Jump to content

ராக யாத்திரை: திசை வேறானாலும்...


Recommended Posts

ராக யாத்திரை: திசை வேறானாலும்...

 

 
 
20CHRCJILAYARAJA1
20CHRCJRAJAANDMSV
 
 
 

“இசை ஒரு எல்லையற்ற கடல். அதன் கரையினில் வியப்போடு வேடிக்கை பார்க்கும் குழந்தை நான்.” ஐன்ஸ்டைன் அறிவியலைப் பற்றிச் சொன்னதுபோல் ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ பட ஒலித்தட்டில் மோகன்லால் மலையாள நாசி ஒலியோடு ‘சங்கீதம் ஒரு அனந்த சாகரமாணு’ என இசையைப் பற்றிச் சொல்லும் வாசகங்கள் இவை. சிறு வயதிலேயே அந்தக் கடல் என்னை மிகவும் வசீகரித்திருந்தது. அதன் அலைகளில், கரைகளில் விளையாடி நனைந்து மகிழ்ந்திருந்தாலும் அக்கடலின் ஆழமும் வீச்சும் அப்போது தெரியாமல் இருந்தது.

மனித இனமும் மொழியும் தோன்றுவதற்கு முன்பே இசை தோன்றிவிட்டது. பறவைகள் இரைதேடல், இணைதேடல், சூழ்நிலையில், காலநிலைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றிப் பிற பறவைகளுக்குக் குறிப்பு உணர்த்தல் என ஒலியைச் சங்கேதமாகப் பயன்படுத்தத் தொடங்கின. ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகப் பயன்படத் தொடங்கிய ஒலியானது ஒரு கட்டத்தில் அதன் ஆரம்ப நோக்கங்களைக் கடந்து ‘கலைக்காகவே கலை’ என்று சொல்லப்படுவதுபோல் இசைக்காகவே இசை என மாறிப்போனது. எதற்காகவும் இல்லாமல் கூவுவதை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே குயில் கூவுவதைப் போல் இசை என்பது ஓய்வுக்கும் ரசனைக்கும் உரிய கலைப்பொருளானது. கலைமகள் கைப்பொருளானது. இசையை ஒலி என்னும் மொழியின் கவிதை எனலாம்.

 

இசையில் தோன்றிய நுட்பங்கள்

நாகரிகம் வளர வளர விவசாயம், கட்டுமானம் போன்ற பணிகளில் ஏற்பட்டதைப் போன்றே இசையிலும் தொழில்நுட்பங்கள் கூடத் தொடங்கின. ஒவ்வொரு புவியியல் பகுதிக்கும் ஒவ்வொரு வகையான இசை நுட்பங்கள் தோன்றின.

தமிழகத்தில் இசை முத்தமிழில் ஒன்றாகப் போற்றப்பட்டு பண்களும் இசை இலக்கணங்களும் உருவாயின. பாணர்கள் என்பார் பண்ணிசைப்பதில் வல்லவராக விளங்கியதையும் யாழ் இசைக்கருவிகளில் அவர்கள் கொண்டிருந்த புலமையையும் சங்கப் பாடல்களும் சிலப்பதிகாரமும் தேவாரம் போன்ற நூல்களும் நமக்கு உணர்த்துகின்றன. ‘கருணாமிர்த சாகரம்’ என்ற மாபெரும் நூலில் ஆப்ரஹாம் பண்டிதர் தமிழிசை தனியிசையே என நிறுவியிருப்பார். சங்கப் பாடல்களெல்லாமே இசையோடு பாடவே எழுதப்பட்டவை என்பார் தொ.பரமசிவன்.

பின்னர் தெலுங்கு மன்னர்களின் காலத்தில் வேங்கடமகி என்பவரால் பண்கள், ராகங்கள் எல்லாம் கணித முறைப்படி தொகுக்கப்பட்டு, இலக்கணங்கள் வகுக்கப்பட்டு, 72 மேளகர்த்தா ராகங்கள் என உருவாக்கப்பட்டுக் கீர்த்தனைகள், பாடல்கள் மூலம் பிரபலப்படுத்தப்பட்ட செவ்வியல் இசை கர்னாடக சங்கீதம் என அழைக்கப்படுகிறது.

 

நாடகமும் திரையிசையும்

பக்தி இயக்கத்தின் நீட்சியாகவே கர்னாடக சங்கீத மும்மூர்த்திகள், தமிழிசை மூவர் போன்ற இசைக் கலைஞர்கள் மூலமும், சங்கரதாஸ் சுவாமிகள் போன்றவர்கள் இயற்றிய, பெரும்பாலும் பாடல்களாலேயே ஆன நாடகங்களாலும் நமது செவ்வியல் இசை மரபு தொடர்ந்து வந்தது. கடந்த நூற்றாண்டில் திரைப்படம் கண்டுபிடிக்கப்பட்டுப் பின்னர் பேசும் படமாக இசையுடன் ஒலிக்கத் தொடங்கிய போதும் ‘வள்ளி திருமணம்’, ‘அல்லி அர்ஜுனா’ போன்ற புகழ்பெற்ற நாடகங்களே திரைப்படமாயின.

நாடகங்களில் இசையமைக்கப்பட்ட பாடல்களும், பிரபலமான கர்னாடக சங்கீத இசைக்கலைஞர்களின் பாடல்களும், அதே மெட்டுக்களில் அமைந்த பாடல்களுமே ஒலித்து வந்தன. ‘நாத தனுமனிசம் ‘ என்ற தியாகய்யரின் கீர்த்தனை, மெட்டில் ‘காதல் கனிரசமே’ என ஒலிக்கும். தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்ற முதல் சூப்பர், சுப்ரீம் ஸ்டார்கள் உருவான காலகட்டம் அது. அவர்கள் அபாரமான இசைக் கலைஞர்களாக இருந்தனர். பின்னணி இசை ஒருவர், பாடல்களுக்கு மெட்டுப் போட ஒருவர் எனப் பெரும்பாலும் ஐம்பது அறுபது பாடல்கள் இடம்பெற்றன. இசையமைப்பாளர் என்ற ஒரு பணி முழுமையாக உருவாகாத காலகட்டத்தில் பாபநாசம் சிவனையே முதல் நட்சத்திர இசையமைப்பாளர் எனச் சொல்லலாம். கர்னாடக இசையில் அவருக்கு இருந்த ஆழ்ந்த ஞானத்தால் ‘ஹரிதாஸ்’, ‘சிவகவி’ எனப் பல படங்களில் ‘கிருஷ்ணா முகுந்தா முராரே’, ‘அம்பா மனங்கனிந்து’ என கர்னாடக இசை ராகங்களில் அவர் அள்ளி அள்ளி அளித்தார்.

 

திரையிசை மரபின் தொடர்ச்சி

தொடர்ந்து அந்த மரபில் ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்புராமன், கே.வி.மகாதேவன் என எண்ணற்ற மேதைகள் செவ்வியல் இசை ராகங்களைத் திரையில் பாடல்களாக ஒலிக்கச் செய்திருக்கின்றனர். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்தில் கர்னாடக இசை ராகங்களைப் பயன்படுத்துவது தொடர்ந்தாலும் மேற்கத்திய, வட இந்திய பாணியில் பாடல்களில் மெட்டிசைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். பின்னர் பண்ணைபுரத்தில் தோன்றிய இசைஞானியின் பயணம் நமது கர்னாடக செவ்வியல் இசை ராகங்களை நாட்டுப்புற இசையோடும் மேற்கத்திய செவ்வியல் இசையோடும் மெல்லிசையோடும் இணைத்து அவற்றுக்குப் புதிய புதிய பரிமாணங்களை அளித்தது. அந்த மரபு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வரையில் இன்றும் தொடர்கிறது.

தூர்தர்ஷன் மட்டுமே இருந்த காலத்தில் ‘ஏக் சுர்’ என எல்லா மொழிகளும் இணைந்த ஒரு பாடல் அடிக்கடி ஒலிபரப்பாகும். அதில் தமிழில் ‘திசை வேறானாலும் ஆழிசேர் ஆறுகள் முகிலாய் மழையாய் பொழிவதுபோல் இசை’ என்ற வரிகள் வரும். அதுபோல் நமது செவ்வியல் ராகங்கள் பல்வேறு நதிகளாய் உருவெடுத்து இசைக்கடலில் சங்கமிப்பதை அலசுவதே இந்த ராக யாத்திரை! வாருங்கள்! திரையிசை நதியில் ராக யாத்திரை சென்று கடலில் கால்நனைப்போம்!!

(யாத்திரை தொடரும்...)

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23611767.ece

Link to comment
Share on other sites

ராக யாத்திரை 02 : டைட்டானிக்கும் டங்கா மாரியும்!

 

 

27chrcjtitanic-7

டைட்டானிக்

27chrcjAnegan

‘அநேகன்’ படத்தில் ‘டங்காமாரி’ பாடல் காட்சி

ஆரம்பத்திலேயே டிஸ்கி எனப்படும் ஒரு ‘பொறுப்புத் துறப்பு’ விளக்கம். உயர் நீதிமன்றத்திலே ஒருவரது வழக்கு நடந்துகொண்டிருக்கும். நிமிடத்துக்கு இத்தனை ரூபாய் என ஃபீஸ் வாங்கும் வழக்கறிஞரை வைத்து வழக்கை அவர் நடத்திக் கொண்டிருப்பார். இருந்தாலும், அந்த உயர் நீதிமன்ற வாசலில் உள்ள கிளி ஜோசியரிடம் ஐந்து ரூபாய் கொடுத்து ‘இந்தக் கேஸ் ஜெயிக்குமா?’ எனக் கேட்பார்.

அந்த ‘ஹைகோர்ட் கிளி’ போன்றே அடியேனும் எத்தனையோ இசை அறிஞர்கள் எல்லாம் இருக்கும்போது, முந்திரிக் கொட்டையாக எனக்குத் தெரிந்த காலே அரைக்கால் இசையறிவை வைத்துக்கொண்டு உங்களிடம் ராகங்களைப் பற்றியெல்லாம் பேச வருகிறேன். இது கம்பர் சொன்னதுபோல் பாற்கடல் முழுவதையும் பூனை ஒன்று குடிக்க முயல்வது போன்ற முயற்சியே. திரை யிசையில் ராக நதிகளின் யாத்திரை.

 

நீங்கள் சரியாகச் சொன்னீர்களா?

உணர்ச்சிவசப்பட்டதில் சென்ற வாரம் கேட்டிருந்த கேள்வியை மறந்து விட்டேன். ‘மிலே ஸுர் மேரா தும்ஹாரா’ என்ற பாடலைக் கேட்கும்போது உங்களுக்கு எந்தப் பாடல்களெல்லாம் நினைவுக்கு வருகின்றன எனக் கேட்டிருந்தேன். ‘வதனமே சந்திர பிம்பமோ’ என்ற எம். கே. தியாக ராஜபாகவதர் ‘சிவகவி’(1943) படப் பாடல் நினைவுக்கு வந்தால் உங்களுக்கு வயது எழுபது, எண்பதுக்கு மேல். இன்னும் கொஞ்சம் இளைய முதியவர்களுக்கு ‘என்னை யார் என்று எண்ணி எண்ணி’ என்ற ‘பாலும் பழமும்’ படப் பாடல் (1961) நினைவுக்கு வந்திருக்கும். இன்னும் இளையவர்களுக்கு ‘உனக்கென்ன மேலே நின்றாய்’ என்ற ‘சிம்லா ஸ்பெஷல் (1982), ‘ஒரு நாளும் உனை மறவாத’ என்ற ‘எஜமான்’ (1993) படப் பாடல்கள் நினைவுக்கு வந்திருக்கும். காரணம் அவையெல்லாமே ஒரே ராகத்தில் அமைந்தவை. ‘சிந்து பைரவி’ எனச் சரியாகச் சொன்னவர்களுக்கு வாழ்த்துகள்.

இப்படித்தான் ஒரே ராகத்தின் அடிப்படையில் அமைந்த திரைப்பாடல் ஒன்றைக் கேட்கும்போது இன்னொன்றை நினைவுபடுத்தும். ராகம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்குக்கூட இது அடிக்கடி நிகழ்ந்திருக்கும் அல்லவா? அதேநேரம் வேறு மாதிரியும் அனுபவம் ஏற்பட்டிருக்கும். சிவாஜி கணேசனின் ‘நவராத்திரி’, ‘கௌரவம்’ போன்ற திரைப்படங்களில் வெவ்வேறு வேடங்களில் அவர் நடித்திருப்பதை, சிவாஜியைத் தெரியாதவர்கள் பார்த்தால் அவ்வேடங்களிலெல்லாம் நடித்திருப்பவர் ஒரே நடிகர்தான் என்பதை எளிதில் நம்ப மாட்டார்கள்.

இந்த இடத்தில் ராகத்துக்கும் மெட்டுக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்துகொள்வது அவசியம். மெட்டு என்பதை ட்யூன் என்று சொல்கிறோம். அது இலக்கணப்படிதான் இருக்க வேண்டும் என்றில்லை. ஒரு மெட்டு ராக அடிப்படையில் அமைய வேண்டியதில்லை. ஆனால், ராகம் என்பது இசை இலக்கணம்.

 

ஏழுக்குள் எல்லாம் அடக்கம்!

‘இந்தச் சம்பவம் சம்பவம் என்று சொல்கிறீர்களே. அது என்ன?’ என நீங்கள் கேட்பது போல் ‘இந்த ராகம் ராகம் என்கிறீர்களே அது என்ன சார்?’ எனக் கேட்பது கேட்கிறது. இசை என்பது முறைப்படுத்தப்பட்ட ஓசைதானே? எந்த வகை இசை என்றாலும் ஒலியியல் அமைப்புப்படி ஏழு ஸ்வரங்களே அடிப்படை. எப்படி எந்த மொழி, இனமாக இருந்தாலும் எண்ணிக்கையின் அடிப்படை ஒன்று முதல் ஒன்பதுவரையிலான எண்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளதே அது போல.

%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AF%

இந்த ஏழு ஸ்வரங்களை ஒரு ‘ஆக்டேவ்’ அல்லது ‘ஸ்தாயி’ என்கிறோம். ‘ஸரிகமபதநி’ என்று கர்னாடக இசையில் அழைக்கிறார்கள். ஒலியியல் படி ‘ஸா’விலிருந்து ஒவ்வொரு ஸ்வரமும் அதிர்வெண் (ஃப்ரீக்வன்ஸி ) கூடிக்கொண்டே போய் ‘நி’ எனப்படும் நிஷாதத்தில் ஒரு சுற்று முடியும். ‘நி’ க்கு அடுத்து அடுத்த சுற்று ஸ்தாயி ஆரம்பம்.

அதாவது அடுத்த ‘ஸ்’ அடுத்த ‘ரி’. முந்தைய ஸ்தாயி ஸாவைவிட அடுத்த சுற்று ஸாவின் அதிர்வெண் இரு மடங்காகிறது. அதாவது கீழ் ஸ்தாயி ஸ் X 2 = அடுத்த ஸ்தாயி ஸ. கிட்டத்தட்ட முன்பே சொன்ன எண்களின் உதாரணப்படி ஒன்று இரண்டு என எண்கள் கூடிக்கொண்டே வந்து பத்துக்குப் பின் மீண்டும் அடுத்த சுற்று அதே எண்களை வைத்துக்கொண்டு வருவதைப் போல. இருபது என்பது இரண்டு பத்துக்கள். முப்பது என்பது மூன்று பத்துக்கள்.

ரொம்ப டெக்னிக்கலாகப் பேசி விட்டோமோ? இப்போதைக்கு ஏழு ஸ்வரங்கள் இருக்கு. அதை வைத்துக் கொண்டு எந்த இசையையும் உருவாக்க முடியும். டைட்டானிக் பின்னணி இசையானாலும் ‘டங்காமாரி ஊதாரி’ பாடலாயினும் ‘ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு’ ஆயினும் அதே ஏழுதான். ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்?

கேள்வியோடு முடிப்போமா ...? ‘அபூர்வ ராகங்கள்’( 1975) படத்தில் இடம்பெற்ற ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ பாடல் எந்த ராகம்?

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23684334.ece

Link to comment
Share on other sites

ராக யாத்திரை 03: மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்…

 

 
04CHRCJMuthaleravu
04chrcjPlay
 
 

சென்ற வாரம் கேட்ட கேள்வியோடு தொடங்குவோம். ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…’ (அபூர்வ ராகங்கள் 1975) என்ற பாடல் வாணி ஜெயராமுக்குத் தேசிய விருது வாங்கித் தந்தது. சரணங்களில் வேறு வேறு ராகங்கள் வந்தாலும் அப்பாடல் ஆரம்பிக்கும் ராகம் ‘பந்து வராளி’(ரங்கீலா ஹாய் ராமா நினைவுக்கு வருகிறதா?). சரியான பதிலை முதலில் அனுப்பிய கோவை உஷாவுக்குப் பாராட்டுகள். பின்னர் அந்த ராகத்தைப் பற்றி அலசுவோம். இப்போது அதன் நெருங்கிய உறவான இந்த ராகத்தில்தான் கர்னாடக இசையின் தொடக்கப் பாடங்களைக் கற்றுத் தருவார்கள். ஆகவே, இந்த ராகத்திலேயே நமது பயணத்தைத் தொடங்குவது பொருத்தமாக இருக்கும். அதற்கு முன் இசை இயலின் நுட்பமான சில அம்சங்களைப் பார்க்கலாம்.

 

மறுபடியும் முதல்லேர்ந்தா?

முதலில் இசையில் எத்தனை ஸ்வரங்கள் இருக்கின்றன? என்ன சார்! போன வாரம்தானே ஏழு ஸ்வரங்கள் என்று பாட்டெல்லாம் பாடி முடித்தீர்களே எனக் கேட்கிறீர்களா? அது போன வாரம். நான் சொல்வது இந்த வாரம். ஒரு வாரத்தில் எத்தனையோ விஷயங்கள் மாறும். ஏழு சுரங்கள்தாம் என்றாலும் அவற்றில் ஸா, பா மட்டுமே மாறாத சுரங்கள். ஆகவேதான் ஸ்ருதி சேர்ப்பதற்காகத் தொடக்கத்தில் ‘ஸா… பா… ஸா…’என அந்த சுரங்களைப் பாடுகிறார்கள். ரி,க, ம,த,நி ஆகிய சுரங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு வகைகள் உள்ளன. எப்படி என்கிறீர்களா? சின்ன ரி, பெரிய ரி அல்லது ரி1, ரி2 என்பார்கள். அடுத்து சின்ன க (க1), பெரிய க (க2). எண்கள் உதாரணத்தையே எடுத்துக் கொண்டால் 1,2 ,3 என எண்கள் இருந்தாலும். ஒன்றுக்கும் இரண்டுக்கும் இடையே ஒன்றே கால், ஒன்றரை எல்லாம் இருக்கிறதல்லவா? அதே போல் தான். ஸாவை விட ரி 1-ன் அதிர்வெண் பெரியது. அதைவிட ரி2 பெரிது.

கீ போர்டு, பியானோ போன்றவற்றில் பார்த்தீர்களானால் வெள்ளை, கறுப்பு என இரண்டு நிறங்களிலும் கட்டைகள் இருக்கும் அல்லவா? இரண்டு வெள்ளைக் கட்டைகளுக்கு இடையே கறுப்பு இருக்கும். உதாரணதுக்கு. ஸாவுக்கும் ரி2-க்கும் இடையே மேலே உள்ள கறுப்புக் கட்டை ரி1. இப்படி ஏழு சுரங்களைப் பன்னிரண்டாகப் பிரித்துள்ளனர். மனிதன் செவியால் இந்த பன்னிரண்டு சுரங்களைத்தான் பிரித்து உணர முடியும். மேற்கத்திய இசையிலும் இதே 12 தான். (நிபுணர்களால் 22 கூட பிரித்தறிய முடியுமாம்)

இப்படி ரி,க,ம,த,நி யில் வரும் வேறுபாடுகளை வைத்துக் கொண்டுதான் 72 தாய் ராகங்கள் உருவாகின்றன. ஒரு ராகத்தில் ரி,க,ம,த,நி ஆகிய சுரங்களில் ஒவ்வொன்றிலும் இரண்டு உள்ளன அல்லவா? ஒரு தாய் ராகம் (மேள கர்த்தா ராகம் எனவும் அழைக்கப்படும்) என்றால் அதில் ஏதேனும் ஒன்றுதான் வரும். க1 வந்தால் க2 வராது. உதாரணம் சங்கராபரணம் (வரிசையில் 29 ஆவது ராகம்) ஸ,ரி2,க2,ம1,ப,த2, நி2. கல்யாணி (65-வது ராகம் ) ஸ,ரி2,க2,ம2,ப,த2, நி2. கவனித்தால் இரண்டுக்கும் மா மட்டுமே வித்தியாசம். இப்படித்தான் 72 வகையான தாய் ராகங்கள் அமைகின்றன. வேதியியலில் பீரியாடிக் டேபிள் எனப்படும் தனிம அட்டவணை போன்றது இது.

 

தமிழிசைப் பண்களே அடிப்படை!

முதல் கட்டுரையில் சொன்னதுபோல் இசைத் தமிழில் ஏராளமான பண்கள் இருந்திருக்கின்றன. பரிபாடல். சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் ஏராளமான சான்றுகள், இலக்கணங்கள் உள்ளன. தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரந்தங்களும் குறிப்பிட்ட பண்ணோடு இசைக்கப்பட்டன. பண்களே பின்னர் ராகமாயின. அப்படி வழங்கப்பட்ட ராகங்களையெல்லாம் வேங்கிடமகி என்பவர் 16-ம் நூற்றாண்டில் தொகுத்து 72 மேளகர்த்தா ராகங்கள் என்னும் அட்டவணை வகுத்ததே கர்னாடக இசை வரலாற்றில் முக்கிய நிகழ்வு.

அப்படி வந்த ராக வரிசையில் பதினைந்தாவதைத்தான் நாம் பார்க்கப் போகிறோம். தமிழ்ப் பண் மரபில் இந்தளப் பண் என அழைப்பார்கள். (இந்தோளம் என்னும் ராகத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை). கர்னாடக இசையில் தொடக்கப் பாடங்களை இந்த ராகத்தில்தான் சொல்லித் தருவார்கள். இதன் சுரங்கள் ஸ,ரி1,க2,ம1,ப,த1,நி2. ஸாவும் பாவும் எல்லா ராகங்களுக்கும் ஒன்றுதான் என்பது நினைவிருக்கிறதா?

தமிழிசை மூவருள் மூத்தவர், தற்கால பல்லவி- அனுபல்லவி- சரணம் எனப்படும் கீர்த்தனை வடிவத்தின் முன்னோடியான முத்துத்தாண்டவர். அவர் எழுதிய ‘ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காண’ என்ற பாடல் அமைந்த ராகம் இது. திரையிசையில் இளையராஜா ஒரு சாம்ராஜ்ஜியமே இந்த ராகத்தில் நடத்தியிருக்கிறார். உதாரணம் ‘முதல் இரவு’ (1979) திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்’ என்னும் அருமையான பாடல். அந்த ராகம்?

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23761525.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ராக யாத்திரை 04: அலிபாபாவும் ஆலய மணியும்

 

 
11chrcjAlayamani

‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?’ பாடல் காட்சியில் சிவாஜி, சரோஜாதேவி

 

 

சென்ற வாரம் கேட்ட கேள்வியோடு தொடங்குவோம். ‘மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்’ பாடல் அமைந்த ராகம் ‘மாயா மாளவ கௌளை’. சரியாகச் சொன்ன பலரில் முதல்வரான ஏ.சிவகுமாருக்கு வாழ்த்துகள். சென்ற வாரம் தாய் ராகங்கள் 72 எனக் கொஞ்சம் கொட்டாவிவிடும் சமாச்சாரம் பற்றி விளக்கியிருந்தேனே. அந்தப் பட்டியலில் பதினைந்தாவது ‘மாயா மாளவ கௌளை’. பழந்தமிழில் ‘இந்தளப் பண்’.

 

எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துக்கள் பலதரப்பட்டவை. தாத்தா ஈஸிச்சேரில் சாய்ந்துகொண்டு ஆழ்வார்களைப் பற்றி சுஜாதா எழுதியதைப் படித்துக்கொண்டிருப்பார். பேரன் மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைப் பற்றிப் படித்து ரசித்துக்கொண்டிருப்பான். அவரா இது என்று வியக்கவைக்கும். அதுபோல் சில ராகங்களையும் இசை அமைப்பாளர்கள் வேறு வேறு இடங்களில் பயன்படுத்தி இருப்பார்கள். ஒரே ராகத்தில் அமைந்த இரண்டு பாடல்களைக் கேட்கும்போது அதுவா இது என்று வியக்கவைப்பதே ஒரு இசையமைப்பாளருடைய படைப்புத்திறனின் வெளிப்பாடு.

 

கற்பனையும் ராகமும்

படைப்பாளியின் கற்பனையோடு ராகமும் வளைந்து கொடுக்கும் தன்மையுடையதாக இருந்தால் நமக்குக் கிடைப்பவை விதவிதமான விருந்துகள் தாம். அப்படி ஒரு ராகம்தான் மாயா மாளவ கௌளை. தமிழ் இலக்கண நூல்களில் இன்னின்ன திணைகளுக்கு இன்னின்ன பண்கள் என இலக்கணம் வகுத்திருப்பார்கள். ஒவ்வொரு ராகமும் ஒவ்வொரு விதமான உணர்வை மனத்தில் தோற்றுவிக்கக்கூடியது. சில ராகங்கள் சோகத்துக்கானவை. உதாரணம் முகாரி, சுபபந்துவராளி போன்றவை.

‘மாயா மாளவ கௌளை’ ராகம் பக்தி உணர்வுக்கும், மெல்லிய சோகத்துக்கும் ஏற்ற ராகம். மெய்மறக்கச் செய்யும் ராகம். வேகமாகவும் விறுவிறுப்பாகவும் பாடவும் ஏற்றது. ‘உடல் பொருள் ஆனந்தி’ என்றொரு நாவலில் ஜாவர் சீதாராமன் இந்த ராகம் வீணையில் வாசிக்கப்படுவது எப்படி உள்ளத்தை உருக்கும் விதமாக உள்ளது என்று விலாவாரியாக விவரித்திருப்பார்.

கர்னாடக சங்கீதம் படிப்பவர்களுக்கான பால பாடங்கள் மாயா மாளவ கௌளை ராகத்தில்தான் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. இந்த இடத்தில் ஒரு சின்ன தொழில்நுட்ப சமாச்சாரம். இந்த ராகத்தின் ஏழு சுரங்களையும் மா வை மையமாக (கமல் ரசிகர்களுக்கு மய்யமாக) வைத்துக்கொண்டு இந்தப் பக்கம் மூன்று அந்தப் பக்கம் மூன்று எனப் பிரித்தால் ஸ் ரி1 க2 ம1 பத1நி2 என இரண்டு பக்கங்களிலும் சமமாக இருக்கும். அதாவது ஸ ரி க -வில் ஒவ்வொரு சுரத்துக்கும் இடையே உள்ள இடைவெளி போன்றே ப த நி-யிலும் இருக்கும். அதனாலேயே இதை ஆரம்பப் பாடங்களில் சொல்லித் தருகிறர்கள்.

 

மாயம் செய்யும் மாயா!

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் ‘ஸ்ரீ நாதாதி குரு குஹோ’ என்று இந்த ராகத்தில் தான் தன் முதல் பாடலை இயற்றினார். தியாகய்யர் ‘துளசி தளமுலசே’ என்று ஒரு இனிமையான கீர்த்தனையை அமைத்திருக்கிறார். பக்தியும் சோகமும் கலந்த மெட்டு. முத்துத்தாண்டவரின் ‘ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ?’ என்ற பாடல், இந்த ராகத்தில் அமைந்த சிறந்த செவ்வியல் பாடல்களுள் ஒன்று.

இத்தனை சிறப்புமிக்க மாயா மாளவ கௌளையில் தொடக்க காலத்தில் அமைந்த திரைப்பாடல்கள் குறைவுதான். மாயா மாளவ கௌளையை மிக வித்தியாசமாக அரேபிய இசை பாணியில் தந்தவர் தட்சிணாமூர்த்தி.(ராஜாவின் குரு அல்ல. இவர் வேறு). படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ (1956). பாடல் ‘அழகான பொண்ணுதான் அதற்கேற்ற கண்ணுதான்’. பானுமதி அருமையாகப் பாடியிருப்பர்.

‘துளசி தளமுலசே’ மெட்டிலேயே பட்டினத்தார் (1962) படத்தில் ‘நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ’ என்று ஜி.ராமனாதன் அற்புதமான பாடல் ஒன்றை அமைத்திருப்பார். ‘கோடிச் செல்வம் நிறைந்தாலும் என்ன அதைக் குலவிக் கொஞ்ச மனம் குளிர்ந்திடுமோ... ஓடி வந்து விளையாட இங்கு ஒரு பாலன் வேண்டுமென வேலன் தந்தையிடம் (நிலவே)’ என்று மருதகாசி உருக்கமாய் எழுதியிருப்பார்.

11chrcjIlayaraja

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைப்பில் ஒலித்தது ‘ஆலய மணி’ (1962). அரிதாக ஒலித்தாலும் அருமையான மாயா மாளவ கௌளையை அளித்திருப்பார்கள் இரட்டையர்கள் . அதுதான் டி.எம்.எஸ். கணீர்க் குரலில் பாடிய ‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?’ என்ற பாடல். இடையில் வரும் ஹம்மிங் (ஹம்மிங் அரசி எல்.ஆர்.ஈஸ்வரிக்குக் கேட்கணுமா!) மெல்லிசையாய் ராகத்தைக் கோடிட்டுக் காட்டுவது மிக இனிமையாக இருக்கும்.

அவ்வளவாகப் பிரபலமாகாத ‘வெள்ளி ரதம்’ (1979) என்ற படத்திலும் எம்.எஸ்.வி. ஓர் அருமையான பாடலை இந்த ராகத்தில் அமைத்திருப்பார். சுசீலாவின் குரலில் ‘கலைமகள், அலைமகள், மலைமகள் மூவரும் சந்திக்கும் ராத்திரி’ என ஒரு இனிய பாடலைத் தந்திருப்பார். இவர்கள் போட்டதெல்லாம் கோடுதான். அதன்பின் இந்த ராகத்தில் தேசிய நெடுஞ்சாலையே போட்டவர் இசைஞானிதான்.

 

ராஜாவுக்குப் பிடித்த ராகம்

திரையிசையில் மாயா மாளவ கௌள ராகத்தை மிக அதிகமாகப் பயன்படுத்தியது இளையராஜாதான். எனக்குத் தெரிந்தே ஐம்பது பாடல்கள்வரை இந்த ராகத்தில் இசைத்திருக்கிறார். பல்வேறு விதமான உணர்வுகளுக்கும் பல்வேறு விதமான தளங்களில் இந்த ராகத்தைப் பயன்படுத்தினார். 1977-ல் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் இந்த ராகத்தில் ஒரு பாடலை முதன்முதலாகப் பயன்படுத்துகிறார். ராகநதி பிரவாகமாக எடுத்து ஓடப்போவதன் முதல் ஊற்று அப்பாடல். டி.எம்.எஸ் - ஜானகி குரலில் அமைந்த இப்பாடலுடன் படத்தின் பிற பாடல்களையும் கேட்டுவிட்டுத்தான் இயக்குநர் ஸ்ரீதர் தனது ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ என்னும் இசை ஓவியம் வரையும் தூரிகையை இளையராஜாவிடம் கொடுத்தாராம். அது என்ன படம், என்ன பாடல்?

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23839282.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ராக யாத்திரை 05: தாழ் திறந்த இசையின் கதவு

 

 
18CHRCJVATTATHUKKUL

‘இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்’ பாடல் காட்சியில் சுமித்ரா, லதா   -  THE HINDU ARCHIVES

முதலில் ஒரு ஷொட்டு; ஒரு குட்டு. இம்முறை வினாத்தாள் கொஞ்சம் எளிது போலும். காலையிலேயே பல்லைக்கூடத் துலக்காமல் பதிலளித்த பலரில், முதல்வரான கோவை அந்தோணிராஜ் அவர்களுக்குப் பாராட்டுகள். சென்ற வாரம் கேட்ட வினாவுக்கு விடை – ‘தீபம்’ (1977). அந்தப் படத்தில் உள்ள ‘அந்தப்புரத்தில் ஒரு மகராணி’ என்ற பாடல்தான் அது. ‘மாயா மாளவ கௌளை’யில் இசைஞானி அமைத்து டி.எம்.எஸ், ஜானகி பாடிய பாடல். பிற்காலத்தில் மாயா மாளவ கௌளையில் அமைக்கப்போகும் அபூர்வப் பாடல்களின் அச்சாரம் அதுதான்.

தொடக்கத்தில் ஓர் அருமையான வயலின் இசையின் தொடக்கம். ‘சாமந்திப் பூக்கள் மலர்ந்தன; இரு சந்தனத் தேர்கள் அசைந்தன’ என்னும் இடத்தில் சிதார் இசை. ‘ஆசை கனிந்து வர அவன் பார்த்தான்’ என ஜானகியின் ஹஸ்கி கொஞ்சல். ‘சங்குவண்ணக் கழுத்துக்குத் தங்க மாலை’ என முழங்கும் டி.எம்.எஸ். கம்பீரக் குரல் என்று ஒவ்வோர் இசைக்கலைஞரும் இந்தப் பாடலில், இந்த ராகத்தின் மேன்மையை வெளிப்படுத்தியிருப்பார்கள். சுமார் நாற்பது ஆண்டுகள் கடந்தும் பலரது மனத்தில் பசுமையாகப் பதிந்துள்ள பாடல்.

 

 

அச்சாரமாக அமைந்த பாடல்

மாயா மாளவ கௌளை கொஞ்சம் சோகமான ராகம். அதில் என்னதான் நட்பு, மகிழ்ச்சி, பக்தி, நெகிழ்ச்சி, காதல் எனச் சொன்னாலும் முத்துச் சரத்தைக் கோக்கும் இழைபோல ஒரு மெல்லிய சோகக் கீற்றுத் தென்படும். அப்படித் தெரியும் பாடல் ஒன்றுதான் 1978-ல் இசைஞானி மெட்டமைத்த ஒரு பாடல். பஞ்சு அருணாசலம் திரைக்கதை, எஸ்.பி.முத்துராமன் இயக்கம் என்னும் மாபெரும் வெற்றிக் கூட்டணியின் இன்னொரு தூணாகத் தன்னை இசைஞானி இளையராஜா உறுதிசெய்து கொண்டிருந்த காலகட்டம் அது.

‘வட்டத்துக்குள் சதுரம்’ என்ற திரைப்படத்தில் அமைந்த ‘இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்’ என்ற பாடல். ‘அதோ அதோ என் பாடலில் ஒரே ராகம்’ என மாயா மாளவ கௌளையைத்தான் சொல்கிறதோ அப்பாடல்? வழக்கம்போல் வயலின், குழல் என ராகத்தைச் செம்மைப்படுத்தும் கருவிகளுடன் ஜானகி, சசிரேகா, உமாதேவி குரலில் நட்பைப் பிரதிபலிக்கும் அட்டகாசமான பாடல். கேட்கக் கேட்க மனதைக் கரைய வைக்கும் இசை.

அடுத்த வருடம். அதே கூட்டணி. தந்தை தன்னைப் புரிந்துகொள்ளாத மகளைப் பார்த்துப் பாடும் சோகமான ஒரு பாடல். தந்தையாக ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன். மகளாக ஸ்ரீதேவி. ‘கவரி மான்’ (1979) படத்தில் எஸ்.பி.பி. குரலில் மெல்லிய சோகமாக மாயா மாளவ கௌளை. ‘பூப்போல உன் புன்னகையில்’. பிற்காலத்தில் இதே ராகம் ஏராளமான சோகப் பாடல்களாக ராஜாவின் ஆர்மோனியத்திலிருந்து ஒலிக்கப் போவதன் ஆரம்ப அறிகுறி இது.

 

மெல்லிசையில் மறுஜென்மம்

அதே வருடம் இன்னொரு டி.எம்.எஸ் பாடல். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்த முதல் படம் ‘நான் வாழ வைப்பேன்’. ‘மஜ்பூர்’ என்ற அமிதாப்பச்சன் நடித்த படத்தின் மறு ஆக்கம். படத்தின் பாடல்களெல்லாம் சூப்பர் ஹிட். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே’ என்ற மறக்க முடியாத பாடல் சோகமும் தத்துவச் சுவையும் அடங்கிய ஒரு மாயா மாளவ கௌளையில் மெல்லிசையாக மறுஜென்மம் எடுத்தது.

அப்படியே 1980-க்கு வந்தோமானால். தமிழில் பல முத்திரை நாயகர்களை அறிமுகப்படுத்திய, பிரபலப்படுத்திய படம் ‘நிழல்கள்’. அந்தப் படத்தில் போட்டிருப்பார் பாருங்கள் ஒரு மா.மா.கௌளை! உண்மையிலேயே அது ‘மா’பெரும் மா.கௌளைதான். தொடக்கத்தில் வரும் தந்தி இசை. லேசான சோக வயலின். அப்படியே கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக டெம்போவைக் கூட்டிக் கொண்டேபோய் ஒரு டஷ்!!! திருமறைக்காட்டில் திருஞானசம்பந்தரும் அப்பரும் திறந்த கதவுபோல் ஒரு திறப்பு. ‘பூங்கதவே தாழ்திறவாய்...’ என தீபன் சக்கரவர்த்தி, உமாரமணன் குரலில். இடைவெளியில் மேற்கத்திய இசை சங்கதிகளை இந்த ராகத்தில் வெளிப்படுத்தியிருப்பார் இசைஞானி.

 

வளைந்துகொடுக்கும் ராகம்

நல்ல ராகம் என்பது நல்ல களிமண் போல் எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கும். திறமையான மட்பாண்டக் கலைஞர் அதைப் பானையாகவோ, யானையாகவோ மாற்றுவது அந்த மண்ணை மேலும் அழகுபடுத்தவே. நல்ல இசைக்கலைஞன் கையில் கிடைக்கும் நல்ல ராகமும் அது போன்றே பல்வேறு வடிவங்களாக வெளிப்படும். மேற்கத்திய இசை, மெல்லிசை, கர்னாடக இசை, நாட்டார் இசை என எல்லா வடிவங்களிலும் இந்த ராகத்தின் வேறு வேறு முகங்களைக் காட்டியவர் இளையராஜா .

‘சக்களத்தி’(1979) என்றொரு படம். சுதாகர், விஜயன் நடித்தது. அந்தப் பட டைட்டில் பாடலில் மாயா மாளவ கௌளையில் இளையராஜாவே பாடிய பாடல் ‘என்ன பாட்டு பாட என்ன தாளம் போட’. கிராமத்து நாயகன் பாடுவது என்பதால் ஆங்காங்கே கொஞ்சம் ராகமும் தாளமும் விலகிவிடும். என்றாலும் நாட்டுப்புற இசையில் இந்த ராகத்தின் சாயலைக் கண்டறிந்து மறு உருவாக்கம் செய்த பாடல்களில் தொடக்கப் பாடல் இது.

 

அந்திவரும் நேரத்தில் அந்தப்புர மகராணி

1983-ல் இந்த ராகத்தை மிகவும் ஸ்டைலாக ‘பூங்கதவே’ போல் ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் அமைத்திருப்பார். பாக்யராஜின் ‘டிரில்’ வகை உடற்பயிற்சி நடனத்துடன் எஸ்.பி.பி, ஜானகி குரலில் வரும், ‘அந்தி வரும் நேரம்’ ஒரு வித்தியாசமான மெல்லிசை. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் ‘அந்தப்புரத்தில் ஒரு மகராணி’ ‘அந்தி வரும் நேர’த்திலும் ஆங்காங்கே தென்படுவாள்.

இந்த முறை கொஞ்சம் கஷ்டமான கேள்வியைக் கேட்போமா? பாடத்திட்டத்தில் இல்லாத கேள்வி! சரிகமபதநி என்றே தொடங்கும் ஒரு பாடல்! மாயா மாளவ கௌளையில். என்ன படம்? பாடியவர்கள்? யார் இசையமைப்பாளர்? (இசைஞானி அல்ல). முழு பதிலும் சொல்பவர்க்கே பாராட்டு. பார்க்கலாம்!

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23916318.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ராக யாத்திரை 06: உயிரை உருக்கும் உன்னத இசை!

 

 
25chrcjamman
 
 

போன வாரம் கடினமான கேள்வி என நினைத்திருந்தேன். அந்த நினைப்பு கர்நாடக அரசுபோல் அற்ப ஆயுளில் கவிழ்ந்து விட்டது. அசாமில் தேர்வு மையம் வைத்தாலும் அசராமல் ‘நீட்’டாக எழுதுபவர்களன்றோ நாம்! ‘சரிகமபதநி என்னும் சப்தஸ்வர ஜாலம்’ என்னும் பாடலே அது. படம் ‘ராக பந்தங்கள்’(1982). இசை: குன்னக்குடி வைத்தியநாதன். வாணி ஜெயராம், எஸ்.பி.பி குரலில் ஒலிக்கும் இனிய மாயா மாளவ கௌளை அது. சரியாகச் சொன்னால் பலருள் முதல்வரான கோடம்பாக்கம் ஹரிஷ் மற்றும் துணை முதல்வர் நெல்லை உமா கனகராஜ் ஆகியோருக்குப் பாராட்டுக்கள்!

 

முன்னரே சொன்னதுபோல் முதலிரவு(1979) திரைப்படத்தின் ‘மஞ்சள் நிலாவுக்கு இங்கு ஒரே சுகம்’ என்ற பாடல் இந்த ராகத்தில் ஒரு மாஸ்டர் பீஸ். ‘ஆலங்குயில் கூவும் ரயில் யாவும் இசைஆனதடா’ என்பதுபோல் ரயிலின் கூவெனும் ஒலியும் மாயா மாளவ கௌளையின் ஒரு ஸ்வரமாக ஒலிக்கும் மந்திரப் பாடல் அது. ஜெயச்சந்திரன் - பி.சுசீலா குரலில் ஒலிக்கும் மெல்லிசை வகை அது. ரயிலின் ஓசை மட்டுமல்ல தட தட என்று ஓடும் லயமும் தாளமாக இணையும் ஒரு மாயவித்தை நடக்கும் இப்பாடலில்.

 

வரம் வாங்கி வந்தவர்

இசைஞானியின் ஆர்மோனியம் சிலரைப் பார்த்தால் படு உற்சாகமாக மெட்டுப் போடும். அப்படி வரம் வாங்கி வந்தவர்களுள் ஒரு இயக்குனர் ஆர்.சுந்தரராஜன். ‘பயணங்கள் முடிவதில்லை’யில் இந்த வெற்றிப் பயணம் தொடங்கியது. ஒரு காலகட்டத்தில் அவர் மாபெரும் வெற்றிப்பட இயக்குநர் என்றால் இப்போதுள்ள பொடிசுகள் நம்ப மறுக்கலாம். அவரது இயக்கத்தில் வெளியானது ‘அம்மன் கோவில் கிழக்காலே’(1986) என்றப் படம்.

பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்... அதில் ஜெயச்சந்திரனும் ஜானகியும் பாடியுள்ள பாடல் ஒன்று மாயா மாளவ கௌளையில். ‘பூவை எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே’ என்ற பாடல்தான் அது. இசையின் ஆரம்ப பாடங்கள் கற்றுக் கொடுப்பது இந்த ராகத்தில்தான் எனப் பார்த்தோம் அல்லவா? இந்தப் பாடலும் ராதாவுக்கு விஜயகாந்த் இசை கற்றுக் கொடுக்கும் பாடல்தான். ‘காத்துல சூடம்போலக் கரையுதே’ எனும்போது கரையாத மனமும் உண்டோ?

 

25chrcjIlayaraja00020
உயிரே… உயிரே…

இந்த ராகமே மெல்லிய சோகம்தான். அதிலும் சோகமான ஒரு சூழல் வந்தால் மனதை உருக்கி விடும். அப்படி உருக்கும் ஒரு பாடல்தான் ‘ஒருவர் வாழும் ஆலயம்‘(1988) படத்தில் வரும் பாடல். ஷண்முகப்ரியன் இயக்கத்தில் பெரிதாக வெற்றியடையாத படம் இது. ஆனால் எத்தனையோ கேள்விப்பட்டிராத படங்களிலெல்லாம் அற்புதமாக இசை அமைந்திருக்கும் இளையராஜாவின் பாடல்களைப் போன்றே இப்படத்திலும் அமைந்த ‘உயிரே உயிரே உருகாதே’ பாடல் அக்மார்க் நெய்யில் செய்த மாயா மாளவ கௌளை. ராகமும் சோகம், சூழலும் சோகம். இதோடு யேசுதாஸின் தெய்வீக தத்துவக் குரலும் சேர்ந்து ஒலித்து உயிரையே உருக்க வைக்கும்.

இன்னொரு சோகமான சூழல். பெர்லின் சுவர்போல் காதலர்களைப் பிரிக்கும் சுவற்றின் இரு பக்கத்திலிருந்தும் எழும் சோகமான ஜோடிக்குரல்கள். ‘இது நம்ம பூமி’(1992) திரைப்படத்தில் ஒலிக்கும். ‘ஆறடிச் சுவருதான் ஆசையப் பிரிக்குமா கிளியே’ என்ற பாடல் அது. கிளி என்னும் உச்சரிப்பு யேசுதாஸுக்குக் கொஞ்சம் கிலிதான் என்றாலும் சமாளித்துத் தன் கந்தர்வக் குரலில் சொர்ணலதாவுடன் பாடியிருப்பார்.

இளையராஜாவின் பாடல்களில் ஒரு சிறப்பே சரணம் ஆரம்பிக்கும் விதம். எடுப்பு என்று சொல்லப்படும் இந்தத் தொடக்கம் பல பாடல்களில் எடுப்பாக இருக்கும். இப்பாடலிலும் பெரிதாக இசைக் கருவிகள் இல்லாமல் பின்னணியில் குழல் இசை மட்டுமே முக்கியமாக ஒலிக்கும் இப்பாடலில் ‘ஆழ்கடல் அலைகளும் ஓயுமோ’ என்னும் எடுப்பு, காவிய சோகத்தைத் தரும் இடம் (ஒரு தகவல் - இப்பாடலில் மூன்று சரணங்கள்).

 

அமரத்துவப் பாடல்

ரஜினிகாந்த் எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக, அழகாக நடித்த ஒரு படம் ஸ்ரீ ராகவேந்திரா (1985) . இந்தப் படத்திலும் இசை சொல்லிக் கொடுக்கும் ஒரு பாடல். அதே மாயா மாளவ கௌளை. அதே யேசுதாஸ். ‘ராம நாமம் ஒரு வேதமே’ என்னும் பாடல். ஆரம்பத்தில் வாணி ஜெயராம் குழந்தை ராகவேந்திரருக்கு. ‘மணிமுடி இழக்கவும் மரவுரி தரிக்கவும் அரண்மனை அரியணை துறந்தவனாம், இனியவள் உடன் வர இளையவன் தொடர்ந்திட வனங்களில் உலவிடத் துணிந்தவனாம்’ என்பதுபோல் வாலியின் அழகுதமிழ்க் கவிதை மொழிகளும் பாடலின் இறுதியில் வரும் ஸ்வரக்கோர்வைகளும் ஒரு அரிய அனுபவத்தைத் தருபவை.

தொல்லிசை, மெல்லிசை என இசைஞானியால் பிரித்து மேயப்பட்ட இந்த ராகத்தில் போடப்பட்ட பாடல்களில் உன்னதமான ஒன்று மேற்கத்திய சங்கதிகளுடன் ஒரு இசை விருந்தாக அமைகிறது. ‘கோபுர வாசலிலே’(1991) திரைப்படத்தில் வந்த ‘காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’ பாடல்தான் அது. ஆரம்பத்தில் வரும் வயலின்களின் சேர்ந்திசை, பின்னர் எஸ்.பி.பி - சித்ராவின் குரலில் ஒலிக்கும் வரிகள், இடையே வரும் தாள லய ஒலிகள், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு என அனைத்தும் இப்பாடலை அமரத்துவம் பெற்றதாக ஆக்குகின்றன.

சரி. கொஞ்சம் கடினமான கேள்வியுடன் முடிப்போமா? கல்கியின் நாயகியின் பேரில் தொடங்கும் ஒரு மாயா மாளவ கௌளை பாடல் எது, என்ன படம்? அட! உடனே பதில் சொல்லக் கிளம்பிவிட்டீர்களே?

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23979307.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ராக யாத்திரை 07: மாரியம்மனும் மரிக்கொழுந்தும்

 

 

 
01chrcjEngavoorupattukaran%201

‘எங்க ஊரு பாட்டுக்காரன்’

முதலில் சென்றவாரக் கேள்வியோடு ஆரம்பிப்போம். கல்கியின் கதாநாயகி என்றதும் பலரும் சிவகாமி என யூகித்துவிட்டனர். ஆனால் ‘சிவகாமி மகனிடம்’, ‘சிவகாமி ஆடவந்தாள்’ எனப் பல்வேறு மாயாமாளவ கௌளையில் அமைந்த ‘சிவகாமி’ எனத் தொடங்கும் பாடல்களில் 'கிளிப்பேச்சுக் கேட்கவா'(1993) படத்தில் வரும் 'சிவகாமி நெனைப்பினிலே' என்ற பாடல்தான் அது. முதலில் சரியாகச் சொன்ன ஸ்ரீராம் மற்றும் சேலம் வெங்கடேசனுக்குப் பாராட்டுக்கள்.

 

 

எப்படியும் வளைக்கலாம்

இளையராஜாவின் ஆர்மோனியம் ஃபாசிலைக் கண்டதும் குஷியாகி மெட்டிசைக்கும். அப்படி ஒரு பாடல்தான் 'சிவகாமி நெனைப்பினிலே'. மா.மா கௌளையை 360 டிகிரி எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம் எனக் காட்டியவர் இசைஞானி. அசத்தலான நாட்டுப்புற மெட்டில் இந்தப் பாடலை அமைத்திருப்பார். எஸ்.பி.பி ஜானகி குரல்களில்.

கிராமிய மெட்டுகளுக்குள்ளே ஒளிந்து கிடக்கும் சங்கதிகளை வெளியே கொண்டுவந்து, செவ்வியல் இசை என்பது மக்களின் இசையிலிருந்து தோன்றியதே என்பதை நிரூபித்துக் காட்டும் ராஜாவின் ஆயுதங்களில் முக்கியமானது மாயா மாளவ கௌளை. அப்படி அமைந்த ஒரு அட்டகாசமான பாடல்தான் 'எங்க ஊரு பாட்டுக்காரன்'(1987) திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மதுரை மரிக்கொழுந்து வாசம்’ என்னும் பாடல். ராமராஜன் என்னும் நடிகரை கிராமராஜனாக ஆக்கி, வெற்றிப்பட ஹீரோவாகவும் ஆக்கிய படம். மனோ- சித்ரா குரல்களில் ஒலிக்கும் அற்புதமான பாடல். ‘ஜெகதேவவீருடு அதிலோக சுந்தரி’ என்னும் தெலுங்குப் படத்தில் ‘யமஹோ நீ யமா யமா’ என அக்கட தேசத்திலும் அபார ஹிட்டான மெட்டானது.

 

கிராமிய வாசம்

1989-ம் ஆண்டு நெல்லையில் எங்கள் வீட்டுக்கு அருகே இருந்த ‘பேரின்ப விலாஸ்’ திரையரங்கில் ஒரு திரைப்படம் வெளியானது. வெளியான தொடக்கத்தில் அந்தப்படத்தின் நாயகன் ராமராஜன் ஓட்டும் கார் போல் மெதுவாக ஓடிய படம், பின்னர் வேகம்பிடித்து மைக்கேல் ஷூமேக்கரின் ரேஸ் கார் போல் ஓடியது. அந்தப் படம் ‘கரகாட்டக்காரன்’. அப்படத்தின் பாடல் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் ‘மாரியம்மா மாரியம்மா’ என்னும் பாடல். மலேஷியா வாசுதேவன் சித்ராவுடன் இணைந்து ஹை-பிட்ச்சில் வெளுத்துக் கட்டியிருப்பார். அதுவும் மாயா மாளவ கௌளைதான். பாடல்களெல்லாம் சூப்பர் ஹிட்டான இன்னொரு படம் ‘சின்னத்தாயி’. அதில் ஒரு அருமையான பாடலை இந்த ராகத்தில் அமைத்திருப்பார். அதுதான் 'கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும்' என்ற பாடல்.

 

சோகத்திலும் சாதனை

கிராமிய மெட்டுக்கள் போன்றே சோக மெட்டுக்களுக்கும் இந்த ராகத்தை இசைஞானி ஏராளமான படங்களில் பயன்படுத்தியுள்ளார். ‘அரண்மனைக் கிளி’யில் ‘என் தாயென்னும் கோவிலை’, ‘சின்னத்தம்பி’யில் ‘குயிலைப்பிடிச்சி கூண்டிலடைச்சி’, ‘கோயில் காளை’யில் ‘தாயுண்டு தந்தையுண்டு’, ‘பணக்கார’னில் ‘உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி’ ‘குணா’வில் ‘அப்பனென்றும் அம்மையென்றும்’ எனத் தினமும் பல் தேய்ப்பதுபோல் சுலபமாகப் பல பாடல்களை இந்த ராகத்தில் சோக சாதனை படைத்திருக்கிறார்.

 

மறக்கமுடியாத பாடல்கள்

இந்த ராகத்தில் அமைந்த எல்லாப் பாடல்களையும் குறிப்பிடுவது இயலாத காரியம். ஆனால் விட்டுப்போன சில பாடல்களை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ‘முடிவல்ல ஆரம்பம்’ என்ற படத்தில் வரும் 'தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்' என்ற பாடல். மலேஷியா வாசுதேவன் - சுசீலாவின் குரலில் ஒரு இனிய மெட்டு. ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் இரண்டு அருமையான பாடல்கள் இந்த ராகத்தில் அமைந்திருக்கும். ஒன்று 'மனதில் உறுதி வேண்டும்' என்ற டைட்டில் பாடல் யேசுதாஸின் குரலில்.

இன்னொன்று ‘கண்ணின் மணியே கண்ணின் மணியே' என சித்ராவின் குரலில். இரண்டுமே மனஉறுதி, கம்பீரத்தை வெளிப்படுத்தும் பாடல்கள். இந்த ராகத்துக்கே உரிய குணங்கள் இவை. ‘சின்ன ஜமீன்’ படத்தில் வரும் ‘ஒனப்புத்தட்டு புல்லாக்கு’(ஒனப்புத்தட்டு என்றால் என்ன, தெரிந்தவர் கூறுங்கள்), ‘உடன்பிறப்பு’ படத்தில் வரும் ‘நன்றி சொல்லவே உனக்கு’ என்பனவும் குறிப்பிடத்தக்க பாடல்கள்.

பிற்காலப் படங்களில் வித்தியாசமாக ‘அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்’ என்ற பாடல் ‘சந்திரலேகா’(1995) என்ற படத்தில் இந்த ராகத்தில் அமைந்திருக்கும். பாடல்கள் இல்லாததால் அல்ல, இடம் இல்லாததால் இத்துடன் ராஜாவின் இந்த ராகப் படைப்புகளை நிறுத்திக் கொள்வோம்.

புலியின் தம்பி பூனையாகாது என்பதுபோல் கங்கை அமரனும் இந்த ராகத்தில் அருமையான இரண்டு பாடல்கள் அமைத்திருக்கிறார். ஒன்று ‘மௌனகீதங்கள்’ படத்தில் வரும் 'மூக்குத்திப் பூ மேலே' என்னும் பாடல். இன்னொன்று ‘இமைகள்’(1983) படத்தில் வரும் ‘மாடப்புறாவோ’ என்னும் பாடல். டி.எம்.எஸ்ஸுக்குப் பின் மலேஷியா வாசுதேவன் சிவாஜிக்கு பாடத்தொடங்கிய காலம்.

 

இனிமை சேர்த்த ஏனையோர்

எல். நரசிம்மன் இசையில் ‘கண்சிமிட்டும் நேரம்’ படத்தில் இடம்பெற்ற ‘விழிகளில் கோடி அதிசயம்’, சங்கர் கணேஷ் இசையில் ‘திருமதி ஒரு வெகுமதி’ படத்தில் ‘பார்த்துச் சிரிக்குது பொம்மை’, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘அல்லி அர்ஜுனா’ படத்தில் ‘சொல்லாயோ சோலைக்கிளி’ எனப் பிற இசையமைப்பாளர்களும் இந்த ராகத்தை இனிமையாகப் பயன்படுத்தியிருப்பார்கள்.

இத்துடன் மாயா மாளவ கௌளைக்கு மங்களம் பாடிவிட்டு, கேள்வியோடு அடுத்த ராகத்துக்குப் போவோம். ‘வேலாலே விழிகள்’ என்னும் க்ளாசிக் பாடல். படம்? ராகம்?

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article24044475.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ராக யாத்திரை 08: முத்துக்களோ ராகம்; தித்திப்பதோ பாடல்!

 

 

 
08chrcjraga%20yadthirai

‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் கே.ஆர்.விஜயா, சிவாஜி கணேசன்

இரட்டை வேடக் கதாப்பாத்திரங்களுக்கு பெருமை செய்தவர் ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன். 1978-ல் வெளிவந்த ‘என்னைப் போல் ஒருவன்’ படத்தில் ஒரு சிவாஜிக்கான அறிமுகப் பாடல்தான் ‘வேலாலே விழிகள்’. உஷா நந்தினியுடன் சிவாஜி படகில் ஆடிப்பாடும் அந்தப் பாடலைப் பாடியவர்கள் டி.எம்.எஸ் – சுசீலா. ‘பட்டுச் சேலையில் மின்னும் பொன்னிழை பாவை மேனியில் ஆட’ என்னும் வாலியின் (கண்ணதாசன் அல்ல) வரிகளுக்குத் துள்ளலான மெட்டை அமைத்திருப்பார் எம்.எஸ்.விஸ்வநாதன். அந்த ராகம் ‘மத்தியமாவதி’. முதல் ஆளாகச் சரியான விடை சொன்ன சேலம் தேவிகா மற்றும் நெல்லை பா. மணிகண்டன் இருவருக்கும் பாராட்டுக்கள்.

 

தாய் ராகமும் சேய் ராகமும்

 
 

அடுத்து நாம் பார்க்கப் போவது மத்தியமாவதியைத்தான். கொஞ்ச நாட்களுக்கு முன் ராகங்கள் உருவாகும் விதங்கள் பற்றிப் பார்த்தோம். மறந்துவிட்ட கஜினிகளுக்காக சுருக்கமாக மீண்டும். ரி,க,ம,த மற்றும் நி ஆகிய ஸ்வரங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டு உண்டு ( உதா :ரி1,ரி2 அல்லது சின்ன ரி பெரிய ரி). இவற்றில் தாய் ராகம் எனப்படுவதில் ஒரு ராகத்தில் இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றுதான் வரும். இப்படி வித விதமான சேர்க்கைகளால் 72 தாய் ராகங்கள் (மேள கர்த்தா ராகங்கள்) பிறக்கின்றன எனப் பார்த்தோம்.

உதாரணம்: கல்யாணி 65-வது ராகம் - ஸ ரி2 க2 ம2 ப த 2 நி2. கரஹரப்ரியா 22-வது ராகம் - ஸ ரி2 க1 ம1 ப த2 நி1. தாய் ராகத்தில் குறிப்பிட்ட ஸ்வரங்கள் இல்லாமல் வருவது சேய் (ஜன்ய) ராகமாகும். உதாரணம்: சங்கராபரணம் 29-வது தாய் ராகம் - ஸ ரி2 க2 ம1 ப த2 நி2. இதில் ம வும் நி யும் இல்லாமல் பாடினால் அது மோகனம். மோகனத்தின் ஆரோகணம் - ஸ ரி2 க2 ப த2 ஸ். அவுரோகணம் - ஸ் த2 ப க2 ரி2 ஸ. அப்படி மத்தியமாவதியானது மேலே சொன்ன கரஹரப்பிரியாவின் குழந்தையாகும். இதில் க வும் த வும் வராது. ஸ ரி2 ம1 ப நி1 ஸ், ஸ் நி1 ப ம1 ரி2 ஸ என்பதே இந்த ராகம்.

 

குறிஞ்சிப் பண்ணிலிருந்து…

பழந்தமிழ்ப் பண்களில் ‘குறிஞ்சிப் பண்’ என வழங்கப்படும் இந்த ராகம், மிகவும் மங்களகரமான ராகமாகக் கருதப்படுகிறது. ‘கற்பகமே கருணை கண்பாராய்’ என்ற பாபநாசம் சிவனின் பாடல், மதுரை மணி அவர்களால் பெரிதும் புகழ் பெற்றது. ஊத்துக்காடு வெங்கடசுப்பையரின் ‘ஆடாது அசங்காது வா கண்ணா’ என்ற பாடலும் பிரபலம். பித்துக்குளி முருகதாஸ் இப்பாடலைப் பாடினால் பித்துப் பிடித்து அலையும் மனம்.

தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர். தங்கத் தட்டில் சாப்பிட்ட அவர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கால் சிறை சென்று நிலைகுலைந்தார். அவரது இறுதிக்காலம் காவிய சோகமாக அமைந்தது. அவரது திரைப்பயணத்தின் இறுதிக் காலத்தில் வெளிவந்த படம் ‘சிவகாமி’(1960). நிலை குலைந்தாலும் குன்றாத மலையான அவரது கணீர்க் குரலில் ஒரு அருமையான மத்தியமாவதி ராகப் பாடல் ‘அற்புத லீலைகளை’ என அப்படத்தில் இருக்கும். ‘திரையிசைத் திலகம்’ கே.வி.மகாதேவன்.

 

இரவுக்கும் நிலவுக்கும் ஏற்ற ராகம்

‘மஞ்சள் மகிமை’ என்றொரு படம்(1959). ‘ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா’ என்றொரு மனம் மயக்கும் மத்தியமாவதி ராகப் பாடல். கண்டசாலாவும் சுசீலாவும். இசை மாஸ்டர் வேணு. ஒருமுறையேனும் கேட்டுப் பாருங்கள். அதே கண்டசாலா பி.லீலாவுடன் பாடிய இன்னொரு பாடல் மாயாபஜார் (1957) படத்தில் வரும் ‘கண்ணுடன் கலந்திடும் சுபதினமே’. அதே ராகம். இரவுக்கும் நிலவுக்கும் ஏற்ற ராகம் மத்தியமாவதி.

கே.வி. மகாதேவன் மத்தியமாவதியைப் பல ராகமாலிகைப் பாடல்களில் இறுதியாகவும் துக்கடாவாகவும் பயன்படுத்தியிருப்பார். திருமால் பெருமை (1968) திரைப்படத்தில் வரும் ‘திருமால் பெருமைக்கு நிகரேது’ என்ற பாடல் தொடங்குவது இந்த ராகமே. அவர் இந்த ராகத்தை ஜாலியாகப் பயன்படுத்தியிருப்பது ‘வியட்நாம் வீடு’ (1970) படத்தில் இடம்பெற்ற ‘பாலக்காட்டு பக்கத்திலே’ என்ற பாடல். ஆரம்பத்தில் ராகத்தை விட்டு விலகினாலும் ‘ராஜா பத்மநாபன் ராணியைத்தன் நெஞ்சினில் வைத்தார்’ என்னும் இடத்தில் மத்யமாவதியைப் பிடித்து உச்சாணியில் வைத்திருப்பார். அவரே ‘படிக்காத மேதை’யில் (1960) ‘எங்கிருந்தோ வந்தான்’ என இந்த ராகத்தில் சோக ரசத்தைப் பிழிந்திருப்பார். அசரீரிக் குரல் அரசன், சீர்காழியின் குரலில். வாழ்ந்து கெட்ட சோகமும் விசுவாசமுள்ள ஊழியனின் பிரிவும் பாரதியின் வரிகளும் சேர்ந்து கொள்கின்றன.

 

முத்துக்களோ கண்கள்

கே.வி.மகாதேவன் தனது மேதமையை வெளிக்காட்டியிருக்கும் ஒரு படம் ‘சங்கராபரணம்’ (1980). இசைக்குத் தேசிய விருது வாங்கிய அப்படத்தில் மத்தியமாவதியில் ஒருபாடல். எஸ்.பி.பி பிரமாதப்படுத்திய அந்தப் பாடல் இன்றளவும் இந்த ராகத்தில் ஒரு மைல்கல். அதுதான் ‘சங்கரா நாத சரீரா பரா’ என்னும் பாடல். கம்பீரமும் இனிமையும் கலந்து புல்லரிக்க வைக்கும் பாடல் இது.

தலைப்பிலேயே சொன்னது போல் எம்.எஸ்.வி இந்த ராகத்தில் ‘நெஞ்சிருக்கும் வரை’ (1967) திரைப்படத்தில் ஒரு மிகச்சிறந்த பாடலைக் கொடுத்திருப்பார். ‘முத்துக்களோ கண்கள்’ என்று டி.எம்.எஸ்ஸும். சுசீலாவும் பாடும் இந்தப் பாடலில் தொல்லிசை ராகத்தை மெல்லிசையாகத் தந்திருப்பார். தொடக்கத்தில் வரும் சிதார், வயலின் என எல்லாமே ஒரு இனிய அனுபவத்தைத் தருபவை. அதே போன்றே ‘பிராப்தம்’ (1971) படத்தில் வரும் ‘சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து’ என்ற பாடலிலும் பெரும்பாலும் மத்தியமாவதியேதான் வருகிறது.

தமிழ்த்திரை உலகில் மத்தியமாவதி ராகத்தில் பின்னிப் பெடலெடுத்திருப்பது இசைஞானிதான். நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை இந்த ராகத்தில் போட்டிருப்பார். சோகம், சந்தோஷம், காதல், தத்துவம் என எல்லாவித உணர்வுகளுக்கும் இந்த ராகத்தைப் பயன்படுத்தியிருப்பார். ஆரம்பகட்டத்தில் 1978-ல் வந்த திரைப்படத்தில் ‘தாலாட்டு’ என்றே தொடங்கும் ஒரு தாலாட்டுப் பாடலை இந்த ராகத்தில் அமைத்திருப்பார். படம்? பாடல்? பாடியோர்?

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article24111358.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ராக யாத்திரை 09: பொன்னூஞ்சல் ஆடும் ராகம்!

 

 
15chrcjMullummalarum

‘முள்ளும் மலரும்’

தாலாட்டு எனத் தொடங்கும் இளையராஜாவின் பாடல் என்றவுடன் பலரும் ‘தாலாட்டுதே வானம்’ என்ற ‘கடல்மீன்கள்’ பாடலைக் கூறியிருந்தார்கள். ஆனால் சரியான விடை ‘அச்சாணி’ (1978) படத்தில் வரும் ‘தாலாட்டு, பிள்ளையுண்டு தாலாட்டு’ என்ற பாடலே. மத்தியமாவதி ராகத்தில் அமைந்தது. பாடும் நிலா பாலுவும் கூவும் குயில் பி.சுசீலாவும் பாடிய பாடல். சரியாகச் சொன்னவர்களுள் முதல்வர், துணைமுதல்வர்களான புதுச்சேரி சதீஷ்குமார் மற்றும் அனுராதா பைரவசுந்தரம் ஆகியோருக்கு வாழ்த்துகள். இசைஞானி பிற்காலத்தில் இந்த ராகத்தில் அமைந்த ஏராளமான இனிய பாடல்களுக்கெல்லாம் அச்சாரம் போல் அமைந்தது இந்த ‘அச்சாணி’ படப் பாடல்.

இரவு, நிலவு, தாலாட்டு என்றால் மத்தியமாவதி நினைவுக்கு வந்து விடுமே. தாலாட்டு என்றவுடன் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. ஐயப்பனையே தூங்க வைக்கப் பாடப்படும் பிரபலமான பாடல் ‘ஹரிவராசனம் விஸ்வமோகனம்’ என்னும் பாடல். யேசுதாஸின் கந்தர்வக் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடல் கடவுளை மட்டுமல்ல கவலையோடு இருக்கும் மனங்களைக் கூட மயக்கித் துயில வைப்பதாகும். தேவராஜனின் இசையில் ‘சுவாமி ஐய்யப்பன்’ (1975) படத்தில் வரும் பாடல் இது. இதுவும் மத்தியமாவதி ராகமே.

 

 

ஒலி ஒளி ஜுகல்பந்தி

ராஜா இதைத் தூங்கவைக்கும் தாலாட்டுக்கு மட்டும் பயன்படுத்தவில்லை . துள்ளலான பல பாடல்களுக்கும் பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இரண்டு பாடல்களைச் சொல்லலாம். இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான காட்சிகள்தாம். இயற்கையை ரசித்தல், விடுதலை உணர்வு, வாழ்க்கையைக் கொண்டாடுதல் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் இரண்டும். இரண்டுமே பெண்குரல்தான்.

முதலாவது பாடல் மத்தியாமவதி ராகத்தில் ஒரு மைல்கல். மகேந்திரனின் இயக்கம், பாலு மகேந்திராவின் மூன்றாவது கண்ணான கேமிரா, மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தும் ஷோபாவின் முகபாவங்கள், அந்த பாவங்களைக் குரலில் தோய்த்தெடுத்துத் தரும் பாடகி ஜென்ஸி, இவர்கள் எல்லோருக்கும் அடித்தளமாக இசைஞானியின் துள்ளலான இசை என அமைந்திருக்கும் இப்பாடல் ஒரு ஒளி ஒலி ஜுகல்பந்தி. அதுதான் ‘முள்ளும் மலரும்’ (1978) படத்தில் வரும் ‘அடிபெண்ணே ! பொன்னூஞ்சல் ஆடும் இளமை’ என்ற பாடல்.

இந்தப் பாடலின் தொடக்கத்தில் வரும் இசை, பின்னணி இசைக் கோவை, சரணத்தில் ‘சித்தாடை கட்டாத செவ்வந்தியே’ என்று துள்ளும் இசை என ஒரு ஒரு இசை சாம்ராஜ்யமே நடத்தியிருப்பார் ராஜா. இப்படி ஒரு கூட்டணி இனி அமையுமா , இன்னொரு பாடல் இதுபோல் கிடைக்குமா?

 

‘சோலைக்குயிலே காலைக்கதிரே ’

அதே போல் தனிக்குரலாக ஒலிக்கும் பெண்குரல். உச்சஸ்தாயியில் எடுக்கும் பாடல். பாடியவர் ஸ்ரீபதி பண்டிதராத்யுல ஷைலஜா. அதாங்க எஸ்.பி.பியின் தங்கை எஸ்.பி.ஷைலஜா. ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ (1979) படத்தில் வரும் ‘சோலைக்குயிலே காலைக்கதிரே ’ என்னும் பாடல்தான் அது. இந்த ராகத்தின் ஊடாகப் பயணித்து இயற்கை எழிலை இசையால் நமக்கு ரசிக்கும்படி தந்திருப்பார் ராஜா. இது சைலஜாவின் முதல்பாடல் என்றால் நம்ப முடிகிறதா? ‘வண்ணத் தென் கழனி காலைக்கு வாழ்த்துப் பாடுதே’ என்று வரும் இந்தப் பாடலை எழுதியவர் எம்.ஜி.வல்லபன். அவருக்கும் முதல் பாடல் இது.

தொடக்க காலத்தில் இசைஞானியால் பல அருமையான பாடல்களைப் பாடிய தேன் குரலுக்குச் சொந்தக்காரர் வாணி ஜெயராம். அவரும் கிட்டத்தட்ட இதுபோன்ற ஒரு தனிப்பாடலைப் பாடியிருப்பார். ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ (1979) என்ற ஸ்ரீதரின் படத்துக்காக. ராஜாவின் ஆர்மோனியம் அள்ளி அள்ளி மெட்டுக்கள் தரும் இயக்குநர்களில் அவர் முதன்மையானவர் அன்றோ? வாணியின் குரலில் வரும் அந்தப் பாடல் ‘என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்’. ‘மழைக்கால மேகம் திரள்கின்ற நேரம்’, எனக் குரலும் குழலும் கொஞ்சும் இந்தப் பாடல் மத்தியமாவதியில் அமைந்தது.

15chrcjIlayaraja
 

இன்னொரு தொடக்கப் பாடல். இந்த முறை நடிகைக்கு முதல் படம். ‘கூவின பூங்குயில், கூவின கோழி’ எனத் திருப்பள்ளியெழுச்சியுடன் தொடங்கும் ஒரு இனிமையான பாடல். தாலாட்டுக்கு மட்டுமல்ல, துயிலெழுப்பவும் இந்த ராகம் பயன்படும் என்பதற்கு இளையராஜா கொடுத்திருக்கும் அற்புதமான ஒரு உதாரணம் இப்பாடல். உமா ரமணன், தீபன் சக்கரவர்த்தி பாடிய ‘செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு’ என்னும் பாடல். ‘மெல்லப் பேசுங்கள்’ (1983) படத்தில் இடம்பெற்றது. இதில் அறிமுகமான நடிகை பானுப்ரியா!

 

‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’

சமீபத்தில் அரசியலில் புகழ்பெற்ற சொல்லாக இருந்தது ‘தர்மயுத்தம்’. அந்தப் பெயரில் ரஜினி, ஸ்ரீதேவி நடித்த 1979-ல் வெளியான படத்தில் ‘ தா....தரத்தா ..’ எனத் தத்தாகாரம் செய்யும் ஜானகியின் குரல், கிட்டார், சந்தூர், சித்தார் எனத் தந்திகளின் சங்கமத்தில் மலேஷியா வாசுதேவனுடன் பாடும் ஒரு அட்டகாசமான பாடல் ‘ஆகாய கங்கை பூந்தேன்மலர் சூடி’ என்னும் பாடல். மெல்லிசையாக ஒரு லேசான மெட்டில் மத்தியமாவதி ராகத்தை அமைத்திருப்பார் இசைஞானி. ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’ என்றால் சமந்தா நடித்த படம்தானே எனக் கேட்பார்கள் இன்றைய இளைஞர்கள். ஆனால் அது ‘நினைவெல்லாம் நித்யா’ (1982) என்னும் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த மறக்க முடியாத பாடல்கள் உடைய திரைப்படத்தில் அமைந்த பாடல்.

மிகவும் ஸ்டைலான ஒரு மெட்டில் மத்தியமாவதி ராகத்தை மேக்-அப்பெல்லாம் போட்டு அமைத்திருப்பார் ராஜா. ‘முகவேர்வைத் துளியது போகும் வரையினில் தென்றல் கவரிகள் வீசும்’ என்பது போன்ற வைரமுத்துவின் வைர வரிகளை எஸ்.பி.பி அநாயாசமாகப் பாடியிருப்பார். கார்த்திக்குடன் நடித்தவர் ஜிஜி . இப்போது புகழ்பெற்ற டாக்டர் ஜெயா ஸ்ரீதர். ஜெமினி கணேசனின் மகள்.

அதே ஸ்ரீதர், அதே இளையராஜா, அதே எஸ்.பி.பி, அதே மத்தியமாவதி. இந்த முறை மோகனுக்காக . படம் ‘தென்றலே என்னைத் தொடு’ (1985). ரொம்பவும் உற்சாகமான அந்தப் பாடல் ‘கவிதை பாடு குயிலே... குயிலே’. துள்ளலான இளமையான பாடல் அது.

இந்த வாரக் கேள்வி: நாயகன், நட்சத்திர நாயகி இருவருக்குமே அறிமுகப் படம் அது. மத்தியமாவதி ராகத்தில் பாரதிராஜாவின் அப்படத்தில் வரும் ஆனந்தமான பாடல் எது?

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article24164069.ece

Link to comment
Share on other sites

ராக யாத்திரை 10: துள்ளி துள்ளிப் பாடும் ராகம்

 

 
22chrcjIlayaraja%20and%20rajini

ராஜாவும் ரஜினியும்

சென்ற வாரம் கொஞ்சம் எளிமையான கேள்வி போலிருக்கிறது. பாரதிராஜாவின் அறிமுகத்தில் புதுமுகமாக நாயகன் நாயகி இருவரும் நடித்த ‘மண்வாசனை’ (1983) படத்தில் மத்தியமாவதி ராகத்தில் அமைந்த ஆனந்தமான பாடல் ‘ஆனந்தத் தேன்சிந்தும் பூஞ்சோலை’ என்னும் பாடல்தான் . மலேசியா வாசுதேவன், ஜானகி குரல்களில் ஒலிக்கும் பாடலில் இந்த ராகத்தின் மென்மை காதுகளில் தேன்சிந்தும். சரியாகச் சொன்ன பலரில் முதலாகச் சொன்ன சிவகாசி கல்பனா ரத்தனுக்கும் நெய்வேலி ரவிக்குமாருக்கும் பாராட்டுகள். நட்சத்திர நாயகி என ரேவதிக்கு க்ளூ கொடுத்திருக்கத் தேவையேயில்லை போலிருக்கிறது.

 

மத்தியமாவதிக்கு வேறொரு வண்ணம்

 

எல்லா ராகத்தைப் போலவே வேறுவேறு தளங்களுக்கு, உணர்வுகளுக்கு இந்த ராகத்தையும் பயன்படுத்தியிருக்கிறார் இசைஞானி. நவரசங்களில் குறிப்பாக, சிருங்கார ரசத்துக்குக் கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் ‘மூன்றாம் பிறை’ (1982) திரைப்படத்தில் வரும் ‘பொன்மேனி உருகுதே’ என்ற பாடலைச் சொல்லலாம். கர்னாடக சங்கீதத்தில் மிகவும் சுத்தபத்தமாகப் பக்திபூர்வமான மங்களகரமான ராகமாகக் கருதப்படுகிறது மத்தியமாவதி.

அதை மிகவும் வேறொரு பரிமாணத்தில் விரகத்தைப் பிரதிபலிக்கும் விதமாக அமைத்திருப்பார். ஜானகியின் குரலுக்குக் கேட்க வேண்டுமா?. ‘பனிக்காற்றிலே தனனா தனனா...’ என்ற இடத்தில் அந்த ராகத்தின் சங்கதிகள் வந்து விழுவதைக் கவனியுங்கள். (கட்டாயம் இந்தப் பாடலின் புகைப்படம் போடப்பட மாட்டாது).

அதே பிக்பாஸின் இன்னொரு பாடல் இதே மாதிரியான ஒரு மாதிரியான பாடலுக்கும் இந்த ராகத்தை இளையராஜா பயன்படுத்தியிருப்பார். இரவு, நிலவு, காதல் போன்ற உணர்வுகளுக்கு மிகவும் ஏற்ற ராகம் எனச் சொல்லியிருந்தேன். அதேபோல் பல இடங்களில் இந்த ராகம் பயன்பட்டிருக்கும். ‘சகலகலாவல்லவன்’ (1982) திரைப்படத்தில் வரும் ‘நிலாக் காயுது’ என்ற பாடலும் இந்த மத்தியமாவதி ராகத்திலேயே அமைந்திருக்கும். ஜானகியுடன் மலேசியா வாசுதேவன். பாடலில் சில இடங்களில் வேறு ராகங்கள் தலைதூக்கினாலும் அடிப்படையில் இந்த ராகமே மேலோங்கி இருக்கும்.

காதல் இளவரசனுக்கு அதிரடியாக என்றால் காலாவுக்கு வேறு மாதிரியாக அமைதியான சிருங்கார ரசப் பாடல். முதலிரவுப் பாடல்தான். மகேந்திரனின் இயக்கத்தில் வந்த ‘கை கொடுக்கும் கை’ (1984) படத்தில் வரும் ‘தாழம்பூவே வாசம் வீசு’ என்ற பாடல்தான் அது. எஸ்.பி.பி., ஜானகி குரலில் இனிமையாக ஒலிக்கும் ஒரு மெல்லிய பூங்காற்றாக வரும். தாழம்பூவை ஒளித்து வைத்தாலும் வாசம் போகாது என்பது போல் மத்தியமாவதி எந்த உருவில் வந்தாலும் அதன் அடையாளமான இனிமையை வெளிப்படுத்திவிடும்.இன்னொரு அதிரடி சிருங்காரப் பாடலான ‘சின்ன மாப்பிள்ளை’ (1993) படத்தில் மனோ, சுவர்ணலதா குரலில் வரும் ‘வெண்ணிலவு கொதிப்பதென்ன’வும் மத்தியமாவதிதான்.

‘நாடோடிப் பாட்டுக்காரன்’ (1992) படத்தில் ‘வனமெல்லாம் செண்பகப்பூ’ என்ற பாடல் இரண்டு முறை வரும். ஆண்குரலில் ஒன்று; பெண்குரலில் ஒன்று. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ராகம். அதில் எஸ்.பி.பியின் குரலில் வரும் பாடல் மத்தியமாவதியில் அமைந்தது. (சுசீலா பாடும் பாடல் லதாங்கி என்னும் அரிய ராகம்- அதுபற்றிப் பின்னர்). ‘கெட்டவர்க்கு மனம் இரும்பு, நல்லவரை நீ விரும்பு’ என்பது போன்ற எளிய வரிகளுடன் நாட்டுப் புற மெட்டில் இனிமையாக இந்த ராகத்தை அமைத்திருக்கிறார் இசைஞானி.

ஆனால், மேக்னம் ஓப்பஸ் என ஆங்கிலத்தில் சொல்வார்களே அது போல் இந்த ராகத்தின் சிகரமாக அமைந்த பாடல் ஒன்று ராஜாவின் இசையில் அமைந்துள்ளது. தெலுங்கு டப்பிங் பாடல்தான் என்றாலும் கொஞ்சம்கூட ‘அக்கட’ உள்ள வாசனை தெரியாமல் இருக்கும் பாடல். எஸ்.பி.பியின் ஆரம்ப ஆலாபனை பாடத் தெரியாதவன் சுருதி சேர்ப்பதுபோல் (‘பாட்டும் நானே’ –சிவாஜி நினைவுக்கு வரும்) ஆரம்பித்துப் பின் ராகத்தின் மேடு பள்ளங்களிலெல்லாம் வேகமாக ஓடிவரும்.

22chrcjsippikul%20muthu

சிப்பிக்குள் முத்து

தொடர்ந்து ஜானகி ‘நிஸரிமபநிஸரிநிரிஸநிபமபநிஸா’ என இந்த ராகங்களின் ஸ்வரங்களின் ஆரோகண அவுரோகணங்களில் ஒரு ரோலர்கோஸ்டர் ரங்கராட்டினம் போல் ஏறி இறங்கி வருவார். இந்த ராகத்தில் ஸரிமபநி மட்டும்தான் என்பது நினைவிருக்கிறதா?. சிப்பிக்குள் முத்து (1985) படத்தில் வரும் ‘துள்ளித் துள்ளி நீ பாடம்மா’ என்னும் பாடல்தான் அது. சுத்தமான நெய்யால் செய்யப்பட்ட அக்மார்க் மத்தியமாவதி ராகப் பாடல் அது. இடையில் வரும் குழல், வயலினிசை என எல்லாம் கலந்து ஓர் உன்னதமான அனுபவம் அளிக்கும் லேசான சோகத்தைச் சொல்லும் பாடல் அது.

இதற்குமேலும் ராஜாவின் மத்தியமாவதியை ஆராய வேண்டாம். பிற இசையமைப்பாளர்களில் ‘உயிருள்ளவரை உஷா’வில் (1983) டி.ஆர் ‘இந்திர லோகத்துச் சுந்தரி’ என அருமையான பாடலொன்றை இந்த ராகத்தில் போட்டிருப்பார். ‘கொடிபறக்குது’ (1988) படத்தில் வரும் ‘சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு’ என்ற பாடலை இந்த ராகத்தில் அமைத்திருப்பார் இசையமைப்பாளர் அம்சலேகா. நல்ல துள்ளலான இசை.

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த ராகத்தில் ஒரு பாடலில் பின்னியிருப்பார். ‘ஸ்டார்’ (2001) என்ற படத்தில் வரும் ‘தோம் கருவில் இருந்தோம்’ என்ற பாடல். சங்கர் மகாதேவனின் குரலில் வேகமும் ஆவேசமும் கலந்த அருமையான மத்தியமாவதி அது.

கொஞ்சம் சிலபஸ்சைக் கடினமாக்கிக் கேள்வி கேட்போம். மத்யமாவதியின் ஸரிமபநி ஸநிமபரி என்னும் சுரங்களில் ஆரோகணத்தில் மட்டும் பெரிய நி (நி2) வந்தால் இன்னொரு இனிய ராகம் வரும். அது?

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article24219683.ece

Link to comment
Share on other sites

ராக யாத்திரை 11: நீ சின்ன நி! நான் பெரிய நி!!

 

 
29chrcjEnthambi%202

‘என் தம்பி’ படத்தில்

சென்ற வாரம் சற்றுக் கடினமான கேள்விதான். மத்தியமாவதியின் ஆரோகணத்தில் மட்டும் பெரிய நி (நி2) வந்தால் என்ன ராகம் எனக் கேட்டிருந்தேன். வழக்கமாக நூற்றுக்கணக்கான வாசகர்கள் பதில் அளித்துத் திணற அடிப்பார்கள். இந்த வாரம் சிலரே பதிலளித்தனர் அவர்களில் ஈரோடு ஞானப்பிரகாசம் மற்றும் யக்ஞ நாராயணன் ஆகியோருக்குப் பாராட்டுக்கள். அந்த ராகம் ‘பிருந்தாவன சாரங்கா’.

 

ஸ ரி2 ம1 ப நி2 ஸ் , ஸ் நி1 ப ம1 ரி2 ஸ என்பதே இதன் ஆரோகண அவரோகணங்கள். சிலர் அவரோகணத்தில் ஒரு சின்ன ‘க’வும் சேர்ப்பார்கள். சிலர் அதுதான் ஒரிஜினல் ‘பிருந்தாவன சாரங்கா’, க இல்லாமல் வருவது ‘ப்ருந்தாவனி’ என்பார்கள்.

 

ராக முத்திரை

மிகவும் இனிமையான ராகம் இது. முத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய ‘ரங்கபுர விஹாரா’ என்னும் கீர்த்தனை. எம். எஸ். பாடிக் கேட்டால் அந்த அரங்க மா நகரின் சொர்க்க வாசல் கதவுகளே நமக்குத் திறக்கும். ராகத்தின் பெயரையே கீர்த்தனையில் சொல்வதற்கு ராக முத்திரை என்று பெயர். அதில் தீட்சிதர் வல்லவர். இந்தக் கீர்த்தனையிலும் ராகத்தின் பெயரை அவ்வாறு பிருந்தாவனத்தின் மான்களுக்கெல்லாம் தலைவனே (சாரங்கா – மான்) எனப் பொருள் படும்படி அமைத்திருப்பார். மான் போல் குதிக்கும் இந்த ராகத்தில் பெரியசாமி தூரன் இயற்றிய ‘கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய்’ என்ற பாடலும் மிகவும் பிரபலம்.

திரை இசையில் மிகவும் பிரபலமானது இந்த ராகம். கொஞ்சம் இந்துஸ்தானி ஜாடையும் இதில் வரும். ஷெனாயில் வாசிக்க ஏற்றதாக இருப்பதால் பல திரைப்படப் பின்னணி இசையில் வரும். இந்த ராகத்தில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ (1959) திரைப்படத்தில் வரும் ‘சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே’ என்ற பாடல் மிகவும் இனிமையானது.

எண்ணிக்கையில் குறைவாகப் பாடினாலும் தரத்தில் நிறைவாகப் பாடிய எஸ். வரலட்சுமியின் குரலில் ஒலிக்கும் இப்பாடலுக்கு இசையமைத்தவர் ராகமேதை ராமநாதன் அவர்கள். ஆரம்பத்தில் ஒரு ஆலாபனை பின்னர் இடையிடையே ஷெனாய் ஒலி என இந்த ராகத்தின் ஜாடையை அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.

 

கோவர்த்தன ஆவர்த்தனம்

லேசான இந்துஸ்தானி ஜாடையில் மென்மையாகப் பாட வேண்டும் என்றால் பி.பி.ஸ்ரீநிவாஸ் இல்லாமலா? ‘இதயத்தில் நீ’ (1963) என்ற படத்தில் ஒரு பிரமாதமான பாடல். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இந்த ராகத்தில் அமைத்திருப்பார்கள். ஆரம்பத்தில் ஒரு ஹம்மிங் மூலம் பிபிஎஸ் இந்த ராகத்தை ஜாடை காட்டி அற்புதமாகப் பாடியிருக்கும் அந்தப் பாடல் ‘பூ வரையும் பூங்கொடியே’. வாலியின் ஆரம்ப காலப் பாடல்களுள் ஒன்று.

‘என் தம்பி’ (1968) என்ற சிவாஜியின் படம். எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைத்தது. அதில் இடம்பெற்ற அருமையான பாடல் ‘முத்து நகையே உன்னை நானறிவேன்’, டி.எம்.எஸ். பாடியது. இடையிடையே ஆஹா, ஓஹோ எனப் பாடலில் வருவது போன்றே நாமும் பாடலைக் கேட்டால் ஆஹா, ஓஹோ எனப் பாராட்டுவோம்.

கோவர்த்தனம் என்ற இசையமைப்பாளர். ‘பட்டினத்தில் பூதம்’ போன்ற சில படங்களுக்கே இசையமைத்தவர். அவரது சிறுவயதிலேயே நாகஸ்வர மேதை ராஜரத்தினம்பிள்ளை வாசிக்கும்போது உடனுக்குடன் ஸ்வரங்களைச் சொல்லி அவரிடம் பாராட்டுப் பெற்றாராம். அவர் இசையமைத்த படம் ‘பூவும் பொட்டும்’ (1968). அதில் ஒரு அருமையான பாடலை பிருந்தாவன சாரங்காவில் அமைத்திருப்பார். ஷெனாயைப் போன்றே நாகஸ்வரத்திலும் இனிமையான ஒரு ஆலாபனையுடன் இப்பாடல் தொடங்கும். பி.சுசீலாவின் தேன்குரலில் வரும் ஹம்மிங்களுடன் டி.எம்.எஸ். பாடிய பாடல் ‘நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகிறான்’ என்பது. உண்மையிலேயே பரமண்டலத்திலிருந்து தேவன் பாடும் பாடலைக் கேட்பது போன்ற அனுபவத்தைத் தரும் பாடல் அது.

 

மெட்டின் இனிமைக்கு மெல்லிசை மன்னர்

இந்த ராகத்தின் மாஸ்டர் பீஸ் என்றால் அது ‘படித்தால் மட்டும் போதுமா?’வில் (1962) அமைந்த ஒரு பாடல்தான். இந்த ராகத்தில் இரண்டு நி எனப் பார்த்தோம். சிறியது ஒன்று பெரிய நி மற்றொன்று. அது போல் இரண்டு வேறு விதமான பாடகர்கள். இரண்டு வேறு விதமான நடிகர்கள். பாத்திரங்கள். படத்தில் சிவாஜி கொஞ்சம் முரட்டுத்தனமானவர், பாலாஜி மென்மையானவர். இருவரும் மற்றவருக்காகப் பெண்பார்த்து விட்டு வந்து பாடும் பாடல். இந்த ராகத்திலும் இரண்டு நிஷாதங்கள் (நி).

கம்பீரமாகப் பாடும் டி.எம்.எஸ்., மென்மையாகப் பாடும் பி. பி. எஸ். என அமைந்திருப்பது தற்செயலான விஷயமாகத் தோன்றவில்லை. ‘பொன் ஒன்று கண்டேன்’ என்ற அந்தப் பாடல் இரண்டு பாடகர்கள் சேர்ந்து பாடிய பாடல்களிலேயே முதன்மையானது எனலாம். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் அமைந்த பாடல். வயலின், ஷெனாய், குழல் என இந்த ராகத்தின் பல்வேறு வடிவங்களைக் காட்டியிருப்பார்கள். எம். எஸ். வி. தனது பாடல்களில் ராகத்தின் இலக்கணத்தை ராணுவ ஒழுங்குபோல் கடைப்பிடிக்க மாட்டார்.

இலக்கணத்தைவிட மெட்டின் இனிமைதான் முக்கியம் என்பது அவரது பாணி. இப்பாடலிலும் ‘நான் பார்த்த பெண்ணை’ என்ற இடத்தில் வேறு ஸ்வரங்கள் வந்தாலும் இனிமை கெடாமல் இருக்கிறது.

அதே மெல்லிசை மன்னர் பிற்காலத்தில் பொல்லாதவன் (1980) என்ற படத்தில் சுசீலாவின் குரலில் ‘சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே’ என்ற இனிய பாடலை இந்த ராகத்தில் அமைத்திருப்பார்.

சரி. இசை ஞானிக்கு வருவோம். பல விதமான பாடல்களை இந்த ராகத்தில் அமைத்திருக்கிறார். கல்லுக்குள் ஈரமாய் வந்த பாடல் ஒன்று உண்டு. அது என்ன பாடல் ? க்ளூ: அந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் கல்லுக்குள் ஈரம் இல்லை.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article24280716.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ராகயாத்திரை 12: மனத்தில் பூத்த ராக மலர்

06chrcjEthunammaboomi

‘இது நம்ம பூமி’ படத்தில் கார்த்திக், குஷ்பு

 

 

சென்ற வாரம் கேட்ட கேள்வியோடு தொடங்குவோம். சிவகுமார் நிஜமாகவே நல்ல ஓவியர். அவர் சில படங்களில் ஓவியராக நடித்திருக்கிறார். அப்படி அவர் நடித்த ஒரு படம்தான் ‘மனிதனின் மறுபக்கம்’ (1986). அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு அருமையான பாடல் பிருந்தாவன சாரங்கா ராகத்தில் அமைந்திருக்கிறது. ‘கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன’ என்ற அந்தப் பாடலை ஜானகியின் குரலில் கல்லுக்குள்ளும் ஈரம் கசிய வைக்கும் வகையில் அமைத்திருப்பார் இசைஞானி.

 

சரியான பதில்சொன்ன பலரில் முதல்வர்களான ஸ்ரீரங்கம் ஹிமயா, அய்யன்கோட்டையன் முத்து ஆகியோருக்குப் பாராட்டுகள்.

மென்மையான காதல் பாடல்களுக்கு இந்த ராகத்தை ராஜா பயன்படுத்தியிருப்பார். ‘டிசம்பர் பூக்கள்’ (1986) என்றொரு திரைப்படம். இந்த முறை ஓவியராக நடித்தது மோகன். அந்தப் படத்தில் ‘மாலைகள் இடம் மாறுது... மாறுது’ என்ற இனிமையான பாடலை இந்த ராகத்தில் அமைத்திருப்பார். யேசுதாஸ் சித்ரா குரல்களில் ஆரம்ப கோரஸ், வயலின், குழல், சிதார் என வழக்கமான பக்கவாத்தியக் கச்சேரி நடத்தியிருப்பார். பாடல் அவ்வளவாகப் பிரபலமாகவில்லை. யாரும் முகரவில்லை என்றாலும் காட்டு மலர் மணம் குறையுமா? அதுபோன்றதே இந்தப் பாடலும்.

 

நாட்டுப்புற மெட்டில்...

காதல் என்றால் நடிகர் முரளி இல்லாமலா? திரைப்படம் முடிந்த பிறகும் காதலைச் சொல்லாமல் தயங்கும் கதாபாத்திரங்களுக்காக வார்க்கப்பட்டவர்போல பல படங்களில் நடித்திருப்பார். அவர் அறிமுகமான ‘பூவிலங்கு’ (1984) படத்தில் இந்த ராகத்தில் இடம்பெற்றது அந்த அட்டகாசமான பாடல். இளையராஜாவே பாடியுள்ள ‘ஆத்தாடி பாவாடை காத்தாட’ பாடலே அது. குழல் இசையோடு தொடங்கும் அந்தப் பாடலில் நாட்டுப்புற மெட்டில் இந்த ராகத்தை வெளிப்படுத்தியிருப்பார்.

அதே போல் ‘இது நம்ம பூமி’ (1992) என்ற திரைப்படம். இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது. அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனவை. அதில் ஒரு மென்மையான பாடல் ‘ஒரு போக்கிரி ராத்திரி’. மனோ சுவர்ணலதாவின் குரல்களில் ஒலிக்கும். அதுவும் பிருந்தாவன சாரங்காதான். விறுவிறுப்பான இரண்டு பாடல்களை இந்த ராகத்தில் சொல்லலாம். ஒன்று ‘பிரியங்கா’ (1994) என்ற திரைப்படத்தில் வந்தது.

இந்தியில் சக்கை போடு போட்ட ‘தாமினி’ என்ற இந்திப் படத்தின் மறுஆக்கம் இப்படம். அதில் ஓர் அருமையான பாடல் அமைத்திருப்பார் ராஜா. ‘இந்த ஜில்லா முழுக்க நல்லாத் தெரியும்’ என்னும் அந்தப் பாடலில் உற்சாக ஊர்வலம் நடத்திய குரல்கள் மனோ, சித்ராவினுடையவை. இன்னொரு பாடல் அதே மனோ, சுனந்தாவுடன் பாடியது. ‘மெதுவாத் தந்தியடிச்சானே’ என்ற பாடல். படம் ‘தாலாட்டு’ (1993). சிவரஞ்சனியுடன் இணைந்து அரவிந்த்சாமி கஷ்டப்பட்டு நடனமெல்லாம் ஆடியிருப்பார். பாடல் அருமையான பிருந்தாவன சாரங்கா.

 

ராஜா – சுந்தர்ராஜன் கூட்டணியில்..

இன்னொரு அருமையான பாடல் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வந்த ‘குங்குமச்சிமிழ்’ (1985) என்ற படத்தில் வந்த ‘பூங்காற்றே தீண்டாதே’ என்ற பாடல்தான். சுந்தர்ராஜன் என்றால் இசையூற்றுதான் சுரந்து வழியுமே இசைஞானிக்கு. ஜானகியின் குரலில் ‘அடி பெண்ணே’ (முள்ளும் மலரும்) போல் அமைந்த ஒரு பாடல் இது.

ஸ்ரீதரின் இறுதிக் காலப் படங்களில் ஒன்று ‘தந்துவிட்டேன் என்னை’ (1991). விக்ரம் சேதுவாக உருவெடுக்கும் முன் சாதுவாக நடித்த திரைப்படம். அதில் ஒரு மென்மையான கிராமியச் சாயலுடன் கூடிய மெல்லிசைப் பாடல் ‘முத்தம்மா முத்து முத்து’ என்ற பாடல். அருண்மொழி, உமாரமணன் குரல்களில் வந்த ஒரு இனிய பிருந்தாவன சாரங்கா.

இசைஞானியின் இசையில் இந்த ராகத்தில் சிறப்பாக அமைத்த பல பாடல்களில் ‘என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் (1989)’ படத்தில் வரும் இந்தப் பாடலும் ஒன்று. பி.சுசீலாவின் திறமைக்குக் களம் தந்த பாடல்களில் (உதா- பூப்பூக்கும் மாதம் தைமாதம், ஆசையில பாத்தி கட்டி) இதற்கும் இடமுண்டு. ‘மனதில் ஒரே ஒரு பூப் பூத்தது’ என்ற பாடல் அது. ‘குழலினிது யாழினிது என்பார் சுசீலா குரலினிமை அறியாதவர்’ எனக் குறளே எழுதும் அளவுக்கு இனிமையான பாடல். ‘குழலூதும் கண்ணனின் வண்ணமே நீ’ எனத் தொடங்கும் சரணம் இந்த ராகத்தின் சாரம்.

 

பின்னணி இசையிலும் ராகம்

நாம் திரைப்படப் பாடல்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறோம். பின்னணி இசையைப் பற்றி ஆராய வேண்டுமானால் அதற்கு நாட்களும் பத்தாது; நாளிதழ் தாள்களும் பத்தாது. இளையராஜா ஒவ்வொரு படத்திலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தை வேறு வேறு உணர்வுகளுக்குப் பயன்படுத்தியிருப்பார். உதாரணம், ‘சிந்து பைரவி’ படத்தில் சிந்து பைரவி ராகம் படம் முழுவதும் இழையோடும்.

‘சின்னக் கவுண்டர்’ திரைப்படத்தில் சுகன்யா மொய்விருந்து வைக்கும் இடத்தில் நெகிழ்ச்சியான உணர்வுகளுக்குப் பிருந்தாவன சாரங்கா ராகத்தைத் தந்திகளால் (சிதார்) இழை இழையாக நெய்திருப்பார். முதலில் பின்னணி இசை இல்லாமல் மியூட் மோடில் வைத்துக் கேளுங்கள். பின்னர் இசையுடன் கேளுங்கள். பின்னணி இசையின் மகத்துவம் புரியும்.

பிற இசையமைப்பாளர்கள் அமைத்த பாடல்களில் இரண்டு பாடல்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். ‘அன்புள்ள அப்பா’ (1987) என்ற திரைப்படம். அதில் ஓர் அருமையான பிருந்தாவன சாரங்கா – ‘மரகதவல்லிக்கு மணக்கோலம்’ என்ற பாடல். யேசுதாஸின் குரலில் , ஷெனாய் போன்ற இசைக்கருவிகளுடன் பிரமாதப் படுத்தியிருப்பார்கள் சங்கர்-கணேஷ் இருவரும்.

இந்த வாரக் கேள்வியோடு முடிப்போம் . மயிலிடம் தோகையைக் கேட்ட பாடல் எது? படம் எது? கண்டுபிடிக்க ஒரு குறிப்பு: ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் பிரபலப் பாடல்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article24337790.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை சலசலத்தோடும் ரம்மியமான தொடர்....தொடருங்கள்.....!  ?  tw_blush:

Link to comment
Share on other sites

ராகயாத்திரை 13: ‘தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி’

 

 

 
13CHRCJENAKKULORUVAN

‘எனக்குள் ஒருவன்’படத்தில் கமல்ஹாசன், ஷோபனா

 

 

சென்ற வாரம் கேட்ட கேள்விக்கான பதில் ‘கடவுள் அமைத்த மேடை’ (1979) படத்தில் வரும் ‘மயிலே மயிலே உன் தோகை எங்கே’ என்ற பாடல். எஸ்.பி.பியும் ஜென்ஸியும் பாடிய பாடல். ஹம்சத்வனி என்ற ஓர் அற்புதமான ராகத்தில் அமைத்திருப்பார் இசைஞானி. அதையே இந்த வாரம் பார்க்கப் போகிறோம். அதற்குமுன் சரியான பதிலளித்த முதல்வர்கள் சிதம்பரம் கலாதரன், மதுரை நடராஜன் ஆகியோருக்குப் பாராட்டுகள்.

 

கர்னாடக இசைக் கச்சேரிகளில் தொடக்கத்தில் பாடப்படும் பிள்ளையார் பாடல்களில் முதன்மையானது முத்துஸ்வாமி தீட்சிதர் இயற்றிய ‘வாதாபி கணபதிம்’ என்ற பாடல். அது அமைந்தது ஹம்சத்வனி ராகத்தில்தான். அந்த ராகமே முத்துஸ்வாமி தீட்சிதரின் தந்தையார் ராமசாமி தீட்சிதர் உருவாக்கியது என்றும் சொல்வார்கள். மத்யமாவதி போல் இதிலும் ஐந்து ஸ்வரங்கள்தாம். ஸ் ரி2 க2 ப நி2 ஸ் ஸ் நி2 ப க2 ரி2 ஸ். (பா 1 ஆ 2 ஆ எனக் கேட்பவர்கள் பா வும் ஸா வும் ஒன்றுதான் உண்டு என்ற பழைய பாடத்தைப் பத்து முறை எழுதிப் பார்க்கலாம்). ஹம்ஸ என்றால் அன்னம். அன்னத்தின் குரல் போல் இனிமையாகவும் கம்பீரமாகவும் இருக்கும் ராகம்.

 

இளையராஜாவுக்கு முன்

கர்னாடக இசையில் பிரபலமான இந்த ராகம் திரையிசையில் இ.மு காலத்தில் அவ்வளவாகப் பிரபலமாகவில்லை. (இ.மு – இளையராஜாவுக்கு முன்). ‘அடுத்த வீட்டுப் பெண்’ (1960) என்றொரு திரைப்படம். டி.ஆர்.ராமச்சந்திரன், அஞ்சலிதேவி நடித்தது. அஞ்சலிதேவியின் கணவர் ஆதிநாராயண ராவ்தான் இசை. பாடல்களெல்லாம் மிகவும் பிரபலம். அந்தக் காலத்திலேயே தங்கவேலுவின் பாட்டுக்கு டி.ஆர்.ராமச்சந்திரன் டப்ஸ்மாஷ் செய்திருப்பார். அந்தப் படத்தில் அமைந்த ஓர் அருமையான பாடல் ‘வனிதா மணியே’ என்பது. பி.பி.ஸ்ரீநிவாஸ் குரலில் அமைந்த இனிமையான பாடல். ஸ்வரங்களெல்லாம் அருமையாக அமைந்திருக்கும். பாட்டு வாத்தியார் அஞ்சலிதேவியின்மீது பாடுவார். திடீரென ஆட்கள் உள்ள வந்துவிட ‘வாதாபி கணபதிம்’ என மாற்றி விடுவார். அற்புதமான ஹம்சத்வனி ராகப் பாடல்.

 

மறக்க முடியாத ஹம்சத்வனி

ஹம்சத்வனியை அதிகம் பயன்படுத்தியவர் இளையராஜா எனலாம். ‘நல்லதொரு குடும்பம்’ (1979) என்ற திரைப்படத்தில் வரும் ‘செவ்வானமே பொன்மேகமே’ என்ற பாடல் இந்த ராகம்தான். ஜெயச்சந்திரன், சசிரேகா, கல்யாணி மேனன், டி.எல்.மகாராஜன் என ஒரு பட்டாளமே பாடியிருக்கும் பாடல். மெல்லிசையாக லேசாக அமைந்த பாடல்.

‘என் புருஷந்தான் எனக்கு மட்டும் தான்’ (1989) திரைப்படமும் பாடல்களுக்காக மிகப் பிரபலம். இயக்குநர் - மனோபாலா! இந்நாள் காமெடியன்! அதில் ஒரு அருமையான ஹம்சத்வனி. ஆரம்பத்தில் ஹம்சத்வனியின் ஸ்வரங்களில் கரிகரிகரிஸ்நிபநிஸரி எனக் குழலில் ஊஞ்சலாட்டம். தொடரும் ஜெயச்சந்திரன் குரலில் ‘பூ முடித்து பொட்டு வைத்து’ என ஆரம்பிக்க, சுனந்தா பெண்குரலில் தொடர்வார். குழலில் இந்த ராகத்தின் பல சங்கதிகளை வெளிப்படுத்தியிருப்பார் ராஜா.

இன்னொரு பாடலில் ஹம்சத்வனியில் பிரமாதப்படுத்தியிருப்பார் ‘கிழக்கே போகும் ரயி’லில் (1978). நாதஸ்வரத்தில் தொடங்கும் ஹம்மிங்கும் இடையிடையே வரும் இசைத் துணுக்குகளெல்லாம் ‘பூ முடித்து பொட்டு வைத்த’ பாடலை நினைவூட்டும். ஆனால் அந்தப் பாடலுக்கு முன்னோடி இந்தப் பாடல்தான். அது மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி குரலில் ஒலிக்கும் ‘மலர்களே நாதஸ்வரங்கள்’ என்னும் பாடல்தான்.

ஒரு கை இல்லாவிட்டாலும் வாழ்க்கை வாழலாம் எனச் சொன்ன படம் ‘வாழ்க்கை’ (1984). அதில் இடம்பெற்ற அட்டகாசமான டூயட் ஹம்சத்வனியில். ‘காலம் மாறலாம் நம் காதல் மாறுமோ’. மெல்லிசையாக ஒரு நல்லிசையை எஸ்.பி.பி, வாணி ஜெயராம் குரல்களில் தந்திருப்பார் இசைஞானி’

‘மகாநதி’ (1983) திரைப்படத்தில் ஒரு மறக்க முடியாத ஹம்சத்வனி. ‘கன்னடம் தாய்வீடு என்றிருந்தாலும் கன்னி உன் மறுவீடு தென்னகம் ஆகும்’ என்று இப்போதெல்லாம் பிறந்த வீட்டிலேயே பெரும்பாலும் தங்கிவிடும் காவிரிப் பெண்ணைப் பற்றிய பாடல். ஷோபனாவின் தொடக்க ஹம்மிங்குடன் ஒரு வழிபாட்டு மனநிலையில் தொடங்கி, இயற்கை எழில் கொஞ்சும் சூழலை வர்ணிப்பார் எஸ்.பி.பி. பாடல் – ‘ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்’. அவரை வணங்கிச் சென்று விட்டு அவருக்கே அபிஷேகத்துக்கு நீரில்லாமல் ஆக்குவோர் காலத்திலும் மறக்காத பாடல்.

 

ராஜராகமாய் ஒலித்தவை

இரண்டு துள்ளலான, ஸ்டைலான பாடல்கள் ஹம்சத்வனியில் . இரண்டுமே ‘ஸ்டைல் மன்னன்’ ரஜினிகாந்தின் பாடல்கள். இரண்டுமே மெல்லிசை, தொல்லிசை இரண்டு ஜாடைகளிலும் கலக்கியிருக்கும். முதல் பாடல் ‘வேலைக்காரன்’ (1987). அதில் வரும் ‘வா வா வா கண்ணா வா’ என்ற பாடல். என்ன ஒரு பிரமாதமான இசையமைப்பு? மேற்கத்திய சங்கீதத்துடன் நமது செவ்வியல் இசையைக் கலந்து கொடுத்த ஓர் அற்புதப் பாடல். மனோ சித்ரா குரல்களில். இன்னொரு மறக்க முடியாத பாடல், ‘சிவா’ (1989) என்ற தோல்விப் படத்தில் வந்த ‘இரு விழியின் வழியே’ என்ற பாடல்தான். அதே சித்ரா, எஸ்.பி.பியுடன் பாடிய பாடல். மிகத் துள்ளலான மெட்டில் வலம் வரும் பாடல். இடையில் வரும் இசை விறுவிறுப்பான ஹம்சத்வனி.

ராஜாவின் ராஜராகமாக இந்த ராகம் வெளிப்படும் பாடல் ‘எனக்குள் ஒருவன்’ (1984) படத்தில் வரும் ‘தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி’ என்னும் பாடல்தான். ராஜா - சுசீலா காம்போவின் பல அற்புதப் பாடல்களில் இதுவும் ஒன்று. திரைப்படத்தில் நேபாளியாக வருவார் கமல். முதன்மைக் கதாபாத்திரத்தின் முன்ஜென்ம நினைவுகளால் கதைக்களத்தில் உருவான இந்தப் படம், தனது ஜென்மத்தை விரைவிலேயே முடித்துக் கொண்டது. ஆனாலும் இந்தப் பாடல் பல தலைமுறைகளுக்கும் தொடரும். ஜதி அமைப்புகள், வீணையிசை, குரல் எனக் கலந்து ஒரு அக்மார்க் (இப்போது ஐ.எஸ்.ஓ தானே?) ஹம்ஸத்வனி கேட்ட அனுபவத்தை அளித்திருப்பார் ராஜா!

‘தேனிசைத் தென்றல்’ தேவா இந்த ராகத்தில் ஒரு பிரமாதமான பாடல் போட்டிருப்பார். ‘கல்லூரி வாசல்’ (1996) என்ற படத்தில் ஹரிஹரன் குரலில் ‘என் மனதைக் கொள்ளையடித்தவளே’ என்ற பாடல்தான் அது. ஹம்ஸத்வனியில் பின்னியிருப்பார் அந்தப் பாடலில்.

இன்று சொன்ன படங்களிலேயே ஒரு பிரபலமான போட்டிப் பாடல் ஹிந்தோள ராகத்தில் அமைந்திருக்கும். அந்தப் பாடல்?

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24400141.ece

Link to comment
Share on other sites

ராகயாத்திரை 14: கண்களும் கவி பாடுதே!

 

 
raga%20yathiraijpg

அடுத்த வீட்டுப் பெண்’ படத்தில் அஞ்சலிதேவி

சென்ற வாரக் கேள்வியோடு தொடங்குவோம். ‘அடுத்த வீட்டுப் பெண்’ (1960) படத்தில் அமைந்த ‘கண்களும் கவிபாடுதே’ என்ற பாடல்தான் அது. இந்தோள ராகத்தில் அமைந்த போட்டிப் பாடல். படத்தின் நாயகி அஞ்சலிதேவியின் கணவர் ஆதிநாராயணராவ்தான் இசையமைப்பாளர். சீர்காழி கோவிந்தராஜனும் திருச்சி லோகநாதனும் பாடியுள்ள பாடல். சின்னப் பாடல்தான்.

ஆனால், ஸ்வரங்கள், ஆலாபனை என இந்தோள ராகத்தின் சாரத்தைப் பிழிந்து தந்திருப்பார்கள் இருவரும். அதிலும் உச்சஸ்தாயி ஆலாபனைகளில் இருவரும் மோதிக் கொள்ளும் இடங்கள் பிரமாதமாக இருக்கும். இந்தோள ராகத்தில் மறக்க முடியாத பாடல் அது. சரியாகப் பதிலளித்த நெய்வேலி ரவிக்குமார், உடன்குடி சரவணன் ஆகிய இருவருக்கும் வாழ்த்துகள்.

 
 

ஐந்து ஸ்வரங்களின் அழகு 

இந்தோள ராகம் 20-வது தாய் ராகமாகிய நடபைரவியின் சேய் ராகமாகும். அதுவும் மத்யமாவதி, அம்சத்வனி போல் ஐந்து ஸ்வரங்கள் உடையதுதான். ஸக1ம1த1நி1ஸ், ஸ்நி1த1ம1க1ஸ என்பதே அதன் ஆரோகண அவரோகணங்கள். தியாகய்யர் இயற்றிய ‘சாமஜ வர கமனா’ என்ற இந்தோளப் பாடல் அழியாப் புகழ்பெற்றது. அந்தப் பாடலின் ஆரம்ப வரிகளை மட்டும் எடுத்துக்கொண்டு ‘சங்கராபரண’த்தில் (1980) ஒரு பாடலை அமைத்திருப்பார் கே.வி.மகாதேவன்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி குரல்களில் ஒலிக்கும் அப்பாடல். இந்தோளத்தில் அமைந்த ஸ்வரங்களை ராஜலட்சுமி ஸகமத கமதநி எனத் திரைப்படத்தில் பாடும் போது சுருதி மாறி வேறு ராகத்துக்குப் போய்விட சோமையாஜுலு ‘சாரதா’ என அதட்டுவது ஒரு புகழ்பெற்ற காட்சி.

ராமாயணத்தைப் பாடல்களால் இயற்றிய அருணாச்சலக் கவிராயர் இயற்றிய ‘ராமனுக்கு மன்னன்முடி தரித்தாலே’ என்ற பாடலும் மிக இனிமையானது. கைகேயி கூனியிடம் கூறுவதாக அமைந்த பாடல் இது. ‘பத்து மாத பந்தம்’ (1974) என்ற திரைப்படத்தில் பானுமதி இந்தப் பாடலை அருமையாகப் பாடியிருப்பார். பானுமதி ஒரு அஷ்டாவதானி அல்லவா? இந்தப் பாடலில் இந்தோளத்தின் பல்வேறு பரிமாணங்களைக் காட்டியிருப்பார். ‘பட்டம் கட்ட ஏற்ற வன்டி ராமன்’ என்பதைப் பல்வேறு சங்கதிகளால் பாடியிருப்பார். இறுதியில் ஸ்வரங்களால் சிறப்பித்திருப்பார். இசையமைத்தவர்கள் சங்கர் கணேஷ்.

கவிஞர் வாலி எழுதிய முதல் பாடல் ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்’. முருகன் மீது அமைந்த அப்பாடலை டி.எம்.எஸ்ஸிடம் வாலி கொடுக்க, அதைப் படித்து அசந்துபோன டி.எம்.எஸ், அதற்கு இந்தோள ராகத்தில் அருமையான ஒரு மெட்டுப் போட்டார். மறக்க முடியாத அந்தப் பாடல், ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ (1966) படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இடம்பெற்ற ‘மனமே முருகனின் மயில் வாகனம்’ என்ற உணர்வெழுச்சி தரும் பாடல். நான்கே வரிகள்தாம். கண்களும் கவிபாடுதே போல் சிறிய பாடல்தான். ஆனால், ஸ்வரங்களுடன் நிறைவான ஒரு அனுபவத்தைத் தருகிறது. பாடியவர் ராதா ஜெயலட்சுமி.

என்னைவிட்டு ஓடிப் போக முடியுமா?

இன்னொரு பாடல் இந்தோளத்தில். மிகவும் வித்தியாசமான அமைப்பில் துள்ளலான காதல் பாடல். ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா இல்லை ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா’ என்று கேட்கும் தற்காலப் பாடல்களுக்கு நடுவே ‘எந்தன் அன்னை தந்தை சம்மதித்த பின்னே அன்பின் தன்மையை அறிந்து கொண்ட பின்னே’ என்று பாடிய பாடல் இது. ‘குமுதம்’ (1960) படத்தில் வரும் ‘என்னை விட்டு ஓடிப் போக முடியுமா’ என்ற பாடல்தான் அது. பி.சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன் குரல்களில் அமைந்த பாடல். இந்தோளத்தை வித்தியாசமாகக் காண்பித்திருப்பார் ‘திரையிசைத் திலகம்’ கே.வி.மகாதேவன்.

இந்தோளம் பல பாடல்களில் ராகமாலிகைளுள் ஒன்றாக விளங்கும் ராகம். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் உருவான ‘கர்ணன்’ (1964) படத்தில் ஏராளமான ராகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதைப் பற்றி தனிக் கட்டுரை எழுதலாம். அந்தப் படத்தில் பல பாடகர்கள் கூட்டாகப் பாட, ‘மழை கொடுக்கும் கொடையும் ஒரு’
எனத் தொடங்கும் அப்பாடல் அமைந்தது இந்தோள ராகத்தில். சீர்காழி பாடும் பகுதி அருமையான இந்தோளமாகும். ஆலாபனையில் ஆரம்பித்து இந்தோளத்தில் பின்னியிருப்பார்.

சலீம்-அனார்கலி என்ற கதை இலக்கியத்தில் மிகப் புகழ்பெற்றது. அந்தக் கதையை மையமாக வைத்து வந்த ‘அனார்கலி’ (1955) என்ற திரைப்படத்தில் ஒரு அற்புதமான இந்தோளம். கண்டசாலா, ஜிக்கி குரல்களில் ‘ராஜசேகரா என் மேல் மோடி செய்யலாகுமா’ என்ற பாடல்தான் அது. அனார்கலியாக ஆடுவது அஞ்சலிதேவி. இந்துஸ்தானி இசையில் மல்கௌன்ஸ் ராகம் இந்தோளத்துக்கு இணையானது. அந்த ஜாடையில் இசையமைத்திருப்பார் ஆதி நாராயண ராவ்.

இந்த வாரம் அஞ்சலிதேவி வாரம் எனக் கூறும் அளவுக்கு அஞ்சலிதேவிக்கு இந்தோள ராகப் பாடல்கள் அமைந்துள்ளன. இன்னொரு முக்கியமான பாடல் ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ (1957) என்ற படத்தில் அமைந்த ‘அழைக்காதே’ என்ற பாடலும் இந்தோளத்தில் அமைந்ததே. பி.சுசீலாவின் குரலில் இனிமையாக ஒலிக்கும் பாடலின் இசை, அதே ஆதி நாராயணராவ் தான். அவருக்கு இந்தோளம் மிகவும் பிடித்த ராகமாக இருக்க வேண்டும்.

இளையராஜா ஏராளமான பாடல்களை இந்த ராகத்தில் அமைத்திருக்கிறார். அடுத்த வாரங்களில் பார்ப்போம். அதற்குமுன் ஒரு கேள்வி. சிதம்பரம் ஜெயராமன் போல் மலேசியா வாசுதேவன் பாடிய ஒரு பிரபல பாடலை இந்த ராகத்தில் அமைத்திருப்பார் இசைஞானி. அந்தப் பாடல்? படம்?

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24470267.ece

Link to comment
Share on other sites

ராகயாத்திரை 15: நான் தேடும் செவ்வந்திப் பூவிது

 

 

 
ragajpg

பல நடிகர்களுக்குக் குரல் மாற்றிப் பாடியவர் மலேசியா வாசுதேவன். சிவாஜி, ரஜினி முதல் கவுண்டமணி வரை பொருத்தமாகப் பாடக் கூடியவர். ‘மணிப்பூர் மாமியார்’ (1979) என்ற படத்தில் சிதம்பரம்ஜெயராமனின் குரலில் ஒரு பாடல் பாடியிருந்தார். அதில் அவரோடு இணைந்து பாடியவர் எஸ்.பி.சைலஜா. அந்தப் பாடல் ‘ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே’. ஷைலஜாவின் ஹம்மிங், அடுத்து வரும் வயலின் இசையைத் தொடர்ந்து பாடலை அருமையாக எடுப்பார்.

‘மான்கள் தேடும் பூவை அவளோ, தேவி சகுந்தலையோ’ என்றெல்லாம் வரும் வரிகளை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். அந்தப் பாடல் அமைந்துள்ள ராகம் இந்தோளம். ஏகப்பட்ட பேர் சரியான பதில்களை எழுதியுள்ளனர். ஷேர் ஆட்டோ (குலுக்கல்) முறையில் தேர்ந்தெடுக்கப் பட்ட அறந்தாங்கி சுந்தரகிருஷ்ணனுக்கும், மதுரை லட்சுமி நாராயணனுக்கும் பாராட்டுக்கள்.

 

‘இளமைக் கோலம்’ (1980) என்றொரு படம். அதில் இந்த ராக கிரீடத்தில் பதித்த ரத்தினம்போல் அமைந்த பாடல் ஒன்று. கே.ஜே.யேசுதாஸின் கணீர்க்குரலில் ஒலிக்கும் அப்பாடல் இந்தோள ராகத்தில் அமைந்திருக்கும். ‘ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா’ என்னும் பாடலே அது. சில இடங்களில் சந்திரகௌன்ஸ் எனப்படும் நெருங்கிய ராகமும் எட்டிப்பார்த்தாலும் பெரும்பாலும் இந்தோளத்திலேயே அமைந்திருக்கும்.

(அதென்ன சந்திரபோஸ் மாதிரி சந்திரகௌன்ஸ் என்பவர்கள் கொஞ்சம் பொறுங்கள். வரும் வாரங்களில் பார்க்கலாம்). பாடலின் இறுதியில் வேகமான துள்ளலோடு அமைந்திருக்கும். படத்தில் பாடுபவர் சுமன்- ரஜினி நடித்த ‘சிவாஜி’ படத்தின் வில்லன்.

போன கட்டுரையில் சொன்ன ‘சாமஜ வர கமனா’ என்னும் பாடலின் ஆரம்ப வரிகளின் மெட்டைப் போன்றே இசைஞானி அமைத்த பாடல் ‘அலைகள் ஓய்வதில்லை’ (1981) படத்தில் வரும் ‘தரிசனம் கிடைக்காதா’ என்ற பாடல்.

பாடல் என்று சொல்ல முடியாது. நான்கே வரிகள்தான். முதலில் ஜானகியின் குரலிலும் பின்னர் இளையராஜாவின் குரலிலும் ஒலிக்கும் பாடல். ‘பொய்யில்லை கண்ணுக்குள் உயிர் வளர்த்தேன்’ என இந்தோள ராகத்தில் ஒரு மினி சுற்றுலா போய்க் காண்பிப்பார் இந்தச் சிறு பாடலில்.

அமைதி தரும் பாடல்

இந்த ராகத்தை வித்தியாசமாக வேறு வேறு களங்களில், தளங்களில் பயன்படுத்தி இருப்பார். ‘உனக்காகவே வாழ்கிறேன்’ (1986) என்ற படம் பாடல்களுக்காக மிகவும் பிரபலம். இறந்து போன காதலன் நினைவாக நதியா சோகத்துடன் பாடும் பாடல் ‘கண்ணா உனைத் தேடுகிறேன் வா’ என்னும் பாடல். எஸ்.ஜானகியும், எஸ்.பி.பியும் பாடும் சோக ரசம் தடவிய பாடல் அது. அதுவும் இந்தோளமே. மெல்லிசையாக அமைந்திருக்கும் பாடல்.

இன்னொரு வித்தியாசமான மெட்டில் இந்தோளத்தைத் தந்திருப்பார் இசைஞானி. ‘தூங்காதே தம்பி தூங்காதே’ (1983) என்னும் ஏ வி எம்மின் சூப்பர் ஹிட் திரைப்படத்தில் வரும் ‘நானாக நானில்லை தாயே’ என்னும் பாடல்தான் அது. மிகவும் ஸ்டைலாக மெல்லிசை பாணியில் கிடார், ஷெனாய், சிதார் என இசைக்கருவிகளுடன் எஸ்.பி.பியின் குரல் என்னும் ஒப்பற்ற இசைக்கருவி மூலம் வெளி வந்த அற்புதமான பாடல். மனதுக்கு மிகவும் அமைதி தரும் பாடல். அம்மாவாக நடித்திருப்பவர் அந்தக்கால நடிகை ஜமுனா.

சுருதி பேதம்

‘தர்ம பத்தினி’ (1986) என்றொரு படம். கார்த்திக் , ஜீவிதா நடித்தது. அந்தப் படத்தில் வரும் ‘நான் தேடும் செவ்வந்திப்பூவிது’ என்ற பாடல் மிகவும் துள்ளலான ஓர் இந்தோளம். இடையில் வரும் இசைக் கோவைகள் விறுவிறுப்பாக அருமையாக அமைந்திருக்கும். திரைப்படத்தில் இளையராஜா நடத்தும் இசைக் கச்சேரியில் அவரே பாடுவது போன்ற பாடல். தொடக்கத்தில் வரும் ஆலாபனை அற்புதமான இந்தோளம்.

உடன் பாடியவர் ஜானகி. ‘மண்வாசனை’ (1983) படத்தில் வரும் ‘பொத்தி வச்ச மல்லிகை மொட்டு’ என்ற பாடல் ஒரு கிளாசிக் பாடல். அதுவும் இந்தோளத்தின் அடிப்படையிலேயே அமைந்தது. அந்த மெட்டை வேறு கோணத்தில் பார்த்தால் ‘சுத்த தன்யாசி’ போல் தோன்றும். அதாவது ஒரு ராகத்தின் ஸ வை இன்னொரு ராகத்தின் ம என எடுத்துக் கொண்டால். திரைப்பாடல்களில் இது சகஜம். அதை சுருதி பேதம் என்று கர்னாடக இசையில் சொல்வார்கள்.

அதெல்லாம் டெக்னிக்கல் சமாச்சாரம். பாடலுக்கு வருவோம். அந்தப் பாடலில் தொடங்கும் வயலின் இசை கொஞ்சம் கொஞ்சமாக பில்டப் ஆகும். அதற்கு ஏற்பப் படத்தில் ரேவதியைக் கயிற்றால் கட்டிப் பாண்டியன் தூக்குவார். இசையின் உச்சக் கட்டத்துக்குப்பின் ஒரு நிசப்தம். அதன்பின் பாடல் தொடங்கும். பாடலின் இடையே வரும் நாதஸ்வர ஓசையும் பிரமாதமாக அமைந்திருக்கும். எஸ்.பி.பி ஜானகியின் குரல்களில் அமைந்த பாடல் .

ஏங்க வைத்த குரல்

அதே போல் இன்னொரு வித்தியாசமான இந்தோள ராகப் பாடல் ‘புதுப்பட்டி பொன்னுத்தாயி’ (1994) என்ற படத்தில் வரும் ‘ஊரடங்கும் சாமத்துலே’ என்ற பாடல். இரவு நேரத்துக்கு ஏற்ற மாதிரி ஒரு மெட்டு. பாடியவர் சொர்ணலதா. அவரது குரலைக் கேட்கும் போதெல்லாம் இன்னும் அவர் இருந்திருக்கக் கூடாதா எனத் தோன்றாமல் இருக்காது.

இளையராஜா பல படங்களுக்கு விழலுக்கு இறைத்த நீர் போல் அருமையாகப் பாடல்கள் போட்டிருப்பார். ஆனால் படச்சுருள் பாம்புபோல் பெட்டிக்குள் சுருண்டுவிடும். அப்படி ராஜாவின் இசை மகுடியால்கூட எழுப்பி விட முடியாத படங்களுள் ஒன்று ‘என்னருகே நீயிருந்தால்’ (1987) . இந்தப் படத்தை நெல்லை செல்வம் தியேட்டரில் பார்க்கும் போது பயமாக இருந்தது. காரணம், அரங்கில் நாங்கள் நான்கைந்து பேர்தான் இருந்தோம்.

அந்தப் படத்தில் ஒரு அட்டகாசமான இந்தோளம் ‘நிலவே நீ வரவேண்டும்’ என்ற பாடல். கேட்காதவர்கள் கொஞ்சம் தேடிக் கேட்டுப் பாருங்கள். இளையராஜாவே பாடிய சோகப் பாடல். ஆரம்பத்தில் வரும் கிடார் இசை , இடையில் வரும் குழலோசை என இந்தோளத்தை நெய்திருப்பார் ராஜா.

இன்னொரு சுத்தமான நெய்யால் செய்யப்பட்ட இந்தோளப் பாடல் ஒன்று. பாடலைப் பாடியவர் ஒரு பாடகி. திரைப்படத்தில் நாட்டியம் ஆடி நடித்தவர் வேறொரு பாடகி. அதென்ன பாடல்? படம்?

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24521642.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ராகயாத்திரை 16: சங்கீதமே என் ஜீவனே!

 

 
rajajpg

சென்ற வாரம் கேட்ட கேள்விக்கான பதில் ‘சலங்கை ஒலி’(1983) திரைப்படத்தில் வரும் ‘ஓம் நமச்சிவாயா’ என்ற பாடல். பாடியவர் ஜானகி. இந்தோள ராகத்தில் இசைஞானி அமைத்த ஓர்அருமையான பாடல். உண்மையான, உன்னதமானக் கலைஞனாகத் திரைப்படத்தில் வருவார் கமல்ஹாசன்.

போலிப் பெருமைக்காக நடனமாடுவதைப் பொறுக்க முடியாமல் போகும் அவரால் காட்சிக்கு மெருகு சேர்க்கும் வண்ணம் அமைந்த பாடல். ‘சந்த்ரகலாதரா சஹ்ருதயா’என்பது போன்ற தெலுங்கு மூலப் பாடல் மெட்டு சிதையாவண்ணம், ‘தங்க நிலாவினை அணிந்தவா’ என்றெல்லாம் அமைந்துள்ள வரிகளைக் கொண்டு அமைந்த பாடல் அது. சரியாகப் பதில் அளித்தவர்களுள் முதல்வர்களான நங்கநல்லூர் பத்மா, நெசப்பாக்கம் கிரி ஆகியோருக்குப் பாராட்டுக்கள்.

 

அதே இந்தோளத்தில் இன்னொரு இனிமையான பாடல் ‘உன்னால் முடியும் தம்பி’ (1988) படத்தில் இடம்பெற்ற ‘உன்னால் முடியும் தம்பி.. தம்பி’ என்ற பாடல். எஸ்.பி.பியின் குரலில் ஸ்வரங்களோடு அருமையாக அமைந்திருக்கும்.

‘கல்லாத பேர்கள் இல்லாத நாடு நம்நாடு என்றே நாம் ஆக்குவோம்’ என்பது போன்ற புலமைப்பித்தனின் வரிகளைக் கொண்ட இனியபாடல். அது போன்றே இன்னும் சில மறக்க முடியாத இந்தோள ராகப் பாடல்கள் ‘ஓ ஜனனி என் ஸ்வரம் நீ’(புதிய ராகம் - 1991) மற்றும் ‘பாட வந்ததோர் ராகம்’ (இளமைக் காலங்கள் -1983).

சோகத்தைச் சொல்லும் சந்திரகௌன்ஸ்

இந்தோளத்தில் நி யை மட்டும் கொஞ்சம் மாற்றினால் கிடைப்பது சந்திரகௌன்ஸ் என்ற ராகம். அதாவது ஸக1ம1த1நி2ஸ் என மேலே சொன்ன சில பாடல்களில் கூடச் சில இடங்களில் சந்திரகௌன்ஸ் எட்டிப் பார்க்கும். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூத்தி இந்த ராகத்தில் உருவாக்கிய மறக்க முடியாத பாடலாக ‘பாக்கியலட்சுமி’ (1961) என்ற படத்தில் வரும் ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ பாடலைச் சொல்லலாம்.

சுசீலாவின் குரலுக்கும் சிதார் இசைக்கும் சோகத்தைச் சொல்லும் சந்திரகௌன்ஸ் ராகம், மேலும் மெருகு சேர்க்கும். பி.சுசீலாவின் சிறந்த பாடல் பட்டியலில் இதற்கும் இடமுண்டு.

அதே போன்ற ஒரு கைம்பெண்ணின் சோகத்தை விவரிக்க இதே ராகத்தை இளையராஜா பிரமாதமாகப் பயன்படுத்தி உள்ளார். இந்த முறை எஸ்.ஜானகியின் குரலில் ஒலித்த பல சிறந்த பாடல்களுள் இதுவும் ஒன்று. அதுதான் ‘வைதேகி காத்திருந்தாள்’ (1984) படத்தில் வரும் ‘அழகு மலராட’ என்னும் பாடல்.

இளமையில் தனிமையின் கொடுமையை விளக்கும் பாடலுக்கு ஜதியெல்லாம் போட்டு அசத்தியிருப்பார். உப தகவல் : இந்தப் பாடல் ‘தக தகிட தக தகிட’ எனப்படும் ஐந்து எண்ணிக்கைகள் கொண்ட ‘கண்ட நடை’என்ற தாளக்கட்டில் அமைந்தது.

இந்த இடத்தில் மீண்டும் ஒரு அறிவிப்பு. ஒரு பாடலில் சில இடங்களில் அந்த ராகத்தில் இல்லாத ஸ்வரங்களை இசையமைப்பாளர் வைத்திருப்பார். அது ஒரு வித அழகு. குறிப்பாக எம்.எஸ்.வி போன்ற மெல்லிசைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களின் பாணி அது. அந்த ஒரு சில இடங்களை மட்டும் வைத்துக் கொண்டு இந்தப் பாடல் வேறு ராகம் எனச் சொல்லாமல், ஒரு பாடலில் பெரும்பான்மையாக வரும் ராகத்தையே அதன் அடிப்படை ராகமாக இந்தத் தொடரில் குறிப்பிட்டு வருகிறேன்.

விவாதி ராகங்கள் ஒரு விளக்கம்

ராகங்கள் உருவாகும் விதத்தைப் பார்க்குபோது 72 மேளகர்த்தா ராகங்கள் உருவாகின்றன எனப் பார்த்தோம். அதாவது ரி,,க,ம, த, நி ஆகிய ஸ்வரங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டு உள்ளன. ஒரு ராகத்தில் அந்த இரண்டில் ஏதேனும் ஒன்றுதான் வரும். அவற்றின் விதவிதமான சேர்க்கைகளால் இவ்வாறு ராகங்கள் உருவாகின்றன எனவும் பார்த்தோம்.

ஆனால் அதிலும் சில விதிவிலக்குகள் உள்ளன. விவாதி ராகங்கள் எனப் பெயர். இவற்றில் இரண்டும் வரும். உதாரணம்: ரி1 ரி2 இரண்டும் வரும். ஆனால் க வராது அதற்குப் பதிலாக ரி2 வே இருக்கும். இதுபோன்ற ராகங்களைப் பாடுவது கொஞ்சம் கடினம். கேட்பதும்தான். அதனால்அவ்வளவு பிரபலமாக ஆகாதவை. கோடீஸ்வர ஐயர் என்பவர் 72 மேளகர்த்தா ராகங்களிலும் பாடல்கள் புனைந்துள்ளார்.

இந்த 72 ராகங்களில் முதலாவது ராகத்தின் பெயர் கனகாங்கி. இது மிகவும் கடினமான ராகம்.இது ஸ்,ரி1,ரி2ம1பத1த2ஸ் என இருக்கும். அதாவது க விற்கு பதிலாக ரி2. நி க்கு பதிலாக த2. மிக மிக அரிதாகவே இசைக்கப்படும் ராகம் இது. ‘ஸ்ரீ கண நாதம்’என தியாகய்யர் இயற்றிய கிருதி ஒன்றிருக்கிறது. இந்த ராகத்தில் ஒரு திரைப்படப் பாடல் இசைக்க முடியுமா? அதுவும் கேட்க நன்றாக இருக்குமா? முடியும் என நிரூபித்துள்ளார் இசைஞானி.

‘சிந்து பைரவி’ (1985) திரைப்படத்தில் வரும் ‘மோகம் என்னும் தீயில் என் மனம்’என்ற பாடல்தான் அது. தொம் தொம் எனக் கடல் அலைகடலின் ஓசையையே பின்னணியாகக் கொண்டு அலைகடலாய்க் கொந்தளிக்கும் அகக்கடலை யேசுதாஸின் குரலில் பிரமாதமாக அமைத்திருப்பார்.

தந்தையிடம் மகனை வாதிட வைத்த பாடல்?

அதே போல் 72-வது மேளகர்த்தா ராகத்தின் பெயர் ரசிகப்ரியா. அது கனகாங்கிக்கு நேர் எதிரானது. அதாவது இதில் ரி க்கு பதிலாக க1. த வுக்கு பதிலாக நி1. அதாவது ஸக1க2ம2ப நி1நி2 ஸ் என வரும். இதில் 'அருள் செய்ய வேண்டும் ஐயா' எனக் கோடீஸ்வர ஐயர் கீர்த்தனை உள்ளது. ‘காவியத்தலைவி’(1970) என்ற படத்தில் வரும் ‘ஒரு நாள் இரவு பகல்போல் நிலவு’என்ற பாடல் கிட்டத்தட்ட இதே ராக அளவுகோலில் வருகிறது.

இசை, ‘மெல்லிசை மன்னர்’எம்.எஸ்.வி. அதே ராகத்தில் இளையராஜா ஒரு அருமையான பாடலை ‘கோயில் புறா’(1981) என்னும் படத்தில் அமைத்துள்ளார். ‘சங்கீதமே என் ஜீவனே’என்ற பாடல்தான் அது. சங்கீதமே என்று தொடங்குவதே ‘பநி1நி2ஸா’என்ற ஸ்வரங்களில் போட்டிருப்பார். ஜானகியின் குரலில் ஒலிக்கும் அப்பாடல். நாதஸ்வரத்துடன் இணைந்து ‘சிங்கார வேலனே’போல் பாடிய பாடல் அது.

ஒன்றுக்கும் எழுபத்தியிரண்டுக்கும் மத்தியில் 36-வது மேளகர்த்தா ராகம் ‘சல நாட்டை’. இதன் குழந்தையான நாட்டை பிரபலமான அளவு, இந்த ராகம் பிரபலமில்லை. ரசிகப்ரியா போன்றதே இந்த ராகம். ஒரே வித்தியாசம் இதில் சின்ன மத்யமம். அவ்வளவே. அந்த ராகத்தில் ஒரு கிளாசிக் பாட்டு ஒன்று போட்டிருப்பார் இசைஞானி. ‘நினைவெல்லாம் நித்யா’ (1982) படத்தில்.

ஸ்ரீதர் என்றால்தான் ராஜாவின் ஆர்மோனியம் குஷியாகி விடுமே? அதிலும் எஸ்.பி.பி.யின் குரலில் 'காமன்கோவில் சிறைவாசம், காலை எழுந்தால் பரிகாசம்' போன்ற வைரமுத்துவின் வரிகளும் அமைந்துவிட்டால்? மெல்லிசையாக மேற்கத்திய பாணியில் சல நாட்டையின் ஸ்வரங்களை வைத்துக் கொண்டு அமர்க்களப் படுத்தியிருப்பார். அதிலும் சரணங்கள் எல்லாம் சரவெடிகள். ‘பனிவிழும் மலர்வனம்’தான் அந்தப் பாடல்.

இன்று சொன்ன படங்களுள் ஒன்றில் ‘ஏழு ஸ்வரங்களும் எல்லோருக்கும் சொந்தம். அதைக் கொண்டு புதுசு புதுசாச் செய்வது அவனவன் திறமை’ எனத் தந்தையிடம் மகனை வாதிட வைத்த பாடல்? ராகம்?

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24580795.ece

Link to comment
Share on other sites

ராகயாத்திரை 17: மாலையில் யாரோ மனதோடு பேச...

 

 
alaigaljpg

'அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் கார்த்திக், ராதா

கடந்த வாரம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்‘உன்னால் முடியும் தம்பி’ (1988) படத்தில் வரும் ‘புஞ்சை உண்டு நஞ்சை உண்டு’ என்ற பாடல். சுத்த தன்யாசி ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல். சுத்த தன்யாசி அல்ல அசுத்த தன்யாசி என ஜெமினி கணேசன் திட்டினாலும் அவரே பின்னர் சிலாகிக்கும் மெட்டு அது.

‘உள்ளவை யாவும் யாருக்கும் சொந்தம் என்றிங்கு மாறும் வேளை வரும்’ என்பன போன்ற பொதுவுடைமைச் சிந்தனை வரிகளைக் கொண்ட புலமைப்பித்தன் எழுதிய பாடல் அது. சரியாகச் சொன்ன ஏராளமானவர்களில் முதல்வர்களான திருவண்ணாமலை வைத்தியநாதன். ஈரோடு இளையராஜா கன்னையா ஆகியோருக்குப் பாராட்டுகள்.

 

சுத்த தன்யாசி ஒரு சுத்த சன்னியாசி போல் எளிமையான ராகம். ஸ க1 ம1 ப நி1 ஸ் என ஐந்தே ஸ்வரங்கள் தான். சினிமாக்களில் திருமணக் காட்சி வரும் போது நாகஸ்வரத்தில் இந்த ராகத்தில் அமைந்த ‘பாவமுலோனா’ என்ற பாடலை வாசிக்க வேண்டும் என்பது விதியாக இருந்தது. மெல்லிசை மன்னர்கள் இந்த ராகத்தில் ‘தொட்டால் பூ மலரும்’ (படகோட்டி 1964) , ‘கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே’ (கர்ணன் -1964) என அசத்தியிருந்தாலும் அவர்களது மாஸ்டர்பீஸ் ‘பலேபாண்டியா’வில் (1962) வரும் ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ என்ற பாடல்தான். 24 கேரட் சுத்தமான சுத்த தன்யாசி அது. டி.எம்.எஸ் ஸ்வரங்களைப் பிரமாதமாகப் பாடியிருப்பார்.

ராஜாவின் இசை வண்ணத்தில்

இசைஞானி இந்த ராகத்தில் போட்ட பாடல்களைப் பற்றி எழுத ஒரு வாரம் போதுமா எனக் கேட்கும் அளவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை இந்த ராகத்தின் அடிப்படையில் அமைத்திருக்கிறார். அந்த ஒரு அண்டா சோற்றிலிருந்து சில பருக்கைகளை மட்டும் குறிப்பிடுகிறேன். ‘காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு’ (பகவதிபுரம் ரயில்வே கேட்); சூரசம்ஹாரம் படத்தில் ‘ஆடும் நேரம் இதுதான் இதுதான்’ என சுசீலாவின் குரலில் போதையாக ஒரு பாடல்; மனோ - சித்ரா குரலில் ‘பூந்தோட்டக் காவல்காரன்’ படத்தில் ‘பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்’ என ஜம்மென்று ஒரு மெட்டு;

‘இளமைக் காலங்கள்’ படத்தில் அட்டகாசமாக சுசீலாவின் குரலில் ‘ராகவனே ரமணா’ ரகுநாதா’ என்று ஒரு பாடல்; இளையராஜாவே பாடிய ‘சிறு பொன்மணி அசையும்’ என்னும் அழகிய பாடல் (கல்லுக்குள் ஈரம்); ரொம்பவும் ஸ்டைலாக மேற்கத்திய பாணியில் ‘ஹே… உன்னைத்தானே’ (காதல் பரிசு) எனப் பலப் பாடல்கள். இவை வெறும் சாம்பிள்தான்.

மறக்க முடியாத இரண்டு

இந்த ராகத்தில் மறக்க முடியாத பல பாடல்கள் உண்டு என்றாலும் எனது தேர்வில் இரண்டு பாடல்களைக் குறிப்பிடுகிறேன். முதலாவது‘அலைகள் ஓய்வதில்லை’ (1981) படத்தில் வரும் ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து’ என்னும் பாடல். ‘தகிட தகிட’ எனப்படும் திஸ்ர என்னும் ஜதியில் விறுவிறுப்பாக ஸ்வரங்களுடன் அமைந்த பாடல். இளையராஜா, சசிரேகா பாடிய மறக்க முடியாத பாடல். பாடலைக் கேட்டால் ஸ நி ப ம க என்ற ஐந்து ஃஸ்வரங்கள் மட்டுமே வருவதை அறியலாம்.

இந்த ராகத்தில் இன்னொரு இனிமையான பாடல்‘சத்திரியன்’ (1990) படத்தில் வரும் ‘மாலையில் யாரோ மனதோடு பேச..’ என்னும் பாடல்தான். பாடலின் தொடக்கத்தில் இசைக்கருவிகள் ஸ்வரங்களை மழையாகப் பொழிய, சுவர்ணலதாவின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் நம்மை வேறு உலகத்துக்குக் கொண்டு செல்லும். இப்படத்தின் இப்பாடலைக் கேட்கும்போது பழைய சுவர்ணலதா மீண்டும் உயிரோடு வரமாட்டாரா என்ற ஏக்கம் பிறக்கிறது. சுவர்ணலதா என்றால் பலருக்கும் இப்பாடல்தான் நினைவுக்கு வரும்.

சென்ற வாரம் போன்றே இந்த வாரமும் கொஞ்சம் அரிய ராகங்களைப் பார்க்கலாமா? சுத்த தன்யாசியின் சின்ன மா வைப் பெரிய மா வாக ஆக்கிவிட்டால் கிடைக்கும் ராகத்தின் பெயர் மதுகௌன்ஸ். இந்துஸ்தானி இசையில் பிரபலம். நம் ஊரில் இதற்கு இணையாக சுமனேசரஞ்சனி என்ற ராகம் உள்ளது. இந்த ராகம் ஸ க1 ம2 ப நி1 ஸா என்னும் ஸ்வரங்களைக் கொண்டது. இந்த ஸ்வரங்களை வைத்து இளையராஜா‘அகல்விளக்கு’ (1979) என்னும் படத்தில் ‘ஏதோ நினைவுகள்’ என்னும் பாடலை அமைத்திருப்பார்.

ragam%202jpg

இளையராஜாவுடன் பாரதிராஜா

யேசுதாஸ், எஸ்.பி.ஷைலஜாவின் குரல்களில் ஒலிக்கும் அப்பாடல் மென்மையும் இனிமையும் கலந்து செய்த கலவையாக இன்னும் நம் காதுகளில் வட்டமிடும். இதே ராகத்திலேயே கொஞ்சம் ஆங்காங்கே வேறு ஸ்வரங்களைத் தூவி ‘மறுபடியும்’ (1993) என்ற படத்தில் ‘நலம் வாழ எந்நாளும்’ என்ற பாடலை அமைத்துள்ளார்.

பிரபலமான ராகங்களிலிருந்து ஓரே ஒரு ஸ்வரத்தை மட்டும் மாற்றி வரும் பிரபலமில்லாத ராகங்களில் இசையமைப்பது இசைஞானியின் பாணி. அதே சுத்த தன்யாசியின் ஸ்வரங்களில் நி யை மட்டும் மாற்றினால் கிடைக்கும் ராகத்தின் பெயர் ஸ்ரோதஸ்வினி .

அதாவது ஸ க1 ம1 ப நி 2 ஸ என அமைந்திருக்கிறது. இந்த ராகத்தில் இளையராஜா சில அருமையான பாடல்களை அமைத்துள்ளார். ‘நீங்கள் கேட்டவை’ என்ற  படத்தில் வரும் ‘ஓ வசந்த ராஜா…’ என்ற பாடல் அதில் ஒன்று. ஜானகி, எஸ்.பி.பி.குரல்களில் ஒலிக்கும் அந்தப் பாடல், நாம் கேட்டுக் கொண்டே இருக்கும் பாடலாகும். அதே போல் இந்த ராகத்தின் அளவுகோலில் அமைத்த இன்னொரு பிரமாதமான பாடல் ‘சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு’ என்ற‘பூந்தோட்டக் காவல்காரன்’ படப் பாடலாகும். யேசுதாஸ் , சுசீலாவின் குரலினிமையும் மெட்டின் இனிமையும் சேர்ந்து மறக்க முடியாத பாடலாக அமைந்துவிட்டது.

கொஞ்சம் கடினமான கேள்வியோடு முடிப்போமா? ‘உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்தில் ஜெமினியின் பெயரோடு ஒரு ராகமும் அடைமொழியாக வருகிறது. இந்த ராகத்தில் ஸ்ரீதேவி நடித்த ஒரு படத்தில் ஓர் அருமையான பாடல் உள்ளது அது? (க்ளு –பாம்பு). கூகுளை வேண்டுமானால் துணைக்குக் கூட்டிக் கொள்ளுங்கள்!

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24644199.ece

Link to comment
Share on other sites

ராகயாத்திரை 18: பொன்மானே சங்கீதம் பாடிவா…

 

 

ragamjpg

எப்படிப் பந்து வீசினாலும் சிக்ஸ் அடிக்கும் மட்டையாளர்கள் நமது வாசகர்கள்! ‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் ஜெமினி கணேசனின் அடைமொழி பிலஹரி. அந்த ராகத்தில் இசைஞானி இசையமைத்த பாடல், ஸ்ரீதேவி நடித்தது எனக் கேட்டிருந்தோம்.

சரியான விடை ‘பாலநாகம்மா’ (1981) என்ற படத்தில் வரும் ‘கூந்தலில் மேகம் வந்து’ எனும் பாடல்தான் அது. ‘கவியரசு’ கண்ணதாசன் எழுதிய பாடல். யேசுதாஸின் கந்தர்வக் குரலில் ‘தங்கமேனி சிற்ப சித்திரம், தத்தைப் பேச்சு முத்து ரத்தினம்’ எனப் பாடல் வரிகளில் பிலஹரி ராகம்போல் வார்த்தைகள் துள்ளி விளையாடும். சரியாகப் பதிலளித்த பலருள் சென்னை ஸ்ரீராம், கோவில்பட்டி சேதுராமன் ஆகியவர்களுக்குப் பாராட்டுக்கள்.

 

பிலஹரி ராகம் சங்கராபரணத்தின் குழந்தை ராகம். அதன் ஆரோகணம் ஸ ரி2 க2 ப த2 ஸா. அவரோகணம் ஸ நி2 த2 ப ம1 க2 ரி2 ஸ. அதாவது ம வும் நி யும் அவரோகணத்தில் மட்டுமே வரும். அதாவது கமபா என வராது கபமா என வரும். அது போல் பதநிஸ என வராது பதஸநி என வரும். இந்த ராகத்தில் ‘தொரகுணா இட்டுவண்டி சேவா’ என்னும் தியாகய்யர் பாடல் மிகவும் பிரபலம். இந்த ராகத்திலே கர்னாடக சங்கீதத்தின் பால பாடங்களில் ஒன்று ‘ரார வேணுகோபால’ என்பதாகும். அதே மெட்டில் தொடங்கி இளையராஜா பிலஹரியில் ஒரு அட்டகாசமான குத்துப் பாடல் போட்டிருப்பார். ‘எல்லாம் இன்ப மயம்’ (1981) என்ற படத்தில் வரும் ‘மாமன் வூடு மச்சிவூடு’ என்ற பாடல் அது.

பாடியவர் மலேசியா வாசுதேவன். பாடல் தொடங்கும் முன் ‘சங்கராபரணம்’ படத்தில் வருவது போல் ‘ரீஜெண்டா’ மூசிக் போடச் சொல்லிக் கமல் கலாய்ப்பதையும் கவனியுங்கள். எல்லா இசையும் ஏழு ஸ்வரங்கள்தான் என்னும் சங்கதி அடங்கியிருக்கும். இதே செய்தியுடன் ‘உன்னால் முடியும் தம்பி’ (1988) படத்தில் வரும் ‘நீ ஒன்று தானா என் சங்கீதம்’ என்னும் பாடலும் யேசுதாஸின் குரலில் ஒலிக்கும். பாடலின் இறுதியில் ஸ்வரப் பிரயோகங்களோடு அலாதியான அனுபவத்தைத் தரும் பிலஹரியாகும்.

கிராமிய வண்ணம்

பிலஹரியின் தாய் சங்கராபரணம் 29-வது மேளகர்த்தா ராகம். ஸ ரி2 க2 ம1 ப த2 நி2 ஸ என வரும். சங்கராபரணத்தில் நூற்றுக்கணக்கான பாடல்களை இளையராஜா அளித்திருக்கிறார். பொதுவாக மேற்கத்திய இசை பாணியில் இசை அமைக்கவும், மெல்லிசையில் மெட்டமைக்கவும், அதே சமயம் கிராமிய சூழ்நிலைக்கேற்ற நாட்டுப்புற மெட்டுக்களுக்கும் இந்த ராகத்தைப் பயன்படுத்தியிருப்பார். அந்தக் கடலில் சில முத்துக்களைப் பார்ப்போம்

‘ஜெர்மனியில் செந்தேன் மலரே’ என்னும் துள்ளவைக்கும் பாடல் (உல்லாசப் பறவைகள்) ஒரு அட்டகாசமான சங்கராபரணம்; ‘எஜமான்’ படத்தில் இசைக்கருவிகளின் அமர்க்கள சங்கமமாக விளங்கும் ‘ஆலப்போல் வேலப்போல்’; ‘கண்மணி அன்போடு காதலன்’ எனக் ‘குணா’வில் கமல் உருகும் பாடல்; மலேசியாவின் மனதை மயக்கும் குரலில் ஒலிக்கும் ‘இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு’ பாடல் (சிவப்பு ரோஜாக்கள்);

அதே மலேசியா காமெடியாகப் பாடிய ‘மாமாவுக்குக் குடுமா குடுமா’ எனும் ‘புன்னகை மன்னன்’ படப் பாடல்; ‘பொன்மானே சங்கீதம் பாடிவா’ (நான் சிகப்பு மனிதன்) எனும் ஓர் அருமையான டூயட் பாடல்; ‘ராஜாதி ராஜா’வில் ‘மலையாளக் கரையோரம் தமிழ்பாடும் குருவி’ எனும் விறுவிறுப்பான பாடல்; ‘புதுச்சேரி கச்சேரி’ (சிங்கார வேலன்) என்று தொடங்கும் கலாட்டா பாடல் எல்லாமே இந்த ராகம்தான்.

தாலாட்டும் சோகமும்

குறிப்பாகத் தாலாட்டுப் பாடல்களுக்கும், இரவுநேர சோகப் பாடல்களுக்கும் இந்த ராகத்தை அதிகமாகப் பயன்படுத்தியுள்ளார் இளையராஜா. ‘உதயகீதம்’ (1985) படத்தில் வரும் ‘தேனே தென்பாண்டி மீனே’ என்னும் பாடல் சோக உணர்வுகளை நெஞ்சத்தில் ஊற்றெடுக்க வைக்கக் கூடியது. ‘நினைவுச்சின்னம்’ (1989) என்றொரு படம். அதில் ஓர் இனிமையான சங்கராபரணப் பாடல் உண்டு. அது பி.சுசீலாவின் குரலில் ஒலித்த ‘ஏலே இளங்கிளியே’. அதேபோல் ‘கிழக்கு வாசல்’ (1990) படத்தில் வரும் ‘பச்ச மலப் பூவு’ பாடலும் சங்கராபரணம்தான். சித்ராவின் குரலில் ‘மெல்லத் திறந்தது கதவு’ (1986) படத்தில் இடம்பெற்ற மறக்க முடியாத பாடலான ‘குழலூதும் கண்ணனுக்கு’ எனத் தொடங்கும் பாடலும் இதே ராகம்தான்.

யேசுதாஸ் குரலில் ஒலித்த ஏரிக்கரை எனத் தொடங்கும் இரண்டு பாடல்கள் என்னைக் கவர்ந்த சங்கராபரணங்கள். ஒன்று, ‘தூறல் நின்னு போச்சு’ (1982) படத்தில் வரும் ‘ஏரிக்கரை பூங்காற்றே’, இரண்டு, ‘நான் ஏரிக்கரை மேலிருந்து’. ‘சின்னத் தாயி’ (1992) படத்தில் இடம்பெற்ற இப்பாடலில் வயலின், குழல் என இசைக் கருவிகளின் துணையுடன் நாட்டுப்புற மெட்டில் சங்கராபரணத்தில் ஓர் இசை ஆபரணமாக இழைத்திருப்பார் இப்பாடலை.

சங்கராபரணத்தின் இன்னொரு சேய் ராகம் கேதாரம். ஸ ம1 க2 ம1 ப நி2 ஸ என்று ஆரோகணமும் ஸ நி2 ப ம1 க2 ரி2 ஸ என அவரோகணமும் கொண்டது. இந்த ராகத்தில் அற்புதமாக ஒரு பாடலை இசைஞானி தந்திருப்பார். ‘வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்’ என்பன போன்ற வைரமுத்துவின் அபாரக் கற்பனையுடன் வரிகள் அமைந்த பாடல். ‘பொன் மாலைப் பொழுது’ எனத் தொடங்கும் ‘நிழல்கள்’ (1980) படப் பாடல். முழுநீள நகைச்சுவைப் படம் ஒன்றில் சீரியஸாக ராக இலக்கணங்களெல்லாம் பொருந்திவரும் ஒரு பாடலை அமைத்திருப்பார் ராஜா. ‘மைக்கேல் மதன காமராஜன்’ (1990) படத்தில் வரும் ‘சுந்தரி நீயும் சுந்தரன் யானும்’ எனத் தொடங்கும் கமல், ஜானகி பாடிய பாடல் கேதாரம் தான்.

கேதாரத்தைக் கொஞ்சம் சேதாரம் செய்தால் கிடைப்பது நளினகாந்தி என்னும் ராகம். ஸ க2 ரி2 ம1 ப நி2 ஸ; ஸ நி2 ப ம1 க2 ரி2 ஸ என இடக்கு மடக்காக இருக்கும். ‘மனவியால கிஞ்ச’ என்னும் தியாகய்யர் கீர்த்தனை மிகப் பிரபலம். அந்த ராகத்தில் கமல் நடித்த ‘கலைஞன்’ (1993) திரைப்படத்தில் வரும் ‘எந்தன் நெஞ்சில் நீங்காத’ எனும் பாடல் நம் நெஞ்சங்களை விட்டு நீங்காத ஒன்று. இடையே ‘ஸகரிமாகரி’ என இந்த ராகத்தினை ராஜாவே ஆலாபனைசெய்வது வெகு சிறப்பாக இருக்கும்.

இந்த வாரக் கேள்வி, மழை பொழிய வைக்கும் ராகத்தில் வந்த பாடல். ‘நடிகர் திலக’த்தின் மகன் நடித்த படத்தில். ராகம்? பாடல்?

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24707231.ece

Link to comment
Share on other sites

ராகயாத்திரை 19: காற்றில் வரும் கீதமே!

 

 
raga%20yathiraijpg

மழை பொழியவைக்கும் ராகம் அமிருத வர்ஷினி என்பார்கள். ‘அக்னி நட்சத்திரம்’ (1988) திரைப்படத்தில் யேசுதாஸ் - ஜானகி குரல்களில் இசைஞானி இந்த ராகத்தில் அமைத்த பாடல் ‘தூங்காத விழிகள் ரெண்டு’. அந்தப் பாடல் பதிவின்போது மழை பெய்ததாகக் கூறுவார்கள்.

நிஜமாகவே மழைபொழியுமோ தெரியாது. ஆனால் அப்பாடல் தெய்வீக இசை மழை என்பதில் சந்தேகமில்லை. சரியாகப் பதில் சொன்ன சென்னை ஷ்ராவண்யா மற்றும் சேலம் ஸ்வர்ணா ஆகியோருக்குப் பாராட்டுக்கள் . (மழையை நிறுத்த எதாவது ராகம் இருந்தால் கேரளாவில் போய் பாடலாம். போதுமடா சாமி பொழிந்தது).

 

‘அம்ருத வர்ஷினி’ கல்யாணி ராகத்தின் சேய் எனலாம். ஸ க2 ம2 ப நி2 ஸ் என்பதே இதன் ஸ்வரங்கள். இளையராஜவின் இன்னொரு அருமையான அம்ருத வர்ஷினி‘ஒருவர் வாழும் ஆலயம்’ (1988) படத்தில் வரும் ‘வானின் தேவி வருக’ என்னும் பாடல். ஜானகி - எஸ்.பி.பி குரல்களில் ஒலிக்கும் பாடல் அது. கொஞ்சம் வித்தியாசமாக‘மல்லுவேட்டி மைனர்’ (1990) படத்தில் ‘காத்திருந்த மல்லி மல்லி’ என சுசீலாவின் குரலில் அம்ருத வர்ஷினி ராகத்தை கொஞ்சம் இடைச் செருகல்களுடன் அமைத்திருப்பார்.

ராகங்களின் ராணி

கல்யாணி ராகம் 65-வது மேளகர்த்தா ராகம். ஸ ரி2 க2 ம2 ப த2 நி2 ஸ என்னும் ஸ்வரங்களைக் கொண்டது. இந்த ராகம் பற்றித் தனியாக ஒரு புத்தகமே போடலாம். இருப்பினும் அகஸ்தியர் கமண்டலத்தில் காவிரியை அடைத்தது போல் ஓரிரு பத்திகளில் சொல்ல முயற்சிக்கிறேன். ‘திருவருட்செல்வர்’ (1967) படத்தில் கே.வி.மகாதேவன் ‘மன்னவன் வந்தானடி’ என அமைத்திருப்பார். கல்யாணிக்கு ஒரு மகுடம் அது. அந்த வழியில் இளையராஜா ஏராளமான பாடல்களை இந்த ராகத்தில் தந்திருக்கிறார்.

அம்பிகை மேல் ஆதிசங்கரர் எழுதிய சௌந்தர்ய லஹரி என்னும் சுலோகங்களுடன் தொடங்கும் இரண்டு பாடல்களை இளையராஜா தந்திருக்கிறார். முதலாவது பரவச அனுபவம் தரும் ‘தாய் மூகாம்பிகை’ (1982) படத்தில் வரும் ‘ஜனனி ஜனனி’ இந்த ராகத்தில் மைல்கல். இன்னொன்று ‘காதல் ஓவியம்’ (1982) படத்தில் வரும் ‘நதியில் ஆடும் பூவனம்’ என்னும் பாடல். எஸ்.பி.பி - ஜானகி குரல்களில்ஒலிக்கும் இப்பாடல், கல்யாணி ராகம், ராகங்களுக்கெல்லாம் ராணி என்பதை உணர்த்த வல்லது. ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ (மன்னன்), ‘சிறுகூட்டுல உள்ள குயிலுக்கு’ (பாண்டி நாட்டுத்தங்கம்),

‘விழிகள் மீனோ’ (ராகங்கள் மாறுவதில்லை),‘நிற்பதுவே நடப்பதுவே’ (பாரதி), ‘வந்தாள் மகாலட்சுமியே’ (உயர்ந்த உள்ளம்) ‘வெள்ளைப் புறா ஒன்று’ (புதுக்கவிதை) என ஏராளமான முத்துக்கள் கல்யாணிக் கடலில் கொட்டிக் கிடக்கின்றன.

‘தளபதி (1991) படத்தில் வரும் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ ராஜா இசையமைப்பில் இந்த ராகத்தை வேறொரு தளத்துக்கு நகர்த்திச் செல்லக் கூடியது. அதுபோல் இன்னொரு மெகா கல்யாணி ‘ஒரு நாள் ஒரு கனவு’ (2005) திரைப்படத்தில் வரும்‘காற்றில் வரும் கீதமே’ என்னும் பாடல். ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல், பவதாரிணி, சாதனா சர்கம் எனப் பலப் பாடகர்கள் இணைந்து கதம்பமாக மணக்கும் அது, கல்யாணி எனும் நாரில் இளையராஜா கோர்த்த மலர்கள். இறுதியில் ஸ்வரப் பிரயோகங்களுடன் அதிரடியாக முடியும் அமர்க்களமான பாடல் அது.

‘க’ இல்லாத கல்யாணி.

கல்யாணிக்கு மிக நெருக்கமான ஒரு ராகம் வாசஸ்பதி. கல்யாணியில் நி யை மட்டும் நி1 என மாற்றினால் கிடைக்கும் 64-வது மேளகர்த்தா ராகம். அவ்வளவாக திரையிசையில் தோய்ந்திடாத இந்த ராகத்தில் பராத்பரா பரமேஸ்வரா என்னும் பாபநாசம் சிவன் பாடல் எம்.எஸ். பாடி மிகப் பிரசித்தம். பராத்பரா அமைந்த வாசஸ்பதி ராகத்தில் ‘பெரிய இடத்துப் பண்ணைக்காரன்’ படத்தில் பண்ணைபுரத்துக்காரர் பிரமாதமாகப் போட்டிருக்கிறார் ஒரு பாடல். ‘நிக்கட்டுமா போகட்டுமா’ என்று மனோ சித்ரா குரலில் ஒலிக்கும் அப்பாடலில் தலைமுறைகளைக் கடந்து மனதில் நிற்கும் என்பதில் ஐயமில்லை.

கல்யாணி ராகத்தின் இன்னொரு சேய் ராகம் சாரங்க தரங்கினி. ஸ ரி2 ம2 ப த2 நி2ஸ என ‘க’ இல்லாத கல்யாணி. (ல்யாணி). இந்த ராகத்தில் மெல்லிசை மன்னர்கள் ‘கர்ணன்’ படத்தில் போட்ட ‘இரவும் நிலவும்’ ஓர் இனிய பாடல். அதேபோல் இசைஞானி இந்த ராகத்திலும் இரண்டு வித்தியாசமான பாடல்களைத் தந்திருக்கிறார்.

‘தென்றலே என்னைத் தொடு’வில் (1985) மென்மையாகத் ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ என ஒரு தரமான பாடல். அதே சாரங்க தரங்கினிக்கு ‘ஊரு விட்டு ஊரு வந்து’ (1990) படத்தில் ‘சொர்க்கமே என்றாலும்’ என கிராமிய ரசம் சொட்டும் வேறொரு பரிமாணம்.

கல்யாணிக்கு மிகவும் நெருங்கிய இன்னொரு ராகம் லதாங்கி. கல்யாணியில் த2 வை த1 என மாற்றினால் கிடைப்பது. இந்த ராகத்தில் ‘ஆடாத மனமும் உண்டோ’ என மெல்லிசை மன்னர்கள் ‘மன்னாதி மன்னன்’ (1960) படத்தில் அருமையாகப் போட்டிருப்பார்கள். அதே லதாங்கியில் எஸ்.பி.பி பாடும் ‘தோகை இளமயில் ஆடி வருகுது’ (பயணங்கள் முடிவதில்லை), பி.சுசிலாவின் குரலில் ‘வனமெல்லாம் செண்பகப்பூ’ (நாடோடிப் பாட்டுக்காரன்) என சிறப்பான சில பாடல்களை அமைத்திருப்பார்.

இந்த ராகம் நாட்டியத்துக்கு ஏற்றதாகும் எனவே இதில் அமைந்த பாடல்கள் பெரும்பாலும் நடனமாடக்கூடிய பாடல்களாகவே இருக்கும். அதே லதாங்கி ராகத்தில் வித்தியாசமாகக் குத்துப் பாடல் போல் ஒன்று அமைத்திருக்கிறார். ‘வால்டர் வெற்றிவேல்’ (1993) படத்தில் வரும் ‘சின்ன ராசாவே’ என்னும் பாடல்தான் அது. அதுதான் ராஜா.

கேள்வியைக் கொஞ்சம் கடினமாக்குவோமா? பன்னிரெண்டு ராசிகளில் இரண்டாவது ராசிக்குப் பிடித்த ஒரு ராகத்தில் இளையராஜா ஒரு பாடல் போட்டிருக்கிறார். அந்த ராகம்? பாடல்? படம்?

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24761556.ece

Link to comment
Share on other sites

ராகயாத்திரை 20: மோக முள்ளும் மூன்று பிரியாக்களும்

 

 
ragajpg

‘மோகமுள்’ படத்தில் அபிஷேக், நெடுமுடி வேணு

கொஞ்சம் கடினமான கேள்விதான் கடந்த வாரம். ஜோதிடத்தில் இரண்டாவது ராசி என்பது ரிஷபம். ரிஷபப்பிரியா ராகம் 61-வது மேளகர்த்தா ராகம். அதாவது மிகப் புகழ்பெற்ற சாருகேசி ராகத்தில் ம1-ஐ மட்டும் ம2-வாக மாற்றினால் வருவது. ஸ ரி2 க2 ம2 ப த1 நி1 ஸ் என வரும்.

இந்த ராகத்தில் அமைந்த திரைப்பட பாடல், ‘மந்திரப்புன்னகை’ (1986) படத்தில் வரும் 'காலிப் பெருங்காய டப்பா'. இசைஞானி எப்படி டப்பாங்குத்துப் பாடல் போல் போட்டிருக்கிறார் பாருங்கள்! அங்குதான் அவரது மேதமை தெரிகிறது. முதலில் சரியாகப் பதில் சொன்ன சென்னை குமார், கோவில்பட்டி மதுவந்தி ஆகியோருக்குப் பாராட்டுக்கள்.

 

ரிஷபப்பிரியா, சாருகேசிக்கு நெருங்கிய ராகம் என்று பார்த்தோம். சாருகேசி ராகத்தில் ‘மன்மதலீலையை வென்றார் உண்டோ’ , ‘வசந்த முல்லை போலே வந்து’ என ஜி ராமனாதனும் ‘தூங்காத கண்ணென்று ஒன்று’ என கே வி மகாதேவனும் போட்டுக் கொடுத்த பாதையில் இசைஞானி பல பாடல்களைத் தந்திருக்கிறார்.

‘ஸ்ரீராகவேந்திரா’ (1985) படத்தில் வரும் ‘ஆடல் கலையே தேவன் தந்தது’ என யேசுதாஸின் குரலில் ஒலிக்கும் பாடல், மெல்லிசையாக எஸ்.பி.பி.யின் குரலில் ‘காதலின் தீபம் ஒன்று’ (தம்பிக்கு எந்த ஊரு), அற்புதமான ஒரு ஜோடிப் பாடலான ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ ( நானே ராஜா நானே மந்திரி), சோகமாக ‘பெத்த மனசு பித்தத்திலும் பித்தமடா’ (என்னப் பெத்த ராசா), இன்னொரு மெல்லிய சோகமாக ‘சின்னஞ்சிறு கிளியே’ (முந்தானை முடிச்சு) எனப் பிரமாதப்படுத்தியிருப்பார். ‘சிங்காரவேலன்’ மாதிரியான முழுநீளக் காமெடிப் படத்தில் சீரியசாக இந்த ராகத்தில் ஒரு பாடல் போட்டிருப்பார், ‘தூது செல்வதாரடி’ என.

ஒரு மினி கச்சேரி

இன்னொரு ப்ரியாவைப் பார்ப்போமா?. ராமப்ரியா என்றொரு ராகம் . 51-வது மேளகர்த்தா ராகம். அதிகம் பிரபலமாகாத அந்த ராகத்தைத் திரையிசையில் பயன்படுத்தி இளையராஜா அற்புதமான இரண்டு பாடல்களைத் தந்திருக்கிறார். இரண்டுமே யேசுதாஸ் பாடியவை. முதலாவது ‘மோகமுள்’ (1994) திரைப்படத்தில் வரும் ‘கமலம் பாத கமலம்’ என்னும் பாடல். ஆலாபனை, பின்னணி இசை என ஒரு மினி கச்சேரியே கேட்ட உணர்வு தரும் பாடல் அது.

அதே ‘மோகமுள்’ திரைப்படத்தில் நாடகப்பிரியா எனும் அரிதாகப் பாடப்படும் 10-வது மேளகர்த்தா ராகத்தில் ‘நெஞ்சே குருநாதர்’ என்றொரு பாடல் போட்டிருப்பார் ராஜா. பாடியவர் அருள்மொழி.

அடுத்த பிரியா ஷண்முகப்பிரியா. மறைந்திருந்தே ‘பார்க்கும் மர்மமென்ன’ எனும் ‘தில்லானா மோகனாம்பாள்’ (கே.வி.மகாதேவன்) திரைப்படப் பாடலை மறக்க முடியுமா? அந்த ஷண்முகப்பிரியாவில் இசைஞானி பல பாடல்களைத் தந்திருக்கிறார். குறிப்பாக ‘தம்தன தம்தன’ என்னும் ‘புதிய வார்ப்புக்கள்’ (1979) படப் பாடல் இந்த ராகத்தில் ஒரு மாஸ்டர் பீஸ் என்று கூடக் கூறிவிடலாம்.

அதேபோல்தான் ‘சலங்கை ஒலி’ படத்தில் (1983) வரும் ‘தகிட ததிமி தந்தானா’ என்ற பாடலும் ஷண்முகப்பிரியாவுடன் மழையின் லயத்தையும் ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்தும்பாடல் அது.

இந்தக் கட்டுரையில் மூன்றாவது தடவையாக ‘மோகமுள்’ இன்று. இசைக்கு முக்கியத்துவம்கொடுத்து தி.ஜானகிராமன் எழுதிய நாவல் அது. அதைத் திரைப்படமாக்கும்போது தனது ராகங்களால் அலங்கரித்து மேலும் மெருகூட்டியிருப்பார் இளையராஜா. அப்படத்தில் வரும் ‘சொல்லாயோ வாய்திறந்து’ என வரும் பாடல் ஒரு காவியத்துவம் மிக்க ஷண்முகப்பிரியா.ஜானகி, எம்.ஜி  குமார் என இருவரும் தலா ஒருமுறை பாடியுள்ள பாடல் அது.

அதே ஷண்முகப்ரியாவில் ஜாலியாகவும் போட்டிருப்பார். ஆண்பாவத்தில் (1985) வரும் ‘காதல் கசக்குதய்யா'வும் கரகாட்டக்காரனில் (1989) வரும் ‘ஊருவிட்டு ஊரு வந்து’ பாடலும் அப்படிப் போடப்பட்ட பாடல்கள்தான்.

கலாய்க்கப் பயன்பட்ட ராகம்

இந்த க்யூவில் அடுத்தபடியாக வருவது பவப்பிரியா என்னும் 44-வது மேளகர்த்தா ராகம். தோடி போல் இருக்கும் ஆனால் ம மட்டும் ம2. அந்த அரிய ராகத்தில் ஒரு பாடலைப் போட்டிருக்கிறார். ‘குரு சிஷ்யன்’ படத்தில் வரும் ‘கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன்’ எனும் பாடல்தான் அது. சோகமான ராகமான சுபபந்துவராளிக்கு நெருங்கிய இந்த ராகத்தில் இப்படிக் கலாய்க்கும் பாட்டு !

கரஹரப்பிரியா இல்லாமல் ப்ரியா பட்டியல் முடியுமா? மிக முக்கியமான இந்த ராகம் 22-வது மேளகர்த்தா ராகம். ‘மாதவிப் பொன்மயிலாள்’ என ‘இருமலர்கள்’ படத்தில் (1967) மெல்லிசை மன்னர் அசத்தியிருப்பார். அந்த ராகத்தில் ஏராளமான பாடல்கள் போட்டிருக்கிறார் இளையராஜா.

மெல்லிசையாக வாசிக்கும் போது ‘இளங்காத்து வீசுதே’ , ‘தூளியிலே ஆடவந்த’, ‘பூங்காற்று திரும்புமா’ என ஏராளமான பாடல்கள் தந்துள்ளார். இந்த ராகத்தில் மாஸ்ட்ரோவின் மாஸ்டர்பீஸ் என்றால் ‘சிறைப்பறவை’ (1987) படத்தில் வரும் ‘ஆனந்தம் பொங்கிடப் பொங்கிட’ என்னும் பாடல்தான். அற்புதமான கரஹரப்ரியா ராகம். பாடியவர்கள் யேசுதாஸ், சுனந்தா.

அதே ராகத்தில் அமைந்த இன்னொரு பாடல் ‘டிக் டிக் டிக்’ (1981) படத்தில் வரும் ‘பூ மலர்ந்திடும்’. யேசுதாஸ் ,ஜென்ஸி குரல்களில் வரும் இப்பாடல் மேற்கத்திய பாணியிலும் நமது செவ்வியல் இசைப்பாணியிலும் அமைந்துள்ளது.

‘நெற்றிக்கண்’ (1981) திரைப்படத்தில் வரும் ‘மாப்பிள்ளைக்கு மாமன் மனசு’ என்ற பாடலும் கரஹரப்ரியாதான். மலேஷியா வாசுதேவனும் பி.சுசீலாவும் பாடிய பாடல் அது. ‘ஊருவிட்டு ஊரு வந்து’ (1990) படத்தில் வரும் ‘தானா வந்த சந்தனமே’ எனும் பாடலும் இதே ராகத்தில் வித்தியாசமாகப் போடப்பட்ட பாடல்.

கரஹரப்ரியாவிலிருந்து பா வை மட்டும் எடுத்துவிட்டால் வருவது ஸ்ரீரஞ்சனி. அதிலும் ராஜா நம்மை நாட்டியமாட வைக்கும் ‘நாதம் எழுந்ததடி’ ( கோபுர வாசலிலே), ‘வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது’ (கிளிப்பேச்சுக் கேட்கவா). என பிரமாதமான மெட்டுக்கள் போட்டிருப்பார். அதே ஸ்ரீ ரஞ்சனியிடமிருந்து நி யையும் பிடுங்கிவிட்டால் ஆபோகி

என்னும் அருமையான இனிய ராகம் வரும். அதிலும் ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே’ (வைதேகி காத்திருந்தாள்), ‘காலை நேரப் பூங்குயில்’ (அம்மன் கோவில் கிழக்காலே ) என அட்டகாசமான பாடல்களைத் தந்திருக்கிறார்.

இந்த வாரக் கேள்வி : யேசுதாஸின் குரலில் தகதகிட என்னும் ஐந்து எண்ணிக்கையில் வரும் கண்ட நடை யில் அபூர்வமான ஒரு ராகத்தில் இசைஞானி அமைத்திருக்கிறார். கண்டுபிடிக்க அபிராமி உங்களுக்குத் துணைபுரியட்டும்!

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24821109.ece

Link to comment
Share on other sites

ராகயாத்திரை 21: ஆனந்த ராகம் கேட்கும் காலம்

 

 
ragajpg

சென்றவாரக் கேள்விக்கான விடை ‘குணா’ (1991) படத்தில் இடம்பெற்ற ‘பார்த்தவிழி பார்த்தபடி’ என்ற பாடல். பாவனி எனும் 41-வது மேளகர்த்தா ராகம். விவாதி ராகம் எனப்படும் ராகம் இது. அதாவது ‘ரி’ யே க வாக வரும் ஸ ரி1 ரி2 ம2 ப த2 நி2 ஸ என வரும். அப்படி ஒரு ராகத்தில் தகதகிட என ஒலிக்கும் செண்டை மேளத்துடன் தெய்வீகமான ஒரு பாடல். சரியாகப் பதிலளித்த நெய்வேலி முரளி, கொடுங்கையூர் பூபேஷ்குமார் ஆகியோருக்குப் பாராட்டுகள்.

அடுத்து நாம் பார்க்கப் போகும் மோகனம் எளிமையாக ஸ ரி2 க2 ப த2 ஸ என அமைந்த ஐந்து ஸ்வர ராகம். மோகனத்தில் ஒரு ராஜாங்கமே நடத்தியிருக்கிறார் ராஜா. எத்தனை வகையில், எத்தனை முறையில்!

 

‘ஏ பி சி நீ வாசி’ (ஒரு கைதியின் டைரி), ‘கண்மணியே காதல் என்பது’ (ஆறிலிருந்து அறுபதுவரை), ‘மீன் கொடி தேரில்’ (கரும்புவில்), ‘நிலவு தூங்கும் நேரம்’ (குங்குமச் சிமிழ்) என மெல்லிசையாக பல பாடல்கள், ‘இதயம் ஒரு கோவில்’ (இதயக் கோவில்), ‘கீதம் சங்கீதம்’ (கொக்கரக்கோ), ‘இரு பறவைகள் மலை முழுவதும்’ ( நிறம் மாறாத பூக்கள்), ‘வந்ததே குங்குமம்’ (கிழக்கு வாசல்) போன்ற கிளாசிக் பாடல்கள் என அள்ளி இறைத்திருப்பார். என்னளவில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், ‘அக்னி நட்சத்திரம்’ (1988) படத்தில் வரும் ‘நின்னுகோரி வர்ணம்’, ‘காதல் ஓவியம்’ (1982) படத்தில் வரும் ‘பூவில் வண்டு கூடும்’, ‘சலங்கை ஒலி’ (1983) படத்தில் வரும் ‘வான் போலே வண்ணம் கொண்டு’ ஆகிய மூன்று பாடல்களைச் சொல்லலாம்.

தங்கமாய் மின்னும் இசை

மோகனம்போல் ராகக் கடலில் மூழ்கி இசைஞானி ஏராளமான முத்துக்களை எடுத்த முக்கியமான இரண்டு ராகங்கள், கீரவாணி மற்றும் நட பைரவி. நல்ல சமையல்காரர், மசால் தோசை, ஊத்தப்பம், நெய்ரோஸ்ட் என ஒரே மாவைக் கொண்டு வெளுத்துக் கட்டுவதைப் போல் இரண்டு ராகங்களையும் கொண்டு, மேற்கத்திய பாணி, லேசான மெல்லிசை, நாட்டுப்புறப் பாணி என விதவிதமாகத் தந்திருக்கிறார்.

கீரவாணியில் ‘சின்ன மணிக் குயிலே’ (அம்மன் கோவில் கிழக்காலே), ‘என்னைத் தாலாட்ட வருவாளா’ (காதலுக்கு மரியாதை), ‘மலையோரம் வீசும் காத்து’ (பாடு நிலாவே), ‘மண்ணில் இந்தக் காதலன்றி’ (கேளடி கண்மணி) போன்றவை மெல்லிசை விருந்துகள். அதே கீரவாணியில் ‘நிலா அது வானத்து மேலே’ (நாயகன்), ‘போவோமா ஊர்கோலம்’ (சின்ன தம்பி), ‘இந்த மாமனோட மனசு’ (உத்தம ராசா), ‘நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு’ (பொன்னுமணி) போன்றவை துள்ளலான மெட்டுக்கள்.

மறக்கவே முடியாத கீரவாணி என்றால் ‘ஜானி’ (1980) திரைப்படத்தில் ஜானகி பாடும் ‘காற்றில் எந்தன் கீதம்’ எனும் பாடல். ஆலாபனை, பின்னணி இசை, பேய்மழை, பெருங்காற்று என மனத்தில் அடிக்கும் சூறாவளியை இசையில் கொண்டு வந்திருப்பார் இசைஞானி.

இன்னொரு மாணிக்கம் ‘தூறல் நின்னு போச்சு’ (1982) படத்தில் மலேசியா, ஜானகி குரல்களில் ஒலிக்கும் ‘தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி’ என்னும் பாடல். இழை இழையாக கீரவாணியை உருக்கி சங்கதிகளெல்லாம் நுணுக்கமாக வைத்துச் செய்த தங்கச் சங்கிலி. கீரவாணி என்றே ராகத்தின் பெயராலேயே ஆரம்பிக்கும் ‘பாடும் பறவைகள்’ (1985) என்னும் படப் பாடலும் பிரமாதமானது.

பாய்ந்து செல்லும் பாடல்

நடபைரவி மட்டுமென்ன குறைச்சலா? குறிப்பாக, இரவு நேரப் பாடல்களுக்கு ராஜா இந்த ராகத்தை நிறையப் பயன்படுத்தியுள்ளார். ‘என் இனிய பொன் நிலாவே’ (மூடுபனி), ‘பனி விழும் இரவு’ (மௌன ராகம்), ‘புது ரூட்டுல தான்’ (மீரா), ‘ஆசைய காத்துல’ (ஜானி), ‘தென்பாண்டிச் சீமையிலே’ (நாயகன்) என மென்மையான மெட்டுகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். ‘இளைய நிலா பொழிகிறதே’ (பயணங்கள் முடிவதில்லை), ‘மடை திறந்து’

(நிழல்கள்), ‘சங்கீத மேகம்’ (உதயகீதம்), ‘கண்ணன் வந்து பாடுகிறான்’ (ரெட்டைவால் குருவி) என மேற்கத்திய இசையில் மைனர் ஸ்கேல் என அழைக்கப்படும் நடபைரவியின் வேறொரு பரிமாணத்தைக் காட்டியிருப்பார். ‘நேரமிது நேரமிது’ (ரிஷி மூலம்), ‘விழியிலே மலர்ந்தது’ (புவனா ஒரு கேள்விக்குறி) போன்ற தொடக்க கால மெல்லிசை மெட்டுகளும் இந்த ராகத்தில் அமைந்த இனிமையான பாடல்கள்தாம்.

மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ‘நாடோடித் தென்றல்’ (1992) படத்தில் வரும் ‘மணியே மணிக்குயிலே’ என்னும் பாடல். பிரமாதமான இசைக்கோவையுடன் தொய்வே இல்லாத காட்டாறு போல் பாய்ந்து செல்லும் நடபைரவிப் பாடல் அது.

கீரவாணியின் அக்கா சிம்மேந்திர மத்தியமம் என்னும் ராகம். கீரவாணியிலிருந்த ம வை மட்டும் மாற்றினால் வரும் ராகம். பேருக்கு ஏற்றாற்போல் கம்பீரமான இந்த ராகத்திலும் பல அருமையான பாடல்களைத் தந்திருக்கிறார் இசைஞானி. ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் (1981) வரும் ‘ஆனந்த ராகம் கேட்கும் காலம்‘ உமா ரமணன் பாடிய பாடல்களில் முதலிடம் பிடிக்கக்கூடியது. உச்சஸ்தாயியில் தொடங்கி வயலின், ஷெனாய் இசையுடன் கலந்து ஆனந்தமாக ஒலிக்கும் ராகமாகும்.

‘ஒருவர் வாழும் ஆலயம்’ (1988) படத்தில் தாஸேட்டனின் கம்பீரக்குரலில் ஒலிக்கும் ‘நீ பௌர்ணமி’ என்னும் பாடலும் சிம்மம்போல் கம்பீரமான சிம்மேந்திர மத்தியமம்தான். இந்த ராகத்தில் இன்னொரு சேதாரமில்லாத செய்நேர்த்தி நிறைந்த பாடல் ‘கோபுர வாசலிலே’ (1991) திரைப்படத்தில் வரும் ‘தாலாட்டும் பூங்காற்று நானல்லவா’ என்னும் ஜானகி குரலில் ஒலிக்கும் பாடல் . பின்னணியில் ஒலிக்கும் இசையமைப்பில் உச்சம்தொட்ட பாடல்களில் ஒன்று .

பாலுமகேந்திராவின் மலையாளப் படம் ஒன்றில் அசத்தலான ஒரு பாடல் போட்டிருப்பார் பாருங்கள். அதே மெட்டில் வேறு பாடல்கள் வந்தாலும் காப்பி அடிக்க முடியாத ராகம் அது. அது எது?

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24882669.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ராகயாத்திரை 22: பொன்வானம் பன்னீர் தூவுது!

 

 
ragamjpg

சில படங்கள் நினைவுகளை விட்டு நீங்காதவை. கேரள சினிமா ரசிகர்களுக்கு அப்படியொரு படம், ‘ஓளங்கள்’ (1982). பாலு மகேந்திரா இயக்கிய மலையாளப் படம். அந்தப் படத்தில் ஓர் அற்புதமான பாடலை இசைஞானி அமைத்திருப்பார். காபி ராகத்தில். ‘தும்பி வா தும்பக்குடத்தின்’ என்ற பாடல். ஜானகியின் குரலில் இழைந்தோடும் அச்சு அசலான கும்பகோணம் டிகிரி காபி ராகம் அது.

அதே ஆண்டு வெளியான ‘ஆட்டோ ராஜா’ தமிழ்ப் படத்தில் ‘சங்கத்தில் பாடாத கவிதை’ என அழகான வரிகளில் ஒலித்த மெட்டு. பின்னர் 27 ஆண்டுகள் கழித்து 2009-ல் வெளிவந்த ‘பா’ இந்திப் படத்திலும் இதே மெட்டை இடம்பெறச் செய்தார் ராஜா. சரியாகப் பதிலளித்த திருவான்மியூர் சாந்தி பரமேஸ்வரன் மற்றும் சென்னை ஜோஸ்வா ஆகியோருக்குப் பாராட்டுகள்.

 

காபி ராகம் கொஞ்சம் எடக்கு மடக்கானது ஸ ரி2 ம1 ப நி2 ஸா, ஸ நி1 த2 நி1 ப ம1 ரி2 க1 ரி2 ஸ என ஆரோகண அவரோகணங்களுடன் வரும். சில இடங்களில்  க2-வும் வரும். இதில் இளையராஜா சில மறக்க முடியாத மெட்டுகளைத் தந்திருப்பார். ‘ப்ரியா’ (1978) படத்தில் வரும் ‘ஹே பாடல் ஒன்று’ பாடல் சுவையான ஃபில்டர் காபி.

‘ஆவாரம்பூ’ (1992) என்ற படத்தில் வரும்  ‘சாமிகிட்ட சொல்லி வச்சு’ எனும் பாட்டு கொஞ்சம் எக்ஸ்ட்ரா சர்க்கரை போட்ட ஸ்ட்ராங்கான காபி. இன்னொரு கலக்கலான காபி ராகம், ‘சிவா’ (1989) படத்தில் வரும் ‘அட மாப்பிள சும்மா மொறைக்காதே’ என வரும் பாடல். கிண்டல் செய்யும் பாடலுக்கு அந்த ராகத்தைச் சரளமாகப் பயன்படுத்தியிருப்பார். ‘சிந்து பைரவி’யில்(1985)  டப்பாங்குத்தாக  ‘தண்ணித்தொட்டி தேடிவந்த’ என காபியில் ஒரு காக்டெயில் பாடலைக் கொடுத்திருப்பார்.

மெய்மறக்கச் செய்யும் கௌரி மனோகரி

காபிக்கு நெருக்கமான ராகம் ‘கௌரி மனோகரி’. 23-வது மேளகர்த்தா ராகம். இது ஸ ரி2 க1 ம1 ப த2 நி2 என ஸ்வரங்களால் அமைந்தது.   ‘திருவிளையாடல்’ (1965) படத்தில் கே.வி. மகாதேவன் அமைத்த 'பாட்டும் நானே’ எனும் புகழ்பெற்ற பாடல் இந்த ராகத்தில் சிகரம் போன்றது. இந்த ராகத்திலும் ராஜா பல மென்மையான பாடல்களை அமைத்திருக்கிறார்.

‘கிளிப்பேச்சு கேட்க வா’ படத்தில் வரும் ‘அன்பே வா அருகிலே’, தர்மத்தின் தலைவன் படத்தில் வரும் ‘முத்தமிழ்க் கவியே வருக’ ஆகியன அசத்தலான எடுத்துக்காட்டுகள். ‘வெள்ளை ரோஜா’ படத்தில் ‘சோலைப் பூவில் மாலைத் தென்றல்’ இன்னொரு சுகமான பாடல். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொன்று, ‘நிழல்கள்’ படத்தில் ‘தூரத்தில் நான் கண்ட’ என ஜானகியின் குரலில் ஒலிக்கும் பாடல் இந்த ராகத்தில் ஒரு கிளாசிக். இந்துஸ்தானி பாணியில் இந்த ராகத்தை பட்தீப் என்பார்கள்.

அதே ஜாடையில் ‘கண்ணா வருவாயா’ என ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் வரும் பாடலும் மெய்மறக்கச் செய்யும். இந்த ராகத்தில் இன்னும் இரண்டு பாடல்களைச் சொல்லாவிட்டால் எனக்கு மோட்சம் கிட்டாது. ‘தூறல் நின்னு போச்சு’ (1982) படத்தில் ‘பூபாளம் இசைக்கும்’ என யேசுதாஸ், உமா ரமணன் குரல்களில் ஒலிக்கும் பாடலில் இந்த ராகத்தை மெல்லிசை மாலையாகத் தந்திருப்பார்.

அதேபோல் ‘இன்று நீ நாளை நான்’ (1983) படத்தில் வரும் ‘பொன்வானம் பன்னீர் தூவுது’ என்னும் பாடல் இந்த ராகத்துக்கு ராஜாவின் சிறந்த அர்ப்பணம். தகிட தகதிமி என வரும் ஏழு எண்ணிக்கைகள் கொண்ட தாளத்தில் இந்தப் பாடல் அமைந்திருக்கும்.

பஸ் டிக்கெட் முயற்சி

கௌரி மனோகரியின் ம-வை மட்டும் மாற்றி ம2 வாக ஆக்கினால் வருவது தர்மவதி. அந்த ராகத்திலும் இனிய சில பாடல்களை மறக்க முடியாதபடி அமைத்திருக்கிறார் ராஜா. ‘காயத்ரி’யில் (1977) சசிரேகாவின் குரலில் ‘வாழ்வே மாயமா’ என ஒலிக்கும் பாடல் இந்த ராகத்தில் போடப்பட்டதே.

‘என்னுள்ளே ஏதோ’ என ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’யில் (1979)  வாணி ஜெயராம் மயக்கும் குரலில் பாடிய பாடல். அதே போல் ‘மீண்டும் மீண்டும் வா’ என விக்ரமில் (1986) ஒலிக்கும் பாடலும் இந்த ராகத்தின் இன்னொரு பரிமாணம். இந்த ராகத்தில் ஆகச்சிறந்த பாடல் என்றால் ‘உனக்காகவே வாழ்கிறேன்’ (1986) படத்தில் வரும் ‘இளஞ்சோலை பூத்ததா’ என்ற பாடல்தான் எஸ்.பி.பியின் குரலில் ஒரு மினி கச்சேரியாக அமைந்திருக்கும்.

அண்மைக்காலத்தில்  ‘வானவில்லே வானவில்லே’ என ‘ரமணா’ (2002) படத்தில் இந்த ராகத்தில் கலக்கியிருப்பார்.

பழங்குடிகள், பூர்வ குடிகள் பாடிய பாடல்களே பாணர்கள் காலத்தில் பண்களாக உருவெடுத்தன. பின்னர் அவற்றுக்கு மேலும் இலக்கணங்கள் வகுக்கப்பட்டு ராகங்களாக இசைக் கலைஞர்களால் பாடப்பட்டன. தமிழிசை மூவர், கர்னாடக சங்கீத மூவர் எனப் பக்தி மார்க்கத்தின் வழியாக ராகங்கள் பயணப்பட்டன.

திரைப்படம் வந்த புதிதில் அந்தச் செவ்வியல் ராகங்களின் வழியிலேயே பாடல்களும் அமைக்கப் பெற்றன. பாபநாசம் சிவன் போன்றோர் இக்காலத்தின் முன்னோடி. பின்னர் ஜி.ராமநாதன், எம்.வி.வெங்கட்ராமன், கே.வி.மகாதேவன் போன்றோர் ராகங்களைக் கொஞ்சம் நெகிழ்ச்சியான மெட்டுகளில் தந்தனர்.

மெல்லிசை மன்னர்களோ ராகங்களை மேலும் தளர்த்தி மெல்லிசையாக விருந்தளித்தனர். அந்த வரிசையில் நமது இசைஞானி. அவர் தனது பாடல்களில் பயன்படுத்திய ராகங்களை பற்றிச் சுருக்கமாக எழுதுவது என்பது மகாபாரதக் கதையை பஸ் டிக்கெட்டின் பின்னால் எழுதுவது போன்றதாகும். நான் அதைத்தான் கடந்தவாரங்களில் செய்து வந்திருக்கிறேன்.

ராஜாவின் தனித்துவம்

இசைக்கு இலக்கணங்களைப் படைத்தது அதனை மேலும் செழுமைப்படுத்த வேண்டும். இனிமையின்றி வெறும் இலக்கண சுத்தமான இசையாக மட்டும் இருந்தால் அதில் ஜீவன் இருக்காது. இந்த இடத்தில்தான் இளையராஜாவின் மேதைமைத் தனம் புலப்படுகிறது. ஒரு பாடலின் மெட்டு, பின்னணி இசை, இடையிலே வரும் இசைத் துணுக்குக்கள் என எல்லாவற்றையும் அப்பாடல் அமைந்த ராகத்திலேயே பெரும்பாலும் அமைத்திருப்பார்.

அவ்வளவு இலக்கணச் சுத்தமாக இருந்தாலும் பாடலின் இனிமை எங்குமே சிதைந்திருக்காது. தொடரில் சொல்லாத ராகங்களில் உதாரணம் சொல்ல வேண்டுமானால் ‘ரீதி கௌளை’ என்ற ராகத்தை இலக்கணச் சுத்தமாக ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ (கவிக்குயில்) என அமைத்துப் பாலமுரளி கிருஷ்ணாவையே பாடவைத்தது போல்.

ragam%202jpg

டாக்டர் ஆர்.ராமானுஜம்

சக்கரவாகம் என்னும் ராகத்தின் ஜாடை மாறாமல் ‘நீ பாதி நான் பாதி’ (கேளடி கண்மணி), மலயமாருதம் என்னும் ராகத்தில் ‘கண்மணி நீவரக் காத்திருந்தேன்’ (தென்றலே என்னைத் தொடு), ஹம்சாநந்தியில் ‘ராத்திரியில் பூத்திருக்கும்’ (தங்க மகன்) என ராகங்களின் நுணுக்கம் தெரியாதவர்கள் கூட ரசிக்க வைக்கும் வகையில் அமைத்திருப்பார். செவ்வியல் பாணியிலும் நாட்டுப்புற பாணியிலும் மேற்கத்திய இசையாகவும் மெல்லிசையாகவும் அதே ராகங்களை வேறு வேறு உருவங்களில் உலவிடச் செய்தவர்.

‘வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும், இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்’ என வாலி சொன்னது போல் இசை என்னும் மாபெரும் சமுத்திரத்தில் கலக்கின்ற ராக நதிகளில் யாத்திரை சென்று கொஞ்சம் கொஞ்சம் அள்ளி அருந்தி மலர்ந்தோம்.

‘இசையின் பயனே இறைவன் தானே’ என்கிறது அப்பாடல். இசையே இறைதானே! தொடர்ந்து பெரும் வரவேற்பு கொடுத்துப் பங்கு பெற்ற வாசகர்களுக்கும் நன்றி. ஒரு இடைவெளிக்குப்பின் இசையின்பால் மீண்டும் இணைவோம்.

(நிறைந்தது)

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24996807.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மேலும் தொடருங்கள் வாசிக்க காத்திருக்கிறோம். நிலாமதி அக்கா
    • "இப்பொது Neanderthals (Homo neanderthalensis) இன் மரபணு இப்போதுள்ள மனித வர்க்கத்தில் 2 - 2.5% இருக்கிறது என்பது பின்னைய முடிவு" ஆம் , அது சரி , ஏனென்றால்,     Though Modern humans and Neanderthals lived in separate regions evolving along separate evolutionary lineages for hundreds of thousands of years, Neanderthals are still our closest currently known relative. Because of that evolutionary proximity, despite being recognized as different species, it is still possible that members of our two species exchanged genetic information. This exchange of DNA is called introgression, or interbreeding. Neanderthal-Homo sapiens interbreeding Neanderthals are known to contribute up to 1-4% of the genomes of non-African modern humans, depending on what region of the word your ancestors come from, and modern humans who lived about 40,000 years ago have been found to have up to 6-9% Neanderthal DNA (Fu et al., 2015).  ............................................................... "சிங்கமும், மனிதனும் species அடிப்படை யில் மிக தொலைவு என்பதால் சாத்திய கூறுகள் மிக, மிக  குறைவு என்பதே இப்பொது நம்ப கூடியது" ஆம், அது முற்றிலும் சரியான வாதம்  ................................................................... "மகாவம்சம்  சிங்கம் என்ற சொல்லை மிருகத்தை குறிக்க பயன்படுத்தியதா அல்லது அந்த தன்மை மனிதன் (போன்ற) குறிக்க பயன்படுத்தியதா. " கட்டாயம் சிங்கத்தைக் [மிருகத்தைக்] குறிக்கத்தான் பயன்படுத்தப் பட்டுள்ளது தெளிவாக அங்கு தெரிகிறது  ஆறாம் அத்தியாயம் / விஜயன் வருகையில் [CHAPTEE VI / THE COMING OF VIJAYA ]  "மற்றவர்கள் அங்கும் இங்குமாக ஓடி விட்டனர். ஆனல் அவள் [விஜயனின் தாய்], சிங்கம் வந்த அதே பாதையில் ஓடினாள் .... தூரத்தில் அவளைப் பார்த்தது. உடனே காமவெறி சிங்கத்தைப் பற்றிக்கொண்டது. வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது ....  அவளைத் தனது முதுகின் மீது சுமந்து கொண்டு வேகமாகத் தனது குகையைச் சென்றடைந்தது. அங்கு சிங்கம் அவளுடன் கூடியது. இந்தக் கூடலின் விளவாக ராஜகுமாரி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒன்று ஆண் [சீகபாகு / சிங்கபாகு /Sihabahu / Sinhabahu] ; ஒன்று பெண் [சிங்கசீவலி / சீகவலி / Sinhasivali or Sihasivali]. [the other folk fled this way and that, but she fled along the way by which the lion had come ...  love (for her) laid hold on him, and he came towards her with waving tail and ears laid back ...  took her  upon his back and bore her with all speed to his cave, and there he was united with her, and from this union with him the princess in time bore twin-children, a son and a daughter.]   "வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது" [he came towards her with waving tail and ears laid back]   என்ற வரி தெளிவாக மிருகம் என்று சொல்லுகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை  ..................................................................... மகாவம்சம் அத்தக்கதா [Aṭṭhakathā - Buddhist Commentarial Literature / The word aṭṭhakathā is a general term, meaning exposition of the sense (aṭṭha = attha, Skt. artha), explanation, commentary.] Buddhist monks of Mahavihara, maintained this historical record of the Sri Lankan history starting from 3rd century B.C., some what similar to a modern day diary. These records were combined and compiled into a single document in the 5th century CE by Buddhist monk Mahathera Mahanama. There is evidence as per Wilhelm Geiger, there was another compilation prior to this known as “Mahavamsa Atthakatha” and Mahathera Mahanama relied on this text. Earlier document known as “Dipavamsa” also come down to us which is much simpler and contain less information than Mahavamsa, probably compiled using previously mentioned “Mahavamsa Atthakatha”?   ........................................... "சிங்களத்தில் இருந்த அத்தக்கதாவை  புத்தகோச பாளியில் எழுதிவிட்டு, சிங்கள மூலத்தை எரித்து விட்டததாகவும், ஏனெனில் சிங்களம் தெய்வ மொழி இல்லை என்றும் கருதப்படுகிறது' It is observed two groups of people in the 5th century A.D. – Hindus, speaking Tamil and the converts (Buddhists) speaking the new language (Sinhala).  There is a popular here say, emerged from the Later Burmese Biographical Text Buddhaghosuppatti ( perhaps as early as the 15th century) that Buddhaghosa Thera burnt ancient Sihala Atthakathas after he translated them into  Pali, introducing the Mula Bhasha [first language, primary language; epithet for Pali, the liturgical language of Theravada Buddhism. /  பாளி மொழியை வழிபாட்டு அல்லது தெய்வீக மொழியாக தேரவாத பௌத்தத்தில் கருதப்படுகிறது]  Please note that The Buddhaghosuppatti, a later biographical text, is generally regarded by Western scholars as being legend rather than history. So the text is not very reliable. Also It is not stated in Culavamsa [The Cūḷavaṃsa is a continuation of the Mahavamsa. But unlike the Mahavamsa it was written by different authors at different periods. / இதுவும்  பாளி மொழியில் தான் எழுதப்பட்டது / கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது] that he burned the scriptures , Though it contains the main account of Buddhaghosa’s life. ஆகவே உண்மையில் அவர் எரித்தாரா என்பதும் ஒரு கேள்விக்குறியே? Tradition regarding the Aṭṭhakathā [Buddhist Commentarial Literature by L. R. Goonesekere, BPS / Buddhist Publication Society, Kandy • Sri Lanka] The Ceylonese tradition regarding the aṭṭhakathā is that they were composed (in Pali, it is to be presumed) at the First Council (Saṅgīti) and rehearsed at the two following Councils. They were introduced to Ceylon by Mahinda who also, it is said, translated them into Sinhala. The earliest record of this tradition is contained in the introduction in Buddhaghosa’s commentaries. [“For explaining the meaning, the Commentary was originally recited by the 500 Masters (i.e. the Arahats assembled at the First Council) and was later rehearsed (at the two following Councils). Then it was brought to the island of the Sinhalese by the great Mahinda, the master (of Dhamma), and was rendered into the Sinhala language for the benefit of the island dwellers.”] It recurs in the accounts of Buddhaghosa contained in the Mahāvaṃsa  and the Saddhammasaṅgaha.  According to the Dīpavaṃsa  and the Mahāvaṃsa,  the commentaries (the Sinhala version, it is to be inferred) were put into writing in Ceylon along with the Pali canon in the reign of Vaṭṭagāmaṇī Abhaya in the first century B. C. The Mahāvaṃsa,  and Saddhammasaṅgaha  further state that, at the time of Buddhaghosa, the aṭṭhakathā (the original Pali) had disappeared in India. It is not known how far this statement was correct, but the original Pali aṭṭhakathā were not recorded in writing and no trace of them exists today. As will be seen, the Sinhala aṭṭhakathā put into writing in Vaṭṭagāmaṇī Abhaya’s time have also disappeared.
    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.