Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்டெர்லைட் போராட்டம்; துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு; 17 வயது மாணவியும் பலியான பரிதாபம்

Featured Replies

  • தொடங்கியவர்

போலீஸ் பிடித்துச்சென்ற 122 இளைஞர்கள் எங்கே? - அதிர்ச்சியில் தூத்துக்குடி பெற்றோர்

 
 

தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாள்களாக நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சுமார் 122 இளைஞர்களைக் காணவில்லை என அவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி

 

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு விளைவிக்கக்கூடிய ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என 100 நாள்களுக்கும் மேலாக அம்மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 22-ம் தேதி  ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் 100-வது நாளை எட்டியதால் அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அடையாள போராட்டம் நடத்தப்படும் என முன்னதாக போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று முன்தினம் காலை இருபதாயிரம் போராட்டக்காரர்கள் ஒன்று கூடி தடையை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். போராட்டம் நடத்தியவர்களை இரும்புக் கேடயங்களைக்கொண்டு போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது போலீஸ்காரர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு மோதலாக மாறி வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டது, கல் வீச்சு சம்பவங்களும் நிகழ்ந்தது. அப்போது போலீஸார் நடத்திய தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று நாள்களாகியும் இதுவரை அங்கு  இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.

police_12416.jpg

 

இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம், 100-வது நாள் போராட்டம் நடந்த அன்று அதாவது, 22-ம் தேதி துப்பாக்கிச் சூடு நடந்த பிறகு சுமார் 200 இளைஞர்களைக் காணவில்லை என அவர்களின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். அவர்களை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தனர். இந்நிலையில், மாயமான 200 பேரில் 78 பேரை மட்டும் தூத்துக்குடி போலீஸார், அம்மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க அனுமதி கேட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் எங்கு உள்ளனர், என்ன நிலைமையில் உள்ளனர், காவல்துறையினர் அவர்களை ஏதாவது செய்தார்களா? என்று அவர்களின் பெற்றோர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/125839-tuticorin-protest-122-youngsters-were-missing.html

  • Replies 82
  • Views 10.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

`தற்காப்புக்காகவே தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு' - 3 நாள்களுக்குப் பிறகு விளக்கம் அளித்த முதல்வர் பழனிசாமி

 
 

``தற்காப்புக்காகவே தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது'' என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். 

பழனிசாமி

 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தால் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு தமிழகத்தை உலுக்கியுள்ளது. கடந்த இரண்டு நாள்களாக தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து அங்கு பதற்றமான நிலைமை நீடித்து வருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்டவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், சம்பவம் குறித்து விசாரிக்க ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையம் அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி அளித்தது யார்?  துப்பாக்கிச் சூட்டில் காவல்துறையால் மீறப்பட்டுள்ள விதிகள் குறித்து தொடர்ந்து பல்வேறு கேள்விகள் அரசியல் கட்சிகளாலும், பொதுமக்களாலும் எழுப்பப்பட்டு வந்தன. இதற்கு தமிழக அரசு தரப்பில் இருந்து பதில் ஏதும் வரவில்லை. இந்தச் சூழ்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நேற்று ஆளுநரை சந்தித்து விளக்கம் அளித்த நிலையில், தற்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது, ``இன்று காலை சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், நான், துணை முதல்வர், ஸ்டாலின் மற்றும் கே.ஆர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றோம். அப்போது பேசிக்கொண்டிருக்கும்போதே ஸ்டாலின் வெளியேறிவிட்டார். பின்னர் வெளியே வந்து முதல்வரை சந்திக்க முடியவில்லை எனக் கூறுகிறார். ஸ்டாலின் வேண்டுமென்றே அரசியல் நாடகத்தை நடத்துகிறார். அரசியல் நாடகம் அரங்கேற்றவே எனது அறை முன் போராட்டம் நடத்தியுள்ளார். ஸ்டாலினைப் பார்க்க நான் மறுக்கவில்லை. கடந்த 2013-ம் ஆண்டே ஜெயலலிதா ஸ்டெர்லைட் ஆலையை மூடினார். 

இதன்பின் வழக்குப் போட்டு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் இயங்கி வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு ஜெயலலிதா எடுத்த முயற்சியை தொடர்ந்து இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இன்றுகூட ஸ்டெர்லைட் ஆலையின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆலைக்கு எதிராக வழக்குகளை சந்தித்து வருகிறோம். திட்டமிட்டு வேண்டுமென்றே எதிர்க்கட்சிகளும், சில அமைப்புகளும் அப்பாவி மக்களைத் தூண்டிவிட்டு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதனால்தான் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்பகுதி மக்களின் கோரிக்கையை அரசு சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து வருகிறது.

பழனிசாமி 

 

உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழப்பால் நாம் மன வேதனை அடைந்துள்ளோம். அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என சில சமூக விரோதிகள் ஊடுருவி மக்களைப் போராட வைத்துள்ளனர். அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, 144 தடை உத்தரவு போடப்பட்டது. மக்கள் முதலில் சட்டத்தை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்கக் கூடாது. மோசமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் திட்டமிட்டு இந்தச் சம்பவம் நடைபெறவில்லை. தற்காப்புக்காகவே இந்தச் சம்பவம் நடைபெற்றது."  என்றார்.

https://www.vikatan.com/news/tamilnadu/125842-gun-shoot-in-thoothukudi-for-self-defense-says-cm-palanichamy.html

  • தொடங்கியவர்

'உத்தரவை மாற்ற முடியாது'- தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம் #SterliteProtest

''தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்த வேண்டும்'' என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடுசெய்துள்ளது. 

death_1_14112.jpg

 

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரத்தில், இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். இது, இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்தியாவை உலுக்கியிருக்கும் இந்தச் சம்பவத்துக்குk காரணமானவர்கள்மீது நடவடிக்கை  எடுக்கக்கோரி, மூன்று வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘உடற்கூறு ஆய்வு முடிந்தவுடன், இறந்தவர்களின் உடல்களை மறு உத்தரவு வரும்வரை பதப்படுத்தி வைக்க வேண்டும். பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன், அதன் தன்மையைப் பொறுத்து மறு உடற்கூறு ஆய்வு தேவை குறித்து முடிவுசெய்யப்படும். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி வழங்க வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும்" என உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை மே 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

இந்நிலையில்,  இறந்தவர்கள் உடலைப் பதப்படுத்திவைக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்ற அமர்வில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதில், 'இறந்தவர்களின் உடல்களைத் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி அவர்களின் உறவினர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால்  இறந்தவர்கள் உடலைப் பதப்படுத்திவைக்க வேண்டும் என்ற உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்'' என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு, தற்போது விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட முடியாது. துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்த வேண்டும் என்ற உத்தரவை மாற்ற முடியாது" என்று தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/125848-the-tamil-nadu-government-appealed-to-the-madras-high-court-against-the-order-of-the-dead-body-to-be-preserved.html

  • தொடங்கியவர்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஜனநாயக அரசா? பாசிச அரசா? மவுனம் கலையுங்கள் மோடி- சத்ருகன் சின்ஹா காட்டம்

 

 
modi-shatru

பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் சத்ருகன் சின்ஹா : கோப்புப்படம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 13 பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது, இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயக ஆட்சிதான் நடக்கிறதா? அல்லது பாசிச ஆட்சி நடக்கிறதா? பதில் பேசுங்கள் மோடி என்று பாஜக மூத்த தலைவர் சத்ருகன் சின்ஹா காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால், சுற்றுச்சூழல் கேடு, மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது, ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனக் கோரி கடந்த 100 நாட்களாக ஆலையை அருகே வசிக்கும் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

 
 

கடந்த 22-ம்தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தின் போது மக்களுக்கும், போலீஸாருக்கும் ஏற்பட்ட மோதலில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகினர். இந்தச் சம்பவத்துக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன, பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதற்கு பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவரும் நடிகருமான சத்ருகன் சின்ஹா கடுமையாகக் கண்டனம் தெரிவித்து, ட்வீட் செய்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

''தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களை போலீஸார் இரக்கமின்றி சுட்டுக்கொன்ற சம்பவம் வேதனையளிக்கிறது. இது வெட்கப்பட வேண்டிய சம்பவம். கண்டிக்கப்பட வேண்டியது. காட்டுமிராண்டித்தனமானது என பாரதத்தாய் உணர்கிறாள். நாம் ஜனநாயக ஆட்சியில்தான் வாழ்கிறோமா? அல்லது பாசிச ஆட்சியில் வாழ்கிறோமா?.

எந்தவிதமான எச்சரிக்கையும் விடுக்காமல் தானியங்கி துப்பாக்கிமூலம் அமைதியாகப் போராடிய ஏழை அப்பாவி மக்கள் மீது போலீஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மக்களைக் கொல்லும் இந்தப் படுகொலைக்கு யார் உத்தரவிட்டது?. இந்திய வரலாற்றில் இது கறுப்பு நாள்.

நல்ல ஆரோக்கியமான சுற்றுப்புறச்சூழலைத்தானே அந்தப் பகுதி மக்கள் கேட்டார்கள், இது மிகப்பெரிய குற்றமா? ஜனநாயகத்தில் தங்களின் குரலை உயர்த்திப் பேச அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு தீவிரவாதிகளுக்கு இணையாக சுட்டுக்கொலை செய்தால் மக்கள் எங்கு செல்வார்கள்?

இந்தப் படுகொலைக்கு நீதி கண்டிப்பாக வழங்க வேண்டும். அப்பாவி மக்களைக் கொலை செய்தவர்கள், காரணமானவர்கள் கொடூரமாகத் தண்டிக்கப்பட வேண்டும். நான் இந்த விவகாரத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை ஆதரிக்கிறேன். தமிழகத்தில் ஆளும் அரசிடம் இருந்தும், நிர்வாகத்திடம் இருந்து ஏராளமான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

பிரதமர் மோடி நீங்கள் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. காஷ்மீர் கதுவாவில் சிறுமி பலாத்காரத்தின் போதும் பேசவில்லை, பெட்ரோல் விலை உயர்வு குறித்தும் வாய் திறக்கவில்லை. தூத்துக்குடியில் மக்கள் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டபோதும் நீங்கள் மவுனம் கலைக்கவில்லை.

தானியங்கி துப்பாக்கி மூலம் அப்பாவி மக்களைக் கொல்ல யார் உத்தரவிட்டது. காஷ்மீர் பற்றி எரிகிறது, நீங்கள் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டீர்கள். இப்போது தமிழ்நாடு கொந்தளிக்கிறது. ஆர்எஸ்எஸ் தொண்டரின் ஜோடனையான, தோரணைப் பேச்சை இப்போது கேட்க முடியுமா?''

இவ்வாறு சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/india/article23978879.ece?homepage=true

  • தொடங்கியவர்

தூத்துக்குடி தற்போது எப்படி இருக்கிறது? - நேரடி கள நிலவரம். #SterliteProtest

 
Chennai: 

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடந்து இரண்டு நாள்கள் கடந்த நிலையில், இன்னும் பதற்றமான சூழல் மாறவில்லை. துப்பாக்கிக் குண்டுகளின் சத்தம் அந்த மக்களின் செவிகளைவிட்டு அகல இன்னும் சில காலமாகும். தூத்துக்குடி மக்களுக்கு தன் வாழ்நாளில் இதுபோன்ற ஒரு சோதனைக்காலம் இனி வரவே கூடாது. இன்று 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கும் நிலையில், மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். 'கமாண்டோ படைகள் இறக்கப்பட்டுள்ளன, தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது' எனப் பல்வேறு செய்திகள் வருகின்றன. அதன் உண்மைத்தன்மை குறித்தும், தற்போதைய கள நிலவரம் குறித்தும் போராட்டக்களத்தில் உள்ள விகடன் நிருபர்கள் தமிழ்ப்பிரபா, கலைச்செல்வன் ஆகியோர் அளித்த தகவல்கள்...

தூத்துக்குடி

 

"துப்பாக்கிச்சூடு நடந்த தூத்துக்குடியில், நேரடி ஒளிபரப்புக்குத் தேவையான செய்தி சேனல்களின் OB வாகனங்கள் இரண்டு நாள்களாக அனுமதிக்கப்படவில்லை. இன்றுதான் இந்த வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. 100 நாள்களாகப் போராடும் மக்கள் பலரும், வேலைகளுக்குச் செல்லாமல் போராடி வருகின்றனர். 

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மருந்துக் கடைகளைத் தவிர வேறு எந்தக் கடைகளுமே திறக்கப்படவில்லை. இதனால் அந்தப் பகுதி மக்கள் பலரும் உணவுக்கு என்ன செய்வது எனத் தெரியாத நிலையில் உள்ளனர். 

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற அன்று கைதுசெய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர், என்ன ஆனார்கள்... எங்கு இருக்கிறார்கள் என்பது அவர்களின் உறவினர்களுக்குத் தெரியப்படுத்தவில்லை. இன்று 65 பேரை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினர். அவர்களை நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுவித்திருக்கிறது. அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு மருந்துகள் உள்ளிட்டவை முறையாகக் கிடைக்கின்றன.  

தூத்துக்குடி, அண்ணாநகர் பகுதியில் கமாண்டோ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதிக அளவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களைப்  பதப்படுத்துவதற்காக பாளையங்கோட்டைக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். தூத்துக்குடி அரசுப் பொது மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை காரணமாகவே பாளையங்கோட்டைக்கு எடுத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உயிரிழந்தவரின் உறவினர்கள்,  '12 பேரின் உடல்களைப் பதப்படுத்த இடமில்லை எனச் சொல்வதை நம்ப முடியவில்லை' என்றனர். 

தூத்துக்குடி

நிருபர்கள் இருவரும், சகாயபுரம் பகுதியில் உள்ள மக்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அவர்கள் அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடைபெற்றபோது குண்டடிபட்டு விழுந்து கிடந்தவர்களை, அங்கு இருந்த பொதுமக்கள் தூக்கிச் சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் தடியடி அதிகரிக்கவே தூக்கிச் சுமந்தவர்களை அருகில் இருந்த இடங்களில் இறக்கிவிட்டு அவர்கள் தப்பி ஓடியுள்ளனர். 

இப்படி பல குழப்பங்களும் பதற்றங்களும் நிறைந்தே இருக்கிறது தற்போதைய தூத்துக்குடி நகரம். 

"பத்திரிகை நிருபரா?''  எனக் கேட்டு தனியாக அழைத்துப் பேசியுள்ளார், போராட்டத்தைக் கட்டுக்குக்கொண்டு வர அனுப்பட்ட காவலர் ஒருவர். பெயர் குறிப்பிட விரும்பாத அந்தக் காவலர் உருக்கமாகச் சிலவற்றைப் பகிர்ந்தார்.  "துப்பாக்கிச்சூடு நடந்தது நிறைய போலீஸுகே அதிர்ச்சியாத்தான் இருக்கு. இப்படி நடக்கும்னு எங்களுக்கே தெரியாது. இவ்வளவு பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானது ரொம்ப மோசமான ஒரு  நிகழ்வுதான்" என்று பதைபதைப்புடன் கூறியுள்ளார்.

 

இவ்வளவு துயரங்களைத் தாங்கிவரும் தூத்துக்குடி மக்களுக்கு நிம்மதி கிடைக்க வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.

https://www.vikatan.com/news/tamilnadu/125876-what-is-happening-in-thoothukudi-a-live-report.html

  • தொடங்கியவர்

ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நடத்த விரும்புகிறோம்: அனில் அகர்வால் பேட்டி

 

 
anil-agarwal

வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால்   -  படம் உதவி: ட்விட்டர்

ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து நடத்த விரும்புகிறோம். நீதிமன்றம், தமிழக அரசாங்கம் ஆகியவற்றின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு தொழில் நடத்துவோம் என ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளரும், வேதாந்தா குழுமத்தின் தலைவருமான அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால், சுற்றுச்சூழல் கேடு, மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது, ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனக் கோரி கடந்த 100 நாட்களாக ஆலையை அருகே வசிக்கும் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர் கடந்த 22-ம்தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தின் போது மக்களுக்கும், போலீஸாருக்கும் ஏற்பட்ட மோதலில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகினர். இந்தச் சம்பவத்துக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன, பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 
 

இந்நிலையில், இது குறித்து வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில், 11 பேர் போலீஸாரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் துரதிருஷ்டவசமானது, எதிர்பாராதவிதமாக நடந்துவிட்டது. இந்தச் சம்பவத்தை கேள்விட்டு மிகுந்த மனவருத்தமும், வேதனையும் அடைந்தேன். உறவுகளை இழந்துவாடும் மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறேன்.

மக்களின் விருப்பத்தோடு ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து நடத்த விரும்புகிறோம். நீதிமன்றத்தில் இருந்தும், தமிழக அரசிடமும் இருந்து அனுமதி கிடைத்தவுடன் மீண்டும் முறைப்படி ஆலையைத் தொடங்குவோம். தற்போது ஆண்டு பராமரிப்பு பணிக்காக ஆலை மூடப்பட்டுள்ளது.

எங்கள் நிறுவனம் நீதிமன்றத்தின், மாநில அரசின் விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்றிச் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி மக்களின் மிகப்பெரிய வளர்ச்சி எங்களுடையது என்பதை அங்கிருக்கும் மக்களிடம் நாம் உறுதி செய்து இருக்கிறோம். ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து நடத்த விரும்புகிறோம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், தூத்துக்குடி, தமிழகத்தின் வளர்ச்சியையும் நாங்கள் உறுதி செய்து இருக்கிறோம். நாங்கள் இந்தியாவின் சட்டத்தை மதிக்கிறோம். தூத்துக்குடியில் நடந்த சம்பவங்கள் எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது என மீண்டும் தெரிவிக்கிறேன்

இவ்வாறு அகர்வால் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/india/article23979841.ece?homepage=true

  • தொடங்கியவர்

`ஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை!’ - தூத்துக்குடி ஆட்சியர் பேட்டி

 

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக, தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு, நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த நிலையில், தூத்துக்குடி ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி, `பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றதும், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய அவர், 'மாவட்டத்தில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுப்பதுதான் முதல் பணி' என்று தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ``துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 11 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள். மொத்தம் 102 பேர் காயமடைந்துள்ளனர். இதில், 19 பேர் படுகாயங்களுடனும், 83 பேர் லேசான காயத்துடனும் சிகிச்சைபெற்றுவருகின்றனர். காவல்துறையைச் சேர்ந்த 34 பேர் காயமடைந்துள்ளனர்.  

 

போராட்டத்தில்  ஈடுபட்டுவந்த மக்களின் முக்கியமான கோரிக்கையே, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதுதான். தமிழக அரசின் முடிவும் அதுதான். அதன் ஒரு பகுதியாக ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. மேலும், சுற்றுச்சூழல் துறையின் தடையில்லாச் சான்றும் அந்த ஆலைக்கு வழங்கப்படவில்லை. இதனால், அந்த ஆலை மீண்டும் செயல்பட வாய்ப்பு இல்லை. ஸ்டெர்லைட் ஆலை இயங்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் முடிவு என முதலமைச்சர் பழனிசாமி, இன்று காலை நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே தெளிவாகக் கூறியிருந்தார். இதனால் பொதுமக்கள், அரசின் நடவடிக்கையை ஏற்று, அமைதி திரும்ப ஒத்துழைப்புக்கொடுக்க வேண்டும். நாளை முதல் வணிகர்கள் கடைகளைத் திறக்க வேண்டும். மக்களின் வசதிக்காக அம்மா உணவகம் மற்றும் பண்ணை பசுமைக் கடைகளும் 24 மணிநேரம் செயல்படும்’’ என்று தெரிவித்தார்.  

https://www.vikatan.com/news/tamilnadu/125883-thoothukudi-collector-speaks-about-sterlite-protest.html

  • தொடங்கியவர்

''தூத்துக்குடி நிகழ்வு வருத்தம் அளிக்கிறது'' - ஸ்டெர்லைட்

 

''தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் துயர்மிகு நிகழ்வுகளை கண்டிருப்பது மிகவும் வருத்தத்தையும், துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என வேதாந்தா நிறுவனம் பிபிசியிடம் தெரி்வித்துள்ளது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம்படத்தின் காப்புரிமைMANJUNATH KIRAN

"எங்களின் நிறுவன பணியாளர்களின் பாதுகாப்பு, சுற்றியுள்ள சமூக மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் எங்கள் நிறுவனம் பணி புரிந்து வருகிறது'' என லண்டனிலிருந்து இயங்கும் வேதாந்தா நிறுவனம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக பெருந்திரள் தொடர் போராட்டம் நடத்தியது. இதில் மே 22 மற்றும் மே 23 தேதிகளில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீஸ் இடையே நடந்த மோதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இணைய வசதியை அரசு நிறுத்தியுள்ளது.

வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தூத்துக்குடி காவல்துறை தெரிவித்திருந்தது. ''துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு நடக்கவில்லை என்றும் சமூக விரோதிகள் ஊடுருவி போராட்டத்தை தவறாக வழிநடத்தியதால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்தன'' என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம்படத்தின் காப்புரிமைARUN SANKAR

பிபிசியிடம் பேசிய ஸ்டெர்லைட் நிறுவனம், '' ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையானது தற்போது செயல்படவில்லை என்றும் தொழிற்சாலை இயங்குவதற்கான அனுமதி உத்தரவு பெறுவதற்காக காத்திருக்கும் வேளையில் தங்களுடைய அனைத்து பங்குதாரர்களுடன் திறந்த உரையாடலை ஸ்டெர்லைட் தொடரும்'' என்றும் தெரிவித்துள்ளது.

''திட்டமிட்ட பராமரிப்பு பணிக்காக தூத்துக்குடி தொழிற்சாலையில் உருக்கு பணிகள் மார்ச் 25, 2018 முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மீண்டும் உருக்கு பணிகளை துவக்குவதற்காக ஒப்புதல் வேண்டி புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தை உரிய நேரத்தில் வழங்கினோம். எங்களது விண்ணப்பமானது மேற்கொண்டு விளக்கங்கள் வேண்டி நிராகரிக்கப்பட்டதால் ஆலை மூடப்பட்டுள்ளது."

"தூத்துக்குடியில் இராண்டாவது காப்பர் உருக்காலை திறப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி புதிப்பித்தலுக்காக நாங்கள் விண்ணப்பித்திருந்தோம். இது பொது விசாரணைக்கு பிறகு செயலாக்கப்படும் என நிறுவனத்துக்கு நேற்றைய தினம் தெரிவிக்கப்பட்டது. செப்டம்பர் 23, 2018 அன்று அல்லது அதற்கு முன்பாக இந்த விண்ணப்பம் மீது முடிவெடுக்கப்படும்."

"உரிய அனுமதியின்றி ஆலையில் உருக்கு பணிகள் மற்றும் விரிவாக்க பணிகளும் மேற்கொள்ளப்படாது'' என ஸ்டெர்லைட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம்படத்தின் காப்புரிமைARUN SANKAR

முன்னதாக வியாழக்கிழமையன்று தூத்துக்குடியில் உள்ள சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் காப்பர் உருக்கலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இன்று அதிகாலையில் அந்த ஆலைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் நடந்த மோதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதை கண்டித்து பல்வேறு கட்சிகளும் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ''துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமான முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும், டிஜிபி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்'' என்றும் திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/global-44242026

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

சாப்பிடறது, துங்கறது மட்டும்தான் வாழ்க்கையா?: தாயையும் போராட்டத்துக்கு அழைத்த ஸ்னோலின்

 
 
ஸ்னோலின் தாய் வனிதா Image captionஸ்னோலினின் தாய் வனிதா

"நாமும் போராட வேண்டும் என்று மக்களோட சேர்ந்து போராட்டத்துல கலந்துகிட்டா என் மகள். ஆனா அவளை ஏன் இவ்வளவு கோரமா கொல்லனும்?".

மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த அந்தத் தாய், வேதனை தாள முடியாமல் இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வீடே சோகத்தில் மூழ்கியிருக்கிறது. அந்தத் தாய்க்கும் குடும்பத்தாருக்கும் எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் உறவினர்கள் அனைவரும் அங்கு கூடியிருக்கிறார்கள்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள். அதில் ஒருவர்தான் 18 வயதான ஸ்னோலின். தன் தாயுடன் போராட்டக் களத்திற்கு சென்ற அவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.

காரப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றது பிபிசி. ஸ்னோலினுக்கு இரண்டு சகோதரர்கள். வீட்டிற்கு ஒரே பெண் இவர்தான்.

தூத்துக்குடியில் நடைபெற்று வந்த போராட்டங்களை பார்க்கும் போது, நாமும் இதற்காக போராட வேண்டும் என்று தன் தாயிடம் கூறியுள்ளார் ஸ்னோலின்.

"இவ்வளவு கோரமா என் பொன்ன ஏன் கொன்னீங்க?"

"சாப்பிடறது, தூங்கறது மட்டும்தான் வாழ்க்கையாம்மா? நம்மளும் போராடனும்" என்று தாயிடம் கூறியிருக்கிறார் ஸ்னோலின்.

அவரது தெருவில் சில வாரங்களுக்கு முன்னால் புற்று நோயால் ஒருவர் உயிரிழந்தார். இதுதான் ஸ்னோலினை போராடத் தூண்டியது என்று அவரது தாய் வனிதா குறிப்பிடுகிறார்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற 100-ஆவது நாள் போராட்டத்திற்கு ஸ்னோலினும், அவரது தாய் வனிதாவும் சென்றுள்ளனர்.

போராட்டம் பெரிய அளவில் உருவெடுக்க, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது இருவரும் பிரிந்துவிட்டதாக கூறுகிறார் வனிதா.

"மக்கள் அங்கயும் இங்கயும் ஓட, குண்டு சத்தமெல்லா கேட்டுது. நான் வீட்டுக்கு வந்துட்டேன். ஆனா ஸ்னோலின காணலை. அப்பறம் அவ இறந்தத டி.வி. நியூஸ் பாத்துதான் தெரிஞ்சுகிட்டேன்" என்று வருத்தத்துடன் அவர் கூறுகிறார்.

அரசு மருத்துவமனைக்கு வனிதா விரைந்தார். அவருக்கு அங்கு மேலும் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

"பின்மண்டைல குண்டடிபட்டு வாய் வழியா வெளிய வந்துருக்கு. இவ்வளவு கோரமா என் பொன்னை ஏன் கொல்லனும்? அந்த ஆலையால பாதிப்பு இருக்குனுதான போராடினோம். அதுக்கு இப்டி குருவி சுட்ற மாதிரி சுட்டுட்டாங்க" என்று கதறுகிறார் வனிதா.

"எம் புள்ளைய நானே கூட்டிட்டு போய் பலி குடுத்துட்டேன். அந்த ஆலையை மூடினாதான் என் மகளோட ஆத்மா சாந்தியடையும்" என்று கலங்குகிறார் அவர்.

https://www.bbc.com/tamil/india-44251367

  • தொடங்கியவர்

 

என் மகளை ஏன் இவ்வளவு கோரமா கொல்லனும்? - துடிக்கும் ஸ்னோலினின் தாய்

 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள். அதில் ஒருவர்தான் 18 வயதான ஸ்னோலின். தன் தாயுடன் போராட்டக் களத்திற்கு சென்ற அவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

 

படைகள் பொலிஸ் எல்லா இடங்களிலும் ஒன்றுதான். அரசாங்கம் சொன்னால்  செயற்படும் தரப்பினர். துக்கப்படுவதற்கு மட்டுமே நம்மால் முடியும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

காத்திருந்து காவு வாங்கிய ஸ்டெர்லைட்: தோட்டாக்களுக்கு பலியானவர்களின் சோகக் கதைகள்

 

 
26052018a

திரும்பிய பக்கமெல்லாம் அழுகையும் கண்ணீருமாய் நிற்கிறார்கள் மக்கள். தூத்துக்குடி துயரக்குடியாகி நிற்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நூறாவது நாள் போராட்டம் இப்படித்தான் முடியும் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். கலவரத்திலும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டிலும் பலியான உயிர்களின் எண்ணிக்கை 13. மேலும், 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த 23 ஆண்டுகளாகத் தூத்துக்குடி மக்கள் போராடிவருகிறார்கள். இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், ஆலை விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டம் நடத்திவந்தனர் தூத்துக்குடி மக்கள். இந்தப் போராட்டத்தின் நூறாவது நாளில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாவட்ட மக்கள் கூட்டமைப்பு’ அறிவித்தது.

 

அ.குமரெட்டியாபுரத்தில் 100 நாட்களாகப் போராட்டம் நடந்தும் மாவட்ட ஆட்சியரோ, அமைச்சர்களோ போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் குறைந்தபட்ச பேச்சுவார்த்தைகூட நடத்தவில்லை. ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்ட அறிவிப்புக்குப் பின்னர் ஏ.எஸ்.பி செல்வநாகரத்தினன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதுகூட போராட்டக்காரர்களைப் பிளவுபடுத்தும் வேலைகள்தான் நடந்தன. பேச்சுவார்த்தையின் இறுதியில், முற்றுகைப் போராட்டத்தைக் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக நடத்தலாம் என யோசனை சொன்னார் ஏ.எஸ்.பி. இதை ஒரு பிரிவினர் ஏற்றாலும், பெரும்பகுதியினர் முற்றுகைப் போராட்டம் நடத்துவதில் குறியாக இருந்தனர். முகம் தெரியாத நபர்கள் குறிப்பிட்ட வண்ணங்களில் உடையணிந்து ஆங்காங்கே வன்முறையைத் தூண்டிவிட்டதாக போலீஸ் தரப்பிலும் பொதுமக்கள் தரப்பிலும் சொல்கிறார்கள். அதேபோல், போராட்டத்தை முன்னின்று வழிநடத்திய நபர்களைக் குறிவைத்து சுட்டது போலீஸ் என்ற தகவலும் மிரள வைக்கிறது. “தவிர்க்க முடியாமல் துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் முழங்காலுக்குக் கீழ்தான் சுடப்படவேண்டும் என்பதுதானே விதி. அப்படியிருக்க இடுப்புக்கு மேலே குறிவைத்தது ஏன்?” என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய ஓய்வுபெற்ற காவல் துறை உயரதிகாரி ஒருவர், “100 நாள் போராட்டத்தை அரசு கவனித்ததுபோல ஆலை நிர்வாகமும் கவனித்திருக்கும். இந்தக் கால அவகாசத்தில் ஆலை தரப்பில் தங்களுக்கான ஆதரவாளர்களையும் எப்படியும் உருவாக்கி இருப்பார்கள். அப்படி அவர்களால் வளைக்கப்பட்ட நபர்கள் மூலம் வன்முறை தூண்டிவிடப்பட்டிருக்கலாம். இதுபோன்ற போராட்டக்களத்தில் திட்டமிட்டு நான்கு பேர் ஒரு வாகனத்துக்குத் தீ வைக்கும்போது எதுவுமறியாத அப்பாவிகள் சிலரும் அவர்களோடு சேர்ந்துகொள்வது இயற்கை. அப்படித்தான் கலவரம் பரவியிருக்க வேண்டும். இங்கே இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். காவல் துறை பணிக்கு வருபவர்களுக்கு முன்பெல்லாம் ஓராண்டுகாலம் கட்டாயப் பயிற்சி கொடுத்தார்கள். ஆனால், இப்போது மூன்று மாதம் பயிற்சி முடிவதற்குள்ளாகவே பந்தோபஸ்து உள்ளிட்ட பணிகளுக்கு அனுப்பிவிடுகிறார்கள். இதனால், அவர்கள் முழுமையான பயிற்சி ஏதுமில்லாமல் சராசரி மனிதர்களாகவே பணிக்கு வந்துவிடுகிறார்கள். அதனால், இக்கட்டான நேரங்களில் பிரச்சினைகளை சமாளிக்கும் உத்திகள் தெரியாமல் திணறுகிறார்கள்” என்று சொன்னார்.

“ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் கலவரமாக வெடித்ததற்கு காரணம் வெளியாட்கள் ஊடுருவலே” என்கிறார் நெல்லை சரக டிஐஜி கபில்குமார் சரத்கார். அதில் எத்தனை உண்மையோ... துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானவர்களுக்குப் பின்னால் ஏகப்பட்ட சோகக் கதைகள்.

 

வக்கீலாகி கோர்ட்டுக்குப் போவான்னு நெனச்சேனே..!

துப்பாக்கிச் சூட்டில் வாயில் குண்டுபாய்ந்து உயிரிழந்த ஸ்னோலினுக்கு 17 வயதுதான்! 12-ம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு கல்லூரி கனவில் இருந்தவர். ஸ்னோலினின் தந்தை ஜாக்சன் மீன்பிடி தொழிலாளி. “வக்கீலாகி, மீனவர்கள் பிரச்சினைக்காக, சட்டப்படி போராடுவேன்னு அடிக்கடி சொல்லுவா என் மவ. பாளையங்கோட்டை சட்டக் கல்லூரியில் சேர்க்குறதுக்கு என்ன வழின்னு விசாரிச்சுட்டு இருந்தேன். இப்படிப் பிணவறைக்கு போவான்னு நினைச்சுகூட பார்க்கலியே..!” என்று அழுத ஜாக்சனை நம்மால் தேற்ற முடியவில்லை.

 

தாயைத் தூக்கிக் குடுத்துட்டு துடிக்குது இந்தப் பிள்ளைக..!

திரேஸ்புரம் ஜான்சி துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான இன்னொரு பெண். அவரது அண்ணன் ரெஜி நம்மிடம், “எஸ்.பி வண்டியை மறிச்சு, நின்னு பிரச்சினை செய்ததால சுட்டோம்னு போலீஸ் பொய் சொல்றாங்க. மூத்த மக வீட்டுக்கு மீன் கொண்டு போனா என் தங்கச்சி. கலவரத்தைப் பார்த்து, பயந்துபோய் நின்னவ, என்ன நடக்குதுன்னு சுத்திச் சுத்தி பார்த்துட்டு இருந்துருக்கா. அந்தக் கணமே பாஞ்சுவந்த தோட்டா ஒண்ணு அவ மூளைய சிதைச்சுருச்சு. தங்கச்சி வீட்டுக்காரரு ஜேசுபாலன் மீன்பிடி தொழிலாளி. இவுகளுக்கு ஒரு ஆணும், மூணு பொண்ணுமா நாலு பிள்ளைங்க. தாயைத் தூக்கிக் குடுத்துட்டு பிள்ளைங்க துடிக்குற துடியத்தான் பார்க்கவே முடியல” என்றார்.

 

கடைசி வரைக்கும் ஓட்டு வீட்டை மாத்த முடியலியே..!

லூர்தம்மாள்புரம் கிளாஸ்ட்டனுக்கும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஓட்டு வீட்டை இடித்துவிட்டு, கான்கிரீட் வீடு கட்ட வேண்டும் என்பது அவரது நெடுநாள் கனவு. அது நிறைவேறுவதற்குள் துப்பாக்கிச் சூட்டில் பலியாகிவிட்டார் கிளாஸ்ட்டன். அவரது நண்பர் ராஜா நம்மிடம், “கிளாஸ்ட்டனுக்கு ஒரு மகனும் மகளும் இருக்காங்க. மகனை இன்ஜினீயரிங்கும், மகளை நர்சிங்கும் படிக்க வைக்கணும்ன்னு ஆசைப்பட்டான். ஆனா, பெருசா வருமானம் இல்லாததால பையனைப் படிக்க வைக்க முடியல. ‘இந்த ஓட்டு வீடு மழைக்கு ஒழுகுது. அதை மாத்திட்டு கான்கிரீட் வீடா போடணும்’ன்னு அவன் சொல்லிக்கிட்டே இருந்தது இன்னும் என் காதுல கேட்டுட்டே இருக்கு சார்” என்றார். கிளாஸ்ட்டனை நினைத்து நினைத்து அழுது புலம்பி அவ்வப்போது மயங்கி விழுகிறார் அவரது தாய் எஸ்தர்.

 

சடங்குக்குப் பத்திரிகை கொடுத்தவருக்கு சடங்கு செய்ய வெச்சுட்டாங்க..!

கிருஷ்ணராஜபுரம் அந்தோணி செல்வராஜின் மரணம் கொடூரமான ரணம். மகளுக்கு அடுத்த மாதம் 18-ம் தேதி பூப்புனித நீராட்டு விழா. அதற்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்கள் வீட்டின் மூலையில் கிடக்கின்றன. அந்தோணி செல்வராஜின் சகோதரர் ராஜேஷ், “ஒரு தனியார் கம்பெனியில் அண்ணன் வேலை செஞ்சாரு. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்துக்குப் பக்கத்துலதான் அண்ணனோட ஆபீஸ். சத்தம் கேட்டு வெளியே, சும்மா வந்து நின்னவரைச் சுட்டுக் கொன்னுருக்காங்க. மகளோட சடங்குக்குப் பத்திரிகை கொடுத்துட்டு இருந்தவருக்கு, சடங்கு செய்ய வச்சுட்டாங்க” என்று புலம்பினார். பூப்புனித நீராட்டு விழாவுக்காக எடுத்திருந்த புதுத்துணிகள், அந்த வீட்டின் ஒரு மூலையில் கவனிப்பாரின்றி கிடந்தன.

 

மணம் முடித்த மூன்றே மாதத்தில் மரணக் கோலம்!

மூன்று மாதங்களுக்கு முன்பும் அந்த வீட்டின் வாசலில் புதுப் பந்தலும் கொண்டாட்டமுமாய் இருந்தது. காரணம், அப்போது மணிராஜின் திருமணம். ஆனால், இப்போது மணிராஜின் வீட்டில் போடப்பட்டிருக்கும் பந்தல் சோகத்தின் குறியீடு. அவரது சகோதரர் ரமேஷ்கண்ணன், “அண்ணியைக் கூட்டிட்டு வாரேன்னு சொல்லிட்டு அண்ணன் கிளம்புனான். போற வழியில் பைபாஸ் ரோட்டுல பேரணியைப் பார்த்து நின்னவன், பைக்க நிறுத்திட்டு என்ன நடக்குதுன்னு பார்த்துருக்கான். நொடிப் பொழுதுல சுட்டுக் கொன்னுட்டாங்க சார். அண்ணனுக்குக் கல்யாணம் ஆகி மூணு மாசம்தான் ஆகுது” என்றார்.

 

இதுக்கா இலங்கையிலருந்து இங்க வந்தோம்..?

தூத்துக்குடி, மில்லர்புரம் சிலோன் காலனியைச் சேர்ந்த பி.கே.கந்தையாவும் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் ஒருவர். 40 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து வந்து இங்கு குடியேறியவர்களில் இவரும் ஒருவர். கந்தையாவின் மனைவி செல்வமணியால் பேசக்கூட முடியவில்லை. ஒரே மகன் ஜெகதீஷ்வரன் கால் மேல் கால் போட்டபடி ஏதோ யோசித்தும், சிரித்தும் கொண்டிருக்கிறார். மனநலம் பாதித்த அவருக்கு, தந்தை இறந்ததையே இன்னும் உணர முடியவில்லை. இவரது எதிர்காலத்தையும் வாழ்வியல் உத்திரவாதத்தையும் சேர்ந்தே அந்தத் தோட்டா பறித்துள்ளது!

 

ஒரு போராளியா அவரோட ஆசை நிறைவேறிருச்சு... ஆனா, நாங்க..?

குறுக்குச்சாலை பகுதியைச் சேர்ந்த தமிழரசன் தமிழ்ப்பற்றால் தனக்குத்தானே இந்தப் பெயரைச் சூட்டிக்கொண்டவர். இவரது இயற்பெயர் மாரிச்சாமி. புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த தமிழரசனை போலீஸார் குறிவைத்து சுட்டிருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. “தமிழரசன், ஸ்டெர்லைட் தொடங்க திட்டம் போட்ட காலத்திலிருந்தே எதிர்த்துப் போராடிட்டு இருக்கார். என் வீட்டுக்காரர் இறந்த பின்னாடி, எங்கக் குடும்பத்துக்கும் பாதுகாப்பா இருந்தவர். போராட்டமே வாழ்க்கைன்னு திருமணமும் செஞ்சுக்கல. இப்போ 44 வயசு ஆச்சு. ‘ஒரு போராளியா களத்துல நிக்கும்போதே சாகணும்கிறதுதான் ஆசை’ன்னு அடிக்கடி சொல்லுவாரு. ஒரு போராளியா அவரோட ஆசை நிறைவேறிடுச்சு. ஆனா, நாங்கதான் ஆதரவை இழந்து நிக்கிறோம்” என்று சொல்லிவிட்டு அழுதார் அவருடைய அண்ணி வளர்மதி.

 

‘வருங்காலம் நம்மைப் போற்றுமடா!’

சிவந்தாகுளம் சாலையில் கார்த்திக்கின் வீடு. கார்த்திக்கின் அப்பா முத்துப்பாண்டியிடம் பேசினோம். “பி.ஏ., மூணாவது வருசம் படிக்க இருந்தான். எப்பவும் தமிழ், தமிழர்ன்னுதான் சொல்லிட்டு இருப்பான். ஃபாரினுக்குப் போகணும்… நிறைய சம்பாதிக்கணும்... தமிழுக்குப் பாடுபடணும்னு சொல்லிக்கிட்டே இருப்பான். காலேஜ் படிப்பு இன்னும் ஒரு வருசம் இருக்கும்போதே பாஸ்போர்ட்டுக்கு அலைஞ்சான். வெளிநாடு போயிருக்கக் கூடாதான்னு இப்பத் தோணுதே…” வார்த்தைகளில் உடைந்துபோகிறார் அவர். ‘வருங்காலம் நம்மைப் போற்றுமடா...’ இதுதான் கார்த்திக் கடைசியாகப் போட்ட முகநூல் பதிவு!

 

ராணுவத்தில் சேர ஆசைப்பட்ட ரஞ்சித்!

புஷ்பாநகர் பாஸ்கரின் மனைவி முத்துலெட்சுமி, மகன் ரஞ்சித்குமாரின் மரணச் செய்தி கேட்டதிலிருந்தே மயங்கி மயங்கி விழுகிறார். மகனின் சட்டையை எடுத்து நெஞ்சோடு அணைத்து விம்முகிறார். ரஞ்சித்குமாரின் தந்தை பாஸ்கரிடம் பேசினேன். “நான் வீடுகளுக்கு கான்கிரீட் போடுற கான்ட்ராக்டர். ரஞ்சித் எலக்ட்ரிக்கல் டிப்ளமோ படிச்சிருந்தான். ராணுவத்தில் சேரணும்ன்னுதான் ரொம்ப ஆசைப்பட்டான். செவ்வாய்க்கிழமை எம்புள்ள குண்டடிபட்டுச் செத்துருக்கான். அதுக்கு முந்துன வெள்ளிக்கிழமைகூட ரத்ததானம் பண்ணிருக்கான். இதுவரை பத்துத் தடவைக்கு மேல ரத்ததானம் பண்ணிருப்பான். சமூக சேவையில் அவனுக்கு ஈடுபாடு ஜாஸ்தி. கை கால்ல சுட்டுப்போட்டுருந்தாக்கூட, முடமாகியாச்சும் எங்ககூட இருந்திருப்பான். தலையிலயே சுட்டுருக்காங்க…” என்றவரால் மேற்கொண்டு பேச முடியவில்லை.

 

பால் காய்ச்ச இருந்தவனுக்கு பால் ஊத்த வெச்சுட்டாங்களே..!

அண்ணாநகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான காளியப்பன் 22 வயது இளைஞர்! கூலி வேலை பார்க்கும் அப்பா கோபாலகிருஷ்ணன் அடிக்கடி உடல் சுகவீனத்திலும் படுத்துக்கொள்ள, அந்தக் குடும்பத்தின் ஒரே நம்பிக்கையாய் இருந்தவர் காளியப்பன். இப்போது அவர் இல்லாத சோகத்தில் அடித்துப் புலம்புகிறது அந்தக் குடும்பம். கோபாலகிருஷ்ணனிடம் பேசினோம். “இப்போதான் புதுசா வீடு கட்ட ஆரம்பிச்சோம். ‘அப்பா, கொஞ்சம், கொஞ்சமா காசு சேர்த்து இந்த வீடு கட்டுறோம். மேல தங்கச்சிகளுக்கு தனி ரூம், அது, இது’ன்னு பட்டாம்பூச்சி மாதிரி படபடன்னு பேசிக்கிட்டே இருப்பான். வீடு அஸ்திவாரம் போட்டு, நிலை நாட்டுனதோட நிக்குது. குலக் கொழுந்தை தூக்கிக் கொடுத்துட்டு இனி யாருக்கு வீடு கட்டப் போறோம்? அவனுக்கு நிச்சயதார்த்தம் முடிச்சு அக்டோபர்ல கல்யாணம் வச்சுருந்தோம். வீடும் கட்டி முடிக்கல… கல்யாணமும் முடிக்கல… பால் காய்ச்ச இருந்தவனுக்கு பால் ஊத்த வெச்சுட்டாங்களே..!” என்று கதறினார். முதல்நாள் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது பலத்த காயம் அடைந்த காளியப்பன், மறுநாள் அண்ணாநகர் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியாகி உள்ளார்.

 

கடைசி நிமிடங்களிலும் கெஞ்சிய செல்வசேகர்!

பேய்க்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வசேகர் முதல் நாள் போராட்டத்தின்போது போலீஸாரின் தடியடியால் படுகாயம் அடைந்தார். பலத்த காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர், சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். சிகிச்சையில் தங்களைப் பார்க்க வந்த மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களைப் பார்த்து, “நாசகார ஸ்டெர்லைட்டை எப்படியாச்சும் மூடுங்கய்யா...” என்று கெஞ்சியிருக்கிறார் செல்வசேகர். நம்மிடம் பேசிய அவரது சித்தி மகன் ஜெயக்குமார், “செல்வசேகர் இன்னும் கல்யாணம்கூட பண்ணல. பொதுசேவைன்னா முன்னாடி நிப்பான். சின்ன வயசுல இருந்தே பொதுக்காரியத்தில் அவனுக்கு ஈடுபாடு அதிகம். போலீஸ் லத்தியால தாக்கிக் கீழே தள்ளி, நெஞ்சுலயே மிதிச்சுருக்காங்க. தலையில் பலத்த காயம் இருந்ததால், அதுக்கு சிகிச்சை நடந்த நேரத்துலயே செத்துட்டாப்ல… போலீஸ் மிருகத்தனமா மிதிச்சே கொன்னுருக்காங்க… செல்வசேகர்கூட பிறந்தது ரெண்டு அக்கா. ஒரு அக்காவுக்கு இன்னும் கல்யாணம் ஆகல… அப்பாவும் இறந்துட்ட நிலையில, அம்மாவுக்கும் அக்காவுக்கும் ஆறுதலா இருந்தவன அநியாயமா அடிச்சுக் கொன்னுட்டாங்க” என்றார்.

 

என்ன பேசி என்னத்த செய்யப் போறோம்...

துப்பாக்கிச் சூட்டில் பலியான ஆசிரியர் காலனி, சண்முகத்தின் வீட்டுக்கும் சென்றேன். அந்த வீட்டுக்குள் இருந்து, பீறிட்டுவரும் அழுகையுடன் வெளியில் வந்த உறவுகள், “என்ன பேசி என்னத்த செய்யப் போறோம்... நாங்க யாருக்கிட்டயும் எதுவும் பேசுறதா இல்ல...” என்று ஆற்றாமையுடன் சொல்லிவிட்டுக் கதவைச் சாத்திக்கொண்டனர்.

 

ஊருவிட்டு ஊருவந்து உயிரைவிட்ட பரிதாபம்!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியைச் சேர்ந்த ஜெயராமனும் கலவரத்தில் பலியாகியிருக்கிறார். இரு சக்கர வாகனத்தில் ஊர், ஊராகச் சென்று ஜவுளி வியாபாரம் செய்துவந்த இவர், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பின் களப்பணியாளர். ஸ்டெர்லைட் போராட்டத்துக்காக ஊருவிட்டு ஊருவந்த இவரும் உயிரைவிட்டது தாங்க முடியாத சோகம். ஜெயராமனின் இறப்பால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திக்குத் தெரியாத காட்டில்விட்டதுபோல் நிற்கிறார்கள் அவரது மனைவி பாலம்மாளும் மகள் நந்தினியும்!

காட்சிகள் வேகவேகமாக மாறுகின்றன. ஆளுக்கொன்று பேசுகிறார்கள். ஆனால், ‘ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்’ என்ற அரசின் ஒற்றை வரி அறிவிப்பை மட்டுமே அந்த மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதுதான் அவர்களின் ரணத்துக்குக் கொஞ்சமாவது ஆறுதல் சொல்லும். இப்போதாவது தமிழக அரசு அத்தகைய நடவடிக்கையை முன்னெடுக்குமா?

http://tamil.thehindu.com/opinion/columns/article24003520.ece?homepage=true

ஊழலுக்கு பேர்போன தமிழ்நாடு போலீஸ் காடையர் கும்பலின் காட்டுமிராண்டித்தனம் கடும் கண்டனத்துக்கு உரியது.

சம்பந்தப்பட்ட அத்தனை போலீஸ் காடையர்களும் அரசியல்வாதிகளும் தூக்கிலிடப்படவேண்டும்.

  • தொடங்கியவர்

இலங்கை ராணுவத் துப்பாக்கிக்குத் தப்பித்தவர் தூத்துக்குடி தோட்டாவுக்குப் பலியான சோகம்

 

 
thoothukudi

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர், இதில் ஒருவர் இலங்கையிலிருந்து இங்கு வந்து வசித்து வந்த கந்தையா என்ற நபர் என்று தெரியவந்துள்ளது.

இவர்கள் குடும்பம் இலங்கையில் இனக்கலவரம் உச்சத்தில் இருந்த காலக்கட்டமான 1981-ம் ஆண்டே மற்ற தமிழர்களுடன் இந்தியா வந்துள்ளார், இவருக்கு இப்போதைய வயது 58.

 

இலங்கையிலிருந்து வந்த இவர் தூத்துக்குடி சிலோன் காலணியில் மனைவி செல்வமணி, மகன் ஜெகதீஷ் ஆகியோருடன் வசித்து வந்தார். கட்டுமானப் பணியில் வேலை செய்து வந்த இவர் ஸ்டெர்லைட் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் 100வது நாள் போராட்டத்தில் பங்கு பெற்று கலெக்டர் அலுவலகம் ஊர்வலம் செல்லும்போது துப்பாக்கித் தோட்டாவுக்கு இரையானார். இவர் மரணமடைந்த வீடியோ தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி பரபரப்பை உருவாக்கியது.

இலங்கையில் ராணுவத்தின் துப்பாக்கியிலிருந்து தப்பி இங்கு வந்து தூத்துக்குடியில் அவர் பலியான விவரத்தை அவரது மனைவிதான் கூறினார்.

சிலோன் காலனியில் கந்தையாவின் உருவப்படம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மகன் ஜெகதீசனுக்கு தந்தை மரணமடைந்தது தெரியவில்லை, காரணம் அவர் மனவளர்ச்சி குன்றியவர். பேசவும் முடியாது.

கந்தையாவின் மறைவினால் தன் மகனின் நிலையை எண்ணியும் பிரிவைத் தாங்காமலும் மனைவி கடும் இன்னலில் உள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article24006044.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? - எஃப்.ஐ.ஆரில் அதிர்ச்சி தகவல்

 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு யார் உத்தரவிட்டார்கள் என்ற கேள்வி கடந்த 6 நாள்களாக நிலவி வந்த நிலையில், தற்போது 2 தனி வட்டாட்சியர்கள்தான் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக எஃப்.ஐ.ஆரில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 22-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தின்போது, மக்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 105 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்வி அனைத்து தரப்பினரிடையே கடந்த 6 நாள்களாக எழுந்த நிலையில், தனி துணை வட்டாட்சியர் சேகர் மற்றும் தனி மண்டல வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் உத்தரவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து தூத்துக்குடி சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் ஹரிகரன் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆர் சுருக்கம், “தனித் துணை வட்டாட்சியர் சேகர், தூத்துக்குடி நகரம், குமரெட்டியாபுரம் உள்ளிட்ட சில கிராமங்களில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி சில மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 22-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது எனவும், அதனால் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் எனவும் முடிவு செய்து இந்தக் கிராம மக்கள் மக்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபடுவதாகத் தகவல் கிடைத்தது.

இதைக் கருத்தில் கொண்டு 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டிருந்தது. தடையையும் மீறி, இந்தக் கிராம மக்கள் மட்டுமின்றி மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட 10,000-க்கும் மேற்பட்டோர்கள் தடுப்புகளையும் மீறி வாகனங்களை அடித்து நொறுக்கிக்கொண்டே ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முன்னேறி வந்துகொண்டே இருந்தனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடாத கலெக்டர் ஆபீஸையும் ஆபீஸுக்குள் இருப்பவர்களையும் தீ வைத்துக் கொளுத்த வேண்டும் என்று கோஷமிட்டுக் கொண்டே ஆட்சியர் அலுவகத்துக்குள் பெட்ரோல் குண்டுகள் வீசியபடியே நுழைய முயன்றனர். அப்போது ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

 

வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைந்து போகச் சொல்லியும் ஒலிபெருக்கியில் அறிவித்தும், கண்ணீர் புகைக் குண்டு வீசி கலைக்க உத்தரவிட்டேன். மேலும், கலைந்து செல்லாவிட்டால் தடியடி நடத்தப்படும் என அறிவித்தும் கலவரம் மூண்டது. இனியும் பொறுமையாக இருந்தால் ஆட்சியர் அலுலகத்துக்கும் அரசு சொத்துகளுக்கும் பெருத்த சேதம் ஏற்படும் என்பதால் கலவரக்காரர்களைத் துப்பாக்கி பிரயோகித்து கலைக்க உத்தரவிட்டேன். அதன் பின்னர், வன்முறைக் கும்பலைக் கலைக்க காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதில் 4 பேர் உயிரிழந்ததாகவும் தெரிகிறது. மேலும் சிலர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது. இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புகாரின்படி 15 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், திரேஸ்புரத்தில் நடந்த வன்முறை குறித்து மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன், தூத்துக்குடி வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் பார்த்திபனிடம் புகார் அளித்துள்ளார்.  அண்ணாநகரில் நடந்த துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டது மண்டல கலால் அலுவலர் சந்திரன் என்று தற்போது தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

https://www.vikatan.com/news/tamilnadu/126143-who-ordered-the-shooting-at-thoothukudi-fir-reveals-information.html

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.