Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் மேல் விழுந்த மழைத்துளியே.. ரிஷபன்

Featured Replies

சற்றே நீண்ட கதை..

 

நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது ஞாயிறு காலை பத்து மணிக்கு கைபேசி சிணுங்கியது. அலாரம் என்று நினைத்து அணைத்து விட்டு திரும்பிப் படுத்தேன். மறுபடியும் அழைப்பு.
"யா..ழு"
"டேய்.. எனக்கு பொண்ணு பார்க்கப் போறோம்"
கணேசனின் குரல் பயங்கர டெசிபலில் கேட்டது. அவ்வளவுதான். தூக்கம் கலைந்து விட்டது.
"டேய்.. வேணாம்டா" என்று சொல்ல முயற்சிப்பதற்குள் கணேசன் மறுபடி அலறினான்.
"ரெண்டு மணிக்கு ரெடியா இரு. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்" வைத்து விட்டான். போச்சு. ஒரு லீவு நாள் அவுட். அதை விடவும் கொடுமை அவனுடன் பெண் பார்க்கப் போவது. விஷம், துப்பாக்கி, தூக்குக் கயிறு, கணேசனுடன் பெண் பார்க்கப் போவது இதில் எது கொடுமை என்றால் கணேசன்!
ஒவ்வொரு தரமும் என்னை ஏண்டா கூப்பிடறே என்று கேட்டதற்கு சிரிக்காமல் சொன்னான்.
'என்னை விட சுமாரா ஒருத்தன் பக்கத்துல இருந்தாத்தான் நான் அழகாத் தெரிவேன்'
மாடிப் போர்ஷனை என்னை மாதிரி நாலு பிரம்மச்சாரிகளுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார் எங்கள் ஹவுஸ் ஓனர் பாட்டி.
கணேசன் என்னிடம் எங்கே குடியிருக்கே, யார் ஓனர் என்கிற விசாரணையை நடத்தியபோது ஓனர் பெயர் 'சந்திரா' என்றதும் 'அழகா இருப்பாங்களா' என்றான் அவசரமாய்.
'இருந்திருப்பாங்க'
'புரியலியே'
'இப்ப 77 வயசு. பையன் ஸ்டேட்ஸ்ல.'
அவனுக்குக் கல்யாணம் ஆகாத வருத்தத்தை விட அவனைச் சேர்ந்த நண்பர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது அவனைச் சங்கடப் படுத்தியது. கொஞ்ச நாட்கள் கிரகங்களின் பெயரிலும், பிறகு வீட்டார் பேரிலும் அப்புறம் அவன் பெண் பார்த்த வீட்டார் பேரிலும் பழியைப் போட்டான்.
ஒரு முறை நானும் அவனும் மட்டும் இருந்தபோது கண் கலங்கிப் பேசினான்.
'என்னன்னே தெரியலடா. எனக்கு எதுவுமே அமைய மாட்டேங்குது. போராட வேண்டியிருக்கு.. பாரேன். பொண்ணு பார்க்கப் போனாக் கூட தகராறு.. ஏதோ காரணம் சொல்லி தட்டிக் கழிக்கறாங்க'
நான் சொன்ன சமாதானங்கள் அவனுக்கு திருப்தி தரவில்லை. என் கைகளைப் பிடித்துக் கொண்டான்.
'பிளீஸ் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா.. மாட்டேன்னு சொல்லிராதே' எதைக் கேட்டு தொலைக்கப் போகிறான் என்று புரியாமல் பதற்றமாய் இருந்தேன் அப்போது.

'எனக்கு செட்டில் ஆகறவரை நான் பொண்ணு பார்க்கப் போகும்போது எனக்கு கம்பெனி கொடுக்கறியா.
.' ஹப்பாடா. எனக்கு பெருமூச்சு வந்தது.
'ச்சீ.. அசடு மாதிரி பேசாதே. சீக்கிரமே பாரு.. குட் நியூஸ் சொல்லப் போறே' என்று சொல்லி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.
அப்போது கொடுத்த வாக்குறுதி மீறாமல் கூடவே போக வேண்டி இருக்கிறது. கணேசனுடன் கூடப் போனதில் எனக்கே கல்யாண ஆசை வந்து விட்டது. அப்புறம் என் தங்கைகள் ஞாபகம் வந்து மனதைக் கட்ட வேண்டியிருந்தது. இந்த முறை ஊருக்குப் போயிருந்தபோது அம்மா கேட்டார்கள்.
'அப்படி இப்படி மனசு போகாம பார்த்துக்கடா தம்பி.. புவனியும் செல்வியும் எப்பவும் மனசுல இருக்கட்டும்'
எதிரில் தங்கைகள் இருவரும் பவ்யமாய் நின்றார்கள். அவனவன் த்ரிஷா, நயன் தாரா, நமீதா என்று பேசிக் கொண்டிருக்கும்போது நான் 'புவனேஸ்வரி, செல்வி' என்றால் 'எந்தப் படத்துல வராங்க' என்று நண்பர்கள் கேட்கிறார்கள்.
நேரம் ஓடியதே தெரியவில்லை. கணேசன் வந்து கதவைத் தட்டும்போது எனக்குத் தூக்கம் கண்களைச் சுழற்றியது.
"ரெடியா"
"ரெண்டே நிமிஷம்"
அவனுக்குத்தான் அழகு பற்றி கவலை. எனக்கென்ன. ஏதோ ஒரு பேண்ட், ஷர்ட். கூடப் போய் மையமாய் புன்னகைத்துக் கொண்டிருந்தால் போதும். ஓசியில் டிபன் காப்பி கிடைத்து விடும்.
போனதடவை சாப்பிட்ட உருளைக் கிழங்கு போண்டாவின் டேஸ்ட் இப்போது நினைத்தாலும் நாக்கில் எச்சில் ஊறுகிறது.
கால் டாக்சியில் வந்திருந்தான்.
"பர்ப்யூம் வேணுமா" என்றான்.
காருக்குள் அந்த வாசனைதான். டிரைவருக்கு அருகில் முன்னால் நான் உட்கார பின்னால் வசதியாய் கணேசன்.
"அவங்களை நேரா வரச் சொல்லிட்டேன்." என்றான் வீட்டாரைக் குறித்து. "போட்டோ இருக்கா" என்றேன் என்ன பேசுவது என்று புரியாமல்.
கொட்டாவி வந்தது பேசும்போதே. கவருக்குள் பத்திரப் படுத்தி வைத்திருந்த புகைப்படத்தைக் காட்டினான். குரூப் போட்டோ.
"இதுல யாரு"
விரல் நீட்டி அவன் காட்டிய பெண் சுமாராய் இருந்தாள். அவளுக்கு அருகில் 'வாவ்' என்று சொல்ல வைத்த ஒரு பெண்.
"இ..து யாரு" என்றேன் திக்கலாக.
"சொந்தமா.. ஃப்ரெண்டா தெரியல" என்றான் அலட்சியமாக.
"நம்ம செலக்ஷன் எப்படி" என்றான் ஆர்வமாய்.
"நல்லா இருக்காங்க"

இன்னொரு தடவை ஃபோட்டோவை வாங்கி பக்கத்து பெண்ணைப் பார்க்க ஆவல். ஆனால் கணேசனிடம் கேட்க கூச்சம்.
பெண் வீடு வந்து விட்டது. புறநகர்ப் பகுதியில் வீடு. கணேசனின் அப்பா, அம்மா இன்னும் வரவில்லை. பெண்ணின் அப்பா சொன்னார்.
'அந்த நாள்ல வாங்கிப் போட்டேன்.. இப்ப கிரவுண்ட் விலை எக்கச்சக்கம்.. நான் வாங்கினப்ப என்ன விலை இருந்திருக்கும்னு நினைக்கிறீங்க"
புதிர் போட்டார்.
கணேசன் 'பெண்' தெரிகிறாளா என்று பார்த்துக் கொண்டிருக்க, பதில் சொல்லும் பொறுப்பு எனக்கு வந்து விட்டது.
"ரெண்டு லட்சம் இருக்குமா"
பெண்ணின் அப்பா மிகப் பெரிய ஜோக்கைக் கேட்ட மாதிரி சிரித்தார்.
"வெறும் இருபதாயிரம்.. நம்புவீங்களா"
தனி வீடு. மூலையில் கிணறு. கணேசனைப் பார்த்தபின் பெண் நேராக ஓடி வந்து குதித்து விடலாம். வேறிடம் தேடிப் போகும் சிரமம் இல்லை என்று குதர்க்கமாய் மனசில் தோன்றியது
மனசுக்குள் 'தப்பு' போட்டுக் கொண்டேன். வாசலில் கார் சத்தம் கேட்டது. கணேசனின் அப்பா, அம்மா வந்தாச்சு. கணேசன் அவசரமாய் சீப்பு எடுத்து சீவிக் கொண்டான்.
"எப்படிரா இருக்கேன்" என்றான் கிசுகிசுப்பாய்.
விரல் உயர்த்தி 'ஓக்கே' சொன்னேன். ஹாலுக்குள் சென்று அமர்ந்தோம். எனக்கு தொண்டைக் குழியில் ஏதோ அடைத்த உணர்வு. ஒவ்வொரு முறையும் இவனுக்காக வந்து, ஏதோ நானே நிராகரிக்கப் படுகிற மாதிரி சோகம், நடுக்கம் உடம்பில்.
சம்பிரதாயமாய் விசாரணைகள் முடிந்து பெண் வரும் நேரம். வந்தாள். கணேசன் ஃபோட்டோவில் சுட்டிக் காட்டியவள் இல்லை. நான் ரசித்த பக்கத்து பெண். பட்டுப் புடவையில் ஜொலிப்போடு வந்து நின்றாள்.
ஹா.. இவளா.. கணேசனுக்கா.. நான் தடுமாறித் திகைப்பதற்குள் கணேசன் குமுறினான் உரக்க.
"என்ன இது அநியாயம்.. வேற பொண்ணுல்ல இப்ப வராங்க"
அவனை அமைதிப் படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. புஸ் புஸ் என்று மூச்சு விட்டுக் கொண்டிருந்தான்
வந்த பெண் மிரண்டு உள்ளே ஓடி விட்டது. பெண்ணின் அப்பா சொன்னார். "தரகர்ட்ட போட்டோ கொடுக்கும் போதே சொன்னோம். சொதப்பிராதே. இவதான் பொண்ணு. இவ பக்கத்து வீடுன்னு. மாத்தி சொல்லிட்டான் படுபாவி" நான் கணேசனை வெளியே அழைத்துப் போனேன்.
"இப்ப என்னடா.. அவ இல்லேன்னா.. இவ.. பொண்ணு உனக்குப் பிடிச்சிருக்கா.. அதைச் சொல்லு"
கணேசன் முகத்தில் இறுக்கம்.

"எப்படிரா.. நான் அந்தப் பொண்ணுன்னு நினைச்சு என் மனசுல ஆசை வளர்த்துட்டேன்.. இப்ப அவ இல்ல.. இவன்னா என்னால எப்படி தாங்கிக்க முடியும்"
'ஏண்டா லூசு.. முப்பது பொண்ணு பார்த்தாச்சு.. அப்ப ஒவ்வொரு தரமும் இதே மாதிரி நினைச்சிருந்தா?' என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு சொன்னேன். "சரிடா.. ஏதோ கம்யூனிகேஷன் கேப். இப்ப என்ன.. உனக்கு இந்தப் பொண்ணு ஓக்கேதானே"
கணேசன் முகம் இறுக்கமானது.
"முடியாதுரா.. இவ எனக்கு வேண்டாம்"
"அவங்களுக்கு என்ன பதில் சொல்றது.."
"என் மனசுல விழுந்த பொண்ணு.. கிடைச்சா"
எனக்கு பதற்றம் அதிகமானது. "அது எப்படிரா முடியும்.. அவ புருஷன் ஒத்துக்க மாட்டானே"
உளர ஆரம்பித்தது புரிய உதட்டைக் கடித்துக் கொண்டேன். கணேசன் அம்மா வெளியே வந்தார்கள்.
"என்ன சம்மதிச்சுட்டானா"
"இல்லம்மா.. என்ன சொன்னாலும் அடங்க மாட்டேங்கிறான்"
அம்மாவின் கண்களில் நீர்.
"அப்பவே பூசாரி சொன்னாரு.. கிரகம் சரியில்ல.. இவன் புத்தி தறி கெட்டு போவும்னு. இந்த வரன் பார்க்கலாம்னு முடிவு ஆனதும் சந்தோஷமா இருந்தேன்.. பாவி மண்ணள்ளி போட்டுட்டான்"
பெண்ணுடைய அப்பா பதறிப் போய் வந்தார்.
"உங்க கண்ணுல மண்ணு விழுந்திருச்சா.."
அவரை சமாளித்து உள்ளே அனுப்புவதற்குள் திண்டாட்டமாகி விட்டது. கணேசனையும் சேர்த்து அனுப்பினோம்.
கணேசன் அம்மா என் கையைப் பிடித்துக் கொண்டார்.
"எப்படியாச்சும் அவனை சம்மதிக்க வச்சுருப்பா.. உனக்குக் கோடி புண்ணியம்"
நான் தயங்கினேன்
"உள்ளே வாங்க"
அதற்குள் உள்ளிருந்து அலறல் கேட்டது.
 பதறிக் கொண்டு ஹாலுக்கு ஓடினோம்.

                                      2

கல்யாண வேலைகள் ஜரூராய் நடக்க ஆரம்பித்தன. எனக்கும் அந்தப் பெண்ணுக்கும்!
இப்படி மொட்டையாய் சொன்னால் யாருக்குத்தான் புரியும்?
அன்று நடந்த சம்பவங்கள் திடுக்கிடும் திருப்பங்களுடன் இருந்தன. உள்ளே அலறல் கேட்டதும் ஓடினோம்.
அம்மா என்னிடம் சொன்னதற்கு நேர்மாறாக கணேசனை சம்மதிக்க வைக்க வழி இல்லாமல் பண்ணி விட்டான்.
"எனக்கு இந்தப் பொண்ணு வேணாம்."

பெண்ணின் அப்பாவுக்கு ஷுகர், பிபி எல்லாம் உண்டு என்று யாரோ உரக்கக் கிசுகிசுத்தார்கள்.
"வேணாம்.. அமைதியா இரு.." என்று திரும்பத் திரும்ப சொல்லி அவர் பிபியை அதிகப் படுத்தினார்கள். சொம்புத் தண்ணீருடன் ஒருவர் வந்து நின்றார், மயக்கம் போட்டால் அடித்து எழுப்புவதற்காக.
இந்த முஸ்தீபுகளைப் பார்த்து கணேசன் அம்மா மயக்கம் போட, சொம்பை அவர் மேல் ஊற்றினோம்.
"நான் இந்தப் பொண்ணுன்னு நினைச்சிட்டேன். இப்ப என்னால வேற ஒருத்திக்கு சம்மதம் சொல்ல முடியாது" என்று கீறல் விழுந்த ரிகார்டாய் கணேசன் சொல்லிக் கொண்டிருந்தான்.
வந்த பெண் முகத்தில் அசாதாரண நிம்மதி தெரிந்தது.
'தப்பிச்சோம்டா சாமி' என்று குல தெய்வ பிரார்த்தனை மனசுக்குள் ஓடுவது தொண்டை நரம்பு அசைவில் புலப்பட்டது.
கணேசன் அப்பா பெண்ணின் அப்பா காலைப் பிடிக்கிற பாவனையில் நின்று மன்னிப்பு கேட்டார்.
"ஊர் முழுக்க சொல்லிட்டோம். இன்னிக்கு நிச்சயம் ஆவுதுன்னு.. இப்ப எந்த மூஞ்சியை வச்சுகிட்டு நான் வெளியே போவேன்"
பெண்ணின் அப்பா சகிக்காத மூஞ்சியுடன் கேட்டார். பெண்ணின்
மாமா தோற்றத்தில் டிடயர்ட் போலீஸ் மாதிரி பலசாலியாய், பெரிய தொப்பையாய் ஒருவர் ஹூங்காரம் செய்தார்.
டிபன் காப்பி உண்டா இல்லையா என்று உறுதிப்படுத்திக் கொள்ள அவர் செய்த உறுமல் கணேசன் அப்பாவை மிரட்டிவிட்டது.
"தம்பி கொஞ்சம் வெளியே வா" என்றார் என்னிடம்.
நான் எதற்கு என்று புரியாமல் வெளியே போனேன்.
"தம்பி.. இந்த நிமிஷம் எங்க மானம் உன் கையில இருக்குப்பா.."
"வந்து.. நான்"
"இந்தப் பெண்ணை நீ கட்டிக்க சம்மதம் சொல்லு.. நான் வந்து உங்கப்பா, அம்மா கால்ல விழுந்து பர்மிஷன் வாங்கறேன்.."
அடப் பாவி மனுஷா.. நானா.. என்று மிரள்வதற்குள் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதே என்று மனப் பிசாசு சொன்னது.
"நான்.. நான்.." என்றேன் குழறலாக.
"நீ வா.. மத்ததை நான் பார்த்துக்கறேன்"
அடுத்த நிமிடம் சீன் மாறி விட்டது.
கணேசன் ஓரம் தள்ளப்பட்டு நான் நடுநாயகமானேன்.
கேசரி பஜ்ஜி சுடச் சுட என் முன் வைக்கப் பட்டது.
"அவளை வரச் சொல்லுப்பா"
என் கனவுக் கன்னி வந்தாள்.

"அவங்களுக்குப் பிடிச்சிருக்கான்னு கேளுங்க" என்றேன் பெரிய மனிதத் தோரணையுடன்.
காப்பி டம்ளரைத் தரும் போது விரலால் கிள்ளி விட்டுப் போனாள். ஒரு சிறுமி ஓடி வந்து ரகசியமாய் வீட்டு ஃபோன் நம்பரை துண்டு சீட்டில் எழுதித் தந்துவிட்டுப் போனது.
"அப்புறம் என்ன.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சாச்சே.. "
யாரோ உரக்கச் சிரித்தார்கள். பெண்ணின் அப்பா (ஷுகர்?) கேசரியை இன்னொரு தடவை கேட்டு வாங்கிச் சாப்பிட்டார். பஜ்ஜி பொன்முறுவலாய் ஒரு ஃபுல் பிளேட்டைக் காலி செய்து சர்க்கரை தூக்கலாய் ஸ்ட்ராங்க் காப்பியும் இறங்கியது.
"புவனி கல்யாணம் முடிஞ்சாச்சு. இனிமே எனக்கு என்ன ஆனாலும் சரி" என்று கத்தினார் மகிழ்ச்சியாய்.
கணேசன் தான் பாவம். அவன் ரசித்த பெண்ணை மறுபடி பார்க்கத் தவித்துக் கொண்டிருந்தான்.
எனக்கு அவன் பக்கம் திரும்ப நேரமில்லை. புவனி.. புவனேஸ்வரி.. என்று ஜபித்தபடி குத்து மதிப்பாய் அவள் வரக் கூடிய திசைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
கிளம்புமுன் ஒரு தடவை தரிசனம் கிடைத்தது.
காரில் வரும் போதுதான் பயம் பீரிட்டுக் கிளம்பியது. என் வீட்டில் என்னை வெட்டிப் போடப் போகிறார்கள்.
'அந்தாள்தான் சொன்னா உனக்கு அறிவு எங்கே போச்சு..'
சரமாரியாய் சாடப் போகிறார்கள். பயந்து கொண்டே போனால் ஊரில் எதிர்பாராத திருப்பம்.
'நம்ம வீட்டுக்கு ஒருத்தி வர வேளை.. உந்தங்கச்சிக்கு உடனே முடிஞ்சிருமாம்.. பூசாரி சொன்னார்டா'
வாழ்க பூசாரி.
"என்னால எதுவும் பேச முடியலம்மா"
"போவுதுரா.. எப்படியோ நல்லது நடந்தா சரி"
அப்புறம் நான் இல்லாத நேரம் அப்பாவிடம் சொன்னார்களாம்.
'இவன் சரியான திருடன்.. லேட் ஆவும்னு இப்படி ஏற்பாடு செஞ்சிருப்பான்.. உங்க புள்ளை அப்படியே குணத்துல உங்க சில்மிஷத்தோட பொறந்திருக்கான்'
அப்பா பாவம் எதுவும் பேச முடியாமல் எனக்காக வாங்கிக் கட்டிக் கொண்டாராம்.
இங்கே ஒரு பக்கம் என் கல்யாண வேலைகள் நடக்க, இன்னொரு பக்கம் கணேசனின் போராட்டம்.
"உங்க மாமனார் நம்பர் இருக்காடா" என்றான் ஒரு நாள்.
நானும் யதார்த்தமாய்க் கொடுத்துத் தொலைத்து விட்டேன்.
புவனி அப்புறம் சொன்னாள்.

"உங்க ஃப்ரெண்ட் சரியில்லீங்க"
"ஏன்.. என்ன ஆச்சு"
"எங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணி விஜயாகிட்டே பேசணும்கிறார்"
"யார் விஜயா"
"அதான் எங்க பக்கத்து வீடு.. அவர் தொந்திரவு தாங்காம அவங்க வீட்டு நம்பரைக் கொடுத்துட்டோம்.. நேரங் கெட்ட நேரத்துல எங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணதால"
தலையில் அடித்த்துக் கொண்டேன்.
"ஏம்மா அப்படி பண்ணே.. "
"நீங்க வேற.. நான் கொடுக்காட்டியும் விஜியே கொடுத்திருப்பா"
அப்புறம் விஜயாவின் கதையைச் சொன்னாள்.
அவளுக்கு ரெண்டு பெண் குழந்தைகள். இரண்டும் எப்போதும் ஏதாவது உடல் நலக் குறைவால் அவதிப்படும் ஜீவன்கள்.
விஜயாவின் கணவனுக்கு நல்ல வேலை இல்லை. குடிப் பழக்கம் வேறு. எந்தக் கம்பெனியிலும் பொருந்தி இருக்க மாட்டான்.
இத்தனைக்கும் விஜயாவும் அவனும் காதலித்துக் கல்யாணம் செய்தவர்கள்.
விஜயா அவனை இப்போதும் குறை சொல்வதில்லை.
'அவர் நல்லவர்தான்.. பாரேன்.. ஒருநா இல்லாட்டி ஒருநா எங்க கஷ்டம் விடிஞ்சுரும்' என்பாளாம் புவனியிடம்.
'இப்ப கணேசன் அவங்க வாழ்க்கையில நுழைஞ்சிருக்கார்.. என்ன ஆவப் போவுதோ' என்றாள் புவனி கவலையாய்.
என்னிடம் பொறுப்பு கட்டினாள்.
"பேசுங்க உங்க ஃப்ரெண்டுகிட்டே.."
கணேசனைப் பிடிப்பதுதான் பெரும்பாடாய் இருந்தது. அலுவலகம் போனால் ஆள் இல்லை. அவன் வேலைப்படி அடிக்கடி வெளியே போகலாம். கஸ்டமர் விசிட், ஃபாலோ அப்.. இத்யாதி.
எந்த கஸ்டமரையும் பார்த்த மாதிரி தெரியவில்லை.
புவனி எப்போது பேசினாலும் 'உங்க ஃப்ரெண்ட் வந்திருந்தார்..பக்கத்து வீட்டுக்கு' என்பாள்.
ஒரு வழியாய் அவனைப் பிடித்து விட்டேன்.
"உன்னோட பேசணும். ரொம்ப அர்ஜெண்ட்"
"இப்ப எனக்கு நேரம் இல்ல"
"கணேஷ்.. பி சீரியஸ்.. நான் உன்னோட பேசியே ஆகணும்" அரைமனதாய் சம்மதித்தான்.
ரெஸ்டாரண்ட் மூலையில் அமர்ந்தோம்.
"கணேஷ் நீ செய்யறது உனக்கே நல்லா இருக்கா"
"எது"

"நடிக்காதே.. விஜயா பத்தி கேட்கறேன். அவங்க வீட்டுக்கு நீ அடிக்கடி போறே.. அவ கல்யாணமானவ.. ரெண்டு பெண் குழந்தை இருக்கு" கணேசனிடம் எந்த பதற்றமும் இல்லை.
சிரித்தான்.
"நீ என்னைத் தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கே.. நான் எப்ப போனாலும் அவங்க புருஷன் இருக்கறப்பதான் போறேன். இன் பாக்ட் இப்ப என்னோட ஃப்ரெண்ட் அவங்க புருஷந்தான்"
விஜயாவை அவன் 'அவங்க' என்றே சொன்னது திகைப்பாய் இருந்தது.
"எனக்கு அவங்களைப் பிடிச்சிருக்குன்னு சொன்னேன்.. ஆனா அவங்க வாழ்க்கையில எந்தப் பிரச்னையும் வர அளவு மோசமா நடந்துக்குவேன்னு சொன்னேனா.. அவங்க புருஷன்கிட்டே பேசி இப்ப அவரை டிரீட்மெண்ட்டுக்கு அழைச்சுகிட்டு போறேன். அது மட்டுமில்லே.. அவர் ஓரளவு கண்ட்ரோலுக்கு வந்ததும் நல்ல வேலை பார்த்துத் தரப் போறேன்.. அப்புறம் அவங்க குழந்தைகள் படிப்பு செலவு என்னோடதுன்னு சொல்லிட்டேன்.. வருமானம் இல்லாம நல்ல சாப்பாடு இல்லாம இளைச்சுப் போச்சுங்க.. கடனா வச்சுக்குங்கன்னு வீட்டு சாமான் வாங்கிப் போட்டிருக்கேன்.."
நான் திறந்த வாய் மூடாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன் வியப்புடன்.
"நான் நேசிச்சவ எனக்கே கிடைக்கணும்கிறது நல்ல ஆசைதான். ஆனா அதுக்கு சான்ஸ் இல்லாதப்ப, அவங்க நல்லா வாழணும்னு நினைக்கறேன்.. நிஜமாப் பார்த்தா, இப்ப என்மேல எனக்கே ஒரு மதிப்பு வந்திருக்கு.. என்னால தலை நிமிர்ந்து நிற்க முடியும்.. ஒரு நல்ல மனுஷனா.."
என் கண்களில் நீர் தன்னிச்சையாய் வழிந்தது.
நான் கேலி செய்தவன் இன்று என் முன் விசுவரூபம் எடுத்து நிற்கிறான்.
"அவங்க வீட்டுக்கு நான் போகறப்ப அவங்க புருஷன் இல்லேன்னா, அப்புறம் வரேன்னு சொல்லிட்டு வந்திருவேன்.. மறுபடி சொல்றேன்.. எனக்கு உருவமில்லாத அந்த அன்பு பிடிச்சிருக்கு.. வேற எந்த உள்நோக்கமும் இல்ல.. என் மனசுக்குள்ள"
எனக்கு பேச்சு மறந்து போனது.
கணேசன் கைகளைப் பற்றி அழுத்தமாய்க் குலுக்கினேன்.

(தேவி பிரசுரம்)

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட கதை மாதிரி தெரியாதளவுக்கு சுவாரசியமாக உள்ளது.பகிர்வுக்கு நன்றி'

  • கருத்துக்கள உறவுகள்

ஏம்பா தம்பி கணேசன்தான் உன்னைவிட நல்லவனாய் இருக்கிறானே, அவனுக்கு உன் தங்கைகளில் ஒருத்தியை கட்டிக் குடுக்கலாம்தானே.... நல்ல கதை அபராஜிதன்.....!  😂

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

ஏம்பா தம்பி கணேசன்தான் உன்னைவிட நல்லவனாய் இருக்கிறானே, அவனுக்கு உன் தங்கைகளில் ஒருத்தியை கட்டிக் குடுக்கலாம்தானே.... நல்ல கதை அபராஜிதன்.....!  😂

அட இந்தக் கோணத்தில நான் யோசிக்கவில்லை.அதுதான் சுவியர்.

  • 5 months later...
  • தொடங்கியவர்

நன்றிகள் வருகைக்கும் கருத்துக்கும்:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.