Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரித்திரியா தேசிய விடுதலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எரித்திரியா தேசிய விடுதலை

 
ethiopia1ethiopia
 
ஆப்பிரிக்க கண்டத்தில், எந்தவொரு ஐரோப்பிய வல்லரசாலும் காலனியாக்கப்படாத ஒரேயொரு நாடு எத்தியோப்பியா. 1896 ம் ஆண்டு, காலனிய விஸ்தரிப்புக்காக இத்தாலி நடத்திய போரில், எத்தியோப்பியப் படைகளிடம் அவமானகரமான தோல்வியை சந்தித்தது. துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற நவீன ஆயுதங்களை ஏந்தியிருந்த இத்தாலி இராணுவம், வாள், அம்பு-வில், போன்ற புராதன கருவிகளேந்தி போரிட்ட எத்தியோப்பியர்களிடம் தோல்வியுற்றது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் இந்த சரித்திர உண்மையை நம்பித் தான் ஆக வேண்டும். இப்போதே உங்களால் நம்ப முடியவில்லை என்றால், அன்று இந்த செய்தி ஐரோப்பாவில் எத்தகைய அதிர்வலைகளை தோற்றுவித்திருக்கும்? ஐரோப்பியர்கள் அந்த காலனியப் போருக்குப் பிறகு தான், “எத்தியோப்பியா நாகரீகமடையாத காட்டுவாசிகளின் தலைவனால் ஆளப்படும் கிராமமல்ல.” என்ற உண்மையை புரிந்து கொண்டார்கள். எத்தியோப்பிய சக்கரவர்த்தி “மெனலிக்”, ஐரோப்பிய அரசர்களுக்கு நிகரானவராக மதிக்கப்பட்டார். போருக்குப் பின்னர், இத்தாலி எத்தியோப்பியாவுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால் செங்கடல் ஓரமாக இருக்கும் எரித்திரியாப் பகுதிகளை மட்டும் தன் வசம் வைத்துக் கொண்டது. இருப்பினும் கடல் எல்லை பறிபோனது, எத்தியோப்பியாவிற்கு இழப்பு தான். இத்தாலிய காலனிய நிர்வாகத்தின் கீழ் இருந்த எரித்திரியா பிற்காலத்தில் நீண்ட தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டது. இது குறித்து பின்னர் பார்ப்போம்.

udc-gas-masks-4

இத்தாலிய தேசியவாதிகளால் எத்தியோப்பிய தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. பழிக்குப்பழி வாங்க வேண்டும் என கறுவிக் கொண்டனர். இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு சில வருடங்களுக்கு முன்னர், இத்தாலியில் தேசியவாதிகள், இனவாதிகளின் ஆதரவுடன் பாஸிச சர்வாதிகாரி முசோலினியின் ஆட்சி ஏற்பட்டது. முசோலினி பழிவாங்கும் படை நடவடிக்கையை எடுத்தார். இம்முறை இத்தாலியப் படைகள் எத்தியோப்பியாவை ஆக்கிரமித்தன. அந்த வெற்றி எவ்வாறு சாத்தியமாகியது? உலக வரலாற்றில் முதன் முதலாக போரில் விஷ வாயு பிரயோகிக்கப்பட்டது. லட்சக்கணக்கான எத்தியோப்பிய மக்களை விஷ வாயு மூலம் கொன்று குவித்து, அந்தப் பிணங்களின் மீது தான் இத்தாலி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. மேற்குலக நாடுகள் தமது சரித்திர நூல்களில் மறைக்க விரும்பும் அத்தியாயம் அது. இத்தாலியின் ஆக்கிரமிப்பு அதிக காலம் நீடிக்கவில்லை. விரைவில் இரண்டாம் உலகப் போர் மூண்டு, இத்தாலி ஜெர்மனி பக்கம் சேர்ந்ததால் போரில் தோற்க வேண்டியேற்பட்டது. அப்போது வட ஆப்பிரிக்காவில் களமிறங்கிய பிரிட்டிஷ் படைகள், எரித்திரியாவையும், எத்தியோப்பியாவையும் விடுவித்தன. அப்போது ஒரு சுவையான சம்பவம் இடம்பெற்றது. பிரிட்டிஷ் படைகளை வரவேற்க வீதிகளில் எரித்திரிய மக்கள் குழுமியிருந்தனர். வீதியில் வெற்றிப்பவனி வந்த பிரிட்டிஷ் ஜெனரல் ஒருவரிடம், தம்மை விடுதலை செய்ததற்காக ஒரு எரித்திரியப் பெண்மணி நன்றி தெரிவித்தார். அப்போது அந்த ஜெனரல் இவ்வாறு பதிலளித்தார் : “கறுப்பியே! நான் உன்னை விடுதலை செய்வதற்காக இங்கே வரவில்லை!!”
உலகப்போருக்குப் பின்னர் முன்னாள் இத்தாலிய காலனியான எரித்திரியா, மீண்டும் எத்தியோப்பியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஐ.நா. சபை எரித்திரியா தனியான நாடாக இருக்க உரிமை உண்டு என கூறியது. அது நடைமுறைச் சாத்தியமாகாததற்கு, பின்னணியில் பிரிட்டிஷ் அழுத்தம் காரணமாக இருந்திருக்கலாம். 50 ஆண்டு கால காலனிய கலாச்சாரம், ஒன்பது மொழிகள் பேசும் எரித்திரிய மக்கள் மத்தியில் பொதுவான தேசியத்தை உருவாக்கியது. அந்த உணர்வாலேயே பிற எத்தியோப்பியர்களிடமிருந்து தாம் சிறந்தவர்களாக கருதிக் கொண்டனர்.உலகில் பல்வேறு தேசிய விடுதலைப் போராட்டங்கள், ஒரு குறிப்பிட்ட இனத்தை, மொழியை, மதத்தை அடிப்படையாக கொண்டு நடப்பது பலருக்கு தெரியும். ஆனால் முன்னாள் காலனிய பிரதேசம் ஒன்றுக்கு சுயநிர்ணய உரிமை, என்று சொல்கிறது ஐ.நா.மன்றம். அது எப்படி? இங்கே தான் “தேசியம் என்றால் என்ன?” என்று மேலைத்தேய நாடுகள் கொடுக்கும் விளக்கங்கள் நமது புரிதலில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்றது. மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்தவரை, அன்றைய காலனிய நிர்வாகத்திற்குட்பட்ட பிரதேசம் மட்டுமே தேசியமாக அங்கீகரிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரியுள்ள ஆயிரக்கணக்கான எத்தியோப்பிய, எரித்திரிய அகதிகள் ஒரே மொழி (அம்ஹாரி) பேசுவதை அவதானித்திருக்கிறேன். கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை சேர்ந்தவர்கள் இரண்டு பக்கமும் இருந்தனர். இதனால் எரித்திரிய தேசிய விடுதலைப் போராட்டம் எந்த வேறுபாட்டை அடிப்படையாக கொண்டு நடந்தது என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. இறுதியில் எனது நண்பரான, முன்னை நாள் எரித்திரிய விடுதலைப் போராளி ஒருவரிடமிருந்து பல தகவல்கள் கிடைத்தன. தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பத்தில் இஸ்லாமிய Eritrean Liberation Front (ELF) இனால் முன்னெடுக்கப்பட்டது. மொத்த சனத்தொகையில் கணிசமான அளவு (50%) முஸ்லிம்கள் உள்ளனர். இதனால் லிபியா, சூடான் போன்ற நாடுகளும் ஆதரித்தன. ELF இலிருந்து பிரிந்த, Eritrean People’s Liberation Front (EPLF) ஆரம்பத்தில் மார்க்ஸிஸம் பேசினாலும், அது ஒரு தேசியவாத இயக்கமாகவே இருந்தது. அம்ஹாரி, திக்ரின்யா, அரபு, அபார் ஆகிய மொழிகளை பேசும் பல்வேறு இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதே மொழிகளைப் பேசும் மக்கள் எத்தியோப்பியாவிலும் வாழ்கிறார்கள். இருப்பினும் திக்ரின்யா மொழி பேசுபவர்கள் சற்று அதிகம் என்பதால், இன்றைய சுதந்திர எரித்திரியாவில் அதுவே ஆட்சி மொழி.
tegadalit

EPLF இயக்கம் அனேகமாக எந்தவொரு நாட்டிடம் இருந்தும் நிதியுதவி பெற்றதாக குறிப்புகள் இல்லை. எத்தியோப்பியாவுடன் பகைமை பாராட்டிய சோமாலியாவும், சூடானும் உதவி செய்த போதிலும், பெருமளவு நிதி புலம்பெயர்ந்த எரித்திரிய மக்களிடம் இருந்தே கிடைத்து வந்தது. கட்டுப்பாட்டுடன் ஒழுங்கமைக்கப்பட்ட கெரில்லாக்கள், அமெரிக்க உதவி பெற்ற எத்தியோப்பிய மன்னரின் இராணுவத்தை தீரத்துடன் எதிர்த்து போராடி வந்தனர். 1974 ம் ஆண்டு, மன்னராட்சி சதிப்புரட்சி மூலம் தூக்கி எறியப்பட்டு, மார்க்ஸிச இராணுவ அதிகாரிகள் ஆட்சியமைத்தனர். அந்த நேரம் பார்த்து, சோமாலியா எத்தியோப்பியா மீது படையெடுத்தது. எத்தியோப்பியாவின் கிழக்குப்பகுதி மாகாணத்தில் சோமாலி மொழி பேசும் மக்கள் வாழ்வது குறிப்பிடத்தக்கது. படையெடுப்பாளருக்கு அகண்ட சோமாலியா அமைக்கும் நோக்கம் இருந்திருக்கலாம். புதிய அரசு எவ்வளவு கேட்டும், அமெரிக்க உதவி வழங்க மறுத்தால், சோவியத் யூனியனிடம் உதவி கோரியது. அதுவரை சோமாலியா பக்கம் நின்ற சோவியத் யூனியன், பூகோள அரசியல் நலன் கருதி எத்தியோப்பியாவிற்கு உதவ முன்வந்தது. உடனடியாக கியூபா வீரர்கள் தருவிக்கப்பட்டு, சோவியத் ஆயுதங்களை கொண்டு போரிட்டு, சோமாலிய படையெடுப்பு முறியடிக்கப்பட்டது.


1974 ம் ஆண்டிலிருந்து, 1991 ம் ஆண்டு வரை எத்தியோப்பியாவை ஆண்ட மென்கிஸ்டு சோவியத் உதவி தாராளமாக  கிடைத்து வந்ததால், சோஷலிச சீர்திருத்தங்களை  முன்னெடுத்து வந்தாலும், அடக்குமுறையும், கொலைகளும் குறையவில்லை. சோவியத் யூனியனும், கியூபாவும் இது குறித்து தமது அதிருப்தியை தெரிவித்து வந்தாலும், மென்கிஸ்டு எல்லாவற்றையும் சோஷலிசத்தின் பெயரில் ஏமாற்றி வந்தார். எத்தியோப்பியாவின் பிற தேசிய இனங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. அம்ஹாரி தேசிய மொழியாகியது. எத்தியோப்பியாவின் கடைசி சக்கரவர்த்தி ஹைலெ செலாசி காலத்திலேயே, “அம்ஹாரி மொழி மேலாதிக்கம்” ஆரம்பமாகி விட்டது. அரசாங்க உத்தியோகம் பெற விரும்புவோர் அம்ஹாரி மொழி பேச வேண்டும் என்ற சட்டம் வந்தது. ஹைலெ செலாசியும், மென்கிஸ்டுவும் சிறுபான்மை இனங்களின் எதிர்ப்பியக்கத்தை கொடூரமாக அடக்கினார்கள். பட்டினிச் சாவுகள் ஒரு அடக்குமுறை ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டது.
ஆப்பிரிக்கா என்றதும் உணவின்றி வாடும் குழந்தைகளும், பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் மக்களும் ஞாபகத்திற்கு வருமளவிற்கு, எத்தியோப்பியாவின் பஞ்சக் காட்சிகளை தொலைக்காட்சிகள் உலகம் முழுவதும்  ஒளிபரப்பின. இதனால் எத்தியோப்பியா மக்கள் முழுவதும் ஒரு காலத்தில் உணவின்றி பட்டினியால் செத்து மடிந்ததாக உலகம் நினைத்துக்கொண்டது. அந்த எண்ணம் தவறானது. மொத்த சனத்தொகைக்கும் உணவிட முடியாத அளவிற்கு வளமற்ற நாடல்ல அது. 2500 ஆண்டுகளுக்கு முன்னரே, குளங்களை வெட்டி, அணைகளை கட்டி, விவசாய பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக எத்தியோப்பியா விளங்கியது. 1973 ம் ஆண்டு, திக்ரின்யா  மொழி பேசும் மக்கள் வாழும் பிரதேசத்தில் பஞ்சம் ஏற்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் மடிந்தனர். நிலைமையை பார்வையிட சென்ற ஊடகவியலாளர்கள், மன்னரின் ஆடம்பர வாழ்க்கைக்கும், எரித்திரியா மீதான போருக்கும் பெருந்தொகை பணம் செலவாவதை கண்டனர். திக்ரின்யா மக்கள் எரித்திரியாவை சேர்ந்த பிரதேசத்திலும்  வாழ்வது குறிப்பிடத்தக்கது. உண்மையில் அந்த சிறுபான்மை மக்களின் போராட்டத்தை முறியடிக்கவே, அரசு உணவுத்தடையை ஏற்படுத்தி, பஞ்சத்தை பட்டினிச் சாவுகளாக மாற்றி விட்டிருந்தது.
famine

மன்னர் ஹைலெ செலாசியின் வீழ்ச்சிக்கு பஞ்சமும் ஒரு காரணம். சதிப்புரட்சியில் மன்னரை கொன்று, மாளிகையின் உள்ளேயே புதைத்த மென்கிஸ்டுவின் குடியாட்சியிலும் அரசின் கொள்கை மாறவில்லை. 1984-1985 ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சம் கூட அரசின் புறக்கணிப்பு காரணமாக உருவானது தான். கிழக்கே சோமாலியா, வடக்கே எரித்திரியா, தெற்கே ஒரோமோ என்று அரசு மும்முனைகளில் போரில் ஈடுபட்டிருந்தது. அதற்காக பெருமளவு பணம் ஆயுதங்களை வாங்க செலவிடப்பட்டது. அதே நேரம் நாட்டின் சில பகுதிகளில் வரட்சி நிலவியது. வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் யாவும் சிறுபான்மை இனங்களின் வாழ்விடங்கள் எனது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டுப் போர்கள் காரணமாக மக்களின் இடப்பெயர்வு நிலைமையை மோசமாக்கியது. தன்னை எதிர்த்து போரிட்ட சிறுபான்மை இன மக்கள் மடிவதைப் பற்றி அரசும் அலட்டிக் கொள்ளவில்லை. இதனால் ஏற்பட்ட மனிதப் பேரவலத்தால், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தலையிட்டு மக்களை காப்பற்ற வேண்டி ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தை தான் தொலைக்காட்சி கமெராக்கள் எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தன.
oromiaregionmap

சிறுபான்மையின மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை அடக்குவதற்காக, அரசு அவர்களை பட்டினிச் சாவிற்கு தள்ளிய கதையை எனக்கு கூறியவர் ஒரோமோ இனத்தவர் ஒருவர். அவரை நான், காங்கோ நாட்டு நண்பரின் வீட்டு விருந்தின் போது சந்தித்தேன். நான் வழக்கமாக, அவர்  எந்த நாட்டை சேர்ந்தவர் என்று கேட்டதற்கு, ”ஒரோமியா” என்று பதிலளித்தார். உலக வரைபடத்தில் அப்படி ஒரு நாடு இருப்பதாக எனக்கு தெரிந்திருக்கவில்லை. “ஈழத்தமிழர்கள் ஈழம் என்ற தேசியத்தை அடையாளப்படுத்துவது போல, எத்தியோப்பியாவின் ஒரோமோ இனத்தை சேர்ந்த அவர் அப்படி தனது தேசியத்தை அடையாளப்படுத்துகிறார்.” என்று பின்னர் விளக்கம் கூறினார் எனது காங்கோ நண்பர். எத்தியோப்பியாவில் Oromo Liberation Front (OLF) என்ற இயக்கம், “ஒரோமியா” என்ற தனி நாடு கோரிப் போராடி வருகின்றது. எத்தியோப்பியாவின் மொத்த சனத்தொகையில் ஒரோமியர்கள் 40%, அதாவது பெரும்பான்மை இனம். ஆனாலும் அவர்கள் சொத்துகளற்ற, அடக்கப்பட்ட இனமாகவே இருந்து வந்துள்ளனர். அம்ஹாரி, திக்ரின்யா மொழி பேசும் நிலச்சுவான்தார்கள் ஒரோமியரின் நிலங்களை பறித்து சொந்தம் கொண்டாடியதுடன், மண்ணின் மைந்தர்களை பண்ணையடிமைகளாக வேலை வாங்கினார்கள். எத்தியோப்பியாவில் 1974 ம் ஆண்டு ஏற்பட்ட சோஷலிச அரசாங்கம் கொண்டுவந்த நிலச்சீர்திருத்தத்தின் பின்னரே நிலைமை மாற்றமடைந்தது. நிலப்பிரபுக்கள் கைது செய்யப்பட்டு காணாமல்போயினர். அடிமைகள் விடுதலை செய்யப்பட்டனர். நிலமற்ற விவசாயிகளுக்கு, நிலப்பிரபுக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலங்கள் வழங்கப்பட்டன. அதற்குப் பின்னர் தான் ஒரோமோ மக்கள் தலைநிமிர்ந்தனர். இருப்பினும் அடக்கப்பட்ட ஒரோமோக்களின் எழுச்சியானது, குறுந்தேசியவாதப் போராட்டமாகவே உள்ளது. ஏனெனில் முன்பு மேலாண்மை செய்த அம்ஹாரி, திக்ரின்யா மக்கள் தற்போது ஒரோமோ பகுதிகளுக்கு செல்ல அஞ்சுகின்றனர். அந்த அளவிற்கு இனரீதியான வெறுப்பு மேலோங்கி காணப்படுகின்றது.
எத்தியோப்பியாவின் வடக்கே இருக்கும் “அக்சும்” என்ற இடத்தை தலைநகராகக் கொண்டு தான் பண்டைய எத்தியோப்பிய இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டது. இராச்சியத்தை விரிவுபடுத்திய மெனலிக் மன்னன் தான், தெற்கே ஒரோமோக்களின் “Finfinne” என்ற இடத்தில் “அடிஸ் அபேபா” என்ற இன்றுள்ள தலைநகரத்தை உருவாக்கினான். சக்கரவர்த்தியின் தெற்கு நோக்கிய நில விஸ்தரிப்புக் காலத்தில், ஒரோமோ பிரதேசங்களை கைப்பற்றிய போர்வீரர்கள் தம்மால் முடிந்த அளவு கொள்ளையடித்து சென்றனர். தங்கம், யானைத்தந்தம், மற்றும் அகப்பட்ட மக்களை அடிமைகளாகவும் பிடித்துச் சென்றனர். அப்போது தான் “கோப்பி”(Coffie) என்ற புதிய பானம் உலகிற்கு அறிமுகமானது. கோப்பி எத்தியோப்பியாவில் இருந்து தான் உலகின் பிற பகுதிகளுக்கு பரவியது. கோப்பி ஏற்றுமதி இன்றும் எதியோப்பியாவிற்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருகின்றது. கோப்பி மட்டுமல்ல, சிறுவர்கள் மெல்லும் “சூயிங் கம்” தயாரிக்க தேவையான மூலப்பொருள் எத்தியோப்பியாவில் வளரும் ஒரு வகை மரத்தில் தான் கிடைக்கிறது. இவ்வளவு பொருளாதார பலன்களையும் அம்ஹாரி நிலப்பிரபுக்களே அனுபவித்தனர். அதற்கு பிரதிபலனாக ஒரோமோ மக்களை அடிமைகளாக நடத்தினர். ஆளும்வர்கத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் அன்றும், இன்றும் பழமைவாத கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள். இதனால் பல்லாயிரக்கணக்கான ஒரோமோ மக்கள் இன்று இஸ்லாமிய மதத்தை தழுவி தமது எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். இந்தியாவில் மகாராஷ்டிரத்தில் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் அம்பேத்கார் தலைமையில் பௌத்த மதத்தை தழுவியது போன்றதே அதுவும். இன்றைய எத்தியோப்பிய அரசு, ஒரோமோ இளைஞர்கள் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகளாக மாறி வருவதாக குற்றஞ் சாட்டி வருகின்றது.
2006churchofstgeorge-lalibela

எத்தியோப்பியாவில் (கிரேக்க வழிபாட்டு முறையை பின்பற்றும்) பழமைவாத கிறிஸ்தவம் அரசமதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அக்சும் நகரம் கிறிஸ்தவர்களுக்கு புனிதமான நகரம். அங்கே வேறு எந்த மத வழிபாட்டுத் ஸ்தலங்களும் நிறுவ அனுமதி கிடையாது. அக்சும் நகரில் Unesco வால் பாதுகாக்கப்படும், பாறைகளைக் குடைந்து கட்டப்பட்ட மாபெரும் தேவாலயம் ஒன்றுள்ளது. “லல்லிபெல்லா தேவாலயம்” ஒரு உலக அதிசயம். மேலேயிருந்து பார்க்கும் போது சிலுவை போல தோன்றும் வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. அக்சும் நகரில் உள்ள சியோன் தேவாலயத்தில் ஓரிடத்தில் ஆண்டாண்டு காலமாக கவனமாக பாதுகாக்கப்படும் இரகசியம் ஒன்றுள்ளது. ஆண்டவர் மோசெசிற்கு அருளிய பத்துக் கட்டளைகள் பொறித்த ஆவணம் அங்கே பாதுகாக்கப்படுவதாக கூறப்படுகின்றது. அதனை இதுவரை எவரும் பார்த்ததில்லை. அக்சும் இராச்சியத்தை ஸ்தாபித்த முதலாவது மெனலிக் காலத்தில், இடிந்து போன யூதர்களின் ஜெருசலேம் ஆலயத்தில் இருந்து அந்த ஆவணம் எடுத்துவரப்பட்டதாக கதை ஒன்றுண்டு.
அம்ஹாரி மொழியானது அரபு, ஹீபுரூ மொழிகளைப் போல செமிட்டிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. இற்றைக்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், அரேபிய குடாநாட்டிலிருந்து வந்து குடியேறிய மக்கள், ஆப்பிரிக்க இனங்களுடன் கலந்து இன்றுள்ள அம்ஹாரி, திக்ரின்யா இனங்கள் தோன்றியிருக்கலாம். இந்த மொழிகள் தமக்கென தனியான எழுத்து வரிவடிவங்களை கொண்டிருப்பதால், பிற ஆப்பிரிக்க மொழிகளில் இருந்து வேறுபடுகின்றன. எத்தியோப்பியாவின் சரித்திரம் “மக்கெடா” என்ற இராணியின் காலத்தில் இருந்து ஆரம்பமாகின்றது. அறிவுக் கூர்மையுடைய பேரழகி மக்கெடா பற்றி யேமன் நாட்டு சரித்திரக் குறிப்புகள் “ஷீபா நாட்டு இராணி” என குறிப்பிடுகின்றன. தற்போதும் யேமனியர்களையும், எத்தியோப்பியர்களையும் உற்று நோக்கினால், அவர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தோன்றுவார்கள். இதனால் செங்கடலின் இருமருங்கிலும் ஆதி காலத்தில் ஒரேயின மக்கள் வாழ்ந்திருக்க வாய்ப்புண்டு. தற்போதும் தொடரும் சில கலாச்சாரக் கூறுகளை மேலதிக ஆதாரமாக கொள்ளலாம்.  உதாரணத்திற்கு வெற்றிலை மெல்லும் பழக்கம். ஆனால் அது எமது நாட்டு வெற்றிலையை விட அதிக போதை தரும்.
சாலமன் ஷீபா

பண்டைய இஸ்ரேலிய மன்னன் சாலமன் (972-932) அரண்மனைக்கு, ஷீபா நாட்டு அரசி மக்கெடா விஜயம் செய்த போது, அவளது அறிவிலும், அழகிலும் மயங்கிய சாலமன் அவளை சிறிது காலம் தன்னுடனே தங்கும் படி வேண்டினான். மதிநுட்பம் வாய்ந்த அரசனாக மகிமை பெற்றிருந்த சாலமன், கருநிற பேரழகியின் அணைப்பில் மயங்கிக் கிடந்ததாகவும், இதனால் இராஜ காரியங்களை கவனிக்காமல் விட்டதாகவும் பைபிள் (பழைய ஏற்பாடு) கூறுகின்றது. பைபிள், ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு கறுப்பின பெண்ணை உலகப் பேரழகியாக வர்ணிப்பது, இங்கே குறிப்பிடத்தக்கது. வெள்ளை நிறம் மட்டுமே அழகு என்பது பிற்காலத்தில் ஐரோப்பிய இனவாதிகள் பரப்பிய கருத்தியல். சாலமனுடனான உறவில் கர்ப்பமுற்ற ஷீபா அரசி தாய் நாடு திரும்பியதாகவும், அங்கே ஒரு மகனை பெற்றெடுத்ததாகவும் பைபிள் மேலும் குறிப்பிடுகின்றது. எத்தியோப்பியாவில் 14 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட, “Kebra Negest” என்ற மன்னர்களின் கதைகளைக் கூறும் நூலிலும் இது குறிப்பிடப்படுகின்றது. சாலமனுக்கும், மக்கெடாவுக்கும் பிறந்த மகன் தான் எத்தியோப்பியாவில் இராசதானியை நிறுவிய (முதலாவது) மெனலிக் அரசன் என்று கூறுகின்றது.
எத்தியோப்பிய கிறிஸ்தவம், எகிப்தின் “கொப்திக்” மதப்பிரிவை சேர்ந்தது. இந்தப் பிரிவின் வழிபாட்டு முறை கிரேக்க முறையில் இருந்து சற்றே வேறுபடுகின்றது. இவையெல்லாம் ஆதிகால கிறிஸ்தவ வழிபாட்டை கொண்டதால், “பழமைவாத கிறிஸ்தவம்” என்றும் அழைக்கப்படுகின்றன. எத்தியோப்பியாவில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒரே மாதிரியான சடங்குகளை பின்பற்றுகின்றனர். யூதர்களில் இருந்து பிரிந்தவர்களே, கிறிஸ்தவம் என்ற புது மதத்தை தோற்றுவித்தார்கள் என்பது இதிலிருந்து நிரூபணமாகின்றது. ஐரோப்பா கிறிஸ்தவமயமாவதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே ஆப்பிரிக்காவில், அதாவது எத்தியோப்பியாவில், கிறிஸ்தவ மதம் பரவியிருந்ததை முன்னர் ஒரு முறை குறிப்பிட்டுள்ளேன். வத்திக்கானில் லத்தீன் மொழி பைபிள் எழுதப்படுவதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்னரே, எத்தியோப்பியாவில் எழுதப்பட்ட பைபிள் சுவடிகள் இப்போதும் பாதுகாக்கப்படுகின்றன.
axum_obelisk

1868 ம் ஆண்டு, எத்தியோப்பியாவில் மாபெரும் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது. சக்கரவர்த்தியினால் சேவைக்கு அமர்த்தப்பட்ட பிரிட்டிஷ் படைவீரர்கள், சக்கரவர்த்தி மரணமடைந்த குழப்ப சூழ்நிலையை பயன்படுத்தி, விலை மதிப்பற்ற கலைப்பொக்கிஷங்களை கொள்ளையடிக்க ஆரம்பித்தனர். அரச ஆபரணங்கள், மத சின்னங்கள், இவற்றுடன் சுவடிகளையும் அள்ளிச் சென்றனர். கையால் எழுதப்பட்டிருந்த பைபிள் பிரதிகள், மற்றும் Kebra Negest வரலாற்று சுவடிகள் ஆகியன பின்னர் லண்டன் தெருக்களில் ஏலம் விடப்பட்டன. பிரிட்டிஷ் மியூசியம் 350 சுவடிகளை வாங்கியது. விக்டோரியா இராணி எட்டு சுவடிகளை தனது பிரத்தியேக நூலகத்திற்கென பெற்றுக் கொண்டார். அரச ஆபரணங்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கின்றன என்று தெரியாத அளவிற்கு மறைந்து போயின. இன்றைய எத்தியோப்பிய அரசு பல தடவை முயற்சித்தும், குறிப்பிட்ட அளவு திருட்டு பொருட்கள் மட்டுமே திரும்பக் கிடைத்துள்ளன. என்ன இருந்தாலும், இத்தாலியர்களின் சாதனையை எவராலும் முறியடிக்க முடியாது. அக்சும் நகர மத்தியில், 30 மீட்டர் உயரமும், நூறு தொன் எடையும் உள்ள கல் தூண் (Obelisk) ஒன்று நின்றது. 1937 ல் எத்தியோப்பியாவை ஆக்கிரமித்த முசோலினியின் படையினர், அந்த கல் தூணை துண்டுகளாக்கி இத்தாலி கொண்டு போய் சேர்த்து விட்டார்கள். 2004 ம் ஆண்டு தான் இத்தாலி அதனை திருப்பிக் கொடுக்க முன்வந்தது.
எத்தியோப்பியா ஒரு கிறிஸ்தவ நாடு என்று அறியப்பட்டாலும், அங்கேயும் எரித்திரியாவிலும் மொத்த சனத்தொகையில் அரைவாசிப்பேர் முஸ்லிம்கள். செங்கடலைத் தாண்டினால் இஸ்லாமியரின் புனிதஸ்தலமான மெக்கா மிக அருகாமையில் தான் உள்ளது. இருப்பினும் இவ்விரண்டு நாடுகளிலும் கிறிஸ்தவரும், முஸ்லிம்களும் எந்தப் பிரச்சினையுமின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதிசயப்படத் தக்கதாக உலகின் பிற நாடுகளில் மத, இன, மொழி அடையாளங்கள் மக்களிடையே பிரிவினையை தூண்டுவது போல எத்தியோப்பியாவில் நடக்கவில்லை. அதற்கு மாறாக பலவிதமான பொருளாதாரக் காரணிகள் இன அடிப்படையிலான போர்களை ஊக்குவிக்கின்றன. உலகில் சுதந்திரம் கோரி போராடும் எத்தனையோ தேசிய இனங்களுக்கு, தனி நாடு அமைப்பது இலகுவில் நடைமுறைச் சாத்தியமாவதில்லை. இருப்பினும் 30 வருட ஆயுதப் போராட்டத்திற்குப் பிறகு, எந்த வல்லரசின் துணையுமின்றி, எரித்திரியா எவ்வாறு சுதந்திரமடைந்தது என்று பார்ப்போம்.
எரித்திரியாவிற்கு எதிரான போரில் ஈடுபட்ட எத்தியோப்பிய இராணுவத்திற்கு, மன்னராட்சிக் காலத்தில் அமெரிக்க உதவியும், மார்க்ஸிச ஆட்சிக்காலத்தில் சோவியத் உதவியும் கிடைத்து வந்தது. அதே நேரம் எரித்திரிய விடுதலைக்காக போராடிய EPLF இயக்கத்திற்கு புலம்பெயர்ந்த எரித்திரியர்களின் நிதி உதவி மட்டுமே கிடைத்து வந்தது. 1991 ம் ஆண்டு, சோவியத் யூனியன் மறைந்து போனதால், எத்தியோப்பிய இராணுவமும் பலமிழந்து போனது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரச எதிர்ப்பு ஆயுதபாணி இயக்கங்கள் ஆட்சியை கைப்பற்ற விரைந்தன. ஏற்கனவே களத்தில் ஓரளவு வெற்றி பெற்று பல இடங்களை விடுவித்திருந்த EPLF எரித்திரிய தலைநகர் அஸ்மாராவை கைப்பற்றியது. EPLF உடன் Tigray People’s Liberation Front (TPLF) ஒரு ஐக்கிய முன்னணியை கட்டியிருந்தது. எத்தியோப்பியாவில் மொத்த சனத்தொகையில் 15 வீதமான திக்ரின்யா மொழி பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய TPLF ஆட்சியை கைப்பற்றியது. எரித்திரியாவிலும் திக்ரின்யா மக்கள் கணிசமான அளவில் வாழ்வதால், இவ்விரு இயக்கங்களுக்கும் இடையில் நட்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் முதன் முதலாக அம்ஹாரி மக்களின் அரசியல் ஆதிக்கம் முடிவுக்கு வந்து, திக்ரின்யா மக்கள் (இரு நாடுகளிலும்) அதிகாரத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்போதும் பெருமளவு அம்ஹாரி மக்கள், ஒரு திக்ரின்யா அரசின் கீழ் வாழ்வதை விரும்பவில்லை என்பதுடன், எரித்திரிய பிரிவினையையும் ஜீரணிக்க கஷ்டப்படுகின்றனர்.
ctc_02_img0372

எரித்திரியாவிலும், எத்தியோப்பியாவிலும் ஒரே மொழி பேசுபவர்கள் ஆட்சியில் இருந்தால், அவர்களுக்கிடையே பிரச்சினை வராது என்று அர்த்தமல்ல. செங்கடலோர பிரதேசம் முழுவதையும் கொண்டுள்ள எரித்திரிய நாட்டின் துறைமுகங்களை, எத்தியோப்பியா தாரளமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என ஒப்பந்தம் போட்டதால் தான், ஐ.நா. வாக்கெடுப்பின் மூலம் எரித்திரியா சுதந்திர நாடாவதற்கு புதிய எத்தியோப்பிய அரசு சம்மதித்தது. 1997 ம் ஆண்டு, எரித்திரியா தனக்கென புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தியதால், டாலரில் வர்த்தகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எரித்திரியர்கள் தமது நாணயத்தின் பெறுமதியை செயற்கையாக கூட்டி வைத்திருந்தனர். இது எத்தியோப்பியாவிற்கு பாதகமாக அமைந்தது.  வேறு பல பொருளாதாரக் காரணங்களாலும் (எண்ணெய், எரிவாயு அகழ்வாராய்ச்சி) இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. அதுவரை தீர்க்கப்படாதிருந்த எல்லைக்கோடு பற்றி சர்ச்சை ஏற்பட்டது. முதலில் எரித்திரியப் படைகள் எல்லைப்புற பிரதேசங்களை ஆக்கிரமித்தன. எத்தியோப்பியா வெளிநாடுகளில் ஆயுதங்களை வாங்கிப் போட்டு திருப்பித் தாக்கியது. ஒன்றுமில்லாத வெறும் கட்டாந்தரைக்காக இரண்டு இராணுவங்களும் வருடக்கணக்காக மோதிக் கொண்டதில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இரண்டு நாடுகளுமே அமெரிக்காவின் உதவி பெறும் “ஆப்பிரிக்க செல்லப்பிள்ளைகள்” என்பதால், அமெரிக்க மத்தியஸ்தத்துடன் போர் முடிவுக்கு வந்தது. தற்போது ஐ.நா.சமாதானப்படை எல்லைக் கோடு நிர்ணயிக்கும், அல்லது பாதுகாக்கும்  பணியில் ஈடுபட்டுள்ளது.
இரு நாடுகளிலும், 1991 ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய முன்னாள் போராளிக் குழுக்களின் தலைவர்கள், பல கவர்ச்சிகரமான எதிர்காலத் திட்டங்களை மக்கள் முன்வைத்தார்கள். ஆப்பிரிக்காவில் அதிக சனத்தொகையை கொண்ட மூன்றாவது பெரிய நாடான எத்தியோப்பியா, பிராந்திய வல்லரசாக வருவேன் என்று கனவு கண்டது. உலகிலே சிறிய நாடுகளில் ஒன்றான எரித்திரியா, தாராளவாத பொருளாதாரத் திட்டங்களால் சிங்கபூர் போல வருவேன் என்று கனவு கண்டது. ஆனால் பாரிய பொருள், உயிரிழப்புகளை ஏற்படுத்திய எல்லைப்போர் இந்தக் கனவுகளையெல்லாம் நூறு ஆண்டுகள் பின்தள்ளி விட்டது.

http://mullivaikkalmay18.blogspot.com/2011/02/blog-post_9452.html?m=0

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி !
எரித்திய விடுதலை என்பது எம்மில் பலருக்கும் 
90களில் ஒரு விடிவெள்ளியாக தெரிந்த ஒன்று.
எமக்கு எப்போதும் எட்டாத விடி வெள்ளியாகியே போய்விட்டது விடுதலை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.