட  ஜனநாயகத்தை அடிப்படையாக வைத்து முன்னெடுக்கப்பட்ட அரசாங்கத்தை எதிர்க்கும் கண்டனப்பேரணியை சிரிய அரசாங்கம் நசுக்கிய நிலையில் அதிலிருந்து நிலைகுலைய ஆரம்பித்தது சிரியா. இதன்  அடுத்தகட்டமே உள்நாட்டு போராட்டமாக பரிணாமமும் கண்டது.  சிறுபான்மையாக உள்ள சிரியாவினரின்  கரங்கள் ஓங்க ஆரம்பித்தமை மற்றும் ஒரே  கட்சியின் ஆட்சி நிலவுகின்றமை ஆகிய இரண்டு அடிப்படை காரணிகளை கொண்டு  மூன்றாம் உலக மகா யுத்தம் ஒன்றுக்கான பாதையினை அமைத்துவிட்டது. அத்தனைக்கும் வெறும் அதிகார பசி மட்டுமேயாகும். 

கடந்த  2011 ஆம் ஆண்டு சிரிய அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் தொடங்கிய இந்த போராட்டம் இன்றுவரையில் நீண்டுகொண்டு செல்கின்றது. இதன் விளைவு ஒரு தசாப்த இனம் அழியப்பெற்றமையேயாகும். குழந்தைகள் பரிதாபகரமாக கொல்லப்படுகின்றனர்.  சிரியாவில் இடம்பெறுவது உள்நாட்டு யுத்தமாக கருதினால்கூட அதில் ஒரு தரப்பு வெற்றியை பெற்றாலும் அது தன்னைத்தானே வென்றுகொண்ட மாதிரி, தோல்வி என்றாலும் அது தனது கன்னத்தில் தானே அறைந்துகொண்டதற்கு ஒப்பாக அமையும். 

 

இதனிடையே அரசியல் சூழ்ச்சிகளும் - காய் நகர்த்தல்களும், யுத்த முஸ்தீபுகளும் நிறைந்துள்ளன. இதற்கு மண்ணாசை மட்டுமல்ல மற்றவரை அச்சுறுத்தி அடக்கிவைக்க வேண்டும் என்ற மனநோயும் கூட பிரதான காரணமாகும். அதன் விளைவுகள் கடந்த ஏழு ஆண்டுகளில் ஐந்து மில்லியன் பொதுமக்கள் கொல்லப்பட்டமையும், 12 மில்லியன் மக்கள் சொந்த நாட்டினை விட்டு இடம்பெயர்ந்து அனாதரவாக வாழ்வதுமேயாகும். தினந்தினம் நூற்றுக்கணக்கான குழந்தைகள் செத்து மடிகின்றனர். குப்பைகளாக குவிக்கப்படுகின்றனர். 

பிஞ்சுக் குழந்தைகள் தமது குடும்பத்தை, உறவுகளை எதிர்காலத்தை ஏன் இழக்க வேண்டும். கடந்த 2016 ஆம் ஆண்டிலும் பார்க்க 20 வீதத்தினால் இறுதி ஆண்டுகளில் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மாத்திரம் 10,200 பொதுமக்கள் சிரியாவில் கொல்லப்பட்டுள்ளனர். இதில்  2298 சிறுவர்களும், 1536 பெண்களும் உள்ளடங்குகின்றனர் என சர்வதேச கண்காணிப்பு குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.  இந்த ஆண்டில் யுத்த நிறுத்தம் கொண்டுவரப்பட்ட அந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 230 பொதுமக்கள்  கொல்லப்பட்டுள்ளனர். இதில் 45 சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர். கொல்லப்பட்ட பொதுமக்களில் 90 வீதமானோர் குண்டுவீச்சில் கொல்லப்பட்டுள்ளனர். 

அடுத்த சமுதாயத்தை கட்டியெழுப்ப மிகப்பெரிய இடைவெளியினை ஏற்படுத்தியுள்ளது இந்த யுத்தம். கட்டாயமாக சிறுவர்களை பாதுகாக்க வேண்டிய கட்டத்தில் சிரியா தவிக்கின்றது. இந்த மூன்று ஆண்டுகளில் மாத்திரம் 7 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர்களை பலிகொடுத்துள்ளது.  தம்முடைய சொந்த மண்ணில் வாழவும் முடியாது, அகதியாக வேறு மண்ணை நாடவும் முடியாது தவிக்கும் அவலம் சிரியாவில் இன்றுவரை இடம்பெற்று வருகின்றது. 

சொந்த மண்ணை விட்டு அகதியாக வாழும் அவல நிலை மிகக்கொடுமையானது. எனினும் தங்கள் மண்ணை விட்டு கடல் மார்க்கமாக வெளியேற முயற்சித்த  பல ஆயிரக்கணக்கான சிரிய மக்கள்  கடலிலேயே மாண்டுபோன  துயரமே அதிகமாகும்.   " எங்கள் வலிகளை நீங்கள் அனுதாபத்துடன் புரிந்துகொள்ள முடியும், ஆனால் சொந்தமாக அனுபவித்துப்பார்க்காத உணர்ச்சிகள் எல்லாமே இரண்டாம் பட்சமே" இதுவே அழிவை எதிர்கொண்ட மக்களின் அடிமைவாதமாகும். 

சாமானியர்கள் கொத்துக்கொத்தாய் கொன்று ஒழிக்கப்படும் காலகட்டம். தொகையை வெறும் எண்ணிக்கையில் பதிவாக்கப்பட்டு வருகின்றது.  அன்று முள்ளிவாய்க்கால் இன அழிப்பு எவ்வாறு  அத்துயரத்தை கண்முன்னே காட்டியதோ, செச்சினியா இன அழிப்பு எவ்வாறு  இன்றும் கண்முன்னே நிற்கின்றதோ, வெகுகாலமாக  பாலஸ்தீன் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் சாமானிய அப்பாவி மக்கள் கொத்துக்கொத்தாய் கொன்று குவிக்கப்பட்டு  வருவதைப்போல, குர்த் இனத்தவரின் வேதனை அழியா வடுக்களாய் தெரிகின்றதைப்போல   இன்றும் சிரியாவின் துயரம் முடிவில்லா தொடர்கதையாக அமைந்துள்ளமை சாபக்கேடாகும்.  

இத்தனை அழிவுகளுக்கும் வெறுமனே உள்நாட்டு இனங்களுக்கிடையிலான கிளர்ச்சியே  காரணம் என கருதலாம். அரசாங்கத்தின் மீதான அதிருப்தியும் சர்வாதிகார போக்கும் என நம்பலாம். ஆனால் இவற்றை தாண்டிய சர்வதேச அரசியல் காய்நகர்த்தல் மட்டுமே இத்தனை அழிவுக்கும் பிரதான காரணமாகும்.  இது சர்வதேச சதி வலை. தமது ஆதிக்கத்தை வல்லரசை, ஆயுத பலத்தை மற்றும் இராணுவ பலத்தை வெளிப்படுத்தவும் நட்புறவு நாடுகளை திருப்திப்படுத்தவும் நடைபெற்றுவரும் சர்வதேச கூத்து. 

சியாவை பலப்படுத்த வேண்டும் என்ற தேவை ஈரானுக்கு, ஆகவே  சிரிய தலைவர் ஆசாத்துக்கு ஆதரவாக ஷியா பிரிவைச் சேர்ந்த நாடான ஈரான் முழு ஒத்துழைப்பை வழங்குகின்றது. நட்பு நாடான ரஷ்யாவும் முழு உதவியும் செய்துவருகிறது. வடகொரியா இரகசியமாக ஆயுதங்களை அனுப்பிவைக்கின்றது. இரசாயன ஆயுதங்களின் தாயகம் கொரியா, அவர்களின் ஆயுதங்களே இன்று சிரியாவில் நிறைந்து வழிகின்றன.  

மறுபுறம் சவூதி அரேபியா, கட்டார்  உள்ளிட்ட சன்னி பிரிவு நாடுகள் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு உதவி செய்துகொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டி  அமெரிக்காவும்  நேரடியாகவே உதவி செய்துவருகிறது. எனவே, சிரியாவில் நடப்பதும் பிறநாடுகளால் தூண்டப்பட்ட ஒரு யுத்தமே தவிர இது வெறும் உள்நாட்டு உரிமைப் போராட்டம் மட்டுமேயல்ல. இதுவே சிரியாவை ஒரு போர்க்களமாக மாற்றியமைத்தது. 

சிரியாவைப் பொறுத்தவரை அனைத்து  பக்கங்களிலும் எதிரிகளின்  ஆக்கிரமிப்பே உள்ளது. சிரிய இராணுவ அரசாங்கம் ஆட்சியினை தக்கவைக்கப் போராடுகின்றது, துருக்கிய கிளர்ச்சியாளர்கள், குர்திஸ் கிளர்ச்சியாளர்கள்,  ஐஎஸ் தீவிரவாதிகளின் மதக் கொள்கை போராட்டம், நுஸ்ரா குழுக்களின் போராட்டம், இஸ்லாமிக் முன்னணி குழுக்கள் ஒருபுறம் என உள்ளத்து கிளர்ச்சிகள். மறுபுறம்  சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷ்யா போர்க்களம் இறங்குகின்றது.  கிளர்ச்சியாளர்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா போராட் டக்காரர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இரண்டு வல்லரசுகளையும் ஆதரித்து இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி, ஜேர்மன், பிரான்ஸ், பிரிட்டன், ஈராக், ஈராக்கிய குர்திஸ் அமைப்பு, மத்திய கிழக்கு வல்லரசு நாடுகள் என அனைத்து தரப்புமே போராட்டத்தில் இறங்கியுள்ளன. இந்த அந்நிய சக்திகளுக்கிடையில் சிக்கித் தவிக்கிறார்கள் சிரிய மக்கள்.

 நாற்காலி சுகம் கண்டுவிட்ட ஆட்சிபீடமோ அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள எத்தகைய கடுமையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முனைகிறது. இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அமெரிக்கா, ரஷ்யா, சீனா, கொரியா, பிரிட்டன், பிரான்ஸ், அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் வல்லரசுகள் போன்ற நாடுகள் அனைத்துமே குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கின்றன.

சிரியாவின் கதறல் உலக  நாடுகளின் காதுகளில் விழவில்லை, உலகத்தின் நீதிமன்றமான ஐக்கிய நாடுகள் சபை மௌனம் காத்து வருகின்றது.  சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள கிழக்கு கூட்டாவில், உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா. நீட்டித்துள்ளது. விமான தாக்குதல்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக செய்திகள் வரும் நிலையில், ஐ.நா. இந்த கோரிக்கையை நீட்டித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கூடியது. இதில் சிரியாவில் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் சிரிய அரசின் நண்பனான ரஷ்யாவோ அதனைக் கேட்பதாக இல்லை.  போர் அதிகரித்த எட்டு நாட்களில் சிரிய அரசின் விமான தாக்குதலால் சுமார்  600 பேர் கொல்லப்பட்டதாக  சர்வதேச ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. சிரியாவின் தலைநகர் டாமஸ்கஸுக்கு அருகே உள்ள கிழக்கு கூட்டா பிராந்தியமே  கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள  மிக முக்கிய பிராந்தியமாகும். இறுதியான பிராந்தியமும்கூட. 

கிழக்கு கூட்டாவில்  இப்போது என்ன நடக்கிறது, திட்டமிட்ட இன அழிப்பு, கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். பீரங்கி குண்டுகள் வீசப்படுகின்றன. தொடர்ச்சியாக அரசு நடத்திய விமான தாக்குதல்களில் பலநூறு பேர்  கொல்லப்பட்டதாக மருத்துவ பராமரிப்பு மற்றும் நிவாரண அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்தது.

இவற்றை வேடிக்கை பார்த்துவரும் ஐக்கிய நாடுகள் சபை என்ன நடவடிக்கை எடுக்கின்றது.  ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஐ.நா. செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ், “பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை திறம்பட செயற்படுத்தினால் மட்டுமே அவை அர்த்தமுள்ளவையாக இருக்கும்.  அதனாலேயே  இந்த தீர்மானங்கள் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று தாம் எதிர்பார்கின்றோம் ” என கூறினார். மேலும், “கிழக்கு கூட்டாவால் இதற்கு மேல் காத்திருக்க முடியாது. பூமியில் இருக்கும் நரகத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 

ஆகவே எவ்வித தாமதமுமின்றி  30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை உடனடியாக அமுல்படுத்தி அதனை உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபை  தீர்மானம் வலியுறுத்தியது. பெரும்பான்மை ஆதரவில் இந்த தீர்மானம் அங்கீகாரமும் பெற்றுள்ளது. மருத்துவர்கள் மின்சாரம், மாத்திரைகள், சுவாசக்காற்று பைகள், மயக்க மருந்து, வலி நிவாரணிகள் போன்ற எதுவுமே இல்லாமல் பணியாற்றி வருவதாக ஒருசில சர்வதேச தொண்டு நிறுவனங்கள் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அல்-ஷிஃபுனியா   நகரத்தில் நடந்த விமான தாக்குதலில் இரசாயன குண்டுகள் போடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.  குளோரின் வாயு தாக்குதலுக்குள்ளாகி இருக்கும் அறிகுறிகள், சில நோயாளிகளிடம் தென்பட்டதாக தொண்டு நிறுவனங்கள் குற்றம் சுமத்தி வருகின்றன.  இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என சிரிய அரசாங்கம் அடித்துக்கூறுகின்றது. எனினும், 2017ஆம் ஆண்டு ஏப்ரல்  4ஆம் திகதி வட-மேற்கு நகரமான கான் ஷேக்ஹூன் நகரத்தில் நிகழ்ந்த  இரசாயன தாக்குதலுக்கு சிரிய அரசாங்கம்தான் காரணம் என கடந்த ஆண்டு ஒக்டோபரில்  ஐ.நா. திட்டவட்டமாக தெரிவித்தமை  குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அழுத்தமான கோரிக்கையினை அடுத்து ரஷ்ய  அரசாங்கம் சிரியாவுடன் இணக்கம் பெற்றுக்கொண்டு  தினமும் 5 மணிநேர போர் நிறுத்தத்தை கொண்டுவருவதாக தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தை செய்யும் நோக்கம் ரஷ்யாவிற்கு இல்லை. கடல் மார்க்க ஆயுத தளங்கள் இப்போதே அமைக்கப்பட்டுள்ளன, தொடர்ச்சியாக விமானத் தளங்களும் அமைக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. தமது பலத்தினை வெளிப்படுத்த கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை ரஷ்ய அரசாங்கம் நழுவவிடப்போவதில்லை. 

அமெரிக்காவை பொறுத்தவரை உலகின் எந்த நாட்டிலும் தங்களுக்கு சாதகமான அரசை அமைத்துக்கொள்ள விரும்பும். அதனாலேயே சிரியா புரட்சி படைகளுக்கு ஆயுதமும், பயிற்சியும் வழங்குகிறது.ரஷ்யா, சிரியா அரசுடன்  கடந்த 40 ஆண்டுகளாக நம்பிக்கையான நட்பு நாடாக செயற்பட்டுவருகின்றது.  சிரியாவின் டார்டஸ் துறைமுகத்தில் ரஷ்யாவின் கடற்படை தளம் அமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யா தங்கள் நாட்டுக்கு வெளியே அமைத்துள்ள ஒரே கடற்படை தளம் இதுதான். இக்காரணமே  சிரியாவுக்கு ஆதரவாக செயற்பட்டு  வருகிறது.

இந்த யுத்தத்தின் மூலமாக கிடைத்தவை என்ன? அனைவரிடமும் எழும் கேள்வி இதுவேயாகும்.  2010ஆ-ம் ஆண்டுக்குப் பிறகு 90 சதவிகிதம் அளவுக்கு உற்பத்தி குறைந்துள்ளது. எண்ணெய் உற்பத்தியைப் பொறுத்தவரையில், கடந்த 2010ஆம் ஆண்டுவரை 3,80,000 பீப்பாய் உற்பத்தி செய்த நாடு இன்று வெறும் 10,000க்கும் உட்பட்ட பீப்பாய்  உற்பத்தி செய்கிறது. எண்ணெய் உற்பத்தி பெருமளவில் சரிந்ததால், மின்சார உற்பத்தியும் சரிந்தது. ஒரு நாட்டில் மின் உற்பத்தி இல்லையென்றால், அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியினைக் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். அதுமட்டுமில்லாமல், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அடியோடு குறைந்தது. அதாவது 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சிரியாவில் 11 சதவிகிதம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருந்த நிலையில்  இன்று 39 சதவிகித இளைஞர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர். இது  போரில் இறந்தவர்களுக்குச் சமமாக  பசியாலும், பட்டினியாலும் மக்கள் இறந்துவருவது குறிப்பிடத்தக்கது. 70 வீதமான மக்கள் பசி பட்டினியில் வாடுகின்றனர். 

 

ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சில அரபு நாடுகளும் சிரிய விவகாரத்தில் தலையிடாமல் ஒதுங்கி நின்றாலே போதும், அங்கே அமைதி தானாக திரும்பும். தங்களை யார் ஆள வேண்டும் என்பதை மக்கள் மன்றம் தீர்மானிக்கட்டும்.  மரணங்களுக்கு நியாயம் கூற முடியும், அது யதார்த்தமாகவும் ஏன் தத்துவ ரீதியிலும் கூட அமையலாம். ஆனால் படுகொலைகளுக்கு எந்த நியாயமும் பொருந்துவதில்லை. அன்று முள்ளிவாய்க்கால் இன அழிப்பு எந்த நியாயங்களையும் தாண்டி உண்மைகளை கண்டறிய துடிக்கின்றது.  செச்சினியா இன அழிப்பு   இன்றும் கண்முன்னே நிகழ்ந்ததாக உள்ளது.   பாலஸ்தீன் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் சாமானிய அப்பாவி மக்கள் கொத்துக்கொத்தாய் கொன்று குவிக்கப்படுகின்றமையை யாரால் தடுக்க முடிந்தது.  குர்த் இனத்தவரின் வேதனை அழியா வடுக்களாய் தெரிகின்றதே. இவற்றின் மத்தியில்   இன்றும் சிரியாவின் துயரம் முடிவில்லா தொடர்கதையாக....  

 

http://www.virakesari.lk/article/31271

  • தொடங்கியவர்

எமிர் பைசல் தொடங்கி பஷர் அல் ஆஸாத் வரை...100 ஆண்டுகளாகப் போரின் பிடியில் சிரியா!

 
 

சிரியா

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே நடைபெறும் போரில் ஒரே வாரத்தில் 500 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்னும் செய்தி உலகையே உலுக்கி எடுக்கிறது. உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியாகி நம் இதயத்தை நொறுங்கச் செய்கின்றன. சிரியாவில் தற்போதைய மோதல்கள் ஏதோ கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களாக நடைபெற்றுக்கொண்டிருப்பது அல்ல. கடந்த நூறாண்டுகளாகவே போரின் பிடியில் சிக்கி சிரியா சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. பல நாடுகளின் பல்வேறு தாக்குதல்களை சிரியா எதிர்கொண்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் சிரியா சந்தித்த போர்களின் முக்கிய நிகழ்வுகள் இதோ...

 

1918 - அக்டோபர் - ஆங்கிலேயரின் உதவியுடன் மன்னர் எமிர் பைசல் தலைமையில் சென்ற அரேபியப் படைகள், அதுவரை இருந்த பல ஆண்டுகால ஒட்டமான் ஆட்சியை வீழ்த்தி, டமாஸ்கஸ் நகரைக் கைப்பற்றியது.

1919 -  வெர்சைலஸ் நகரில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் சுயாட்சி முறையை அமல்படுத்த கோரினார் மன்னர் எமிர் பைசல். அதே ஆண்டு ஜூன் மாதத்தில் சிரியாவின் தேசிய காங்கிரஸ் தேர்தல் நடைபெற்றது. பாலஸ்தீன பிரதிநிதிகளுடன் சிரியாவின் சட்டசபை கூடியது.

1920 - மார்ச்  - அரேபிய மன்னர் எமிர் பைசலை சிரியா நாட்டு மன்னராக தேசிய காங்கிரஸ் அறிவித்தது.

1920 - ஜூன் - 'சான் ரெமோ அமைதி மாநாட்டில்' எடுக்கப்பட்ட முடிவின் மூலம் மன்னர் பைசல் தலைமையிலான ஆட்சி, இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன்படி 'சிரியா - லெபனான்' பகுதிகள் பிரெஞ்சு அரசின் கட்டுப்பாட்டிலும், பாலஸ்தீனப் பகுதி ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிலும் விடப்பட்டது.

1920 - ஜூலை - மன்னர் பைசலை வெளியேற்றி டமாஸ்கஸ் நகரைக் கைப்பற்றியது பிரெஞ்சுப் படை. ஆகஸ்ட் மாதத்தில் லெபனானை தனி நாடாக அறிவித்தது.

1922 - சிரியாவை மூன்று பகுதிகளாகப் பிரித்தது பிரெஞ்சு அரசு. அதில் கரையோரப் பகுதியை ஒரு பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கும்  தென் பகுதியை மற்றொரு பிரிவினருக்கும் பிரித்தளித்தது.

1925-26 - பிரெஞ்சு அரசை எதிர்த்து மக்களிடையே தேசிய அளவில் கிளர்ச்சி  ஏற்பட்டது. அதன்விளைவாக பிரெஞ்சு அரசு, டமாஸ்கஸ் நகரில் வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தியது.

1928 - ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டு, சிரியா நாட்டிற்கு அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கப்பட்டது. இதை பிரெஞ்சு நாட்டின் உயர் ஆணையர் நிராகரித்ததால் மீண்டும் கிளர்ச்சி உருவானது.

1936 - சிரியாவிற்கு சுதந்திரம் வழங்க பிரெஞ்சு அரசு ஒப்புக்கொண்டது. ஆனால், ராணுவம் மற்றும் பொருளாதாரத்தில் தங்கள் ஆதிக்கத்தைத் தொடர்ந்ததுடன், லெபனான் தனி நாடாகவே தொடர்ந்தது. 

1940 - இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியிடம் பிரெஞ்சு தோல்வியடைந்ததால் சிரியா, Vichy பிரான்ஸ் கட்டுப்பாட்டில் வந்தது.

1941 - ஆங்கிலேய மற்றும் 'ஃப்ரி பிரெஞ்சு' படைகள் சிரியாவைக் கைப்பற்றின. பிரெஞ்சு ஜெனரல் 'டே கௌலே' தங்கள் படை வெளியேறுவதாக அறிவித்தார்.

1945 - பிரெஞ்சு அரசை வெளியேற வலியுறுத்தி சிரியா நாட்டு மக்கள் போராட்டம்.

1946 - பிரெஞ்சு நாட்டின் கடைசிப்படை சிரியாவிலிருந்து வெளியேறியது.

1947 - மைக்கேல் அப்லாக் மற்றும் சாலாஹ்-அல்-தின் அல்-பிட்டார்  தலைமையில் 'அரேபிய சோசியலிஸ பாத் கட்சி' நிறுவப்பட்டது.

1949 - ஓராண்டு இடைவெளியில் ஏற்பட்ட ராணுவப் புரட்சி மூலம் ராணுவத் தளபதி அடிப் -அல்- ஷிஷாக்லி ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தார்.

சிரியா போர்

1954 - அல்-ஷிஷாக்லிக்கு எதிராக ராணுவ அதிகாரிகள் சதி செய்தனர். ஆனால் அதன் விளைவாக மக்களாட்சி மலர்ந்தது.

1955 - மூத்த தேசியவாதி ஷுக்ரி-அல்-குவாத்தலி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எகிப்து நாட்டுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டது சிரியா.

1958 - பிப்ரவரி - எகிப்து மற்றும் சிரியா நாடுகள் இணைந்து 'ஐக்கிய அரபு குடியரசை' உருவாக்கின. இதற்கு எகிப்து அதிபர் கமல் அப்துல் நாசிர் தலைமை தாங்கினார். 'இரு நாடுகளும் இணைய வேண்டும்' என்று கூறிய பாத் கட்சியினரைக் கண்டிக்கும் வகையில், அவர் சிரியாவின் அரசியல் கட்சிகளை கலைக்க உத்தரவிட்டார். 

1963 - மார்ச் - ராணுவ அதிகாரிகள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். பாத் கட்சியிலிருந்து மந்திரிசபை அமைக்கப்பட்டு, அமின்-அல்-ஹபீஸ் அதிபரானார்.

1966 - பிப்ரவரி - பாத் கட்சி அதிகாரத்தை எதிர்த்து சாலாஹ்-ஜாதிட் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மூத்த தலைவர்களான அமின்-அல்-ஹபீஸ், சாலஹ்-அல்-தின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

1967 - ஜூன் - ஆறு நாள்களில் சிரியாவின் விமானப்படையை வீழ்த்தி கோலன்-ஐக் கைப்பற்றியது இஸ்ரேல்.

1970 - நவம்பர் - அதிபர் நூருல் தின்-ஐ வெளியேற்றி சாலாஹ்-ஜாதிட்டை கைது செய்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹபீஸ்-அல்-அஸாத்.

1971 - மார்ச் - பொதுவாக்கெடுப்பின் மூலம் சிரியா அதிபராக அஸாத் ஏழு ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1973 - 'இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் மட்டுமே அதிபராக இருக்க வேண்டும்' என்ற அரசியலமைப்புச் சட்டத்தை 'யார் வேண்டுமானாலும் அதிபராகலாம்' என்று மாற்றியதற்காகப் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது. இதனால அஸாத்தை நாத்திகவாதி என்று பலரும் குற்றம்சாட்டினர். கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. 

1973 - அக்டோபர் - சிரியாவும், எகிப்தும் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராகப் போர் தொடுத்தன. கோலன் கோபுரத்தை மீட்டெடுக்கத் தவறியது. 

1974 -மே - விடுவிப்பு உடன்பாட்டை ஏற்று சிரியாவும், இஸ்ரேலும் கையெழுத்திட்டன.

1975 - பிப்ரவரி - இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள அரபு நிலத்தை விட்டுக்கொடுத்தால், இஸ்ரேலுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என சிரியா அதிபர் ஹபீஸ் அல் அஸாத் அறிவித்தார்.

1976 - ஜூன் - நடப்பு நிலைமையைப் பாதுகாக்க, லெபனான் நாட்டுப் போரில் சிரியா தலையிட்டது.

1978 - கேம்ப் டேவிட் அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில், இஸ்ரேலில் சமநிலை கொண்டுவரும் அதிகாரம் பெற்றார் அஸாத்.

1980 - முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர் ஒருவர் அஸாத்தை சுட்டுக்கொல்ல முயற்சி செய்தார்.

1983 - மாரடைப்பு ஏற்பட்டு அஸாத் உடல்நலம் பாதிக்கப்பட்டார். ஆனால், அரசு  நிர்வாகம் அதை மறுத்தது. இந்நிலையில் அஸாத்தின் சகோதரர் ரிபாத் அரசு அதிகாரத்தைக் கையில் எடுக்கத் தயாரானார்.

1984 - ரிபாத் துணை அதிபராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். 

1990 - குவைத் நாட்டின் மீது ஈராக் படையெடுத்தது. அமெரிக்கக் கூட்டுப்படையுடன் இணைந்து ஈராக்கிற்கு எதிராக சிரியா போர் செய்தது. இதன் மூலம் சிரியாவுக்கு அமெரிக்கா மற்றும் எகிப்துடன் இணக்கமான உறவு ஏற்பட்டது.

1991 - அக்டோபர் - மேட்ரிட் நகரில் நடைபெற்ற மத்திய கிழக்கு நாடுகளின் அமைதிக்கூட்டத்தில் பங்குபெற்ற சிரியா, 'கோலன் கோபுரம்' குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

1994- அஸாத்தின் மூத்த மகன் ஃபசில், கார் விபத்தில் உயிரிழந்தார்.

1998 - அஸாத்தின் சகோதரர் ரிபாத், துணை அதிபர் பதவியிலிருந்து விலகினார். 

1999 - டிசம்பர் - இஸ்ரேலிடமிருந்து 'கோலன்'-ஐ மீட்பது குறித்த பேச்சுவார்த்தையை அமெரிக்காவில் நடத்த எண்ணினார் அஸாத். ஆனால், அப்பேச்சுவார்த்தை மாதக் கணக்கில் தள்ளிப்போனது.

2000 - ஜூன் -  ஹபீஸ் அல் அஸாத் காலமானார். அவருடைய இரண்டாவது மகன் பஷர் சிரியா புதிய அதிபராகப் பதவி ஏற்றார்.

2000 - நவம்பர் - கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகன் 600 பேரை விடுவிக்க பஷர் ஆணையிட்டார்.

syria war

2001 - இருபது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அரசியல் பிரவேசம் மேற்கொள்ளப் போவதாக முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் அறிவித்தது.

2001 - ஜூன் - சிரியாவின் ஆதிக்கத்தை லெபனான் நாட்டினர் எதிர்த்ததால், தங்கள் படையை வெளியேற்றியது சிரியா.

2001 - செப்டம்பர் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற சார்பு சீர்திருத்த செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

2004 - ஜனவரி - துருக்கி நாட்டிற்குப் பயணம் மேற்கொண்ட முதல் சிரிய அதிபரானார் பஷர் அல் அஸாத். இதன் மூலம் பல ஆண்டுகளாக இருநாடுகளுக்கும் இடையே இருந்த கசப்பான உறவு முடிவுக்கு வந்தது.

2004 - மே - பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகவும், ஈராக் நாட்டில் தீவிரவாதிகளை தடுக்கத் தவறியதாகவும் கூறி, சிரியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா.

2005 - பிப்ரவரி - லெபனான் முன்னாள் பிரதமர் ஹரிரி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, அமெரிக்காவுடனான உறவில் பாதிப்பு ஏற்பட்டது.

2006 - நவம்பர் - ஏறக்குறைய கால் நூற்றாண்டிற்குப் பிறகு ஈராக் மற்றும் சிரியா இடையே தூதரக உறவு உருவானது.

2007 - மார்ச் - சிரியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது ஐரோப்பிய யூனியன்.

2007 - ஏப்ரல் - அமெரிக்காவின் பிரதிநிதி நான்சி பெலோஷியை அதிபர் பஷர் அல் அஸாத் சந்தித்தார். 

2007 - செப்டம்பர் - வடக்கு சிரியாவிலுள்ள அணு ஆயுத ஆலை கட்டடத்தை விமானம் மூலம் இஸ்ரேல் தகர்த்தது.

2008 - ஜூலை - அதிபர் அஸாத் பிரெஞ்சு அதிபர் நோக்கோலஸ் சரகாசியைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட விரிசல்களைச் சரி செய்ய உதவியது.

2008 - அக்டோபர் - சுதந்திரமடைந்த பிறகு முதல் முறையாக சிரியாவுக்கும்,லெபனானுக்கும் இடையே நல்லிணக்க உறவு ஏற்பட்டது.

2010 - மே - சிரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா மறுபரிசீலனை செய்தது.

2011 - மார்ச் - அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி டேரா நகரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். மிகப்பெரிய அளவில் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து, 12 பேரை விடுவிக்க ஆணையிட்டார் அஸாத்.

2011 - மே - எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தடுக்க டேரா நகருக்கு ராணுவப்படைகள் சென்றன. 

2011 - ஜூன் - சிரியாவின் ரகசிய அணு உலை தொடர்பான செய்தியை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் தெரிவிக்கப்போவதாக சர்வதேச அணுசக்தி மேலாண்மை வாரியம் அறிவித்தது.

2011 - நவம்பர் - அரபு நாட்டுடன் அமைதி முயற்சியில் ஈடுபாடு காட்டாததால், சிரியாவுக்கு எதிராக அரபு லீக் வாக்களித்தது.

2012 - பிப்ரவரி - ஹோம்ஸ் மற்றும் பிற நகரங்கள் மீது வெடிகுண்டு தாக்குதலில் ஏற்படுவதைத் தடுக்க அரசு முன்வந்தது.

2012 - மார்ச் - ஐ.நா. பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் வரையறுத்த அமைதித் திட்டத்தை ஐ.நா. சபை ஒப்புக்கொண்டது.

2012 - ஜூன் - தங்கள் நாட்டு விமானம் மீது சிரியா துப்பாக்கிச்சூடு நடத்தியதால் விதிமுறைகளில் மாற்றம் செய்தது துருக்கி. மேலும், இதுபோன்ற சம்பவம் நேர்ந்தால், சிரியா - துருக்கி எல்லையை ராணுவ அச்சுறுத்தல் உள்ள இடமாக அறிவிப்போம் என்றும் கூறியது.

2012 - அக்டோபர் - அலெப்போ நகரில் நடைபெற்ற தீவிபத்து காரணமாக, பழைமை வாய்ந்த பல இடங்கள் சேதமடைந்தன.

2012 - டிசம்பர் - அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், துருக்கி மற்றும் வளைகுடா நாடுகள் இணைந்து எதிர்தரப்பு தேசியக் கூட்டணியை "நியாயமான பிரதிநிதி" என்று அங்கீகரித்தன.

2013 - ஜனவரி - டமாஸ்கஸில் உள்ள ராணுவ மையத்தின் மீது குண்டு வீசியதாக இஸ்ரேல் மீது சிரியா குற்றம்சாட்டியது.

2013 - செப்டெம்பர் - டமாஸ்கஸில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியதை ஐ.நா. ஆயுத மேலாண்மை அமைப்பு கண்டுபிடித்தது. இதனால், ஆயுதக் கிடங்குகளை அழிக்க ஐ.நா. ஒப்புதல் அளித்தது.

2014 - ஜனவரி, பிப்ரவரி - இடைக்கால அரசாங்கத்தைப் பற்றி பேசத் தவறியதால், ஜெனீவா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

2014 - மார்ச் - போராட்டக்காரர்களின் கடைசி இடமாகக் கருதப்பட்ட யாபிரௌடை சிரியா ராணுவம் மற்றும் ஹெஸ்பொல்லாஹ் படை கைப்பற்றியன.

2014 - செப்டம்பர் - ஐந்து அரபு நாடுகளுடன் இணைந்து அலெப்போ மற்றும் ரக்கா பகுதிகளில் உள்ள முஸ்லிம் ஆக்கிரமிப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
 
2015 - மே - சிரியாவின் மத்தியப் பகுதியில் உள்ள பழைமைவாய்ந்த நகரமான பாமிராவை இஸ்லாமியப் போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். மேலும், உலக அளவில் பாரம்பர்யம் மிக்க சில இடங்களைச் சீர்குலைத்தனர். 

2015 - செப்டம்பர் - சிரியா மீதான முதல் விமானப்படை தாக்குதலை ரஷ்யா நடத்தியது.

2015 - டிசம்பர் - சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸிலிருந்து போராட்டக்காரர்களை வெளியேற்ற சிரியா ராணுவம் அனுமதித்தது. இதன்மூலம் அந்த இடத்தை அரசு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றியது.

syria

2016 - மார்ச் - ரஷ்யா உதவியுடன், பாமிரா மாகாணத்தை சிரியா அரசு மீட்டது.

2016 - ஆகஸ்ட் - முஸ்லிம் போராட்டக்காரர்களைக் காப்பாற்ற சிரியா எல்லைக்குள் துருக்கி நுழைந்தது.

2016 - டிசம்பர் - ரஷ்யாவின் விமானப்படை மற்றும் ஈரான் ராணுவத்தின் உதவியுடன் பெரிய நகரமான அலெப்போவை சிரியா அரசு மீட்டெடுத்தது.

2017 - ஜனவரி - முஸ்லிம் அல்லாத போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த ரஷ்யா, ஈரான் மற்றும் துருக்கி தீர்மானம் எடுத்தது.

2017 - ஏப்ரல் - சிரியா போராட்டக்காரர்கள் மீது ரசாயனத் தாக்குதலை நடத்திய அரசின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆணையிட்டார்.

2017 - மே - குர்திஷ் பாதுகாப்புக் கூட்டத்திற்கு ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது.

2017 - ஜூன் - அமெரிக்க ஆக்கிரமிப்பு இடமான ராக்காவில் தாக்குதல் நடத்தியதால், சிரியா போர் விமானம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

2017 நவம்பர்  - இஸ்லாமியப் பகுதிகளை முழுமையாக சிரியா ராணுவம் கைப்பற்றியது. இது ஐ.எஸ். அமைப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது.

2017 - டிசம்பர் - சிரியா சென்று பார்வையிட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இஸ்லாமிய அமைப்பின் மீதான தங்கள் தாக்குதலில் வெற்றி பெற்றதாக அறிவித்தார். மேலும் ரஷ்யாவின் உதவியுடன் வடமேற்குப் பகுதிகளை சிரியா அரசு கைப்பற்றியது.

2018 - ஜனவரி - ஆப்ரின் பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த குர்திஷ் இனப் போராட்டக்காரர்களை வெளியேற்ற வடக்கு சிரியா பகுதியில் துருக்கி, கடும் தாக்குதலை நடத்தியது.

 

2018 - பிப்ரவரி - கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கிழக்கு கௌட்டா நகர் மீது ஐ.நா. போர் நிறுத்தத் தீர்மானத்தை மீறி, சிரியா அரசுப் படைகள் நடத்திவரும் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்

https://www.vikatan.com/news/coverstory/118285-100-years-of-war-in-syria.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DW98u0DU0AA7ORY.jpg

அசாத் நாட்டை விட்டு வெளியேறினாலும் பிரச்சனை தொடர்ந்து கொண்டேயிருக்குமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வல்லரசு நாடுகளின் ஆயுத பரீட்சைக் களம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.