Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

புத்தக வாசிப்பு என்பது பெரும்பாலும் ஒருவித தூண்டலின் பேரில் வருவதாக எண்ணுகிறேன். ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்க மிக முக்கியக் காரணிகளாக நான் கருதுவது அதன் ஆசிரியர், நாவலின் வகை, தலைப்பு, முன்னிருத்தப்பட்ட விமர்சனங்கள் மற்றும் நண்பர்களின் பரிந்துரைகள் போன்றவைகள் ஆகும். 
 
6174 நாவலை நான் வாசிக்கக் காரணம் அதன் தலைப்பும், நாவலைப் பற்றி இணையத்தில் பரவியிருந்த நல்ல விமர்சனங்களாகும். தமிழில் இது போன்று அறிவியல் சார்ந்த த்ரில்லர் நாவல்களை வாசித்தது நினைவில்லை. வாசகர்கள் அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் இணைக்குமாறு வேண்டுகிறேன். அறிவியல் புனைவு சார்ந்த தலைப்பில் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல் 6174.
 
1546362034690.jpg
 
இந்நாவல் நமக்குப் பரிட்சயமில்லாத பல்வேறு விடயங்களை சுவாரசியத்துடன் உள்ளடக்கியது. இதுவே ஆசிரியரின் முதல் நாவல் என்பதில் ஆச்சரியமாக உள்ளது. லெமூரியாவில் துவங்கும் கதை, நிகழ்காலத்தில் பல்வேறு குறியீட்டுச் சொற்கள் அடங்கிய புதிர்களைப் பற்றிய தேடலில் சுழன்று, உலக அழிவை எதிர்நோக்கும் ஒரு தீவிரவாதக் கூட்டத்தினிடமிருந்து இவ்வுலகைக் காப்பாற்றுவதைப் பற்றியது. 
 
இந்நாவலில் ஆசிரியர் பல்வேறு சுவாரசியமான விடுகதைக் குறிப்புகள், சித்திரப்புதிர், கணித சூத்திரம், சங்க இலக்கிய வெண்பாக்கள் ஆகியவற்றைக் குறிச்சொற்களாக்கி, புதிர்களாக அமைத்து பரபரப்புக் குறையாமல் நகர்த்திச் செல்கிறார். 
லெமூரிய கண்டத்தில் தொடங்கி, பிரமிடு, பிரம்மி எழுத்துகள், கோலங்கள், வடிவக் கணக்கியல், ஸ்பெக்ட்ரோமீட்டர், விண்கற்கள், செயற்கைக்கோள், சீலகந்த் மீன்கள், ஹர்ஷத் எண், கேப்ரிகர் எண், லோனார் ஏரி, படிகங்கள் (crystal), ஆனைக்கொன்றான் பாம்பு (Anaconda), இந்தியக் கடற்படைப் போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல், விமானப் படை, கணிதக் குறியீடுகள், ஆகம விதிகள், மண்டுக மாண்டலம், மியான்மார் பகோடா என்று சாதாரண வாசகனுக்கு முற்றிலும் பழக்கமில்லாத, ஆனால் சுவாரசியமான அறிவியல் களஞ்சியங்களை உள்ளடக்கியப் புதினத்திற்குள் மூச்சிடுவதற்கும் நேரமளிக்காமல் வாசகர்களை இழுத்துச் செல்கிறார். ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும்போதும் ஆசிரியர் இதற்கான ஆராய்ச்சிகளுக்காக  அதிகம் மெனக்கெட்டிருப்பதை உணர முடிகிறது.

தமிழ்ப் பெண்களிடும் சாதாரணக் கோலத்தையும் அதனுடன் ஃபிபனாக்கி எண்களை ஒளித்திருப்பது வியப்பாக இருந்தது. வியப்பு குறைவதற்குள் தொடர்ச்சியான புதிர்களை அடுக்கடுக்காக அமைத்து வாசகர்களுக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது.  

கணிதவியலில் இந்தியர்களின் பங்காற்றலை கேப்ரிகர் மற்றும் ஹர்ஷத் எண்கள் பற்றிய புதிர்களில் அழகாக இணைத்திருப்பது கவனத்திற்குரியது. 


"தன்னிலே பிரிந்துகூடிப் பின் பகுக்க 
தன்னை இயல் தோற்றும் தசம் ஆதி
ஆதியின் முதல்வர்க்கம் சூடிய அறைதனிலே 
சீரிய கட்டமதில் தடயம் காண்"

ஹர்ஷத் எண், எ.கா. 18 -> 1 + 8 = 9 ;    18/9 = 2
                                        21 -> 2+1 = 3 ; 21/3 = 7

"தலைவால் நேராகி தன்வாலே தலையாகி
தன்னிலே தான் கழிய தானேயாய் நின்றிடுமே
நல்லார வட்டத்துக்குள் நாலே எண்ணாம்"

கேப்ரிகர் எண், எ.கா. 1897
1897 -> 9871 (reverse order) - 1789 = 8082
         -> 8820 - 0288 = 8532
         -> 8532 - 2358 = 6174

கதை மாந்தர்களை அமைத்த விதமும், அவர்களுக்குள் நடைபெறும் உரையாடல்களும் சுவாரசியத்தை சிறிதுக் குறைப்பதாக உணர்ந்தேன்.  கதையின் தொடக்கமும், முடிவுப் பகுதியும் வாசிப்பில் சிறிது தொய்வை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் புதிர்கள் மற்றும் அதற்கான விடைகளை எளிமையாக அமைத்த விதம் பாராட்டப்படக்குரியது. முதல் வாசிப்பில்நாவலின் முழுமையை  நிச்சயம் அடைய முடியாது, குறைந்தது இரண்டாவது முறை வாசிக்கும்போது முழுமையடையும் என்பது என் கருத்து. 

வாசிப்பின் முடிவில் National treasure: Book of Secret & Dan Brown படங்களைப் பார்த்தது போன்ற உணர்வு எழுவதை மறுக்க இயலாது. தமிழ் எழுத்துலகில் இதுபோன்ற அறிவியல் சார் புனை நாவல்கள் உருவாக இந்நாவல் ஒரு அடிக்கல்லாக அமையும். 

ஒவ்வொரு பக்கங்களிலும் நாவலின் சுவை குன்றாமல், அடுக்கடுக்காக புதிர்களை அமைத்து, வாசிப்பவரின் ஆர்வத்தைத் தூண்டி, நாவலில் வரும் குறியீட்டுச் சொற்களைப் பற்றிய தேடலை நம்முள் விளைவிக்கிறார். வாசித்த பின் வாசகர்களாகிய நாம் கூகிளின் துணை கொண்டு குறிச்சொற்களைத் தேடிப் பயணிப்பதே இந்நாவலின் வெற்றியாக நான் உணர்கிறேன். 

தமிழ் எழுத்துலகில் க. சுதாகர் அவர்கள் நிச்சயம் ஒரு சிறந்த எழுத்தாளராக  வளர வாழ்த்துகள். தமிழ் வாசகர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு முக்கிய நாவல் இது.
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி அருள்மொழிவர்மன்....புத்தகம் கிடைத்தால் வாசிக்க வேண்டும் .....!   👍

இப்புத்தகம் கிடைத்தும் வாசிக்க தவறியிருந்தேன் இந்த எழுத்தாளர் face bookla எழுதி வரும் பாஜக மற்றும் மோடி ஆதரவு கருத்துகளினால் இவர் மேல் இருந்த கடுப்பினால் 

  • தொடங்கியவர்
1 hour ago, அபராஜிதன் said:

இப்புத்தகம் கிடைத்தும் வாசிக்க தவறியிருந்தேன் இந்த எழுத்தாளர் face bookla எழுதி வரும் பாஜக மற்றும் மோடி ஆதரவு கருத்துகளினால் இவர் மேல் இருந்த கடுப்பினால் 

எனக்கும் ஆசிரியரைப் பற்றி அதிகம் பரிட்சயமில்லை....இப்புத்தகம் தமிழ் எழுத்துலகில் ஒரு புது முயற்சியாக இருப்பதால், நாமும் ஆதரவு அளித்து வரவேற்கலாம் என்பது என்  அபிப்பிராயம்..

  • கருத்துக்கள உறவுகள்

அமேசன் கிண்டிலில் கிடைக்கின்றது. சற்று முன்னர் தரவிறக்கினேன். வாசித்த பின்னர் சில வரிகள் எழுதுகின்றேன்.

  • தொடங்கியவர்
47 minutes ago, கிருபன் said:

அமேசன் கிண்டிலில் கிடைக்கின்றது. சற்று முன்னர் தரவிறக்கினேன். வாசித்த பின்னர் சில வரிகள் எழுதுகின்றேன்.

நல்வரவு கிருபன்..

6174 வாசிப்பின் போதும் அதற்குப் பிறகும் கூகிளில் எனது தேடல் தொடர்ந்து கொண்டே செல்கிறது.

ஜெமோ வின் விஷ்ணுபுரம் நாவலின் வாசிப்பு முடிவுறும் நிலையில் உள்ளது. அதைப் பற்றிய விமர்சனத்தை இன்னும் விளக்கமாக எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். என்னைப் போன்ற  சாதாரண வாசகர்களுக்கு இந்நாவல் மிகவும் கடினமானதாகத் தோன்றுகிறது. பல்வேறு புதிய சொற்களைப் பற்றி ஆராய்வதிலும், ஆசிரியரின் விவரிப்பைக் கற்பனை செய்துகொள்வதிலுமே பெரும்பாலான நேரம் சென்றுவிடுகிறது.  முற்றிலும் சவால் நிறைந்த நாவல் !!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அருள்மொழிவர்மன் said:

ஜெமோ வின் விஷ்ணுபுரம் நாவலின் வாசிப்பு முடிவுறும் நிலையில் உள்ளது

விஷ்ணுபுரம் வாசித்து 20 வருடங்களாகிவிட்டது. சில பந்திகளை இரண்டு மூன்று தரம் படித்தாலும் எல்லாம் புரியாது. ஜெமோவின் ஏழாம் உலகம், காடு இரண்டும் மிகவும் பாதித்த நாவல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

6174ஐ அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள்..

யாழ் இணையத்தில் இணைந்தபின்பு பல தரமான நாவல்கள் பற்றியும்,  புதிய எழுத்தாளர்களைப்பற்றியும் அறியக்கூடியதாக உள்ளது.. வாசிக்க நினைக்கும் புத்தகங்களின்( சங்கதாரா, வேங்கையின் மைந்தன், 6174...) பட்டியலும் அதிகரித்துக்கொண்டே போகிறது..ஆனால் இவை paper printல் கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுதல் .. புத்தகத்தை வாங்கி அதனை பக்கங்களை நுகர்ந்து வாசிக்கும் பழக்கத்தை கைவிடமுடியவில்லை..

 

  • தொடங்கியவர்
On 6/14/2019 at 7:03 AM, பிரபா சிதம்பரநாதன் said:

6174ஐ அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள்..

யாழ் இணையத்தில் இணைந்தபின்பு பல தரமான நாவல்கள் பற்றியும்,  புதிய எழுத்தாளர்களைப்பற்றியும் அறியக்கூடியதாக உள்ளது.. வாசிக்க நினைக்கும் புத்தகங்களின்( சங்கதாரா, வேங்கையின் மைந்தன், 6174...) பட்டியலும் அதிகரித்துக்கொண்டே போகிறது..ஆனால் இவை paper printல் கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுதல் .. புத்தகத்தை வாங்கி அதனை பக்கங்களை நுகர்ந்து வாசிக்கும் பழக்கத்தை கைவிடமுடியவில்லை..

 

தாங்களும் புத்தக விரும்பி என்பதில் மகிழ்ச்சி. நீங்கள் குறிப்பிட்டது சரிதான், காகிதத்தில் இருக்கும் சுவை மின்னூலில் கிடைப்பதில்லை. வாசிப்பு தொடர்ந்து செழித்திட வாழ்த்துகள்.

யாழின் நூற்றோட்டப் பகுதியில் நூல்கள் பற்றிய பதிவுகள் உள்ளன. நேரம் கிடைக்கும்போது வாசிக்கும் எண்ணம் உள்ளது.

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிவியல் fantasy த்ரில்லர் நூலை இன்றுதான் வாசித்து முடித்தேன். ஆசிரியர் இணையம் முழுவதும் தேடல் செய்து பல அறிவியல் விடயங்களை கதைக்குள் புகுத்தியுள்ளார். ஆனால் கதை என்னவோ பதின்ம வயதினர் வாசிக்கும் fantasy கதையாகத்தான் உள்ளது.

பயணங்களில் பொழுதைப்போக்க வாசிக்கலாம்!

 

 

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

கருஞ்சுழிக் கோலங்கள்

6174-cover.jpg?fit=1024%2C575

4 நிமிட வாசிப்பு

மார்கழி! இன்றுவரை சில்லென்ற பனியும், கோவில் பொங்கல் வாசமுமாய் இந்த மாதம் எனக்குள் உறைந்திருக்கிறது. மென்புகையாய்ப் படர்ந்திருக்கும் வெண்பனியில் முந்தானையால் முக்காடிட்டபடி கோலமிட்டுத் தெருவை நிறைக்கும் அம்மாக்கள் மற்றும் அக்காள்கள். திண்ணையில் பிரவுன் பேப்பர் கொண்டு தைக்கப்பட்ட கோல நோட்டுகள், அதில் பல வருடங்களாய் வரைந்து சேமிக்கப்பட்ட கோலங்கள். சாதாரண நாட்களில் ஏழு புள்ளி ஏழு வரிசைக்குள் முடிந்துவிடும் அவை, அந்த மாதம் மட்டும், பட்டாம்பூச்சிகளாய், இரண்டடுக்குத் தாமரைகளாய், மயில்களாய் வீட்டின் முன் விரிந்து பரவும்.

அம்மா தண்ணீர் தெளித்துப் பெருக்கித் தயாராக்கிய தரையில் அமர்ந்து கோலத்திற்கான வெண்புள்ளிகளை வைக்கத் துவங்கியிருப்பாள். ஒரு வட்டத்தைச் சுளிப்பின்றி வரைய முடியாத எனக்கு, அவளின் விரல் இடுக்கிலிருந்து சீரான இடைவெளியில், ஒரே அளவில், மொக்கு மொக்காய்த் தரையில் விரியும் வெண்புள்ளிகளைப் பார்க்க வியப்பாய் இருக்கும். சில நாட்கள் நேர்ப்புள்ளிகள் வைத்து இதழ் விரிந்த பூவை வரையும் அம்மா மற்றொரு நாள் சந்துப் புள்ளிகள் வைத்து லட்டு நிறைந்த தட்டுகளை வரைவாள். அப்புள்ளிகளுக்கு இடையேயிருந்து எழப்போகும் வடிவத்தை மனதுக்குள் காட்சிப்படுத்தியபடி, வண்ணப்பொடி வட்டில்களைத் தட்டி விடாத கவனத்துடன் அவ்விடத்தைச் சுற்றி வருவேன்.

க.சுதாகர் எழுதிய 6174 நாவலில் வரும் ஜானகியும் இதைப் போன்ற ஒரு பின்புலத்தில் வளர்ந்தவள். கோலமிடுவதன் மூலம் குறிப்பிட்ட எல்லைக்குள் வடிவம் அமைத்து அதில் தனக்கென சவால்களை உண்டாக்கி, அவற்றிற்கு விடை காணுவது பெண்களின் தன்மை என்றும் அதுவே அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துகிறது என்றும் நம்புபவளாய் இருக்கிறாள். அவளுக்கு சிகாகோ சென்று, அங்கு வடிவக் கணக்கியல் பிரிவில் ஆராய்ச்சி செய்யும் முனைப்பைச் சிறுவயதில் கோலங்களின் மீது கொண்டிருந்த ஆசையே உருவாக்கியிருக்கக் கூடும். வடிவம் சம்பந்தப்பட்ட மிக முக்கிய புதிர் ஒன்றை விடுவிக்க நம்பகமான ஆளாய் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் அதுவே காரணமாய் இருந்திருக்க வேண்டும். புத்தகத்தைக் கீழே வைக்க முடியாத அளவிற்கு விறுவிறுவென செல்லும் 6174 நாவலின் முக்கிய கதாப்பாத்திரங்களில் ஒருத்தி இந்த ஜானகி.

பிற கிரகங்களுடனான தகவல் தொடர்பு சாதனங்களாகவும், பெரும் ஆற்றலின் சேமிப்புக் கிடங்குகளாகவும் இருக்கும் பிரமிடுகள், அவை தீய மனிதர்களிடம் சிக்கினால் பெரும் அழிவு ஏற்படும் என்று நம்பும் லெமூரிய அறிஞர்களின் குரு பிரமிடைத் துண்டாக்கி அழிக்கிறார். இந்நிகழ்வுகளுடன் புராதன யுகத்தில் தொடங்குகிறது நாவல்.

நிகழ்காலத்தில் அந்தப் பிரமிட் துண்டுகள் ஒன்றிணையும் நேரம் நெருங்கி விட்டதைத் தங்களுக்குக் கிடைக்கும் வினோத சமிக்ஞைகள் மூலம் அறிகிறார்கள் உலக விஞ்ஞானிகள். அதனால் ஏற்படக்கூடிய அழிவினைக் கணிக்கும் அவர்களுக்கு அத்துண்டுகளின் ஆற்றலை அழித்தாக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அந்தப் பணியை நிறைவேற்ற அவர்கள் கிரிஸ்டல் ஆராய்ச்சியில் நிபுணனான ஆனந்தையும், வடிவக் கணக்கியல் பிரிவில் ஆராய்ச்சி செய்யும் ஜானகியையும் சிறு பரீட்சைகளின் மூலம் தேர்வு செய்கிறார்கள்.

பிரமிடுகளின் வடிவமும், இறந்த உடலைக் கெடாமல் வைத்திருக்கும் அவற்றின் தன்மையும் என்னைச் சிறுவயதில் ஆச்சரியப்படுத்தியிருக்கின்றன. அதனுள்ளே இருப்பதாகச் சொல்லப்பட்ட மர்மப் பாதைகளும், அவற்றினூடாக அலையும் ஆவிகளைப் பற்றிய மர்மக் கதைகளும் என் பால்யத்தின் பகுதிகளை நிறைத்திருக்கின்றன. இக்கதையில் வரும் பிரமிடின் சக்தியும் அதே வசீகரத்துடன் என்னை உள்ளிழுத்துக் கொண்டது.

லெமூரிய குருவால் வெட்டப்பட்டு இணையக் காத்திருக்கும் பிரமிட் துண்டுகளுக்கும், தமிழர்களின் வழிவழியாய் வந்த பாரம்பரிய கோலத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? தொடக்கத்தில் இந்தச் சந்தேகம் எனக்கு மட்டுமல்ல, ஆனந்துடன் பிரமிடைத் தேடிப் பயணிக்கும் ஜானகிக்கும் ஏற்படுகிறது. இதற்கு விடையாக, பிரமிடுடன், புராண கால லெமூரியா, 1949-ல் கப்ரேகரால் கண்டுபிடிக்கப்பட்ட மாறிலி, தற்கால பாங்காக், சிகாகோ, ரஷ்யா, அம்பாசமுத்திரம், எர்ணாகுளம் இவற்றை நம் பாரம்பரிய கோல இழைகளால் பின்னி நகர்கிறது கதை.

ஜானகியும் ஆனந்தும் வழியில் தங்களுக்குக் கிடைக்கும் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றில் பிரம்மி மற்றும் வட்டெழுத்துக் குறியீடுகளில் பொறிக்கப்பட்ட செய்யுள் வடிவிலான தமிழ்ப் புதிர்களை விடுவித்தபடியே செல்கிறார்கள்.

தலைவால் நேராகித் தன் வாலே தலையாகித்
தன்னிலே தான் கழிய தானேயாய் நின்றிடுமே…
நாலார வட்டத்துள் நாலே எண்ணாம்

இந்தச் செய்யுளைக் கப்ரேகர் மாறிலியுடன் தொடர்புபடுத்தி இருந்ததைக் கண்டு மீண்டும் ஒருமுறை செய்யுளைப் படித்து அசை போட்டு ரசித்தேன். அதே போல எண்களில் கருந்துளை உண்டென்பதை அறிய வியப்பு ஏற்படுகிறது.

அறுமுகத்தோன் ஆதியாதிக்கும் ஆதி தானேயாகி
ஒன்றாக ஆலிலைமேல் கிடந்திட்ட சிசுவாகி
எழுபுரவி தான்செலுத்தும் ஆதவனின் தேவாகி
நான்முகன் தான் படைத்த, பூவுலகை நீ காத்தி,
அடிக்கீழ்படி கந்தனையே என்றுமிருத்தி…

இப்பாடல், முதல் பார்வையில் தாய் மாமனான விஷ்ணுவிற்கு அடங்கிடும் முருகனாய்த் தோன்றி ஆன்மீகப் பொருளைக் கொடுத்தது. இரண்டாவது வாசிப்பில் ஒவ்வொரு அடியின் முதல் சொல்லும் இணைந்து கப்ரேகர் மாறிலியாகவும் (6174), ‘அடிக்கீழ்படி கந்தனையே’, ‘அடி கீழ் படிகம் (Crystal) தனையே’ வாகவும் மாறி அறிவியல் மற்றும் கணிதத்திற்குள் இட்டுச் சென்றது. இப்படிப்பட்ட புதிர்களும், படிக்கும் பொழுதே தாளை எடுத்து கணக்கைப் போட வைக்கும் பக்கங்களும், இடையிடையே சுவாரஸ்யம் தரும் விதத்தில் முடிச்சுகள் இடுவதும், அவற்றை விடுவிப்பதுமாகக் கதை முன்னேறுகிறது.

தன் சிறுவயதில், லேசாக மண்ணுக்கு வெளியே தெரிந்த சாதாரண தூணை வழிபடும் குருவைச் சீடன் கவனிக்கிறான். அவன் சொன்ன இந்தத் தகவலை வைத்து அசோக மன்னன் அத்தூணைப் பெயர்க்கிறான். கொள்ளை போகாமல் காப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் புத்தரின் பல் அதிலிருந்து வெளிப்படுகிறது. வரலாற்றில் ஆர்வம் கொண்டிருக்கும் எனக்கு இது போன்ற உப கதைகள் புதியவை.

லோனார் பள்ளம், அதைச் சுற்றியிருக்கும் இடிபாடுகள், கற்கோவில் தூண்கள், கால் தூக்கிய நிலையில் வாமன அவதார சிற்பம், அவற்றின் மீது படிந்திருக்கும் வெயில். இவை மகாபலிபுரத்தையும் அங்கிருக்கும் சிற்பக் கோவில்களையும் நினைவுபடுத்துகின்றன. மீண்டும் மாமல்லபுரம் சென்று புலிக்குகை மற்றும் ரதக் கோயில்களின் உட்சுவர்களில் புதிர்கள் ஏதேனும் பொறிக்கப்பட்டிருக்கின்றனவா எனத் தடவிப் பார்க்கும் ஆவலை ஏற்படுத்தியிருக்கின்றன.

இனி கோலமிடும் பொழுது அதனுள் பொதிந்திருக்கும் வடிவங்கள், அவற்றின் மீள் அடுக்கமைவு, சமச்சீர்த்தன்மை மற்றும் தொடர் வளைவுக் கோடுகள் நிச்சயம் என் பார்வையில் படும்.

தலையற்ற உடலமிங்கு தலைகீழாய் தான்நின்று
தன்னினின்று தான் கழிய …. தானென்றுமுள்ளோனே!
தோன்றக்காண் தலையங்கே தடையற்ற ஒளிததும்பி

என்ற புதிர்ப்பாடலும்கூட நினைவிற்கு வரலாம்.

 

http://aroo.space/2018/10/01/கருஞ்சுழிக்-கோலங்கள்/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.